தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

View previous topic View next topic Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 2:55 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

முன்னுரை


     நான் தனியே 'தீபம்' இலக்கிய மாத இதழைத் தொடங்கிய பின்பு அதில் எழுதிய முதல் சமூக நாவல் நெற்றிக் கண். இந்திய நாட்டில் சராசரி உழைக்கும் பத்திரிகையாளனுக்கு (Working Journalist) எந்த அளவு சுதந்திரமும், உரிமையும் கிடைக்கின்றன என்பதை ஓரளவு இந்த நாவலிலே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனைப் பற்றிய தமிழ்ச் சமூக நாவல் இது. ஒரு பத்திரிகையாளனின் அகப் போராட்டங்களும், புறப் போராட்டங்களும் இதில் வருகின்றன. இதில் நெகிழ்ச்சிமயமாக வந்து வாசகர்களை நெகிழ வைக்கும் பாத்திரம் துளசிதான்! சுகுணனைக் காட்டிலும் துளசிதான் வாசகர்களை அதிகம் உருக்க முடியும் என்று இந்த நாவல் தீபத்தில் நிறைவு பெற்ற போது எனக்கு வந்த ஏராளமான கடிதங்களிலிருந்து தெரிந்தது. என் மற்ற நாவல்களிலிருந்து இது பல அம்சங்களில் தனியாக விலகி நிற்கிறது. ஒரு பத்திரிகையாளனுடைய கண்ணோட்டத்தில் தான் தமிழ் நாட்டுச் சமூக வாழ்வு இந்த நாவலில் நோக்கப்பட்டிருக்கிறது. நாவலைப் படிப்பவர்களும் அதை மனத்தில் கொண்டு படித்தால் நல்லது என்ற வேண்டுகோளுடன் இந்த முன்னுரையை முடிக்கிறேன். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 2:57 pm

[You must be registered and logged in to see this link.]

1

     "மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைபடுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை." 

-சுகுணன்

     பொழுது விடிகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பூக்கிற பூவின் வாசனையைப் போல் விடிகாலைக் குளிரின் இங்கிதமான சூழ்நிலையில் யாரோ ரோஜாப் பூக்களை - வெறும் ரோஜாப் பூக்களையல்ல - பனிபுலராத ரோஜாப் பூக்களை - ஒவ்வொன்றாகப் பறித்து பதித்து ஒரு பிரம்மாண்டமான விசிறியைத் தயாரித்து மெல்ல வீசிக் கொண்டிருப்பது போல மென்மையும் குளிரும் கலந்ததோர் காற்று எங்கும் உலா வரத் தொடங்கியிருந்தது.


     விடியும் நேரத்துக்கு எப்போதுமே ஒரு தனி அழகு உண்டு. பன்னீரில் தோய்த்துத் தாமரைப் பூவை வெளியே எடுப்பது போல் உலகம் ஏதோ ஒரு குளுமையில் முங்கியெழுந்து வெளிவரும் இந்த மலர்ச்சியைச் சுகுணன் பல நாள் உணர்ந்து சிந்தித்து அனுபவித்திருக்கிறான். எதிரே நிமிர்ந்து பார்த்தால் பலகணி வழியே ஒரு மங்கலமான புகைப்படம் போலக் கிழக்கே வெளுக்கும் வானம் தெரிந்தது. வட்ட வடிவப் பெருங்குடையாய் வெட்ட வெளியெனப் பரந்து விரிந்து கிடக்கும் நீலவானில் வெண் மேகப் பிசிறுகள் அங்கங்கே மிதந்து கொண்டும், நீந்திக் கொண்டுமிருந்தன. மேல் நோக்கித் தொடங்கிய கண் பார்வை வானவெளியை எட்டிய தொலைவு மட்டும் அவசரமாக அளந்து விட்டுக் கீழே சரிந்தால் காற்றில் மேலெழுவதும், தணிவதும், அலையலையாக மடிவதுமாகக் கதிர் வாங்காத விடலை நெற்பயிர்களின் வயல்வெளிப் பசுமை பொங்கிக் கொண்டிருந்தது.

     ஜன்னல் கம்பிகள் அந்த வயல் வெளிகளைத் துண்டு துண்டாகத் தினப்பத்திரிகைகளின் நீள நீளப் பத்திகள் தோன்றுவது போல் தெரியும்படி பிரித்துக் கொண்டு காண்பித்தன. இயற்கையின் பசுமையை - எங்கோ தொலைவிலே நிரம்பிக் கிடக்கும் பசுமையை - இங்கே இதோ அருகிலிருக்கும் இந்த ஜன்னல் கம்பிகள் துண்டு போட்டுக் காட்டுவது கூட ஒரு தத்துவமாகத்தான் தெரிகிறது. இயற்கை நாகரிகத்தை - இரும்பு நாகரிகம் கூறுபோட்டு அழித்து விட முடியாது போனாலும் கூறு போட்டுப் பிரித்து விட்டது போல ஒரு பிரமையான தோற்றத்தை உண்டாக்க முடிகிறதல்லவா?

     காலை வேளையில் எதைப்பற்றியாவது எப்படியாவது சிந்திப்பது என்பது பசி வேளையில் உண்ணத் தவிப்பது போல அவனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாயிருந்தது. நாளைக்கு விடிந்தால் உயிர் வெள்ளம் சுழித்தோடும் பட்டினத்து வீதிகளில் சுற்ற வேண்டும். உட்கார்ந்திருக்கும் இடத்தைச் சுற்றி டெலிபிரிண்டர் ஓசை, டைப்ரைட்டிங் ஒலி, டெலிபோன் அலறல், ஸ்பிரிங் கதவுகளைத் திறந்து மூடும் சப்தம், நடுவே எப்போதாவது மின்சாரம் நின்று போகும் போது கொஞ்சம் நிழல் வந்து படிவது போன்ற தற்காலிகமான அமைதி, - எல்லாம் விரைவாக நினைவிற்கு வந்தன அவனுக்கு.

     விலகி வந்து எங்கோ அமைதியாயிருக்கும் இந்த விநாடியிலும் தன்னுடைய வழக்கமான அந்தச் சூழ்நிலையை ஒரு கணம் கற்பித்துப் பார்ப்பதோ, பாவித்துக் கொள்வதோ கூடச் சுமையைப் போல் கனத்தது அவனுக்கு. எவ்வளவு பெரிய கனத்தையும் சுமக்கின்ற வலு அவனுடைய மனத்திற்கும் தோள்களுக்கும் இருந்தன. சொக்கப்பா ஜிம்னாஸியத்தில் (உடற்பயிற்சிசாலை) காலையும் மாலையும் பயின்று பயின்று தேற்றியது. தவிரத் தானே தன் உடம்பை வசீகரமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று விநாடிக்கு விநாடி ஓர் அந்தரங்கமான சுயநலத்தோடு முகத்தையும், பரந்த பொன் நிற மார்பையும், திரண்டு செழித்த தோள்களையும் நிலைக் கண்ணாடியிலும், தனிமையிலும் தேடித் தேடிக் கண்டு திருப்திப்படுகிற விடலைப் பருவத்துத் தவிப்போடு அவன் சிரசாசனமும் வேறு பல ஆசனங்களும் முறையாகச் செய்தது கூட உண்டு.

     வேதாந்திகளும் சித்தர்களும் உடம்பை வெறுத்து எத்தனையோ பாடல்களைப் பாடித் தீர்த்துவிட்டுப் போயிருந்தாலும் மனிதனுக்கு ஒரு பருவத்தில் தன் உடம்பைத் தானே காதலித்து வளர்க்கத் தவிக்கும் தீவிரமான ஆசை இருக்கத்தான் செய்கிறது.

     இன்னும் கூடச் சுகுணனுடைய அந்தரங்கத்தில் அந்த சுயநலம் உண்டு. உடம்பின் சுத்தமும் திட்டமுமே, மனத்தின் ஒழுங்குக்குக் காரணங்களாக அமைவதையும் சொந்த அநுபவத்தில் அவன் உணர்ந்திருக்கிறான். தோளை வயிரமுடையதாக்கி உடற்சோர்வு - பிணி பலவும் போக்கி - அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் - என்று பாடப்பட்டிருக்கும் அத்தகைய வலிமையை - விரும்பிப் பயின்று தேடித் தேடித்தான் அடைந்திருந்தான் அவன். கம்பீரமாக எழுந்து நின்றால் எதிராளியைக் கூசிக் குறுகிச் சிறிதாகி விடச் செய்யும் இந்த தோற்றத்தை உடம்புதான் தனக்கு அளித்திருக்கிறதென்பது அவனுக்கே தெரியும். அவனுடைய தோள்களும் நெஞ்சமும் அதிகமான கனத்தைச் சுமக்கும் ஆற்றலும் வலிமையும் உள்ளவை என்பதில் அவனுக்கே ஒருவிதமான பெருமிதமும் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையும், பெருமிதமும் கூட இப்போது தளர்ந்து போய்த் துவண்டு விட்டனவோ என்ற சந்தேகமும் இன்று இந்தக் கணத்தில் வேறொரு காரணத்தால் அவனுள் எழுந்தது.

     உள்ளக் குமுறலைத் தணித்துக் கொள்வதற்காகவோ அல்லது மிகப் பெரியதோர் உணர்ச்சி நஷ்டத்தினால் ஊமை அழுகையாக அழத் தொடங்கிவிட்ட உள்ளத்திடம் அழுமூஞ்சித் தனத்தைக் கொண்டாடவோ இப்படி இந்தக் கிராமாந்தரத்து 'டிராவலர்ஸ் பங்களா' வைத் தேடி வந்து இரண்டு மூன்று நாட்களைக் கழித்தாயிற்று. இதோ நாலாவது நாளும் விடிந்து கொண்டிருக்கிறது. நகரத்தில் நேரம் பறக்கிற தென்றால் கிராமத்தில் அது நொண்டியடிக்கிறது போலும். எதிரே வயல் வெளிகளுக்கு அப்பால் சூரியோதயம் பொன்னோடையாகப் பெருகி வந்து கொண்டிருந்தது. நாளைக்கு விடியும் போது இப்படி அசல் சூரியோதயத்தை - அசல் முழுமையோடு பார்க்க முடியாதென்பதும் ஞாபகம் வந்தது. பட்டினத்தில் கடிகாரத்தைப் பார்த்தோ, தீராத தூக்கம் திடுதிப்பென்று விழித்தோ, அலாரம் ஒலியைக் கேட்டோதான் சூரியனும் உதித்திருக்க வேண்டுமென்று அநுமானித்து உணரலாம். இந்தக் கிராமத்தில்தான் சூரியன் உதிப்பதும் கூட எத்தனை பெரிய உண்மையாக எத்தனை பெரிய அழகாக இருக்கிறது.

     காவியம் படிப்பது போல் அமைதியாக ஆழ்ந்து இரசிக்கத் தக்க இந்தக் கிராமத்தின் அழகுகளோ, இதன் நினைவுகளோ, நாளைக்குப் பட்டினத்திற்குத் திரும்பியதும் மறந்து போகலாம். ஆனால் இன்றைக்கு இதுதான் சாசுவதம். நம் மனத்தை அதிவேகமாக மயக்க வருகிற ஒவ்வோர் அழகும் அந்த விநாடியின் ஒரே சாசுவதமாக நம் முன் வந்து நிற்பது தான் வழக்கம். சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமையில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அந்த ஒரு விநாடியும் கூட ஒரு சாசுவதம் தான். இப்படி நினைத்த போது அந்த விநாடிவரை சிரமப்பட்டு மறக்க முயன்று ஓரளவு வெற்றியும் கண்டிருந்த துளசியின் நினைவு தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டது அவனுக்கு.

     துளசி எந்த ஒரு விநாடியில் அவன் முன் - அல்லது அவன் நினைவின் முன் சாசுவதமாக நின்றாளோ - அந்த ஒரு விநாடி இன்று பொய்யாகியிருக்கலாம். ஆனால் அது எந்த ஒரு விநாடியில் நிகழத் தொடங்கியதோ அந்த ஒரு விநாடி உண்மையாகத் தான் இருக்க முடியும். புகழையும் - பொறுப்பையும் தாங்குகின்ற ஆயுதமாய்ப் பழியையும் புகழையும் நிர்ணயிக்கிற சக்தியாய் அவன் கையிலிருக்கிற எழுதுகோலைப் போல் அவன் நினைவும் அவனுள் ஒரு சாசுவதமே.

     ஆனால் இனி அப்படி நினைப்பதிலும் கூட ஓர் அர்த்தமுமில்லை. இந்த நேரத்திற்குள் அவள் யாருக்கோ சொந்தமாகியிருப்பாள். முகூர்த்த நேரம் அதிகாலையில் ஐந்தரை மணிக்கு மேல் ஆறேகால் மணிக்குள் ஏதோ ஒரு நாழிகை என்று தானே திருமணப் பத்திரிக்கையில் போட்டிருந்தது? தன் மனத்தை அணு அணுவாக அறுக்கும் அந்த நாளில் அந்த திருமண நிகழ்ச்சியன்று பட்டினத்திலேயே இருக்கக் கூடாதென்றுதானே ஏதோ பெரிதாக எழுதிக் குவித்து அள்ளிக்கொண்டு போய்விடப் போவது போல ஒரு பொய்யைத் தன் மனத்துக்குத் தானே கற்பித்துக் கொண்டு இந்தக் கிராமத்துக்கு ஓடி வந்திருந்தான் சுகுணன்?

     எங்கு ஓடி வந்தாலென்ன? நினைப்பிலிருந்து எதையும் வெளியிலெடுத்து எறிய முடிவதில்லையே? உடம்பை விட வேகமாகப் பிரயாணம் செய்து நினைத்த இடத்துக்குப் போக முடிகிற இந்தச் சக்தி வாய்ந்த மனமும் சக்திவாய்ந்த சிந்தனையும் தான் அவனுடைய எழுத்தின் ஆற்றல். செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப் போல நினைத்ததைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சக்தி அவன் எழுத்துக்கு இருந்தது. அதே நினைவும், சிந்தனையும் துளசியைப் பற்றி நினைக்கும் போதும் தனது இயற்கையான சக்தியோடு வேகமாகப் பிரயாணம் செய்து பட்டினத்துக்கு ஓடி 'ஆபட்ஸ்பரி' - என்னும் அந்த வாடகை அரண்மனையின் வாசலில் இந்த அதிகாலை வேளையில் வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் கார்களையும், ஓர் அலங்காரத்துக்காகப் பகலிலேயே பூப்பூவாக எரியும் பல வண்ண விளக்குகளையும் கடந்து உள்ளே மணமேடையில் யாரோ ஒருவனுக்கருகே அமர்ந்திருக்கும் வசீகரமான மணக்கோலத்துத் துளசியை அவள் அந்நியமாகி விட்ட வேற்றுமையையும் பொருட்படுத்தாமல் நெருங்குகின்றனவே! செப்பிடு வித்தைக்காரனின் மாத்திரைக் கோலைப் போல் நினைத்த நினைப்புக்கு உடனே எதிரில் உருக்கொடுக்கும் சுகுணனின் கற்பனை ஆற்றல் - அவனைப் போல் சக்தி வாய்ந்த சொற்களுக்கும், சக்தி வாய்ந்த சிந்தனைக்கும் சொந்தக்காரனான ஒரு வாலிப வயதுப் பத்திரிக்கையாளனின் ஆற்றல் - இந்த விநாடியில் துளசி மணப் பந்தலில் எப்படி இருப்பாள், யார் யாரைப் பார்த்து எப்படி எப்படி புன்னகை புரிவாள், யார் யாரை எவ்வாறு வணங்கி ஆசிபெறுவாள் - என்றெல்லாம் சிந்தித்து - அவனுக்கு வேண்டாதவற்றையும் வேதனை தருகிறவற்றையும் சிந்தித்து அவனையே - உருகவும் உணரவும் வைத்தது. 'Word Pictures' - என்பார்களே அதுபோல் ஒரு வார்த்தையும் அதன் உருவமும் சேர்ந்தே நினைவு வருகிற சக்தி வாய்ந்த சிந்தனை அவனுடையது. இத்தகைய சக்தி வாய்ந்த சிந்தனைகளை இணைத்துத் தமிழில் லா.ச. ராமாமிருதம் என்கிற எழுத்தாளர் அற்புதமாய் எழுதுகிற கதைகளை அவன் அவ்வப்போது தேடி விரும்பிப் படிப்பதுண்டு.


     ஒரு சொல்லுக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. சொல் தனக்குத் தானே ஒரு வடிவம். இரண்டாவதாகச் சொல் தன்னால் குறிக்கப் படுவது எதுவோ அதுவாக மாறிக் கருவியாக நின்று அதையே உணர்த்துவது மற்றொரு வடிவம். பார்க்கப் போனால் இந்த இரண்டு வடிவமும் வேறு வேறல்ல. ஒன்றே மற்றொன்று. ஒன்றிலிருந்து மற்றொன்று; ஒன்றாயிருந்தது மற்றொன்று - அரும்பாயிருந்தது பூவாகப் பூப்பதைப் போல. பூத்தபின் அரும்பாயிருந்தது என்பது ஞாபகம். பூப்பதற்கு முன் இனிப்பூக்கும் என்பது காரியம். 'அரும்பாயிருக்கிறது - அதனால் - இனிப் பூக்கும்' என்பது காரணம். காரணத்திற்கும் காரியத்திற்கும் நடுவே ஞாபகம் என்பது ஒரு பாலம். சொல்லும் பொருளும் அரும்பும் பூவும் போல அடுத்தடுத்த விளைவுகள். 'துளசி' என்று நினைக்கும் போது அந்த நினைவு அரும்பு - அதையடுத்து அதே வேகத்திலே குமிண் சிரிப்புடனும் துறு துறுவென்று குறும்புத்தனமான அழகுடனும் அந்த வசீகர முகம் 'word picture' போல அவன் நினைவில் வந்து மலர்கிறதே; அது பூ. அந்தப் பூ இப்பொழுது அவனுக்குக் கிடைக்காமல் வெகு தொலைவில் போய் உதிர்ந்துவிட்ட - அப்படி உதிர்ந்து விட்டதாலேயே அவனை வேதனைப் படுத்துகிற பூவும் ஆகும்.

     சிந்தனையிலும் செயலிலும் உற்சாகமின்றி மனிதன் தனக்குத்தானே சுமையாக உணர்ந்து வேதனையோடு பிடித்துத் தள்ளித் தள்ளிக் கடத்துவது போல் சுழிக்கும் அந்தமான நாட்களை ஓரிடத்தில் பாரதி தன் கவிச் சொற்களால் 'முடம்படு தினங்கள்' முடமாகிவிட்ட நாட்கள் என்று குறிப்பதைப் போல் துளசியின் திருமணத்தை மறக்க ஓடிவந்து இந்தக் கிராமத்தில் கழித்த நாட்கள் சுமையாக நகர்ந்து நகர்ந்து போனதாகத்தான் சுகுணனும் உணர்ந்திருந்தான். பாரதியின் முழு முழுக் கவிதைகளில் கவிதைத் தன்மையின் சாந்நித்தியம் கொலு வீற்றிருப்பது தவிர இப்படித் தனித் தனிச் சொற்றொடர்களிலும் கூடக் கவிதைத் தன்மை துடிதுடிக்கச் செய்திருக்கும் சொல்லுயிர்ப்புச் சாகஸத்தை ஓர் உணர்ச்சிமிக்க - எழுத்தாளன் என்ற அந்தரங்க சுத்தியோடு அவன் பலமுறை தனக்குத் தானே வியந்திருக்கிறான்.

     தன்னுடைய பத்திரிகையின் 'இலக்கிய மேடை' - கேள்வி பதில் பகுதியில் 'கவிதை என்பது என்ன? சுருக்கமான - அர்த்த புஷ்டியுள்ள பதில் தேவை?' - என்பதாகக் கேட்கப்பட்டிருந்த ஒரு நேயரின் கேள்விக்கு, 'மனிதனின் நாகரிகம் பாஷை. பாஷையின் நாகரிகம் கவிதை' என்று தான் முன்பு எப்போதோ பதில் கூறியிருந்ததை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் சுகுணன். அந்த அழகான - இரத்தினச் சுருக்கமான பதிலுக்காக அப்போது அவனைப் பலர் நேரிலும் கடித மூலமாகவும் பாராட்டினார்கள். ஏன்? துளசியும் கூடத்தான் பாராட்டினாள்.

     அவள் சிரிக்கும் போது முதல் சாயல் கண்களிலும் - இரண்டாவது சாயல் இதழ்களிலும், மூன்றாவது சாயல் மோகம் கனிந்து வெறியேறி நிற்கும் அந்த ரோஜாப் பூக் கன்னங்களிலுமாக மலரும். அதாவது அவளுடைய முகத்தில் மூன்று சிரிப்புகள் உண்டு. அந்தக் கண்களும், இதழ்களும், கன்னங்களும், சிரிக்கச் சிரிக்க அவள் 'பூம் பொழில்' காரியாலய அறையில் தன்னைத் தேடிவந்து பாராட்டிவிட்டுப் போன சித்திரம் அல்லது சித்திர நினைவு - இன்னும் அவனுள் காலத்தின் பசுமையாக நிறைந்திருக்கிறது.

     பூத்த பூவிலிருந்து பூக்கிற சூட்டில் வேகமாகக் கிளரும் நறுமணத்துக்கு 'வெறி' என்று தமிழில் ஒரு பெயருண்டு. ஒரு பெண்ணின் கனிந்து நிற்கிற அழகு சம்பந்தமாக ஓர் ஆணின் மனத்தில் ஏற்படுகிற வேகமான கிளர்ச்சிக்கும் இந்தப் பதத்தையே இந்தப் புதிய அர்த்தத்தோடு சிந்தித்துப் பார்த்தால் எத்தனை நயமாயிருக்கும்? இப்படிப் பதங்களையும் அர்த்தத்தையும் புதிய தலைமுறைக் கேற்ற புதிய பொருள்களோடு - அல்லது பழைய தலைமுறை உணர்ந்து அங்கீகரிக்கத் தவறி விட்ட ஒரு புதிய நயத்தோடு சிந்திப்பது சுகுணனுக்கு மிகவும் விருப்பமான காரியம். இப்படிச் சிந்திப்பதனாலேயே நாளும் புதுமையாய் வளர்ந்திருந்தான் அவன்.

     ஆயிற்று. பொழுது நன்றாக விடிந்து விட்டது. வெயிலில் பசிய வயல்வெளிகள் மனோரம்மியமான மரகதப் பாளங்களாக மின்னத் தொடங்கி விட்டன. இன்று முகூர்த்த நாளல்லவா? ஊரிலிருந்து தள்ளியிருந்த அந்த டிராவல்ஸ் பங்களாவிலும் வந்து கேட்கிறாற் போல எங்கோ கிராமத்துக் கல்யாண வீட்டில் நாதஸ்வரம் இனிமையாய்ப் பொங்குகிறது. பூக்களின் வாசனையிலும் சங்கீதத்தின் ஒலியிலும் மனிதனுடைய பழைய ஞாபகங்களை இயக்கும் ஏதோ ஓர் ஆந்தரிக சக்தி உண்டு போலிருக்கிறது. இதே நேரத்திலோ, அல்லது இதற்குச் சிறிது முன்னாலேயோ துளிசியின் பொன்நிறக் கழுத்திலும் யாரோ ஓர் அந்நியன் நாதஸ்வர ஒலியினால் கிளுகிளுக்கும் உற்சாகமான மனத்துள்ளலோடு தாலி கட்டியிருப்பான்' - என்று எண்ணியபோது துக்கமோ, ஏமாற்றமோ, அல்லது இரண்டுமே சேர்ந்தோ ஓர் உரமான உணர்ச்சி சுகுணனின் நெஞ்சைக் கவ்வி அடைத்தது. 

     படிப்பு, நெஞ்சுரம், எத்தகைய எதிர்ப்பைச் சுமந்து வருகிற அபிப்ராயங்களையும் தன் முன் வந்ததும், பார்வையாலோ, தோற்றத்தாலோ, சொல்லாலோ, அப்படியே கூசி நிற்கச் செய்து விடுகிற சக்தி - இவையெல்லாமின்றி வெறும் சிறு குழந்தையாயிருந்தால் நெஞ்சை வந்து அடைக்கும் அந்த உணர்வைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவன் அப்போதே கோவென்று கதறி அழுதிருப்பான். 'ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஓர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய் விடுகின்றன' - என்றெண்ணிப் புழுங்கியது அவன் உள்ளம். பாலைவனத்துத் தாகத்தைப் போல் தாகமும் தவிப்புமே மாற்றிலாத உணர்வுகளாய் எதிரே சாதனம் எதுவும் தென்படாத தனி ஏமாற்றமே அவன் நெஞ்சில் அப்போது நிரம்பியிருந்தது. அவன் மனக்கண்களில் அந்தக் கடன்காரி துளசி நின்றாள். உணர்வின் சத்தியத்துக்கு வட்டி தராமல் ஏமாற்றுகிறவர்களும் கடன்காரிகள்தானே?

     துளசியின் திருமணத்தன்று அவன் தென்படவில்லை என்பதும் அதற்கும் மேலாக அவன் அன்று ஊரிலேயே இல்லை என்பதும் அந்தத் திருமணத்திற்கு அவன் வரவே இல்லை என்பதும் இதற்குள் எத்தனை பேருடைய வாய்களில் எத்தனை விதமான வம்புகளாய்ப் புகுந்து புறப்பட்டிருக்குமென்று தனக்குத்தானே கற்ப்னை செய்ய முயன்றான் அவன். உணர்ச்சி நஷ்டம் தன்னுடையதாயிருக்கும் போது எவ்வளவு சாதுரியமான 'டிப்ளமேட்' ஆக இருந்தாலும் சும்மா இருந்து விட முடியாதென்று அவனுக்கு தோன்றியது. யாருக்கு எந்த அளவு 'டிப்ளமஸி' தேவையோ தேவையில்லையோ, ஒரு பத்திரிகையாளனுக்கு அது அதிக அளவு அவசியம் தேவை. தனக்கு ஒன்றும் நஷ்டமில்லாததுபோல், தான் ஒன்றும் பாதிக்கப்படாதது போல் எல்லாரையும் போல், அவனும் அந்தக் கலியாணத்துக்குப் போய் எல்லோரோடும் சேர்ந்து எல்லார் மேலும் தெளிக்கப்படுகிற பன்னீரில் தானும் நனைந்து, எல்லாரும் கைநனைக்கிற சந்தனக் கும்பாவில் தானும் கைநனைத்து, எல்லாரும் எடுத்துக் கொள்வது போல் பூச்செண்டும் கல்கண்டும் - பட்டும் படாமலும் இரண்டு விரல்களால் எடுத்துக் கொண்டு - விருந்து உண்டு தாம்பூலப் பையோடு திரும்பி வந்திருக்கலாம் தான். ஏனோ தெரியவில்லை, அப்படிச் செய்ய நினைப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை. 


     உலகத்தை ஏமாற்றுவதை விடக் கேவலமான காரியம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுதான். அதைச் செய்வதற்கு அவனால் முடியாமற் போய்விட்டது. மற்றவர்கள் ஏமாற்றும் போது தெரு விளக்கை அணைப்பது போல் உலகத்தின் பொதுவான சத்தியத்தைத் தான் ஒளிகுன்றச் செய்கிறோம். தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் போதோ சொந்த மனத்தையே இருண்டு போகச் செய்து கொள்கிறோம். ஓர் இணையற்ற கலைஞன் என்ற முறையில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு அந்தத் திருமணத்திற்குப் போக அவனால் முடியாது தான் போய்விட்டது.

     உள்ளூரிலேயே இருந்து கொண்டும் அதற்குப் போகாமலிருந்திருக்க முடியும். ஆனால் ஏனோ அதையும் அப்படிச் செய்யத் தோன்றவில்லை. அவசர அவசரமாக எழும்பூர் இரயில் நிலையத்துக்கு ஓடி வந்து இரயில் புறப்படுவதற்கு இன்னும் பதினைந்து நிமிஷங்களே இருக்கும் என்கிற சமயத்தில் எந்த நோக்கமும் எந்த அவசியமும் இல்லாமல் அந்த இரயில் நிற்கிற அந்தஸ்தும், டிராவலர்ஸ் பங்களாவும் இருக்கிற ஒரு குக்கிராமமாகத் தேடி ஞாபகத்துக்குக் கொணர்ந்து அந்த ஊருக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டு இப்படி இங்கு வந்து சேர்ந்திருந்தான் சுகுணன்.

     துளசியிடம் இவ்வளவு தாராளமாகப் பழகி இத்தனை தூரம் மனத்தைப் பறிகொடுத்திருக்கக் கூடாதென்று இப்போது ஒரு விரக்தி ஞானம் அவனுக்குத் தோன்றுகிறது. பெரும்பாலான ஞானங்கள் நினைவின் மயானத்தில் - அது பாதிக்கப்பட்ட பிறகு தானே தோன்ற முடியும்? மனிதன் பாதிக்கப்பட்ட பிறகு தான் அவனுள் அசல் ஞானமே பிறக்க முடியும் போலிருக்கிறது. 'இடிந்து தரைமட்டமாகிப் போன அரண்மனையில் - உடைந்த செங்கல்களுக்கிடையே ஒரு அரசந்துளிரோ; அத்திக்கன்றோ, பசுந்தலையை நீட்டி மேலெழுவது போல் மனிதனுடைய ஞானமும் அவனுடைய நம்பிக்கையின் சிதைவுகளுக்கிடையேயிருந்து தான் தோன்றலாமோ என்னவோ?' - என்றெண்ணி - இப்படி எண்ணுவதும் ஓர் அழுகுணித் தத்துவமாகத் தோன்றி உடனே - இவற்றையெல்லாம் மறக்கவும் முயன்றான் சுகுணன். ஒழுங்காக வரிசைப்படுத்தி நினைக்கவும் முடியாமல் - ஒழுங்காக வரிசைப் படுத்தி மறக்கவும் முடியாமல் அவன் மனத்தின் பலவீனமான எல்லையில் நினைவுகள் துடித்துத் தவித்துக் கொண்டிருந்தன அப்போது. 

     அவனுடைய பல வர்ணனைகளுக்கு அவளுடைய அழகு ஒரு சாட்சியாகவோ தூண்டுதலாகவோ இருந்திருக்கிறதென்பதை அவனாலேயே இப்போது மறக்கவோ மறுக்கவோ முடியாது. உலகுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவள் அவனுடைய எழுத்துக்குத் தூண்டுதலாகவும், எழுதும்போது சாட்சியாகவும், எழுதி முடித்த பின் ரஸிகையாகவும் இருந்திருக்கிறாள். சின்ன சின்ன அரிசிப் பல் வரிசையின் நெருக்கமான அமைப்போடும் - எயிறு என்று பழைய தமிழில் சொல்லுகிறார்களே - அத்தகைய பல்லழகோடும் - அவள் கலீர் கலீரென்று சிரித்துப் பாராட்டிய பாராட்டுக்கள் அவனை வசீகரித்ததும், மின்னுகிற கருமையோடு சிற்றலையிட்டுக் கற்றை கற்றையாகப் புரளும் அவளுடைய மோகனமான கூந்தலும் - அந்தக் கூந்தலின் கருமைக்குக் காதோரம் ஒரு மாற்று நிறம் போலச் செவிகளில் அவள் அணிந்திருந்த பொன் வளையங்களும் - அந்த வளையங்களை விடப் பொன் நிறமான செவிகளும், கைவிரல்களால் தொட்டு மதிப்பிட்டுப் பார்க்க வேண்டும் போன்ற அழகிய கழுத்தும், - அவனை வசீகரித்தன! 'தோழி' என்ற தன்னுடைய புகழ் பெற்ற நாவலில் முன்பு அவன் ஒரு சிறு கவிதை எழுதியிருந்தான்.

     "முகிலுமிருளும் கலந்துபின்
     மூண்டுசரிந்த கருங்குழலாள்
     துகிலும் பட்டும் புனைந்துபின்
     குயிலும் தேனும் இணைந்துபின்
     கூவிப் பதிந்த சொல்லிசையாள்
     வெயிலும் ஒளியும் செம்பொனும்
     வீதமாகச் சமைத்த மேனியினாள் -"

என்ற அந்தக் கவிதைக்கு அவள் உடம்பே அவனறிந்த சாட்சி. பல அழகிய சம்பாஷணைகள் அவளிடம் பேசிப் பேசியே அவனுக்குக் கிடைத்திருந்தன. மிக நெருக்கமாக அமர்ந்து அவளிடம் இதமாகப் பேசி ஒருவர் மனம் மற்றவர் மனத்தில் கரைவது போல் நெகிழ்ந்திருந்த சமயத்தில் ஒரு நாள், "துளசி நீ ஒரு மாலை..." என்று அவன் உணர்ச்சி மேலிட்டு அவளைப் பாராட்டினான்.

     "இந்த வீரரின் அழகிய கம்பீரமான புஜங்களை இப்படி அலங்கரிக்க முடியுமானால் நான் மாலையாக இருப்பதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை" - என்று அவள் அன்று அதற்கு மறுமொழி கூறியிருந்தாள்.

     ஒருவர் மனத்தில் மற்றவர் மனம் கரைய - ஒருவர் நினைவில் மற்றவர் நினைவு பதிய, ஒருவர் உணர்வில் மற்றவர் உணர்வு சேர - சோர - அவர்கள் பழகிய நாட்கள் பல. பழகிய விதங்கள் பல. அவள் ஓர் அபூர்வமான அழகி. கண்களால் சிரிப்பாள். கன்னத்தில் நகை பூக்கும். இதழ்களால் காணுவாள். விழிகளால் உண்ணுவாள். கைகளால் பேசி உணருவாள். மனத்துக்கு நயமான வாத்தியத்தை எடுத்து நாமே விரும்பி வாசிப்பது போல் அவளோடு பேசுவதே ஒரு சுகமான அனுபவமாகும். அத்தகையவளை இன்று உணர்ச்சிப் பூர்வமாக மற்றொருவனிடம் இழந்து நஷ்டப்பட்டது அவனுக்குப் பேரிழப்புத்தான். ஆனால் இந்த நஷ்டம் கூடத் தன்னை இன்னும் தீரனாக மாற்ற முடியுமோ என்பதாகவும் ஓர் அந்தரங்கத் துடிப்பு அவனுள் இருந்தது. பொற்கிண்ணத்தில் ஒளி நிழல் படிவது போல் முகம் முழுவதும் குறுகுறுவெனச் சிரிக்கும் அவள் அழகு அவனை ஏமாற்றி விட்டு போனதே அவனுக்கு இனி ஒரு பெரிய தூண்டுதலாகவும் செய்யலாம்.

     அரைத்தால், நசுக்கி வழித்தெடுத்தால் வாசனை பிறப்பிக்கிற சந்தனக் கட்டையைப் போல் கலைஞனுடைய மனத்தை அலைத்தாலோ அரைத்தாலோ அந்த வேதனையும் ஒரு கலைத் தன்மையைத்தானே பிறப்பிக்கும்? கலைஞனுடைய துக்கத்துக்கும் கூடக் கலைமதிப்பு உண்டு தானே?

     அந்த அதிகாலையில் அந்தக் கிராமாந்தரத்து அமைதியில் 'நானும் இருக்கிறேன்' என்பது போல் டி.பி. வாசலிலிருந்த வேப்பமரத்திலிருந்து ஒரு குயில் இரண்டு முறை கூவியது. எதிரே மரங்கள் அணிவகுத்த சாலையில் விகாரமான ஓசையோடு கடமுட வென்று ஒரு கட்டைவண்டி, மெதுவாக அவசரமின்றி நகர்ந்து கொண்டிருந்தது. அதை அடுத்து மூச்சு இரைக்க நெற்கதிர் அறுத்த கட்டுடன் இரவிக்கை அணியாத நாட்டுப்புற பெண் ஒருத்தி தலை சுமையோடு களத்துக்கு விரைந்து கொண்டிருந்தாள். எங்கோ இறவைக் கிணற்றில் கவலை இறைக்கும் ஓசை தூரத்து ரேடியோ அஞ்சலைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. சுகுணன் எழுந்து நின்று சோம்பல் முறித்தான். வழக்கம் போல் மேலே சுழன்று கொண்டிருந்த மின்விசிறியில் இடித்து விடும் அளவிற்குக் கைகள் உயரப் போயின. சாதாரணமான உயரமுள்ள மனிதர்களை மாதிரியாக வைத்துத்தான் இந்த டி.பி. கட்டிடமெல்லாம் கட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. 


     பாத்ரூமில் தண்ணீர் நிரப்பியாகி விட்டதென்கிற செய்தியை டி.பி. வாட்ச்மேன் வந்து தெரிவித்து விட்டுப் போனான். அதோடு இன்னொரு செய்தியையும் அவன் சிரத்தையோடு தெரிவித்தான்.

     "சாயங்காலம் தாசில்தார் காம்ப் வாராரு. அதற்குள்ளாற... இடத்தைக் காலி பண்ணிட்டா நல்லதுங்க" -

     "கட்டாயம் காலி பண்ணி விடுவேன். நீ கவலைப் படாதே. எனக்கு மூன்றரை மணிக்கு இரயில்" - என்றான் சுகுணன்.

     "எக்ஸ்பிரஸ் ரெண்டு விநாடிகள் தான் இங்கே நிற்கும். மூண்ரைக்கு ரயிலுண்ணா மூணு மணிக்கே ரயில்டேசனுக்குப் போயிடணுங்க..." - என்று கிராமத்துக்கே உரிய அதிக சிரத்தையோடு பதில் வந்தது வாட்ச்மேனிடமிருந்து.

     சிரத்தை - அசிரத்தை - இரண்டையும் வேகமாகக் கணித்து முடிவு பண்ணுகிற கிராமத்து மனப்பான்மையை அந்த வாட்ச்மேனிடம் கண்டான் சுகுணன். தாசில்தார் வருவதனால் அவன் அங்கு மேலும் தொடர்ந்து தங்கியிருப்பதில் அசிரத்தையும், அவன் மூன்றரை மணி இரயிலுக்குப் போய்விடப் போவது குறித்து அதிக சிரத்தையும் காண்பித்த அந்த வாட்ச்மேனைப் பற்றிச் சிந்தித்து உள்ளூறச் சிரித்துக் கொண்டான் சுகுணன். கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பெட்டியைத் திறந்து குளிப்பதற்காகச் சோப்பும் துவாலைத் துண்டும் எடுக்கப் போன போது மேலாகக் கிடந்த துளசியின் கலியாணப் பத்திரிகை கண்ணில் பட்டது. கைகள் தயங்கின. அதைக்கண்டு மனம் மறுபடி அழத் தொடங்கியது.

     ...சுபமுகூர்த்தம் நிகழ்வதாய்ப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி முகூர்த்தம் சென்னை ஆபர்ஸ்ட்பரியில் நிகழ்வதால் தாங்கள் தங்கள் பந்துமித்திரர்களுடன் முகூர்த்தத்திற்கும் மாலையில் வரவேற்பிற்கும்..."

     மேலே படிக்க முடியாமல் மனம் கனமாகியது. கைகள் தளர்ந்து சோர்ந்தன. சோர்வோடு சோர்வாக ஒருகணம் முரட்டுத்தனமான பாவனை ஒன்றும் ஏற்பட்டது. இப்படிக் கோழையாக விலகி ஓடிவந்து மறைந்து கொள்ளாமல் எல்லாரையும் போல் அந்தக் கலியாணத்திற்குத் தானும் போய்த் துணிச்சலாகத் துளசியையும் அவளுக்குக் கணவனாகிற யாரோ ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டரையோ, பி.இ. இஞ்சினீயரையோ - அந்த மணமகனையும் - பார்த்து கலியாணம் விசாரித்துக் குத்தலாக இரண்டு வார்த்தை பேசிவிட்டும் வந்திருந்தால் அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்றும் ஒரு குரூரமான கற்பனை அவனுள் எழுந்தது. அப்படிச் செய்து அவளை வதைக்காமல் இப்படி ஓடிவந்து தான் ஒளிந்து கொண்டது தவறு என்று அவனுக்கே தோன்றியது. பார்க்கப் போனால் இந்த இரண்டு மூன்று நாட்களில் அவன் கைகள் பிரமாதமாக ஒன்றும் எழுதிக் கிழித்து விடவில்லை. காகிதம் வரை வருவதற்குக் கூட வடிவும் ஒழுங்கும் பெறாமல் மனத்திலேயே எழுதி மனத்திலேயே கிழிந்தது தான் அதிகம். நாளைக்குக் காலை எழும்பூர் போய் இறங்கித் திருவல்லிக்கேணி சென்று அறையில் பெட்டி படுக்கையைப் போட்டு விட்டுக் குளித்துச் சிற்றுண்டி முடித்துக் கொண்டு அலுவலகத்துக்குப் போனால் 'கம்போஸுக்கு மேட்டர் உண்டா சார்?' - என்று ஆவலோடு கேட்கவரும் பூம் பொழில் அச்சகத்து ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடுவுக்கு என்ன பதில் சொல்வது?

[font:c236=Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx, TSCu
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 2:59 pm

[You must be registered and logged in to see this link.]

2

     பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம் மேல் வைக்கிற நம்பிக்கை - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம் கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சி பூர்வமான ருசிகள்தான்.

     நல்ல வேளையாகத் தென்னிந்திய இரயில் மார்க்கங்களில் சில பகுதி இரயில்களுக்குப் 'பார்ஸல் பாஸஞ்ஜர்' - என்று தற்செயலாகவே ஒரு பொருத்தமும் காரணமும் அமையும்படி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்த இரயிலில் வந்தவர்களையோ, வருகிறவர்களையோ, பிரயாணத்தைப் பற்றி விசாரித்தால் கூட 'பார்ஸலில் வந்தேன்' - என்றே மறுமொழி கூறுகிறார்கள். இப்படிச் சொல்வதில் ஒரு குத்தல் அல்லது இரயில்வேக்காரர்களை நிரந்தரமாகச் சபிக்கும் ஒரு சாபம் இருப்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. கொண்டதையும் கொள்ளாததையும் எப்படியோ அள்ளித் திணித்துப் பார்ஸல் செய்து பொட்டணம் கட்டுவது போல்தான் இந்த இரயில்களில் பிரயாணிகள் குழந்தைகளும் குட்டிகளுமாகத் திணியுண்டு - இடியுண்டு வருகிறார்கள்.


     தான் புறப்பட்ட நிலையத்துக்கு அடுத்த நிலையத்திலேயே குழந்தை குட்டிகளோடு புகுந்த ஒரு பெரிய குடும்பத்துக்குத் தன் இடத்தைத் தியாகம் செய்துவிட்டு நிற்கத் தொடங்கிய சுகுணனுக்குச் சென்னை எழும்பூர் நிலையம் வருகிறவரை மறுபடி உட்கார இடம் கிடைக்கவே இல்லை.

     போன ஆண்டு சென்னையிலிருந்து - ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட பத்திரிகைப் பிரிதிநிதிகளின் தூது கோஷ்டியில் தானும் ஒருவனாகப் போயிருந்த போது டோக்கியோவுக்கும் ஒஸாகாவுக்கு மிடையே பிரயாணம் செய்த இரயில் சுத்தமும் அழகும், நேரம் தவறாத வேகமும், பிரயாணிகள் உட்காருவதற்குத் தாராளமான இடவசதியும், இருந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் சுகுணன். அப்படி நினைவு கூர்ந்தபோது தான் பிரயாணம் செய்து கொண்டிருந்த இரயிலையும் வளர்ச்சியடைவதில் மந்தகதி போடும் தன் தேசத்தையும் சிந்திக்கவே கொஞ்சம் வெட்கமாயிருந்தது அவனுக்கு.

     இந்திய இரயில்வேயில் பிரயாணிகளுக்கும், சாமான்களுக்கும், தனித்தனி புக்கிங் ஆபீசுகள் இருப்பது ஒன்று மட்டும்தான் பெரிய வித்தயாசமாகத் தோன்றியதே தவிர, வேறு வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. தீவிரமாகச் சிந்திக்கப் பழகிவிட்ட ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவற்றை நினைப்பதிலிருந்து அவனால் தன்னைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. பார்க்கப் போனால் அவன் கண் விழித்துப் பிரயாணம் செய்த நேரத்தில் இந்திய இரயில்வேயைப் பற்றியும், எப்போதோ ஜப்பானுக்குப் போய்விட்டு வந்ததைப் பற்றியும், டோக்கியோ இரயில் நிலையத்தில், 'இந்த நிலையத்துக்குள் வரும் இரயில்களையும் இங்கிருந்து புறப்படும் இரயில்களையும் கொண்டு உங்கள் கடிகாரத்தில் நேரத்தைச் சரிசெய்து கொள்ளலாம்' - என்று ஜப்பானியர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பற்றியும் நினைத்த நேரம் மிகவும் குறைவுதான். அவன் அதிக நேரம் மாற்றி மாற்றி நினைத்த நினைவோ வேறொன்றாயிருந்தது.

     நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பிரயாணம் செய்த நேரத்தில் துளசியைப் பற்றித்தான் அதிக நேரம் நினைத்திருந்தான் அவன். தான் ஏன் இனிமேலும் அவளைப் பற்றி இப்படி நினைக்க வேண்டுமென்று - அவளை நினைப்பதை உடனடியாகத் தவிர்க்கத் துணியாத தன் மனத்தின் மேலேயே ஆத்திரம் வந்தது அவனுக்கு. இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, உப்பு இவைகளைப் போல் அன்பும் தவிர்க்க முடியாத ருசிகளில் ஒன்றாக வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது. பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம்மேல் வைக்கிற - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம்கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சிபூர்வமான ருசிகள். இந்த நீண்டகால ருசிகளை அத்தனை சுலபமாக மனிதனால் மறந்து விட முடியாது போலிருக்கிறது! சொல்லப்போனால் நாவின் ருசிகளை விட இந்த மனத்தின் ருசிகளுக்குத்தான் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் உண்டு என்பது நிருபணமான உண்மையாகத் தோன்றியது.

     மனித மனத்தின் இந்த ருசிகளில் எப்போதும் தேவையானவையும் எப்போதும் விரும்பப்படுகிறவையுமான சில நியாயமான ருசிகளைப் பொருளாகக் கொண்டுதான் உலக மகா கவிகளின் காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன. நாவின் ருசிகள் மனித வாழ்வின் தேவையை மட்டுமே படைக்கின்றன. மனத்தின் ருசிகளோ - அவை தான் மனித வாழ்வையே அந்தப் பெயருக்குரிய கௌரவத்துடன் செம்மையாக உருவாக்குகின்றன.

     அன்பிலும், கருணையிலும் ருசிகண்டு ருசிகண்டு வளர்ந்தவன் சுகுணன். தான் இன்னொருவரைச் சூழும்போதே அன்பு வெள்ளமாக நெருங்கிச் சூழ்ந்து பெருக வேண்டுமென்று நினைக்கிற சுபாவம் அவனுடையது. தன்னைச் சூழ்கிறவர்களும் அப்படியே சூழவேண்டுமென்று நினைத்துத் தவிக்கிற மலர்மனம் அவனுடையது. கடந்த சில நாட்களாக அந்த மனம் ஏமாற்றத்தால் இறுகிக் கடுமையாகியிருந்தது. கொதிப்படைந்திருந்தது. விரக்தியுற்றிருந்தது.

*****

     அந்த அதிகாலையில் எழும்பூர் நிலையத்தின் படிகளுக்குக் கீழே எந்தவிதமான மாறுதலோ, சிறப்போ விளைந்து விடாமல் சென்னை வழக்கம் போல் தானிருந்தது. தண்ணீர் அலை அலையாக ஓடுவதற்குப் பதில் நிறைய மனிதர்களும் டிரான்ஸ்போர்ட் பஸ்களும், வாடகைக் கார்களும், சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் நிதானமாக ஓடுகிற ஒரு மகாநதியைக் கற்பனை செய்தாற்போல் இந்தச் சென்னை நகரத்து வீதிகளைத் தனக்குள் பலமுறை கற்பனை செய்திருக்கிறான் அவன். கிழிந்த டயர்களும் தோல் துண்டுகளுமாகத் தான் இருக்குமிடத்தை அறிவிப்பதற்குத் தம்மளவில் தரைமேல் உண்டாக்கிய ஒரு சிக்கனமான ஷோரும் போல் நாலைந்து செருப்புக்களைக் கொலு வைத்துவிட்டுக் காத்திருக்கும் செருப்புத் தொழிலாளிகளும், ஆப்பிளுக்கு துணியால் துடைத்துப் பாலிஷ் போடும் ஆப்பிள் பழக்கடைக்காரரும், யாரோ ஒரு முக்கியமான தலைவர் கைதாகி விட்ட செய்தியோடு இருக்கும் தினசரி வால்போஸ்டர்களை வரிசையாகத் தொங்கவிட்டிருக்கும் பத்திரிகை ஸ்டால்களுமாக எழும்பூர் நிலையத்தின் எதிர்ப்புறம் திரும்பத் திரும்ப ஒரே விதமாக அச்சடித்த ஒரு புத்தகத்தின் பக்கம் போலிருந்தது.

     காட்டப்படும் வேகத்தினாலும், பரபரப்பினாலும் மனிதர்கள் நுழைந்து வெளிவரும் இராட்சதச் சுறுசுறுப்பினாலும் 'மீல்ஸ் ஃபேக்டரி' அல்லது 'டிபன் ஃபேக்டரி' என்று சொல்லத்தக்க இரண்டொரு கலகலப்பான ஓட்டல்களும் எதிரே வழக்கம் போல் தானிருந்தன. எதிர்ப்புறத்தை ஓரிரு விநாடி நிதானமாகப் பார்த்துவிட்டு மனத்தில் வேண்டியதும் வேண்டாததுமான சிந்தனைகளோடு டாக்ஸியையோ, ஆட்டோ ரிக்ஷாவையோ எதிர்நோக்கி நின்ற சுகுணன் எதிர்பாராத சந்திப்பு ஒன்றிற்கு ஆளானான். 'துளசி'யின் வீட்டு டிரைவர் எதற்காகவோ அந்த வேளையில் அங்கு எழும்பூருக்கு வந்திருந்தான். கார் பார்க்கிங்கில் பார்த்த போது எத்தனை கார்களுக்கு நடுவில் நிறுத்தப் பட்டிருந்தாலும் தனியே அடையாளம் தெரியக்கூடிய அந்த மூக்குச் சப்பையான 'ஓக்ஸ்வாகன்' - காரும் இப்போது சுகுணனின் பார்வையில் தெரிந்தது.

     "என்னா சார்? வர்ரீங்களா? கலியாணத்தன்னிக்கும் காணவேயில்லியே... எங்கனாச்சும் வெளியூர்லே ஜோலியா பூட்டிங்களா?" - என்று விசாரித்தான் அந்த டிரைவர்.

     அவனுடைய கேள்வியில் எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு மறந்தாற் போலப் பாவித்துக் கொண்டவனாக ஒரு பதிலும் சொல்லாமலே - தெரிந்தே வேண்டுமென்றே கை நழுவ விடுகிற ஒரு பொருளைப் போல அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டு "இந்த அதிகாலை நேரத்திலே எழும்பூருக்கு எங்கே வந்தாய் அப்பா? யாராவது ரயில்லே வாராங்களா? அழச்சுக்கிட்டுப் போக வந்திருக்கியா?" - என்று அவனிடம் வேறு கேள்வியைக் கேட்டான் சுகுணன்.

     "இல்லீங்க. புதுசாக் கலியாணமான மாப்பிள்ளை ஐயாவும், துளசி அம்மாவும் கோடைக்கானலுக்கு ஹனிமூன் போறாங்களாம். ஐயா டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டுவரச் சொன்னாரு. அதுக்காகத்தான் வந்தேன்" - என்றான் டிரைவர்.

     அவனுடைய இந்தப் பதில் மனத்தில் இன்னொரு முள்ளைக் குத்தினாற் போலிருந்தது சுகுணனுக்கு. இரண்டு மூன்று விநாடிகள் தயங்கிவிட்டு "வாரீங்களா சார்? அறையிலே கொண்டு விட்டுப் பிட்டுப் போறேன்" - என்று கேட்ட டிரைவருக்கு, "இல்லே! நான் போய்க் கொள்கிறேன். உன் காரியத்தைப் பார்" - என்று கச்சிதமாகப் பதில் வந்தது சுகுணனிடமிருந்து.

     பதினைந்து நிமிடங்கள் சடுகுடு விளையாடுவது போல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அலைந்து ஓட்டம் பிடித்து மீண்ட பின் டாக்சி கிடைத்தது. டாக்சியில் போகும் போதும் ஏதேதோ நினைவுகள். அதாவது போக வேண்டிய இடத்தை டாக்ஸிக்காரனுக்குச் சொல்லவும் மறந்துவிட்ட அளவிற்கு நினைவுகள். டாக்சி எழும்பூரிலிருந்து நேர் கிழக்கே ஓடி இடது பக்கம் திரும்பிப் பாலம் ஏறி இறங்கி அப்புறம் வலது புறம் மூர்மார்க்கெட், சென்ட்ரல் நோக்கி ஓடத் தொடங்கிய பிறகுதான் - பக்கங்களில் பார்த்துப் பரபரப்போடும் பதற்றத்தோடும் வழிமாறிவிட்டதை உணர்ந்து - டிரைவருக்கு அறிவிக்கத் தோன்றியது. அதன் விளைவு - கோட்டை நிலையம் போய் - அப்புறம் - போர் நினைவுக் கட்டிடம் (வார் மெமோரியல்) மெரீனா எல்லாம் சுற்றிச் சுங்குவார் தெரு வழியே - திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குப் போய் நின்றது டாக்சி.


     வாடகையைக் கணக்குத் தீர்த்து டாக்சியை அனுப்பிவிட்டுப் பெட்டிப் படுக்கையோடு படியேறி மாடிக்குப் போனான் சுகுணன். கையிலிருந்த சாமான்களை அவன் கீழே வைத்து விட்டுச் சாவியை எடுத்துத் தன் அறையைத் திறந்த போது - பக்கத்து அறைக்காரருக்குத் தபால்காரர் எக்ஸ்பிரஸ் டெலிவரி கடிதம் ஒன்றைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய 'அந்த மணவாழ்த்துக் கடிதமும் சாதாரணத் தபாலில் - துளசிக்குக் கிடைக்கும்' - என்று நினைத்துக் கொண்டான். அவன் அவளுக்கு எழுதியிருக்கும் அந்த வாக்கியங்கள் மறுபடி ஒவ்வொரு சொல்லாக அவனுக்கு நினைவு வந்தது.

     'வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலை சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் கைகளில்...'

     காரியாலய முகவரிக்கு எழுதாமல் அறை முகவரிக்கே வழக்கமாக எழுதும் இரண்டொரு நெருங்கிய நண்பர்களின் கடிதங்கள் கதவிடுக்கு வழியாகப் போடப்பட்டுக் கிடந்தன. அதில் ஒரே ஒரு கடித உறை மட்டும் தபால் தலையோ, முத்திரையோ, எதுவுமில்லாமல் - கனத்த உரையின் மேல் 'சுகுணன் அவர்கள், அறை எண் 9, கண்ணப்பா லாட்ஜ், பெரிய தெரு, சென்னை - 5' - என்று சுத்தமாகத் தமிழில் முகவரி டைப் செய்யப் பெற்றதாயிருந்தது. முன்புறமோ பின்புறமோ அதில் எங்கும் அனுப்பியவர் முகவரியோ வேறு குறிப்போ எதுவுமே இல்லை. இந்த மாதிரி வேளைகளில் மனத்தில் தோன்றும் ஒரு தற்செயலான ஆனால் அதே சமயத்தில் பின்னால் சரியாயிருக்கப் போகிற ஓர் அநுமானத்தோடு 'தான் அறையைப் பூட்டிக் கொண்டு அவசரமாக இரயிலேறி வெளியூர் போனபின் துளசி யாரிடமாவது இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடும்' என்று எண்ணிப் பிரித்துப் பார்த்தால் அநுமானம் தவறாதபடி அது துளசியின் கடிதமாகவே இருந்தது.

     தன் கையெழுத்தினால் எழுதக் கூசியோ, பயந்தோ - அவளே ஜாக்கிரதையோடும், பயத்தோடும், எச்சரிக்கையோடும் அந்தக் கடிதத்தைத் தமிழில் டைப் செய்திருந்தது அவனுள் இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டியது. ஒரு மனிதனுடைய உறவை அடைவதிலும் விலக்குவதிலும் பெண்ணுக்குத்தான் எத்தனை ஜாக்கிரதை? எத்தனை முன்னெச்சரிக்கை? எத்தனை சம்பிரதாயமான பயங்கள்? அவசர அவசரமாகக் கடைசித் தாளை விரித்துக் கையெழுத்தைப் பார்த்தான். அதுவும் அவளுடைய சொந்த எழுத்தினால் இல்லை. 'உங்களுடையவள் - அபலை' என்ற வார்த்தைகளும் கூட டைப் செய்யப்பட்டே இருந்தன. அதன் மேலிருந்த ஆத்திரம் காரணமாகக் கடிதம் எழுதுவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பஞ்சு போன்ற மெல்லிய தாளில் எழுதப்பட்டிருந்தும் அந்த இலேசுக் காகிதங்கள் கூடத் தன் கைகளில் கல்லாய்க் கனப்பதுபோல் அப்போது உணர்ந்தான் சுகுணன். இதற்குள் எதிர்த்த அறைக்காரரும் பக்கத்து அறைக்காரரும் குசலம் விசாரிக்க வரவே - அவர்களிடம் ஒப்புக்கு ஏதோ பேசி அனுப்ப வேண்டியிருந்தது. அவளுடைய அந்தக் கடிதத்தைப் படிக்காமல் அசிரத்தை செய்ய வேண்டும் போல் வெறுப்பாகவும் இருந்தது. உடனே அவசர அவசரமாக அதைப் படித்து விட்டு ஆத்திரப்பட வேண்டும் போலவும் இருந்தது. இந்த உணர்ச்சிக் குழப்பத்தில் என்ன செய்வதென்று தயங்கி அவளுடைய அந்த டைப் செய்யப்பட்ட கடிதத்தை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொண்டு தபாலில் வந்து கிடந்த மற்றக் கடிதங்களை எடுத்துப் படிக்கலானான் சுகுணன்.

     அந்த ஆண்டு பி.இ.என். மகாநாடு டெல்லியில் நடக்கப் போவதாகவும் அதற்கு அவன் அவசியம் வர வேண்டுமென்றும் டெல்லியிலிருந்து நண்பன் மணி எழுதியிருந்தான். இந்த முறை அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்களின் பெடரேஷன் சென்னையில் கூடுவதற்கு அவனால் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று கல்கத்தாவிலிருந்து 'கோஷ்' கேட்டிருந்தார். இன்னொரு கடிதம் கிராமத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கும் அவனுடைய சகோதரியிடமிருந்து வந்திருந்தது.

     படித்துக் கொண்டிருந்த கடிதங்கள் எல்லாம் படிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்ட ஒரு கடிதத்தையே பலமாகவும் அவசரமாகவும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு காரியத்தை முதலில் செய்துவிடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான் 'அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கிறோம்' என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்தபடியே முதலில் செய்யும் மற்றக் காரியங்களை வேகமாகச் செய்வதும். முழு வாக்கியத்தின் அர்த்தம் நாமே பாவனையாகக் கற்பித்து அதன் முடிவில் போட்டு வைக்கிற ஒரு கடைசிப் புள்ளியில் போய் முடிவையும் முடிந்து விட்ட நிரூபணத்தையும் பெறுவது போல் கடைசியாகச் செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகி விடுகிறது. துளசியின் கடிதத்திற்கும் இப்போது அப்படி ஒரு சிரத்தை தானாகவே அவன் விரும்பாவிடினும் உண்டாகியிருந்தது.

     அவ்வளவு நேரம் அணைக்கட்டி நிறுத்தியிருந்த ஆர்வம் மீறிப் பெருக, அந்தக் கடிதக் கத்தையைக் கையிலெடுத்தான் சுகுணன். கடிதத்தின் மேற்புறம் தேதி - நேரம் மணி நிமிடம் கூட டைப் செய்யப்பட்டிருந்தது. இரவு பதினோரு மணிக்கு மேல் தன் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை இரகசியமாக 'டைப்' செய்திருந்தாள் அவள்.

     'என்றும் என் வழிபாட்டுக்குரிய தெய்வத்திற்கு' என்று புது மிஷினில் புதுப் பச்சை ரிப்பன் மாட்டி அடித்தாற்போல் பச்சை நிற எழுத்துக்கள் முதல் வரியாகத் தனியே எடுக்கப்பட்டுக் காவியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் போலவோ, காப்புப் போலவோ அணிவகுத்து முன் நின்றன. அந்த ஒரு வரியைப் படித்த விநாடியில் மேகம் மழையாகக் கொட்டி மறைந்தாற் போல் அவள் மேலிருந்த ஆத்திரம் கருணையாகப் பெருகி மறைந்தது. பார்க்கப் போனால் நீண்ட வாழ்க்கையின் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் பெண் என்பவள் ஓர் அபலைதான். இந்த நிலையில் ஒருத்தி சந்தர்ப்பவசத்தினால் தன்னுடையவளாக முடியவில்லை என்பதற்காக அவளை வெறுப்பது எவ்வளவு சுயநலமானது? அல்லது சிறுபிள்ளைத்தனமானது? - என்று இப்படி எண்ணியபோது - தன்னை மணந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்ற ஒரே காரணத்துக்காகத் துளசியை உதாசீனம் செய்வது பக்குவமான செயலாக அவனுக்கே படவில்லை. திடீரென்று எதற்காகவோ அவள் மேலே தான் பெரிதாகப் பரிதாபப்பட வேண்டும் போலவும் அனுதாபப்படவேண்டும் போலவும் மிக விரைவாக அவன் உணர்ச்சி மாறியது. அந்தக் கடிதத்தை அவள் தொடங்கியிருந்த ஒழுங்கு, மரியாதை, சிரத்தை, பயம், அவளுடைய புன்னகையைப் போல் சுத்தமான அந்தப் புதிய பச்சை நிற டைப் எழுத்துக்கள் - எல்லாம் சேர்ந்து அவன் மனத்தை இளகச் செய்துவிட்டன. இந்த விநாடி அவன் மனம் ஒரு கவிஞனின் மிக மென்மையான சத்துவ குணத்தோடிருந்தது. 


     "என்னைத் தயை செய்து - பெருந்தன்மையோடு மன்னித்து விடுங்கள். சொல்லாமல் கொள்ளாமல் எல்லா ஏற்பாடும் செய்து முடித்துவிட்டு அப்பா இப்படி என் அபிப்பிராயத்தையோ ஆசையையோ நான் வெளியிட ஒரு மணி நேர அவகாசம் கூடத் தராமல் திருமணம் என்ற பிரமிப்பான காரியத்தைத் திடுமென்று எனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துவாரென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

     'வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி எதிர்வருவதில்லை. அது தான் திட்டமிட்டபடி நம் முன் நேர்கிறது' - என்று உங்களுடைய "பாலைவனத்துப் பூக்கள்" என்ற நாவலில் நீங்கள் எழுதியிருக்கிற கடைசி வாக்கியங்களைத் தான் நினைக்கிறேன் இப்போது. எங்கள் வீட்டில் எனக்கு எவ்வளவோ உரிமையும், செல்லமும் உண்டு என்று பேர். ஆனால் இந்தத் திருமண சம்பந்தமாக மட்டும் ஏனோ என்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் இப்படி நிர்க்கதியாய் விட்டு விட்டார்கள்.

     ஒலியாக வெளிப்பட்டு அபிப்பிராயங்களையும் அங்கீகாரங்களையும் தேடாமல் மனத்தினுள்ளேயே அடங்கிவிடும் கற்பனையாய் சங்கீதத்தைப் போல இனி நினைப்பின் எல்லையிலேயே தங்கி மரியாதை பெற வேண்டிய பொருளாகிவிட்டது நம் காதல்.

     என்னுடைய இந்தக் கையாலாகாத வாக்கியத்தைப் படித்ததும் என்னைக் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலக் கோபமும் ஆத்திரமும் வரும் உங்களுக்கு. அப்படி உங்கள் கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் பொருளானால் கூட மகிழ்ச்சியாயிருக்கும் எனக்கு. ஏனென்றால் நான் எந்தக் கோபத்துக்குப் பாத்திரமாகிறேனோ அந்தக் கோபம் உங்களுடையது. நிதானமாக என் நிலையைச் சிந்தித்தீர்களானால் என் மேல் கோபம் வருவதற்குப் பதில் அநுதாபம் தான் வரும் உங்களுக்கு. நான் உங்களோடு நெருங்கிப் பழகியதையும், உங்கள் எழுத்துக்களின் மேல் மோகம் கொண்டதையும், பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் அப்பாவைக் காண்பதற்காக எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்த போதெல்லாம் தேவைக்கதிகமான உரிமையும், உறவும் பாராட்டி உங்களை ஓடியாடி உற்சாகமாக உபசரிப்பதையும் வெறும் இரசிகத் தன்மை என்று மட்டுமே அப்பாவால் எப்படிச் சாதாரணமாக நினைத்து ஒதுக்கி விட முடிந்ததென்பது தான் எனக்கே ஒரேயடியாக விளங்கவில்லை. இந்த விஷயத்தில் அப்பா இப்படி என்னைக் கைவிட்டு விடுவாரென்று நான் நினைக்கவில்லை. இதில் உங்களை விட எனக்குத் தான் பேரிடி.

     நான் பெண். 'பெண்கள் பிறக்கும் போதே முன்னெச்சரிக்கையோடு கூடப் பிறந்திருக்கிறார்கள்' - என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே; அந்த முன்னெச்சரிக்கை கூடச் சரியான சமயத்தில் எனக்கு இல்லாமல் போய் விட்டது. நான் தான் நன்றாக ஏமாந்து போனேன். எதையும் வெளியில் சொல்லவும் முடியாது உள்ளேயே அழுது புழுங்க வேண்டும். உள்ளேயே நொந்து வேக வேண்டும். இந்த ஏமாற்றத்தோடு வாழவும் வேண்டும். அல்லது வாழ்ந்து கொண்டே ஏமாற வேண்டும். நீங்கள் ஆண்பிள்ளை ஏமாற்றத்தைக் கூட விரக்தியாகவோ, தைரியமாகவோ மாற்றிக் கொண்டுவிட முடியும். நான் தான் இதில் பெரிய பாவி. நாளைக்கும் அதற்குப் பின்பும் விடியப் போகிற ஒவ்வொரு தினமும் இனி எனக்குப் பெரிய சுமை தான். இந்த விநாடியிலும் கூட வெகுண்டெழுந்து அப்பாவிடம் போய் "எனக்கு இந்தக் கலியாணத்தில் சம்மதமில்லை. நான் சுகுணன் அவர்களை என் நாயகராக வரித்து விட்டேன். தயைசெய்து இப்போதே இந்தக் கலியாணத்தையும் இதன் ஆரவார ஆடம்பரத் தடல்புடல்களையும் உடனே நிறுத்தி விட்டுத் திருப்பதிக்கோ திருநீர் மலைக்கோ அழைத்துப் போய் என்னையும் என் சுகுணனையும் இணைத்து வையுங்கள். எங்கள் அன்பைக் கௌரவிப்பது போல் எங்கள் திருமணம் எளிமையாக நடந்தால் போதும்" - என்று கண்ணைக் கசக்கிக் கலகம் செய்யலாம். அப்படிச் செய்தால் அதன் விளைவு உங்களைப் பாதிக்கும். நீங்கள் ஏதோ என்னைச் சொக்குப் பொடி போட்டு மயக்கி என் குழந்தை மனத்தைக் கெடுத்து விட்டதாக மற்றவர்கள் அப்பாவிடம் கோள் மூட்டுவார்கள். உங்கள் மேல் அநாவசியமாக அப்பாவுக்கு ஆத்திரம் வரும்.

     இரண்டு தினசரிகளையும் ஒரு வாரப் பத்திரிகையும் ஒரு மாதப் பத்திரிகையும் உட்கொண்டு விளங்கும் இந்தப் பெரிய பத்திரிகை நிறுவனத்தில் உங்கள் மேல் பகைமையும் பொறாமையும் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாததல்லவே? வெகுண்டெழுந்து குமுறி இதை மறுப்பதற்குச் சந்தர்ப்பமும் உரிமையும் இருந்தும் கூட நிதானமாகச் சிந்தித்த பின் உங்களுக்காகவே நான் ஊமையானேன்.

     என்னுடைய இழப்பை நான் உணர்கிறேன். அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையாயிருக்க வேண்டியவளென்ற முறையில் உங்கள் எதிர்கால நலனையும் நான் காக்க வேண்டியவளாயிருக்கிறேன். இந்தத் தாபம் - என் நெஞ்சின் சதையைப் பிய்த்தெடுத்துக் கொண்டு வருகிறாற் போன்ற இந்த விம்மல் வீண் போகாது. இன்னொரு பிறவியிலாவது நம் நினைவு கைக்கூடும். 'சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குத் தவம். எல்லோராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களுமே அடைய வேண்டியதை அடைகிற தவமாக இருக்கும்' - என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். இனிமேல் இந்தக் கடிதத்தில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. எவ்வளவோ மலைமலையாக எழுத மீதமிருப்பதாகவும் என் மனம் கனத்துப் போயிருக்கிறது. நீங்கள் இந்தக் கலியாணத்திற்கு நிச்சயமாக வரமாட்டீர்கள் என்று என் மனம் சொல்கிறது. அதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள். உலகத்துக்காக எல்லாரையும் போல் நீங்களும் கலியாணத்தன்று தலையைக் காட்டி விட்டுப் போய் விடுவது நல்லது. கல்யாணத்தில் உங்களைப் பார்த்தாலும் எனக்கு அழுகை வரும். பார்க்கா விட்டாலும் அழுகை வரும். கடைசியாக ஒரு வேண்டுகோள். அந்தரங்க சுத்தியான இந்த வேண்டுகோளுக்கு வேறெந்த அர்த்தமும் கற்பித்துக் கொள்ளாதீர்கள். மணக்கோலத்தில் என்னை ஒரு முறை ஒரே ஒரு முறையாவது உங்கள் கண்களால் நிமிர்ந்து தாராளமாகப் பாருங்கள். அந்த ஒரு விநாடியிலாவது உங்கள் பார்வையில் நான் மணமகளாவேன். மற்றவர்கள் என்னை வற்புறுத்தி உட்கார வைத்து அப்படி அலங்கரிப்பதற்கு என்னளவில் நான் உள்ளம் குளிர முடியுமானால் நீங்கள் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கிற அந்த ஒரு கணத்தில் தான் அது முடியும். 'யாருக்காகவோ இவள் அலங்கரித்துக் கொண்ட அலங்காரம் தானே?' - என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நான் என்னை அலங்கரித்துக் கொள்ளவில்லை. திருமணத்துக்காக நான் அலங்கரிக்கப்படுவேன். மணமேடைக்காக நான் தயார் செய்யப்படுவேன். 'தீடீரென்று எத்தனையோ பேர் என்னென்னவோ வந்து இந்த உலகத்தை விட்டுப் போய்விடுகிறார்களே; அது மாதிரி இந்த விநாடியில் செத்துத் தொலைந்து போய்விட்டால் எத்தனை நிம்மதியாயிருக்குமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இந்த மாதிரி சமயங்களில் நினைத்த போது சாகிற சக்தி மட்டும் மனிதர்களுக்கு இருந்துவிட்டால்?' - என்று எண்ணத் தோன்றுகிறது.

     நமக்குத் தெரிந்தவரை இந்த மாதிரிச் சாவை வரப்பிரசாதமாக அடைந்த ஒரே ஒருத்தி சிலப்பதிகாரப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தான். அவள் பாக்கியசாலி. பந்தலில் வாழை மரமும் தோரணமும் கட்டுவது போல் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் கைகளிலும் கழுத்திலும் தங்கமும், வைரமுமாக நகைகளைக் கட்டி என்னை அலங்கரிக்கப் போகிறார்கள். உங்களைப் போல் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள். காதலில் இழந்தாலும் அழுகை வராது. பரம்பரையாக ஆண் குலத்துக்கே கல் மனம். நாங்களோ காரணத்தை மறைக்க முடிந்தாலும் கண்ணீரை மறைக்க முடியாது. எதிர் வரும் இன்னொரு பிறவி எதிலாவது - இந்த ஞாபகமும் சுவடும் நமக்கு நினைவில்லாவிடிலும் கடவுள் நம்மைக் கணவன் மனைவியாக இணைக்கட்டும். இந்தப் பிறவியை - எனக்குப் பிடிக்காமல் நான் தாலிக்கயிற்றால் சிறையிடப்படும் இந்த வாழ்வை ஒரு கெட்ட சொப்பனம் போல அவசரமாக ஓட்டி விட வேண்டும் போல இப்போது நான் பறக்கிறேன். நினைப்பினாலும் பாவனையினாலும் நான் உங்கள் அடிமை. நீங்கள் தான் என் இதயத்தை ஆளுகிறீர்கள். அடிமைகள் ஆளுகிறவர்களுக்குச் சமாதானம் கூறுவது அதிகப் பிரசங்கித் தனமாயிருக்கும். எனவே திடுமென வந்த இந்தப் பேரிடிக்கு ஒரு சமாதானமும் கூறத் தோன்றவில்லை எனக்கு. இனி வேறென்ன எழுதுவது? படித்ததும் ஞாபகமாக இதைக் கிழித்தெறிந்து விடுங்கள்.

இப்படிக்கு,
உங்களுடையவள் - அபலை


     இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் உள்ளூரிலேயே இருந்து துளசியின் திருமணத்திற்குப் போயிருக்க வேண்டுமென்று தோன்றியது சுகுணனுக்கு. அடுத்த கணமே போகாமல் தான் வெளியூரில் போய்த் தலைமறைவானது தான் சரியென்று தோன்றியது. அந்தக் கடிதம் அவனுள் உண்டாக்கிய உணர்ச்சிக் குழப்பத்தின் காரணமாக நிச்சயமாய் நிர்ணயமாய் அவனால் எந்த உணர்விலும் காலூன்றி நிற்க முடியவில்லை. அந்தத் திருமணத்திற்கு அவன் வராததைக் காரியாலயத்திற்குப் போனதும், யார் யார், எப்படி எப்படி நேராகவும், குத்தலாகவும், விசாரிப்பார்கள் என்று இப்போதே கற்பனை செய்ய முயன்றான் அவன். அதையும் கூட அவனால் தொடர்ந்து நினைக்க முடியவில்லை.

     'கடிதத்தைக் கிழித்தெறியுங்கள்' - என்று எழுதத் துணிந்ததிலிருந்து அவள் தன்னை எவ்வளவு அந்நியமாகவும், அவநம்பிக்கையாகவும் எண்ணிப் பயந்திருக்க முடியும் என்று நினைத்த போது அப்படி எழுதிய அவள் மேல் அவனுக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. கடிதத்தை, அவள் எழுதியது போல் கிழிக்கவில்லை. பத்திரமாகப் பெட்டியடியில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். காரியங்கள் எப்போதும் போல் வழக்கமாக இயங்கின.

     மனதைத் திடப்படுத்திக் கொண்டு காரியாலயத்திற்குப் போகிற வழியில் அவனுடைய முதலாளியும் - துளசியின் தந்தையுமாகிய - மாருதி பப்ளிகேஷன்ஸ் க்ரூப் ஆஃப் மாகஸின்ஸ் - அதிபர் - நாகசாமியை - சாந்தோம் ஹைரோடிலுள்ள அவர் வீட்டிற்குப் போய் கண்டு, பட்டும், படாமலும் கலியாணத்தன்று ஏன் வரவில்லை என்று அவர் கேட்டதற்கு அவனால் ஏதோ சாக்குக் கற்பித்துச் சொல்ல முடிந்தது. அது கூட அப்போது பொருத்தமாகவும் சொல்ல இயைபாகவும் வந்தது. நல்ல வேளையாக அவருடைய வீட்டில் அவரது முன்புறத்து அறையிலேயே காரியம் முடிந்து விட்டது. உள்ளே போக வேண்டிய அவசியமோ துளசியையோ அவள் கணவனையோ பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமோ நேரவில்லை. நாகசாமி கச்சிதமாகப் பேசி ஒரு 'டிரிங்கும்' வரவழைத்துக் கொடுத்து தாம்பூலப் பையோடு அவனை வழியனுப்பி வைத்தார்.

     "உள்ளே போய்த் துளசியையும் பார்த்துவிட்டுப் போங்களேன். உங்கள் கதைகளின் முதல் ரசிகையாச்சே?" - என்று விடை கொடுக்கிற சமயத்தில் அவர் உபசாரமாகச் சொல்லிய வார்த்தையை, 

     "அதற்கென்ன அப்புறம் பார்த்துக் கொண்டால் போயிற்று. இந்த அவசரத்தில் எதற்கு?" என்று சுகுணனால் நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட முடிந்தது.

     தாம்பூலப் பையோடு வாச
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:01 pm

[You must be registered and logged in to see this link.]

3

     அபலைகள் மிகப்பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை... அவ்வாறிருக்கும் போது, அவர்கள் தங்கள் வார்த்தைகளைக் காப்பது எப்படி?


     செவியில் ஏற்ற செய்தியின் பரபரப்பு அடங்கச் சில வினாடிகளாயின. உடல் குப்பென்று வேர்த்து ஓய்ந்தது. அவளை அங்கு எதிர்கொள்வதா அல்லது அவள் வருவதற்குள்ளேயே அங்கிருந்து புறப்பட்டு விடுவதா என்ற கேள்வியும் - அந்தக் கேள்வியை ஒட்டிய உணர்ச்சிப் போராட்டமும் சுகுணனின் மனத்துள் மூண்டன. திடீரென்று எதையும் சிந்திக்க முடியாத ஒரு நிலை - மேஜை மேல் குவிந்திருந்த எந்த வேலைகளையும் - தொடர்பாகச் செய்ய முடியாத உணர்ச்சிகளுடனும் தாபங்களுடனும் அவள் அங்கு வந்து தன்னை எதிர்கொள்ளப் போகிறாள் என்ற எண்ணமும், அவளைத் துணிவுடனும் நிச்சலனமாகவும் தான் எதிர் கொள்வதா, வேண்டாமா, என்ற குழப்பமுமாக அந்த விநாடியில் அவன் இருந்தான். அவனைச் சுற்றி அவனுடைய உணர்விலோ, ஞாபகத்திலோ, உறைக்காமல், அந்த மிகப்பெரிய அலுவலகம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் பல்வேறு அறைகளில் ஒலிப்பதும், ஓய்வதும் மீண்டும் ஒலிப்பதுமாக டெலிபோன் மணிகள், கலீர் கலீரென்று ஊறிச் சிலிர்க்கும் ஊற்றுப் போல் கேட்டுக் கொண்டிருந்தன. வேகமாய் ஆட்கள் அங்கும் இங்குமாக மாறி மாறி நடக்கும் காலடி ஓசை ஒருபுறம், 'பைண்டிங்' ஆகி வெளியூருக்குப் பார்சல் போகவேண்டிய பத்திரிகைகள் அடுக்கப்படும் ஓசை ஒருபுறம். டயர்ச் சக்கரங்களோடு கூடிய நீள நீளமான கட்டை வண்டிகளில் ரோட் ரோலர்களைப் போல் 'உருளை உருளை'யாக வந்து இறங்கும் நியூஸ்பிரிண்ட் பேல்கள் வண்டிகளிலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கோடௌனுக்குள் உருட்டிச் செல்லப்படும் சத்தம் ஒருபுறம், டீயும், காப்பியுமாக வந்து காலியானதும் கலகலக்கும் 'காண்டீன்' டவரா டம்பளர்களின் ஒலி ஒருபுறம். ஆனால் இவை எல்லாம் சுகுணனின் செவிகளில் வழக்கம் என்ற போர்வையினால் மூடப்பட்ட பழைய பழகிய ஞாபகங்களாய் மறந்து போயிருந்தன.

     வளைகள் கலின் கலினெனப் பாட மெட்டிகள் கிணுங் கிணுங்கெனத் தாளமிட யாரோ ஒருத்தி அங்கே தன்னைத் தேடி வரப் போவதைப் பற்றியே குமைந்து கொண்டிருந்தது அவன் ஞாபகம். கடந்த சில நாட்களாக வராமலிருந்து விட்டு இன்று தான் முதன் முதலாக அலுவலகத்துக்கு வந்திருப்பதால் 'துளசி சந்திக்க வரப்போகிறாள்' - என்ற ஒரே காரணத்துக்காக - அலுவலகத்துக்குள் வந்து உட்கார்ந்த சூட்டோடு அங்கிருந்து உடனடியாக வெளியேறவும் முடியாது போலிருந்தது. ஒன்றையும் செய்ய முடியாத ஊமைக் குழப்பமாக அன்று அவன் மனநிலை இருந்தாலும் செய்ய வேண்டிய காரியங்கள் எவ்வளவோ இருந்தன. அடுத்த வாரத்துப் பூம்பொழிலில் பிரசுரிப்பதற்காக வந்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளிலிருந்து தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்து அச்சுக் கோப்பதற்குக் கொடுக்க வேண்டும். பூம்பொழிலில் அவன் தானே எழுதுகிற தொடர்கதைப் பகுதியில் அடுத்த வாரத்துக்கானவற்றை எழுதியாக வேண்டும். இவ்வளவு வேலையிருந்தும் ஒரு வேளையும் ஓடவில்லை. இடைவேளை வந்துவிட்டதற்கு அறிகுறியாகப் பக்கத்து அறையில் டிரான்ஸிஸ்டர் ரேடியோ ஒலிக்கத் தொடங்கிவிட்டது. 'காலை மலர்' ஆசிரியருக்கு இடைவேளையில் பொழுதுபோக்கு இந்த டிரான்சிஸ்டர் ரேடியோதான். தன்னுடைய மனத்தின் அந்தரங்கமான சோகத்திற்கு உணர்ச்சியால் மெல்லிய சோகக் கோடுகள் இழைப்பது போல 'மனவியாலகிஞ்சரா' - என்று 'நளின காந்தியை' யாரோ ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டு உடனே எங்கோ எழுந்து வேகமாக ஓடவேண்டும் போல அவன் உணர்ச்சியை முடுக்கிற்று.

     மேஜை மேலிருந்த கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள், திருத்துவதற்காக வந்திருந்த அச்சுப்படிகள், எல்லாவற்றையும் அப்படி அப்படியே டிராயரில் அள்ளி திணித்து விட்டு உடனே எழுந்து ஓடிவிட வேண்டும் போலிருந்தது சுகுணனுக்கு.

     இதற்கிடையில் அலுவலகத்துக் காண்டீன் பையன் மேஜை மேல் தேநீரைக் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான். மறுபடி தானே அவளுக்குப் போன் செய்து 'இங்கே வராதே! நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்' என்று சொல்லிவிடக் கை துறு துறுத்தது. 'இங்கே வராதே' - என்று மட்டும் கூறினால், அப்படி மறுத்துக் கூறுவதையே ஒரு தீவிரக் கோபமாக எடுத்துக் கொண்டு அவள் கட்டாயம் வந்து விடுவாள் என்றெண்ணி அதற்கு ஒரு மாற்றாகத் தான் 'நாளை அல்லது நாளன்றைக்கு வேறெங்காவது சந்திக்கலாம்' - என்று அவன் கூற விரும்பினானே தவிர உண்மையில் இன்னொருவனுடைமை ஆகிவிட்ட அவளைச் சந்திக்கவோ பேசவோ அவன் நிச்சயமாக விரும்பவில்லை. அதற்காக அவளே தேடி வரும் போது - அவளுடைய தந்தையின் சொந்தக் காரியாலயத்திலேயே 'உள்ளே நுழையாதே' என்றோ 'தயவு செய்து வெளியே போ' - என்றோ அவளிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டு துரத்தவும் வெறுக்கவும் கூட அவனால் முடியாது. அவள் வருகிற போது காரியாலய அறையில் தான் மட்டும் தனியே இருப்பதை விட வேறு யாராவது தன்னுடன் கூட இருப்பது நிலைமையைச் சமாளிப்பதற்கும் வசதியாயிருக்கும் என்று தோன்றியது அவனுக்கு. சில தினங்களுக்கு முன்வரை தன் அன்புக்கும், அதிகாரத்திற்கும், எழுத்தாற்றலுக்கும் அடிமை போல் மயங்கி வசியமாயிருந்த ஓர் அழகியை இன்று இந்த விநாடியில் தன்னிலிருந்து அந்நியமாகவும் வேற்றுமையாகவும் பிரித்து நினைப்பதற்கு என்ன காரணமென்று நிதானமாகச் சிந்திக்கக் கூட இப்போது அவன் நெஞ்சில் அவகாசமில்லை. 

     அடுத்த வார அட்டைப் படத்துக்கு எதை வரையலாம் என்று கலந்து பேசுவதற்காக சித்திரக்காரர் சிவன் வந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் அங்கு வந்து விட்டால் நல்லதென்று கருதியவனைப் போல் அவரை நிறைய நேரம் உட்கார்த்திப் பேச வைக்க முயன்றான் சுகுணன். அதுவும் முடியவில்லை. அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேறு ஏதோ காரியமிருக்கிற தென்று போய்விட்டார் அவர்.

     இராயபுரத்தில் எங்கோ ஒரு வாசக சாலை ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்க வர முடியுமா என்று அந்த வாசக சாலைக் காரியதரிசி ஃபோன் செய்தார். அவரோடு ஃபோன் பேசியும் முடித்தாயிற்று. மற்ற வேலைகளை எல்லாம் நாளைக்கு வந்து பார்த்துக் கொள்ளலாம். புறப்பட்டுப் போய்விட வேண்டியதுதான் என்று அவன் துணிந்து அங்கிருந்து புறப்படத் தயாராகி விட்ட சமயத்தில் டெலிபோன் மணி அடித்தது. காரியாலய முகப்பிலிருந்த வரவேற்பு அறையிலிருந்து 'துளசீம்மா வந்திருக்காங்க... இதோ உங்க அறைக்கு வராங்க...' என்று டெலிபோன் ஆபரேட்டர் அறிவித்தாள். அவன் டெலிபோன் ரெஸீவரை வைத்து விட்டுத் தலைநிமிர்வதற்குள்ளாகவே அவனுடைய அறையை நடுவாக மறைத்துக் கொண்டிருந்த ஸ்பிர்ங் கதவுகளின் கீழே நலுங்கிட்ட சிவப்பு மறையாத தந்தப் பாதங்கள் இரண்டு தயங்குவது தெரிந்தது. புடவையின் சரிகைக் கரைக்குக் கீழே தந்த வார்ப்புகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களில் அவை இப்போது வேறு யாருக்கோ சொந்தமென்று சிவப்பு மையினால் அடிக் கோடிட்டுக் காட்டினாற் போல் நலுங்கு இட்டிருந்தார்கள். பளிங்கின் வெண்மை நிற மெருகினால் மின்னும் அந்தச் சிறிய பாதங்கள் வெண்ணிறம் முடிந்து நலுங்கு இட்ட செம்பஞ்சுக் குழம்பின் தழல் நிறம் அடியாகக் கோடு பற்றியிருந்த இடத்தில் மெட்டியோடு மனத்தைக் கொள்ளையிடும் ஓர் அழகு புலப்பட்டுத் தெரிந்தது. தன்னிலிருந்து அந்நியமாகி விட்ட அந்த அழகுக்கு மரியாதை செய்வது போல் அவன் பார்வை பிரிந்து விலகி நிமிர்ந்தது. நேரெதிரே ஸ்பிரிங் கதவின் மேல் வளைந்து நெளிந்து முடிச்சுப் போன்ற மோதிரம் அணிந்த மெல்லிய அழகிய நீண்ட பொன்நிற விரல்கள் பற்றி அதைத் திறந்தன. "உள்ளே வரலாமா?"... அவள் கேட்ட கேள்வியில் உள்ள துயரம் முட்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது. பதில் சொல்வதற்கும் விருப்பமில்லாமல் அலட்சியப்படுத்துவதற்கும் துணிவில்லாமல் சில விநாடிகள் மௌனம் சாதித்தான் சுகுணன். திருமணம் முடிந்த சுவடு நீங்காமல் - மணக்கோலத்தின் அழகும் பொலிவும் அவற்றை விடப் பெரிதாக முகத்திலும் கண்களிலும் வந்து தெரியும் சோகமுமாக - அவள் துவண்டு நிற்பதை கண்டு கோபமும் கருணையும், ஒளியும் நிழலும் போல மாறி மாறித் தோன்றும் மனநிலையில் இப்படி ஓர் அசந்தர்ப்பத்தை தங்களுக்குள் ஏற்படுத்திய விதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது சுகுணனுக்கு. இதற்கு முன்னால் பல முறை துளசி கலீர் கலீரெனச் சிரித்துக் கொண்டே புள்ளி மானாகத் துள்ளிக் குதித்து ஓடி வந்து உரிமையோடும், சுதந்திரத்தோடும் தன் அறைக்குள் நுழைந்திருப்பதையும், இன்று அவளே தன் எல்லையைத் தானே பிரித்து நிறுத்திக் கொண்டவளைப் போல் தயங்கி நிற்பதையும் அந்த ஒரு விநாடியில் இணைத்து நினைத்தான் சுகுணன். மறுபடி துயரம் கனத்துப் போய் அழுகை கன்றியிருந்த அவள் குரல் அவன் செவிகளில் ஒலித்தது.

     "உள்ளே வரலாமா?"

     "ஆகா! தாராளமாக வரலாம். உங்களுடைய அலுவலகம் இது. நீங்கள் இங்கே வரக்கூடாதென்று சொல்ல நான் யார்?"... மிகவும் சுபாவமாகச் சொல்வது போல் சொல்லப்பட்ட தன்னுடைய இந்த வார்த்தைகள் எத்தனை கடுமையாக, எத்தனை ஆழமாக அவளைப் போய்த் தாக்கும் என்பது தெரிந்து தான் அவன் இப்படிப் பேசியிருந்தான். அவள் மெல்ல நகர்ந்து - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பதில் சொல்வதற்குத் தைரியமில்லாதவள் போல் உள்ளே நுழைந்து ஒதுங்கி நின்றாள். அவளோடு அவள் உள்ளே நுழையும் போதே மங்கலமும் நிறைந்ததொரு நறுமணமும் உடனிகழ்ச்சியாக உள்ளே நுழைந்து நிறைந்தது. மனத்தை மிக மோகனமான நினைவுகளில் சாரச் செய்து சுழற்றிச் சுழற்றி மயக்கும் நறுமணம் அது. அந்த நறுமணமும், உள்ளே நுழைவதற்காக அவள் நாலைந்து முறை அடிபெயர்த்து வைத்த போது 'கிணிங்', 'கிணிங்', என்று தாளமிட்ட அவள் கால் மெட்டிகளின் ஓசையும் இன்னும் அவன் நாசியிலும் செவிகளிலும் நிறைந்து விட்ட ஞாபகமாக நின்றன. இருவருக்குமிடையே நிலவிய அந்த மௌனத்தை அவனாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை.


     "ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்களேன் இப்படி" - என்று மிகவும் சுபாவமாகப் பேசுவது போல் சுபாவமில்லாத புதிய மரியாதைகளை அவளுக்கு வழங்கி அதன் மூலமாகவே ஓர் அந்நிய பாவத்தை அவள் அறியும்படி செய்தான் சுகுணன். பதில் ஒன்றும் சொல்லாமல் அவனெதிரே வந்து போகிற பார்வையாளர்கள் உட்காருவதற்காகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்காரவும் செய்யாமல் மேலே போக வழியில்லாத இடத்தில் புகுந்துவிட்ட பூந்தென்றல் போல் அலைந்து அசைந்து ஒதுங்கி நின்றாள் அவள். ஒரு காலத்தில் இந்த முகத்தைத் தூண்டுதலாகக் கொண்டு இந்தக் கருமை துறுதுறுக்கும் வண்டுக் கண்களில் பார்வை கலந்து - இவற்றை இரசித்த மோகத்தோடு தான் பாடிய

     கோல முகமதியிற் சிறுநாணக்
          குங்குமப் பூச் சிவந்து
     நீல விழிமலரிற் சில கோடி
          நெஞ்சி னுரை யுவந்து
     கால மளந்திடும் சிறுபோதிற்
          காவிய மனைத்தும் நீயாகி

-என்ற வரிகள் இப்போது நினைவு வந்தன அவனுக்கு. வரந்தர வேண்டிய நேரத்தில் ஏமாற்றி விட்ட தேவதையை உபாசித்துவிட்ட அப்பாவிப் பக்தனாகத் தான் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. எதிரே வந்து நிற்கும் அவள் மேல் ஆத்திரமேற்படவோ, இறையவோ அவனுக்கு வாய் வரவில்லை. காரணம் அவள் வந்து நிற்கிற அலுவலகம் அவளுடைய தந்தையினுடையதென்பதோ அவள் இன்னொருவருடைய மனைவியாகி விட்டாள் என்பதோ மட்டும் அன்று. உணர்ச்சியையும் மீறி அந்த விநாடி அவனுள் சுரந்த கருணை தான் காரணம். 'இலக்கியத்தில் மிக உயர்ந்த குணம் கருணை தான். நதிகளைப் போல் பெருகும் கோபம், தாபம், வீரம், தீரம், ஆசை, பாசம் எல்லாம் போய்ச் சங்கமமாகிற பரந்த இலக்கியக் குணம் கருணையாகிய கடல்தான் என்பதை உலக மகா கவிகள் எல்லோரும் நிரூபித்திருக்கிறார்கள்' - என்று பல இலக்கியக் கூட்டங்களில் தானே பேசியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. மேலே அலைபாய்ந்து பொங்கினாலும் அடியூற்றைப் போல் சுரக்குமிடம் தெரியாமல் பெருகும் இந்தக் கருணையைத் தன்னால் தவிர்க்க முடியவில்லை என்பதை அப்போது அவனே உணர்ந்தான். நலுங்குச் சாயம் புலராத அந்த மோதிரக் கையிலிருந்து கண்ணீரால் கசங்கிய ஒரு 'கிரீட்டிங் கவர்' வந்து அவன் மேஜை மேல் உதிர்ந்தது.

     "இதை விட அதிகமாக என்னைச் சித்திரவதை செய்வதற்கு வேறு வார்த்தைகள் ஏதும் உங்களுக்குக் கிடைக்கவில்லை போலிருக்கிறது...?"

     "வெறும் வார்த்தைகளில் என்ன இருக்கிறது? இந்த உலகில் யார் அவற்றைக் காப்பாற்றி மதித்து மரியாதை செய்கிறார்கள்? கேவலம் - மறப்பதற்குச் சுலபமுள்ள பலவீனமான சத்தியங்கள் அவை. வார்த்தைகளை நாம் மதிப்பதைச் செயலினால் மட்டுமே நிரூபிக்க முடிகிற உலகம் இது? செயலினால் நிரூபிக்க முடியாதவர்கள் வெறும் வார்த்தைகளைப் பற்றிப் பேசி என்ன ஆகப் போகிறது...?"

     "அபலைகள் மிகப் பல சமயங்களில் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை. வார்த்தைகளைக் காப்பது எப்படி? எல்லாம் தெரிந்த நீங்களே என் வேதனைப் புரியாமல் இப்படி வார்த்தைகளால் என்னை வதைக்கலாமா?"

     "உங்களை வதைப்பதற்குக் கடைசியாக என்னிடம் மீதமிருக்கிற ஒரே ஒரு கௌரவமான ஆயுதம் வார்த்தை தான்."

     "'துளசி' என்று வாய் நிறையக் கூப்பிட மாட்டீர்களா? ஏன் இந்த 'உங்களை', 'நீங்கள்' எல்லாம் போடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இப்படி?"

     "உன் மனத்தைக் கேள்! என்ன பாவம் செய்தாய் என்பதை அது சொல்லும் உனக்கு."

     - சுகுணன் எவ்வளவோ கடுமையாக இருக்க முயன்றும் அவன் மனத்தினுள் அடியூற்றாகச் சுரந்த கருணை அவனை வென்று விட்டது இம்முறை. 'உங்கள் மனத்தைக் கேளுங்கள்' - என்று தான் கடுமையாகச் சொல்ல நினைத்தான் அவன். ஆனால், 'உன் மனத்தைக் கேள்' - என்று தான் சொல்ல வந்தது. அந்த ஒரு வினாடி வெற்றி அவள் மனத்தில் பூச்சொரிந்திருக்க வேண்டும். அதற்கு அடையாளமாக அத்தனை வேதனையிலும் அவள் முகம் ஒரு விநாடி மலர்ந்தது.

     மேலே அவளிடம் ஒன்றும் பேச விரும்பாதவளைப் போல் மேஜை மேல் அவள் வைத்திருந்த அந்த கிரீட்டிங் கவரை எடுத்துப் பிரித்து, "வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய -" என்ற தன்னுடைய அந்த வாசகத்தை யாரோ ஓர் அந்நியன் புதிதாகப் படித்துப் பார்ப்பது போல் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அதை அப்படியே ஏழெட்டுத் துண்டுகளாக உறையுடன் கிழித்துத் தனக்குக் கீழே இருந்த குப்பைத் தொட்டியில் போட்டான் சுகுணன். அதற்காகவே காத்திருப்பவள் போல் அவள் சீறத் தொடங்கினாள்:-

     "எழுதிய வார்த்தைகளைக் கிழித்தெறிந்து விடுவது சுலபம். ஆனால் இப்போது நீங்கள் கிழிப்பதற்கு முன்பே அது உங்களுக்கு மிகவும் வேண்டிய ஒருத்தியின் மென்மையான மனத்தைக் குத்திக் கிழித்திருக்கிறதென்பதை நீங்கள் உணரப் போவதில்லை."

     "ஓர் இலக்கிய ஆசிரியன் என்ற முறையில் நான் நினைப்பதையும், படைப்பதையும் வெளியிடத் துணை நிற்கும் என் மொழியைத் தவிர எனக்கு வேண்டியவர்கள் யாருமில்லை. நான் இந்த வாக்கியங்களை எழுதும் போது என் மனம் எவ்வளவு புண்பட்டு எழுதினேன் என்பது தான் எனக்கு இப்போது நினைவிருக்கிறதே ஒழிய, இது யாரைப் போய்ச் சேருமோ அவர்கள் உணர்வுகளின் விளைவுகளைப் பற்றி நினைக்கவோ, அநுமானிக்கவோ எனக்கு அவகாசமில்லை! அவசியமும் கூட இல்லை..."

     "அவ்வளவு வித்தியாசமாக உங்களால் இருக்க முடியுமானால் நீங்கள் ஆபட்ஸ்பரிக்கே வந்திருக்கலாமே?"

     "எதற்கு? உன் மணக்கோலத்தைப் பார்க்கத்தானே? அது எனக்கு அத்தனை அவசியமான காரியமில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்கிறவர்கள் எந்தக் கோலத்தைப் புனைந்து கொண்டாலும் அதனால் அழகாயிருக்க முடியாதென்று எனக்குத் தெரியும்... துளசி!"

     "... இது அபாண்டம்! எந்த நம்பிக்கைக்கும் நான் துரோகம் செய்யவில்லை. ஏதோ ஓர் அசந்தர்ப்பத்தினால் என்னுடைய நம்பிக்கையே எனக்குத் துரோகம் செய்து விட்டது. இப்போது இவ்வளவு பேருக்கு நடுவில் இந்த இடத்தில் என்னைப் பொறுக்க முடியாமல் கதறி அழவைக்க வேண்டுமென்று உங்களுக்கு ஆசையாயிருக்கிறது போலத் தோன்றுகிறது. அதனால்தான் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்..."

     "தவறு, எனக்கு எந்த ஆசையும் கிடையாது. உன்னை மகிழ்விக்கவோ, உனக்கு ஆறுதலுரைக்கவோ எப்படி எனக்கு ஆசை கிடையாதோ, அப்படியே உன்னை அழவைக்கவும் எனக்கு ஆசை கிடையாது. அப்படி ஆசைப் பட எனக்கு உரிமையும் கிடையாது. நமக்குள் இப்படியெல்லாம் பேசிக் கொள்ள இடமிருக்க வேண்டாம் என்பதற்காகத் தான் நீ ஃபோன் செய்த போதே உன்னை இங்கே வரக்கூடாதென்று கண்டிப்பாகச் சொன்னேன்..."

     "என்னுடைய கடிதத்தைப் பார்த்த பின்பும் உங்களுக்கு மனம் இளகவில்லை?"

     "உன் கடிதம் என் அறையில் போடப்பட்ட தினத்தில் நான் வெளியூருக்குப் போய்விட்ட காரணத்தினால் அன்று அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. இன்று காலையில் திரும்பி வந்த பின்புதான் நான் அதைப் பார்த்தேன். நீ பல கதைகளும், நாவல்களும் படித்திருக்கிறாய்? அந்த இலக்கிய அப்பியாசம் உனக்கு மனம் உருகும்படியாக ஒரு நல்ல கடிதத்தை எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறது."

     "தயை செய்து இப்படிக் குத்தலாகப் பேசாதீர்கள்! நான் விரும்பிப் படித்த நாவல்களும் கதைகளும் உங்களுடையவை தான்."


     "அதற்காக நான் ஏதாவது நன்றி செலுத்த வேண்டுமென்று நீ எதிர்பார்க்கிறாயா துளசி?"

     "இவ்வளவு கடுமையாகக் கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? - 'கோ'வென்று கதறி அழுதுவிடலாம். அதைக்கூட இங்கே செய்துவிட முடியாது. இது 'உங்கள்' காரியாலயம். இரசாபாசமாகிவிடும். என்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் உங்களையும் உங்கள் கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டியது என் கடமை..."

     "காதலின் கௌரவத்தையே காப்பாற்றத் தவறியவர்களால் கடமையின் கௌரவத்தை அத்தனை சுலபமாக காப்பாற்றி விட முடியுமா என்ன?"

     ஸ்பிரிங் கதவு கிரீச்சிட்டது. யாரோ உள்ளே வருவதாகத் தோன்றவே குரலைத் தணித்துப் பேச்சை நிறுத்தினான் சுகுணன். துளசியும் கண்களைத் துடைத்துக் கொண்டு பதற்றத்தோடு திரும்பினாள். ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். அவர் கையில் மெஷினில் ஏற்றுவதற்குத் தயாராக 'மேக்கப்' செய்யப்பட்ட ஃபாரத்தின் அச்சுத் தாள்கள் இருந்தன. திடீரென்று துளசியை அங்கே கண்ட ஆச்சரியம் அடங்க இரண்டு விநாடிகளுக்கு மேல் ஆயிற்று நாயுடுவுக்கு.

     "வாம்மா குழந்தை! ஏன் கலியாணத்துக்கு வரல்லேன்னு சாரைக் கேட்டியாம்மா? அதை விட இவருக்கு வேறே அப்பிடி இன்னா தலை போற காரியமிங்கறேன்?"

     "நீங்கதான் கேட்கணும் நாயுடு..." என்று துளசி செயற்கையாகச் சிரிக்க முயன்றாள். சுகுணன் இவர்கள் இருவரையுமே பொருட்படுத்தாதது போல் நாயுடு கொண்டு வந்திருந்த அச்சுத்தாள்களில் மூழ்கத் தொடங்கினான். 

     "அடடே! இதென்னமா நின்னுகிட்டே இருக்கிறே - உட்காரு சொல்றேன்..." - துளசி அதுவரை நின்றதை வியந்தபடி ஒரு நாற்காலியை அவளருகே ஒதுக்கினார் நாயுடு.

     "பரவாயில்லை நாயுடு! நான் உட்காரப் போவதில்லை. உங்க சார் நான் இங்கே உட்காருகிற மாதிரி இடங்கொடுத்துப் பேசவில்லை..."

     "இவர் கிடக்கிறாரு. காலைலேருந்து ஒரு மாதிரி தான் இருக்காரு..."

     இப்போதும் சுகுணன் தலைநிமிரவே இல்லை.

     "உன் கலியாண போட்டோ வந்திருக்குது குழந்தை! சார் கிட்டக் கொடுத்து 'சைஸ்' கூடப் போட்டு வாங்கியாச்சு. இந்த வாரமே பூம்பொழில்லே போடப் போறோம். அதைக் கொண்டாரட்டுமா? பார்க்கிறியா?"

     துளசி ஒரு விநாடி தயங்கினாள். அவள் முகத்தில் மலர்ச்சி மறைந்தது. பின்பு நிதானமாக நாயுடுவிடம் கூறினாள்: -

     "ம்... கொண்டாங்க..." நாயுடு ஓடினார்.

     - ஐந்தே நிமிடங்களில் நாயுடு படத்தோடு வந்தார். துளசி அதைக் கையில் வாங்கி வைத்துக் கொண்டாள்.

     "நான் அப்பாவிடம் சொல்லி வேறே படம் வாங்கித் தரேன் நாயுடு! இது அவ்வளவு நல்லாவாயிருக்கு?" - என்று அவள் வார்த்தைகளை இழுத்த போது,

     "அதுக்கென்னமா உன் இஷ்டப்படி செய்யி" என்றார் அவர். பத்துப் பதினைந்து நிமிடங்களில் அவர் சுகுணனுடைய அறைக்கு வந்த காரியம் முடிந்து விட்டது. அச்சுத் தாள்களோடு அவர் திரும்பி விட்டார். திரும்பிப் போனவர் மீண்டும் உடனே திரும்பி வந்து கதவைத் திறந்து, "படம் நல்லதா உனக்குப் பிடிச்சதாப் பார்த்துச் சீக்கிரம் அனுப்பிடு குழந்தை! இந்த வாரமே வந்தாகணும்?" என்று மறுபடியும் துளசியிடம் ஞாபகப்படுத்தி விட்டுப் போனார். அவர் போன மறுகணமே சுகுணன் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே அவன் கண்களுக்கு முன்பாகவே அந்தப் புகைப்படத்தை வெறுப்போடும் ஆத்திரத்தோடும் சுக்கல் சுக்கலாகக் கிழித்து அவன் காலடியிலிருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள் துளசி.

     "இது தவறு துளசி! இங்கு வருகின்ற எதையும் பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ கிழித்தெறியவோ ஆசிரியருக்குத் தான் உரிமை உண்டு..."

     "நிராகரிப்பதற்குக் கூட ஓர் உரிமை வேண்டும் போலிருக்கிறது."

     "....."

     சுகுணனால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை.

     "இப்போது உங்களுக்குத் திருப்திதானே?"

     "என்னுடைய திருப்தி அதிருப்திகளை இன்னொருவர் சம்பந்தப்பட்ட உணர்வுகளாக இனிமேலும் நான் விடவேண்டிய அவசியமில்லை துளசி! நீ செய்வதெல்லாம் உனக்கே நன்றாயிருக்கிறதா? பழையபடி குழந்தைத் தனமாகத் தனியே புறப்பட்டு நீ இப்படி இங்கே என்னைப் பார்க்க வரலாமா? வந்தது தான் வந்தாய்! எவ்வளவு நேரம் இப்படி இங்கே தனியாக விவாதித்துக் கொண்டு நிற்பது? இதோ பார்! இது நான் காலையில் உன் வீட்டுக்கு வந்து உன் தந்தையைக் கண்டு கலியாணம் விசாரித்த பின் வாங்கிக் கொண்டு வந்த தாம்பூலப்பை. அங்கு வந்திருந்த போது காலையில் நான் ஏன் உன்னைப் பார்க்கவில்லை? இனிமேல் நாம் பழகுவதற்கு எல்லைகள் உண்டு. அது எனக்குப் புரிந்து விட்டது. உனக்கும் புரிய வேண்டும். இனி நீ தொடங்கியிருக்கும் வாழ்வு தான் உனக்கு ஞாபகமிருக்க வேண்டுமே ஒழிய இப்படி அடிக்கடி என் முன் வந்து நான் இழந்த வாழ்வை எனக்கு ஞாபகப்படுத்துவது உனக்கே நியாயமாகப் படுகிறதா துளசி?" - இதைச் சொல்லும் போது சுகுணனுக்குக் குரல் உடைந்து தொண்டை கரகரத்தது. பேச்சை நிறுத்தி ஒரு கணம் நேற்று வரை செல்லக் குழந்தையாகத் துள்ளிக் குதித்து விட்டு இன்று வெளியே வாய் விட்டுக் குறை சொல்லவோ தூற்றவோ முடியாத ஓர் உணர்ச்சி நஷ்டத்தினால் திகைத்துப் போய் நிற்கும் அந்தக் காதல் அநாதையைப் பரிவோடு பார்த்தான் சுகுணன். அந்த ஒரு கணத்தில் அவள் அநாதையாவதற்குக் காரணமாக அவளிலிருந்து பிரிக்கப்பட்ட மற்றோர் அநாதை தான் என்பது அவனுக்கு நினைவில்லை. இந்த விதமான கதாபாத்திரங்களிடம் இயற்கையாகவே மேலெழும் எல்லையற்ற பெரும் பரிவுடனே ஒரு கதாசிரியன் என்ற முறையில் அவளைப் பார்த்தபோது அவன் மனம் நெகிழ்ந்து இளகியிருந்தது. அத்தனை தவிப்பிலும் சோகத்திலும் கூட மணக் கோலத்தின் பொலிவு நீங்காததொரு சாயல் அவளிடம் இருந்தது. இன்னும் அவள் உட்காரவில்லை. ஒதுங்கினாற் போல நின்று கொண்டுதான் இருந்தாள். சுகுணனுக்கு மனத்தினுள் ஒரு தயக்கம் உண்டாயிற்று.

     'துளசி வந்ததிலிருந்து இங்கேயே நின்று என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். ஏதோ திருமணமான பின்பு அலுவலகத்தில் எல்லாரையும் பார்த்துப் பேசிவிட்டுப் போக வந்தது போல் தமிழ் நாளிதழ் காலை மலர் ஆசிரியரிடம் பத்து நிமிடம், மாதம் இதழ் மல்லிகை ஆசிரியரிடம் பத்து நிமிடம், ஆங்கில தினசரி 'மெட்ரோ பாலிடன் டைம்ஸ்' ஆசிரியரிடம் பத்து நிமிடம் என்று எல்லோரிடமும் பேசிவிட்டு இந்த வரவைப் பொதுவாகவும் சாதாரணமாகவும் செய்துவிட்டுப் போகலாம் இவள். இங்கேயே நின்று என்னிடம் மட்டுமே கண்களைக் கசக்கிக் கொண்டு உருகினால் நாளைக்கு இவர்கள் கூடிக்கூடி வம்பு பேச இதுவும் ஒரு நிகழ்ச்சியாகி விடுமென்பது ஏன் தான் இவளுக்குப் புரியவில்லையோ?" என்றெண்ணி வருந்தினான் சுகுணன்.

     'பெண் இயற்கையாகவே பேதை. மனம் பலவீனமாயிருக்கிற வேளைகளில் அவள் இன்னும் அதிகத் தடுமாற்றமுள்ள பெரும் பேதையாகி விடுகிறாள்' என்பதைத் தவிர அப்போது வேறெந்த முடிவுக்கும் அவளைப் பற்றி அவனால் வர முடியவில்லை. ஏற்கெனவே அவன் துளசியின் திருமணத்தன்று வெளியூர் போய் விட்டதை வைத்துக் கொண்டு அதற்குத் தனியாக ஏதோ ஓர் அர்த்தம் கற்பிக்க முயலுகிறவர்களைப் போல் 'நோடபிள் ஆப்ஸென்ஸ்' - என்று அவனிடமே அளக்கிறவர்களால் அவன் ஊர் திரும்பிய முதல் நாள் காலையிலேயே துளசி அலுவலகத்துக்கு அவனைத் தேடி வந்து கண் கலங்கி நின்றாள் என்பதை வலுவான செய்தி ஆதாரமாக வைத்துக் கொண்டு என்னென்ன வெல்லாமோ பேசமுடியுமே! இதை நினைத்து அவன் தயங்கினான் என்றாலும் ஏதோ வேண்டாத பொருளைப் பிடித்து வெளியே தள்ளுவதைப் போல் துளசியை வலுவில் வெளியே அனுப்பவும் கடிந்து பேசவும் கூட அவனுக்குத் துணிவில்லை. இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்கும் இதே வேளையில் துளசியின் மனத்தினுள்ளும் இதே விதமான நினைவுகள் நிலவியிருந்தன போலும். அது அவள் பேசிய வார்த்தைகளிலிருந்து தெரிந்தது. தன்னுடைய அந்த வேண்டுகோளை மிக மிக விநயமாக அவனிடம் வெளியிட்டாள் அவள்.


     "தயவு செய்து ஒரு பத்து நிமிஷம் எனக்கு அனுமதி தாருங்கள். நான் இன்று இங்கே வந்தது எல்லாருக்கும் தெரியும். காலை மலர் சர்மாவையும், டைம்ஸ் நாயரையும், ரங்கபாஷ்யம் சாரையும் இரண்டிரண்டு நிமிஷம் பார்த்ததாகப் பேர் பண்ணி விட்டு வந்து விடுகிறேன். வீண் வம்புக்கு இடம் வைப்பானேன்?" என்று துளசி கூறிய போது அவளும் தானும் நினைவில் கூட ஒன்றாயிருப்பதை எண்ணி உள்ளூற மகிழ்ந்தான் அவன். 'நட்பிலும், காதலிலும் இரண்டு பேர் ஒன்றாக நினைக்கிறோம்' - என்ற உணர்வே பெருமிதம் தருகிறதென்று தோன்றியது அவனுக்கு. ஆயினும் அவளுக்கு அவன் கூறிய பதில் தன் கோபத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தது.

     "நான் யார் உனக்கு அனுமதி கொடுப்பதற்கு? இரண்டு நிமிஷம் தான் பேசிவிட்டு வரவேண்டுமென்று கண்டிப்பு ஒன்றுமில்லையே. நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். யாரோடு வேண்டுமானாலும் பேசலாம்."

[font:09
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:04 pm

[You must be registered and logged in to see this link.]

4

     'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்? ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும், ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்?'

     "உங்களுக்கு என்ன வந்தது? அடுத்தவர்கள் மன வேதனையைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் உதாசீனம் செய்வதும் வெறுப்பதும் தான் இலக்கியக் குணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ? என்னவோ?" -

     -துளசி அறையிலிருந்து வெளியேறிச் சென்ற பின்பும் நீண்ட நேரம் இந்தக் கேள்வி சுகுணனின் செவிகளிலும் மனத்திலும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

     -'இவளை நான் மறக்க வேண்டும். அல்லது இவள் என்னை மறக்க வேண்டும்! இந்தப் பாழாய்ப்போன மனித வாழ்க்கையில் சில உணர்ச்சிகளில் ஏமாறினாலோ, ஏமாற்றப்பட்டாலோ, அந்த உணர்வையும் அதிலடைந்துவிட்ட ஏமாற்றத்தையும் மறப்பதற்கு வேறு மாற்றுணர்வே கிடைப்பதில்லை. அதில் காதலும் ஒன்று போலும்' - என்று இப்படி அவன் எண்ணிக் கொண்டிருந்தபோது ஃபோர்மென் நம்மாழ்வார் நாயுடு இன்னும் சில அச்சகத்து ஊழியர்களோடு வந்து எதிரே நின்றார்.


     எதையோ வேண்டி, ஏதோ ஒன்றை எதிர்பார்த்து வருகிற நிலையில் இப்போது அவர்கள் வந்து நிற்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. சில சமயங்களில் ஏதாவது ஒரு கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்றோ சொற்பொழிவு செய்ய வேண்டுமென்றோ கேட்க வருகிறவர்கள் இப்படிப்பட்ட தயக்கத்தோடுதான் வருவது வழக்கம்.

     சுகுணன், நாயுடுவின் முகத்தைப் பார்த்தான். பேச வந்ததைப் பேசலாமே என்று எதிரே நிற்பவரின் சொல்லை வரவேற்பது போன்ற புன்முறுவலொன்று அவன் இதழ்களில் மலர்ந்தது.

     "கொழந்தை புறப்பட்டுப் போயிடிச்சுங்களா?" என்று துளசியைப் பற்றி விசாரித்தார் நாயுடு.

     இந்தக் கேள்வியைப் பெரிதாக இலட்சியப்படுத்திப் பதிலும் சொல்ல விரும்பாமல் ஒரேயடியாக அலட்சியப்படுத்திப் பதில் சொல்லாமலிருக்கவும் விரும்பாமல், 'பக்கத்து அறைக்குப் போயிருக்கிறாள்' என்று சொல்வது போல் 'காலை மலர்' சர்மாவின் அறைப்பக்கமாகக் கையைச் சுட்டிக் காண்பித்தான் அவன். நாயுடு அதோடு விடவில்லை. மேலும் கேட்டார்.

     "கொழந்தை மறுபடி இங்கே வருங்களா?"

     "வரவேண்டிய அவசியமோ காரியமோ ஒன்றுமில்லை. ஆனால் வந்தாலும் வரலாம்."

     சிறிது நேரத் தயக்கத்திற்கும், மௌனத்துக்கும் பிறகு நாயுடு மீண்டும் மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.

     "உங்க கிட்டத்தான் ஒரு காரியமா வந்தோம் சார்..."

     "சொல்லுங்க... என்ன காரியம்?"

     "கொழந்தைக்கும், மாப்பிள்ளைக்கும் வர ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் நாங்க பிரஸ் ஒர்க்கர்ஸ் எல்லாரும் உட்லண்ட்சிலே ஒரு விருந்து கொடுக்கலாம்னு எண்ணியிருக்கோம்..."

     "ரொம்ப சரி! செய்ய வேண்டியதுதான்..."

     "அதுக்கு..."

     "அதுக்கு...?..."

     "நீங்க தான் தலைமை வகிக்கணும்."

     இந்த ஒரே வாக்கியத்தை - இந்த ஒரே வேண்டுகோளை நாயுடுவோடு கூட வந்திருந்த எல்லாருமே சேர்ந்து 'கோரஸ்' பாடுவது போல் ஒன்றாகச் சொல்லி வேண்டினார்கள்.

     மறுபடியும் மறுபடியும் நான் விலக விரும்பிய வழிக்கே தன்னை இழுத்துக் கொண்டு போக வருகிற மனிதர்களையும் நிகழ்ச்சிகளையும் அந்தரங்கமாகச் சபித்தவாறே அந்த வெறுப்பின் காரணமாக ஒன்றும் பதில் சொல்லத் தோன்றாமல் மலைத்துப் போய் மௌனமான துயரம் உள்ளே வெதும்ப, அது வெளியே தெரிந்துவிடாமல் மறைக்க முயன்றபடி அவர்கள் முகத்தை ஒவ்வொன்றாக ஏறிட்டும் பார்க்கலானான் சுகுணன்.

     அந்தக் காரியாலய அச்சகத்தின் கம்போஸிங் (அச்சுக் கோத்தல்), ப்ராஸஸ் (பிளாக்குகள் தயாரித்தல்), பைண்டிங் ஆகிய எல்லாப் பிரிவுகளிலும் முதன்மைப் பணியாளர்களாயிருந்த எல்லா ஃபோர்மெனும் நம்மாழ்வார் நாயுடுவோடு இதற்காக அவனை அழைக்க வந்திருக்கிறார்கள்.

     வெளிப்படையான அறிகுறிகளோ பழக்கவழக்கங்களோ இல்லாமல் இருவர் மனத்தளவில் மலர்ந்த காதல் கருகினால் அந்த வாட்டமும் ஏமாற்றமும் கூட இந்த உலகத்துக்குத் தெரிவதில்லை. வெறும் கதாசிரியனாகவும், கலகலப்பாகப் பழகக்கூடிய நவநாகரிகப் பெண்களின் கூட்டத்திலிருந்து ஒரு வெறும் இரசிகையாகவும் அவனும் அவளும் பழகினது போலப் பாவித்துக் கொண்டு அல்லவா அவளுடைய திருமணப் பாராட்டு விருந்திற்கு அவனையே தலைமை தாங்க அழைக்கிறார்கள்?

     'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகப் படைத்தாய்? ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் ஒரு பெரிய பூட்டுத் தொங்குகிறது. ஆனால் அந்தக் கடினமான பூட்டைத் திறந்து பார்க்கும் சாவி வேறு எங்கோ இருக்கிறது. பூட்டைக் கொண்டிருப்பவர் ஒரு புறமும், திறவுகோலையுடையவர் ஒரு புறமுமாகப் பிரிவதும் விலகுவதும் வாழ்க்கை வீதியில் இயல்பாயிருக்கலாம். ஆனால் அந்தப் பூட்டிய மனத்தை மற்றவர்கள் உடைத்துப் பார்க்க வருவது தான் வேதனையான காரியம்' என்பதைச் சுகுணன் அந்த வேளையில் மிக நன்றாக உணர்ந்தான்.

     "திருமண விருந்துதானே இது? விருந்திற்குத் தலைமை தாங்கக் கூட ஒருவர் அவசியம் தானா நாயுடு?" என்று அவன் கேட்டதை அடக்கத்தினாலும் விநயத்தினாலும் அவனிடமிருந்து வெளிவந்த வார்த்தைகளாக அவர்கள் எடுத்துக் கொண்டு மேலும் அவனது சம்மதத்தை எதிர்பார்த்து வற்புறுத்தித் தயங்கி நின்றார்களே ஒழிய உள்ளே அவன் மனம் படும் வேதனையை அவர்களால் உணர முடியவில்லை. விருந்து முடிந்ததும் மாலை போடுவதும் மாலை போட்டு முடிந்ததும் நவநாகரிகப் பூச்சூடலாகிய வார்த்தை மலர்களைச் சொற்பொழிவுகளாகத் தொடுத்துப் பேசுவதும் தவிர்க்க முடியாதவை என்பதை அவன் அறிவான். ஆயினும் தனக்கு வேதனை தரக்கூடிய அந்த வாய்ப்பைத் தட்டிக் கழிக்க முயலும் முயற்சியினாலேயே அவன் அப்படிப் பேசினான். அவர்களோ விடவில்லை. கடைசியாக இன்னொரு சாக்கைச் சொல்லித் தப்பிக்க முயன்றான் அவன்.

     "இந்த மாதிரி விருந்துக்கும், திருமண வாழ்த்துக்கும் வேறு யாராவது வயதானவர்கள் தலைமை வகித்தால் நன்றாயிருக்குமே? நீங்கள் 'காலை மலர்' ஆசிரியர் சர்மாவையோ 'டைம்ஸ்' நாயரையோ கூப்பிட்டால் என்ன" -

     "அதெப்படிங்க? நாங்கள் உங்களைத்தான் கூப்பிடறோம். நீங்களே வந்தாத்தான் நல்லாயிருக்கும்."

     சம்மதிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலையிலிருந்தான் சுகுணன். இதற்கு மேலும் பிடிவாதமாக அதிலிருந்து தப்ப முயலுகிற கோழைத்தனத்தை அவன் செய்யவில்லை. திருமண விருந்துக்கு தலைமை வகிப்பதாக ஒப்புக் கொண்டு அவர்களை அனுப்பினான். அவர்கள் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் காரியாலயத்தில் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு மறுபடி அவன் அறைக்கு வந்தாள் துளசி. வந்தவள் ஆர்வத்தோடு அவனிடம் ஒன்று வேண்டினாள்:

     "உங்கள் தொடர்கதையின் அடுத்த வாரப் பகுதி கையெழுத்துப் பிரதியாயிருந்தாலும், அச்சான ஃபாரமாயிருந்தாலும் உடனே எனக்குப் படிக்க வேண்டும்..."

     "வெளிவர வேண்டிய பாரம் அச்சாகிவிட்டது. ஆனால் அச்சான பாரம் இங்கு எடுத்து வைக்கவில்லை. அதற்கும் அடுத்த வாரத்துக் கதைப் பகுதியை நானே இன்னும் எழுதவில்லை.

     "இதென்ன? எப்போது இந்த டீ டவராவைக் கொண்டு வந்து வைத்தார்கள்? குடிக்கவே இல்லையா? மறந்து விட்டதா?" என்று அவன் மேஜை மேல் கவனிக்கப்படாமல் ஆறிப் போயிருந்த தேநீரைக் காண்பித்துக் கேட்டாள் துளசி.


     "மறந்திருக்கும்! அதனால் என்ன இப்போது?" என்று அலட்சியமாக அந்த டவரா-டம்ளரை எடுத்து ஜன்னல் வழியே, ஏதோ ஒரு வெறுப்போடு அதிலிருந்து தேநீரை வெளியே ஊற்றினான் ச்குணன். அவனுடைய அந்தச் செயலைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் கேட்டாள்.

     "காண்டீன் பக்கமாகப் போய் பையனைச் சூடாக வேறு தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?"

     "எனக்கு வேண்டியதில்லை. ஒருவேளை உனக்குத் தேவையானால் சூடாக வரவழைத்துக் கொள்ளலாம்..."

     "இப்போது எனக்குத் தேவை தேநீர் அல்ல. உங்கள் தொடர்கதையின் வெளிவரப் போகும் பகுதி தான் வேண்டும்..."

     "ஃபோர்மெனிடம் கேள்! தருவார்."

     முன்பெல்லாம் அச்சான முதல் ஃபாரத்தை அவளுக்காக அவன் எடுத்து வைத்துக் கொடுப்பது வழக்கம். இன்று அப்படிச் செய்யவில்லை. அவளே விரைந்து போய் ஃபோர்மெனிடம் வாங்கி வந்தாள். அப்போது மாலை மணி ஐந்து இருக்கும். அவள் வீட்டிற்குப் போய் வருவதாக விடைபெற்ற போது அவன் அமைதியாக விடை கொடுத்து அனுப்பினான். எப்போதும் ஆதரவாக வாசல் வரை - கார்க் கதவு வரை போய் அனுப்புவது வழக்கம். இன்று அதையும் செய்யவில்லை. செய்ய முடியாது, செய்வதும் நன்றாயிராது. ஆனால் செய்யும்படி ஒரு நிர்ப்பந்தம் வந்து சேர்ந்தது. அவள் அங்கிருந்து நகர்ந்ததுமே அவன் அறையில் டெலிபோன் மணி அடித்தது. "துளசி இருந்தால் சீக்கிரம் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள். அவள் கணவர் ஏதோ சினிமாவுக்கு முதல் ஆட்டம் டிக்கட்டை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்" - என்று அவள் தந்தை நாகசாமி ஃபோன் செய்தார்.

     சுகுணன் உடனே காரியாலய முகப்புவரை விரைந்து போய் அங்கே காரில் புறப்படத் தயாராயிருந்த துளசியிடம் கையைக் காண்பித்துக் காரை நிறுத்தி அதை அப்படியே தெரிவித்தான். கணவன் சினிமா டிக்கெட்டோடு வீட்டில் காத்திருப்பதாக அவன் வந்து தெரிவித்ததைக் கேட்டு ஒன்றும் தோன்றாமல் இரண்டு கணம் ஸ்டியரிங்கில் கை வைத்தபடியே இருந்தாள் அவள். பிறகு கீழே இறங்கி ஒரு கணம் நின்றாள்.

     சுகுணனோ தகவலைத் தெரிவித்துக் கடமை முடிந்து விட்டது போல விரைந்து உள்ளே திரும்பி விட்டான். சந்திக்காமலிருந்த சில நாட்களை விட இன்று சந்தித்த பின்பே இருவருக்கும் இடையே அதிகத் தொலைவும் பிரிவும் பிறந்து விட்டது போன்ற உணர்வுடன் இருவரும் பிரிந்தனர். 

     கார் திரும்பியபோது உள்ளே வேகமாக விரையும் அவன் உருவை அவள் ஒரு வினாடி பார்த்தாள். கண்களில் நீர் பனித்தது. ஓர் இயந்திரம் போல் அவள் கால் இயங்கி வேக விசையை மெல்ல அழுத்தியது. கார் நகர அவளும் சென்றாள்.

     ஐந்தரை மணியளவில் சுகுணனும் காரியாலயத்திலிருந்து திருவல்லிக்கேணியில் அறைக்குப் புறப்பட்டு விட்டான்.

     முதல் நாளிரவு இரயிலில் உறக்கம் விழித்துப் பயணம் செய்ததனால் மிகவும் சோர்வாக இருந்தது. மனத்தின் சோர்வுகளும் உடலின் சோர்வுகளுமாக இருண்டும் சேர்ந்து அவனை வாட்டின. ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்து மாலையிலோ, இரவிலோ அறைக்குத் திரும்பியதும், இரண்டாவதாக ஒரு முறை குளிப்பது அவன் வழக்கம். கடுங் கோடைக்காலமாக இருந்து வெப்பம் அதிகமாக வாட்டினாலோ நடுப்பகல் இடைவேளையின் போது கூடக் குளிப்பதற்காகவே அறைக்கு வந்து திரும்புவதுமுண்டு. உடம்பில் வெம்மையோ, வேர்வையோ, கசகசகளைப் போக்கி, நறுமணம் கமழும் ஈரச் சந்தனத்தைப் போல் குளிரக் குளிர வைத்துக் கொள்வது அவனுக்கு மிக விருப்பமான காரியம். அன்றோ குளிக்க வேண்டுமென்று நினைப்பது கூடச் சோர்வாயிருந்தது. பல்லாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டுவது போல மனத்தில் ஏதோ ஒரு நுட்பமான வலி இசிவெடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் வழக்கப் படுத்திக் கொண்டுவிட்ட நல்லொழுக்கங்களின் மேல் அவனுக்கிருந்த பிடிவாதத்தின் காரணமாக அறைக்கு வந்ததும் முதல் வேலையாகக் குளித்து விட்டு வந்தான்.

     அதிக வசதிகள் இல்லாத அந்தச் சிறிய அறையைத் தூய்மையாகவும் வைத்துக் கொள்வதில் சுகுணனுக்குப் பிரியம் அதிகம். ஊதுவத்திக் குழலில் மீதமிருந்த கடைசி ஊதுவத்தியும் கொளுத்திவிட்டுப் பாயை விரித்துக் கீழே அமர்ந்து சொந்தமாக வந்திருந்த சில கடிதங்களுக்குப் பதிலெழுதலானான். பி.இ.இன். மகாநாட்டிற்கு டெல்லி வருமாறு கடிதம் போட்டிருந்த நண்பன் தவமணிக்கும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் பெடரேஷனுக்காகக் கல்கத்தாவிலிருந்து கோஷ் எழுதியிருந்த கடிதத்துக்கும் பதில் எழுதி முடித்த பிறகு, 'ஓய்விருக்கும் போது கிராமத்துக்கு வந்து தன்னோடு சில நாட்கள் தங்கிவிட்டுப் போக வேண்டுமென்று' - எழுதியிருந்த சகோதரிக்கும் மறுமொழி வரைந்தான். அடுத்த வார பூம்பொழில் 'இலக்கியமேடை' கேள்வி - பதில் பகுதிக்கு வந்திருந்த கேள்வி கடிதங்களை ஒன்றாக அடுக்கிக் கட்டி எடுத்து வந்திருப்பது ஞாபகம் வந்தது. அவற்றை எடுத்து சிலவற்றிற்குப் பதில் எழுதினான். மனம் தனிமையாக, எல்லாவற்றிலும் விடுபட்டுத் தளர்ந்தது போல் உணரும் வேளைகளில் நிறைக் கடிதங்களை எழுதி முடித்தது போலத் தோன்றும்.

     மிகவும் குறுகலான பெரிய தெரு என்ற சிறிய வீதியில் இரவும் மனிதர்களும் கவிந்து உலாவத் தொடங்கி விட்டனர்.

     நாலு வீடு தள்ளியிருந்த மெஸ்ஸிற்குப் போய் இரவு உணவை முடித்துக் கொண்டு அவன் அறைக்குத் திரும்பினான். அறைக்குள் வசதிகளுக்குப் பஞ்சமானாலும் காற்றுக்குப் பஞ்சமில்லை. படுக்கையில் புரண்டபடி நீண்ட நேரம் எதை எதையோ தொடர்புடனும் தொடர்பின்றியும் சிந்தித்துக் கொண்டிருந்து விட்டு அயர்ந்து உறங்கிப் போனான் சுகுணன்.

     மறுநாளும் அதற்கடுத்த நாளும், பத்திரிகை வேலைகளில் மூழ்கினான் அவன். நடுவில், 'படங்கள் சரியாக விழாததனால் திருமணப் புகைப்படங்கள் எதையும் போட வேண்டாமென்று' துளசியே அபிப்ராயப்படுவதால் அப்படியே விட்டு விடுவது நல்லதென்று, பத்திரிகை அதிபர் நாகசாமி அவனுக்கு ஃபோன் செய்து தெரிவித்தார். அவளுடைய திருமணப் படத்தை முதல் பக்கத்தில் பார்டர் கட்டி போட வேண்டுமென்று அவர் தனக்குக் கட்டளையிட்ட போது கடமையை ஏற்று எப்படி அதை வரவேற்றுச் செயல்பட்டானோ, அதே போல இப்போதும் படத்தைப் போட வேண்டாமென்ற இந்தச் செய்தியையும் கடமையுணர்வோடு கேட்டுக் கொண்டான் அவன். ஆனால் இதெல்லாம் துளசி தனது மன வேதனையைத் தவிர்ப்பதற்காகச் செய்யும் காரியங்கள் என்பது அவனுக்கே புரிந்துதானிருந்தது. அவள் அலுவலகத்தில் தனக்கு முன்பே படத்தைக் கிழித்தெறிந்த போதும், வேறு நல்ல படம் தருவதாக ஃபோர்மென் நாயுடுவிடம் பொய் கூறிய போதுமே - இது இப்படித்தான் நடக்குமென்று அவன் அநுமானம் செய்திருந்தான். கடைசியில் அது அப்படியே நடந்தது.

     துளசியும், மாப்பிள்ளையும் கோடைக்கானல் போய் இரண்டு மூன்று நாட்கள் தங்கி விட்டுச் சனி இரவு அங்கிருந்து புறப்பட்டு ஞாயிறு காலையில் தான் சென்னை வருவதாகக் கேட்டுவிட்டு ஞாயிறு மாலை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் அச்சக ஊழியர்கள். இப்போது அவர்களுடைய கோடைக்கானல் பயணம் நின்று போன தகவல் தெரிந்ததும் வெள்ளிக்கிழமை மாலையே விருந்துக்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் அன்றே அவன் தலைமை வகிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். சுகுணன் அதற்கும் மறுக்கவில்லை. துயரமோ, ஏமாற்றமோ, தன்னைக் கோழையாக செய்துவிடக் கூடாதென்று தன் மனத்துக்கே ஒரு கட்டுப்பாடு போட்டுக் கொண்டு திருமணப் பாராட்டுக் கூட்டத்துக்குப் போய்வர ஒப்புக் கொண்டிருந்தான் அவன்.


     தன்னை வேண்டுமென்றே மிக மிக வஞ்சகமான முறையில் பழிவாங்குவதற்காகவே அவன் அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்க ஒப்புக் கொண்டு வந்திருக்கிறானோ என்று துளசிக்கு உள்ளூற ஒரு பயம் தோன்றினாலும் தோன்றலாம். அவனுடைய கதைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட சில அன்பர்களின் திருமணங்களுக்குத் தலைமை தாங்க அவன் போயிருக்கிறான். அதைப் போலவே இதையும் ஒரு மேடை நிகழ்ச்சியாக நடத்திக் கொடுத்து விட்டுத் தன் அந்தரங்க உணர்ச்சிகளை மனத்திற்குள்ளேயே புதைத்துக் கொண்டு வந்துவிட அவனால் முடியும். ஆனால் இதில் மிக மிகப் பரிதாபத்துக்குரியவள் துளசி தான். விருந்தில் அவன் சாதாரணமாகப் பேசுவதெல்லாம் கூட அவளைக் குத்திக் காட்டிப் பேசுவது போல் அவளுக்குத் தோன்றலாம். அவன் ஒன்றுமே பேசாமல் இருந்தாலோ அதுவும் ஒரு விகல்பமாகவே தோன்றும். முதலில் அச்சக ஊழியர்கள் அளிக்கும் அந்த விருந்திற்கு அவன் தலைமை வகிக்கப் போகிறான் என்பதே அவளுக்குப் பெரிய அதிர்ச்சியாயிருக்கும். அதை வைத்துக் கொண்டும் அவள் என்னென்னவோ நினைக்கலாம். கற்பனை செய்யலாம். ஆனால் இவற்றை எல்லாம் நினைத்து அவன் தயங்கவோ, தளரவோ, அவசியமில்லை.

     'சமூக வாழ்வில் ஆண்களுக்குச் சில பொது வசதிகள் இருக்கின்றன. எந்த இடத்திலும் எந்த நிலையிலும் முகம் சிவக்க நாணாமல், கூசாமல், பயப்படாமல் நிற்க ஆணுக்கு ஒரு வசதி இருக்கிறது. 'பெருமையும் வலிமையும் ஆண்மைக்கு உரியன; அச்சமும் மடமும் நாணமும் பெண்மைக்கு உரியன' என்று இவற்றுக்குக் குண எல்லை வகுத்த பழைய இலக்கண ஆசிரியர்கள் எத்தனை கவனமாக எத்தனை நிச்சயமாக எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்படி அந்த இலக்கணத்தை வகுத்திருக்கிறார்கள்!' என்று அவர்களை ஒரு கணம் சிந்தனையில் நினைத்து வியந்தான் சுகுணன்.

     வெள்ளிக்கிழமையன்று மாலை நான்கு மணிக்கே அலுவலகத்திலிருந்து அறைக்குப் புறப்பட்டுப் போய் விட்டான் சுகுணன். குளித்து உடை மாற்றிக் கொண்டு அறையிலிருந்து நேரே உட்லண்ட்சுக்கு வந்து விடுவதாக அவன் மற்றவர்களிடம் சொல்லியிருந்தான். விருந்து முடிந்ததும் மணமக்களைப் பாராட்டி சர்மா, டைம்ஸ் நாயர் இன்னும் சில அச்சக ஊழியர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் சொற்பொழிவாற்ற இருப்பதாக ஃபோர்மென் நாயுடு முன்பே சுகுணனிடம் தெரிவித்திருந்தார். இத்தகைய நிகழ்ச்சிகளால் திருமணங்கூட ஒரு வெளிப் பகட்டுச் சடங்காகி விடுவதை அவன் உணர்ந்து சலித்திருந்தாலும் இந்தத் திருமண விருந்தில் அந்தச் சலிப்பைக் கூட அவன் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடியாமலிருந்தது.

     ஆறு மணிக்கு ஒரு டாக்ஸியில் போய் உட்லண்ட்ஸில் இறங்கி விருந்து நடக்கும் பகுதிக்குள் நுழைந்த போது துளசியும் அவள் கணவனும் உட்பட எல்லாருமே வந்து கூடியிருந்தார்கள். துளசியோடும் அவள் கணவனோடும், நாயரும், சர்மாவும், ஃபோர்மென் நாயுடுவும் அருகிலமர்ந்து ஏதோ சிரிப்புக் கலகலக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். சுகுணன் அருகில் வந்ததும் அவனை மரியாதை செய்து வரவேற்கும் பாவனையில் துளசி எழுந்து நின்றாள். ஃபோர்மென் நாயுடுவும் எழுந்து வரவேற்றார். முறையையும் பொது நாகரிகத்தையும் விட்டுக் கொடுக்க முடியாமல் துளசி தன் கணவனை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவர் நீட்டிய கையை ஏமாறவிடாமல் அவனும் புன்முறுவலோடு பற்றிக் குலுக்கினான். அப்போது அவன் நினைத்தான்:

     'கடவுளே! மனம் என்பதை ஏன் இத்தனை இரகசியமாகப் படைத்தாய்?'

     எல்லாரும் இருக்கைகளில் அமர்ந்த பின் சில விநாடிகள் வரை ஒருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. 

     "சார் தான் தமிழில் நம்ம துளசியோட ஒரே ஃபேவரிட் ஆசிரியர்" என்று எதையாவது பேச வேண்டுமென்பதற்காகச் சொல்லுபவர் போல் குறுக்கிட்டுக் கூறினார் சர்மா.

     மனத்தின் சத்திய ஆழத்திலிருந்து பிறக்காமல் வெறும் நாக்கு நுனியிலிருந்து உதிர்ந்த அந்தப் போலிப் புகழ் வார்த்தைகள் சுகுணனின் செவிகளில் அபஸ்வரமாக ஒலித்தன. 'துளசியின் ஃபேவரிட் ஆசிரியன்' -அவன் தான் என்பது உண்மையாயினும் சர்மா அதை வெளியிட்ட விதம் அந்தச் சூழ்நிலையில் போலியாக ஒலித்தது. விருந்துக்காக வரிசை வரிசையாய் நாற்காலிகள் போடப் பட்டு அவர்கள் அமர்ந்திருந்த திறந்த புல்வெளியிலிருந்து மேலே தெரிந்த வானத்தில் அப்போதே மினுமினுக்கத் தொடங்கிவிட்ட ஏதோ ஒரு நட்சத்திரத்தைப் பராக்குப் பார்க்கலானான் சுகுணன்.

     சிறிது நேரத்தில் விருந்து தொடங்கியது. மேடையில் முக்கியமான நடு இடத்தில் துளசியும் அவள் கணவனும் பிரதம விருந்தினர்களாக அமர்ந்த பின் அவர்களுக்கு வலது பக்கம் சுகுணனும், இடது பக்கம் சர்மா, நாயர் முதலியவர்களும் அமர்ந்து கொண்டார்கள். அச்சக ஊழியர்கள், உழைக்கும் பத்திரிகையாளர்கள், யார் எந்த விருந்தோ கூட்டமோ நடத்தினாலும் அதற்குப் பத்திரிகை அதிபர் நாகசாமி சில காரணங்களால் வருவது வழக்கமில்லை என்பது நன்றாகத் தெரிந்தும், "அப்பா வரலியாம்மா?" என்று துளசியிடம் சம்பிரதாயமாக ஒரு கேள்வி கேட்டு வைத்தார் சர்மா. வரவில்லை என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தாள் துளசி.

     விருந்து தொடங்கியது. அந்த அருமையான விருந்தில் இரசித்துச் சாப்பிட முடியாதவர்கள் இருவர் இருந்தனர். ஒருத்தி துளசி, இன்னொருவன் சுகுணன். திட்டமிடாமல் சேர்ந்த இயற்கையாய்த் துளசியின் வலது புறம் சுகுணனும், சுகுணனின் இடது புறம் துளசியுமாக அமர்ந்திருந்ததால் ஒருவர் நிலையை மற்றொருவர் நன்றாக உணர முடிந்தது. அவளுடைய கூந்தலின் மல்லிகை அவனருகே மணந்தது. அவளுடைய சரீரத்தின் இங்கிதமான நளின நறுமணங்கள் அவனுக்கு மிக அருகே கிளர்ந்தன. அவளுடைய கைகளின் வளைகள் அவனுக்கு மிக அருகே ஒலித்தன. வெண்ணெய் திரண்டாற் போன்ற அவளது அந்தப் பளிங்கு முழங்கை அவனுக்கு மிக அருகே இயங்கியது. ஆயினும் அவன் எங்கோ கண்ணுக்கெட்டிய வான மூலையில் மின்னிய ஒரு நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வேளையில் துளசியின் வீணைக் குரல் ஒலித்தது.

     "என்ன இது? ஒன்றுமே சாப்பிடாமல் எங்கோ பாராக்குப் பார்க்கிறீர்கள்?"

     "வர வர ருசியே போய் விட்டது..." - என்று ஏதோ நகைச்சுவையாகப் பதில் சொல்வது போல் அவன் கூறிய வார்த்தைகள் அவளைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். அந்த வார்த்தைகளில் அடியுண்டு விழுந்த அவள் இரண்டு விநாடி மௌனத்திற்குப் பின் பதில் சொன்னாள்:

     "அதெப்படி? நீங்கள் தலைசிறந்த கதாசிரியர்! எல்லா நல்ல ருசிகளும் உங்கள் பேனாவிலிருந்துதான் பிறக்க வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் எல்லாம் தவம் கிடக்கிறோம். உங்களுக்கே ருசி போய்விட்டதென்றால்..." என்று சொல்லி விட்டு அந்தச் சொற்களின் ஆழத்தை மூடி மறைக்க மேலாக ஒரு புன்னகையும் புரிந்தாள் துளசி.

     அந்த வார்த்தைகளைக் கேட்டு அவள் பக்கமாகத் திரும்பிக் கண்களைச் சிலகணம் அவள் முகத்தில் ஊன்றி ஒரு பார்வை பார்த்தான் சுகுணன். அந்தப் பார்வை அவள் பேச்சையும் சிரிப்பையும் அப்படியே கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டது.

     விருந்து முடிந்தது. ஃபோர்மென் இரண்டு பெரிய ரோஜாப் பூ மாலைகளை அவன் கையில் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மாலைகளில் ஒன்றைத் துளசியின் கைகளிலும், மற்றொன்றை மாப்பிள்ளையின் கைகளிலும் கொடுத்து அவர்களே ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ளும்படி செய்தான் சுகுணன்.

     துளசியின் மெல்லிய விரல்கள் அந்த மாலையைத் தன் கைகளிலிருந்து வாங்க நடுங்குவதை அவன் கவனித்தான். அதைத் தன் கைகளிலிருந்து வாங்கும் போது அவள் கழுத்தும் தோள்களும், தலையும் ஏன் அப்படிக் குழைந்து குனிந்து தயங்கின? அவளையும் அறியாமல் அவனிடமிருந்து அந்த மாலையைத் தன் கழுத்திலேயே ஏற்றுக் கொள்ள அவள் சரீரம் இயற்கையாகக் குழைகிறதா? சில பூக்கள் தென்றல் உராய்ந்ததும் மலருவதுண்டாமே! இன்னும் சில பூக்கள் கைகள் பட்டால் மலருவதுண்டாமே!


     'பாழும் கடவுளே! மனம் என்பதை ஏன் தான் இத்தனை இரகசியமாகவும் இத்தனை நுணுக்கமாகவும் படைத்தாய்! ஒருவர் மனம் இன்னொருவருக்குப் பூட்டாகவும் ஒருவர் நினைவு இன்னொருவருக்குப் புதிராகவும் ஏன் படைத்தாய்!'

     மாலை மாற்றிய கைகளோடு முகத்தில் இருந்த சிரிப்புப் பூச்சை மேலாகப் பிரித்தெடுத்துவிட்டு அடியிலிருந்த அசல் சோகத்தை மட்டுமே காண முடிந்தாற் போன்ற முகத்தோடு துளசி பதறி நிற்கையிலே, "நான் ஆபட்ஸ்பரிக்கே வந்து உன் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற குறை இனிமேல் உனக்கு இருக்காதே துளசி?" என்று சர்வ சாதாரணமாக நகைச்சுவையோடு கேட்பது போல் அவளை ஒரு கேள்வி கேட்டான் சுகுணன். அதை எல்லாரும் - மாப்பிள்ளையும் கூடச் சிரித்து கைதட்டி வரவேற்றார்கள்.

     துளசியின் முகத்திலோ அந்தக் கேள்வியை அவன் கேட்ட போது ஏற்கெனவே இருந்த பூச்சுச் சிரிப்பும் மறைந்து விட்டது. அந்த முகத்தில் இருந்து பொதுவான மகிழ்ச்சியையும் துடைத்தெறிந்துவிட்டது அவனுடைய அந்தக் கேள்வி.

     மேடைகளில் பேசிப் பேசிப் பழகிய அனுபவமும், துணிவும், அவனை அந்தத் திருமண விருந்துக் கூடத்தில் நன்றாக நாடகம் ஆட வைத்தன.

     திடீரென்று தன்னை எல்லாரிலும் மிகமிக மூத்தவனாக்கிக் கொண்டு, "'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலன் நன்மக்கட் பேறு' என்று குறள் கூறுகிறது. குடும்பம் ஆரம்பமாவது இருவர் அன்பில். வளர்வது மூன்றாவது அன்பைப் படைப்பதற்காக. இவ்வாறு படிப்படியாக அன்பை வளர்க்கும் ஒரு பண்ணையே நமது பாரத நாட்டு இல்லற வாழ்வு. இந்த இருவர் அன்பில் ஒரு தியாகமயமான புதுத் திருப்பத்தை உண்டாக்குவது மக்கட்பேறு. குழந்தைகள் பிறக்குமுன் கணவன் மனைவி மேலும், மனைவி கணவன் மேலுமே மாற்றி மாற்றி அன்பைச் செலுத்துவதற்கு முடியும். இந்தக் காதல் ஓரளவு சுயநலமானது. தங்களைப் பற்றியது. இந்த அன்பே குழந்தைகள் பிறந்த பின்பு சமூக நலமான பொது அன்பாக மாற முடியும். குடும்ப வாழ்வின் தத்துவமே வீட்டளவில் ஓர் அன்பை வளர்த்து அந்த அன்பை நாட்டளவில் ஒரு சமூகச் சொத்தாக்குவதில் தான் இருக்கிறது. அத்தகைய சீரிய குடும்ப வாழ்வு நாம் இன்று பாராட்டும் இந்த மணமக்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று மனமார விரும்புவதை விட வேறெந்தப் பெரிய வாழ்த்துக்களையும் இவர்களுக்கு நாம் தந்துவிட முடியாது! அடுத்த நமது நிறுவனத்தைச் சேர்ந்த கால
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:07 pm

[You must be registered and logged in to see this link.]

5

     ஒருவர்க்கு மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் என்றும் அவியாமல் உள்ளேயே கனிகிறது.

     "இந்த நூற்றாண்டின் இந்தத் தலைமுறையில் காரண காரியங்களைச் சிந்திக்காமலே விருப்பு வெறுப்புக்களில் அழுந்தி நிற்கிற கெட்ட வழக்கம் தமிழ் மக்களை எப்படியோ எப்போதோ நோய் போலப் பற்றிக் கொண்டுவிட்டது. அவசரமாக வெறி கொண்டது போல் மேல் விழுந்து வலிய விரும்புகிறார்கள். அதே அவசரத்தோடு வெறிகொண்டது போல் மேல் விழுந்து வலிய வெறுக்கிறார்கள். விருப்பு வெறுப்புக்களுக்கு அடிப்படை நியாயம் ஒன்றும் கிடையாது. வெள்ளப் பெருக்கில் தத்தளிப்பவர்கள் கைக்குக் கிடைப்பதை அவசரமாகப் பற்றிக் கொள்வது போல் நிர்ப்பந்தம் காரணமாக ஏதேனும் ஒன்றைக் கொள்கையாகப் பற்றிக் கொள்கிறார்களே தவிர நியாயமாகச் சிந்தித்துச் செயல் படுகிற கொள்கை நிதானத்தைக் காணோம்" - என்று மனக் கொதிப்புத் தணியாமல் மேலும் ஆவேசமாக வளர்ந்தது அவன் பேச்சு.


     அவனுடைய பேச்சிலிருந்து அழுத்தமும் ஆவேசமும் துணிவின் உறுதி தொனிக்கும் குரலும் கூட்டத்தின் சலசலப்பை அடங்கச் செய்தன. யாரோ ஒருவர் நடுவில் துண்டுச் சீட்டில் கேள்வி எழுதிக் கொடுத்தனுப்பினார். கேள்வி அந்தச் சந்தர்ப்பத்திற்கோ - அப்போது அவன் பேசிக் கொண்டிருந்த பேச்சிற்கோ பொருத்தமில்லாமலிருந்ததுடன் தனிப்பட்ட முறையில் அவனை வம்புக்கு இழுப்பதாகவும் அமைந்திருந்தது. நடிகரையும், அரசியல்வாதியையும் பற்றிச் சொற்பொழிவின் தொடக்கத்தில் அவன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர் அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பதாகத் தோன்றியது. அவர் அந்தக் குறிப்பிட்ட நடிகருக்காகவே உயிர் வாழும் விசிறி போலிருக்கிறது.

     'பத்திரிகை முதலாளியின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றபடி மனிதர்களைப் புகழவும், வெறுக்கவும் பழகிக் கொண்டுவிட்ட ஒரு நிறுவனத்தில் வயிற்றுப் பிழைப்பை நடத்தும் நீங்கள் இலட்சியம் பேசுவது உங்களுக்கே வேடிக்கையாக இல்லையா?' - என்ற கேள்விக்குக் கீழே 'கூட்டத்தில் ஒருவன்' - என்று எழுதிவிட்டு அந்தக் கேள்வியைக் கேட்டவர் தன்னைத் தப்பித்துக் கொள்ளவோ, மறைத்துக் கொள்ளவோ முயன்றிருந்தார்.

     "இந்தக் கேள்வியைக் கேட்கும் தைரியசாலி நான் தான் என்று தன் பெயரைக் கூடத் தெரிவித்து விட விரும்பாது ஒரு கேள்வியைக் கேட்டிருப்பதால் இதற்குப் பதில் சொல்லிவிட வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்" - என இப்படித் தொடங்கி அவன் மறுமொழி கூறிய போது கூட்டத்தில் உற்சாகமான கைத்தட்டல் ஒலி எழுந்தது. உள்ளூறச் சுகுணன் சில சமயங்களில் இந்த விதமான பொதுக் கூட்டங்களையும், சொற்பொழிவுகளையும், தவிர்க்க விரும்பினான். பசியையும், சபலங்களையும் போல் மனிதன் நிரந்தரமாக விட முடியாத பலவீனங்களில் ஒன்றான புகழ் தான் இப்போது இந்தப் பொது மேடைகளில் எல்லாம் மலிவாகச் செலவழிக்கப்படுகிறது. தலைவர் பேச்சாளரைப் புகழ்வதும், பேச்சாளர் தலைவரைப் புகழ்வதுமாகப் பெரும்பாலான மேடைகள் ஒரு சம்பிரதாயச் சடங்காக அமைவதைக் கண்டு பலமுறை தனக்குள் மனம் வெதும்பியிருக்கிறான் சுகுணன்.

     'பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்' - என்ற பழமொழியை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். பத்தோடு பதினொன்றாக அந்தப் பசியையும் பறந்து போகச் செய்துவிடுகிற புதுப் பசி ஒன்று இருக்கிறதே? புகழ்ப்பசி! வயிறு பசித்தவர்கள் பணப்பசி பிடித்து அலைகிறார்கள். பணப் பசி தீர்ந்தவர்கள் புகழ்ப்பசி பிடித்து அலைகிறார்கள். வயிற்றுப் பசி தீர்ந்து கையில் வசதிப்பசி பிடித்ததும் புகழ்ப்பசி கோரமாக வாயைத் திறக்கிறது. இந்தியாவின் நகரங்களில் சௌகரியமுள்ள மனிதர்களுக்கு இப்போது புகழ்ப்பசிதான் பிடித்து ஆட்டுகிறதென்று தோன்றியது. சிலரைப் புகழ்வதற்காகவே பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சுதந்திரப் போராட்ட காலத்தில் கூட்டம் கூடிச் செயலாற்ற வேண்டிய அவசியம் இருந்தது. அந்தச் சுதந்திர இலட்சியம் கைகூடிய பிறகோ, மனிதர்கள் தனித்தனியாகவும் அந்தரங்க சுத்தியோடும் இன்று நாட்டுக்குக் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. கூட்டங்கள் அந்தத் தனித் தனிக் கடமையுணர்ச்சியை மறக்கச் செய்து விடுவதாகத் தோன்றியது சுகுணனுக்கு. அன்று அந்தக் கூட்டம் முடிந்ததும் சுகுணனின் மனத்தில் இத்தகைய உணர்வுகளே மேலோங்கியிருந்தன. யாரோ ஒரு நடிகரிடம் நிறைய நன்கொடை வாங்கிக் கொண்டு அவரைப் புகழ வேண்டிய கட்டாயத்துக்காகவே அவர்கள் அந்த வாசக சாலை ஆண்டு விழாவை நடத்தியிருப்பதாக இப்போது உணர்ந்தான் அவன்.

     கூட்டம் முடிந்ததும் துளசியும் அவள் கணவனும் மேடையருகே வந்தார்கள். மேடையருகில் ஆண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததனால் துளசி சிறிது தொலைவில் ஒதுங்கியே நின்று கொள்ள வேண்டியதாயிற்று. அவள் தன் கணவனிடம் ஏதோ சொல்லி மேடைக்கு அனுப்பினாள். துளசியின் கணவன் மேடையேறி வந்து புன்முறுவலோடு தன்னைத்தானே மீண்டும் அறிமுகம் செய்து கொண்டு சுகுணனைச் சந்தித்தான். சுகுணனும் அந்த இளம் நண்பரைப் புன்முறுவலோடு வரவேற்றான். "உங்களைத் திருவல்லிக்கேணியில் 'டிராப்' செய்துவிட்டுப் போகிறோம். இன்று உங்கள் பேச்சு மிக நன்றாயிருந்தது. இதை எப்படியும் தவறவிடாமல் கேட்டுவிட வேண்டுமென்று என் மனைவி ஆசைப்பட்டாள். அவள் ஆசை நிறைவேறியதுடன் இனிமேல் உங்கள் சொற்பொழிவுகளை ஒன்றுவிடாமல் கேட்க வேண்டுமென்று எனக்கும் இன்று ஒரு புதிய ஆசை உண்டாகியிருக்கிறது" - என்ற பொருளில் ஆங்கிலத்தில் கூறினான் துளசியின் கணவன்.

     'மனிதனின் மனத்தை அவனறியாமலே திறப்பதற்குப் பிறர் பயன்படுத்துகிற சுலபமான கள்ளச் சாவி இந்த விதமான முகமன் வார்த்தைகள் தான்' - என்றெண்ணியவனாகத் தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் சுகுணன். முகத்தில் கலக்கமோ, துயரமோ தெரியாமல் பிளாஸ்டிக்கில் வார்த்தெடுத்தது போல் நகரங்களின் கல்லூரி முகப்புக்களிலும், தியேட்டர் வாயிலிலும் திரியும் செல்வக் குடும்பத்து இளைஞர்கள் பலரிடமிருக்கும் நாகரிகப் பேச்சும் சிரிப்பும் துளசியின் கணவனிடமும் இருந்தன. ஆணின் மனமில்லாததோடு பெண்ணின் முகமுள்ள பல இளைஞர்கள் அங்கங்கே நகரங்களில் கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தென்படுவார்களே - அவர்களில் ஒருவனைப் போலத்தான் எதிரே நின்ற துளசியின் கணவனும் அப்போது தோன்றினான்.

     தேசக் கவலையோ, வீட்டுக் கவலையோ இல்லாமல் உயர் தர உத்தியோகங்களையும், சொகுசான காதல் வாழ்வையும் கனவு காணக்கூடிய இந்த விதமான இளைஞர்கள் - அதாவது, செலூலாய்ட் பொம்மைகளைப் போல் சாதாரணமான காரணங்களுக்காகவே உடைந்துவிடக் கூடிய ஆண்மையற்ற இளைஞர்கள் பலர் இந்த நூற்றாண்டில் எங்கும் அதிகரித்திருப்பதைச் சுகுணன் பலமுறை பல இடங்களில் கண்டு மனம் நொந்திருக்கிறான்.

     இன்றைய இந்தியாவின் வறுமைகளைப் பற்றியோ, நாளைய இந்தியா எதிர்கொள்ள வேண்டிய துயரங்களைப் பற்றியோ, நினைப்போ, கவனமோ, கவலையோ இல்லாமல் - தன்னையே மையமாக வைத்துத் திரைப்படக் கதையைப் போல் ஒரு சொப்பன வாழ்க்கையைக் கனவு காணும் இம்மாதிரி இளைஞர்கள் பெருகப் பெருக இந்தியா ஆண்மையில் வறுமையடைகிறது என்று தோன்றியது. இத்தகைய இளைஞர்களைப் பற்றி 'மீசை முளைத்த பெண் பிள்ளைகள்' - என்று சுகுணன் முன்பு துளசியிடமே சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேலி செய்திருக்கிறான். 'புலி நகம் பதித்த தங்கச் சங்கிலி அணிந்து கொள்ளுதல்', 'சுருள் சுருளாக முடி வளர்த்தல்', இவை தவிரப் பெரிய தேசிய இலட்சியங்கள் எதுவும் பதியாத விடலை மனத்தோடு கல்லூரிப் படிகளிலிருந்து கீழிறங்கும் இது போன்ற இளைஞர்களிலிருந்து மனவலிமை மிக்கவர்களான இராமகிருஷ்ணரோ, காந்தியோ, மனவலிமையோடு உடல் வலிமையும் மிக்கவர்களான சிவாஜியோ, நேதாஜியோ, மறுபடி இந்தியாவில் தோன்றி வர முடியுமா? - என்று விநோதமாகத் தனக்குத்தானே அடிக்கடி ஒரு கேள்வி கேட்டுப் பார்த்துக் கொள்வது அவன் வழக்கம்.

     'இப்படி ஓர் அப்பாவி இளைஞன் தனக்குக் கணவனாக வரவேண்டுமென்று துளசி கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். என் எழுத்துக்களோடும் என்னோடும் எத்தனை அந்தரங்கமாகப் பழக முடியுமோ அத்தனை அந்தரங்கமாகப் பழகி இலக்கிய ருசிகளை உணர்ந்த மனப்பாங்குடனே வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் துளசி. பெண்ணே ஓர் அழகு. அவளிடம் ஞானமோ, கல்வியோ, சங்கீதமோ, நடனமோ, சேர்ந்திருந்தால் அது அவளுக்கு மற்றோர் அழகாகி விடுகிறது. அழகின் பல்வேறு ருசிகளையும் ருசிகளின் பல்வேறு அழகுகளையும் பழகிக் கொண்டு விட்ட துளசியைப் போன்ற இளம் பெண் ஒருத்தி - 'சொகுசாக வாழ்வது' - என்பதைத் தவிர வேறு ருசிகள் எதையும் எதிர்பாராத ஒருவனோடு வாழ்வில் எவ்வளவு தூரம் கை கோத்துக் கொண்டு நடந்து போக முடியும்?

     துளசியின் நிலை சிந்திப்பதற்கே வேதனை தருவதாக இருந்தது. இப்படி வாழ்வில் எதிர்பார்த்ததை அடையாமல் ஏமாறிய ஓர் அழகிய பேதைப் பெண்ணைக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுத நேர்ந்தால் அந்தக் கதாபாத்திரத்தினிடம் சுகுணனுக்கு எத்தனை பரிவு பெருகுமோ அத்தனை பரிவு இப்போது இப்படிச் சிந்திக்கும் வேளையில் மட்டும் துளசியினிடமும் ஏற்பட்டது.

     துளசியின் அந்தக் கதையில் பாதிக்கப்பட்ட மற்றொரு கதாபாத்திரம் தானே என்பதை மறந்துவிட்டு நினைத்தாலோ மனம் கருணை மயமாக மாறியது. தான் நிற்கும் எல்லையைத் தனியே தவிர்த்துக் கொண்டு மற்றவற்றை எல்லாம் விலகியிருந்து பார்த்தால் கற்பனையாளனின் மனம் தான் எவ்வளவு பெருந்தன்மையுடைய தாயிருக்கிறது? இந்த எல்லையில் நின்று பார்க்கிற போது மட்டும் அவனுக்குத் துளசியின் மேல் கோபமே வரவில்லை. காவியங்களின் மிக உயர்ந்த குணமான கருணை அவன் உள்ளத்தே பெருகி நிறைந்தது. அன்று அந்தக் கூட்ட முடிவில் அநாவசியமாகத் துளசியின் மனத்தைப் புண்படுத்த விரும்பவில்லை அவன். மறுக்காமல் அவர்கள் இருவருடனுமே காரில் போய்த் திருவல்லிக்கேணியில் இறங்கிக் கொண்டான்.


     காரில் போகும் போது சுகுணன் அதிகம் பேசவில்லை. துளசி ஆர்வமடங்காமல் கேட்ட இரண்டொரு கேள்விக்கு மட்டும் சுருக்கமாகப் பதில் சொன்னான். துளசியின் கணவன் காரை ஓட்டிக் கொண்டு வந்ததனால் பின்புறக் கதவுகள் திறக்க முடியாத ஒரு பக்கக் கதவுள்ள அந்த 'ஓக்ஸ்வாகன்' காரில் சுகுணன் முன்புறம் ஏறிக் கொண்டான். துளசி பின்புறம் தனியே சிறை வைக்கப்பட்டது போல் ஏறிக் கொண்டிருந்ததனால் அவள் முகத்தைக் கூடச் சுகுணனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. திருவல்லிக்கேணி பெரிய தெருவில் - அறைக்கு நாலு விட்டு முன்பாகவே இருந்த மெஸ் வாசலிலேயே அவன் இறங்கிக் கொண்ட போது துளசி காரிலிருந்து கீழே இறங்கி அவனுக்கு விடை கொடுக்க வேண்டுமென்று ஒரு வேளை எண்ணியிருக்கலாம். ஆனால் ஒற்றைக் கதவுப் பிரச்னையால் அதுவும் முடியாமல் போயிற்று.

     மெஸ்ஸில் சாப்பாடு முடிகிற நேரம். அதற்கு முன்னறிவிப்பு சாம்பார் ரசம் போலவும் (தண்ணீர் பெருகி), ரசம் சாம்பார் போலவும் (அடிவண்டல் வரை வற்றி) ஆவது தான். ஏறக்குறைய அப்படி ஆகிற நேரம் வந்திருந்தது. காய்கறிகள் நிறையக் கடுகு மயமாகவும், பருப்பு மயமாகவும் வெளிவந்தன.

     தன்னை நினைத்துத் தவித்துக் கொண்டு போகும் ஒருத்தியின் ஞாபகம் உள்ளே சுடும் வேதனையில் உணவைச் சுவையில்லாமல் உண்டு முடித்து விட்டு அறைக்குப் போய்ச் சேர்ந்தான் சுகுணன்.

     ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவர்க்கு மற்றொருவர் அர்ப்பணமாகி விடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கனிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது.

     மனத்தை ஒரு முகப்படுத்துவதற்காக ஏதேனும் நல்ல புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம் என்று புத்தக அலமாரியருகே போனவன் நீண்ட நாட்களாக அங்கேயே கவனிக்கப்படாமல் கிடந்த ஒரு புகைப்பட ஆல்பத்தினால் கவனம் கவரப்பட்டு அதை முதலில் எடுத்தான். ஒரு காலத்தில் அவன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களை எல்லாம் துளசி அதில் பத்திரமாக ஒட்டி அலங்கரித்து அழகுபடுத்திக் கொண்டு வந்தாள். அவன் வெளிநாடு சென்று வந்த காலத்தில் எடுத்த புகைப்படங்களும் அதில் இருந்தன. ஒருமுறை விமான நிலையத்தில் கல்கத்தாவிலிருந்து பத்திரிகையாளர் பெடரேஷன் காரியமாக வந்திருந்த நண்பர் கோஷைத் திரும்ப வழியனுப்ப அவன் போயிருந்த போது துளசியும் கூட வந்திருந்தாள். அப்போது தற்செயலாக வேறுகாரியமாக அங்கு வந்திருந்த சுகுணனுக்கு மிகவும் வேண்டிய புகைப்படக்காரர் ஒருவர் அவனையும், துளசியையும் இருவரும் அருகருகே நெருங்கி நின்ற நேரத்தில் அவர்களே அறியாதபடி ஒரு படம் பிடித்துவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்தப் புகைப்படக்காரரான நிருபர் மிக நன்றாக வந்திருந்த அந்தப் படத்தைக் கொண்டு வந்து காண்பித்த போது தான் சுகுணனுக்கே அது தெரியும். படத்துக்காக நிற்கிறோம் என்ற எச்சரிக்கையும் ஏற்பாடும் இல்லாமல் இருவருமே தற்செயலாக இயல்பாய்ச் சிரித்துப் பேசிக் கொண்டு நிற்கும் போது எடுக்கப்பட்ட படமாகையினால் அது மிகமிக அழகாயிருந்தது.

     படத்தில் துளசி கொத்துக் கொத்தாகப் பூத்துக் குலுங்கும் பூஞ்செடியைப் போல் பொலிவுறச் சிரித்துக் கொண்டிருந்தாள். எப்போதுமே இனிமையாயிருக்கிற இராகங்களில் எப்போதாவது சில சமயங்களில் புதிய கற்பனைகளும், சங்கதிகளும் பிடிபடுகிறாற் போல் அந்தப் படத்தில் அவள் இயல்புக்கும் அதிகமாகவே அழகாயிருப்பதாகச் சுகுணன் அவளிடம் அன்று கூறிய போது அவள் அதை மறுத்தாள். 

     "என்னை விட நீங்கள் தான் அதிக அழகாயிருக்கிறீர்கள் இந்தப் படத்தில்" - என்று அவள் அப்போது அவனை மட்டுமே வியந்திருந்தாள்.

     "ஒருவர் மேல் இன்னொருவர் சத்தியமான பிரியம் வைத்துவிட்டால் சொந்த ஆழகு சம்பந்தமான தற்பெருமை கூடப் போய் விடுகிறது பார்த்தாயா துளசி? இந்தப் படத்தில் நீதான் அழகாயிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நான் தான் அழகாயிருப்பதாக நீ சொல்கிறாய். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு புனிதமாக, எவ்வளவு நம்பிக்கையாக, எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்காக விட்டுக் கொடுக்கிறோம் பாரேன்" என்று தான் அன்றைக்கு மனம் நெகிழ்ந்து அவளிடம் சொல்லியது கூட இப்போது சுகுணனுக்கு நினைவு வந்தது.

     ஞாபகங்களையும், அவற்றைப் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் மறுபடி காண விரும்புகிற நைப்பாசையையும் தவிர்க்க முடியாமல் அந்த ஆல்பத்தை எடுத்துப் பிரித்து விமான நிலையத்தில் எடுக்கப் பெற்ற பழைய படம் இருந்த பக்கத்தை விரித்தான் சுகுணன். மேஜை விளக்கின் ஒளியில் அந்தப் படம் பளீரென்று பிரகாசமாகத் தெரிந்தது. முன்பு அந்தப் படத்தை ஆல்பத்தில் வைக்கும் போது கூட, 'அதை ஆல்பத்தில் வைக்கலாமா கூடாதா' என்பது பற்றி துளசிக்கும் அவனுக்கும் இடையே ஒரு சிறிய விவாதம் நடந்திருக்கிறது. அதை ஆல்பத்தில் வைக்கக் கூடாதென்று அவன் வாதாடினான். 'அப்படித்தான் வைப்பேன்' என்று அவள் பிடிவாதம் பிடித்து அதை வைத்திருந்தாள். அந்தப் படத்தின் பின்புறம் அப்போது அவள் ஏதோ எழுதியதாகக் கூட அவனுக்கு நினைவிருந்தது. நான்கு ஓரமும் படம் சொருகப் படுவதற்காக அமைந்திருந்த மடிப்புகளிலிருந்து பூக்கொய்வது போல் படத்தை மெல்ல விடுவித்துப் பின்புறம் பார்த்தான் அவன்.

     "உவமையும் பொருளும் போல் ஒருமனம் இருவடிவம்" - என்று எழுதியிருந்தது. முத்து முத்தாகத் துளசியின் கையெழுத்து தான் அது. திடீரென்று ஒரு விநாடி உள்ளே எழுந்த சினத்தீயின் அனலில் - அந்தப் படத்தை அப்படியே கிழித்தெறிந்து விட வேண்டும் போல் கை துடிதுடித்தது. ஆனால் அடுத்த விநாடி அப்படிச் செய்யவும் மனம் வரவில்லை.

     ஒரு காலத்தின் ஞாபகத்தை இன்னொரு காலத்தில் கிழிப்பதால் தான் என்ன பயன்? படங்களைப் பத்திரப் படுத்துவதோ, சேர்த்து வைப்பதோ அவனுக்கு வழக்கமில்லை. துளசிதான் பூம்பொழில் ஃபோர்மெனிடம் சொல்லி அழகிய ஆல்பமொன்று பைண்டு செய்து வாங்கி எல்லாப் படங்களையும் சேகரித்து இப்படி ஒட்டி அவன் அறையில் கொண்டு வந்து வைத்திருந்தாள். ஒரு காலத்தில் இரண்டு பேரும் ஒரே ஞாபகமாயிருந்தார்கள். இப்போது தனித்தனி ஞாபகங்களாகி விட்டாலும் பழைய ஒருமையை மறக்கவும் முடியவில்லை; தவிர்க்கவும் முடியவில்லை.

     எவ்வளவு வேகமாக அந்த ஞாபகங்களை வரவழைத்துக் கொள்ள முயன்றானோ அவ்வளவு வேகமாக உடனே அவற்றை மறந்து வேறெதையாவது நினைக்க வேண்டும் போல ஆற்றாமையும் வந்தது. ஆல்பத்தைத் தூக்கி வைத்துவிட்டு ஏதோ புத்தகத்துடன் மறுபடி நாற்காலியில் வந்தமர்ந்தான். புத்தகத்தில் மனம் செல்லவில்லை. எத்தனையோ பல நாட்களில் எத்தனையோ பல சமயங்களில் எழுதுவதற்காக அவன் விரும்பிய தனிமை இன்று இந்த விநாடியில் வேதனை தருவதாயிருந்தது. சொந்த நினைவுகளோடு தனியே இருக்கும் அந்த நிலையே விரோதியோடு தனியே விடப்பட்டது போன்ற உணர்வைக் கொடுத்தது அவனுக்கு. எங்காவது வெளியே ஓடிப்போய் 'இது பெரிய உலகம் - இங்கு பயமில்லை' - என்பது போல் மனிதர்களோடு ஒட்டிக் கொள்ள வேண்டும் போலத் தாபமாயிருந்தது. அறைக்கதவைப் பூட்டிக் கொண்டு ஏதோ நினைத்துக் கொண்டவனாகக் கடற்கரைக்குப் புறப்பட்டான் சுகுணன்.

     மாநிலக் கல்லூரியருகே பைகிராப்ட்ஸ் ரோடும் கடற்கரைச் சாலையும் கலக்குமிடத்தில் தமிழ்த் தாத்தாவின் சிலை கடலை நோக்கியபடி இருட்டில் எதையோ மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. மங்கிய நீல வண்ணத்தில் மேகம் நனைவது போல் இதமான ஒளியுடன் கடற்கரை விளக்குகள் தென்பட்டன. மணலில் இறங்கி உட்புறமாகத் தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் காற்றாட நடக்கலானான் சுகுணன். கடற்காற்று உடலில்பட்டுத் தடவியதும் ஏதோ ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. வியாபாரமெல்லாம் முடிந்து இரவில் குடும்ப சகிதம் காரில் வந்து காற்று வாங்கும் சௌகார்பேட்டை தங்கசாலைத் தெரு சேட்கள், சௌகர்கள், கடற்கரையில் காருடனும், கைகளில் பாடும் டிரான்சிஸ்டர் ரேடியோக்களுடனும் தென்பட்டனர். ஒரு மூலையில் ஓர் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் தழுவினாற் போல பாண்ட் ஸ்லாக் அணிந்த இளைஞர் ஒருவர் நடனமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவன் போய்க் கொண்டிருந்த சாலையில் அவனுக்கு நேரெதிர் திசையில் அவனைக் கடந்து விரைந்த பெரிய கார் ஒன்றிலிருந்து ஒரு கணம் காற்றோடு வந்து பாய்ந்த உயர்தர செண்ட் வாசனை, மல்லிகைப்பூ மணம், கடற்கரை மேகக் குவியலில் அடங்கித் தெரியும் சிறிய நிலவு, தொலைவில் டிரான்சிஸ்டரிலிருந்து கேட்கும் லதா மங்கேஷ்கரின் நளினமான குரல் எல்லாமாகச் சேர்ந்து ஏதோ பெரிதாகக் கற்பனை செய்ய வேண்டும் போல அவன் மனத்தைக் கிளரச் செய்தன. புகுவதற்கு உடல் கிடைக்காத ஆவியைப் போல் அந்தக் கற்பனை பேயாய் அலைந்ததே ஒழிய இன்னதென்று ஒரு வடிவில் வந்து உருவாகவில்லை.


     நடந்து கொண்டேயிருந்தவன் - தற்செயலாக எதிரே வந்த மற்றொரு காரின் மேல் பார்வை சென்றதுமே திடுமெனத் தலைகுனிந்து விலகினான். துளசியும், அவள் கணவனும் அதில் வந்து கொண்டிருந்தார்கள். துளசி காரை டிரைவ் செய்து கொண்டிருந்தாள். அவள் கணவன் அருகே அமர்ந்திருந்தான். அவள் கூந்தலில் ஒரு கூடை பூச்சரிந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சத்தில் எதிரே நடுச்சாலையில் தனியே நடந்துவரும் அவனை அவள் பார்த்து விட்டிருக்க வேண்டும். கார் அவனருகே வந்து நின்றுவிடும்போல் அத்தனை மெதுவாக வேகம் குறைந்தது. சட்டென்று சாலையிலிருந்து விலகி மணலில் இறங்கி விரைவாக இருளில் நடப்பதன் மூலம் அதைத் தவிர்த்தான் சுகுணன். அந்த நிலையில் அவன் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. கால்கள் மணலில் சோர்ந்தன. எனினும் அவசரமாக விரைந்து அப்போது அவளையோ அவள் கணவனையோ சந்தித்து விடாமல் தப்பிக்க வேண்டுமென்ற ஆவலும் பரபரப்புமே கால்களை உந்தின. அவன் செய்தது போலவே அவர்களும் வீட்டிற்குப் போய் உணவை முடித்துக் கொண்டு வேறு பொழுது போகாமல் கடற்கரைக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளையாக வேகம் குறைந்து மெதுவான கார் ஒரு விநாடி அங்கு நின்றபின் மறுபடி வடக்கு நோக்கி விரைந்து விட்டது.

     அந்த இரவில் அந்த நிலையில் துளசியையும், அவள் கணவனையும் சந்தித்து அவர்கள் தனிமையைப் பாழடிக்கவோ, தன் மனத்தை வேதனைப் படுத்திக் கொள்ளவோ அவனுக்கு விருப்பமில்லை. மாலையில் ராயபுரம் வாசகசாலைக் கூட்டத்திற்கு அவள் தன் கணவனோடு வந்து உட்கார்ந்திருந்ததே அவனுக்குச் சரியாகப் படவில்லை. துளசியின் பேதமை அவனுக்குப் பிடித்ததென்றாலும் இனியும் அவள் பேதையாக இருப்பதனால் அவளை மணந்து கொண்ட அந்த இன்னொருவர் பாதிக்கப்படலாம் என்னும் உணர்வே அவனை இப்படி எண்ண வைத்தது. இரவு ஒன்பது மணிக்கு மேல் துளசி சும்மா இருந்தாலும் அவள் அம்மாவோ, அப்பாவோ கூட, "ஏனம்மா துளசீ! மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு கடற்கரைப் பக்கமோ ஏதாவது சினிமாவுக்கோ போய்விட்டு வாயேன்! எதுக்கு இப்படி இந்த நாற்காலியே சதமென்று புத்தகத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாய்?" - என்று தலையில் பூ வைத்து அலங்கரித்துவிட்டுத் தூண்டியிருக்கலாம். வாழ்க்கை அப்படித் தூண்டப்படுவதுதான். புதிதாக மணமானவர்கள் மேல் எல்லோரும் காண்பிக்கிற பொதுக்கருணை அல்லது பெருந்தன்மை இதுதான் என்பதை அவனால் உணர முடிந்தது.

     காரை ஓட்டிக் கொண்டு வந்த துளசி தன்னைப் பார்த்து விட்டாளென்றுதான் அவனுக்குத் தோன்றியது. அப்போது அங்கே தன்னைப் பார்த்ததே அவளைக் கலங்கி நிலைகுலையச் செய்திருக்குமென்று எண்ணினான் அவன். கணவன் ஒன்று கேட்க அவள் ஒன்று பதில் சொல்ல நினைவு ஒருபுறம் உடல் ஒருபுறமாக அடுத்த சில மணி நேரங்கள் அவள் தத்தளிப்பதாக அவனால் கற்பனை செய்யவும் முடிந்தது. அவளுக்கு அந்த நிலைமையை உண்டாக்கியதற்காகத் தன்னைத் தானே கடிந்து கொண்டான் அவன்.

     'எவ்வளவு சுலபமாக எவ்வளவு புனிதமாக எவ்வளவு நம்பிக்கையாக எவ்வளவு சத்தியமாக ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்கிறோம்; பாரேன்?' - என்ற தன் வாக்கியத்தை நினைவு கூர்ந்தான் அவன். இன்னும் அதிக பட்சமாக இன்னும் பெருந்தன்மையாக இந்த வேதனையை மறந்து அமைதியடைகிற அளவு விட்டுக் கொடுக்கும் பக்குவம் தனக்கு வரவேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. 'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' - என்று பாரதி பாடியிருப்பது எத்தனை பொருத்தமாயிருக்கிறதென்று இந்த விநாடியில் வியந்தான் அவன். மோகத்தை பொறுத்த வரையில் அது ஒரு சுகமான நம்பிக்கை. அந்த நம்பிக்கை மனிதனிடமிருந்து அழியவும் நேரலாம். ஆனால் அதுவே மனிதனை அழிக்க விட்டு விடக் கூடாதுதான். எலியட்ஸ் ரோடு காந்தி சிலைப்பகுதி கடறகரை வரை நடந்து வந்தாகி விட்டது. மறுபடி வந்த வழியே திரும்பினால் துளசியைச் சந்திக்க நேருமோ என்ற பயத்தில் காந்தி சிலையருகே மேலே ஏறிக் கடற்கரைச் சாலையில் திரும்பி நடந்தான் சுகுணன். கடற்கரையை விட்டு நீங்கி விரைவில் அறைக்குத் திரும்பினால் போதும் போல் மனத்தில் விரைவு மூண்டிருந்தது. 'யாரைத் தவிர்க்க விரும்புகிறோமோ, அவர்களையே மறுபடி மறுபடி சந்திக்க நேர்கிற அளவுக்கு இந்த உலகம் எத்தனை சிறியதாயிருக்கிறது' - என்று உலகை எண்ணி வியந்தபடி அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்தான். சுகுணனுக்குத் தன் மனத்தின் வேதனையை எதிலாவது கொட்ட வேண்டும் போலிருந்தது. எதை எழுதினாலும் அதில் மனவேதனைதான் சுருதி சேரும் போல் ஒரு தவிப்பு உந்தியது. அமைதியான இரவில் 'கடற்கரைத் தாழம்பூ' - என்ற பெயரில் ஒரு கவிதை எழுதினான் அவன்.

     பூத்துப் பொலிந்திருந்தாய் - நறும்பூவே
          பொன்னின் மெருகேறிப்
          பொலி மின்னின் ஒளியேறிக்
     கீற்று வெடித்திருந்தாய் - மணமென்னும்
          காற்றுத் தேரேறிக்
          கன்னிமை கனிந்திருந்தாய்
     நேற்று மலர்ந்தது நீயறிவாய் - உப்பு
          நெடுங்கடல் தானறியும்
          உவர்க்கரை மணலறியும்
     வேற்று மனிதர்கள் யாரறிவார் - ஒரு
          வேதனை பேசிடும்
          உள்ளம் மணமானால்
     சாற்றப் பிறரில்லை - போய்ச்
          சாரக் கரமில்லை
          சரியத் தோளில்லை
     ஏற்றுச் சூடக் குழலில்லை - சொல்
          எடுத்து மொழியக் கவியில்லை
          இணைத்து மொழியப் பதமில்லை
     போற்ற முடியாக் காதல்போல் - உயிர்
          போம்வரை வேம் நெஞ்சம்
          வேம்வரை போம் நினைவு
     நாற்றில் மடியும் பயிர்போல - வெறும்
          நாற்றக் கடலுள் சிறுமடலாய்
          நானும் நீயும் உதிர்ந்திடுவோம்!

நினைப்பின் தற்செயலான வார்ப்பில் கவிதை எப்படி வந்ததோ அப்படியே அதை எழுதிவிட்டு அவன் உறங்கச் சென்ற போது மணி பதினொன்றரைக்கு மேல் ஆகியிருந்தது. சில இடங்களில் பதங்களை மாற்றிச் சொல் மெருகும் பொருள் மெருகும் கொடுத்து ஓசை நயத்தைச் செப்பனிட வேண்டும்போல் தோன்றினாலும் அப்போது அதைச் செய்ய இயலாமல் சோர்வு வந்து தடுத்தது. காலையில் அதைச் செய்து கொள்ளலாம் என்று எண்ணிச் சுகுணன் கவிதையை அப்படியே விட்டிருந்தான். தூங்கத் தொடங்கியபோது மணி என்ன இருக்கும் என்று நினைவிராத ஏதோ ஒரு நூலிழை விநாடியில் தூக்கம் அவனைப் பற்றி ஆண்டிருந்தது. ஆனால் ஒரு விநாடிதான் தூங்கி முடிந்தது போலிருந்தது. அதற்குள் வேகமாகப் பொழுது விடிந்துவிட்டது. அந்தக் கண நேரத்தைப் போன்ற ஆழ்ந்த தூக்கத்திலும் அவன் ஒரு கனவு கண்டிருந்தான். 'கடற்கரைத் தாழம்பூ' என்ற கவிதை பூம்பொழிலில் வெளிவந்து அதைத் துளசியும் படித்துவிட்டு அவனிடம் வந்து கோபத்தோடு ஏதோ ஒரு கேள்வி கேட்பது போன்ற சொப்பனம் அது.

     'சாற்றப் பிறரில்லை - போய்ச் 
          சாரக் கரமில்லை
          சரியத் தோளில்லை'

என்ற வரிகளை என்ன அர்த்தத்தில் அவன் எழுதியிருக்க முடியும்? என்று அவனிடமிருந்தே அறிந்து கொள்ள முயலுகிறாள் துளசி. அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள் உறக்கம் கலைந்து விழித்து விடுகிறது. அன்று காலையில் எழுந்திருந்த போதே அவனுக்கு மிகவும் தளர்ச்சியாக இருந்தது. அவன் நீராடித் தலை துவட்டிக் கொண்டு திரும்பிய சமயத்தில் எதிர்பாராமல் பத்திரிகை அதிபர் நாகசாமியிடமிருந்து அவனுக்கு ஃபோன் வந்தது. அவனுடைய அறை எண்ணுக்கு அவர் ஃபோன் செய்வது எப்போதாவது அபூர்வமாக இருக்கும். அவசர ஆத்திரத்திற்குக் கூப்பிடுவதற்காக அவன் தன் லாட்ஜ் டெலிபோன் எண்ணையும் அறை எண்ணையும் அலுவலகத்தில் கொடுத்திருந்தான். நாகசாமியும் அதை அலுவலகத்திலிருந்து தான் விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்க முடியும். யாரோ ஒரு முக்கியமான உத்தியோகப் பிரமுகர் டில்லியிலிருந்து தன் வீட்டிற்கு வந்திருப்பதாகவும், அவரை அவனும் சந்தித்து அறிமுகம் செய்து கொள்வது நல்லதென்றும் கூறினார் அவர். சரியாகக் காலை பத்துமணிக்குச் சாந்தோமிலிருக்கும் தமது பங்களாவுக்கு அவனை வந்துவிடச் சொல்லி உத்தரவு போட்டார் அவர். அங்கே போனால் அவரைச் சந்தித்துவிட்டு அப்புறம் அப்படியே காரியாலத்துக்குப் போகத்தான் நேரம் சரியாயிருக்கும். காலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு ஒன்பதரை மணிக்கு ஒரு டாக்ஸி பிடித்து அவன் புறப்பட்டான். டாக்ஸி நாகசாமியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்த போது முன்புறம் மரத்தடிப் புல் வெளியில் துளசியும், அவள் கணவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. திருமண விருந்தின்போது அச்சக ஊழியர்கள் அவளுக்கு அன்பளிப்பாக வ
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:09 pm

[You must be registered and logged in to see this link.]

6

     "நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பது போல், மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அது தான் சத்தியதாகம்-"

     கதையில் துன்பப்படுகிறவர்களைப் படைத்துப் படைத்து அனுபவம் அடைந்தவனால் கூட அசல் வாழ்க்கையில் துன்பப் படுகிறவர்களை நேரே கண்டுவிட்டால் ஓரிரு கணங்கள் திகைத்துப் போவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடிவதில்லை. அப்படி ஒரு திகைப்புடன் தான் அந்தப் பெண்ணை எதிர் கொண்டான் சுகுணன். காரியாலயத்து அறையில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண் தன்னுடைய நாவல்களைப் படித்து அவற்றில் ஈடுபட்ட ஈடுபாட்டையே அறிமுகமாகக் கருதித் தேடி வந்து கண் கலங்க அமர்ந்திருப்பதை அவன் உணர்வது போலவே பார்க்கிற எல்லாரும் உணர்வார்களென்று சொல்ல முடியாது. பல்வேறு இரசிகர்களும், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அடிக்கடி அவனைத் தேடிக் காரியாலயத்திற்கு வருவது வழக்கம் தானென்றாலும், சுற்றியிருப்பவர்களுக்கு அது எந்த விதத்தில் பிடிக்கவில்லை என்பதையும், எந்தக் காரணத்தால் அதைக் கண்டு அவர்கள் உள்ளூற அசூயைப்படுகிறார்கள் என்பதையும் அவ்வப்போது அவன் அநுமானம் செய்து தெரிந்து கொள்ளத் தவறிவிடவில்லை. நடுநடுவே அழுகையும் உணர்ச்சிப் பெருக்கும் குறுக்கிடுவதைத் தவிர்க்க முடியாமல் அவனிடம் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாள் அவள். அந்த முகத்தில் எப்போதோ எதனாலோ வந்து தங்கிவிட்ட சோகத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் குறுகுறுப்பான அழகு நிறைந்த முகம் அவளுடையதென்பதைக் கண்டான் சுகுணன். அந்தப் பெண் சொல்லத் தயங்கிய அல்லது கூசியவற்றைப் பற்றி அதிகமாகத் துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்காமல் குறிப்பாக உணர வேண்டியவற்றைக் குறிப்பாக உணர்ந்து, கேட்டே அறிய வேண்டியவற்றைக் கேட்டு அறிந்து, எந்த விநாடியிலும் அவளைத் தர்மசங்கடமான நிலையில் வைக்காமல் உரையாடினான் சுகுணன். ரோஜாப் பூக்களின் இதழ்கள் ஒன்றோடொன்று எவ்வளவு வலுவாக அல்லது வலுவில்லாமல் பொருந்தியிருக்கின்றனவோ அப்படித்தான் பெண்ணின் சொற்களும், மற்றொருவருடைய பதில் வார்த்தை, அதைத் தீண்டும் போதோ எதிர்கொள்ளும் போதோ மென்மை தவறினால் அது உதிர்ந்து விடுகிறது அல்லது குலைந்து விடுகிறது என்பது சுகுணனின் கருத்து. வாத்தியங்களில் சுருதி சேர்ப்பது போல் பெண்களிடம் நளினமாகப் பேசவேண்டும் என்று அநுபவத்தில் உணர்ந்திருந்தான் அவன். பழைய தலைமுறையில் தஞ்சை மாவட்டத்தினைச் சேர்ந்ததும் இந்தத் தலைமுறையில் பாலக்காட்டினதாக ஆகிவிட்டதுமான ஒரு குடும்பத்தில் ஓட்டல் சமையற்காரரான ஓர் ஏழைத் தந்தையின் பதினொரு பெண்களில் ஒருத்தியாக அவள் பிறந்ததாகச் சுகுணன் அறிந்து கொண்டான். தன் குடும்பத்தின் பயங்கரமான ஏழ்மைச் சூழ்நிலையையும் பிறவற்றையும் சொல்லி முடித்துவிட்டுச் சில கணங்கள் தயங்கியவளாக அடுத்துத் தான் சொல்ல இருப்பதை எப்படித் தொடங்குவதென்று தன் பேச்சுக்கு முகம் செய்யத் தெரியாமல் இருந்தாள் அவள். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் பெண்களுக்கே உரிய எதிர்பாராத சாமர்த்தியத்தோடு அவள் தன் பேச்சைத் தொடங்கினாள்.


     "'கிழிந்த புடவையும் எண்ணெய் காணாத தலையும் தளர்ந்த நடையும் இடுப்பில் குழந்தையுமாக இந்தத் தேசத்தின் பெரிய நகரங்களின் வீதிகளில் அங்கங்கே பிச்சைக்குத் திரியும் அபலைப் பெண்களைக் காணும் போதெல்லாம் 'வந்தே மாதரம்' - என்று சொல்ல என் வாய் தயங்குகிறது உண்மையான பாரதமாதா இந்த அபலைப் பெண்களிடம் அல்லவா இருக்கிறாள்! இவர்களுக்கெல்லாம் சரியான சமுதாய மதிப்புக் கிடைக்கிற வரை என் பாரதத் தாய் நான் செய்யும் வணக்கத்தை உண்மையாக ஏற்பாளா என்று எனக்குப் பயமாயிருக்கிறது. சகோதரிகளைப் பிச்சைக்கு அலைய விட்டுவிட்டு நான் தாயை வணங்குவதில் அர்த்தமோ மரியாதையோ எப்படி இருக்க முடியும்?'- என்று நீங்கள் 'பாலைவனத்துப் பூக்களி'ல் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியிருக்கிறவரிடம் நான் மனம் விட்டுப் பேசுவதற்குத் தயங்கக்கூடாது. ஆனாலும் கூட நான் கேட்க வேண்டியதைக் கேட்க எனக்குத் தயக்கமாயிருக்கிறது. என் சகோதரிகளில் மூத்தவர்கள் நாலு பேருக்குக் கல்யாணமாகி விட்டது. அடுத்த மூன்று பேர் ஊரிலேயே பள்ளிக்கூட டீச்சராகவும் அலுவலகங்களில் டைப்பிஸ்டுகளாகவும் உத்தியோகம் பார்த்துக் குடும்பத் தேரை இழுத்துச் செல்வதில் தந்தைக்கு துணையாயிருக்கிறார்கள். இன்னும் மூன்று பேர்கள் குழந்தைகள். பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். நான் தான் கல்லூரியை எட்டிப் பார்த்திருக்கிறேன். சகோதரிகளின் சம்பாத்தியத்திலிருந்து மாதா மாதம் ஏதோ எனக்குக் கொஞ்சம் பணம் வரும். ஆனால் ஹாஸ்டல் கட்டணத்திற்கும் கல்லூரிக் கட்டணத்திற்கும் அது பற்றாது. இங்கு மைலாப்பூரில் எங்களூர் டாக்டரம்மாள் ஒருத்தி இருக்கிறாள். நான் கல்லூரி விடுதியின் சுவர்களுக்குள்ளே சிறைப்பட்டு விடாமல் வெளியே தனிப்பட்டவர்களால் பெண்களுக்கென்று நடத்தப்படும் ஒரு சேவாதள ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் காலை, மாலை - விடுமுறை நாட்களில் வெளியே போக வர வாய்ப்பு உண்டு. 

     காலையும் மாலையும் விடுமுறை நாட்களிலும் அந்த டாக்டரம்மாள் வீட்டில் நோயாளிகளின் மாதாந்தர ஃபீஸ் பில் போடுவது ஆஸ்பத்திரித் தேவைகளை அவ்வப்போது வாங்கிவைப்பது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்து வந்தேன். மாதம் நூறு ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஓரளவு சௌகரியமாகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். ஆண்கள் நாணயமாகவும் சமுதாயப் பொறுப்புடனும் நடந்து கொள்ளத் தயாராயிருந்தால் தான் பெண்கள் எந்த இடத்திலும் எந்த நிலையிலும் உத்தியோகம் பார்க்கலாம். ஆனால் பல இடங்களில் அப்படி இருப்பதில்லை. முக்கால்வாசி நேரம் வெளியில் 'விசிட்'களுக்கும், பிரசவம் பார்க்கும் டாக்டரம்மாள் என்பதால் சில சமயங்களில் அகாலமான இரவு நேரங்களில் கூட வெளியே சுற்றப் போக வேண்டியிருக்கும் அந்த அம்மாளுக்கு. அவளுடைய கணவர்..." என்று சொல்லியவள் சிறிது தயங்கிவிட்டு, "அவர் பெயரை நான் இங்கே சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். ஊரறிந்த பிரமுகர் அவர். பக்திமான்களுக்கு நடுவே நிரந்தரமான ஆஸ்திகராகவும் அங்கீகரிக்கப்பட்டு விட்டவர். தனிமையில் என்னிடம் நேர்மைக் குறைவாக நடந்து கொள்ள முயன்றார் என்ற நான் மட்டுமறிந்த உண்மையை உலகத்துக்குச் சொல்ல முயல்வதால் ஒரு பயனுமில்லை. உலகம் அதை அவ்வளவு விரைவாக நம்பிவிடப் போவதும் இல்லை. வசதியற்றவர்கள் உரத்த குரலில் எழுந்து நின்று உண்மையைக் கூறினாலும் அது நம்பப்படுவதில்லை. வசதியுள்ளவர்கள் மெல்லிய குரலில் இருந்த இடத்திலிருந்தே பொய்யைக் கூறினாலும் அது இந்த சமூகத்தில் உடனே நம்பப் படுகிறது. வசதிகளையும் வாழ்க்கையையும் சரியான உயரத்துக்கு - அத்தனை பேரும் கவனிக்கிற நிலை எதுவோ அந்த நிலைக்கு - வளர்த்து மேடை போட்டுக் கொண்டால் தான் அப்புறம் உண்மையையும், பொய்யையும் அது உண்மையாகவோ பொய்யாகவோ ஒப்புக் கொள்ளப்படுகிறார் போலப் பேச முடியும் போலிருக்கிறது. இந்த நிலையில் என்னைப் போன்ற அபலைப் பெண் வேறென்ன செய்ய முடியும்? தேவைக்காகச் சம்பாதிப்பதை விட நான் என்னை அழிந்து போய் விடாமல் காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம். என் நிலைமை இரண்டுங்கெட்டானாகி விட்டது. 'அம்மா! உங்கள் கணவர் இப்படிப்பட்டவராக இருக்கும் போது நான் இங்கே வேலைக்கு வருவது முடியாத காரியம்' என்று அந்த டாக்டரம்மாளிடம் நான் சொல்லக் கூட முடியவில்லை. அப்படிச் சொன்னால் அது அவர்கள் குடும்ப வாழ்வில் கலகத்தை உண்டாக்கலாம். எனவே நான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையிலிருந்து நின்று விட்டேன். இன்று காலையில் அந்த டாக்டரம்மாள் ஹாஸ்டலுக்கு ஃபோன் செய்து என்னைக் கூப்பிட்டு, 'ஏன் வரவில்லை?' - என்று கேட்டாள்.

     'ஃபைனல் வருடமாயிருப்பதால் படிப்பு அதிகமாக இருக்கிறது. உங்களிடம் சொல்வதற்குப் பயமாயிருந்தது. அதனால் சொல்லாமலே நின்று விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா!' - என்று ஒரு விதமாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டேன். மேலே என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. அந்த நூறு ரூபாய் இல்லாவிட்டால் இங்கே சென்னையில் காலம் தள்ளிப் படிப்பது என்பது முடியாத காரியம். படிப்பை நிறுத்தி விட்டு ஊருக்குத் திரும்பிவிடலாமென்று நினைக்கிறேன். இரண்டு மூன்று வருடப் படிப்பைச் சிரமப்பட்டுத் தள்ளிய பின் கடைசிச் சமயத்தில் இப்படி ஒரு சோதனை வருகிறதே என்று எண்ணும் போது படிப்பை நிறுத்தி விட்டுத் திரும்பவும் தயக்கமாயிருக்கிறது. துன்பம் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் தான் உங்களுடைய 'பாலைவனத்துப் பூக்கள்' நாவலை நான் படிக்க நேர்ந்தது. அதைப் படித்து முடித்ததுமே இந்த நிலையில் நான் அறிவுரை கேட்க வேண்டிய மனிதர் நீங்கள் தானென்று என் மனத்துக்குத் தோன்றியது. நான் இப்படித் தைரியமாகத் தேடி வந்தது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் உங்கள் எழுத்து என்னை உங்களிடம் பரிபூரணமான நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. என்னைப் போல் துன்பப்படுகிற அபலைப் பெண்களைப் பற்றித் தானே நீங்கள் பாலைவனத்துப் பூக்களில் எழுதியிருக்கிறீர்கள்?" -

     இந்த விநாடி வரை அவளிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கவோ, வினாக்களைத் தொடுக்கவோ செய்யாத சுகுணன் இப்போதுதான்,

     "தயை செய்து உங்கள் பெயரை நான் அறிந்து கொள்ளலாமா?" என்று மெல்ல வினாவினான்.

     "என் பெயர் கமலம். தந்தையும் சகோதரிகளும் 'கமலி' என்று செல்லமாக அழைப்பார்கள்" -

     "உங்களைப் போன்ற புதிய தலைமுறைப் பெண்களெல்லாம் ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ். கமலம்! பெண்ணின் வாழ்வு வீட்டுப் படிகளின் உள்ளேயே திருப்தியாக நடக்க முடிந்த தலைமுறையில் இன்று நாம் வாழவில்லை. புதிய தலைமுறைப் பெண் வீட்டுக்கு இப்பால் வெளியேறியும் வாழ வேண்டியிருக்கிறது. பழகும் இடங்களும் வாழும் எல்லைகளும் பெருகப் பெருகப் பெண் முன்னேறுகிறாள் என்பதை விடத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை மிகப் பல சமயங்களில் தானே நிர்வகிக்க வேண்டியவளாகிறாள் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். உங்களைப் பொறுத்தவரையில் இதுவரை எல்லாப் பொறுப்பையும் நீங்கள் சரியாகத்தான் நிறைவேற்றியிருக்கிறீர்கள். சொந்த ஊரைவிட்டு இவ்வளவு தொலைவிலுள்ள மற்றொரு நகரத்தில் தனியாகப் படிக்க வருகிறவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுகிற பொறுப்புள்ளவர்களாயிருப்பதே இந்தக் காலத்தில் அபூர்வமாயிருக்கிறது. நம்பிக்கையும் நாணயமுமில்லாத கோழைத்தனமான சில இளைஞர்களைக் காதலித்து ஏமாறுகிறவர்கள் சிலர். உங்களிடம் முறை தவற முயன்ற டாக்டரம்மாளின் கணவரைப் போன்ற ஆஷாடபூதிகளிடம் சிக்கிச் சீரழிகிறவர்கள் சிலர். இராவணனைப் போல் பெண்களைத் தூக்கிச் சென்று சிறை வைக்கிற காலமில்லை இது. அதே சமயத்தில் தூக்கிப் போகாமலும் சிறை வைக்காமலுமே பெண்களுக்குக் கெடுதல் செய்யக் கூடிய நாகரிக இராவணர்கள் - இராமர்களைப் போன்ற பாதுகாப்பான பாவனையில் திரிகிற சமூகம் இது. இராவணவர்களும் கூட இராமனைப் போல் தோன்றி, நடித்துப் பிறரை நம்பச் செய்கிற கோலம் கொண்டு திரிவதால் தான் இன்று மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்களாகப் பிரித்து இனங்கண்டுபிடிப்பது அருமையாயிருக்கிறது. வாழ்க்கை எந்த மூலையிலோ அழுகியிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எந்த இடத்திலிருந்து அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. அரசியலிலா, சமுகப் பிரச்னைகளிலா, மதத்திலா, ஒழுக்கத்திலா, எங்கு அழுகத் தொடங்கியிருக்கிற தென்பது மட்டும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த அழுகல் எந்த இடத்தில் தொடங்கி இருக்கிறதோ அந்த இடத்தோடு அப்படியே நின்றுவிடாது. அழுகல் முழுவதும் பரவினால் தான் கெடுதல் என்பதில்லை. அழுக ஆரம்பித்து விட்டது என்பதே கெடுதல் தான். இந்த அழுகலைப் பார்த்து மனம் கொதித்துச் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நியாயத்தையும் உண்மையையும் அணுக வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் அறிவுத் தொழிலாளிக்கே உரிய நக்கீர தைரியத்தோடு எழுந்து நின்று குமுறினால் அதற்கு எதிராக நெற்றிக் கண்ணைத் திறக்க யாராவது ஒரு வலிமை மிக்க மனிதர் அல்லது மனிதக் கூட்டம் வந்து சேருகிறது. சமூகத்தில் ஒவ்வோர் உண்மைக்கும் எதிராக அந்த உண்மையால் பாதிக்கப்படுகிற ஒரு வலிமையான மனிதனின் அல்லது மனிதர்களின் நெற்றிக் கண் திறந்து அந்த உண்மையை உரைத்தவனைச் சுடவோ, வெதுப்பவோ தயாராயிருக்கிறது. அந்த நெற்றிக்கண் தான் இன்றைய சமூகத்தில் நியாயத்தைச் சிந்திப்பவன் அல்லது சொல்பவனின் பெரிய எதிரி. அந்த டாக்டரம்மாளின் கணவர் யார் என்று நீங்கள் பெயர் சொல்வதற்குக் கூடப் பயப்படுகிறீர்களே; அதற்கு என்ன காரணம்? நம்மை அறிந்தோ அறியாமலோ, உணர்ந்தோ உணராமலோ, இந்தக் கடுமையான கண்பார்வைக்கு நாம் பயப்படுகிறோம்."


     "பயப்படாவிட்டால் அதன் காரணமாக நம் வாழ்க்கை நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறதே சார்!"

     "ஒப்புக் கொள்கிறேன் மிஸ் கமலம்! அவர்களுடைய பார்வை நம்மைச் சூடுவதும் நம்முடைய பார்வை அவர்களைச் சுட முடியாததும் தான் அதற்குக் காரணம்" என்றான் சுகுணன்.

     அவன் கூறியவற்றை ஆழ்ந்து சிந்தித்து வியப்பவள் போல் அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின்,

     "உங்களுடைய பயனுள்ள காலத்தை அதிக நேரம் வீணாக்கி விட்டேன் சார்! தயவு செய்து இன்று இந்த நிலையில் எனக்கு ஏதாவது அறிவுரை கூற முடியுமா நீங்கள்...?" என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தித் தயங்கித் தயங்கித் தொடுத்துக் கேட்டாள் அவள்.

     "உண்மையாகவே துன்பப்படுகிறவர்களுக்கு வெறும் அறிவுரையை மட்டும் வழங்கிப் பயனில்லை என்று கருதுகிறவர்ன் நான். உங்களுக்கு ஆட்சேபணையில்லையானால் என் உதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் படிப்பைத் தொடருவதற்கு என்னால் முடிந்தவரை நான் உதவ முடியும். பின்பு உங்களால் எப்போது முடியுமோ அப்போது நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும்..."

     "இந்த உதவியைக் கேட்கவோ ஏற்றுக் கொள்ளவோ கூட எனக்குப் பயமாயிருக்கிறது சார்! பாவம் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் எத்தனை சிரமங்களோ?"

     "குடும்பமா? எனக்கா? இன்று இந்தத் தேசத்தில் இப்படி உங்களைப் போல் கஷ்டப்படுகிற சகோதரிகள் எல்லாரும் என் குடும்பம் தான். இன்று வரை வேறு குடும்ப பாரம் எனக்கில்லை" என்று சொல்லி அவளை நோக்கிப் புன்முறுவல் பூத்தான் சுகுணன்.

     "என்னால் உங்களுக்கு அநாவசியமான சிரமம்..."

     "சிரமம் என்ன இருக்கிறது இதில்? ஏதோ இன்று நான் உதவக்கூடிய நிலையிலிருக்கிறேன். நாளை எப்படியோ? உதவக் கூடிய நிலையிலிருக்கிற போது தான் இன்னொருவருக்கு உதவி செய்கிற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் நான் அடைய முடியும்."

     "உங்களைப் போல் வாழ்க்கையை இத்தனை கருணை மயமான கண்களோடு பார்க்கிறவர்கள் அபூர்வம் சார்..."

     "தயவு செய்து உங்களுக்கு உதவுவதை எனது ஒரு கடமையாக எண்ணித் திருப்திப்பட விடுங்கள். நீங்கள் என்னிடமே அதை வியக்கவோ புகழவோ செய்வது எனக்குப் பிடிக்காத காரியம். சகோதரிகள் தமையனிடம் பெறுகிற உதவியை எங்காவது புகழ்வதுண்டா மிஸ் கமலம்?"

     கமலம் கண்களில் நீர் நெகிழ அவனை நோக்கிக் கைகூப்பினாள். அங்கு வந்த நாளிலிருந்து இல்லாத அபூர்வ வழக்கமாய் அன்று முதன் முதலாக ஆபீஸ் கணக்கில் ஒரு வவுச்சர் எழுதிக் கொடுத்து இருநூறு ரூபாய் தன் கணக்கில் அட்வான்ஸ் வாங்கி அவளுக்குக் கொடுத்தான் சுகுணன். அந்த ரூபாய் நோட்டுக்களை அவனிடமிருந்து வாங்கிக் கொள்ளும்போது கமலத்தின் தளிர் விரல்கள் பயபக்தியினால் நடுங்கின.

     "ஒருவரை ஒருவர் பழகி அறிந்த பின்னால் கூட நம்ப மறுக்கும் இந்தப் பட்டினத்தில் இப்படி நம்புகிறீர்களே; இது எத்தனை பெருந்தன்மை?" - என்று நன்றி பெருகும் குரலில் நாத்தழுதழுக்க ஏதோ சொல்லத் தொடங்கிய அவளை இடைமறித்து,

     "இப்படித் திரும்பத் திரும்ப வியப்பது தான் என்னை அகௌரவப்படுத்துவதற்குச் சரியான வழி மிஸ் கமலம்!" - என்று சொன்னான் சுகுணன். அவள் விடைபெற்றுக் கொண்டு போவதற்கு முன், "எப்போதாவது என் உதவி தேவைப்பட்டால் இங்கே காரியாலயத்துக்காவது என் அறைக்காவது ஃபோன் செய்யுங்கள்" என்று கூறிக் காரியாலய எண்ணையும் அறை விலாசத்தோடு டெலிபோன் எண்ணையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன். அவள் தலை மறைந்ததும் அடுத்த அறையிலிருந்து சர்மா ஓடி வந்து, "குட்டி யாரு?" என்று தம் வயதிற்குத் தாம் அப்படியும் விசாரிக்கலாம் என்பது போன்ற உரிமையுடன் அந்த சமயத்தில் வழக்கமான விஷமம் தொனிக்கக் கேட்டார். அவரிடமுள்ள கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. சுகுணனுடைய அறைக்குப் புதியவர்களாக யார் தேடி வந்து விட்டுப் போனாலும் அக்கறையாக அதைக் கவனித்து வைத்திருந்து வந்தவர்கள் தலை மறைந்ததுமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போன்ற பரபரப்புடன் அங்கு வந்து விசாரிப்பார் அவர். பல சமயங்களில் அவருடைய இந்தச் செயலை உள்ளூற வெறுத்திருக்கிறான் சுகுணன். இன்று அவர் வந்து விசாரித்த விதமும் விசாரணை செய்த வார்த்தைகளும் அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆத்திரத்தோடு பதில் கூற நினைத்து முடிவில் அவரைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வைக்கும் படியான பதிலாக அதைக் கூறினான் சுகுணன்.

     "ஒன்று விட்ட பெரியப்பாவின் பெண். எனக்குத் தங்கை முறை வேணும்" - என்று அவன் உறவு சொன்னவுடன்,

     "மன்னிக்கணும்! எப்படியோ விசாரித்து விட்டேன்" - என்று வார்த்தைகளிலும், முகத்திலும், அசடு வழிய நின்றார் சர்மா. அவருடைய விசாரணையிலிருந்த அநாகரிகமான வார்த்தைகளைக் கேட்டுக் குமுறிய காரணத்தினால் அவரைக் கூசச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடனே தான் வேண்டுமென்று இப்படி ஓர் உறவைக் கற்பித்தான் சுகுணன். இந்தப் பெண் கமலத்தை போல் எத்தனையோ அபலைகள் பாரத தேசம் எங்கும் நகரத் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை அன்று அவன் மனத்தில் தோன்றியது. அதன் காரணமாக மனமும் வலித்தது. சமூகத்தில் தனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான கௌரவத்துக்குப் பேராசைப்படும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும், சமூகத்தில் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கௌரவத்துக்கே போராடும் இந்தப் பெண்ணைப் போன்ற அபலையையும் சேர்த்து நினைத்தால் இந்த முரண்பாட்டையே அடிப்படையாக வைத்து இன்னும் நிறையச் சிந்திக்க வேண்டும் போல மனம் கனத்தது சுகுணனுக்கு.


     "கமலத்தைப் போன்றவர்களின் குருத்துப் பருவத்து வாழ்வை இந்த வறுமையும் வசதிக் குறைவும் எப்படி எப்படி வாட்டி விடும்?" - என்பதை மற்றவர்கள் உணர முடிவதை விடச் சுகுணனால் அதிகம் உணர முடிந்ததற்குக் காரணம் இளமையில் கல்லூரிப் படிப்பின் போது காலை மாலை வேளைகளில் ஒரு மார்வாரி கடையில் கணக்கெழுதிச் சம்பாதித்துத்தான் துயருற்ற அநுபவங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. தகப்பன் சம்பாதித்துக் கட்டிய பங்களாவிலும் காரிலும் கோயில் காளையாய்ச் சுற்றும் பல உல்லாச இளைஞர்களுக்கு நடுவே முகம் மலரவோ, சிரிக்கவோ கூடத் தகுதியும் உற்சாகமுமில்லாதது போல் பயந்து கூசிக்கூசி வாழ்ந்த தனது அந்த மாணவ வாழ்க்கையை அவன் ஒரு நாளும் மறந்து விட முடியாது தான். தானும் கெட்டுக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு பத்துப் பன்னிரெண்டு விடலைகளுக்குக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து அவர்களையும் கெடுத்து வாழும் மாணவர்கள் சிலரை அப்போதும் அவன் கண்டிருந்தான். இப்போதும் கண்டு கொண்டிருந்தான். மாணவப் பருவத்திலேயே ஒரு கொழுத்த மிராசுதார் மனப்பான்மையோ அல்லது ஜமீன்தார் டாம்பீகமோ இப்படிப்பட்டவர்களுக்கு வந்து விடும். தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு பத்து மாணவர்கள் இருக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் தண்டச் செலவு வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களால் ஒரு விநாடி கூடத் தனியாயிருக்க முடியாது. தனியாக எதையும் எதிர்கொள்ளவும் இவர்களுக்குத் துணிவிராது. காபி குடிக்கவோ, சினிமா பார்க்கவோ, கடற்கரைக்குப் போகவோ, எதற்கும் அந்தப் பத்துப் பேர் கூட வர வேண்டும். கொள்ளைக் கூட்டம் புறப்படுவது போல் சேர்ந்து கூச்சலிட்டு அரட்டையடித்து வெடிச் சிரிப்புச் சிரித்துப் பாதையோடு போகிற நாலு பெண்களைக் கேலி செய்து கொண்டும் போக வேண்டும். கல்லூரி வகுப்பில் ஐந்து 'பீரியட்' என்றால் ஐந்து பீரியடுக்கும் அறைக்குப் போய் ஐந்து தரம் தலைவாரி ஐந்து தரம் சட்டை மாற்றிக் கொண்டு வகுப்புக்கு வர வேண்டும். இப்படி ஊர் மேய்கிற இளைஞர்களைப் பார்த்துப் பயந்து கூசி, 'நாளைய நல்வாக்கை உண்மையில் இவர்களுக்குத்தான் சொந்தமோ? நாம் இப்படியே ஏழ்மையில் நசுங்கி அழிய வேண்டியதுதானா?' என்று அவநம்பிக்கைப் பட்டுக் கொண்டே விலகி இருந்து சிரிக்கப் பயந்து உல்லாசமாகச் சுற்ற நாணி ஒதுங்கிப் படித்த தன் பழைய நாட்களை நினைத்தான் சுகுணன். அன்றைய அந்த வாழ்வில் ஒரு தாகம் தன்னுள் இருந்ததை இன்று அவனால் நினைவு கூற முடிந்தது. அன்று தொடங்கிய அந்தத் தாகம் தான் இன்று இந்த நக்கீர தைரியமாக மாறியிருக்கிறதோ என்று கூட அவன் தனக்குத் தானே சிந்தித்ததுண்டு. நக்கீர தைரியத்தினால் வாழ்க்கையில் சோதனைகளும் எதிர்ப்புகளும் தான் அதிகமாகுமென்று அவனால் உணர முடிந்தும் என்ன காரணத்தினாலோ அந்தத் தைரியத்தை மட்டும் அவனால் விட்டுவிட முடியவில்லை. நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பது போல் மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அதுதான் சத்தியதாகம். சத்தியதாகமுள்ளவன் வாழ்வின் சுகங்களை அடைய முடியாது போகலாம். ஆனால் அவனுடைய அந்தத் தாகமே அவனுக்கு ஒரு பெரிய சுகம் என்பதை அவன் மட்டுமே உணர்வான். அப்படி ஒரு தாகத்தில் சுகத்தை அநுபவித்தவன் அதை விடவே முடியாது. சுகுணனாலும் அந்தச் சுகத்தை விட முடியவில்லை. 

     அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த இதே வேளையில் தற்செயலாகச் சுபாவமான அந்தச் சத்திய தாகத்தையும், நக்கீர தைரியத்தையும் காண்பிக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று அந்தக் காரியாலயத்தில் நேரிட்டது. என்ன காரணத்தினாலோ அன்று காலையில் நாகசாமியையும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும் சந்தித்த விநாடியிலிருந்தே இந்தத் தாகம் குமுறியது. அந்தப் பெண் கமலம் வந்து கூறிய துன்பங்கள் அதை வளர்த்து விட்டிருந்தன. இப்போது பூம்பொழில் அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் வந்து மறுபடியும் அந்தத் தாகத்தைப் பெருக்கினார். சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் அடிக்கடி இப்படித் தகராறுகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் பத்திரிகையின் இலக்கியத் தரத்தையும் அதன் உள்ளடக்கத்தினால் அதற்குக் கிடைக்கிற பெருமையைக் கட்டிக் காக்க வேண்டிய ஆசிரியரின் பொறுப்பையும் சுகுணன் ஒரு போதும் நெகிழ்த்தவோ, விட்டுக் கொடுக்கவோ, இணங்கியதே இல்லை. சராசரி இந்தியப் பத்திரிகையின் முதலாளிகள் எல்லாரும் செய்வதைப் போலவே பத்திரிகையின் புத்தி சம்பந்தமான காரியங்களுக்கு உண்மையில் பொறுப்பாயிருப்பவன் யாரோ அவனுக்கு வெறும் சம்பளத்தை மட்டும் வீசி எறிந்துவிட்டு, 'ஆசிரியரும் அச்சிடுபவரும் வெளியிடுபவரும்' என்று பத்திரிகை முதலாளியே எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துத் தன்னுடைய பேரைப் போட்டுக் கொள்கிற வழக்கம் தான் நாகசாமியிடமும் இருந்தது. இதைப் பற்றி உழைக்கும் பத்திரிகையாளர்களின் கூட்டங்களில் இரண்டொரு முறை பேசும்போது, 'ஆசிரியரும் அச்சிடுபவரும், வெளியிடுபவரும்' - என்பதோடு சேர்த்து 'விற்பவரும்' என்று கூடப் போட்டுக் கொள்ளலாமே என்று குத்தலாகப் பேசியிருந்தான் சுகுணன். நாகசாமிக்குப் பத்திரிகைத் தொழிலின் கௌரவத்தைப் பற்றியோ, தரத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது. சுகுணன் துளசியிடமே பலமுறை கேலியாகவும் கடுமையாகவும், 'உன் அப்பா பத்திரிகைகளா நடத்துகிறார்? நிறையவும் விதவிதமான கலரிலும் பேப்பர் அடித்துத் தள்ளுகிற ஒரு பெரிய பேப்பர் மில் நடத்துவதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்?' என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். நிர்வாக ஊழல்களைத் தொடர்ந்து அநுமதிப்பதும், பத்திரிகையின் தரத்துக்கு உயிர் நாடியாயிருந்து அதைக் காப்பாற்ற வேண்டிய எழுத்தாளர்களைக் குறைவாக நடத்துவதும், இச்சகம் பேசுவதையும் அசிங்கமாக முகஸ்துதி செய்வதையுமே தொழிலாகக் கொண்ட விளம்பர மானேஜர்களையும், சர்க்குலேஷன் மானேஜர்களையும் பத்திரிகையின் உயிர் நாடிகளாக நினைப்பதும் நாகசாமியின் வழக்கங்களாக இருப்பதை உள்ளூற அவன் வெறுத்தான். நாகசாமி மற்றவர்களிடம் பேசும்போது வாய்தவறிச் சொன்னால் கூட 'வீ ஆர் ரன்னிங் எ பிஸினஸ்' - என்று சொல்லுவாரே ஒழிய 'வீ ஆர் ரன்னிங் எ மேகஸீன்' - என்று பூம்பொழிலைப் பற்றியோ தமக்குச் சொந்தமான இன்னொரு பத்திரிகையைப் பற்றியோ சொல்லவே மாட்டார். அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யமோ பாவங்களின் அவதாரம். அவருடைய முகத்தில் நடுநெற்றியில் சிவப்புக் கீற்றாக நெளியும் அடையாளம் உள்ளே நிறைந்திருக்கும் அபாயங்களுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முன்னெச்சரிக்கையாக முகத்தில் ஒரு சிவப்புக் கோடு போட்டுக் காட்டினாற் போலச் சுகுணனுக்குத் தோன்றுமே ஒழியப் பவித்திரமான வைணவர்களின் சமயச் சின்னமாக அவரைப் பொறுத்தவரையில் மட்டும் அது தோன்றவே தோன்றாது. அவருடைய முன்னோர்கள் அக்னிஹோத்திரம், அக்னிசந்தானம், ஔபாசனம், எல்லாம் செய்து அசல் வேதியர்களாக வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று சுகுணன் கேள்விப்பட்டிருந்தான். இவரோ தாம் புகுந்துவிட்ட துறைக்குத் தவிர்க்க முடியாத தேவை என்று தாமாகவே கற்பித்துக் கொண்டுவிட்ட குடி, கூத்து, மாமிசம் என்று சகல துறைகளிலும் ஈன நிலைக்குப் போய் விட்டிருப்பதைச் சுகுணன் கவனித்திருக்கிறான். சாதாரணமான தேவைகளுக்காகக் கீழிறங்கி விடுகிற மனிதர்களை அவனால் மனத்தாலும் கூட மன்னிக்க முடியாமலிருந்தது. இத்தனை சூழ்நிலைகளுக்கிடையேயும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வெளியீடுகளின் 'குரூப்' பில் 'பூம்பொழிலை' முடிந்தவரை தன் பொறுப்பில் தரமாக நடத்திக் கொண்டிருந்தான் அவன். இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் எப்போதாவது யாரிடமாவது 'நான் சனிக்கிழமை ராத்திரிப் பலகாரம் சார்! 'ட்வென்டி இயர்ஸா' இதை மட்டும் தவறவிடறதில்லே...' - என்று ரங்கபாஷ்யம் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் அவனுக்குச் சிரிப்புத்தான் வரும். காரியாலய முறைக்காக ஓரளவு கட்டுப்பாட்டுடன் ஒத்துப் போவதைத் தவிர நாகசாமி, ரங்கபாஷ்யம் போன்றவர்களை அவனால் மனமார மதிக்க முடியாமலிருந்தது. அவர்களிடமிருந்த ஊழல்களைப் பார்க்கும் போது தன்னுடைய நக்கீர தைரியத்தோடு நிமிர்ந்து நின்றிருக்கிறான் அவன். இன்று ரங்கபாஷ்யம் அவனை அவனுடைய அறைக்குத் தேடி வந்தது அலுவலக வேலையாகத்தான் என்றாலும் வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்றான் அவன்.

     "மிஸ்டர் சுகுணன்! இந்தச் சமயத்தில் நீங்கள் தான் பெரிய மனசு பண்ண வேணும். பூம்பொழிலில் வரபோகிற இதழில் உங்கள் 'டம்மி'ப் (மாதிரி ஃபார அமைப்பு) படி பத்துப் பக்கம் 'ரீடிங் மேட்டரும்' ஆறு பக்கம் விளம்பரமும் மூன்றாவது பாரத்தில் போட்டிருக்கிறது. அதை எப்படியாவது ஆறு பக்க ரீடிங் மேட்டராகவும் - பத்து பக்க விளம்பரமாகவும் மாற்றிக் கொடுத்தால் நல்லது..."

     "நல்லதென்றால் யாருக்கு நல்லது? உங்களுக்கா, எனக்கா? வாசகர்களுக்கா?" என்று சிரித்துக் கொண்டே கொஞ்சம் அமுத்தலாகவே அவரைக் கேட்டான் சுகுணன்.

     ரங்கபாஷ்யமும் கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறார் போலவே பதில் கூறினார்!

     "உங்களுக்குமில்லை! எனக
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:11 pm

[You must be registered and logged in to see this link.]

7

     "இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வதாலும், இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது."

     ரங்கபாஷ்யம் கையெழுத்திட்டு அனுப்பிய அந்த ஃபாரத்தைத் திருத்திச் சரி செய்து நாயுடுவிடம் கொடுத்துவிட்டு அன்று மாலை நாலரை மணிக்கு மவுண்ட் ரோட்டில் சங்கக் கட்டிடத்திற்குள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் யூனியனின் செயற்குழுக் கூட்டம் இருப்பதனை நினைவு கூர்ந்தவனாக அதற்குப் புறப்பட்டான் சுகுணன். செயற்குழுவில் அவனும் இருந்ததனால் போய் ஆகவேண்டும் என்ற கடமை தவிரவும் அன்று ஒரு முக்கியமான தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு உத்தியோக பயத்தின் காரணமாகச் சிலருடைய எதிர்ப்பும் இருந்தது. ஆனால் சுகுணனும் அவனையொத்த முற்போக்கான எண்ணமுடைய சிலரும் தீர்மானத்தை எப்படியும் நிறைவேற்றி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். சில பத்திரிகைக் காரியாலயங்களில் நிர்வாகிகள் உழைக்கும் பத்திரிகையாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ மரியாதைக் குறைவாக நடத்துவதாய்ப் புகார்கள் நிறைய வந்திருந்தன. ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் உதவியாசிரியர்களுக்கும் பிழை திருத்துவோருக்கும் காரியாலய நேரத்தில் வெளியிலிருந்து யார் எவ்வளவு முக்கியமான காரியமாக ஃபோன் செய்தாலும் தகவல் தெரிவிக்கவோ பேசவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இன்னொரு காரியாலயத்தில் பத்திரிகை முதலாளி - எந்த உதவியாசிரியரைத் தம் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாலும் அவரை விட வயதானவர்களுக்குக் கூட உட்கார ஸீட் கொடுக்காமல் நிறுத்தி வைத்துப் பேசுவதாகப் பலர் குறைப்பட்டுக் கொண்டு யூனியனில் தெரிவித்திருந்தார்கள். இவற்றையெல்லாம் தவிர்க்க 'நிர்வாகிகள் மரியாதையாக நடக்க வேண்டும்' - என்பது போன்ற வாசகம் அடங்கிய 'பாட்ஜ்' ஒன்றைச் சில நாட்கள் தொடர்ந்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் காரியாலயத்துக்கு அணிந்து செல்ல வேண்டும் என்ற தீர்மானம் தான் அன்று செயற் குழுவில் வர இருந்தது. சுகுணனுடைய அன்றைய மனநிலையில் இந்தத் தீர்மானத்தைப் பற்றி அதிகமாக அக்கறைகாட்ட வேண்டுமென்ற துடிப்பும் கண்டிப்பான ஞாபகமும் வந்திருந்தது அவனுக்கு. செயற்குழுவில் சிலர் தீர்மானத்தை எதிர்த்தார்கள். இந்த 'பாட்ஜ்' அணிந்து செல்கிறவர்கள் யாரென்று கவனித்து வைத்திருந்து நிர்வாகிகள் அவர்களைப் பழி வாங்கினால் என்ன செய்வதென்று வினாவினார்கள் சிலர். "அப்படிப் பழி வாங்குவது முடியாத காரியம். அப்படி யாராவது பழி வாங்கினால் யூனியன் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும்" - என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயப்படுகிறவர்கள் பயப்படத்தான் செய்தார்கள். தீர்மானம் என்னவோ சுகுணனைப் போல் துணிவும் தன்மானமுமுள்ள இளந்தலைமுறைப் பத்திரிகையாளர்களின் பெருவாரியான ஆதரவினால் நிறைவேறிவிட்டது. அது நிறைவேறிய மகிழ்ச்சியோடு ஏழு - ஏழேகால் மணிக்குக் கூட்டம் முடிந்து அவன் அறைக்குத் திரும்பிய போது துளசியும் அவள் கணவனும் அவனைத் தேடி வந்துவிட்டு அறையில் அவனைக் காணாமல் காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவன் வருவதைப் பார்த்துவிட்டு மறுபடியும் கீழிறங்கினார்கள். ஏதோ ஒரு நவநாகரிக ஓட்டலின் பெயரைச் சொல்லி அதில் 'ரூஃப் கார்டனில்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட டின்னருக்கு மூன்று டிக்கட் வாங்கியிருப்பதாகவும் அதற்குச் சுகுணனும் வரவேண்டுமென்றும் துளசியின் சார்பில் அவள் கணவன் வேண்டினான். தான் வேண்டிக் கொள்வது நியாயமாயிருக்காது என்பதற்காகவே துளசி தன் கணவனை விட்டு அதைத் தெரிவிக்கச் செய்தாள். என்றாலும் எங்கே அவன் மறுத்துவிடுவானோ என்ற தவிப்பும் ஆவலும் அப்போது அவள் முகத்தில்தான் அதிகமாகத் தெரிந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை சுகுணனும் அவளும் அதே நவநாகரிக ஓட்டலுக்கு எத்தனையோ ரூஃப் கார்டன் டின்னர் சாப்பிடப்போய் வந்திருக்கிறார்கள். அந்த ஞாபகத்தைத் தவிர்க்க முடியாமல் தான் அவள் தன் கணவனை விட்டுத் தன்னைக் கூப்பிடச் சொல்லித் தூண்டியிருக்க வேண்டுமென்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.


     "நீங்கள் ஆபீஸிலிருப்பீர்களோ என்று ஆறு மணிக்கு நானும் இவரும் அங்கே போனோம். அங்கேயிருந்து நாலு மணிக்கே புறப்பட்டு விட்டதாக நாயுடு சொன்னார். அப்புறம் இங்கே வந்தோம். இங்கேயும் காணவில்லையே என்று வருத்தத்தோடு புறப்பட்ட போது கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நீங்களே வந்துவிட்டீர்கள்" - என்று அவன் மறுத்துச் சொல்லவோ தட்டிக் கழிக்கவோ அவகாசம் கொடுத்துவிட விரும்பாதவளைப் போல் விரைந்து கெஞ்சுவது போல் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடங்கினாள் துளசி.

     'இவராமே இவர்? பெண்களுக்குத்தான் எத்தனை விரைவாக எத்தனை சுலபமாக உரிமையும் உறவும் கொண்டாட வந்து விடுகிறது?' - என்று உள்ளூற நினைத்து நகைத்துக் கொண்டான் சுகுணன். அன்று அவன் டின்னருக்குப் போகிற மனநிலையிலில்லை.

     "இன்று நான் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறேன். என்னைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். இன்னொரு நாள் கட்டாயம் வருகிறேன்" - என்று துளசியின் கணவனிடம் நாசூக்காக மறுத்தபோது, "துளசிக்குத்தான் பெருத்த ஏமாற்றமாயிருக்கும் சார்! அவள் தான் வருத்தப்படுவாள். என்ன இருந்தாலும் உங்கள் இரசிகைக்கு நீங்கள் இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அளிக்கக்கூடாது" - என்று நிர்விகாரமான மனத்தோடு துளசியையும் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டே மறுபடி சுகுணனை வற்புறுத்தினான் துளசியின் கணவன்.

     "தயவு செய்து என்னை மன்னியுங்கள்..." என்று சுகுணன் மீண்டும் மறுத்தபோது துளசியின் முகம் ஒளியற்றுச் சோபை மங்கியது. கண்களிலும் உதடுகளிலும் மலர்ச்சி மறைந்து வாட்டம் வந்து படிந்தது. அவள் நெட்டுயிர்த்தாள். வாய் விட்டு அழ முடியாத குறையாக மீண்டும் மீண்டும் நெட்டுயிர்த்தாள்.

     எந்த நிலையிலும் துளசியின் முகம் வாடுவது சுகுணனுக்கும் அந்தரங்கமாகப் பிடிக்காதுதான். ஒரு செல்லக் குழந்தையைப் பாசத்தோடு கவனிப்பது போல் பிரியத்தின் எல்லை வரை சென்று அவள் மேல் அன்பு வைத்தவன் அவன். அவளுடைய உடல் கிடைக்கவில்லை என்பதனால் அந்த அன்பு இன்று அழிந்து போய்விடாது. ஒருமுறை ஏதோ கவனக் குறைவினால் துளசி தன் கைகளில் நகங்களைக் கத்தி கத்தியாக வளர விட்டிருந்தாள். அவளுடைய பூப்போன்ற மென்மையும் சந்தனம் போன்ற குளிர்ச்சியும் பொருந்திய விரல்களுக்கு அந்த நகங்களின் வளர்ச்சி பொருந்தாமலிருந்தது. அவள் தன்னுடைய திருவல்லிக்கேணி அறைக்கு வந்திருந்த ஒரு சமயத்தில் சுகுணனே சிரித்தபடி எழுந்துபோய்த் தன்னுடைய 'நெயில் கட்டரை' (நகம் வெட்டும் கருவி) எடுத்து வந்து, "துளசி! இந்தப் பூப் போன்ற கைகள் என்னுடையவை. நான் கொள்ள வேண்டியவை. இவை பொலிவற்றிருப்பதை என்னால் சகிக்க முடியாது" - என்று சொல்லியபடியே அழகாக ஒற்றை மோதிரமணிந்த அவள் வலது கை விரல்களைப் பற்றி நகங்களைக் கத்திரிக்கலானான்...

     "இதென்ன? நீங்கள் எனக்கு இப்படி எல்லாம் பணிவிடை செய்து கொண்டு?... தயவு செய்து கையை விடுங்கள். நான் அல்லவா உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்" - என்று போலி வெட்கத்தோடு உண்மையில் அந்தப் பிடியில் மகிழ்ந்து கொண்டே அவள் கைப்பிடியிலிருந்து திமிற முயல்வது போல் நடித்தாள் துளசி.

     "நிலாக் கதிர்களின் மேல் நட்சத்திரம் விழுந்து கிடப்பது போல் இந்த ஒற்றை மோதிரம் தான் உன் கைக்கு எத்தனை அழகாயிருக்கிறது துளசி?" - என்று அப்போது அவளை வியந்திருந்தான் சுகுணன். அதற்கு அடுத்த வாரம் எழுதிய 'மோதிர விரல்' என்னும் கவிதையில்,

     'தீயினில் தளிர்த்ததோர் - பொற்
          செழுங் கொழுந்தெனவே
     மாயக் கைவிரலாள் அதில்
          மன்மதன் சொக்கிடும்
     கோல மோகனச் சிறு
          மோதிர மொன்றுடையாள்'

என்று சில வரிகள் வந்தன. "இப்படி நீங்கள் ஒவ்வொன்றையும் எழுதுவதாயிருந்தால் இனிமேல் உங்கள் முன்னால் தட்டுப் படுவதற்கே பயப்பட வேண்டும் போலிருக்கிறதே" - என்று இந்த வரிகளைப் படித்துவிட்டுப் பாதி வெட்கமும் பாதிக் கோபமுமாகத் துளசி அவனைக் கேட்டாள்.

     "என்ன செய்வது துளசி எனக்கு வேறெந்தப் பெண்களின் கைகளைப் பற்றியும் தெரியாதே?" - என்று சொல்லி நகைத்தான் சுகுணன். அந்தப் பெருமையில் அவளும் மலராக மலர்ந்து குழைந்தாள். அப்படிப்பட்டவள் முகம் வாடும்படி இன்று விருந்துக்கு வரமாட்டேனென்று மறுக்கும் போது அவன் மனமும் அதைச் செய்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தோடும், வேதனையோடும் தான் செய்தது. ஏமாற்றம் என்ற உணர்வின் ஒருபுறம் தவிப்பும், மறுபுறம் ஏக்கமுமாகத் துளசி கணவனோடு காரில் புறப்பட்டாள். போகும்போது, 'போய் வருகிறேன்' - என்று வாய் திறந்து வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்குக் கூடத் தெம்பில்லாமல் கண்ணீர் முட்டிப் பளபளக்கும் விழிகளை அசைத்துத் தலையைச் சாய்த்து 'வருகிறேன்' என்பதுபோல் பாவனை செய்யத்தான் அவளால் முடிந்தது. 'இன்னொருத்தியின் உள்ளத்தில் தான் தவிப்பாகவோ, ஏக்கமாகவோ இருந்து அந்த உள்ளத்தைத் தன்னையறியாமலே வதைத்துக் கொண்டிருக்கிறோமே' - என்று உணரும் போது உள்ளூற எத்தனை வேதனையடைய முடியுமோ அத்தனை வேதனையையும் விட அதிகமான வேதனையோடுதான் அப்போது மாடிப்படியேறி அறைக்குப் போனான் சுகுணன்.

     'ஆழமாக வேரூன்றி விடுகின்ற செடியைப் போல், நம்பிக்கை வாய்ந்த பெண், ஆண் பிள்ளையின் மேல் வைத்து விடுகிற பிரியம் தான் எத்தனை நிலையாக ஊன்றிவிடுகிறது?' - என்பதை நினைக்கும் போது அந்த அன்பை நிமிர்ந்து பார்த்து வியந்தது அவன் மனம். மனிதர்கள் தங்கள் உடலில் இரத்தம் சூடேறி ஓடுவதால் மட்டும் நிமிர்ந்து நடக்கவில்லை. உண்மையில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் எங்கோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிற அசல் அன்பினால்தான் நிமிர்ந்து நடக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.


     'இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வதாலும் இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது' - என்று சிந்தித்த போது அந்தச் சிந்தனை அழகாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவுமிருந்தது அவனுக்கு. நீராடி உடை மாற்றிக் கொண்டு அவன் மெஸ்ஸிற்குச் சாப்பிடப் புறப்பட்டபோது... அறை வாசலில் அவன் மாடிப்படி இறங்குவதற்கு இருந்த வேளையில் பைந்தமிழ் நாவலர் பா.பாண்டுரங்கனார் மூச்சு இரைக்க இரைக்கத் தம் கனத்த உடலைச் சுமக்க முடியாமல் சுமந்து படியேறி மேலே வந்து கொண்டிருந்தார். மாடிப்படியில் எதிரே நேருக்கு நேர் சந்திக்கும்படி ஆகிவிட்டதனால் சுகுணனால் பாண்டுரங்கனாரிடமிருந்து தப்பி ஓட முடியவில்லை. தப்பித்து ஓட வழி இருந்தால் பாண்டுரங்கனாருக்கு முன் தலையைக் காட்டாமல் நிச்சயமாகத் தப்பியிருப்பான அவன். அந்த மனிதரிடம் யார் சிக்கிக் கொண்டாலும் - சிக்கிக் கொண்டவருக்கு எத்தனை முக்கியமாக வேறு அவசரக் காரியம் இருந்தாலும் மூன்று - மூன்றரை மணி நேரம் 'போரடி'க்காமல் விடவே மாட்டார். சுகுணன் அவரறியாமல் அவருக்கே 'போர் மாஸ்டர் ஜெனரல்' (Bore Master General) என்று பெயர் சூட்டியிருந்தான். சென்னையில் ஏதோ ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து ஓய்வு பெற்றவரென்று அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான் சுகுணன். கல்லூரியிலிருந்து அவர் ஓய்வு பெற்றாரா அல்லது அவரிடமிருந்து அந்தக் கல்லூரி ஓய்வு பெற்றதா என்பது சர்ச்சைக்குரிய பிரச்னையாகும். ஓய்வு பெற்ற பின்னர் தாற்காலிகமாக அவர் செய்து கொண்டிருந்த காரியம் ஆகாசவாணியில் அருள்வாக்கு உரைப்பது. சுகமாகவும், கவலையற்றும் விடிகிற அதிகாலையின் இன்பத்தைக் கெடுப்பது போன்ற கட்டைக் குரலில் அருளும் இல்லாமல் வாக்கும் இல்லாமல் எதையாவது சொல்லி 'ரேடியோ' கேட்பவர்களின் வயிற்றெரிச்சலை நாள் தவறாமல் கொட்டிக் கொண்டிருந்தார் இந்தப் பைந்தமிழ் நாவலர். 'இந்தக் குற்றத்தைச் செய்பவர் இன்னார்' என்பதுபோல் 'அருள்வாக்கு' உரை நிகழ்த்துபவர் என்று முன்னால் பெயர் சொல்வதோடு நிற்காமல் உரை முடிந்ததும் மக்கள் தங்கள் கோபத்தை யார் மேல் காட்டுவதென்ற தவிப்புடனிருக்கும் போது - 'இந்தக் குற்றத்தைச் செய்தவர் இன்னார்தான்' என்று சந்தேகத்துக்கிடம் வைக்காமல் பின்னாலும் பெயரைச் சொல்லி விடுவார்கள். 'அருள்வாக்கு' என்ற உபதேசத் தொழிலை அப்படியே குத்தகைக்கு எடுத்தவர் போல் தினந்தோறும் பாண்டுரங்கனாரே அதைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவரைப் போலவே ஓய்வு பெற்ற வித்துவான்களும், உபதேசம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களும், ரேடியோக்காரர்களிடம் 'அருள்வாக்கு ஒருவருக்கே சொந்தமானதா?' என்று சண்டைக்குப் போகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். முதல் நாள் அருள்வாக்கின் போது பா. பாண்டுரங்கனார் என்று தமிழில் முதலெழுத்தைச் சொல்லிப் பெயரை அறிவித்தால் மறுநாள் அருள்வாக்கின் போது பி. பாண்டுரங்கனார் என்று வேறு பெயர் போல் தோன்றும்படி ஆங்கிலத்தில் முதலெழுத்தைச் சொல்லி அறிவித்தார்கள். இத்தனைக்கும் மேலாகத் திரு. பாண்டுரங்கனாருக்குப் பூம்பொழிலைப் போலத் தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றில் தொடர்ந்து கந்த புராணத்தைப் பற்றியோ பிரபுலிங்க லீலையைப் பற்றியோ ஓர் அறுபது வாரத்துக்கு எழுதித் தள்ளிவிட வேண்டுமென்பது ஆசை. அதற்காகவே சுகுணனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார் அவர். பாண்டுரங்கனாருக்குத் தமிழையும் இலக்கியத்தையும் விட அதிகமாகத் தெரிந்த கலை, இன்னொருவரைப் பச்சையாகப் புகழ்வது. முகஸ்துதியில் மன்னன். இவற்றிற்கு அநுசரணையானதும் எந்தக் கொம்பனையும் உடனே வசப்படுத்தக் கூடியதுமான உபதொழில் கைரேகை பார்ப்பது. வேதாந்திகள் சில இடங்களில் 'மாயை' தான் கவர்ச்சி மிகுந்தது என்கிறார்களே, அது போல் பாண்டுரங்கனாரைப் போன்ற மனிதர்கள் தான் சென்னைப் பட்டினத்து மாயைகள். இந்த மாயைகளின் கவர்ச்சியோ, செல்வாக்கோ, புகழோ பட்டினத்தில் ஒரு நாளும் குறையாதென்பதை உறுதியாக நம்பலாம் என்று தோன்றியது சுகுணனுக்கு. சமீபத்தில் சிறிது காலமாக நாகசாமியின் கை பாண்டுரங்கனாரிடமிருந்தது. அதாவது பாண்டுரங்கனார் அடிக்கடி நாகசாமியைத் தேடிச் சென்று அவருக்குக் கைரேகை பார்க்கத் தொடங்கியிருந்தார்.

     "ஊரில் எத்துனையோ போலிகள் கைரேகை பார்ப்பதாகப் பாமர மக்களை ஏமாற்றித் திரிகின்றன. யாம் அவ்வாறு செய்வதில்லை. 'செருமானிய' நாட்டு (ஜெர்மனி என்பதற்குப் பாண்டுரங்கனாரின் தமிழாக்கம்) அறிஞரொருவர் எழுதியுள்ள சிறந்த இரேகை நூலினைக் கொண்டு யாமறிந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றோம்" - என்று தனித்தமிழில் - தம்முடைய தொழில் திறமையை எடுத்துச் சொல்லுவது அவர் வழக்கம். பாண்டுரங்கனாரிடம் சில அபாரமான திறமைகளும், சாமர்த்தியங்களும் உண்டு. நாகசாமியைப் போல் தொழிலதிபர்கள், பெரிய மனிதர்கள் யாரையாவது பார்த்தால், "இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நம் முதலமைச்சரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தங்களைப் பற்றியும் ஏதோ பேச்சு வந்தது. அவர் அந்தப் பேச்சை மிகவும் விருப்பத்தோடு கேட்டதுமில்லாமல் தங்களைப் பற்றி என்னிடம் அன்போடு விசாரித்தார். நானும் தங்களைப் பற்றி அவரிடம் நிறையச் சொல்லியிருக்கிறேன்" - என்று நடுவாக நாலு வார்த்தைகள் சொல்லி வைப்பார். பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்களைப் போன்றவர்கள், பிரமுகர்கள், பிரமுகர்களைப் போன்றவர்கள், - புகழுக்கு ஏங்குகிறவர்கள், பணத்துக்கு ஏங்குகிறவர்கள் - எல்லாருடைய பலவீனமும் அவருக்கு நிறையத் தெரிந்திருந்தது. 'முதலமைச்சர் தன்னைப் பற்றிப் பாண்டுரங்கனாரிடம் எதற்காக விசாரிக்க நேர்ந்தது? - பாண்டுரங்கனார் தன்னைப் பற்றி அவரிடம் நிறைய எடுத்துக் கூறுவதற்கு என்ன இருக்கிறது?' என்பதையெல்லாம் யோசிக்கவே யாருக்கும் அவகாசமிராது.

     'ஆகா! இந்தப் பாண்டுரங்கனாருக்குத்தான் எத்தனை பெருந்தன்மை? தான் முதலமைச்சரைப் பார்க்கச் சென்ற போது கூட நம்மை நினைவு வைத்திருந்து மறந்துவிடாமல் அவரிடம் நம்மைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்' - என்று பாண்டுரங்கனாரிடம் எல்லையற்ற விசுவாசம் பெருகும்படியாக அவர் நடந்து கொள்வார். இவ்வளவு சாமர்த்தியமிருந்தும் சுகுணனை மட்டும் அவரால் ஏமாற்ற முடியவில்லை. அவன் அவரை உள்ளும் புறமும் அளந்து வைத்திருந்தான். அவரையும் அவரைப் போன்றவர்களையும் பார்த்து எந்த விதமான கவர்ச்சியும் ஏற்படாததோடு - மேலே பட்டுவிட்டால் அரிக்கக்கூடிய ஒரு கம்பளிப் பூச்சியைப் பார்ப்பது போல் பல சமயங்களில் அருவருப்பு மட்டும் ஏற்பட்டிருக்கிறது அவனுக்கு. ஒரு சமயம் பெரிய மாவுமில் முதலாளியொருவருக்கு அறுபதாண்டு நிறைவு வந்தது. சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில் யார் யாருக்கு எப்போது மணிவிழாக் கொண்டாட வேண்டும்? யார் யாருக்கு எப்போது ஊர்வலம் விட வேண்டும் - என்று கவனித்துக் கணக்கெடுத்துப் புள்ளி விவரம் போட்டு வைத்துக் கொண்டு - ஏற்பாடுகள் செய்து ஒலிபெருக்கித் திருவிழா ஒன்றை அல்லது முகஸ்துதிக் கொடியேற்றும் பாராட்டுப் பிரம்மோற்சவமொன்றை நடத்துவதற்காகவே காத்திருப்பார்கள் சிலர். அந்த மாவு மில் முதலாளிக்கும் அப்படி ஒரு பிரம்மாண்டமான மணி விழா நடந்தது. எல்லாப் பத்திரிகைகளும் அவருடைய படத்தைப் போட்டு 'இந்திரன், சந்திரன், இளைஞரினும் இளைஞராக நம்மிடையே சுறு சுறுப்பாய் உலாவும் இன்னாருக்கு அறுபதாண்டு நிறைந்துவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை' - என்றெல்லாம் எழுதியிருந்தன. அந்த மாவு மில் முதலாளியின் மணிவிழாவுக்கு ஒருவாரம் இருக்கும்போது ஒருநாள் பகலில் திடீரென்று பரபரப்பாகப் பூம்பொழில் காரியாலயத்துக்கு வந்து சுகுணனைச் சந்தித்து, "நம் பூம்பொழில் அதிபர் நாகசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பரும், பி.எஸ்.கே. ஃபிளவர் மில்ஸின் உரிமையாளருமான ஞானசபாபதிக்கு மணிவிழா வருகிறது. அந்தச் சமயத்தில் நமது பூம்பொழில் இதழில் வெளியிட ஏற்றவாறு ஒரு செய்யுள் புனைந்துள்ளேன்" - என்று சொல்லிக் கொண்டே செய்யுள் எழுதப்பெற்ற தாளை எடுத்துச் சுகுணனிடம் சிரத்தையோடு கொடுத்தார் பாண்டுரங்கனார். அந்தச் செய்யுளை வேண்டா வெறுப்பாக கையில் வாங்கினான் சுகுணன்.

     பணியாரம் பசையுடனே பன்ரொட்டி
     பலப்பலவாய்ச் செய்வதற்கும் சுடுவதற்கும்
     சரியான மாவுவகை தருகின்றாய்
     சரிதத்தே நின்புகழ்தான் நின்றுலாவும்
     பெரியோய் புகழ்க்கெல்லாம் முரியோய்
     பெருமைமிகு பி.எஸ்.கே. ஃபிளவர்மில்ஸின்
     திருவார்ந்த செயலதிப பொருட்செல்வா நீ
     சீராரும் மணிவிழாக்கள் பலவுறுகவே!


என்று தகுதியும் காரணமும் நோக்காமல் குருட்டு விசுவாசத்தோடு பாடப்பட்டிருந்த அந்தக் 'கவிதையை' அருவருப்போடு மேஜை மேல் வைத்துவிட்டு அதைப் பாடிய பாவத்துக்குச் சொந்தக்காரரான பாண்டுரங்கனாரை நிமிர்ந்து பார்த்தான் சுகுணன். அப்போது அவனது வெறுப்பையும், அருவருப்பையும் சிறிது கூடப் புரிந்து கொள்ளாதவராய், "இந்தப் பாடலில் ஒரு சிலேடையையும் இருபொருள் அலங்காரமாக வைத்திருக்கிறேன். 'மாவு வகை தருகின்றாய்' - அதாவது மூன்றாம் அடியில் - 'சரியான மாவு வகை தருகின்றாய்' - என்கிற இடத்தில் - மாவு + வகை என்றும் ஒரு பொருள். மா - பெரிய, உவகை - மகிழ்ச்சி, பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய் (மா உவகை தருகின்றாய்) என்றும் ஒரு பொருள். சிலேடை எத்தனை நயமாக வந்து விழுந்திருக்கிறது பார்த்தீர்களா சுகுணன்?" - என்று விளக்க உரை வேறு கூறத் தொடங்கிவிட்டார் பாண்டுரங்கனார். சுகுணனுடைய மனத்திலோ அந்தச் செய்யுளையும் பாண்டுரங்கனாரையும் அருவருப்பாக நோக்கும்போதே அதன் மறுபுறமாக உள்ளே ஒரு துணிவும் நக்கீர தைரியமும் கூடப் பெருகின.

     "ஐயா! இந்த மாதிரித் தனி மனிதர்களைத் தேவைக்கதிகமாகப் புகழும் புகழ்ச்சியைச் செய்யுளாக வேறு எழுத வேண்டிய அவசியமென்ன? பத்திரிகையில் இதைப் பிரசுரிப்பதனால் இந்தப் பாடலில் புகழப்படுகிற மாவரைப்பவரும் அவருக்கு வேண்டியவர்களும் திருப்திபடலாம். இலக்கிய ரசனைக்காகப் பத்திரிகை வாங்குகிறவர்களுக்கு இதனால் பத்திரிகையின் மேல் அவநம்பிக்கையும், ஏமாற்றமும் அல்லவா ஏற்படும்?" - என்று சுகுணன் அவரை வினாவிய போது, அவர் அசடு வழியச் சிரித்தபடி, "ஹி ஹி அதற்கில்லை... இவ்வாறு பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள் போல் வள்ளல்களை நாடிப் புகழ்தல் புலவர் மரபு" - என்று மரபைச் சாட்சிக்கு அழைத்தார்.

     "ரொம்ப நல்லது! இந்த மாதிரிப் 'பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள்' - 'புலவர் மரபு' - போன்ற வாக்கியங்களையெல்லாம் ஏதாவதொரு தமிழ்த் துணைப்பாட நூலில் எழுதுங்களேன். வீணாக இப்படிப் புகழ் பாடுதலில் இறங்காதீர்கள் ஐயா!" - என்று சிரித்துக் கொண்டே அவருக்குப் பதில் சொல்லிவிட்டு அந்தக் 'கவிதை'யையும் திருப்பிக் கொடுத்து அனுப்பியிருந்தான் சுகுணன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது காலம் பாண்டுரங்கனார் சுகுணனைப் பார்க்க வருவதற்குத் துணிவின்றியோ என்னவோ - வரவேயில்லை. அதற்குப் பிறகு 'ஆகாச வாணியில்' காலை வேளையில் அவருடைய கட்டைக் குரலில் அருள் வாக்கு ஒலிப்பதைத் தெருவில் போகும்போதோ கண்ணப்பா லாட்ஜின் எதிர்வீட்டு மாடியில் அதிகாலை ரேடியோ அலறும் போதோ, கேட்க நேருகையில் கம்பளிப்பூச்சி அரிப்பது போலப் பாண்டுரங்கனாரின் ஞாபகம் இலேசாக வந்து போகும். இப்போது இந்த முன்னிரவின் சுகமான வேளையை எல்லாம் பாண்டுரங்கனாரின் 'போரில்' சிக்கிக் கழிக்க வேண்டியிருக்குமோ என்று சுகுணன் வருந்தினான். அன்போடும், பிரியத்தோடும், 'ரூஃப்கார்டனில்' விருந்துண்ண அழைத்த துளசியின் அழைப்பைப் புறக்கணித்து மறுத்தனுப்பிய பாவம் தான் இப்படி உடனே பலித்துப் பாண்டுரங்கனாரின் வருகையாக நேர்ந்து விட்டதோ என்று கூட எண்ணினான் அவன்.

     "வந்த காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள் ஐயா! எங்கே இப்போதெல்லாம் இந்தப் பக்கத்தில் தென்படுவதேயில்லை? அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பிக்கள், டெப்டி செகரெட்டரிகள், எல்லாரும் நிறைய நண்பர்களாகிவிட்டார்கள் போலிருக்கிறது. அதனால் தான் சாதாரணமானவர்களுடைய கண்களில் படவே மாட்டேனென்கிறீர்கள்?" - என்று குத்தலாகக் கேட்டபோது அவனுடைய அந்தக் கேள்வியை அவர் எந்த விதத்திலும் குத்தலாகவோ நையாண்டியாகவோ எடுத்துக் கொண்டு தயங்கவேயில்லை; பெருமையுடனேயே பதில் சொன்னார்.

     "அதையேன் கேட்கிறீர்கள்? 'பை - எலக்ஷனில்' - அதாவது துணைத் தேர்தலில் நின்றால் வெற்றியா, தோல்வியா என்று அறிந்து கொள்வதற்காக - உதக மண்டலத்துக்கே அழைத்துக் கொண்டு போய்விட்டார் ஒரு நண்பர். அங்கே ஒரு தனி பங்களாவிலே மூன்று நாள் கைரேகை எல்லாம் பார்த்து உறுதியாக நிற்கலாமென்று தெரிவித்த பின்புதான் அந்த நண்பருக்குத் தேர்தலில் நிற்பதற்கே துணிவு வந்தது..."

     "தேர்தலிலே வெற்றி பெறக் கைரேகை பார்ப்பதை விடப் பொது மக்களின் நம்பிக்கையும் விசுவாசமும் யார் பக்கமிருக்கிறதென்று பார்ப்பதல்லவா முக்கியம்?" - என்று சுகுணன் கேட்ட கேள்விக்கு அவர் மறுமொழி கூறவில்லை. வேறு எதையோ பேசத் தொடங்கினார்.

     "அதிருக்கட்டும்! நான் இப்போது வேறு ஒரு காரியமாக உங்களிடம் வந்தேன். திருவல்லிக்கேணி 'பைந்தமிழ் மன்றத்தின்' சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'பல்பத்திரிகைக் காவலர்' நாகசாமியைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தும் விழா ஒன்று நடக்க ஏற்பாடாகி வருகிறது. அமைச்சர் தலைமை தாங்குகிறார். காலை மலர் சர்மா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராயிருக்கிறார். நீங்களும் அந்த விழாவில் நாகசாமியைப் பாராட்டிச் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். மறுக்காமல் அவசியம் ஒப்புக் கொள்வீர்களென்று நினைக்கிறேன்."

     "சொற்பொழிவாற்றுவது இருக்கட்டும் ஐயா! அதென்னவோ 'பல்பத்திரிகைக் காவலர்' - என்று நாகசாமியின் பெயருக்கு முன்னால் ஏதோ ஓர் அடைமொழி கூறினீர்களே; அதற்கென்ன அர்த்தம்?"

     "அதுவா? விழா நிகழும் நாளில் நாகசாமி அவர்களுக்குப் பொது மக்கள் சார்பில் நாங்கள் ஒரு சிறப்புப் பட்டமளிக்கப் போகிறோம். அப்பட்டமே 'பல்பத்திரிகைக் காவலர்' - என்பது"

     "சொல்வதற்கு என்னவோ போலிருக்கிறதே! 'கல் வைத்த மூக்குத்தி' - என்பது போல் நீங்கள் அவசரமாகச் சொல்லிய போது என் காதில் இது விழுந்தது. அதனால் தான் இரண்டாம் தடவையாகக் கேட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்" - என்று சொல்லிப் பிரிவதற்கு அடையாளமாகக் கையையும் கூப்பி விட்டுச் சுகுணன் அவரிடமிருந்து விடைபெற்று மெஸ்ஸுக்குச் செல்ல முயன்ற போதும் அவர் அவனை அவ்வளவு சுலபமாக விடவில்லை.

     "சொற்பொழிவுக்கு என்ன சொல்லுகிறீர்கள்? நிகழ்ச்சி நிரலில் உங்கள் பெயரையும் சேர்த்து அச்சிட்டு விடுகிறேனே..."

     "சொற்பொழிவைப் பற்றி என்ன? நாங்களெல்லாம் நாகசாமியின் நிறுவனத்திலேயே இருப்பவர்கள். நாங்களே நான் முந்தி நீ முந்தி என்று அவரைப் புகழ்வது நன்றாயிராது. புகழ்கிற காரியத்தை அருகிலேயே இருந்து பார்த்து பழகியவர்களிடம் ஒப்படைப்பதை விடப் பார்க்காத புதியவர்களிடம் ஒப்படைப்பது தான் பத்திரமானது..." - என்று சொல்லிக் கொஞ்சம் விஷமத் தனமான புன்முறுவலுடனேயே அந்த வேண்டுகோளை அவரிடம் மறுத்தான் சுகுணன்.

     "இல்லை! இல்லை! அவசியம் நீங்கள் உரையாற்ற வேண்டும்" - என்று மன்றாடினார் பைந்தமிழ் நாவலர்.

     "என்னவோ நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்" என்று நாசூக்காக அவரிடமிருந்து அவர் விடை கொடுப்பதற்கு முன்பே வலியக் கத்தரித்துக் கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து விட்டான் சுகுணன்.

     மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு சொற்பொழிவாற்ற இணங்கிடவும் முடியாமல், கண்டிப்பாக முடியாது என்று சொல்லி மறுக்கவும் முடியாமல் அவன் தயங்கும்படியான வேண்டுகோளை அவனிடம் விடுத்திருந்தார் பாண்டுரங்கனார். 'என்னால் பேசமுடியாது, மாட்டேன்' என்று நேரடியாக மறுத்து விட்டால், 'உங்கள் விழாவில் நாலு வார்த்தை பேசச் சொன்னேன். மறுத்துவிட்டார்' - என்று நாகசாமியிடமே போய்த் தீ மூட்டுவார் பாண்டுரங்கனார். பேசுவதற்கோ அவனுக்கு விருப்பமில்லை. நிறுப்பதற்கு ஒரு சாதனையுமில்லாமல் மற்றவர்களின் சாதனைகளைத் தன் பெயரில் பணம் கொடுத்து வரவழைத்துக் கொண்டு அதற்காக வெட்கப்படாமல் நிமிர்ந்து நடக்கிறவர்களைச் சுயநலத்துக்காகச் சிலர் பாராட்டுவதும் பட்டம் கொடுப்பதும் போலியான காரியமென்று அவற்றை வெறுத்தான் அவன். நாகசாமிக்காக நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவிற்கான சகல செலவுகளையும் பாண்டுரங்கனார் நன்கொடை என்ற பெயரில் நாகசாமியிடமே வசூல் செய்திருப்பார் என்பதும் இரகசியமாக அவனுக்குத் தெரியும். இப்படி நிகழ்ச்சிகளையும், இப்படி மனிதர்களையும் சந்திக்கும் போது அல்லது கேள்விப் படும்போது சமூகம் எந்த மூலையிலோ அழுகியிருக்கிறது என்ற அதே எண்ணம்தான் அவனுள் உறுதிப்பட்டது. இந்தப் போலிகளை எதிர்த்து உரத்த சப்தமிட்டுப் பட்டினம் முழுவதும் கேட்கும்படி - பெரிய அபாயச் சங்கு போன்ற குரலில் உண்மையைப் பெரிதாய் முழங்கிக் கூற வேண்டுமென்று அவனுள் ஒரு தைரியம் குமுறியது. அதே சமயம் அந்தத் தைரியத்துக்கு எதிராக எங்கெங்கிருந்து நெற்றிக்கண்கள் திறக்குமென்று சிந்தித்த போது தயக்கமாகவும் இருந்தது.

     மறுநாள் காலை அவன் அலுவலகத்துக்குள் நுழைந்து அறையில் போய் அமர்ந்ததுமே ரங்கபாஷ்யம் மானம், வெட்கம் எல்லாவற்றையுமே அறவே துடைத்தெறிந்து விட்டது போன்ற ஒரு வியாபாரப் புன்முறுவலோடு, "லெட் அஸ் ஃபர்கெட் தி பாஸ்ட்... நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:13 pm

[You must be registered and logged in to see this link.]

8

     சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத்தான் ஒன்பதாவது படி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில் கூட ஏற முடியாத குடும்பங்கள் இன்னும் அப்படியே தானிருக்க முடிகிறது.


     சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் பகை ஏற்பட்ட பின் ஓர் இரண்டு மாத காலம் காரியாலய வாழ்க்கையில் மிகவும் கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்தன. சுதந்திரமான மனப்பாங்கும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவன் மற்றவர்களுக்கு அடங்கியோ கட்டுப்பட்டோ நடப்பது எவ்வளவு சிரமமான காரியம் என்பதை இந்த அனுபவங்களால் சுகுணன் நன்றாக உணர முடிந்தது. சுகுணனை 'ரூஃப் கார்டன்' விருந்துக்கு அழைக்க வந்திருந்த தினத்துக்கு ஒரு வாரம் கழித்துத் துளசி தன் கணவனோடு திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருந்தது. சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் சிபாரிசினாலோ அல்லது தயவினாலோ துளசியின் கணவனுக்கு டில்லியில் ஒரு பெரிய இன்ஜினியரிங் கம்பெனியில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் வருகிறாப் போல உத்தியோகம் ஒன்று கிடைத்திருந்தது. இந்த உத்தியோகம் கிடைப்பதற்காகத்தான் நீண்ட நாள் நண்பரான சந்திரசூடன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து தற்செயலாகச் சென்னை வந்திருந்த போது அவரைக் கூப்பிட்டுக் குலாவி விருந்து கொடுத்து அவருடைய வெளிநாட்டு அனுபவங்களைக் கட்டுரைத் தொடராக வெளியிடுவதாய் வாக்களித்து, எல்லாம் செய்திருந்தார் நாகசாமி. ஏழைகளும் மத்தியதரக் குடும்பத்தினரும் பிரதிபலன் பாராமல் அன்புக்காகவும், உபசாரத்துக்காகவும் மனிதர்களைப் போற்றவும், விருந்து வைக்கவும், புகழவும் செய்கிறார்கள். பணக்காரர்களும், வியாபாரிகளுமோ, காரியமில்லாமல் எதையுமே செய்வதில்லை. காரியத்தைச் சாதித்துக் கொடுக்கிற சக்தியில்லாதவர்களுக்கும் எதையுமே அவர்கள் செய்வதில்லை. செய்வதை நேரடியாகச் செய்யாமல் நாசூக்காகச் செய்வதற்கும் அவர்களுக்குத்தான் தெரியும் என்பதைச் சுகுணன் மிக அருகிலிருந்து கண்டிருந்தான். எனவே நாகசாமி நினைத்த கணத்திலேயே தன் மாப்பிள்ளைக்கு இவ்வளவு பெரிய உத்தியோகம் தேட முடிந்ததைப் பற்றிச் சுகுணன் சிறிதும் ஆச்சரியமடையவில்லை. அவரால் இது முடியாமல் போயிருந்தால்தான் அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்கும். சமூக வாழ்வில் ஏற்கெனவே எட்டுப்படிகள் ஏறிவிட்ட குடும்பங்களுக்குத் தான் ஒன்பதாவதுபடி அருகிலிருக்கிறதே ஒழிய முதல் படியில்கூட ஏற முடியாத குடும்பங்கள் அப்படியே தானிருக்க முடிகிறது. ஏற்கெனவே எட்டுப்படி ஏறிவிட்ட சௌகரியமுள்ள குடும்பங்களின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் கழிசடைகளாகவே இருந்தாலும் - மெடிகல் காலேஜ் அட்மிஷன், என்ஜீனியரிங் காலேஜ் அட்மிஷன், பெரிய உத்தியோகம், வெளிநாட்டுப் பிரயாண வசதி, எல்லாமே எட்டாவது படியில் நிற்பவனுக்கு ஒன்பதாவது படிபோல் மிக அருகிலேயே இருக்கின்றன. ஆனால் முதல் படிக்கும் கீழே இருக்கும் சமையற்காரச் சர்மாவின் பிள்ளை சுந்து, தோட்டி முனுசாமியின் மகன் குப்பு, அப்பளமிடும் அம்மாளுவின் பெண் அலமு, போன்றவர்கள் இரண்டாவது படியில் கூடச் சரியாக ஏற முடிவதில்லை. இந்திய சமூக வாழ்வில் சோஷலிசம் என்கிற சமதர்ம மலர்ச்சி கூட எட்டுப்படி ஏறியவர்களுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய முதல் படியிலிருந்து ஏங்குகிறவர்களுக்கு மேலே ஏற வசதியின்றி இருப்பதை எண்ணிச் சுகுணன் அடிக்கடி மனத்தில் வெதும்பியிருக்கிறான். இந்தச் சமதர்ம மலர்ச்சி வியாபகமாகவும், நன்றாகவும் பூரணமாகவும் ஏற்படுவதற்கு என்ன வழி செய்ய முடியும் என்ன வழி செய்ய வேண்டும் என்பது அவன் சிந்தனையில் ஒரு தாகமாகவே இருக்கிற நிலையைப் பெற்றிருந்தது. தந்தையின் பணம் துளசியின் கணவனை 'என்ஜீனியரிங்' படிப்புப் படிக்க வைக்கிற அளவு வசதி செய்தது. பின்பு மாமனாராகிய துளசியினுடைய தந்தை தம் செல்வாக்கினால் இரண்டாயிர ரூபாய்க்கு மேல் மாத வருமானம் வருகிறாற்போல் உத்தியோகம் தேடிக் கொடுத்து விட்டார். இப்படி இரண்டு செல்வாக்குகளுக்கு நடுவே இருக்கிற பிள்ளைகள் தான் சராசரி இந்திய சமூக வாழ்வில் சௌகரியத்தை அடைய முடிகிறதென்று தோன்றியது. சுகுணனுக்கு இருந்த காரியாலய வேதனைகளிலும் கசப்பான அனுபவங்களிலும் துளசியின் கணவனுக்கு உத்தியோகம் கிடைத்து விட்டதென்ற இந்தச் செய்தி கூடத் தெரிந்திருக்க நியாயமில்லை. துளசியே ஒருநாள் அதிகாலையில் இதச் சொல்லிவிட்டுப் போவதற்காக அவனைத் தேடி அறைக்கு வந்திருந்தாள். அப்போதிருந்த மனநிலையில் அவனால் அவளை மலர்ச்சியோடு வரவேற்று பேச முடியவில்லை. அவளாலும் அவன் முன் மலர்ச்சியோடு நின்று பேச முடியவில்லை. சொல்ல வந்ததைப் பேசுவதற்குச் சொற்களைத் தேடி நிற்பவள் போல் அவள் தயங்கினாள். தேடிய சொற்கள் வராமல் அழுகைதான் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. அவளுடைய அழுகை செவியில் ஒலிப்பதற்கு முன் கீழே தலையைக் குனிந்தவாறு மௌனமாயிருந்த சுகுணன், அந்த நிகழ்ச்சிக்கு மனம் இரங்கி மெல்லத் தலை நிமிர்ந்து,

     "விடிந்ததும் விடியாததுமாக இங்கே வந்து இப்படி அழுவதற்கு என்ன வந்துவிட்டது இப்போது?" என்று மெல்ல வினவினான்.

     "அவருக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகியிருக்கிறது."

     "அவருக்கு என்றால் எவருக்கு?"

     இந்த 'அவருக்கு' அவனுள் எரிச்சலூட்டியிருக்க வேண்டும் போல் ஒலித்தது அவன் கேள்வி. அந்தக் கேள்வியின் தொனி புரியாமல் அதற்கு எந்த விதத்தில் மறுமொழி கூறுவதென்று தயங்கினாள் துளசி. பின்பு 'அவருக்கு உத்தியோகமாகிவிட்ட'தென்று வாக்கியத்தின் மகிழ்ச்சியில் விருப்பாகவோ, வெறுப்பாகவோ தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவளைப் போல, "அதுதான்... அப்பாவின் மாப்பிள்ளைக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகிவிட்டது..." என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவள் அப்படிக் கூறிய உடனே சுகுணனும் தன் கடுமையை விடாமல், "அப்பாவின் மாப்பிள்ளைக்கு என்றால்? ஓ... புரிகிறது? அதாவது 'உன் கணவருக்கு' டெல்லியில் உத்தியோகமாகிவிட்டதென்று என்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாய் இல்லையா?" என்று குத்தலாக வினவினான். ஒன்றும் சொல்ல முடியாமல்... சொல்லத் தோன்றாமல் - 'இப்படி நீங்கள் மேலும் ஒரு வார்த்தை பேசினால் கூட இனி என்னால் தாங்க முடியாது. நான் அழுதுவிடுவேன்' என்பது போல் ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள் துளசி. அவனும் அமைதியாக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். இடையில் நிலவிய மௌனமே அப்போது இருவர் உணர்வுகளையும் பேசியது.


     "அவர் தான் முதலில் போகிறார். நான் இரண்டு வாரம் கழித்துப் போக வேண்டியிருக்கும். டெல்லியில் குடியிருக்க இடமெல்லாம் கிடைத்து அவரிடமிருந்து தந்தி வந்ததும் அப்பா என்னைக் கொண்டு போய் விட ஏற்பாடாகியிருக்கிறது..."

     "பரவாயில்லை இதற்காக எல்லாம் இனி நான் கவலைப் பட முடியாது துளசி. இது உன் வாழ்க்கையின் சொந்தக் காரியம்."

     "இன்னும் எனக்கு வாழ்க்கையே ஏற்படவில்லை. அதற்குக் காரியங்களும் சொந்தமாக இல்லை. நான் நினைத்த வாழ்வு என் மனத்திலே கருகிவிட்டது."

     "இருக்கலாம்! ஆனால் இனிமேல் உலகத்துக்கு எடுத்துச் சொல்ல முடியாத ஊமை ஏமாற்றம் இது. இதை நீ மறந்துவிடப் பழகிக் கொள்வது நல்லது..." 

     "ஆறுதலாக இரண்டு வார்த்தை சொல்லமாட்டார்களா? இப்படிக் கடுமைக்கும் உதாசீனத்துக்கும் நான் பாத்திரமில்லை. இவற்றை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது...!"

     அவன் பதில் பேசாமல் இருந்தான்.

     "தயவு செய்து ஏதாவது ஆறுதலாகச் சொல்லி எனக்கு விடைகொடுங்கள்."

     மேஜை மேல் கிடந்த அரைக் காகிதம் ஒன்றை எடுத்து அதில் எதையோ எழுதி மௌனமாக அவளிடம் நீட்டினான் சுகுணன். அவள் அதை வாங்கிப் படித்தாள்.

     "வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு" என்று அதில் எழுதியிருப்பதைப் படித்து விட்டு நீர் திரையிட்டு மல்கி மறைக்கும் விழிகளால் அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் அவள்.

     "இதுதான் மீண்டும் உங்கள் பதிலா?"

     அவன் ஆமாம் என்பது போல் மௌனமாகத் தலையை அசைத்தான். அவள் நடைப்பிணமாக வெளியேறினாள். சில கணங்களில் வாயிலில் கார் புறப்படும் ஓசை கேட்டது. அவன் எழுந்து ஜன்னல் பக்கமாகத் திரும்பிக் கண்ணாடியைக் கழற்றி விட்டு உள்ளே விழிக்கடையில் அரும்பியிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். ஏதோ தோன்றி மாடி வராந்தா வரை வந்து அவன் தெருவருகே பார்த்த போது அவளுடைய கார் கண்பார்வைக்குத் தென்படாமல் மறைந்திருந்தது. பெருமூச்சு விட்டபடி அறைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தான் சுகுணன். இதற்குப் பின் சில மணி நேரங்கள் அவனுக்கு ஒரு வேலையும் ஓடவில்லை. துளசிக்கு அவளுடைய வாழ்வின் பொறுப்பையும் நிலையையும் உணர்த்தவே அவன் அப்படிக் கடுமையாக நடந்து கொண்டான். அவளைப் போலவே அவனும் உருகி ஏங்கிப் பேசிக் கொண்டிருந்ததால் இருவருடைய பேச்சுக்கும் ஒரு முடிவே இராது. அப்படிப் பேசினால் அதன் பின் அவளாலும் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் டெல்லியில் போய் நிம்மதியாக இருக்க முடியாது. உணர்ச்சி மயமாகவும், பிரித்தெடுக்க முடியாதபடியும் தன்மேல் பிரியம் வைத்துவிட்ட அவளுக்கு அவளுடைய புதிய நிலைமையை உணர்த்த வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது. அவள் தன்னைச் சுற்றி சுற்றித் திரிவதைத் தவிர்க்க வேண்டிய பொறுப்பு அவள் மீதிருந்த அதிக அன்பின் காரணமாகவே அவனுக்கு வந்திருந்தது இப்போது. அந்தக் கடமையை அவன் செய்தான். அவள் அதைப் புரிந்து கொள்ள முடியாது - புரிந்து கொள்ளவும் வேண்டாமென்பது தான் அவன் கருத்து. முதலில் தனியே அவனைச் சந்திக்க வந்த இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடியும் தன் கணவனோடு ஒருமுறை விட்டுக் கொடுக்காமல் உடன் வந்தவள் போலத் தோன்றினாள் அவள்.


     "முதலில் இப்போது நான் மட்டும் தான் புறப்பட்டுப் போவதாயிருந்தது. அப்புறம் மாமா யாரோ தெரிந்தவர் மூலம் குடியிருக்க இடத்துக்குக் கூட ஏற்பாடு செய்து விட்டார். அதனால் துளசியும் இப்போது என்னுடனேயே வருகிறாள்" என்றான் துளசியின் கணவன். துளசி ஒன்றும் பேசவில்லை. ஏதோ பொம்மை போல உடன் வந்திருந்தாள்.

     "கங்ராஜுலேஷன்ஸ் விஷ்யூ ஆல்... சக்ஸஸ்" என்று துளசியின் கணவனிடம் ஒரு முறைக்காக மகிழ்ச்சி தெரிவித்தான் சுகுணன். துளசி ஒன்றுமே பேசாமலிருப்பதைக் கண்ட அவள் கணவன், "என்ன துளசி? நீ ஒன்றுமே பேச மாட்டேனென்கிறாயே?" என்று அவளைக் கேட்டே விட்டான்.

     அந்த வித்தியாசம் அவன் மனத்திலே பெரிதாகி விடாமல் ஒப்புக்கு ஏதோ பேச முயன்றாள் துளசி. அந்தப் பேச்சில் மனம் இல்லை. உணர்வின் பிரதிபலிப்பும் இல்லை. விடைபெறும் போது கணவனின் சொற்களோடு சேர்த்தே அவள் சொற்களும் இணைந்து ஒலிக்கும்படி ஏதோ சொன்னாள். அவனும் வாசல் வரை சென்று கார்க் கதவருகே நின்று வழியனுப்பினான். மறுநாளோ அதற்கடுத்த நாளோ இரவு விமானத்தில் கணவனோடு டெல்லிக்குப் புறப்பட்டு விட்டாள் துளசி. நாட்கள் யாரோ மந்திரம் போட்டு ஓடச் சொன்னாற் போல ஓடிவிட்டன. பெண்ணையும் மாப்பிள்ளையையும் டெல்லியில் குடிவைப்பதற்காக உடன் சென்றிருந்த நாகசாமி சந்திரசூடன் ஐ.சி.எஸ். அவர்களின் பிரயாணக் கட்டுரைத் தொடரை உடனே பிரசுரிக்க ஏற்பாடு செய்யுமாறு அங்கிருந்தே சுகுணனுக்கு ஒரு 'எக்ஸ்பிரஸ் டெலிவரி' லெட்டரும் எழுதிவிட்டார். கடிதத்தை அப்படியே காலைமலர் சர்மாவுக்குக் கொடுத்தனுப்பி விட்டான் சுகுணன். கட்டுரைத்தொடரை அடுத்த வாரமே வெளியிடுவதாக அறிவிப்புப் போட வேண்டுமென்று சுகுணனை வற்புறுத்தினார். கட்டுரைத்தொடர் அடுத்த வாரமே வெளிவருமென்று அதிக ஆர்வத்தோடு சர்மா நாகசாமிக்குத் தந்தியும் கொடுத்து விட்டார். பூம்பொழில் இதழில் வெளியிடத் தகுதி உண்டா இல்லையா என்று நிர்ணயிக்கும் பொறுப்பை அந்தப் பிரயாணக் கட்டுரை விஷயத்தில் சுகுணன் மேற்கொள்ள விரும்பவில்லை. அது நாகசாமியின் காரிய ஆசை என்றோ, சர்மாவின் பேராசை என்றோ கருதி விட்டு விட்டான். ஏற்கெனவே சர்மா நாகசாமியிடம் 'சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸின் கட்டுரைகளை வெளியிடுவதில் சுகுணனுக்கு அவ்வளவாக விருப்பமில்லை' என்று சொல்லிக் கோள் மூட்டியிருப்பார் போலிருந்தது. அதற்குப் பிறகு நாகசாமி இரண்டொரு முறை சுகுணனிடம் அழுத்தமாகவும் வன்மையாகவும் பேசியதிலிருந்து இது தெரிந்தது. ரங்கபாஷ்யம், சர்மா இருவருமே தன்னைப் பற்றி நாகசாமியிடம் கோள்மூட்டி நெருப்பு வைத்து வருவதாக அவனால் அநுமானிக்க முடிந்திருந்தது. அந்தக் கட்டுரைத் தொடரைப் பற்றிய உண்மைக் கருத்தை இப்போதும் அவன் தெரிவித்தால், 'கட்டுரையை வெளியிடச் சுகுணனுக்குச் சம்மதமில்லை' என்றே மீண்டும் இரகசியமாக நாகசாமிக்கும் கடிதம் எழுதினாலும் எழுதி விடுவார் சர்மா. நாகசாமியைக் காக்கை பிடிப்பதில் சர்மாதான் அந்தக் காரியாலயத்தில் முதல் பரிசு வாங்கத் தகுதியானவர். நாகசாமி என்றைக்குப் பிறந்தார், அவருடைய பிறந்த நாள் எந்த மாதம் எந்தத் தேதியில் எந்த நட்சத்திரத்தில் வருகிறதென்று சுகுணனுக்கோ டைம்ஸ் நாயருக்கோ தெரியாது. ஆனால் சர்மாவுக்கு இம்மாதிரி விஷயங்களில் அதிகமான கவனம் உண்டு.

     நாகசாமியின் பிறந்த நாள் என்றைக்கோ அன்றைக்கு அதிகாலையிலேயே ரோஜாப்பூ மாலையும் கையுமாக சாந்தோமில் அவருடைய பங்களா வாசலில் போய் நிற்பார். இப்படிக் காரியங்களால் நாகசாமியைச் சரியாகக் குளிப்பாட்டி வைத்திருப்பவர் அவர். சுகுணனோ இது போன்ற செயல்களை அசிங்கமாகக் கருதுபவன். 'பாரதியார் பிறந்த தினத்தைப் போலவோ, விவேகானந்தர் காந்தியடிகள் பிறந்த தினங்களைப் போலவோ' நாகசாமியை போன்ற சோம்பேறிப் பணக்காரர்களின் பிறந்த தினத்தையும் கொண்டாடுவது அசிங்கம் என்பது அவன் கருத்து. பிறந்த தினத்தைக் கொண்டாடும் படியாக இந்தச் சுயநலவாதிகள் தேசத்துக்கு எதுவும் செய்வதில்லை என்று நினைப்பவன் அவன். இவர்கள் சுயநலத்துக்காகப் பணம் சேர்ப்பதும் செல்வாக்குச் சேர்ப்பதும் சந்ததிகளுக்குச் சொத்து மீதப் படுத்தி வைத்து விட்டுப் போவதும் தவிர இவர்கள் தேசத்துக்குச் செய்யும் தொண்டு ஒன்றுமில்லை என்றெண்ணி இவர்களை வெறுத்தான் அவன். பத்திரிகைத் தொழிலைப் பற்றி 'ஃபோர்த் எஸ்டேட்' என்றும் 'பேனா வீரனின் சத்திய யுத்தம்' என்னும் இலட்சியவாதிகளின் புத்தகங்களில் வாசித்தும், சொற்பொழிவுகளில் கேட்டும் இளமையிலேயே அதில் நாட்டம் கொண்டவன் அவன். அந்தத் தொழிலில் நுழைந்து பார்த்த பின்பு இப்போதோ தன்னம்பிக்கை இல்லாதவர்களும், இலக்கிய உணர்ச்சியே அற்றுப் போனவர்களும் அறிவின்மையினால் புத்தியிலே பேடிமைப் பட்டுப் போனவர்களுமாக சர்மாவைப் போல் பலர் அதில் நிறைந்திருப்பதைப் பார்த்து நொந்து போயிருந்தான் அவன். 'திலகரும், பாரதியாரும், சத்திய வேட்கையோடு பத்திரிகை நடத்திய தேசமா இது?' என்று அவனுக்கே சந்தேகமாயிருந்தது. எனினும் இந்தச் சூழ்நிலையைப் பார்த்து அவனுடைய நக்கீர தைரியம் பெருகியதே ஒழியச் சிறிதும் குறையவில்லை. ஒரு பத்திரிகையாளனுக்கு முக்கியமான தேவை நிறையச் சம்பளமோ, போக வரக் காரோ, டெலிபோன் பங்களா வசதிகளோ அல்ல; தன்னம்பிக்கைக்கு அழிவு வரும் போது இவற்றையெல்லாமே துச்சமாக மதித்துக் கொண்டு நிலைமையைத் 'தூ' என்று தள்ளி விட்டுக் கொள்கையோடும் சத்தியத்தோடும் நிமிர்ந்து விலகி நிற்கிற தைரியம் தான் வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்ந்திருந்தான் அவன். சந்தையில் மீன் கடை வைத்திருப்பவர்களுள் இருப்பதைப் போன்ற கீழ்த்தரமான பெருந்தன்மை கூட இங்கே இல்லையே என்று உள்ளூர வருந்தினான் அவன்.


     துளசியும் டெல்லிக்குப் போய்விட்ட பிறகு அவன் தன் பாசத்தையோ அன்பையோ, கருணையையோ செலுத்துவதற்குத் தகுதியான மனிதர்கள் யாருமில்லை. துளசியிடம் குத்தலாகவோ ஆத்திரமாகவோ பேசினால் கூட அந்தப் பேச்சின் மறுபுறமாக அவன் மனத்தில் கருணையும் பிரியமும் நிரம்பியிருக்கும். இப்போதோ காரியாலய அநுபவங்களும், ரங்கபாஷ்யம் மறைமுகமாக அவனுக்குச் செய்த கெடுதல்களும் அவனை மிகவும் கடுமையாகவும் காலூன்றி நின்ற தீமையை எதிர்த்துப் போரிடும் சக்தியைப் பெற்ற கொள்கை மறவனாகவும் ஆக்கியிருந்தன. யார் எத்தனை உயரத்திலிருந்து நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று அழுத்திச் சொல்லும் - அடித்துச் சொல்லும் நெஞ்சுரத்தையும், சொல்லுரத்தையும், கொள்கை மறங்களாக போற்றினான் அவன். இந்த மாறுதல்களாலும், இதே சமயத்தில் அவன் பூம்பொழிலில் எழுதியிருந்த ஒரு காரசாரமான தலையங்கத்தினாலும், அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டைச் சென்னையில் நடத்தி உழைக்கும் பத்திரிகையாளர் தலைவர்களாகிய கோஷ் முதலியவர்களை வரவழைத்துப் பத்திரிகையாளர்களை அவமதிக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளுக்கு எதிராகச் சில தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் - நாகசாமி அவனைத் தம் எதிரியாகக் கருதத் தொடங்குகிற சூழ்நிலை படிப்படியாக மிகச் சில வாரங்களிலேயே உருவாகிவிட்டது.

     அந்தச் சமயத்தில் முன்பு தேசிய இயக்க காலத்தில் பல முறை சிறை சென்றவரும் பாரதி பாடல்களுக்குத் தடை இருந்த காலத்திலேயே அதைத் தெருத் தெருவாகப் பாடிச் சென்றவருமாகிய மகாதேவன் என்ற அசல் தியாகி ஒருவர் தம்முடைய சிறிய முதலீட்டை வைத்து 'நேஷனல் டைம்ஸ்' - என்ற ஆங்கிலத் தேசிய வார இதழ் ஒன்றை சென்னையிலிருந்து தொடங்கியிருந்தார். பின்பு நாளடைவில் அது தினசரியாகியது. அந்தரங்க சுத்தியோடும் உண்மைத் தேசிய உணர்வுடனும் அவர் தொடங்கியிருந்த அந்தப் பத்திரிகைக்கு 'நியூஸ் பிரிண்ட்' காகிதம் போதுமான அளவு கிடைக்கவில்லை. காகிதத்தை வாங்கிப் பத்திரிகை அடிக்க அவரிடம் வசதியில்லை. இந்த நிலைமையை ஒரு நாள் சுகுணனிடம் சொல்லி வருந்தினார் தியாகி மகாதேவன். சுகுணனுக்கு இது வியப்பை அளித்தது. சினிமா நட்சத்திரங்களின் படங்களை அச்சிட்டுப் படிக்க ஒன்றுமில்லாமல் பார்க்க மட்டுமே பத்திரிகை நடத்துபவர்களுக்குக் கூட டன் டன்னாக நியூஸ் பிரிண்ட் வழங்கும் அரசாங்கம் தேசிய இலட்சியத்தை முன் வைத்துப் பத்திரிகை நடத்தும் ஒரு நல்லவருக்குச் சாதாரண வசதியைக் கூடத் தராததைக் கண்டு வருந்திய அவன் 'விற்கிற பிரதிகளுக்கு மேல் பல மடங்கு அதிகமாகப் பொய்க் கணக்குக் காட்டி நியூஸ் பிரிண்ட் காகிதத்தை மலிவில் ஏராளமாக வாங்கிப் பெரும்பகுதியான மீதத்தை மிக அதிகமான கள்ள விலைக்கு விற்கிற பலரை வாழவிட்டு இம்மாதிரி நல்லவர்களுக்கு அரசாங்கம் உதவாததைக் கண்டித்துப் பொதுவாக ஒரு தலையங்கம் பூம்பொழிலில் எழுதியதோடு அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் யூனியன் வெளியீடான 'தி வாய்ஸ் ஆஃப் ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்'டிலும், இது பற்றி ஒரு கண்டனக் கடிதம் வெளியிட ஏற்பாடு செய்திருந்தான். இதன் பலனாகக் குறைபாடு உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுத் தியாகி மகாதேவனுக்கு நியூஸ் பிரிண்ட் கிடைக்க வழி பிறந்தது. தாமே இரகசியமாகச் செய்து கொண்டிருக்கிற ஒரு காரியத்தைக் கண்டித்துத் தம் பத்திரிகையிலேயே தலையங்கம் வந்ததை நாகசாமி அவ்வளவாக இரசிக்கவில்லை. மேலும் நாகசாமியை ஒத்த பெரும் பத்திரிகை முதலாளிகளான பண முதலைகள் சிலரும் இந்தத் தலையங்கத்தைக் கண்டித்துக் கூறி நாகசாமியை நெருக்கினார்கள். நாகசாமி ஆத்திரமடைந்தார். உடனே 'மாருதி பப்ளிகேஷன்ஸ்' குரூப் வெளியீடான எந்தப் பத்திரிகையின் ஆசிரியரும் நிர்வாகத்தைக் கலந்து கொள்ளாமல் எதையும் எழுதலாகாதென்ற சுற்றறிக்கை நாகசாமியின் கையெழுத்திட்டு எல்லாருக்கும் வந்தது. கெடுபிடிகள் அதிகமாயின.


     'வீக் எண்ட் எடிடோரியல் கான்ஃபரன்ஸ்' என்ற பேரில் வார இறுதியில் சனிக்கிழமை தவறாமல் ஆசிரியர் குழுவின் கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி அதில் யாரையும் பேசவிடாமல் வாயடைத்து நாகசாமி கெடுபிடிகள் செய்தார். பத்திரிகைகளில் தலையங்கங்கள் எல்லாம் அவர் குரலாகவே வெளிவந்தன. எதைக் கேட்டாலும், "நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்கிறீர்கள்" என்று பதில் கூறப்பட்டது. சுகுணன் தானாக மனம் வெறுத்து அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் போலக் காரியங்கள் எல்லாம் நடந்தன. 'இல் ட்ரீட்மெண்ட்' என்னும் அவமரியாதைப் படுத்தல் மெல்ல மெல்ல வேண்டுமென்றேயும், தற்செயலாய் நடப்பது போலவும் செய்யப்பட்டது. ஒருநாள் காரியாலய உபயோகத்துக்காக இரண்டு ரைட்டிங் பேடும் - ஒரு கலர்ப் பென்சிலும் வேண்டுமென்று வழக்கம் போல ஒரு துண்டுத் தாளில் குறித்துக் கொடுத்து 'விளம்பர நிர்வாகி ஸ்டோர்ஸ் இன்சார்ஜ்' ஆகிய ரங்கபாஷ்யத்துக்கு அனுப்பினான் சுகுணன். ரங்கபாஷ்யம் அந்தத் துண்டுத் தாளை வாங்கி வைத்துக் கொண்டு அதை எடுத்துச் சென்ற சுகுணனின் ஊழியனிடம், "என்னப்பா இது? தினம் தினம் கலர்ப்பென்சிலும், நோட்புக்கும் கேட்கிறாங்க! இதென்ன ஆபீஸா, தர்ம சத்திரமா?... கலர்ப் பென்ஸிலையும் நோட்புக்கையும் வெளியிலே எங்கேயாவது கொண்டு போய் வியாபாரம் பண்றாங்களா என்ன? பெரிய நியூஸன்ஸா இல்ல போச்சு. சரி! சரி அப்புறம் இருந்தாப் பார்த்து அனுப்பறேன்னு போய்ச் சொல்லு..." என்று நாகரிகமில்லாமல் பேசினாராம். அன்றைக்குச் சாயங்காலமே ஏதோ காரியமாக அப்போது தயாராகிக் கொண்டிருந்த அடுத்த வாரத்துப் பூம்பொழிலின் 'மேக்அப் செய்த பாரம்' - ஒன்றை வாங்கி வருமாறு தன் ஆள் ஒருவனைச் சுகுணனிடம் அவன் அறைக்கு அனுப்பியிருந்தார் ரங்கபாஷ்யம்.

     "ஃபாரம் கேட்கிறதுக்கு - இவர் யாருடா? கண்ட கண்ட மடையன்லாம் எடிடோரியலில் தலையிடற மட்டமான ஆபீஸாப் போச்சு இது! ஃபாரத்தை அவங்களே பார்த்துக்குவாங்களாம்னு போய்ச் சொல்லு..." - என்று மிக மிகக் கடுமையாக அந்த ஆளிடம் பதில் சொல்லி அனுப்பிவிட்டான் சுகுணன். வழக்கமாக இப்படிச் சந்தர்ப்பங்களில் தேடி வந்து, 'லெட் அஸ் ஃபர்கெட்" - (நாம் இதை மறந்துவிடுவோம்) சொல்லும் ரங்கபாஷ்யம் அன்று வரவே இல்லை. கலர் பென்ஸிலும், ரைட்டிங் பேடும் மட்டும் மறுநாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்த போது அவன் மேஜைமேல் தயாராகக் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகையில் அன்று அச்சாக வேண்டிய பகுதிக்குரிய விஷயங்களில் சினிமா விமர்சனமும் இருந்தது. சினிமா விமர்சனத்தை வழக்கமாக எழுதுகிறவர் இரண்டு வார லீவில் போயிருந்ததனால் சுகுணனே அந்த வார விமர்சனத்துக்குரிய படத்தைப் பார்ப்பதற்காகப் பகல் காட்சிக்குப் போய் வந்தான். பகல் காட்சி முடிந்து தியேட்டருக்கு அருகிலிருந்த சிற்றுண்டி விடுதியில் காப்பியையும் முடித்துக் கொண்டு அவன் காரியாலயத்துக்குத் திரும்பவும் வந்த போது மாலை 6 மணி ஆகியிருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் வெளி வந்த ஆங்கிலப் படம் ஒன்றிலிருந்த உத்திகளையும், அதே சமயத்தில் சென்னையில் மாம்பலத்தில் ஒரு தியேட்டரில் பகல் காட்சியாக வந்த வங்காளிப் படம் ஒன்றின் கதையையும் திருடி அவற்றைத் தமிழில் எந்த அளவுக்குக் கெடுக்க முடியுமோ அந்த அளவுக்குக் கெடுத்து இந்தப் படத்தை எடுத்துத் தமது சொந்தக் கற்பனை என்றும் டமாரமடித்துக் கொண்டிருந்தார் இதன் தயாரிப்பாளர்.


     "தமிழில் இவ்வளவுதான் கெடுக்க முடியும் போலும்" - என்ற தலைப்புப் போட்டு அதற்கு ஒரு விமர்சனம் எழுதி ஃபோர்மெனிடம் கொடுத்துக் கம்போஸ் செய்ய சொல்லிவிட்டு மாலையில் அறைக்குப் புறப்பட்டு விட்டான் அவன். விமர்சனம் அவனுடைய கடுமையான தாக்குதல்களோடு அடுத்த வாரத்துப் பூம்பொழிலிலும் வெளிவந்து விட்டது.

     பத்திரிகை வெளியான தினத்தன்று காலை பதினொரு மணிக்கு அவன் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் "சார் நீங்க வந்ததும் உடனே வீட்டுக்கு ஃபோன் பண்ணச் சொல்லி ஐயா சொல்லியிருக்கிறார்..." என்றாள் டெலிபோன் ஆப்ரேடர். அறைக்குள் போய் நாகசாமிக்கு டெலிபோன் செய்தான் சுகுணன். நாகசாமி பேசினார். குரல் மிகவும் கடுமையாயிருந்தது.

     "இந்த வாரம் சினிமா ரெவ்யூ எழுதியிருக்கிறது யாரு?..."

     "ஏன்? நான் தான் எழுதினேன் சார்..."

     "ஐ ஆம் வெரி ஸாரி மிஸ்டர் சுகுணன்! எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்கவே விட மாட்டேன். ஸி... வி ஆர்... ரன்னிங் எ பிஸினஸ். பிஸினஸ் பீப்பிளைப் பகைச்சுக்கறாப்பல எழுதிடறது சுலபம். ஆனால் பத்திரிகைக்கு அது எவ்வளவு கெடுதலை உண்டாக்கும்னு உங்களுக்குத் தெரியுமோ?"

     "எனக்கு நியாயம் என்று பட்டதைத்தான் எழுதினேன்."

     "இது நியாயமே இல்லை! இலட்ச இலட்சமாகச் செலவழிச்சுப் படம் எடுத்தவனுக்குப் பெரிய இன்ஜஸ்டிஸ்! வருஷத்துக்கு எழுபத்தையாயிர ரூபாய் அட்வர்டிஸ்மென்ட் இந்தப் 'பார்ட்டி'யிடமிருந்து மட்டும் நமக்கு வருகிறது என்பது உமக்குத் தெரியுமோ! இல்லையோ? வர வர உங்க போக்கு ஒண்ணும் சரியாப்படலை எனக்கு. சர்மாவும் ரங்கபாஷ்யமும் உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கா. அதெல்லாம் நிஜம்னுதான் நான் இப்ப நினைக்க வேண்டியிருக்கு. வேறென்ன செய்யறது?" என்று கொதிப்போடு வினாவிவிட்டு அவன் பதிலையே எதிர் பாராதவராக டெலிபோனை 'டக்' என்று முகத்தில் அறைந்தாற் போல் வைத்து விட்டார் நாகசாமி. சுகுணன் எத்தனையோ விதமாகச் சிந்தித்துப் பார்த்தும் அந்தப் படம் குறையற்ற நல்ல படம் என்று விமர்சனம் எழுத வழியே இருப்பதாகத் தோன்றவில்லை. மனச்சாட்சியோடு தான் தன் கடமையை நிறைவேற்றியிருப்பதாக அவன் உணர்ந்தான். அதனால் நாகசாமியின் கோபத்துக்கு அவன் பயப்படவில்லை. அவருக்குக் கோபமூட்டித் தூண்டி விடுகிறவர்களைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஆனால் அன்றிலிருந்து காரியாலயத்தில் அவனுக்கு மறைமுக அவமரியாதைகள் அதிகமாயின. இரண்டு நாள் கழித்து ஒரு நாள் காலையில் அவன் காரியாலயத்துக்கு வந்து அறைக்கு நுழைந்த போது டெலிபோன் இலாகா ஊழியர்கள் உள்ளே ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்த போது,

     "இந்த லயனை எடுத்துடச் சொல்லி ஆர்டருங்க. இந்த ரூமுக்கு டெலிபோன் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க. ரங்கபாஷ்யம் சாருக்கு இன்னொரு டெலிபோன் இருக்கட்டும்னு இதை அவர் டேபிளுக்கு 'ஷிப்ட்' பண்ணச் சொல்லிட்டாங்க" என்று பதில் கிடைத்தது. கேட்க என்னவோ போலிருந்தாலும் சுகுணன் இதைப் பொருட்படுத்தவில்லை. இதனால் எல்லாம் ஒரு பத்திரிகையாளனின் உள்ளே ஜ்வலித்துக் கொண்டிருக்கிற நெஞ்சக்கனல் அணைந்து விடுமென்று நாகசாமி நினைப்பது தான் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது அவனுக்கு. சௌகரியங்களை இழக்க வைத்து அவமானப்படுத்துவதன் மூலம் அதைச் செய்கிறவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களே ஒழிய அந்தச் சௌகரியங்களை இழக்கும் தீரனை அவர்களால் தாழ்த்திவிட முடியாதென்று நம்பினான அவன். அவனுடைய அறையில் டெலிபோனை அகற்றிக் கொண்டிருத அதே வேளையில் பக்கத்து அறையில் சர்மா டிரான்ஸிஸ்டரை வைத்து உற்சாகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். உள்ளேயிருந்தவர்கள் டெலிபோனை நீக்கி எடுத்துக் கொண்டு வருகிறவரை அவன் வெளியே நிற்க வேண்டியதாயிற்று.


     அவர்கள் போனதும அவன் அறைக்குள் போய் அமர்ந்தான். கம்போஸுக்குக் கொடுக்க வேண்டியவற்றை எடுத்துச் சரிபார்த்துத் திருத்திய பின் - அதை எடுத்துக் கொண்டு போவதற்காகப் ஃபோர்மனை அழைக்கலாமென்ற நினைவில் ஏதோ ஞாபகமறதியாக ஃபோன் இருந்த இடத்தை நாடிய கை ஏமாற்றத்தோடு மீண்டது. பைனைக் கூப்பிட்டுக் கொடுக்கலாமென்று - நீண்ட நாள் உபயோகிக்காமல் உள்ளே டிராயரில் கிடந்த மேஜை மணியை எடுத்து மேஜை மேல் டெலிபோனிருந்த இடத்தில் வைத்துத் தட்டினான். மணி ஓசைக்குப் பதில் இல்லை. எழுந்திருந்து வெளியே வந்து பையனைத் தேடியும் அவன
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:16 pm

[You must be registered and logged in to see this link.]

9

     "நம் மனத்தை நாம் எப்போது அதிகமாகப் பிறருக்கு ஒளித்து விட முயல்கிறோமோ அப்போதுதான் அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது"


     சுகுணன் அந்தக் காரியாலயத்திலிருந்து ஒரு திடமான முடிவுக்கு வந்தவனாக எழுந்திருந்து வெளியேறும் போது கை இடறி மேஜை மேலிருந்து டேபிள் மணி கீழே விழுந்து உடைந்தது. அதை மறுபடி எடுத்து வைக்கக் குனிந்தவன் - அது நன்றாகவே உடைந்து அந்த உடைதலின் காரணமாகச் செவி பொறுக்க முடியாத கட்டை ஓசையில் அது ஒலித்ததைக் கேட்டு - அந்த அபஸ்வரத்தைப் பொறுக்க முடியாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் புறப்பட்டிருந்தான் சுகுணன். வழக்கமாக இப்படிப்பட்ட நாட்களில் குழந்தையையும் கிள்ளி விட்டு விட்டுத் தொட்டிலையும் ஆட்டுகிறவர் போல் - சர்மாவும் உடன் வந்து அநுதாபமாகப் பேசும் பாவனையில் அவன் வாயைக் கிளறுவது உண்டு. அவருடைய காலை மலர் - தினசரிக்கு வெளியூர் எடிஷன் 'பேஜ் க்ளோஸிங்' (தினசரிப் பத்திரிகையில் செய்திகளை ஒழுங்குப்படுத்திப் பிரசுரத்துக்குரியவற்றை முடிவாக நிர்ணயிக்கும் ஒரு நேரம்) ஐந்து மணிக்கு. சுகுணனோ மூன்று மூன்றரை மணிக்கே புறப்பட்டு விட்டான். நாயருடைய 'மெட்ரோபாலிடன் டைம்ஸ்' மூன்றரைக்கே தயாராகிவிடும். அது மாலைத் தினசரியாகையால் மூன்று மணிக்கே 'பேஜ் க்ளோஸிங்' எல்லாம் முடிந்து விடும். அதனால் அவன் புறப்படும் போது உடன் புறப்பட்ட நாயர் காரியாலயத்தில் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான அநுபவங்கள் பற்றி அரைகுறையாகக் காதில் விழுந்ததாகவும் அவற்றிற்காகத் தாம் வருந்துவதாகவும் சுருக்கமாகக் கூறினார். காரியாலய முகப்பிலிருந்து 'கார் பார்க்கிங்' வரைதான் அவனோடு கூட நடந்து வந்தார் நாயர். அப்புறம் அவனையும் காரிலேயே திருவல்லிக்கேணி வரை கொண்டு போய் 'டிராப்' செய்து விட்டுப் போவதாக அவர் கூறியதை அவன் ஏற்கவில்லை. அவருடைய உதவிக்கு நன்றி கூறிவிட்டு நடந்தான் அவன். அப்போது அவனுடைய மனத்தில் பல்லாயிரம் உனர்வுகள் குமுறிக் கொண்டிருந்தன. 'கிரியேடிவ் ரைட்டராக' - அதாவது படைப்பிலக்கிய ஆசிரியனாக இருக்கிற ஓர் 'ஒர்க்கிங் ஜர்னலிஸ்ட்டின்' வாழ்வில் இப்படி எல்லாம் ஏற்படுவது இயல்பு தான் என்று தோன்றியது அவனுக்கு. நாகசாமி ஏதாவது கூட்டத்தில் உளறினால் கூட அதை முதல் பக்கத்தில் எட்டுக்காலத் தலைப்புப் போட்டு வெளியிடுவதன் மூலம் அவருடைய தயவைச் சம்பாதித்துவிடும் காலை மலர் சர்மாவைப் போலவோ, 'பிஸினஸ் லைக்' ஆகக் காலந்தள்ளும் 'டைம்ஸ்' நாயரைப் போலவோ தன்னால் காலந்தள்ள முடியாதது சரி என்றே அவன் சிந்தனை சென்றது. அவர்கள் பத்திரிகையில் வெளியிட வேண்டியவற்றை டெலிபிரிண்டரும் நிருபர்களும் தந்திகளும் மொழி பெயர்ப்புக்களுமே அவர்களுக்குத் தந்து விடுகின்றனர். நானோ எல்லாவற்றையுமே சிந்தித்துச் செய்ய வேண்டியிருக்கிறது. கருவிகளிலிருந்து முடிவை எதிர்பார்க்கிறவனுக்கும் மூளையிலிருந்து முடிவு செய்ய வேண்டியவனுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை இப்போது அவன் தெளிவாக உணர்ந்தான். புறப்படும்போது கீழே விழுந்து உடைந்த மேஜை மணியின் ஞாபகம் வந்தது அவனுக்கு. அந்த மணியின் நாதக்கட்டு அதை உடைத்ததும் எப்படிச் சீர்குலைந்து போய்விட்டதோ அப்படியே இந்தப் பத்திரிகைக் காரியாலய உறவும் இனிச் சீர்குலைந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல் அவனுக்குத் தோன்றியது. தன்மானத்தை மதிக்கத் தெரியாதவர்களை அவன் மதிக்க விரும்பவில்லை.

     'பத்திரிகைத் தொழில் விளக்குச் சுடரைப் போன்றது. எட்ட இருந்து அதைப் பார்க்கிற வரை ஒளிமயமாகவும், கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றும். அருகே நெருங்கினால் சுடும். அந்தச் சுடரிலேயே கலந்து விட்டாலோ விட்டிலைப் போல கருகி விழ வேண்டியது தான்' என்று காலை மலர் சர்மா - அடிக்கடி ஓர் ஆஷாடபூதித் தத்துவத்தைச் சொல்லுவார். பத்திரிகைத் தொழிலுக்குப் புதிதாக எந்த இளைஞர்கள் வருவதும் சர்மாவுக்குப் பிடிக்காததாகையினால் அவர் எப்போதும் இப்படியே கூறுவது வழக்கம்.

     "நீங்கள் இந்தத் தொழிலிலேயே பழந்தின்று கொட்டை போட்டு வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டே இப்படி மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய வெட்கமாயில்லையா உக்ன்களுக்கு?" என்று சிரித்தபடியே அவர் மனத்தில் தைக்கும்படி அவரை அப்போதெல்லாம் எதிர்த்துக் கேட்டிருக்கிறான் சுகுணன். அதற்கு மறுமொழி கூறாமல் மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தபடி சர்மா விஷமச் சிரிப்புச் சிரிப்பார். 'என்னைப் போல் இப்படி இருந்தால் பத்திரிகைத் தொழிலில் வெற்றி பெறலாம் தான்' என்று அவர் குறிப்பாகப் பதில் கூறுவது போன்ற மௌனமாக அதைச் சுகுணன் புரிந்து கொள்வதுண்டு. 'எண்ணத்திற் பிறக்கும் எரியே சக்தி' என்று பாரதி கூறியிருப்பது போல், மனத்திற்குள் சூடு சுரணை உள்ளவர்கள் சர்மாவைப் போல் வாழ முடியாதென்பதையும் அவன் உணர்ந்தான். தன்மானத்தை இழந்து கொண்டு உடலும் மனமும் கருகி வாழ்வதை விடத் தன் மானத்தோடு மனம் கருக விடாமல் தப்புவது நல்லதென்று தோன்றியது அவனுக்கு. மனமும் மானமும் கருகித்தான் சர்மாவைப் போன்றவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ரங்கபாஷ்யம், சர்மா போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகப் பல ஈனச் செயல்களைச் செய்வதை அவன் அறிவான். நாகசாமி, ரங்கபாஷ்யம், காலை மலர் சர்மா ஆகியவர்கள் திடீர் திடீரென்று சந்திர கலசாபிஷேகம், ஸுப்ரபாத தரிசனம், புரட்டாசி சனிக்கிழமை என்று தங்களுக்கு வேண்டிய வேறு பத்திரிகை முதலாளிகள் சிலருடனும், விளம்பர ஏஜென்ஸி நிர்வாகிகளுடனும், நாலைந்து பெரிய பெரிய கார்களில் திருப்பதிக்குப் புறப்பட்டு போவார்கள். சென்னையிலுள்ள பணக்காரர்களுக்குத் திருப்பதி போவதென்பது 'வீக் எண்ட் ரெக்ரியேஷன்' மாதிரி என்று எண்ணியிருந்தான் சுகுணன் - நல்லெண்ணமும் கருணையுமில்லாமல் மனம் கருகிப் போனவர்கள் தெய்வ பக்தியுள்ளவர்களாக நடிக்க முயல்வது ஏன் என்பதை மட்டும் அவனால் விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது. 'தீபாவளி மலர்' போட்டால் கூட முதல் பிரதியை வெங்கடாசலபதி பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டுமென்று எடுத்துக் கொண்டு ஓடுகிறவர்கள் - அந்த மலரை உழைத்துப் பாடுபட்டு மலரச் செய்த உதவியாசிரியனுக்கோ அச்சுத் தொழிலாளிக்கோ நாலணா அதிகம் தர மறுக்கும் அளவு கொடியவர்களாயிருக்கிறார்களே என்று சிந்தித்தால் இத்தனை பக்தியும் இத்தனை கொடுமையும் ஒரே மனத்தில் சேர்ந்து இருக்க முடியுமா என்பது தான் அவன் சந்தேகம். ஒன்று பக்தி பொய்யாயிருக்க வேண்டும் அல்லது மற்றொன்று பொய்யாயிருக்க வேண்டும். மற்றொன்று பொய்யில்லை என்பது உறுதியாகத் தெரிந்த பின்போ பக்திதான் பொய்யாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. ஒரு சமயம் காரியாலயக் கார் டிரைவர் ஒருவன் மூலம் சுகுணனுக்கு இந்தத் திருப்பதி மர்மம் விளங்கியது. அந்தக் கார் டிரைவர் சுகுணனின் எழுத்துக்களினாலே கவரப்பட்டு அவனிடம் பேரன்பு வைத்திருந்தான்.

     "இது வேறே சங்கதிங்க! பக்திக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. 'பெங்களூர் போகிறோம்' - 'திருவனந்தபுரம் போகிறோம்'னு புறப்பட்டா - இவங்க 'அங்கே எதுக்காகப் போறாங்க'ன்னு கேட்கிறவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 'திருப்பதி போறோம்'னு சொன்னா அப்பிடிச் சந்தேகம் எதுவுமே வராதுங்க. அந்தப் புனிதப் பேருக்கு அப்பிடி ஒரு சக்தி ஏற்பட்டுப் போயிடிச்சு. அந்தப் பேரைப் போர்வையாய்ப் போர்த்திக்கிட்டுப் போயி - எங்க போனாலும் இவங்க வழக்கமாப் பண்ணக்கூடிய அட்டூழியங்களைப் பண்ணிட்டு வர்ரத்துக்கு வசதியாயிருக்குங்க. கம்பெனிகளின் விளம்பர நிர்வாகிகளை - அவர்கள் தங்கள் பத்திரிகைக்கே நிறைய விளம்பரங்களைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகத் 'தண்ணீர்' - தெளிச்சுப் போக போக்கியங்களில் குளிப்பாட்டிக் கொண்டேயிருப்பார் நாகசாமி. அந்த விளம்பர நிர்வாகிகளையும், தனக்குப் பயன்படக் கூடிய மத்தவங்களையும் திருப்பதி மாதிரிப் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு அழைத்துப் போய் அவங்களோடு இரண்டு மூன்று நாட்கள் குளிக்காமல், பல் தேய்க்காமல் உட்கார்ந்து சீட்டாடுவதும், குடிப்பதும் வேறு கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதுமாக எல்லாம் நடக்குமுங்க. உங்களுக்குத்தான் தெரியுமே, நம்ப நாகசாமி ஐயாவுக்குப் 'பெங்களூர் ரெப்ரஸன்டிவ்'னு ஒருத்தன் இருக்கானே! நாங்க இங்கிருந்து கார்லே, திருப்பதிக்குப் புறப்படற இதே சமயத்திலே அந்தப் பெங்களூர் ஆளும் அங்கிருந்து ரெண்டு காரிலே திருப்பதிக்குப் புறப்படுவான். ஒரு கார்லே இவங்களுக்கு வேண்டிய 'பாட்டில்கள்'லாம் இருக்கும். இன்னொரு கார்லே. யாரு இருப்பாங்கன்னு நீங்களே தெரிஞ்சிக்கலாமுங்க. யாரோ 'ஒமர் கயாம்'னு ஒரு கவி பாடியிருக்கானுங்களாமுல்ல. 'மதுவும் மங்கையும்'னு அந்தக் கதை தான்! புனித க்ஷேத்திரத்தின் புனிதம் கூட இப்பிடி ஆளுங்க போறதுனாலே குட்டிச்சுவராப் போயிடுமுங்க. இவங்க போற இடம் திருப்பதியாயிருக்கிறதுனாலே இப்படியெல்லாங்கூட நடக்குமுன்னு யாருமே நினைக்க முடியாதுங்க. அட! இதுதான் போகட்டுங்கள். டெல்லிலேருக்காரே மெட்டல் அண்ட் அயர்ன் கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜர் குப்புசாமி - அந்தக் குப்புசாமியோட மைத்துனி பிரசவத்துக்காக இங்கே மெட்ராஸ் வரான்னா - உடனே ஏர்போர்ட்டுக்கோ - சென்ட்ரல் ஸ்டேஷனுக்கோ - நாகசாமி கார் அனுப்புறாரு. மத்தவங்களுக்கு வசதி பண்ணிக் கொடுத்து இங்கே வசதியை அடையுறாங்கங்கறதுதான் சரிங்க..." - என்று அந்தக் கார் டிரைவர் ஒரு முறை சுகுணனிடம் மனம் திறந்து பேசிய போது கூறியிருந்தான். நாகசாமி, சர்மா, ரங்கபாஷ்யம் ஆகியவர்களைப் பற்றி நினைத்த போது இந்த வேளையிலும் அந்த ஞாபகங்களெல்லாம் அவன் மனத்தில் எழுந்தன.

     சுகுணனின் மனத்தோடு இரண்டறக் கலந்து உறைந்து போயிருந்த தன்மானத்துக்கும் சுய மரியாதைக்கும் காரணம் காலஞ்சென்ற அவன் தந்தை அவனை வளர்த்திருந்த சூழ்நிலை தான். அவனுக்கு ஆறு வயதும், சகோதரிக்கு இரண்டு வயதும் நடந்து கொண்டிருந்த போது அதிகம் நினைவு தெரியாத பருவத்திலேயே தாயை இழந்து பின் தந்தையின் கண்காணிப்பில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவனும் அவன் தங்கையும் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை கோவையில் கழித்தார்கள். அப்போது அவர்கள் தந்தை கோயம்புத்தூர் கிழக்குப் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். நாணயத்தையும், ஒழுக்கத்தையும், சுயமரியாதையையும் போற்றுவதில் நெருப்பாயிருந்தவர் அவன் தந்தை. சுகுணனின் தாய் இறந்த பிறகு அவர் இரண்டாவது மணத்தைப் பற்றி நினைக்கவும் இல்லை. தேச சுதந்திரப் போராட்டம் உச்ச நிலையிலிருந்த சமயத்தில் மகாத்மாவின் கொள்கைகள் மேல் ஏற்பட்ட அபிமானத்தாலும் - அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிந்து உத்தியோகம் பார்க்க விரும்பாததாலும் வேலையை உதறி தள்ளிவிட்ட பெருமையும் அவருக்கு இருந்தது. குழந்தைகளையும் அதே நாணயத்தோடும், சுயமரியாதையோடும், கட்டுப்பாட்டோடும் வளர்த்திருந்தார் அவர். கூலி போல் கிடைக்கும் சம்பளத்துக்காகச் சொந்த தேசத்தின் சொந்த சகோதரர்கள் போன்ற தேச பக்தர்களைத் தம் கைகளாலேயே அடித்து நொறுக்க நேர்வதை விரும்பாமல் தான் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறியிருந்தார் அவர். அந்த வேலையை உதறிய பின் சுகுணனையும் அவன் தங்கையையும் கல்லூரிக் கல்வி வரை படிக்கச் செய்து ஆளாக்குவதற்காகப் பூர்வீகச் சொத்து முழுவதையும் அவர் பணயம் வைக்க வேண்டியிருந்தது. அதுவும் போதாமல் - குழந்தைகளைப் படிக்க வைத்து ஆளாக்குவதற்காகக் குமாஸ்தா வேலையிலிருந்து டைப்பிஸ்ட் வேலைவரை கிடைத்த வேலைகளையெல்லாம் பார்த்தும் பொருள் ஈட்டியாக வேண்டிய சிரமமும் அவருடைய முதுமைக் காலம் வரை அவருக்கு இருந்தது. ஆனாலும் அந்தச் சிரமங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தைகளை அதிகத் துன்பம் தெரியாமல் வளர்த்தார் அவர். கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளனாகத் தமிழுலகுக்கு அறிமுகமாகிவிட்ட சுகுணன் படிப்பு முடிந்ததும் சட்டக்கல்லூரியில் சேர வேண்டுமென்று தந்தை விரும்பினார். சுகுணனோ நாகசாமியை நம்பி அவருடைய ஆசை வார்த்தைகளுக்குப் பின்னாலிருந்த போலித் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பத்திரிகைத் தொழிலில் புகுந்தான். அவனுடைய சகோதரி ஆசிரியப் பயிற்சியில் சேர்ந்து தேறிக் கோவைக்கு அருகிலிருந்த சிற்றூர் ஒன்றிலுள்ள பெண்கள் பள்ளியில் ஆசிரியையானாள். மகனும், மகளும் உத்தியோகத்துக்குப் போய்ப் போட்டி போட்டுக் கொண்டு தந்தைக்கு மாதா மாதம் பணம் அனுப்பி அவரைக் கொண்டாடும் ஆசையோடிருக்கையில் அந்த இனிய அநுபவங்களை அடையக் கொடுத்து வைக்காமல் 'என் கடமை முடிந்தது. நான் போய் வருகிறேன்' என்பது போல் போய்விட்டார் அவர். வீட்டுக்கு மருமகனும் மருமகளும் வந்து பார்க்கவேண்டுமென்ற அவருடைய சொந்த ஆசை கூட நிறைவேறுவதற்குள் காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு விட்டான். சுகுணனுக்குள் நிறைந்து கிடந்த தைரியத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் காரணம், அவன் தந்தை அவனை வளர்த்து ஆளாக்கிய முறைதான். இதைச் சுகுணனே தனக்குள் அந்தரங்கமாக நினைவு கூர்வதுண்டு. அவனுடைய தங்கையும், தைரியத்திலும் நம்பிக்கையிலும் தேறியிருந்தாள். அவளுக்கு மணமாகவில்லை. எந்தப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அவள் ஆசிரியையாயிருந்தாளோ அதே பள்ளியைச் சேர்ந்த விடுதிக்கு வார்டனாகவும் இருந்து அங்கேயே வசித்து வந்தாள் அவள். ஓய்வு ஒழிவில்லாத பத்திரிகைக் காரியாலயப் பொறுப்புக்களால் சுகுணன் சகோதரியைச் சந்திக்க அவளுடைய கிராமத்துக்குப் போய்வர முடியாமலிருந்தது. அவன் அவளைப் பார்த்து ஒரு வருடத்திற்கு மேலாகியிருக்கும். போன வருடம் தன்னிடம் படிக்கிற பெண் குழந்தைகளை 'எக்ஸ்கர்ஷன்' அழைத்துக் கொண்டு அவள் சென்னைக்கு வந்திருந்தாள். அப்போது அவளாக வந்து சுகுணனைச் சந்தித்திருந்தாள். அதன் பின் அவள் வேலை பார்த்து வந்த கிராமத்துக்கு ஒருமுறை போய் வர வேண்டும் என்றும் அவன் பலமுறை திட்டமிட்டும் அப்படிப் போய்வர முடியாமல் தட்டிக் கொண்டே இருந்தது. தங்கையைப் பார்த்துவர ஆவலிருந்தும் அவகாசமில்லாதிருந்தது.

     இப்போது பூம்பொழில் காரியாலய வேலையை விட்டு விடலாமென்ற தீர்மானத்துக்கு வந்ததும் - விட்டு விடுதலையாகிச் சிட்டுக் குருவியைப் போல் - வெளியேறலாமென்ற அந்த மனநிலையில் - உடனே தங்கையைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. இன்றிரவு அல்லது நாளைக் காலையில் ஓய்வாக உட்கார்ந்து நாகசாமிக்கு ஒரு கடிதம் எழுதி அதோடு தன் இராஜினாமாவையும் அனுப்பி விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். காரியாலயத்திலிருந்து வெளியேறி மெயின் ரோடுக்கு வந்து 'பஸ்' பிடித்துத் திருவல்லிக்கேணியில் அறைக்கு வந்து சேருகிற வரை - இப்படிப் பல நினைவுகள் ஓடின. அவன் அறைக்குப் போய்ச் சேர்ந்த போது அந்தப் பாலக்காட்டுப் பெண் கமலம் அங்கே அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

     "ஊரிலிருந்து கொஞ்சம் பணம் மணியார்டர் வந்தது. உங்களுக்கு நான் தரவேண்டிய இருநூறு ரூபாயில் நூறு இப்போது கொடுத்து விடுகிறேன் அண்ணா" - என்று சிரித்துக் கொண்டே ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொடுத்தாள் கமலம். அப்போதிருந்த மனநிலையில் அந்தப் பெண் 'அண்ணா' என்று கனிவாக அழைத்த பாசமும் உறவும் அவனுக்கு மிகவும் இதமாயிருந்தது. அநுபவங்களால் ஏற்படும் கசப்புகள் உறவுகளால் ஏற்படும் உரிமைகளால் மாறுவதும் வாழ்விலுள்ள ஒரு நன்மையாகத் தோன்றியது. சில நாட்களுக்கு முன் காரியாலயத்துக்கு தேடி வந்து அவள் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு போனதைத் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவே அவன் மறந்திருந்தான். இவ்வளவு விரைவில் அந்த மாணவி தன்னிடம் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வருவாள் என்பதையும் அவன் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய மனத்தின் உள் வேதனைகளை மறைத்துக் கொண்டு அவளிடம் பேசலானான் அவன். ஆயினும் எப்படியோ அந்தப் பெண் அவனுடைய முகத்திலிருந்தே அதைக் கண்டுபிடித்து விட்டாள் போலிருக்கிறது.


     "ஏன் அண்ணா? என்னவோ போலிருக்கிறீர்கள். உடம்புக்குச் சௌகரியமில்லையா?" என்றே அவனைக் கேட்டு விட்டாள் அவள். 'நம் மனத்தை எப்போது நாம் அதிகமாக ஒளிக்க முயலுகிறோமோ அப்போது தான் அது மற்றவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது' என்று தோன்றியது சுகுணனுக்கு.

     "அதெல்லாம் ஒன்றுமில்லை. வேலை அதிகம். அலைச்சலும் கொஞ்சம் அதிகம்" என்று சுகுணன் அவளுக்குப் பதில் சொல்லித் தப்பித்துக் கொண்டான். கண்ணப்பா லாட்ஜ் பையனிடம் சொல்லி காபி வரவழைத்துக் கமலத்துக்குக் கொடுத்தான் அவன்.

     "இங்கே மட்டும் ஸ்டவ்வும் பாத்திரமும் மற்ற வசதிகளும் இருந்ததோ நானே ஒரு நொடியில் உங்களுக்கு அருமையான காபி தயார் செய்து கொடுத்து விடுவேன் அண்ணா" என்றாள் கமலம். சமூகத்தின் எந்த மூலையிலிருந்தாவது உண்மையை எதிர்த்து உக்கிரமாகத் திறக்கும் நெற்றிக் கண்ணின் வெப்ப மிகுதியை இப்படி ஒரு சிறிய கருணையும் பாசமும் கூடக் குளிர்க்க முடியுமென்று அவன் எதிர்பார்த்திருந்தது கிடையாது. கமலம் அவனிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் ஒரு வாரங் கழித்து மறுபடி வந்து பார்ப்பதாகக் கூறி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.

     "இங்கே அறையிலேயே வந்து பாருங்கள்! பூம்பொழில் காரியாலயத்தில் வேண்டாம்" - என்று பொதுவாக அவளிடம் கூறி அனுப்பினான் அவன். கமலம் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்ற போது மாலை ஐந்தரை மணிக்கு மேலாகியிருந்தது. திருவல்லிக்கேணி பெரிய தெரு என்ற குறுகலான தெருவிலே ஜனவெள்ளம் அலை அலையாகப் பெருகத் தொடங்கிவிட்டது. தெரு முனைகளில் பிளாட்பாரத்தில் மல்லிகையும் சாதிப்பூவுமாகப் பூக்கூடைகளும் கடைகளும் பழைய புத்தகம் பத்திரிகைப் பரபரப்புகளும் முளைத்துவிட்டன. மாலை வேளை என்கிற நகர உற்சவம் ஆரம்பமாகி விட்டது. மனத்தில் சுமையும், சிந்தனைகளும், கனத்துவிட்ட அந்த விநாடியில் இத்தனை லட்சம் மக்கள் நிரம்பிய இந்தச் சென்னையில் - இந்த மனச் சுமையையும் கனத்தையும் - கேட்டுத் தோள் மாற்றிக் கொள்ள முடிந்த ஓர் உண்மை நண்பனை உடனே பார்க்க வேண்டும் போல் தவிப்பாயிருந்தது சுகுணனுக்கு. பாலைவனத்தில் தண்ணீர்த் தாகம் எடுப்பது போல் இப்படிச் சமயத்தில் நல்ல மனிதனைத் தேடிச் சந்திக்க வேண்டுமென்ற தாகமும் ஏற்பட்டு விடுகிறது. மனத்தோடு கலக்க முடிந்தவராக - அந்த மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள முடிந்தவராக யாரையேனும் உடனே அந்தக் கணமே பறந்து போய்ப் பார்த்து விட வேண்டும் போலிருந்தது அவனுக்கு. துளசியின் நினைவு ஒரு கணம் எழுந்து உள்ளேயே கோபமாக மாறி அடங்கி விட்டது. ஒரு காலத்தில் அவள் தான் அவனுடைய மனத்தின் சுமைகளைத் தோள் மாற்றிக் கொண்டாள். அந்த உண்மையில் இனிமையும் அநுராகமும் கூட இருந்தன. இப்போது அவை இல்லை. அந்த இடத்தில் விரக்தியும் கோபமும் மீதமிருந்தன. இப்போது துளசியைப் போல் மனத்தின் சுமையைத் தோள் மாற்றிக் கொள்ள அவனுக்கு யாருமில்லை. ஆனால் ஓர் உண்மை நண்பனை எண்ணித் தேடியது அவன் மனம். ஏதோ நினைத்துக் கொண்டே வந்த போது கொள்கைகளிலும், சிந்தனைகளிலும், தன்னோடு கருத்தொற்றுமையும் நட்பும் உள்ளவரான 'நேஷனல் டைம்ஸ்' மகாதேவனை எண்ணினான் சுகுணன். அவருடைய 'நேஷனல் டைம்ஸ்' காலை பதிப்பாக வெளியாகும் ஆங்கிலத் தினசரியாகையினால் இரவு பத்து மணி வரை காரியாலயத்தில் இருப்பார் அவர். நேஷனல் டைம்ஸ் காரியாலயம் தம்பு செட்டித் தெருவில் ஒரு பழைய கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்தது. அதே கட்டிடத்தின் கீழ்ப் பகுதியில் அச்சகமும் இருந்தது. 

     'கண்ணப்பா லாட்ஜ்' பையனைக் கூப்பிட்டு ஃபோனிலிருந்த பூட்டைத் திறக்கச் சொல்லி ஃபோன் பேசும் கட்டணமாக அவனிடம் சில்லறையையும் எண்ணிக் கொடுத்த பின் நேஷனல் டைம்ஸுக்கு ஃபோன் செய்தான் சுகுணன். மகாதேவன் காரியாலயத்தில் இருந்தார். உடனே அவனையும் வரச்சொல்லி அன்போடு அழைத்தார். குளித்து உடைமாற்றிக் கொண்டு புறப்படும் போதே இரவுச் சாப்பாட்டுக்கு மெஸ்ஸுக்கு வருவதாக உத்தேசமில்லை அவனுக்கு. தம்புச் செட்டித் தெருவிலேயே மகாதேவனையும் அழைத்துக் கொண்டு போய் எங்காவது சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தான். மகாதேவனிடம் மனம் விட்டுப் பேசினால் நினைவுச் சுமை தோள் மாறும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. மகாதேவன் வெறும் பத்திரிகையாளர் மட்டுமில்லை. சுதந்திரமான பத்திரிகையாளனின் இலட்சியத்துக்கு அவரே ஒரு பதினைந்து வருட கால இயக்கமாகத் திகழந்து வந்தார். அவருடைய பத்திரிகைக்குச் சந்தா கட்டிய விவசாயிகளும், நெசவாளர்களும், தொழிலாளர்களும் ஒரு மூட்டை சோளமாகவும், ஒரு பேல் கைத்தறித் துணிகளாகவும், சில மணங்கு பருத்திகளாகவும், வெல்லமாகவும் கூடக் கட்டியிருந்தார்கள். ஆங்கிலத் தினசரியானாலும் அவருடைய சுயமரியாதையையும், தன்மானத்தையும் கௌரவிப்பதற்காக அந்தப் பத்திரிகையைச் சிலர் பிடிவாதமாக வாங்கினார்கள். தாய்மொழி மட்டுமே அறிந்தவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் அந்தத் தினசரியை வாங்கிக் கொடுத்துப் படிக்கச் சொல்லி மொழி பெயர்த்துக் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான தினப்பத்திரிகைகளில் அப்போது உதவியாசிரியர்களாயிருந்த பலர் ஒரு காலத்தில் மகாதேவனிடம் உதவியாசிரியர்களாயிருந்து தொழில் பழகியவர்கள். அவர்களெல்லாம் உத்தியோகத்துக்கு விட்டுக் கொடுத்து பணவசதியினால் பெரியவர்களாகியும் அவர் மட்டும் வசதிகளை விட்டுக் கொடுத்துத் தன்னம்பிக்கையைப் போற்றுவதற்காக 'நேஷனல் டைம்ஸ்' - என்ற இலட்சிய இயக்கத்தில் தானே முழுமையாக இறங்கியிருந்தார்.

     சுகுணன் அவருடைய காரியாலயத்துக்குப் போய்ச் சேர்ந்த போது டெலிபிரிண்டரில் வந்திருந்த தந்தி ஒன்றைத் தயாரித்துத் தலைப்புக் கொடுத்து உள்ளூர்ப் பதிப்புக்காகச் செய்தியாக்கிக் கொண்டிருந்தார் அவர். அந்தக் காரியத்தில் சிறிது நேரம் அவருக்கு உதவி செய்தான் சுகுணன். பின்பு பொதுவாக இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சினிடையே, "பூம்பொழிலை விட்டு நான் விலகிவிடப் போகிறேன் சார்" என்று சுகுணன் அவரிடம் கூற நேர்ந்தது. அவர் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு வினவினார்.

     "ஏன்? என்ன காரணம்?"

     "காரணம் ஒன்றில்லை. எத்தனையோ இருக்கிறது. எதைக் கேட்டாலும், 'நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம். நீங்கள் வேலை செய்ய வேண்டும்' - என்று புத்தியைச் சம்பளத்துக்கு அடகு பிடிப்பது போன்ற தொனியில் பேசுகிறார் நாகசாமி. 'ரீடிங் மேட்டருக்கு' (படிக்கிற விஷயங்கள்) நடுவில் விளம்பரங்கள் போட வேண்டும் என்பதற்குப் பதில் - 'விளம்பரங்களுக்கு நல்ல இடம் போக மீதி உள்ள பக்கங்களில் எதையாவது போட்டுக் கொண்டு தொலையுங்கள்' - என்பது போல் பேசுகிறார்கள். அதைப் பற்றி விவாதித்தால் 'கதை கட்டுரை முதலிய 'ரீடிங் மேட்டர்களுக்கு' நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள்' - என்று குதர்க்கம் செய்கிறார்கள்."

     "தெருச்சுவராயிருந்தால் முழுக்க முழுக்க விளம்பரமே ஒட்டி விடலாம். பத்திரிகையாச்சே? நடுநடுவே படிக்கவும் ஏதாவது இருந்தாலல்லவா தெருச்சுவருக்குப் பத்திரிகைக்கும் கவுரமான கண்ணியமான வித்தியாசம் ஒன்று இருக்க முடியும்?"

     "நீங்கள் சொல்வது தான் சரி என்று எனக்குப் படுகிறது சார்! ஆனால் அவர்கள் அப்படி ஒரு வித்தியாசத்தையும் உணரவில்லையே? சுவரில் ஒட்டுகிற விளம்பரங்களை அப்படி ஒட்டாமல் 'பின்' அடித்துப் புத்தகமாகப் பைண்டு செய்தால் போதுமென்று நினைக்கிறார்களே?"

     "அப்படியானால் சிரமம் தான்! குடிசைத் தொழில் போல் குத்து விளக்குப் போல் - பத்திரிகையாளர்களாகிய உங்கள் மனத்திலும் என் மனத்திலும் சுடர் விடுகிறதே ஒரு - மூல அக்கினி - அந்த அக்கினிதான் - இந்தத் தொழிலின் பத்தினித் தன்மையை வியாபாரிகளிடமிருந்து என்றும் தனியே பிரித்துக் காக்க முடியும் சுகுணன்!"

     மகாதேவனிடம் காரியாலய நிகழ்ச்சிகளை எல்லாம் மனம் திறந்து கூறினான் சுகுணன். எல்லாவற்றையும் ஆதரவாகவும் அநுதாபத்தோடும் பொறுமையாகக் கேட்டார் அவர்.

     "இந்த தேசத்தில் உள்ள பொதுவான கஷ்டம் இது! ஒவ்வொரு நல்ல தொழிலும் அது வளர்ந்து பலன் தருகிற நிலையில் பணம் பண்ணும் ஆசை மட்டுமே உள்ள சில வெறும் வியாபாரிகளிடம் போய்ச் சிக்கிவிடுகிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டார் தியாகி மகாதேவன்.

     "பத்திரிகைக்கு முதல் போடுகிறவர்கள் நாளடைவில் வெறும் 'புரோக்கர்கள்' போல் மாறி விடுகிறார்கள். பம்பாயிலிருக்கிற ஒரு கம்பெனி அட்வர்டிஸ்மெண்ட் மானேஜரின் மனைவிக்குக் காஞ்சிபுரம் பட்டுப்புடவை பிடிக்கிறதென்று தெரிந்தால் இங்கிருந்து விமானத்தில் பட்டுப்புடவையை வாங்கிக் கொடுத்து அனுப்பி அவரைச் சரிக் கட்டுவதிலுள்ள சிரத்தை - பத்திரிகையின் மற்ற விஷயங்களில் இவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது. பத்திரிகைகளை படிக்கிறவர்களும் விளம்பரதாரர்களும் பத்திரிகைகளை நாடும் போது அவற்றில் வெளி வருகிற விஷயங்களின் தரத்தை நிறுத்துப் பார்த்து நாடினால் தான் இனியாவது நல்ல சூழ்நிலை உருவாகும்."


     "இதற்கு அவ்வளவு விரைவாக விடிவுகாலம் பிறந்து விடாது சுகுணன்! நீண்ட நாளாகும். இப்போது உங்கள் வரை நீங்கள் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். நீங்கள் கூறிய விவரங்களிலிருந்து இனிமேல் 'மாருதி பப்ளிகேஷன்ஸ் குருப் கன்ஸர்னில்' நீங்கள் இருக்க முடியாதென்று தான் எனக்கும் தோன்றுகிறது. எத்தனையோ வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும் ஒரு நல்ல பத்திரிகையாளனிடம் மீதமிருக்க வேண்டியது அவனுடைய 'சொந்த அகங்காரம் தான்' என்று இந்தத் துறையில் அநுபவம் மிக்க ஒரு பெரியவர் சொல்வதுண்டு. இந்த 'அகங்காரத்தை'ப் பத்திரிகைக்காரன் எந்த நிலையிலும் எந்த விலையிலும் விற்று விடக்கூடாது... ஆனால் ஒரு விஷயம்! இதில் நீங்கள் எப்படி முடிவு செய்யப் போகிறீர்களென்றுதான் எனக்குப் புரியவில்லை. இப்போது நீங்கள் பூம்பொழிலில் எழுதி வருகிற 'தொடர்கதை'யை என்ன செய்யப் போகிறீர்கள்? அதத அரைகுறையாக நிறுத்திவிடக் கூடாது. ஆர்வத்தோடு படிக்கிற நல்ல வாசகர்களை அதிருப்திப்படுத்துவது நன்றாயிராது."

     "அதைப்பற்றிக் கவலையில்லை சார்! இயற்கையாகவே அது வருகிற வாரம் முடிந்து விடுகிறது. நான் அங்கிருந்து விலகி விட நினைக்கும் முன்பே திட்டமிட்டிருந்த முடிவு அது. தொடங்கி ஒரு வருஷம் ஆகிறது. தானாகவே கதை முடிகிற நேரம் தான்..."

     "அப்படியானால் உங்கள் முடிவு சரிதான்; மேலே என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் 'நேஷனல் டைம்ஸி'ன் கதவுகள் எப்போதும் திறந்திருக்கின்றன. ஆனால் இங்கே என்னிடம் ஒரு கஷ்டம் உண்டு. என்னிடமிருக்கும் குறைந்த சௌகரியங்களையும் நிறைந்த கஷ்டங்களையும் சேர்ந்தே நீங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கும். இல்லையானால் யாராவது தெரிந்தவர்களிடம் சொல்லி பி.டி.ஐ., நேபன் எங்காவது இடமிருக்கிறதா என்று விசாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் பல பெரிய பெரிய பத்திரிகை முதலாளிகளிடம் இருந்து அவர்கள் நம்மை ஆட்டிப் படைக்கிற வேதனை பொறுக்க முடியாமல் தான் நானே சுதந்திரப் பறவையானேன். அதனால் என் நண்பர்களுக்கு இப்படி நிலையில் 'உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்' - என்பது போல் ஒரு போதும் நான் அறிவுரை கூறுவதே இல்லை. பத்திரிகையாளனின் ஒரே ஆயுதம் நியாயமான தைரியம். நிர்வாகத்துக்குப் பயந்து கொண்டே அந்த ஆயுதத்தை அவன் பிரயோகிக்க முடியாதென்பதுதான் என் கருத்து..."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:18 pm

[You must be registered and logged in to see this link.]

10

     வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லை.

     "பத்திரிகையாளன் என்ற தகுதிக்குக் காரணமான துணிவு எதுவோ அது தொழில் பயத்தில் அவிந்து போகும். எனவே சொகுசு நாடும் 'தொழில் பயந்தாங்கொள்ளிகள்' யாராயிருந்தாலும் அவர்கள் தைரியமேயின்றிப் பத்திரிகைத் தொழில் என்ற போர்க்களத்துக்கு வரக்கூடாது" என்றார் மகாதேவன்.

     "அந்தத் தைரியத்துக்கு 'நக்கீர தைரியம்' என்று பெயர் சூட்டலாமென்று எனக்குத் தோன்றுகிறது சார்! ஏனென்றால் சமூக வாழ்வில் நியாயமான தைரியத்தோடு எழுந்து நின்று பொய்யையோ, குற்றத்தையோ சாடுகிற ஒவ்வொருவனையும் வெதும்புவதற்கு எந்த மூலையிலிருந்து எப்படிப்பட்ட கொடிய நெற்றிக் கண்கள் திறக்கும் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாமலிருக்கிறது."


     "பழைய நக்கீரன் நெற்றிக் கண்ணில் வெதும்பி விட்டான். ஆனால் புதிய நக்கீரர்களாகிய நம்மைப் போன்ற பத்திரிகையாளர்களோ எத்தனை நெற்றிக் கண் எவ்வளவு உயரத்திலிருந்து திறந்தாலும் சூடுபட்டுக் கொண்டே அநீதியைச் சுட்டெரிக்க வேண்டும்! இங்கே டைம்ஸில் சேர்ந்து என்னோடு எனது கொஞ்ச சௌகரியங்களையும் - அதிக கஷ்டங்களையும் பங்கு கொள்ள நீங்களும் தயாராயிருக்கிறீர்களா?" - என்று கடைசியில் வெளிப்படையாகவே கேட்டார் மகாதேவன். 

     "முதலில் என் சகோதரியைப் பார்க்க கோயம்புத்தூர் போய்வர வேண்டுமென்று இருக்கிறேன். திரும்பி வந்ததும் மறுபடி உங்களை சந்திக்கிறேன் சார்" - என்றான் சுகுணன். அவரும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. இருவரும் தம்புச் செட்டித் தெருவிலேயே இருந்த ஒரு வடக்கத்திக் கடையில் சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டு விட்டு வந்து மறுபடியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் அதிகமாகி விட்டது. பஸ் போக்குவரவு கூட நின்றிருந்தது. மகாதேவனுக்கு வீடு 'ஐஸ் ஹவுஸ்' பக்கம் இருந்தது.

     "நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அவரைக் கேட்டான் சுகுணன்.

     "என்னைப் பற்றிக் கவலையில்லை. வீட்டுக்குப் போனாலும் போவேன். இங்கேயே 'பழைய பார்சல்' கட்டு ஒன்றைத் தலைக்கு எடுத்து வைத்துக் கொண்டு படுத்தாலும் படுத்து விடுவேன். ஒன்று வேண்டுமானால் செய்யலாம். நீங்களும் திருவல்லிக்கேணிக்கே போக வேண்டியிருப்பதனால் இரண்டு பேருமாகப் பேசிக் கொண்டே நடந்து போய்விடலாம்" - என்றார் மகாதேவன். சுகுணனும் அதற்குச் சம்மதித்தான். மகாதேவனிடம் அவனுக்குப் பிடித்தமான குணங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் சௌகரியங்களுக்குத் தன்னை வளைத்துக் கொள்ளாமல் தன்னுடைய அசௌகரியங்களுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வளைத்துக் கொண்டவர் அவர். பஸ்ஸில், ரிக்ஷாவில், சமயங்களில் நடையில், அவசியமானபோது டாக்ஸியில், என்று போலி ஸ்டேட்டஸ் எதையும் கற்பித்துக் கொண்டு சீரழியாமல் முடிந்தபடி வாழ்கிறவர் அவர். அவருடைய இந்த எளிமையை அவன் மிகவும் விரும்பினான். தங்களைப் பலர் பார்த்துத் தாங்கள் நடந்து போவதைப் பரிதாபமாக நோக்குவது போலவும் - எனவே தாங்கள் மண்ணை மிதித்து நடக்கவே கூடாது என்பது போலவும் - போலியாக கற்பித்துக் கொண்ட 'ஸ்டேட்டஸ்' பாவனையினால் சென்னைப் பட்டினத்துப் பத்திரிகையாளர் சிலர் வசதியற்ற நிலையிலும் கடன் வாங்கிக் கார்களிலே பறப்பதைப் பார்த்திருந்தவன் அவன். அதே ஊரில் மகாதேவனைப் போல் எளிமை கொண்டாடும் சில பத்திரிகையுலக மகாத்மாக்களும் இருப்பது அவனைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

     அவர்களிருவரும் கோட்டை ஸ்டேஷன் பாலத்தில் ஏறி மவுண்ட் ரோட்டுக்காக ஐலண்ட் கிரவுண்ட் நோக்கித் திரும்பிய போது உச்சி நிலா ஒளியில் எதிரே சர் தாமஸ் மன்றோவின் குதிரை வாயு வேகத்தில் பாய்ந்து வருவது போல் அவசரமாக ஒரு பிரமையை உண்டாக்கியது. ஒரு நிமிஷம் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று கவனித்த போது மன்றோவின் குதிரையும் நின்று விட்டது. நிலா ஒளியில் விசாலமான சாலையில் நட்ட நடுவே அந்தக் குதிரைச் சிலை மிகமிக வசீகரமாகத் தோற்றமளித்தது. அவன் அந்தச் சிலையைக் கூர்ந்து கவனிப்பதையும் அவன் மனத்தில் ஓடும் சிந்தனையையும் அநுமானித்தவராக மகாதேவன் அவனிடம் கூறலானார்.

     பதினைந்து வருடங்களாக இந்தச் சிலைதான் என் வாழ்க்கையின் குருவாக இருந்து வருகிறது சுகுணன்! எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ விதமான மனநிலைகளில் இந்தச் சிலையை நான் பார்க்க நேர்ந்திருக்கிறது. நள்ளிரவில், நடுப்பகலில், வெயில் விரியாத வைகறையில், முன்னிரவில் - என்று எத்தனையோ சமயங்களில் இக்குதிரை வீரனைப் பார்த்திருக்கிறேன். கைநிறையப் பணத்தோடும், கையில் பணமே இல்லாத பேய் வறுமையோடும், வேறு வழியில்லாத காரணத்தால் தம்புச் செட்டித் தெருவிலிருந்து இரவு பத்தரை மணிக்குமேல் இந்தப் பாதையாகத் திருவல்லிக்கேணிக்கு நடந்து போகும் போது - எத்தனையோ முறை இந்தக் குதிரை வீரனின் சிலையிலிருந்து என் வாழ்க்கைத் தத்துவங்களைத் தேடியிருக்கிறேன் நான். நாம் நடந்தால் இந்தக் குதிரையும் அந்தரத்தில் உயிர் பெற்று வேகமாக நகர்வது போலிருக்கும். நாம் நின்றாலோ இதுவும் சிலையாகிவிடும். கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஓடியாடி அலைந்து கொண்டிருக்கும் போது - இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாகமாக ஓடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கிற போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஓடுகிற சிலை இது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான். பட்டினத்தின் வாழ்க்கைத் தத்துவ இரகசியம் - ஞான சூசனை - இந்தச் சிலையில் மறைந்திருப்பதாக எனக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனமான அங்கீகாரம் உண்டு சுகுணன்" - என்றார் மகாதேவன். அவர் கூறியபடியே பார்க்கிறவர் நின்றால் சிலையும் நிற்பதையும் பார்க்கிறவர் நடந்தால் சிலையும் நகர்வது போல் தோன்றுவதையும் சுகுணன் அப்போது கூர்ந்து உணர்ந்தான்.

     "இந்தச் சிலையை அமைத்த சிற்பியைவிடப் பட்டினத்து வாழ்வுக்கு இங்கிதமான ஞானம் சொல்லிக் கொடுப்பவன் வேறு யாரும் இல்லை" என்றார் மகாதேவன்.

     "உண்மைதான்!" என்று வழி நெட்டுயிர்த்தான் சுகுணன். மீண்டும் நடந்தார்கள் அவர்கள். பைகிராப்ட்ஸ் ரோடு மூலையில் அவர்கள் வேறு வேறு திசைகளில் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தார்கள். அறைக்குப் படியேறிய சுகுணனைப் படியிலேயே ஓடி வந்து எதிர்கொண்ட 'லாட்ஜ்' பையன்,

     "இன்னிக்குப் பார்த்து எங்க போயிட்டீங்க... சார்? உங்களுக்கு 'டிரங்க்கால்' வந்திருந்தது. ரெண்டு தரம் கூப்பிட்டுட்டாங்க. 'பெண்டிங்'லே வச்சிருக்கேன். வந்து பேசுங்க..." - என்றான். பையன் கூறியதைக் கேட்டுச் சுகுணன் எந்த விதமான பரபரப்பும் அடையவில்லை. தனக்கு எந்த ஊரிலிருந்தும், யாரிடமிருந்தும், 'டிரங்க்கால்' வந்திருக்க முடியுமென்பதை அவன் நம்பவில்லை. வேறு யாருக்காவது வந்த 'டிரங்க்காலை'த் தவறுதலாகத் தெரிவிக்கிறார்களோ என்றுதான் முதலில் எண்ணினான். 'கண்ணப்பா லாட்ஜ்' - பையனோ, "உங்களுக்குத் தான் சார்?... சந்தேகமே இல்லை" - என்று நிச்சயமாகச் சொன்னான். உடனே சுகுணன் டெலிபோனை எடுத்து டயல் செய்து 'டிரங்க் - என்குயரீஸை'க் கூப்பிட்டு விசாரித்தான். விசாரித்த பின்போ பையன் கூறியதுதான் உண்மை என்று தெரிந்தது. டில்லியிலிருந்து அவனுக்கு 'டிரங்க்கால்' வந்திருப்பதாகவும், மறுபடி இன்னும் சிறிது நேரத்தில் கூப்பிடுவதாகவும் - வெளியூர் டெலிபோன்கள் பற்றிய விசாரணைப் பிரிவிலிருந்த பெண் தெரிவித்தாள்.

     'டில்லியிலிருந்து துளசியைத் தவிர வேறு யார் தன்னைக் கூப்பிட முடியும்!' என்று சிந்தித்த போது 'ஒரு வேளை - பத்திரிகையாளர் வேஜ் போர்டு (சம்பள விகிதம்) கூட்ட சம்பந்தமாகவோ, பெடரேஷன் கூட்டத்திற்காகவோ 'கோஷ்' டெல்லி செல்ல நேர்ந்து அங்கிருந்து கூப்பிடுகிறாரோ' என்றும் தோன்றியது அவனுக்கு. டில்லியிலுள்ள இரண்டொரு பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவும் அவனுள் எழுந்ததாயினும், தொலைபேசியில் கூப்பிடுகிற அளவு தனக்கும் அவர்களுக்கும் இடையே எந்த அவசரமும் அவசியமும் இல்லையென்றும் தோன்றியது. சிந்தனையில் இப்படிப் பலவிதமாகக் குழம்பிய பின் 'டில்லியிலிருந்து கூப்பிடும் கட்டுப்படுத்த முடியாத இந்த ஆவல் துளசியினுடையதாகத்தான் இருக்க முடியுமென்று' அவனே தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தான். 'டெலிபோன்' விஷயத்தில் நாகசாமியைப் போலவே அவர் மகளும் இருப்பதை எண்ணி உள்ளூரச் சிரிப்பு வந்தது அவனுக்கு. நாகசாமி ஒரு டெலிபோன் வெறியர். அதாவது குறைந்த பட்சம் நாள் ஒன்றிற்கு முப்பது 'டிரங்க்கால்'களாவது போட்டுப் பேசுவார். ஒரு காரியமாவது 'டிரங்க்காலில்' பேசி முடிக்க வேண்டிய அவசர காரியமாக இராது. தபால் கார்டில் எழுதிப் போட்டாலும் நடந்து விடக்கூடிய காரியத்துக்குக் கூட 'டிரங்க்கால்' தான் அவருக்கு. நாலு கூடை மாவடு, ஊறுகாய்க்காக அனுப்பி வைக்க வேண்டுமென்று - மாயவரத்திலுள்ள ஒரு நண்பருக்குத் திடீரென்று அர்ஜெண்டாக ஃபோன் செய்வார். இரண்டு டஜன் காபூல் மாதுளை வாங்கி இரவு விமானத்தில் கொடுத்தனுப்ப வேண்டுமென்று டெல்லிக்கு யாருக்காவது 'டிரங்க்கால்' செய்வார். அதே சமயத்தில் 'மாருதி குரூப் வெளியீடு'களைச் சேர்ந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் சர்க்குலேஷன் நிர்வாகி, சப்ஸ்கிரிப்ஷன் நிர்வாகி, முதலியவர்களுக்குச் 'சிக்கனமாக ஆபீஸ் நடத்த வேண்டும்' - என்று உபதேசம் செய்யும் போதோ, 'கூடியவரை எல்லாம் போஸ்ட் கார்டிலேயே எழுதுங்கள். தபால் செலவு நிறைய ஆகக்கூடாது' - என்று அடித்துச் சொல்லுவார். அவரைப் பற்றி நினைத்து இப்படி அவன் உள்ளூரச் சிரித்துக் கொண்டிருந்த போது டெலிபோன் மணி அடிக்கலாயிற்று. டெலிபோனை எடுத்தான் அவன். டெலிபோன் இலாகா பெண்மணி விவரம் சொல்லிய பின் எதிர்ப்புறமிருந்து துளசியின் குரல்தான் மங்கலாக ஒலித்தது.


     "கம்பெனி வேலையாக அவர் ஜெய்ப்பூர் போயிருக்கிறார். நான் தான் வீட்டில் தனியாக இருக்கேன். பொழுதே போகவில்லை. சாயங்காலம் அப்பாவுக்கு 'டிரங்க்கால்' போட்டுப் பேசினேன். எப்போது யாரிடம் எதைப் பற்றிப் பேசினாலும் என் ஞாபகம் உங்களைச் சுற்றித்தான் இருக்கு. என்னாலே உங்களையோ, உங்களைப் பற்றிய நினைவுகளையோ மறக்க முடியலே. அப்பாவிடம் பேசற போதும் உங்களைப் பற்றிப் பொதுவாக விசாரித்தேன். நான் விசாரித்த போது அவர் உங்களைப் பற்றி அவ்வளவு சுமுகமாகப் பதில் சொல்லலை. 'நாளுக்கு நாள் எங்களுக்குள்ளே மனஸ்தாபம் அதிகமாகிக் கொண்டு வருகிறது அம்மா! சுகுணன் இனிமேல் அதிக நாள் இங்கே இருப்பாரென்று சொல்ல முடியாது' என்று வேறு சொல்லி என் கலக்கத்தை அதிகமாக்கி விட்டார். அப்பாவிடம் பேசி முடித்துப் ஃபோனை கீழே வைத்த வினாடியிலிருந்து எனக்கு ஒரே கவலையாக இருந்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் எப்படியும் அறைக்கு வந்து விடுவீர்கள் என்று எண்ணிக் கூப்பிட்டேன். முதலில் இல்லை என்றார்கள். பொறுமையோடு டெலிபோனடியில் காத்திருந்தேன். இப்போதுதான் கிடைத்தீர்கள். அதுசரி இரவு இவ்வளவு நேரம் வரை எங்கே போயிருந்தீர்கள்?"

     "காரியமிருந்தது, வெளியே போயிருந்தேன்."

     "அப்பாவுக்கும், உங்களுக்கும் ஆபீஸில் அப்படி என்ன மனஸ்தாபம்."

     "ஒரு முதலாளிக்கும் - தொழிலாளிக்கும் இடையில் எத்தனையோ மனஸ்தாபங்கள் இருக்கும்..."

     "நீங்கள் தொழிலாளியா... என்ன?"

     "எல்லாரையும் உன்னுடைய அப்பா அப்படித்தான் நடத்துகிறார். அவர் சம்பளம் கொடுக்கிறார். அதனால் நாங்கள் வேலை செய்கிறோம்! சுதந்திரமாக அங்கே நாங்கள் வேலை செய்து விடக்கூடாது!"

     சுகுணன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது டெலிபோன் இலாகா பெண்மணி குறுக்கிட்டு 'முதல் மூன்று நிமிடங்கள்' முடிந்து விட்டதாக அறிவித்தாள். அந்த அறிவிப்புக் குரலை அடுத்து அவசரமாகவும் பரபரப்பாகவும் "தயவு செய்து இன்னும் மூன்று நிமிஷம் 'எக்ஸ்டெண்ட்' (விரிவு) செய்யுங்கள்" - என்று வேண்டிக்கொள்ளும் துளசியின் குரலும் டெலிபோனில் கேட்டது.

     "அப்பா முன்கோபக்காரர்தான். ஆனால் உங்களை நினைத்தால்தான் எனக்குப் பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது..."

     "எனக்காக நான் கவலைப்படுவதையே விரும்பாதவன் நான். நீ கவலைப்படுவது அநாவசியம். ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவது தவிர்க்க முடியாத - அதே சமயத்தில் சொல்லாகவும் வெளிப்படாத வெறும் நெஞ்சின் சாட்சி. வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லே..."

     "இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லையே? பல விஷயங்களில் நெஞ்சுக்கு நெஞ்சு சாட்சியாக மட்டுமே நின்றிருக்கிறோம் நாம்."

     "இருக்கலாம்! ஆனால், இன்று அதை எண்ணி என்ன ஆகப்போகிறது துளசி?"

     "ஆயிரம் மைல்களுக்கும் அப்பாலிருந்து உங்களையே நினைத்து கவலையால் உருகிக் கூப்பிடுகிறேன் நான். பேச்சினால் என்னைச் சித்ரவதை செய்கிறீர்கள் நீங்கள்..."

     அவளுடைய இந்தச் சொற்கள் அழுகை தோய்ந்த குரலில் ஒலித்ததைக் கேட்ட போது சுகுணனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது. 

     "நான் இலக்கிய சேவை செய்ய ஆசைப்படுகிறேன். உன் தந்தையோ வெறும் காகித வியாபாரம் செய்ய ஆசைப்படுகிறார். கேட்பார் பேச்சுக்கு வசப்படுகிற கெட்ட குணமும் அவரிடம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் எனக்கும் அவருக்கும் இனி எப்படி ஒத்து வரும்?"

     "உங்களுடைய சக்தி வாய்ந்த எழுத்துக்களாலும் சிந்தனை வளம் மிகுந்த நாவல்களாலும் பூம்பொழிலுக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தேடிக் கொடுத்த நீங்கள் அதை விட்டு விட்டு வெளியேறலாமா?"

     "வேறு வழி இல்லை! வெறும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுச் சம்பளம் பெறும் கூலியாக இன்னும் சிறிது காலம் நான் அங்கே தாமதித்தாலும் எந்த எழுத்தின் சக்தியை நீ இப்போது ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து புகழ்கிறாயோ அந்த எழுத்தின் சக்தியையே நான் இழக்க நேரிட்டு விடும் போலிருக்கிறது."

     "எதையும் தீர யோசித்துச் செய்யுங்கள்..."

     "இதைச் செய்த பிறகு இனி நாளை வேறென்ன செய்யலாம் என்பதைத்தான் இனிமேல் தீர யோசிக்க வேண்டுமே ஒழிய - இதில் தீரவோ யோசிக்கவோ - இனி ஒன்றுமில்லை..."

     "நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது! என்னைக் கவலைப்பட்டு அழிய விடாதீர்கள்..."

     மறுபடியும் மூன்று நிமிடம் முடியப் போவதற்கான அடையாள ஒலி டெலிபோனில் குறுக்கிட்டது. பரபரப்போடு மேலும் மூன்று நிமிடம் எக்ஸ்டெண்ட் செய்ய வேண்டித் துளசி கெஞ்சினாள். பின்னால் நிறையக் 'கால்'கள் இருப்பதால் மேலும் நீடிப்பது சாத்தியமில்லை என்று கண்டிப்பாகக் கூறி லயனைக் 'கட்' செய்து விட்டாள் டெலிபோன் இலாகா பெண்மணி. மனத்தினுள் ஏதோ ஓர் அரை குறை உணர்வோடும் - ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தவிக்கும் ஓர் அன்பு உள்ளத்துக்காக உள்ளூர வேதனையோடு டெலிபோனை வைத்தான் சுகுணன். இந்தத் தகவலை இவ்வளவு விரைவாகத் துளசி அறிவதற்கு ஒரு வாய்ப்பு நேரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தன் மேல் அவளுக்கிருக்கும் அக்கறையினாலும் ஆர்வத்தினாலும் மறுபடியும் டெல்லியிலிருந்து ஓர் அவசர 'டிரங்க்கால்' புக் செய்து பாதியில் நின்ற பேச்சைத் தொடங்குவாளோ என்ற பிரமையில் சிறிது நேரம் ஒரு காரியமும் ஓடாமல் டெலிபோனடியிலேயே உட்கார்ந்திருந்தான் சுகுணன். மறுபடி அவன் எழுந்து அறைக்குள் சென்றபோது மணி பன்னிரண்டரைக்கு மேல் ஆகியிருந்தது. அப்போதிருந்த மனநிலையில் உறக்கமும் அவனை அணுகவில்லை. உடம்பு சோர்ந்தால் வருகிற தூக்கம் மனம் விழித்திருந்தால் வரமாட்டேனென்கிறதே! நாகசாமிக்கு அலுவலக முறைப்படி சுருக்கமாக ஓர் இராஜிநாமாக் கடிதமும் தனிப்பட்ட முறையில் விரிவானதொரு கடிதமும் எழுதினான் அவன். தன்னுடைய தொடர் கதையின் கடைசிப் பகுதியையும் தன்னிடம் அரை குறையாயிருந்த அலுவலகத்து வேலைகளையும் - இரண்டொரு தினங்களில் முடித்து அனுப்பி விடுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவருக்கு எழுதியிருந்தான் அவன். காரியாலய ஊழியர்களும் ஃபோர்மென் நாயுடு சிலரும் தன்னுடைய வெளியேற்றத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கற்பனை செய்வதில் சிறிது நேரம் கழிந்தது. இப்படி அவன் தானாகவே இராஜினாமா செய்யத் தூண்டுவதற்கான காரியங்களை எல்லாம் செய்திருந்த நாகசாமியும் ரங்கபாஷ்யமும் இதை வரவேற்று மகிழ்வார்கள் என்றே அவனால் நினைக்க முடிந்தது. 

     அதற்குப் பின் அன்றிரவு துளசி மறுபடி டில்லியிலிருந்து கூப்பிடவேயில்லை. ஒன்று டெல்லி லயனில் அதிக 'கால்'களின் பிரஷர் இருந்து அது அவளுக்குக் கிடைக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது அவளே மறுபடி கூப்பிடுகிற எண்ணத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். சுகுணனும் நீண்ட நேரம் விழித்திருந்த பின் அதிகாலையில் சோர்ந்து உறங்கிப் போனான். எழுந்திருக்கும் போது விடிந்து அதிக நேரமாகியிருந்தது. குளித்து விட்டுச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நேரே தபாலாபீசுக்குப் போய் நாகசாமிக்கு எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் முதல் வேலையாகப் பதிவுத் தபாலில் அனுப்பினான். இரண்டு மூன்று நாட்களில் அங்கு புறப்பட்டு வருவதாகச் சகோதரிக்கு ஒரு முன் கடிதம் எழுதினான். மறுபடியும் அறைக்கு வந்ததும் தன் கடமையை விரைந்து முடித்தாக வேண்டுமே என்ற உணர்வுடன் ஏற்கெனவே பெரும் பகுதி எழுதியும் குறிப்பு அமைத்தும் வைத்திருந்த பூம்பொழில் தொடர் நாவலின் இறுதிப் பகுதியை உருவாக்குவதில் முனைந்தான். மாலையில் தம்புச் செட்டித் தெருவிலிருந்த நேஷனல் டைம்ஸ் காரியாலயத்துக்குச் செல்ல நினைத்திருந்ததனால் - பகலிலேயே பூம்பொழில் வேலையை முடித்து விட எண்ணியிருந்தான் அவன். பகல் சாப்பாட்டுக்குக் கூட அவன் மெஸ்ஸிற்கோ வேறு எங்குமே போகவில்லை. கண்ணப்பா லாட்ஜ் பையனை 'பிளாஸ்க்' நிறையக் காபி வாங்கி வரச் செய்து அருகில் வைத்துக் கொண்டு எழுத்து வேலையில் மூழ்கினான். வேலை முடியும் போது ஐந்தரை மணி. அதையும் சரிபார்த்துப் பதிவுத் தபாலில் பூம்பொழிலுக்கு அனுப்பிவிட்டு மவுண்ட் ரோடிலிருந்தே அவன் தம்புச் செட்டித் தெருவுக்குப் புறப்படும் போது ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. பஸ்ஸில் போகும் போது விரைவாகப் பார்வையில் பட்டு மறைந்த சர். தாமஸ் மன்றோவின் சிலை - முதல் நாள் இரவு நண்பர் மகாதேவன் கூறிய தத்துவத்தை நினைவு கூறச் செய்தது. அன்றிரவும் மகாதேவனும் அவனும் நெடுநேரம் 'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். செய்திகளுக்குத் தலைப்புப் போடுவது, மொழி பெயர்ப்பு, புரூஃப் திருத்தல் - ஆகிய சில உதவிகளை அவருக்குச் செய்தான் சுகுணன். அன்று மகாதேவனும், அவனும் 'டைம்ஸ்' காரியாலயத்திலேயே இரவில் தங்கிவிட்டனர். 'டைம்ஸின்' ஸப்ளிமெண்ட் ஒன்று வெளிவர இருந்ததனால் தொடர்ந்து சில இரவுகள் வேலை இருந்தது. மகாதேவன் காரியாலயத்திலேயே தங்கினார். சுகுணனும் சில நாட்கள் அவருக்கு உதவியாக அங்கு அதிக நேரம் செலவழித்தான். அதில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் மிகுதியாயிருந்தன. அவன் நாகசாமிக்குக் கடிதங்களை அனுப்பிய மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ அவனுடைய இராஜிநாமாவை எதிர்பார்த்தே தயாராக எல்லாம் கணக்குப் பார்த்து வைத்திருந்தது போல் 'செக்' இணைத்து - இராஜிநாமா ஒப்புதல் கடிதத்தோடு பதில் அனுப்பியிருந்தார் நாகசாமி. பாண்டுரங்கனார் - பூம்பொழிலின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுவிட்டதாக அன்று மாலையே வேறொருவர் மூலம் கேள்விப்பட்டான் சுகுணன். நாகசாமிக்குப் 'பல் பத்திரிகைக் காவலர்' பட்டமளிப்பு விழா நடத்தியது போன்ற காரியங்களில் முன்பு பாண்டுரங்கனார் ஈடுபட்டது வீண்போகவில்லை என்று இப்பொழுது சுகுணனுக்குத் தோன்றியது. இந்தச் சில நாட்களில் மகாதேவனோடு பழகி உடனிருந்து பார்த்ததில் அவருடைய அநுபவமும், பத்திரிகைத்துறை ஞானமும், தன்னம்பிக்கையும், சிந்தனைச் சுதந்திரமும் அவனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவரிடமிருந்த அறிவுச் செருக்கும் அவனுக்குப் பிடித்திருந்தது. சுகுணனிடம் பேசிய போது அடிக்கடி,

     'ஒருமை மகளிரே போலப் பெருமையும்
     தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' -


என்ற திருக்குறளைக் கூறி இந்தக் குறளில் கூறப்படுகிறதை ஒத்த பெருமை தான் பத்திரிகையாளனின் பெருமையும் என்று வற்புறுத்துவார் மகாதேவன். பத்திரிகையாளனின் பெருமிதத்தைக் கற்புடன் ஒப்பிடுவார் அவர். இந்த நாட்டில் பத்திரிகை தொழில் வெறும் வியாபாரமாகாமல் தேசபக்தியும் - சேவை மனப்பான்மையும் நிறைந்த இயக்கமாக வேண்டுமானால் மகாதேவனைப் போன்ற பத்திரிகையாளர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டுமென்று சுகுணன் நினைத்தான். அவன் பூம்பொழில் வேலையை விட்ட பின் ஒருநாள் அதிகாலையில் ஃபோர்மென் நாயுடு அவனை அறையில் வந்து பார்த்துவிட்டுப் போனார். அவன் பூம்பொழிலிலிருந்து வெளியேற நேர்ந்தது பற்றியும் வருந்தினார். காலை மலர் சர்மாவின் மேற்பார்வையோடு பைந்தமிழ் நாவலர் பா.பாண்டுரங்கனார் பூம்பொழிலின் புதிய ஆசிரியராக வந்து - கந்தபுராணத் தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்திருப்பது பற்றியும் ஃபோர்மென் நாயுடு தெரிவித்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு காரியாலயத்தின் அச்சக நண்பர்களைப் பற்றிக் கனிவுடன் விசாரித்த பின் நாயுடுவிற்கு விடை கொடுத்தான் சுகுணன். அந்தச் சில நாட்களில் மகாதேவனோடு பழகியதில் அவருடைய பத்திரிகையாகிய இலட்சியப் போராட்டத்தை நடத்துவதற்காக - அவர் படும் துன்பங்களையும் சுகுணன் கண்டிருந்தான். 

     ஹார்பரில் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து கிடக்கும். பணம் கட்டிக் 'கிளியர்' செய்ய முடியாததால் உள்ளேயே குமையும் ஊமைத் துன்பத்தோடு - அதை மற்றவர்களிடம் சொல்லி அவர்களையும் வேதனைப் படுத்தாமல் - தமக்குள்ளேயே வைத்து வேதனைப்படும் சுபாவமுள்ளவர் மகாதேவன். பூம்பொழில் காரியாலயத்திலிருந்து வெளியேறிய போது தனக்குக் கிடைத்த தொகையையும், வழக்கமாகத் தன்னுடைய நாவல்களை வெளியிடும் ஒரு பதிப்பாளரிடமிருந்து வாங்கிய தொகையுமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் வரை அவருக்கு உதவ முன் வந்தான் சுகுணன். மகாதேவன் முதலில் தயங்கினார் - மறுத்தார். தனக்குக் கஷ்டமே இல்லை என்பது போல் சுகுணனிடம் சிரித்துப் பேசி மழுப்பினார். சுகுணன் மிகவும் வற்புறுத்திய பின் "சிநேகிதர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பெரும்பாலும் சிநேகிதத்தைப் பணயம் வைக்கிற காரியமாக முடிந்து விடுகிறது. அதனால் தான், பயப்படுகிறேன்" என்றார். அதற்கும் சுகுணன் சரியானபடி பதில் கூறினான்:

     "நீங்களும் அப்படிப்பட்ட சிநேகிதரில்லை; நானும் அப்படிப்பட்ட சிரமம் தரும் சிநேகிதனாக மாறிவிடப் போவதில்லை. ஆகவே தயங்காமல் நான் தருவதை வாங்கிக் கொள்ளுங்கள். இதை வாங்கிக் கொள்ளத் தயங்குகிறவரை என்னை உண்மை நண்பனாக நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தான் கருதுவேன்."

     "இதற்கு அப்படி அர்த்தமில்லை சுகுணன்! எனக்கு வரும் சிரமங்களுக்கு என் நண்பர்களை ஒவ்வொருவராக நான் பணயம் வைக்கக் கூடாது என்று தான் பார்த்தேன். 'பாங்கர்'களாகவும் வர்த்தகர்களாகவுமுள்ள பெரும் பத்திரிகைகளின் முதலாளிகளோடு கருத்து மாறுபட்டு வெளியேறி நான் சொந்தமாகப் பத்திரிகை நடத்துவதால் - வர்த்தகர்கள் என்னைப் பழிவாங்குவதற்காக விளம்பர ஆதரவுகளை தருவதில்லை. பொதுமக்களோ இந்த நாட்டில் பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அவர்களைப் புதியதற்கும் நல்லதற்கும் பழக்கப்படுத்த அதிக முயற்சி வேண்டியதாயிருக்கிறது. 'கன்ஸர்வேடிவ்' மனப்பான்மை தழும்பேறிப் போன தேசத்தில் எண்ணங்களை மாற்றவே பெரும் புரட்சி தேவைப்படுகிறது. நான் சிரமப்படுவதற்கு அதுதான் காரணம். இவ்வளவிற்கும் என் பத்திரிகையை எனக்காகவே பலர் பிடிவாதமாக வாங்குகிறார்கள். பணமாகக் கொடுக்க முடியாதவர்கள் தானிய மூட்டைகளாகவும், பண்டங்களாகவும் கூடச் சந்தாக்கட்டி என் பத்திரிகையை வாங்குகிறார்கள். ஆனால் வாங்குகிற இந்தச் சிறுபான்மையினரை விட வாங்காமல் என்னை தவிக்கவிடும் பெரும்பான்மையோரை நினைத்துத் தான் நான் ஏங்குகிறேன் சுகுணன்..."

     "உங்கள் ஏக்கம் நாளடைவில் தீர்ந்துவிடும் சார்! உங்களைப் பிடிவாதமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறினீர்களே, அந்தச் சிறுபான்மையினரில் ஒருவனாக - என்னையும் எண்ணி இதை ஏற்றுக் கொள்ளுங்கள். இது இப்போது உங்கள் காரியத்துக்கு பயன்படட்டும். மறுபடி எனக்குத் தேவையான போது இதை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" - என்று சொல்லி அந்தத் தொகையை அவரிடம் கொடுத்தான் சுகுணன். சமூகத்தில் எந்தெந்த வடிவில் குற்றங்களும், தீமைகளும், பிழைகளும் மலிந்திருக்கின்றனவோ - அந்தந்தக் குற்றத்தை அங்கங்கே எதிர்த்து நின்று, இதில் குற்றமிருக்கிறது - என்று சொல்ல எழுந்திருக்கும் யாரோ ஒருவனை எத்தனை நெற்றிக் கண்கள் திறந்து வெதுப்புகின்றன என்று எண்ணிப் பார்க்கவே துன்பமாயிருந்தது சுகுணனுக்கு. இப்படி நெற்றிக் கண்களால் வெதும்பி மனம் நமத்துச் சாம்பலாகிவிடாமல் துணிந்து வெளியேறியவர் என்ற முறையில் 'நேஷனல் டைம்ஸ்' மகாதேவனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகாதேவனுடைய முயற்சிக்கு கிடைக்கிற ஆதரவும் வெற்றியும் இந்த நாட்டின் சுதந்திர சிந்தனையாளனுக்குக் கிடைக்கிற முதல் ஆதரவும்... முதல் வெற்றியுமாக அமையுமென்று அவன் நம்பினான். பூம்பொழிலை விட்ட பின்பு 'நேஷனல் டைம்ஸின்' ஸப்ளிமெண்ட் வேலைகளிலும் மகாதேவனோடு உதவியாயிருப்பதிலும் அவனுடைய நேரத்தில் பெரும் பகுதி கழிந்து கொண்டிருந்ததனால் அவன் தன்னுடைய அறையில் தங்குவதே அபூர்வமாயிருந்தது. அப்படியே அவன் அறைக்குப் போனாலும் பதினொரு மணி - பன்னிரண்டு மணி என்று அகாலத்தில் தான் போக முடிந்தது. மறுபடி அதிகாலையில் எழுந்து நீராடி விட்டுத் தம்புச் செட்டித் தெருவுக்குப் போக வேண்டியிருந்ததனால் டெல்லியிலிருந்து மீண்டும் துளசி கூப்பிட்டாளா - இல்லையா - என்ற தகவலைக்கூட அவன் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அப்படி இடைவிடாமல் அவருக்காக உழைப்பதில் ஒருவிதமான ஆத்ம திருப்தியையும் நிறைவையும் உணர்ந்தான் சுகுணன்.

     இப்படிச் சுறுசுறுப்பாக அவனுடைய நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் அதிசயமும் ஆனால் எதிர்பார்த்திருந்ததுமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை நேரத்தில் சிறிதும் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத தொலைவிலிருந்து துளசி நேரே அவனைச் சந்திப்பதற்காக அறை வாசலில் வந்து இறங்கினாள். ஒரு டாக்ஸியிலிருந்து டில்லி நாகரிகம் அவள் கையில் பிணைத்திருந்த 'வானிடி பாக்'குடன் கீழிறங்கிய துளசியைப் பார்த்தவுடன் 'அவள் எப்போது டில்லியிலிருந்து வந்தாள்? ஏன் டாக்ஸியில் வந்து இறங்குகிறாள்? ஒரு வேளை நேரே விமானத்திலிருந்தே இங்கு வருகிறாளா?' என்றெல்லாம் சுகுணனின் மனதில் கேள்விகள் எழுந்தன. அவள் டாக்ஸியிலிரு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:21 pm

[You must be registered and logged in to see this link.]

11

     உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் அவ்வப்போது விசாரிக்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.


     'வெட்டு ஒன்று துண்டு இரண்டாக' எதையும் பட்டுக் கத்தரித்தாற் போல எழுதத் தெரிந்த சுகுணன் அப்போது துளசியிடம் அப்படிப் பேசித் தவிர்க்க முடியாமல் தவித்தான். உணர்ச்சிகளை எதிர்கொள்ளும் போது எல்லா மனிதர்களும் பேதைகளாவதிலிருந்து தப்ப முடியாது போல் தோன்றியது. ஆசைப்படுவதற்கும் அருவருப்படைவதற்கும் சொந்த மனங்கள் மட்டும் இல்லாவிட்டால், யார் யாரோடு வாழவேண்டுமென்று மனிதர்கள் நிர்ணயிக்கிறார்களோ அப்படியே வாழ்ந்து விடலாம். தான் மனத்தில் நிர்ணயித்தபடி வாழமுடியாது போய் - 'இன்னொருவர் நிர்ணயித்தபடி வாழ்கிறோம்' என்ற நினைப்பே, வைத்தியர்கள் மருந்து கொடுத்துத் தீர்க்க முடியாத ஒரு நோய் தான். மனத்தின் அந்தரங்கமான புண்களை ஆற்ற முடியாத வரை மனிதன் கண்டுபிடித்திருக்கும் எல்லா மருந்துகளுக்கும் ஒரு தோல்வியும் உண்டு போலிருக்கிறது என்று எண்ணினான் சுகுணன். துளசியைச் சமாதானப்படுத்தி அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு அன்று அந்தக் காலை வேளையில் மிகவும் சிரமப்பட்டான் அவன். துளசியின் பதற்றத்தையும், அவள் டில்லியிலிருந்து பறந்து ஓடி வந்திருக்கும் நிலையையும், அவளை வீட்டுக்கு அனுப்பிய பின் தனக்குள் நிதானமாகச் சிந்தித்த போது, காதல் தோல்விகளின் போது நிச்சயமாக அநுதாபத்திற்குரியவர்கள் பெண்களே என்று தோன்றியது அவனுக்கு. அப்படிச் சிந்தித்த போது துளசியின் மேல் அதுவரை ஏற்பட்டிராத எல்லை வரை அவனுள் பரிவு பெருகி வளர்ந்தது. ஒரு பெண்ணின் மேல் சத்தியமாகப் பொங்குகிற இந்தப் பரிவிற்குத்தான் காதல் என்று உலகில் பெயர் சொல்லுகிறார்கள் போலிருக்கிறது என்பதையும் சுகுணன் அப்போது உணர்ந்தான். துளசியின் தாபங்களையும், வேதனைகளையும் எண்ண எண்ண அவள் தன்னை மறக்கின்ற வரை - தன்னுடைய நினைவுகளே அவளுள் எழ முடியாதபடி தான் எங்காவது கண் காணாத தேசத்திற்கு ஓடிப்போய் இருந்துவிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. போய்ச் சேர்ந்த இடத்தில் மன நிறைவோடு வாழவும் முடியாமல், பின் தங்கிய நினைவுகளையும் காதல் சத்தியங்களையும் மறக்கவும் முடியாமல் அவள் படும் வேதனைகளைப் பார்த்த பின்பு அவளைக் குற்றவாளியாகவும் அவனால் எண்ண முடியவில்லை. தந்தையின் முன் கோபத்திற்குப் பயந்து திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிற சமயத்தில் தன் மனத்திலிருப்பதைத் திறந்து காண்பிக்க முடியாத அபிப்பிராயக் கோழைத்தனத்திற்கு அவள் ஆளாகிவிட்டதாகவே நினைக்க முடிந்தது. சூழ்நிலைக்குப் பயந்து - பொது அபவாதம் வந்து விடுமோ என்று அஞ்சித் தீரர்களும், இலட்சியவாதிகளுமாகிய ஆண்களே, பல சமயங்களில் சமூக மேடை என்ற தளத்தில் நாகரிகமாக நின்று மனத்தை மூடிக் கொண்டு விடுகிற அளவு அபிப்பிராயக் கோழைத்தனமுள்ள நாட்டிலே, பேதைமை நிறைந்த பெண்ணொருத்தி நூலிழையளவில் தன் அந்தரங்கத்தை வெளிகாட்டிக் கொள்ள முடியாதவளாகி விட்டாள் என்பதை - அவன் உள்ளூர மன்னிக்கவும் இப்போது தயாராயிருந்தான். பல நாவல்களில் - பல சிறுகதைகளில் - பல விதமான கதாபாத்திரங்களின் மனச்சித்திரங்களை வரைந்து வரைந்து அநுபவப்பட்ட அவனுடைய சிந்தனை இந்தப் பிழையை 'இது நேரக் கூடியது தான்' - என்று அங்கீகரிக்கத் துணிந்தது. ஆனால் சிந்தனை அங்கீகரிப்பதை உணர்வு அங்கீகரிக்க மறுத்த சமயங்களில் துளசியின் மேல் அவன் கோபம் கொண்டு கொதிக்கவே நேர்ந்திருந்தது. சிந்தனையையும், உணர்வையும் இணைக்கிற அளவு விவேகானந்தராகவோ, காந்தியாகவோ அவன் ஆகியிருக்கவுமில்லை. மனிதனின் இயற்கைக் குணங்களாக இரத்தத்தோடு இழைகிற மான ஈனங்கள், கோபதாபங்கள் எல்லாம் உணர்வுகளில் இருக்கும் போது சிந்தனை மட்டும் தனித்துச் செயல்பட வழியில்லாதவனாகவே இருந்தான் அவன். துளசி சென்ற சிறிது நேரத்திற்குப் பின், காபி கொண்டு வந்த கிளாஸ்களை எடுக்க வந்த லாட்ஜ் பையன், "இன்னா சார்! அந்தம்மா கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாங்களா?" - என்று அர்த்தமும், சம்பந்தமும் இல்லாமல் ஒரு நிமிஷம் நின்று சிரித்துக் கொண்டே வினாவிய போது, "ஒண்ணுமில்லே! கிளாஸை எடுத்துக் கொண்டு போ..." என்று மட்டுமே சுகுணனால் பதில் கூற முடிந்தது. பெண்ணின் மேல் அல்லது பெண்மை என்ற வசீகர சக்தியின் மேல் தான் இந்த உலகத்துக்கு எத்தனை கருணை? எத்தனை பாசம்? எத்தனை மயக்கம்? என்று உலகை வியந்தும் அப்போது ஒரு சிந்தனை தோன்றியது அவனுள். விமான நிலையத்திலிருந்து நேரே டாக்ஸியில் தன் அறைக்கு அவள் வந்த பரபரப்பு, அழகின் சோகமாக எதிர் நின்று அழுவது போன்ற குரலில் மன்றாடியது, எல்லாமாகச் சேர்ந்து கண்ணப்பா லாட்ஜ் பையனைக் கூடப் பாதித்திருப்பதை உணர்ந்தான் அவன். சம்பந்தமில்லாமல் யாராவது கேட்கும் இப்படிக் கேள்விக் கூட, ஒரு நினைப்பைப் படைக்கிற சக்தி பெறுவது வியப்பாகத்தானிருந்தது. துளசி மனம் மாறும்படி கண் காணாமல் நீண்ட காலத்துக்கு வேறெங்காவது போய்விட வேண்டும் போல ஒரு விரக்தியும் அப்போது அவனுள்ளே எழுந்தது. 

     இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வெளியாகிற தமிழ்த் தினசரி ஒன்றின் இலக்கியப் பகுதியான வாராந்திர வெளியீட்டைக் கவனித்துக் கொள்ள ஓர் ஆசிரியர் தேவை என்று முன்பு ஒருமுறை சம்பந்தப்பட்டவர்கள் தன்னை வந்து அழைத்தது இப்போது ஞாபகம் வந்தது அவனுக்கு. அதே போல மலேயாவிலுள்ள கோலாலம்பூரிலிருந்தும் ஓர் அழைப்பு இருந்தது. முன்பு இந்த அழைப்புக்களை ஏற்றுக் கொண்டு அங்கெல்லாம் போய் அமர்ந்து விடாமல் நினைப்பிலும் நேரிலும் ஒரு மயக்கமாக ஓர் இனிய சொப்பனமாக நின்று தடுத்த புன்னகை துளசியுடையதுதான். இப்போது 'அங்கெல்லாம் கூடப் போகலாமே' - என்று துணிகிற அளவுக்கு அவனுள் வேதனையூட்டக் கூடியதும் இன்று புன்னகையில்லாத துளசியுடைய முகம் தான். 'அன்பு செய்கிற பெண் மனிதனின் வாழ்க்கையை எப்படி ஆட்டிப்படைக்கிறாள்' - என்று நிதானமாக ஒரு விநாடி நினைத்த போது அவனுள் உணர்வு அந்த நினைவை ஏற்றது. அறிவு அந்த நினைவை விவாதித்தது. இந்தச் சிந்தனைகள் குழம்பும் மனநிலையோடு அவன் வெளியே புறப்பட்டான். பி.ஆர்.அன். சன்ஸ் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறித் தம்புச் செட்டித் தெருவிற்குப் போகுமுன் சென்ட்ரலில் இறங்கிக் கோயம்புத்தூருக்கு டிக்கட் வாங்கச் சென்ற போது டிக்கட் 'கௌண்டர்' க்யூவில் எதிர்பாராத விதமாக உறவினர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டபின், 

     "என்னப்பா? எங்களுக்கெல்லாம் எப்போது சாப்பாடு போடப் போகிறாய்?" என்று உலகியல் வழக்கப்படி திருமணத்தைப் பற்றி விசாரித்தார் அவர். உலகத்தில் மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அதிகமாக இல்லையானாலும் விசாரிக்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்களென்று தோன்றியது. இந்த விசாரணை உலக வழக்கில் ஒரு பொது நாகரிக வழக்கம்.

     "முதலில் தங்கைக்கு அல்லவா நடக்க வேண்டும்?" - என்று சுகுணன் கூறியதை அவர் ஏற்பது போல் தோன்றவில்லை.

     "நீதான் மூத்தவன். உனக்குத் தானே முன்னால் ஆக வேண்டும்? உன் தங்கையை நீயும் உன் மனைவியுமாக மனையில் இருந்தல்லவா தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்?" - என்று விவாதித்தார் விடாகண்டரான அந்த உறவினர். சந்தித்த இடத்தில் விசாரித்த சம்பிரதாய விசாரணையை அவர் சம்பிரதாயமாக முடித்துக் கொண்டு போகாமல் வளர்த்துவதாகச் சலிப்படைந்த சுகுணன் "கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது. மறுபடி சந்திக்கும் போது நிறையப் பேசலாமே?" என்று புன்னகையும் கை கூப்புதலுமாக விடைபெறுகிற விதத்தில் தப்ப முயன்றான். அந்த உறவினர் அப்போதும் விடவில்லை. "எங்காவது வெளியூருக்குப் பயணமோ? பத்திரிகைக் காரியமா? சொந்தக் காரியமா?" என்று அப்போது அவன் டிக்கட் வாங்க வந்த பயணத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். ஒரு விநாடி அவருக்கு மறுமொழி கூறத் தயங்கிய சுகுணன் அடுத்த விநாடியே அந்தத் தேவையில்லாத போலித் தயக்கத்தைக் கலைத்தெறிந்தவனாக, "நான் இப்போது பத்திரிகையில் இல்லை" என்றான். இந்த உண்மையை அவரால் இரசிக்க முடியவில்லை.

     "ஏன் அப்படி? அட பாவமே! நல்ல சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தார்களே? நிறையப் பேரும் இருந்தது..."

     "....."

     "இந்தக் காலத்திலே வேலையை விடப்படாது. அதுலேயும் நல்ல சம்பளம் கிடைக்கிற இடத்தை நிச்சயமா விடவே படாது."

     "....."

     "அப்ப நான் வரேன்..."

     அவரே விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார். 'நீ ஒரு வேலையில்லாத வெட்டிப் பேர்வழி! உன்னோடு பேசிக் கொண்டு நிற்க எனக்கு நேரமில்லை' என்று சொல்லாமற் சொல்வது போல அந்த உறவினர் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டதாகத் தோன்றியது. வயிறு முட்டத் தின்கிறவனைப் பஞ்சப் பசியிலடிபட்ட பட்டினிக்காரன் பார்ப்பது போல் - மனிதனின் சம்பளம் முதலிய சௌகரியங்களையும், பதவி - பிரசித்தி - முதலிய சௌகரிய நிழல்களையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டே இருப்பது போலவும் அவை அவனை விட்டு நீங்குகிற போது அல்லது அவன் அவற்றை நீக்கிக் கொண்டு 'இப்போது நான் தனி' என்று நிற்கிற போது அந்தக் கவனிப்பையும் வியப்பையும் மற்றவர்கள் விட்டு விடுவது போலவும் தோன்றியது. இப்படி அலட்சியம் செய்வது கூட ஒரு விதத்தில் நெற்றிக் கண்ணைத் திறந்து வெதுப்புவது போல் தான். பிரேம் போட்டுச் சட்ட மடித்து மாட்டிய படம்போல் மனிதனும் வாழ வேண்டுமென்றுதான் சராசரியாக மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மனிதனுக்கோ சட்டத்தைக் கழற்றிக் கொண்டு வரவும், வேறு 'பிரேம்' வேண்டுமென்று மாறவும் வளரவும், இயல்பான ஆசை, தூண்டுதல்கள் எல்லாமிருக்கிறது. அந்த உறவினரை நினைத்து - அவர் பரபரப்பாக விசாரித்த ஆர்வத்தையும், அவர் நினைத்த 'பிரேமில்' அவன் மாட்டப்பட்டிருக்கவில்லை என்றறிந்ததும், அவர் புறக்கணித்து விட்டு ஓடிய வேகத்தையும் - நினைத்துத் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான் சுகுணன்.


     சென்ட்ரல் நிலையத்திலிருந்து மறுபடி பஸ் ஏறி அவன் தம்புச் செட்டித் தெருவிற்குப் போன போது - அந்தத் தெருவின் இரு முனைகளிலும் அங்கங்கே சுவர் விளிம்புகளில் அரசு முளைத்த சில கட்டிடங்கள், கிடங்குகளின் ஓரம் ஈச்சம் பாயை மூங்கில் கழியில் நட்டு அதற்குள்ளேயே இரவில் முடங்குவதும், பகலில் துறைமுகத்தில் மூட்டை தூக்குவதுமாக வாழும் கூலிகளின் குடும்பங்களைப் பற்றிச் சிந்தனை வந்தது. 'இவர்கள் வாழ்வைப் பார்த்து வியக்கவும் வியக்காமலிருக்கவும் யாருமே இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது' என்று தோன்றியது. இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அநுதாபப்படவும் பட்டினத்து வாழ்க்கை வேகத்தில் இடமில்லை. வியக்கவும் வழியில்லை. ஒன்று பட்டணத்தில் தேவைக்கு மீறிக் கொண்டாடுகிறார்கள்? அல்லது அளவுக்கு மீறி அலட்சியம் செய்கிறார்கள். கொண்டாடுவதற்கும் அலட்சியம் செய்வதற்கும் நடுவிலுள்ள அவசியமான பல அளவுகள் - மதிப்பீடுகள் இங்கு இல்லை என்றே நினைத்தான் அவன்.

     'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்தின் படிகளில் ஏறி அவன் மாடிக்குச் சென்ற போது மகாதேவன் ஏதோ தந்தி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். சுகுணனைப் பார்த்ததும் முகமலர்ந்து வரவேற்ற அவர்,

     "ஒரு காரியம் உங்களால் ஆக வேண்டும் சுகுணன்! தந்தி வேறு வந்துவிட்டது. இப்போது நாம் தயாரித்துக் கொண்டிருக்கிற 'இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட்'டிலேயே இந்தக் கட்டுரையும் வந்தாக வேண்டும். கூனூருக்கும் உதகமண்டலத்திற்கும் நடுவே கிராம போன் ஊசிகள் தயாரிக்கிற தொழிற்சாலை ஒன்றிருக்கிறது. அந்தத் தொழிற்சாலையைச் சுற்றிப் பார்த்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று கேட்டிருந்தேன். வரச்சொல்லித் தந்தி அடித்திருக்கிறார்கள். நீங்கள் ஏதோ கோயம்புத்தூர் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே. போனால் இதையும் முடித்துக் கொண்டு வந்து விடலாமல்லவா?" என்று அவனைக் கேட்டார்.

     சுகுணனும் அதற்கு இணங்கினான். அவருக்கு உழைக்கிறோம் - உதவுகிறோம் என்ற எண்ணத்தில் அறிவையும், இலட்சியத்தையும் இரு கண்களாகக் கொண்டு அயராமல் முயலும் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனுக்குப் பாடுபட்டுத் துணை நிற்கும் பெருமிதத்தைப் பெற்றான் சுகுணன். அன்று மாலை வரை டைம்ஸ் காரியாலயத்திலே கழிந்தது. மறுநாள் மாலை ஊருக்குப் பயணம் இருந்ததனால் 'டைம்ஸுக்கு' அவன் போகவில்லை. அறையிலேயே இருந்தான். பகலில் கடைவீதிக்குப் போய்த் தங்கைக்குச் சில பொருள்கள் வாங்கிக் கொண்ட பின் மறுபடி அறைக்கு அவன் வந்த போது துளசியிடமிருந்து ஐந்தாறு முறை ஃபோன் வந்ததாக லாட்ஜ் பையன் சொன்னான். அப்படிப் பையன் சொல்லிக் கொண்டிருந்த போதே மறுபடி ஃபோன் அடித்தது. 'பையன்' ஃபோனை எடுத்து விட்டு, "உங்களுக்குத்தான்" - என்று சுகுணனிடம் நீட்டினான். 'மாலையில் அவனைப் பார்க்க வரலாமா?' என்று ஃபோனில் கேட்டாள் துளசி.

     "ஊருக்குப் போவதாக நேற்றே சொல்லியிருந்தேனே?" என்றான் சுகுணன்.

     "என்றைக்குத் திரும்பி வருகிறீர்கள்?"

     "ஒரு வாரம் வரை ஆகலாம்."

     "அதற்குள் அப்பா என்னைப் பத்திரமாக டில்லிக்கு விமானம் ஏற்றித் திரும்ப அனுப்பிவிடுவார்..." என்று அவள் ஏக்கத்தோடு கூறிய குரலுக்கு அவன் ஒரு மறுமொழியும் சொல்லத் தெரியாமல் தயங்கினான். முன்பெல்லாம் அவன் வெளியூர் புறப்படுகிற நாளானால் காலையிலேயே அவன் அறைக்கு வந்து சூட்கேஸில் பிரயாணத்துக்கு வேண்டிய புத்தகங்கள் துணிமணிகள் எல்லாம் அடுக்கி வைத்துவிட்டுப் போவாள் அவள். அவனே சொந்தமாகப் பெட்டியில் துணிமணிகளை அள்ளி வாரிப் போட்டுக் கொண்டு புறப்பட்டது அவள் திருமணத்தன்று வெளியூருக்கு ஓடிய பயணம் தான். துளசி அடுக்கி எடுத்து வைத்தால் பெட்டியில் எல்லாம் வரிசையாக, நளினமாக - அழகாக அடுக்கப்பட்டிருக்கும். எதுவும் மறக்கப்பட்டிருக்காது. அவள் திருமணத்தன்று அவன் வெளியூருக்கு ஓடியபோது தானே தன் பெட்டியில் சாமான்களை வைக்கும் சமயத்தில், 'இனி நான் தனி. என் பெட்டியில் பிரயாணச் சாமான்களை எடுத்து அடுக்கும் போது எந்த அழகான கைகளின் வளைகள் கலீர் கலீரென்று இதுவரை ஒலித்தனவோ அந்த அழகான கைகளின் வளைகள் இனி இங்கு ஒலிக்காது' - என்று ஞாபகம் வந்தது. இப்படி அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த ஞாபகத்தை அந்த விநாடியே பொய்யாக்குகிறவளைப் போல், "நான் வந்து பெட்டியில் புத்தகங்கள் எல்லாம் எடுத்து வைக்கட்டுமா?" - என்று அப்போதே துளசி அவனிடம் ஃபோனில் கேட்டாள். "வேண்டாம் நேரம் நிறைய இருக்கிறது. நானே பார்த்துக் கொள்கிறேன்" - என்று தான் இன்று இப்போது அவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடிந்தது. எதிர்ப்புறம் ஃபோனில் சில விநாடிகள் மௌனம் நிலவியது. பின்பும் அவள் குரல் கரகரத்தது:

     "என்னைப் பிரித்து வித்தியாசமாக நினைக்க ஆரம்பித்து விட்டீர்கள்..."

     "அப்படி நினைக்க வேண்டுமென்று உலக வழக்கு நிர்ணயம் செய்திருக்கிறது துளசி...!"

     "போகட்டும்! எனக்கு கொடுத்து வைக்கவில்லை. முடிந்தால் இன்னும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லி ஒரு வாரம் இங்கு இருப்பேன். நீங்கள் திரும்பி வந்ததும் உங்களைப் பார்த்து நிறையப் பேச வேண்டும். உடனே டில்லிக்குத் திரும்ப எனக்கு மனமில்லை..."

     "அதுவும் இனி அநாவசியம்..."

     "உங்களுக்கு எல்லாமே அநாவசியம் தான். நான் கூடத் தானே?"

     "....."

     "நான் உங்களுக்காக இன்னும் ஒரு வாரம் இங்கு பழி கிடந்தால் கூட நீங்கள் திரும்ப மாட்டீர்கள்... வேண்டுமென்றே போகிற இடத்தில் நாளாக்கினாலும் ஆக்குவீர்கள். இப்போதே சொல்லி விடுங்களேன். இங்கு நான் காத்திருக்கவா, வேண்டாமா?"

     "உன் இஷ்டம் துளசி..." - என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டான் சுகுணன்.

     வைத்த சுவட்டோடு மறுபடி ஃபோன் மணி சீறிற்று. எடுத்தான். அவள் தான் மீண்டும் பேசினாள்.

     "ஏன் இப்படிப் பேசப் பிடிக்காமல் ஃபோனை 'டக்'கென்று வைத்து விட்டீர்கள்? அத்தனை வெறுப்பா என் மேல்?"

     "நீயாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் துளசி?"

     - என்று அவன் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் விசாரித்த பின்பே அவள் திருப்தியோடு ஃபோனை வைத்தாள். எவள் பேதையாகி ஒருவனை விடாமல் ஓடி வந்து துரத்துகிறாளோ அவளுடைய அன்பு கூடச் சலிப்பது உண்டு போலிருக்கிறது. ஒரேயடியாக இனிப்பு உண்பது போல் வந்து மோதும் அன்பு வெள்ளம் மனிதனைப் பிரமிக்கச் செய்து விடுவதால் மோத வருகிற அந்தப் பிரமையோடு எதிர் பொங்கிக் கலக்கவும் முடியாது மலைத்துப் போகிறது. சுகுணனும் அப்போது அப்படி மலைத்த நிலையில் தான் இருந்தான். அந்த ஏமாற்றம் அவனையும் தவிக்க வைத்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தத் தவிப்பை ஆண்மையின் பெருமிதத்தோடு அடக்கியாண்டு பேச முடிந்தது அவனால். அவளால் அது முடியவில்லை.

     மெல்லிய பலவீனமான சிறகுகளையுடைய பறவைகள் அதிக உயரம் பறக்க முடிவதில்லை. ஆனால், அவை அதிக உயரம் பறக்கிற பறவைகளை எல்லாம் விட அழகாகவும், மென்மையாகவும், இங்கிதமாகவும் தோன்றுகின்றன. குயிலைப் போல், கிளியைப் போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப் போல், பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள் தான் உண்டு போலிருக்கிறது.

     அன்று மாலை இரயில் புறப்படும் போது அத்தனை மன வேதனைகளுக்குமிடையில் கூடப் பிரயாணக் குறுகுறுப்பு அவன் மனத்தில் இருந்தது. இரயில் புறப்படு முன் கடைசி நிமிஷத்தில் எப்படியோ மின்னல் போல் துளசியும் ஒரு விநாடி வந்து கண் கலங்கி நின்றாள்.


     'விடாமல் துரத்தும் இந்த மெல்லிய காதல் பறவையின் சிறகுகள் வலிக்குமே' என்று அவனுள்ளம் இரத்தம் கசிந்து மனம் புண்ணாயிற்று. அவளை ஆளவும் அவனுக்கு உரிமையில்லை. கண்டிக்கவும் உரிமையில்லை! தான் டில்லி திரும்புவதற்குள் அவசியம் அவன் வந்து விட வேண்டும் என்று மன்றாடிக் கொண்டே, "நானே செய்தது. ரயிலில் சாப்பிட வசதியாயிருக்கும்" - என்று ஒரு டிபன் பொட்டலத்தையும் எடுத்து நீட்டினாள் துளசி. அவை மறுக்கும் துணிவின்றி அவன் வாங்கிக் கொண்டான்.

     "மனிதர்கள் நாடும் சுகங்கள் இப்படி அல்பமானவைதான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத் தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காவிய குணங்களாகக் கொண்டாடியிருக்கிறார்கள்?"

     துளசியின் ஆசைகளை ஒரு வேதாந்தியாக நின்று 'அல்பமானவை' என்று அவன் எடை போட முடியும். ஆனால் கவியாக நின்று அல்பமாக எடை போட முடியாது. கவி இரத்தினங்களையும் மணிகளையும் நிறுத்துச் சிறிய பொருளுக்கும் பெருமதிப்புக் கணிக்கிறவன். கவிகள் தான் உலகத்தின் முதல் தரமான அல்ப சந்தோஷிகள். அவர்களுடைய நிறுவையில் மனிதர்களின் ஆசாபாசங்களுக்கும் விலை மதிப்பு அதிகமாகத் தான் கணிக்கப்படுமே ஒழியக் குறைவாகக் கணிக்கப்படுவதில்லை. அந்தக் கவி நிறுவையில் துளசி ஓர் இரத்தினமாக அவன் மனத்தில் ஒளிர்ந்தாள். இரயிலில் ஒரு மலையாள தினப்பத்திரிகையின் தலைமை நிருபர் அவனோடு பயணம் செய்தார். சென்னையில் ஆண்டிற்கொருமுறை நிகழும் 'தென் பிராந்திய ரிப்போர்ட்டர்ஸ் கில்டின்' மகாநாட்டில் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறான் அவன். அதனால் இருவரும் பல துறைகளைப் பற்றி உரையாடிக் கொண்டே செல்ல முடிந்தது. திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் தென்பகுதிக் கேரளத்திற்கும் இணைப்பு ஏற்படுத்துகிறது. பல மொழிப் பிரதேசங்களை ஊடுருவி ஓடும் இரயிலுக்கு எப்போதுமே ஒரு பத்திரிகையின் நல்ல சிறப்பு மலர் போன்ற அழகு உண்டு. அந்த அழகு, அந்தப் புத்துணர்வு, அந்தப் பிரயாணத்தின் குறுகுறுப்பு எல்லாமே துளசியின் மனத்தில் உள்ள வேதனைகளை எண்ணி உருகுவதிலிருந்து தற்காலிகமாக அவனை விடுதலை செய்திருந்தன. ஜோலார்பேட்டை தாண்டியதும் மலையாள நண்பர் உறங்கத் தொடங்கி விடவே சுகுணனும் 'பெர்த்'தில் படுக்கையை விரிக்கலானான். துளசியின் சிற்றுண்டிப் பொட்டணத்தை அரக்கோணம் கடந்ததுமே காலி செய்தாயிற்று. அது அப்போதிருந்த அவன் பசிக்கு மிகவும் குறைவாயிருந்ததாலும் கொடுத்தவளின் பிரியத்தினாலும் மன நிறைவினாலும் வயிறே நிறைந்துவிட்டது போல் பரிமளித்தது. வயிற்றை நிரப்பக் கூடியது சோறே ஆனாலும் யாரோ ஒருவர் நம் மேல் உயிரை வைத்து அன்பு செய்கிறார்கள் என்ற ஞாபகம் தான் மனத்தை நிரப்புகிறது. மனத்தை நிரப்ப இப்படி ஓர் அன்பு தென்படுகிற நேரத்தில் வயிற்றை நிரப்ப வேண்டிய பசி கூட ஞாபகத்தில் உறைப்பதில்லை. 'நாம் இன்னார் மேல் உயிரை வைத்திருக்கிறோம் - நம் மேல் இன்னார் உயிரை வைத்திருக்கிறார்கள் - என்ற நம்பிக்கை தான் வாழ்க்கையை நடத்துகிறது' - என்றெண்ணிய போது அந்த எண்ணத்தின் திருப்தியிலேயே துளசி தன்னுடன் வாழ்வது போல் உணர்ந்தான் சுகுணன். முன்பு பலமுறை அவளைக் கோபித்தது - ஆத்திரப்பட்டது எல்லாம் கூடத் தன்னுடைய மனப்பக்குவமின்மையினால் தான் செய்த தவறுகளோ என்று கூட அவன் அந்த வேளையில் நினைக்கலானான். ஒரு நினைப்பைப் பிரயாணத்தின் போது நினைத்தால் அதன் போக்கே தனி.

     மனிதனின் தீர்க்கமான கூரான நினைவுகள் திட்டங்கள் எல்லாம் அவனுடைய ஏதாவதொரு பிரயாணத்தின் போதுதான் உருவாகின்றன போலும். பிரயாணத்தின் போது வருகிற சிந்தனைகள் வைகறையின் பனி புலராத மலராத மலர்களைப் போல் புதுமையாகவும் பொலிவாகவும் அமைகின்றன. அப்படிப்பட்ட பல பொலிவான நினைவுகளுடன் உறவாடி உறவாடி உறங்கவே வெகு நேரமாயிற்று சுகுணனுக்கு. உடனே சிறிது நேரத்தில் விடிந்தது போல் கோவையும் வந்துவிட்டது. இரயில் தூக்கத்தில் இரவும் வேகமாக ஓடிவிடுகிறது. பனி மூடிய கோவை - அந்த மஸ்லீன் துணி போர்த்தாற் போன்ற நளினக் கோலத்தைக் 'கொச்சி எக்ஸ்பிரஸ்' வருகிற நேரத்திற்காகவே புனைந்து கொண்டு காத்திருந்தாற் போலத் தோன்றியது.

     'வைகறையைத் தெய்வங்கள் படைக்கின்றன. நடுப்பகலை அரக்கர்கள் ஆள்கிறார்கள். இரவை மன்மதன் கைப்பற்றுகிறான். மறுபடியும் காலையில் தேவர்களின் தெய்வசக்தி அதை மீட்டுகிறது' என்று 'பாலைவனத்துப் பூக்கள்' நாவலை எழுதிய போது ஓரிடத்தில் தான் குறிப்பிட்டிருந்ததை 'கொச்சி எக்ஸ்பிரஸ்' - கோவை நிலையத்தில் புகுந்து நின்ற அந்த பூங்காலையில் எண்ணினான் சுகுணன். கீழே மங்கலாகத் தெரியும் நகரை விட மேடான கோவை இரயில் நிலையத்தில் இறங்கியதும் அந்த நேரமும் நகரமும் மேற்கு நாட்டு நகரங்களுக்கு இணையாகத் தோற்றமளித்தன. அந்த மண்ணோடு எங்கோ ஒரு மூலையில் மறைந்து இளமை நினைவுகள் அவனுள் எழுந்தன. அங்கே வளர்ந்தது, வாழ்ந்தது, படித்தது, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு, ஆசைப்பட்ட பத்திரிகைத் தொழிலுக்கே தேர்ந்தெடுக்கப்பட்டுப் பத்திரிகைத் தொழிலுக்காக இதே போல் ஒரு நாள் சென்னைக்கு இரயிலேறியது எல்லாம் நினைவு வந்தன. இதே போலக் கொச்சியிலிருந்து சென்னைக்குப் போகும் எக்ஸ்பிரஸ் கோவை நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு மாலையில் அவன் இரயிலேறியதும் இத்தனை ஆண்டுகள் சென்னை வாசியாயிருந்து வாழ்க்கையின் உச்சபட்சமான சூதுவாதுகளையும், நன்மை தீமைகளையும் தெரிந்து கொண்டு இன்று திரும்புவதுமே ஞாபகத்தில் அலையாடின.

     கொங்கு நாட்டின் வெள்ளை மனம், 'அப்ப வாரேனுங்க...' என்பது போல் இழுத்து இழுத்துப் பேசும் கொங்கு நாட்டின் அன்பான உரையாடல் எல்லாம் அவனுள் மறைந்திருந்தன; மறந்திருந்தன. இன்றோ மறுபடி நினைவு வருகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க சென்னையை விடச் சிறந்த இடமில்லை. வாழ்க்கையை அனுபவிக்கவோ சென்னையில் இடமில்லை. 'டிரெயினிங் ஸ்கூல்' படிப்புப் போல் தான் சென்னை வாசம். 'டிரெயினிங்' கிடைக்கிற இடத்திலேயே அதன் பலனை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. சுகுணன் கோவை நிலையத்தில் இறங்கி நின்று நெட்டுயிர்த்தான். கீழே அகன்ற வீதிகளில் கோவையின் தேசீய வாகனங்களாகிய 'ஆட்டோ' ரிக்ஷாக்கள் விரைந்து கொண்டிருந்தன. தொலைவில் பஞ்சாலைப் புகைப் போக்கிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்தன. சிறிதும் பெரிதுமாகப் புதிய முறையில் நவீனக் கட்டிட எழுச்சிகள் காலத்தையும் நகரின் தோற்றத்தையும் புதுமையாக்கிக் கொண்டு கண்ணுக்கு முன்னால் மங்கலாகத் தோன்றின.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:24 pm

[You must be registered and logged in to see this link.]

12

     'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் துணிவுள்ள முதல் பத்திரிகையாளன் பிறந்துவிட்டான்.


     வழக்கமாகப் பார்க்கும் மனிதர்கள், வழக்கமாக நடமாடும் இடங்கள், இவற்றை நீக்கி வெளியூருக்கு வந்த உற்சாகம் மனத்தில் இருந்தது. கோவை நிலையத்திலிருந்து அண்ணூருக்குப் போக வாடகைக் கார் தேடும் முயற்சியில் ஈடுபட்டான் சுகுணன். மிகச் சில ஆண்டுகளில் கோயம்புத்தூர் எவ்வளவோ வளர்ந்திருந்தது. குண்டூசி முதல் இயந்திரங்கள் வரை எல்லாவற்றையும் உருவாக்கவல்ல பல பெரிய தொழிற்சாலைகள் தோன்றியிருந்தன. சத்தியமங்கலம் சாலையில் கணபதியைக் கடப்பதற்குள்ளேயே பல பெரிய தொழிற்கூடங்கள் புதியனவாகவும் நவீனமான தோற்றம் உடையனவாகவும் தென்படத் தொடங்கி விட்டன! சுண்ணாம்பு கலப்புடன் சுக்கான் கல்லும் மண்ணுமாகத் தெரியும் கோவையின் பூமியயப் பல இடங்களில் கட்டிடங்களுக்காக வானம் தோண்டிக் குவித்திருந்தார்கள். சென்னையிலும், பிறபெரிய நகரங்களிலும் கட்டிடங்கள் எழுகிற விரைவையும், ஆடம்பரத்தையும் காணும் வேளைகளில் எல்லாம் இனி உழுவதற்கும் விளைவதற்கும் மண்ணே மீதமிருக்காதோ என்று ஒரு மலைப்பான எண்ணம் சுகுணனுக்கு அடிக்கடி வருவதுண்டு. பாரதத்தின் இருண்ட கிராமங்களையும் எழுத்தறிவில்லாத மக்களையும் மனத்திற் கொண்டு காந்தியடிகள் போராடிய சுதந்திரப் போர் நகரங்களை மட்டுமே வளர்க்கும் ஒருதலைப் பட்சமான வெற்றியாகப் போய் விட்டதோ என்ற சந்தேகம் கூட அவனுள் அடிக்கடி எழுந்ததுண்டு. அண்ணூரில் கோவையின் வளர்ச்சி தென்படவில்லையாயினும், வளர்ச்சிக்கு அருகிலிருக்கும் ஒரு சூழ்நிலை தென்பட்டது. சாலையின் இருபுறமும் செழிப்பான பருத்திச் செடிகளில் வெளேரென்று பருத்தி பூத்திருந்தது. இடையிடையே கரும்புத் தோட்டங்கள் பசுந்தோகைகளைச் சிலிர்த்துக் கொண்டு செழுமையாகத் தோன்றின. விடுதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவள் அங்கேயே தங்கி வசித்து வந்தாள். சகோதரியோடு தானும் தங்க முடியாது என்பதைச் சுகுணன் நினைவு கூர்ந்தான். வாடகைக் கார் பள்ளிக்கூட விடுதிக்குள் நுழைந்த போது எதிரே தென்பட்ட ஒவ்வொருவரும் தன்னையும், காரையும் வியப்புடன் ஏறிட்டுப் பார்ப்பதை சுகுணன் உணர முடிந்தது. கார் விடுதி முகப்பில் நின்றதும் வராந்தாவில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த நாலைந்து பெண்கள் பரபரப்பாகப் படியேறி மேலே மாடிக்குப் போய்ச் சுகுணனின் சகோதரியை அழைத்து வந்தனர். தனிமையில் சலித்துச் சலித்துத் தன் வரவைப் பற்றி கற்பனையும் ஆவலும் காண்பித்த தங்கை தன்னிடம் படிக்கிற பெண்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ள தொடங்கியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. ஆவல், வியப்பு, ஆகிய உணர்வுகளில் எல்லாம் மரத்துப் போயிருந்த பட்டினத்து மனிதர்களிடையே இருந்து விட்டு, எதிலும் ஆவலும், வியப்பும் நிறைந்த சிற்றூர் மனிதர்களைச் சூழ்வது திடீரென்று ஏதோ ஒரு விதமான விடுதலையும் சுதந்திரமும், கிடைத்து விட்டதைப் போல் மகிழச் செய்தன. அந்த மகிழ்ச்சியில் இனம் புரியாததொரு குறுகுறுப்பும் இருந்தது.

     "வா! அண்ணா! இப்போதுதான் என்னைத் தேடி வர வழி தெரிந்ததா?" என்று புன்னகையோடு முகம் மலர எதிர் கொண்ட தங்கையை, "சௌக்கியமா பவானி?" என்று அன்புடனே விசாரித்தான் சுகுணன்.

     "ஹெட்கிளார்க் வீட்டு மாடியில் நீ தங்கிக் கொள்ள இடம் ஏற்பாடு செய்திருக்கிறேன். வா! நானும் கூட வருகிறேன். காரிலேயே போய் விடலாம்" என்று அவனோடு பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பவானி. நீண்ட நாள் அவளைப் பார்க்காமல் இருந்து விட்டுத் திடீரென்று இப்போது பார்க்கிற வேளையில் பொலிவாகவும் வனப்பாகவும், அவள் வளர்ந்திருந்திருப்படு போல் தோன்றியது சுகுணனுக்கு. படிக்கிற பெண்கள் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும், பிரியத்தையும் காணப் பெருமையாயிருந்தது அவனுக்கு. அந்த ஊருக்கு திருவிழா வந்து விட்டதைப் போல் அவன் வரவைக் கொண்டாடினாள் தங்கை. படிக்கிற பெண்களிடமும், சக ஆசிரியைகளிடமும், அவளுக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து வியந்தான் சுகுணன்.

     "உங்களைப் போல் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்குவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்று ஹெட்கிளார்க் மிகவும் விநயமாகத் தன் வீட்டிற்குள் அவனை வரவேற்றார். எதிர்ச்சாரியிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தும் ஒரு கொத்து முகங்கள் எட்டிப் பார்க்க வாடகைக் காருக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுச் சுகுணன் ஹெட்கிளார்க் வீட்டில் அவருடைய மூன்றாவது மகள் என்று சொல்லிப் பவானி அறிமுகப்படுத்தி வைத்த யுவதி அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு - அவனுடைய நாவல்களையும், தொடர் கதைகளையும் ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி அவற்றைத் தான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருப்பதாகச் சொன்னாள்.

     "அப்படியா! நிரம்ப மகிழ்ச்சி" - என்று அவளுக்கு மறுமொழி கூறிய சுகுணனை இடைமறித்து "இவளுடைய தற்கால இலட்சியம் கதைகளைப் படிப்பது, எதிர்கால இலட்சியம் யாராவது ஒரு நல்ல எழுத்தாளரைக் கணவனாக அடைவது" என்று பவானி கேலியில் இறங்கினாள்.

     "தற்கால இலட்சியத்தைப் பற்றி ஒன்றும் பயமில்லை. ஆனால் எதிர்கால இலட்சியம் தான் பயப்படும்படியாக இருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே சுகுணன் கூறிய போது ஹெட்கிளார்க் மகள் நாணி உள்ளே ஓடி விட்டாள்.

     பகல் உணவுக்குப் பின் ஓரிரண்டு மணி நேரம் அமைதியாக உறங்க முடிந்தடு. மூன்று மணிக்குப் பவானி வந்து அவனை எழுப்பி விட்டாள்.

     "பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தின் சார்பில் இன்று நீ பேச வேண்டுமென்று ஹெட்மிஸ்டர் ரொம்ப வற்புறுத்துகிறாள் அண்ணா!" என்றாள் அவள்.

     'வந்த இடத்திலும் இதேது பெரிய வம்பாகிவிட்டது' என்று தட்டிக் கழிக்க முயன்றான் அவன். பவானி வற்புறுத்தவே மேலும் மறுக்க்த் துணிவின்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான் அவன். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியை அசடுவழியச் சிரித்துக் கொண்டே, "இந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பத்திரிகையில் அவசியம் நீங்கள் ஏதாவது எழுத வேண்டும்", என்று ஒரு புகழ் மீனுக்குத் தூண்டிலைப் போட்டு வைத்தாள். மாணவிகள் அவன் பேச்சை மிகவும் ஆர்வத்தோடு கேட்டார்கள். அன்றிரவு அவன் பவானியோடு விடுதிலேயே சாப்பிட்டான். பத்திரிகைத் தொழிலின் புகழிலும் ஒளியிலும் உள்ள அபாயம் அந்தப் புகழையும் ஒளியையும் அடியொற்றி வரும் பொறாமைகளையும், பகைகளையும் தாங்குவதுதான். தான் அடைந்தாற் போன்ற கோபதாபங்களையோ, சலிப்பு அலுப்புக்களையோ அடையாமல் பவானி அந்தப் பள்ளிக் கூடத்தில் பூப்போல் மலர்ந்து வாடாமல் மணம் பரப்பிக் கொண்டிருப்பதை எண்ணிச் சுகுணன் பூரிப்படைந்தான். இரண்டு நாள் அந்தச் சிற்றூரிலே இருந்துவிட்டு - மூன்றாம் நாள் உதகமண்டலத்திற்குப் புறப்பட்ட போது பவானியும் இரண்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டு அவனோடு புறப்பட்டாள். உதகமண்டலத்துக்குப் போகும் போதுதான் 'பூம்பொழில்' வேலையை உதறிவிட்டதைப் பற்றித் தங்கையிடம் முதல் முதலாகத் தெரிவித்தான் அவன். அவனையும் அவன் பிடிவாதங்களையும் பற்றி நன்றாக உணர்ந்திருந்த பவானி, "ஏன் வேலையை விட்டு விட்டாய்?" என்று கேட்கவில்லை - "இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்" என்று மட்டுமே கேட்டாள் - அதற்கு அவன் கூறிய பதிலும் உறுதியானதாக இருந்தது.

     "யார் தன்னிடம் குற்றமற்றவனாய்ப் பிறருடைய குற்றங்களை எடுத்துக் காட்டுகிறானோ அவனை நோக்கிச் சமூகத்தின் நெற்றிக் கண்கள் திறக்கத்தான் செய்யும். குற்றம் செய்கிறவர்களின் நெற்றிக் கண் திறக்கிற அளவு அவர்களைக் கொதிப்படையச் செய்ய முடியாத எழுதுகோல் வெறும் மரக்கோல் தான். என் எழுதுகோல் மரக்கோலாயிருந்ததில்லை. இனியும் அப்படி இருக்கப் போவதில்லை; சொற்களை அணிவகுத்து நிறுத்திப் போராடுகிறவன் வெற்றி பெற நீண்டகாலம் பிடிக்கும். ஏனென்றால் அவன் ஆயுதங்கள் பொருள் தெளியப் பொருள் தெளியப் பலமடைகின்ற வார்த்தைகளாக நிற்கின்றன" என்று அவன் கூறிய மறுமொழி மிகவெளிப்படையாக அவளுக்குப் புரியாவிட்டாலும் அதில் ஒரு திடமிருப்பதை அவள் உணர்ந்தாள்.

     "சத்தியமங்கலத்து மாமா உன் ஜாதகம் எங்கிருக்கிறதென்று மாதத்திற்கு ஒருமுறை வந்து கேட்டுவிட்டுப் போகிறார்?" என்று அவனுடைய திருமணத்தைப் பற்றி மெல்ல அவனுக்கு நினைவூட்டினாள் பவானி.

     "வெட்கப்படாமல் அவரிடம் உன் ஜாதகத்தை முதலில் குறித்துக் கொடு பவானி!" என்று நாணத்தினால் சிவக்கும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடி மறுமொழி கூறினான் சுகுணன்.

     "ஏதோ நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு நான் இப்படி இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா அண்ணா?" என்று அவனை மடக்கிக் கேட்டாள் பவானி. அந்தப் பேச்சு அவ்வளவில் மேலே தொடராமல் நின்றுவிட்டது. உதகமண்டலத்திலிருந்து அவர்கள் திரும்பிய நாளன்று அதிகாலையில் முதல் பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டிருந்ததனால் மலையிலிருந்து கீழே மேட்டுப்பாளையத்திற்கு இறங்குகிற வழியில் பாக்கு மரக் கூட்டங்களிடையே பஸ் வரும் போது திருமண வீட்டில் மணப்பது போல் பாக்கு மரம் பூத்து மணந்த அந்த மங்கல நறுமணத்தைப் பற்றிச் சுகுணன் பவானியிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டே வந்தான். உதகையிலிருந்து திரும்பிய தினத்தன்று மாலையில் அவர்கள் மருதமலைக்குப் போய் வந்தார்கள். அண்ணனும் தங்கையும் மறுநாள் அதிகாலையில் பேரூருக்குப் போய் வந்தார்கள். சிறு சிறு அலைகளுடன் ஓர் ஓரமாக நீர் சிலிர்த்து ஓடும் நொய்யல் நதிக்கரையில் தென்னை மரக் கூட்டமும் கொய்யா மரக் கூட்டமுமான அந்த இடம் சுகுணனுக்கு மிகவும் விருப்பமானது. கோவையின் பரபரபு ஒடுங்கி அமைதியும் அழகும் விலகி இருக்குமிடம் என்பதால் சிறு வயதிலிருந்து பேரூரை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.


     அன்று பகலில் சிங்காநல்லூரிலுள்ள ஓர் உறவினர் வீட்டிற்கு அவனும் பவானியும் சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார்கள். உணவு முடிந்ததும் அவர்களுடைய அழைப்பின் நோக்கம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சுகுணனுடைய ஜாதகம் வேண்டுமென்று மெதுவாக ஆரம்பித்தார் அந்த உறவினர். அண்ணனும் தங்கையும் அந்தக் கேள்வியை நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட்டு அங்கிருந்து தப்பினார்கள்.

     "அண்ணாவையே கேளுங்களேன். நான் சிறியவள், என்னைக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்?" என்றாள் பவானி.

     "இப்போது அதற்கென்ன அவசரம்? தங்கைக்குத்தான் முதலில் வரன் பார்க்க நினைத்திருக்கிறேன். எனக்கு இப்போது சாத்தியமில்லை. 'ஜர்னலிசத்தில், ஒரு பெரிய 'டிப்ளமா' வாங்குவதற்காக அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, போக எண்ணமிருக்கிறது. போனால் திரும்ப நாளாகும். அப்புறம் தான் இதைப் பற்றிச் சிந்திக்க முடியும்..." என்று ஒரே போடாகப் போட்டான் சுகுணன். சாயங்காலம் அவன் கோவைக்கு வந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் - சென்னை புறப்பட்டபோது பவானிக்கு அழுகையே வந்து விட்டது. "ஏதோ மூன்றாம் மனிதர்கள் சந்தித்துக் கொள்வது போல் எப்போதாவது சந்தித்துக் கொள்கிறோம். மறுபடி எப்போது பார்ப்போம் என்று உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது..."

     "அப்படிச் சந்திக்கிற சந்திப்பில் தான் உறவு, பாசம் எல்லாம் அதிகமாகச் சிலிர்த்தெழுகிறது பவானி! சிறு குழந்தை போல் அழாதே... எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! இது பொது இடம்! கடிதம் எழுதினால் அறை விலாசத்துக்கு எழுது. மறந்து போய் இனியும் 'பூம்பொழிலுக்கு' எழுதாதே..." - என்று தங்கைக்கு ஆறுதல் கூறி விடைபெற்ற போது சுகுணனும் மனம் நெகிழ்ந்து தான் போயிருந்தான். மனிதர்களின் பலவீனம் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்வதில்தான் இருக்கிறதென்று தோன்றியது. தங்கையின் அந்த அழகிய முகம் - உயரமான வாளிப்பான தோற்றம் - கோவை நிலையத்தின் மேடையில் மங்கி மறைந்த போது உணர்வு அவன் மனத்தைப் பிசைந்தது. உள்ளே ஒரு சோகம் வந்து கவிந்து விலகியது.

     'போனதும் ஞாபகமாகக் கடிதம் எழுதுங்கள்' - ஒரு வேண்டுகோள், 'சுவாமி எவிடைக்கா போகுந்தது?' - என்று யாரோ ம்லையாளத்தில் யாரையோ விசாரிக்கும் ஒரு குழைவான குரல், அர்த்தமில்லாமல் இரயிலோடு கலந்து ஓசையில் சங்கமமான சில குரல்கள் - சில வார்த்தைகள் - காதில் விழுந்தன. வண்டி விரைந்து விட்டது.

     'எங்கே போகிறீர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்?' சதா காலமும் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிற - இருக்க வேண்டிய இந்தக் கேள்வியை இரயில் பயணத்தின் போது மட்டும் கேட்டுப் பார்த்துக் கொள்கிறோமா என்ன? மனத்தினால் போவதும், வருவதும், தங்குவதும் கூடப் பிரயாணங்களானால் மனிதன் பிரயாணத்தைத் தவிர வேறெதுவும் செய்யவில்லல என்றாகிவிடும். அப்படி ஆகுமானாலும் அது ஒரு தத்துவம் தான். சுகுணன் அமர்ந்திருந்த அந்தப் பெட்டியில் மொத்தம் ஏழு பேர் இருந்தனர். மூவர் பெண்கள். நாலு ஆண்களில் சுகுணனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இரயிலில் இவன் ஏறி உட்கார்ந்த விநாடியிலிருந்து - அவனை உற்று உற்றுப் பார்ப்பதும் - ஏதோ கேட்க நினைப்பவர் போல் தயங்குவதுமாக இருந்தார். சுகுணன் அதைக் கவனித்தாலும், அவராகக் கேட்கட்டுமே என்று இருந்தான். இரயில் விரைந்து நகரத் தொடங்கியதும் அவராகப் பேச்சைத் தொடங்கினார்.

     "... நீங்கள்... தொகுதி எம்.எல்.ஏ. அல்லவா?" என்று அவர் வினாவிய போது ஒரு விநாடி திகைத்த பின், "இல்லை நான் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ.யுமில்லை" - என்று மறுத்தான் சுகுணன். அப்படியும் அவர் விடவில்லை.

     "மன்னிக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா?" என்று இப்படி விசாரிக்கும் விசாரணைக்கு ஆங்கிலம் தான் நாகரிகம் என்று கருதினாற் போலத் தமிழிலேயே பேசிக் கொண்டு வந்தவர் இதை மட்டும் ஆங்கிலத்தில் விசாரித்தார். சுகுணன் ஆங்கிலத்திலேயே அவருக்கு மறுமொழி கூறத் தொடங்கியதோடன்றித் தொடர்ந்து பேசிய போதும் சரமாரியாக ஆங்கிலத்தைத் தொடுத்த போதும் அவர் ஆற்றாமையோடு தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்வது போல் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கிவிட்டார். இரயிலிலோ பஸ்ஸிலோ, விமானத்திலோ, பயணம் செய்யும் போது சராசரி இந்தியன் அடுத்தவனுக்குச் சுதேசி மொழி தெரியாதென்று நினைத்து ஆங்கிலம் பேசுவதற்குப் பதில் தனக்குத் தெரியும் ஆங்கிலத்தைத் தனது சுய விளம்பரங்களில் ஒன்றாக அடுத்தவனுக்குக் காண்பித்தே தீர வேண்டுமென்பதற்காகவே ஆங்கிலம் பேசுகிறான். சராசரி இந்தியனிடம் இந்த மனப்பான்மை கிளர்ந்திருப்பது நாகரிகங்களில் ஒன்றாகத் தோன்றினாலும் சில சமயங்களில் போலியாகவே வளர்ந்து விடுகிறது. ஆங்கிலத்தில் வினாவிய அந்தச் சக பிரயாணியிடம் சுகுணன் முற்றிலும் ஆங்கிலத்திலேயே விரைந்து உரையாடத் தொடங்கிய போது போர்க்களத்தில் ரவை தீர்ந்து போய் வெற்றுத் துப்பாக்கியோடு பேந்தப் பேந்த விழிக்கும் கோழையைப் போல் சொற்கள் தீர்ந்து போன ஆற்றாமையோடு வேறு வழியின்றி மறுபடி தமிழுக்கே வந்தார் அவர். ஆயினும் அவரைச் சிறிது நேரம் தவிக்க விடவேண்டுமென்று குறும்புத்தனமாகத் தீர்மானித்துக் கொண்டு விட்ட சுகுணன் வேண்டுமென்றே தன் ஆங்கிலத்தில் கடுமையான பிரஞ்சு, லத்தீன் வார்த்தைகளைப் போட்டு அவரைத் திணற அடித்தான். அவருக்குப் புத்தி வந்து விட்டது.

     "உங்களிடம் நிறையப் பேசணும் சார்" - என்று அவர் திரும்பத் திரும்பத் தமிழில் அபயக் குரல் கொடுத்த பின்பே அவரிடம் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கினான் சுகுணன். 'இவரை இவ்வளவு தண்டித்தது போதும்' என்று தோன்றியது அவனுக்கு. சுதேசி வாழ்க்கைக்காக ஆயிரங்காலம் போராடி விட்டுத் தம்மை மறந்து விதேசியாகவே வாழும் இந்தியர்களை எண்ணும் போது அவனுக்குப் பாரதியாருடைய 'நடிப்புச் சுதேசிகள்' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சுதேச உணர்வு வராதவரையில் சுதேச இலட்சியங்கள் எல்லாமே போலியாகத்தான் போய்விடுகின்றன. 'சக பிரயாணி தன்னிடம் நிறைய பேசுவதற்கு என்ன இருக்கிறது?' என்றெண்ணி அவன் தயங்கிய போது அவரே தொடர்ந்தார்.

     "கதை - கிதை - எழுதுகிறீர்களே...? அதற்கு ஏதாவது பணம் கொடுப்பார்களோ, இல்லையோ?" - இப்படிப்பட்ட கேள்விகள் சராசரி மனிதனின் இலக்கிய ஞானம் எவ்வளவிற்கு இந்த நாட்டில் வளர்ந்திருக்கிறது அல்லது வளரவில்லை என்பதைக் காட்டுபவை. இலக்கியத்தைப் பற்றி அக்கறை கவலை பொறுப்புகள், எல்லாம் அறவே இல்லாவிட்டாலும் பணத்தைப் பற்றிய அக்கறை, கவலை எல்லாம் இங்கு இருக்கிறது. ஒரு மனிதனை உயிருடனே வெயிலில் நிறுத்தி வைத்துத் திறந்த முதுகிலே ஆணி அறைவது போன்ற கேள்விகள் இவை. அதனால் இவற்றை எதிர்கொள்ளும் போது கோபம் அல்லது சலிப்புத் தவிர வேறெதையுமே சுகுணன் கண்டதில்லை. இப்போதோ கோபம் தான் முன் நின்றது.

     "பணம் நிறையக் கிடைத்தால் நீங்களும் எழுதலாம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?" - என்று சிரித்துக் கொண்டே அவரைப் பதிலுக்கு வினாவினான் அவன். அவனுடைய அந்தச் சிரிப்புக்குப் பின்னால் கோபமிருப்பது புரியாமலேயே அவர் பேச்சைத் தொடர்ந்தார்.

     "இல்லை! ஆயிரம் இரண்டாயிரம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே; அதுதான் கேட்டேன்..." என்ற போது 'இதற்குக் கூட ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கிறார்களே' என்று அவர் வியப்பதோ, அலட்சியம் செய்வதோ சொற்களுக்கு அப்பால் தொனிப்பதைச் சுகுணனால் புரிந்து கொள்ள முடிந்தது.

     "ஆயிரம் இரண்டாயிரம் என்ன? ஐயாயிரம் ஆறாயிரம் கூடக் கொடுக்கிறார்கள். சிறுகதை நாவலுக்குப் பெரிய பெரிய போட்டிகள் வைத்துக் கால் லட்சம் அரை லட்சம் கூடக் கொடுக்கிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதினால் இன்னும் நிறையக் கூடக் கொடுப்பார்க. கதை வெளிவந்த பின் யாராவது கேஸ் போட்டுப் பரிசு பெற்றதோ, படமாக வந்ததோ, திருட்டுக் கதை என்பதையும் நிரூபிப்பார்கள்."

     "நீங்கள் கேலி செய்கிறீர்கள் சார்... வெறும் பணத்தைத் தவிரப் புகழும் இதில் இருக்கிறதே?"

     "புகழ், பழி பொறாமை, பகை, நட்பு, எல்லாம் தான் இதில் இருக்கிறது. 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் முதல் பத்திரிகையாளன் பிறந்து விட்டான். அவன் பொருளை நாடி நியாயம் பேசவில்லை. நியாயத்தை நாடியே நீதி பேச வேண்டும் என்று பிடிவாதமாக நீதி பேசினான். பொருட் பயனை நாடி மட்டும் நீதி பேசினால் ஒரு வேளை அந்த நீதியின் தரம் - இன்றைய பத்திரிகைகளின் தரத்தைப் போல் சீரழிந்துவிடும்."


     "இன்றைய பத்திரிகைகளின் தரம் எந்த விதத்தில் சீரழிந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள்? மூன்று இலட்சம் நான்கு இலட்சம் விற்கிற தமிழ்ப் பத்திரிகைகள், எல்லாம் இங்கு இருக்கின்றன. சோதிடத்திற்காக எழுபது பத்திரிகைகள், சினிமாவுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் எல்லாம் இங்கு வளர்ந்திருக்கின்றனவே?"

     "இருக்கலாம்; ஆனால் பண்பாடும், பொது அறிவும் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன? தய்வு செய்து இதற்கு மட்டும் சுருக்கமாக பதில் கூற வேண்டுகிறேன்."

     சுகுணனின் இந்தக் கேள்விக்கு அவரால் மறுமொழி கூற இயலவில்லை. பேச்சை வேறு பக்கமாகத் திருப்பினார் அவர். அவன் விடவில்லை. மேலும் விவாதித்தான்.

     "ஆழமாகச் சிந்திக்காமல் உங்களைப் போல் நாலு பேர் எல்லாம் வளர்ந்து விட்டதாக மக்கள் நடுவிலும், மேடையிலும் பேசி விடுகிறீர்கள். பத்திரிகைக்காகப் பத்திரிகை விற்காமல் சோதிடத்துக்காகவும், சினிமாவுக்காகவும், பகுத்தறிவுப் போட்டிகளுக்காகவும், பத்திரிகை விற்பது ஒரு பெருமையா? கோவில் வாயிலில் பூக்கடை இருக்கிறது என்பதற்காக மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்று பெருமைப்பட நியாயமிருக்கிறதா?"

     "இது குடியரசுக் காலம். மக்களுக்குப் பிடித்த அம்சங்கள் எல்லாம் பத்திரிகையில் இருக்க வேண்டும். மக்களில் பலவிதமான சுவையுடையவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவர் சுவைக்கும் ஏற்றார் போல பத்திரிகையில் ஏதாவது இருக்க வேண்டும். மக்கள் கேட்பதைக் கொடுக்காவிட்டால் புறக்கணிக்கிற காலம் இது..."

     "நாங்கள் விரும்புவது இது, 'ஆகவே இதைப் பற்றியே இன்று பாடம் நடத்துங்கள்' - என்று ஏதாவதொரு நடிகையின் பெயரைச் சொல்லி மாணவர்கள் ஆசிரியரை வற்புறுத்தினால் கூடக் குடியரசுக் காலத்துக்குக் கட்டுப்பட்டு அப்படியே நடத்த வேண்டுமென்று கூறுவீர்கள் போலிருக்கிறதே? அறிவுத் தொழில் தொடர்புடைய கல்வி, பத்திரிகை, கலைகள் முதலிய துறைகளில் - கொடுப்பவர் பெறுபவர் என்ற உறவு - விற்பவர் வாங்குபவர் உறவு போல் - வியாபார ரீதியாகவே முற்றிலும் மாறி விடுவது நல்லதில்லை. நல்ல கல்வி வளர - நல்ல இலக்கியம் வளர - நல்ல கலைகள் பெருக அது துணை செய்யாது. 'விற்பவர் - வாங்குபவர்' - உறவை விடத் தரத்திற் சிறந்த வேறொரு உரமான உறவு கல்விக்கும், கலைக்கும், இலக்கியத்திற்கும் தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

     "காலம் போகிற வேகத்திற்கு ஒத்து வராத கருத்துக்களைக் கூறுகிறீர்கள். இவையெல்லாம் இப்போது யாருக்குப் புரியும்?" என்று அலுத்துக் கொண்டார் அவர். அந்த வேளையிலே அவரை யாரென்று விசாரிக்கலானான் சுகுணன். போத்தனூரில் ஏதோ ஒரு பவுண்டரி மானேஜராய் இருப்பதாக அவர் தெரிவித்தார். விசாரணை தன்னைப் பற்றியதாய்த் திரும்பவே அவர் பேச்சில் சிக்கனம் கடைப்பிடித்துவிட்டுப் 'பெர்த்தில்' ஏறித் துண்டை விரித்துப் படுக்கத் தொடங்கி விட்டார். தன்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள முயலுவது அநாகரிகமென்றும், தான் மட்டும் மற்றவர்களளப் பற்றித் துறுதுறுப்பாகத் துளைத்து விசாரிக்க இடமுண்டு என்றும் கருதாத நாகரிக மனிதனே உலகில் இருக்க மாட்டான் போல் தோன்றியது.

     இரவு நேரத்து இரயிலில் உறக்கம் வராமல் உறக்கம் வந்தாலும் உறங்க இடமில்லாமல் நெடுநேரம் சிந்தித்தபடியே பிரயாணம் செய்தான் சுகுணன். கோயம்புத்தூரைப் பற்றி - தங்கையைப் பற்றி, தங்கை வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்தைப் பற்றி, பத்திரிகைத் தொழிலைப் பற்றி - தனது எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் தான் அவன் சிந்தனையில் மாறி மாறி வந்தன. 'துளசி இன்னும் சென்னையில் இருப்பாளா; அல்லது டில்லிக்குத் திரும்பி இருப்பாளா? - என்றும் நடுவில் ஒரு சிந்தனை மனத்தை அழுத்தி விட்டு மறைந்தது. நேரம் ஆக ஆக ஓடும் இரயிலின் அடைக்கப்படாத ஜன்னல் வழியே ஊடுருவும் காற்றில் குளிர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்தது. குறட்டை ஒலியும், மனிதர்கள் தாறுமாறாகக் கிடந்து தூங்கும் காட்சிகளும் - இரவு நேரத்து இரயிலின் அசதியைக் காட்டின. சென்றடைய வேண்டிய ஊர் விடிந்ததும் வருகிறார்போல் முந்திய இரவு முழுவதும் பயணம் செய்கிற இரயிலுக்கு ஒரு சோபை உண்டு. விடிகிற வேளளயில் உற்சாகத்தில் நாமே ஓடி வந்து அந்த இடத்தை அடைந்து விட்டாற் போன்று மாயமாகக் காலை அரும்பியதும் அரும்பாததுமாகப் புது ஊர் வந்து சேரும். முதல் நாள் இரவிற் புறப்பட்ட நகரின் ஓசைகள், உறவுகள், உணர்வுகள் கனவாக நைந்து மறப்பதற்குக் கூட அவகாசமில்லாதது போல் மறுநாள் எதிர் வருகிற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இந்த உணர்வை அடைந்திருக்கிறான் சுகுணன்.

     இன்று விடிந்த போது அரக்கோணம் வந்தது. பல் விளக்கிவிட்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காபி குடித்த பின் சென்னை வருகிற வரை படிக்கலாமென்று அங்கு ஒரு தினசரியைக் கையில் வாங்கிக் கொண்டு மறுபடி இரயிலேறிய சுகுணன் - பத்திரிகையில் கண் பார்வையைச் செலுத்தினான். பத்திரிகையின் நடு தாளை எதிர் ஸீட்டுக்காரர் மெதுவாகக் கேட்டு இரவல் வாங்கி உருவி எடுத்துக் கொண்டு விட்டார். மற்ற நான்கு பக்கங்களையும் படித்து விட்டு - நடுத்தாளுக்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவள்ளூர் தாண்டுகிறவரை தினசரியின் நடுத்தாள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.

     கிடைத்த போது அதில் அவன் கண்களுக்குத் தெரிந்த முதல் செய்தி அப்படியே அதிர்ந்து போகச் செய்வதாக இருந்தது. அதைப் படிக்கவே துணியாமல் அவன் நெஞ்சு 'திக்திக்'கென்று வேகமாக அடித்துக் கொண்டது. இதயத்து உணர்வுகள் விம்மின. குமுறின. 'எப்படி அழாமல் இருக்க முடிகிறது நம்மால்' - என்று அவனே தன்னையும் தன் மனத்திடத்தையும் வெட்கத்தோடு கடிந்து கொள்கிற துயரமான அந்தச் செய்தியை முதலில் படிக்க நேர்ந்திருந்தால் அதற்கப்புறம் அதில் வேறெதையுமே படிக்க அவனுக்கு மனம் ஓடவில்லை. 'இப்படியும் கூட ஒரு துயரம் வருமா?' - என்று எண்ணி எண்ணி மனம் உருகி மாயும் செய்தி தெரிந்தது அங்கே. அச்செழுத்துக்கள் கண்களிலிருந்து மறையாமல் 'அதுதான் உண்மை', 'அதுதான் உண்மை' - என்று எதிரே நின்று கண்களை உறுத்தின. அவனோ கண் கலங்கி மனம் நெகிழ்ந்து உணர்வுதனையிழந்து பதுமை போல் இரயில் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி இமையாது வீற்றிருந்தான். நிற்காத சில நிலையங்களைக் கடந்து சென்ட்ரலை நோக்கி விரைந்தது இரயில். இதோ ஆவடி அம்பத்தூர் கூடக் கடந்தாயிற்று. சென்னை நெருங்குகிறது. இப்படி நடக்குமென்று அவன் ஊர் புறப்படும் போது நினைக்கவில்லை. மனிதனைத் திகைக்க வைக்கும் காரியங்கள் எல்லாம் இப்படித்தான் பேரிடியாய் வந்து நிற்கும் போலிருக்கிறது.

     'அதிர்ஷ்டமே! உன் கைகளில் நான் யானை பலம் பெறுகிறேன். ஆனால் துயரமே! உன் கைகளில் நான் நலிந்து பலவீனப்பட்டு விடுகிறேன்' - என்று நவநீத கவி ஓரிடத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. இரயில் ஓடுவதாகத் தெரியவில்லை. ஊர்வதாகத் தோன்றியது. செய்தித்தாளை நம்பிக்கையில்லாமல், மறுபடியும் எடுத்துப் பார்த்தான். பொய்யில்லை; உண்மைதான்! நமக்குப் பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதுமில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவதுமில்லை. ஆசைகள் நமக்குரியவை, ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது. நினைப்பும் நிகழ்ச்சிக்கும் ஊடே எங்கோ இருக்கிற அந்த நூலிழை எல்லையில் தான் மனிதர்கள் வெல்லவும் தோற்கவும் முடிகிறது போலும்.




முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:27 pm

[You must be registered and logged in to see this link.]

13

     சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும் தான் போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது.


     நல்லவர்கள் கெடுதலும் அழிவும் அடைந்து நலியும் அதே வேளையில் தீயவர்கள் பயனும் வளர்ச்சியும் பெறுவது போல் தென்படும் பிரமை நிகழ்ச்சிகள் சில உண்டு. நேஷனல் டைம்ஸ் மகாதேவன் என்ற சிறந்த பத்திரிகையாளர் மாரடைப்பினால் திடீரென்று காலமாகிவிட்ட செய்தி, பத்திரிகையின் மரண அறிவிப்புப் பகுதியில் தென்பட்டுத் துணுக்குறச் செய்த அதே வேளையில்... பைந்தமிழ் நாவலர், பாண்டுரங்கனாருக்கு அரசாங்கத்தாரின் அகாதெமிப் பரிசு அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி தெரிந்தது. எத்தனை செய்திகள் தெரிந்தாலும் அவற்றில் கவரப்பட்டுச் செல்லாமல் மகாதேவனின் திடீர் மரணச் செய்தி ஒன்றே சுகுணனின் உணர்வை ஓட்டமறச் செய்து விட்டது. அவருக்காக முந்தைய தினங்களில் உதக மண்டலத்துக்கும் கூனூருக்கும் இடையேயுள்ள கிராமபோன் ஊசித் தொழிற்சாலையைப் பார்த்து விட்டு வந்ததையெல்லாம் கழிவிரக்கத்தோடு நினைவு கூர்ந்தான் சுகுணன். காணி நிலத்தை ஏழை உழவன் உழைத்து உழைத்து... உரமாக்கிப் பயிர் செய்தாற் போல் அவர் தனியாக வளர்த்து நிலைநிறுத்திய 'நேஷனல் டைம்ஸ்'இதழையும் - துன்பங்களையும் வறுமைகளையும் உடைய அவருடைய பெரிய குடும்பத்தையும் நினைத்துக் கவலையிலாழ்ந்தான் அவன். நினைப்பதற்கே தயங்கி மலைக்கக்கூடிய பெருங் கவலையாய் இருந்தது அது. துன்பப்படுகிறவர்களை எதிர்ப்பதில் மரணமும் அல்லவா முந்திக் கொண்டு நிற்கிறது? மகாதேவனின் மரணம் ஒரு தனி மனிதனின் சாதாரண மரணமாக மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு நல்ல இயக்கத்தின் மரணமாகவும் தோன்றி கவலையிலாழ்த்தியது. நெற்றி வேர்வை நிலத்தில் வழிய உழுது பாடுபட்ட நல்ல உழவன் ஒருவன் அதன் பயனை அடையும் முன் மாண்டு விட்டது போல சுதந்திரச் சிந்தையோடு ஒரு நல்ல பத்திரிகையைத் தொடங்கி வளர்த்தவர், அது ஒளி பெருகி ஓங்கிடக் காணாமல் மாண்டதை எண்ணி எண்ணி வேதனையில் மூழ்கினான் சுகுணன்.

     சென்ட்ரல் நிலையத்தில் இறங்கிய போது அதன் கலகலப்பையும், ஆரவாரத்தையும் உணரக் கூட ஆற்றலின்றி ஒரு இயந்திரம் போல் வெளியேறி வாடகைக் காரைத் தேடினான் அவன். மனத்தின் துயரமும் தடுமாற்றமும் அவனை நிற்கவும் முடியாமல் புறத்திலும் தள்ளாடச் செய்தன. மகாதேவனைப் போல் தன்மானமும் தன்னம்பிக்கையும் கொண்டு தனியே வெளியேறிப் பத்திரிகை நடத்திய தீரனின் தோல்வியை அல்லது அழிவை எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளும், எதிரிகளும், பொறாமைக்காரர்களும் இந்த மரணத்துக்காக உள்ளூற எப்படி எப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பார்கள் என்றெண்ணியபோது அந்த எண்ணத்தையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும் தான் போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது. மகாதேவன் இரண்டாவது விதமான மரணத்தையே அடைந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவருடைய இயக்கம் அழிந்து போவதைச் சுதந்திரச் சிந்தனையுள்ள எந்தத் தமிழ்ப் பத்திரிகையாளனும் விரும்ப மாட்டான் என்று சுகுணன் அறிவான். வாடகைக் காரில் நேரே மகாதேவன் வீட்டிற்கு விரைந்தான் அவன். போகிற வழியில் மனத்தில் ஏதோ தோன்றவே ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் அருகில் காரை நிறுத்தி அன்றைய காலை 'நேஷனல் டைம்ஸ்' - வெளிவந்திருக்கிறதா இல்லையா என்று விசாரிப்பதற்காக இறங்கினான். நல்ல வேளையாக அவன் பயந்தது போல் வராமலில்லை. கடை முன்பு 'டைம்ஸின்' வால்போஸ்டர்கள் தொங்கின, பத்திரிகையும் வந்திருந்தது. ஆனால் தலையங்கமோ செய்திகளோ அதிகம் இல்லை. மகாதேவனின் அருங்குணங்களைப் பாராட்டும் இரங்கற் கட்டுரைகளும், பிரமுகர்களின் அனுதாபக் கடிதங்களும், புகைப்படங்களுமாக எட்டுப் பக்கம் மட்டும் அடித்து வெளியிடப்பட்டிருந்தது. முதல் நாள் நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகியிருந்தார். மத்தியானம் பன்னிரண்டு மணிவரை அவர் இருந்து கவனித்திருந்தும் மறூநாள் இதழ் நாலு பக்கம் தாம் வெளிவர முடிகிறதென்றால் இனிமேல் நாளை முதல் யார் கவனிப்பில் பத்திரிகை எப்படி வெளிவரும் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது அவன் மனத்தில்.

     "நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் இந்தப் பத்திரிகை இல்லாமல் போய்விடக்கூடாது" என்று மகாதேவன் வாய்க்கு வாய் உறுதி கூறும் சொற்கள் நினைவு வந்து சுகுணனைக் கண் கலங்கச் செய்தன. பத்திரிகையை விலைக்கு வாங்கி அவன் கடை வாயிலிலேயே பிரித்துப் பார்த்த போது - வியாபாரத்துக்கும் அதிகமான கருணையோடு, "ஆசிரியர் ரொம்ப நல்லவர்ங்க. திடீர்னு போயிட்டாரு. நாளைக்கு இந்தப் பேப்பர் வருமோ வராதோ?... இதைத்தான் வாங்கிப் படிப்பேனின்னு பிடிவாதமாக இருக்கிறவங்க இனிமே சங்கடப்படுவாங்களேன்னு கவலையாயிருக்கு" - என்றான் கடைக்காரன்.

     அதைக் கேட்டுக் கொண்டே வாடகைக்காரை நோக்கி நகர்ந்தான் சுகுணன். கார் மறுபடியும் புறப்பட்டது. ஐஸ் ஹவுஸ் பக்கம் திரும்பி மகாதேவனின் வீட்டுக்கு முன் கார் நின்ற போது - அவர் நீத்துச் சென்ற குடும்பத்தின் கவலையும் - அதைவிடப் பெரிய குடும்பமான இதைத்தான் வாங்கிப் படிப்போமென்று பிடிவாதமாக டைம்ஸை வாங்கிப் படிக்கும் நல்ல வாசகர் குடும்பத்தைப் பற்றிய கவலையும் சேர்ந்தே சுகுணனை வாட்டின. வீட்டு வாயிலில் கூட்டம் கூட்டமாக யார் யாரோ நின்றார்கள். சுகுணனைப் பார்த்ததும் மகாதேவனின் மனைவி கோவென்று கதறியழத் தொடங்கிவிட்டாள். குழந்தைகள் வயது வந்த பையன், பெண் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. வேதனை மிகுதியில் சம்பிரதாயமாகத் துக்கம் விசாரிப்பதற்குத் தேவையான சாதாரணச் சொற்கள் கூட அப்போது அவனுக்குக் கிடைக்கவில்லை. வாயிற்புறம் வந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் அனுதாபத் தந்திகளைக் கையெழுத்திட்டு வாங்கிய வண்ணம் இருந்தார்கள். துக்கத்துக்கு வருவோர் போவோர் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பிரதாயமான துக்கத்தை ஒரு வழியாகக் கேட்டு முடிந்த பிறகு, "ஆபீஸை யார் கவனிக்கிறார்கள்? அடுத்த வாரம் வெளியிட வேண்டிய இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட் அரைகுறையாக இருக்குமே..." என்று மெல்ல விசாரித்தான் சுகுணன்.

     "ஆபீஸ் என்ன வேண்டிக் கிடக்கிறது? பாழாய்ப் போன ஆபீஸ் தானே அவரை இப்படி வாரிக் கொண்டு போயிற்று. இதற்காக இராப் பகலாக உயிரை விட்டு உயிரை விட்டுத்தான் இப்படியாச்சு..." - என்று அந்த அம்மாள் கண்ணீருக்கிடையே குமுறினாள். அப்போதுள்ள நிலையில் அவர்களிடம் இதைப் பற்றி விசாரித்துப் பயனில்லை என்று உணர்ந்த சுகுணன் - மகாதேவனின் மூத்த பையனைத் தனியே வாயிற்புறம் அழைத்துச் சென்று விவரங்களை விசாரித்தான். அவனுக்கும் விவரமாக எதுவும் சரியாகத் தெரியவில்லை.

     "கிராமத்திலிருந்து பெரியப்பா வந்திருக்கார்; காலையிலேயே 'டைம்ஸ்' ஆபீசுக்குப் புறப்பட்டுப் போனார், இன்னும் திரும்பி வரவில்லை. போறதுக்கு முன்னே அம்மாவிடமும் பேசி விட்டுத்தான் போயிருக்கார். அநேகமாக மெஷின்மேன், ஃபோர்மென், கம்பாஸீட்டர்களுக்கெல்லாம் இன்னிக்கே கணக்குத் தீர்த்துடறதாக ஏற்பாடு. நாளைக்குப் பேப்பர் வரது சந்தேகம். பிரஸ்ஸையும் விற்கச் சொல்லி அம்மா சொல்லியாச்சு" - என்று பையன் இழுத்துப் பேசி நிறுத்திய போது சுகுணன் அப்படியே திகைத்து நின்று விட்டான்.

     அந்த ஏற்பாடு மகாதேவனின் ஆன்மாவையும் கொன்று விடும் போலிருந்தது.

     "எங்கேயாவது அடங்கி வேலை பார்த்தாலும் பார்த்திருக்கலாம். மகாதேவன் பத்திரிகை தொடங்கி அதிலேயே செத்துத் தொலைந்தார்! பத்திரிகையும் செத்தது" - என்ற மானக் குறைவான பேச்சு இந்த உலகில் எழாமல் உயிரைக் கொடுத்தாவது தடுத்து விட வேண்டுமென்று அவன் தவித்தான். ஒரு நல்ல பத்திரிகையாளனின் மனத்தை இன்னொரு நல்ல பத்திரிகையாளன் தான் புரிந்து கொள்ள முடியும். மகாதேவனின் அகால மரணத்தை விடக் கொடுமையானது அவருடைய பத்திரிகையின் நிர்பந்தமான மரணம் என்பதை அவன் உயிர்த் தவிப்போடு உணர்ந்தான். துடித்தான்.

     'கடைசி நல்ல எழுத்தாளனால் கூட ஒரு பத்திரிகையை இந்த நாட்டில் வெற்றிகரமாக நடக்கும்படி நிலைநாட்டிவிட்டுப் போக முடியவில்லை' - என்ற அவநம்பிக்கையான எண்ணம் பொதுமக்களிடம் நிலைத்து விடவே இது உதவும் என்று அவனுக்குத் தோன்றியது. மகாதேவனுக்குத் தான் செய்ய வேண்டிய மிகப் பெரிய மரியாதை அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விடாமல் காப்பது தான் என்று அவனுக்குப் புரிந்தது. உள்ளே ஓடினான். மகாதேவனின் மனைவியிடம் இலட்சியத்தைச் சொன்னால் அந்தத் துக்க வேளையில் அது புரியாது என்பது அவனுக்குத் தெரியும். எனவே இலாப நஷ்டக் கணக்கைத் தொடங்கிப் பத்திரிகையைக் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தாமலிருப்பது பல வகையிலும் இலாபம் தரும் என்பது போல் பிடிவாதமாக வாதிட நினைத்தான் அவன். அந்த முயற்சியிலும் முதலில் தோல்வியே கிடைத்தது. அவன் கூறியது அவர்களுக்குப் புரியவில்லை.

     "பேப்பருக்குக் கடன், மைக்குக் கடன், இட வாடகை நிறைய பாக்கி நிற்கிறதாம்... நான் பெண் பிள்ளை. தனியா எப்படி இதையெல்லாம் அடைக்க முடியும். அப்படியே நடத்தினாலும் அவர் உயிருக்கே எமனாக முடிந்தது - என்னை மட்டும் வாழ வச்சிடப் போறதா என்ன?" என்று தீர்மானமாக மறுத்தாள் அந்த அம்மாள். அப்புறமும் பொறுமை இழக்காமல் அந்த அம்மாளோடு விவாதித்தான் சுகுணன்.

     "இவ்வளவு கடனும் இருப்பதால் தான் அதைத் தொடர்ந்து நடத்துவது நல்லதென்கிறேன். அவர் அரும்பாடுபட்டுப் பத்தாயிரம் ரூபாய் வரை விளம்பரங்கள் சேகரித்த 'இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட்' அரைகுறையாகக் கிடக்கிறது. பத்திரிகை நின்று விட்டாலோ அவ்வளவும் வீண். நடந்தால் அவ்வளவு கடனும் அடையும். அவருடைய ஆசையும் அழியாது. நல்ல காலமும் விரைவில் பிறக்கும். தயவு செய்து இதில் என்னை நம்பி விட்டு விட்டால் உங்களுக்கு நான் நாளை நிச்சயமாக நல்ல பதில் சொல்ல முடியும்" என்று மன்றாடினான் சுகுணன். இறுதியில் ஒரு வழியாக அந்த அம்மாள் மனமிரங்கியது. பையனிடம் விவரம் சொல்லிச் சுகுணனோடு கூட அனுப்பினாள். சுகுணன் மகாதேவனின் மூத்த பையனோடு தம்புச் செட்டித் தெருவிலிருந்து டைம்ஸ் காரியாலயத்துக்கு விரைந்தான். அங்கே மகாதேவனின் சகோதரருக்கும் தொழிலாளர்களுக்கும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பேச்சு ஒரு முடிவுக்கு வரவில்லை. சுகுணனைக் கண்டதும் தொழிலாளர்கள் முகமலர்ச்சியடைந்தனர்.


     "சார் நீங்களே சொல்லுங்க... ஐயா அரும்பாடுபட்டு வளர்த்ததை ஒரே நாளில் இழுத்து மூடிப்பிட்டு எங்களையெல்லாம் தெருவிலே நிறுத்திடறது உங்களுக்கே சரியாப் படுதா?" - என்று சுகுணனைக் கேட்டார்கள் ஃபோர்மெனும் பிற தொழிலாளர்களும். இதற்குள் மகாதேவனின் மகன் பெரியப்பாவை உள்ளே தனியாக அழைத்துச் சென்று ஏதோ விவரம் கூறவே அவர் திரும்பி வந்து சாவிக் கொத்தைச் சுகுணனிடம் கொடுத்துவிட்டு, "சார்! இனி மேல் உங்க பாடு. பேசித் தீர்த்துக்குங்க" - என்றார்.

     "தீர்ப்பதற்கு ஒன்றுமில்லை. போனவருக்கு நாம் செய்கிற பெரிய மரியாதை அவர் நம்பிக்கையைத் தொடர்ந்து செயலாக்குவதுதான்" - என்றான் சுகுணன்.

     அடுத்த கணம் டெலிபிரிண்டர் ஒலி சுறுசுறுப்பாக இயங்கியது. அச்சுக் கோர்ப்பவர்கள் விரைந்தார்கள். சுகுணன் கம்போஸுக்குச் செய்தியைத் தயாரித்துக் கொடுப்பதில் ஈடுபட்டான். இன்னொருபுறம் இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்டுக்கான வேலைகளும் தொடர்ந்தன.

     மகாதேவனின் மறைவு பற்றியும் இதற்குப் பின்னும் அவரை நன்றாக நினைவு கூற ஒரே வழி அவருடைய பத்திரிகை தான் என்பதைப் பற்றியும், சுகுணனே உருக்கமாக ஒரு தலையங்கம் எழுதினான். பம்பரமாகக் காரியங்களைச் செய்து அன்று மாலையில் வெளியாக வேண்டிய சிட்டி எடிஷனையும் அனுப்பி வெளியூர்ப் பார்ஸல்களையும் அனுப்பி முடித்த போது சுகுணன் களைத்து போயிருந்தான். ஆனாலும் தலை சிறந்த இலட்சியவாதி ஒருவர் தொடங்கிய பத்திரிகை ஒரு நாள் கூட நிற்காமல் வெளிவந்து விட்டது என்ற பெருமிதம் மனத்தில் இருந்தது. பத்திரிகை நிச்சயமாய் நின்று போய்விடும் என்று எதிர்பார்த்திருந்த பணப் பெருச்சாளிகளுக்கு அது பெரிய அதிர்ச்சியாகவும் இருந்தது. களைப்போடு அன்றிரவு அவன் அறைக்குத் திரும்பும் போது - வழியில் தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலையைப் பார்க்க நேர்கையில் மகாதேவனை நினைத்து ஓரிரு கணங்கள் கண் கலங்கினான். அப்படிக் கலங்கிய போது அந்தச் சிலை திகைத்து நிற்பது போலிருந்தது. பத்திரிகை நடத்தி வெற்றி காண வேண்டுமென்ற வைராக்கியத்தோடு மறுபடி நிமிர்ந்து திடமாகப் பார்த்த போது அந்தச் சிலை விரைவாக நகர்வது போலவும் இருந்தது. ஒருநாள் இரவு பிராட்வேயிலிருந்து நடந்தே வீடு திரும்பும் போது இந்தச் சிலையைக் காண்பித்து மகாதேவன் தன்னிடம் கூறிய வாக்கியங்கள் அவனுக்கு அப்படியே நினைவு வந்தன.

     "கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஓடியாடி அலைந்து கொண்டிருக்கும் போது - இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாகமாய் ஓடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கும் போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஓடுகிற சிலை இது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான்!"

     இந்த வாக்கியங்கள் இவற்றைச் சொல்லிவிட்டுப் போனவரின் மறைவுக்குப் பின் இப்போது இன்னும் அதிகப் பொருள் நிறைவுள்ளவையாகத் தோன்றின அவனுக்கு.

     காலையில் இரயிலிலிருந்து இறங்கியதும் நேரே ஐஸ்ஹவுஸ் பகுதியிலிருந்த மகாதேவனின் வீட்டுக்குப் போய் அங்கிருந்து அப்படியே தம்புச் செட்டித் தெருவில் போய் அன்றைய 'டைம்ஸ்' வெளிவர ஏற்பாடுகள் செய்வதில் முனைந்து விட்டதன் காரணமாகச் சுகுணனுக்கு - நீராடவோ, உடை மாற்றிக் கொள்ளவோ கூட நேரமில்லை. அதனால் இரவில் அறைக்குத் திரும்பியதும் வேர்வையடங்க நெடுநேரம் 'ஷவரில்' நின்றான் அவன். தலையில் குளிர்ந்த தண்ணீர் இறங்கியதும் சிந்தனை சுறுசுறுப்படைந்தது. மகாதேவன் விட்டுச் சென்ற 'நேஷனல் டைம்ஸ்'ஐ எப்படி எல்லாம் வளர்த்து 'ஒரு சுதந்திரச் சிந்தனையாளனின் வெற்றியாக அதை இந்த நாட்டுக்கு நிரூபிக்க வேண்டும்' - என்பதைப் பற்றி எண்ணலானான் சுகுணன். டைம்ஸின் முதல் இதழில் சுதந்திரச் சிந்தனையாளர்கள் பத்திரிகை தொடங்குவதைப் பற்றியும் அவர்கள் வெல்வதையும் தோற்பதையும் பற்றியும் குறிப்பிடும் போது கூட,

     "எங்கள் போர்க்களம் மிகவும் சிறிது. வசதிகளாலும், கருவிகளாலும் குறைவுடையது. இதில் சிலர் மடியலாம். சிலர் அழியலாம். சிலர் தளரலாம். சிலர் தோற்கலாம். ஆனால் இன்று தோற்கும் ஒவ்வொரு நல்ல தோல்வியும் நாளை வெல்ல வேண்டுமென்று துடிக்கும் பல்லாயிரம் பேனா வீரர்களை உண்டாக்கி விடுகிற சத்தியமான தோல்வியாக இருக்குமே ஒழிய ஒரேயடியாக ஒடுங்கச் செய்து விடுகிற ஊமைத் தோல்வியாக இருக்கவே இருக்காது. எங்களை விட வசதிகளும் கருவிகளும் உள்ளவர்களை வெல்வதற்கு எங்களிடம் மனோபலம் மட்டும் தான் இருக்கிறது. நாங்கள் தளரும் போது எங்களைப் போலவே மனோபலமுள்ள ஆயிரமாயிரம் வீரர்கள் எங்களைத் தொடர்ந்து இந்தக் களத்தில் போரிடுவார்கள் என்ற நம்பிக்கையைப் படைக்க முடியுமானால் அதுவே எங்கள் சாதனையாக இருக்கும்."

     -என்று உணர்வு பொங்கப் பொங்க ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அப்போது, இந்த முதல் இதழ் வாக்கியங்களைப் பல முறை படித்துப் படித்து மனப்பாடமே செய்திருந்தான் சுகுணன். அப்போது 'நேஷனல் டைம்ஸின்' ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய தலையங்கங்களைப் படித்து இரங்கிய வேகத்தில் - நகரின் பல பகுதிகளில் எங்கெங்கோ பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான கம்பாஸிட்டர்களிலிருந்து - புரூப் ரீடர்கள் வரை எல்லாரும் தினசரி 'டைம்ஸ்' வாங்குவதை ஒரு நோன்பாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சுகுணன் அறிந்திருந்தான். அப்படி ஒரு சுய கௌரவத்தையும் - தன்னம்பிக்கையையும் படைத்தவருடைய முயற்சியை வெல்லச் செய்வதில் அதே விதமான சுய கௌரவமும் தன்னம்பிக்கையும் உள்ள அடுத்த தலைமுறைப் பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்கும் இன்று பெரும்பங்கு உண்டென்று எண்ணி விரதம் பூண்டது அவன் உள்ளம்.

     அவன் நீராடி உடை மாற்றிக் கொண்டு அறையைப் பூட்டிய பின் சாப்பாட்டுக்காக மெஸ்ஸிற்குப் புறப்பட்ட போது, அப்போதுதான் அவன் ஊரிலிருந்து திரும்பியதைக் கவனித்த அறைப் பையன் அவன் ஊரில் இல்லாத நாட்களில் அவனைத் தேடி வந்தவர்களைப் பற்றிய விவரங்களை ஓடி வந்து தெரிவித்தான். பையன் கூறியதிலிருந்து சுகுணனிடம் கைமாற்றாகப் பணம் வாங்கிக் கொண்டு போயிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இரண்டு முறையும் துளசி நான்கு முறையும் அவனைத் தேடி வந்திருப்பதாகத் தெரிந்தது. வேறு சில நண்பர்களும் தேடி வந்திருந்தார்கள். டெல்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க மாநாட்டு அழைப்பிலிருந்து பாண்டுரங்கனாரின் உள்ளூர்க் கந்த புராணப் பிரசங்க அழைப்பு வரை அழைப்புக்களும் கடிதங்களுமாக ஒரு கொத்துத் தபால்களும் அறைக்குள் விழுந்து கிடந்தன. அவற்றை உடனே பார்க்கும் சுறுசுறுப்பும் ஆர்வமும் கூட அன்றைய மனநிலையில் அவனிடம் இல்லை.

     "யாராவது முக்கியமானவர்கள் தேடி வந்து அவசியம் பார்த்தாக வேண்டுமென்று வற்புறுத்தினால் மட்டும் இந்த விலாசத்தையோ ஃபோன் நம்பரையோ அவர்களுக்குக் கொடு. இனிமேல் என்னை இங்கே அறையில் பார்ப்பது சிரமம் எப்போதாவது தான் வருவேன். சில சமயம் இரண்டொரு நாள் வராமலே இருக்கும்படியும் ஆகி விடும்" என்று பையனிடம் நேஷனல் டைம்ஸ் விலாசத்தையும் ஃபோன் நம்பரையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன்.

     பார்லிமெண்டில் ஏதோ ஒரு முக்கியமான பட்ஜெட் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்தச் சமயத்தில் ஒரு தினசரியின் கடமைகளும்,சுறுசுறுப்பும் அதிகமாக இருக்க வேண்டும். ஆதலால் பத்திரிகை தாமதமாக வருவதோ, உரிய புதுச் செய்திகள் வெளிவராமல் மற்றப் பத்திரிகைகளின் முந்திய பதிப்பில் வந்ததையே மாற்றித் திரித்து வெளியிடுவதாக அமைவதோ பேரையே கெடுத்து விடும். டைம்ஸின் மகாதேவன் இத்தனை ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த பத்திரிகைத் தரம் சிறிது கூட இறங்கிவிடக் கூடாதென்ற அக்கறை செலுத்துவதில் சுகுணன் மிகவும் கவனமாயிருந்தான். அதனால் மறுநாளிலிருந்து இயலுமானால் 'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்திலேயே தங்கி இராப்பகலாக உழைக்கக் கருதியிருந்தான் அவன். தன்னுடைய இளமையும், உழைக்கும் ஆற்றலும் அந்தப் பத்திரிகையை நிலை நிறுத்துவதற்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது அப்போது அவன் வைராக்கியமாகவும் - இன்னும் அழுத்தமாகச் சொல்லப் புகுந்தால் ஒரு வெறியாகவுமே இருந்தது. அந்தச் சமயங்களில் அவனுக்கு வேறெவையுமே நினைவில் இல்லை. ஊரிலிருந்து திரும்பியதும் ஞாபகமாகத் தனக்குத் தெரிவிக்கச் சொல்லியிருந்த துளசியைப் பற்றி விசாரிப்பதையும் அவன் மறந்தான். அவள் சிலமுறை தேடி வந்ததாகவும் பலமுறை ஃபோன் செய்ததாகவும் லாட்ஜ் பையன் தெரிவித்தும் அவன் அதற்கு இரங்கவோ உருகவோ முடியாமல் வேறு கவலைகளும் தாகங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன. கோவையிலிருந்து சௌக்கியமாகத் திரும்பியதற்குத் தங்கைக்கு ஒரு கடிதம் எழுத எண்ணியும் அதைச் செய்ய முடியவில்லை. பூம்பொழிலிலிருந்து தனக்கு வரவேண்டிய 'பிராவிடண்டு ஃபண்டு' முதலிய தொகைகளையும், தன்னுடைய புத்தகங்கள் விற்ற வரவிலிருந்து சேமித்து வைத்திருந்த ஒரு பெருந்தொகையையும், 'ரெக்கரிங் டிபாஸிட்'டில் போட்டிருந்த தொகையிலிருந்து எடுத்த ஒரு தொகையையும் திரட்டி முழு மூச்சாக மகாதேவனின் 'டைம்ஸி'ல் முதலீடு செய்து அதை நிலை நிறுத்திவிடத் திட்டமிட்டிருந்தான் அவன். துரதிருஷ்டவசமாக அவன் திரட்டிய தொகையில் முன்பே மகாதேவனிடம் அவரிருந்த போது தந்தது போக மீதமுள்ள தொகை முழுவதும் டைம்ஸுக்கு ஏற்கெனவே இருந்த கடன்களை அடைக்கவே சரியாயிருக்காது போல் தோன்றியது. சூரியன் மறைந்ததும் இருள் சூழ்வது போல் மனிதன் மறைந்ததும், 'இனி மேல் திரும்பிப் பணம் வருமோ வராதோ' - என்ற பயத்தில் கடன்காரர்கள் சூழ்ந்து கொண்டு ஒரே சமயத்தில் நெருக்கும் பாவத்துக்கு ஈடு ஏது? அந்தக் கடன் கொடுமையும் டைம்ஸுக்கு இருந்தது. 'டைம்ஸ்' நின்று விடாமல் வெளிவர வேண்டிய பொறுப்பைச் சுமக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களிலேயே சுகுணனுக்கு இந்தச் சூழ்நிலை நன்கு தெரிந்து விட்டது. ஆனாலும் அவன் தளரவில்லை. மகாதேவனின் குடும்பத்தாரைக் கலந்தாலோசித்த பின் 'நிறுவியவர் மகாதேவன்' என்ற பெயரைப் பத்திரிகைப் பெயரின் கீழே அச்சிட்டு விடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு மற்றப் பொறுப்புக்களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு 'நேஷனல் டைம்ஸ்' தொடர்ந்து வெளிவரப் பொதுமக்கள் ஆதரவைக் கோரி உருக்கமான அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டான் சுகுணன்.

     "எங்கள் போர்க்களம் மிகவும் சிறியது. வசதிகளாலும் கருவிகளாலும் குறைவுடையது" - என்று தொடங்கி மகாதேவன் டைம்ஸ் முதல் இதழில் வெளியிட்டிருந்த வாக்கியங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தான் அவன். சுகுணனின் கதைகளாலும், நாவல்களாலும் கட்டுண்டு மயங்கிய வாசகர்கள் தமிழகத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் நிறைய இருந்தார்கள். அவர்கள் இந்த அறிக்கையால் பெரிதும் கவரப்பட்டிருப்பது அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து வந்த ஆதரவுக் கடிதங்களாலும், 'செக்' மணி ஆர்டர்களாலும் நிரூபணமாயிற்று. சிலர் தங்க மோதிரங்களையும், பொன் வளையல்களையும், பொற் சங்கிலிகளையும், சவரன்களையும் கூட நிதியாக டைம்ஸுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்றப் பத்திரிகையாளர்கள் வியக்கும்படியும், அதிசயிக்கும்படியும் - ஏன் - பொறாமைப்படும்படியாகவும், இருந்தது இந்த அன்பு வெள்ளம்.


     கொழுத்த பணப் பெருச்சாளியால் நடத்தப்படும் எதிர்த்தரப்புப் பத்திரிகை ஒன்று மனம் வெந்து புகைச்சலெடுத்து - 'டைம்ஸ் பிச்சை எடுக்கிறது' - என்பது போல் குறிப்பாகக் கிண்டல் செய்து எழுதி இதைக் கேலி செய்த போது, 'பிச்சை எடுக்கக் கூட யோக்கியதை இல்லாதவர்கள் எழுதிய வாக்கியம் இது' என்று தலைப்பிட்டு அந்தப் பகுதியையும் டைம்ஸிலேயே எடுத்துப் போட்டான் சுகுணன். அதனாலும் டைம்ஸ் வாசகர்களின் அனுதாபம் பெருகிற்றே ஒழியக் குறையவில்லை. காலை, மாலை வேளைகளில் அவனுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவ உழைக்கப் பல நண்பர்கள் தேடி வந்தனர். 'டைம்ஸ்' அலுவலகம் எப்போதும் கலகலவென்றிருந்தது. முன்பு அவனிடம் பண உதவி பெற்று அந்த நன்றி நிறைவோடிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இலவச 'டைப்பிஸ்டாக' வந்து காலை மாலை வேளைகளில் அலுவலக சம்பந்தமான கடிதங்களை முத்து முத்தாக அடித்து அனுப்பினாள். மனிதர்களின் உண்மை அன்பில் 'டைம்ஸ்' ஓர் சத்திய இயக்கமாக வளர்ந்தது. வெளியிடப்பட்ட 'இண்டஸ்ட்ரியல் ஸப்ளிமெண்டின்' - வருமானம் சிறிது காலம் தாக்குப் பிடித்தது. மகாதேவனின் குடும்பத்துக்கு மாதம் முதல் தேதி பிறந்ததும் ஐநூறு ரூபாய் உதவித் தொகை கொடுக்க ஏற்பாடு செய்து மிகவும் சிரமமான நிலைகளிலும் அந்த ஏற்பாட்டைத் தேதி தவறாமல் நாணயமாகக் காப்பாற்றி வந்தான் சுகுணன். மகாதேவனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அந்தக் குடும்பத்தாருக்கும் இப்போது அவன் மேல் ஒரு சகோதர பாசமும் நம்பிக்கையும் பெருகியிருந்தது. அந்த உழைப்பின் வேகத்திலும், அளவுக்கு மீறிச் சுற்றித் திரிந்து அலைய நேர்ந்ததிலும் சுகுணன் கறுத்து இளைத்துப் போயிருந்தான். வேளாவேளைக்குச் சரியாக உண்ண முடியாது போயிற்று. பல வேளைகளில் 'உண்ண வேண்டிய வேளை இது' என்பதை நினைவு கூறவும் முடியாமல் வேறு வேலைகளில் மூழ்கி இருக்கும்படி நேர்ந்தது. துளசியை மட்டும் அவன் சந்திக்கவே முடியவில்லை. கண்ணாடியில் எப்போதாவது முகத்தைப் பார்க்கும் போது கறுத்து இளைத்திருப்பது நினைவு வந்தால், 'இந்த நிலையில் துளசி தன்னைப் பார்த்தால் மிகவும் வேதனைப் படுவாள்' - என்பதும் சேர்ந்தே நினைவு வரும். அவள் ஊரில் இல்லையா, இருக்கிறாளா என்பதைக் கூட அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்து கொள்வதற்கு ஓய்வும் வாய்ப்பும் கூட இல்லை. ஊரில் இருந்தால் துளசி துரத்தித் துரத்தித் தனக்கு ஃபோன் செய்வாள் என்பதும் தவறாமல் ஞாபகம் வந்தது. அவளால் எங்கிருந்தாலும் தன்னைத் தேடி வராமல் இருக்க முடியாது என்பதையும் அவன் நினைவு கூர்ந்தான். மனிதனுக்குள்ளே மூலாதாரமாக மறைந்து கிடக்கிற நெஞ்சக்கனல் அன்பினால் தான் ஜ்வலிக்கிறது என்பதை உணர்வது போல் அத்தனை பரபரப்பான வேலைகளிடையேயும், 'துளசி வரவில்லை' - 'துளசி ஃபோன் செய்யவில்லை' - என்பதை அந்தரங்கமாக நினைப்பதிலிருந்து தன்னை அவனால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அது ஒரு ஞாபகமாகவும் ஏக்கமாகவும் கூட இருந்தது. ஆயிரம் பேர் துணை நிற்கிறார்கள், உதவுகிறார்கள், அன்பு செய்கிறார்கள் என்பதில் எல்லாம் கூட திருப்தி காண்கிற மனித மனம் - ஆன்மாவோடு கலந்து விட்டாற் போன்ற யாரோ ஒருவர் துணை நிற்க வரவில்லையே என்பதற்காக ஏங்குகிற இந்த அந்தரங்கத்தை எண்ணி வியந்தான் சுகுணன். ஒவ்வொருவனுடைய மனத்தையும் அவனுடைய வாழ்க்கை முழுவதும் இப்படி ஏங்க வைப்பதற்கு யாராவது ஒருத்தி இருப்பாள் போலிருக்கிறது என்றும் ஒரு பிரமையான தத்துவம் கூடத் தோன்றியது அவனுக்கு. வெளியே புறப்பட்டுப் போய் விசாரிக்கவும் - தெரிந்து கொள்ளவும் முடியாமல் அதிக நேரம் அருகிலிருந்தே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று 'நேஷனல் டைம்ஸில்' இருந்தது. செய்திகளோ, தந்திகளோ, கிடைக்கக் கிடைக்க அவற்றைப் பிரித்து வகைப்படுத்தி அச்சுக் கோர்ப்பவர்கள் கையில் கொடுத்து - அவர்கள் ஒவ்வொன்றாக அச்சுக் கோத்துக் கொடுத்த பின் பிழை திருத்தி மறுபடியும் சரி பார்த்து - அச்சிட வேண்டியிருந்தது. மற்ற தினசரிகளோடு போட்டியிட்டுச் செய்திகளை விரைவாகவும் முன்பாகவும் தருவதற்கு வேண்டிய வசதிகள் இதனால் குறைந்திருந்தன. விரைவாகக் 'கம்போஸ்' செய்வதற்கு 'டைம்ஸ்' போன்ற நல்ல தினசரிக்கு நவீன 'மானோ டைப்' இயந்திரம் ஒன்று தேவையாயிருந்தது. அந்த இயந்திரம் வைத்திருந்த மற்ற தினசரிகளோடு போட்டி போடவாவது டைம்ஸுக்கும் அது தேவையாயிருந்தது. 'மானோ டைப்' இயந்திரம் இல்லாததனால் சுகுணனும் பிழை திருத்துவோரும், இரண்டோர் உதவியாசிரியர்களும் அதிக நேரம் பாடுபட வேண்டியிருந்தது. கம்பாஸிட்டர்கள் மாற்றி மாற்றிக் 'கம்போஸ்' செய்ய அதிக நேரம் ஆயிற்று. நிறையப் புதுப்புதுச் செய்திகளைக் கொடுக்கவும் முடியாமலிருந்தது. 'கம்பாஸிட்டர்'களின் தொகையைக் கூடுதலாக்கலாம் என்றால் தமிழில் கம்பாஸிட்டர்கள் கிடைத்த அளவு ஆங்கிலத்தில் 'கம்போஸ்' செய்யத் தெரிந்தவர்கள் அதிகமாகக் கிடைக்கவில்லை. வலைபோட்டுத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது. கிடைக்காதபோது இருக்கிறவர்களை வைத்துக் கொண்டே சுகுணன் சிரமப்பட வேண்டியிருந்தது. சுகுணன் அந்தக் காரியாலயத்தில் பொறுப்புக்களை கவனிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இரவு பகல்கள் ஓடுவது தெரியாமல் போயிற்று. வேளா வேளைக்கு உணவு இல்லாததால் உடல் நலம் கெட்டு விட்டது. சரியான துணையோ, ஆதரவோ, அந்தரங்கம் புரிந்த நட்போ இல்லாமல் அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அந்த வேதனையிலும் ஒரு மன நிறைவு இருந்தது. 'சத்திய வீரன் ஒருவன் மடிந்த போர்க்களத்தில் அவனுடைய சத்தியப் பணியைத் தாங்கித் தொடர்ந்து போரிடுகிறேன்' - என்ற பெருமிதத்தை உணர்வதன் மூலமே தன் கவலைகளை அவன் மறக்க முடிந்தது.

     "இந்தப் பஞ்சைப் பயல்கள் எல்லாம் எத்தனை நாளைக்குப் பத்திரிகையை நடத்தி விட முடியும்? யானையைக் கட்டித் தீனி போடற காரியம் இது" என்று நாகசாமி தன்னைப் பற்றி யாரிடமோ அலட்சியமாகத் தெரிவித்திருந்த செய்தி, சுகுணன் காதுவரை எட்டியிருந்தது. 'வீரனை அவனறிய அலட்சியம் ச
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 3:30 pm

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

14

     ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசைதான். ஏனென்றால் அந்த எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை.

     எதிரே சுவரில் காலஞ்சென்ற மகாதேவன் நேருவுடன் சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்த புகைப்படம் முன்பு எப்போதோ எடுத்து மாட்டப்பட்டிருந்தது. டைம்ஸ் காரியாலயத்துக்கு ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயா வந்திருந்த போது எடுத்திருந்த புகைப்படம் ஒன்றும் அருகில் மாட்டியிருந்தது. இவ்வளவு பெரிய தலைவர்களுடனும், கவிஞர்களுடனும், கலைஞர்களுடனும் பழக்கமுள்ள ஒரு உண்மைத் தேசியவாதி நிறுவிய நல்ல பத்திரிகையே சரியாக நடக்க முடியாத இந்தத் தேசத்தில் மிட்டாய்க் கடை வைத்துப் பணக்காரர்களாகியவர்களும், சணல் ஆலை வைத்துச் செல்வம் குவித்தவர்களும், முதல் போட்டு நடத்துகிற ஏழாந்தர, எட்டாந்தரப் பத்திரிகைகள் கூட அற்புதமாகச் செலாவணியாவதை நினைக்கத் தொடங்கிய போது எதிரே ஒன்றையுமே பார்க்காமல் தளர்ச்சியோடு தளர்ச்சியாகக் கண்களை அப்படியே இறுக்கி மூடிக் கொண்டு விடவேண்டும் போல் தோன்றியது சுகுணனுக்கு. அந்தப் படங்களையும், சுவர்களையும் அப்பால் கவலையோடு தெரியும் கமலத்தின் முகத்தையும் பத்திரிகைக் காகிதப் பற்றாக்குறையை நினைவுறுத்தும் கேள்விக் குறி போல் நிற்கும் அச்சக ஃபோர்மெனையும் எதிர்கொண்டு பார்க்கவே கூசியவனாகக் கண்களை மூடினான் அவன். பத்து நிமிடங்கள் இப்படிக் கழிந்திருக்கும். சிந்தனையில் ஒன்றுமே வழி பிறவாத தளர்ச்சியில் கரைந்த விநாடிகள் அவை.


     யாரோ படியேறி நடந்து வரும் காலடியோசை கேட்டது. தொலைவிலிருந்து நெருங்கி வரும் அநுராகத்தின் மெல்லிய சங்கீதம் போல் மெட்டி ஒலி தாளமிட நடந்து வரும் மங்கலமான திருமகளின் காலடி ஓசையா அது? தரித்திரமும் தளர்ச்சியும், துயரமும் தற்காலிகத் தோல்விகளும், நிறைந்துவிட்ட டைம்ஸ் காரியாலயத்திற்குள் எங்கிருந்து வருகிறது இந்த இலட்சுமீகரமான இங்கித நாதம்? இந்த நாதத்தைத் தொடர்ந்து கொல்லென்று சுற்றிலும் மல்லிகை பூத்துக் குலுங்குவது போல் நறுமணமும் விரைந்து வந்தது. ஓசையும் வாசனையும் நெருங்கின. காதில் கேட்பதும், கருத்தில் உணர்வதும், உண்மையா சொப்பனமா என்ற தயக்கத்தோடும் இந்த உலகம் என்ற பிடிவாதமான புறக்கணிப்பாகிய நெற்றிக் கண்ணின் வெப்பத்தில் வாடிய வாட்டத்தின் சோர்வோடும் மெல்லக் கண்களைத் திறந்து எதிரே பார்த்தான் சுகுணன்.

     சித்திரம் போல் எதிரே நின்று கண்களில் நீர் அரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி. எதிரே அவன் பார்வையில் பாதாதிகேச பரியந்தம் அவள் தென்பட்டபோது - தரையில் பதித்த தாமரைகளைப் போல் தெரிந்த அவள் பாதங்களில் 'இந்தக் கால்கள் இன்னும் உங்களருகில் நெருங்கி வந்து நிற்க முடியாமல் பெரியோர்கள் நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நிச்சயித்து இப்படித் தடையும் போட்டு விட்டார்கள்' - என்பது போல் அப்படிப்போட்ட அழகிய தடைகளாக மெட்டிகள் வெளேரென்று மின்னிக் கொண்டிருந்தன. பவழமாய்ச் சாயமிட்டிருந்த அளவான அழகான நகங்களோடு தயங்கிய அந்தப் பாதங்களில் அவன் பார்வை நிலைத்தது. அவள் முகத்தைத் தொடர்ந்து ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. மனமும் இல்லை.

     "இதெல்லாம் என்ன? உடம்பு சரியில்லை என்றால் அதை அறிந்து கொள்ளக் கூடத் தகுதியில்லாத பாவியாகி விட்டேனா நான்?" 

     - அவள் குரலில் தயங்கிய பின் நிதானமாகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அவன் அவளுக்குப் பதில் கூறினான்:

     "இவை என்னுடைய சொந்த சிரமங்கள். நான் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ இன்று காரணமாயிருப்பவை இவை தான். இவற்றை பங்கிட்டுக் கொள்ள நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வறுமையின் துன்பங்களில் அவற்றைக் காண்பதற்காக என்னை விட வசதியுள்ளவர்கள் எதிரே வந்து நிற்பதை நான் விரும்பவும் முடியாது - இரசிக்கவும் வழியில்லை."

     - அவனுடைய வாய் சொந்தத் தளர்ச்சியினாலும், ஆற்றாமையினாலும், எழுந்த கோபத்தில் இப்படிப்பட்ட சொற்களை உதிர்த்தாலும், மனம் - தான் அவளை நோக்கி நியமித்து அனுப்பும் இந்தச் சொற்கள் மிகக் கடுமையானவை என்பதை உணர்ந்தே இருந்தன.

     அவளோ இந்த வார்த்தைகளில் சீற்றமடையாமல் கண்களில் நீர் நெகிழ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு ஒவ்வொரு வார்த்தையாக எண்ணித் தேர்ந்தெடுத்துத் தொடுத்து வாக்கியம் அமைத்துப் பேசுபவள் போல அவள் அவனை நோக்கிப் பேசினாள்:-

     "எனக்குத் தனியே என்னுடைய சொந்த சிரமங்கள் என்று பிரிக்கும் படியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் உங்களுடைய சிரமங்களையே என் சிரமங்களாக உணரப் பழகிவிட்டவள் நான். இந்த வரவு செலவுக்கணக்கிலும், உப்புப் புளிச் செலவிலும் தேய்ந்து விடாமல் - உல்லாசமாக - சுதந்திரமாக நீங்கள் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குள் இரவு பகல் உறங்காமல் இன்னும் நோன்பியற்றுகிறேன் நான்...! கோபத்தில் ஏதேதோ பேசுகிறீர்கள். பரவாயில்லை. ஆனால் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுடைய முதல் சிறுகதையைப் பாராட்டி உருகத் தொடங்கின நாளிலிருந்து உங்கள் மனக்கோவிலில் இலட்சுமீகரமாக நின்று - கற்பனையாகிய ஐசுவரியத்தைப் பொங்கச் செய்வது நானல்லாமல் வேறு யார்? நானா? இல்லையா? இல்லையென்று வாயால் துணிந்து நீங்கள் சொல்லிவிடலாம். நான் இன்னொருவருக்குக் கழுத்தை நீட்ட நேர்ந்து விட்ட துர்ப்பாக்கியம் உங்களை அப்படிச் சொல்ல வைக்கும். ஆனால் உங்கள் மனச்சாட்சியை நீங்களே பொசுக்கி விட முடியாது. உங்களுக்கு மனம் இருந்தால் அதற்கு நான் தான் சாட்சி. இன்றும் நாளையும் - ஏன் இந்த மண்டை வேகிற வரையும் அப்படித்தான். என்னுடைய வெறும் மாமிச உடம்பைத் தான் இன்னொருவருக்கு வாழக் கொடுத்திருக்கிறேன். அது நான் செய்த பாவம். மனம் - மனம் என்று வானளாவ எழுத்தில் எழுதியிருக்கிறீர்களே, அந்த அற்புத வஸ்துவை உங்களிடமல்லவா வைத்துவிட்டுப் போனேன்... நம்பி ஒப்படைத்துவிட்டுப் போன பொருளை இல்லையென்று ஏமாற்றுவதுதான் நியாயமா?"

     - துளசியின் பேச்சு இதுவரை இவ்வளவு கூராக அவன் நெஞ்சில் வந்து தாக்கியதே இல்லை. சோகத்தை கற்பித்துப் பேசுகிறவனின் சொற்கள் வேறு, சோகத்தை அனுபவிக்கிறவர்களின் சொற்கள் வேறு. சோகத்தை இதயத்திலிருந்து கொட்டுகிறவர்களுக்கு அந்தச் சோகமே சொற்களாக வருகின்றன. அது தன்னைப் போல் கற்பித்து எழுதியவர்களின் கற்பனைச் சோகத்தைப் பொய்யாக்கி விடுகிறது என்று அப்போது தோன்றியது சுகுணனுக்கு. துளசி அவ்வளவு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைத் தன் சோகமாகக் கொட்டி விட்டாள் அவன் முன். சிறிது நேரம் அவளுக்கு எதை மறுமொழி கூறுவது, எப்படிக் கூறுவது, எந்தச் சொற்களால் கூறுவது என்றே தெரியாமல் அவன் தயங்கினான். அந்த அறையில் அப்போது அவர்கள் இருவரைத் தவிர வேறெவரும் இல்லை. துளசி அழுது கொண்டே சுகுணனிடம் ஏதோ வினாவியதைக் கண்டு, 'இவர்கள் சொந்தப் பேச்சுக் கிடையே இனி இங்கும் நாம் நிற்கக்கூடாது' என்பது போல் கமலமும் கூட வெளியேறி முன் வராந்தாப் பக்கம் போயிருந்தாள்.

     தரையில் சாய்ந்து கொண்டிருந்த சுகுணன் பெருமூச்சு விட்டபடியே எழுந்து மறுபடியும் நாற்காலியில் வந்து அமர்ந்தான். துளசியும், அவனாக உட்காரச் சொல்லுகிற வரை உட்காருவதில்லை என்பது போல் எதிரே நின்று கொண்டே இருந்தாள். அவனோ மறுபடி பழைய கோபத்தை அடைந்து விட்டவன் போல்,

     "தயவு செய்து என்னைத் தனியே விடு துளசி! நான் படவேண்டிய துன்பங்களும், கவலைகளும் அதிகமாயிருக்கின்றன" - என்று கூறியபடியே முன்பு ஃபோனில் கிடைக்காத நண்பருக்கு மறுபடி டயல் செய்தான். இந்த முறை ஃபோனில் அவர் கிடைத்தார். சுகுணன் தன்னுடைய இயல்புக்கு மாறாக டெலிபோனில் அந்த நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருந்தது.

     "ரொம்ப நெருக்கடியான நிலைமை சார்! இந்த முறை எப்படியும் நீங்கள் உதவியே ஆகவேண்டும். ஒரு நல்ல மனிதர் தொடங்கிய காரியம் நின்று போய்விடக் கூடாது என்ற பிடிவாதத்துக்காகத்தான் நான் இதில் தலை கொடுத்து உழைக்கிறேன்..."

     "....."

     எதிர்ப்புறம் பேசியவர் எவ்வளவு தேவையாயிருக்கும் என்று கேட்டிருப்பார் போலிருக்கிறது.

     "சுமார் ஆயிரம் - ஆயிரத்தைந்நூறு ரூபாய் வரை தேவையாயிருக்கும்" - என்றான் சுகுணன்.

     "....."

     "எப்படியாவது பாருங்கள் சார்."

     "....."

     "அப்படியா?... பரவாயில்லை... சார்... உங்களைச் சிரமப்படுத்தி விட்டேன். மன்னியுங்கள்."

     - சுகுணன் சோர்வோடும், ஏமாற்றத்தோடும், டெலிபோனை வைத்துவிட்டு நிமிர்ந்த போது - எதிரே துளசி தன் கைப்பையைத் திறந்து பளீரென்று மின்னும் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளையும் அந்தப் பணத்தையும் இலட்சியம் செய்யாதவன் போல வேறு ஏதோ காரியங்களில் மூழ்கினான் அவன். அவனுடைய அந்த அலட்சியத்துக்காகக் கூட அவன் மேல் ஆத்திரப்பட முடியாத அவ்வளவு பிரியத்தை வைத்து விட்ட துளசியோ நிதானமாகப் பணத்தை எண்ணி ஓர் உறையில் போட்டு அதன் மேல் முத்து முத்தான எழுத்துக்களில் 'டைம்ஸுக்கு ஓர் அபலையின் நன்கொடை' - என்று எழுதி அவனிடம் அதை நீட்டினாள். அவன் அதை வாங்கிக் கொள்ள மறுத்தான்.


     "ஏன்? 'டைம்ஸ்' நின்று போய்விடக் கூடாதென்ற அக்கறையும், கவலையும் எனக்கு இருக்கக் கூடாதா?"

     "டைம்ஸுக்கும் அதன் பிடிவாதக்கார ஆசிரியனுக்கும் சில கொள்கைகள் உண்டு. உன் நன்கொடையை ஏற்க முடியாது."

     "இப்படிச் சொல்வது உண்மையாயிருந்தால் இன்று வரை சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை நீங்கள் என்னிடம் பிடிவாதமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்..."

     "என்ன உளறுகிறாய்? எதற்காக உனக்கு நான் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்?"

     "எத்தனை, எத்தனையோ பெயர்களில் நான் யார் என்று காண்பித்துக் கொள்ளாமலேயே - ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், பொன் வளையல், பொன் மோதிரங்கள், வைர நகைகள், என்று என்னுடைய சகல ஐசுவரியங்களையும், நீங்கள் 'டைம்ஸு'க்கு நிதி கோரி எழுதி அறிக்கை விட்ட போது பல ஊர்களிலிருந்து அனுப்பியிருக்கிறேன்; என்னுடைய இந்த நன்கொடை மறுக்கப்படுமானால் அவையும் மறுக்கப்படத்தானே வேண்டும்? இதோ நானே அப்படி அவற்றை அனுப்பியதற்கான தபால் இரசீதுகள்; பிரயாண டிக்கெட்டுகள் - எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்..."

     - ஒரு கொத்து விமான டிக்கெட்டுகளையும், மணியார்களையும் அனுப்பிய இரசீதுகளையும், பாங்க் டிராஃப்ட்கள் அனுப்பிய இரசீதுகளையும், இன்ஷூர் பவர் அனுப்பிய பதிவு சீட்டுக்களையும் ஆவேசத்தோடு தன் கைப்பையிலிருந்து அவன் மேஜை மேல் அள்ளிக் குவித்தாள் துளசி. அவள் அப்படிச் செய்திருப்பது சாத்தியமென்பதை உறுதியாக நம்பிய சுகுணன் அப்படியே மலைத்துப் போய் அவளை இமையாமல் நோக்கினான். தாங்கிக் கொள்ள முடியாத பெரு வியப்பாயிருந்தது அது. அவளோ ஒரு பாவமும் அறியாத பேதை போல், 'உங்கள் இதயத்தில் நிரம்பிக் கிடக்கும் இலட்சுமீகரம் நான் தான். என்னை அங்கிருந்து தயவு செய்து வெளியேற்ற முயலாதீர்கள்' - என்று இறைஞ்சுவது போல் கண்ணீர் மல்க அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கூறிய உண்மையை நிரூபிப்பது போல் அவள் கைகளில் நிறைந்திருந்த பொன் வளைகள், காதிலிருந்த வைர அணிகள், மூக்குத்தி, மோதிரம், கழுத்திலிருந்த வைர நெக்லஸ் எல்லாம் அந்த அந்த இடங்களில் இப்போது இல்லாது சாதாரணமான சில அணிகளோடு பொலிவற்று வெறுமையாயிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அவள் மேல் எல்லையற்ற கருணையும் பச்சாதாபமும் பெருகிட அவன் இப்போது அவளை நோக்கினான். அவனுக்குத் தொண்டை கம்மி அடைத்தது. குரல் கரகரத்தது.

     "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது துளசீ! இன்னொருவருடைய உடைமையாகிவிட்டவள் நீ என்பதை மறந்து விட்டாயா?"

     "மறக்கவில்லை! ஆனால் இது மனிதர்களின் உலகம். வெறும் அன்பினால் மட்டும் நமக்கு வேண்டியவர்களைக் காக்கவோ, வளர்க்கவோ இங்கு முடிவதில்லை. நமக்கு வேண்டியவர்களை அவர்களுடைய தேவைகளுக்குத் திண்டாட விட்டு விட்டுப் பிரியங்களுக்காக மட்டும் எதிர்பார்ப்பது நியாயமாகாது. இன்று இந்தத் துளசி எங்கோ தளிர்த்துத் தழைக்கலாம். ஆனால் இதன் ஆணி வேர் உங்கள் உள்ளத்தில் ஊன்றியிருக்கிறதே! வேர் இருக்கிற இடம் வாடினால் அது செடிக்கு மட்டும் நல்லதா என்ன? மணம் என்பது வேரிலிருந்து ஊறும் மூலப் பொருளாயிற்றே?"

     "உண்மைதான்! மற்றச் செடிகளுக்கும் துளசிச் செடிக்கும் கௌரவமான வேறுபாடு ஒன்றுண்டு. துளசி வேரிலிருந்து தளிர் வரை புனிதமாக மணக்கிறது. வாடினாலும் மணக்கிறது. அதன் பெருமையால் அது நிற்கிற மண்ணும் மணக்கிறது..."

     "தவறு! நிற்கிற மண்ணின் பெருமையால் தான் அது மணக்கவே முடிகிறது."

     "நீ உன் பெருந்தன்மையை அளவுக்கதிகமாக நிரூபிக்கிறாய் துளசீ! நான் இவ்வளவுக்குப் பாத்திரமாகத் தகுந்தவன் தானா என்று எனக்கே இப்போது சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய குணமோ பிடிவாதம். நான் உன்னிடம் அடிக்கடி பேசும் சொற்களோ கடுமையானவை. இருந்தும் நீ என்னை விடாமல் பிரியத்தினால் துரத்துகிறாயே? இதில் என்ன பயன் கண்டாய் நீ?"

     "பயனும், இலாப நஷ்டமும் பார்க்கிற சிறிய விவகாரமாக இதை நான் நினைக்கவில்லை. நான் மனப்பூர்வமாக வேரூன்றியிருக்கும் சத்தியமான மண் எதுவோ அது வாடக் கூடாது. அந்த மண் வாடினால் நானும் வாடியே தீர வேண்டும்..."

     "மணந்து கொள்ள முடியாமற் போன பின் 'மணக்க நினைத்திருந்தோம்' என்ற எண்ணத்திலேயே மணந்து கொள்வதை விடச் சிறப்பாக வாழ்கிறோம் நாம்..."

     "ஒப்புக் கொள்கிறேன். முதல் முதலாக உங்கள் கடுமையும் ஆத்திரமும் நீங்கி இன்று என்னிடம் ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளே என்னை உங்கள் முன் சௌபாக்கியவதியாக்குகின்றன. தயவு செய்து இந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து 'நியூஸ் பிரிண்ட்' கிளியர் செய்து வாங்க வழி செய்யுங்கள். பத்திரிகையின் வெளிவரவேண்டிய பதிப்புக் கால தாமதமில்லாமல் வெளிவரட்டும். என் உதவியைப் புறக்கணிக்காதீர்கள். நான் வாடாமலிருப்பதற்காக நானே செய்து கொள்ளும் உதவி இது..."

     "என்னைப் பெரிய கடனாளியாக்குகிறாய் துளசி?"

     "நானே உங்களுக்குக் கடன்பட்டிருக்கும் போது அது எப்படி சாத்தியம்?..."

     - சுகுணன் அவளை நோக்கி முழுமையாக முகமலர்ந்து புன்முறுவல் பூத்தான். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். சுகுணன் கமலத்தை அழைத்துப் பணத்தை அவள் கையில் ஒப்படைத்தான். அக்கௌண்டண்டிடம் கொடுத்து 'கிளியரிங் கிளார்க்' மூலம் பேப்பருக்கு ஏற்பாடு செய்யும்படி வேண்டியதோடு துளசியையும் சுருக்கமாக அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். பத்திரிகை நிற்காமல் காப்பாற்ற வந்த ஓர் அபூர்வ வன தேவதையைத் தொழுவது போல பாவனையில் துளசியை நோக்கிக் கைகூப்பினாள் கமலம்.

     'சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமையில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அந்த ஒரு விநாடி கூட சாசுவதம் தான். புகழையும் பொறுப்பையும் தாங்குகிற ஆயுதமாய்ப் பழியையும் பாராட்டுதலையும் நிர்ணயிக்கிற சக்தியாய்த் தன் கையிலிருக்கிற எழுதுகோலைப் போல் அவள் நினைவும் தன்னுள் சாசுவதமே' என்று முன்பு ஒருநாள் துளசியைப் பற்றி நினைத்த நினைப்பே இப்போது அவனுள் மிகுந்தது.

     "நான் புறப்படுகிறேன். நாளைக்கு மறுபடி டில்லி போக வேண்டுமாம். அப்பா நாளைக் காலை விமானத்தில் டிக்கட் வாங்கிவிட்டார். மறுபடி எப்போது சென்னை வருவேனென்று எனக்கே தெரியாது..." துளசி விடைபெற முயன்றாள்.

     "கொஞ்சம் உட்கார்! போகலாம்... உன்னோடு சிறிது பேச வேண்டும் போல் தாகமாயிருக்கிறது..." என்றான் சுகுணன்.

     "நீங்கள் சிறிது பேச விரும்பும் இதே தாகம் - நான் வாழ் நாள் வரை தவிக்க வேண்டிய ஒன்று என்பது ஞாபகமிருக்கட்டும்..." என்று கூறிக்கொண்டே எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் துளசி.

     "துளசி? உன்னை நான் முன்பு கடுமையாகப் பேசியிருக்கும் சில வார்த்தைகளுக்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஓர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய்ப் போய் விடுகின்றன? அதையும் ஒரு நிறைவாக ஒப்புக் கொள்கிற திருப்தியை இப்போது நீ எனக்கு நிரூபித்து விட்டாய். ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசை தான். ஏனென்றால் அந்த நிராசை என்ற எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை. திருப்தியில் ஆசை நெருப்பு நீறு பூத்து அவிந்து போய்ச் சாம்பலாகிக் குவிந்து விடுகிறது. நாமோ இப்போது பரிபூரணமாக நிராசையோடு எதிரெதிரே நிற்கிறோம். நம்முடைய இந்தத் தாபம் - இந்த ஆசை நெருப்பு என்றும் அணையவே அணையாது. ஆசையின் முடியாத எல்லை நிராசைதான் என்று எனக்கு இப்போது நன்றாக விளங்குகிறது. நிராசை தான் மனிதனை மயக்குகிறது. இல்லையானால் நிராசையில் முடிந்த அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, கதைகளில் மட்டும் ஏன் அத்தனை கவர்ச்சி உண்டாக வேண்டும்? தாபம், நிராசை, அதிருப்தி, குறைவு, தாகம், என்பன போல் நிறையாத மூளியான உணர்வுகளால் தான் மனிதன் தன்னுடைய சொர்க்கத்தைத் தேட வேண்டுமென்பது கடவுளின் சித்தம் போலிருக்கிறது."

     "....."

     "'நீ ஒரு பூமாலை' - என்று நீண்ட நாட்களுக்கு முன் ஒரு முறை உன்னிடம் கூறினேன்; நினைவிருக்கிறதா துளசி?..."

     "நினைவில்லாமலென்ன? 'வீரர்களின் கம்பீரமன தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும்' - என்று பின்னால் அதையே மாற்றி எழுதி எனக்கு வாழ்த்து அனுப்பினீர்களே? அது கூட நினைவிருக்கிறது."

     "தயவு செய்து இப்போது அதை மறந்து விடு துளசீ..."


     "எப்பொழுதோ படைத்த சொற்கள் நாம் அழிக்க முயன்றாலும் அழிவதில்லை. மனிதர்களின் முன்னோர்களில் யாரோ சிலர் சொற்களுக்கு உண்டாக்கி வைத்த மந்திர சக்தி இன்னும் அவைகளில் இருக்கிறது. வசை சுடுகிறது. புகழ் குளிரச் செய்கிறது. புகழ் மறந்தாலும் வசை மறப்பதில்லை... அது சொல்லின் சக்தி போலும்..."

     "நான் வசையாக எதுவும் உனக்கு எழுதவில்லை. என்னுடைய வசையிலும் - என் அன்பின் தொனி இருப்பதை நீ உணர்ந்திருக்கலாம்..."

     "உங்கள் சொற்களில் அன்பை உணர்ந்ததை விட வேதனையைத் தான் நான் அதிகமாக உணர்ந்தேன். அதற்காகவும் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் 'சாதாரண மனிதர்களின் வேதனைதான் அவர்களுக்குத் தவம். எல்லாராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற துன்பங்களே அவர்கள் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்' - என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி நான் செய்த தவம் இன்று பலித்திருக்கிறது..."

     "உண்மை! நாம் மனிதர்கள். பலவீனமான நம் அதிருப்திகளுக்கிடையேயும் அன்பினால் தான் நிமிர்ந்து நடக்கிறோம். வெளிப்படையாக உன்னிடம் பலமுறை நான் கடுமையான சொற்களைக் கூறியிருந்தாலும் எனக்குள் அந்தரங்கமாக உன்னை நினைத்து நினைத்துக் கருணை மயமாக நெகிழ்ந்திருக்கிறது என் உள்ளம். இன்னொருத்தியின் உள்ளத்தில் நாம் தவிப்பாகவோ - ஏக்கமாகவோ நிரம்பியிருக்கிறோம் என்ற ஞாபகமே ஒரு தவிப்பாக எரிந்திருக்கிறது என்னுள். அதை உன்னால் புரிந்து கொள்ள முடிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது?"

     "புரியாமலென்ன? 'வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சில் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் பயனில்லை' - என்று நீங்கள் ஒரு முறை என்னிடம் குத்திக் காட்டியிருக்கிறீர்கள். அதை உங்களை விட நன்றாக நான் உணர்ந்திருந்த காரணத்தால் தான் இப்போது கைகளாலும் உதவி செய்து சாட்சியாக நிற்பதற்கு வந்தேன். 'டைம்ஸ்' நடந்தால் தான் உங்களுடைய பெருமை காப்பாற்றப்படும் என்பதில் உங்களை விட எனக்குக் கவலை அதிகம்..."

     "குயிலைப் போல், கிளியைப் போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப் போல் பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள் தான் உண்டு என்று முன்பு நான் நினைத்திருந்தேன். 'விடாமல் நம்மைத் துரத்தும் இந்தக் காதல் பறவையின் மெல்லிய சிறகுகள் வலிக்குமே' - என்று கூடச் சில சமயங்களில் அந்தரங்கமாக உன்னை நினைத்து நான் பச்சாதாபப்பட்டிருக்கிறேன். ஆனால் உன்னுடைய அன்பின் சிறகுகள் மெல்லியவையாயினும் வல்லவைகளாயிருப்பதை - எவ்வளவு தூரம் வேண்டுமாயினும் துணைப் பறவையைத் துரத்திப் பறந்து வர முடிகிற அளவு வல்லவைகளாயிருப்பதை இன்று உன் செயல்களிலும், சொற்களிலுமிருந்து நான் நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது துளசீ"

     "....."

     சிறிது நேர மௌனத்துக்குப் பின் துளசி அவனிடம் சிறு குழந்தை போல் ஓர் அல்ப ஆசையைத் தெரிவித்தாள்.

     "தயவு செய்து இந்த ஆட்டோகிராப்பில் இரண்டு வரி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பீர்கள் அல்லவா. எனக்கு உங்கள் கையெழுத்துக்களைத் தினம் ஒரு முறையாவது கண் குளிரப் பார்க்க வேண்டும் போல ஆசையாயிருக்கும்."

     "என் எழுத்தில் என்னைப் பார்ப்பதை விட உன் இதயத்தினுள்ளேயே என்னை நீ சுலபமாகப் பார்த்துக் கொள்ள முடியுமே துளசீ...!"

     "இதுவரை நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டிய அவசியமில்லாது அருகிலேயே இருந்து விட்டேன். இப்போது தொலை தூரத்துக்குப் பிரிந்து போவதால் ஏதோ அல்ப ஆசை. உங்கள் கையெழுத்தையோ போட்டோவையோ நான் வேறுவிதமாகப் பார்க்க உலகம் ஒப்பாது. தயவு செய்து மறுக்காதீர்கள்" - என்று கூறியவாறே ஆட்டோகிராப்பை நீட்டினாள் அவள். அதில் தான் எழுத வேண்டிய பக்கத்துக்கு எதிர்ப்புறம் தனது சிறிய புகைப்படம் ஒன்று அளவாகக் கத்தரித்து ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டான் சுகுணன்.

    


Last edited by முழுமுதலோன் on Sun Feb 16, 2014 4:09 pm; edited 6 times in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by முழுமுதலோன் Sun Feb 16, 2014 4:12 pm

"மனிதர்கள் நாடும் ஆசைகள் இப்படி அல்பமானவை தான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத் தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மகாகவிகள் பெரிதாகக் கொண்டாடி எழுதியிருக்கிறார்கள்" - என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான் சுகுணன். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு கைப் பையின் உள்ளே வைத்தாள். மறுபடியும் அவள் கண்களில் நீர் திரண்டது.

     "அப்பா டில்லியில் என் சொந்த ஆடம்பரச் செலவுகள் அதிகமாயிருக்குமென்று மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார். இவருடைய சம்பளம் வேறு நிறைய வருகிறது. உங்களுடைய பத்திரிகையைக் காப்பாற்றுவதற்காக நான் பவுடர் ஸ்நோவைக் கூட விட்டாயிற்று. வீட்டுச் செலவையும் சொந்த ஆடம்பரச் செலவுகளையும் மீதம் பிடித்தாவது டைம்ஸுக்கு என் உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்."

     "மறுக்கவில்லை. என்னைத் துரத்தும் காதல் பறவையின் சிறகுகள் அவ்வளவிற்கு வலிமையானவை என்று உணர்ந்து அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன்."

     "நன்றி வேண்டாம். அது என்னை அந்நியமாக்குகிறது. அன்பு செய்யுங்கள், போதும். நான் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் என் மனத்தை நீங்கள் விட்டு விடாமல் பேணினாலே எனக்குத் திருப்தி தான்."

     - அவன் அவளை வழியனுப்புவதற்காகப் படியிறங்கி வாயில் வரை சென்ற போது அப்போதுதான் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. உள்ளே மெஷின் ஓடும் ஓசை கடமுட வென்று எழுந்தது.

     எதிர்ப்புறம் ஓரமாகப் பார்க் செய்திருந்த காரருகே அவள் சென்றாள். சுகுணன் அவளை விட்டுப் போக மனம் வராமல் இன்னும் வாயிற்படியிலேயே நின்று கொண்டிருந்தான். காருக்குள் ஏறி உட்கார்ந்தவள் ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் மறுபடி கதவைத் திறந்து கொண்டு இறங்கித் தயக்கத்தோடு நடந்து அவனருகே வந்தாள்.

     "என்னை மறந்து விட மாட்டீர்களே...?" கேட்கத் தொடங்கியவள் விம்மிக் கொண்டு வரும் அழுகையை உள்ளேயே அடக்க முயல்வது குரலில் தெரிந்தது. சுகுணனின் இதயத்தை வேதனை பிசைந்தது. இத்தனை பெரிய பிரிவாற்றாமை அவன் நெஞ்சை இதுவரை சுமையாக அழுத்தியதே இல்லை.

     "அசடே! பைத்தியம் போல இப்படித் தெருவில் அழலாமா? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரணமாக ஒப்படைத்து விட்ட ஒருத்தியின் உடம்பை யார் மணந்து கொண்டால் தான் என்ன? உண்மையில் அந்த நம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவா அந்த மனத்தை ஆள்கிறான். என்னை நம்பு. கவலையின்றிப் போய் வா! நீ இதயபூர்வமாக நோன்பியற்றுகிற வரை என் எழுத்திலும் இந்தப் பத்திரிகையிலும் இலட்சுமீகரம் குறையவே குறையாது" - என்று அருகே வந்தவளிடம் நாத் தழுதழுக்கக் கூறினான் அவன். சில விநாடிகள் குனிந்து பூமியையே பார்த்துக் கொண்டு தயங்கி நின்ற துளசி - தொண்டையை அடைக்கும் குரலில் "வருகிறேன்..." என்று கூறிவிட்டு மீண்டும் காரை நோக்கி நடைப்பிணமாகச் சென்றாள். அந்தப் பிரியும் நேர மன நிலைக்குப் பொருத்தமாக அமைந்தாற் போல, 'மனிதர்களின் ஆசைகளே இப்படி அல்பமானவை தான்' - என்று அவளுடைய கையெழுத்து நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதியதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அவன்.

     அவள் கார் புறப்பட்டது. நகரும் காரிலிருந்தே ஒரு கையை ஸ்டியரிங்கில் வைத்தபடி இன்னொரு கையை உயர்த்தி ஆட்டி விடை பெற்றாள் அவள். அவனும் வலது கையை உயர்த்தி ஆட்டினான். கார் தெருத் திரும்புகிற வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சுகுணன். மனத்தில் ஏதோ ஊமையாக அழுதது. அடுத்த கணமே அங்கு ஒரு திடமான சமாதானமும் பிறந்தது.

     'ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கு மற்றொருவர் அர்ப்பணமாகிவிடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கனிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது' - என்று எண்ணியபடியே மேலே படி ஏறி அலுவலகத்துக்குள்ளே திரும்பினான் அவன். இனி அடுத்த வினாடியிலிருந்து ஓர் இலட்சியப் பத்திரிகாசிரியனை நோக்கிச் சமூகத்திலிருந்து திறக்கும் எத்தனையோ நெற்றிக் கண்களைப் பொறுத்துக் கொண்டு அவன் வெதும்பி விழுந்து விடாமல் நிற்க வேண்டியிருக்கும். அந்த நெற்றிக் கண் சூடுகளை அவன் இனிமேல் தளராது தாங்க முடியாது. அவனுக்குள் இருக்கும் மற்றொரு இதயத்தின் அன்பு அதற்குத் துணை செய்யும். அந்த அன்பில் அவன் வேதனை இருக்கிறது. அந்த வேதனையில் தான் அவன் அன்பும் இருக்கிறது. சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குப் பெரிய தவம். ஏனென்றால் வாழ்க்கையை விட்டு விட்டுக் காட்டுக்குப் போய் வேறு தனித் தவம் செய்ய அவர்களால் முடியாது.


     உள்ளே போய் அமர்ந்த சுகுணன் அன்றைய 'டைம்ஸ்' பதிப்புக்குத் தலையங்கம் எழுதப் பேனாவை எடுத்தான். வெளியே மாலை இருள் மயங்கத் தொடங்கியிருந்தது. கார் ஹார்ன் ஓசைகளும், மனிதர்களின் குரல் விகாரங்களும் நெருக்கியடித்துக் கொண்டு கேட்கத் தொடங்கின. இருந்தாற் போலிருந்து மகாதேவனோடு தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலை கண்முன் மானசீகமாக ஓடுவது போல் ஒரு பிரமை நிழலாடியது. அவன் எழுதத் தொடங்கினான். சக்தி வாய்ந்த சொற்கள் அவன் நியமித்த வேகத்தோடு - விதியோடு காகிதத்தில் போய் இறங்கி உருவாகி நின்றன.

     ஒரு நல்ல பத்திரிகையாளனுக்கு இரண்டு கவலைகள் உண்டு. சமூக நியாயத்தைப் பற்றிய கவலைகள். சொந்த நியாயங்களைப் பற்றிய கவலைகள். அவனுக்குச் சொந்தமென்று எதுவுமில்லை. ஆனால் அவனுள்ளும் ஒரு கவலை இருந்தது. மறுபடியும் கூறினால் அந்தக் கவலை தான் அவன் வேதனை. அந்தக் கவலை தான் இன்று அவன் மகிழ்ச்சி. இரண்டும் வேறு வேறு இல்லை. தன்னுடைய வறுமைக்காகவும் பிறருடைய அறியாமைகளுக்காகவும் சேர்த்துப் போராட வேண்டிய ஒரு தேசத்தில் தான் வாழ்கிறோம் என்பதை இனி ஒவ்வொரு கணமும் அவன் நினைவு கூர்ந்தாக வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கும். வறுமை உள்ளவர்களிடம் நல்லெண்ணமும் வசதி உள்ளவர்களிடம் அலட்சியமும் மிகுந்த ஓர் இரண்டுங்கெட்டான் தேசத்தில் நியாயங்களைச் சாதிக்க முயலுகிற ஓர் இலட்சியப் பத்திரிகையாளனின் சிரமங்கள் எல்லாம் இனி அவன் அடைய வேண்டியிருக்கும். புதுமைக்கும், வளர்ச்சிக்கும் செவி சாய்த்து வரவேற்கும் மனப்பான்மையில்லாத ஓர் ஆட்டுமந்தைக் கூட்டத்தைத் திருத்துவதற்குப் பிடிவாதமும், இலட்சியமும் மட்டும் போதாதென்பதை ஒவ்வொரு கணமும் அவன் உணர வேண்டியிருக்கும். பிடிவாதமும், இலட்சியமும் சாதிக்க முடிந்ததை விடச் சாதுரியமும் சமயோசித புத்தியுமே அதிகமாகச் சாதிக்க முடியும் என்ற சாதாரண நடைமுறை உண்மையையும் எதிர்கொண்டாக வேண்டியிருக்கும். அறியாமைக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியது தவிர வெறும் மனிதர்களின் சூழ்ச்சிக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியிருக்கும் என்று இனி அவன், உணரவும் நேரிடலாம். யாருடைய அநியாயங்களை எதிர்த்து அவன் குரல் கொடுக்கிறானோ அந்த அநியாயங்களைப் பயிர் செய்து பிழைப்பவர்கள் அவனை நோக்கிக் கோரமான நெற்றிக் கண்களைத் திறந்து வெதுப்பவும் முயலலாம். ஆனால் அதற்காக அவன் தயங்கவோ, தளரவோ முடியாது. அவன் தனக்குள் அணையாமல் காக்கும் அன்பு என்கிற வேள்வி நெருப்புத் தான் சமூகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து அவனை நோக்கித் திறக்கும் இந்தக் கோரமான அனல் விழிகளிலிருந்து மீளும் சத்தியத்தை இனி அவனுக்குத் தரவேண்டும் போலும்!

(முற்றும்)
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி Empty Re: நெற்றிக் கண் - தீபம் நா. பார்த்தசாரதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum