தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

View previous topic View next topic Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by பித்தன் Tue Dec 31, 2013 7:50 am

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நேற்றைய இரவு இயற்கை எய்தினார். அவருக்காக அமர்க்களம் வருந்தி கண்ணீர் வடிக்கிறது.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 8:12 am

மிகவும் வருத்தமான செய்தி இது... இயற்கை வழி நடக்க போதித்த ஆசானின் மறைவுக்கு வருந்துகிறேன்...

ஓர் ஆய்வின் பொருட்டு அவரைச் சந்திக்கத் திட்டம் தீட்டப்பட்டிருந்தது...

வருத்தம் மேலிடுகிறது...

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Tamil_News_large_88479520131230214728

பட்டுக்கோட்டை: இயற்கை வேளாண் அறிவியலர் நம்மாழ்வார் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு அகவை 75. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற ஊரில் 1938 ஆம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது வேதியல் உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் தீங்குகளை அறிந்த அவர், வேளாண் முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளைத் தமிழகத்தில் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக இப்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு முதன்மைக் காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் ஆகிய இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், இன்று பட்டுக்கோட்டையை அடுத்த அத்திவெட்டியில் மரணமடைந்தார்.

கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரிப் பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார்.

இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது முதுமையையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினமலர், தமிழ் இந்து
மின்னஞ்சல் பகிர்வு -இலக்குவனார் திருவள்ளுவன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 8:16 am

இயற்கை வேளாண்மையை வலியுறுத்திய
திருமிகு நம்மாழ்வார்
இழப்பு ஈடுசெய்ய முடியாதது.
கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திட வேண்டிய
நம்மாழ்வாரை
நாம் மண்ணுக்குள்ளே வைக்கிறோம்.
நம்மாழ்வாரின் அறிவைப் பயன்படுத்த
வேண்டிய நாம் அவரைப்
போராட வைத்து
மரணிக்க வைத்து விட்டோம்.
நெஞ்சு வெடிக்கிறது.
என்று விடியும் இந்த நிலை ?

-பொள்ளாச்சி நசன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 8:18 am

விரதமே மகத்தான மருத்துவம்!
இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் 558686_437688222949978_1723530868_n

இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப் பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழல்கிறது நம்மாழ்வாருக்கு. ''75 வயதிலும் எப்படி இப்படி ஒரு சுறுசுறுப்பு?'' எனக் கேட்டால், சிறு குழந்தையாகச் சிரிக்கிறார் நம்மாழ்வார்.

''எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே, 'உணவே மருந்து; மருந்தே உணவு’ன்னு திருமூலர் சொல்லிட்டுப் போயிட்டார். இந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள்தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது, நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால், நமக்கு இன்னல்கள் இருக்காது.

'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ என்ற குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கான வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை அறிந்து, அதன் பிறகு உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை எனச் சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

எதை, எப்போது, எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குறோம். ஆனால், அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து, கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான், 'நொறுங்கத் தின்றால் நோய் தீரும்!’ எனப் பழமொழியாகச் சொன்னார்கள். அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது. சரி, அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி, உண்ணாநோன்பு. இதைத்தான் 'விரதம்’ என்ற பெயரில் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள். 'நோயிலே படுப்பதென்ன கண்ண பரமாத்மா, நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பரமாத்மா’ எனப் பாடினார்களே... அந்த நோன்புதான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனைக்கூட உயிர்த்தெழுச் செய்யும் சக்தி உண்ணா நோன்புக்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் 'தெரப்பூட்டிக் பாஸ்ட்டிங்’ (Theraupeutic fasting) என்று சொல்கிறார்கள். இன்றைக்கு சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

அடுத்ததாக, எதைச் சாப்பிட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நம் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 'வெந்ததைக் குறைத்தால் வேதனையை குறைக்கலாம்’ என்பார்கள். அதாவது வேகவைத்த உணவைக் குறைத்துக்கொண்டு பச்சைக் காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன். 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக்கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்குக் காரணம் எனது உணவுப் பழக்கங்கள்தான்!'' - விழி விரியவைக்கும் அளவுக்கு ஆச்சரியமாகப் பேசுகிறார் நம்மாழ்வார். அடுத்து, மூலிகைகளை நோக்கி நீள்கிறது பேச்சு.

''இயற்கை நமக்குக் கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டை. இதைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்குப் பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, மொசுமொசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற மணத்தக்காளி, வெட்டுப் புண்களை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை, அனைத்துக் கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மைச் சுற்றி வளர்ந்துகிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே பாதி நோய்கள் காணாமல் போய்விடும்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார், உடலின் மகத்துவத்தையும், யோகாவின் சிறப்பையும் சொல்லத் தொடங்கினார்.

''இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் உடம்பு வலிக்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முயற்சி. அதைத் தடுக்கக்கூடாது.

50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது, அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளேதானே இருக்கிறது! அதனால், உடலைப் பராமரிப்பதும் அவசியம். இது இரண்டையும் ஒரே நேரத்தில் பராமரிக்க உதவுவதுதான் யோகா. நான் நீண்ட காலமாக யோகா செய்து வந்தாலும், 'ஈஷா’ பயிற்சியில்தான் அதை முறைப்படுத்தினேன். தினமும் காலையில் நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா செய்கிறேன்.

ஈஷா யோகா பயிற்சியின்போது நடந்த நேர்காணலில், 'யோகா செய்வதன் மூலம் நோய்கள் குணமாகும் என்றால், எதற்காக இத்தனை மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருக்கின்றன?’ என சத்குருவிடம் கேட்டேன். 'நாட்டில் தினமும் ஆயிரக் கணக்கில் விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்க முடியாது அல்லவா? அவர்களுக்குத் தேவை, அவசர சிகிச்சை. அதற்காகத் தான் மருத்துவர்களும், மருத்துவமனைகளும்!’ என்று அவர் அமைதியாகச் சொன்னார்.

அவர் சொன்னது உண்மைதான். ஆங்கில மருத்துவத்தை அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாத்திரை, மருந்துகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது, அதுவே உடம்பில் பல உபத்திரவங்களை உண்டாக்குகிறது.

மொத்தத்தில், சரியான பழக்க வழக்கங்களும், உடலைப் பேணும் உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் இருந்தாலே நோய்க்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிடலாம்!'' எனச் சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக இப்படிச் சொல்கிறார் வாழ்வியல் மந்திரத்தை.

''கணியன் பூங்குன்றனார் சொன்ன 'தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது. அந்த வரிகளை மனதில் ஏற்று இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்வின் சிறப்புக்குக் குறைவே இருக்காது!''.

- நன்றி சக்தி விகடன்


பாரம்பரியம் காக்க போராடிய நம்மாழ்வார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 8:19 am

நன்றி மின்னஞ்சல் - Muthamizh Vendhan
நம்மாழ்வார்க்கு ஆழ்ந்த இரங்கல்!....

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ( வயது 78 ) காலமானார். பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து, போராட்டம் நடத்த சென்றிருந்தார். அங்கு உடல் நலக்குறைவால் அவர் காலமானார்.

இயற்கையை திட்டமிட்டு கொள்ளையடித்து , பூமியையே மலடாக்கி வரும் ஆதிக்க கூட்டத்தை எதிர்த்து அவர் மாபெரும் யுத்தத்தையே நடத்தி வந்தார். தமிழ் சமூகத்திற்கு மாபெரும் இழப்பு அய்யாவின் மறைவு...

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 8:20 am

நன்றி மின்னஞ்சல் - ரவிக்குமார்

திரு நம்மாழ்வார் அவர்களுக்கு அஞ்சலி

- ரவிக்குமார்

இயற்கை வேளாண்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், வேளாண்துறை சார்ந்த பிரச்சனைகளைக் கவனப்படுத்துவதில் ஓய்வு ஒழிவின்றி செயல்பட்டவர், தான் பேசியதுபோலவே வாழ்ந்தவர் – வேளாண் விஞ்ஞானி எனப் பரவலாக அறியப்பட்ட திரு நம்மாழ்வார் அவர்கள் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்.

காவிரி சிக்கல் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் பங்கேற்றபோதுதான் இறுதியாக அவரை சந்தித்தேன். நாகை மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் அண்மைக்காலமாக முனைப்பாக அவர் ஈடுபட்டிருந்ததை செய்திகளில் பார்த்து வந்தேன். ஆரோக்கியமாகத்தான் தெரிந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த அவரைப் பார்த்தவர்கள் அவரது வயதைக் கவனித்திருக்க மாட்டார்கள்.

இயற்கை வேளாண்மைமூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றபோதிலும் நாடுமுழுவதும் முழுமையாக அந்த முறைக்கு மாறிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி மாறினால் மீண்டும் பஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கானோர் மடியக்கூடும் என்ற அச்சமும் எனக்கு உண்டு. இயற்கை வேளாண்மை என்பது வெறும் தனிமனித விருப்பம் அல்ல. நிலவுடைமை, நிலங்களின் பயன்பாடு, அரசாங்கக் கொள்கை முதலானவற்றோடு தொடர்புகொண்டது. இந்திய வேளாண்மையைத் தீர்மானிப்பதில் பருவநிலைகளைவிட அரசாங்கமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று கார்ல் மார்க்ஸ் கூறிய கருத்தை ஏற்பவன் நான். இருப்பினும் திரு . நம்மாழ்வார் அவர்களின் கொள்கைப் பிடிப்பை நான் மதிக்கிறேன்.

ஒரு ஹெக்டேரில் விளையும் தானியத்தின் அளைவ எடுத்துக்கொண்டால் உலக அளவிலான சராசரியை விட இந்திய உற்பத்தி இருபத்தாறு விழுக்காடு குறைவாக உள்ளது என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கானக் காரணங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஒன்று.
நமது வேளாண் பிரச்சனைகைளைத் தீர்ப்பதற்கு நதிகளை இணைக்க வேண்டும் என்பது பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜகவும் கூறியிருக்கிறது. நதிகளை இணைப்பதில் உள்ள பிரச்சனைகளை சூழலியலாளர்கள் எடுத்துக்கூறி வருகின்றனர். நதிகளை இணைப்பதைவிடவும் நமது மாநிலத்தில் உள்ள ஏரிகளை இணைத்து அவற்றின் தண்ணீரை சரியாகப் பயன்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவது அவசியம்.
நமது மாநிலத்தில் உள்ள ஏரிகளை நவீனப்படுத்தி அவற்றை முடிந்த அளவு கால்வாய்களால் இணைத்து ஒருங்கிணைந்த நீர் ஆதார அமைப்பை (Water Resource Grid) உருவாக்குவதன் மூலம் ஓரிடத்தில் உபரியாக உள்ள நீரை பற்றாக்குறை பகுதிகளுக்குக்கொண்டு செல்லமுடியும். அதன் மூலம் தொடர்ச்சியாக சாகுபடியை செய்வது சாத்தியமாகும். இதில் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை ஈடுபடுத்த ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட தமிழக அரசு முன்வரவேண்டும்.
மண் மேலாண்மை நடவடிக்கைகளின் மூலமும், ஏரிகளின் நீர்ப்பிடிப் பகுதிகளை செப்பனிட்டு அவற்றின் திறனை அதிகரிப்பதன் மூலமும் உற்பத்தி அளவைக் கூட்ட முடியும். 2007 ஆம் ஆண்டின் விவரப்படி தமிழ்நாட்டில் பத்தொன்பது மண் பரிசோதனை நிலையங்களும், பதினாறு நடமாடும் மண் பரிசோதனை நிலையங்களும் இருந்தன. இவை போதாது. கடந்த ஆட்சியின்போது இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அந்த விவரங்களின் அடிப்படையில் விவசாயிகளுக்கு இடுபொருட்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இது தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் செய்யப்பட்டால் உற்பத்தி கூடும்.

திரு நம்மாழ்வார் அவர்கள் இயற்கை வேளாண்மையைப் பிரபலப்படுத்தியவர் என்பதைவிடவும் காலியாகிக்கொண்டிருக்கும் கிராமங்கள் குறித்தும், வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும் நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் என்ற அம்சமே எனக்கு முக்கியமாகப் படுகிறது. அவரது பணி நீண்டகாலத்துக்கு நினைக்கப்படும். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by முழுமுதலோன் Tue Dec 31, 2013 8:24 am

பசுமையின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களும் வருத்தங்களும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 9:56 am

இயற்கை வழி நடப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by முரளிராஜா Tue Dec 31, 2013 12:52 pm

மிகவும் வருத்தமான செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by மகா பிரபு Tue Dec 31, 2013 1:25 pm

இயற்கையை காத்து அவரது ஆன்மாவை சாந்தி அடைய செய்வோம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:59 pm

“வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி”

அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்

தோழர் பெ.மணியரசன் அறிக்கை



இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்களது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்கியிருக்கிறது. கடந்த ஒரு வார காலமாக அவர் நோய்வாய்பட்டிருந்த போதும் அவர் இயற்கை எய்திவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.



காவிரிப் படுகையான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மீத்தேன் எரிவளி எடுப்பதற்கும், அதன் பிறகு நிலக்கரி எடுப்பதற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய அரசுக் குத்தகைக்கு விடுத்துள்ளது. இத்திட்டத்தால் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயத்தை விளக்கி, கிராமம் கிராமமாகச் சென்று மக்களைத் திரட்டுகின்ற களப்பணியில், கடந்த ஓரு மாதகாலமாக அவர் ஈடுபட்டிருந்தார். இந்திய அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுச் சதியான, மனித குலத்திற்கே விரோதமான இத்திட்டத்தை முறியடிக்கும் போராட்டக் களத்திலேயே அவர் நம்மைப் பிரிந்துள்ளார்.



திரு. கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.



திரு. கோ.நம்மாழ்வார் அவர்கள், அடிப்படையில் மனித சமத்துவம், சமன்பாட்டு அடிப்படையில் உயிர்களின் வாழ்வுரிமை ஆகியவற்றின் நிலை நின்றதால், இயல்பாக அவர் இயற்கை வேளாண்மை என்றத் துறையை தமது வாழ்நாள் சாதனைத் துறையாக ஆக்கிக்கொண்டார். தமிழர் மரபு பல்வேறு வளமான அறிவியல் கூறுகளைக் கொண்டது. அப்படிப்பட்ட தமிழர் மரபின் மிகச் சிறந்த நிகழ்காலப் பிரதிநிதியாக, நம்மாழ்வார் அவர்கள் செயல்பட்டார்கள்.



‘நிலம் நமது தாய், அது விற்பனைக்கல்ல’ என்பதை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சொல்லிவருகிறது. இதுபோன்ற ஒரு கொள்கையை நம்மாழ்வார் அவர்கள் தமது சொந்த சிந்தனைப் போக்கில் அவரது சொற்களைக் கொண்டு பல்லாண்டுகளாக பட்டித் தொட்டியெங்கும் பரப்பிவந்தார்.



பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை இலாபக் களங்களாக வேளாண் நிலங்கள் மாற்றப்பட்டு, வேதி பொருட்களின் நச்சுக் குவியலாலும் மரபீனி மாற்றப் பயிர்கள் என்ற இயற்கை அழிப்புத் திட்டங்களாலும் பாழ்பட்டுப் போன நிலங்களை, அந்த அழிவிலிருந்து காப்பாற்ற இயற்கை வேளாண் முறையை வளர்த்து செயல்படுத்தி வந்தார். இயற்கை முறையில் புதிய உரங்கள் மட்டுமின்றி, பூச்சி விரட்டிகளையும் உருவாக்கினார். மரபீனி மாற்றப் பயிர்கள் என்ற பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக உழவர்களைத் திரட்டிப் போராடினார்.



வேளாண் துறை மட்டுமின்றி சமூகவியலிலும் முற்போக்கான கருத்துகளை பரப்பிவந்தார். அவர் ஒரு சாதி மறுப்பாளர், மதச்சார்பற்றவர், சமூக சமத்துவக் கொள்கையாளர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிய தமிழ்த்தேசியர். தமிழர்கள் இன அடிப்படையில் இந்தியாவிலும், ஈழத்திலும் ஒடுக்கப்படுவதை எதிர்த்தப் போராட்டங்களில் பேரணிகளில், கலந்து கொண்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் தாமே தலைமைத் தாங்கியும், மற்றவர்களையும் கூட்டாக பங்கெடுக்க வைத்தும் செயல்பட்டவர்.



ஈழ விடுதலைக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களில் பங்கெடுத்தவர். வேளாண் அறிஞர் என்று அந்தத்துறையோடு ஒதுங்கி இருக்காமல் சமூகத்துறை பலவற்றின் உரிமை சமத்துவத்திற்காகப் போராடியவர்.



நமக்கு மரபுரிமையாக உள்ள வேம்பு போன்றவாற்றின் காப்புரிமையை வெளி நாட்டு ஏகபோக நிறுவனம் ஒன்று தமக்குரிய சொத்தாக காப்புரிமை செய்துத் திருடிக் கொண்டபோது அதனை எதிர்த்து வந்தனா சிவா அவர்களுடன் இணைந்து வழக்காடி (வேப்பமரம்) வேம்பு உரிமையை மீட்டுத்தந்தார்.



அவர் சொல்லும் வேளாண்முறை, மருத்துவம் ஆகியவற்றை நடைமுறைப் படுத்திக் காட்டும் செயற்களமாக ‘வானகம்’ என்ற வேளாண் குடியிருப்புப் பண்ணையை உருவாக்கினார். அதுமட்டுமின்றி தமது கொள்கை சிந்தனைகள் தம்மோடு நின்று போய்விடாமல் இளைஞர்களையும், உழவர்களையும், தமிழகமெங்கும் பயிற்றுவித்து பணி செய்ய வைத்தார்.



திரு. கோ.நம்மாழ்வாரின் பணிகளும், சிந்தனைகளும் செயல்களும் அவரோடு முடிந்துவிடாமல் தொடரும், மேலும் மேலும் தமிழ்நாட்டில் வளரும். நாம் அவற்றை வளர்க்க வேண்டும்.



ஆட்சிகளும், அரசு அங்கீகாரம் பெற்ற வேளாண் வல்லுனர் என்ற பெரும் புள்ளிகளும் தமிழக வேளாண்மையை, வேளாண் நிலங்களை பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக் காடாக மாற்றிக் கொன்றுவிட்ட நிலையில், அவ்வளவு பெரியப் பகைவர்களை எதிர்த்துப் போராடி இயற்கை வேளாண் முறையை மாற்றுத் திட்டமாக வைத்து ஆட்சியாளர்களும் அதுபற்றி சிந்திக்க வேண்டிய நிலையை உருவாக்கிய அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்!



அவர் வழிகாட்டிய பாதையில் அவரது கொள்கைகளை வலுவாக எடுத்து செல்வோம். அய்யா நம்மாழ்வார் அவர்களை இழந்து வாடும் தமிழ் மக்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.



இங்கணம்,

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by ஸ்ரீராம் Tue Dec 31, 2013 3:49 pm

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிரிவு நம்மால் ஈடு செய்ய முடியாது. அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரின் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

இந்த பதிவை தொடங்கிய நண்பர் பித்தன் அவர்களுக்கும், பலரின் கருத்துக்களை தொகுத்து வழங்கி வரும் கவிஞர் கவியருவி ம. ரமேஷ் அவர்களுக்கும் நன்றிகள் பல...!!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார் Empty Re: இயற்கை வேளாண் விஞ்ஞானி இயற்கையெய்தினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum