தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

View previous topic View next topic Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:31 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

ரங்கோன் ராதா

1

     "ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

     என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.


     "நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

     ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

     காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

     "விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.


     ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

     என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

     நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.


     நண்பனின் கண்களிலே தீ கொப்புளித்தது. ஆத்திரத்துடன் பேசினான். "ஆறு மாதத்துக்கு முன்பு நீ பெருந்துறைக்குப் புறப்பட்டாயே, அப்போது நான் எங்கே போகிறாய் என்று கேட்டேனல்லவா?" என்றான். "ஆமாம்" என்றேன் நான். பெருந்துறைப் பிரயாணத்துக்கும் ராதாவுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆச்சரியப்பட்டு, "பெருந்துறைக்குப் போகிறேன் என்று ஏன் என்னிடம் உண்மையைச் சொல்லவில்லை? ஏன் உன் நண்பனிடத்திலேயே உண்மையை மறைத்தாய்?" என்று கேட்டான். "போடா பிரமாதமான தவறு கண்டுபிடித்துவிட்டாய்! நீயோ, இளகிய மனதுள்ளவன். எனக்கு இரண்டொரு மாதங்களாக இருமலாக இருந்தது; சில டாக்டர்கள் அது எலும்புருக்கியோ என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். பெருந்துறை சென்று பரீட்சித்துக் கொண்டு வருவோம் என்று கிளம்பினேன். உன்னிடம் அதைச் சொன்னால் நீ உண்மையிலேயே எனக்கு எலும்புருக்கி நோய் கண்டுவிட்டது என்று எண்ணிக் கஷ்டப்படுவாய் எனப் பயந்து, பெருந்துறை போவதைச் சொல்லவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

     "அதே போலத்தான் இதுவும். உனக்கொரு சந்தேகம் நோயைப்பற்றி. என்னிடம் சொன்னால் நான் உனக்கு நோயே இருப்பதாக எண்ணிக்கொள்வேன் என்று பயந்து உண்மையை மறைத்தாய். அதுபோலவே, நான் ராதாவைப் பற்றி உண்மையைக் கூறப் பயப்படுகிறேன். நீ அவளைப் பற்றி தாழ்வாக மதிப்பிட்டு விடுவாயோ, என்னையும் கேவலமாக எண்ணிக் கொள்வாயோ என்று. அவளைப் பற்றி நான் கண்டறிந்த விஷயம் இருக்கிறதே, அதை நான் மறைக்க வேண்டியவனாக இருக்கிறேன். அந்த விஷயமும், எலும்புருக்கி நோய் போன்றதுதான்" என்றான் நாகசுந்தரம். "பைத்தியக்காரா! நான் பெருந்துறைக்குப் போன பிறகு எனக்குச் சாதாரண இருமலே தவிர எலும்புருக்கி அல்ல என்று தீர்மானமாகிவிட்டது. தெரிந்ததல்லவா? இதோ காளை போல இருக்கிறேன்!" என்று நான் சொன்னேன். "அதைப்போலத் தான், காதல் சிகிச்சை சாலையில் ராதா பரிசோதிக்கப்பட்ட பிறகுதான், அவள் மாசற்றவள் என்று தீர்மானிக்க முடியும். அதற்காகத்தான் உன்னைக் கேட்டேன். நீ ராதாவைக் காதலிக்கிறாயா என்று. இப்போது சொல்லு, அவளைப்பற்றிய முழு உண்மையைக் கூறுகிறேன்" என்றான்.

     "இப்படியும் ஒரு நிபந்தனை உண்டா? கட்டுக் கதைகளிலே வருமே, ராஜகுமாரன் தூங்கிக் கொண்டிருந்தான்; ஒரு மாயாவி அவனை அப்படியே கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், ஒரு ராஜகுமாரி வீட்டிலே கொண்டு போய்ச் சேர்த்து இருவருக்கும் கலியாணம் செய்து வைத்தான் என்று, அதுபோல இருக்கிறதே உன் கலியாண ஏற்பாடு" என்று நான் கேட்டேன்.

     அவ்வளவு சோகத்துக்கிடையிலும் கொஞ்சம் சிரிப்பு வந்தது நாகசுந்தரத்துக்கு.

     "நண்பா! நான் நம்பிக்கையில்லாமல் சொல்லவில்லை. ராதாவை நீ கண்டால், கட்டாயம் காதலிப்பாய்!" என்றான். "அதை எப்படி நீ கண்டுபிடித்தாய்?" என்று நான் கேட்டேன்.

     "ஏன் முடியாது. நீ அடிக்கடி, உன் இலட்சிய மங்கையைத் தான் எனக்குக் காட்டி இருக்கிறாயே! வயது இருபது இருக்கவேண்டும் என்பாய். ஒரு வயது ஏறத்தாழ இருக்கும் ராதாவுக்கு. அடக்கம் இருக்கவேண்டும், ஆனால் அசடாக இருக்கக்கூடாது. புத்தி இருக்கவேண்டும், ஆனால் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது. அழகு இருக்கவேண்டும், ஆனால் ஆளை மயக்கும் நோக்கம் இருக்கக்கூடாது. படிப்பு இருக்கவேண்டும், ஆனால் படாடோ பம் இருக்கக்கூடாது, சகஜமாகப் பழகவேண்டும், ஆனால் சந்து பொந்து திரியும் சுபாவம் கூடாது என்று கூறுவாயே கவனமிருக்கிறதல்லவா?" என்று கேட்டான். உண்மை தான். நான் அடிக்கடி இப்படிப்பட்டவளைத்தான் கலியாணம் செய்து கொள்வேன் என்று சொல்லுவது உண்டு. இந்த இலட்சியப் பெண்ணைப் பற்றி நான் அடிக்கடி பேசினதற்குக் காரணம், நான் பல தடவை கேட்ட 'வாழ்க்கை ஒப்பந்த'த்தைப் பற்றிய பிரசங்கங்களல்ல; என் மாமன் மகள் வதனா, இந்த இலட்சணத்துக்கு நேர்மாறாக இருந்தாள். அவளை எனக்கு மனைவியாக்குவதற்கு இரு குடும்பத்திலும் விசேஷமான முயற்சி. அந்தக் கோபத்திலே நான் தீட்டிய இலட்சிய மங்கையை, நாகசுந்தரம் எனக்குக் கவனமூட்டினான்.

     "ஆமாம்! அப்படிப்பட்ட பெண்ணைத்தான் கலியாணம் செய்து கொள்வேன். கேலியா உனக்கு? நீ வேண்டுமானால் பாரேன்" என்று நான் வீரமாகப் பேசினேன்.

     "கேலியல்ல, பரந்தாமா! நீ குறிப்பிடும் அந்த இலட்சணம் அவ்வளவும் பொருந்தியவள் ராதா. அதனால்தான் நான் தைரியமாகச் சொன்னேன், அவளைக் கண்டால் நீ காதலிப்பாய் என்று. ராதா பத்தாவது தேறியிருக்கிறாள். இப்போது கல்லூரியில் படிக்கிறாள். கல்லூரிப் படிப்பு, கால் கூந்தலும், காலில் அலங்காரப் பூட்சும், காமினியா ஸ்நோவும் இல்லாமல் கூட வரும் என்பதை ராதா கல்லூரிப் பெண்களுக்குக் காட்டுவதற்குப் போயிருக்கிறாள்" என்று நாகசுந்தரம் சொன்னான்.

     "ஆஹா! நீ மட்டும், இந்த 56 தேசத்து அரசர்கள் இருந்த காலத்திலே வாழ்ந்திருந்தால், தூது போகும் வேலையில் வேறு யாரும் உனக்கு நிகர் இல்லை என்றாகியிருக்கும்" என்று நான் கேலி செய்தேன்.

     "பரமா! உன் மனதிலே இவ்வளவு காலமாக உலவிக் கொண்டிருந்த இலட்சியப் பெண், ராதாதான். நீ கூற மறந்த குணங்களைக்கூட அவளிடம் காண்பாய். அவளுடைய முகத்திலே இருக்கும் லாவண்யம், உன் கற்பனைக்கு எட்டாதது. கண்டால் நிச்சயமாக என் காலடி வீழ்வாய்" என்றான் நாகு.

     "அவளைக் கண்டால் உன் காலடி வீழ்வானேன்? என்னடா நாகு! ஒன்றுக்கொன்று பொருத்தமே இல்லாமல் பேசுகிறாயே!" என்று நான் கேட்டேன், என் நண்பனின் போக்கு மேலும் மேலும் விசித்திரமாவது கண்டு. "தங்கையைக் கலியாணம் செய்து கொள்ள, அண்ணனின் தயவு வேண்டாமோ?" என்று கேட்டான் நாகசுந்தரம். "அண்ணனா! ராதாவுக்கு நீ எப்போது அண்ணனானாய்?" என்று நான் முதுகைத் தட்டிக் கொடுத்தபடி கேட்டேன்.

     "பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு!" என்றான் அவன்.

     "டே! நாகு, வீணாக என்னைக் குழப்பாதே, ராதா யார்?" என்று கேட்டேன்.

     "என் தங்கை" என்று பெருமூச்சுடன் கூறினான். என் திகைப்பைக் கண்டு, மெள்ள, சிரமப்பட்டு பேசலானான்.

     "நண்பா, அந்தப் பெரிய கதையைச் சொல்லவும் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. இருந்தாலும், சொல்லாவிட்டாலோ, மனத்திலுள்ள பாரம் நீங்காது. ராதா, என் தங்கைதான். திடுக்கிடாதே! ராதாவுக்கு இவ்விஷயம் தெரிந்தபோது ஆச்சரியப்பட்டாள். பூராக் கதையையும் கேள்விப்பட்டால் நீயும் ஆச்சரியப்படுவாய். ஆனால், முதலிலே நீ அவளைச் சந்திக்க வேண்டும். பழக வேண்டும். உனக்கு ராதையிடம் பிரேமை பிறந்தால், நான் முழு விவரத்தையும் கூறுகிறேன். இல்லையானால் மௌனமாகத்தான் இருக்க வேண்டும். யார், ராதாவை உள்ளன்போடு நேசிக்கிறானோ, எவனொருவன் அவளைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறானோ, அவனிடமே ராதாவின் பரிதாப வரலாற்றைக் கூற வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். ராதா, என் தங்கை என்று தெரிந்த உடனே, நான் அவளை மேல் படிப்புக்காகச் சென்னைக்குக் கல்லூரிக்கு அனுப்பிவிட்டேன். ஹாஸ்டலில் இருக்கிறாள். பண வசதி செய்து விட்டேன். மிக அடக்கம், நல்ல குணம், படிப்பு, பழக மிக மேன்மையானவள்; என்றாலும், உலகின் முன், ராதா என் தங்கைதான் என்று பெருமையுடன், பூரிப்புடன் கூறிக் கொள்ள முடியாது. கண்ணாடியிலே தெரியும் பொருளைக் கையால் தொட முடியுமா? காலத் திரை எனக்கும் என் தங்கைக்கும் இடையே நிற்கிறது. அதைக் கிழித்தெறியும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால், என் தங்கையின் எதிர்கால வாழ்வு கௌரவமானதாக, நிம்மதியாக இருக்க வேண்டும். அவ்விதம் இருக்கும்படி செய்ய வேண்டியது என் பொறுப்பு. ராதா என் தங்கை - உலகம் அதை ஒப்ப மறுக்கும்; என் உள்ளமோ, அந்தக் கருத்தைத் தழுவிப் பூரித்தது" என்றான். அவனுடைய மொழியிலே, அவன் உள்ளத்தை ஏதோ இரகசியம், மென்று தின்று கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:34 pm

ரங்கோன் ராதா

2

     "ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன் கட்சி?" என்று நான் கேட்டேன். "ஆமாம். இன்னும் ஒரு நிபந்தனை" என்று நாகசுந்தரம் சொன்னான். "கதையை யாரிடமும் சொல்லக்கூடாது" என்றான். "மேலும் மேலும் விந்தையாக இருக்கிறது" என்றேன் நான். "விசித்திரம்! விந்தை! விபரீதம் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லு. எனக்குக் கவலை எல்லாம் ராதா சுகப்பட வேண்டும்; என் தங்கையைக் கண்ணியம் தெரிந்த காதலனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்" என்றான். "என்னடா நாகு! திடீரென்று இப்படி ஒரு இலட்சியவாதி போல, ஆவேசம் கொண்டவன் போலாகி விட்டாய். இவ்வளவு இலட்சியம் பேசும் உன்னையே கேட்கிறேன், விளையாட்டுக்கல்ல, உண்மையாகவே! ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தெரிந்து கொள்வதற்காக, அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக முன்கூட்டியே வாக்களிப்பது எந்த இலட்சியத்துக்கு உகந்தது! கேட்டால் கூட சிரிப்பார்கள்!" என்றேன். நாகசுந்தரம் என் தோள்மீது கை வைத்துக் கொண்டு, துயரத்துடன் சொன்னான். "உன்னைத் தவிர வேறு யாரிடம் பரந்தாமா நான் உண்மையைச் சொல்வேன். நீ ஊரிலே உலாவும் பல இளைஞர்கள் போலப் பழைய நம்பிக்கைக்காரனல்ல. ஜாதி குலபேதத்தை அடியோடு மறுப்பவன். உனக்குக் குடும்பத்திலேயும் தொல்லை கிடையாது. உன் தகப்பனார் அறிவாளி, முற்போக்கான கொள்கை உடையவர். ஆகையால் ராதாவை மணம் செய்து கொள்வதற்கு ஒரு தடையும் ஏற்படாது. உனக்குச் சம்மதமாகிவிட்டால், பிறகு எல்லாம் இனிமையாகவே முடியும். ஒன்று மட்டும் முன்னதாகவே சொல்கிறேன். ராதா என் தங்கை! அதை உலகம் ஏற்காது! என் தங்கை ராதா என்று தெரிந்ததும், நான் ராதாவுக்காக எதையும் செய்யும் துணிவு பெற்றேன். உண்மையை மறைப்பானேன். பரந்தாமா! ராதாவுக்காக நான் திருடனானேன். என் தகப்பனாரின் வைரக்கடுக்கனை, மார்வாடிக் கடையில் அடகு வைத்துப் பணம் வாங்கித்தான் ராதாவைக் கல்லூரியில் சேர்த்தேன். ராதாவுக்காக இனியும் எதுவும் செய்வேன். ஆனால் உலகிலே, அவளை ஏற்றுக்கொள்ள, உன் போன்ற உத்தமன் முன் வந்தால் தான் முடியும் பரந்தாமா! ராதா, ஒரு விபச்சாரியின் மகள். ஐயோ! அந்த விபசாரி, வேறு யாருமில்லை; என் தாய், சொந்த அன்னை!" என்று கூறினான். அதுவரை கட்டுக்கு எப்படியோ அடங்கி இருந்த கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்பி என் நண்பனின் கன்னத்தில் வழியலாயிற்று. எனக்கு ஏற்பட்ட திகைப்பிலே என்ன செய்வதென்றே தோன்றவில்லை. 

     "உன் தாய்...?" என்று நான், ஏதோ கேட்க ஆரம்பித்தேன், வாய் மூடிக் கொண்டிருக்க முடியாத நிலையில்.


     "இறந்து இருபது ஆண்டுகளாகின்றன. அப்படித்தான் அப்பா சொன்னார். சின்னம்மாவும் சொன்னது அதுதான். ஆனால் என் தாய் சாகவில்லை, தாயின் கௌரவம் செத்து விட்டது. உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால் உலகின் முன்பு, 'என் தாய்' என்று நான் அவர்களைக் கூற முடியாது. 'மகனே!' என்று அவர்கள் என்னை அழைக்க முடியாது! 'அண்ணா!' என்று ராதாவும், 'ராதா!' என்று நானும், பகிரங்கமாகப் பேசிக்கொண்டால், பழமையின் பிடியிலே உள்ள இந்தப் பாழும் உலகம் தூற்றும்; கேலி செய்யும் பரந்தாமா! நான் வேளாளர் குலம். ராதாவின் தாயாராகு முன்பு, ரங்கம்மாள், வேளாளகுலப் பெரியவர் வீரராகவ முதலியாரின் மகள்! இப்போது, ரங்கம்மாள், ஒரு விபசாரி! ராமசாமி நாயுடுவின் வைப்பு! ராதா, ஒரு கதம்பகுலப் பெண்! விபசாரியின் மகள்!" என்று கூறிவிட்டுக் கதறினான் என் நண்பன்.

     நாகசுந்தரம், சொன்னது கேட்டு என் தலை சுழன்றது - ஊர் முழுவதும், அவன் தாயார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாகவும், அவளுடையே தங்கையையே அவர் கலியாணம் செய்துகொண்டதாகவும் நம்பி இருந்தது. நானும் அப்படித்தான். நண்பன் நாகசுந்தரம், திடீரென்றுதான், தன் தாயார் இறந்து போகவில்லை, வழுக்கி விட்டார்கள் என்ற பயங்கரச் செய்தியைக் கேள்விப் பட்டான் என்பது தெரிந்தது. எப்படித் தெரிந்து கொண்டான். ஊரார் அறியாத அந்த உண்மையைக் கூறியது யார்? என்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். நண்பனோ, புழுப்போலத் துடித்துக் கொண்டிருந்தான்.

     உன் தாயார் எப்படி விபசாரியானார்கள்? ஏன் விபசாரியானார்கள்? என்று கேட்கும் துணிவு, எப்படி ஏற்பட முடியும்? எவ்வளவு வேதனை தரும் கேள்விகள் அவை. நான், நாகசுந்தரத்தின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். இருவரும் நெடுநேரம் பேசாமல் இருந்தோம். உலகிலே சகலமும் இருண்டுபோய், ஜீவராசிகள் யாவும் இறந்துபோய், சகல சப்தமும் அடங்கிப் போன நிலையில், நானும் அவனும் மட்டும் வீற்றிருப்பது போன்று எனக்குத் தோன்றிற்று. எங்கு நோக்கினாலும் ஒரே சூன்யமாக இருந்தது. விநாடிக்கு விநாடி, என் உள்ளத்திலே யாரோ சூட்டுக் கோலிடுவது போலிருக்கும். திரும்பிப் பார்ப்பேன், என் நண்பனை. அவனோ விம்மிக் கொண்டிருப்பான். அணைத்துக் கொண்டேன், ஏதும் பேசாமல், என்ன சொல்லி அவனுக்கு ஆறுதலை உண்டாக்க முடியும்? சாந்தி தரக்கூடிய விதத்தில் என்ன பேசுவது? என் தாய் விபசாரி என்று மகன் கூறிக் கதறும் போது, யாரால் தான் சமாதானம் கூற முடியும்! இந்த வேதனையான நிலைமை ஏன் ஏற்பட்டது, என்று எண்ணினேன். வேளாளர் குடிப்பிறந்து, தனவந்தனுக்கு வாழ்க்கைப்பட்டு, தங்கரூபன் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த ரங்கம், விபசாரியாக வேண்டிய அவசியம் என்ன? ரங்கம் கிழவனுக்கல்ல வாழ்க்கைப்பட்டது. குடித்துவிட்டு வீதியில் புரளும் கோணல் சேட்டைக்காரனல்ல அவள் கணவன். குடிசையில் அல்ல அவள் வாழ்ந்தது. கண்டவர் மெச்சும் தனவான். பொருத்தமற்ற மணம் என்று, அந்தத் திருமணத்தைக் கூறிவிட முடியாது. ஏழ்மையால் வாட்டப்பட்டு, புருஷனால் கைவிடப்பட்டு, புலம்பித் தவிக்கும் பெண், பிறரின் போகப் பொருளானாள் என்று கேள்விப்படும்போதாவது, ஒரு சமயமில்லாவிட்டால் மற்றோர் சமயம், "ஆமாம் பாவம், அவள் என்ன செய்வாள்" என்று ஒருவர் இருவராவது கூற முடியும். அவள் வஞ்சிக்கொடி, அவனோ நெஞ்சில் ஈளைகட்டிய கிழவன். பணத்தாசையால் அவனை மணந்தாள், வாலிபப் பருவத்தின் சேட்டையால் வேறொருவனை நாடினாள், என்ற நிலையும் அல்ல, ரங்கம்மாளுக்கு ஏற்பட்டது. இப்போதுங்கூட அவர், ரங்கம்மாளுக்கு ஈடு அல்ல என்று கூற முடியாது. என்றாலும், ரங்கம்மாள் விபசாரியானாள்! ஏன்? எப்படி? என் மனதிலே, இவ்வெண்ணங்கள் புகுந்து குடைந்தன.


     சரி, எப்படியோ ஒன்று விபசாரியாகிவிட்டாள். அந்தக் கள்ளிக்காகக் கண்ணீர் விடுவதா! காறித் துப்ப வேண்டும். கழுத்தை நெரிக்க வேண்டும் என்றல்லவா தோன்றும், யாருக்கும்? அதிலும், இப்படிப்பட்ட தாயால் எப்படிப்பட்ட இழிவும், பழியும் ஏற்படும் ஒரு மகனுக்கு; அவமானத்தையே அளிக்கும், அந்தத் தூர்த்தைக்காக அழுவதற்கு, எப்படி ஒரு மகனுக்கு மணம் வரும்? ஆனால், நாகசுந்தரம், தேம்பித் தேம்பி அழுகிறானே!! ஏன்? சோரம்போன மாதுக்காக ஏன், நாகசுந்தரம் இவ்வளவு உருகவேண்டும்? என்ற கேள்விகள், கிளம்பி என்னைக் கொட்டியபடி இருந்தன.

     "உன் தாயாரைப் பார்த்தாயா?"

     "ஆமாம்! என் தாய்! அந்த ராமசாமி நாயுடு! ராதா! அந்த மூவரையும் பார்த்தேன்."

     "எங்கே? எப்போது?"

     மேற்கொண்டு நான் கேள்விகள் போடவில்லை. நாகசுந்தரமே பேசலானான்.

     "பரந்தாமா! எங்கள் பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த குடும்பம், குண்டு வீச்சுக்குப் பயந்து, ரங்கோனிலிருந்து வந்தது என்பது எனக்குத் தெரிந்ததும், நான் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆவலுடன், பர்மா சேதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்து, வந்தவர்கள் யாரார் என்று விசாரித்தேன்; தோட்டக்காரன் தகவல் சொன்னான்.

     "அழகான பெண்! அடக்கமான தாயார்! குடிகாரக் கணவன்!" - இது அந்தக் குடும்பத்தினரைப் பற்றி அவன் எனக்குச் சொன்னது. பர்மா தகவலை விட, இந்தக் குடும்பத்தின் தகவலை விசாரிக்க வேண்டுமென்றே ஆவல் பிறந்தது.

     "என்ன வயது இருக்கும்?" என்று நான் தோட்டக்காரனைக் கேட்டேன். அவன் "இருபது இருக்கும். இரதிதான் அழகில்" என்றான். நான் கேட்டது, அந்தக் குடிகாரக் கணவனைப் பற்றி.

     "அவனுக்கு 40-க்கு மேலிருக்கும். சாயந்தரமானால் சாராயக் கடையில் தவறாமல் அவனைப் பார்க்கலாம். குடி வெறியில் வீண் சண்டைக்கு நிற்கிறான். யாரையும் மதிப்பதில்லை - அடி விழுகிறவரையில். அடித்தால் திருப்பி அடிக்கும் திறமையும் தைரியமும் கிடையாது. போலீஸ் கம்பெளையிண்ட் கொடுக்கிறேன், பிராது கொடுக்கிறேன் என்று மிரட்டுவான். அடிக்கடி ஆங்கிலம் பேசுகிறான் சட்டைக்காரன் போல. சாராயக் கடைக்கு கோட்டு ஹாட்டுடன் வருகிறவனே அவன் ஒருவன் தான். போஸ்டாபீஸ் சூபரிண்டாக இருந்தவனாம், ரங்கோனில். "சண்டை முடிந்ததும் போய்விடுவேன். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் எவன் இருப்பான். அங்கே தங்கம் விளைகிறது என்று பேசுகிறான்" என்று தோட்டக்காரன் சொன்னான்.


     "பாவம்! அந்த அம்மா இருக்கிறார்களே, இலட்சுமி தேவிதான்! இந்தக் குரங்கு செய்கிற சேஷ்டையை எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. அவ்வளவு அடக்கம். இவன் குடித்துவிட்டுக் கூத்தாடிக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அந்த அம்மாள் பாவம் தலை தலை என்று அடித்துக் கொள்கிறார்கள். அவன் கண்களை உருட்டி மிரட்டி அந்த அம்மாவை நடுநடுங்க வைக்கிறான். அந்தப் பெண் ராதா அழகி. சதா புத்தகமும் கையுமாக இருக்கிறது. பத்தாவதுவரை படித்திருக்கிறதாம். முகத்திலே எப்போதும் புன்னகை. யாரிடமும் அன்போடு பேசுகிறாள். அந்தக் குடிகாரனும் பொறுமையையே பூஷணமாகக் கொண்ட அந்த அம்மையாரும் சண்டை போட்டால்கூட, ராதா தன் படிப்பு உண்டு தான் உண்டு என்று இருந்துவிடுகிறாள். பாவம் இருக்கிற நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவு செய்கிறான் அந்தக் குடியன். என்றைய தினம் 'இதுகளை' நடுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விடுகிறானோ தெரியவில்லை" என்று தோட்டக்காரன் எனக்குக் கூறினான். அவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன் மட்டுமல்ல, பக்கத்து வீட்டு வேலைக்காரிக்குத் தெரிந்தவன். ஆகவே, அங்கே நடப்பது பூராவும் இவனுக்குத் தெரியும்.

     ரங்கோன் ராதாவின் குடும்பச் செய்தியைக் கேட்டது முதல், எனக்கு அவர்களைக் கண்டு பேசவேண்டும் என்ற ஆசை பிறந்தது; சமயம் வாய்க்கவில்லை.

     என் அப்பாவும் சிற்றன்னையும், காசி யாத்திரை போயிருக்கிறார்கள் அல்லவா? காசித் தீர்த்தம் அனுப்பி இருந்தார் அன்று. அதையே சாக்காக வைத்துக்கொண்டு நான் அடுத்த வீட்டுக்குள் படை எடுத்தேன். 

     "பர்மா நாயுடுவுக்கும் கொஞ்சம் கொடுங்கள்" என்று வீட்டுக்காரராகச் சொன்னார். அந்த வீட்டின் பின்புறமிருந்த ஒரு அறையில்தான் அவர்கள் குடியிருந்தார்கள். சமையலுக்கு, மாட்டுக் கொட்டகைக்குப் பக்கமாக இருந்த தாழ்வாரத்தையே உபயோகித்துக் கொண்டார்கள். நான், பின்புறம் சென்று மிக மரியாதையுடனும், கொஞ்சம் கூச்சத்துடனும், "சார்!" என்று கூப்பிட்டேன்.

     "யாரது" என்று கேட்டுக்கொண்டே ராதா தன் எதிரே வந்து நின்றாள். "அவர்..." என்று நான் தடுமாறினேன்.

     "அப்பாவும் அம்மாவும் ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்" என்று ராதா பதில் சொன்னாள்.

     "நான் அடுத்த வீடு. என் அப்பா காசி யாத்திரை போயிருக்கிறார். காசித் தீர்த்தம் கொண்டு வந்திருக்கிறேன். தரலாம் என்று வந்தேன்" என்று நான் கூறிக்கொண்டே ஒரு சிறு செம்பைக் கொடுத்தேன். ராதா அதை மரியாதையாக வாங்கிக் கொண்டாள். ஒரு விநாடி மௌனமாக நின்றேன். ராதா, "அடுத்த வீடா தாங்கள்?" என்று கேட்டாள். "ஆமாம்! நாகசுந்தரம் என்று பெயர்" என்று கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். பிறகு, அவர்களைச் சந்திக்கச் சமயமில்லை. உன்னிடம் ராதாவைப் பற்றி, ஒருநாள் மாலை சொன்னேனல்லவா, அன்று கூட எனக்குத் தெரியாது, நான் பேசியது என் தங்கையிடம் என்ற விஷயம். உன்னிடம் ராதாவைப் பற்றிப் பேசிவிட்டு வீடு திரும்பினேன். இரவு மணி பத்து இருக்கும் வீட்டுக்குள் நுழையும்போது.

     "ஐயோ! அடபாவி! பாதகா!" என்று அழுகுரல் கேட்டது.

     "அப்பா! அப்பா! ஐயோ!" என்று ராதாவின் குரலும் கேட்டது.

     "கொன்றுவிடுவேன்; கொன்று போடுவேன்! ராஸ்கல்!" என்று மிரட்டும் குரல் கேட்டது.

     தோட்டக்காரனை நோக்கினேன்.


     "அதான், குடித்துவிட்டுக் கலாட்டா செய்கிறான் பர்மா நாயுடு" என்றான். இதற்குள் அழுகுரல் பலமாகிவிட்டது. வேகமாக ஓடினேன். அடுத்த வீட்டிற்குள். தன் கைத்தடியால் அந்தக் குடிகாரன் அந்த அம்மையை அடித்துக் கொண்டிருந்தான். ஒழுகும் இரத்தத்தையும் துடைக்க நேரமின்றி, அந்த அம்மையார் அலறிக் கொண்டிருந்தார்கள். ராதா இடையே நின்று தவித்தாள்.

     "ஐயா! ஐயா! இது என்ன அக்ரமம்! ஒரு ஸ்திரீயை இப்படி இம்சை செய்கிறீரே, தகுமா" என்று கேட்டுக் கொண்டே பர்மா நாயுடு கையில் இருந்த தடியைப் பிடுங்கிக் கொண்டேன். அவன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். ஆனால் உடனே தைரியமடைந்து, என்னைப் பார்த்து, "இவள் என் சம்சாரம், நீ யார் இங்கே நுழைய? உன் வேலையைப் பார், இடியட்" என்றான்.

     "உன் சம்சாரம் என்றால் அதற்காகச் சித்திரவதை செய்வதா?" 

     "நீ என்ன இந்த ஊருக்கு ராஜாவா? நியாயம் கேட்க வந்துவிட்டாயே! போடா மடையா! பெண்டாட்டி என்றால் பயப்பட்டுச் சாகும் பேடியல்லடா நான், கொடு தடியை, போ வெளியே."

     "ஐயா! நியாயம் கேட்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு."

     "உரிமையாவது எருமையாவது, போடா வெளியே."

     என்னை அடிக்கக் கையை ஓங்கினான் பர்மா நாயுடு. ராதா, "அப்பா! அவர் நம்ம பக்கத்து வீடு. ஒன்றும் செய்யாதீர்" என்று கூவினாள். அவனோ என் கழுத்தைத் தாவிப் பிடித்தான். குடிவெறியில் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று திகில் உண்டாயிற்று. உண்டாகவே, எட்டி ஒரு உதை கொடுத்தேன், அவன் கீழே விழுந்தான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:37 pm

ரங்கோன் ராதா

3

     "குடிவெறியால் கூத்தாடியவன், என்னிடம் என்ன செய்வது! கீழே வீழ்ந்தான். உடனே எழுந்திருந்தால் மேலும் அடி விழும் என்ற பயம், அவனுக்கு. எனக்கு அவன் நிலையைக் கண்டு சிரிப்புக்கூட வந்தது. எவ்வளவு ஆர்ப்பரித்தான், அடி விழுகிற வரையில். அடி கொடுத்ததும் எவ்வளவு அடக்கம்!

     "இதுதான் உங்க ஊர் வேலையோ? ஏன், சார்! என் சம்சாரத்துடன் நான் ஏதோ சண்டை போட்டா, வீடு புகுந்து அடிக்கச் சொல்லித்தான் இந்த ஊர்ச்சட்டம் சொல்லுதோ" - என்று கேட்டான், அழுகுரலில். அதைக் கண்டு நான் திடுக்கிடவில்லை; ராதாவைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். ராதா, என்னைப் பார்த்த பார்வை, 'சீ! நீயும் ஒரு முரட்டுப் பயல்தான். இவன், அம்மாவை அடித்துத் துன்புறுத்தினான். நீ, குடித்து விட்டு நிலைகுலைந்திருப்பவனைத் துன்புறுத்துகிறாய்" என்று கூறுவது போலிருந்தது. கொஞ்ச வெட்கமடைந்து, "என்னை மன்னிக்க வேண்டும்" என்று கூறினேன், ராதாவை நோக்கி.


     நான் அவனிடம் பேசுவதாக எண்ணிக்கொண்ட குடியன், "இடியட்! உன்னையா? பார், நான் என்ன செய்கிறேன் என்று. பர்மாவிலிருந்து வந்திருக்கும் என்னைக் கொள்ளையடிக்கவும், என் பெண்ணைக் கைப்பிடித்திழுக்கவும் நீ துராக்கிரமமாக வீட்டுக்குள் நுழைந்து கலகம் செய்ததாகப் போலீசில் பிராது கொடுக்கிறேன். என்ன நடக்கிறது பார்" என்று மிரட்டினான்.

     ராதா, "அப்பா! போதும் உங்கள் பிரதாபம், போய்ப் படுங்கள்" என்று கொஞ்சம் கண்டிப்பாகச் சொன்னாள். இதற்குள், ரங்கம்மாள், "அப்பா! நீ யார் பெத்த மகனோ, என்னைக் காப்பாற்றினாய். இந்தப் பாவி குடிவெறி ஏறிப் போனால், இப்படித்தான் அடித்துத் துன்புறுத்துவான்" என்று என்னிடம் கூறிவிட்டு, ராதாவுக்கு ஜாடை காட்ட, ராதா, பர்மாக்காரனை அழைத்துக் கொண்டு போய்விட்டாள் உள்ளே படுக்க வைக்க.

     "அம்மா! நான் அவரை அடிக்க வேண்டும் என்று எண்ணி இங்கு வரவில்லை. என்னவோ அலறல் சத்தம் கேட்கவே இங்கு வந்தேன். நான் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் என் மீது பாய்ந்தார். அதனால்தான்..." என்று நான் சமாதானம் கூறினேன்.

     "நல்ல பிள்ளையாண்டானப்பா நீ. பக்கத்து வீடா நீ இருப்பது."

     "ஆமாம்."

     "என்ன வகுப்பு?"

     "முதலியார் வகுப்பு."

     ரங்கம்மாள் பெருமூச்செறிந்துவிட்டுச் சில விநாடி மௌனமாக இருந்தது கண்டு, நானாகவே என் வரலாற்றைக் கூறலானேன். என் தகப்பனாரின் பெயரைக் கூறினதுதான் தாமதம் ரங்கம்மாள் என்னை விறைக்க விறைக்கப் பார்த்து,

     "யாருடைய மகன்? யார் மகன் நீ?" என்று கேட்டு என்னைப் பயப்படுத்தியே விட்டார்கள். "ஏன்? ஏன், பதைக்கிறீர்கள்? என் தகப்பனார் பெயர் தருமலிங்க முதலியார்" என்று நான் கூறினேன். "கோட்டையூரா?" என்று கேட்டார்கள். "ஆமாம்" என்றேன். உடனே ரங்கம்மாள், "அட! மகனே!!" என்று பெரிய கூச்சலிட்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

     "மகனே! என் கண்ணே! உன்னையா நான் காண்கிறேன்? கோட்டையூரார் மகனா?" என்று கேட்டுக்கொண்டே, என் இடது காதுக்கு அடிப்புறத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டு, மீண்டும் "என் மகனே தான்!" என்று ஆவேசம் வந்ததுபோல் அலறினார்கள். கண்களிலே இருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது.

     "அம்மா! இது என்ன?"

     "அம்மா! கண்ணா! நீ என்னை அம்மாவென்று அழைக்கவும் நான் கேட்கவும் கொடுத்து வைத்தவளானேன்."

     "யார் தாங்கள்?"

     "நானா? என்ன விபரீதமான கேள்வியடா கண்ணே! ஆனால் உன்மேலே என்ன தப்பு! எல்லாம் இந்தப் பாவியால் ஏற்பட்டதுதானே."

     "எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. நான் கோட்டையூர் தருமலிங்க முதலியார் மகன். தாங்களோ பர்மா..."

     "பர்மாவிலிருந்து வந்திருக்கும் பராரி! ஆனால், அப்பா நான் தான் உன் தாய்."

     அதற்கு மேல் ரங்கம்மாவால் எதுவும் பேச முடியவில்லை மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டார்கள்.

     கூச்சலைக் கேட்டு ஓடி வந்த ராதா, முகத்தில் தண்ணீர் தெளித்து ரங்கம்மாவைத் தெளியவைத்தாள். கண்களைத் திறந்து என்னை வாஞ்சையோடு பார்த்துவிட்டு, "அப்பா சுகமாக இரு! தங்கம் சௌக்கியமா? உன் அப்பா எங்கே?" என்று கேட்டார்கள்.

     "இதென்னமா பெரிய விந்தையாக இருக்கிறது. என் தாயார் இறந்து இருபது வருஷமாகிறது..."

     "ஆமாம், நீ அப்போது ஒரு வயசுக் குழந்தை..."

     "அப்படியானால் தாங்கள்?"

     "செத்தவள் பிழைத்து வந்திருக்கிறேன், சீர்கெட்டுப் பேர்கெட்டு, சிரமப்பட்டு, ஊர்விட்டு ஊர் ஓடி, உன் முகத்தில் விழிக்கவும் இலாயக்கற்று."

     ராதா என்னைப் போலவே திடுக்கிட்டு நின்றாள்.


     ரங்கம்மாள் ராதாவை அருகே அழைத்து, என்னைக் காட்டி, "ராதா, உன் அண்ணன்; என் மூத்த மகன்" என்றார்கள். பிறகு என்னைப் பார்த்து, "மகனே! மனத்திலே இருக்கும் பாரத்தைக் குறைத்துக் கொள்ளாவிட்டால், பிராண வேதனையாக இருக்கும். ஆகையால் சொல்கிறேன்; என்னை நம்பு. நான் தான் உன் தாய். ஊரும் உலகும் நீ ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, நான் இறந்து விட்டதாகவே சொல்லும். உன் அப்பாவும் சித்தியும் அதேதான் சொல்வார்கள். ஆனால், உண்மை வேறு. நான் சாகவில்லை, ஓடிவிட்டேன். உன் தகப்பனைவிட்டு" என்று கூறினார்கள்.

     நான் என்ன நினைப்பது? செத்துப் போனதாகக் கூறப்பட்ட என் தாய் உயிருடன் என் எதிரே உட்கார்ந்திருப்பது கண்டு ஆச்சரியமடைவதா? ஆனால், பர்மாவிலிருந்து ராமசாமி நாயுடு என்பவனுடல்லவா வந்திருக்கிறார்கள். விபசாரி! என் தாய், இந்தக் கதியில் - என் எதிரில் - இருபது வருஷங்களுக்குப் பிறகு எனக்கு இப்படி ஒரு தாய் இருக்கும் விஷயம் தெரியவேண்டுமா? என்னால் ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லை. "அம்மா!" என்று வார்த்தை இருதயத்திலிருந்து கிளம்பி, தொண்டைக் குழிவரை வரும்; உடனே ஒரு திகைப்பு, சத்தம் ஒடுங்கிவிடும்! நான் அந்தச் சமயம் பட்ட 'இம்சை'யின் தன்மையை விவரிக்கவே முடியாது. கண்கள் நீரைப் பொழிந்தன. உடம்பு காற்றில் கொடியென ஆடிற்று. இடையே, ராதா, "அண்ணாவா? ஏனம்மா, முன்பு சொன்னாயே, ரங்கோனில், அந்த அண்ணனா?" என்று வேறு கேட்டாள், ரங்கம்மாளைப் பார்த்து. "ஆமாம் கண்ணே! என் செல்வக் குழந்தைதான்" என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்து,

     "மகனே! உன்னைப் பார்க்கும் போது நான் பூரிப்பு அடைவதுபோல, நீ அடைய முடியாது. நீ எதிர்பாராத சம்பவம் இது. செத்துச் சாம்பலாகிவிட்டாள் தாய் என்று நம்பிக்கொண்டிருக்கும் உனக்கு என்னைக் கண்டதும், உண்மையில் கனவா, நனவா, நிஜமா, கட்டுக்கதையா என்றுகூடத் தோன்றும். ஆனால், நீ நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, உன்னைப் பார்த்தேனே அதுபோதும் எனக்கு. ஒரு வருஷக் குழந்தையாக இருக்கும்போது, ஓர் இரவு நீ என்னை ஒட்டிக் கொண்டது போலப் படுத்திருந்த சமயம், பாவி நான், உன்னைவிட்டுப் பிரிந்தவள், கெட்டு அலைந்து இந்தக் கதியானேன். குடும்ப கௌரவத்தை நாசமாக்கினேன். மகனே! நான் செத்துவிட்டதாகவே நீ நம்பி விடுவது நல்லது. நான் உயிருடன் இருப்பது உலகுக்குத் தெரிவதுகூட, நல்லதல்ல. மகனுக்குத் தலையிறக்கத்தைத் தரும் மகா பாவி நான்" என்று கூறி விம்மினார்கள். இப்படியும் இருக்க முடியுமா? என் தகப்பனார் திட்டமாகச் சொன்னாரே, இறந்து விட்டாள் உன் தாய் என்று. எப்படி இந்தக் கதை உண்மையாக இருக்கமுடியும் என்று கேள்விகள் என் மனதில் தோன்றி என்னைத் துடிதுடிக்கச் செய்தன முதலில். ஆனால் ரங்கம்மாள் என் தாய்தான் உண்மையில், என்று அந்தக் குரலிலே இழைந்து வந்த பாசமும், உருக்கமும் எனக்குக் காட்டிவிட்டன. நம்பமுடியாதது போலக் காணப்படும் பல உண்மைகள் உலகில் உண்டு. அதில் இது ஒன்று என்று தீர்மானித்தேன். என் தாயிடம்தான் நான் பேசுகிறேன் என்று, என் உள்ளம் உரைத்தது. கோபத்துக்குப் பதில், கண்ணீர் கொப்புளித்ததற்குக் காரணம் வேறு என்னவாக இருக்கமுடியும்? "அம்மா! அம்மா! என் தாயார்! நீங்கள்? ராதா என் தங்கை!" என்று நான் மெல்லக் கூறினேன். என் காதிலே அந்தச் சொற்கள் விழுந்தபோது, எனக்கே சற்றுத் தூக்கிவாரிப் போட்டது, என் கஷ்டமான நிலையைத் தெரிந்து கொண்ட என் தாயார்,

     "அப்பா! நான், என் மகனைக் கண்டேனே தவிர, நீ உன் தாயாரைப் பார்க்கவில்லை - இன்று நடப்பது அவ்வளவும் ஏதோ ஒரு கனவிலே நடந்தது என்று எண்ணிக்கொள். உன் வாழ்க்கைக்கு நான் சனியனாகமாட்டேன். கோட்டையூரார் குடும்பத்தின் பெருமையை நான் குலைக்கமாட்டேன். பயப்படாதே. நான் தான் உன் தாயார் என்பதை உலகம் அறியும்படி நான் செய்யமாட்டேன். நாளைக்கே, நாங்கள் இங்கிருந்து கிளம்பி, எங்காவது நெடுந்தூரம் சென்றுவிடுகிறோம். உனக்கு அவமானம் வருவதை நான் சகிக்கமாட்டேனடா கண்ணே! என் புத்திக் குறைவினாலும், உன் அப்பாவின் கிராதகத்தாலும், நான் இக்கதியானேன். நான் செத்துவிட்டேன் என்று ஊரார் நம்புவதால், இப்போது, உன்மீது மாசுமறுவு இல்லை. உண்மையாக நான் உயிருடன் இருக்கிறேன். விபசாரியாகி விட்டேன் என்பது தெரிந்தால் உன்னை உலகம் கேவலமாகப் பேசும். அதைக் காண நான் சகிக்க மாட்டேன். ஆகவே, என்னால் எங்கே உனக்கு அவமானம் நேரிட்டு விடுகிறதோ என்று அஞ்சாதே. நான் இருபது வருஷங்களாக இரவு பகலாக உன்னை எண்ணி எண்ணி ஏங்கியிருக்கிறேன். நீ தத்தி நடந்ததை, கொஞ்சிப் பேசியதை, ஓடி ஆடியதை, நான் பார்க்கவில்லை. மகனே! உன் பெயர் என்னடா! நான் உன்னை அழகேசா என்றே அழைத்து வந்தேன், ஒரு வருஷகாலம்; உன்னை வளர்க்கும் பாக்கியம் இருந்தவரையில்" என்று ரங்கம்மாள் கூறினபோது, நான் கோவெனக் கதறியே விட்டேன். "அம்மா! என் பெயர் நாகசுந்தரம்; எவ்வளவு விசித்திரமான நிலைமையம்மா இது. தாயார், தன் மகனின் பெயரை, மகனையே கூறும்படி கேட்பது" என்று சொல்லி அழுதேன். 


     "அழவேண்டியவள் நானடா நாகு! நீ ஏண்டா ராஜா அழவேண்டும்? நான் பாவி, துஷ்டை, உன்னை என் மகனென்று ஊரார் முன் கூறிக்கொள்ள முடியாத கேவலநிலை அடைந்தேன். உனக்கு ஏன் கவலை? நான் செத்துவிட்டவள் செத்துவிட்டவள் தான்... அப்படியே நினைத்துக் கொள். உன் கனவில் ஒருநாள் நான் தோன்றி, 'மகனே! என்னை மன்னித்துவிடு, என்று கெஞ்சினேனென்று நினைத்துக்கொள்" என்றார்கள்.

     "அம்மா! அப்படி எல்லாம் பேசாதீர்கள். எனக்கு உண்மை வேண்டும், விவரம் வேண்டும், விளக்கம் வேண்டும், என் வேதனையைப் போக்க வேண்டும்" என்று கேட்டேன். "நாகு! நான் இனிக் கூறப்போவது அவ்வளவும் சத்தியமான பேச்சு. இன்று கேவலமான நிலையை அடைந்திருக்கிறேன் என்ற காரணத்தால், என் வார்த்தையைச் சந்தேகிக்காதே. நான் உன் தாயார். அதைக் கூறிக் கொண்டு, நான் மறுபடியும் அந்த ஸ்தானத்தை அடைய முடியாது. உன்னை யார் என்று தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி, மட்டற்றது என்ற போதிலும், மருட்சியுடன் கூடியதுதான். உன்னை நான், 'என் மகனே' என்று மனதிற்குள்ளாகத்தான் சொல்லி ஆனந்தப்பட முடியுமே தவிர, வெளியே சொல்ல முடியாது. எந்த மகனும் பொறுத்துக்கொள்ள முடியாத இழிவான காரியத்தில் இறங்கினேன். அப்பா நாகு! நீ புத்திசாலி, கருணை உள்ளவன். என் கதை முழுவதையும் கேட்டால், இழிவான நிலைமைக்கு நானாகப் போகவில்லை, உன் அப்பாவே தான் தள்ளினார் என்பதைத் தெரிந்து கொள்வாய். இவ்வளவு கூறுவதும் என்னை மன்னித்துவிடு, மாதா என்று ஏற்றுக்கொள் என்று உன்னைக் கேட்க அல்ல. நீயாக ஒருவேளை அவ்விதமான எண்ணம் கொண்டால்கூட, நான் திட்டமாக மறுத்துவிடுவேன். கேள், என் பரிதாபத்துக்குரிய கதையை! உன் தாய், விபசாரியான கதையை."

     "இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வெள்ளிக்கிழமை, கோட்டையூர் மக்களெல்லாம் குமுறினார்கள்; 'மகராஜி! புண்யவதி! போய்விட்டாள். பச்சைக் குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டாள்!" என்று கூறினர். அன்றுதான் நான் இறந்து விட்டேன்! வெள்ளிக்கிழமையன்று, பூவோடும் மஞ்சள் குங்குமத்தோடும் புண்யவதி போகிறாள் பார். பாவம், குழந்தைதான் பிழைக்குமோ என்னவோ தெரியவில்லை என்று, மயான ஊர்வலத்தைக் கண்டு மக்கள் பேசிக் கொண்டனர். உன் அப்பா முக்காடிட்டுக் கொண்டு சென்றார். உன் தாத்தா வேளாள சங்கத் தலைவர் வீரராகவ முதலியார், தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்து சென்றார். இரவு மணி பத்தாகிவிட்டது. பிணத்துக்குத் தீயிட! தீ வெகு வேகமாகப் பிடித்துக்கொண்டது."
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:41 pm

ரங்கோன் ராதா

4

     "நண்பா! என் தாயார் சொல்லிக்கொண்டு வந்த கதையைக் கேட்டு எனக்கு அளவு கடந்த ஆச்சரியமும் திகைப்பும் ஏற்பட்டன. என் எதிரே உட்கார்ந்துகொண்டு, சுமார் 20 வருஷங்களுக்கு முன்புதான் இறந்ததையும், சுடலையில் தன் பிணத்துக்கு நெருப்பு வைக்கப்பட்டதையும், தீ நன்றாகப் பிடித்துக் கொண்டதையும் சொன்னால், கேட்பதற்கு எவ்வளவு திகைப்பு இருக்கும். நான் இருந்த நிலையைக் கண்டு என் தாயார் மெள்ளச் சிரித்துவிட்டு, "தம்பி! என் கதையைக் கேட்டுக் கலக்கமடைகிறாய். ஒருவேளை எனக்கு மூளை புரண்டுவிட்டதோ என்று எண்ணுகிறாயோ என்னவோ. நீ மட்டுமா, யாரிடம் சொல்லப்போனாலுந்தான் இப்படித் திகைப்பார்கள். ஆனால், நான் முதலிலேயே சொல்லிவிட்டேன் உன்னிடம். நான் உண்மையை, முழு உண்மையைக் கூறுகிறேன். இன்னொருவர் நம்பவேண்டும், அதனால் எனக்கொரு பலன் ஏற்படவேண்டும் என்பதற்காக அல்ல, என் நெஞ்சிலே நெடுங்காலமாக இருந்துவரும் பாரத்தைப் போக்கிக் கொள்ள. ஆகவே, ஆச்சரியம் திகைப்பு எது ஏற்பட்டாலும், பொருட்படுத்தாமல் என் கதையைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்" என்று கூறிவிட்டு கதையைத் தொடர்ந்து கூறலானார்கள்.


     "கோட்டையூர் மக்களுக்கெல்லாம், நான் இறந்து விட்டதாகத்தான் எண்ணம். என் அப்பா வீரராகவ முதலியாரும் அப்படியே நினைத்தார். உற்றார் உறவினரும் அது போலவே தான் எண்ணிக் கொண்டனர். மயானத்துக்குக் கோட்டையூர் மக்கள் வந்ததும், அந்த நினைப்போடுதான். ஆனால், உண்மை, எனக்கும், உன் அப்பாவுக்கும் மட்டுமே தெரியும். இறந்து போனது நானல்ல என்பது, அவருக்கும் எனக்கும் தெரியும். நாங்கள் இருவரும் கலந்து பேசியே நான் இறந்து போனதாகக் கூறிவிடவேண்டும் என்ற முடிவு செய்தோம்.

     இரவு மணி பத்துக்குப் பிணம் வேகத் தொடங்கிற்று. அதே நேரத்தில், நான் வேகமாக, ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தேன். முடி தரித்த மன்னரும் முடிவிலொரு பிடி சாம்பலாகப் போவர் என்ற பழமொழிப்படி, நான் வெந்து நீறானேன் என்று மக்கள் பேசிக் கொண்டிருந்த சமயம், காவி உடையுடன், கையில் திருவோட்டுடன், காளி கோயில், காத்தவராயன் கோயில் ஆகிய இடங்களிலே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன். கூந்தல் கிடையாது. மழுங்க மொட்டையடித்துக் கொண்டிருந்தேன். ஆமாமடா கண்ணே! உன் அன்னை இந்த அலங்கோல உருவிலே அலைந்து கொண்டிருந்தபோது உன் அப்பாவிடம் ஊரார், "என்ன செய்யலாம் நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். புண்யவதி உமது மனைவி, பூவோடும் மஞ்சளோடும் போய்ச் சேர்ந்துவிட்டாள் பாவம்" என்று ஆறுதல் கூறிக் கொண்டிருந்தனர். நான் இறந்துவிடவில்லை; ஓடிவிட்டேன்; அவருக்குத் தெரிந்தே ஓடிவிட்டேன், என்பது உன் அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். எப்படித்தான் அவர் தன்னிடம் தேறுதல் மொழி கூற வந்தவர்களோடு பேசினாரோ, எனக்குத் தெரியாது. கோட்டையூர் மக்கள், நான் இறந்துவிட்டேன் என்று தீர்மானித்துவிட்டனர். ஆனால், பாவம், இறந்தது உண்மையில் ஒரு பிச்சைக்காரி! இறக்கக்கூடவில்லை, கொல்லப்பட்டாள். ஆமாம், கண்ணு! சாந்தசீலர், சத்தியவந்தர் என்று புகழப்படும் உன் தகப்பனாரால் கொல்லப்பட்டாள். என்னைக் கொல்ல, அவர் ஒரு ரகசிய ஏற்பாடு செய்திருந்தார். அதிலே அவள் சிக்கிக் கொண்டாள்; பாபம், செத்தாள். கேள், உன் தகப்பனாரின் கெடுமதி சென்ற விதத்தை. கொஞ்சம் பழைய கதை கூறவேண்டும் இதற்கு.

     கோட்டையூர் வீரராகவ முதலியார், அதாவது உன் தாத்தாவுக்கு இரண்டு பெண்கள். ஆண் வாரிசு கிடையாது. நான் மூத்தவள். இரண்டாவது பெண் தான் உன் சிற்றன்னை தங்கம்.

     என்னை, உன் அப்பாவுக்கு ஏற்பாடு செய்தபோது வீரராகவ முதலியாருடைய மிட்டா சம்பந்தமாகப் பெரிய கேஸ் நடந்து தோற்றுவிட்டது. கொஞ்சம் அவர் நொடிந்துப் போயிருந்தார். ஆகவே, என் கலியாணத்தின்போது, அதிகமான சீர் செய்யவில்லை. ஆடம்பரம் அவ்வளவும் உன் அப்பாவின் செலவிலேயே நடந்தது. விசாரத்தில் மூழ்கிய வீரராகவ முதலியார், கேஸ் தன் பக்கம் ஜெயித்திருந்தால், எனக்கு மாங்காய் மாலையும், மரகத மணியும், கல் இழைத்த ஒட்டியாணமும், காசு மாலையும் பூட்டி இருக்கலாம்; கச்சேரியும் காலட்சேபமும் வைத்திருக்கலாம் என்று கூறினார். ஒன்றும் செய்ய முடியாத நிலை. பெரிய குடும்பம். நல்ல பரம்பரை . ஒரு காலத்தில் ஓஹோ என்று வாழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட இடத்திலே சம்பந்தம் கிடைத்ததே ஒரு பெருமை என்று உன் அப்பா இருந்துவிட்டார். அவருடைய குடும்பம் பரம்பரைப் பணக்காரக் குடும்பமல்ல. உன் அப்பாவின் திறமையால் சொத்துச் சேர்ந்தது. 

     என்னைக் கலியாணம் செய்துகொண்டதால், சந்தோஷமும் பெருமையும் அடைந்தார் உன் அப்பா. என்னை அன்பாகவே நடத்தினார். வீட்டை மிக அக்கறையாகக் கவனித்து வந்தார். பிறந்த இடத்திலே இருந்ததை விட அதிக சந்தோஷமாகவே புகுந்த இடத்திலே வாழ்க்கை இருந்தது. சொத்துப் போனாலும் கவலையில்லை எனக்குத் தங்கமான மருமகன் கிடைத்தான்; என் மகள் ரங்கம் அங்கு ராஜாத்திபோல் இருக்கிறாள். ஒரு குறையும் இல்லை. அவள் நிம்மதியாக வாழ்வதைக் கண்குளிரக் காண்கிறேன்; அதுவே போதும் எனக்கு என்று, என் அப்பா சொல்லுவார். நான் சில வருஷங்கள் மிகவும் சந்தோஷமாகக் காலங் கழித்தேன். கனவிலும் நான் எண்ணியதில்லை, என் கதி பிறகு இப்படி எல்லாம் மாறும் என்று. சீமாட்டி போலிருந்து வந்த நான் கேவலம் நாடோ டியாகி, நாதியற்றவளாகி, குடிகாரனுக்குக் கூத்தியாகிப் பாழாவேன் என்று எண்ணியதில்லையடா அப்பா. எப்படி நான் எண்ண முடியும்? இப்போது அந்தக் காட்சி; நன்றாகக் கவனமிருக்கிறது. உன் அப்பா நாலைந்து வீடுகளுக்கு அப்பால் நடந்து வரும்போதே, எனக்கு ஜாடை தெரிந்து விடும்! அவருடைய கால் செருப்பு, ஒருவிதமான 'கிறீச்' என்ற சத்தம் கொடுக்கும். அந்தச் சத்தம் எனக்குச் சங்கீதம். அதைக் கேட்டதும் முகம் மலரும். துள்ளி எழுந்திருப்பேன். கண்ணாடி முன் நிற்பேன். குங்குமத்தைச் சரிபடுத்திக் கொள்வேன். வாசற்படியில் கால் வைக்கும்போதே அவர் வாஞ்சையுடன் "ரங்கம்!" என்று அழைப்பார். ஓடிப்போய், கால் கழுவச் செம்பில் நீர் தருவேன். அவர் கழுவி முடிப்பதற்குள் கை துடைக்கத் துணி தருவேன். துடைத்துக் கொண்டிருக்கும்போதே தலைவாழை இலையில் தண்ணீர் தெளிப்பேன். மனை போடுவேன். அவர் நெற்றியில் விபூதி தடவிக்கொண்டு, வந்து உட்காருவார் மனையில். ஒரு மணி நேரமாகும் சாப்பிட்டு முடிக்க, இடையிடையே அவ்வளவு வேடிக்கையாகப் பேசுவார்! மகனே! அந்த இன்ப வாழ்விலே ஈடுபட்டிருந்தபோது, இந்தக் கதி எனக்கு நேரிடும் என்று எப்படியடா, எண்ணம் பிறக்க முடியும்? குடும்பம் என்று இருந்தால், தர்மலிங்க முதலியார் வீட்டுக் குடும்பம் போலிருக்க வேண்டும் என்று கோட்டையூரில் பேசிக் கொள்வார்கள். எனக்கு மாமி, நாத்தி, மைத்துனர் யாரும் கிடையாது. நானும் அவரும் தான். வேலைக்கு ஆள் உண்டு. ஆள் அடிக்கடி மாறுவதுண்டு.


     தரகு மண்டி தர்மலிங்க முதலியார் என்றால் யாருக்கும் ஒரு பற்றுதல், மரியாதை, நம்பிக்கை. இதற்கு முக்கிய காரணம் அவருக்குப் பணத்தாசையே கிடையாது என்பது தான். நான்கூட மற்றவர்களைப் போலவே, உன் அப்பாவுக்குப் பணத்தாசை கிடையாது என்றே நினைத்தேன். அவ்வளவு திறமையாக உன் அப்பா நடித்து வந்தார். உள்ளமோ ஒரே ஆசைக்காடு. அது பிறகுதான் எனக்கே தெரியவந்தது. ஊராருக்கு இப்போதாவது தெரியுமோ என்னவோ.

     நிம்மதியாக நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தபோது என் அப்பா, என் தங்கை தங்கத்துடன், தன் வீட்டில் கொஞ்சம் கஷ்ட ஜீவனம் நடத்தி வந்தார். கேஸ் தோற்ற பிறகு அவருக்கு ஊரிலே முன்பு இருந்ததைவிட மதிப்பு அதிகம். அது ஒரு விசித்திரந்தான். கேஸ் யார் பக்கம் ஜெயித்ததோ, அவர்கள் கடனாளியாகக் கஷ்டப்பட்டார்கள். அப்பாவுக்குச் சொந்தமான மிட்டா அவர்களுக்குப் போய்ச் சேர்ந்ததே தவிர, கேஸிலே ஜெயிப்பதற்காக அவர்கள் பட்ட அலுப்புத் தீரவில்லை. அப்பாவோ தன் கவலை வெளியே தெரிய ஒட்டாதபடி நடந்துகொண்டார். எப்போதும் போலச் சரிகைத் துப்பட்டாதான், வெள்ளிப் பூண் போட்ட தடிதான், ஊர் பெரியதனக்காரராகவே வாழ்ந்து வந்தார். இரண்டொரு ஏக்கர் நிலம் மிச்சமிருந்தது. அது மண் போட்டால் பொன் விளையும் பூமி என்பார்கள். அவ்வளவு நல்ல நிலம். அதிலே கிடைக்கும் வருமானமே ஜீவன ஆதாரம். இந்தக் கஷ்டத்துக்கிடையே தங்கம் கொடிபோல வளர்ந்து வந்தாள். அடிக்கடி நம் வீட்டுக்கு வருவாள், எனக்கு அவளிடம் அபாரமான ஆசை. அவளும் அப்படியே இருப்பாளென்று பைத்தியக்காரி நான் நினைத்தேன். அது தவறு என்பதைக் கண்டுபிடிக்க ரொம்ப நாளாயிற்று. வீட்டுக்கு வந்ததும், 'அக்கா' என்று ஆசை வழியக் கூப்பிடுவாள், 'வாடி கண்ணே!' என்று நான் அழைத்துக் கொண்டு சமையலறைக்குப் போவேன். என் கூடவே இருந்து சமையல் வேலையைக் கவனிப்பாள். பிறகு அவளுக்கு நான் தலை சீவி அலங்காரம் செய்து, என் நகைகளை அவளுக்குப் போட்டு அழகுபடுத்தி, அவர் வருகிறபோது அவளிடம் காபியோ, வெற்றிலைத் தட்டோ , எதையாவது கொடுத்து அனுப்புவேன். அவர் அவளைப் பார்த்ததும், "பலே தங்கமா! எவ்வளவு அழகடி ரங்கம் உன் தங்கை" என்று கூறுவார். "அக்கா! அத்தானைப் பாரேன், கேலி செய்கிறார்" என்று தங்கம் சொல்லுவாள். "என்னாங்க! நம்ப தங்கத்துக்கு இந்த நகை எல்லாம் போட்டா, எவ்வளவு அழகாக இருக்கு, பார்த்தீங்களா?" - நான் கேட்பேன். "அதுக்கென்ன சந்தேகம்! இப்ப என்ன தங்கத்துக்கு ஒரு தனவந்தன் புருஷனாகக் கிடைத்துவிட்டா, வைரமாக இழைத்துவிடுகிறான். தங்கம் அதிர்ஷ்டக்காரிதான், பாரேன்" என்று அவர் சொல்லுவார். தங்கம் வீட்டுக்குப் போகும்போது, நகைகளைக் கழற்றி என்னிடம் கொடுப்பாள். கொடுக்கும்போது சொல்லுவாள்; "அக்கா! அத்தான் சொன்னாரே எனக்கு அதிர்ஷ்டம் என்று; அந்த அதிர்ஷ்டம், எனக்கு இப்படி என்றைக்காவது ஒரு நாளைக்கு அட்டிகையும் செயினுமாகக் கொடுத்து உடனே மறுபடியும் திருப்பி வாங்கிக் கொள்ளுது பார்த்தாயா?" என்பாள். எனக்கு கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கும் அதைக் கேட்க. "ஏண்டி கண்ணே! போட்டுக் கொண்டுதான் போயேன் வீட்டுக்கு" என்று நான் சொல்வேன். "போக்கா போ" என்று கூறிவிட்டுத் தங்கம் போய்விடுவாள்.

     நகைகளைப் பூட்டி நான் அவளுடைய அழகைக் கண்டு ஆனந்தப்பட்டு வந்த சமயங்களிலெல்லாம், அவள் அசூயை கொண்டிருந்தாள் என்பது எனக்குத் தெரியாமல் போயிற்று. சிறு வயதிலேயே அவள் மனதில் பொறாமை அவ்வளவு குடியேறி விட்டது. வீட்டிலே தனக்குத் தரித்திரமும், எனக்கு என் புருஷன் வீட்டிலே தனபாக்கியமும் இருந்தது அவளுக்குப் பொறுக்கவில்லை. நாளாகவாக அவள் மெள்ள மெள்ளக் கேலி பேசும் பாவனையிலே தன் பொறாமையைக் கொட்டத் தொடங்கினாள். இந்தச் சமயத்திலேதான் அவள் பருவமடைந்தாள். என் கண்களுக்கு ஒரு பெரிய விருந்தாக விளங்கினாள். அவளுக்கு நீராட்டின அன்று, நான் அடைந்த பெருமையும் பூரிப்பும் இவ்வளவு அவ்வளவு என்று கூறமுடியாது. என் நகைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய், அவளுக்குப் பூட்டி அழகு படுத்த வேண்டுமென்று நான் ஆவலாகச் சென்றேன். அவளோ, ஒரேயடியாக அவைகளைப் போட மறுத்து விட்டாள். அப்பா, என் புருஷர், யார் சொல்லியும் கேட்கவில்லை.


     "என்னடி தங்கம்! இன்று நல்ல நாள். இன்று சந்தோஷமாக இருக்க வேண்டும். நமக்கு இருக்கும் நகைகளைப் போட்டுக்கொண்டு மகிழ்வாக இருக்கவேண்டிய தினம். நீ ஏன் இன்று இப்படி முரட்டுப் பிடிவாதம் பேசுகிறாய்" என்று நான் கொஞ்சம் கோபத்தோடு கேட்டேன். அந்தப் பொறாமைக்காரி கொஞ்சம் கூடத் தயங்காமல் சொன்னாள், "அக்கா வேண்டாமென்றால் விட்டுவிடு. ஏன் என் உயிரை வாங்குகிறாய். எனக்கு நகைநட்டு வேண்டாம். இரவல் நகைகளைப் போட்டு மினுக்கிக் கொள்ள வேண்டுமா என்ன? சந்தோஷம் சந்தோஷம் என்று சொல்லுகிறாயே, யாருக்குச் சந்தோஷம், உனக்கா, எனக்கா? உன் நகைகளை எனக்குப் போட்டு, ஊரார் அதைப் பார்த்து தங்கம் போட்டுக் கொண்டிருக்கும் நகைகளெல்லாம், ரங்கத்துடையது என்று கூறும்போது கேட்டு நீ சந்தோஷம் அடைகிறாய். அதற்குத்தானே இவ்வளவு தூரம் பேசுகிறாய். இதிலே எனக்கு எப்படிச் சந்தோஷம் இருக்கும்?" என்றாள். நான், கண்களில் நீர் ததும்ப நின்றேன். வயது பதினைந்துதான் பூர்த்தியாயிற்று தங்கத்துக்கு. அவள் மனதிலே இவ்வளவு பொறாமை நெளிவது கண்டு நான் திடுக்கிட்டுப் போனேன். நான் மேற்கொண்டு ஏதும் பேசவே இல்லை. ஒரு வார காலம், என் மனம் படாதபாடு பட்டது. பிறகு நானாகச் சமாதானப் படுத்திக் கொண்டேன். தங்கம் சிறு பெண், நகைநட்டு இல்லையே என்ற மனக் கஷ்டத்தால், ஏதோ உளறினாள். கிடக்கட்டும்; அவள் சுபாவம் அப்படி இருக்கிறது என்று. இருந்தாலும் தங்கம் என்னிடம் பொறாமை கொண்டிருக்கிறாள் என்பது விளக்கமாகத் தெரிந்துவிட்டது. வேதனை உண்டாயிற்று. உன் அப்பாவிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவர், இது சர்வ சாதாரணம் என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டார். எனக்கு இது அவ்வளவு அலட்சியமாகக் கருதக்கூடிய விஷயமாகத் தோன்றவில்லை. கவலையே இல்லாமலிருந்து வந்த என் மனதிலே ஒரு கவலை பிறந்துவிட்டது.


     என் மனதிலேயும் தங்கத்திடம் அசூயை தோன்றிவிட்டது. அதற்கு முன்பெல்லாம், உன் அப்பா, என் வீட்டுப் பக்கம் போய் வராமல் ஒரு நாள் இருந்துவிட்டால், நான் அவரிடம் கோபிப்பது வாடிக்கை. "அது என்னங்க, அப்பாவும் தங்கமும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துவரக் கூடாதா? நாலைந்து தெருவுக்கு அப்புறம் இருக்கிறார்கள். பத்து மைலா, எட்டு மைலா? வீட்டுக்கு வருகிறபோது ஒரு நடை அப்படியே போய் வரக்கூடாதா?" என்று கேட்பேன். அவர், கடையில் வேலை, கணக்கப் பிள்ளை வீட்டில் காரியம் என்று ஏதாவது சாக்குச் சொல்வார். அப்படிப்பட்ட நான், அவராக, 'இன்று உன் அப்பாவைப் பார்த்தேன்' என்று கூறும்போது 'கடைவீதியிலா?' என்று கேட்பேன். 'இல்லை, வீட்டுக்குப் போயிருந்தேன்' என்பார். உடனே எனக்கு முகம் ஒரு விதமாக மாறிவிடும். முதலிலே எனக்கு அந்தச் சுபாவம் பிடிக்கத்தான் இல்லை. ஆனால், அது வளருவதைத் தடுக்க என்னால் முடியவில்லை. 'ரங்கம்! வெள்ளரிக்காய் என்றால் தங்கத்துக்கு இஷ்டமல்லவா? கிராமத்திலிருந்து நாளைக்கு ஒரு கூடை கொண்டுவரச் சொல்லி இருக்கிறேன். கொண்டு போய்க் கொடு தங்கத்துக்கு' என்பார் உன் அப்பா. எனக்குத் திடீரென்று கோபம் வரும். காரணமின்றி நான் கோபித்துக் கொள்கிறேன் என்று அவர் எண்ணிக் கொள்வார். 'தங்கத்துக்கு எது பிடிக்கும், என்ன தேவை என்பதிலே இவருக்கு என்ன அவ்வளவு அக்கறை? எனக்கு மாம்பழம் என்றால் உயிர், ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறேன், அது ஒரு அரை டஜன் வாங்கி வரக் காணோம். அவளுக்கு வெள்ளரி பிடிக்குமாம், ஒரு கூடை வருகிறதாம். இதை நான் சுமந்துகொண்டு போய், அவளுக்குத் தருவதாம்' என்று எண்ணுவேன். கோபம் பொங்கும் மகனே! இந்தப் பொறாமை இருக்கிறதே, அதைப் போல வேகமாக பரவும் நெருப்பு வேறே கிடையாது. நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்கிறது. என் உள்ளத்தை அந்தத் தீ வேகவைத்தது. 'வெள்ளரி வேண்டுமென்று தங்கம் கேட்டாளா?' என்று நான் கேட்டேன். புருஷனை மனைவி கேட்பதைப் போல அல்ல, குற்றவாளியை அதிகாரி கேட்பது போல. அவர் சாதாரணமாகவே, 'அவள் கேட்கவில்லை. நீதானே சொல்லுவாய், தங்கத்துக்கு வெள்ளரி என்றால் பிரியம் என்று' என்று சொன்னார். என் கோபம் குறைவதற்குப் பதிலாக வளர்ந்தது. 'அவள் ஏதோ வாய்திறந்து வெள்ளரி வேண்டுமென்று கேட்டாள்; ஆசைப்பட்டுக் கேட்ட பிறகு எப்படி வாங்கிக் கொடுக்காமல் இருப்பது என்று எண்ணி இவர் வெள்ளரி வாங்கியிருந்தாலும் பரவாயில்லை. அவள் கேட்கவேயில்லையாம். இவராக அவளுக்கு எந்த வஸ்துமேல் பிரியம் என்று யோசித்து நான் எப்போதோ சொன்னதைக் கவனம் வைத்திருந்து, வெள்ளரி தருவிக்கிறாரே, எவ்வளவு அக்கறை அவள் விஷயத்திலே? ஏன்?" என்று யோசிக்கிறேன். போக்கிரித்தனமும் கலந்து 'தங்கத்துக்கு எது எது இஷ்டம் என்பதைப் பற்றிய ஆராய்ச்சியிலே மும்முரமாக ஈடுபட்டுவிட்டீர்களோ?' என்று கேலியாகக் கேட்டேன். 'அத்தான் என்றிருந்தால் அந்த அக்கறை இராதோ?' என்று அவர் பதில் கூறினார். அது என்னைச் சவுக்கால் அடித்ததுபோல இருந்தது. கொஞ்ச நேரம் மரம்போல நின்றேன். பிறகு கேட்டேன். "ஆமாம்! நேற்றுப் போயிருந்தீர்களா வீட்டுக்கு" என்று. "இல்லையே, நாலு நாளாகிவிட்டது நான் போய்" என்று அவர் கூறினார். என் ஆத்திரம் கட்டுக்கு அடங்கவில்லை. "ஐயையோ! ஏன் பாவம் இவ்வளவு கஷ்டம்! இப்போதே ஓடிப்போய் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்களேன். தலைகிலை வெடித்துவிடப் போகிறது" என்று சொல்லிவிட்டுச் சரேலெனச் சமையற்கட்டுக்குப் போனேன். அவர் கூடத்திலே சிரித்துக் கொண்டிருந்த சத்தம் என் காதிலே விழுந்தது. நான் வற்றல் வறுப்பதற்காக, வாணலியில் எண்ணெய் ஊற்றி வைத்திருந்தேன். அடுப்பெதிரே உட்கார்ந்து கொண்டிருந்தேன். சடசடவெனச் சத்தம் கேட்டது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் அழுது கொண்டிருந்தது. கொதிக்கும் எண்ணெயில் என் கண்ணீர் வீழ்ந்து, அந்தச் சத்தம் உண்டாயிற்று. அதுவரையில் நான் அழுததில்லை, புருஷன் வீட்டிலே! அன்று அழ ஆரம்பித்தேன், அந்த அழுகை இன்னும் ஓயவில்லை; இனியும் ஓயாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:43 pm

ரங்கோன் ராதா

5

     "தங்கம் கொண்டிருந்த பொறாமை ஒருபுறம் என்னைத் தாக்கிற்று என்றால், உன் அப்பா, வரவர அவளிடம் அக்கறை காட்ட ஆரம்பித்தது வேறு என்னை வாட்டலாயிற்று. அவர் ஒருவேளை, களங்கமற்ற உள்ளத்தோடுதான் தங்கத்திடம் அக்கறை செலுத்தினாரோ என்னவோ என்று நான் சில நாட்கள் எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மை அதுவல்ல; கேவலம், சுயநலத்தாலேயே அவர், அந்த அக்கறை காட்ட ஆரம்பித்தார் என்பது எனக்குப் பிறகு தெரியவந்தது. அது தெரிந்ததும், என் மன வேதனை முன்பு இருந்ததைவிடப் பன்மடங்கு அதிகமாகிவிட்டது."

     ஒருநாள் நான் அவரிடம், "இதோ பாருங்கள்! இப்படி அடிக்கடி தங்கத்தைப் போய்ப் பார்ப்பதும், அடிக்கடி ஏதாவது சாமான்களை அவளுக்கு வாங்கி அனுப்புவதுமாக இருக்க வேண்டாம். ஊரிலே ஒருவிதமாக நினைக்கிறார்கள்" என்று சொன்னேன்.


     "என்ன சொல்லப்போகிறார்கள். தங்கத்தை நான் கலியாணம் செய்துகொள்ளப் போவதாகப் பேசுவார்கள். வேறே என்ன இருக்கிறது வம்பளக்க. அப்படியே நான் தங்கத்தைக் கலியாணம் செய்து கொண்டால்தான் என்ன தவறு? தகாதா?" என்று கேட்டார். நான் என்னவென்று பதில் கூறுவேன்! என் கண்ணீரை அவர் அன்றிரவு காணவில்லை, தலையணை தாங்கிக் கொண்டது.

     தங்கம், என்னைவிட அழகுதான், இளமை வேறு அவளுக்கு மெருகிட்டு இருந்தது. நான் கொஞ்சம் சங்கோஜக்காரி. தங்கம் அப்படியல்ல. பேச்சிலே பாதி சிரிப்பாகவே இருக்கும். சிறு பெண்ணாக இருக்கும்போதே நாங்கள் அவளை அதற்காகக் கேலி செய்வதுண்டு. ஆனால், எனக்கு அப்போதெல்லாம் அவளுடைய சிரிப்பு கோபமூட்டியதில்லை. பெண்கள் அப்படித்தான் களங்கமற்றுக் கலகலவெனச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். சுடுமூஞ்சியாக இருக்கக்கூடாது என்று சொல்வது வழக்கம். அந்தச் சிரிப்பு, சிலந்திக்கூடாகுமென்று நான் கண்டேனா! தங்கம், இரண்டு நிமிஷம் சேர்ந்தாற்போல ஒரே இடத்திலே பார்வையைச் செலுத்த மாட்டாள். ஏதோ சாமானைத் தவறி விட்டுவிட்டுத் தேடுபவள் போல் அவளுடைய பார்வை அடிக்கொரு தடவை வெவ்வேறு பக்கம் பாயும்; கண் மட்டுந்தான்! நாங்கள் அதற்காக "தங்கம் உன் கண்கள் சுழல் விளக்கடி!" என்று கேலி செய்வது வழக்கம். அந்தச் சுழல் விளக்கு ஒரு பெரிய அரண்மனையிலே ஜோதி தரவேண்டும் என்பதுதான் என் ஆசை. தங்கத்தின் ரூபலாவண்யத்துக்கு ஏற்றதாக ஒரு இடம் அமைய வேண்டும். அவள் ஆடை அணிகளுடன் அகமகிழ்ச்சியோடு வாழவேண்டும், அதைக் கண்டு களிப்பும் பெருமையும் அடைய வேண்டும் என்று தான் நான் நோன்பிருந்து வந்தேன். நடந்தது என்ன? அவள் என் சந்தோஷத்தைச் சூறையாடலானாள். என் புருஷருக்கு மனைவியாக வழி செய்து கொண்டிருந்தாள். எப்படி இருக்கும் எனக்கு. அவளைவிட நான் அழகில் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால், அன்பை அவருக்கு அபிஷேகித்திருக்கிறேன்; மனம் கோணாமல் நடந்திருக்கிறேன்; அவருடைய அன்பினால் ஆனந்தமடைந்திருக்கிறேன். என் வாழ்வைக் கெடுத்து, அவள் இன்பம் பெற விரும்புவதா! இதற்கா என் தங்கையாகப் பிறந்தாள்! மகனே! இப்படி எல்லாம் எண்ணி எண்ணி நான் ஏக்கமடைந்தேன். இடி இதோடு நிற்கவில்லை. சில நாட்களிலே, அவர் தங்கத்திடம் காட்டிய அன்பும் அவளுக்காக அல்ல, கேவலம் பணத்துக்காக என்பது தெரிந்து நான் திடுக்கிட்டுப் போனேன். வழக்கப்படி, நான் அவரிடம் தங்கத்தின் தளுக்கு, மினுக்கு, அதனால் வரக்கூடிய கேடு ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர், "ரங்கம்! விஷயம் தெரியாமல் உளறிக்கொண்டிராதே. சீமையிலே, உன் அப்பாவின் கேஸ் அவர் பக்கம் தீர்ப்பாகிவிட்டது. மிட்டா திரும்பக் கிடைக்கும். தங்கம் அதிலே பாதி பாகத்துக்குச் சொந்தக்காரி. அவளை இனி நீ முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்ததுபோல நினைக்காதே" என்றார். என் அப்பாவுக்கு கேஸ் ஜெயித்தால் இழந்த இன்பம் மீண்டும் வருவதுபற்றி, எனக்கு மகிழ்ச்சி பிறந்தது. ஆனால் அதே சமயம் தங்கத்துக்குப் பாதி மிட்டா வர இருக்கிறது என்று தெரிந்துதான் உன் அப்பா, அவளிடம் அக்கறை காட்டி வருகிறார் என்பது தெரியவே என் மனம் பதைத்தது. என் பாகமாகக் கிடைக்க இருக்கும் பாதி மிட்டா உன் அப்பாவுக்குத் திருப்தி இல்லை; அவளுக்குக் கிடைக்க இருக்கும் பாகத்தின் மீதும் அவருக்கு ஆவல் பிறந்துவிட்டது. பேராசைதானே! ஒரு பெண்ணின் கண்ணீரைச் சட்டை செய்யாத அளவு மனதைக் கல்லாக்கிக் கொண்டார், உன் அப்பா. ஊரிலே அவருக்குப் பணத்தாசையே கிடையாது என்று புகழ்.

     "தங்கத்தின் சொத்து அவள் கணவனுக்குத்தான் சேரும். எவன் பல் விளக்கிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை" என்று ஆரம்பித்தார்; பிறகு தங்கத்தின் திருமண விஷயமாக யார் வந்தாலும் ஏதாவதொரு சாக்கு, தடை கூறித் தடுத்து வரத்தொடங்கினார். அவருடைய திட்டம் எனக்கு நன்றாக விளங்கி விட்டது. விளங்கவே என் விசாரம் அதிகரித்து, உடல் துரும்பாக இளைக்க ஆரம்பித்தது. அது கண்டு உன் அப்பா சந்தோஷப்பட்டார். ஆமாம் கண்ணே! நான் இளைக்க ஆரம்பித்தது கண்டு அவருக்கு உள்ளுக்குள் சந்தோஷந்தான். ஏன் தெரியுமா? இரண்டாவது தாரம் தேட வழி கிடைத்தது! இப்படியும் ஒரு மனப்பான்மை இருக்குமா என்று கேட்பாய். நான் இல்லாததையோ நடவாததையோ சொல்லவில்லை; உன் அப்பாவுக்கு அதே மனநிலைதான் இருந்தது. என் உடல் உருகுவது கண்டு தானும் உருகுபவர் போலக் காட்டிக் கொண்டார். ஆனால், அனுதாபத்துடன் அல்ல; அலுப்புடன் சலிப்புடன் உற்றார் உறவினரிடமெல்லாம் கூறுவார். "என்னவோ போங்கள்! கடன்பட்டும் பட்டினி, கல்யாணம் செய்தும் சந்நியாசி என்பார்களே, அது போல இருக்கிறது என் நிலைமை. கொஞ்சமும் நிம்மதி கிடையாது. வீட்டிற்குள் நுழைந்தாலே வேதனைதான். ரங்கம், ஏனோ, துரும்பு துரும்பாக இளைக்கிறாள். அவளைப் பார்க்கும்போதே வயிறு பகீர் என்கிறது" என்று பேசுவார். அவர் சொல்லிச் சொல்லி, ஏறக்குறைய ஊரிலே நமது குடும்பத்தைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் ஒரு நோயாளி என்று தெரிந்துவிட்டது. ஒவ்வொருவரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், "ரங்கம்! ஏனம்மா இப்படி இளைத்துக் கொண்டே போகிறாய்? என்னதான் உனக்கு உடம்புக்கு? அவர் பாபம் ரொம்பக் கவலைப்படுகிறார்" என்று கூறுவார்கள். எத்தனை தடவைதான் இந்த ஏமாளிகளின் பேச்சைக் கேட்டுச் சகிப்பது. ஒரு தடவை இல்லாவிட்டால் இன்னோர் தடவை கோபம் வரும். அந்தக் கோபத்திலே, "சரி! எனக்குத்தான் நோய் பிடித்துக் கொண்டது. எலும்புந் தோலுமாகிவிட்டேன். ஏதோ என் வினை. அதற்காக அவர் ஏன் கஷ்டப்படவேண்டும். வேறு கல்யாணம் செய்துகொண்டு சுகப்படட்டுமே. நான் எக்கேடோ கெட்டுப் போகிறேன். ஒருவேளை சோறு போட்டால் போதும். அதுவும் இல்லை என்றாலும் சரி" என்று கூறுவேன்; கூறிவிட்டு அழுவேன். அப்பா! என் வேதனையில் முளைத்த இந்தப் பேச்சு, என்ன விபரீதத்தில் முடிந்தது தெரியுமோ? உடல் இளைத்ததற்கு, வைத்தியர் வரவழைக்கப்பட வேண்டியதற்குப் பதிலாக, பூஜாரி வரவழைக்கப்பட்டான்! எனக்கு நோயல்ல, பேய் பிடித்துக் கொண்டது என்று கூறிவிட்டார் உன் தந்தை. அந்தப் பேயின் சேஷ்டையால் தான் நான் இளைத்துவிட்டேனாம். முன் கோபம், கெட்ட சுபாவம் வந்துவிட்டனவாம்.


     "என் எழுத்து இப்படியாகிவிட்டது. என்ன செய்வது?" என்று கண்டவர்களிடம் கூறத் தொடங்கினார். ஒவ்வொருவர் ஒவ்வொரு யோசனையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். தலை முழுக்கு, கயிறு மந்திரித்துக் கட்டல், காளிக்குப் பூஜை, காத்தவராயன் கோவிலில் நோன்பு இருத்தல், இப்படிப் பலப்பல முறைகள். சதா சர்வ காலமும் உடுக்கையும் பம்பையும்; நம் வீட்டிலே பூஜாரிக் கூட்டம் வந்துபோனபடி இருக்கும். ஒரு மாதத்துக்குள், என்னைக் காண குழந்தைகள் பயப்பட்டன. இளம்பெண்கள், பொழுது போனால் என் முகத்தில் விழிக்க மாட்டார்கள். "கூப்பிடட்டுமா ரங்கத்தை" என்று கூறிக் குழந்தைகளுக்குப் பெண்கள் சோறு ஊட்ட ஆரம்பித்தார்கள். அவரே கூட, என்னிடம் ஏதோ கொஞ்சம் பயந்தவர் போல நடந்து கொள்ளத் தொடங்கினார். இரவெல்லாம் வீட்டிலே, பெரிய விளக்கு இருக்கவேண்டுமென்று ஏற்பாடு செய்துவிட்டு, எனக்குத் துணையாக ஒரு வேலைக்காரியை இருக்கச் செய்துவிட்டு, அவர் தெருத் திண்ணையில் படுக்கலானார். என்னால் இந்தக் கஷ்டத்தைச் சகிக்க முடியவில்லை. ஆகவே, நான் ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட முறையில், "வேண்டாம்! இப்படி என்னைத் துரோகம் செய்யவேண்டாம்!" என்று அலறினேன். அந்த அலறல், ஆத்திரம், அழுகுரல் யாவும் அவருடைய சேஷ்டையின் விளைவு என்பதை யார் உணர்ந்தார்கள்? என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் சேஷ்டை என்று கூறிவிட்டார்கள். அப்பா! அவர்களெல்லாம் பயந்தது கூட வேடிக்கையில்லை. எனக்கேகூட, கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும்போது, அச்சம் உண்டாயிற்று. என் கண்களின் ஒளி எங்கேயோ போய்விட்டது! முகம் வெளுத்துக் கிடந்தது. பேய் அறைந்தது என்பதற்கு என்னென்ன குறிகள் உண்டு என்று சொல்வார்களோ அவைகள் இருக்கக் கண்டேன். அவ்வளவும் என் வாழ்விலே அவர் கலக்கிய வேதனையால் உண்டானவை. ஊராரோ, அதுவெல்லாம் பேயின் சேஷ்டை என்றனர். ஒரு அண்டப் புளுகன், என்னைப் பிடித்திருப்பது ஒரு பேயல்ல, மூன்று என்று கணக்கிட்டுக் கூறினான்.

     "முதலியாரே! அம்மாவுக்கு இராத்திரியிலே தூக்கம் சரியாகக் கிடையாதே."

     "இல்லையே, ரங்கம் சரியாகத் தூங்கி எத்தனையோ மாதங்களாகி விட்டன."

     "வராது! தூக்கம் வராது. அம்மா, அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவார்கள். காரணம் இல்லாமல் சிரிப்பார்கள். சரிதானுங்களா நான் சொல்வது?"

     "ஆமாம்! அப்படித்தான் செய்கிறாள்."

     "முன்கோபம் பிரமாதமாக இருக்கும்."

     "அதை ஏன் கேட்கிறாய் போ. முன்பு எவ்வளவுக்கெவ்வளவு சாந்தமாக இருந்தாளோ அவ்வளவுக்கவ்வளவு கோபக்காரியாகி விட்டாள்."


     "ஆமாம்! எல்லாம் அந்தப் பேய்களின் வேலை, முதலியாரே! மூன்று பேய் இருக்கு அம்மா மேலே! வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, மாடியிலே நின்று கொண்டு இருந்தார்கள்; அந்த நேரத்தில் பிடித்துக் கொண்டது ஒரு பேய். அது பிறகு தனக்குச் சினேகிதமான வேறு இரண்டு பேய்களைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது."

     பூஜாரிக்கும் உன் அப்பாவுக்கும் இப்படிப் பேச்சு நடக்கும்போது, என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்.

     "அட அடிமுட்டாளே! மூன்று பேயும் இல்லை, முப்பது பேயும் இல்லையடா; அதோ உட்கார்ந்திருக்கிறதே அந்தப் பேய்தாண்டா என்னைப் பிடித்துக்கொண்டது" என்று கூறி உன் அப்பாவைக் காட்டினேன். கோபத்துடன், அந்தப் பாதகன், ஒரு பிடி விபூதி இருக்கும், அதை எடுத்து, "ஆஹா! ஆங்காரி! ஓங்காரி!" என்று ஏதோ அர்த்தமற்றபடி கூவிக்கொண்டு என் கண்களிலே தூவினான். என் கதி இப்படியும் ஆயிற்றே என்று நான் கோவெனக் கதறினேன். அந்த விடாக்கண்டன், தெருமுழுவதும் என்ன என்ன என்று வந்து கேட்கும்படியான கூச்சலிட்டு, உடுக்கையைத் தட்டினான். எதிர் வீட்டார், பக்கத்து விட்டார், உள்ளே வந்தனர். நான் வெட்கமும் துக்கமும் கொண்டவளாய், பேசாமல் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டேன். "ரங்கம் மூர்ச்சையாகி விட்டாள். பேய் மிகப் பொல்லாதது" என்று கூவினர். கண்களைத் திறந்தேன்; கோபத்துடன் எழுந்து உள்ளே வந்து இருந்தவர்களை வாயில் வந்தபடி ஏசி, அங்கே கிடந்த சாமான்களை எடுத்து வீசி விரட்டி அடித்தேன். ஒரு புருஷனின் பேராசையினால் ஒரு பெண் தன் வாழ்வின் நிம்மதியை இழந்து வேதனைப்படுகிறாள் என்பதைக் கண்டுகொள்ள முடியாத முட்டாள்கள், தங்கள் முட்டாள்தனத்தை மறைக்க, எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறினால் எனக்குக் கோபம் வராதா! அந்தக் கோபத்தினால், வாயில் வந்தபடி பேசி, விரட்டினேன் அப்பா! அதனால் என்ன நேரிட்டது தெரியுமா? எனக்குப் பேய் பிடித்திருக்கிறது நிச்சயப்படுத்தப்பட்டது. அதிலும், என்னைப் பிடித்திருக்கும் பேய், போக்கிரித்தனமானது, ஆபத்து தரக்கூடியது, சிக்கியவர்களின் உயிரைப் போக்கிவிடக்கூடியது என்று தீர்மானித்தார்கள். பூஜாரியின் யோசனைப்படி, என் கை கால்களைப் பலமான கயிற்றினால் கட்டிப்போட்டு விட்டார்கள். கண்ணா! என் கதியைக் கேள்! கவலையால் தாக்கப்பட்டேன். உன் அப்பாவின் சதி எண்ணத்தைத் தெரிந்து பதை பதைத்தேன். இதைப் பேயின் சேஷ்டை என்று கூறி, என்னை என் வீட்டிலேயே கைதியாக்கினார்கள். எந்த வீட்டிலே நான் இன்பமாக உலவி வந்தேனோ, அதே வீட்டிலே, கைகால்கள் கட்டப்பட்டு உருட்டப்பட்டேன்! மகனே என்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா? பலம் கொண்ட மட்டும் கூவலானேன். 'கட்டுகளை அவிழ்த்துவிடு! பாவி! படுமோசக்காரா! என்னைக் கொலையா செய்கிறாய்?" என்று கூவினேன். பேய் கூவுகிறது என்றனரே, தவிர, ஒரு பேதை அழுகிறாள் என்று யாரும் சொல்லவில்லை. என் கூக்குரல் வலுக்க வலுக்க, பூஜாரிகள் மாற்றி மாற்றி வரவழைக்கப்பட்டனர். கூச்சலிட்டால், பிரம்பால் அடிப்பது என்று ஏற்பாடு செய்துவிட்டான் பூஜாரி. அதனால் நான் பட்ட அடி கொஞ்சமல்ல! மனங் கொண்டமட்டும் அவரும் அடித்தார். வேப்பில்லை அடிப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, வெறிக்கக் குடித்துவிட்டு வந்த பூஜாரியும் அடித்தான். அவ்வளவு அடியும் அந்தப் பொல்லாத பேய் தாங்கிக் கொள்வதாக அந்த மனித உருவில் இருந்த பேய்கள் பேசிக்கொண்டன. நான் நோய் தாளாது நெளிவது கண்டு, அந்தப் பூஜாரி, "போகிறாயா! போகிறாயா! இன்னும் பூஜை தரட்டுமா?" என்று கூவுவான். அடி தாளமாட்டாமல், ஒரு நாள் நான் அவன் மேல் விழுந்து கடித்து விட்டேன்; கடித்தால், எனக்குக் கிடைத்த தண்டனையை இப்போது நினைத்தாலும் நடுக்கம் பிறக்கிறது; சூடு இட்டான் அந்தப் போக்கிரி. விளையாட்டுக்கு உன் அப்பா, எப்போதாவது கையைப் பிடித்துக் கொஞ்சம் பலமாக இழுத்து விட்டால்கூட, எனக்கு இரத்தம் கட்டிக் கொள்ளும். அப்படிப்பட்ட என் உடம்பிலே அந்தப் பாவி சூடிட்டான். உன் அப்பா தன் தலையில் அடித்துக் கொண்டார்.

     என் அப்பாவும் உண்மையிலேயே என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்றே நம்பினார். அவருக்குத் தெரிந்த மந்திர வாதிகள் வந்தனர். எவ்வளவு மடத்தனம் இருக்கிறது என்பது அந்தச் சமயத்திலே தெரிந்தது.

     புதிதாக வருகிற ஒவ்வொரு பூஜாரியும், பழைய பூஜாரிக்கு ஒன்றுந் தெரியாது. வெறும் உருட்டல் மிரட்டலோடு சரி, மந்திரம் தெரியாது என்று கூறாமலிருப்பதில்லை. வாரக் கணக்கு வைப்பார்கள், பிறகு மாதமாகும், அவன் போய் வேறு பூஜாரி வர. இப்படி நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். எனக்கு இந்த அனுபவம் ஏற்படுகிற வரையிலே நான்கூட, பேய் பிடிப்பது என்பது நிஜம்; மயக்கம் வருவது, உடல் உருகுவது, கண்டபடி பேசுவது, ஆடுவது இவைகளெல்லாம் பேயின் சேஷ்டை, இந்தத் தோஷம் மந்திரத்தால் போகும், என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறிப் பித்தர்கள் சித்திரவதை செய்ய ஆரம்பித்த பிறகுதான், அது அவ்வளவும் புரட்டு அல்லது வெறும் மனமருள் என்று உணர்ந்தேன்.


     உன் அப்பா எதை உத்தேசித்து, மெள்ள மெள்ளத் தன் கள்ளத்தனத்தால் என்னை இக்கதிக்கு ஆளாக்கினாரோ, அந்த உத்தேசம் ஈடேற வழி பிறந்தது. முதலிலே உற்றார் உறவினர், என்னைப் பிடித்திருக்கும் பேயை விரட்டுவதுதான் முக்கியம் என்று எண்ணி, அதற்கான வழி கூறி வந்தனர். பேய் இருந்தால் தானே விரட்ட! பேய் போக மறுக்கிறது என்று பிறகு அவர்கள் பேசிக்கொண்டு, வேறு விஷயத்தைக் கவனிக்கலாயினர். "பாவம் இந்தப் பேய் பிடித்தவளோடு, அவர் எப்படிக் குடித்தனம் செய்வார்? எவ்வளவு மனவேதனையாக இருக்கும் அவருக்கு?" என்று பச்சாத்தாபப்படவும், "என்ன செய்வது! எத்தனை காலத்துக்கு இந்தக் கோரத்தைக் காண்பது, வேறே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டால்தான் அவர் வாழ்வு கொஞ்சமாவது நிம்மதி அடையும்" என்று யோசனை கூறவும் "அவருக்குப் பெண் கொடுக்க யாருக்கு என்ன கசப்பு? யார் வேண்டுமானாலும் கொடுப்பார்கள்" என்று ஆதரவு மொழி கூறவும் "சோமசுந்தரம் முதலியார் மகள் சொர்ணம் இருக்கிறாள், விஸ்வநாத முதலியார் மகள் லோகா இருக்கிறாள்" என்று இடம் பார்த்துக் கூறவும், கடைசியில் "வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவானேன், ஏன் பத்து இடம் பார்க்க வேண்டும்; ரங்கத்தின் சொந்தத் தங்கை தங்கம் இருக்கிறாள், அவளையே முடித்துவிடலாமே" என்று தூண்டவுமாயினர்.

     "எதற்கு" என்பதில் துவங்கி, "அப்படித்தான் செய்ய வேண்டும்" என்று முடித்தார் உன் அப்பா.

     "இது என்ன பைத்தியக்காரத்தனம்" என்று முதலில் பேசிய என் தந்தை, "அப்படித்தான் செய்வோம்" என்று சம்மதம் தந்தார். தங்கம் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். ஆனால் ஒரு நிபந்தனை வைத்தாள்; "நான் அத்தானை கலியாணம் செய்து கொண்டாலும், அப்பாவுடன் தான் இருப்பேன்" என்றாளாம். அந்தச் சாகசக்காரியின் சூது தெரியாதவர்கள், தங்கத்துக்கு அப்பாவை விட்டுப் பிரிய மனமில்லை என்று சிலரும், ரங்கத்தோடு இருக்கத் தங்கம் பயப்படுகிறாள், தன்னையும் பேய் பிடித்துக் கொள்ளுமோ என்று பயந்து என்று சிலரும் பேசிக் கொண்டனர். அவரை என்னிடமிருந்து பிரித்துவிட அவள் செய்த சூது அது என்பதை யார் தெரிந்து கொண்டார்கள்! நான் தான் பெண்ணல்லவே பேய்!

     இரகசியமாகப் பேசுவது போய், என் காதில் படும்படியாகவே பேசலாயினர். ஜாதகப் பொருத்தம் கேட்கப்பட்டது. ஜோதிடர், உன் அப்பாவின் தயவில் வாழ்பவர். பொருத்தம் சரியாக இல்லை என்று கூறமுடியுமா அவரால்! என்னை மூன்று பேய்களிடம் ஒப்படைத்துவிட்டு, உன் அப்பா தங்கத்திடம் தன்னை ஒப்படைத்துவிடத் தீர்மானித்துவிட்டார்.


     எது நேரிடுமென்று பயந்து வந்தேனோ அது நடப்பது உறுதி என்று ஏற்பட்ட உடனே, நான் ஒருவிதமான அமைதி பெற்றேன். இனி நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை; தங்கம் வெற்றி பெற்றுவிட்டாள்; இனியும் நாம் இது விஷயமாகச் சிந்தித்து சிதைய வேண்டியதில்லை என்று மனதை ஒருவாறு திருப்திப்படுத்திக் கொண்டேன்! ஒருநாள் பூஜாரி இல்லாத சமயமாகப் பார்த்து, நான் உன் அப்பாவை என் அருகே வருமாறு அழைத்தேன். கை கால்கள் கட்டப்பட்டே இருந்தன. அவர் அருகே வந்தார். என் கண்களில் நீர் தாரை தாரையாக வந்தது. அவர் என் பக்கத்தில் உட்கார்ந்தார். அவர் மனமும் கொஞ்சம் இளகியதுபோல் தெரிந்தது. அவருடைய முகத்தை நான் இமை கொட்டாமல் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "தங்கம் ஜெயித்துவிட்டாள். இனி நான் உங்கள் கலியாணத்தைத் தடுக்கப் போவதில்லை. என்ன இருந்தாலும் அவள் என் தங்கைதானே. அவள் சுகப்படட்டும். நான் இனி அது விஷயமாகத் தலையிட மாட்டேன்; வீணாக வேதனைப் பட்டேன். விபரீதமான பழி ஏற்பட்டது எனக்கு. உங்களுக்கே தெரியும் எனக்குப் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. எல்லாம் மனக் குழப்பந்தான் காரணம் என்பது" என்று சொன்னேன். எப்படியோ அந்தச் சமயம் அவருடைய மனம் இளகிற்று. "வருத்தப்படாதே ரங்கம்" என்று தேற்றினார். என் கட்டுகளை அவிழ்த்தார்; ஏறக்குறைய இரண்டு வருஷங்களாக என்னை அவர் அன்புடன் நடத்தியதில்லை. அன்று அவர் என்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் போலவே நாங்கள் நடந்து கொண்டோ ம். இரண்டு வருஷக் கவலையையும் மறந்தேன்; களித்தேன். என் நாதனை மீண்டும் பெற்றேன். விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்; விபூதித் தட்டும், வேப்பிலைக் கொத்தும் சீந்துவாரற்றுக் கூடத்திலே கிடந்தன. நாங்கள் படுக்கை அறையில் பல காலமாகப் பேச மறந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் அவர், "உன் அப்பாவின் மிட்டா இனி எனக்குத்தான். தங்கத்தை வேறு எவனாவது கலியாணம் செய்துகொண்டால் பாதி மிட்டா பறிபோகும். இப்போது ரங்கமும் தங்கமும் எனக்கு! மிட்டாவும் எனக்கு!" என்றார் வெற்றிச் சிரிப்புடன். "'நமக்கு' என்று கூடச் சொல்லக்கூடாதா?" என்று நான் கேட்டேன். "சந்தேகம் என்ன, நமக்குத்தான்! நான் மிட்டாதாரன் என்றால் உனக்குத் தானே பெருமை" என்றார். பொழுது புலர்ந்தது, என் வாழ்விலும் ஒரு புதுமலர்ச்சி பிறந்தது என்று நினைத்தேன். அன்று பலரும் என்னைப் பாராட்டினார்கள், பேய் நீங்கிவிட்டதென்று. மாலையில் பேய் மீண்டும் என்னைப் பிடித்துக் கொண்டது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:46 pm

ரங்கோன் ராதா

6

     ஓர் இரவு இன்பமாக இருந்தேன். மறுதினம் காலை முழுவதும் என் வாழ்வு மறுபடியும் மலர்கிறது என்று எண்ணி மகிழ்ந்தேன். மாலையிலே மறுபடியும் என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னேனல்லவா? நடந்தது என்ன தெரியுமா மகனே? என் வாழ்வை நாசமாக்கவே எனக்குத் தங்கையாகப் பிறந்தாளே, அந்தத் தங்கம், அவள் காதுக்கு எப்படியோ எட்டிவிட்டது, நானும் உன் அப்பாவும் சமாதானமாகப் போய்விட்ட விஷயம். எனக்குப் பேய் நீங்கவிட்டதென்றும் பழையபடி புருஷனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும், யார் மூலமாகவோ கேள்விப்பட்டாள். உடனே அவள் பேயை என் மீது ஏவிவிட்டாள். உன் அப்பாவேதான் பேயாக வந்தார். வரும்போதே என் தலை மயிரைப் பிடித்து இழுத்து முதுகில் அறைந்து என்னைக் கொடுமைக்கு ஆளாக்கினார்.


     காலையில் கடைக்குப் போனவர், தங்கத்தைப் பார்த்து விட்டு வர அங்கே சென்றிருந்தார். அவள் அவருக்கு என்ன கலகம் செய்தாளோ எனக்குத் தெரியாது. ஒருவாறு யூகித்துக் கொள்ளத்தான் முடிந்தது. மாலையில் வீட்டுக்குள் நுழைந்த போதே அதிக கோபத்தோடு காணப்பட்டார். சங்கடமெல்லாம் தீர்ந்துவிட்டது என்று எண்ணியிருந்த எனக்கு, உன் அப்பா அவ்வளவு கோபமாக உள்ளே வந்தபோது கொஞ்சம் பயமாகவே இருந்தது.

     "என்னங்க ஒரு மாதிரியா இருக்கறீங்க" என்று நான் வாஞ்சையுடன் கேட்டேன். என்னைச் சுட்டுவிடுவதுபோல முறைத்தார். "என்ன கோபம்?" என்று கேட்டுக்கொண்டே அவருடைய கரத்தைப் பிடித்தேன். உதறித் தள்ளிவிட்டு, "அந்தத் தளுக்குக் குலுக்கு இங்கே வேண்டாம்" என்றார். எனக்கு அழுகை வந்துவிட்டது. "நீலி" என்றார். நான் நேரே சமையற்கட்டு சென்று, அவருக்கு இலை போட்டுவிட்டு வந்து சாப்பிடக் கூப்பிட்டேன். "இனி உன் கையால் சோறு போட்டு நான் சாப்பிடுவேன் என்றா நினைக்கிறாய், கள்ளி! நான் என்ன மானங்கெட்டவனா?" என்று ஆத்திரத்தோடு கூறினார். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மரம் போல் நின்றேன்.

     "பேய் பிடித்துக் கொண்டால் என்னடி! ஊரிலே, பேய் எவ்வளவோ பேருக்குப் பிடிக்கிறது. பிடித்தால் உன்னைப் போலவா கெட்டார்கள் அவர்களெல்லாம்?" என்றார். "என்னென்னவோ பேசுகிறீர்களே, எனக்கு விளங்கவில்லையே, நான் என்ன கெட்டுவிட்டேன்" என்று கேட்டுக் கொண்டே அழுதேன். "வாயை மூடடி விபசாரி" என்றார். ஆயிரம் தேள் ஏககாலத்தில் கொட்டியது போலாகிவிட்டது எனக்கு, அந்தப் பேச்சு கேட்டதும். விபசாரி! நான் விபசாரி! அவர் வாயால் அவ்விதம் கூறக் கேட்டேன். பழிபாவமறியாத என்னை, திக்கற்ற என்னை, விபசாரி என்று கூறினார். 

     "தெய்வமே! இது என்ன பேச்சு!" என்று அலறிக் கேட்டேன். "தெய்வம்! உனக்கு?" என்று அவர் கர்ஜித்தார். முன்பெல்லாம் என்னிடம் அவர் காட்டிய கோபத்துக்கும் இம்முறை காட்டியதற்கும் வித்தியாசம் இருப்பதைக் கண்டுகொண்டேன். உண்மையிலேயே அவர் என்மீது அடங்காத கோபங் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்து நான் பயமடைந்தேன். தம்பி! நான் ஒரு தவறும் செய்துவிடவில்லை. மாசு மறுவற்ற மனம் கொண்ட நான் கொடுமையை அனுபவித்து வந்தவள், என்னை அவர் விபசாரி என்று தூற்றவில்லை, குற்றம் சாட்டினார். நான் என்ன செய்வேன். காலைப் பிடித்துக் கொண்டு, "இப்படிச் சொல்லலாமா? நானா விபசாரி? நீங்களா அப்படிச் சொல்வது? என்னை என்னென்ன பாடுபடுத்தினாலும் சரி. அந்த ஒரு வார்த்தை மட்டும் சொல்லவேண்டாம்" என்று கெஞ்சினேன். யாரோ வருகிற சப்தம் கேட்டது.

     "போதும் உன் வேஷம், போ உள்ளே. வருகிறான் ஒருவன். அவனை விசாரிக்கப் போகிறேன். உள்ளே இருந்து கேள், உன் யோக்கியதையை. அவன் வெளிப்படுத்துகிறான் பார்" என்று கூறி என்னைக் கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார் ஒரு அறைக்குள். கதவையும் சாத்தி, வெளியே தாள் போட்டுக் கொண்டார். அவரும் புதிதாக வந்தவனும் சில நிமிஷங்களுக்குப் பிறகு பேச ஆரம்பித்தனர். வந்தவன் அடக்கமாகவும் அச்சத்துடனும் பேசலானான். உன் அப்பா ஆத்திரத்துடன் அதிகார தோரணையில்தான் பேசினார்.

     "முதலியாரு கூப்பிட்டதாக முருகன் சொன்னான். ஓடி வந்தேன். என்ன விசேஷமுங்க."

     "ஏ! அந்தக் கள்ளக் கும்பிடு போடவேண்டாம். மறைக்காமல் நான் கேட்பதற்கு ஜவாப் சொல்லவேண்டும். துளியாவது மறைத்தால் தோலை உரித்துவிடுவேன்."

     "எஜமான்! ஏன் இம்மாங்கோவமாப் பேசறீங்க? என்ன கேட்கப்போறீங்க? நான் எதுக்காக, எதைத்தான் மறைக்கப் போகிறேன்."

     "சரிடா, கதையெல்லாம் அளக்காதே. உண்மையைச் சொல்லிட்டா என்ன நடக்குமோன்னு பயப்படாதே."

     "பயம் ஏனுங்க நமக்கு? நான் என்ன தப்புச் செய்தேன். மனுஷனுக்கு மனுஷன் பயம் ஏனுங்க?"

     'பளீர்! பளீர்' என்று அறையும் சத்தம், "ஐயோ! ஐயோ! சாமி! முதலியாரே!" என்று அவன் அழுகிற சத்தம், "படவா! பயமா இல்லை? மனுஷனுக்கு மனுஷனா! பயம் இல்லாமத் தானேடா பயலுக தலைகால் தெரியாம ஆடறீங்க" என்று உன் அப்பா கூவுவது, இவைகளைக் கேட்டு, நான் அறைக்குள்ளே அடைபட்ட நிலையிலே, ஒன்றுந் தோன்றாமல் மருண்டேன்.

     "நடந்ததைச் சொல்லணும், நாவை அடக்கிப் பேச வேணும்."

     "ஆவட்டுங்க."


     "பூஜாரி புண்ணியகோடியும் நீயும் இரண்டு நாளைக்கு முன்னே குடிக்கப் போனிங்களேல்லோ?"

     "அவன் குடிச்சானுங்க, நான் வேறே வேலையா அந்தப் பக்கம் போனேன்."

     மறுபடியும் பளார் என்ற சத்தம். அவன் அழுதுகொண்டே, "ஆமாங்க! போனோம், குடிச்சோம்."

     "கழுதே! குடிக்கிற நாய் குடிக்கிறதில்லைன்னு ஏண்டா பொய் பேசறே."

     பூஜாரியும் அவனும் சேர்ந்து குடித்துப் புரண்டால் இவருக்கு என்ன? ஏன் அவனைக் கூப்பிட்டு வந்து அடித்து அதைக் கேட்கவேண்டும்? என்னை அநியாயமாக விபசாரி என்று கூறினதற்கும் குடிகாரனை அடிப்பதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே விளங்கவில்லையே என்று நான் எண்ணித் தவித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனிக்கலானேன்.

     "கள்ளுக்கடையிலே என்னடா பேச்சு நடந்தது, உனக்கும் அவனுக்கும்?"

     "ஒண்ணுமில்லைங்களே."

     "உடம்பு ஊறுதா! உள்ளதைச் சொல். புண்யகோடி என்ன சொன்னான் உன்னிடம்?"

     "எதைப்பத்திங்க?"

     "எதைப்பத்திங்க? எதைப்பத்திப் பேசினீர்கள்னு நான் துரைகளுக்குக் கவனப்படுத்தணுமா?" மறுபடியும் அடி கொடுக்கும் சத்தம்! இந்தத் தடவை சத்தம் தப்பு தப்பு என்று கேட்டது. "செருப்பு அறுந்துவிடும் இப்போ" என்றார் உன் அப்பா. அதிலிருந்து அவனைச் செருப்பினால் அடிக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

     "டே! பூஜாரிப் பயல், என் சம்சாரத்தைப் பத்தி என்ன பேசினான்?" என்று கேட்டார். நான் பயந்து கதவோடு கதவாக ஒட்டிக்கொண்டு, அவன் வாயிலிருந்து என்ன பதில் வருகிறது என்று உற்றுக் கேட்டேன். ஒரு வினாடி, இரண்டு வினாடி, மூன்று வினாடிகள் பதில் இல்லை.

     "டே!" உன் அப்பாவின் குரல், அதுவரை நான் எப்போதும் கேட்டறியாத கடுமையுடன் இருந்தது அந்தக்குரல்.

     "எப்படிச் சொல்றதுங்க?" அவன் அழுகுரலில் சொன்னான்.

     "சொல்லு! சொல்லாவிட்டால் உன்னை உயிரோடு விடமாட்டேன். நீயும் அந்தப் பூஜாரியும் கள்ளுக்கடைக்குப் போய் என்னென்ன பேசிக்கொண்டிருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்! மறைக்காமல் சொல்லு. விடமாட்டேன் உன்னை."

     "அவன், குடி வெறியிலே என்னமோ சொன்னானுங்க!"

     "அதைத்தாண்டா சொல்லச் சொல்கிறேன் உன்னை!"

     "உங்க எதிர்லே சொல்லக்கூடிய பேச்சு இல்லிங்களே அந்தப் பாவி சொன்னது."

     "வீணாக உதைப்பட்டுச் சாகாதே, உள்ளதைச் சொல்லு."

     "அம்மாவைப் பத்தி அவன் குடிவெறியில் என்னென்னமோ உளறினான்."

     "அம்மா! அந்தக் கழுதை முண்டையைப்பத்தி என்னடா சொன்னான், அந்த நாய். சொல்லுடா முழுதும்."

     "புண்யகோடிப் பயலுக்குப் பொம்பளைப் பைத்தியம் ஜாஸ்திங்க. தெரிஞ்சவங்க, அதனாலேதான் மந்திரத்துக்குக் கூப்பிடுவதில்லைங்க."

     "அவன் சொன்னதைச் சொல்லுடா, கதை பேசியே காலத்தை ஓட்டாதே."

     "அம்மாவைப்பத்திக் குறைவாகப் பேசினானுங்க. ரொம்ப ஷோக்குடா, அந்தப் பொம்பளை. கிட்டத்தட்ட முடிஞ்சு போன மாதிரிதான். புண்யகோடிகிட்ட எந்தப் பொம்பளையடா இஷ்டப்படாமே போவான்னு என்னென்னமோ உளறினானுங்க."

     படுபாவி! என்னைப் பற்றிக் கள்ளுக்கடையில் கண்டபடி பேசி, என் கணவர் என் மீது சந்தேகப்படும்படி செய்துவிட்டாயே. நீ நாசமாய்ப் போக என்று நான் பூஜாரியை திட்டினேன்; கைகளை முறித்துக் கொண்டேன். ஆனால் எவனோ குடிகாரன் என்னமோ உளறினால், அதற்காக என்னைக் கொடுமைப் படுத்துவதா உன் அப்பா, என்று எண்ணினேன். அவன் சொல்லி வந்ததை நிறுத்திக் கொண்டான். மேலும் சொல்லும்படி உன் அப்பா கட்டளையிட்டார். அவன் மளமளவென்று பேசலானான்.


     "புண்யகோடி, அம்மாவுக்குப் பேயோட்ட வந்தானாம். அம்மா அழகிலே அவனுக்கு ஆசை பிறந்ததாம். மெதுவாகப் பூஜை செய்கிறமாதிரி, கையைப் பிடிப்பதும், கண்ணைத் துடைப்பதுமாக இருந்தானாம். முதலிலே அவனுக்குப் பயமாகத் தான் இருந்ததாம். பிறகு, அவனை மந்திரிக்கச் சொல்லிவிட்டுத் தனியாக விட்டுவிட ஆரம்பிச்சிங்களாம். அவனுக்குத் தைரியம் பிறந்துதாம். சேஷ்டை செய்வானாம். அம்மா கூவுவாம்! அவன் அதெல்லாம் பேயின் கூச்சலுன்னு சொல்றதாம் உங்களிடம். விபூதி பூசுவதாகச் சொல்லிக்கொண்டு, கிட்டே போவானாம். பேய் எழுந்து ஆடப் போவுது என்று சொல்லிக் கொண்டு அம்மாவை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொள்வானாம். இன்னும் ஒரு பத்து நாளையிலே முடிஞ்சுவிடும்னு சொன்னாங்க. அம்மாவுக்கு வந்துங்க வலது மார்லே துவரம் பருப்பு அளவுக்கு மச்சம் கூட இருக்கிறதாம்."

     "அட பாதகா! உண்மையிலே அப்படித்தான் எனக்கு மச்சம் இருக்கிறது. காம சேஷ்டையா செய்து கொண்டு இருந்தாய், மந்திரிப்பதாகச் சொல்லிக்கொண்டு" என்று நான் அந்தப் பூஜாரியைச் சபித்துக்கொண்டிருந்தேன் உள்ளே. பேச்சு நின்றுவிட்டது. கொஞ்ச நேரம் கழித்து உன் அப்பா, "டே! புண்யகோடியும் நீயும் பேசினபோது யார் இருந்ததுகூட குறிப்பாகச் சொல்ல முடியுமா" என்று கேட்டார். "உங்க மாமனார் வீட்டுத் தோட்டக்காரன் இருந்தான்" என்றான் அவன். "சரி! நீ போ! அந்தப் புண்யகோடிக்குச் சொல், நாளைக்கு இந்த ஊரிலே அவனை நான் கண்டால், தலை இராது என்று சொல்லி விடு. போ" என்று உத்தரவிட்டார். அவன் போய்விட்டான். நான் உள்ளே இருந்து, "அபாண்டம்! பழி! அநியாயம்! அந்த நாசமாய்ப் போனவனைக் கொன்றால்கூடத் தோஷமில்லை. கதவைத் திறவுங்கள். பூஜாரியை விளக்குமாற்றாலே அடிக்கிறேன்" என்று நான் கூவினேன். எனக்குப் பேய் பிடித்ததாகக் கூறி அந்தப் புரட்டனை அவர் தான் அழைத்து வந்தார். அந்தப் பாதகன், என்னைப் பற்றிக் கெட்ட நினைப்பு வைத்தால் நான் என்ன செய்ய முடியும் அதற்கு. நான் கெஞ்சினேன், அழுதேன், கதவைத் திறக்கும்படி. உள்ளே இருந்து கதவைத் தடதடவென்று தட்டினேன். கதவை அவர் திறக்கவில்லை. உற்றுக் கேட்டேன். கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது.

     என்னை உள்ளே தள்ளிப் பூட்டிவிட்டார் உன் தந்தை! சொந்த வீட்டிலேயே கைது செய்யப்பட்டேன். ஒரு குற்றமும் செய்யாத நான், எவனோ பூஜாரி, குடிவெறியில் எதையோ உளறினால், அதற்காக என்னை இப்படிக் கொடுமை செய்வதா? பெண் இனத்தின் தலை மீது இருக்கும் இந்தப் பெரிய ஆபத்தைப் பற்றி யார் கவலை எடுத்துக் கொள்கிறார்கள்? உலகிலே, எதை எதையோ சீர்திருத்தம் செய்வதாகப் பேசிக் கொள்கிறார்கள். என்னென்னவோ கொடுமைகளை நீக்க வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமை இருக்கிறதே, ஆண், பெண்ணைப் படுத்தும் பாடு, இதனை நீக்குவதற்கு யார் வேலை செய்கிறார்கள். பரமசாது, தர்மவான், ஊர்ச் சொத்துக்கு ஆசைப்படாதவர், கௌரவமான குடும்பத்தவர் என்றெல்லாம் புகழப்பட்ட உன் தகப்பனாரிடம் நான் இந்தக் கொடுமைப்பட நேரிட்டது என்றால், குடியனிடம் குணங்கெட்டவனிடம் சிக்கிய பெண்கள், எவ்வளவு பாடுபடுவார்கள்! நமது ஊர்களிலே பார்க்கிறோமே இந்தக் கோரத்தை. குடித்துவிட்டுக் கூத்தாடும் புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் வடிக்கும் கண்ணீரை யார் கவனிக்கிறார்கள்? அவள் வாயாடி, புருஷனுக்கு அடங்குவதில்லை. அவன் தான் குடிகாரன் என்று தெரியுமே, அதற்கேற்ற படிதானே இவள் நடந்துகொள்ள வேண்டும் என்று, பெண்ணுக்குப் புத்தி கூற வருவார்களே தவிர புருஷனைக் கண்டிக்கத் துணியமாட்டார்கள். அதிலும் உன் அப்பா, ஊருக்குப் பெரியவர்; ஊர் பஞ்சாயத்து அவரிடம் வரும். அப்படிப்பட்டவரை யார் கண்டிப்பார்கள்? மேலும், எனக்குப் பேய் பிடித்து ஆட்டுகிறது என்று வதந்தி வேறு, ஊர் எங்கும் பரவி விட்டது. ஆகவே என்னை அவர் என்ன கொடுமை செய்தாலும் கேட்பார் கிடையாது.

     என்னை அறையிலே தள்ளிப் பூட்டிவிட்டார். நான் திகைத்துப் போனேன். கதவைத் தடதடவென்று தட்டினேன்; கோவெனக் கதறினேன்; இப்படி அவதிப்படுவதைவிட, உயிரைப் போக்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர் இருந்தால் தானே பதில் பேச. என்னைப் பூட்டிவிட்டு நேரே என் அப்பாவிடம் ஓடி இருக்கிறார். அங்கு போய் என்ன சொன்னாரோ தெரியாது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என் அப்பா வந்தார். கதவு பூட்டினது பூட்டியபடி இருந்தது; உள்ளே நான் கொஞ்சம் மயக்கத்தோடு, தரையில் படுத்துக் கிடந்தேன். வெளியே பேசும் குரல் கேட்டு, எழுந்து நின்றுகொண்டு, கதவைத் தட்டினேன். என் அப்பா பேசினார் கதவைத் திறக்காமலே.


     "ரங்கம்! என்னம்மா இப்படிச் செய்கிறாயே" என்றார். மகனே! உன் தாத்தா, என் அப்பா என்னைக் கேட்டார், 'ஏனம்மா இப்படிச் செய்கிறாய்' என்று. நான் செய்தது என்ன? புருஷனின் கொடுமைக்கு ஆளாகிப் புலம்பிக் கொண்டிருந்தேன். என்னை இம்சித்தவரைக் கேள்வி கேட்டுக் கண்டிக்க வேண்டிய என் தகப்பனார், என்னைக் கண்டிக்கலானார்.

     "அப்பா! கதவைத் திற" என்று கூறினேன்.

     "திறக்கிறேன்; ஆனால் ஒன்றும் நீ அமர்க்களம் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது. என் மீது ஆணையிட்டுச் சொல் திறக்கிறேன்" என்றார்.

     "என்னப்பா இது! நீங்களும் அந்தப் பாவிபோலவே நடந்து கொள்கிறீர்கள்" என்று கேட்டேன். என் புருஷர் பேசலானார்.

     "கேட்டீர்களா, நான் பாவி! உங்களுக்குத் தெரியாது மாமா, ரங்கம் பேசின பேச்செல்லாம். இதுவரை நான் இப்படி ஒரு பெண் பேசிக் கேட்டது இல்லை" என்றார். என் அப்பாவோ சற்றுச் சோகமாக,

     "என்னப்ப செய்யலாம்! அவளா பேசுகிறாள். ரங்கம் பரமசாதுவல்லவா? உனக்கே தெரியுமே! இவ்வளவு காலமாக அவளோடு நீ குடித்தனம் செய்யவில்லையா? நீங்கள் இருவரும் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துவதைக் கண்டு நான் எவ்வளவோ ஆனந்தப்பட்டேன். என்ன செய்யலாம்! ரங்கம் தன் பழைய நிலையில் இருந்தால், இப்படி ஏன் நடக்கப் போகிறது? எல்லாம் அதன் சேஷ்டை. அவள் என்ன செய்வாள்?" என்றார். அதாவது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் போக்குக்கு நான் பொறுப்பல்ல என்று என் கணவனிடம் வாதாடினார். உன் அப்பா அதற்கு, "மாமா, இதற்கு என்ன தான் வழி?" என்று கேட்டார். "நான் விசாரித்து வைத்திருக்கிறேன். இந்த ஊர் மந்திரக்காரர்கள் பிரயோஜனமில்லை; நாற்பதாவது கல்லிலே பனையவரம் என்றோர் கிராமம் இருக்கிறதாம். அங்கே ஒரு பக்கிரி இருக்கிறானாம். அவன் நாற்பது நாள் பூஜை நடத்தி, ரட்சை கட்டுகிறானாம்! எப்படிப்பட்ட பிரம்மராட்சசாக இருந்தாலும் நொடியிலே போய்விடுமாம்" என்றார். எனக்குச் சிரிப்புத்தான் பொங்கிற்று. உரக்கச் சிரித்தேன். சிரித்துக் கொண்டே இருந்த நான், "ஐயோ, ஐயோ" என்று அலறினேன்.

     என் கணவனும் அப்பாவும் எனக்குப் பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. அதன் சேஷ்டையாலேயே நான் உளறுகிறேன் என்று பேசுகிறார்கள். அதே குற்றம் சாட்டியே என்னைக் கொடுமைப்படுத்தினார், உன் அப்பா. நான் என்ன செய்தேன்? அவர்கள் கூறுவது முற்றிலும் சரி என்பதுபோல நடந்து கொண்டேன்! ஒருத்தி சிரித்துக்கொண்டே இருந்து விட்டு திடீரென்று 'ஐயையோ' என்று அலறினால் என்ன எண்ணுவார்கள். உண்மையிலேயே பேயாட்டம் என்று தானே நினைப்பார்கள்? ஆனால் ஏன் நான் அவ்விதம் செய்தேன்? கணவனின் பேராசைக்குக் குறுக்கே நிற்கும் என்னை அவர் கொடுமைப்படுத்துகிறார்; அதற்கு ஏதாவது சாக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக, எனக்குப் பேய் பிடித்துக் கொண்டதாக வீண் புரளி செய்துவந்தார். அந்தப் புரளியை ஆதரிப்பது போல, சிரித்துக் கொண்டே இருந்த நான் திடீரென்று அலறினேன். எனக்கென்ன கொழுப்பா! நான் சுவரின் ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு பாழாய்ப்போன தேள் இருந்து என்னைக் கொட்டிவிட்டது. அதனால் நான் அலறினேன்.


     சிரித்துக் கொண்டே இருந்த நான், 'ஐயையோ!' என்று அலறியதும் என் அப்பா, "என்னம்மா ரங்கம்!" என்று பதை பதைத்துக் கேட்டார். நான் அலறியபடி "ஐயையோ! அப்பா! தேள் கொட்டிவிட்டது!" என்று கூறினேன். "அப்பா, தேள் கொட்டிவிட்டதாமே. அலறுது பார்" என்று என் அப்பா சொன்னார். உன் அப்பாவோ, சிரித்துக் கொண்டே, "நீங்கள் ஒரு பைத்தியம் மாமா! தேளும் இல்லை, பாம்பும் இல்லை. அவள் சிரித்ததும் பேயின் சேஷ்டை, அதுபோலவே அழுததும் பேயின் சேஷ்டைதான். இப்படித்தான் சிரிப்பு, அழுகை, தூற்றுவது, கொஞ்சுவது, மிரட்டுவது, பயந்து பேசுவது என்று பலரகம் நடந்தபடி இருக்கும்" என்றார். உள்ளே நான் துடியாய்த் துடித்தேன். வலி தாங்காது கூவினேன். கொட்டியது காலிலே, ஆனால் வலியோ உடலெங்கும். வியர்த்துவிட்டது; மார் அடைப்பது போலாகிவிட்டது. "ஐயோ அப்பா! சத்தியமாகத் தேள் கொட்டிவிட்டதப்பா! மார் அடைக்கிறது; பிராணன் போகிறது; உங்களைக் கும்பிடுகிறேன். கொஞ்சம் கதவைத் திறவுங்கள்; கொலை பாதகம் செய்யாதீர்கள்" என்று நான் கதறினேன். "ஒரு வேளை தேள்தான் கொட்டிவிட்டிருக்குமப்பா! அலறுவது தெரியவில்லை! கதவைத் திற" என்றார் என் தகப்பனார். பிடிவாதமாக உன் அப்பா, "உங்களுக்கு ஒன்றும் தெரியாது மாமா! இதெல்லாம் பேயின் பாசாங்கு. நான் சதா அனுபவிக்கிறேன். எனக்கல்லவா தெரியும் அந்த சேஷ்டைகள். கொஞ்ச நேரம் அழுதான பிறகு தானாக அடங்கிவிடும்" என்று கூறினார். எப்படியடா மகனே அடங்கும்! தேள் கொட்டினதால் விஷம் ஏறத் தொடங்கிற்று. கொட்டின இடம் நெருப்புப்பட்டது போல எரியலாயிற்று. கால் முழுதும் குடைச்சல்; மார்வலி; மயக்கம் வரலாயிற்று; அலறினேன். துடித்தேன்; ஓவென அழுதேன். வெளியே இருந்துகொண்டே என் அப்பா அழுதார். "என்ன கண்றாவியம்மா இது! உன்னை எவ்வளவு அருமையாக வளர்த்தேன். இது என்ன கோரம்" என்று கதறினார். "அப்பா! அப்பா!" என்று கூவினேன். "அடேயப்பா! தேளாக வேணும் இருக்கட்டும், இல்லை பேயின் சேஷ்டையாகவே இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் சரி. என்னால் ரங்கம் துடித்து அழுவதைக் கேட்டுச் சகிக்கமுடியவில்லை. தயவுசெய்து கதவைத் திற; நான் என் குழந்தையைப் பார்த்தாக வேண்டும்; என்னால் இனி ஒரு நிமிஷமும் பொறுக்க முடியாது" என்று கூறிக்கொண்டே என் அப்பா சிறு குழந்தையைப் போல் அழுதார். அவ்வளவு வேதனையிலும் எனக்கு அவருடைய அன்பின் போக்கு ஆனந்தமூட்டிற்று. எது எப்படி இருப்பினும், அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறதல்லவா என்று எண்ணிச் சந்தோஷப்பட்டேன். உன் அப்பாவுக்குப் பாபம், என்னை உண்மையாகவே தேள் கொட்டிவிட்டது என்று தெரியாது. நான் அறையை விட்டு வெளியே வரத் தந்திரம் செய்கிறேன் என்றே அவர் எண்ணிக் கொண்டார். ஆகவே அவருக்குக் கதவைத் திறக்கத் துளியும் சம்மதமில்லை. என் அப்பாவின் வேண்டுகோளை மறுக்கவும் முடியவில்லை. "ஏ! ரங்கம்! சும்மா இருக்கமாட்டாயா?" என்று மிரட்டினார். "ஐயோ! என்னை வெளியேவிட்டு வெட்டிப் போட்டுவிடுங்கள்! உள்ளேயிருந்து உயிர் துடிக்க என்னால் முடியாது. குலதெய்வத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். தேள்தான் கொட்டியது, வாயிலே நுரை தள்ளுகிறது; இன்னும் கொஞ்ச நேரம் உள்ளேயே இருந்தால் உயிர் போகும்; ஐயோ! தண்ணீர் ஒருமுழுங்கு தண்ணீர்! மார் அடைக்கிறது" என்று நான் துடிதுடித்துக் கேட்டேன். என் அப்பாவால் என் கதறலைக் கேட்டுத் தாங்க முடியவில்லை. ஒரே ஆத்திரம் பிறந்துவிட்டது. "யாரடா அவன் மடையன்! உள்ளே உயிர் வேதனையோடு ஒரு பெண் கதறிக் கொண்டிருக்க, செக்கு உலக்கைபோல் நின்று கொண்டிருக்கிறாயே! உன் மனம் கல்லா? மனைவி உள்ளே துடிதுடிக்க வெளியே நின்றுகொண்டு வீண் பேச்சுப் பேசுகிறாய். கதவைத் திறக்கிறாயா உடைக்கட்டுமா இந்தக் கதவை. பேயாக வருவதாக இருந்தாலும் சரி, என் மகளை நான் இந்த க்ஷணம் பார்த்தாக வேண்டும். திற கதவை" என்று கர்ஜனை செய்தார். ஒரு தேளா, ஓராயிரம் தேள் கொட்டி வலி இருந்தாலும் என்ன! அந்தக் கிழவரின் வீராவேசமும் அன்பும், என்னை ஆனந்த சாகரத்திலாழ்த்திற்று. கொடுமைகள் மலை மலையாய்க் குவிந்தாலும், என் அன்புள்ள அப்பா இருக்கு மட்டும் எனக்குக் கவலையில்லை என்று நான் எண்ணிப் பூரித்தேன் - என் தகப்பனாரின் கோபாவேசத்தைக் கண்ட உன் தகப்பனார் கொஞ்சம் பயந்து போனார் என்பது அவர் பதிலிலே நன்றாகத் தெரிந்தது! "மாமா! என் மனம் கல்லுமல்ல, இரும்புமல்ல! ரங்கம் கதறுவது கேட்டு எனக்கும்தான் பதறுகிறது. என்மேல் நிஷ்டூரம் வேண்டாம். பேயின் சேஷ்டைதான் இது. இந்தச் சமயத்திலே கதவைத் திறந்தால், உண்மையாகவே ஆபத்து நேரிடும்" என்றார் கொஞ்சம் பணிவாகவே. என் அப்பாவின் குரலிலே துக்கம் தோய்ந்திருந்தது. "அப்பா! உன் மனைவியைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறை உனக்கு எப்படி இல்லாமற் போகும். என்ன ஆபத்து வந்தாலும் சரி, கதவைத் திறக்கத்தான் வேண்டும். உனக்குத் திகிலாக இருந்தால், சாவியைக் கொடு என்னிடம்; நான் கதவைத் திறக்கிறேன். நீ வெளியே போய் இரு" என்றார். "மாமா! இப்படிப் பேசாதீர். உமக்குமட்டும் ஆபத்து வரலாம், எனக்கு வரக்கூடாது என்பதா என் எண்ணம்" என்று கூறினார். இரண்டோ ர் நிமிஷங்களிலே பூட்டு திறக்கும் சத்தம் கேட்டது. தைரியமாகப் பேசினாரே தவிர, என் அப்பாவுக்குக் கொஞ்சம் அச்சம் இருந்து கொண்டிருந்தது. கதவைத் திறப்பதற்கு முன்பு அவர், "அம்மா! ரங்கம்! ரங்கம்!" என்று வாஞ்சையுடன் கூப்பிட்டார். அதாவது சாந்தி கூறினார். கதவு திறக்கப்பட்டது. வெளிச்சம் உள்ளே விழுந்தது. அதுவரை என்னை ஏய்த்துக் கொண்டிருந்த தேள் கதவு இடுக்கைவிட்டு, சரசரவென்று சுவரில் ஏறக் கண்ட நான் தாவி வெளியே வந்து, என் தகப்பனாரின் கைத்தடியை எடுத்தேன், தேளை அடிக்க. நான் தடி எடுத்ததுதான் தாமதம், இருவரும் பெருங் கூச்சலிட்டுக் கொண்டு, கூடத்தை விட்டு வேகமாக வெளியே ஓடிவிட்டார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:49 pm

ரங்கோன் ராதா

7

     பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம் எவ்வளவு விபரீதமான நடவடிக்கைகளுக்கு இடம் தருகிறது. என்னைக் கொட்டி வேதனை கொடுத்த தேளை அடிக்க நான் என் அப்பாவின் தடியை எடுத்தேன். எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பியதால், நான் தடியை எடுத்ததும், தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்து, என் தகப்பனாரும், புருஷனும் ஓடினார்கள். என்னால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. மகா சூரர்கள், வீரர்கள் இந்த ஆண்பிள்ளைகள்! எதிலே! பெண்களை மிரட்டுகிற விஷயத்திலே! நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கென்ன பயம் என்று பெருமையாகப் பேசுவார்கள். பெண் என்றால் பயங்காளி, ஆண்களேதான் தைரியசாலிகள் என்று எப்படியோ ஒரு தப்பான எண்ணத்தை நாட்டிலே பரப்பி விட்டார்கள். இரண்டு ஆடவர்கள் ஓடினார்கள், நான் கையிலே தடியை எடுத்ததும்! அவ்வளவு பயம்! பேய் என்ன செய்துவிடுமோ, என்ற பயம்.


     தேளை அடித்துவிட்டு வெளியே வந்து அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் என் வார்த்தையிலே நம்பிக்கை வைத்து உள்ளே வர நெடுநேரம் பிடித்தது. இதற்குள் வீட்டு வாசற்படி அருகே ஒரு சிறு கூட்டம். வழக்கப்படி என் கணவருக்கு உபசார மொழிகள்; அவரும், வழக்கமான நடிப்பைச் செய்தார். தேளைக் காட்டினேன், அப்பாவுக்கு. அப்போதுதான் நம்பினார், உண்மையில் என்னைத் தேள் கொட்டியதனால்தான் அலறினேன் என்று. ஏதோ மருந்து தடவினார்கள். அன்றைய பொழுதை ஒருவாறு கழித்தேன். மறுதினம் நான் என்ன சொல்லியும் கேட்காமல், என் தகப்பனார் நிர்ப்பந்தப்படுத்தி, என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். பேய் ஓட்டும் இடமாம் அது. அங்கு போய், ஒரு பெரிய குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நானும் என் அப்பாவும் எங்களுக்கு உதவியாக வந்த வேலைக்காரியுடன் தங்கினோம்; கிராமம் சிறிய அளவு; ஆனால் பச்சைப் பசேல் என்று இருக்கும். எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் அழகான தோப்புகள். சுற்றிப் பார்க்குமிடங்களிலெல்லாம், விதவிதமான பட்சிகள். இந்தக் கிராமத்திலே தங்கியிருந்த ஒரு பக்கிரி, பேயோட்டுவதில் நிபுணன் என்று அந்தப் பக்கத்து வதந்தி. அதனால், என் தகப்பனார் என்னை அங்கு அழைத்து வந்தார். எனக்கு ஒரு துளியும் விருப்பம் கிடையாது, அங்கு போக. என் கணவரிடம், நான் புறப்படுவதற்கு முன்பு, தனியாகச் சந்தித்து, என் மனதைத் திறந்து பேசினேன். "எப்படியோ நமது இன்ப வாழ்வு கெட்டுவிட்டது. என் சகவாசம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. கல்லென்றாலும் கணவன் தான், புல்லென்றாலும் புருஷன் தான். ஆனால் நீங்கள் என் தலைக்குப் பாறையாக இருக்கிறீர்! ஆகையால், என் மனமும் முறிந்துவிட்டது. தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளுங்கள், நான் தடை செய்யவில்லை என்று உம்மிடம் கூறினேனே, அன்று இரவு, அதோடு என் அல்லல் தீர்ந்துவிட்டது என்றுதான் நான் மனமார நம்பினேன். அன்று இரவு, நீங்களும் என் துக்கத்தை எல்லாம் துடைத்து விடுவதுபோலவே நடந்து கொண்டீர். ஆனந்தமாகக் கழிந்தது அந்த இரவு; என் கடைசி இன்ப இரவு அதுதான். இனி அத்தகைய இரவு கிடையாது. மறுதினமே உங்கள் மனம் மாறிவிட்டது. இனி நானும், நம்பிக்கையை இழந்துவிட்டேன். கட்டின தாலி ஒன்றுதான் இனி நாம் கணவன் மனைவி என்பதைக் காட்டும் அறிகுறியாக இருக்கும். உம்மை நான் இழந்துவிட்டேன். இனி மறுபடியும் பெற முடியாது. பெறவும் முயலமாட்டேன். உம்மை நான் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒரே ஒரு விஷயமாகத்தான். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அந்தப் பேயோட்டும் இடத்துக்கு அனுப்பாதீர்கள். அங்கே எத்தனை புண்யகோடி இருப்பார்களோ? என்னென்ன பழி பிறக்குமோ, என்ற பயம் என்னைக் கொல்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை, ரங்கத்தை அவள் புருஷன் கைவிட்டார் என்று மட்டும் உலகம் கூறட்டும்; வேண்டுமானால் ரங்கத்தைப் பேய் பிடித்துக் கொண்டதால், அவள் கணவன், இரண்டாம் கலியாணம் செய்து கொண்டான், ரங்கம் மாட்டுக் கொட்டகையிலே கிடக்கிறாள் என்று பேசட்டும்; ரங்கம் கெட்டு விட்டாள் என்று பேசுவதற்கு மட்டும் இடம் தரவேண்டாம். குடிவெறியிலே உளறினான் அந்தக் கோணல் சேட்டைக்காரன், பூஜாரி, புண்யகோடி. அதற்கு எனக்கு விபசாரிப் பட்டம் சூட்டினீர். இப்போது என்னை வேறோர் பேயோட்டியிடம் போகச் செய்கிறீர் சிகிச்சை பெற. இங்கு போவதால், என் மீது அபவாதம் ஏற்பட்டால் என் கதி என்ன ஆவது? விபசாரி என்று உலகம் தூற்றுவதற்குமா நான் இடமளிக்கவேண்டும்? என்னைப் பிடித்த பேய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதை ஓட்டுவதற்கு முயற்சி எடுப்பதாகக் கூறி என் மானத்தை ஓட்டி விடாதீர். தயவு செய்யுங்கள். என்னிடம், இனி நீர் பேச வேண்டாம்; அன்பு காட்ட வேண்டாம்; தோட்டத்திலேயே கிடக்கிறேன். நான் ஏதேனும் தொல்லை தருவேன் என்று பயம் ஏற்பட்டால், என்னைக் கட்டிப் போடுங்கள். ஆனால், விபசாரி என்ற பழி பிறக்கும்படியான மார்க்கத்திலே என்னைத் துரத்தாதீர். பாவி புண்யகோடி, நான் மயக்கமுற்றுக் கிடந்த நேரத்தில், என் மச்சம் முதலிய அடையாளத்தைக்கூடக் கண்டு கொள்ளவும், கேவலமாகப் பிறகு பேசவும் துணிந்தான். இப்போது நீங்களும் வரமுடியாது என்று கூறுகிறீர். என்னை என் தகப்பனாருடன் அனுப்பி வைக்கிறீர். அங்கே என்னென்ன பழி பிறக்குமோ என்றே நான் பயப்படுகிறேன். வேண்டாம். நாம் சில காலமாக இருந்து வந்த இன்பத்தின் பேரால் உம்மைக் கேட்கிறேன். என்னை இங்கேயே இருக்கவிடுங்கள்" என்று நான் கண்ணீரும் கம்பலையுமாக இருந்துகொண்டு கேட்டேன். 


     உன் அப்பாவின் மனம் இளகவில்லை. போக முடியாது என்று பிடிவாதம் செய்து பார்த்தேன். பிடிவாதம் செய்யச் செய்ய பேயின் சேஷ்டை அதிகமாகிவிட்டது என்றே என் அப்பாவும் ஊராரும் நம்பினார்கள். ஆகவே, பலாத்காரமாக என்னை அழைத்துக் கொண்டு போனார்கள் அந்தக் கிராமத்துக்கு. என் முயற்சிகள் தோற்றுவிட்டன. என்ன செய்வது இனி, எப்படியாவது நான் தொலைய வேண்டும் என்பதுதான் உன் அப்பாவின் எண்ணம். நானும் தற்கொலை செய்து கொள்வது என்று ஏதேதோ யோசித்தேன் மகனே! எனக்கு மனம் வரவில்லை சாக. என்னை அவரே கொல்லட்டுமே, நானாக ஏன் சாகவேண்டும் என்று எண்ணினேன். ஆடுகூடத் தானாக வெட்டுபவனிடம் போய் நிற்பதில்லையே! அதனுடைய சக்திக்குத் தகுந்தபடி, தப்பித்துக் கொள்ளக் கொஞ்சம் போராடித்தானே பார்க்கிறது. என்னைக் கொட்டிய தேள், சுலபத்திலே கொல்லப்படுவதற்கு இடந்தரவில்லையே. ஒளியவும், நழுவவும் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்துவிட்டதே. கொடுமைக்கு ஆளான நான் மட்டும் ஏன் அவருக்கு வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொடுப்பதற்காகச் சாகவேண்டும். பேராசைக்காரர், கொடிய சுபாவக்காரர், வஞ்சகர் உன் அப்பா, ஏன் அவர் இன்னும் ஒருபடி முன்னேறி, கொலைகாரராகக்கூடாது! என்னைக் கொல்லட்டும். நானாகச் சாகக்கூடாது. நான் வாழத்தான் வேண்டும். அது வேதனை நிரம்பிய வாழ்க்கையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உயிரோடு உலாவுவதே அவருக்கும் அந்த ஆள் விழுங்கித் தங்கத்துக்கும் வேதனை தரும் அல்லவா! அது போதும்! என்று எண்ணினேன். எனக்குச் சாகத் துணிவு இல்லை என்பதல்ல, இஷ்டம் இல்லை. உயிரோடு இருந்து போராட வேண்டும் என்று தோன்றிவிட்டது. இனி அவர் என் கணவரல்ல, என்னை வஞ்சித்து வாழ விரும்புவர். இனி அவருடைய வஞ்சனையுடன் போராடி, ஒரு பெண்ணை அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காட்ட வேண்டும் என்று உறுதி பிறந்தது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே எனக்குப் பயம். அதாவது, என் மீது பழி ஏதும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்பதுதான். தவறி நடந்து விட்டாள், வழுக்கிவிட்டாள் என்ற வதந்தியைப் போல, பெண்களை நாசமாக்கக்கூடிய கருவி வேறு இல்லையே. ஊர் முழுதுமல்லவா, எதிரியாகிவிடும் அப்போது. அந்த ஒரு பழி மட்டுமே வராதபடி பாதுகாத்துக் கொண்டு, உன் தகப்பனாரை நேருக்கு நேர் தைரியமாக நின்று சந்தித்து, "உன்னுடைய அதிகாரத்துக்கும் அளவு உண்டு. உன் கொடுமையைச் சகித்துக் கொண்டு இருந்தாக வேண்டும் என்று ஒன்றும் இல்லை" என்று கூற வேண்டும் என்று தோன்றிற்று. என் மீது விபச்சாரிப் பட்டம் சூட்டிவிட்டால் எனக்கு அந்தத் தைரியம் வராது. நெஞ்சிலே களங்கமில்லாததால் ஒரு வேளை தைரியம் வந்தாலும், ஊரார் என்னையே தூற்றுவார்கள். பெண், விபசாரியாகிவிட்டாள் என்ற பேச்சைக் கேட்ட மாத்திரத்திலே ஆண்கள் ஆளுக்கொரு கல்லைக் கையிலே தூக்கிக்கொள்வார்கள். அந்தப் பெண்ணின் வீட்டு மக்கள், உற்றார் உறவினர் இவர்கள் மட்டுமா, வழியில் வருகிறவன் போகிறவன் கூட அல்லவா வசை புராணம் பாடுவான் தைரியமாக. எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உயிரை வாங்குவார்களே தவிர, அவளுடைய விபசாரம் சாத்யமானது ஒரு ஆணினால்தானே என்று யோசிக்கமாட்டார்கள். யோசித்தாலும் அவனிடம் கொஞ்சம் அச்சத்தோடுதான் பேசுகிறார்கள். அவனே கூட என்ன சொல்கிறான். "என்னை என்னடா மிரட்டுகிறீர்கள்; போய் அவளைக் கேளுங்கள். உங்கள் வீட்டிலே உள்ளவளை அடக்கி வைக்காமல் என்னிடம் வம்பு செய்தால் என்ன அர்த்தம்? அவள் இஷ்டப்பட்டாள். நான் என்ன சன்யாசியா? போடா போ" என்று கூறிவிடுகிறான். ஆகையால் விபசாரி என்ற பழிமட்டும் என்மீது தாக்காதபடி பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டால் போதும் என்பதிலே நான் அவ்வளவு கவலைப்பட்டேன். அன்புக்கு அன்பு திரும்பக் கிடைக்கும் என்று காத்திருந்து பார்த்தேன். உன் அப்பா என்னை மிருகமாக்கினார். அவர் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! ஊரார் என்னையா கோபிப்பார்கள்! பேயைத்தானே திட்டுவார்கள். சாதாரணமான மற்ற பெண்கள் பெற முடியாத உரிமை எனக்குப் "பேய்" மூலமாகக் கிடைக்கிறது. ஏன் நான் அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? நான் விரும்பினால் திடீரென்று பாய்ந்து சென்று உன் அப்பாவின் தலைமீது தண்ணீர்ச் செம்பை வீச முடியும். அவர், 'ஐயோ! ஐயோ!' என்று அலறும் சங்கீதத்துக்கு ஏற்றபடி ஆனந்தத் தாண்டவமாட முடியும்! என்ன செய்வார் அவர்? குய்யோ முறையோ என்று கூவுவார். மக்கள் கூடுவர், வாயில் வந்தபடி அவர்களையும் ஏசலாம், யார் என்ன செய்ய முடியும்! நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! திடீரென்று தங்கத்தின் காதைக் கடிக்கலாம்; உன் அப்பாவின் காலை ஒடிக்கலாம்; செய்து வைத்திருக்கும் சாப்பாட்டைக் குப்பையிலே எடுத்து வீசலாம். குப்பைமேட்டின் மீது வீட்டுச் சாமானை எறியலாம்; கதவுகளை உடைக்கலாம்; துணிகளைக் கொளுத்தலாம்; நடு இரவில் நல்ல தூக்கத்திலே உன் அப்பா இருக்கும் போது பயங்கரமாக கூச்சலிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். என் வாழ்வைப் பாழ்படுத்திய உன் அப்பாவின் வாழ்விலே ஒரு நிமிஷ நேரம் கூட நிம்மதி இல்லாதபடி செய்யலாம். 

     என்ன செய்தாலும், ஊரார் என்னைத் தூற்றமாட்டார்கள். "ரங்கம் பாவம் படாதபாடு படுகிறாள்! எவ்வளவு நல்ல பெண். பாழாய்ப் போன பேய் பிடித்துக் கொண்டு அவளை ஆட்டிப் படைக்கிறது" என்று பேசுவார்களே தவிர, என்மீது கோபிக்கமாட்டார்கள். பேயைச் சாக்காக வைத்துக் கொண்டு உன் அப்பாவின் மீது படை எடுக்க முடியும். மிஞ்சிப் போனால், கைகாலைக் கட்டிப் போடுவார்கள். போடட்டுமே! இரண்டு நாட்கள் சும்மா இருப்பது. பிறகு தானாகக் கட்டுகளை அவிழ்த்துவிட்டுவிடுவார்கள். பிறகு ஆரம்பிக்கிறது பேயாட்டத்தை! இதுபோல எண்ணினேன்! எண்ணுவதிலேயே கூட இன்பம் பிறந்தது. சொத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளத் தந்திரமான திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள, நான் ஒருத்தி தடையாக இருக்கிறேன் என்று அறிந்து, என்னைப் பேய் பிடித்துக் கொண்டதாகக் கூறினார், உன் அப்பா. அன்பினால் அவருடையை மனதை என் பக்கம் திருப்ப முயன்றேன், முடியவில்லை. இனி எந்தப் பேயின் பேரில் சாக்கிட்டு அந்தப் பேராசைக்காரர், என்னைக் கொடுமை செய்தாரோ அந்தப் பேயின் சாக்கை வைத்துக் கொண்டே, நான் அவருடைய வாழ்வைக் கொட்டிக் கொட்டி வேதனையை உண்டாக்குவது என்று தீர்மானித்தேன். மகனே, உன் தாய் எப்படி இவ்வளவு கல்நெஞ்சு கொண்டாள் என்று யோசிக்கிறாயா? அப்படி நான் எண்ணினது தவறு என்று கூறுகிறாயா? என் மீது தவறு இல்லையடா, கண்ணா!


     ஒருநாள் ரங்கோனில், நான் சமையற்கட்டில் இருந்தபோது, ராதா, 'ஆ!' என்று அலறும் சத்தம் கேட்டு, "என்னடி கண்ணு!" என்று கேட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்தேன். ராதா உதட்டிலே ரத்தம் இருக்கக் கண்டேன். "என்னடியம்மா?" என்று கேட்டேன். "அம்மா, வேடிக்கைக்காக எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன் சீதாவை. அந்தத் துஷ்டை பாரம்மா, என் உதட்டைக் கடித்துவிட்டாள்" என்றாள் ராதா. சீதா, ஒரு பெண்ணல்ல, கிளி; ராதா அன்புடன் வளர்த்து வந்த கிளியை, அவள் ஏதோ கொஞ்சம் சீண்டிவிட்டாள்; அதற்குக் கிளி அவள் உதட்டைக் கடித்துத் தண்டனை தந்தது. வேடிக்கை கூட கொஞ்சம் வேதனையை உண்டாக்கினால் பச்சைக் கிளிக்கும் பதைபதைப்பு வருகிறது. என்னிடம் உன் அப்பா விளையாடவில்லை; என் வாழ்வைச் சிதைக்கும் விளையாட்டிலே ஈடுபட்டார். கொடுமை செய்தார், கேவலம், பணத்தாசை பிடித்து. எனக்குக் கோபமும், பழிவாங்க வேண்டுமென்ற உணர்ச்சியும் வராதா? யாருக்கும் ஏற்படக்கூடிய எண்ணம்தான் அது. ஆகவே, நான் கொண்ட எண்ணம் தவறு அல்ல, என்னை அவர் தவிக்கவிட்டுத், தான் சுகமாக வாழ்வதற்காக என்னைக் கேவலப் படுத்தத் துணிந்தார். ஏன் நான் அவருடைய சுகத்தைக் கெடுக்கக் கூடாது? அதிலும் எனக்குப் பேயின் தயவினால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் வேறு துணையாக இருக்கிறது. என் வாழ்வுக்கு ஆனந்தம் தர வேண்டிய கடமை அவருக்கு. அவரோ அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார். பேய் கெட்டது என்பார்கள். அந்தப் பேய் செய்யக்கூடிய பெரிய உபகாரமும் இருப்பதை எண்ணிப்பார்த்தபோது நான் சந்தோஷப்பட்டேன்.

     கிராமத்திலே சில நாட்கள் தங்குவது, பேயோட்டுவதாகச் சொல்லும் புரட்டனின் பூஜை முதலிய வீண் காரியங்களைக் கொஞ்ச நாட்களுக்குச் சகித்துக் கொள்வது, அவனாகப் பார்த்துப் பேய் நீங்கிவிட்டது என்று கூறும்படி ஒழுங்கான முறையிலே நடப்பது, பிறகு வீடு திரும்புவது. அங்கேயும் சில தினங்கள், நிம்மதியடைந்ததாகவே பாவனை செய்வது, பிறகு திடீரென்று உன் அப்பாவின் மீது பழி வாங்கும் காரியத்தைத் துவக்குவது என்று தீர்மானித்தேன். அதாவது, என்னை நீக்கி விட உன் அப்பா என் மீது ஏவிய 'பேய்' இருக்கிறதே, அதனை அவருடைய கொடிய குணத்துக்காக அவரைத் தண்டிக்கும்படி, அவர் மீது, நான் ஏவிவிடுவது என்று திட்டமிட்டேன். இந்த எண்ணத்தால் எனக்கோர் வகையான ஆனந்தம் உண்டாயிற்று. என் அப்பா, "ஒரே நாள் பூஜையிலே, பிரக்யாதிபெற்ற பக்கிரி, குழந்தையின் முகத்திலே, களை வரும்படி செய்துவிட்டான்" என்று கூறிக்கொண்டார், என் முகப் பொலிவைக் கண்டு. "பைத்தியக்கார அப்பா! உன் மகளைப் பேயும் பிடித்துக் கொள்ளவில்லை, பூதமும் தூக்கிக் கொண்டு போகவில்லை; உன் மருமகனின் வஞ்சகம், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது" என்று நான் சொன்னால் அவர் நம்புவாரா? அந்தப் புரட்டன் சொன்ன அத்தனை புளுகுகளையும் நம்பினார்.

     பேயோட்டும் பக்கிரி, முதல் தரமான புரட்டன் என்பது அவனைப் பார்த்த முதல் நாளே எனக்கு விளங்கிவிட்டது. என்னைப்போலப் பேய் பிடித்த பல பெண்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்தக் கிராமத்திலேயே, அவனுடைய வீடுதான் மாடி வீடு, மற்றவை குடிசைகள். பக்கிரி, ஏழைகளுக்கு இலவசமாகப் பேயோட்டுவது, பணக்காரர்களிடம் கூட வற்புறுத்துவதில்லை. இஷ்டப்பட்ட காணிக்கை செலுத்தலாம் என்று கூறுவது, இந்த முறையிலே நடத்தி வந்தான், வியாபாரத்தை. இதிலே, அவன் கையாண்ட தந்திரம் என்னவென்றால், ஏழைகளுக்கு இரண்டொரு நாட்களிலே பேய் ஓடும்படி செய்துவிடுவான். அல்லது, இன்னும் இரண்டு வருஷம் கழித்துவந்தால்தான் இந்தப் பேயை ஓட்ட முடியும், என்று சொல்லி அனுப்பிவிடுவான். பணக்காரர்கள் பேயோட்டிக் கொள்ளச் சென்றாலோ, கொஞ்சத்திலே விடமாட்டான். நாற்பது நாள் முழுக்கு, முப்பது நாள் கோயிலைச் சுற்றுவது, பத்து நாள் பச்சிலைத் தைல ஸ்நானம்; பிறகு பூஜை. அதன் பிறகு விசேஷ பூஜை. இப்படி மாதக்கணக்கிலே கடத்திக் கொண்டே போவான். ஒரு வாரத்துக்கொரு முறை வெள்ளி, பொன் ரட்சைகள் தயாரித்துத் தந்தபடி இருப்பான். இதற்கெல்லாம் பிடிக்கும் செலவு தவிர, வேறு பணம் தானாகக் கேட்பதில்லை என்று கூறி இதன் மூலமாகவே, பத்து காணி நல்ல நஞ்சையும், ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பும் வாங்கிவிட்டான். மாடி வீடு கட்டிக் கொண்டான். மூன்று பெண்களை நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்தான். அந்த மருமகப் பிள்ளைகளைப் பெரிய உத்தியோகஸ்தர்களின் தயவு தேடி நல்ல வேலையில் அமர்த்தி விட்டான். இவ்வளவும் 'பேயோட்டும்' புரட்டிலே சாதித்துக் கொண்டான். மகாராஜாக்களும் மிட்டாதாரர்களும் ஹைகோர்ட் ஜட்ஜுகளும் தந்த சர்டிபிகேட்டுகள் ஒரு கத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். பெயர்தான் பக்கிரியே தவிர, ஆள் ஜமீன்தாரரைப் போலத்தான். கையிலே காப்பு, காதுகளிலே கடுக்கன், கழுத்திலே தங்கத்தால் சங்கிலி, அதிலே ஏதோ ஒரு பெரிய ரட்சை, கல்லிழைத்தது, பூஜை அறையிலே வெள்ளிப் பாத்திரங்கள், இவ்வளவு வைபவம் இருந்தன. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனிடம் "பராசக்தி" பிரசன்னமாகிப் பேசுமாம். அந்தப் பக்கிரி, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மரியாதையுடன் "உட்காரம்மா! உட்கார்!" என்றான், உட்கார்ந்தேன்.


     "இதோ குழந்தை! இதை வாயில் போட்டுக்கொள்" என்று ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்தான். இனிப்பாகத்தான் இருந்தது. "கசப்பு அதிகமாம்மா?" என்று கேட்டான். "இல்லையே! தித்திப்பாகத்தான் இருந்தது" என்று நான் சொன்னேன். பிறகு அவன் அப்பாவைப் பார்த்து, "பயப்பட வேண்டாம். குழந்தைக்குப் பேய் முற்றிவிடவில்லை. சர்க்கரை எப்போது இனிக்கிறதோ, அதிலிருந்து நிலைமை மோசமில்லை என்று தெரிகிறது. சில பெண்களுக்குச் சர்க்கரை கூடக் கசப்பாகிவிடும். பேயின் சேஷ்டையால்" என்று சொன்னான். உன் அப்பாவையே சட்டை செய்யப் போவதில்லை இனிமேல் என்று தீர்மானித்துவிட்ட எனக்கு, இந்தப் புரட்டனிடம் என்ன பயம்? நான் பேசலானேன்.

     "சர்க்கரை இனிப்பாகத்தானே ஐயா இருக்கும். அதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?"

     "சர்க்கரை இனிப்பாகத்தான் இருக்கும் குழந்தே! ஆனால் அதுகூடக் கசப்பாகிவிடுவதுண்டு."

     "ஆமாம்! அதற்குப் பேய் பிடிக்கவேண்டியதில்லையே. பல நாள் ஜுரம் அடித்தால் வாய் கசக்கிறது."

     "ஜுரம் வேறு, பேய் பிடிப்பது வேறு."

     "ஆமாம்! அதை யார் இப்போது மறுத்தார்கள். பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்குச் சர்க்கரை இனிப்பா, கசப்பா என்று பார்ப்பது ஒரு பரீட்சையா? வேடிக்கையாக இருக்கிறதே!"

     "குழந்தே! நீ இப்படியே சந்தோஷமாக இருந்தால் போதுமம்மா."

     "அது கிடக்கட்டும்; எத்தனை நாள் ஆகும் பேய் போக?"

     "சீக்கிரத்திலேயே முடியும், கவலைப்படாதே."

     "பேய் ஓடுமா, ஓட்டுவீர்களா?"

     "ஓடும் பேயும் இருக்கிறது, ஓட்டவேண்டிய பேயும் இருக்கிறது."

     "ஓட்டினாலும் ஓடாத பேய் கிடையாதோ?"

     "பக்கிரி ஓட்டினால் ஓடாத பேய் கிடையாதம்மா. பக்கிரியா ஓட்டுகிறான், பராசக்தியல்லவா ஓட்டுகிறாள்."

     "பராசக்தி, உனக்கு அருளைத் தந்தது ஏன்?"

     "என் பூஜா பலன்."

     "என்னைப் பேய் பிடித்துக் கொண்டது ஏன்?"

     "உன் வினை!"

     "என் வினையை, உன் பூஜை பலன் தீர்த்துவிடுமா?"

     இப்படிப் பேச்சு முற்றிக் கொண்டே போயிற்று, எங்கள் இருவருக்கும். பதில் கூற முடியாமல் திணறினான், பக்கிரி.


     ஆனால், அந்தத் திணறலை மறைக்க, அடிக்கடி 'பராசக்தி, பராசக்தி' என்று உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். பேயோட்டும் பக்கிரியின் வாயை அடைத்துவிட்டோ ம் என்று ஒரு மகிழ்ச்சி எனக்கு. ஆனால், அந்தப் புரட்டன் சாமான்யமான பேர்வழியல்ல. கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு என் தகப்பனாரைப் பார்த்து, "ஐயா உன் மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், இன்னது என்று பராசக்தி கூறிவிட்டாள். மற்றப் பேய்களை ஓட்டுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமுண்டு. மற்றப் பேய்கள் முரட்டுத்தனம் செய்யும். இந்தப் பேய் முரட்டுத்தனம் செய்யாது. எப்போதுமே, முரட்டுத்தனம் செய்கிற பேயைச் சுலபத்தில் ஓட்டிவிடலாம். இது அவ்வளவு சுலபமல்ல" என்றான். 

     "தங்களாலே முடியாது போகுமா?" என்று தயவு கலந்த குரலிலே கேட்டார் அப்பா.

     "முடியும்! ஆனால் கொஞ்ச நாளாகும்" என்றான் அவன். 

     "என்ன விதமான பேய்?" என்று கேட்டார் அப்பா.

     "அதைத்தான் கண்டுபிடிக்கக் குழந்தையிடம் பேசிப் பார்த்தேன். எப்படிப் பேசிற்று பார்த்தீர்களா? மளமளவென்று பேச்சு இருந்தது. கேள்விமேல் கேள்வி போட்டுவிட்டது" என்றான் பக்கிரி.

     "ஆமாம்!" என்றார் என் அப்பா.

     "அது குழந்தையின் பேச்சா? பேசுமா அப்படி?" என்று கேட்டான் புரட்டன்.

     "சாதாரணமாக சங்கோசப்படுகிற குழந்தைதான். இங்கே தான் கொஞ்சம் தாராளமாகப் பேசிற்று. ஆனால் துஷ்டப் பேச்சு இல்லையே?" என்றார் என் அப்பா.

     "துஷ்டப் பேச்சுப் பேசாது. முரட்டுப் பேய்களல்லவா கெட்ட வார்த்தை பேசும். அப்படிப்பட்ட பேய்களை ஒரு மண்டல காலத்திலேயே ஓட்டிவிடலாம். இது சாதுப் பேய்!" என்றான் புரட்டன்.

     "சாதுப் பேய் என்று சாமான்யமாகச் சொல்கிறீர். வீட்டிலே நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?" என்று சோகத்துடன் சொன்னார் அப்பா.

     "பழமொழியே இருக்கிறதல்லவா, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று, அதுபோல நடந்திருக்கும்" என்று விளக்கம் கூறினான், அந்தப் பூஜாரி.

     "சாதுப் பேய், கொஞ்ச நாளிலே போகாதா?" என்று கேட்டார் அப்பா. "ஆமாம்" என்றான் பக்கிரி. "அது ஏன்?" என்றார் அப்பா. "முரட்டுப் பேயாக இருந்தால், போக முடியாது, நீ என்ன செய்யமுடியும் என்று கொக்கரிக்கும். உடனே அதற்குத் தரவேண்டிய தண்டனையைத் தந்து, துரத்திவிடலாம் சுலபத்தில். ஆனால், இந்தச் சாதுப் பேய்க்கு ஆயிரம் விதமான சமாதானம் சொல்லி, காரணம் காட்டி, இது கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறி முடிய, நாள் அதிகம் பிடிக்கும் ஐயா! உமது மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், சாது மட்டுமல்ல, சாமர்த்தியமாகப் பேசக் கூடியது. பேய்களிலே பலரகம் உண்டு. கொலைகாரப் பேய், முரட்டுப் பேய், பொய் பேசும் பேய், வயிற்று வலிப் பேய், அழுகிற பேய் என்று இதிலே ஆயிரத்துக்கு மேலே 'ரகம்' இருக்கிறது" என்றான் புரட்டன்.

     "பேயிலே மட்டுந்தானா? மனிதர்களிலும் நீ சொன்ன அவ்வளவும் இல்லையா?" என்று நான் கேட்டேன்.


     "இல்லை என்று யார் சொன்னார்கள்? மனிதர்களில் பல ரகம்; அதுபோலத்தான் பேய்களிலும். மனிதர்கள் இறந்து போய், பேய் உருவடைந்தார்கள் என்பதுதான் எங்கள் சித்தாந்தம். பேய் உருவிலே இருக்கும்போதும், மனிதராக இருக்கும்போது இருந்த சுபாவம் இருக்கும். அதனாலேதான் பேய்களிலே பல ரகம் இருக்கிறது" என்றான் அந்த புரட்டன்.

     "எந்தெந்த ரகமான பேய் பிடித்துக் கொள்கிறதோ அந்தந்த சுபாவம், பேய் பிடித்துக் கொண்ட ஆசாமியிடம் இருக்கும் என்று சொல்கிறீரா?" என்று நான் கேட்டேன்.

     "அதேதான். போன வருஷம் இங்கே ஒரு பெண் வந்திருந்தாள், பேயோட்டிக்கொள்ள. சதா சர்வ காலமும் பாடிக் கொண்டே இருப்பாள்" என்றான் பூஜாரி.

     "சங்கீதப் பேய் பிடித்துக் கொண்டதோ?" என்று நான் கேலி செய்தேன்.

     "உண்மையாகத்தானம்மா. அந்தப் பெண் இருந்த ஊரிலே, ஒரு பையன் அருமையான சங்கீதம் பாடுவான். அதிருஷ்டம் இல்லாததால் ஆதரிப்பவர் கிடைக்கவில்லை. கடைசியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிட்டான். பேயானான்; பெண்ணைப் பிடித்துக் கொண்டான்" என்று பேயின் சரித்திரமே கூறலானான்.

     "அப்படியானால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய்..." என்று நான் கேட்டேன்.

     "எழுத்துக்கு எழுத்து பொருள் கேட்டு, வாதாடிப் பேசவும், எதிரியின் வாயை அடக்கிப் பேசவும், வக்கீலால்தானே முடியும்" என்றான் அவன்.

     "அப்படியானால், என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டதோ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:51 pm

ரங்கோன் ராதா

8

     மனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்தது கண்டு, நான் சிரித்தேன். ஆனால், அந்தப் புரட்டனின் பேச்சை மெய்யென நம்பினவர்கள், அவன் சொன்னதிலே சூட்சமம் இருக்கிறதென்று கூறினார்கள். என்ன சூட்சமத்தைக் கண்டார்களோ நானறியேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறி, பூஜாரியின் பேச்சைப் பலப்படுத்தினர். இந்தப் புரட்டனின் பேச்சைத் தட்டிப் பேச முயல்வது வெட்டி வேலை என்று எனக்குத் திட்டமாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, நான் அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டவளாகவே நடித்து வரலானேன். அதனாலே, எனக்கு நஷ்டமும் இல்லை; கஷ்டமும் கிடையாது.


     பேயோட்டும் பக்கிரி, பணக்காரன், ஏழை என்ற இரு வகையினருக்காக இரண்டு தனித்தனி முறை வைத்துக் கொண்டிருந்தான் என்று கூறினேனல்லவா? அது போலவே முரட்டுப் பேய்களை விரட்ட ஒரு முறையும், சாதுப் பேய்களை ஓட்ட மற்றோர் விதமும் கையாண்டு வந்தான். வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்து விட்டதால் என்னை ஓட்டுவதற்குக் கையாண்ட முறை, அதிக உபத்திரவமற்றதாகவே இருந்தது. சூடிடுவது, நாளைக்குப் பத்து வேளை குளத்தில் மூழ்கச் செய்வது போன்ற கடுமையான முறைகள் கிடையாது. காலையிலே எலுமிச்சம் பழம் தேய்த்து ஸ்நானம்; கொஞ்ச நேரம் சூரிய நமஸ்காரம்; பிறகு, ஒரு மைல் அளவுக்கு வேப்ப மரங்கள் நிறைந்திருக்கும் சாலையிலே உலாவுவது; பகலில், யாராவது ஏதாவது கதை படிப்பது, நான் கேட்டுக் கொண்டிருப்பது, மாலையிலே பூஜையில் உட்காருவது, இரவு படுக்கப்போகும் முன்பு, அவன் தரும் 'மந்தரித்த' விபூதியைப் பூசிக் கொள்வது என்ற இந்த விதமாக அமைந்திருந்தது, பேயோட்டும் முறை. பெரிய இடம், ஏதோ குமுறல் நேரிட்டுவிட்டது, கொஞ்ச நாளைக்கு மன அமைதியுடன் இருந்து வந்தால், பழையபடி சுபாவமாக இருக்கும் என்று அவன் யூகித்துக் கொண்டான். அதனாலேதான், என் விஷயத்திலே, ஒரு நல்ல வைத்திய சிகிச்சை போன்ற பேயோட்டும் முறையைக் கைக்கொண்டான். என்னிடம் பணம் இருக்கவே, அவன் 'பேயின் முறையில் நடந்து கொள்ளாமல் மனிதத் தனத்துடன்' நடந்துகொண்டான். பாவி, சிலரை இம்சையே செய்துவிட்டான். ஏழைகளுக்கு இரும்புக் கோலால் சூடு, பணக்காரர்களுக்கு மெல்லிய மிருதுவான 'பிரம்பி'னால் தடவிக் கொடுப்பது. ஏழைகளைப் பிடித்திருக்கும் பிசாசு முரட்டுக்குணம் படைத்தது; பணக்காரர்களைப் பிடித்திருப்பதோ, நாசூக்கான சாதுவான பிசாசு! இப்படி அந்தப் புரட்டன் பிசாசுகளிலே கூட இரண்டு வர்க்கங்களைப் பிரித்து வைத்தான்.

     கிராம வாழ்க்கை, நல்ல காற்று, குளிர்ந்த நீரில் குளித்தல், காலை மாலை உலவுதல், பகலில் சந்தோஷமாகப் பொழுது போக்குவது ஆகியவற்றால் எனக்கு ஆரோக்கியம் அதிகரித்தது; அழகும் அதிகரித்தது. அப்பா பார்த்து பார்த்து ஆனந்தப்படுவார். "முகத்திலே இப்போதுதானே பழைய களை இருக்கிறது" என்பார். பேயோட்டியும் தன்னுடைய பூஜை வெற்றிபெற்று வருவதாகக் கூறினான். "ஆனால் முதலியார்! அம்மாவைவிட்டு அந்தப் பேய் அடியோடு போய்விடவில்லை. மறுபடியும் மறுபடியும் வருகிறது. அதனாலேதான், சந்தோஷமாக இருந்து கொண்டே வருகிறார்கள்; திடீரென்று என்றைக்கேனும் ஓர் நாளைக்கு முகத்தைச் சுளித்துக் கொண்டு, யாரிடமும் பேசாமல் இருக்கிறார்கள்" என்றான். அவன் அறியான் காரணத்தை! எனக்கு உன் அப்பாவின் தொல்லையின்றி, வேடிக்கையாகக் கிராமத்திலே வாழ்வது மன நிம்மதியைக் கொடுத்தது என்ற போதிலும், ஒவ்வோர் நாள், எனக்கு உன் அப்பாவும் தங்கமும் ஊரிலே... என்ற கவனம் வரும்; உடனே முகம் சுருங்கும், ஒருவரிடமும் பேசமாட்டேன்; சாப்பாடும் பிடிக்காது. தூக்கமும் வராது; படுக்கையில் புரள்வேன். இதைத்தான், சோகம், பேயின் சேஷ்டை என்று பேயோட்டி கூறுவது. அந்தச் சோகத்தை அவனுடைய பன்னீர் கலந்த விபூதி போக்கிவிடுவதாக அவன் எண்ணிக் கொள்வான். உண்மையில், என் மனக் கஷ்டத்தைப் போக்கியது அவன் தந்த விபூதியல்ல. துளசியின் தயவால் ஓரளவு என் துக்கம் குறையும்; துளசி அவனுடைய இரண்டம் தாரம். கொஞ்சம் படித்தவள், ஏழை வீட்டுப் பெண்; அவனிடம் பணம் இருக்கவே, வயது ஏறுமாறாக இருந்தும், வாழ்க்கைப்பட்டவள். அதனாலே, அவள் குறைபட்ட மனதுடன் இருப்பதாக யாருக்கும் காட்டிக் கொண்டதில்லை; என்னிடம் கூட! நான் உண்மையைக் கண்டுபிடிக்கவே பத்து நாளாயிற்று. மனதிலே இருந்த குறையை மறைத்துக் கொண்டு, முகத்தை மலரச் செய்து கொண்டு துளசி வாழ்ந்து வந்தாள். பெரும்பாலும் பகலிலே எனக்குக் கதை படிப்பவள் அவள் தான். அந்தக் கதைகளில் இடையிடையேதான் அவள் தன்னுடைய சுயசரித்திரத்தையும் எனக்குத் தெரிவித்தாள்; அழுது கொண்டல்ல, சிரித்துக் கொண்டே. அந்தச் சிரிப்பு சந்தோஷம் மேலிட்டு வந்ததல்ல; உலகிலே நடக்கும் அக்ரமங்களைக் கண்டு கேலி செய்யும் சிரிப்பு அது! துளசிதான் என் சோகத்தைப் போக்குவாள், பல கதைகள் கூறி.

     "அக்கா! உங்களுக்கெல்லாம் நூறு பேய் பிடித்துக் கொண்டாலும் பயமில்லை; என் புருஷர் ஓட்டிவிடுவார். ஆனால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயை ஓட்டவே முடியாது" என்பாள் துளசி. "அது என்னடி துளசி! அப்படிப்பட்ட பிரமாதமான பேய்? ஜெகம் புகழும் உன் புருஷனால் கூட ஓட்ட முடியாத பேயும் உண்டா?" என்று நான் கேட்பேன்.

     "அவர் எல்லாப் பேயையும் ஓட்டுவார் அக்கா! ஒரே ஒரு பேயை மட்டும் அவரால் ஓட்டமுடியாது" என்று துளசி பெருமூச்சுடன் கூறுவாள். "அது என்ன பேய்?" என்று நான் கேட்பேன். "அதுவா? இதோ பார் அக்கா! அந்தப் பேய் என்னைப் பிடித்துக் கொண்டதற்குச் சாட்சி" என்று கூறிக்கொண்டே தன் தாலியை எடுத்துக் காட்டிவிட்டுச் சிரிப்பாள். மிகக் கஷ்டமான நிலைமையை மிகச் சாமர்த்தியமாகத் துளசி சமாளித்துக் கொண்டு வந்தாள். மனதுக்குத் துளியும் பிடிக்காத கணவனிடம், ஒரு துளியும் அதிருப்தியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வது சாமான்யமான காரியமா? துளசியின் துணை எனக்கு மிகுந்த நன்மை செய்தது. என் மனதிலே தோன்றும் எண்ணங்களை அவளிடம் கொட்டுவேன். அவள் தன் குறைகளை என்னிடம் கூறுவாள். பத்து நிமிஷம் படிப்பாள்; அரைமணி நேரம் அதை ஒட்டிப் பேசுவாள். இப்படி, ஒவ்வோர் தினமும் நிம்மதியாக இரண்டு மணி நேரம் இருப்போம். "அக்கா என் மூத்த மகள் வருகிறாள் வியாழக்கிழமை" என்று ஒரு சேதியுடன் வருவாள். "உன் மூத்த மகளா போடி போ! உன் வயிற்றிலேதான் இன்னமும் ஒரு பூச்சி புழுகூட..." என்று நான் கேலி செய்வேன். மகனே! நான் கொஞ்சம் பெருமையுடனும் கொஞ்சம் கர்வத்துடனும் அதைச் சொல்வேன். ஏன் தெரியுமா? அந்தச் சமயம்தானடா கண்ணே, நீ என் கருவில் உதித்தது! நான் 'தலை முழுகி' இரண்டு மாதமாகி விட்டது. இன்னும் எட்டே மாதம் இருக்கிறது கட்டித் தங்கத்தைப் பெற! அந்த சந்தோஷத்திலே நான் இருந்ததால், துளசியைக் கேலி செய்வேன். "உனக்கு ஏதடி குழந்தை?" என்று. துளசி சொல்வாள், "ஒன்றுக்கு மூன்று, நமக்கு ஒரு துளி உபத்திரவமும் இல்லாதபடிக்கு அந்த உத்தமி பெற்று வைத்துவிட்டுப் போய்விட்டாள்" என்பாள். அதாவது பேயோட்டும் பக்கிரியின் முதல் தாரத்துக்கு மூன்று பெண்கள். அதைக் குறிப்பிடுவாள் துளசி, வேடிக்கையாக.


     இரண்டு மாதம் நான் தலைமுழுகவில்லை! மகனே! அந்த வார்த்தையின் முழுப்பொருளும் அந்தப் பொருள் தரும் களிப்பும் ஆண்களுக்குத் தெரியாது. அவர்களால் அந்தப் பொருளை முழுதும் புரிந்துகொள்ளவோ ரசிக்கவோ முடியாது. அது பெண்களின் வாழ்க்கையில் மகத்தானதோர் வெற்றி! அந்த வெற்றிதான், அவர்கள் வாழ்க்கையோடு போராடிப் போராடிப் பெறுவது. வேறு எதைக் கண்டார்கள்? பல வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி பங்கிட்டுவிட வேண்டிவரும். அது ஆண்களுக்கு! ஒரு புதிய தோட்டம் வாங்கினோம், புது வீடு கட்டினோம், புது வியாபாரம் செய்தோம் என்று எத்தனையோ வகை வகையான வெற்றிகள் ஆண்களுக்குக் கிடைக்க வழி இருக்கிறது. பெண்களுக்கு அது இல்லை! அவர்கள் அடையக்கூடிய ஒரே வெற்றி, குழந்தை! தலை முழுகவில்லை என்றால், அந்த வெற்றிக்கு அருகதையாகிவிட்டார்கள் என்று பொருள். இன்ப வாழ்க்கையின் 'பலனைக்' காணப் போகிறார்கள்! பெண், மனைவியானாள்! மனைவி தாய் ஆனாள்! பூத்துக் காய்த்துக் கனி குலுங்கிற்று என்பதுபோல. அத்தகைய வெற்றி எனக்குக் கிடைக்க இருந்தது. மாதம் இரண்டு; வாயிலே லேசான கசப்பு! மாலை வேளைகளில் கொஞ்சம் தலைசுற்றும். கைகளிலே ஒருவிதமான ஓய்ச்சல்! ஆமாம்! துளசிக்கு அது தெரிந்துவிட்டது. ஆணா பெண்ணா என்று தர்க்கிப்பாள், என்னிடம். நான் பிடிவாதமாகப் பெண் என்பேன். அவள், வேடிக்கையாக என் வயிற்றண்டை தன் காதை வைத்துக்கொண்டிருந்துவிட்டு, "அக்கா! நிச்சயமாகப் பெண்ணல்ல! ஆண்" என்று கூறுவாள். "உன்னிடம் பேசினானா?" என்று நான் கேட்பேன். "ஆமாம்" என்பாள் துளசி. "எனக்கு ஒரு பெண் கொடு மாமி! என்று கேட்டிருப்பான்" என்று நான் அவளைக் கேலி செய்வேன். அவள் சளைக்கமாட்டாள். "அது போலத்தான் கேட்டான், ஆகட்டுமடா கண்ணா! நீ வளர்ந்து பெரியவனாகி, தாத்தாவாகிறபோது வந்து கேள், பெண் தருகிறேன் என்று நான் சொன்னேன்" என்பாள். அதாவது தன்னைக் கிழவனுக்கு மண முடித்தார்கள் என்பதைப்பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவாள். இப்படி நாங்கள் பொழுது போக்கி வந்தோம். அப்பாவுக்கோ இந்தச் சேதி மனக்குழப்பத்தை உண்டாக்கிவிட்டது; அந்தக் குழப்பத்தை பேயோட்டுபவன் அதிகப்படுத்தி விட்டான். பேய் பிடித்திருக்கும் சமயத்திலே, கருத்தரித்தால் நல்லதா கெட்டதா என்று அப்பா கேட்க, அவன் ஒரு விதத்திலே நல்லது, ஒரு விதத்திலே கெட்டது என்றான். எந்த விதத்திலே நல்லது, எந்த விதத்திலே கெட்டது என்று அப்பாவும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை! "கெட்டதாக முடியாதபடி..." என்று பயந்து போய் அப்பா கூறினார். அவன் ஏதோ ஆண்டவனின் அபிப்பிராயத்தை நேரடியாகக் கண்டு அறிந்தவன்போல, "ஆண்டவன் ஒரு குறையும் செய்யமாட்டார்" என்று தைரியம் கூறிவிட்டு, "இருந்தாலும், எட்டாம் மாதம் வரையில் குழந்தை இங்கேயே இருக்கட்டும். அப்போதைக்கப்போது இருக்கும் நிலவரத்துக்குத் தக்கபடி பூஜைகள் செய்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டான். ஆகவே, நான் தங்கத்தின் எதிரே சென்று, "பைத்தியக்காரி! நான் தாயாகப் போகிறேன். என்னை இனிச் சாமான்யமாகக் கருதிவிடாதே! வாரிசு பிறக்கப்போகிறது, ஜாக்ரதை" என்று பேச்சினால் அல்ல, பார்வையாலேயே தெரிவித்துவிட வேண்டும் என்று ஆசை கொண்டதற்கு அணை போடப்பட்டுவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கே இருந்தாக வேண்டும்! துளசி இருக்கிறாள், பொழுதுபோக்குக்கு. ஆனால், தங்கம் அங்கே இருக்கிறாள் தலைகால் தெரியாமல் கர்வத்தோடு. நான் 'தலை முழுகாது' இருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்ததும், அவளுடைய 'கர்வம்' குலையும் அல்லவா? அதைப் பார்க்கவேண்டுமே என்ற ஆவல், என்னைத் தூண்டிற்று. "இருக்கட்டும், இருக்கட்டும், வருகிறேன் தங்கம்!" என்று துளசியைத் தங்கமாகக் கொண்டு பேசினேன்! அதிலே ஒரு சந்தோஷம் எனக்கு!

     "அவரிடமிருந்து கடிதம் வந்ததா?" இந்தக் கேள்வியை ஒவ்வோர் நாளும் கேட்பேன் அப்பாவிடம். ஏன் கேட்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே, அவர் "வந்தது - இல்லை" என்று இரண்டிலோர் பதில் கூறுவார். "நான் தலை முழுகாமல் இருப்பதுபற்றி அவருக்கு எழுதினீர்களா? அவர் என்ன பதில் எழுதினார்?" என்று நானாக அப்பாவை எப்படிக் கேட்பது. துளசிதான் இதற்கும் யோசனை சொன்னாள்.

     "அக்கா! நீயேதான் அவருக்குக் கடிதம் போடுவதுதானே" என்றாள்.

     "போடி, போ! எப்படி? வெட்கமாக இல்லையா எழுத?"

     "எழுத வெட்கப்பட்டுப் பலன்?"


     "நான் மாட்டேன் போடி, எப்படி இதை எழுதுவது?" இப்படி கொஞ்ச நேரம் வாதாடினேன் துளசியிடம். (என்னைத் தான் வக்கீல் பேய் பிடித்துக் கொண்டிருக்கிறதே!) பிறகு அவள் ஒரு யோசனை சொன்னாள். அதாவது "சாப்பாடு சரியாகப் பிடிக்கவில்லை, வாய் கசப்பாகவும் இருக்கிறது, யாராவது லேடி டாக்டரைக் கேட்டு, கர்ப்பவதிகளுக்கு வலிவு தரும் டானிக் வாங்கி அனுப்பி வைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதிப் போடு; அதிலிருந்து அவர் தெரிந்து கொள்கிறார்" என்றாள். சாமர்த்தியமல்லவா அவள் யோசனை. அதன்படியே கடிதம் போட்டேன். நாலாம் நாள் பதில் வந்தது. கவர்! நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். துளசி கவரைக் காட்டினாள். அவருடைய கையெழுத்துதான். என் முகம் மலர்ந்தது. பதில் கிடைத்துவிட்டது, நாலே நாளில். கடிதம் போட்டோ ம்; உடனே பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். என் மீது அவருக்கு கோபம் இல்லை; அன்பு ஏற்பட்டுவிட்டது. ஆமாம், தாய் ஆகப் போகிறேன். இனியுமா என்னிடம் வெறுப்பாக நடந்து கொள்வார். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வந்து கடிதத்தைப் படித்தாகவேண்டும் என்ற ஆவல். அவசரமாகச் சாப்பிட்டாலோ துளசி கேலி செய்வாள். ஆகவே, கடிதத்தைப் படிக்கவேண்டுமென்பதிலே அவசரம் கொள்ளாதவள் போல, மெள்ளச் சாப்பிடவேண்டியிருந்தது. சாப்பாடு முடிந்து கூடக் கொஞ்சம் காலதாமதம் செய்தேன்; இல்லையானால் அவள் கேலி பேசுவாள்.

     "துளசி! என்ன எழுதி இருக்கிறார் கடிதத்தில் என்று பார்க்கலாம், கொடு" என்று கேட்டேன்; கொடுத்தாள். கடிதமல்லடா கண்ணே! கடுவிஷம் இருந்தது அதிலே!

     "தலைமுழுகிவிட்டேன்." இவ்வளவே, அவர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது!

     மலர்க்கூடையை ஆவலாக எடுக்கும்போது, அதனுள்ளிருந்து கருநாகம் சீறிக் கிளம்புவதுபோல, உன் அப்பா அனுப்பிய கடிதத்தைப் பிரித்ததும் தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகம் தோன்றக் கண்டேன். அவசரமாகக் கடிதத்தைத் திருப்பி மறுபக்கம் பார்த்தேன். ஒரு எழுத்தும் இல்லை. மறுபடியும் ஒரு முறை கடிதத்திலே தீட்டப்பட்டிருந்த வாசகத்தைக் கண்டேன். மெள்ள அதனை உச்சரித்தேன். உள்ளம் வெந்தது. துளசி வெடுக்கெனக் கடிதத்தை எடுத்துக் கொஞ்சம் தெளிவாக படித்தாள், தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை. என் செவியிலே அந்தச் சொற்கள் விழுந்த உடனே கண்ணீர் கன்னத்திலே விழலாயிற்று. தலைமுழுகிவிட்டேன்! யாருடைய வார்த்தை அது? என் கணவரின் வார்த்தை. என்னைத் தலைமுழுகிவிட்டாராம் என் கணவர். இதைவிட வேறு வேதனை தரும் சொல் பெண்ணுக்கு ஏதடா மகனே! நான் தாயாகப் போகிறேன் என்பதைப் பெருமையுடன் அவருக்கு நான் தெரிவிக்க, அவர் என்னைத் தலைமுழுகி விட்டதாகக் கடிதம் எழுதுகிறார். நான் அனுப்பியது பழம்! அவர் எனக்கு விஷம் அனுப்பினார்! என்னைத் தலைமுழுகிவிட்டாராம்; நான் தலை முழுகாமலிருக்கிறேன் என்ற செய்தியைத் தெரிவித்ததும், எனக்குக் கிடைத்த பதில் இது மகனே! எதற்கும், எப்போதும் வேடிக்கையாகவே பேசிவிடும் துளசிகூடத் திடுக்கிட்டுப்போய் நின்றாள், அந்தக் கடிதத்தைக் கண்டு. "என்ன அக்கா இது?" என்று கேட்டுக்கொண்டே என்னை அணைத்துக் கொண்டாள். "துளசி! நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறேன். என் கணவன் என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானிக்கிறார். அலட்சியப்படுத்தினார், இம்சை செய்தார். இப்போது அடியோடு என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானித்து விட்டார். தலைமுழுகிவிட்டேன் என்றல்லவா எழுதி இருக்கிறார், துளசி! அது என் மானத்துக்கு மரண தண்டனையடி! நான் கர்ப்பவதியாக இருக்கிறேன். இது, நான் குற்றம் செய்தவள் என்பதற்கு அத்தாட்சி என்று கூறுகிறார். ஐயோ! துளசி! நான் என்ன செய்வேன். அவருடைய வாசகம் என்னைப் படுகுழியில் தள்ளும் பயங்கர ஏற்பாடு. நான் அவருக்குத் துரோகம் செய்துவிட்டேன், நான் ஓர் தூர்த்தை என்று தூற்றுகிறார். உன்னை நான் நேசிக்க முடியாது, குடும்பத்திலே உன்னோடு சேர்ந்து வாழமுடியாது, காப்பாற்றவும் முடியாது, நீ எக்கேடோ கெட்டுப் போ! என்று கூறுவது கொடுமை என்பார்கள் துளசி! அவர் கூறுவது அதனினும் கொடுமையானது. விபசாரி! என்று கூசாமல் பழி சுமத்தி என் மானத்தைப் பறித்து உலகம் என்னை இழிவாகப் பேசும் நிலையை உண்டாக்குகிறார்.


     "அவளை நான் மனைவியாக இனிக் கொள்ளமுடியாது. அவள் ஓர் விபசாரி" என்று என் கணவர் உலகுக்கு உரைக்கிறார்" என்று நான் கூறி விம்மி விம்மி அழுதேன். "அழாதே அக்கா! அழுது அழுது முகமும் சிவந்துவிட்டதே! இப்படி அழுதால் உடம்புக்கு நல்லதா? அத்தான் ஏதோ வெறியிலே வீணாக எதையோ எழுதிவிட்டார். அதற்காக நீ இப்படிப் பதைக்கலாமா? ஆண்களின் சுபாவம் இப்படித்தான். பெண்ணின் மனம் புண்ணாகுமே என்பது குறித்து எண்ணியும் பார்ப்பதில்லை. அத்தானுடைய அக்ரமமான வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதாக நினைத்துக் கொண்டு நீ வருத்தப்படாதே. உலகிலே, புத்தியுள்ளவர்களும் சில பேர் இருக்கிறார்கள். இப்படி வெறி பிடித்து, உளறுவதை உண்மை என்று எல்லோருமே ஏற்றுக் கொள்வார்களா?" என்று துளசி என்னென்னவோ சமாதானம் கூறிப் பார்த்தாள்; வழக்கமாக அவள் பேச்சிலே காணப்படும் விறுவிறுப்பு அன்று இல்லை. அவள் எனக்குச் சமாதானம் கூறினாளேயொழிய அவளாலேயே தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பாவிகள்! பழிகாரர்கள்! கொலைகாரர்கள்! பெண்ணை மண்ணாக எண்ணிக் கொள்ளும் முட்டாள்கள்! இருதயமற்றவர்கள்' என்று பொதுவாக ஆண்களைத் திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவ்வளவும் என் கணவருக்காகவே வீசப்பட்டவை. எனக்கோ உலகமே இருள்மயமானது போலாகிவிட்டது. கடலிலே விழுந்து, அலைகளால் தாக்கப்பட்டு, கை கால்கள் சோர்ந்து போய் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளக் கூடிய அளவு மட்டும் உயிர் இருக்கும் நிலைமை எனக்கு. நான் சின்னவளாக இருக்கும்போது, பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியைப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயிலே சிக்கி விடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியிலே இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையிலே தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா, அதற்குத் தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எப்படியாவது சாவின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகத் துடிக்கும், நெளியும், தலையைத் தூக்கும். பல்லியின் வாயிலிருந்து வெளிப்படுவதற்காகத் தன் பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். ஒவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலியை நாசமாக்கவும் உயிரைப் போக்கவும் பயன்படுமேயொழிய விடுதலைக்கு வழியாக முடியாது. பல்லிக்குப் பூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவற்று இருக்கவேண்டியதுதான். பூச்சி போராடுவதாகக் கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு, தானாகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையிலே நான் இருந்தேன். என் கணவரின் கிராதகம் என்ற பிடியிலே சிக்கிக் கொண்ட நான் என் நிலைமையைச் சரிப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் என் வேதனையை வளர்க்கப் பயன்பட்டதேயொழிய, என் துயர் நீக்கும் துணையாகவில்லை. நான் என்ன செய்வேன்! கணவனே விபசாரி என்று தூற்றத் துணிந்த பிறகு பேதைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? ஆழமான கிணறு தேடுவதன்றி வேறு வேலைதான் என்ன இருக்கிறது?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:55 pm

ரங்கோன் ராதா

9

     மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல நட்சத்திரங்கள் இருந்தே தீரும். ஒளிவிடும் மதி இருந்தாலும், மின்மினியும் இருக்கும், கருமேகமும் இருக்கத்தான் செய்யும். ஆகவே, ரங்கம் இருக்கும்போது தங்கம் ஏன் என்று கேட்டுப் பயன் இல்லை. அவர் தாராளமாகத் தங்கத்தையும் கலியாணம் செய்துகொள்ளட்டும் என்று எண்ணி, என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அதன் விளைவுதான் மின்னல்போல் தோன்றி மறைந்த, அவருடைய அன்பு! அந்த அன்பு, அன்று இரவு மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது. அந்த இன்ப இரவு, உன்னையும், உலகிலே எந்தப் பெண்ணும் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத பழியையும், எனக்குத் தந்தது. பாழ் மனமே! ஏன் நீ, அன்று அவரிடம் தஞ்சம் புகுந்தாய்? கெஞ்சி அவருடைய கொஞ்சு மொழியைப் பெற்றாய், களித்தாய்! இதோ தருகிறாரே நஞ்சு, அது உயிரைப் போக்கினாலும் பரவாயில்லையே, மானத்தை அல்லவா மாய்க்கிறது' என்று மெள்ளக் கூறிக் கொண்டே குமுறினேன். விசாரத்தை விநாடியில் துடைத்துவிடும் துளசியும், என் நிலையைக் கண்டு, அழுதுகொண்டே தன் முந்தானையால் என் கண்களைத் துடைக்க முடிந்ததே தவிர, எனக்குச் சமாதானம் கூற முடியவில்லை. எப்படி முடியும்? 'விபசாரி!' என்ற பழி சுமத்தப்பட்ட பிறகு, பெண் எப்படி உலகை ஏறிட்டுப் பார்க்க முடியும்? உலகிலே, எத்தனையோ விதமான அக்ரமத்தைச் செய்து வயிறு வளர்ப்பவன் கூட, ஒரு பெண் விபசாரி என்றாகிவிட்டால், கேவலப்படுத்துவான்; கண்டிப்பான். எவ்வளவு கொடூர சுபாவம் இருந்தால் அவர் அப்படிச் சொல்ல மனம் துணிவார் என்பதை நீ இப்போது எண்ணிப் பார். ஏதோ தாய் தன் மகனிடம் கூறுகிறாள் என்று எண்ணவேண்டாம். துர்ப்பாக்கியவதி ஒருத்தி கருணையும் நீதியும் தெரிந்த ஒரு உத்தமனிடம் முறையிடுகிறாள் என்று எண்ணிப் பதில் சொல்லு. வேண்டாமடா மகனே! நீ பேச வேண்டாம். உன் கண்ணீர் போதும், எனக்கு அந்தப் பாஷை தெரியும். இம்சைக்கு ஆளான எனக்கு கடைசிக் காலத்திலேனும், அந்தக் கண்ணீர் ஆதரவு தருகிறது என்று ஆறுதல் கிடைத்ததே அதுவே போதும்.


     என் கலியாணம் நடந்த போது, இரவு காலட்சேபம் வைத்தார்கள். நான் பெண்களுடன் உட்கார்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் அவருடைய முகத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். காலட்சேபக்காரர், சீதா கலியாணக் கதையைக் கூறினார். அப்போது அவர் பெண்களைப் பற்றிப் பேசிய பெருமையை, நாளெல்லாம் கேட்கலாமா என்று தோன்றிற்று. அவ்வளவு விளக்கி விளக்கிப் பேசினார், விடிய விடிய. உன் அப்பாவோ அந்தக் காலட்சேபக்காரரின் பேச்சைக் கேட்டு அப்படியே சொக்கிவிட்டார். இராகத்தோடு காலட்சேபக்காரர், 'பெண்ணுக்கு வேண்டியது என்ன? பூஷணமா? போதாது, சம்பத்தா? போதாது. அழகான பங்களாவும் தோட்டமும் இருந்தால் போதுமா? போதாது. வைரமாலையும், பச்சை வளையலும், கல்லிழைத்த ஒட்டியாணமும் கிடைத்தால் போதுமா? போதாது! காசி கொரநாடு சேலை வாங்கிக் கொடுத்தால் போதுமா? போதாது! வேறே என்ன வேண்டும்? தொட்டுத் தாலிகட்டிய புருஷனின் மட்டற்ற அன்பு வேண்டும். அந்த அன்புதான் அவளுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது" என்று கூறி முடித்தார். சபையிலே, மனைவியை அடிக்காவிட்டால் கை மரத்துப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டவர்கள்போல வாழ்ந்து வந்த புருஷர்கள் கூட, கரகோஷம் செய்தார்கள். காலட்சேபக்காரர் கூறியது நியாயமான பேச்சு என்பதை ஆமோதிப்பதற்காக உன் அப்பா கரகோஷம் செய்யவில்லை. அவருடைய கண்கள், என் கண்களைச் சந்தித்தன! அவருடைய புன்னகை காலட்சேபக்காரர் சொன்னது சரி என்று மட்டுமல்ல, "இதோ பார்! எந்த அன்பு தான் பெண்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது என்று காலட்சேபக்காரர் கூறுகிறாரோ, அந்த அன்பை நான் இதோ தருகிறேன். ஆனந்தம் கொள்" என்று எனக்குக் கூறுவது போலிருந்தது. நான் வெட்கத்தால் தலை குனிந்து கொண்டேன். சபையிலே சிலர், "மாப்பிள்ளே! காலட்சேபத்தைக் கவனியும்" என்று கூட அவரைக் கேலி செய்தார்கள். பெண்களுக்குப் பரிந்து பேசிய காலட்சேபக்காரர், அழகழகாகக் குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டினார். "மலராவது கசக்கினால்தான் கெட்டு விடும்; மங்கையின் மனமோ மணவாளனின் முகம் கொஞ்சம் கடுகடுத்தாலே போதும் நொந்து போகும்; அவ்வளவு மிருதுவானது பெண் மனம். பெண் மனத்தைப் புண்ணாக்கும் ஆண்களைப் பேய் இனத்தில்தான் சேர்க்கவேண்டும்" என்று காலட்சேபக்காரர் கூறினார். உன் அப்பா தனது பார்வையாலும் புன்னகையாலும் அவர் கூறினதையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு இருந்தார். வருஷம் பல ஆனபோதிலும், எனக்கு அன்று நடந்தவைகள் அவ்வளவும் நன்றாக நினைவிலே இருக்கிறது. நடுநிசிக்குமேல், எனக்குத் தூக்கம் வந்துவிட்டது. தூங்கினால் கேலி செய்வார்களே என்பதற்காக மிகச் சிரமப்பட்டுக் கண்களைத் திறந்தபடி இருந்தேன். இதனால் தூக்கம் அதிகப்பட்டதே தவிர, குறையவில்லை. என்னையுமறியாமல் கண்களை மூடினேன். பக்கத்திலே இருந்த ஒரு சிநேகிதி மீது சாய்ந்தேன். அவள் "கலியாண பெண்ணுக்கு மயக்கம் வந்துவிட்டது" என்று கூறினாள். ஆளாளுக்கும் கூவினார்கள். நான் கண்களைத் திறந்தேன். அவளோ என்னைத் தன் மீது சாய்த்துக் கொண்டு, "அசையாதே கண்ணு! ஒன்று மில்லை பயப்படாதே!" என்று உபசாரம் செய்தாள். காலட்சேபம் நின்றுவிட்டது. 'கொஞ்சம் பால் கொடுங்கள்' என்றார் ஒருவர். ஒருவர் 'விசிறுங்கள்' என்றார். இன்னொருவர் மெள்ள உள்ளே அழைத்துக் கொண்டு போகும்படி யோசனை சொன்னார். என் கணவர் சாதாரணமாக, கலியாணப் பிள்ளைகள் வெட்கப்படுவார்களே அதுபோலிராமல் "முகத்திலே கொஞ்சம் பன்னீர் தெளியுங்கள்!" என்று உரத்த குரலிலே சொன்னார்.

     தூக்க மயக்கத்தைத் தெளிவிக்க என் முகத்திலே பன்னீர் தெளிக்கும்படி பரிவுடன் பேசிய என் கணவர், நான் கர்ப்பவதியாக இருக்கிறேன் என்ற செய்தி கேட்டு ஆனந்தமடைந்திருக்க வேண்டியது முறை. ஆனால், அவரோ என்னைத் தலைமுழுகிவிட்டதாகத் தெரிவித்தார். பெண்ணின் வாழ்க்கை இப்படி ஒரு ஆணின் ஆபாசத்துக்குக் கட்டுப்பட்டு இருக்கும் கொடுமையை யார் எண்ணிப் பார்க்கிறார்கள். மகனே! உன்னைப்போன்ற உத்தமகுணம் படைத்தவர்கள் உலகில் மிகமிகக் குறைவு. உன் மனம் என் அழுகுரல் கேட்டுப் பதைபதைத்தது. உள்ளே ஓடி வந்து, என்னை அடித்த முரடனிடம் சண்டைக்கும் நின்றாய். ஆனால் பொதுவாக ஆடவர்கள் இவ்விதம் செய்யமாட்டார்கள். அதனால், ஆண்கள் இரக்கக் குணமே அற்றவர்கள் என்று நான் கூறுவதாக எண்ணாதே. நாய், பூனை இவைகளிடம்கூட இரக்கம் காட்டும் ஆடவர்களை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கருணாகரர்கள் கூட, மனைவியை புருஷன் அடித்துத் துன்புறுத்தும்பொழுது குறுக்கிட்டுத் தடுக்கமாட்டார்கள். அவன் பெண்ஜாதியை அவன் அடிக்கிறான், நாம் எப்படி அவனைத் தடுக்க முடியும்? போடா உன் வேலையைப் பார்த்துக் கொண்டு என்று அவன் சொல்லிவிட்டால், நாம் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வது என்று, இப்படி உப்புச்சப்பற்ற பேச்சைப் பேசிவிட்டுப் போவார்களேயொழிய, பெண்ணை இப்படி இம்சிக்கலாமா என்று கேட்க முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான் பெண்கள் வாழ்கிறார்கள்; என் நிலைமையும் அதுதான். உன் அப்பா, கலியாணமான சில காலம்வரை காட்டிய அன்பும் அக்கறையும், எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, ஒரு புது நம்பிக்கையையும் கொடுத்தது. மற்றவர்களைப்போல் இவர் முரடரல்லர்; கண்ணியம் வாய்ந்தவர். நம்மிடம் அமோகமாக அன்பு வைத்திருக்கிறார். ஆகவே, இவர் நம்மை மிகவும் பிரியமாக நடத்துவார்; நம் வாழ்விலே துன்பம் இராது என்று நம்பினேன். மற்றக் குடும்பத்துப் பெண்களைப்போலக் கசங்கிய கண்களாக இராது என்று நினைத்தேன். அவருடைய சொல்லும் செயலும் எனக்கு அவ்விதமான நம்பிக்கையைத் தந்தது. தங்கம், என் வாழ்க்கையிலே குறுக்கிடும் வரையில், அவர் என்னை அன்புடன் தான் நடத்தி வந்தார். பாபம்! தங்கத்தை மட்டும் குறைகூறிப் பயன் என்ன? உன் அப்பா பேராசைக்கு ஆட்படும்வரை என்னை அன்பாகத்தான் நடத்திவந்தார். பேராசை பிடித்ததும் என்னைச் சித்திரவதை செய்யலானார்.


     தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதத்தைப் பற்றி, நானாக என் அப்பாவிடம் கூற முடியுமா? துளசிதான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அப்பா, துடிதுடித்தார். 'மடையன், முட்டாள்' என்றெல்லாம் திட்டினார். என்னவோ உளறி இருக்கிறான். அவன் எழுதினதற்கு அர்த்தமே இல்லை என்றார். எனக்கு ஆறுதல் தருவதற்காக அவர் அவ்விதமெல்லாம் பேசினாரேயொழிய உண்மையிலேயே அவர் அந்தக் கடிதத்தால் அடைந்த வேதனையை அவருடைய முகம் தெளிவாகக் காட்டிற்று. முடிவில், 'நானே போய் அவனைக் கண்டித்துவிட்டு வருகிறேன்; இரண்டு நாள் நீ இங்கே தனியாக இரு; வந்துவிடுகிறேன்' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். இந்த முறைதான் சரியானது என்று துளசி ஆமோதித்தாள். எனக்கு என்ன செய்வது, எது சிறந்த முறை என்று தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியவில்லை. ஒரே திகைப்பு. இரண்டு நாள் கழித்து, அப்பா திரும்பி வந்தார். "என்னப்பா விஷயம்?" என்று நான் ஆவலுடன் கேட்டேன். 'ஒன்றுமில்லையம்மா! அவன் ஒரு மடையன். என்னவோ ஒரு விதமான பைத்தியக்காரச் சந்தேகம் கொண்டிருக்கிறான். இது என்னடா அசட்டுத்தனம் என்று கேட்டால், விழிக்கிறான். ஒரே குழப்பம். ஒழியட்டும். இப்படிப்பட்ட புத்தியற்றவர்கள் தாமாகத் திருந்தவேண்டுமேயொழிய, நாம் சொல்லித் திருத்த முடியாது என்று விட்டு விட்டேன். அவன் கிடக்கிறான்; உனக்கென்னமா கவலை? நீதானே அந்த வீட்டு எஜமானி. என்ன செய்துவிடுவான் அவன்; சும்மா விடுவேனா நான்" என்று என் அப்பா பேசினார். அவர் சொன்னது சமாதானமா, தீர்ப்பா, குற்றச்சாட்டா என்று தெரியவில்லை. உன் அப்பாவிடம் ஏதேதோ பேசிப் பார்த்திருக்கிறார். அவர் ஒரே பிடிவாதமாக இருந்திருக்கிறார். தன்னால் ஒன்றும் சாயாமல் போனதை மறைக்க, என் தகப்பனார் ஏதோ பேசித் தீர்க்கிறார் என்பது தெரிந்தது. என் மனதிலே இருந்த குழப்பத்திலிருந்து ஒரு புது உறுதி பிறந்தது. நேரே வீடு போவது, என்னை அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். தைரியமிருந்தால், "என் மனைவி விபசாரி. அவளை நான் விலக்கி விட்டேன்" என்றும் சொல்லட்டும். என்னை ஊரார் தூற்றுவார்கள்; சகித்துக் கொள்கிறேன். ஆனால், அதேபோது, ஊருக்குப் பெரியவர், கௌரவமான குடும்பம். செல்வமும் செல்வாக்கும் படைத்தவர் என்று புகழப்படும் இவரையும், எதிரே இல்லாவிட்டாலும் தலை மறைவாக ஏளனம் செய்யும். அதனால் வரும் இழிவையும் அவமானத்தையும், என்னை இம்சித்ததற்குத் தண்டனையாக அவர் அடையட்டும் என்று எண்ணினேன். பூஜை, பூஜாரி, பேய், எதையும் பொருட்படுத்தவில்லை. துளசியின் அன்பு மொழிக்கு மட்டும், கொஞ்சம் சிரமத்துடன் சமாதானம் கூற வேண்டியதாயிற்று.

     அப்பாவை அழைத்துக் கொண்டு, வீடு வந்தேன். பேயோட்டிக் கொள்வதற்காகவென்று நான் வீட்டிலிருந்து கிராமத்துக்குப் புறப்பட்ட போது, சாதுவாகத்தான் சென்றேன். பிறகு எதற்கும் பயப்படாதவளாக, வீட்டுக்குள் நுழைந்தேன். அடக்கம் பெண்களுக்குப் பூஷணம் என்பார்கள்; நான் அதன் படிதான் நடந்து வந்தேன். கிராமத்தை விட்டு மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்தபோதோ அதிகாரி என்ற முறையிலே புகுந்தேன். இனி, அடக்க ஒடுக்கம், பரிவு, பாசம், இவைகளை நான் ஏன் கொள்ள வேண்டும்? புருஷனின் குரலைக் கேட்டாலே பயந்து, அவர் காலால் இடும் வேலையைத் தலையால் செய்து தீரவேண்டும் என்று நான் இருப்பானேன்? அடங்கி ஒடுங்கி இருந்து பார்த்தாகிவிட்டது. கொடுமைகளைத் தாங்கிக் கொண்டேன். இழிவைப் பொறுத்துக் கொண்டேன்; சித்திரவதை செய்தார், சகித்துக் கொண்டேன். இவ்வளவுக்கும் பிரதிபலன் என்ன பெற்றேன்? தலைமுழுகிவிட்டேன் என்று அவர் எழுதிய கடிதந்தானே? புருஷனிடம் இடிபட்டு அடிபட்டு, இம்சைகளைப் பெற்றுக் கொண்டு, பெண் எதைப் புகழாகப் பெறுகிறாள்? அவள் உத்தமி, பத்தினி, பதி சொல் கடவாத பாவை என்ற பட்டங்களைத்தானே! எனக்குத்தான் என் கணவர் விபசாரிப் பட்டம் கட்டிவிட்டாரே; இனி பத்தினி, உத்தமி என்ற பட்டம் கிட்டும் என்பதற்காக நான் ஏன் பாடுபடவேண்டும். கொஞ்சமும் இரக்கமின்றி என்னைத் 'தலைமுழுகிவிட' அவருக்கு மனம் இடந்தந்தான பிறகு, நான் ஏன் சாதுவாக இருக்க வேண்டும்? இருந்துதான் நான் என்ன சுகத்தைக் காணப் போகிறேன்? எனவே, ஓர் புதிய உறுதியுடன் வீட்டுக்குள் பிரவேசித்தேன். உலகறிய என்மீது குற்றம் சாட்டி, அதற்கு ருஜு காட்டி, என்னை வீதியிலே விரட்டட்டும். அதுவரையில், இந்த வீட்டில் நான் ஆட்சி செய்வேன். அவரை ஆட்டிப் படைப்பேன் என்று திட்டமிட்டேன். வீட்டுக்குள் நுழைந்ததுமே, புதிய முறையில் வேலை துவங்கினேன். நான் உள்ளே வந்த போது அவர் வீட்டிலே இல்லை. அப்பா, என்னைத் தனியாக விட்டுப் போக விரும்பவில்லை. நானாகவே அவரைப் போகச் சொன்னேன். வேலைக்காரியைக் கூப்பிட்டேன். "எங்கே அவர்? எத்தனை மணிக்கு வெளியே சென்றார்? யார் கூடச் சென்றார்?" என்று மளமளவென்று கேள்விகளை அதிகாரத் தோரணையில் பூட்டினேன். அவ்வளவு உரத்த குரலிலேயும் முடுக்காகவும் நான் அதுவரை பேசி அவள் கேட்டதில்லை. ஆகவே அவள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாள். ஒரு வேளை "பேய்தான் பேசுகிறது" என்று தான் எண்ணிக்கொண்டிருப்பாள்.


     "என்னடி சமையல் இன்று?" என்று கேட்டேன். அவள் சொன்ன பண்டங்கள் யாவும் அவருக்குப் பிரியமானவை. உடனே அவைகளை மாற்றினேன். அவருக்குப் பிடிக்காத வெண்டைக்காயைக் குழம்பு வைக்கச் சொன்னேன். அவருக்குக் கொத்தமல்லித் துவையல் பிரியம்; அதைச் செய்யவேண்டாம் என்று உத்தரவு போட்டேன். கீரைத் தண்டு ஒரு பதார்த்தத்திலே சேர்ந்ததா என்று சலித்துக் கொள்வார் அவர். அதைக் கூட்டுச் செய்யச் சொன்னேன். அவருக்கு 'இரசம்' இல்லாவிட்டால் சாப்பாடு பிடிக்காது. அன்று அது தேவையில்லை என்றேன். தயிருக்குப் பதில் மோர், தலைவாழை இலைக்குப் பதில் பொத்தல் ஆல இலை, நெய் வாடை அடிக்கும் 'ரகம்'. இப்படி சமையற்கட்டிலே என் போர் துவக்கப்பட்டது. சாப்பாடு தயாரானதும், வேலைக்காரியைப் பரிமாறச் சொல்லி சாப்பிட்டுவிட்டு, உள்ளே படுத்துக்கொண்டு, "நான் நாலுமணி நேரம் தூங்கி ஆகவேண்டும். இடையிலே எழுப்பாதே. தூங்கி எழுந்திருப்பதற்குள் காப்பி தயாராக இருக்கட்டும்" என்று உத்தரவு போட்டுவிட்டு, மெத்தை மீது வழக்கமாகப் போடுவதைவிட அதிகத் தலையணைகள் போட்டுக்கொண்டு, படுத்துக் கொண்டேன்.

     பகல் ஒரு மணிக்குமேல் அவர் வந்தார். கூடத்திலே என் சாமான்கள் கிடந்தன. அதிலிருந்து தெரிந்து கொண்டிருப்பார், நான் வந்திருக்கிறேன் என்பதை. பைத்தியக்கார மனுஷர், நான் எந்தக் கோலத்திலே வந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளவில்லை.

     "எங்கே ரங்கம்?" என்று வேலைக்காரியைக் கேட்டார். எங்கே ரங்கம்? முன்பெல்லாம், எதிரே நிற்பாள். கையில் தண்ணீர்ச் செம்புடன், முகத்தில் சந்தோஷத்துடன்; சாப்பிட்டிருக்க மாட்டாள்! எங்கே ரங்கம்? வந்து பாரேன்; இதோ இருக்கிறாள் ரங்கம்; வெல்வெட்டுத் தலையணை தலைக்கும் காலுக்கும் போட்டுக்கொண்டு, ஒய்யாரமாகக் கண்களைப் பாதி அளவுக்கு மூடிக்கொண்டு வெற்றிப் புன்னகையுடன் கட்டிலின் மீது படுத்துக் கொண்டிருக்கிறாள்! தூக்கம் பூரணமாக வரவில்லை, வரச் செய்கிறாள். பதினோரு மணிக்குச் சாப்பிட்டாள். கொஞ்சநேரம் கதைப் புத்தகம் படித்தாள். படித்தபடி தூக்கம் வருவது போலிருந்தது. புத்தகத்தை கீழே வீசி எறிந்தாள். எவனோ கதாசிரியன், உத்தமிகளின் இலட்சண விளக்கத்தை எழுதி இருந்தான் அதிலே. இதோ, படுத்துக்கொண்டிருக்கிறாள். எங்கே இருப்பாள் ரங்கம் என்று கேட்கிறாயே. எங்கே இருப்பாள். ஒரு செல்வக் குடும்பத்திலே பிறந்து, செல்வவானுக்கு வாழ்க்கைப் பட்டவள்? பகல் ஒரு மணிக்குத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பாளா, நெல் குத்திக் கொண்டிருப்பாளா, அடுப்பு ஊதிக் கொண்டிருப்பாளா? வேலைக்காரி சமைத்தாள்; வேளையோடு சாப்பிட்டாள்; ஓய்வாகப் படுத்துக் கொண்டிருக்கிறாள். நாலு மணிக்கு எழுந்திருப்பாள்; காப்பி சாப்பிடுவாள், ஒரு அரைமணி நேரம் தோட்டத்திலே உலவுவாள்; பிறகு கோயிலுக்கோ, கோமளம், கோகிலம், குந்தளம் போன்ற சிநேகிதி வீட்டுக்கோ போய் வருவாள், பொழுதுபோக்காக! இப்படி எல்லாம் நான் கூறினேன். என் எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடியில் தெரிந்த என் உருவத்துக்கு. அவர் கூடத்திலே வேலைக்காரியைக் கேட்டார் "எங்கே ரங்கம்!" என்று.


     மகனே! முன்பு அவர் 'எங்கே வேலைக்காரி?' என்று என்னைக் கேட்பார். இப்போது வேலைக்காரியைக் கேட்டார், எங்கே ரங்கம் என்று. "அம்மா உள்ளே படுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னாள் வேலைக்காரி. பிறகு அவள் தான் சாதம் போட்டாள். சமையற்கட்டிலே நடந்த சம்வாதம் எனக்குச் சங்கீதமாக இருந்தது.

     "இதென்ன சனியன். வெண்டைக்காய் ஏன் செய்து தொலைத்தாய்?"

     "அம்மாதான்..."

     "என்னவாம் அம்மாவுக்கு? அம்மா! துவையல் எங்கே?"

     "செய்யவில்லை."

     "செய்யவில்லையா?"

     "ஆமாம். அம்மா வேண்டாம் என்றார்கள்."

     "இதென்ன பெரிய இழவு! இது என்ன வீடா, சுடுகாடா?"

     "பேஷ்; சபாஷ்! அற்புதம்!" என்று கூறலாமா என்று தோன்றிற்று எனக்கு, அவருடைய பதைப்பான பேச்சைக் கேட்டு, எதையோ தூக்கிக் கீழே வீசுகிற சத்தம் கேட்டது. "நான் என்னங்க செய்வது? அம்மா..." என்று அழுகுரலில் வேலைக்காரி பேசுகிற சப்தம் கேட்டது. பிறகு கூடத்திலே வந்து உலவிக் கொண்டே பேசலானார், உன் அப்பா.

     "இந்த வீட்டிலே மனுஷன் எப்படி வாசம் செய்ய முடியும்! பேயைப் பெண்டாகக் கொண்டால் இந்தக் கதிதான்" என்றார். சில விநாடிகள் பேச்சு இல்லை; காலடிச் சத்தம் மட்டும்தான் கேட்டது.


     "மங்களம்! இதோ பார், இனி இங்கே இதுபோல நடக்கக்கூடாது!" என்றார். மங்களம் என்ன செய்வாள்? எஜமானி போடும் உத்தரவின்படி நடக்கவேண்டியவள்தானே! "அம்மா சொன்னாள், அம்மா சொன்னாள் என்று வீட்டைக் குட்டிச் சுவராக்கக்கூடாது. அம்மாவுக்கு இங்கே யாரும் இந்த அதிகாரமெல்லாம் தரவில்லை. தெரிகிறதா? இந்த வீட்டிலே என் இஷ்டப்படிதான் சகலமும் நடக்க வேண்டும். ஜாக்ரதை, தோலை உரித்துவிடுவேன்" என்றார் மிரட்டலாக. தோலை உரித்து விடுவேன் என்றாரே தவிர, யாருடைய தோலை என்பதைக் கூறவில்லை. கூறத் தைரியமில்லை. வேலைக்காரி பதில் ஏதாவது பேசினாலாவது அவர் கோபத்தை வெளியே கக்கிவிட்டு நிம்மதி அடைந்திருப்பார். அவள் பேசாமல் இருக்கவே அவருடைய கோபம் வலிவு அதிகரித்தது. அந்தக் கோபத்தை நாற்காலிமேல் காட்டுகிறார், விசிறியின்மேல் காட்டுகிறார், தெருக் கதவின் மீது வீசுகிறார், கடைச் சிறுவன் மீது காட்டுகிறார், தோட்டக்காரன் மீது போடுகிறார். கோபத்தை எங்கெங்கோ பாய்ச்சுகிறாரே தவிர, ரங்கத்தின் மீது வீசத் தைரியமில்லை. ரங்கம் உள்ளேதான் சயனித்துக் கொண்டிருக்கிறாள்; கூடத்திலே குதிக்கிறார், கூவுகிறார்; உள்ளே நுழைந்து ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. கேட்டிருந்தால் எரிமலை வெடித்திருக்கும். நெடுநேரம் இவருடைய 'திட்டு'களைக் கேட்டுக் கொண்டிருந்த வேலைக்காரி, "நான் யார் பேச்சைக் கேட்பது? அம்மா ஒரு விதமாகச் சொல்லுகிறார்கள், நீங்கள் அதற்கு நேர்மாறாகச் சொல்கிறீர்கள்; நான் யாருடைய அதிகாரத்துக்கென்று அடங்கி நடப்பது" என்று கெஞ்சும் குரலில் பேசினாள். ஐயோ பாவம், நம்மாலே அவளுக்குக் கஷ்டம் வருகிறதே என்று ஒரு விநாடி யோசித்தேன். பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். சே! வேண்டுமானால், அவளுக்குத் தனியாகச் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், அவள் கஷ்டப்படுகிறாள் என்பதற்காக நமது போர்முறையை மாற்றிக் கொள்ளக்கூடாது. இந்தப் போர் முறை வெற்றி தருகிறது. ஆகவே இதனைத் தொடர்ந்து நடத்த வேண்டியதுதான் என்று தீர்மானித்துக் கொண்டேன். தன் கோபத்தை எங்கு காட்டுவது என்று தெரியாது திண்டாடிய என் கணவர், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் கடைக்குப் போய் விட்டார். முன்பெல்லாம் சாப்பிட்டானதும் மூன்று மணி வரையில் படுத்துத் தூங்குவார்; நான் காப்பி போட்டுக் கொடுத்தான பிறகுதான் போவார். சாப்பிட்டு அரைமணி நேரமாகவில்லை, ஓடினார் கடைக்கு; நான் ஒய்யாரமாகப் படுத்து உறங்கினேன். அவரும் நானும் பழைய நாட்களிலே ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோமே, அப்போது எனக்கு இருந்த சந்தோஷம் ஒருவிதம். அவருடன் 'போரிடுவது' என்று திட்டமிட்டு, படை எடுப்பின் துவக்கத்திலேயே அவர் தோற்று ஓடினபோது நான் கொண்ட சந்தோஷம் வேறோர் விதமாக இருந்தது. எனக்கு இந்த இரு சந்தோஷங்களின் வகைகளை விளக்கச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இரண்டும் வேறு வேறு வகை என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இனிப்புப் பண்டங்களிலேயே, இனிப்பளிக்கும் முறையிலும், இனிப்பின் தன்மையிலும் வித்தியாசம் இல்லையா? அதுபோலவே, அந்த இருவகைச் சந்தோஷங்களிலேயும் வித்தியாசம் இருந்தது. காசி அல்வா தின்னும்போதும் இனிப்புதான்; கரும்பைத் கடித்துத் தின்னும்போதும் இனிப்புதான், என்றாலும் வித்தியாசம் இருக்கிறது பார் மகனே! அது போலிருந்தது. உத்தரவின்படி நாலு மணிக்கு வேலைக்காரி காப்பி கொடுத்தாள்; சாப்பிட்டேன்; குளித்தேன்; அதுவும் புது வழக்கம்! அலங்காரம் செய்து கொண்டேன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 2:58 pm

ரங்கோன் ராதா

10

     லேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம் பார்ப்பவர். பேய் பிடித்துக்கொண்டது என்று சொன்னபோது கோபித்துக் கொண்டு, வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்ட லாசரஸ், பிறகு பலதடவை கூப்பிட்டு அனுப்பியும் வருவதில்லை. "ஓ! முதலியார் வீட்டு அம்மாவுக்கா! டாக்டர் எதுக்கு? மந்திரக்காரனை அழைக்கட்டும் போ!" என்று கோபமாகக் கூறி அனுப்பிவிடுவார்கள். அதே லாசரசை அழைத்துக் கொண்டு வரும்படியாக, வேலைக்காரிக்குக் கூறினேன். அவள் மேலும் ஆச்சரியப்பட்டாள். "ஏண்டி! ஆந்தைபோல விழிக்கிறாய். அம்மாவுடைய போக்கே மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறாயா? இப்போது மாறித்தான் போய்விட்டாள். பழைய அம்மா இல்லை" என்று நான் கூறிவிட்டுச் சிரித்தேன். "அம்மா எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது நீங்கள் அதிகாரம் செய்ய ஆரம்பித்தபோது. ஆனால், பிறகோ எனக்குப் பயமாகிவிட்டது" என்றாள் அந்தப் பேதை. "ஏண்டி, பயம்? ஓஹோ! பிசாசு பயமா?" என்று கேட்டேன். 'ஆமாம்' என்று தலையசைத்தாள். "பைத்தியக்காரி, பேயும் கிடையாது, பூதமும் கிடையாது. லாசரஸ் டாக்டர் சொல்லுகிறதுபோல, எல்லாம் நரம்புக் கோளாறு. மேலும், மனிதர்களின் சுபாவத்தைக் கெடுக்க, மனிதரே போதும்" என்று நான் சொன்னேன். அவள் புரிந்து கொள்ளவில்லை. "மாறிவிட்டேன் என்று கூறுகிறாயே, அதுகூட உண்மை அல்ல; நானாக மாறிவிடவில்லை. மாறுதலை உண்டாக்கி விட்டார்கள்" என்றேன்; அதுவும் அவளுக்குப் புரியவில்லை. "அடி! உனக்குப் புரிகிறபடி கூறுகிறேன் கேள். சாணி இருக்கிறதே அது எப்படி இருக்கிறது? ஈரமாக, 'கொள கொள' வென்று, பழுப்புக் கலரில் இருக்கிறதல்லவா? பிறகு, அதே சாணி 'வறட்டி' யாகி எரிக்கப்பட்ட பிறகு, எப்படி மாறிவிடுகிறது?" என்று கேட்டேன். "சாம்பலாயிடுது" என்றாள் வேலைக்காரி. "சாணி சாம்பலாவது யாரால்? நம்மால்தானே?" என்று கேட்டேன். "ஆமாம். நாம் அடுப்புக்கு உபயோகப்படுத்துகிறோம்; சாணி வறட்டியாகி, பிறகு சாம்பலாகிறது" என்று கூறினாள். "சாம்பல் வேண்டும் என்ற எண்ணத்துக்காகவா நாம் வறட்டியை எரிக்கிறோம்? இல்லையல்லவா? நாம், எதற்காகவோ ஒரு வஸ்துவை உபயோகிக்கிறோம். நம்முடைய உபயோகத்திற்குப் பிறகு, அந்த வஸ்து வேறு உருவம், வேறு குணம் கொண்ட வேறு வஸ்துவாகி விடுகிறது. இது, நம்மால் நேரிட்ட மாறுதல் என்பது பற்றிக்கூட நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இப்படி மாறும் என்பது தெரிந்தும், நாம் காரியம் செய்வதில்லை. அதைப்போல, மனிதரை மனிதர் பயன்படுத்தி, மாற்றிவிடுகிறார்கள். இதையே தெரிந்து செய்வதும் உண்டு. பால் தயிராவது எப்படி? நாம்தானே 'புரை' தெளித்து, பாலைத் தயிராக்குகிறோம். அது போலவேதான் மனிதரால் மனிதரின் சுபாவம், உருவம்கூட மாற்றப்படுகிறது இந்தக் காரியம் உலகில் ஒவ்வோர் விநாடியும் நடைபெற்றபடி இருக்கிறது. இவ்விதமாக ஏற்பட்டதே என் மாறுதலும்! இதைப் பேயும் செய்யவில்லை, பூதமும் செய்ததல்ல! என் கணவரேதான் என் மாறுதலுக்குக் காரணம்" என்று நான் விரிவாக விளக்கினேன். அவள் பாவம்; சாணி சாம்பலாவது, பால் மோராவது இவைகளைப் புரிந்துகொண்ட அளவு, என் மாறுதலைப் புரிந்துகொண்டு வரவேண்டும் என்பதை மறுபடியும் அவளுக்குக் கூறிவிட்டு நான் வெளியே புறப்பட்டேன்.


     வாடகை வண்டியைக் கூப்பிடுவதற்கு எனக்குக் கூச்சமாக இருந்தது. வண்டிக்காரனின் கூச்சம் எனக்கு இருந்ததைவிட அதிகமாக இருந்தது.

     "முதலியார் வீட்டு அம்மாவா? ஏனுங்க? நம்ம வண்டி எங்கேங்க?"

     "கடைக்குப் போயிருக்கு."

     "போயிருந்தா என்னங்க. நான் போயி கூட்டிக்கொண்டு வருகிறேனுங்க."

     "ஏன்? உன் வண்டிக்கு என்ன?"

     "ஒண்ணுமில்லைங்க. ஆனா, நீங்க இதிலே வருகிறதுன்னா..."

     "ஏன், வேறே எங்காவது நீ போகணுமா?"

     "ராமா! ராமா! அதுக்குல்லீங்க. இது, 'வில்' வண்டிகூட இல்லை. ஒரே ஆட்டமா ஆடித் தொலைக்கும். அதுக்குத்தான் பார்க்கிறேன்."

     "பரவாயில்லை."

     இவ்வளவு பேச்சுக்குப் பிறகுதான் வண்டியில் இடம் கிடைத்தது. பெரிய பணக்கார வீட்டு மகள், வாடகை வண்டியிலே போவது கௌரவக் குறைச்சல் என்று அவன் கருதினான்! அந்த எண்ணத்தைப் போக்கவே நான் அவனிடம் அவ்வளவு பேசவேண்டி இருந்தது. என்னைத் தன் வண்டியிலே ஏற்றிக்கொண்டு போவதாலே அவன் ஒருவித 'கௌரவம்' அடைந்தான். வழக்கமாக, வழியிலே வருகிறவர் போகிறவர்களுடன், 'வம்பளப்பவன்' அவன் என்று தெரியவந்தது. ஏனெனில் வழியிலே பலபேர் அவனிடம் பேசினார்கள். பெரும்பாலான பேச்சு அவசியமற்றது. அவனோ ஒவ்வொருவரிடமும் பேச்சை வளர்த்தாதீர்கள் என்று ஜாடை காட்டினான். அவர்களும் வண்டியிலே நான் உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு மரியாதையாகப் போயினர்! வண்டிகள் எதுவந்தாலும் இவன் வழி சரியாக விடவே இல்லை. "போப்பா ஓரமாகப் போ" என்று அதட்டிக் கொண்டே சென்றான். அதாவது வண்டியிலே நான் இருக்கும்போது, வழக்கமாகக் காட்டும் பணிவுகூடத் தேவை இல்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். "அம்மா கால் வைத்தது எனக்கு அதிர்ஷ்டம்தான்" என்றான். பாவனைக்கு அல்ல; உண்மையாகப் பூரித்துப் போய்ச் சொன்ன வார்த்தை அது. அவனும் அதுவரை வண்டியை எங்கே ஓட்டவேண்டும் என்று என்னைக் கேட்கவில்லை; நானும் சொன்னவளல்ல. வண்டி மட்டும் போய்க்கொண்டே இருந்தது. அவன் ஏதேதோ தன் குடும்பக் கதையைப் பேசிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் வண்டியை நிறுத்திவிட்டான். அப்போதுதான் தெரிந்தது அவன் வண்டியை, என் அப்பா வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான் என்பது. என்ன செய்வது! அவன், நான் போகக்கூடிய இடம் அதுதான் என்று எண்ணம் கொண்டு அவ்விதம் செய்தான். அவன் மீது தப்பு இல்லை.

     "வண்டியை அவிழ்த்துவிடட்டுங்களாம்மா" என்று கேட்டான். "வேண்டாம் இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு, உள்ளே நுழைந்தேன்.


     வீட்டிற்குள் நுழைந்தேன், எதிர்பாராத சம்பவம்; ஆனால் ஆச்சரியப்படும்படி, தங்கம் ஓடோ டி வந்தாள். என்னைக் கண்டதும், "அக்கா! வா! நானே வரலாம் என்று இருந்தேன்" என்றாள். எனக்குத் திகைப்பு ஏற்பட்டது. நான் உட்காரப் பாய் விரித்தாள்; இரண்டு தலையணைகளும் போட்டாள். அப்பா வெளியே போயிருக்கிறார் என்று நான் கேளாமல் அவளே சொன்னாள். வண்டியை ஏன் அவிழ்த்து விடவில்லை என்று கேட்டுவிட்டு, வண்டிக்காரனைக் கூப்பிட்டு அவிழ்த்துவிடும்படி உத்தரவிட்டாள். வேலைக்காரியை ஓட்டலுக்கு அனுப்பினாள்!

     தங்கமா, துளசியா என்று நான் சந்தேகிக்கவேண்டி இருந்தது, அந்த உபசாரங்களைக் கண்டு. என் வாழ்க்கைக்கு ஒரு முள்ளான அவள், என் கணவரின் மனதை மாற்றிவிட்டவள், எனக்கு இழிவும் பழியும் ஏற்படும்படி செய்த தங்கம், இப்படி என்னை உபசரித்தால் எனக்கு எப்படி இருக்கும். என்னவோ கதை சொல்வார்களே, யாரோ ஒருவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான், பகல் வேளையில். வெயில் அவன் முகத்தில் பட்டது; அதைக் கண்டு ஒரு நாகப்பாம்பு படமெடுத்து, அவன் பக்கத்தில் இருந்துகொண்டு முகத்திலே வெயில் படாதபடி குடை பிடித்தது என்று சொல்வார்களே, அதைப் போல் இருந்தது தங்கம் எனக்கு உபசாரம் செய்தது. நான் எந்தவிதமாக நடந்து கொள்வது என்று தீர்மானத்துக்கு வரவே சிரமமாக இருந்தது. தங்கம் ஏன் தன்னுடைய போர்முறையை மாற்றிக் கொண்டாள் என்பதே விளங்கவில்லை. கேலி செய்கிறாளா? வெறும் பாவனையா? ஒருவேளை இப்படித்தான் நடக்கவேண்டும் என்று அப்பா கட்டளையிட்டாரோ? அல்லது என் கணவரே ஒரு சமயம், "என்ன இருந்தாலும் அவள் முதல், நீ இரண்டாவது தான். மேலும் அவள் உன் அக்கா; அவளிடம் நீ குரோதம் காட்டக்கூடாது" என்று யோசனை சொன்னாரோ என்று பலப் பல எண்ணங்கள் உண்டாயின.

     காலையில் வந்தேன் - பரவாயில்லை - இப்போது மயக்கம் கிடையாது - ஆமாம் மாதம் நாலு - என்று இப்படித் துண்டு துண்டாக என் சேதிகளைச் சொன்னேனேயொழிய, எனக்குக் கலந்து பேசவோ அவளைப் போலக் கொஞ்சிக் குலாவவோ முடியவில்லை. எப்படியோ அவள், அவ்வளவு சாமர்த்தியமாக நடித்தாள். அந்தச் சமயத்திலே யாரேனும் கண்டால், "தங்கம், தங்கமான பெண் - இந்த ரங்கம் ஒரு 'முசடு'; தங்கத்துக்கு அவள் அக்காளிடம் பிராணன்; ரங்கம் மகா கர்வம் பிடித்தவள்" என்று தான் சொல்வார்கள்.

     "தங்கம்! உண்மையைக் கூறிவிடு. ஏன் இன்று என்றுமில்லாத் திருக்கூத்தாக இருக்கிறது? என்னை, உன் ஜென்ம விரோதியாக எண்ணியவளாயிற்றே, எதற்காக இன்று என்னிடம் இவ்வளவு கெஞ்சுகிறாய்? இது என்ன தந்திரம்? என்ன விபரீதத்துக்காக இந்த முன் ஏற்பாடு?" என்று கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். கேட்கும் துணிவு வரவில்லை. தங்கம், எனக்குக் காப்பி தயாரிப்பதாகச் சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குச் சென்றாள். நான், யோசனையிலாழ்ந்தபடி படுத்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே யாரும் இல்லை. வேலைக்காரியும் வெளியே போயிருந்தாள். வண்டிக்காரன், மிக மரியாதையாக உள்ளே வந்து தனக்கு அவசர வேலை இருப்பதாகவும், வேறு வண்டி கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவதாகவும் சொன்னான். "நீ போ அப்பா, நான் வேறு வண்டி கூப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டேன். தங்கம் சமையற்கட்டிலிருந்து வருவதற்குள் அவளிடம் சொல்லாமலேயே வெளியே போய்விடலாமா என்று தோன்றிற்று. மறுபடியும் சே! அவள் என்னை ஒரு பைத்தியக்காரி என்றல்லவா எண்ணிக் கொள்வாள் என்ற எண்ணம் உண்டாயிற்று. என்னால் என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாமல் திண்டாடினேன். ஏன் இங்கே வந்து சிக்கிக் கொண்டோ ம்? 'மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்' என்ற பழமொழியையும் மறந்து இங்கே வந்தோமே. "வலிய வந்தவளை வாவென்று கூட உபசரிக்காமல் எப்படி இருப்பது? அவள் இலச்சை கெட்டு வந்தாள்; நான், வெட்கங் கெட்டவளே! போடி வெளியே என்று எப்படிக் கூறுவது? என்ன இருந்தாலும் கூடப்பிறந்த பிறப்பல்லவா?" என்றெல்லாம் பேசுவாளே இந்தத் தங்கம். இதற்கெல்லாம் நாம் இடம் கொடுப்பதா? என்ன பைத்தியக்காரத்தனமான வேலை செய்தோம்? வீட்டிற்குள் நுழைகிற போதே அப்பா இருக்கிறாரா? என்று கேட்டுவிட்டு, அவர் இல்லை என்று தெரிந்ததும், பிறகு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டிருக்கலாகாதா? ஏன் இப்படி விழிக்கவேண்டும் என்று எண்ணி என்னை நானே நொந்துகொண்டேன். எவ்வளவு சாமர்த்தியமாக நடிக்கிறாள் தங்கம்! விரோதத்தைத் துளியும் வெளியே தெரிய ஒட்டாதபடி தானே மூடி வைத்துக்கொண்டு பேசுகிறாள். நம்மால் முடியவில்லையே அதுபோல். 'என்னையே இவ்வளவு திறமையாக மயக்குகிறாளே, இவளிடம் என் புருஷர் எப்படி மயங்காமலிருக்க முடியும்?' என்று எண்ணி வெட்கமடைந்தேன்; பொறாமையும் கொண்டேன். அந்தத் திடீர்ச் சிரிப்பு. எனக்கு வரவில்லை! அவள் பேச்சுடன் கலந்துவரும் ஒருவகை 'நாதம்' என்னிடம் இல்லை. என் கூந்தல் நெற்றியில் புரள்வது எனக்குத் தெரிவதற்குமுன், அவளல்லவா அதைச் சரிப்படுத்துகிறாள்! எங்கிருந்து கற்றுக்கொண்டாள் இந்த வித்தையை! என்னோடு பிறந்தாள். என்னையே வெல்கிறாளே! என்று ஆச்சரியமடைந்தேன். என்னால் இவ்விதமாகவெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடிந்ததேயொழிய, ஒருவிதமான தீர்மானத்துக்கும் வரமுடியவில்லை.


     வேலைக்காரி பலகாரப் பொட்டலங்களுடன் வந்தாள். அவளை நிறுத்திக்கொண்டு, என் மனதிலிருந்த பாரத்தைப் போக்க அவளிடம் பேசலானேன்.

     "ஏண்டி! என்ன இது, உங்க தங்கம் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறாளே!"      "இல்லாமே போவுங்களா! கூடப் பிறந்த பொறப்பல்லவா? மேலும், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்வாங்களே!"

     "அந்தக் கதை கிடக்கட்டும்டீ! இவ என்ன உண்மையாகவே தானா என்னை உபசரிக்கிறாள்?"

     "நான் என்னத்தைக் கண்டேனுங்க. நீங்க ரெண்டு பேரும் இப்படி அன்பா வாழணும், நான் என் கண்குளிரப் பார்க்கணும், அவ்வளவுதான் எனக்கு வேண்டியது."

     "அது கிடக்கட்டும்டீ! சதா சர்வாகலமும் என்னைத் திட்டிக் கொண்டிருப்பதுதானே தங்கத்தின் வேலை."

     "அதெல்லாம் ஏம்மா, இப்போ பேசணும். என்னமோ அது மனசு மாறியிருக்கும். இனிமேலாவது நீங்க ரெண்டு பேரும் சண்டை சச்சரவு இல்லாம இருங்களேன். நல்லதுதானே."

     "நல்லது கெட்டது இருக்கட்டும். திடீருன்னு இவளுடைய நடவடிக்கை மாறினது ஏன்? அப்பா ஏதாவது சொல்லி இருப்பாரா?"

     "இருக்கும்."

     "உனக்குத் தெரியாதா?"

     "தெரியாதுங்களே."

     இதற்குள் தங்கம் காப்பியுடன் வந்துவிட்டாள். சாப்பிட்டாலொழிய விடமுடியாதென்று பலவந்தம் செய்தாள். எனக்குத் திடீரென்று ஒரு பயம் தோன்றிவிட்டது. என்மீது தீராப் பகை கொண்ட இவள், ஒரு சமயம், தனியாக வந்து சிக்கிக் கொண்ட என்னை ஒழித்துவிடுவதற்கே, என்னிடம் தந்திரமாகச் சிரித்துப் பேசி பலகாரத்திலோ, காப்பியிலோ ஏதாவது விஷத்தை வைத்து விடுகிறாளோ என்ற பயம் பிறந்துவிட்டது. தந்திரக்காரத் தங்கம் அதையும் தெரிந்து கொண்டாள் போலிருக்கிறது. "சாப்பிடக்கா! இந்த அல்வா நன்றாக இருக்கும்" என்று கூறிக்கொண்டே, கொஞ்சம் அதிலே எடுத்துத் தின்றாள். அதுபோலவே ஒவ்வொரு பலகாரத்தையும் கொஞ்சம் கொஞ்சம் தின்றாள். எனக்கே வெட்கமாகிவிட்டது. நானும் தின்றேன். காப்பி சாப்பிடும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. உடனே அவள் காப்பியிலேயும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, "அக்கா! சர்க்கரை போதாது போலிருக்கே" என்று கேட்டாள். 'போதும்' என்று கூறிக்கொண்டே நான் அதையும் சாப்பிட்டுவிட்டேன். கை அலம்புவதற்குச் சமையற்கட்டுப் பக்கம் சென்றேன். தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள். வெற்றிலைத் தட்டை இழுத்தேன்; அவள் சுண்ணாம்பு தடவி வெற்றிலை மடித்துக் கொடுத்தாள். குறிப்பறிந்து நடந்துகொண்டாள். என்னைக் கொல்வதற்குப் பதில் உபசாரத்துக்குமேல் உபசாரம் செய்தாள். என்ன காரணம்? என்ன சூழ்ச்சி இது? எனக்கொன்றும் புலப்படவே இல்லை. என்னைச் சந்தோஷப்படுத்தி என்ன காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் போகிறாள்! ஒரு வேளை அன்பாக நடந்து கொள்வதன் மூலம், என்னுடைய சம்மதத்தையே பெற்று, கலியாண ஏற்பாட்டை முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறாளா என்று எண்ணினேன். பலப்பல எண்ணினேனே யொழிய, வாய் திறந்து அவளை எதுவும் கேட்கத் தோன்றவில்லை. 'போய்விட்டு வருகிறேன்!' என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லிப் பார்த்தேன். ஒவ்வொரு தடவையும், "இரு அக்கா! போகலாம் இரு" என்று உபசாரம் பேசிப் பேசி என்னைத் தடுத்துக்கொண்டே இருந்தாள். "நேரமாகிறது தங்கம்..." என்றேன். குழந்தை பாலுக்கு அழுமோ? இப்போது ஏதுக்கா! இன்னம் கொஞ்சம் நாள் கழித்துத்தானே!" என்று கேலியும் பேசினாள்.


     "அக்கா! நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் என்னை மன்னித்துவிடு" என்றாள் திடீரென்று. நான் மிரள மிரள விழித்தேன். அவள் கண்களிலே நீர் தளும்பிற்று.

     "என்னடி தங்கம்? உன் நடத்தையே இன்று பைத்தியக்காரச் சேஷ்டையாக இருக்கிறதே!" என்று நான் கேட்டேன்.

     "அக்கா! நான் தவறு செய்துவிட்டிருக்கிறேன் என்பது எனக்கே தெரியும். இந்த வாழ்க்கையைச் சதம் என்று நம்பி, உலகத்திலே எத்தனை பொய், சூது, வஞ்சனை நடக்கிறது. அதுபோல, நானும் ஏதேதோ மனக்கோட்டை கட்டி, உன் மீது வீணாக விரோதம் கொண்டு கெடுதிகள் செய்தேன்..." என்று கூறிக்கொண்டே விம்மினாள்.

     "தங்கம்! என்ன உனக்கு பைத்தியமா? ஏதோ என்னுடைய தலைவிதிக்கு ஏற்றபடி கஷ்டங்கள் நேரிட்டன. நீ என்ன செய்வாய் அதற்கு? உனக்கும் எனக்கும் பகை மூண்டது கூட என் பொல்லாத வேளைதான்" என்று நான் சொன்னேன். எனக்கும் கண்களிலே நீர் கசியலாயிற்று. 

     "அக்கா! நான் எப்படி என் வாயால் சொல்லுவேன்..."

     "என்ன? எதை? இதென்னடி தங்கம் இப்படி விம்முகிறாயே."

     "அக்கா! நாம் பிறந்தது இருவர்..."

     "என்னடி உளறி...!"

     "அக்கா! நாம் இருவர் வாழக் கடவுளுக்கு விருப்பம் இல்லையே..."

     "என்னடி அசடே! என்ன சொல்லுகிறாய் இப்போது?"

     "அக்கா! நான் இன்னும் ஆறு மாதம்..."

     "என்ன ஆறு மாதம்..."

     "ஆறாம் மாதம்..."

     "யாருக்கு? என்னடி உளறிக்கொட்டுகிறாய்! ஆறாம் மாதமா? உனக்கா?"

     "அதல்ல அக்கா! இன்னும் ஆறு மாதத்தில் நான் செத்துவிடுவேனாம்..." என்று கூறிவிட்டுத் தங்கம் கோவென்று அழுதாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:01 pm

ரங்கோன் ராதா

11

     தங்கம், தனக்குச் சில மாதங்களில் மரணம் சம்பவிக்கும் என்று சோதிடன் எவனோ கூறினது கேட்டு, என்னிடம் கூறிக் கோவென அழத்தொடங்கியதும், அதுவரை மற்போருக்காக ஒருவர் வலிவை, மற்றவர் அறியும் பொருட்டு எதிர் எதிர் நின்று உற்று நோக்கியபடி இருப்பது போல் இருந்து வந்த நான், அவளை அருகே இழுத்து அன்புடன் அணைத்துக் கொண்டு, கண்ணீரைத் துடைத்து, "அடி பேதைப் பெண்ணே! உன்னை நான் மகா புத்திசாலி, தைரியசாலி என்று அல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். என்ன பித்தமடி உனக்கு. எவனோ பிதற்றியதைக் கேட்டுக் கொண்டு அழலாமா? அடி அசடே! யார் அந்த மடையன்? எப்படித் துணிந்து சொன்னான் அந்த வார்த்தையை? அவனிடம் நீ என்ன கேள்வி கேட்டாய்? அவன் வாய்த்துடுக்குக் கொண்டவனாக இருக்கவேண்டும். இல்லையானால் இவ்விதமான அவலட்சணப் பேச்சைக் கூறுவானா? அவன் கூறினதைக் கேட்டுச் சிரித்துவிட்டு, 'போடா மகா பெரிய அறிவாளிதான் நீ' என்று கூறுவதை விட்டு, அவன் பேச்சை உண்மை என்று நம்பி அழலாமா! தங்கம்! இதோ பார் இப்படி! என்னடி உனக்கு? எவனோ ஒரு மூடன் உரை கேட்டு, இப்படி மதி மயங்குவதா?" என்று பலப்பல கூறி அவளைத் தேற்றினேன். தங்கமோ விம்முவதை விடவில்லை. "அக்கா, நானும் சோதிடர்களின் உரையை நம்புவதில்லை. உனக்கே தெரியுமே, நான் தான் எதற்கும் துருவித் துருவிக் காரணம் கேட்பவளாயிற்றே. எந்தப் புரட்டையும் உடனே நம்பிவிடும் பேதையல்ல. இந்தச் சோதிடன் சொன்னது கேட்டு மட்டும் நான் நம்பினதற்குக் காரணம் இருக்கிறது. ஒன்று சொல்கிறேன், கேள் அக்கா! பெரும்பாலும் இந்தச் சோதிடர்கள், உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களிடம் முகஸ்துதியான வார்த்தை பேசி, மூன்று உலகமும் உங்கள் காலடியில் விழும்! உம்முடைய எதிரிகள் மூக்கிலும் வாயிலும் இரத்தம் வழிந்து ஒழிவார்கள்! உங்கள் மனம் கருணை வெள்ளம் கொண்டது! என்றெல்லாம் கூறுவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே நான், என் ஜாதகத்தைச் சோதிடனிடம் கொடுத்தபோது வள்ளியின் ஜாதகம் என்றேன். அவன் நம்புவதற்காகவே, என் ஜாதகக் குறிப்பை வேறோர் காகிதத்தில் எழுதி, என் பெயரைப் போடாமல் வள்ளி என்று போட்டுத் தந்தேன். அவன் அந்த ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, இன்னும் ஆறு மாதத்திலே இந்த வள்ளி இறந்துவிடுவாள் என்று கூறினான். நான் நம்பாமல் எப்படி இருக்க முடியும்?" என்று கூறிவிட்டு மறுபடியும் அழ ஆரம்பித்தாள். இதென்னடா சங்கடம் என்று நான் எண்ணினேன். "வள்ளி! யாரவன் அந்த வாயாடி?" என்று கேட்டேன். அவள், "அவர் பெரிய சோதிடர்தானம்மா! வாழ்முனி அவருக்குப் பிரத்யட்சம்" என்றாள். "சரியான மூடத்தனம்! நீயும் சேர்ந்துதான் இப்படி, தங்கத்தின் மனதைக் குழப்பி விட்டிருகிறாய்" என்று அவளையும் கண்டித்தேன். தங்கம் சோகத்துடன், "அக்கா! உனக்கு என் மேல் இருக்கும் ஆசையின் காரணமாக இப்படிப் பேசுகிறாய். எனக்கென்னவோ அவன் சொன்னது முதல், மார்பு கூட அடிக்கடி ஒருவிதமாக வலிக்கிறது. இரவிலே தூக்கம் நிம்மதியாக இருப்பதில்லை. கெட்ட நினைவுகள்! என் மனதிலே ஒரு விதமான திகில் பிடித்துக் கொண்டு விட்டது" என்று சொன்னாள். அவளைச் சமாதானப் படித்த நான், சோதிடத்தின் போக்கு, சோதிடர்களின் புரட்டு, அவர்களின் வார்த்தைக்குப் பலவகையான அர்த்தம் இருக்கிற வேடிக்கை ஆகியவற்றைச் சொன்னேன். அவளோ திருப்தியடையவில்லை. "அப்பாவிடம் சொல்லி அவனை நையப் புடைக்கச் சொல்கிறேன்" என்றேன். தங்கம், "அப்பா காதிலே விழுந்தால் அவனை அடிப்பார். ஆனால் அவரும் என்னைப் போலவேதான் வேதனைப்படுவார். ஏனெனில், அவருக்கு அந்தச் சோதிடனிடம் ரொம்ப நம்பிக்கை. நமது மிராசு கேஸ், மேல் கோர்ட்டில் இருந்தபோது அவன் கூறிய சோதிடம் பலித்தது. அதிலிருந்து அப்பாவுக்கு அவன் வார்த்தையிலே அபார நம்பிக்கை. ஆகையாலேதான் நான் அவன் சொன்னதை அப்பாவிடம் சொல்லக்கூட இல்லை. சொன்னால், அவர் இந்த வயோதிகப் பருவத்திலே இதுபற்றி வேறு மனம் கஷ்டப்படுவார். ஏற்கெனவே உன்னால் அவர் ஏக்கம் அனுபவிக்கிறார். இனி என் கதியும் இப்படி ஆகும் என்று தெரிந்துவிட்டால் படுத்த படுக்கையாகிவிடுவார். அக்கா நாம் இருவர் பிறந்து அவரைப் படாதபாடு படுத்திவிட்டோம்" என்று கூறித் துக்கித்தாள்.


     "நீ என்ன சொன்னாலும் சரி; நான் துளிகூட நம்ப மாட்டேன். எனக்கு இப்போது இப்படிப்பட்ட புரட்டர்களின் போக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டது. போகட்டும்! இந்த மாதிரி புரட்டர்கள், ஆபத்து வரும், மரணம் சம்பவிக்கும், கிரஹம் போதாது என்றெல்லாம் கூறிப் பயங்காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டார்களே! இந்த ஆபத்து நீங்க ஆயிரம் கண்ணுடையாளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும்! இலட்ச தீபம் ஏற்றவேண்டும்! சொர்ணத்தால் சர்ப்பம் செய்து சொக்கநாதன் கோயிலுக்குத் தானம் தரவேண்டும். நூறு பண்டாரங்களுக்குச் சோறு போடவேண்டும் என்று ஏதாவது உளறுவார்களே! அதுபோல இவன் ஒன்றும் சொல்லவில்லையா?" என்று கேட்டேன். "சொன்னான்" என்றாள் தங்கம். "என்ன?" என்று கேட்டேன். தங்கம் அதற்குப் பதில் கூறவில்லை. நெடுநேரம் ஏதேதோ பேச்சை மாற்றியபடி இருந்தாளே தவிர, என் கேள்விக்குப் பதில் கூறவில்லை. நானோ விடவில்லை. சொன்னால்தானாயிற்று என்றேன். "சொல்லி என்ன பயன்?" என்று சோதித்தாள் தங்கம். "சொல்லடி! என்னதான் செய்ய வேண்டுமாம். ஆபத்து போக" என்று கேட்டேன். அவள் அதற்கு நேர்முகமாய்ப் பதில் கூறவில்லை.

     "அக்கா! இன்று நாம் இருவரும் எதையும் மறைக்காமல் பேசவேண்டும். அத்தானை நான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது உனக்கு ஆத்திரத்தைத்தானே ஊட்டிவிட்டது" என்று கேட்டாள். இவ்வளவு தைரியமாகச் சிக்கல் நிறைந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகப் பேசுகிறாள். தங்கத்தின் சாமர்த்தியம் அதுதானே.

     "தங்கம்! மனதிலுள்ளதை மறைக்காமல் தானே பேச வேண்டும்? ஆத்திரமா எனக்கு என்று கேட்கிறாய். இருக்காதா? பிறக்காதா?" என்று நான் அவளைக் கேட்டேன்.

     "உன்னை ஆத்திரப்படச் செய்வதால் எனக்கென்ன அக்கா இலாபம்? யோசித்துப் பதில் சொல்லு. உன்னுடைய அன்பைப் பெறவேண்டும் என்று நான் எண்ண முடியுமே தவிர, உன் கோபத்தைக் கிளப்பிவிடுவதிலே எனக்கு விருப்பம் இருக்க முடியுமா? நீயே சொல்லு!" என்று அவள் வேறோர் கேள்வி, முன்னதைவிடக் கூர்மையான அம்பு போட்டாள்.

     நான் பேசின பேச்சைக் கேட்ட அந்தப் பேயோட்டி என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று சொன்னான்; தங்கம் பேசுவதைக் கேட்டால், என்ன சொல்வானோ தெரியவில்லை.


     "தங்கம்! வளைத்துப் பேசுவது வம்பில்தான் போய் முடியும். எனக்கு உன் மீது இருந்த அன்பு மாறினதும், நமக்குள் பகை மூண்டதும், உண்மையில் நீ என் கணவரைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு நடைபெறுகிறது என்று நான் அறிந்ததால்தான். நான் மட்டுமல்ல! உலகிலே எந்தப் பெண்ணும் ஆத்திரமடையத்தான் செய்வாள். மரக்கட்டையா நான்? என் கணவர் வேறொருத்தியை, அவள் என் கூடப் பிறந்தவளாகக் கூட இருக்கட்டும், எதற்காக இன்னோர் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும்? யாருக்குத்தானடியம்மா, கோபம் வராது!" என்று நான் கேட்டேன். எனக்குக் கொஞ்சம் கோபந்தான். அவளோ சாந்தமாகப் பேசினாள். "அக்கா! நான் பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் சொல்லு. நான் நீ ஆத்திரப்பட்டது தவறு, ஆத்திரப்படக்கூடாது என்று சொல்லவில்லையே. அத்தான் என்னைக் கலியாணம் செய்துகொள்ள எண்ணுகிறார் என்று தெரிந்த பிறகுதானே ஆத்திரம் பிறந்தது என்று கேட்டேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டாய். அடுத்த கேள்வி நான் கேட்டது உன் ஆத்திரத்தைக் கிளப்பி நான் அடையப் போகும் இலாபம் என்ன என்பது. அதற்குப் பதில் கூற வேண்டிக்கொள்கிறேன். பதில் கூறாவிட்டால் போகிறது! அக்கா கொஞ்சம் யோசித்துப்பார் நீயாக, தனியாக இருக்கும் போதாகிலும்!" என்று தங்கம் சொன்னாள். என் கோபம் அதிகரித்தது. "என்ன இருக்கிறது யோசிக்க! சிறு பிள்ளைகள் தும்பியைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை அவர்கள் விளையாட்டு என்று எண்ணுகிறார்கள். அது போல நீ என் வாழ்விலே நஞ்சு கலந்துவிட்டு, அது சர்வ சாதாரண விஷயம் என்று எண்ணுகிறாய். தைரியமாக என்னையே கேள்வி கேட்கிறாய். என் வாழ்வைப் பாழாக்கப் பார்க்கிறாய். என் உள்ளத்திலே இருக்கும் சந்தோஷத்தை அழிக்கிறாய். இது தெரியவில்லையா உனக்கு. இதை யோசித்து வேறே பார்க்க வேண்டுமா நான். நீ சுகப்பட்டு, சந்தோஷப்பட்டு இருக்க எண்ணங்கொண்டு, என் வாழ்வைக் குலைக்கிறாய்" என்று சொன்னேன். தங்கத்தின் புன்னகை, என்னை ஈட்டிபோல் குத்திற்று. அவள் தந்த பதிலோ பளிச்சென்று கன்னத்தில் அறைவது போலிருந்தது.

     "அக்கா! அவரவர்கள் தங்கள் தங்கள் வாழ்வு சுகமாக, சந்தோஷமாக இருக்கவேண்டுமென்றுதான் எண்ணுவார்கள், அது தவறல்ல! நானும் அதுபோல எண்ணிடுவதிலே குற்றம் இல்லை. ஆனால் ஒரு விஷயத்தை யோசிக்காமலே நீ பேசுகிறாய். நானும் சந்தோஷமாக இருக்கவும் நீயும் சந்தோஷமாக இருக்கவும் முடியாதா? உன் வாழ்வைக் கெடுத்துத்தானா நான் சுகம் தேடிக் கொள்ள வேண்டும்? ஏன் அக்கா, அதை எண்ணிப் பார்க்கவில்லை நீ?" என்று கேட்டாள்.

     "எப்படி முடியும்? நீதான் என் கணவருக்கு மனைவியாகி, மனமகிழ்ச்சி தேடிக்கொள்ள முனைந்து விட்டாயே! சக்களத்தியாகக் கிளம்பிவிட்டு, சாவதானமாகப் பேசிக் கொண்டும் இருக்கத் துணிகிறாய். தங்கம்! இதோ பார். நீ சுகப்படுவதற்காக என் வாழ்விலே வேதனையை அனுபவிக்க வேண்டுமா? ஏனடி உனக்கிந்த கெடுமதி?" என்று பதைபதைத்துக் கேட்டேன்.

     "அக்கா! நான் சுகமடைய, வாழ்விலே சந்தோஷம் தேட ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொள்ளக்கூடாது! உலகிலே ஆடவரே இல்லையா? இருக்கும் ஆடவர் அத்தனை பேரும் தங்கம் குரூபி என்று தாலி கட்ட மறுத்துவிட்டார்களா? நான் உன் தங்கைதானே! அழகற்றவளல்லவே! செல்வமும் சீரும் நமக்குள் சமமாகத்தானே இருக்கிறது! நான் வேறொருவரைக் கலியாணம் செய்துகொண்டு இன்பமாக இருக்கலாம்; அது போலவே நீயும் இருக்கலாமல்லவா?" என்றாள்.

     "என்னடி இது! நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய்? உன்னை மணம் செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் இராது. என்னிலும் நீதான் அழகி! அதைக் கண்டு பூரித்த கண்கள்தானே இவை! உன் வயதும் வசீகரமும் வளர வளர, என் மனதிலே, உன் மீது அன்பும் வளர்ந்தபடிதானே இருந்தது. உனக்குத் தக்கமணாளன் கிடைத்துத் திருமணம் நடக்க வேண்டும், கண்ணால் கண்டுகளிக்க வேண்டும் என்று தானே நான் ஆவலாக இருந்தேன். நீதானே என் ஆசையிலே கல் வீசத் துணிந்தாய். யார் வேண்டாமென்றார்கள், நீ ஓர் மணாளனைத் தேடிக் கொள்வதை?" என்று நான் கேட்டேன்.

     "இருவருமே ஒரே விதமான கேள்வியை கேட்டுக்கொள்கிறோமே அக்கா! அதற்குப் பதில்தான் என்ன? அழகு, இளமை, செல்வம், வசதி எல்லாம் இருக்கிறது. வேறு ஒருவரைக் கலியாணம் செய்துகொண்டு சுகப்படலாம்; சந்தோஷமாக இருக்கலாம்; நீ துக்கப்பட்டு அதனாலே நான் சந்தோஷப்பட வேண்டும் என்பதில்லை. இருவருமே சந்தோஷமாக இருக்கலாம். அதற்கான சௌகரியத்துக்குக் குறைவில்லை! ஆனால் அது முடியவில்லை! ஏன் அக்கா?" என்று மறுபடியும் கேள்வி போட்டு மடக்கினாள்.


     "ஏனா! பேராசை பிடித்த என் புருஷர், பணத்தாசைக்கு அடிமையாகி, நமது குடும்பச் சொத்திலே உனக்கு வரவேண்டிய பாதி பாகம், நீ வேறு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால், அவனுக்குப் போய்விடுமே என்று எண்ணி உன்னையும் தானே கலியாணம் செய்து கொண்டு, மொத்தச் சொத்தையும் தானே அடைய வேண்டுமென்ற கெட்ட எண்ணங் கொண்டு, உன் மீது வலை வீசினார்; நீ அதிலே விழுந்தாய். இருவரும் சதிசெய்து என்னை இக்கதிக்குள்ளாக்கினீர்கள். பேய் பிடித்தவள் பித்தம் பிடித்தவள் என்று தூற்றினீர்கள்" என்று ஆத்திரமும் அழுகையும் பொங்கும் குரலிற் சொன்னேன்.

     "நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் மறைக்கவில்லை. அத்தான், பணத்தாசை பிடித்துத்தான் என்னை மணம் செய்து கொள்ளத் தந்திரமெல்லாம் செய்தார். அவர் எண்ணத்தையும் ஏற்பாட்டையும், தெரிந்துதான் கூறியிருக்கிறாய்! ஆனால், முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறாயே அக்கா! அத்தான், தன் சுயநலத்துக்காக, இந்தச் சூது செய்திருக்கிறார். அது விளங்கிவிட்டது. நானும் அதனை மறைக்கவில்லை. ஆனால், அந்த ஏற்பாட்டுக்கு அவருடைய தந்திரத்துக்கு, சூதுக்கு, நான் ஏன் சம்மதிக்கிறேன்? அதற்கு காரணம் என்ன? அதை யோசித்தாயா?" என்று கேட்டாள்.

     "வலையில் வீழ்ந்துவிட்டாய்" என்று நான் பதில் சொன்னேன். ஆனால், எனக்கே, அந்தப் பதில் திருப்திகரமாக இல்லை. அவள் இலேசாகச் சிரித்துவிட்டு, "அத்தானால், தன்னிடம் வியாபார நிமித்தமோ பஞ்சாயத்துக் காரியமாகவோ வருபவர் மீது வலைவீச முடியும்! அக்கா! என்னைச் சரியாகப் பார்த்து விட்டுச் சொல்லு. என் மீது அவரால் முடியுமா? அவர் அந்தஸ்தின் அறிகுறி, செல்வத்தின் சின்னம், கௌவரமான நடை, நொடி பாவனை, அவரால் ஊரிலே மதிப்புத் தேடிக் கொள்ள முடியும். அவ்வளவுதான் முடியுமே ஒழிய, ஒரு இளமங்கையின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள அவரிடம் என்ன இருக்கிறது! அவர் வலை வீசினார். அதிலே நான் வீழ்ந்தேன் என்று கூறுகிறாய், என்னை அறிந்துகொள்ளாமல். உன் தங்கை ஏமாளியல்ல; அத்தான் மங்கையரை மயக்கிடும் மாந்தரீகரல்ல! அவர் வலைவீசியது என் மீதுமல்ல, சொத்தின் மீது; ஆனால் அந்தச் சொத்தைக் காட்டி அவரைச் சொக்கவைத்து என் அருகே வரும்படி செய்தவள் நான்; வலையை நானும் வீசினேன் அவர் மீது! ஆனால் அவருக்காக அல்ல! அவரிடம் மயங்கி அல்ல! உலகிலே அவரே கடைசி ஆடவர் என்பதற்காக அல்ல! உன் வாழ்வை வேதனையுள்ளதாக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல! எனக்காக - அக்கா - என் உயிருக்காக - நான் பிழைக்க சோதிடன் குறிப்பிட்ட பேராபத்திலிருந்து தப்ப" என்றாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:04 pm

ரங்கோன் ராதா

12

     உயிருக்கு ஆபத்து வரும் என்று எவனோ ஒரு சோதிடன் சொன்னதைக் கேட்டு, மருண்டு போனதாகவும், அந்த மருட்சியின் காரணமாகவே, என் கணவரைத் தன் புருஷராக்கிக் கொள்ளத் துணிந்ததாகவும், என் தங்கை என்னிடம் சொன்னது கேட்டு, நான் சிரித்தேன். சிரித்தேனே தவிர கொஞ்சம் பரிதாபம் பிறந்தது. "போடி! பைத்தியக்காரப் பெண்ணே!" என்று கேலி செய்தேன். அவளோ திருப்தி பெறவில்லை. சோகத்துடனேயே பேசலானாள், "அக்கா! சோதிடன் குறிப்பிட்ட ஆபத்திலிருந்து தப்புவதற்கும் அத்தானைக் கலியாணம் செய்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என்று நீ கேட்கவில்லையே, ஏன்? அது உனக்கு ஆச்சரியமாக இல்லையா?" என்று தங்கம் கேட்டாள். நான் எவ்வளவு அசடு பார் தம்பி? நானாகக் கேட்டிருக்கத்தானே வேண்டும் அந்தக் கேள்வியை? கேட்கவேண்டுமென்று தோன்றவே இல்லை. அவள், தான் கிளப்பிய கேள்விக்குத் தானே பதிலும் கூறிவிட்டாள்.


     "அக்கா! கன்னி கழியாமல் நான் இறந்துபோனால் குடும்பத்துக்கு ஆகாது. ஆகவே, இறந்துபோகு முன்பு, கலியாணம் செய்து கொண்டாக வேண்டும். வேறு யாரையேனும் மணம் செய்துகொண்டு, அவர்கள் மனதை உடைக்க நான் இஷ்டப்படவில்லை. அத்தான் கொஞ்சம் அழுத்தமான நெஞ்சுள்ளவரல்லவா! நான் இறந்துபோனால் அவர் சகித்துக்கொள்ள முடியும். மேலும், நீ இருக்கிறாய். ஆகவே தான், நான் அத்தானைக் கலியாணம் செய்து கொள்ளத் தீர்மானித்தேன். இதை நீ நம்பினாலும் சரி, நயவஞ்சகம் என ஒதுக்கினாலும் சரி, எனக்குக் கவலை இல்லை. என் கவலை எல்லாம் இறக்கும்போது நான் கன்னியாக இருந்து குடும்பத்துக்கு நாசம் ஏற்படும் நிலை வரக் கூடாது என்பதுதான்" என்று சொன்னாள்; இரண்டோ ர் சொட்டுக் கண்ணீர் என் விழிகளிலே இருந்து கிளம்பிற்று. ஒரு இளம் பெண் சொந்தத் தங்கை அவள் எவ்வளவு கெட்ட நினைப்புக்காரியாகத்தான் இருக்கட்டும்; அவள், தான் சாக நேரிடும் என்று தன் வாயாலே கூறினால், எப்படி அதைக் கேட்டுச் சகிக்கமுடியும். தங்கமோ அசடல்ல, புத்தி உள்ளவள்; புத்திக் கூர்மை என் வாழ்வையே துளைக்குமளவு இருந்தது அவளுக்கு. அவள் பெயரைச் சொன்னாலே எனக்கு ஆத்திரம் பிறக்கும். இருந்தும், அன்று அழுகுரலில் அவள் சொன்ன சேதி கேட்டபோது என் மனம் என்னவோ பாகாகிவிட்டது. என்ன கூறியாவது அவளைத் தேற்றவேண்டும் என்று துடித்தேன். என் மனதிலேயே இரண்டு வகையான எண்ணங்கள் ஏககாலத்திலே கிளம்பித் தீரவேண்டிய நிலை. அவளுக்குத் தைரியம் தர என்ன கூறுவது என்று யோசிக்க வேண்டி இருந்தது. அதே சமயத்தில், அவள் கூறுவது உண்மையா, நடிப்பா; நடிப்பாகவும் உண்மையாகவும் இல்லாவிட்டால், ஒரு சமயம் யாராவது சோதிடன் உண்மையிலேயே ஏமாளியாக்கிவிட்டானா! அப்படியும் இருக்குமானால், சோதிடன் தானாகவே இக் காரியத்தைச் செய்தானா, அல்லது யாராவது தூண்டிவிட்டார்களா? ஒரு வேளை, என் கணவரே இதற்குக் காரணமோ? எவனாவது சோதிடனை ஏவி விட்டுத் தங்கத்தின் மனதிலே, பயத்தைத் தூவ வைத்தாரோ? அவர் எதற்கும் துணிந்தவராயிற்றே. அவர் மட்டுமா! பெண்கள் விஷயத்திலே, ஆடவரில் பெரும்பாலோர் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். உத்தமபுத்திரர் கூட, இந்த ஒரு விஷயத்திலே மட்டும் ஏனோ எவ்வளவு தலைகீழ் வாதம் புரியவும், தகாத முறையைக் கையாளவும் எண்ணம் பிறக்கிறது. தர்மத்தின் காவலரென்றும், சாது சன்மார்க்கி என்றும் பெயரெடுத்த தர்மபுத்திரர் கூட திரௌபதி விஷயத்திலே எப்படி நடந்து கொண்டார். ஆணழகன் அர்ஜுனனை அடைந்தோம், வில் வீரன் விஜயன் நமக்கு மாலையிட்டான், இனி நமக்கு இன்ப வாழ்வுக்கும் கௌரவத்துக்கும் என்ன குறை என்றுதானே திரௌபதி எண்ணி இருந்திருப்பாள். இதனை, எவ்வளவோ நுட்பமான தத்துவங்களை எல்லாம் ஆராய்ந்தறியும் ஆற்றல் படைத்த தருமர் தெரிந்து கொண்டிருக்க மாட்டாரா! ஆனால் என்ன செய்தார்? தம்பிக்கு மட்டுமல்ல; தனக்குமல்லவா திரௌபதியைத் தாரமாக்கிக் கொண்டார். கர்ப்பிணியைக் கானகத்துக்குத் துரத்திய இராமரை, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்றல்லவா கூறுகிறார்கள். அப்பா! பெண்கள் விஷயம் என்றாலே, உத்தமர்கள், தத்துவம் தெரிந்தவர்கள், தபோதனர்கள், திரு அவதாரம் செய்பவர்கள் என்பவர்களெல்லாங்கூடத் தவறு செய்தே இருக்கிறார்கள்.


     ரங்கோனில் ஒரு நாள் ஒரு வேடிக்கை நடந்தது கேள். நாயுடு இங்கே இன்று துன்புறுத்தினாரல்லவா, அதுபோல, அங்கேயும் செய்வதுண்டு. ஆனால் சில சமயங்களிலே தந்திரமாகவும் நடப்பார். ஒரு நாள் 'குஷாலாக' இருக்கப் பணம் தேவைப் பட்டது. கேட்டார்; இல்லை என்றேன். உண்மையிலேயே இல்லை. ஆனால் அவர் தம் நண்பர்களிடம் வாக்களித்தார் போலிருக்கிறது; ஆகவே என் கழுத்துச் சங்கிலியைக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தினார், அடகுவைக்க. நான் மறுத்தேன். அவர் கோபித்துப் பார்த்தார். நான் பிடிவாதமாகவே இருந்து விட்டேன். என்ன செய்தார் தெரியுமோ? பாசாங்கு! பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கரங்களால் மூடிக்கொண்டு தேம்பலானார். கொஞ்சநேரம் அதனைக் கவனியாமல் இருந்து பார்த்தேன், முடியவில்லை. "இதென்ன சனியன்! ஏன் அழுது தொலைக்கிறீர்கள்" என்று கேட்டேன். "ஒன்றுமில்லை. உனக்கென்ன என் விதி விட்ட வழிப்படி நடக்கட்டும்" என்று பலப்பல கூறினார். நெடுநேரத்துக்குப் பிறகு, "ரங்கம்! இன்று ஒரு பெரிய ஆபத்திலே சிக்கிக் கொண்டேன். ராதா, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி கேட்டது. அதை வாங்கக் கண்ணாடி கடைக்குப் போனேன். அங்கே ஒரு அருமையான பெரிய நிலைக்கண்ணாடி, நாலு அடி உயரம், இரண்டடி அகலம் இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது ஒரு அலங்காரப் படிகட்டின் மீது வைக்கப்பட்டிருந்தது. நான் அதைச் சரியாகக் கவனியாமல், அந்தப் படியைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கி விட்டது. பயத்தால் நான் அசைவற்று நின்றேன். கடை ஒரு பர்மாக்காரனுடையது. அவன் தீப்பொறி பறக்கும் கண்களுடன் என்னை நோக்கி வந்தான். கும்பிட்டேன். கூத்தாடினேன். 300 ரூபாய் தந்தாக வேண்டும், எடு என்றான். இன்று இரவு கொடுத்து விடுகிறேன் என்று சத்யம் செய்துவிட்டு வந்தேன். நாளைக் காலையிலே அவனுடைய கத்திக்கு நான் பலியாக வேண்டும். என் விதி அப்படி இருக்கும்போது என்ன செய்வது" என்று கூறிக் கோவென அழுதார். மறு வார்த்தை பேசாமல் சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தேன். ஏழு நாட்களுக்குப் பிறகே, அவர் அன்று சொன்னது பொய் என்பது தெரிந்தது. வருத்தப்பட்டேன்; வயிறு எரிந்து திட்டினேன். மறு இரவு நாங்கள் மூவரும் நாடகம் பார்க்கச் சென்றோம், வள்ளி கல்யாணம். தமிழ்நாட்டுப் பிரபல நடிகர்கள் என்று விளம்பரம் அன்று நல்ல வசூலைக் கொடுத்தது. நாடகத்திலே, முருகன் வேடுவப் பெண்ணை யானையைக் காட்டி மிரட்டும் காட்சி நடக்கும்போது, நாயுடு என்னைக் குறும்புத்தனமாகப் பார்த்துச் சொன்னார், "ரங்கம் என்மீது பிரமாதமாகக் கோபித்துக் கொண்டாயே, இதோ பார், சாட்சாத் முருகன் கூடத்தான், யானையோ, பூனையோ எதையோ காட்டி, எதைப் பற்றியோ பேசி, வள்ளியைத் தன் வழிக்குக் கொண்டு வருகிறார். இது சகஜமான காரியம்" என்றார். உண்மைதான்; ஆண்களே அப்படித்தான் என்று அன்றும் சொன்னேன்; இன்றும் சொல்கிறேன். உன் அப்பா சுபாவத்திலேயே தந்திரக்காரர், அதிலும் சுயநலம். எனவே, எவனையாவது சோதிடனைத் தயார் செய்து தங்கத்தின் மனதிலே மரண பயம் ஏற்படும்படி செய்திருப்பாரோ என்று எண்ணினேன்.

     இப்படி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை ஏக காலத்தில் கொண்டதால், தெளிவான நிலையே கெட்டு விட்டது. வீண் பயம் - பைத்தியக்காரத்தனம் - சோதிடம் முழுப் பொய் - இதை எல்லாம் நம்பாதே - என்று ஏதேதோ கூறினேனே தவிர, தங்கம் தந்த தகவலை மறுத்துக்கூற என்னால் முடியவில்லை. என் தங்கையின் உயிருக்கு ஆபத்து என்று அவளே கூறிடக் கேட்டால் என்ன தான் பகையிருந்தாலும், மனம் பதறாதா? தங்கம் என் குழப்பத்தைத் தெரிந்துகொண்டாள்.

     நான் அவள் விஷயமாகப் பரிதாபப்பட்டேனே தவிர, எப்படி என் கணவரை அவளுக்கு மணம் முடிக்க மனம் வரும். எனவே, நான் வேறு ஏதேதோ பேசி அவளுடைய கவலையைப் போக்கப் பார்த்தேன். அவளும் என்னை வற்புறுத்தவில்லை. கொஞ்ச நேரம் சென்றதும், வேலைக்காரியை வண்டி கொண்டு வரச்சொல்லி, நான் வீட்டுக்குப் புறப்பட்டேன். வாசற்படி வரை வந்து, என்னைத் தங்கம் வழியனுப்பி வைத்தாள்.

     வம்பு பேசின அந்தச் சோதிடனைக் கண்டுபிடித்து, அவனைத் தூண்டிவிட்டவர் உன் அப்பாதானா என்பதைக் கண்டறிய வேண்டுமென்று ஆசை கொண்டேன். ஆனால் நேரமாகிவிட்டது. லேடி டாக்டர் லாசரஸ் வீட்டுக்கு வந்திருப்பார்களோ என்ற எண்ணம் வேறு. எனவே சோதிடன் விஷயமாகப் பிறகு பார்த்துக் கொள்வது என்று தீர்மானித்து, நேரே வீட்டுக்குச் சென்றேன். உள்ளே நுழையும்போதே, முன்பு கொண்டிருந்த எண்ணத்தின்படி, அவரிடம் மல்லுக்கு நிற்பது என்ற துணிவுதான். அவர்தான், சோதிடனைக் கொண்டு தங்கத்தநயும் ஏய்த்திருக்கவேண்டும் என்ற எண்ணமும் குடிபுகுந்ததால், வலியவேணும் சண்டைக்கு நிற்பது என்ற எண்ணம் மேலும் வலுத்தது.


     "வாங்கோ! என்னம்மா, நம்மை, இப்படிக் காக்கப் போட்டுப் போயிட்டிங்க" என்று லாசரஸ் கேட்டார்கள். லேடி டாக்டர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர் உலவிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் சீறி விழுவார். உடனே நாமும் பதிலுக்குப் பதில் சுடச் சுடத் தருவது என்று நினைத்தேன். "லேடி டாக்டரை இங்கே வரச்சொல்லி விட்டு எங்கே போய்விட்டாய்? அந்த அம்மாள் வந்து எவ்வளவு நேரமாயிற்று. இப்படியா அவர்களைக் காக்கப் போடுவது" என்று கேட்பார், அலட்சியமாக ஏதேனும் பதில் கூறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவரோ நான் எதிர்பார்த்தபடி ஒன்றும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, லேடி டாக்டரிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே போய்விட்டார். நான், லாசரசிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். லேடி டாக்டர் பிறகு என்னைப் பரிசோதித்து, "உடம்புக்கு ஒன்றுமில்லை. ஆனால் சுகப்பிரசவத்துக்குத் தக்க மருந்தை இப்போதிருந்தே தந்து விடுகிறேன். சாப்பிட்டுக் கொண்டிருங்கள்" என்று அன்புடன் கூறிவிட்டுச் சென்றார்கள்.

     வெளியே போனவர், இரவு நெடுநேரத்துக்குப் பிறகே வந்தார். எனக்குத் தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டுதான் இருந்தேன். அவர் கதவைத் தட்டினதும் பழைய வழக்கம் காரணமாகச் சரேலென எழுந்தேன், போய்க் கதவைத் திறக்க வேண்டுமே என்று! ஆனால் அறை வாயிற்படிவரை சென்றதும், நான் கையாள வேண்டிய புதிய முறை கவனத்துக்கு வந்தது. உடனே வேலைக்காரியை அதட்டிப் போய்க் கதவைத் திறக்கச் சொல்லிவிட்டு, நான் படுக்கை அறை சென்றேன். கதவைத் தாளிடவில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:07 pm

ரங்கோன் ராதா

13

     கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை; அவரும் உள்ளே வரவில்லை; கூடத்திலே படுத்துக் கொண்டார். குறட்டை விடும் சத்தம் கேட்டது. எனக்குப் பிரமாதமான கோபம்; என்ன செய்வது; உன் அப்பா என்ன காரணத்தாலோ, ஒரு வார்த்தை பேசவில்லை. வம்புக்குத் தயாராக நான் இருந்தது பயனில்லாமற் போய்விட்டது. என் மனதிலே இருந்த கொதிப்பைத் தணிக்கக் கூடவில்லை. அந்தச் சமயத்திலே, எனக்குத் துளசி மீது சென்றது நினைவெல்லாம். அவள் மட்டும் எனக்குத் துணையாக இருந்தால், எவ்வளவோ நிம்மதியாக இருக்குமே என்று எண்ணினேன். அந்தக் கிராமத்திலே, எனக்கு நாள் போவதே தெரியாமல், அவ்வளவு இனிமையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவள் இப்போது இருந்தால் கோபம், சோகம் எல்லாவற்றையும் விரட்டி அடிப்பாள். ஏன்! என் புருஷருக்குக்கூடப் புத்தி புகட்டக் கூடியவள் துளசி. கேலியாகப் பேசியே சித்திரவதை செய்துவிடுவாள். அவளோ புரட்டனிடம் வாழ்க்கைப்பட்டுக் கிராமத்தில் இருந்தாள். நானோ, புதுமாப்பிள்ளையாக வேண்டுமென்று திட்டமிட்டு வேலை செய்யும் புருஷனோடு சச்சரவு செய்து கொள்ளக் கூடச் சௌகரியம் கிடைக்காமல் படுத்துப் புரண்டு கொண்டிருந்தேன்.


     ஒரு சமயம், கடையிலே அவருக்கு ஏதேனும் விசாரம் தரக்கூடிய சம்பவம் நடந்ததோ - அதனால்தான் வாய் திறவாமல் படுத்துக் கொண்டாரோ என்று யோசித்தேன். ஒரு வேளை, வேலை அதிகமோ, அலுப்பினால் அயர்ந்து தூங்குகிறாரோ என்றும் நினைத்தேன். சரி! எந்தக் காரணத்தாலே தூங்கினாலும் என்ன, தூக்கம் மேலிட்டிருக்கும்போது சந்தடி செய்தால் சாதுவுக்குக்கூட அல்லவா கோபம் பிரமாதமாக வரும். அவரோ அலுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய தூக்கத்தைக் கெடுத்துப் பார்ப்போம். கோபித்துச் சண்டைக்கு வருவார்; பதிலுக்குப் பதில் வட்டியும் சேர்த்துத் தருவது என்று எண்ணினேன். உடனே என்ன காரியம் செய்தால், அவருக்குத் தூக்கம் கெடும் என்ற யோசனை. துளசி இருந்திருந்தால் கதை சொல்லச் செய்யலாம்; எதையாவது புத்தகம் படிக்கச் சொல்லலாம். இடையிடையே, அவளுடன் உரத்த குரலிலே பேசிச் சிரிக்கலாம். அந்தச் சிரிப்பும் பேச்சும், அவருடைய தூக்கத்தைக் கெடுக்கும்! கோபம் பிறக்கும். துளசி இல்லையே! வேலைக்காரி இருந்தாள்! அவளிடம் நான் அதிகமாகக்கூடப் பேசுவது கிடையாது. அவள் கதை சொல்லத் தெரிந்தவளோ இல்லையோ என்று சந்தேகம். சரி! எதற்கும் அவளை எழுப்பிக் கதை சொல்லச் சொல்வது, தெரியாது என்றால், நான் சொல்கிறேன் கேளடி என்று நாமே கதை சொல்வது என்று தீர்மானித்தேன். அவள் கொஞ்சத்தில் எழுந்திருக்கவில்லை. எழுந்து மட்டும் என்ன பலன் - நான் நினைத்தபடிதான் இருந்தது. "கதையா, தெரியாது!" என்றாள்.

     "தூக்கம் வரவில்லையடி..."

     "மத்தியானம் தூங்கினீர்களே அதனால்..."

     "ஏன் தூக்கம் வரவில்லை என்றா உன்னைக் கேட்டேன்? தூக்கம் வரவில்லை, என்ன செய்வது இப்போது?"

     "படுத்துக்கொண்ட சும்மா கண்ணை மூடிக்கொண்டிருந்தா, தூக்கம் கொஞ்ச நேரத்திலே தன்னாலே வந்துவிடும்."

     "போடி மூதேவி! ஏதாவது ஒரு கதை சொல்லடி. கேட்டுக் கொண்டே இருந்தா தூக்கம் வந்துவிடும்."

     "எனக்கென்ன கதை தெரியுங்க? முன்னமேயே சொன்னேனுங்களே, கதை தெரியாதுன்னு."

     "போடி புளுகி, இவ்வளவு பெரிய பொம்பளைக்குக் கதையா தெரியாது."

     "நீங்க ஒரு வேடிக்கை. ஏதாவது கதை சொல்றதுதான் கேட்கறதுதான். அதெல்லாம் இப்போ கவனமா இருக்கும். இப்ப என் சமாசாரமே பெரிய கதை! நான் வாழ்ந்த கதையும் வதைகிற கதையும், அந்தப் பாவி என்னைத் தொட்டுத் தாலி கட்டின கதையும், மொந்தைக் குடியனாகி, என் கால் கொலுசு, கம்மல், அட்டிகை, காப்பு எல்லாவற்றையும் கடன்காரன்கிட்டே அழுத கதையும் இதுதான் இப்ப எனக்குத் தெரிஞ்ச கதை."

     "அழுமூஞ்சி! அழுமூஞ்சிடி நீ! போகட்டும், உன் கலியாணக் கதையைச் சொல்லு கேட்கலாம்."

     "நீங்க ஒரு வேடிக்கை. நான் என்ன தொரபதையா, சீதையா, என் கலியாணத்துக்கு ஒரு கதை இருக்க. பொறந்தேன், பொம்பளையா வளர்ந்தேன். வயசு வந்ததும் ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுத்தான் எங்க அப்பன். தாலி கட்டின அண்ணைக்கு மறுநாளே அவன் ஆரம்பிச்சிவிட்டான், அதிகாரம் பண்ண. நின்னா உதை, குனிஞ்சா குத்து, இவ்வளவுதான் கதையே பொம்பளை கதை இவ்வளவுதானேம்மா இருக்கும். அதிலேயும் ஏழை வீட்டுக்கதை ராஜா கதையாட்டமா இருக்கும்! எனக்கென்ன சொயவரம் நடந்துதா, கதை இருக்க."

     "போடி திருடி, கதையே தெரியாதுன்னு சொன்னயே, இப்ப நீ பேசறதே கதை சொல்றமாதிரியாகத்தான் இருக்கு, கிடக்கட்டும்! உன்னை உன் அப்பா, கலியாணம் செய்து கொடுக்கறப்போ, உன்னைக் கேட்டாரா?


     "என்னையா! என்னை ஏன் கேட்கவேணும்? இது என்ன வழக்கம்? அவரே பார்த்தாரு, எனக்கு வயசாயிடுச்சு. அவ்வளவுதானே. யாரையோ புடிச்சாரு, ஐயரை நாள் கேட்டாரு, கலியாணத்தை முடிச்சாரு; அவ்வளவுதான். வேற என்னை என்ன கேட்டாரு, எந்தப் பெண்ணைத்தான் அவங்க அப்பா கேட்டாரு? அப்பேர்ப்பட்ட சீதையைக்கூட நீ இராமரைக் கலியாணம் செய்துக்க இஷ்டந்தானான்னு அவங்க அப்பா கேக்கலியே! அந்தம்மா புண்யவதி, ஆகையாலே அவங்க குணத்துக்குத் தக்க மாதிரியாய்ப் புருஷன் வந்தாரு. பொம்பளைங்க விஷயம் தாயம் போடற மாதிரியாகத்தானேம்மா."

     இப்படி, நானாக அவளிடம், பேசிப் பேசிக் கிளறியும் பார்த்தேன்; பலன் இல்லை. அவளிடம் அந்தப் பேச்சு பேசும் போது கூட, உரக்கப் பேசியும் இடையிடையே பலமாகச் சிரித்தும் பார்த்தேன். அவருடைய தூக்கம் அதனால் கெடட்டும் என்பதற்காக. அதுவும் பயன் தரவில்லை. அவருடைய குறட்டைச் சத்தம் அதிகரித்தது, குறையவில்லை. நெடுநேரத்துக்குப் பிறகு, வேலைக்காரி தானாக, 'ஒரு கதை நீங்கதான் சொல்லுங்களேன்' என்றாள். எஜமானியைக் கதை சொல்லும்படி கேட்பது மரியாதை அல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது. நான் வேண்டுமென்றே கதைகட்டிச் சொன்னேன்; பெண்ணைக் கொடுமை செய்யும் ஆணைப்பற்றி; அந்த ஆடவன் பிறகு பலமாதிரி கஷ்டங்களை அனுபவித்து பலரால் இம்சிக்கப்பட்டு, கடைசியில் எந்த மனைவியை இம்சித்தானோ அவளுடைய காலிலே விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று என் ஆசையைக் கதையாக்கிச் சொன்னேன். நான் பெண்களை, ஆண்கள் கொடுமை செய்வதைப்பற்றிச் சொன்னபோதெல்லாம், சுவாரஸ்யமாக இருக்கும் வேலைக்காரியின் பேச்சு.

     "அவள் பாபம் சாது. வீண் ஜோலிக்குப் போகிறவளல்ல. தன் புருஷனே தெய்வம் என்று எண்ணிக்கொண்டு, அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துகொண்டிருந்தாள். அவள் அவ்வளவு அன்பாக இருந்தாள். அவள் புருஷனோ அவளுடைய அன்பை மதிக்கவில்லை; அவளைப் பிரியமாக நடத்துவதில்லை; எப்போதாவது கொஞ்சிக் குலாவுவான்; குச்சிநாய்க் குட்டியிடம் கோடீஸ்வரன் எப்போதாவது கொஞ்சமாட்டானா, அதுபோல. ஆனால் அவனுடைய மனமோ எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தது" என்று நான் சொல்வேன். உடனே சூதுவாது அறியாத வேலைக்காரி, "படுபாவி! கல்நெஞ்சுக்காரன்" என்று கதையிலே வரும் ஆணைச் சபிப்பாள், திட்டுவாள். உடனே நான் "அதோ கூடத்திலே இருக்கிறாரே, ரொம்ப யோக்யஸ்தரோ அவர்" என்று சொல்வேன். வேலைக்காரியோ பதில் பேச மாட்டாள். கதையைச் சொல்லும்படி தூண்டுவாள்.

     "இந்த மாதிரியான ஆண்களை வழிக்குக் கொண்டுவர முடியும். பெண்பிள்ளைகள் பைத்தியக்காரத்தனமாக இது வரையில் இருந்துவிட்டார்கள். ஆண் பிள்ளையின் விளையாட்டுப் பொம்மையாகிவிட்டார்கள். அவர்களுக்கும், மானம், மரியாதை, சூடு, சொரணை உண்டு என்று காட்டியிருக்க வேண்டும்" என்று நான் காரசாரமாகச் சொன்னபோது அவள் பயந்தே போனாள். பிசாசு பேசுகிறது என்று கூற எண்ணிக் கொண்டிருந்திருப்பாள். பெருமூச்சுடன், "என்னம்மா செய்வது? தொட்டுத் தாலிகட்டினவன் இட்ட வேலையைச் செய்வது தானே நம் விதி?" என்று அவள் கூறியபோது, நான், "போடி! பெண்களும் சரி, ஆண்பிள்ளைகளும் சரி, அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தாலி கட்டினால் என்னடி யம்மா! அது என்ன மாட்டுக்கு மூக்குக் கயிறு போடுவது போலவா! தாலி கட்டினான் என்றால், ஒரு வீட்டுப் பெண்ணை, சுகமாக, கௌரவமாகக் காத்து ரட்சித்து வருகிறேன் என்று சத்தியம் செய்து கொடுத்தது என்றுதானே அர்த்தம். நேர்மாறாகப் புருஷன் நடந்துகொண்டால், துரோகம் செய்தால், அவன் சண்டாளன் தானே?" என்று கோபமாகச் சொன்னேன். என்ன பதில் சொல்வது என்று தோன்றாமலே திகைத்தாள் வேலைக்காரி. பாவம்! அவள் புருஷனிடம் பட்ட அடியும் உதையும் எவ்வளவோ!


     "அடங்கி அடங்கிப் போனால் பயன் கிடையாதடி; அழுதாலும் பிரயோஜனம் இல்லை; அடங்காப்பிடாரி, வாயாடி, துஷ்டை என்று எவ்வளவு கெட்ட பெயர் வந்தாலும் சரி என்று துணிந்து, புருஷனின் போக்குக்கு எதிர்ப்புக் காட்டினால், ஒரு தடவை, இரண்டு தடவை அடித்துப் பார்ப்பான். உதைத்துப் பார்ப்பான், பிறகு பெட்டியிலிட்ட பாம்புதான்" என்று அவளிடம் போர்த் திட்டமே கூறினேன். அவள் மேலும் திகைத்துப் போனாள். "இதோ பாரடி; என் வீட்டுக்காரர்கூட என்னை என்னவோ வாய் செத்தவள், மிரட்டி உருட்டி அடக்கி விடலாம் என்று எண்ணிக்கொண்டு, நான் இருக்கும்போதே, வேறு ஒருத்தியைக் கலியாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறார். அந்தக் கலியாணம் நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். பார், நடக்கப் போகிற வேடிக்கையை. கலியாண மணையிலே மாப்பிள்ளைக் கோலத்தில் அவர் உட்காரட்டுமே, அப்போது தெரிகிறது, ரங்கம் எப்படிப்பட்டவள் என்று. ஆயிரம் பேர் கூடி இருக்கட்டும், அந்தக் கலியாண வாசலில். அப்படியே பாய்ந்து கலியாணத்துக்கு 'ஓமம்' வளர்த்துகிறார்கள் பார், அந்த நெருப்பை எடுத்து, அவர் கண்ணிலே கொட்டாவிட்டால், என் பெயர் ரங்கமல்லடி! பார் நடக்கப்போகிற கூத்தை!" என்று நான் ஆக்ரோஷத்துடன் சொன்னேன். நடுநிசி. எனக்கோ பிரமாதமான கோபம். அந்தச் சமயத்திலே என் பேச்சும், பார்வையும், பாவம் அந்த வேலைக்காரிக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. "ஐயோ! காளியாயி" என்று ஒரே அலறல்! நான் வாயை மூடப்போனேன், கூச்சல் அதிகரித்தது; அவரும் எழுந்து ஓடிவந்தார்.

     அலறி ஓடிவந்த என் கணவர், நான், "அடி பைத்தியமே! அடிமுட்டாள்கள் பலபேர், பிசாசு பிடித்துக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறார்களே, அதுபோலத்தானா நீயும் எண்ணிக் கொண்டாய்?" என்று கூறக்கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டு, "கர்மம்! கர்மம்!" என்று அழுகுரலிற் கூவினார். மகனே! நான் ஆனந்தம் கொண்டேன், தலையில் அடித்துக்கொண்டது கண்டு. எத்தனை தடவை நான் அதுபோல் அடித்துக்கொண்டிருப்பேன். புருஷன் இருக்கும் நாட்களிலே தலை தலை என்று தலையில் அடித்துக் கொள்வது, அவன் இறந்தால் மார்பில் அடித்துக் கொண்டு அழுவது என்றபடிதானே பெரும்பாலான பேதைப் பெண்களின் வாழ்க்கை இருக்கிறது. கொடுமைக்கு ஆளாகும்போது, கட்டினவனால் கைவிடப்படும்பொழுது, காமுகரால் தாக்கப்படும்பொழுது, கஷ்டம் தாங்கமாட்டாத வேளைகளிலெல்லாம் பெண்களுக்குத் தலையில் அடித்துக் கொள்வது தவிர வேறென்ன வழி இருக்கிறது. எத்தனையோ பெண்களுக்கு இந்த நிலை. அவ்வளவுக்கும் பரிகாரம் போல எனக்குத் தோன்றிற்று, அவர் என் எதிரே, தலையில் அடித்துக் கொண்டு நின்றபோது. பெண்ணைக் கொடுமை செய்யும் போக்கினரின் பிரதிநிதி அவர். நான் பெண் குலத்தின் சார்பிலே நின்று பழி வாங்கும் அதிகாரி. இந்த நிலைதான் ஏற்பட்டதாக எனக்குத் தோன்றிற்று. அன்றிரவு அவர் அழுதுகூட இருப்பார். நான் கேட்கமுடியவில்லையே அந்தச் சங்கீதத்தை. அவர் தெருத்திண்ணைக்குப் போய்விட்டார்.


     இந்தப் போராட்டம் சில நாட்கள் நீடித்தது. போராட்டம் என்றுகூடச் சொல்வதற்கில்லை! அவர்தான் கோழையாகி விட்டாரே! என் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்தது சில நாட்கள். அவர் ஏதோ பெரிய திட்டமிடுகின்றார். மனத்திலே அதனால்தான் இப்படி அமைதியாக இருக்கிறார்; அஞ்சி இருப்பவர்போல் காணப்படுகிறார் என்று நான் யூகித்தேன். அவருடைய முகத்தில் கவலை படியத் தொடங்கிற்று. ஏன் இராது? அடங்காப்பிடாரி நான்! அவர் என்னைக் கொடுமைப் படுத்துவதன் மூலம், என் கோபத்தை மட்டுமல்ல, மனதிலே உள்ள ரோஷத்தைக் கிளப்பிவிட்டார். அதன் வேகத்தைத் தாங்கும் சக்தி அவருக்கு இல்லை! எங்கும் எதிலும் அதுதானே நிலைமை! கட்டுக்கு அடங்கும் என்று கருதி நாம் வளர்க்கும் மிருகம், சில நேரத்தில் அடக்குமுறை, அதனால் தாங்கமுடியாத அளவு ஆகிவிட்டால், கட்டு அறுத்துக்கொண்டு ஓடவும், திருப்பித் தாக்கவும் செய்யவில்லையா? அந்த நேரத்திலே அதற்குமுன் அதே மிருகத்தைக் கட்டுக்கு அடங்கி நடக்கும்படி செய்தவனே, கிலிகொண்டு ஓடுகிறானல்லவா! மனிதனிடம், மிருக குணம் அடியோடு மாய்ந்து போகவில்லையே! என் மனம் மட்டுமா? யாருக்கும்தான், அந்தக் குணம் இருக்கும். மகனே! நான் நினைக்கிறேன், உலகிலே எவ்வளவு உபதேசம் நடைபெற்றாலும், இந்த மிருக குணம் அடியோடு ஒழிந்துபோகும் என்று கூறமுடியாது. நல்ல முறைகளால் நட்பு நியாயத்தில் அந்த மிருக குணத்தைக் குறைக்கலாம், மறைக்கலாம், தூங்க வைக்கலாம்; அடியோடு மாய்த்துவிட முடியாது. நான் அடிக்கடி எண்ணிக் கொள்வதுண்டு, வெங்காயம் வெட்டும்போது, இது பார்வைக்குக் கெட்டியான பொருளாகத்தானே இருக்கிறது; தேங்காயையாவது எடுத்துக் குலுக்கிப் பார்த்தால், உள்ளே தண்ணீர் இருப்பது தெரிகிறது; இதனைப் பார்த்தால், அப்படித் தண்ணீர் இருப்பது தெரியக் காணோமே; அப்படி இருந்தும் இதை நறுக்கினால் ஈரம் இருக்கிறதே, எப்படி என்று. ஈரம் மட்டுமா இருக்கிறது தம்பி! நமது கண்களில் இருந்து நீரைக் கொண்டு வருகிற அளவு எரியும்சக்தி இருக்கிறதே அதனிடம். நெருப்புக்கு உள்ள சக்தியும், நீருக்கு உள்ள சக்தியும் கொண்டு, தனியாக இருக்கும்போது மணம் பயன்படாமலும், மற்றவற்றுடன் பதம்பார்த்துச் சேர்த்தால் சுவையும் மணமும் தருவதுமாக இருக்கிறது வெங்காயம். நான் பெண்களின் சக்தியை அப்படித்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொள்வதுண்டு. வெங்காயச் சாறு கண்ணில் பட்டால், விழியில் நீர் வழிவதுபோல பெண்களின் கோப உணர்ச்சியும் பழிவாங்கும் எண்ணமும் கிளப்பப்பட்டுவிட்டால், எந்த ஆணும் அழுதுகொண்டுதான் இருந்தாக வேண்டும்! அவர் அழுதுகொண்டிருந்ததிலே ஆச்சரியமில்லை. அவர் என்னுடைய எதிர்ப்பை மட்டும் சமாளிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டிருந்தால், கொஞ்சம் சிரமப்பட்டாலும், வெற்றி திட்டமாகப் பெற்றுவிட முடியும். அவரோ, என் எதிர்ப்பைச் சமாளிப்பது மட்டுமல்ல, தன் ஆசையை - தங்கத்தைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்ற திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியவராக இருந்தார். நானோ அடங்க மறுத்துவிட்டேன். அத்துடன் நின்றுவிட மாட்டேன். ஊர் அறிந்தாலும் கவலை இல்லை. உரிமைக்காகப் போராடுவது, கொடுமைக்குச் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டவள் - என் ஆர்ப்பாட்டத்தின்மூலம் நான் அவருக்கு என் புதிய நிலையைத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, அவர் புதிய திட்டம் வகுத்தாக வேண்டியவரானார். தம் காரியத்தைச் சுலபத்திலே சாதித்துக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தார். நான் வெற்றிபெற்று வந்தேன் ஒவ்வொரு நாளும். நான் வெளியில் போய் வருவேன்; அவர் எங்கே போயிருந்தாய், ஏன் போய் வந்தாய் என்று எதுவும் கேட்கமாட்டார். எனக்கு இஷ்டமான பண்டம் சமைக்கப்படும். இஷ்டமான நேரத்தில் சாப்பிடுவேன். அவருடைய சௌகரியத்தைக் குறைப்பது, இப்படி ஒரு மனப் போக்கு இருந்தது எனக்கு. சிறுபிள்ளைகள் பொன்வண்டு விளையாடுகிறார்களே அதுபோல. ஒருநாள் ஒரு வேடிக்கை கேள். தெருத்திண்ணையிலே யாரோ உள்ளூர்ப் பெரிய மனுஷருடன் பேசிக் கொண்டிருந்தார். கலெக்டர் ஆபீசிலிருந்து ஆள் வந்தார்கள், உன் அப்பாவை அழைக்க. உடனே அவர், "இதோ பத்து நிமிஷத்திலே, குளித்துவிட்டு வந்துவிடுகிறேன்" என்று கூறினார். அந்தப் பேச்சு காதில் விழுந்தது; உடனே ஸ்நான அறைக்குப் போனேன். பத்துத் தடவை இருக்கும், அவர் "இன்னும் முடியவில்லையா ஸ்நானம்? நேரமாகிறதே, கலெக்டர் காத்துக் கொண்டிருப்பாரே" என்று கேட்டுக் கேட்டுப் பார்த்தார். என்னிடம் கேட்பாரா! வேலைக்காரியிடம். அவள் என்னிடம் எப்படிப் பேசுவாள்! "அம்மா! அம்மா!" என்று கூப்பிடுவாள். நான் தண்ணீர் ஊற்றிக் கொள்ளும் சத்தந்தான் அவளுக்குப் பதில்; கதவைத் தட்டுவாள்.

     "யாரது, முட்டாள்தனமாக ஸ்நான அறைக் கதவைத் தட்டுவது" என்று பதில்.

     "ஐயா..." என்று அவள் பேசத் தொடங்குவாள்.

     "என்னடி அக்கிரமம்! ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர் எப்படித் தட்டலாம்" என்று கேட்பேன்; எனக்குத் தெரியும் அவள்தான் தட்டினாள் என்று.

     "அம்மா! நான் தான் தட்டினேன், அவரல்ல; அவர் கலெக்டர் ஆபீஸ் போகவேணுமாம்" என்று அவள் கூற, "அதற்கு உத்தரவு கேட்கிறாரா என்னை" என்று நான் கேலி பேச, "இல்லையம்மா, குளித்துவிட்டுப் போக வேண்டுமாம்" என்று அவள் பேச, "சரிதாண்டி! பாதிக் குளியலோடு வந்துவிட முடியுமா" என்று நான் கோபிக்க, எங்கள் பேச்சைக் கேட்டு, அவர் திகைத்துவிட்டுக் கடைசியில், குளிக்காமலேயே அவசர அவசரமாக உடுத்திக்கொண்டு போய்விட்டார். வேலைக்காரி ஒரு 'ஐயோ பாவம்' சேர்த்துச் சேதியைச் சொன்னாள்; களித்தேன். குளித்தேன் என்று மட்டுமா கூறமுடியும் அந்த ஸ்நானத்தை!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:11 pm

ரங்கோன் ராதா

14

     மகனே! என் கஷ்டங்களை விவரமாகக் கூறிக் கொண்டே இருக்கக் காலம் போதாது. ஆனால், என்றைக்கேனும் ஓர் நாள் யாரிடமேனும் முழுக்கதையையும் கூறாவிட்டால், மனதிலுள்ள பாரம் தொலையாது. ஆகவேதான், நான் நடந்த ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிடம் இவ்வளவு விவரமாகக் கூறி வருகிறேன். மற்றத் தாய்மார்களைப்போல நானும் உன்னைப் பிறந்தது முதல் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வரும் சேவை செய்திருந்தால், உன்னிடம் எவ்வளவு பேசியிருப்பேன், அவ்வளவும் இப்போது பேசிவிடுகிறேன் என்று வைத்துக்கொள். என் வேதனையைக் குறைத்துக் கொள்ள வேறு வழி இல்லை.


     எனக்கும் என் கணவருக்கும் இடையே இருந்து வந்த பேத உணர்ச்சி நாளுக்கு நாள், நிமிஷத்துக்கு நிமிஷம் விரிந்து கொண்டே வரலாயிற்று. கொடுமை செய்வதன் மூலம் என்னை அடக்கிவிடலாம் என்று அவர் எண்ணினார். நானோ கொடுமை தாளமாட்டாமல் எதிர்க்கத் தொடங்கினேன். என் சக்தி அவருக்கு மட்டுமல்ல, எனக்கே அப்போதுதான் சரியாகத் தெரிந்தது. எங்கே ஒளிந்து கொண்டிருந்ததோ அவ்வளவு சக்தியும் அதுவரையில். என்னைக் கண்டு அவர் நடுநடுங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது கண்டு நான் களிப்படைந்தேன். என் ஆர்ப்பாட்டம், நான் சின்ன வயதிலே பார்த்த அல்லி நாடகத்தை எனக்குக் கவனமூட்டிற்று. அதனால் நான் பெருமையும் அடைந்தேன். தர்பார் நடத்துகிறோமல்லவா என்று எண்ணிப் பூரித்தேன். அல்லி நாடகமே, ஆண்களைப் பெண்கள், இஷ்டப் பட்டால் அடக்கியாள முடியும் என்பதை எடுத்துக்காட்டவே எழுதப்பட்டதோ என்று கூட நினைத்தேன். ஆனால், சில நிமிஷங்களிலே எனக்குப் பயம் பிறந்துவிட்டது. ஏனெனில், அல்லி நாடகத்தின்படி, இவ்வளவு தர்பார் நடத்தி ஆண்களை நெருங்க விடாமல் மிரட்டி ஆட்சி செய்து வந்த அதே அல்லி ராணியை, தந்திரத்தாலே, அர்ஜுனன் தோற்கடித்துவிட்டான் - தாலி கட்டிவிட்டான் - அந்தத் தாலி கட்டியான பிறகு, அல்லியின் தர்பார் நின்று விட்டது. அதுபோல, நாமும் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்கிறோம், என்ன செய்வதென்று தெரியாமல், அவர் திண்டாடும் அளவுக்கு அவரை ஆட்டிப் படைக்கிறோம் என்றபோதிலும், கடைசியில், அப்படிப்பட்ட அல்லிக்கே தோல்வி நேரிட்டதுபோல நமக்கும் நேரிட்டுவிடுமோ என்ற எண்ணம் உண்டாயிற்று, பயமும் பிறந்தது. அவரை மிரட்டுவதிலே ஏற்பட்ட சந்தோஷத்தை இந்த எண்ணம் குறைக்கத் தொடங்கிற்று. மேலும், அவர் என்ன விதமான நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்போகிறார் என்பது தெரியாததால் பயம் மேலும் கொஞ்சம் அதிகரித்தது.

     ராதா எப்போதாவது என்னிடம் பேசும்போது ஒரு விஷயம் சொல்லுவாள். இப்போது எண்ணிப் பார்த்தால் அவள் சொன்னது முற்றிலும் சரி என்று தோன்றுகிறது. "அம்மா! மக்களின் குணமும், நடவடிக்கைகளும் இயற்கையாக உள்ள சில குணாதிசயங்கள் நீங்கலாக, மற்றவைகள் அவரவர்களின் வாழ்க்கை முறை, அந்த வாழ்க்கை முறையினால் ஏற்படும் சில நடவடிக்கைகள் இவைகளைப் பொறுத்தே ஏற்படுகின்றன" என்பாள். என் வரையில் பார் தம்பி! எனக்கும் அவருக்கும் போர் மூண்ட பிறகு, புதுப் புதுக் குணங்கள் எனக்கு ஏற்பட்டுவிட்டன. அவருடன் வேறு யாராவது பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், நாங்கள் சந்தோஷமாக இருந்த காலத்திலே, நான், யார், என்ன பேசுகிறார்கள் என்று கவனம் செலுத்தமாட்டேன். சில நேரத்தில் பெருமை அடைவேன். என் புருஷரிடம் யாராரோ பெரிய மனுஷர்கள் ஏதேதோ முக்கியமான விஷயங்களைப் பேச வருகிறார்களே என்பதால். என்ன பேசுகிறார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல்கூட அதிகம் இராது. அப்படிப்பட்ட நான், அவரிடம் வெறுப்படைந்து, எதிர்த்து நடக்க ஆரம்பித்த பிறகு, யாராவது அவரிடம் பேசவந்தால் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று துடிக்க ஆரம்பித்தேன். கொடுமை புரிபவரும், பேராசைக்காரரும், நயவஞ்சகருமான இவரை ஒரு பெரிய மனிதர் என்று எண்ணிக் கொண்டு ஊரிலே சில பைத்தியக்காரர்கள் இவரிடம் நியாயம் கேட்கவும் வருகிறார்களே! குடும்பத்துக்குள்ளேயே வஞ்சகச் செயல் புரியும் இவரிடம் ஊர்ப் பஞ்சாயத்தை ஒப்படைக்கிறார்களே! இது என்ன அநியாயம்? சொந்த மனைவிக்குத் துரோகம் செய்யத் துணிந்து, கட்டுப்பாடாகக் கபட நாடகமாடுகிறார். ஒரு பெண்ணின் மனதை எவ்வளவு வேதனைப்படச் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்கிறார். ஊரார் பழிக்கவும், தூற்றவும் இழிவாகப் பேசவுமான நிலைமையைக் கூட எனக்கு ஏற்படுத்தத் துணிந்தார். இப்படிப்பட்டவருக்கு, ஊரிலே யோக்கியர் என்ற பட்டம்! இவரிடம் ஊராருக்கு மதிப்பு! இவரிடம் ஊரார் தங்கள் விவகாரங்களைக் கூறிப் பரிகாரம் தேடுகிறார்கள்! பார் தம்பி! இந்த ஊராருக்கு, அவரிடம் மதிப்பு ஏற்பட்டதற்கு ஏதாவது தக்க காரணம் உண்டா? பணம் இருக்கிறது அவரிடம் என்பது தவிர! அவர் செய்த கொடுமைகளுக்காக, ஊரார் அவரைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; திருத்தி இருக்கவேண்டும். தண்டித்துக்கூட இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பைத்தியக்காரர்கள், குற்றம் பல செய்தவரை, நியாயாதிபதியாக்கினார்கள்! அவர்கள், ஒரு மனைவியை அவளுடைய கணவன், எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம்; அது சகஜம் என்று எண்ணுகிறார்கள் போலிருக்கிறது.

     ஊராரின் போக்குக் கண்டு நான் கொதிப்படைந்தேன். இனி என் சார்பில் நின்று வாதிடவோ, நீதி கேட்கவோ, நான் தவிர வேறு யாரும் இல்லை என்று திட்டமாகத் தெரிந்து கொண்டேன். என் கண்ணீரையும் பெருமூச்சையும் யார் கவனித்தார்கள்! நீயோ கருவில் இருந்தாய், உன் தாய் தணலிலே நின்றபோது! உலகில் நான் நிர்க்கதியாக நின்றேன். விரோதிகளால் சூழப்பட்டு இருப்பதுபோலவே எனக்குத் தோன்றிற்று. இந்நிலையில் அவருடைய கட்டுக்கு அடங்க மறுப்பது தவிர, எனக்கு வேறு மார்க்கமே தெரியவில்லை. ஆகவேதான் நான், ஆர்ப்பட்டக்காரியானேன். அநேகம் பெண்கள், வாயாடி, போக்கிரி, கட்டுக்கு அடங்காதவள், புருஷனையே எதிர்த்துப் பேசுபவள் என்றெல்லாம் கண்டிக்கப்படுகிறார்களல்லவா! அவர்களெல்லாம், என்னைப் போலக் கொடுமைக்கு ஆளானவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அன்பும் ஆதரவும் தேடுகிறாள் பெண். அதற்கு மாறாக, வஞ்சனையால் அவளைத் தாக்கினால், தம்பி! அவள் எப்படிப்பட்ட உத்தமியாக இருந்தாலும், என் நிலைக்கு வந்துவிடுவாள். பெரும்பாலான பெண்கள் கேவல நிலைமைக்கு வந்ததற்கே காரணம் இதுதான்.


     கருவிலே நீ உருவாகிக்கொண்டிருந்த நாட்களிலே நான் இப்படிக் கதறிக் கொண்டிருந்தேன். கடைசியில், அவருடைய இஷ்டந்தான் நிறைவேறிற்று. திருத்தணி என்ற திவ்யக்ஷேத்திரம் கிளம்பினார்கள். தங்கத்தின் திருமண ஏற்பாட்டை ஓரளவு இரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்தார்கள். எனக்குக் காவலுக்கு வீட்டிலே ஆட்களை நியமித்துவிட்டு, அவர்கள் 'க்ஷேத்திரம்' சென்றார்கள்; திருமணம் முடிந்தது. புது மனைவியுடன், அவர் மைசூர் சென்றாராம். புது நாடகங்களைக் கண்டாராம். ஆனந்தமான வாழ்க்கையாம். இதை எல்லாம் கூடச் சென்றிருந்த ஒரு வேலையாள் எனக்கு விவரமாகப் பிறகு கூறினான். நான் கர்ப்பவதியாக இருக்கும் விஷயத்தைப் பற்றிக்கூட, அவரும் தங்கமும் பேசிக் கொண்டார்களாம். மகனே! இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது. அந்தச் சம்பவத்தை - அவள் சொன்னாளாம், என்ன இருந்தாலும் அக்காவுக்குக் குழந்தை பிறந்தால், உங்களுக்கு அவளிடம் உள்ள கோபமெல்லாம் போய்விடும் என்று. அதற்கு அந்த மகானுபாவர் சொன்னாராம், "சனியன்! என் தலைக்குக் கொள்ளியாக இருப்பதோடு விடவில்லையே! கர்ப்பம் வேறு இந்த இலட்சணத்திலே. இந்தப் பைத்தியக்காரிக்குப் பிறக்கும் குழந்தை எப்படி பிழைத்திருக்கும்! பைத்தியத்திலே அவளே கூடக் கொன்று விடவும் கூடும் - தப்பித் தவறிக் குழந்தை பிழைத்துக் கொண்டாலும், பைத்தியக்காரிக்குப் பிறந்தது பைத்தியமாகத்தானே இருந்து தொலைக்கும்" என்றாராம். தங்கம் சிரித்தாளாம். எப்படியடா மகனே இருக்கும் எனக்கு! கலியாணத்தை முடித்துவிட்டுச் சில நாள் கூட இருந்துவிட்டு உன் அப்பா வீடு வந்தார். நான் அவரிடம் பேசவில்லை. வீட்டிலே உட்கார்ந்திருந்தார் நெடுநேரம்; நான் சட்டை செய்யவில்லை. எப்படி என் மனம் இடங்கொடுக்கும்?

     என் வேதனையும் முற்றிற்று. நீயும் பிறந்தாய்!

     நீ பிறந்த சமயம் உன் அப்பா தங்கத்துடன் குலவிக் கொண்டிருந்தார் மைசூரில். உன்னைக் கண்டவுடன், நான் களிப்புக் கடலில் மூழ்கினேன் - என் பொருட்டு வாதாட ஒரு வீரன் பிறந்தான் - என்று களித்தேன். நீ, நிமிஷத்துக்கு நிமிஷம் வளர்ச்சி அடைந்து, திடீரென்று வாலிபனாகி, மீசை கருக்கிடும் பருவமடைந்து, என்னைக் கொடுமை செய்யும் உன் அப்பாவை கண்டிக்கமாட்டாயா, அதைக் கேட்டு நாம் ஆனந்தப்பட மாட்டோ மோ என்று கூடப் பேதை நான் நினைத்தேன். உன்னை வளர்ப்பது தவிர, வாழ்க்கையிலே வேறு இன்பமான இலட்சியம் ஏது! உன்னை என் மகனாக மட்டுமல்ல, எனக்காக வாதிட வேண்டிய பொறுப்பை மேற்கொண்ட வீரனாக மதித்து வளர்த்து வந்தேன்.

     இரண்டு மாதங்கள் கழித்தே அவர் வந்தார் தனியாகத் தான் - தங்கம் தனிக் குடித்தனம் நடத்தத்தானே முன்னாலேயே திட்டமிட்டிருந்தாள். வந்ததும், தோட்டம் சென்றார் பயிர் பச்சையைக் கவனிக்க. மாட்டுத் தொழுவத்திலே ஒரு கால் முறிந்து போயிருந்தது கண்டு, வேலையாளைக் கண்டித்தார் - பசு இளைத்துக் கிடந்ததாம்; அதற்காக உருகினார் - பாகற்கொடி வாடிவிட்டதாம்; அதற்காகப் பதைத்தார் - தோட்டத்துக் கிணற்று நீர் ஏதோ வாடை வீசுகிறது என்பதைக் கூடக் கண்டுபிடித்தார் - நீ தொட்டிலிலேதான் தங்கவிக்ரகம் போல் இருந்தாய் - நான் பக்கத்திலே இருந்துகொண்டு உனக்கு பணிவிடை செய்து கொண்டுதான் இருந்தேன் - அவர் - உன் அப்பா - என் புருஷர் - தொட்டில் பக்கம் கூட வரவில்லை! மகனே! உன்னைப் பார்க்கவேண்டுமென்று அவருக்கு எண்ணமே வரவில்லை. பெண், தாயாவது என்றால் மரணத்தின் வாசற்படி போய்த் திரும்புவது என்றல்லவா பொருள். அந்த நெருக்கடியிலிருந்து மீண்ட என்னை, அவர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மாட்டுத் தொழுவத்தைப் பார்த்துவிட்டு, கூடத்துப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்; அப்போது நீ வீறிட்டு அழுதாய் - அவர் அப்போதும் தொட்டிலண்டை வரவில்லை - என்னால் அந்தக் காட்சியைக் கண்டு சகிக்க முடியவில்லை.

     "என்ன இது பெரிய சனியன்!" என்று வேறு கடுமையான குரலிலே கூறினார். உன்னையுமல்ல - என்னையுமல்ல - நம்மை மனதிலே வைத்துக்கொண்டு, வேலையாளைத் திட்டினார் அதுபோல. எனக்கு அதுகூடவா புரியாது மகனே! நாம் இருவரும் வெறும் ஜடங்களாக அவருக்கு ஆகிவிட்டோ ம். இதைவிட வேறு வேதனை என்ன வேண்டும். என் துக்கமனைத்தையும் போக்கிக் கொள்ள எனக்கு, ஒரே வழிதானடா இருந்தது - உன்னைத் தொட்டிலிலே இருந்து வாரி எடுத்து, அணைத்துக் கொண்டு, உச்சிமோந்து முத்தமிட்டேன். உன் அழகிய புருவங்களிலே நான் தீட்டியிருந்த மையும், என் கண்ணீரும் சேர்ந்து குழைந்து, உன் தங்கநிற மேனியைக் கறுப்பாக்கிற்று! அவர், தெருத்திண்ணையிலே உட்கார்ந்துகொண்டு, பெங்களூரிலிருந்து வாங்கிக் கொண்டு வந்த கலர்ச் சுண்ணாம்பைத் தடவி வெற்றிலை மடித்துப் போட்டுக்கொண்டு, எதிர் வீட்டுக்காரர்களிடம், மைசூர் மிருகக் காட்சிச் சாலையிலே தான் கண்ட அற்புதங்களைக் கூறிக்கொண்டிருந்தார்.


     குடிசைகளிலும், மரத்தடியிலும், சாவடிகளிலும்கூட குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தந்தை உண்டு. இங்கோ என் செல்வம் தொட்டிலிலே இருக்க, என் கணவர் ஏறெடுத்தும் பாராமல், எதிர்வீட்டுக்காரருடன் மிருகக் காட்சிச்சாலையிலே கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். கொல்லும் புலியும் கூட, இவர் போல் இருக்காது; என் நிலை எப்படியடா மகனே இருந்திருக்கும். அந்தஸ்து, ஐஸ்வரியம் எல்லாம் இருந்தும் நாம் இருவரும் அனாதைகளானோம்! அனாதைகள் கூடச் சுதந்திரமாகவாவது இருப்பார்கள், நமக்கு அதுவுமில்லை மகனே! அழாதே நீ!

     தற்கொலை செய்து கொள்வது, அல்லது எதிர்த்துப் புரட்சி செய்வது என்ற எண்ணமெல்லாம் நீ பிறந்த உடனே மாயமாய் மறைந்துவிட்டன. எனக்கு வேலை இருக்கிறது; வாழ்ந்தாக வேண்டும்! தொட்டுத் தாலி கட்டியவனால் அலட்சியப்படுத்தப் பட்டாலும், நான் மனம் உடைந்துவிடக் கூடாது என்று தீர்மானித்துவிட்டேன் - உன்னை வளர்க்கும் சேவைக்காக என்னை நான் அர்ப்பணித்துவிட்டேன். சாக நேரம் இல்லை. உன்னை வாலிபனாகுமளவு வளர்க்க வேண்டும். யுத்தத்துக்காகத் தயாராக்கப்படும் வாளை, வீரன் எவ்வளவு ஆசையுடன் பார்ப்பானோ, அப்படி உன்னை நான் பார்த்துப் பூரித்தேன்.

     தங்கத்துடன் தனிக் குடித்தனம் செய்ய ஆரம்பித்தார் உன் தந்தை. பகல் வேளைகளில் இங்கு இருப்பார் - பண்ணைச் செய்தி விசாரிக்க, கடை ஆட்களிடம் பேச, கிராமத்து விவகாரத்தைக் கவனிக்க, ஒவ்வோர் சமயம் சாப்பாட்டுக்கும் இருப்பார் - மாலை ஆனதும் புது மனைவியின் மனைக்குச் செல்வார். என்னிடம் பேசுவது கிடையாது - உன்னைக் கவனிப்பதும் கிடையாது. அவர் என்னை அலட்சியமாக நடத்திவரும் விஷயம் ஊராருக்குத் தெரியும்; தெருக்கோடியிலும் வம்பர் சபைகளிலும், "முதலியார் காரணமின்றி இந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டார், அவளை நோயும் பேயும் பிடித்தாட்டி, குணத்தையே கெடுத்துவிட்டது. அவர் மனம் முறிந்துவிட்டது. அதனால்தான், வீட்டிலே அவருக்கு நிம்மதியில்லை. வேறு கலியாணம் செய்து கொண்டார். அப்போதும் அவருடைய பெரிய மனது போன போக்கைப் பாருங்கள், ரங்கத்தின் சொந்தத் தங்கையைத்தான் கலியாணம் செய்து கொண்டார்" என்று பேசினர். என் எதிரிலேயே, என் வீட்டுக்கே வந்து, இதுபோல் அவருடன் சிலர் பேசுவார்கள். அவ்வளவையும் நான் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டேன். எல்லாம் உன் பொருட்டுத்தாண்டா கண்ணே!


     உனக்கு அழகான அலங்கார ஆடைகளை அணிவித்து நான் ஆசைப்படுவேன். நீ சிரிக்கும்போது கன்னத்திலே குழி விழும். அதைக் கண்டால் எனக்குப் பிரமாதமான சந்தோஷம்; பெருமையாகவும் இருக்கும்; ஏனெனில், எனக்கும் சிரித்தால் அப்படித்தான். உனக்குப் பொட்டிட்டு, தொட்டிலிலிட்டு நான் பாடுவேன். எப்போதோ சின்ன வயதிலே காதிலே கேட்ட பாட்டுகள் எல்லாம் தொட்டிலருகே வந்ததும் என் நினைவிற்கு வந்தன. இப்படி நான், உன்னை வளர்த்துக் கொண்டு, வீடு வாசல், நகை நட்டு, சொத்து இருந்தும், அனாதை போலிருக்கும் நிலையில், ஒருநாள் நடுப்பகலில் தள்ளாடியபடி ஒரு கிழவி, நம் வீட்டு வாசற்படியண்டை வந்தாள் - "அம்மா! தாயே" என்று ஈனக் குரலில் கூப்பிட்டாள். யார் என்று போய்ப் பார்த்தேன். தரித்திரத்தால் தாக்கப்பட்டு, பட்டினியால் பாதிப் பிராணனை இழந்தவள்; யாரோ பாவம் பிச்சைக்காரி. வயது நாற்பது இருக்கும். ஆனால், மரணம் அவளைக் கூவி அழைத்துக் கொண்டிருக்கும் நிலைமை. அவளுடயை பரிதாபமான நிலையைக் கண்டு, நான் கொஞ்சம் நீரும் சோறும் கலந்து அளித்தேன். நாலைந்து பிடியை அவள் அவசர அவசரமாகச் சாப்பிட்டு, சுவரிலே கொஞ்சம் சாய்ந்தபடி, "அம்மா! உயிர் வந்தது. நீ புண்ணியவதி, உன் பிள்ளை குட்டிகளோடு நீ தீர்க்க சுமங்கலியாக இருக்க வேணும்" என்றாள். அப்போதுதான் நான் அவள் கழுத்தைக் கவனித்தேன். கயிறு இருந்தது. அவள் மேலும் கொஞ்சம் சோறும் நீரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சோகக் கதையைக் கூறினாள். அவள் கணவன் உயிரோடுதான் இருக்கிறானாம், எங்கேயோ, தெரியாதாம்; அவளுக்குக் குழந்தை குட்டி கிடையாதாம். பாடுபட்டுப் பிழைத்துக்கொண்டு கொஞ்சம் நிம்மதியாகவும் புருஷனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாளாம். ஒருநாள் கழைக்கூத்தாடும் கூட்டம் ஒன்று வந்ததாம். அதிலே இருந்த ஒரு மைக்காரியிடம், இவள் புருஷனுக்கு மோகம் பிறந்ததாம் - இவளையும் கைவிட்டு விட்டு அவள் பின்னோடு போய் விட்டானாம்; திரும்பவே இல்லை - இவளுக்கும் திக்கு இல்லை. திக்கற்ற நிலையிலே விடப்பட்ட இவள், கொஞ்ச காலம் ஊரிலேயே, சிறு நகைகளை விற்று ஜீவித்தாளாம் - பிறகு ஆப்பக் கடை வைத்தாளாம் - அதுவும் முடியாமற்போன பிறகு வீடு கூட்டுவது தண்ணீர் தெளிப்பது போன்ற ஊழியம் செய்து பிழைத்து வந்தாளாம்; அப்போது ஆண்களின் சேஷ்டைக்கு இணங்க மறுத்து, அதனால் வேறு தொல்லைப்பட்டாளாம். விபசாரத்துக்கு இணங்காததால் திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, கடைசியில் ஊரைவிட்டே வெளியேறவேண்டி நேரிட்டதாம். கடைசியில் பிச்சைக்காரியே ஆகிவிட்டாளாம். இதுவரை ஒரு கெட்ட நினைப்பு, கெட்ட நடவடிக்கை கிடையாது என்றும் சொன்னாள். அவள் கழுத்திலே அந்தக் கயிறு மட்டும் இருந்தது. கயிறு கொஞ்சம் நீளமும் கனமும் அதிகமாக இருந்தாலாவாது தூக்கிட்டுக் கொள்ள உதவும். அதற்கும் பயனற்று அந்தக் கயிறு இருந்தது. அவளுடைய கதையைக் கேட்டதும், எனக்கு என் இனத்தில் ஒருத்தியைக் கண்டதாக எண்ணம் வந்து, நான் மனம் உருகி அழுதேன். ஆண்களின் கல் மனதினால் அவதிக்கு ஆளான அபலைகளைக் கொண்டு நீதி வழங்கச் சொன்னால், எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆண்கள் ஊரிலே யோக்யர், நாணயஸ்தர், கண்ணியமானவர், தர்மவான் என்றெல்லாம் புகழப்படுபவர்கள் கடுந்தண்டனை பெறவேண்டி நேரிடும். என்ன செய்வது! ஆண்களிடமே நீதி வழங்கும் உரிமை விடப்பட்டிருக்கிறது. குற்றவாளிக்கே நீதிபதி உத்யோகம்.

     பிச்சை எடுத்து இனிப் பிழைக்க வேண்டாம். இங்கே இருந்துகொண்டு எனக்கு உதவி செய்துகொண்டிரு என்று கூறினேன். போன வாழ்வு திரும்பி வந்ததுபோல் ஆனந்தமடைந்தாள். அன்று முதல் அவள் சாகும்வரை - சாகடிக்கப்படும் வரையில் - என் வீட்டில் தான் இருந்தாள். தன் சக்திக்கேற்ற மட்டுமல்ல, சக்திக்கு மீறிய அளவு கூட வேலை செய்தாள். தன்னிடம் நன்றி காட்டும் எனக்கு என்னென்ன வகையாலே உபசாரம் செய்து திருப்தி செய்விக்கலாம் என்பதில் அவள் விசேஷ அக்கறை கொண்டாள். உலகிலே காப்பாற்றுவாரற்று உருக்குலையும் ஏழைக்கு, எதிர்பாராதவிதமாக உதவி கிடைத்தால், எவ்வளவு மனக் குளிர்ச்சி ஏற்படும் என்பதை நான் அப்போதுதான் நன்றாகத் தெரிந்துகொண்டேன். அவளிடம் நான் கொஞ்சம், கொஞ்சமாக என் கதையைக் கூறினேன். அவளும் என் கணவரின் போக்கைப் பார்த்து, விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பெருமூச்செறிந்தாள், தன்னைக் கைவிட்ட கணவனை முன்பு பேசியதைவிட அதிகக் கொடுமையாகக் கண்டித்தாள் - அவள் மனப்பான்மை எனக்குப் புரிந்தது. என் கணவரின் கண்மூடிப் போக்கையே அவள் மறைமுகமாகக் கண்டித்தாள் - எனக்குத் திருப்தியாக இருக்குமென்று. 'கழைக் கூத்தாடியுடன் ஓடிவிட்டான் என் புருஷன்; நானாவது ஒண்டிக்கட்டை. உன் அழகுக்கும் குணத்துக்கும் எதற்காக அம்மா அவர் உன்னை இப்படி இம்சைப்படுத்துகிறார். தங்கவிக்ரகம் போலக் குழந்தை இருக்கிறது; இதைப் பார்த்துக்கூட அவருடைய மனம் இளகவில்லையே. என்ன மனம்மா அவருக்கு" என்று கூறி ஆயாசப்பட்டாள். கிராமத்தில் மந்திரவாதியிடம் சிகிச்சை பெறச் சென்ற இடத்திலே, தன் இன்மொழியாலும் சமர்த்தாலும், என் மனதுக்குச் சந்தோஷமூட்டிய துளசி, எனக்குத் தாயார்போல வந்து சேர்ந்தவள் இருவரையும் நான் என்றும் மறக்கமுடியாது.


     மகனே! என்னைப் போலவே, அந்தக் கிழவியும் உன்னிடம் மிகுந்த ஆசை கொண்டிருந்தாள். எப்படியாவது இந்தக் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்படி செய்யவேண்டும் என்று அவள் என்னென்னவோ செய்து பார்த்தாள். என் பொருட்டு அவரிடம் இதமாகப் பேசியும் பார்த்தாள். அவள் பத்து நிமிஷம் பேசுவாள். அவர் அரை நிமிஷத்தில் அலட்சியமாக ஏதாவது பதில் கூறி விடுவார். "கிரஹம் போறாது" என்று எண்ணி அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

     இந்தச் சமயத்திலே, உருட்டும் கண்களும், மிரட்டும் மீசையும் கொண்ட ஒரு முரடன், அவரிடம் அடிக்கடி வந்து ஏதோ குசுகுசுவென்று பேசிக் கொண்டிருக்கக் கண்டேன். ஆரம்பத்தில் அவன் அவரிடம் அடக்கமாக நடந்து கொண்டான். பிறகு சமத்துவமாக நடந்து கொண்டான். ஒரு வார காலத்திலே, அவர் அவனிடம் அடக்கமாக நடந்து கொண்டார். அவனுக்கு, அவர் காப்பி ஆற்றிக் கொடுப்பார்; வெற்றிலைத் தட்டை எடுத்துக் கொண்டு வந்து தருவார்; "வாங்க! உட்காருங்க!" என்று மரியாதையாகப் பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "இதென்னவோ வேடிக்கை! எவனோ, வெறியன் போலிருக்கிறான். இவனிடம் ஏன் இவர் இப்படிப் பாசம் காட்டுகிறார்" என்று நான் கேட்டேன். "இதிலே என்னம்மா ஆச்சரியம்! என் வீட்டுக்காரர், கழைக்கூத்தாடும் "பொம்பளை" கூட ஓடி விட்டாரே, என்ன இருந்தது அவளிடம்; மைக் கண்; காவி ஏறிய பல்லு; கந்தல் துணி; கையிலே புண்கூட இருந்தது; இருந்தும் அவள் பின்னாடி ஓடிவிட்டாரே, என்னை மறந்து, கௌரவத்தை, நிம்மதியான வாழ்வை மறந்து. இந்த ஆண்களின் சுபாவத்தை நம்மால் கண்டறிய முடியாதம்மா. சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று பேசுவார்கள். பெண்ணின் மன ஆழத்தைக் கண்டறிய முடியாது என்று பேசுவார்கள். ஆனால் உண்மையிலே பெண்ணின் மனதிலே ஆண்களிடம் தோன்றக் கூடிய சூது, சூழ்ச்சி, வஞ்சனை இவை அவ்வளவு சுலபத்திலே தோன்றாதம்மா. பெண்ணைக் கைவிட்ட ஆண்கள், பெண்ணைத் துரோகம் செய்த ஆண்கள், பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்தவர்கள் - ஆகியோரின் தொகை ஏராளம். ஆனால் வெளியே தெரிய ஒட்டாதபடி அவர்கள் திரை போட்டுவிடுவார்கள். உன் புருஷனும், இந்த ஆசாமியிடம் நேசம் கொண்டாடுவது வேறோர் பெண்ணுக்காகத்தான் இருக்குமென்று எண்ணுகிறேன். அதனால்தான் அவ்வளவு குழைகிறார்" என்றாள்.

     இருக்குமா? இருக்கவிட மாட்டாளே தங்கம்! என்னிடமிருந்து அவரைப் பிரித்தவள், அவரை வேறு ஒருத்தியிடம் பறிகொடுக்க இசைவாளா? அவளுடயை சாமர்த்தியத்தினால் தடுத்துவிடுவாளே என்று எண்ணினேன்.


     புதியவனிடம் பேசும்போதெல்லாம், அநேகமாக, சாமி கதை, தேவி மகாத்மியம், வரப்பிரசாதம், அருள் இப்படிப்பட்ட வார்த்தைகளே அதிகமாக இருந்தன. சத்விஷயமாகவே பேசுவதாகத் தோன்றிற்று. ஆனால் எப்படி நம்புவது? ஆண்களின் மனதை எப்படிக் கண்டறிய முடியும்? சாமியைப் பற்றித்தான் பேசுகிறார்கள். தபசு செய்பவர்களாகக்கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ஜபதபமெல்லாம், பெண்ணைக் கண்டதும் பஞ்சாகப் பறக்கிறதே. ரிஷிகளும் முனீஸ்வரர்களுமேகூட இந்த மோகத்திலிருந்து தப்பவில்லை என்று கதை படிக்கிறார்களே, அப்படி இருக்க, நயவஞ்சகரான என் கணவர் பேச்சிலே சாமி கதை இருந்தாலும், மனம் உண்மையில் வேறோர் மாதிடம் தாவி விடவில்லை என்று நான் எப்படி நம்ப முடியும். அன்பால் அவரை அபிஷேகித்த என்னைத் தவிக்கச் செய்துவிட்டுத் தங்கத்தைத் தேடிக் கொண்டவர், இப்போது தங்கம் கிடைத்துவிட்டாள், இனி ஒரு முத்துவைத் தேடுவோம் என்று எண்ணியிருக்கக் கூடுமல்லவா? யாராக இருக்கும்? எவள் மீது வலை வீசுகிறார்கள்? இதை அறிய நான் வெகு பாடுபட்டேன். அவர்கள் இருவரும் பேசுகிற பேச்சிலே மறைந்துதான் அந்த ரகசியம் இருக்கவேண்டுமென்று எண்ணி, வெகு ஜாக்கிரதையாக அவர்கள் சம்பாஷணையைக் கவனிக்கலானேன். ஒரு துப்புக்கூடக் கிடைக்கவில்லை. ஒரு தடவை மட்டும் "சிந்தாமணிக்காக என்ன செலவிடவும் நான் தயார்" என்று உன் அப்பா, புதியவரிடம் கூறிடக் கேட்டேன். சிந்தாமணி! ஒரு சமயம் அந்தப் பெயர் கொண்ட ஒருத்தியைப் பெறத்தான் முயற்சி நடக்கிறதோ என்று யோசித்தேன். இருக்கும், ஏன் இருக்கக்கூடாது! ரங்கம் - பிறகு தங்கம் - பிறகு சிந்தாமணி - மல்லிகை, ரோஜா, மருக்கொழுந்து! வண்டுக்கு வித்யாசமோ திருப்தியோ ஏது? மலருக்கு மலர் தாவிக்கொண்டுதானே இருக்கும். அதுபோலவே இவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்று தீர்மானித்தேன். யார் அவள்? எங்கிருப்பவள்? என்ற கேள்வி என் மனதிலே புகுந்து குடைந்தன. கிழவியாலும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. "இந்த ஊரிலேயே சிந்தாமணி என்ற பெயர் கொண்டவள் ஒருத்தியும் இல்லையே அம்மா!" என்று கிழவி கூறினாள். வெளி ஊரோ? நாடகக்காரியோ! பாட்டுப் பாடுபவளோ! சீமான் மகளோ! யார் இந்தச் சிந்தாமணி என்று அறிய நான் துடியாய்த் துடித்தேன். இந்தத் துடிப்பை அதிகப்படுத்திற்று, இன்னோர் நாள் அவர்கள் பேசிய பேச்சு. "முதலியார்! கொஞ்சங்கூடக் கவலை வேண்டாம். எப்படியும் இன்னுமோர் பதினைந்து நாட்களில், தவறினால் ஒரு மாதத்துக்குள் சிந்தாமணி உமக்குக் கிடைக்கும் படியாகச் செய்கிறேன். இது தேவி மீது ஆணையாக நான் கூறுவது. சிந்தாமணி கிடைத்ததும், உமது வீட்டிலே, தனி அறை தயாராக வேண்டும். அந்த அறைப் பக்கம் நீர் தவிர வேறு யாரும் போகக் கூடாது. சதா சர்வகாலமும் பரிமளத் தூபம் இருக்க வேண்டும். சிந்தாமணி நிச்சயம் உமக்குத்தான், பயப்படாதீர்" என்று அந்த உருட்டுக் கண்ணன் உரைத்தான். இன்னும் என்ன சந்தேகம்? சிந்தாமணி என்ற எவளோ ஒருத்தியை, வீட்டுக்கே கூட்டிக்கொண்டு வந்துவிடச் சதி நடக்கிறது. ரங்கமும் தங்கமும் போதவில்லை! சிந்தாமணி வரப்போகிறாளாம். ஒன்று இரண்டல்ல, மூன்று! இந்த ஆண்களென்ன, கணக்கையா கவனிப்பார்கள்! உத்தம தசரதனுக்கு அறுபதினாயிரம் தேவிமார்களாமே! இந்த உதவாக்கரையார் மூன்றாவது இல்லாமல் எப்படிக் கௌரவம் பெற முடியும்!

     சிந்தாமணி வரப்போகிறாள்! எனக்கு மற்றுமோர் சக்களத்தி! வரட்டும் அவளும். சிந்தாமணியின் கோலத்தையும் பார்த்துவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:15 pm

ரங்கோன் ராதா

15

     சாதாரணமாக, ஆடவர்கள், கலியாணமாவதற்கு முன்பு கெட்டு அலைவதுண்டு; பருவச்சேஷ்டை காரணமாக ஏதோ விதங்களிலே உடலையும் மனதையும் பாழாக்கிக் கொள்வதுண்டு; பித்தளையைப் பொன்னென்றும், காடியைக் கனிரசமென்றும் கொள்வதுண்டு. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டோ , கேட்டோ , வீட்டிலே பெரியவர்கள், சரிசரி, பையனுக்கு வயதாகிவிட்டது, ஒரு கால்கட்டுக் கட்டிப்போட்டால்தான், வாழ்க்கையில் படிந்து இருப்பான்; இந்தச் சமயத்திலே அவனைக் கண்டிப்பதோடு மட்டும் விட்டுவிட்டால், அவன், நமது கண்ணிலே மண்ணைத் தூவிவிட்டு, கண்டபடி ஆடிக் கெடுவான்; ஆகவே, அவனுக்கு விரைவில் ஒரு கலியாணத்தைச் செய்துவிடவேண்டும். காலாகாலத்திலே செய்ய வேண்டிய காரியத்தைச் செய்தால்தான் எதுவும் வழியாக வரும் என்று பேசுவார்கள். பையனுக்கு நல்வார்த்தை கூறிக்கொண்டிருக்கும்போதே, நல்ல இடமும் பார்த்துக் கொண்டிருப்பார்கள், கப்பலுக்கு நங்கூரம் போடுவதுபோல. வாழ்க்கைப் படகை வழி தவறிச் செலுத்தாமலிருக்க, ஒரு கட்டுத் திட்டம் என்று தானே கலியாணத்தைக் கூறுவர். அதேபோல, பெரும்பாலும் ஆடவர்கள், கல்யாணமானதும், எப்படியாவது தமது பழைய நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு, பழைய சிநேகிதர்களிலே கூடச் சிலரை ஒதுக்கிவிட்டு, புதிய முறையை ஆரம்பிப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். பெட்டியிலிட்ட பாம்பு போலாகிவிட்டான் பார்த்தாயா, மாலை வேளைகளிலே மரகதத்தின் வீட்டிலேயே கிடப்பானே, இப்போது பார்த்தாயா, எவ்வளவு அடக்க ஒடுக்கமாகிவிட்டான். அந்தத் தெருப்பக்கமே கூடப் போவதில்லை என்றெல்லாம் பேசுவார்கள். "எங்கே சார், உங்களைப் பார்க்க முடியவில்லை இப்போதெல்லாம்!" என்று நண்பர் கேட்டால், புதிதாக மணமானவர் புன்சிரிப்புடன், பதில் என்ன கூறுவதென்று தெரியாமல் நிற்பார். வேறோர் நண்பர், "அவர் எப்படி முன் போல் இருக்க முடியும்! நம்மைப்போல் அவர் என்ன ஒண்டிக் கட்டையா? அவருக்குக் கலியாணம் ஆகிவிட்டது; இனி எப்படி அவர், நம் கண்ணிலே படமுடியும்" என்று கேலி பேசுவார்.


     கலியாணம் செய்து கொள்ளுமுன், கண்ணையும் கருத்தையும் கெடுத்துக் கொள்ளும் ஆண்களே அதிகம். மணவறையில் வரும் வரை பிரம்மசாரியாகவே இருந்தவர் என்று உறுதியாகக் கூறக்கூடிய நிலையில், ஆயிரத்திலொரு ஆடவர் தேறுவாரோ என்னவோ! ஆனால், எப்படிப்பட்ட அலைச்சல்காரரும், கலியாணமானதும், கொஞ்சம் திருந்திவிடுவதைத்தான் சாதாரணமாகப் பார்க்க முடியும். சிலது உண்டு. கலியாணமான பிறகும் பழைய குருடியாக உள்ளதுகள். உன் அப்பாவின் போக்கோ தனி ரகமாக இருந்தது. அவருக்கு மோக வெறி, பருவம் கடந்து ஏற்பட்டது. எனவேதான் அளவுக்கு மீறிப் போகலாயிற்று. ஆகவே தான், சிந்தாமணி - சிந்தாமணி - என்று சதா பஜனை செய்து கொண்டிருந்தார். நம்ம ராதா ஒரு கதை சொல்லுவாள்; யாரோ ஒரு வீராதி வீரனாம், உலகையே ஜெயித்து ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்று எண்ணினானாம். பல தேசங்களையும் ஜெயித்தவனாம்; புகழ் ஓங்கி வளர்ந்ததாம். அப்படிப்பட்டவனுக்கு, முதிய பருவம் வருகிற நேரத்தில், ஒரு அழகு ராணியிடம் அமோகமாக ஆசை பிறந்ததாம். அதனை அறிந்து கொண்ட அந்த ராணி அசகாய சூரனைத் தன் அடிமையாக்கிக் கொண்டாளாம். கடைசியில் அவன் ராஜ்யம், ரணகளம், கீர்த்தி முதலியவற்றை எல்லாம் மறந்து அவளிடம் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பதே வேலையாகக் கொண்டு, அதன் பயனாக செல்வாக்கையும் மதிப்பையும் இழந்தானாம். பெயர் என்னவோ ஜுலியஸ் சீசர் என்று சொல்வாள். அதுபோலக் கொஞ்சம் வயதான பிறகு, இந்தக் காதல் நோய் ஏற்பட்டால், அதைத் தீர்த்துக் கொள்ளும் மருந்தும் கிடைப்பது கஷ்டம். மருந்து கிடைத்தாலும், சுலபத்திலே வேலை செய்யாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே, அதுபோல முதிய பருவத்திலே மோகம் பிறந்தால் அதன் வேகத்தைத் தாங்க மாட்டாமல், அவர்கள் நிலையையே இழந்துவிடுமளவு ஆடுவர். உன் அப்பாவுக்கும் அந்தக் கதிதானோ என்று நான் அஞ்சினேன். இவளெவளோ சிந்தாமணியாம்! தங்கத்திடம் கொண்ட ஆசையால் அவர் என்னை இவ்வளவு பாடுபடுத்தினார். இன்னும் சிந்தாமணியும் வந்து சேர்ந்தால், தீர்ந்தது. என் கையில் திருவோடு கொடுத்துத் துரத்தியும் விடுவார்கள் என்று பயந்தேன். சொல்லமுடியாது, மகனே! மோகத்தால் பிடிதாட்டப்படும் ஆடவர்கள் எவ்வளவு மோசமாக நடக்க ஆரம்பிப்பார்கள் என்பதை அளவறிந்து கூற முடியாது - சொந்த மகன், மகள், அண்ணன், தம்பி ஆகியோரையும் தன்னிடம் பிரியமுள்ள ஊழியர்களையும் உதாசீனம் செய்யத் துணிவார்கள். பழைய பாசம், நேசம் அவ்வளவும் பாழாகும். கவலைப்பட மாட்டார்கள். எது வந்தாலும் சரி, எது போனாலும் சரி என்று துணிந்து விடுவார்கள். யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், எண்ணிக் கொள்ளட்டும் என்று மனதை மரக்கடித்துக் கொள்வார்கள். மகனே! இரண்டாந்தாரம் செய்து கொண்ட குடும்பத்திலே வளரும் பிள்ளைகளிலே பல கொடுமைக்கு ஆளாவதைப் பார்க்கிறோமே, மாற்றாந்தாய்க் கொடுமை என்று அதனைக் கூறுவார்கள். ஆனால் குற்றம், அந்த இரண்டாம் மனைவி மீது அதிகம் இராது; ஆடவன் மீது தான் இருக்கும். அதைக் கூர்ந்து கவனித்தால்தான் தெரியும், புரியும். 


     ரங்கோனில் அப்படித்தான். எங்கள் பக்கத்து வீட்டிலே, ஒரு பிள்ளை இருந்தார். அவருக்கு வயது வந்த ஒரு பெண்; மனைவி இறந்துவிட்டாள். மறு கலியாணம் செய்து கொண்டார். கொஞ்ச நாட்களுக்குள், அவருடைய மகள் கண்ணீர் விடலானாள். மாற்றாந்தாய்க் கொடுமை என்றுதான் நான் எண்ணிக் கொண்டேன். படுபாவி, எங்கிருந்தோ ஒருத்தி வந்து சேர்ந்தாளே, குழந்தையின் வாழ்க்கையைப் பாழ்படுத்த என்று கூடச் சபித்தேன். ராதாதான் சூட்சமத்தைக் கண்டறிந்து சொன்னாள். கொடுமை அவளால் உண்டாகவில்லை, அந்த ஆடவனாலேதான். ஒரு சம்பவம் கேள்; ராதாதான் சொன்னாள். ஒரு நாள் அவன் ரோஜாச் செண்டு வாங்கி அனுப்பினானாம் வீட்டுக்கு, வேலைக்காரனிடம். அதனை யார் எடுத்துக் கொள்வது என்ற சிக்கல் வந்து விட்டது. மாற்றாந்தாய் கொடுமைக்காரி என்கிறோமே அவள் தான், அன்புடன் அந்தச் செண்டைப் பெண்ணுக்குக் கொடுத்தாளாம். பெண் பயந்துகொண்டே அதைப் பெற்றுக் கொண்டாள். பிறகு அவன் வீட்டுக்கு வந்திருக்கிறான். பெண்ணின் ஜடையிலே ரோஜா இருந்திடக் கண்டான் - முகம் மாறிவிட்டது. அவ்வளவு விரைவிலே அவன் மனம் கெட்டு விட்டது. பெண்கள் விஷயந்தானே என்று விட்டுவிட்டானா? அதுவுமில்லை; கிளறத் தொடங்கினான். இரண்டாந்தாரமாக வந்த பெண் ரோஜாவையும் மறந்துவிட்டாள், அதை யார் வைத்துக் கொள்வது என்று சர்ச்சை நடந்ததையும் மறந்து விட்டாள். ஏதோ வேறு நினைவில் இருந்தாள். புருஷனோடு பேசவில்லை. இந்தப் புருஷன், நாடகத்திலே கதையிலே வருவது போல, தன் மனைவி சிரித்துக் கொண்டே தன் எதிரில் வந்து நின்று, "பிராணநாதா! தாங்கள் அன்புடன் எனக்களித்த மலரை நான் பிரியத்துடன் என் பின்னலிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் பாரீர்" என்று கூறிக் கொஞ்சுவாள் என்று நினைத்தான் போலும். கடையிலே ரோஜா மலர் வாங்கும்போதே அவனுக்கு அந்த நினைப்பு இருந்திருக்கும். வயதானவனல்லவா! தான் வாங்கி அனுப்பிய ரோஜாவை, தன் மகள் சண்டை போட்டுத் தனக்கென்று எடுத்துக் கொண்டாள்; அதனாலேயே தன் மனைவி தன்னிடம் சரியாகப் பேசக்கூட இல்லை என்று இவன் தவறாக எண்ணிக் கொண்டான். மனதிலே இந்தத் தப்பெண்ணம் கொண்டதும், கோபிக்கவும் ஆரம்பித்தான். தன் மனைவியின் மனதை மகிழச் செய்ய வேண்டுமானால், மகளை அவள் எதிரில் கண்டித்தாக வேண்டும் என்று இவனாகத் தீர்மானித்துக் கொண்டான். பாவம், அந்தப் பெண்! இவனுடைய இரண்டாந்தாரம், இவனுக்குக் கலகமூட்டவுமில்லை; அவளுடைய மனதிலே, அவ்விதமான களங்கமே கிடையாது. இவனாக அவளுக்கு இன்னதுதான் திருப்தியாக இருக்குமென்று எண்ணிக் கொண்டான். உடனே, தன் மகளிடம், அனாவசியமாகக் கோபித்துக் கொண்டான். ஏன் இப்படிக் கத்துகிறாய் - கழுதை மாதிரி. நாய்களுக்குப் புத்தியே கிடையாது. சனியனை தொலைத்து விடலாம் என்றால், எந்தத் தடியனும் கிடைக்கவில்லை என்று இப்படிப் பேசினான். அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும். தன்னிடம் தன் தகப்பனார், ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறார். நாம் ஒரு தவறும் செய்யவில்லையே என்று அந்தப் பெண் யோசித்தாள். ஒரு காரணமும் தெரியவில்லை. தெரியாததால், அவளுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது. ஒரு வேளை, மாற்றாந்தாய் ஏதாவது கலகமூட்டி விட்டார்களோ என்று எண்ணினாள். அப்படியும் அவளுக்குக் கோபம் வரும்படியான காரியமும் ஒன்றும் செய்யவில்லை; ஏன் கலகமூட்டப் போகிறாள் என்றும் எண்ணிப் பார்த்தாள். அதே யோசனையில் ஈடுபட்டிருந்தபோது, ரோஜா ஜாடையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. உடனே அதை எடுத்து மறுபடியும் செருகிக் கொள்ளலானாள். செருகுவதற்கு முன்பு ரோஜாவில் இரண்டோ ர் இதழ்களைக் கிள்ளி வாயில் போட்டு மென்றாள் - சின்னப் பெண்தானே விளையாட்டாகச் செய்தாள். எங்கள் ராதா, ரோஜா, ரோஜாவாகவே கூடத் தின்று விடுவாள். இந்தப் பெண் இரண்டு இதழைக் கிள்ளினதுதான், பார்த்துக் கொண்டே இருந்த தகப்பன், பளார் பளார் என்று அடித்துவிட்டானாம். அந்த அடி கூட அல்ல அந்தப் பெண்ணுக்குத் துக்கம் தந்தது; அடித்துக் கொண்டே அவன் சொன்ன வார்த்தைதான் அவள் உயிரையே துடிக்கச் செய்தது. "சனியனே! ஆடு தழையைத் தின்பதுபோல ரோஜா புஷ்பத்தைத் தின்றாயே, ரோஜாவின் அருமை தெரிந்தால் செய்வாயா இப்படி? உனக்கு ஏது அந்த யோக்யதை! நான் அந்தத் தடிக் கழுதையிடம் சொன்னேன், ரோஜாவை அம்மாவிடம் கொடடா என்றால், கழுதை உன்னிடம் கொடுத்துத் தொலைத்தான் போலிருக்கு. நீ அதை இப்படிப் பாழாக்குகிறாய். இப்படிப் பாழாக்கினாலும் ஆக்குவது, சின்னம்மாவுக்குத் தருவதில்லை என்ற அளவுக்குக் கெட்ட எண்ணம், இந்த வயதில்" என்று கூறினான். பாவம் அந்தப் பெண் பதறினாள், கதறினாள். அது முதல் தகப்பனுக்கும் மகளுக்கும் சரியானபடி பேச்சு வார்த்தை கிடையாது. அந்தப் பெண் அழுதபடி கிடந்தாள். பலர், இது மாற்றாந்தாய்க் கொடுமை என்று எண்ணினார்கள். நான் கூட அப்படித்தான் எண்ணிக்கொண்டேன். ராதாதான், நடந்தது என்ன என்று அந்தப் பெண்ணிடம் பேசி, இந்தச் சூட்சமத்தைத் தெரிந்து எனக்குக் கூறினாள்.

     என்மீதுதானே, உன் அப்பாவுக்குக் கோபம், வெறுப்பு, விரோதம் எல்லாம். தங்கத்திடம் பிரமையோடுதானே இருக்கிறார். அவளிடம் அடங்கிக் கிடப்பார். ஆகவே அவளுக்கு இரகசியத்தைக் கூறி அனுப்பினால், அவள், அவரைத் தடுப்பாள், கோபத்தால் முடியாவிட்டால், புன் சிரிப்பால்; இரண்டினாலும் முடியாவிட்டால் கண்ணீரால் என்று நினைத்தேன். ஆனால் மறுபடியும் ஒரு சந்தேகம் வந்தது. தனக்கும் அவருக்கும் உள்ள ஒற்றுமையைக் கெடுப்பதற்காக நான் ஏதோ சூது செய்கிறேன் என்று அவள் நினைத்து விடுவாளோ என்று நினைத்தேன். உண்மையாகவே, யாருக்கும் அம்மாதிரியான நினைப்புத்தானே தோன்றும். தங்கத்தினிடம் அன்பு கொண்டா, நான் சிந்தாமணியைப் பற்றி அவளுக்குக் கூறவேண்டுமென்று எண்ணினேன். எனக்கு இருந்த செல்வாக்குத் தங்கத்தால் பறிக்கப்பட்டுப் போய் விட்டது. அதனைப் பறித்துக் கொள்ளச் சிந்தாமணி வருகிறாள், எனவே சிந்தாமணியைப் பற்றித் தங்கத்துக்கு எச்சரிக்கை செய்வோம் என்று நான் நினைத்தேன். அவள் எப்படி நான் நல்ல கருத்தோடு இக்காரியம் செய்கிறேன் என்பதை நம்புவாள். சந்தேகப்பட்டால்? நம்ப மறுத்தால்! இவ்விதம் எண்ணிக் குழம்பினேன்.


     இவ்வளவும் செய்தது, என் பொருட்டு அல்லடா மகனே! நான் அவரால் வெறுக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, ஒதுக்கித் தள்ளப்பட்டுப் போனேன். நான் குடியிருந்த அவருடைய மனதிலே தங்கம் குடி ஏறிவிட்டாள். அவளைத் தள்ளிவிட்டு, சிந்தாமணியாவது வரட்டும் காந்தாமணியாவது வரட்டும் என்று நான் இருந்துவிடக் கூடும். எனக்கு அது இலாப நஷ்டம் அற்ற விஷயம். ஒருவிதத்திலே பார்த்தால் இலாபமுங் கூட. சிந்தாமணியுடன் அவர் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கையிலே, தங்கம் அழுது கொண்டிருப்பாளல்லவா! என்னை அழவைத்தவளே! இதோ உன் முறை வந்துவிட்டது அழு! அறிவற்றவளே! அன்பால் பிணைக்கப்பட்டிருந்த எங்களைப் பிரித்தாய், உன் சாகசத்தால். பார்த்தாயா, உன் சந்தோஷம் நிலைத்ததா? வந்துவிட்டாள் பாரடி உனக்கொரு சக்களத்தி! என்று கூறிக் கேலி செய்யலாம். நான் ஏதோ கெட்ட சுபாவக்காரி, ஆகவேதான், அவர் என்னை வெறுத்துத் தள்ளி விட்டுத் தங்கத்தைக் கலியாணம் செய்து கொண்டார் என்று பேசுகிறார்களே ஊரார்; இப்போது என்ன சொல்வார்கள்! தங்கம், மகா அழகி, என்னைப்போல அவளுக்கொன்றும் பேயும் இல்லை, நோயும் இல்லை. அன்பு கொண்டுதானே அவளை மணந்துகொண்டார். அப்படி இருந்தும் அவளை விட்டு வேறோர் மாதைத் தேடிக் கொண்டாரே என்று பேசும்போது என்னைப் பற்றி கொண்டுள்ள தவறான கருத்தை நீக்கி விடுவார்கள். குற்றம் அவர்மீதுதான், என்மீதல்ல என்று உணருவார்களல்லவா. அதுகேட்டு நான் ஆனந்தமடையலாம்; பெருமையுமடையலாம். சிந்தாமணியின் பிரவேசம், எனக்கு அந்த விதத்திலே கவனித்தால் இலாபந்தான். ஆனால் மகனே! நான், என்னை மறந்துவிட்டேன். நீ பிறந்ததும் என் சுகம், அந்தஸ்து இவைகளைப் பற்றிய எண்ணமே எனக்குப் போய் விட்டது. நான் வாழ்வது என்று தீர்மானித்ததே உன் பொருட்டு. உனக்காக என் சபதத்தைக்கூட நான் கைவிட்டுவிட்டேன். இந்தக் காரியத்தின்போதும், நான் உன்னைப் பற்றித்தான் எண்ணினேன். உனக்காகத்தான், சிந்தாமணி வரக்கூடாது என்று தீர்மானித்தேன். அவளும் வந்து சேர்ந்துவிட்டால் என் வாழ்வு மேலும் சீரழியுமே என்று இலேசாக என் மனதிலே பயம் தோன்றிய போதுங்கூட, ஒரு கணம் என்னைப் பற்றிய நினைப்பு வரும். மறுகணம் உன்னைப் பற்றியே எண்ணுவேன். நான் சீரழிந்தால், சீந்துவாரற்றுப் போனால், என் செல்வம் என்னாவது? என் நிலை என்ன ஆகும்; தந்தை காமவெறி தலைக்கேறி, குடும்பத்தை மறந்து திரிய, தாய் அழுதுகொண்டிருப்பாளானால், குழந்தையின் நிலை என்ன ஆகும்! தெருக்கோடியில் கூவும் சிறு பிள்ளைகள், சுவரேறிக் குதிக்கும் பையன்கள், சிறு பொருளைத் திருடிவிட்டு அடிபடும் பாலர்கள், எல்லாம் குடும்பத்திலே உள்ள கோணலின் விளைவுகள்தானே. சிறுவயதிலேயே, கடைவீதிகளிலும், சந்தைகளிலும், இரயிலிலும் பாடிக்கொண்டு வரும் பிச்சைக்காரப் பயல்களை நான் பார்த்திருக்கிறேன்; வயிற்றிலடித்துக் கொண்டு, வறண்ட குரலிலே வாய்க்கு வந்ததைப் பாடிக் கொண்டு, வௌவால்போல, ரயிலுக்கு ரயில் தாவி, ரயில்வே அதிகாரிகளிடம் உதைப்பட்டு ரயிலில் போகிறவர்களிடம் அடிபட்டுக் கிடக்கும் அந்தச் சிறுவர்களின் முகத்திலே காணப்படும் சோகமும், உடலிலே உள்ள புண்ணும், காணச் சகியாததாக இல்லையா? அந்தச் சிறுவர்கள், குடும்ப ஒழுங்கு இல்லாததால், ஏற்பட்ட கேடுகளின் பயனாகத்தானே இங்ஙனமானார்கள் என்று நான் பல தடவை எண்ணியதுண்டு. அணைத்து ஆதரிக்க அன்னையும், தகாதவழி போகாமல் தடுத்து நல்வழி காட்டத் தந்தையும் இருந்திருந்தால் இவ்வளவு சிறுவயதிலே இந்தப் பயல்கள், இப்படி அலையவேண்டி நேரிடாதல்லவா என்று எண்ணி வருத்தமடைந்திருக்கிறேன். அதனாலே அந்தச் சிறுவர்களுக்குக் காலணா கொடுக்கலாம் என்று எண்ணுபவள், அரையணாவாகக் கொடுப்பேன். "இந்தத் திருட்டுப் பயல்களுக்குச் சோத்துக்கு என்று நீ கொடுக்கிறாயம்மா, இதுகள் பீடி வாங்கிப் பிடித்துப் பிடித்து மாரை உலர வைத்துக் கொள்கின்றன. இதுகளுக்குக் காசு கொடுப்பதே தவறு" என்று எனக்குப் புத்தி கூறுவார்கள். அவர்கள் சொல்வதுபோல அந்தப் பயல்களும், கெட்ட வழக்கத்தைக் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஆனாலும் முதலிலே அவர்கள் அந்தக் கதியானதற்குக் காரணம், குடும்பம் சரிவர இல்லாததுதான் என்பதே என் எண்ணம். யாரோ ஒரு பெரிய பிரசங்கியாம். சீமையிலே இருந்து வந்தாராம். அவர் கூட, இதுபோலத்தான் பேசினாரென்று, ஒரு தினம் எங்க ராதா கூடச் சொன்னாள். 


     சிந்தாமணியின் பிரவேசத்தால் உன் அப்பாவின் சுபாவம் அடியோடு மாறிவிடுவதுடன், சொத்தும் போய்விட்டால் உன் கதி என்ன ஆகும் என்பதை எண்ணியே நான் ஏங்கினேன். குடும்பத்தை மறந்து, சொத்தை இழந்து, சிந்தாமணியின் பொம்மையாகிவிட்டால், பிறகு உன்னைக் கவனிக்க முடியுமா அவரால்! சொத்து முழுதும் பாழாகிவிட்டால், பிறகு உனக்கு என்ன நிலை இருக்க முடியும். அதனாலே நான் பயந்தேன். சிந்தாமணியால் உன் வாழ்வு கெட்டுவிடுமே என்று அஞ்சினேன். உன்னைப் பராரியாக்கிவிடுவாரே அந்தப் பாவி என்று பயந்தேன். அதனாலேயே தங்கத்துக்காவது விஷயத்தைச் சொல்லி அனுப்பி, இந்த ஆபத்தைத் தடுக்கவேண்டுமென்று நினைத்தேன். அந்த எண்ணம், வேகமாக வளர்ந்தது. கிழவியிடம் யோசனை கேட்டேன். அவளும் அது சரியான யோசனைதான் என்றாள். ஆனால், ஒரு திருத்தம் செய்தாள். "அம்மா! நீ எவ்வளவு நல்லவர்களிடம் சொல்லி அனுப்பினாலும், அவர்கள் ஒன்றுக்கு இரண்டாக்கித்தான் சொல்லிவிடுவார்கள். அதனால், காரியம் கெட்டுவிடக்கூடுமே. எதற்கும் விஷயம் முக்கியமானதாக இருப்பதால், குழந்தையின் நன்மையை உத்தேசித்து, நீயே சென்று தங்கத்திடம் சகல விஷயத்தையும் கூறினால், பலன் இருக்கும். இல்லையானால் கெட்டுவிடும்" என்று சொன்னாள். யோசித்துப் பார்த்ததில் அவள் யோசனை சரியென்றே எனக்குப் பட்டது. உன் பொருட்டு நான் அந்தத் தங்கத்திடம் சென்று வருவது என்று துணிந்தேன். என் வாழ்வைக் கெடுத்தவள் தான் தங்கம். இருந்தாலும், உன் வாழ்வு கெடாதபடி தடுக்கும் சக்தி அவளுக்கு இருந்தது. அதற்காக அவளை அடுப்பது என்று துணிந்தேன். சென்றேன். துளிகூட என்னை அவள் எதிர்பார்க்கவில்லை அல்லவா! திடுக்கிட்டுப் போனாள், ஒரு விநாடி. மறுவிநாடியே சமாளித்துக் கொண்டு, "வா அக்கா!" என்று வாய் குளிர அழைத்தாள்; அவள் தான் அந்த வித்தையிலே கைதேர்ந்தவளாயிற்றே. கொஞ்ச நேரம் பேசவே இல்லை நான். பிறகு சர்வ சாதாரணமான விஷயங்களைப் பேசினோம். "என் மீது உனக்குக் கோபம் இருப்பது சகஜம் அக்கா. ஆனால், நான் வேண்டுமென்றே உனக்கு ஒரு கெடுதியும் செய்ததில்லை, நீ அதை நம்பமாட்டாய்" என்று உபசார வார்த்தை பேசினாள். நான் பதில் கூறவில்லை. என்ன கூற முடியும்? அவள் பசப்புகிறாள். எனக்கு அது பழக்கமில்லை. "அக்கா குழந்தையை வந்து பார்க்கவேண்டுமென்று கொள்ளை ஆசை எனக்கு. வரலாம் என்று பலதடவை புறப்பட்டேன். வந்தால், என்னுடன் நீ முகங்கொடுத்துப் பேசுவாயோ மாட்டாயோ, குழந்தையைத் தொடக்கூடாது என்று கூறி விடுவாயோ என்று எண்ணினேன். அத்தானை மட்டும் அடிக்கடி கேட்பேன், குழந்தை எப்படி இருக்கிறானென்று" என்றாள். அத்தானைக் கேட்பாளாம்! அத்தான் என்ன பதில் கூறி இருக்க முடியும். உன்னைத்தான் அவர் கையிலே எடுத்ததே இல்லையே! சரி என்னவோ சாகசம் பேசுகிறாள். பேசட்டும் என்று நான் எதற்கும் பதிலே கூறாமல் இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு நான் மெள்ள விஷயத்தை ஆரம்பித்தேன். "தங்கம்! உன்னிடம் அவர் பிரியமாக நடந்துகொள்கிறாரா?" என்று கேட்டேன். அவள் பதில் கூறவில்லை. முகத்தில் தோன்றிய புன்னகை பதில் அளித்தது. "அக்கா அவர் உன்னைக் கொடுமைப் படுத்துவதற்கு நானல்ல காரணம். இது சத்யம்; நீ நம்பமாட்டாய். கூடப் பிறந்தவளைக் கொடுமைக்கு ஆளாக்கவேண்டுமென்று எந்தக் கல்நெஞ்சக்காரியும் எண்ணமாட்டாள். ஆனால், நான் என்ன சொன்னாலும் உனக்கு நம்பிக்கை ஏற்படாது" என்று தங்கம், சமயத்தை நழுவவிடாமல் தன் கட்சியைப் பேசலானாள். நான் இடைமறித்து, "என் சுகதுக்கம் என்னோடு இருக்கட்டும் தங்கம்; யாரால் எனக்கு இந்தக் கதி வந்தது என்பதைப்பற்றிய ஆராய்ச்சியை மறந்து கூட நெடுநாளாகிவிட்டது. என்னவோ என் கதி அதுபோலாகிவிட்டது. நான் அதைப்பற்றிக் கவலைப்படுவது கூடக் கிடையாது" என்று கூறினேன். என் பேச்சிலே காணப்பட்ட சோகத்தை அவள் நன்றாகத் தெரிந்துகொண்டு கொஞ்ச நேரம் அசைவற்று இருந்தாள். பிறகு, நான் மெதுவாக விஷயத்தின் முக்கிய பகுதிக்குள் புகுந்தேன்.

     "தங்கம்! ஆண்களின் சுபாவம் ஒரு நிலையானதல்ல. உன் அத்தான் என்னிடம் காட்டிய ஆசையைக் கண்டவர்கள், அவர் என்னை இப்படிக் கைவிடுவார் என்று கனவிலும் கருதியிருக்க முடியாது. அதுபோலவே உன்னிடம் அவர் வைத்திருக்கும் அன்பு எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணிவிடாதே" என்றேன். பாவம்! அவள் என்ன பதில் கூறுவாள் அதற்கு. நான் வேண்டுமென்று வலுச்சண்டைக்கு வந்திருக்கிறேன் என்றுகூட எண்ணிக்கொண்டிருந்திருப்பாள். "அது சரி அக்கா! இந்த ஆண்களே இப்படித்தான்" என்று பொதுவாகப் பேசினாள். அவள் முகத்திலே இலேசாகப் பயம் தட்டியிருந்ததைக் கண்டேன். சரி என்று மேற்கொண்டு பேச ஆரம்பித்தேன்.

     "எதற்காகக் கூறுகிறேனென்றால், தங்கம்! அவரை நீ என்னைவிட்டுப் பிரித்து, உன்னிடம் சேர்த்துக் கொண்டாய், அந்தக் காரியத்தை வேறே ஒருத்தி இப்போது செய்யக் கிளம்பிவிட்டாள். திகைத்து என்னடி பயன்! ஆண் மனம் அப்படிப்பட்டதுதான். என்னிடம் கொஞ்சிக் குலாவுகிறாரே அவர் ஏன் வேறோர் மாதைத் தேடப்போகிறார் என்று சொல்லுவாய், பைத்தியம்! உன்னை அவர் விரும்பியதற்கு ஒரு காரணம் இருக்கும். உன் அழகிலே மயங்கினதுபோல இன்னொருத்தியின் பாட்டிலேயோ நாட்டியத்திலேயோ மயங்கி இருக்கக்கூடும்" என்றேன். "அக்கா! நீ பேசுவது எனக்குப் புரியவில்லையே" என்றாள்.


     "இது புரியவில்லையா உனக்கு. உன் அத்தானுக்குச் சிந்தாமணி என்றொருத்தி சொக்குப்பொடி போட்டு வருகிறாள். சதா சர்வகாலமும் சிந்தாமணி ஸ்மரணைதான். அவளைப்பற்றிக் கூற ஒரு தூதன் இருக்கிறான். அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறார் இவர். அவளிடம் அவர் கொண்டுள்ள மோகத்தின் அளவு சொல்லுந்தரத்ததல்ல. அவளிடம் அவர் தஞ்சமடையத் தயாராகிவிட்டார். அப்படி நேரிட்டுவிட்டால், பிறகு உன் கதியும் என் கதியேதான். குடும்பம் பாழாகும் - சொத்து அழியும் - பிறகு நாமெல்லாம் பராரிகளாகவேண்டும், அல்லது அந்தச் சிந்தாமணிக்குப் பணிவிடை செய்துகொண்டு உயிர் வாழவேண்டும். இந்த ஆபத்துத் தலைமீது இருக்கிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், பிறகு குடும்பமே நாசமாகும் என்பதைக் கூறிப்போகவே வந்தேன். எனக்கு அந்தச் செல்வாக்கு இல்லை. உனக்காவது அவரைத் திருத்தும் செல்வாக்கு இருக்குமென்று நம்பி வந்தேன். நாம் கெட்டு விடுவதோடு முடியாது. நாளைக்கு உனக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதுவும் நடுத்தெருவிலே நிற்கவேண்டியதுதான். அந்த விதமான கதி வரக்கூடாதே என்பதற்காகத்தான் நான் எச்சரிக்கை செய்து போக வந்தேன். அவளிடம் ஒரேயடியாக அவர் தஞ்சமடைவதற்குள், தடுத்துவிடு; இல்லையானால்" என்று சொன்ன உடனே தங்கம் - மேலும் பயந்தாள். "யாரக்கா அந்தச் சிந்தாமணி? எப்படி இருப்பாள்? எந்த ஊர்? என்ன வயது? எப்படி இவருக்குத் தெரிந்தாள்?" என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் போட்டாள். "எனக்கென்ன தெரியும், அவளைப்பற்றி. அந்தப் பாவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டேன். அவ்வளவுதான். அவர் அவளைப் பற்றிப் பேசும்போது உருகுவதைக் கண்டு, நானாக யூகித்துக் கொண்டேன், அவள் யாரோ பலே கைகாரியாக இருக்கவேண்டுமென்று. அவளை நான் பார்த்ததில்லை" என்றேன். "என்னக்கா செய்வது இதற்கு? எப்படித் தடுப்பது?" என்று தங்கம் என்னையே யோசனை கேட்கலானாள். "பயப்படாமல் அவரைக் கேள், எனக்கும் துரோகம் செய்யாதே. ஒருத்தியைக் கெடுத்தது போதும், அவள் பொறுத்துக் கொண்டாள். நான் அவ்விதம் இருக்கமாட்டேன். ஊரறியக் கூறி உம்முடைய மானத்தை வாங்கிவிடுவேன். ஒன்றுக்கு இரண்டு இருக்கிறது; மூன்றாவது தேடப்போகிறார், இதுதான் யோக்கியதையா? ஊரிலே பெரிய மனிதர் என்ற பெயர் இந்த லட்சணத்தில்! என்று கண்டித்துக் கேளேன். என்ன பயம்" என்று யோசனை கூறினேன். "கேட்கலாம் அக்கா. இன்னும் இதைவிடக் காரமாகவும் கோபமாகவுங்கூடக் கேட்கலாம்; ஆனால் பலிக்கவேண்டுமே" என்றாள்.

     "தங்கம், நீயாக யோசனை செய்! என்ன திட்டம் போடுவாயோ தெரியாது. எப்படியாவது இந்த ஆபத்து ஏற்படாதபடி தடுத்தாகவேண்டும். அடி அம்மா! என் பொருட்டு அல்ல இவ்வளவும், நான் ஒரு குழந்தை வைத்திருக்கிறேன். அதன் நன்மைக்காகத்தான் நான் வெட்கத்தை விட்டு உன்னிடம் வந்து குறையைக் கூறினேன்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். தங்கத்தின் கண்களிலும் நீர் ததும்பிற்று.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:18 pm

ரங்கோன் ராதா

16


     எந்தத் தங்கத்தால் என் வாழ்வு சீர்குலைக்கப்பட்டதோ அவளிடமே சென்று குறையைக் குறி உதவி கோரினேன். அவள் இதனால் கர்வம் கொண்டாலும் சரி, மேலும் என்னைக் கொடுமைக்காளாக்கினாலும் சரி என்று துணிந்தே இதைச் செய்தேன். ஆனால் நான், சிந்தாமணி விஷயமாகக் கூறியதும் தங்கம் என்னைவிட அதிகமாகத் திகிலடைந்தாள் என்பது அவள் பேச்சிலேயே நன்கு தெரிந்தது. கண்களில் நீர் ததும்ப அவள் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அவள் மனதிலே என்னென்ன எண்ணினாளோ? ஏறக்குறைய என் நிலைக்கு அவள் வந்து கொண்டிருந்தாள். தங்கமும் ரங்கமாகித்தானே தீர வேண்டும், புதியவள் வந்து சேர்ந்தால்! தங்கம், ரங்கம் என்று தனிப்பட்ட பெயர்களைக்கூடத் தள்ளிவிடு தம்பி! பொதுவாகவே பெண்களுக்கு நிலைமை இதுதானே. ஒரு நாள் ராதா, ரங்கோனில் யாரோ ஒரு புலவர் எழுதிய பாட்டைப் படித்துக் கொண்டிருந்தாள். "என்னடி எழுதியிருக்கு அதிலே? அவ்வளவு சுவாரஸ்யமாகப் படிக்கிறாய்" என்று கேட்டேன். "பெண்களின் முகத்தைச் சந்திரபிம்பம் என்று வர்ணிக்கிறார்களே அதைப்பற்றி ஒரு புலவர் அழகாக எழுதி இருக்கிறார்" என்றாள். "இதிலே என்ன புது அதிசயம் கண்டுவிட்டாயடி; நாம் கூடத்தான் சின்னக் குழந்தைகளை ஏதேதோ சொல்லிக் கொஞ்சுகிறோம். நமக்கு ஏதெது கிடைக்கவேண்டுமென்று எண்ணுகிறோமோ, எவை எவை விலையுயர்ந்தவை, மதிக்கத்தக்கவை என்று எண்ணுகிறோமோ அந்தப் பொருளின் பெயரை வைத்துக் குழந்தையைக் கூப்பிட்டுக் கொஞ்சுகிறோம். இது போலவே, பெண்களைப் பல காலமாகப் புகழ்ந்து வருகிறார்கள்" என்றேன். "அம்மா! நீ சொல்வதுதான் உண்மை. ஆனால் இதைப் படிக்கும்போது எனக்கு வேறோர் விஷயம் புலப்பட்டது. முகம் சந்திரபிம்பம் என்கிறார்களே அது சரியோ, தவறோ? பெண்களின் வாழ்வு சந்திரன் போலத்தான் இருக்கிறது. இருண்ட இடத்துக்கு ஒளி, வெப்பம் நீக்கும் குளிர்ச்சி, பார்க்க ஆனந்தம், இவ்வளவும் நிலவும் தருகிறது; நாமும் தருகிறோம். ஆகையால் பெண்களின் முகத்துக்கு நிலாவை ஈடாகக் கூறுவதைவிட, பெண்களுக்கே நிலவை உவமை கூறலாம்" என்றாள். "ஆமாடி அம்மா! நிலவுக்கு இருப்பது போலத்தான் நமது வாழ்விலும் தேய்பிறையும் வளர்பிறையும் இருக்கிறது" என்று சொல்லிவிட்டு நான் வேதனையை மறைத்துக் கொள்வதற்காகச் சிரித்தேன். "அம்மா! அதை நான் அறியாமல் இல்லை. வளர்பிறை தேய்பிறை சந்திரனுக்கு இருப்பதுபோலத்தான் வனிதையர் வாழ்விலும் இருக்கிறது. வளர்பிறை, பூலோகத்துக்கு மகிழ்ச்சி தருகிறது. முழு நிலவு காண எவ்வளவோ ஆனந்தமாக இருக்கிறது. அதன் அழகிலே சொக்காதவர்கள் கிடையாது. கவி பாடுகிறான் களிப்புடன். பாமரருக்கும் ஏதோ ஓர் வகையான களிப்பு. நிலாக்காலம் - முழுநிலவு நாள் - இவைகளையே பல கதைகளிலே அழகாகத் தீட்டுகிறார்கள். அது போலத்தானம்மா, பெண்களின் வாழ்விலும் முழுத் திருப்தியும் மகிழ்ச்சியும் நிரம்பி, ஒளி வீசினால், அதனால் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆடவர் உலகுக்கும் நன்மைதான் ஏற்படும். தேய்பிறையின் போது தெருவும் வீடும் சாலையும் இருண்டு விடுகின்றன. மக்கள் பாழாய்ப்போன இருட்டுக்குப் பயந்து வீட்டோ டு இருப்பார்கள். அருவருப்பு, பயம் இவைகளால் பீடிக்கப்படுகிறார்கள். முன் இருட்டு, பின் இருட்டு, முழு இருட்டு, மை இருட்டு என்று விதவிதமாகப் பிரித்துக் காட்டி வருத்தப்படுகிறார்கள். வெளியிலே உல்லாசமாக உலவவோ ஒளி இல்லை - வீட்டுக்குள்ளே இருந்தாலோ நிம்மதி இல்லை; இருட்டுக் காலமே கள்ளருக்கு வேலை மிகுதியான நாள். ஆகவே, வீட்டிலே உறக்க முற்றுக் கிடப்பர். இவ்வளவும் நிலவு இல்லாததால் வரும் கேடு. அதுபோலவே, பெண்ணின் வாழ்வு இருண்டு கிடந்தால், கஷ்டம் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆடவருக்குத்தான்" என்றாள் என் மகள். "ராதா! நீ சொல்வது சரி. ஆனால், பெண்களின் வாழ்வு ஏன் இப்படி வளர்பிறை தேய்பிறையாகவே இருக்கிறது? இதற்கு ஒரு மாற்றம் கிடையாதா? தேய்வது, வளர்வது மீண்டும் தேய்வது அடியோடு இருண்டுபோவது, முழு அழகுடன் பிரகாசிப்பது என்றுள்ள இந்த முறை மாறக்கூடாதா? இதன் காரணத்தை அந்தப் புலவர் ஏதாவது கூறியிருக்கிறாரா?" என்று கேட்டேன்.


     "அவர் ஏனம்மா அதைக் கூறப்போகிறார்? முகம் சந்திரபிம்பம் என்று ஆரம்பித்தவர், பாட்டின் நாலாவது அடி வருவதற்குள், கைலாயத்துக்கு அல்லவா போய்விட்டார்! நிலவின் அழகைக் கண்டு மயங்காதவர் இல்லை. மன்மதனையே சுட்டெரித்த சிவபெருமானே நிலவின் அழகிலே இலயித்து, பிறைச் சந்திரனைத் தமது ஜடையிலே சூட்டிக் கொண்டாரென்றால், நிலவின் அழகை விளக்கவும் வேண்டுமோ என்று அவர் ரொம்ப உயரம் போய்விட்டாரே! எப்படி அவர் பெண்ணினத்தின் வாழ்வு நிலவு போல் இருக்கிறது என்பது பற்றியோ, குறித்தோ எழுதப் போகிறார்? சொல்லப்போனால், அம்மா! அவர் நிலவைப்பற்றிக் கூற ஆரம்பித்த நோக்கமே அதே சாக்காகச் சிவபெருமானைப் பற்றிப் பாடலாம் என்றுதான் எனக்குத் தெரிகிறது. புலவர்கள் மிக உயரமாக அல்லவா போகிறார்கள். தங்கள் காலடியில் காணப்படும் எந்த விஷயம் தான் அவர்களின் கண்ணுக்குத் தெரிகிறது" என்று கேட்டாள். ராதாவுக்கு, தம்பி தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதென்றால் ரொம்பப் பிரியம். அதே போது, புலவர்கள் எதை எதையோ எழுதுகிறார்களே யொழிய, வாழ்க்கையிலே காணப்படும் விஷயங்களை மறந்து விடுகிறார்களே என்று கோபிப்பாள். "போகட்டும் ராதா! புலவர் கைலாயமோ வைகுந்தமோ போகட்டும். நீதான் சொல்லு, ஏன் பெண்களின் வாழ்வு இப்படி வளர்பிறை தேய்பிறையாக இருக்கிறது?" என்று நான் கேட்டேன். "அம்மா! நிலவுபோல இருக்கிறது நமது வாழ்வு என்றேனே, அதிலேயே சகல விளக்கமும் இருக்கிறதே! நிலவு தன்னாலே பிரகாசிப்பதில்லையே! சூரியனிடம் வெளிச்சத்தைக் கடன் வாங்கித்தானே பிரகாசிக்கிறது. கடன்பட்டு வாழ்பவர்கள் வளர்வதும் தேய்வதுமாகத் தானே இருக்க முடியும்? இரவில் வெளிச்சம், எப்போதும் ஒரே விதமாக இருக்க முடியாதே! பெண்களின் வாழ்வு ஆடவரால் தானே அமைக்கப்படுகிறது? அவர்களாகத் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் சௌகரியம், சக்தி, உரிமை இருந்தாலல்லவா, ஏன் தேய வேண்டும், ஏன் குன்ற வேண்டும், என்றும் ஒரே அளவு களிப்புடன் இருக்கும்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமே என்ற எண்ணம் ஏற்படும். எண்ணம் பலிக்கவும் வழி பிறக்கும். நிலவுக்கென்று தனி ஒளி இல்லை. அதுபோலவே நமக்கென்று தனி வாழ்வு இல்லை. அண்ணன், அப்பா, புருஷன், மகன், பேரன் என்று இப்படித் தானே இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டி இருக்கிறது; ஆடவரிடமிருந்து நாம் வாழ்வுக்கு ஒளி தேடுகிறோம். எனவே அவர்கள் இஷ்டப்பட்டு எந்தெந்தச் சமயத்தில் எந்தெந்த அளவு வெளிச்சம் தருகிறார்களோ அந்த அளவுக்குத்தான் நாம் பிரகாசிக்க முடிகிறது. நமது எதிர்வீட்டுக்காரர், மேயர் ஆனாரல்லவா? அதுவரையில் அவர் தமது மனைவியை, வீட்டுக்குள்ளேயேதான் வைத்திருந்தார். மேயரான பிறகு, அவர் விருந்து வைபவம் எதற்காவது போனால் மனைவியுடன் வரவேண்டும், அதுதான் முறை, நாகரிகம் என்று தெரிந்தது. உடனே அவர் தம் மனைவிக்குக் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தந்தார் - அம்மா இப்போது, பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை வகிக்கிறார்கள் - பிள்ளைகளுக்குப் பரிசளிக்கிறார்கள் - எங்கோ ஓர் கல்நாட்டு விழாக்கூடச் செய்தார்கள். இந்த 'வெளிச்சம்' சொந்தமல்லவே! அவர் கொடுத்த 'இரவல்'. எவ்வளவு காலத்துக்குப் பயன்படும்! உரியவர் கேட்டுப் பெற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? எங்கள் பள்ளிக்கூடத்திலே ஒரு வேடிக்கை நடந்ததம்மா போன வாரம். மீனா ஒரு 'ப்ரோச்' போட்டுக் கொண்டு வந்தாள். வாத்தியாரம்மா அதிகக் கஷ்டமான கணக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், கொஞ்சம் கோபத்துடன். ஏனெனில் கணக்கு மிகச் சுலபம் என்று கூறி எங்களை எல்லாம் திட்டிவிட்டு, அவர்கள் அதைப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்கள். மூன்று தடவை கணக்கு தவறாகவே முடிந்தது. நாலாவது முறை கோபத்துடன் அந்தக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று மீனாவைப் பார்த்துவிட்டு, கணக்கையும் நிறுத்திக்கொண்டு, அவளை அருகே அழைத்து 'ப்ரோச்'சை ஆசையுடன் பார்த்து, "ரொம்ப அழகாக இருக்கு மீனா" என்று புகழ்ந்தார்கள். மீனா பெருமையடைந்தாள். இதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் கமலா. மறுநாளே 'ப்ரோச்' கமலாவுக்குப் போய்ச் சேர்ந்தது. மீனாவின் முகம் வாடி விட்டது. கமலாவின் தங்கை காந்தா மீனாவுக்கு இரவல் கொடுத்தது அந்த 'ப்ரோச்'. இரவல் பொருள் எவ்வளவு அழகாக இருந்தால் என்ன? அதுபோல் இருக்கிறது பெண்ணின் வாழ்வு. நிலவுக்கு ஒளிதரும் சூரியன் இயற்கை நியதிப்படி, அளவும் காலமுமறிந்து ஒளி தருகிறான். பெண்ணுக்கு வாழ்வு அமைக்கும் ஆடவனோ எந்த நீதிக்கும் கட்டுப்பட்டவனல்ல. அவன் இஷ்டம்! இது மாறவேண்டுமானால், பெண்களுக்குத் தங்கள் வாழ்வைத் தாங்களே அமைத்துக்கொள்ளக்கூடிய திறமை, வசதி, உரிமை ஏற்படவேண்டும். சுலபத்தில் ஏற்படக் கூடியதா" என்று ராதா சொன்னாள். அவள் சொன்னது அவ்வளவும் உண்மைதானே. உன் அப்பா எனக்கு மகிழ்ச்சியும் பிறக்கச் செய்தார். அவரே அதனை மங்கவும் செய்தார். பௌர்ணமி அமாவாசை இரண்டும் ஏற்பட்டுவிட்டது என் வாழ்வில். தங்கம் மட்டும் எப்படித் தப்புவாள்? ராதா சொன்னது போல் அவளும் நிலவுதானே! சொந்தத்தில் வாழ்வு ஏது? இரவல் பிழைப்புத்தானே! அதற்குச் சிந்தாமணியால் சீரழிவு வருமா என்று எண்ணி அவள் யோசித்ததிலே ஆச்சரியமில்லை. உண்மையிலேயே தங்கம் திகைத்துத்தான் போனாள். தேம்பி அழவில்லை என் எதிரில். ஆனால் வந்துவிட்ட பிறகு நிச்சயம் அழுதுதான் இருப்பாள்.


     தங்கத்திடம் நான் கொண்டிருந்த கோபம் கூடக் கொஞ்சம் குறைந்தது. பாவம்! அவள் மட்டும் என்ன சுகப்பட்டாள்! எப்படிச் சுகம் கிடைக்கும் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன். அதுகூட வேடிக்கையல்ல தம்பி! சிந்தாமணியின் மீது இருந்த சீற்றம்கூட எனக்குக் குறையலாயிற்று. நானே எண்ணிப் பார்த்தேன். நாம் அவளைத் திட்டுகிறோம், சபிக்கிறோம்; வாழ்வைக் குலைக்க வந்தாளே சண்டாளி என்கிறோம். எல்லாம் சரி. ஆனால் பாவம், அவள் மீது மட்டுமா குற்றம்? அவர் அவளிடம் என்னென்ன பசப்பினாரோ, என்னென்ன ஆசை வார்த்தைகள் சொன்னாரோ, யார் கண்டார்கள்? அவளை எப்படி எப்படியோ சொல்லி நம்ப வைத்ததாலேதானே, அவள் இரண்டு மனைவிமார் இருந்தாலும் பரவாயில்லை, நாம் அவருடைய ஆதரவைப் பெறலாம் என்று எண்ண முடிந்தது. ஆண்கள் இந்த வித்தையிலே தேர்ச்சி பெற்றவர்களாயிற்றே. "உனக்கு ஒரு குறைவும் வராது" என்ற பேச்சு அவர்களிடம் கிளம்பாத நேரம் ஏது! உன் அப்பாவாவது பணத்தாசை பிடித்தவர். பரமசாது போல நாணயஸ்தர் போல வெளிவேஷம் போட்டுக் கொண்டு ஊரை ஏய்த்தவர். அவருடைய சொல்லைக் கூடத் தள்ளிவிடு. ராதாதான் சொன்னாள் தசரத சக்ரவர்த்தி எவ்வளவு பெரியவர்! கடவுளுக்கே தகப்பனார் ஆகக்கூடிய யோக்யதை அவருக்கு இருக்கத்தானே கதை எழுதினார்கள். அப்படிப்பட்டவர் பெண்கள் விஷயத்திலே எப்படி நடந்து கொண்டார். கௌசலை, சுமத்திரை ஆகியவர்களிடம் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தவர், கைகேயி வேண்டும் என்று கிளம்பினாரே; நியாயமா? ராதா எனக்கு முழு உண்மையும் சொன்னாள், ஏதோ ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தைப் படித்துவிட்டு. கிழவராம் தசரதர், ஏற்கெனவே இரண்டு மனைவிகளாம். கைகேயி நல்ல பருவம், நல்ல அழகு; அவளும் ஒரு ராஜகுமாரிதான். அவளைத் தனக்குக் கலியாணம் செய்துதரச் சொன்னாராம், கிழவர். கைகேயின் தகப்பனார், தங்களுக்குத்தான் இரண்டு தேவிமார்கள் இருக்கிறார்களே, மூத்த மனைவி தானே பட்டமகிஷி; அவளுக்குப் பிறக்கும் மகனுக்குத்தானே பட்டம். என் மகளை உமக்குக் கொடுத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு என்ன நிலை இருக்க முடியும்? வேண்டாம் இந்தக் கலியாணம். கைகேயியைப் பட்டமகிஷியாக்கிக் கொள்ளக்கூடிய, மணமாகாத மன்னருக்குத் தருவேன். அவளுடைய மைந்தன் மகுடம் பூண்டு அரசனாக வேண்டும் என்பது என் ஆசை என்றானாம். இந்தக் கிழ ராஜா கைகேயிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே அயோத்யா ராஜ்யம் கிடைக்கச் செய்கிறேன் என்று கூறிச் சத்யமே செய்து விட்டாராம். பார் தம்பி! சமயத்திற்கு ஏற்றபடி நடக்கும் தந்திரத்தை. கைகேயி அதே எண்ணத்தோடுதானே இருந்திருப்பாள். பிறகு மூத்த மகனுக்குத்தானே பட்டம் என்று அதே ராஜா சட்டம் பேச ஆரம்பித்து விட்டாரல்லவா? கைகேயி, என் தங்கை தங்கம் போல, கிழட்டு அரசனின் காமப் போக்கை உணர்ந்தவள் ஆட்டிப் படைத்தாள். இன்று வரையிலே உலகம் கைகேயியைக் கண்டிக்கிறதே தவிர, இந்த அரசன் ஒரு இளம் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையால், இது தருவேன் அது தருவேன் என்று சொல்லி நம்ப வைத்தானே, ஆசை காட்டினானே, பிறகு அவனே மோசம் செய்யத் துணிந்தானே; இது சரியா என்று உலகம் கேட்கிறதா? இல்லையே! அதுபோலத்தான் இந்தச் சிந்தாமணியை வசியப் படுத்த இவர் என்னென்ன ஆசை காட்டினாரோ? நம்பும்படி செய்வதற்காக எவ்வளவோ வாக்குறுதிகள் தந்துதான் இருப்பார். அந்தப் பேதையும் அதனை நம்பி ஏமாந்துதான் போயிருப்பாள். ஆயிரம் தடவை ராமாயணம் படித்தாலும் இந்தச் சூட்சமத்தை எங்கே உணரப் போகிறார்கள் பெண்கள். ராதா அடிக்கடி சொல்லுவாள், ராமாயணத்தை தான் புதிய முறையில் எழுதப் போவதாக! இதை எல்லாம் எண்ணினதால் எனக்குச் சிந்தாமணி மீது இருந்த கோபம்கூடக் கொஞ்சம் குறைந்தது. வீட்டிற்குள் சென்றதும் கிழவி, என் முகத்திலே முன்புபோலக் கோபக்குறி அதிகம் இல்லாததைக் கண்டு, "என்ன விஷயம்? அக்காவும் தங்கையும் சேர்ந்துவிட்டீர்களா? சரி! சிந்தாமணி இனித் தொலைந்தமாதிரிதான்" என்று கேலியாகக் கூறினாள். "இதற்குள் சொல்லிவிட முடியுமா? தங்கம், இனிமேல்தானே பேச ஆரம்பிப்பாள்!" என்று நான் சொன்னேன். "நீயும் கூடச் சேர்ந்தே போர் நடத்தினாலும் உங்கள் எதிரே சிந்தாமணி வரமாட்டாள்" என்றாள் கிழவி. "ஏன்?" என்று கேட்டேன். "அடி பைத்தியக்காரி! நானும் பைத்தியம் தான். சிந்தாமணியும் கிந்தாமணியும்; வேடிக்கை, வேடிக்கை" என்று கூறிக்கொண்டே சிரித்தாள் கிழவி. "என்ன வேடிக்கை; என்ன பைத்தியம்! என்ன சொல்கிறாய்?" என்று பதைபதைத்துக் கேட்டேன்.

     "இவ்வளவு சிரமமும் வீண். சோகமடைந்ததும் வீண் வேலை, தங்கத்திடம் போனதும் வீண் வேலை" என்று கிழவி கூறினாள். "வீண் வேலையா? எப்படி? சிந்தாமணி ஏற்கெனவே வந்தாகி விட்டதா?" என்று நான் சீற்றத்துடன் கேட்டேன். "உட்காரம்மா உட்கார்! சிந்தாமணிமீது போர் தொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. சக்களத்தியும் அல்ல, சாகசக் காரியுமல்ல, சிந்தாமணி பெண்ணல்லடி, பைத்தியமே!" என்றாள் கிழவி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:21 pm

ரங்கோன் ராதா

17

     "சிந்தாமணி, பெண்ணல்லடி" என்று கிழவி சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. "என்ன! என்ன?" என்று கேட்டேன் திகைப்புண்டு. கிழவி சிரித்துக் கொண்டே, என்னை அருகே அழைத்து தழுவிக் கொண்டு, "பயப்படாதே! எனக்குப் புதுச் சக்களத்தியாகச் சிந்தாமணி வருகிறாள் என்று பீதி அடைந்தாயே, அது வேண்டாம். சிந்தாமணி, சிந்தாமணி என்று உன் புருஷனும் அந்த உருட்டுக்கண்ணனும் பேசிக் கொண்டது ஒரு பெண்ணைப் பற்றியதல்ல. உன் புருஷனுக்கு இருக்கும் பேராசையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்திருக்கும் அந்த எத்தன், ஏதோ ஒரு வகையான குளிகை செய்து தருவதாகவும், அது இருக்குமானால் நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்றும், அதன் பெயர் சிந்தாமணி என்றும் சொல்லி, ஏமாற்றி இருக்கிறான். நீ வெளியே சென்றிருந்தபோது அவனும் உன் புருஷனும் இந்த விஷயமாகக் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசிக் கொண்டனர். அதனால் தான் தெரிந்து கொள்ள முடிந்தது" என்றாள். என் திகைப்பு நீங்கவில்லை. "நிஜமாகத்தானா அல்லது அவர்கள் பேசியதைத் தவறாக நீ அர்த்தம் செய்து கொண்டாயா" என்று நான் பன்னிப் பன்னிக் கேட்டேன். "தவறாகத்தான் நாம் இருவரும் இது வரையிலே அர்த்தம் செய்துகொண்டோ ம். சிந்தாமணி என்ற பேச்சை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தப்பு எண்ணம் கொண்டிருந்தோம். பாவம்! நீ மனதை ரொம்பக் குழப்பிக் கொண்டாய்" என்றாள் கிழவி. என் மனம் சமாதானப்படவில்லை. எப்படியாகும்? சிந்தாமணி, சிந்தாமணி என்று அவர் அடிமூச்சுக் குரலிலே பேசியதைக் கேட்டவள் நான். சிந்தாமணிக்குத் தனி ஜாகை வேண்டும் என்றும், சிந்தாமணி நிச்சயமாகச் சில நாட்களில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் கவலை வேண்டாம் என்றும் அந்த உருட்டுக் கண்ணன் உரைத்ததையும் கேட்டிருக்கிறேன். சிந்தாமணி பெண் அல்ல என்று இப்போது கிழவி கண்டுபிடித்ததாகக் கூறினால், எப்படி எனக்கு நம்பிக்கை பிறக்கும். குழம்பினேன். "ஆமாம்! எப்படி நீ, சிந்தாமணி பெண்ணல்ல, பொருள் - கேட்டதைத் தரும் மாந்திரீகக் குளிகை என்று கண்டுபிடித்தாய்? அப்படி நீ கண்டுபிடிக்கக்கூடிய விதத்திலே அவர்கள் என்ன பேசினார்கள், விவரமாகக் கூறு" என்று கேட்டேன்.


     "பைத்தியமே! கவலைப்படாதே. 'சிந்தாமணியை வைத்து வைக்கத் தங்கத்தால் பெட்டி செய்வதா? வெள்ளியால் பெட்டி செய்வதா?' என்று உன் புருஷன் கேட்டார். அந்த எத்தன், தங்கத்தால் செய்வது என்றும் நல்லது என்றான். 'அளவு எப்படி' என்று உன் புருஷர் கேட்டார். 'அரை ஜாணுக்கு அரை ஜாண் இருந்தால் போதும்' என்றான் எத்தன். இன்னும் என்ன வேண்டும், சிந்தாமணி பொருள்தான், பெண்ணல்ல என்பதை விளக்க. உனக்குச் சக்களத்தியாக வருபவள் அரை ஜாணுக்கு, அரை ஜாண் அளவா இருப்பாள்! அப்படிப்பட்ட அளவிலே எலிக்குட்டி இருக்கும்; பெண் இருக்க முடியுமா?" என்று கூறிவிட்டுச் சிரித்தாள். 

     "என்னவோ எனக்குத் திருப்தியாக இல்லையே, நீ சொல்வது? இதையா, இவ்வளவு இரகசியமாகப் பேசி இருப்பார்கள்?" என்று நான் கேட்டேன். "ஆமாடி அம்மா, இதே தான். உன் புருஷர் கேட்டார், 'இந்தச் சிந்தாமணி இன்னும் எவ்வளவு பேரிடம் இருக்கிறது' என்று. அந்த எத்தன் ஒரு நாலைந்து ராஜாக்கள் பேர் கூறி அவர்களிடமெல்லாம் சிந்தாமணி இருப்பதாகச் சொன்னான். இன்னமுமா சந்தேகம்!"

     கிழவி இவைகளைக் கூறிக்கொண்டு வரும்போதெல்லாம் என் மனதிலே, ரட்சை, தாயத்து, மந்திரித்த கயிறு, குளிகை இவைகளைப் பற்றி ஜனங்கள் ஆவலாகப் பேசுவது, பித்தளையைப் பொன்னாக்கும் இரசவாதத்தைப் பற்றிய பிரேமை இருப்பது, மாந்திரீக மை, அதைத் தடவிக்கொண்டால் யார் கண்ணிலும் படாமல் இருப்பது, காணாததைக் கண்டெடுப்பது, புதையலைக் கண்டுபிடிப்பது என்று இப்படி எல்லாம் ஜனங்கள் பேசிக் கொள்வார்களே, இதெல்லாம் கவனத்திற்கு வந்தது. இது போலவேதான், கேட்டதை எல்லாம் கொடுக்கும் ஒரு வஸ்து இருக்கிறது, அதன் பெயர் சிந்தாமணி என்று அந்த எத்தன் ஏமாற்றியிருப்பான். பணப்பித்தம் தலைக்கேறிய என் புருஷர், அதை நம்பி இருப்பார் என்ற நம்பிக்கை உண்டாக ஆரம்பித்தது என்றாலும், மீண்டும் மீண்டும் கிழவியைச் சகல விவரத்தையும் கூறச் சொல்லிக் கேட்டேன். நெடுநேரத்திற்குப் பிறகே, எனக்குச் சிரிப்பு வந்தது. கிழவி கூறியது போல, நான் ஒரு பைத்தியக்காரி தான் என்ற எண்ணம் நிலைத்தது. எதையோ, எதுவாகவோ எண்ணிக்கொண்டு ஏக்கம் கொண்டு மனதைப் புண்ணாக்கிக் கொண்டதுடன், தங்கத்திடம் வேறு இதைக் கூறி, அவளையும் சோகத்தில் விழச்செய்தேன். வீண் சந்தேகம் இவ்வளவு வேதனையைக் கொடுத்துவிட்டது! ஆனால் என்ன செய்வது! உன் அப்பாவின் போக்கும் சுபாவமும், என்னை அப்படி எல்லாம் எண்ணும்படி செய்தது. என்னுடைய அன்பை அபிஷேகித்து வந்தேன். அதுபோது தங்கத்தைத் தேடிக் கொண்டவர்தானே? அதுபோலச் சிந்தாமணி என்ற வேறோர் பெண்ணைத் தேடிக் கொண்டு அலைகிறார் போலும் என்று நான் தீர்மானித்ததிலே தவறு என்ன? ஆண்களின் சுபாவம், பெண்ணை அப்படி எல்லாம் எண்ணச் செய்கிறது. தம்பி! ஒரு வேடிக்கை, நீ நினைத்துப் பார்.


     "ஆஹா! அந்த அமிர்தா என்ன அழகு தெரியுமா!"

     "சுந்தரி பாடினால், சொக்கிவிடுவேன் நான்."

     "கமலா ஆடினால், என் மனம் கூடவே ஆடும்."

     இப்படி எல்லாம் ஆடவர்கள், சொந்த மனைவியிடமே தாராளமாகக் கூறுவர் - சகித்துக் கொண்டு அவள் கேட்டுக் கொண்டாக வேண்டும். முகம் கூடச் சுளிக்கக்கூடாது. வர்ணித்துக் கொண்டே இருப்பார்கள், வேறு மாதரைப்பற்றி. இன்னும் சிலர், வேறு மாதர்களை வர்ணிப்பதோடு நிற்க மாட்டார்கள்.

     "நீ இருக்கிறாயே சுடுமூஞ்சி! சுந்தரியின் முகத்தைப் பார்த்தாலே, இருக்கிற கஷ்டம் அத்தனையும் பறந்து போகுமடி."

     "நீயுந்தான் இருக்கிறே, நகைதாங்கியாக. இன்று ஒரு பெண்ணைப் பார்த்தேன். ஆறு ரூபா சேலைதான். கையிலே கண்ணாடி வளையல், காதிலே ஒரு தொங்கட்டம், இவ்வளவு தாண்டி! எப்படி இருந்தா தெரியுமா? பார்த்த உடனே... என்னத்தைச் சொல்ல! நீ இருக்கிறாயே பட்டுச் சேலை கட்டினா பத்திரகாளிபோல, நூல் சேலை கட்டினா மகமாயிபோல; அவள் அழகும் குணமும்..."

     இப்படிப் பிற மாதரை வர்ணித்தும், தன் மனைவியைக் கேவலப்படுத்தியும் பேசுவர். அவள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, எவளாவது, எந்த ஆடவரையாவது, அவர் ரூபத்தைக் கூட அல்லது, குணத்தைப் புகழ்ந்தாலும் போதும், ஆடவனின் முகம் கடுகடுக்கும், மனதிலே சந்தேகம் பிறக்கும். ரங்கோனில் ஒரு குடும்பம் தம்பி! நோயாளி மனைவி. ஒரு டாக்டர் வைத்தியம் செய்துவைத்தார். "நம்ம டாக்டர் ரொம்ப நல்லவர். அவர் பேசுகிற அன்பான பேச்சே, பாதி நோயைத் தீர்த்துவிடும்" என்று சொன்னாள். அவ்வளவுதான். "சரி, சரி! பேசாமே கிட. உடம்பை அலட்டிக் கொள்ளாதே" என்று அதட்டினான் புருஷன். தம்பி! நீ ஆச்சரியப்படுவாய். மறுதினமே வேறே டாக்டர். இவ்வளவு சந்தேகமும், கோபமும் ஒரே ஒரு குற்றமில்லாத வார்த்தையை அவள் சொன்னதற்காகத்தான். இப்படிப்பட்டதுதானே ஆடவரின் சுபாவம்.

     "இந்தச் சனியனைக் கட்டிக் கொண்டு அழுவதை விட!"

     "என் தலையிலே கொண்டு வந்து தள்ளினார்களே."

     "முகத்திலே விழிக்காதே."

     "உன் முகத்துக்குப் பவுடர் வேறே கேக்குதோ?"

     "நீ யாரடி என்னைக் கேள்வி கேட்க? எங்கே போனா உனக்கென்ன? எவளுடன் குலாவினா உனக்கு என்ன?

     இந்தப் பேச்சுக்கள் சர்வ சாதாரணமாகப் படித்த ஆடவர் கூறிக்கூட நான் கேட்டிருக்கிறேன் தம்பி. மனிதர்களைக்கூடத் தள்ளு தம்பி! நம்ம சாமிகள் கதையே கூட இப்படி இருக்கிறது. ராதா ஒரு நாள் சொன்னாள் எனக்கு ஒரு கதை. அந்த இந்திரன், யாரோ ரிஷிபத்தினி அகலிகையைக் கெடுத்தானாமே; அவள் புருஷன் அவளைக் கல்லாகும்படி சபித்துவிட்டானாம். ஆனால் இந்திரனுடைய தப்பு நடத்தைக்காக, இந்திராணி ஏதாவது கண்டிக்க முடிந்ததோ - சாபம் கொடுக்கக்கூடத் தேவையில்லை - கண்டித்தாள், பேசமாட்டேன் என்றாள் என்றாவது கதை இருக்கிறதா என்று கேட்பாள்; அதுபோலத்தானே இருக்கிறது சகல கதைகளும். ஆண் சாமிகள் பெண் சாமிகளைப் பொம்மைகளாக்கிச் சில சமயங்களிலே கொடுமைப்படுத்தியதாக எல்லாம் கூடக் கதை இருக்கிறது. 'ஏன் இருக்காதம்மா? இந்தக் கதைகளை எல்லாம் யார் எழுதினார்கள்? ஆடவர்கள்தானே!' என்று ராதா கூறுவாள். அப்படிப்பட்ட ஆடவர்களிலே, பேராசையும் கடுஞ்சித்தமும் நயவஞ்சகமும் கொண்டவர் உன் அப்பா! அவர் சிந்தாமணியைத் தேடுகிறார் என்றால் நான் சந்தேகிக்காமல் என்ன செய்ய முடியும்? நல்ல வேளையாக, சிந்தாமணி அவருடைய பெண்பித்தை அல்ல, பணப்பித்தைக் காட்டுகிறது என்பதைக் கிழவி கண்டறிந்து கூறி, என் மனதிலே நிம்மதி உண்டாகச் செய்தாள். முதலிலே எனக்குச் சந்தேகந்தான் என்றாலும் பிறகு தெளிவு பெற்றேன். பணத்தைப் பெறுவதற்கு அவர் எதுவும் செய்வார். இல்லாவிட்டால் நல்லவர்கள் கூடச் சேர்த்துக் கொள்ளக் கூசும் அந்த உருட்டுக் கண்ணனுக்கு, ஏன் அவ்வளவு உபசாரம் செய்யப்போகிறார். உன் அப்பா, உபசாரம் செய்கிறார்... அன்புடன் பேசுகிறார் - மரியாதை காட்டுகிறார் யாருக்காவது என்றால், சூட்சமம் இருக்கும். அவர்களால் ஆகவேண்டிய காரியம் ஏதாவது இருக்கும் - இலாபம் இல்லாமல் அன்பு காட்டவே மாட்டார். தங்கத்திடம் கொண்ட அன்புக்கே காரணம், பணந்தானே - இலாபந்தானே தம்பி! ஒரு வேடிக்கை கேள். ஒரு தடவை நமக்குத் தூரபந்து ஒருவர் - கிழம் - பெரிய குடிகாரர் - குடித்துவிட்டால் கண்டபடி பேசுவார் - அவரைக் கண்டாலே யாருக்கும் பிடிக்காது - என்னவோ வியாபாரம் செய்து இலாபம் கிடைத்ததாம் - அதைக் கொண்டு, நாலு ஏக்கர் நல்ல நஞ்சை வாங்கினார். அவருக்கு நோய் வந்தது. உன் அப்பா என்ன செய்தார் தெரியுமா? சதா அவர் வீட்டுக்குப் போவார் - வைத்தியரை அனுப்புவார் - பாவம்! அந்தக் கிழவனுக்கு யாரும் திக்கு இல்லை. ரங்கம்! கஞ்சி போட்டுக் கொடு என்று எனக்குச் சொல்லுவார். எவ்வளவு அன்பு பார் முதலியாருக்கு என்று இந்தப் பைத்தியக்கார ஜனங்கள் பேசிக்கொள்ளும். கடைசியிலே நடந்தது என்ன தெரியுமா? அந்தக் கிழவன் சாகும்போது, நிலத்தை எல்லாம், நெல்லியம்மன் கோயிலுக்கு, அபிஷேகச் செலவுக்கு என்று உயில் எழுதி, அதை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, உன் அப்பாவுடையது என்று எழுதிவிட்டான். அபிஷேகம் நடந்தது, ஆறு இளநீர், அஞ்சு பலம் எண்ணெய், ஆகக்கூடி ஆறு ரூபாய் செலவில். மற்றது உன் அப்பாவுக்குத்தான்! அப்படிப்பட்ட இலாப வேட்டைக்காரர் உன் அப்பா. அவர் ஏன் தேடமாட்டார் சிந்தாமணியை!


     "ஒழியட்டும், நமது பயம் தீர்ந்தது" என்று நான் கிழவிக்குக் கூறினேன். "உன் பயம் தீர்ந்தது என்று சொல்லடியம்மா! சிந்தாமணி என்றொரு சக்களத்தி வந்து முளைப்பாளோ என்று நீ கொண்டிருந்த பயம் போய்விட்டது. ஆனால், எனக்கு அப்படியில்லையே; இப்போது பயப்பட வேண்டியவள் நானடியம்மா நான்!" என்றாள் கிழவி. "ஏன்?" என்று கேட்டேன். கிழவி பதில் கூறவில்லை. மிரட்சி நிரம்பிய கண்களுடன் என்னைப் பார்த்தாள். 

     சிந்தாமணி பெண்ணல்ல, யாரோ ஒரு புரட்டன் காட்டிய ஆசைக்குறி என்று சொன்ன கிழவி, பிறகு இனித் தனக்குத்தான் ஆபத்து என்று மிரட்சியுடன் கூறக்கேட்டு நான் திடுக்கிட்டேன். பன்னிப் பன்னி, விவரம் கேட்டேன். விளக்கச் சொன்னேன்; கிழவி பதிலே சொல்லவில்லை. என் கவனத்தை வேறு வேறு விஷயங்களிலே திருப்பிவிட முனைந்தாள். எதையோ வாய் தவறிச் சொல்லிவிட்டுப் பிறகு, அதை மறைக்க முயல்வார்களே அதுபோன்று இருந்தது. நானும் கெஞ்சினேன், கோபித்துக் கொண்டேன், மிரட்டினேன், சலித்துக் கொண்டேன், ஒன்றும் பலிக்கவில்லை. "ரங்கம்! திக்கற்றுத் தெருச் சுற்றிக் கொண்டிருந்த இந்தக் கிழவியை நீ காப்பாற்றினாய்; நீ சுகமாக வாழவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. நான் வேறு என்ன செய்ய முடியும் உனக்கு. என்னால் முடிந்ததை எதைக் கொடுத்தாகிலும் செய்வேன். இது சத்தியம். எவ்வளவோ சுகமாக வாழ வேண்டிய உன்னைப் படாத பாடு படுத்திவிட்டான் உன் கணவன் - நீயும் எவ்வளவுதான் தாங்கிக் கொள்வாய். இவ்வளவு கஷ்டத்துக்கிடையேயும், உனக்கு எவ்வளவு நல்ல சுபாவம் இருக்கிறது. தெருவில் சுற்றும் நாய்கள் கூட என்னைக் கண்டு குரைத்தன. என் முகத்தைக் கண்டதும், கதவுகளைத் தாளிட்டு விடுவார்கள். நான் ஒரு வேண்டாப் பொருளாகிக் கிடந்தேன். என்னை நீ ஆதரித்தாய். இந்த உதவிக்கு ஈடாக என் உயிரையே கொடுத்தாலும் தகும்" என்று நெஞ்சு உருகும் விதமாகக் கிழவி பேசினாள்.

     முதலிலே ஆபத்து என்று சொன்னாள், பிறகு உயிரையும் கொடுக்கலாம், தகும் என்றாள். எனக்கு அவளுடைய பேச்சு பயமூட்டுவதாக இருந்தது. நெடுநேரம் முயன்றேன், அவளிடமிருந்து விளக்கம் பெற முடியவில்லை - சலிப்பு ஒரு புறம் - அத்துடன், சிந்தாமணி வருவாள் என்று கொண்டிருந்த பயம் போய்விட்டதால், மகிழ்ச்சியும் ஒரு புறம் இருந்தது. எனவே கிழவி விஷயத்தைக் கொஞ்சம் அலட்சியப்படுத்திவிட்டு, பிறகு கவனிக்கலாம் என்று விட்டுவிட்டு என் மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியிலேயே மூழ்க ஆரம்பித்தேன். நான் அப்போது அறியேனடா கண்மணி, கிழவிக்கு உண்மையிலே ஆபத்து வர இருப்பதை.


     மறுதினத்திலிருந்து உன் தகப்பனாரும் அந்த உருட்டுக் கண்ணனும் மிகச் சுறுசுறுப்பாக ஏதேதோ வேலை செய்தனர். எனக்கு ஒன்றும் தெரியாது என்பது அவர்கள் எண்ணம். மந்திரவாதி, உன் அப்பாவைத் தனக்குப் பரிபூரணமான அடிமையாக்கிக் கொண்டான். பூஜைகள் நடக்க ஆரம்பித்தன. கொஞ்சம் வாடைக்காற்று அடித்தாலும், உடனே குளிக்க வெந்நீர் போடச் சொல்கிற உன் அப்பா, அந்தப் பூஜையின் போதெல்லாம் ஈரத் துணியுடன், ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரங்கூட உட்காருவார்; தனி அறையிலே பூஜை நடக்கும்; நாங்கள் யாரும் பார்க்கக் கூடாது. நெடுநேரம் மெள்ள ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பான். பிறகு ஆவேசம் வந்தவன் போலச் சில விநாடி கூவுவான். அவன் ஆட்டி வைத்தபடி எல்லாம் அவர் ஆடினார்.

     நான் குறிப்பிட்டேனே முன்பு, "நான் பூவோடும் மஞ்சளோடும் போய்விட்ட 'வெள்ளிக்கிழமை' அதற்கு நாலு நாட்களுக்கு முன்பு, ஒரு இரவு நடுநிசி இருக்கும். விழித்துக் கொண்டேன்; வயிற்று வலியாக இருந்தது. புறக்கடைக்குப் போக வேண்டுமென்று தோன்றிற்று. கிழவியை எழுப்பித் துணைக்கு அழைத்துக் கொண்டு போகலாமென்று கிழவி படுத்திருந்த பக்கம் திரும்பினேன். தம்பி! கிழவி இல்லை. என் மனம் 'கபீல்' என்றாகி விட்டது; உரக்கச் சத்தமிட்டேன். பதில் இல்லை. கைவிளக்கை எடுத்துக் கொண்டு தேடலானேன். புறக்கடைக் கதவு திறந்திருந்தது. விளக்கைக் கூடத்திலே வைத்துவிட்டு, அடிமேல் அடியெடுத்து வைத்து, சந்தடி செய்யாமல் சென்றேன். நான் கண்ட காட்சியை, மறக்கவே முடியாது. இப்போது அதை எண்ணிக் கொண்டாலும் பயமாக இருக்கிறது. கிழவி பிணமாகக் கிடந்தாள்! அவளருகே ஒரு பெரிய நாகம், அதுவும் சாகடிக்கப்பட்டுக் கிடந்தது. உன் தகப்பனார், பிணத்தருகே உட்கார்ந்திருந்தார். அவருடைய கண்கள் ஏதோ ஒரு கறுப்புத் துணியால் கட்டி விடப்பட்டிருந்தது. மந்திரம் செய்ய வந்தவன் இல்லை; என் மனம் மருண்டது. சுற்று முற்றும் பார்த்தேன். இரு உருவங்கள் புறக்கடையின் கோடியிலே உலவிக் கொண்டிருக்கக் கண்டேன். என் கணவரின் கண்களைக் கட்டிவிட்டு, மந்திரவாதி வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம் பேசுகிறான் என்று யூகித்துக் கொண்டேன். பணத்தாசையால் புத்தியை இழந்துவிட்ட உன் தகப்பனார் அவன் சொல்லிக் கொடுத்த ஏதோ சொற்களைச் சில நிமிஷங்களுக்கொருமுறை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நரபலி! நரபலி! என்ற வார்த்தைகள் மட்டுமே, கொஞ்சம் தெளிவாகத் தெரிந்தன. விஷயமும் எனக்குப் புரியலாயிற்று. பெரிய புதையல் தேடுபவர்கள் தேவதைகளை வசியம் செய்வார்களென்றும், அப்போது, தேவதைக்கு நரபலி தருவது வாடிக்கை என்றும் பலர் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறேன். சிந்தாமணியைப் பெறுவதற்காக, நரபலி கொடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்து விட்டது. ஆத்திரமும் அழுகையும் பொங்கிற்று. அடக்கிக் கொண்டேன். முழு விவரமும் தெரியவேண்டுமே, அதனால். கிழவிதான் பலியாக்கப்பட்டாள் - பாம்பு செத்துக் கிடப்பானேன்? இந்தப் பாதகத்துக்குக் காரணமாக இருப்பவன் வேறோர் ஆளிடம் ஏதோ இரகசியம், அந்த இடத்தில் அந்த நேரத்தில், பேசுவானேன்? இந்த மர்மத்தைக் கண்டறிந்தாக வேண்டும் என்று துடித்தேன். எப்படியாவது, இரகசியமாகப் பேசிக் கொண்டிருப்பவர்கள் அருகே செல்லவேண்டும், அவர்கள் அறியாமல். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். ஒரு யுக்தி தோன்றிற்று. தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து, புறக்கடைப் பக்கம் துரத்திவிட்டு, நான் அங்கிருந்த புதரிலே பதுங்கினேன். கன்று ஓடிற்று! உன் அப்பா அந்தச் சத்தத்தைக் கேட்டு மந்திரத்தை வேக வேகமாகச் சொன்னார் - பாவம் - தேவதை வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டார் போலிருக்கிறது. சந்தடி கேட்டதும், மந்திரவாதி பயந்துவிட்டான் போலிருக்கிறது. பேசுவதை நிறுத்தி விட்டு, அவனும் அவனுடன் இருந்தவனும் கவனிக்கலாயினர். கன்று என்று தெரிந்ததும் சும்மா இருந்து விட்டனர். கன்று அங்குமிங்கும் நடமாடிற்று. நான் அந்தச் சந்தடியைச் சாக்காக வைத்துக் கொண்டு, மெள்ள மெள்ள, புதர், செடி, கொடி, இவைகளின் மறைவிலேயே நடந்து, நடந்து, அவர்கள் உலவிக் கொண்டிருந்த இடத்தருகே போய்ச் சேர்ந்தேன். எப்படித்தான் எனக்கு அந்தத் தைரியமும் தந்திரமும் பிறந்ததோ தெரியவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது கொஞ்சம் தெளிவாகவே என் காதிலே விழுந்தது.

     "போலீஸ் உடையைப் போட்டுக் கொள்வதுதானே. காரியத்தைச் சுருக்கமாக முடித்துவிட வேண்டுமே" என்றான் மந்திரவாதி.

     "செய்வோம். நான் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று எப்படி நம்புவான் அந்த ஆள். ஒரு சமயம், உண்மையான இன்ஸ்பெக்டர் அவனுக்குத் தெரிந்திருந்தால் என்ன செய்வது..." என்றான் மற்றவன்.

     "பைத்தியண்டா உனக்கு, உடையைப் பார்த்ததுமே உளற ஆரம்பித்துவிடுவான், நீ ஸ்பெஷல் போலீஸ் என்று சொல்லு" என்று தைரியமும் யோசனையும் தந்தான் புரட்டன்.


     "எனக்கென்னமோ தைரியம் வரவில்லையே" என்றான் மற்றவன். மந்திரக்காரன் தலையில் அடித்துக் கொண்டு, "சரி, உடையை என்னிடமே கொடுத்துத் தொலை; நானே காரியத்தை முடித்துவிடுகிறேன்; நீ போய்ச் சாவடியில் இரு அங்கு கூட வேண்டாம்; ஊருக்கு வெளியே சென்று நமது மடத்திலே இரு; நான் வந்து சேருகிறேன். ஒட்டு மீசையும் கொடு" என்றான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவன் போய்விட்டான். இந்த ஜெகஜாலப் புரட்டன், போலீஸ் உடையுடன், என் கணவர் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். நானும் மெள்ள வந்து விட்டேன் அந்த இடத்தருகே. என் கணவர் கண் கட்டப்பட்டு உட்கார்ந்திருந்தாரல்லவா? அவரருகே சென்று, கைப்பிரம்பால் ஒரு அடி கொடுத்துக் கட்டை அவிழ்த்தான். நரபலி! நரபலி! என்று முணுமுணுத்துக் கொண்டே உன் அப்பா, அடி கொடுத்தது யார் என்று பார்த்தார் - பார்த்ததும் "ஐயோ! போலீஸா" என்று அலறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த விளக்கு மங்கலானது. புரட்டனின் வேஷமும் பொருத்தமாக இருந்தது. பீதி அடைந்து விட்டார். அவன் வழக்கமான குரலையும் மாற்றிக் கொண்டு பேசலானான்.

     "படுபாவி! கொலை! படுகொலை! எங்கே உன் கூட்டாளி."

     "ஐயோ! ஐயோ!"

     இவ்வளவுதான். அதுவும் ஈனக்குரலில் வெளிவந்தது உன் தகப்பனாரின் வாயிலிருந்து. "தூக்குக் கிடைக்கும் துஷ்டா! பிணம்! பாம்பு! இதோ விசில் கொடுத்து ஜவான்களை வரவழைத்து..." என்று மிரட்டினான் புரட்டன். அப்படியே விழுந்து அவன் கால்களைப் பிடித்துக் கொண்டார் உன் தகப்பனார்.

     "காலில் விழுந்தாலும் இல்லை, கோடி கோடியாக என் காலடியில் கொட்டினாலும் விடமுடியாது. நான் ஏதோ பரிதாபப்பட்டு விட்டுவிட்டாலும், மேலதிகாரிகள் காதில் விழுந்தால் என்ன ஆகும்? நானும் மண் தின்ன வேண்டியதுதான்" என்றான்.

     இந்தக் காட்சி நடந்துகொண்டே இருந்தபோது புறக்கடையின் கோடியில் வெகு தொலைவில், மினுக் மினுக்கென்று விளக்கொளி தெரிந்தது. விளக்கொளி வரவரப் பெரிதாகிக் கொண்டே வரலாயிற்று, நெருங்கலாயிற்று. நான் தான் முதலில் அதைக் கவனித்தேன்.

     "நடடா! வாடா! ராஸ்கல்!" இப்படித் தொலைவிலே பேசும் குரல் கேட்டது - கேட்டதும், இருவரும் திடுக்கிட்டனர்.

     "அட இழவே! யாரோ வந்திருக்கிறார்களே! ரோந்துக் காரரோ?" என்று பதைபதைப்புடன் கூறிக்கொண்டே பாம்பைக் காலாலே புரட்டன் வீசித் தள்ளினான் ஒரு புறமாக. பிணத்தின் தலைப்பக்கம் போய் நின்றான். அவன் சொல்லாமலேயே கால் பக்கம் இவர் பிடித்தார். அவசர அவசரமாகப் பிணத்தைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றனர். நான் உள்ளே நுழையச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்குள் நாலைந்துபேர் ரோந்துக்காரர்கள், தோட்டத்துக்குள் நுழைந்தனர்.

     "யாரது? ஐயோ! திருடர்!" என்று பலமாகக் கூவினேன்.

     "அம்மா! அம்மா! பயப்படாதீர்கள்! திருடரல்ல; போலீஸ்! போலீஸ் நாங்கள்" என்று அவர்கள் கூறினர். நான், மங்கலாக இருந்த விளக்கைத் தூக்கிப் பிடித்தபடி, "யார் போலீஸா?" என்று பயந்தவள் போலக் கேட்டேன். "ஆமாம்மா; ரோந்து வேலையாக இப்படிப் போனோம். இவன் யாரோ, திருட்டுப் பயல், இந்தப் பக்கமாக வந்தான். நமது வீட்டுத் தோட்டப்பக்கமாக வந்தது போல் தெரிந்தது. கேட்டதற்குச் சரியான பதில் தரவில்லை. சரி! இங்கேயே வந்து பார்ப்பது என்று வந்தோம்" என்றனர்.

     "நான் அதைக் கண்டேனா? எனக்கு வயிற்றுவலி, தோட்டத்துக்கு வந்தேன்; திடீரென்று கும்பலாக வரவே, பயந்து விட்டேன்; இவன் இந்தத் தோட்டத்திலிருந்து வந்திருக்க முடியாது. நான் இங்கு கொஞ்ச நேரமாகவே இருக்கிறேன்" என்று சொன்னேன். அவர்கள் நடுநிசியில் அங்கு வந்து நான் பயப்படும்படி நடந்துகொண்டதற்காக வருந்தி, அவனை விரட்டி விட்டுப் போய்விட்டார்கள்.

     "முதலியார்...?" என்று கேள்வி போட்டான், அதிலே ஒரு புத்தியுள்ளவன்.

     "அவருக்குத் தலைவலி" என்றேன் நான்.


     அனைவரும் நெடுந்தூரம் போயான பிறகு, நான் விளக்கை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். உன் தகப்பனார் அடியற்ற மரம்போல என் காலில் விழுந்தார். "ரங்கம்! ரங்கம்! என் பிராணனைக் காப்பாற்றினாயே! நீ எங்கே இருந்தாய்? எப்படி இங்கு திடீரென்று, இந்த நேரத்தில் வந்தாய்? எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே! இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறதே" என்று பிரலாபித்தார். "கதவைத் தாளிடுங்கள் முதலில்; கைத்தடியைக் கொடுங்கள் இப்படி. குறுக்கே ஒன்றும் பேசாமல் என்னோடு வாருங்கள். போலீஸ் நாடகமாடினவன் எங்கே காட்டுங்கள்" என்று கூறிக்கொண்டே நடந்தேன் - கூறினேனா! கட்டளையிட்டேன். நான் சொன்னபடியே நடந்துகொண்டார். போலீஸாக நடித்த புரட்டனை ஒரு அறையில் தள்ளி வைத்திருந்தார். அந்த அறையைத் திறந்தார்; அவன் வெளியே வந்தான்.

     "டே! ஒட்டு மீசையை எடு" என்று கூறிக்கொண்டே ஓங்கி அவன் மண்டை மீது அடித்தேன். தம்பி! அவன் ஒரே ஒரு முறைதான், "ஐயோ" என்று அலறினான். அலறிக்கொண்டே கீழே வீழ்ந்தான். இரத்தம் ஆறாகப் பெருகிற்று. மூச்சில்லை. பேச்சில்லை; நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டே, ஒரு விநாடி நின்றோம்.

     "ஒரே நாளில், ஒரே வீட்டில் இரண்டு கொலை" என்று நான் மெதுவாகக் கூறினேன்.

     "இவன்...?" என்று பயந்து கேட்டார் உன் அப்பா.

     "உமக்கு சிந்தாமணி வாங்கித் தர வந்தவன் - கிழவியைக் கொன்றவன் - உம்மை மிரட்டிப் பணம் பறிக்கப் போலீஸாகவும் நடித்தவன்" என்று நான் ஆத்திரத்துடன் கூறினேன். தலையில் கைவைத்துக் கொண்டு, அவர் உட்கார்ந்துவிட்டார். புரட்டன், செத்துவிட்டானா, மூர்ச்சையடைந்துவிட்டானா என்று கூடத் தெரியவில்லை. "கிழவி எங்கே?" என்று கேட்டேன். அறைக்குள்ளே கை காட்டினார்.

     தம்பி! அங்கே பிணம் கிடத்தப்பட்டிருந்தது.

     அறைக்குள்ளே, அவருடைய பேராசைக்குப் பலியான கிழவி; வெளியே, என் கோபத்தால் தாக்கப்பட்டுக் குற்றுயிரானவன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:23 pm

ரங்கோன் ராதா

18

     கொஞ்ச நேரம் நாங்கள் இருவரும் என்ன செய்வது, என்ன பேசுவது என்றே புரியாமல், திகைப்பூண்டு இருந்தோம். உன் அப்பாவின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வெளி வந்தது. நான் அழவில்லை. அதற்கும் கொஞ்சம் சக்தி வேண்டும். அந்தச் சக்தியற்றவளாகிவிட்டேன், அந்த நேரம். யோசித்தேன், கொஞ்சம் தெளிவு வந்ததும், யோசித்தேன், யோசித்தேன், நெடுநேரம்; ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று விளங்கவே இல்லை. உள்ளே பிணம்! வெளியே பிணத்துக்குச் சமமான நிலையில் புரட்டன்! இரண்டு கொலைக் குற்றங்கள்! கணவனும் மனைவியும் குற்றவாளிகள்! தம்பி! எங்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார், நீ. கண்ணே! அந்த நடுநிசியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறாய்.

     "கிழவி பிணமான பிறகு, என்ன செய்வதாக யோசனை செய்திருந்தீர்கள்" என்று நான் கேட்டேன் அவரை, நெடு நேரத்திற்குப் பிறகு.

     "என்ன? என்ன கேட்கிறாய் ரங்கம்?" என்று குழப்பத்துடன் பேசினார் என் கணவர்.

     "பாவிகளே அனாதையாக வந்த கிழவியை நரபலி கொடுத்தீர்களே; அவளைப் பிணமான பிறகு என்ன செய்வதாக இருந்தீர்கள்?" என்று கேட்டேன்.


     "நான் என்ன காரியம் செய்துவிட்டேன், ரங்கம்! கொலைக்கும் உடன்பட்டேன். இந்தப் பாவியின் சொல்லால் கெட்டேன்" என்று கூறிக்கொண்டே அழலானார். அவருடைய அழுகுரல் என் மனதிலே துளியும் பச்சாத்தாபத்தைக் கிளப்பவில்லை. "முதலியாரே! பிறகு அழலாம்! ஆயுட்காலம் பூராவும் அழுதுகொண்டே இரும். இப்போது உங்கள் அக்ரம ஏற்பாட்டின்படி முழு விவரத்தையும் சொல்லும்" என்று நான் அவருடைய மனத்தைக் குத்துகிற விதமாகக் கேட்டேன்.

     "அந்தப் பாவி, என்னென்னவோ சொன்னானே! நான் எதை என்று சொல்வேன். எதை நம்புவது. என்னைக் கொலைகாரனாக்கினான் - பிறகு, அவனே போலீஸாக வந்தான் - என்னென்ன செய்தான்..." என்று திணறித் திணறிப் பேசினார்.

     "ஐயா, தரும சொரூபீ! உம்முடைய நல்ல குணத்தைத் திடீரென்று இந்தப் பாவி கெடுத்துவிட்ட கதையைப் பிறகு பேசலாம். கிழவியைக் கொலை செய்த பிறகு என்ன செய்ய எண்ணியிருந்தீர்கள்? பிணத்தைத் தின்றுவிட இருந்தீர்களா? பேசுமய்யா, பெரிய மனிதரே! பேசு!" என்று நான் கேட்டேன். ஆமாம் தம்பி! எனக்கு அவ்வளவு ஆத்திரம். மறுபடியும் என் காலிலே விழுந்தார்.

     "நாலு பேர்! ஓடக்காரர்கள்! உப்பு மூட்டை!" என்று ஏதேதோ உளறினார்.

     "என்ன சொல்லித் தொலைக்கிறீர்கள். சீக்கிரம் தெளிவாகச் சொல்லித் தொலையுமய்யா" என்று நான் நிர்பந்தப்படுத்தினேன்.

     கிழவியைப் பலி கொடுத்த பிறகு, நாலு பேர் ஓடக்காரர்கள் வருவார்களென்றும், அவர்களிடம் பிணத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்றும், அவர்கள் என்னென்னவோ செய்து அந்தப் பிணத்தைத் துண்டுகளாக்கி, உப்பு மூட்டையிலே போட்டு, தொலை தூரத்தில் எதுவோ ஒரு காட்டு ஆறாம், அதிலே போட்டுவிடுவார்கள் என்றும் சொன்னான்" என்றார்.

     "எப்போது வருவார்கள் என்றான், இந்தப் புரட்டன்" என்று கேட்டேன்.

     "மூன்று மணிக்குள்" என்றார். கடிகாரத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி. ஒரு முடிவுக்கு வந்தேன். கிழவியின் முகத்தைப் பார்த்தேன் - கண்ணீர் எனக்கு பெருகிற்று - அவள் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன். கைத்தடியை மீண்டும் எடுத்தேன் - குற்றுயிராகக் கிடந்த அந்தக் கொடியவன் மண்டையிலே மற்றுமோர் அடி கொடுத்தேன். மீண்டும் பேய் பிடித்துக் கொண்டதோ என்று பயந்திருப்பார் உன் அப்பா!

     "தீர்ந்துவிட்டிருக்கும்! சரி! கோணிப் பையில் போட்டு இந்தக் கொடியவனை, ஓடக்காரர்கள் வந்ததும், கொடுத்துவிடு" என்று உத்தரவிட்டேன்.

     "வராவிட்டால்...?" என்று குழந்தைபோலக் கேட்டார்.

     "மூட்டையைத் தூக்கிக் கொண்டு போய், மார்க்கட்டிலே விற்கவேண்டும்" என்று கேலியும் செய்தேன்.

     "ரங்கம்! அந்தத் தடியாலே என்னையும் அடித்துக் கொன்றுவிடு. அது மேல், இந்த நிலைமையை விட" என்றார் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. ஆனால், பரிதாபம் நீடிக்கவில்லை. வாயில் வந்தபடி, என் வயிற்றெரிச்சல் அடங்குமட்டும் திட்டித் தீர்த்தேன். புறக்கடைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. 

     "சரி! ஓடக்காரர்கள்! கட்டு, மூட்டை! தைரியமாகக் கொண்டு போய்க் கொடு" என்றேன். ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்போல, நான் சொன்னபடி செய்துவிட்டு வந்தார்.


     "சிந்தாமணி பூஜைக்காக வாங்கி வைத்த வாசனைச் சாமான்கள், சாம்பிராணி சகலமும் இருக்கிறதல்லவா? நாளைய தின முதல், நாலு நாளைக்கு, அது அவ்வளவும் நமது வீட்டிலே உபயோகமாக வேண்டும். வேறு ஒரு வழியும் இல்லை, உமது தலை தப்ப. கிழவியின் பிணத்துக்கு, நாலு நாளைக்குப் பூஜை செய்துதான் நீர் பிழைக்க வேண்டும்" என்று நான் கூறிக் கொண்டே இருக்கையில் மிரள மிரள விழித்தார் என் கணவர். "பயந்து என்ன பயன் இப்போது? தூக்குத் தண்டனை உமக்குக் கிடைத்தால், என் குழந்தை நிர்க்கதியாகும். நான் இறந்தாலும் பரவாயில்லை. நான் சாகத் துணிந்துவிட்டேன். இன்றைய நாலாம் நாள் நான் செத்துவிடுவேன். சுடலையில் கொளுத்தலாம். பைத்தியம் என்று எண்ணுகிறீரா! பைத்தியமல்ல! தியாகம், தியாகம் என்று யாராவது பெரியவர்கள், எப்போதாவது சொல்லக் கேட்டிருக்கிறீர்களல்லவா! அதுதான் இது. நான் சாகப் போகிறேன், உம்மைக் காப்பாற்ற. உத்தமராகிய உமக்கு ஒரு ஆபத்தும் வரக்கூடாதே என்பதற்கு அல்ல; என் ஆசைக் கண்மணியின் நன்மையை எண்ணி இக்காரியம் செய்ய நினைக்கிறேன். மேலும் நான் உண்மையில் சாகப் போகிறதுமில்லை. என் பிணம் தீப்பிடித்து எரிவதைக் கூட நான் என் கண்களால் காண முடியும். முதலியாரே! விஷயத்தை விளக்கமாகச் சொல்கிறேன் கேளும். எனக்குக் கடுமையான அம்மை கண்டுவிட்டது என்று ஊரிலே கூறிவிடும் காலையிலே. அம்மை என்றால் யாரும் அருகே நெருங்கமாட்டார்கள். அம்மையை நீக்குவதற்காக, அற்புதம் தெரிந்த சாமியார் ஒருவர் வந்திருப்பதாகவும், அவருடைய கண்டிப்பான உத்தரவின்படி யாரும் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்றும் சொல்லிவிடவேண்டும். நாலாம் நாள் நான் இறந்துவிட்டதாகக் கூறி, கிழவியைக் கொண்டுபோய்க் கொளுத்திவிட வேண்டும். பிணமான பிறகும், யாரும் நெருங்கக் கூடாது. முகத்தைக்கூடப் பார்க்கக்கூடாது. தகப்பனாரும், தங்கையும், குழந்தையுங்கூடக் காணக்கூடாது. அது ஊருக்கே பேராபத்தாகும் என்று சாமியார் சொல்வதாகச் சொல்லிவிடும். அம்மையால் இறந்தவர்களைக் கொளுத்தக்கூடாதே என்பார்கள். இது ஒரு தனிவிதமான அம்மை, கொளுத்திவிடத்தான் வேண்டும் என்று சாமியார் சொன்னதாகச் சொல்லிவிட வேண்டும். எதையும் சாமியார் சொன்னார், சாமியார் சொன்னார் என்று கூறிவிட்டால், நமது ஜனங்கள் வாய்திறந்து ஏன் என்று கேட்கமாட்டார்கள். நான், இங்கு நாலு நாள் சாமியார் கோலத்தில் தங்கி இருப்பேன். பிறகு, நான் சாமியார் கோலத்திலேயே ஊரைவிட்டுச் சென்றுவிடுவேன் - எனக்கு இனி இந்த வாழ்க்கை வேண்டாம் - இவ்வளவும் செய்கிறேன் என் குழந்தைக்காக! நீ, எவ்வளவு கொடுமை செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஒரே ஒரு நல்ல காரியம் செய்; கடைசிக் காலத்திலே என் மகனைக் கைவிடாதே! அவன் ஓராண்டுக் குழந்தை! அவனை விட்டுப் பிரிந்து போகிறேன் - காவி அணிந்து கொண்டு. எனக்குக் கேடு செய்தாய் - துரோகம் செய்தாய், கொலைகாரனானாய், உன்னால் பிணமாக்கப் பட்டாள் ஒரு ஏழை. இந்த அளவு போதும். எவ்வளவு கேவலமான கெட்ட குணம் கொண்டவனும் இதைவிடக் கொடுமை செய்ய முடியாது. ஆகவே தான், நான் உன்னை நம்புகிறேன். இப்போது இந்தக் காட்சி உன் மனதிலே இருக்கும் கெட்ட எண்ணத்தையே சுட்டுச் சாம்பலாக்கிவிடும் என்று நம்புகிறேன்." 

     "ஆகவேதான் என் குழந்தைக்கு ஆபத்து நேரிடாது என்று துணிந்து இந்த ஏற்பாட்டைக் கூறுகிறேன். எனக்கு ஏதோ ஒரு வகை நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்ற போதிலும், இன்னும் கொஞ்சம் பாதுகாப்பும் முன்னேற்பாடும் அவசியம். அதற்காக இரண்டு காரியம் செய்தாக வேண்டும். ஒன்று, நடந்தது அவ்வளவையும் எழுதிக் கையெழுத்திட்டு என்னிடம் தர வேண்டும். என் குழந்தைக்குத் துரோகம் செய்ய நினைத்தால் உன்னை என்ன கதியாக்க முடியும் என்னால், அந்தக் கடிதத்தைக் கொண்டு, என்பதை எண்ணியாவது நல்வழிப்படு. இரண்டாம் காரியம், என் குழந்தையைத் தங்கம் ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டாக வேண்டும். அவள் காலில் விழுவாயோ, மிரட்டுவாயோ, என்ன செய்வாயோ எனக்குத் தெரியாது. ஆனால், ஸ்வீகாரப் பத்திரம் வேண்டும். இந்த இரண்டு பாதுகாப்புடன் வேறொன்றும் இருக்கிறது. எந்தச் சமயத்திலே நீ, என் குழந்தைக்குத் துரோகம் செய்தாலும், புரட்டன் அடைந்த கதிதான் உனக்கும். உன்னால் மட்டுந்தான் கொலை செய்ய முடியும் என்றுதானே நினைத்தாய். நீயே பார்த்தாயல்லவா, புரட்டனைக் கொலை செய்தேன், ஜாக்கிரதை. சம்மதமா? சம்மதத்தைக் கேட்பானேன். செய்துதான் ஆகவேண்டும். நீ, இனி அழுது பயன் இல்லை; கெஞ்சிப் பயனில்லை; காலில் வீழ்ந்தும் பயனில்லை. நான், இனி உன்னோடு வாழமுடியாது. நான் சாமியாராகிவிடப் போகிறேன். இது மாற்றமுடியாத தீரமானம். எனக்கு இனி இங்கு இருந்தால், அடுத்தபடி உன்னைக் கொலை செய்யத் தோன்றும் - தங்கம் இரண்டாவதாகக் கொலை செய்யப்படுவாள். புலி ஒரு முறை இரத்தம் குடித்தானதும் மறுபடியும் மறுபடியும் தேடுமாமே? அப்படி ஆகிவிடுவேன். என் மகனின் நலனை எண்ணியேதான் நான் இதுவரையில் கூட இங்கு இருந்தேன். இனி இருக்க முடியாது. எனக்கு இந்தக் குடும்ப வாழ்க்கையே வேண்டாம். பிச்சைக்காரியாக உலவுவேன். பிறந்ததற்கு நான் படவேண்டியது அவ்வளவும் பட்டாயிற்று. இனி நான், ஆண்டவனின் அருளைப் பெறுவதற்கு, அல்லும் பகலும் பாடுபடுவேன். பந்தம், பாசம், பற்று எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிந்துவிட்டேன். மகனிடம் கொண்டுள்ள ஆசை மட்டும் போகவில்லை. ஆகவே தான் சில நிபந்தனை விதித்தேன். நான் இனி ரங்கமல்ல! உன் மனைவி அல்ல! நான் இனி ஒரு நாடோ டி பிச்சைக்காரி, சாது, சன்யாசி. ஆமாம்! முதலியாரே, முதலியாரே! என்று அழைக்கிறேனே, அதிலிருந்து தெரிந்து கொள்ளும், நமக்கு இருந்து வந்த சம்பந்தத்தை அறுத்துவிட்டேன் என்பதை. இதோ தாலி" என்று கூறினேன். என் கண்களிலும் நீர், அவர் கண்களும் குளம். என் கால்களைப் பிடித்துக் கொண்டார். பிடியை உதறிவிட்டு என் படுக்கை அறை சென்றேன் - கத்தரிக் கோலெடுத்து, என் தலை முடியை ஒட்ட வெட்டிவிட்டேன், நகைகளைக் கழற்றிப் பெட்டியிலே வீசினேன். அலங்கோல ரூபத்துடன் மீண்டும் அவர் முன் வந்து நின்றேன்; அவர் கோவெனக் கதறலானார். வாயை மூடச் சொல்லி ஜாடை காட்டினேன். மூடிக்கொண்டார். "இது போதாது! நாளைக்குத் தலையை மழுங்கச் சிரைத்தாக வேண்டும். நீரேதான் செய்யவேண்டும்" என்று கூறினேன். தம்பி! பிறகு நடந்ததைச் சுருக்கமாக்கிவிடுகிறேன். நாலு நாள் வீடு முழுதும் ஒரே சாம்பிராணி மயம் - பிண நாற்றம் தெரியாதிருக்க! ஊரெங்கும் ஒரே பேச்சு, எனக்கு கடுமையான அம்மை என்று. சாமியார் கோலத்திலே நான் வீட்டிலே இருந்தேன். தெருவில் இருந்தபடி விசாரித்துவிட்டுப் போவார், என் தந்தை, பாபம்! "மகளைக் காணாமல் இந்த ஜன்மம் எதற்கு? பிராணன் போனாலும் போகிறது - நான் பார்த்தாக வேண்டும் ரங்கத்தை" என்று பல முறை கேட்டார். "உமக்கு மட்டுமல்லவே. ஊருக்கே சர்வ நாசம் வருமென்று சாமியார் சொல்கிறாரே" என்றார் உன் அப்பா. ஊர் முழுதும் ஏமாந்தது.

     என் ஏற்பாட்டின் படியே காரியம் நிறைவேறிற்று. நாலாம் நாள், புரண்டு புரண்டு அழச்சொன்னேன், அவரை. தெருக் கதவைத் தாளிட்டுவிட்டு, கிழவியின் பிணத்துக்கு என் உடைகளைப் பூட்டி, முக்காடிட்டு, முகத்தையும் மறைத்துவிட்டேன். பிறகே, ஒரு சிலரை மட்டும், ஊழியக்காரர்களை மட்டும் வரவழைத்து பிணத்தைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னேன். சுடலையிலும் சர்வ ஜாக்கிரதையாக இருந்து, யாருக்கும் துளிச் சந்தேகமும் வராதபடி கிழவியைக் கொளுத்த ஏற்பாடு செய்தேன். சுடலைக்குப் பிணத்தை எடுத்துச் செல்லும்போது, நானும் உடன் சென்றேன். தம்பி, உலகிலேயே வேறு யாருக்கும் நேரிட்டிருக்க முடியாத சம்பவம், சொன்னால் கூட நம்பமாட்டார்கள். ஆனால் கடுமையான அம்மை, காளியின் கோபம், சாமியாரின் கடுமையான உத்தரவு, ஊருக்கு நாசம் வந்துவிடும் - காளி சகலரையும் பலி கேட்பாள் என்ற இப்படிப்பட்ட மிரட்டல்கள் அந்த ஊரை அடக்கிவிட்டது. நான் சாமியாரானேன்! "ரங்கத்தின் வாழ்வு முடிந்துவிட்டது! மகராஜி! பூவோடும் மஞ்சளோடும், வெள்ளிக்கிழமை போகிறாள்" என்று ஊரார் பேசினர். அதே இரவு, நான் மொட்டைத் தலை, கையில் தடி, உடலில் காவி, நெஞ்சிலே எப்போதும் ஏற்பட்டிராத அளவு தைரியம், இந்த நிலையில் ஊரைவிட்டே சென்றேன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:28 pm

ரங்கோன் ராதா

19

     மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும் இப்படி இராதே என்றே கூறுவர். ஆனால், எனக்கு ஏற்பட்ட மனமுறிவு என்னை எந்த விபரீதத்துக்கும் தயாராக்கிவிட்டது. ராதா சொல்வாள், பூனைகூடப் புலியாக மாறும் என்று. நம்மைக் கண்டதும் ஓடும் பூனையைத் துரத்திக் கொண்டு சென்று, ஒரு அறையில் அது புகுந்த பிறகு, கதவைத் தாளிட்டுக் கொண்டால், தப்பி ஓட மார்க்கமே இல்லாததால், பூனைக்குப் பிரமாதமான திகில் ஏற்பட்டு, திகிலின் விளைவாகத் தைரியம் உண்டாகிப் பாய்ந்து, நமது கண்களை நாசம் செய்துவிடுமாம்! பூனை அல்ல அந்த நேரம், புலியாகிவிடுகிறது என்று ராதா கூறுவாள். நான் பட்ட வேதனை என்னை அவ்விதமாக்கிவிட்டது. என்னவோ ஓர் வகையான வெறி, சே! எக்கேடு கெட்டாலும் கெடுவோம், இந்தக் கெடுமதியாளனுடன் மட்டும் இனி இருக்கக்கூடாது என்று ஒரு எண்ணம், அசைக்க முடியாதபடி ஏற்பட்டுவிட்டது. பிணம் சுடலையில் வேகிறது. நான் ஆண் உடையில் ஊரைவிட்டு வெளியே செல்கிறேன்.


     அப்பா! நான் காவி அணிந்து உலவிய காலம் இருக்கிறதே, அது வெந்த புண்ணுக்கு வேல் ஆக முடிந்தது. கயவர்களின் கூட்டுறவே கிடைத்தது. அவர்கள் ஊரை ஏய்க்க உரத்த குரலில் பாடும் பஜனைப் பாட்டுக்களை, நானும் முதலில் நம்பினேன். நானும் அவர்களில் ஒருத்தியாக இருக்க ஆரம்பித்த பிறகுதான் தெரிந்தது, அவர்களைப் போல் மூடர்கள் வேறு கிடையாது என்பது. பலர் என்னைப் போலவே வாழ்க்கையில் ஏற்பட்ட திகைப்பினாலேயே திருவோடு தூக்கினவர்கள் - பிறகோ, அவர்கள் பாடுபட்டுப் பிழைக்க விரும்புபவருக்குக் கைகொடுக்க மறுக்கும் உலகை ஏய்த்து வாழ இதுவே எளிய வழி என்று கண்டறிந்து, அதற்கேற்றபடியே நடக்கலாயினர். இத்தகையவர்களுடன், நான் சில மாதங்கள் உலாவினேன். திருவிழா எங்கெங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் செல்வது. சாவடிகள் எங்களுக்குச் சொந்தம். குளத்தங்கரைகளில் கொண்டாட்டம் - போலீஸின் கண்களில் சிக்கிவிட்டால் ஆபத்துதான். இந்நிலையில், நான் பெற்ற அனுபவம் இருக்கிறதே, அதனை ஆயுட்காலம் பூராவும் கூறலாம். ராதாவிடம் சொல்லித்தான், பண்டாரங்களைப் பற்றியே ஒரு பெரிய புத்தகம் எழுதச் செய்யவேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவு விதவிதமான பண்டாரங்களைபற்றி எனக்குத் தெரியும். அவர்களின் 'கதைகள்' உலகுக்கு, எச்சரிக்கையாகக்கூட இருக்கும். நான் அந்த உலகிலே கண்ட பல அதிசயங்களைக் கூறி உனக்குச் சலிப்பு உண்டாக்கப் பிரியப்படவில்லை. சுருக்கமாகச் சிலது மட்டும் கூறுகிறேன் - பல இரவுகள் பட்டினி கிடந்திருக்கிறேன். திருட்டுச் சொத்திலே பங்கு பெற்றிருக்கிறேன் - போலீஸில் கூடச் சிக்கிக் கொள்ள இருந்தேன் ஒரு முறை! இவ்வளவும், எனக்கு அல்லலைத் தந்ததே தவிர, ஆபத்தைத் தரவில்லை - ஆண் உடை எனக்குக் கவசமாக அமைந்திருந்தது. ஆனால் மகனே! நான் எப்படியடா கூறுவேன், அந்தக் கவசம் என்னைக் கடைசி வரை காப்பாற்ற முடியாது போயிற்று. நான் படுகுழியில் தள்ளப்பட்டேன்... உன் அன்னை என்ற அந்தஸ்திலிருந்து வீழ்ந்தேன். அன்று எனக்குக் கடுமையான ஜுரம். நான் கூட்டாளியாகக் கொண்டிருந்த கிழப் பண்டாரம், எனக்கு மருந்து வாங்கிக் கொடுத்தான். மருந்தோடு விபசாரம் என்ற விஷமும் கலந்தான். தற்செயலாகத்தான் கண்டுகொண்டான் - தகாத காரியம் என்று கெஞ்சினேன், எதிர்க்கச் சக்தி இல்லை. நான் வீழ்ந்தேன்! விழியில் வழிந்தோடிய நீர் கொஞ்சமல்ல. மேலும் நடந்தவைகளைக் கூறி உன்னைச் சித்திரவதை செய்யத் துணியவில்லையடா கண்ணே! நான் துரோகியானேன் - விபசாரியானேன் - பிறகு எனக்கும் பண்டாரக் கூட்டமோ, காவி உடையோ தேவைப்படவில்லை. கிழப் பண்டாரம் சில நாட்களுக்குப் பிறகு, என்னைத் தன் தங்கை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெருமையுடன் கூறினான். "ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லி என்னை இந்தத் தள்ளாத வயதிலே துரத்தினாயே, பார்த்தாயா, புதையல்!" என்றான். அவள் என்னைப் பார்த்த பார்வையை இப்போது எண்ணிக் கொண்டாலும் நடுக்கம் பிறக்கிறது. சிறிய பலகாரக் கடை அது. பலகாரம் மட்டுமல்ல, திருட்டுச் சாராயக் கடையும் அதுதான். அது என்னைப் போல அபலைகள் சிக்கிக் கொள்ளும் சமயத்திலே விபசார விடுதியாகவும் மாறும். அவள் இரண்டு முறை தண்டனை பெற்றவள் - திருட்டுக் குற்றத்துக்காக. அதனால் அவளுக்கும் போலீஸிடம் பயம் இருப்பதில்லை. கேலியாகக் கூடப் பேசுவாள். அவர்களும், அவளைத் தமாஷ் செய்வார்கள். எப்படித்தான் ஏற்பட்டதோ அந்த வேகம். எனக்கே புரியவில்லை; நான் அந்த இடத்திற்கு வந்த சில வாரங்களுக்குள் முழுவதும் அழுகிய மனதைப் பெற்றுவிட்டேன். சேற்றிலே கால் வைத்தாகி விட்டது. ஆழப் புதைந்து கொண்டது. காலைச் சேற்றிலே இருந்து எடுத்துக் கொள்ளச் சக்தியுமற்றுப் போயிற்று. பிறகு அந்தச் சேறு, சந்தனம் ஆகிவிடத்தானே வேண்டும். விடுதியிலே, சந்தித்த நாயுடுதான், விடுதலைக்கு வழி சொன்னான் - ரங்கோன் போய் விடுவோம் என்று. கிளம்பினேன். ரங்கோனிலும் என் வாழ்க்கை, புயலில் சிக்கிய கலம் போலத்தான். நாயுடு சம்பாதிப்பார் - குடிக்க மட்டுமே தான் அந்தப் பணம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் போலச் சில சமயம் நடந்து கொள்வார். சில சமயம், வேதாந்தம் பேசுவார். சில வேளைகளில் ஏதோ போன ஜென்மத்திலே நமக்குள் தொடர்பு இருந்திருக்க வேண்டும். அதனாலேதான் இந்த ஜென்மத்திலே இது ஏற்பட்டது என்பார்.

     ராதா பிறந்தாள் - எனக்கு அந்த வேதனையான வாழ்விலேயும் ஒருவகை ஆனந்தம் தர, அவள் பிறந்தாள்.


     மகனே! அவளும் நானும் இங்கு வர நேரிட்டது ஜப்பானின் குண்டு வீச்சால். அந்தக் குண்டு வீச்சின் கொடுமையைவிட, அதிகக் கொடுமைக்கு நான் உன்னை ஆளாக்கிவிட்டேன். ஆனால், நான் இவ்வளவும் கூறாவிட்டால் என் மனம் வெடித்து விடும் என்று பயந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு! உன் மாதா நான். ஆனால், மாபாவியானேன் - என் மன வேதனை அளவு கடந்தது. அதன் விளைவுகள் பல - நான் இவைகளைக் கூறி என் நடத்தைக்குச் சமாதானம் தேடுகிறேன் என்று எண்ணாதே. என் கடைசி நாட்களில் நிம்மதி வேண்டும் - மனத்தின் பாரம் குறைய வேண்டும். உன்னைக் கண்டேன், என் துர்நடத்தையையும் கூறினேன் - என்னை மன்னித்துவிடு - ஆனால் நான் உன் மாதா என்பதையும் மறந்துவிடு. குற்றம் செய்வதற்கு முன்பு கொடுமைக்கு ஆளானாள் என்பதை மட்டும், மனமார நம்பு. அப்பா! பொன் நிற மேனியிலே படரும் புண், கருநிறத்தை உண்டாக்கிவிடுகிறதல்லவா, அதுபோல என் நற்குணத்தை உன் அப்பாவின் கொடுமை கெடுத்து, என்னை இக்கதிக்குக் கொண்டு வந்தது. நான் குற்றமற்றவள் என்று வாதாடவில்லை. ஆனால் குற்றவாளி நான் மட்டுமல்ல. உன் அப்பா, பெரிய குற்றவாளி! பணப் பேய் பிடித்தவர் - மாசற்ற மனைவி மீது அபாண்டம் சுமத்தியவர் - கொலைகாரர் - கொடுமை புரிந்தவர் - ஆனால் அவர் இன்னும் ஊரிலே மதிக்கப்படுபவர். நான் வந்திருக்கிறேன், உன்னைக் கண்டேன், பேசினேன், முழு விவரத்தையும் கூறிவிட்டேன் என்பது தெரிந்தால் போதும்; பயத்தால் மாரடைப்பு உண்டாகிப் பிராணன் போய்விடும். அவர் எதற்கும் உலகிலே அஞ்சாமல் இருக்க முடியும். ஆனால் உன் அன்னையை, நேருக்கு நேர் நின்று பார்க்க முடியாது! தைரியம் வராது! நான் விபசாரி என்று உலகம் என் எதிரிலே கூறும், உன் அப்பாவால் மட்டும் கூற முடியாது. எந்த அக்ரமத்தையாவது அவர் செய்ய எண்ணும்போது கூட, அவருடைய மனக்கண் முன் என் உருவம் தோன்றும். தம்பி! விபசாரியான நான் வேதாந்தம் பேசுகிறேன், வழுக்கி விழுந்து விட்ட நான் பிறர்மீது பழி சுமத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறேன் என்று எண்ணிவிடாதே. இவ்வளவும் நான் உன்னிடம் கூறாமலே இருந்து விட்டிருக்கலாம். நான் யாரோ ரங்கோனிலிருந்து வந்தவள் என்று நினைத்துக் கொண்டு இருப்பாய். என்னால் முடியவில்லை, மூடிபோட்டு வைக்க. பல வருஷங்களாக மனதிலே இருந்து வந்த பெரிய பாரத்தைக் கீழே தள்ளிவிட்டேன்.

     நான் சூதுக்காரியல்ல - நான் சூதுக்காரர் கிளப்பிய சூறாவளியிலே சிக்கியவள். என்னிடம் பரிதாபம் காட்டி, பலரறிய, "என் அன்னை, ரங்கம்!" என்று கூறுவாயா என்று நான் கேட்பதற்காகவும் இவ்வளவு பேசவில்லை. பழி தேடிக் கொடுத்தவள்! பாதகி! விபசாரி என்று என்னைப் பற்றி என் கதையை அறியா முன்பு, நீ கூறியிருக்கவோ, எண்ணியிருக்கவோ முடியாது. நான் தான் இறந்துவிட்டேனே, தாயை இழந்தவன் என்றுதானே நீ கருதிக் கொண்டிருந்தாய் - ஊரும் நம்பிற்று. இனியும் அதேபோலத்தான் எண்ணும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:31 pm

ங்கோன் ராதா

20

     "நண்பா! கொடுமைக்கு ஆளான என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக் கொண்டேன் - என் தாயாரை நோக்கி, 'அம்மா! பிரேத பரிசோதனை செய்து பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கவனித்தாக வேண்டும். அது என் கடமை. அப்பா, பேராசையால் செய்துவிட்ட பெரிய கேடு, உன்னைச் சூழ்ந்து கொண்டு கெடுத்துவிட்டது. குற்றவாளியை நான் கண்டு கொண்டேன். தண்டனை மட்டும் தர முடியாது. நான், என் வாழ்நாளில் இதற்குப் பரிகாரம் தேடுவேன். என் தாயார் உயிருடன் இருக்கிறார்கள் என்று ஊரறியக் கூறுவதல்ல இதற்குப் பரிகாரம். என் தங்கையின் வாழ்வு சரியாக அமையும்படி பார்த்துக் கொள்ளும் பொறுப்பு இனி என்னுடையது. அப்பா வருவதற்குள், நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும். அவர் கோட்டையூர்க் கிராமத்தைவிட்டு இங்கு குடியேறிவிட்டது போலவே, நமது கிராமத்தவர் வேறு சிலரும் இவ்வூரில் வந்திருக்கிறார்கள். யாராவது, எப்படியாவது அடையாளம் கண்டுபிடித்துவிட்டால், தொல்லை' என்று கூறிப் பணம் உதவினேன். ராதா இப்போது கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள்" என்று என் நண்பன் நாகசுந்தரம் கூறி முடித்தான். எப்போதும் நான் கேட்டிராத அந்த விசித்திரமான கதை, என் உள்ளத்தை உருக்கிவிட்டது. சாதாரணமாக, விபசாரி என்ற உடனே யாருக்கும் காமுகனுக்கும் கூடக் கோபம் வரும். ஆனால், இப்படி விபசாரப் படுகுழியிலே இடறி விழவேண்டியபடி, கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் கதையைக் கேட்டால், கோபத்திற்குப் பதில் துக்கந்தானே வரும். நான் என் நண்பனின் சோக நிலையைக் கண்டு பரிதாபப்பட்டதுடன், அவன் தன் பொறுப்பை உணர்ந்து, பெருந்துயரில் வீழ்ந்த தன் அன்னைக்கும் தங்கைக்கும் பேருதவி செய்த பெருங்குணத்தைப் பாராட்டினேன்.


     நாகசுந்தரம் சொன்னான், "நண்பா? இப்போதுள்ள நிலையைப் பார். ராதா மாசுமறுவற்றவள் - எழிலுள்ளவள் - படிக்கிறாள் கல்லூரியில் - ஆனால் அவளை என் தங்கை என்று நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை - அதனால் அவள் ஒரு கெடுதியும் செய்யாமலேயே அவளுடைய வாழ்வின் ஆரம்பமே முட்டுக்கட்டை போடப்பட்டதாகிவிடுகிறது. காலில் தளை இடப்பட்டவன் ஓட முயன்றால் இடறி விழத்தானே வேண்டும்! கறுப்புத் துணிகொண்டு கண்களைக் கட்டிவிட்டு, காயும் நிலவைக் கண்டு கவிபாடு என்று கேட்பது போல, அவளை விபசாரி மகள் என்று முத்திரை பொறித்துவிட்டு பிறகு, வாழ்விலே நிம்மதி பெறுவதற்காக, கௌரவம் பெறுவதற்காக, நீ கண்ணுங்கருத்துமாக இருக்கவேண்டுமென்று கூறிப் பயன் என்ன? அவளுடைய வாழ்வு களங்கமற்றதாக இருக்க வேண்டுமானால், அவள் மீது பூசப்படும் கறைகளைக் கண்டு கவலை கொள்ளாத வீரன் வேண்டும், அவளை மணம் புரிய உன்னை நான் அத்தகைய வீரன் என்று நம்பியே, இவ்வளவு வேதனை நிரம்பிய விஷயத்தைக் கூறினேன். உலகம் அறியாது இந்த உண்மையை; நீ அறிவாய். நீ விரும்பினால், ஊராரிடம் கூறி எனக்கு இழிவு கூட உண்டாக்க முடியும்; தூற்ற முடியும்; வம்பளக்கலாம்; என்னைக் கேவலப்படுத்தவும் செய்யலாம். இதைத்தான் சாமான்யர்கள் செய்வார்கள். நீ, தனிக் குணம் உள்ளவன். இல்லையானால், மறைத்து வைக்க வேண்டிய விஷயத்தை நான் மனந்திறந்து உன்னிடம் கூறியிருக்க மாட்டேன். என் தாயின் கௌரவம் நசித்துவிட்டது; அதை இனி மீட்க முடியாது. என் தங்கையின் வாழ்வு சரியாக அமையும்படி செய்வதுதான் இப்போது நான் ஆற்றக்கூடிய தொண்டு. இதற்கு உன் உதவி வேண்டும். உன் உள்ளத்தில் ஈரமும் உண்டு, வீரமும் உண்டு. எனவே தான் உன்னை நாடினேன். பரந்தாமா! என் தங்கை ராதாவைக் கலியாணம் செய்து கொண்டு அவளுக்குக் கௌரவமான வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் - கெஞ்சுகிறேன்."

     நாகசுந்தரம் என்னை அவ்வளவு உருக்கமாகக்கூட கேட்டிருக்க வேண்டியதில்லை. சிறுத்தையால் சின்னா பின்னமாக்கப்பட்ட தாய் மானுக்கு அருகே, ஏதுமறியாது தாவிக் குதிக்கும் மான் கன்றை, யார் தான், கண்டதும் காப்பாற்ற முன்வராமலிருப்பார்கள். ராதா, விபசாரியின் மகள்! அவளை என் மனைவியாக்கிக் கொண்டு, புது நிலை, கௌரவம், அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கச் செய்வேன். விபசாரம் ஒரு குற்றம் - ஆம் - ஆனால், அதற்குத் தண்டனை, தாய் செய்ததற்காக மகளுக்குத் தருவது தர்மமல்ல. சமூகம், அடிக்கடி தவறுகள் செய்யும் மக்களைக் கொண்டதுதான். தவறு செய்தவர்களையெல்லாம் அடியோடு ஒதுக்கி வைத்துக் கொண்டு போய், அவர்களையே ஒரு பரம்பரையாக்கியும் விட்டால், பிறகு சமூகம் வெறும் சாக்கடைச் சேறு நிரம்பிய இடம், அதன் நாற்றத்தைச் சகிக்கமாட்டாமல் சங்கடப்படும் ஒரு சிறு கூட்டம் - இவை மட்டும் கொண்டதாகிவிடும். அதுவல்ல சமூகத்தைத் திருத்தும் வழி. ரங்கம் விபசாரி, ரங்கத்தின் மகள் ராதா! அவளை மீட்பேன் என்று நான் ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். எந்த மகனும், தன் ஆருயிர் நண்பனிடம் கூடத் தன் தாய் விபசாரியான வேதனை மிகுந்த கதையைக் கூற மாட்டான். என் நண்பன் என்னிடம் கூறினான். அவ்வளவு நம்பிக்கை என்னிடம்.

     சில நாட்கள், நாங்களிருவரும் சந்திக்கவில்லை. கோட்டையூரார், அதாவது நாகசுந்தரத்தின் அப்பா யாத்திரையிலிருந்து திரும்பினார். அதனால், அவர் ஊரிலில்லாத சமயம் நடைபெற்ற வரவு செலவு காரியங்கள் ஆகியவற்றைக் காட்டவும் கூறவும், என் நண்பனுக்கு நேரம் சரியாக இருந்தது. நானோ காரியத்தைக் கவனிக்காமலில்லை. என் நண்பனொருவன், கல்லூரியில் இருந்தான். அவனுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினேன் - கல்லூரி நிர்வாகம் - விளையாட்டு இடம் - விடுதி - படிப்பகம், இப்படிப்பட்ட விஷயங்களைப்பற்றி, நான் இரண்டு மூன்று கடிதம் போட்டதால் அவனுக்கு என்ன எண்ணம் ஏற்பட்டதோ தெரியவில்லை. ஒரு கடிதத்தில், அவன் ஒரு முறை கல்லூரி ஹாஸ்டலில் வந்து என்னுடன் நாலு நாள் தங்கிவிட்டுத்தான் போயேன் என்று அழைப்பு அனுப்பிவிட்டான். நான் அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனவே, மகிழ்ந்தேன். நாகசுந்தரத்திடம் சென்று, விஷயத்தைக் கூறினேன். அவன் சிரித்துவிட்டு, "ஏது! மும்முரமாக ராஜ தந்திர வேலை செய்து வந்திருக்கிறாய். ஆனால், இவ்வளவு சுற்றி வளைத்துக் காரியம் செய்திருக்கவேண்டியதில்லையே. நானே உன்னை அழைத்துக் கொண்டு போவதாகத்தான் தீர்மானித்திருக்கிறேன். ஒரே நாள் தான் தங்கப் போகிறோம். ஆனால் அது விசேஷமான நாள். உன் நண்பன் உனக்கு அந்த விசேஷத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லையோ?" என்று கேட்டான். "இல்லையே! ஹாஸ்டலில் வந்து நாலு நாள் தங்கி இருக்கலாம் என்று மட்டுந்தான் எழுதினான்" என்றேன்.


     "பயல், சாமர்த்தியக்காரன்" என்றான் என் நண்பன்.

     நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு ஆசாமி வந்தான், ஒரு சிறு மூட்டையும், பெட்டியும் தூக்கிக் கொண்டு.

     "எல்லாம் கேட்டபடி இருக்கிறதா?" என்று என் நண்பன் கேட்டான்.

     "எல்லாம் கிடைத்தது. ஆனால், 'ஸ்பிரிங் சேலை, மட்டும் கிடைக்கவில்லை" என்றான் வந்த ஆசாமி.

     "என்ன நாகு அது? ஸ்பிரிங் சேலையா? அப்படி என்றால்?" என்று நான் கேட்டேன்.

     "தேடித் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. முன்பு ரம்பா சங்கீத சபாவிலே உபயோகித்தார்களாம் அதுபோல. பிறகு யாரும் உபயோகிக்கவில்லை. மற்றக் கம்பெனியிலெல்லாம்..." என்று ஏதோ விளக்கம் கூறினான் வந்த ஆள்.

     "அது தெரியுமே எனக்கு. இந்த எண்ணெய்க் கலர் சேலை கட்டிக் கொள்வார்கள் மற்றக் கம்பெனிகளில்" என்று நாகசுந்தரம் ஏதோ விளக்கம் பேசினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பெட்டியைத் திறந்தான், கிரீடம், முத்து மாலை, கைவளை, காதுக்கு லோலாக்கு - இப்படி நாடகச் சாமான்களாக இருந்தன. மூட்டையிலே சரிகை வேட்டிகள், புடவைகள் இப்படி இருந்தன.

     "நாகு, என்னடா இது? கூத்து ஆடப் போகிறாயா?" என்று நான் கேட்டேன். வந்த ஆசாமி பணம் வாங்கிக் கொண்டு போன பிறகுதான் நாகசுந்தரம் பதில் சொன்னான்.

     "கூத்துப் பார்க்கப் போகிறோம்" என்றான்.

     "எங்கே? என்ன கூத்து? அதற்கு நீ ஏன் சாமான்கள் சேகரிக்கிறாய்?" என்று நான் கேள்விகளை அடுக்கினேன். என் நண்பன், "இவ்வளவுக்கும் இதோ பார், பதில்" என்று கூறிக் கொண்டு, ஒரு அழைப்பு அட்டையைக் கொடுத்தான். அதிலே என் மனம் மகிழச் செய்யும் விஷயம் பொறிக்கப்பட்டிருந்தது.

கமலா கன்னியர் கல்லூரி 

வைர விழா

மேற்படி விழா திருமதி திலகவதி, M.A.
அவர்கள் தலைமையில் நடைபெறும்.

அன்று மாலை

மாணவி ரங்கோன் ராதா எழுதிய 

"தாரா"

என்னும் நாடகம் நடத்தப்படும். ராதா, தாரா வேடத்தில் தோன்றுவார். அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

அகிலம்,
கல்லூரித் தலைமை ஆசிரியை.

அழைப்புக் கடிதம் எனக்குக் கிடைத்ததும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டேன். நண்பன் அழைப்புக் கடிதத்துடன் ராதா அனுப்பிய வேறோர் கடிதத்தையும் என்னிடம் தந்தான்.

     "அண்ணா, கல்லூரியிலே, வைரவிழா, அதிலே வெறும் பளபளப்பு மட்டும் இருக்க வேண்டுமென்று கல்லூரி அதிகாரிகள் எண்ணுகின்றனர். எனக்கோ வெறும் ஜொலிப்பு போதாது! உண்மையான மதிப்பு இருக்கவேண்டும். அப்போது தான் அது அசல் வைரம் என்று தோன்றுகிறது. ஆனால் இங்கு தானே ரங்கோன் வைரங்கள் ஏராளமாக வாங்குகிறார்கள்!


     விழாவிலே, வேடிக்கைகள் இருக்கவேண்டுமென்று பலர் பலவகைத் திட்டம் கூறினர். நான் தான் நாடகம் ஆடவேண்டுமென்று சொன்னேன். பிறகு கதையைக் கூறினேன். எங்கள் கல்லூரித் தலைமை ஆசிரியை அகிலம் அம்மையார் சீறினார்கள். நாடகத்தை நடத்தக்கூடாதென்று, பல காரணங்கள் காட்டினார்கள். ஒவ்வொரு காரணத்தையும் நான் மறுத்து, அவர்கள் கொண்ட எண்ணத்தைத் தவறு என்று விளக்கினேன். கடைசியில், பணம் அதிகம் செலவாகுமே, கல்லூரியில் பணம் ஏது? என்று கூறிவிட்டார்கள். நான் இதற்கும் சளைக்கவில்லை. செலவை மாணவிகளே ஏற்றுக் கொள்வதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று ஒரு பொய் சொன்னேன். அண்ணா! இந்த வேடிக்கையைப் பார். நான் பல உண்மைகளைச் சொன்னதிலே வெற்றி ஏற்படவில்லை - ஒரு பொய் சொன்னேன் - உடனே வெற்றி! அப்படியானால் தாராளமாக நாடகத்தை நடத்து என்று கூறி விட்டார்கள். பிறகுதான், மாணவிகளைக் கலந்து பேசினேன். பணம் கொஞ்சம் வசூலாயிற்று; போதாது. ஆகவே, இந்தக் கடிதத்துடன் உள்ள பட்டியலில் கண்டுள்ள சாமான்களை வாங்கிக் கொண்டு வர வேண்டுகிறேன். நாடகத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை என்று எண்ணாதீர் அண்ணா! ரங்கோன் பள்ளிக்கூடத்திலேயே ஒரு முறை நான் சந்திரமதி வேஷம் போட்டு, 'கெட்ட பெயர்' எடுத்தவள்."

இப்படிக்கு,

ராதா.

     இந்தக் கடிதத்தைப் படித்தானதும் நாடகச் சாமான்களுக்காக எவ்வளவு செலவாயிற்று, நான் தருகிறேன் அந்தப் பணத்தை எனக் கேட்கலாமா என்று தோன்றிற்று. பிறகு, அந்த ஆசையை அடக்கிக் கொண்டேன்.


     குறிப்பிட்டபடி நாங்களிருவரும் கல்லூரி சென்றோம். ராதா, எங்களை அன்போடு வரவேற்றாள். ஒரு இலட்சிய மங்கையிடம் என்னென்ன கவர்ச்சி, குணம் இருக்கவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேனோ, அவ்வளவும் ராதாவிடம் பொருந்தி இருந்தன. நான் எதிர்பாராத அளவு அவளிடம் சம்பாஷணைச் சமர்த்து இருந்தது. பெரும்பாலான வீடுகளிலே இந்தச் சம்பாஷணை, கிடையவே கிடையாதல்லவா! உப்புச் சப்பற்ற பேச்சு, இல்லையானால் ஓங்காரக் கூச்சல்! ஒரு மணி நேரம், ஓய்வாக உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றி இனிமையாகப் பேசும் குடும்பம், எங்கே இருக்கிறது; அதிலும் ஒரு ஆணும் பெண்ணும், மகனும் தாயும், அல்லது அண்ணனும் தங்கையும் அல்லது புருஷனும் மனைவியும், ஏதோ ஓர்வகைத் தொடர்பு கொண்டவர்கள், பேசுவது என்று ஆரம்பித்தால், ஏதாவது சச்சரவில் போய் முடியுமே தவிர, நிம்மதியாக முடிவதில்லை. பேச முடிவதில்லை - தெரியாததால் ஒருவருக்கொருவர், ஒவ்வொரு விஷயத்திலும் முரண்பட்ட எண்ணம், ஆசை கொண்டவர்கள், எப்படிக் கூடிப் பேசமுடியும். பெண்களுக்கும் ஆண்களுக்கும், வேலை நேரம் போக, பேசிக் கொண்டிருக்கத் தெரியாதுதான். என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என்பது தெரியவில்லை. ராதாவிடம், இந்தச் சாமர்த்தியம் இருந்தது மட்டுமல்ல. அவள் அதனை ஒரு நல்ல 'கலை'யாக்கி வைத்திருந்தாள். பெண், அதிலும் ஒரு இளமங்கை, மேலும் ஒரு கல்லூரிக் கன்னிகை பேசினால், இனிமையாகத்தானே இருக்கும் - அது 'கலை'யாகவும் தோன்றும், கனிரசமாகவும் இருக்கும் என்று கேலி செய்வார்கள் என்னை. ஆனால் நான் உண்மையைச் சொல்கிறேன் - கல்லூரி கன்னியர்கூட, சேர்ந்தாற்போல் ஒரு அரைமணி நேரம் இனிமை குறையாமல், அதேபோது ஆபாசம் விளையாமல், பேசக் கற்றவர்கள் அதிகம் பேர் இல்லை என்பது தான் என் அபிப்பிராயம். அதிக அனுபவம் இல்லை. ஆனால் சொல்வது சீக்கிரத்தில் மற்றவர்களால் மறுத்துவிட முடியாது. பெண்களின் பேச்சிலே குழைவு, நெளிவு, குறுகுறுப்பு, இனிமை இவை நிரம்பி இருக்கும் - இருக்கத்தானே செய்யும். ஆனால் இவை மட்டுமே போதுவதில்லை. இவற்றுடன் கொஞ்சம் மனதுக்குத் தெளிவும், நேரம் வீணாக்கப்படவில்லை என்று எண்ணுகின்ற அளவுக்கு அறிவு மணமும் அதிலே கமழ வேண்டும். ராதா இந்த அறிவு மணம் கமழும்படி பேசினாள். ஆனால் அந்த மணமும் பலவகை அல்லவா? சில உண்டே, 'நெடி' என்று கூறக்கூடிய அளவுக்கு அப்படி அல்ல; நல்ல மல்லிகையின் மணம் - மணம் - அதுவும் தோட்டத்திலே மல்லிகை, சற்றுத் தூரத்திலே நாம் - அப்போது உண்டாகுமே மணம், அதுபோன்று விதம் - ராதாவின் பேச்சிலே இருந்தது. அதே போது நளினம் - உறுதி - அப்பப்பா! இன்பக் கனவே நனவானது என்று கூறுவேன் - அவள் பேச்சிலே, அவ்வளவும் கலந்து இருந்தது. ஒரு உதாரணம் பாருங்கள், ராதாவுடன் படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி, ராதா, நான், என் நண்பன், நால்வருமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்; அப்போது பிரிட்டிஷ் ராணிமார்களைப் பற்றிய பேச்சு வந்தது; நான் ஏதோ ஓர் விஷயத்தைக் குறிப்பிடுவதற்காக, எலிசபெத் ராணியைப் பற்றிப் பேசினேன். உடனே, ராதாவுடன் இருந்த அந்தப் பெண், வெடுக்கென்று, "அவளா? ஆண்களை வேட்டையாடினவள்" என்றாள்! உண்மை இதிலே கொஞ்சம் உண்டு. ஆனால், அந்தப் பெண், அதைச் சொன்ன முறை இருக்கிறதே, அது என்னவோ போலிருந்தது. நான், என்னையுமறியாமல், எலிசபெத்துக்கு வக்கீல் வேலை செய்ய நேரிட்டது. நான் சொன்னேன், "அரசியாக இருந்துகொண்டு பல கட்சித் தலைவர்களையும் பக்குவமாக நடத்திச்சென்று, அதேபோது தன் பதவிக்கும் ஆபத்து வராதபடி பரிபாலனம் செய்வது எளிதான காரியமல்ல. எலிசபெத், இந்தக் காரியத்தை எவ்வளவோ திறமையாக நடத்தி வந்தது போற்றுதலுக்கு உரியதுதான்" என்றேன். என் ராதா கன்னத்தில் மெல்ல அறைவது போலப் பேசினாள், "எலிசபெத் அரசியாக இருந்ததால் உயர்தரமான வேட்டையாடி வரமுடிந்தது; நிலை வேறாக இருந்தால், வேட்டை மட்டும் நின்றிராது; ஆனால், வேட்டைக்குரிய பொருள் வேறாக இருந்திருக்கும்" என்றாள். நான் அவள் பதிலிலே சொக்கினேன். வேறு யாராவது இதே பேச்சைச் சொல்லியிருந்தால், அந்த அளவு 'ரசம்' எனக்கு ஏற்பட்டிருக்குமா என்பது தெரியாது. ராதா சொல்லும்போது அதை நான் பெரிதும் ரசித்தேன். எங்கள் சம்பாஷணை அன்று அதிக நேரம் நடைபெறமுடியவில்லை. நாடக வேலைகளை ராதா கவனிக்க வேண்டி இருந்தது.

     நாடகத்தைக் கண்டேன் - நாடகத்தையா? ராதாவின் படம் எப்படிப்பட்டது என்பதைக் கண்டேன். நான் கேட்ட விஷயங்களை, எவ்வளவோ மறந்துவிட்டிருக்கிறேன், கண்டவைகளை மறந்து விட்டிருக்கிறேன். ஆனால், அந்த நாடகம்! அதை மட்டும் நான் ஒரு துளியும் மறக்கவில்லை - மறக்க முடியாது.

     கல்லூரிப் பொது மண்டபத்திலே தான் நாடகம், சின்ன அளவுதான், அதிகமான அலங்காரங்கள் இல்லை - தேவைப் படவுமில்லை. ராதாவின் திறமை, எந்தக் குறையையும் எவரும் காணமுடியாதபடி செய்துவிட்டது. நாடகம் வேண்டாமென்று ஆரம்பத்திலே பேசிய அகிலம் அம்மையார் பரவசமானார்கள். நாடகத்திலே ராதாவுக்கு முக்கிய வேஷம். அவள் தானே தாரா! ஆஹா! எப்படிப்பட்ட தாராவாகக் காட்சி அளித்தாள், என் ராதா! நாடகத்தின் ஒவ்வொரு கட்டமும் எனக்கு இப்போதும் கண்ணெதிரே இருக்கிறது. இருந்தாலும், நான் ராதா தந்த குறிப்புப் புத்தகத்தையும் துணைக்கு வைத்துக் கொண்டே, அந்த நாடகத்தை உங்களுக்குக் கூறுகிறேன்.

முதல் காட்சி

     விளக்கொளி மங்கலாக இருக்கிறது. பசும்புற்றரை மீது தாரா (அதாவது என் ராதா) படுத்துக் கொண்டிருக்கிறாள். ரோஜா நிறச் சேலை! தலையிலே மலர்ச் செண்டு! கையிலே காம்புடன் உள்ள மலர்ந்த தாமரை. அந்தத் தாமரையிலே தன் இதழை வைத்துக் கொண்டிருக்கிறாள் ராதா.

     உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது.

     "தாரே! தாரே! தாரோய்!"

     அந்தக் குரலிலே கடூரமும் நடுக்கமும் கலந்து இருந்தது.

     அந்தக் குரலைக் கேட்டும், தாமரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள்.


     ஒரு கிழவர் - அதாவது தாராவின் கணவர் வருகிறார் - முனிவர் என்று மட்டுமல்ல, முதியவர் என்பது பார்த்ததும் நன்றாகத் தெரியக்கூடிய நடை நொடி பாவனை! ஒன்று, கூற மறந்துவிட்டேனே, ராதா கதை மட்டும் எழுதவில்லை, பயிற்சி தந்தவளும் அவளே!      கிழவன், "தாரே" என்று மீண்டும் கூப்பிட்டான்.

     தாரா, படுத்திருந்த நிலையிலிருந்து மாறி, பசும்புல் தரைமீதே உட்கார்ந்து, இரு கால்களையும் கைகளால் கட்டிக் கொண்டு கணவனைப் பார்த்தாள். கிழவனின் முகத்திலே ஒரு களை - தாராவின் முகத்திலே ஒருவகைப் பயம்.

     தாமரையைக் காட்டிக் கேட்டாள், "தாமரை எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா?" என்று.

     மனைவிக்கு எதனிடம் பிரியமோ அந்தப் பொருள் தனக்கும் பிரியம் என்று கூறிக் கொள்ளும் கணவன்மார் ரகம் அவர். ஆகவே, அவர் தாமரையைப் புகழ ஆரம்பித்தார் - வசனமல்ல - ஒரு நீண்ட கவிதை - அதுவும், தாரா சலிக்குமளவு - சபையோருங்கூடத்தான் சலித்தனர்.

     பாடி முடித்தான பிறகு, பொருளை விளக்க ஆரம்பித்தார் - பதம் பதமாகப் பிரித்து. நின்று கொண்டிருந்தவர், தாராவின் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டார். தாரா, அந்தப் பாட்டு, அதற்கு அவர் சொன்ன பொருள் விளக்கம் இவைகளைக் கவனித்துக் கொண்டல்ல, வேறு எங்கேயோ அவளுடைய மனம் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. தாராவின் முகபாவம், இதை நன்றாகக் காட்டிற்று.

     தாராவாலும் சகிக்க முடியவில்லை சங்கடத்தை - பொருள் விளக்கப் பேச்சை நிறுத்தினாள், வேறு பேசி.

     "ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளக் கவிதை சிறந்த வழியா, கண்களா?" என்று கேட்டாள் கணவனை நோக்கி.

     "இதென்ன கேள்வி? கவிதை என்றால் நீ என்னவென்று எண்ணிக் கொண்டாய்?" என்று சற்றுச் சுறுசுறுப்புடன் துவக்கினார் முனிவர்.

     "கவிதை ஆராய்ச்சிக்குப் போய்விடாதீர். நான் கேட்பது சாதாரணக் கேள்வி. ஒரு பொருளை அறிய, ரசிக்க, பாராட்ட, புகழ, விரும்ப, கண்ணின் துணை தேவையா? கவிதையின் துணை தேவையா?" என்று 'புட்டுப் புட்டு'ப் பேசினாள் தாரா. 

     "இப்படிக் கேட்டால் எப்படிச் சொல்வது?" என்றார் அவர்.

     "விளங்கச் சொல்கிறேன். தாராவின் இலாவண்யத்தை அழகாக விளக்கி ஒரு கவிதையை யாராவது பாடக் கேட்டுத்தான் நீங்கள் தெரிந்து கொள்ள முடியுமா? அல்லது உமது கண்களைக் கொண்டே நான் ஓர் அழகிதான் என்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?" என்றாள்.

     "தாரே! நீ மகா குறும்புக்காரி" என்று அவர் பதில் கூறிக் கொண்டே, தாரையின் கன்னத்தைக் கிள்ளினார். அவளோ, தாமரையின் ஒரு இதழைக் கிள்ளிக் கொண்டிருந்தாள்.

     "அதுபோலவே, இந்தத் தாமரையின் அழகை எனக்கு விளக்கக் கவிதை கூறி, களைத்துப் போக வேண்டாம். என் கண்கள் போதும், தாமரையின் அழகைக் கண்டு ரசிக்க" என்று கூறிக் கொண்டே எழுந்திருந்தாள்.

     இருவரும், போகப் புறப்படும்போது, நாலைந்து வாலிபர்கள் எதிரே வந்தனர்.

     "குருஜீ..."

     "என்னடா, தடிப்பயல்களா, சுலோகத்தின் பொருளை ஏழுமுறை சொல்லிய பிறகும்..."

     "அதற்கல்ல குருஜீ! ஜுரத்துக்கு ஒரு பச்சிலை தருவீர்களே..."

     "ஆமாம்! தாரா பறித்துத் தருவாள்..."

     "ஏன், யாருக்கு ஜுரம் என்று தாரா கேட்கிறாளே, காதிலே விழவில்லையோ, மடையர்கள்?"

     "நல்ல ஜுரம்! ஏதேதோ உளறிக் கொண்டு..."


     "யாரடா? நீங்கள் உளறுவது..."

     "சும்மா இருங்கள். குருவிடம் பேசுவதால், குளறுகிறார்கள். தம்பி! தெளிவாகச் சொல். யாருக்கு?"

     "சந்திரனுக்கு!"

     "தடிப்பயல்! இரவு, நெடுநேரமாகிறது அவன் தூங்க. உடம்பு எப்படி கெடாமலிருக்கும்."

     "அப்பா! அப்பா! கொஞ்ச நேரம் சும்மா இருமே. தம்பி ஜுரம் கடுமையா?"

     "நெருப்பின் மீது கை வைப்பது போல் இருக்கிறது அம்மணி. முதலிலே தலைவலி என்றான், பிறகு ஜுரம் - வர வர வேகமாக வளர்ந்து..."

     "பாவம்! ஏன் பயந்திருப்பானோ?"

     "பைத்தியக்காரி! இந்தப் பிள்ளைகள் வேண்டுமானால் பயப்படும். அவனா! மகா நெஞ்சழுத்தக்காரன் - ஏன் பயப்படப் போகிறான்?"

     "இல்லை, குருஜீ! அவன் கூடத்தான் பயந்தாங்கொள்ளி. நாங்களாவது தங்களிடம் மட்டும் பயப்படுவோம் - சந்திரன் அம்மாவிடம் கூடப் பயப்படுவான்."

     "அவனுடைய அம்மா என்ன அவ்வளவு பொல்லாதவளா?" 

     "இல்லை, இல்லை. அம்மா என்றால், சந்திரனுடைய அம்மாவல்ல. தங்களைத்தான் குறிப்பிடுகிறோம்."

     "என்னடா இது வேடிக்கை. என்னைக் கண்டா சந்திரன் பயப்படுகிறான்?"

     "கண்டு பயந்தால் கூடப் பரவாயில்லையே! காணாமலே கூடப் பயப்படுகிறான்."

     "போதும் புத்தியில்லாததுகளே. ஆமாம், ஜுரம் வரக் காரணம்?"

     "காட்டுக்குளம் இருக்கிறதே, அதிலே..."

     "கண்டபடி புரண்டு இருப்பான்."

     "அவன் என்ன எருமையா புரள? ஒரு வாலிபன், தடாகத்திலே விளையாடாமலா இருப்பான்."

     "நெடுநேரம் இருந்தான். நெடுநேரம் மட்டுமல்ல. நாலைந்து முறை நீந்தினான், நடுக்குளம் வரை."

     "சரி! சரி! தாரே, நீ அந்தப் பச்சிலையைப் பறித்து இந்தப் பயலிடம் கொடுத்தனுப்பு. நான் போய்ப் பார்க்கிறேன் சந்திரனை. டே! பயல்களா, வாருங்கள். அடே! சாமம்! நீ இருந்து பச்சிலையை வாங்கிக் கொண்டுவா."

     இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு முனிவரும், சீடர்களும், சாமம் தவிர, போய்விட்டனர். தாரா, அவர்கள் போன பிறகு, சாமத்திடம் பேசலானாள்.

     "நாலைந்து முறை, ஏனடா நீந்தினான்?"

     "வேடிக்கைக்குச் செய்தானோ, வேண்டுமென்றே செய்தானோ தெரியாது அம்மணி. நடுக்குளம் சென்று திரும்பினான், கையிலே, ஒரு அழகான தாமரையுடன். எங்களிடம் காட்டி, இது அழகாக இருக்கிறதா என்று கேட்டான்?"

     "யார் சந்திரனா?"

     "ஆமாம், அம்மணி."


     "தாமரையை உங்களிடம் காட்டி, இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டதும், நீங்கள் தடிப்பயல்கள், எனக்கு உனக்கு என்று கேட்டிருப்பீர்கள், உங்களுக்கெல்லாம் தாமரை கொண்டு வர மறுபடியும் நீந்தி இருப்பான்."

     "இல்லை அம்மா! எங்களுக்கு ஏன் தாமரை? நமது சிண்டு இருக்கிறானே, அவன் சந்திரன் கொண்டு வந்த தாமரையைப் பார்த்துவிட்டு, இது அழகாக இல்லை, பூர்ண மலர்ச்சி இல்லை என்றான்."

     "யார் சிண்டுவா?"

     "ஆமாம்."

     "பிறகு?"

     "சந்திரன், அந்தத் தாமரையைக் கசக்கிப் போட்டுவிட்டு வேகமாக ஓடி, மறுபடியும் குளத்திலே வீழ்ந்து, மற்றோர் தாமரையைப் பறித்துக் கொண்டு வந்து, கோபத்துடன் எங்களிடம் காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்."

     "அது நல்ல தாமரைதானா?"

     "ஆமாம். ஆனால், இந்தச் சிண்டு, இது முன்பு கொண்டு வந்ததை விட மோசம் என்றான். சிண்டு கேலி செய்கிறான் என்று தெரியாமல், மறுபடியும் பாய்ந்தான் குளத்தில்."

     "பாபம்."

     "இப்படி ஐந்து தடவை நடந்தது. சிண்டு கடைசி வரையில் கேலி செய்வது என்றுதான் இருந்தான். பிறகு அவனே பயந்து போனான், சந்திரன் அதிகம் களைத்துப் போயிருப்பது கண்டு. இது ரொம்ப அழகானது - சிலாக்கியமானது என்று புகழ்ந்தான். அப்போதுதான், சந்திரன் புன்சிரிப்புக் கொண்டான்."

     "அது, இந்தத் தாமரைதானே."

     "ஆமாம். தங்களுக்குத்தான் தந்தானா, தாமரையை?"

     "ஏன் ஆச்சரியம்? என்ன சொன்னான், யாருக்குத் தரப் போவதாகச் சொன்னான்."

[font:5db5=Verdana, Latha, Arial, TSCuthamba, TheneeUniTx,
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:38 pm

ரங்கோன் ராதா

21

     "நீ இலட்சியவாதி என்பதை நான் அறிவேன்... ஆனால், இவ்வளவு தைரியம் உனக்கு ஏற்படும், இவ்வளவு விரைவிலே என்று நான் எண்ணினதில்லை. ராதாவை நீ மணம் செய்து கொள்வதானால் ஏற்படக்கூடிய இன்னல், இழிசொல் ஆகியவைகள் சாமான்யமாக இரா! சமூகமே உன்னைப் பகிஷ்கரிக்கக்கூடும்; தீர யோசித்து முடிவு செய்!" என்று என் நண்பன் கூறினான். உண்மைதான்! உலகம் என்னென்னவோ பேசும்! ஆனால் நாம் நமது மனத்திற்குச் சரி என்று பட்டதைச் செய்யும்போது, பயமும் கவலையும் ஏன் ஏற்பட வேண்டும்? என்று எண்ணினேன் - மேலும், தங்கையின் பொருட்டு என் நண்பன் தடை பல வரினும் எதிர்த்து நின்று எனக்குத் துணை புரிவானல்லவா என்ற தைரியம் வேறு எனக்கு! எனவே, "அச்சம் வேண்டாம். ராதாவுக்காக நான் எதையும் ஏற்கத் தயார்" என்றேன். "மகிழ்ச்சி - நண்பா! - மட்டற்ற மகிழ்ச்சி - என் இதயத்தைக் குத்திக் கொண்டிருந்த 'முள்' எடுபடும், உன் தீரச் செயலால்" என்று நாகசுந்தரம் மன எழுச்சியுடன் கூறினான்.


     அவனிடம் அவ்வளவு தைரியமாகப் பேசிவிட்டேனல்லவா - தனியாக இருக்கும்போதும் திகில் ஏற்படத்தான் செய்தது. பர்மா நாயுடு ஒருவர் - அவருடைய மகள் இந்த ராதா - என்ற பொய்யைத்தான் கூறியாக வேண்டும். உண்மையைக் கூறுவது என்றால், கோட்டையூரார் குடும்ப இரகசியங்கள் அம்பலம் வரும். நண்பன் நாகசுந்தரத்துக்குத் தாங்கமுடியாத அவமானம் ஏற்படும்.

     விபசாரியின் மகள் என்று தெரிந்திருந்தும், நான், ராதாவை என் குடும்ப விளக்காக்கிக் கொள்ளச் சம்மதிக்கும்போது - சூழ்நிலையால், ஒரு முதியவரின் பேராசையால், விபசாரப் படுகுழியில் தள்ளப்பட்ட அம்மையை - தன் "தாய்" என்று தைரியமாகக் கூறி, அதனால் ஏற்படும் இழிவையும் ஏசலையும், ஏன் என் நண்பன் தாங்கிக் கொள்ளக்கூடாது! - என்று நான் சில சமயம் யோசிப்பதுண்டு. ஆனால் நேரடியாக, நாகனைக் கேட்கத் தைரியம் வருவதில்லை.

     தக்க சமயம் வந்ததும் திருமணம் நடத்திக்கொள்வது என்பதற்காக அல்ல நான் காத்துக் கொண்டிருந்தது. என் மனதிலே காதல் அரும்பு மலராகிவிட்டது - எனினும் ராதாவின் மனம் எப்படியோ, அதைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதற்காகவே காலம் கடத்தி வந்தேன். என் நண்பன், ஜாடைமாடையாகக் கூறிவிட்டிருப்பான் போலிருக்கு தன் தாயாருக்கு. அந்த அம்மை, என்னைத் தனி அன்புடன் உபசரிக்கத் தொடங்கினார்கள். பர்மா நாயுடுவும் எனக்குப் பழக்கமாகிவிட்டார். நெருங்கிப் பழகப் பழக, அவரும் சூழ்நிலையால் கெட்டுப் போனவர் என்பதைத் தெரிந்து கொண்டேன். சூது தெரியாதவர். வாழும் வகையறியாதவர். யாரையும் சுலபத்தில் நம்பிவிடுவார் - திடீரென்று விரோதம் பாராட்டுவார் - காரணமே இருக்காது.

     ஒரு நாள் என் நண்பன் நாகசுந்தரம், "ஏன் ஏதாவது சிறு தொழிலோ, வியாபாரமோ செய்யக்கூடாது? குடும்பம் கொந்தளித்தபடியே இருக்கலாமா? நாலு பேர் பார்த்து மெச்சும்படியான நிலையில் இருக்கவேண்டாமா?" என்று புத்தி கூறினான் - வந்துவிட்டது கோபம், பர்மா நாயுடுவுக்கு. "தம்பி! ஏதோ நீ கொஞ்சம் பணம் கொடுத்து உதவி செய்கிற காரணத்தாலேயே என்ன பேசினாலும் கேட்டுக் கொள்வேன் என்று எண்ணிக் கொள்ளாதே. நான் மகா ரோஷக்காரன். மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டேன். என்னைக் கேவலம் உன் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் என்று எண்ணிவிட்டாய் - இதை நான் சகித்துக் கொள்ள மாட்டேன். பார்! இன்னும் இரண்டே மாதங்களில், பவுன் பவுனாகக் குவித்துக் காட்டுகிறேன். பணம் சேகரிக்கும் வித்தை எனக்கும் தெரியும்" என்று படபடவெனப் பேசிவிட்டார். என் நண்பன் மிகவும் வேதனைப் பட்டான். நான் தான் தக்க சமாதானம் கூறினேன்.

     கோபத்தின் காரணமாக, என் நண்பனிடம், பர்மா நாயுடு, பிறகு பணமே கேட்பதை நிறுத்திக் கொண்டார் என்று எண்ணுகிறீர்களா? அதுதான் கிடையாது! நாலு நாட்களிலே கோபம் போய்விட்டது. "தம்பி! உன்னைத் தவிர வேறு யார் எனக்குக் குலதெய்வம்" என்று பேச ஆரம்பித்தார். என் நண்பன் மிகுந்த சிரமப்பட்டு பர்மா நாயுடுவை 'வியாபாரி'யாக்கினான். அதிக இலாபம் வரக்கூடியது அல்ல என்ற போதிலும், ஏதோ கௌரவமாகக் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருந்தது.

     ராதாவுக்கும் எனக்கும் காதல் எவ்வளவு வேகமாக வளர்ந்து வந்ததோ, அதைவிட வேகமாக நாகசுந்தரத்துக்கும் அவன் தகப்பனாருக்கும் மனபேதம் வளரலாயிற்று.

     காசி யாத்திரைக்குப் பிறகு, கோட்டையூரார், பூச்சும் பஜனையும் அதிகமாக்கிக் கொண்டார். ஒவ்வொரு சனிக்கிழமையும், வீட்டிலே சத்கதா காலட்சேபம்! சிறு சிறு கோயில்களிலே எல்லாம், உற்சவங்கள்! கோட்டையூரார் பெரிய 'பக்திமான்' ஆகிவிட்டார் என்று பலரும் பேசிக் கொண்டனர்; புகழ்ந்தனர்.

     நாகசுந்தரம், கோட்டையூராரின் கொடுஞ் செயலைத் தெரிந்து கொண்டதால், அவனுக்கு அவரிடம் இருந்து வந்த பயம், பாசம், மதிப்பு யாவும் பறந்துவிட்டன. அவருடன் சரியாகப் பேசுவதுமில்லை - பேச நேரிட்டாலும், கண்டிப்புக் குரலிலே தான்! அவர் திடுக்கிட்டுப் போனார், தன் மகனின் குணம் மாறிவிட்டது கண்டு. அவர் என்ன கண்டார், மகன், தந்தையின் 'திருக்கலியாண' குணத்தைத் தெரிந்து கொண்டதன் விளைவு இது என்று.


     கோட்டையூரார் கணக்கேட்டைப் புரட்டிப் பார்த்து, "நாகா! இதென்ன 300 உன் பேரில் எழுதியிருக்கிறாயே?" என்று கேட்பார். "ஆமாம், என் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்" என்று தயக்கமின்றி நாகசுந்தரம் பதில் கூறுவான். கோபம், கோட்டையூராருக்கு. எனினும் அடக்கிக் கொண்டு, "என்னடா செலவு 300-க்கு? மோட்டார் சைக்கிள் வாங்கவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தாயே அதற்கா?" என்று விளக்கம் கேட்பார். "அதெல்லாம் இல்லை. என் சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொண்டேன்" என்று கூறுவான், நாகசுந்தரம். கோட்டையூரார் மிரள மிரள விழிப்பார்.

     அதட்டிப் பார்த்தார். அவன் முறைத்திடலானான்.

     புத்தி கூறிப் பார்த்தார், அவன் அலட்சியப்படுத்தினான்.

     சலித்துக் கொண்டார், அவன் சட்டை செய்வதாக இல்லை.

     "மகனா இவன்! என்னை உயிரோடு வேகவைக்கும் மகாபாதகன். என்ன பாபமெல்லாம் உருண்டு திரண்டு, இவன் உருவாகி வந்து என்னை வாட்டுகிறது" என்று கலக்கத்துடன் பேசலானார்.

     ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு இருக்கும், நாகசுந்தரம், 'சொந்த செலவு'க்கு என்று கணக்கு எழுதி எடுத்திருந்த தொகை.

     "சொந்த செலவு! ஐந்து அல்ல! பத்து அல்ல! நூறு இருநூறு அல்ல - 5 ஆயிரம். இவருக்குச் சொந்தச் செலவு - கவர்னர் பிரபு!" என்று மனம் கொதித்துக் கூறுவார் கோட்டையூரார் - காதில் வாங்கிக் கொள்வதில்லை நாகசுந்தரம்.

     பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் - முடியாத நிலையில் கோட்டையூரார், என்னைக் கூப்பிட்டனுப்பி, தன் மகனைப் பற்றிக் கூறலானார்.

     "போடா அப்பா. போய், அந்த சத்யசுந்தர், என்ன கூறி அழுகிறாரோ அதைக் கேட்டு, அவருக்குச் சாந்தியும் சாமதானமும் ஏற்படும்படி செய்துவிட்டு வா" என்று நாகசுந்தரம் கேலி செய்தான், நான் கோட்டையூராரைப் பார்க்கப் போவது தெரிந்து.


     "தாகத்துக்குச் சாப்பிடுகிறாயா தம்பி! இளநீர்" என்ற அட்டவணையுடன் கோட்டையூரார் பேச்சைத் துவக்கினார். பைத்தியக்காரர்! அவர், உலகினர் கண்களுக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்த "இரகசியங்கள்" யாவும் எனக்கும் நாகனுக்கும் தெரியும் என்பதை அவர் என்ன கண்டார். கைலாயத்துக்கு அப்போதுதான் போய்ப் பார்த்துவிட்டு, பரமன் அருள் பெற்றுக் கொண்டு வந்த பரம பக்தர் போலப் பேசலானார். இடையிடையே 'சங்கரனை'ச் சாட்சிக்கு இழுத்தபடி! "தம்பி! கோட்டையூரார் குடும்பம் என்றால் சகலரும் மதிக்கக் கூடிய நிலைமைக்கு, ஏதோ நான் பாடுபட்டுப் பகலென்றும் இரவென்றும் பாராமல் உழைத்துக் கொண்டு வந்தேன். என் சுபாவம் எல்லோருக்கும் தெரியும். கஞ்சன் அல்ல! ஆனால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை வாரி இறைப்பவனுமல்ல! பழமொழி சொல்வார்களல்லவா, ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு, என்று - அதுபோல எதற்கும் ஒரு அளவு, காரணம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவன். கஷ்டப்பட்டு, யாரையும் மோசம் செய்யாமல் சேர்த்த சொத்து - அதனாலே தான் எனக்குக் கொஞ்சம் அக்கறை, சொத்து பாழாகக்கூடாது என்பதிலே. ஊருக்கு உபகாரியாக, இவ்வளவு காலம், மதிப்போடு வாழ்ந்துவிட்டேன். இப்போது வீட்டில் ஒரு காலும் சுடுகாட்டில் ஒரு காலும் வைத்துக்கொண்டு இருக்கிற சமயம். இந்தச் சமயத்திலே, நாகசுந்தரம், என்னை இம்சிக்கிறான். அவனுடைய பேச்சும் போக்கும் எனக்குத் தாங்க முடியாத வேதனையை உண்டாக்குகிறது. வாலிபப் பருவம் - பொறுப்பு தெரியாது. அதனால் கொஞ்சம் ஆடுகிறான் என்று நானாகச் சமாதானம் செய்து கொண்டேன் - முதலில். என்னால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு விஷயம் வளர்ந்துவிட்டது. தம்பி! நீயும் ஏதோ நாலு காசு உள்ள இடத்திலேதான் வளருகிறாய். நீயே சொல்லு, சொந்தச் செலவுக்கென்று ஆறு மாதத்திலே ஐயாயிரம் எடுத்துக் கொள்ளலாமா? இந்த அக்ரமத்தை எப்படிச் சகித்துக் கொள்வது? யார் சகித்துக் கொள்ள முடியும்? உன்னைப் போன்ற நல்லவர்களோடு பழகியும், இவன் இப்படியா கெட்டுக் கீரை வழியாவது? ஐயாயிரம் ஏனடா எடுத்தே என்று கேட்டால், ஏதாவது அடக்கமான பதில் கூறவேண்டுமே! கிடையாது! ஆமாம் - என் சொந்தச் செலவு! என்று கூறுகிறான். ஊரிலே, இது வரையிலே எவனும் என்னிடம் பேசினதில்லை இதுபோல! இவன் பேசுகிறான்! ஐயாயிரம் சொந்தச் செலவாம் - கேட்டாயடா தம்பி! சொந்தச் செலவு ஐயாயிரம் - வயிறு எரியாதா எனக்கு. இதைவிட நான் தூங்குகிற போது என் தலைமேலே கல்லைப் போட்டுச் சாகடித்து விடலாமே. போக்கிரி சாக்கிரி - குடியன் வெறியனெல்லாம் கூட, கோட்டையூராரிடம் வாலாட்டக் கூடாது, ஒட்ட நறுக்கி விடுவார் என்று பயந்து பேசும் - இந்தப் பய, ஒரு காசுக்குப் பயன் கிடையாது. இவனாலே, ஒழுங்கா கையேடு குறிக்கத் தெரியாது, பேரேடு பதியத் தெரியாது, எந்த மாதம் விதை போடணும், எந்த மாதம் அறுவடைக்குப் போகவேணும் என்கிறது தெரியாது. இப்படிப்பட்ட பயலுக்கு, ஐயாயிரம் தேவைப்படுதாம் தம்பி! சொந்தச் செலவுக்கு!! விவரம் கேட்டா, "ரௌடி" போல முறைத்துப் பார்க்கிறான் என்னை! கோபத்தாலே, எதாவது இரண்டு வார்த்தை நான் கடுமையாகச் சொல்லி விட்டால், என்னை அடித்துவிடுவான் போலிருக்கு! இவ்வளவு கெட்டுப் போயிருக்கிறான்! நான் இனியும் பொறுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. கடைசியாக உன்னிடம் சொல்லி விட்டேன். நீ அவனுக்கு தகுந்த புத்திமதி சொல்லு - திருந்திக் கொள்ளப் போகிறானா இல்லையா என்று தீர்மானமாகக் கேட்டுவிடு பிறகு நான் என்னாலானதைப் பார்த்துக் கொள்கிறேன் - அவனும் அவனுடைய கைவரிசையைக் காட்டிப் பார்க்கட்டும். கோட்டையூராரோடு மோதிக் கொண்டு நாசமாகிப் போனவர்கள் பல பேர்! இவன், பொடிப்பய - இவனும் வேண்டுமானால் பார்க்கட்டும். இவ்வளவுதான் நான் சொல்லக் கூடியது; நீ, புத்தியுள்ளவன் - பொறுப்பு அறிந்தவன் - உன்னாலேதான் அவனைத் திருத்த முடியும்" என்று கோட்டையூரார் கூறி, "தம்பி! தாகத்துக்கு ஏதேனும் வேண்டுமா?" என்ற முடிவுரையுடன், தமது பேச்சை முடித்துக் கொண்டார்.

     கோட்டையூராரின் கோபத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை - யாருக்கும் ஏற்படத்தானே செய்யும் தன் மகன், பணத்தைப் பாழாக்குவது தெரிந்தால். கொடுமை பல செய்து, அட்டூழியங்கள் அநேகம் செய்து, கட்டினவளைத் துரோகம் செய்து, பராரியாக்கி, விபசாரியாகும்படி துரத்திய ஆசாமி, எவ்வளவு யோக்யர் போல, கண்ணியவான் போலப் பேசுகிறார் - எப்படி முடிகிறது இப்படிப் பகல் வேஷமிட என்பதை எண்ணித்தான் ஆச்சரியப்பட்டேன்.

     "போடா, முட்டாளே! மளமளவென்று உண்மையை எடுத்து வீசி, வாயை அடக்காமல், அவர் கூறிக்கொண்டிருந்த கட்டுக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு வருகிறாயே!" என்று நாகசுந்தரம் என்மீது கோபித்துக் கொண்டான், நான் தூது போய்வந்த விவரம் கூறினதும். கோட்டையூரார் என்னிடம் முறையிட்டும் பயனில்லை என்பதைக் கண்டுகொண்டான பிறகு, சில நாட்கள் நேரடியாகவே, நாகசுந்தரத்தைத் தாறுமாறாகத் 'திட்டி'ப் பார்த்தார் - அதிலும் பலன் ஏற்படவில்லை. பிறகு, கடைசி பாணத்தைப் பிரயோகித்தார் - வக்கீல் விருத்தாசல ஐயர் அந்தப் பாணத்தைத் தயாரித்துக் கொடுத்தார். அது இது:

நோட்டீஸ்


     இதனால், சகலருக்கும் தெரிவிப்பது யாதெனில், என் மகன் நாகசுந்தரம், சிலருடைய துர்ப்போதனையால், குடி, கூத்தி, சூதாட்டம் போன்ற கெட்ட காரியங்களில் ஈடுபட்டு, சொத்தைப் பாழாக்குவதால், அவனை நான், குடும்பத்திலிருந்து வெளியேற்றிவிட்டேன். அவனிடம் 'விடுதலை'ப் பத்திரமும், எழுதி வாங்கியாகி விட்டது. அவனுக்கும், என் குடும்பச் சொத்துக்கும் இனி ஒரு சம்பந்தமும் கிடையாது. இதை அறியாது, யாராவது அவனுக்குக் கடன் கொடுத்தால், அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

கோட்டையூர் - தர்மலிங்க முதலியார்.


     இந்த 'நோட்டீஸ்' தயாரித்து என்னிடம் கொடுத்தனுப்பினார் கோட்டையூரார். இது அடுத்த வெள்ளிக்கிழமை எல்லா பத்திரிகைகளிலும் வெளியிடப் போகிறேன் - கடைசி முறையாக நீ கூறியும், திருந்தப் போகிறானா, அல்லது ஊர் சிரிக்க வைக்கட்டுமா என்று கேட்டுச் சொல்லிவிடு - என்றெல்லாம் 'சேதியும்' சொல்லி அனுப்பினார். நாகசுந்தரத்தின் நற்பெயருக்கு இந்த 'நோட்டீஸ்' எவ்வளவு கேவலத்தை உண்டாக்கும் என்பதை எண்ணி நான் பதைத்துப் போனேன் - நாகசுந்தரத்திடம் இதைக் கூறினேன் - அவன் விழுந்து விழுந்து சிரித்தான் - சிரித்துவிட்டு, ஒரு காகிதத்தில், ஏதோ எழுதி என்னிடம் கொடுத்துவிட்டு, "சொல்லு அவரிடம், வக்கீல் நோட்டீஸ் வெளிவந்த மறுதினம் இந்த விளம்பரமும் வெளிவரும் என்று" எனக்குக் கூறினான். தந்த விளம்பரம் இது:

ஒரே ஸ்பெஷல் நாடகம்

     தமக்கையை மணம் செய்துகொண்டு, சொத்துக்காக ஆசைப்பட்டு, தங்கையை மணம் செய்துகொள்ள எண்ணி மனைவியைச் சித்திரவதை செய்த மகானுபாவர் யார்?

*
உயிரோடு இருப்பவரைச் செத்ததாகக் கதை கட்டிய கண்ணியன் யார்?

*
பிச்சைக்கு வந்த கிழவி பிணமான மர்மம் என்ன?
*
பேய்பிடித்ததாகப் பொய் சொன்ன பேயன் யார்?
*
முதலிய அதி அற்புத மர்மங்களை விளக்கிடும்

"கோட்டையூர்க் கொலைகாரன்"

என்ற அற்புதமான நாடகத்தைச் சீர்திருத்த நாடக சபையார் விரைவில் நடத்திக் காட்டுவார்கள்.
நாகசுந்தரம்,
காண்ட்ராக்டர்.

     என் நண்பனின் சாமர்த்தியம் தக்க பலன் தந்தது. கோட்டையூரார், இடிகேட்ட நாகமானார், இந்தக் காகிதக் கணையை நான் வீசினதும். கண்களிலே மிரட்சி - வாய் குளறலாயிற்று - உடல் நடுங்கிற்று.

     "ஐயாயிரம் - கூத்திக்கும் குடிக்கும் போகவில்லை - தங்களால் சித்திரவதை செய்யப்பட்ட ரங்கம்மாளின் குடும்பத்துக்குத்தான் போயிருக்கிறது" என்று விளக்கலானேன்.

     "ரங்கம்! ரங்கம், இங்கா இருக்கிறாள்? என் மகனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா - ஐயையோ!" என்று அலறினார் - படுத்தார் - அவருக்கு நெடுநாட்களாக இருந்து வந்த பச்சைவாத நோய் தாக்கிற்று - கை கால் வரவில்லை - சரியாகப் பேச முடியவில்லையே தவிர, அவர் மனதிலே, என்னென்ன எண்ணங்கள் தோன்றின என்பதை - அவர் பொழிந்த கண்ணீர் காட்டிற்று.

     நாகசுந்தரம் கோட்டையூராருக்கு வந்துள்ள கொடிய வியாதியைப் போக்கப் பல மருத்துவர்களை ஏற்பாடு செய்தான் - பலன் இல்லை.

     ரங்கம்மாளுக்குச் சகல விஷயமும் கூறப்பட்டது - வருந்தினார்கள்; ஒருமுறையாவது அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று கூறினார்கள் - நாகசுந்தரம் "வேண்டாம், அம்மா! உங்களைப் பார்த்தால், ஏற்படக்கூடிய மன அதிர்ச்சியாலே, அவர் இறந்துவிடக் கூடும்" என்று கூறித் தடுத்தான். 'தொடர் தொடராகத் துன்பங்களைத் தாங்கித் தாங்கிப் பழக்கமாகிவிட்டது நாகு! - இதையும் தாங்கிக் கொள்கிறேன் - வேறென்ன செய்ய முடியும்" என்று ரங்கம்மாள் சோகமாகக் கூறினார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முழுமுதலோன் Sun Feb 23, 2014 3:44 pm

ரங்கோன் ராதா

22

     ராதாவின் 'அன்பை' நான் பெற்றுவிட்டேன் - இனி என் தகப்பனாரின் அனுமதிதான் தேவை. நாகசுந்தரம்தான் இதற்குத் 'தூது'. சுலபமாகவும் வெற்றியாகிவிட்டது. நாங்கள் 'நாயுடு' குடும்பம்! எனவே, பர்மா நாயுடு ஒருவர் வந்திருக்கிறார். அவருடைய மகள் ராதாவைத்தான் கலியாணம் செய்து கொள்ள விரும்புகிறான் பரந்தாமன் என்று சொன்னதும், அப்பா சம்மதித்துவிட்டார். திருமண நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. கடைசியில், தன் மகள் சுகப்பட, கௌரவப்பட, வழி கிடைத்ததே என்ற மகிழ்ச்சி ரங்கம்மாளுக்கு! தன் தங்கைக்குத் தகுந்த 'வரன்' கிடைத்ததுபற்றி நாகசுந்தரத்துக்குக் களிப்பு! எனக்கும் ஆனந்தம்! ராதா? ஒரே குதூகல மயம்!


     இவ்வளவையும் 'பாழ்' செய்யக் கிளம்பினான், பர்மா நாயுடு! கலியாணத்துக்கு இரண்டே நாட்கள் உள்ளன. நேரே என் வீடு வந்தான். மாடியில், என் தனி அறையில் நான் இருந்தேன்... புதிதாகத் தைத்து வந்த, கோட்டு ஒன்றை போட்டுக்கொண்டு, 'கண்ணாடியில்' பார்த்தபடி.

     "மாப்பிள்ளையாகப் போகிறாயோ, மாப்பிள்ளை!" - என்று கோபமும் கேலியும் கலந்த குரலிலே கேட்டான் - கதவை, உட்புறம் தாளிட்டுக் கொண்டான்.

     "இதோ பார்! எனக்கு இப்போதே ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தாக வேண்டும். இல்லையானால் இந்தக் கலியாணம் நடைபெறாது - கண்டிப்பாக நடைபெறாது" என்று கூறினான்.

     எனக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது.

     "ஆயிரம் ரூபாயா? ஏன்? பெண்ணை விற்கிறாயா அந்த விலைக்கு?" என்று நான் கேட்டேன், கோபமாகத்தான்.

     "பெண்ணை விற்பது அல்ல! அந்த "இளித்தவாய்ச் சிறுக்கி" யார் தடுத்தாலும், உன்னைத்தான் கலியாணம் செய்து கொள்வாள். நான் கேட்கும் ஆயிரம், ராதாவுக்காக அல்ல! இரகசியத்தை வெளியிடாமலிருக்க! உன் அப்பாவுக்கு, ரங்கத்தின் "பூர்வீகம் தெரியாதிருக்கவேண்டுமே, அதற்காக! தெரிந்தால், ஊர் சிரிக்குமே. ஒப்புக்கொள்வாரா, உன் தந்தை. அதற்காக, நான் வாயை மூடிக் கொண்டிருப்பதற்காக. 'ஆயிரம்' தரவேண்டும் என்றான். எனக்கு வந்த கோபத்தில், அப்படியே அந்தக் குடிகாரனின் கழுத்தைப் பிடித்து நெரித்து விடலாமா என்று கூடத் தோன்றிற்று. அடக்கிக் கொண்டு, சாந்தமாக ஆனால் உறுதியுடன் கூறினேன் - அரை ரூபாய்கூடக் கொடுக்க முடியாது என்று. "கலியாணத்தைத் தடுக்க, உன்னால் முடியாது. ஊரிலே ஒரு சமயம், உன் உளறல் கேட்டுச் சில பேர் இழிவாகப் பேசக்கூடும். அதுதான் நடைபெறுமேயொழிய, கலியாணம் நின்றுவிடாது" என்று நான் சொன்னேன்.

     "கோட்டையூராரின் முதல் மனைவிதான் ரங்கம் என்பது தெரிந்தால் கூடவா, உன் அப்பா சம்மதிப்பார் இந்தக் கலியாணத்துக்கு?" என்று முடுக்குடன் கேட்டான் பர்மா நாயுடு.

     "கலியாணம் எனக்கு! அப்பாவுக்கு அல்ல" - என்று நான் வெடுக்கெனப் பதில் சொன்னேன். பர்மா நாயுடு, ஆயிரத்தை ஐந்நூறு ஆக்கினான் - நான் முறைத்துப் பார்த்தேன், இருநூறுக்கு இறங்கினான் - எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "மிரட்டிப் பணம் வாங்குவது முடியாது, மாமா! ஆயிரம் கூடத் தந்துவிடுவேன், அன்புடன் கேட்டால்" என்று சொன்னேன் - இளித்தான். ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தேன். அவைகளை வாங்கிக்கொண்ட பிறகு சொன்னான். "தம்பி! ஏன் தெரியுமா இது! கலியாணத்தின் போது, உன் அந்தஸ்துக்கு ஏற்றபடி நான் உனக்கு மரியாதை செய்ய வேண்டாமா? அதற்காகத்தான்!"

     திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

     பர்மா நாயுடு, நானூறு ரூபாயில் எனக்கு 'ரிஸ்ட் வாட்ச்' வாங்கித் தந்தார்!

     கோட்டையூரார் 'ராதாவுக்கு' ஆசீர்வாதமும், அழகான வைர நெக்லெசும் பரிசளித்தார் - பகிரங்கமாக அல்ல.

     எப்படியோ பெரியதோர் 'பொய்' சொல்லி, என் தகப்பனாரை ஏமாற்றியாகிவிட்டது.

     அந்தப் பொய் சொல்லாவிட்டால், உண்மையைக் கூறி இருந்தால், ராதாவை நான் மனைவியாகக் கொள்வதை எப்படி என் அப்பா சம்மதிப்பார்!

     நானும் நாகுவும், இதைப் பேசிக்கொண்டே சிரித்துக் கொண்டிருந்தோம், ஒரு நாள் மாலையில், என் மாடி அறையில்.

     "அண்ணா! அப்பாவை ஏமாற்றிவிட்டதாகத்தானே அத்தான், 'கித்தாப்பு'ப் பேசுகிறார்" என்றாள் ராதா.

     "ஆமாம் - சாமர்த்தியமாக நான் காரியத்தைச் சாதித்துக் கொண்டேன் - அப்பா, கர்நாடகப் பேர்வழி - கலப்பு மணத்துக்குத் துளியும் சம்மதிக்கமாட்டார்" என்றேன்.

     "தங்களைவிடத் தங்கள் அப்பாதான் சாமர்த்தியசாலி" என்றாள் ராதா.

     "எப்படி?" என்று நாகு கேட்டான்.

     "அண்ணா! இவர் அவருடைய மகன் அல்ல! இவர் மனித குலம் - செட்டியாரோ, நாயுடுவோ, முதலியாரோ, பிள்ளையோ, என்னவோ தெரியாது" என்றாள் ராதா.

     எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

     "விளங்காது, நானாக விளக்கினாலொழிய! எனக்கும் உங்கள் அப்பா சொன்னதால்தான் தெரிந்தது" என்றாள்.

     என் உள்ளம் வெடித்துவிடும் போலிருந்தது.


     "பரமா, பயப்படாதே! பழங்கதை - இனிக் கூறித்தான் தீரவேண்டும், அதை" என்று கூறிக்கொண்டே என் அப்பா, அறைக்குள் வந்தார்.

     "எனக்குக் கல்யாணமாகிப் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை - கவலைப்பட்டேன் - பிறகு, 'கர்ப்பம்' தரித்தது - அதாவது கர்ப்பம் தரித்ததாக, என் மனைவி 'பாசாங்கு' செய்தாள். தாய் வீடு சென்றாள் - அங்கு ஒரு லேடி டாக்டரின் உதவியால், என்னை நம்பவும் வைத்தாள். லேடி டாக்டர் ஏழைகளுக்காக ஒரு பிரசவ விடுதி நடத்தி வந்தார்கள் - அங்கு பிறந்த ஒரு குழந்தையின் தாய் இறந்துவிடவே, அந்தக் குழந்தையை என் மனைவியுடையதாக்கினார்கள் - நீதான் அந்தக் குழந்தை!" என்றார்.

     எனக்கு பேச்சு எழவில்லை. 

     "அந்தக் குழந்தைதான் தாங்கள். அந்த லேடி டாக்டர்தான், கல்லூரியில் நாடகமாடினேனே, 'தாரா' நாடகம், அப்போது தலைமை வகித்த திலகவதி" என்று ராதா விளக்கம் கூறினாள்.

     "கொஞ்சம் துப்பறியும் வேலை செய்தேன் - திலகவதியும் துணை செய்தார்கள் - கண்டுபிடித்தேன் உண்மையை" என்று ராதா கூறினாள்.

     "எனக்குத் தெரியாது, இந்த ரகசியம் ராதாவுக்குத் தெரியும் என்று. கலியாணத்துக்குப் பிறகு, ராதாவே என்னிடம் ஆதாரத்துடன் கேட்கவே, நான் உண்மையை ஒப்புக்கொண்டேன்" என்று மேலும் விளக்கம் கூறலானார் என் தகப்பனார். 

     எனக்கு என்னென்னவோ எண்ணங்கள் தோன்றித் தோன்றிக் கலைந்தன.

     நாகசுந்தரம், சாமர்த்தியமாகப் பேச்சை வேறு பக்கம் திரும்பினான்.

     பல நாட்களாயின, என் மனம் ஒரு நிலையை அடைய.

     "இப்போது கூறுங்கள், யார் சாமர்த்தியசாலி? உங்கள் அப்பாதானே! நீங்கள், நான் யார் என்பதை அவர் அறிந்து கொள்ளாதபடி சாமர்த்தியமாகக் காரியம் செய்தீர். அவரோ நீங்கள் யார் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியாதபடி, இவ்வளவு வருஷங்களாக மறைத்து வைத்தார். அவர்தானே உண்மையில் சாமர்த்தியசாலி" என்று ராதா கேட்டாள்.

     அவளை என் அருகே இழுத்து முத்தமிட்டுக் கூறவேண்டும் என்று எண்ணினேன் - அதை எப்படித்தான் என் ராதை தெரிந்து கொண்டாளோ தெரியவில்லை; தளிர்போலச் சாய்ந்தாள் என் மீது. அவளுடைய கன்னங்களில் - ஆமாம் - என் கரம்தான் முதலில் விளையாடிற்று - பிறகு அதரம்.

     "கிளியே! மறைந்துபோயிருந்த 'இரகசியத்தைக்' கண்டறிந்த, நீதான் எங்களிருவரை விடச் சாமர்த்தியசாலி" என்றேன் நான்.

     "சந்தேகமென்ன அதிலே! பொதுவாகவே, ஆண்களை விடப் பெண்கள்தான் சாமர்த்தியசாலிகள்" என்றாள் என் ராதா.

     'எப்படி?' என்று நான் கேட்கவில்லை. நான் அவள் கூந்தலைக் கோதினேன் - களித்தேன். 

     "எப்படி என்று கேட்கிறீர்களா கண்ணாளா! எவ்வளவு பெரிய சாமர்த்தியசாலியான ஆடவனாக இருப்பினும் அவனைப் பெற்றெடுத்தவள் ஒரு பெண்தானே! அவள் தானே சிறப்புக்குக் காரணம்" என்றாள்.

     "இன்பமே" என்றேன் நான்.

     கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தாள் - செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று!

     புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்!




சுபம் 


[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by முரளிராஜா Fri Aug 28, 2015 10:21 am

முழு நாவலையும் பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by செந்தில் Sat Aug 29, 2015 12:05 pm

அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா  Empty Re: ரங்கோன் ராதா-பேரறிஞர் அண்ணா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum