தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சின்னச் சின்ன கதைகள்

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 13, 2015 7:27 pm

First topic message reminder :

கொடுத்துப் பெறுதல்
--------------------------------

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

நன்றி: ந. உதயகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:14 pm

இந்நாட்டு மன்னர்

--------------

கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில் ஆழ்ந்து நின்றார். நகரத்தின் மையப்பகுதியில் வீடு, கார்,ஆள், அம்பலம் என்று எதிலும் பெருமை. எப்படி இருந்த பழனி, எப்படி மாறிவிட்டான்?

“”வள்ளி… அது… வந்து.. பழைய சாதம் மிச்சம் இருக்கு.. வாங்கிக்கிறியா?”

“”எதுக்கு மேகலா அக்கா இப்படித் தயங்கறீங்க. வெறும் தண்ணியைக் குடிச்சு வயத்தை நிரப்பிக்கிறதுக்கு, பழைய சாதம் அமிர்தமாச்சே…? போடுங்க தாராளமாய்”

தன் மனைவிக்கும், இந்த பழனியின் பெண்டாட்டிக்கும் நடந்த பழைய உரையாடல் ஏனோ மனதில் உதிக்க, அருகில் இருந்த மேகலாவை நோக்கினார் ராமநாதன்.

“”என்னங்க?”

“”அது.. பழசை நினைச்சேன்…!” என்று புன்னகை புரிந்தார்.

“”என்ன, ஐயாவையும் அம்மாவையும் ரொம்ப நேரம் காக்க வைச்சுட்டேனா?” என்று கேட்டபடி வந்தார் பழனி. பட்டு வேட்டி தரையில் புரண்டது.

“”பரவாயில்லை பழனி”

“”எம்.எல்.ஏ. வந்தாரு. அவரோடு பேசிட்டு, வழி அனுப்பிட்டு வர்றதுக்கு நேரமாயிடுச்சு. மன்னிச்சுடுங்க ஐயா”.

“”அதனாலென்ன?”

“”வள்ளி.. ஏய்” என்று கத்தி அழைத்தார் பழனி.

“”இதோ வந்துட்டேன். அந்த எம்.எல்.ஏ. சம்சாரம் விடமாட்டேங்குது. நொய் நொய்னு… என்னம்மா, நல்லா சாப்பிட்டீங்களா?”

பட்டுச் சேலையில் தலைப்பைத் திருகியபடி விசாரித்தாள் வள்ளி.

“”உங்க பத்தாவது கல்யாண நாள் நிகழ்ச்சிக்கு எங்களையும் கூப்பிட்டதுக்கு நாங்கதான் நன்றி சொல்லணும்” என்றார் ராமநாதன்.

“”என்னங்க ஐயா பெரிய வார்த்தையெல்லாம்? பழைய வறுமையையும் மறக்கலை நான்… உங்களையும் மறக்கலை”

அதற்குள் ஓர் ஆள் வந்து காதைக் கடித்தான்.

“”ஒரு நிமிஷம் ஐயா. வந்துடறேன். வள்ளி நீயும் வா” என்று வேட்டி அவிழ ஓடினார். வேட்டியை ஒழுங்காகக் கட்டிக் கொள்ளத் தெரியாத அதே பழனிதான் இன்னும். ஆனால், அன்று ஆங்காங்கே நைந்துபோன அழுக்கு வேட்டி. இன்றோ, அகல ஜரிகை போட்ட விலை உயர்ந்த வேட்டி.

ராமநாதன் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரே குடிசையில்தான் முன்பு வசித்து வந்தது பழனியின் குடும்பம்.

வாடகை ரிக்ஷாவை ஓட்டி, பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தான். வள்ளி நாலு வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்துத் தன் பங்குக்கு வீட்டு வருமானத்தை உயர்த்தினாள்.

“”என்னம்மா விசேஷம் இன்னிக்கு? வீட்ல பாயசம், கோயில் அர்ச்சனை?”

“”அது வள்ளி. இன்னிக்கு எங்க இருபதாவது கல்யாண நாள்”

“‘ஓ! அதுதான் நீங்க புது நூல் புடவையில் ஜொலிக்கிறீங்களாக்கும். ஹும்” என்று பெருமூச்சு விட்டாள்.

“”என்ன?”

“”அடுத்த வாரம் புதன்கிழமை எங்களுக்குக் கூட கல்யாண நாள்தான். அதை நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்தது”.

அவள் மனசின் ஓரத்தில் ஏற்பட்ட ஏக்கத்தை நொடியில் புரிந்துகொண்டாள் மேகலா.



அடுத்த புதன்கிழமை காலை சரியாக ஆறு மணிக்கு வழக்கம்போல வேலைக்கு வந்தவளுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

இருநூறு ரூபாய் வாயில் சேலையும், நூறு ரூபாய் வேட்டியும் அவர்களின் திருமண நாள் பரிசாய் அளித்தாள் மேகலா. அன்று அந்த வாயில் புடவையைக் கண்டு பூரித்து ஆடையாய்க் கட்டிக் கொண்டவள், இன்று ஐயாயிரம் ரூபாய் காஞ்சிப் பட்டை அலட்சியமாய் உடுத்திக்கொண்டிருக்கிறாள்.

“‘மறுபடியும் மன்னிக்கணும் ஐயா” என்று திரும்பி வந்தனர் பழனியும் வள்ளியும்.

“”அப்ப நாங்க கிளம்பறம் பழனி”.

“”என்னய்யா அதுக்குள்ளே”

“”வீட்டுல பையனும், பொண்ணும் தனியா இருக்காங்க”

“”அவங்களையும் கூட்டி வந்திருக்கலாம். இப்ப என்ன படிக்கிறாங்க ரெண்டு பேரும்?”

“”பையன் இந்த வருஷம் காலேஜ் போறான்.பொண்ணு ப்ளஸ் டூ”

“”எந்தக் காலேஜ்ல சேர்க்கப் போறீங்க?”

“”ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டைதான். நம்ம அரசாங்கக் கல்லூரியிலே கிடைக்கிற கோர்சில படிக்க வைக்கணும்”

“”என்னம்மா. நான் ஒருத்தன் இருக்கறதையே மறந்துட்டீங்க. எந்தக் காலேஜ்ல சேர்க்கணும், சொல்லுங்க”

“‘மற்ற காலேஜ்னா டொனேஷன்….”

“”என் சிபாரிசு இருக்கே. டொனேஷனைப் பற்றி நீங்க கவலைப்படாதீங்க” என்றவரைப் புன்னகையுடன் பார்த்தார் ராமநாதன்.

“”என்னங்க…?”

“”என்னை உனக்குத் தெரியாதா? டொனேஷன், வரதட்சணை, லஞ்சம், கள்ளக் கடத்தல் எல்லாம் ஒரே ரகம்தான் என்னைப் பொறுத்தவரை”

“”ஐயா இன்னும் மாறவேயில்லை” என்று சிரித்தார் பழனி.

“”அப்ப கிளம்பறோம் பழனி”

“”வாங்க. அடிக்கடி வந்தீங்கன்னா சந்தோஷப்படுவோம்” என்று கை காட்டினார். இருவரையும் வாசல் வரை வந்து வழியனுப்பினார் பழனி.

வாசலில் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள்கள், பந்தோபஸ்துக்காக. ராமநாதனுக்கு சிரிப்பு வந்தது. “”என்ன சிரிக்கிறீங்க?” என்றாள் மேகலா.

“”சொல்றேன். நம்ம பஸ் வருதா பாரு”

“”லெவன் ஏ!” – அவர்கள் செல்ல வேண்டிய டவுன் பஸ்தான். கூட்டம் அதிகமில்லை. ஏறி அமர்ந்தனர்.



“”ஐயா போலீஸ் என் புருஷனை இழுத்துக்கிட்டு போயிடுச்சு…”

அழுதபடி ஓடிவந்தாள் வள்ளி.

மாநிலச் செய்திகளை ரேடியோவில் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதன் “திடுக்’ கென எழுந்தார்.

“”என்ன சொல்றே?”

“”ஆமாங்க ஐயா. ரிக்ஷாவுல சாராயம் கொண்டு போறாருன்னு போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு”

மறுபடியும் அவருக்கு அதிர்ச்சி.

“”உன் புருஷன் சாராயம் கொண்டு போறானா?”

தலை குனிந்து நின்றாள் வள்ளி.

“”முதல்ல ஸ்டேஷனில் போய் விசாரியுங்க. பாவம் கலங்கிப் போய் நிக்கறா” என்றாள் மேகலா.

ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இவரின் உறவினர்தான். பேசிப் பார்த்தார். ஆனால் சாராய விஷயம் அவரை நெருடியது.

குற்றம் செய்தவன் தண்டனை அடைவதுதான் தர்மம். பழனி பதினைந்து நாள் ஜெயிலில் வாசம் செய்துவிட்டுத் திரும்பினான்.

அப்போது ஆரம்பித்தது அவன் வாழ்வில் திருப்பம். சாராயம் கடத்தி, பிறகு தானே விற்று, தானே காய்ச்சி, தில்லுமுல்லு வேலைகளில் தேர்ந்து… இதோ சமூகத்தில் அந்தஸ்துள்ள பிரஜையாகக் காட்சியளிக்கிறார், பழனி.

அன்று லாக்கப்பில் அடித்த போலீúஸ, அவன் வீட்டு வாசலில் இன்று பந்தோபஸ்துக்கு.

“”ஏன் மேகலா, பணம் வந்துட்டா சமூகத்தில் பெரிய மனுஷ அந்தஸ்து வருகுதில்லையா?”

முகத்தில் மோதிய காற்றினால் கலைக்கப்பட்டு பறந்த தலைமுடியை ஒதுக்கி விட்டபடி அவரைப் பார்த்தாள்.

“”என்ன யோசனைகள் பலமா இருக்கு அப்போதிருந்து? இப்ப கேள்வியும் புதிராயிருக்கு”

“”பழனியோட வாழ்க்கையை நினைச்சுப் பார்த்தேன். ஊரில் எந்த முக்கிய விழாவானாலும் பழனியிடம் நன்கொடைக்குப் போய் நிற்கறாங்க. அவன் பெயரைத் தலைமை இடத்திலே போடுறாங்க”

“”பொறாமையாயிருக்கா?”

“”சேச்சே… நாம பார்க்க வளர்ந்த பையன் அவன். ஆனால் சமூகத்தை நினைச்சாத்தான் குழப்பமாயிருக்கு”

சேலைத் தலைப்பால் தோள்பட்டை இரண்டையும் மூடிக்கொண்டாள் மேகலா, குளிருக்கு அடக்கமாய்.

“”என்னைப் பாரு. ஒழுக்கம், நியாயம்னு பேசிக்கிட்டு அதன்படி வாழறேன். உனக்கு எப்பவுமே இந்த சாதாரண சேலைன்னுதான் தலையிலே எழுதியிருக்கு. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாய் தில்லுமுல்லு செஞ்ச பழனி சொடக்குப் போட்ட நாழிகையில் பெரிய மனுஷனாயிட்டான். செல்வம் எல்லாம் அவனிடம் மண்டியிட்டு நிக்குது. அதான் புரியலை”

குழம்பிப் போய்ப் பேசும் தன் கணவரைப் பரிவுடன் பார்த்தாள் மேகலா.

“”குளிர் காத்து அடிக்குதே… காதைச் சுற்றி, துண்டை வேணும்னா கட்டிக்குங்களேன்”

“”பரவாயில்லை. இதமாய்த்தான் இருக்கு. முகத்துல மோதற காத்து மனசுக்கும் சுகமாயிருக்கு”

“”இதுதான் வித்தியாசம்” என்றாள் மேகலா மென்மையாய்.

“”என்ன சொல்றே?”

“”பழனியிடம் இப்ப காசு இருக்கு. புகழ் இருக்கு. உண்மைதான். ஆனால் முக்கியமானது இல்லை”

“”புரியலை…”

“”சாதம் குழைஞ்சா கஞ்சியாய்ச் சாப்பிட்டுடலாம். ஆனால் மனுஷனோட குணமே குழைவாயிடுச்சுன்னா கேவலம்தானே? ஆ… ஊன்னு வேலையாள்களை அதட்டுறதும், “ஹிஹி’ ன்னு “பவர்’ உள்ள ஆசாமிகளிடம் குழையறதும்…. பாவம் பழனி”

“”ஊம்…”

“”சொந்த மனைவியிடம் கூட இயல்பாய்ப் பேச வரலை பழனிக்கு. எப்பவுமே ஒரு முகமூடி மாட்டிக்கிட்டு, அதே பழகிப் போய், முகமூடியை மாட்டிக்கிட்டதே மறந்து போய், வேஷத்தோடவே அலையறான் பழனி. தன் இயல்பான குணமே மறந்துபோன மனுஷன் பரிதாபத்துக்கு உரியவன்தானே….”

“”அதுதானே அவனோட கவசமும்கூட இப்ப?”

“”கவசம் இல்லைங்க.. காலைப் பிடிச்ச சனியன். மேலே ஏறிட்டு இறங்கத் தெரியாம முழிக்குமே குழந்தைங்க, அதுபோன்ற நிலை. எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத பிச்சைக்காரர் தோற்றத்துல அவன் முகம். வசதி இல்லாட்டியும், எல்லாமே இருக்கற ராஜா மாதிரியான கம்பீரம் உங்க முகத்திலே. எப்படி வந்தது இது?”

“”எப்படி?”

“‘நீங்க கடைப்பிடிக்கிற வாழ்வு நெறிகள்தான் காரணம்”

பளிச்சென்று மனத்தில் பதியுமாறு சொன்ன மனைவியை பெருமையுடன் பார்த்தார் ராமநாதன். பைக்குள் இருந்த துண்டை எடுத்துத் தலையில் சுற்றிக் கொண்டார்.

“”என்ன, குளிருதுங்களா?”

“”இல்லை, ராஜாவுக்கு கிரீடம் இருந்தால்தானே அழகு? நான் இந்நாட்டு மன்னர். நீ என் இதய ராணி” என்று கம்பீரப் பொலிவுடன் சொன்ன கணவரை சந்தோஷமாய்ப் பார்த்தாள் மேகலா.

- போளூர் சி. ரகுபதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:16 pm

வயலோடு உறவாடி…
----------------------

lமுற்றமெங்கும் விரிந்திருந்த சுண்ணாம்புக் கோலங்கள், காவி பூசப்பட்ட மண்கட்டி அடுப்புகள், அக்னி வளர்க்க குவிக்கப்பட்டிருந்த பனையோலைகள், பொட்டும் மஞ்சள் குலையுமாக மினுங்கிய வெண்கலப் பானைகள், சூரியனை வரவேற்க ஏற்றி வைத்த ஐந்துமுகக் குத்து விளக்கு, பக்கத்தில் நெல்குவித்த நிறை நாழி, படைத்திருந்த காய் கனிகள், பனங்கிழங்கு கரும்புக் கட்டுகள்…..

பார்த்துப் பார்த்து எடுத்தது எல்லாம் ஸ்லைட் ஷோவில் ஒவ்வொன்றாக விரிந்தன.

“”நுணுக்கமாய் கவனிச்சு எடுத்திருக்கீங்க. ம்ம். நல்லாத்தானிருக்கு. ஆனா வளச்சு வளச்சு இப்படி சட்டிப் பானை, அடுப்பு கரும்புன்னு எடுத்தீங்களே.. பட்டிக்காட்டான் யானையப் பாத்த மாதிரின்னு யாரும் நினைச்சுடக் கூடாதேன்னு இருந்துச்சு” வில்லங்கமாகச் சிரித்தாள் சுமதி.

சுந்தரேசன் உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்தான்..

“”நாமதான் எதையும் செய்யறதில்லை. உனக்கும் எல்லாம் புது அனுபவம். மொத தடவையா நீ பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கேன்னு சித்தியும் விளக்கேத்துறதில இருந்து எல்லாத்தையும் உன்னையே பண்ண வச்சாங்க. செஞ்சதை நீயும், பார்த்ததை நம்ம பொண்ணுங்களும் நினைவில் வச்சுக்கணுமேன்னுதான் எடுத்தேன் தெரிஞ்சுக்கோ. இங்க பாரு நம்ம இளவரசிங்கள..”

மகள்கள் இருவரும் பாவாடை சட்டையில் தேவதைகளாய்த் தெரிந்தார்கள்.

பால் பொங்கி வருகையில் பொங்கலோ பொங்கல் என எல்லோருமாய்க் கூவியதை வீடியோ க்ளிப்பிங்காக எடுத்திருந்தான். பானையில் அச்சுவெல்லக் கட்டிகளைச் சேர்த்த சுமதியின் வளை கரங்களை மட்டுமின்றி, கண்ணும் மூக்கும் அருவியெனப் பொங்க, அடுப்புப் புகையில் இவள் ஓலை வைக்கத் திண்டாடுவதைக் கூட க்ளோஸ் அப்பில் எடுத்து விட்டிருந்தான்.

“”ஓ நோ.. இதை உடனே டெலிட் செய்யுங்க” கடுப்பாகிக் கூவினாள்.

“”அட இருந்துட்டுப் போகட்டும் விடு. நான் ரசிப்பேன்ல. வேணுமானா ஆல்பத்திலே ஏத்தல” என்று சிரித்தவன், சரி, உன் வேலையைக் கவனியேன். இதை முடிச்சுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். இன்னிக்கு விட்டா மறுபடி ஒருவாரம் இழுத்துடும். சித்திரை பொறக்கப் போகுது. பொங்கலுக்கு வந்து போனவன் இன்னும் படங்களை அனுப்பலையேன்னு சித்தப்பா பொசுபொசுங்கிறாராம்.

நாமெல்லாம் சேர்ந்து எடுத்துக்கிட்ட படத்தைப் பெரிசா ப்ளோ அப் செய்து போட்டுக்கணும்மாம் அவருக்கு. தம்பி ரெண்டு மூணு தடவை ஃபோன் பண்ணிட்டான்.”

“”அரைமணியிலே வந்து சேருங்க.” பெரிய மனதுடன்

அனுமதி தந்தவளாய் நகர்ந்தாள் சுமதி.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு வாய்த்தது இது. பெருநகரமும் கிராமமும் இல்லாத ஊர் அவனுடையது. அவனது பள்ளிப் பருவம் வரை அங்கேதான் வளர்ந்தான். அப்பாவுடன் பிறந்த தம்பி விவசாயத்தைப் பார்த்துக் கொள்ள அவர் மட்டும் படித்து வங்கியில் வேலைக்குச் சேர்ந்து விட்டிருந்தார். ஊர் ஊராக மாற்றலாகும் உத்தியோகம் படிப்பு கெட்டு விடக் கூடாது என ஒரே மகனென்றாலும் இவனைத் தன் பெற்றோரிடமே விட்டு விட்டார்.

சித்தப்பாவின் பிள்ளைகளோடு, கிராமத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இரண்டு அத்தைகளும் டவுன் பள்ளிக்கூடத்திலதான் படிப்பு நல்லாயிருக்கும் என ஏற்கனவே தங்கள் பிள்ளைகளைக் கொண்டு விட்டிருந்தார்கள். அந்தப் பெரிய மழலைப் பட்டாளத்தில் இவனும் ஐக்கியமாகி, கூடி வாழ்ந்த சொந்தங்களுடன் எந்தக் குறையுமில்லாமல்தான் வளர்ந்தான்.

அத்தைகள் அடிக்கடி தம் பிள்ளைகளை வந்து பார்த்துப்போக, தாய் தகப்பனை விட்டு ரொம்பத் தள்ளி வந்த பிள்ளை என இவன் மேல் எல்லோருக்கும் எப்போதும் தனி அக்கறை கரிசனம்தான். ஆனால் அவர்களை விடவும் ஒருபடி மேலாகவே இயற்கை தன்னை அரவணைத்துக் கொண்டதாகவே தோன்றும்.

தோட்டத்தில் பம்பு செட்டுக் குளியல், பண்ணையில் துள்ளும் கன்றுகளோடு ஆட்டம், வயலில் வைக்கோற் போரையே சறுக்கு மரமாக்கி வழுக்கி ஆடியது, வாழை, கொய்யா, பப்பாளி, இளநீர் எனப் பறித்த கையோடு குளிரக் குளிர வயிற்றை நிரப்பியது எல்லாம் எப்போது நினைத்தாலும் மனது குளிர்ந்து போகும்.

அறுவடையாகி வந்த அடுக்கப்பட்ட நெல்மூட்டைகள் மேலே ஏறி அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். வீட்டுப் பாடம் செய்வார்கள். பெரிய பெரிய அடுப்புகளில் மெகா சைஸ் உருளிகளில் நெல் அவிக்கும் அழகை வேடிக்கைப் பார்ப்பார்கள். மரத்துடுப்பைத் தாமும் பிடித்து கிண்டிக் கொடுப்பார்கள் ரொம்பச் சமர்த்தாய்.

பின்பக்க முற்றத்தில் நீண்ட நீண்ட பிறை நிலா வடிவில் அவித்த நெல்லைப் பண்ணைப் பெண்கள் அழகாய்ப் பரத்திக் காய வைத்துவிட்டு அந்தப் பக்கம் நகரக் காத்திருப்பார்கள்.

நெல் வெதுவெதுப்பாகி விட்டதா எனக் கவனமாய்க் காலாலே கிளறி உறுதி செய்த பிறகு அதில் உருண்டு புரண்டு சிந்திச் சிதறி மகிழ்வார்கள் யாராவது வந்து பெரிதாக அதட்டல் போடும்வரை. நெல் முழுதாகக் காய நாலு நாள் பிடிக்கும். கூத்தும் அதுவரை தொடரும். ஒருமுறை தாத்தா பார்த்து விட்டார்.

“”டேய் டேய் பசங்களா என்ன இது. விளையாட்டுக்குக் கூட நெல்லை இப்படியெல்லாம் சிந்தியடிக்கப் படாதுடா” என எல்லோரையும் இழுத்துப் பிடித்து வரிசையாக அமர்த்தி விட்டார். இவர்களது எந்தக் குறும்புகளையும் கண்டு கொள்ளாத அவர் எதையாவது வலியுறுத்திச் சொல்லுகையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து மகுடிக்குக் கட்டுப்படும் பாம்பாகி விடுவார்கள்.

அப்படித்தான் அன்றும். எப்படி உழவும் நெல்லும் சோறு தரும் கடவுள் என அவர் விவரிக்க விவரிக்க மனதில் ஒரு பயபக்தி ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து வந்த பொங்கலின் போது, பண்ணை ஆட்களுக்குக் கொடுக்கின்ற பொங்கல்படி புதுத்துணி எல்லாம் தானமோ தர்மமோ அல்ல, நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை எனப் புதிய கோணத்தில் பார்க்க வைத்தார்கள்.

அதுமட்டுமில்லாமல், நாட்கதிர் என்றொரு வழிபாடு இருந்தது. அறுவடையானதும் பசுமை மாறாத நெற்கதிர் கட்டு ஒன்று வயலில் இருந்து வீடு தேடி வரும் அருள் பாலிக்க. முற்றத்தில் கோலமிட்ட மணை ஒன்றில் அதை நேராக நிறுத்தி பொட்டு பூவெல்லாம் வைத்து சூடம் காட்டிக் கும்பிடுவார்கள்.

பின்னர் தாத்தா அனைவர் கையிலும் ஒரு கதிர் எடுத்துக் கொடுப்பார். நெற்குதிர் அறையில் சுண்ணாம்புக் கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட புது மண் பானை காத்திருக்கும். முதல் கதிரைத் தாத்தா வைக்க, மற்ற பெரியவர்கள் தொடர,கூகூஊஊ என ரயில் வண்டி மாதிரி ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்து வந்த குழந்தைகளும் விளையாட்டு போலவேதான் அதில் கதிர்களைச் சேர்ப்பார்கள்.

அன்றைக்கும் நெல்மூட்டைகளுடன் தாம்பூல மரியாதை உண்டு. கதிரை எடுத்துவந்த பண்ணையாட்களுக்கு வடை பாயாசத்துடன் சாப்பாடும். புதுக்கதிரினைக் கசக்கியெடுத்து வரும் அரிசிமணிகளைச் சேர்த்துதான் பாயாசமே செய்வார்கள். ஒரு சிறிய கொத்தினைப் பூஜை அறையிலும் தொங்க விடுவார்கள். அந்த ஐதீகங்களின் அர்த்தமும் கொஞ்சம் கொஞ்சமாக விளங்கத் தொடங்கியது. செய்யும் தொழில் தெய்வம் என்பதும் ஆழப் பதிந்தது.

கேட்டு கேட்டு வளர்ந்து ப்ள்ஸ் டூ வரை வந்து விட்டிருந்தவன் அரும்பு மீசையைத் தடவியபடி ஒருமுறை திருப்பிக் கேட்டு விட்டான்.

“”அப்போ ஏன் தாத்தா அப்பாவை மட்டும் வேற வேலைக்கு அனுப்பிட்ட…”

கேள்வியின் கூர்மையில் தாத்தா சற்று திணறிப் போன மாதிரி இருந்தது. ஆனால் என்றைக்காவது இப்படிக் கேட்பான் எனப் பதிலைத் தயாராகவே வைத்திருந்த மாதிரியும் இருந்தது.

“”நாந்தான் படிக்க முடியாது போச்சு. படிப்பு நல்லா வந்ததாலே புள்ளைங்கள்ல ஒருத்தராவது உத்தியோகம் பாக்க பட்டணம் போகட்டும்னு அனுப்பிச்சேன். காடுகரைய பாத்துக்க சித்தப்ப்பா போதும்னுதான்.”

“”அப்பாவுக்குப் பதிலா நான் விவசாயத்தைப் பண்ணட்டுமா தாத்தா… படிச்சு முடிச்சுட்டே செய்யறேன்.”

“”வேண்டாம்பா வேண்டாம்” என்றார் பதட்டமாக. அவனை அருகில் அமர வைத்துக் கையைப் பிடித்துக் கொண்டார்.

“”ஒன் தம்பிதான் இருக்கானே. ஒஞ்சித்தப்பா அவனை விவசாயத்துக்கே படிக்க வைக்கப் போறானாம். அவன் பார்த்துப்பான் இந்த நெலம் நீச்சையெல்லாம். ஒன்னைய என்ஜினீயராக்கணும்னு கனவு கண்டுட்டிருக்கான் ஒங்கப்பா. நீயும் படிப்புல அவனப் போலவே புலியா இருக்கே. அவன் பேச்சைக் கேட்டு நட. பெரிய உத்தியோகத்துக்குப் போ.”

நெருடலாக இருந்தது அவர் அப்படிப் பேசியது.

அடுத்த வருடம் கல்லூரியில் சேர ஊரைப் பிரிந்தவன்தான். பாட்டி இருந்தவரை அப்பா வேலைக்கு லீவு போட்டு வருடாவருடம் எல்லா பண்டிகைகளுக்கும் அழைத்துச் சென்றார். பாட்டி போனதும் தாத்தாவுக்காக பொங்கலுக்கு மட்டுமாவது போவது கட்டாயமாக இருந்தது. அவர் மறைவுக்குப் பின் அதுவும் நின்று போனது.

இவனும் படித்து முடித்து கணினித் துறையில் வேலையாகி, பட்டணத்துப் பெண்ணே மனைவியாய் வர அசுர வேக இயந்திர வாழ்வில் தொலைத்த பலவற்றில் ஒன்றாகிப் போனது பண்டிகைகளைக் கொண்டாடும் முறைகளும். எப்போதோ ஊர் விட்டு வந்துவிட்ட அம்மாவும் இவற்றில் அத்தனை ஆர்வம் காட்டாதாது இன்னும் வசதியாகப் போயிற்று சுமதிக்கு.

அப்பா தன் பாகத்துக்கு வந்த வயல்வெளி அத்தனையையும் கிரயம் செய்து சென்னையில் இந்த வீட்டை வாங்கிப் போட்டுக் காலமாகியும் விட்டிருந்தார் திடீர் மாரடைப்பில். ஊரில் மிச்சமாகி இருந்தது ஐம்பது செண்ட் அளவிலான தோட்டம் மட்டுமே.

இரண்டு பெண்களைக் கட்டிக் கொடுத்து விட்ட சித்தப்பாவுக்கும் வயதாகி விட விவசாயத்தில் முன் போல ஈடுபட இயலவில்லை. அதை நம்பி மட்டும் பிழைக்க முடியாதென மகன் குமரேசன் நான்கு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டான். நன்றாக அவை ஓடவே டிரான்ஸ்போர்ட் பிஸினஸில் கவனம் செல்ல ஆரம்பித்து விட்டது. இப்படியாக வயல்கள் எல்லாம் கிரயமாகி கார்களாக வேன்களாக மாற ஆரம்பித்தன. சித்தப்பாவால் தடுக்க முடியவில்லை.

ஆனாலும் தன் ஆத்ம திருப்திக்காக என்று சொல்லி சில தோட்டங்களை வசப்படுத்திக் கொண்டு அத்தோடு இவனுடையதையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

தனக்கும் வயதாகிக் கொண்டே வருவதால் குடும்பத்தோடு பொங்கலுக்கு வந்து போப்பா என்ற அவரது அன்புக்குக் கட்டுப்பட்டுத்தான் இந்தமுறை அங்கு சென்றிருந்தான். அப்போதுதான் அவனுக்கான தோட்டத்தைக் காட்டினார். அதில் வாழை பயிரிட்டிருந்தார். சுற்றிலும் சுமார் பத்து தென்னைகளும் இருந்தன. நல்லா வச்சிருக்கீங்க சித்தப்பா என அவர் கையைப் பிடித்து தழுதழுத்து விட்டான்.

மாதாமாதம் அவர் அனுப்புகிற பணத்தை வாங்கிக் கொள்ளுகையில் ஏற்படாத குற்ற உணர்வு பச்சை பசேல் என அவனுடைய தோட்டத்தைப் பராமரித்திருந்த அழகைப் பார்த்ததும் ஏற்பட்டது. வருடக் கணக்கில் எட்டிப் பார்க்காதது எத்தனை பெரிய தப்பென வருத்தியது.

சித்தப்பா அதை பெரிது பண்ணிக் கொள்ளவில்லை.

“”எனக்கென்ன சிரமம் சொல்லப் போனா சந்தோசம்தான். உன் தம்பியானா எல்லா வயலையும் வித்து வண்டியாக்கிட்டான். மனசு வலிச்சாலும் அவன் வாழ்க்கைக்கு எது வேணுமின்னு அவந்தானே தீர்மானிக்கணுமின்னு விட்டுட்டேன். எப்படியொ நல்லாயிருந்தா சரிதான். கிராமத்தில நாம நெல்லு விளைச்சல் பாத்த பூமியெல்லாமே கைய விட்டுப் போயாச்சு. என் ஆயுசு மட்டும் மிச்சமிருக்கிற தோட்டங்களையாவது விக்கப்படாதுன்னு சொல்லி பயிர் பண்ணிட்டிருக்கேன்” என்றபடியே அடுத்து இருந்த அவரது தோட்டத்துக்கும் அழைத்துச் சென்றார்.

கத்திரி, வெண்டை, புடலை, தக்காளி எல்லாமும் பயிரிட்டிருந்தார். தள்ளாத வயதிலும் தினசரி இரண்டு மூன்று மணி நேரங்களாவது அங்கு செலவிடுகிறார் என்பது பேச்சிலே தெரிந்தது. இளசாய் வெண்டைக்காய்களைப் பறித்து சாப்பிடத் தந்தார்.

“”ஊரோடு இருக்கேன் உழவைப் பாக்கேன்னு அக்ரி படிச்ச ஒன் தம்பியும் இப்போ வேற பொழப்பைத் தேடிக்கிட்டான்” என்றார் விரக்தியாக.

என்ன சொல்வதெனத் தெரியவில்லை அவனுக்கு.

ஊரிலே பரிச்சயமான பல இடங்களில் முன்பிருந்த பச்சை வயலெல்லாம் வணிக வளாகங்களாகவும் பெரிய மருத்துவமனைகளாகவும் பள்ளிக் கூடங்களாகவும் அல்லவா மாறி விட்டிருந்தன பட்டணத்தில்தான் அநியாயம் என நினைத்தால் பெருகி விட்ட போக்குவரத்துக்கென, சாலைகளை விஸ்தரிக்கப் போட்டுத் தள்ளியிருந்தார்கள் பலநூறு வயதான விருட்சங்களை சகட்டுமேனிக்கு. ஏரி குளங்களைத் தூர் வாருவதில் அக்கறை காட்டுவதாகச் சொல்லும் அரசும் தேவையென்று வருகையில் நீர்வளத்தில் கைவைக்கத் தயங்கவில்லையே ஊரின் பெரிய குளத்தை மூடிப் பேருந்து நிலையமாக்கி விட்டிருந்தார்கள். பழைய நிலையத்தில் நெருக்கடி அதிகமாகி விட்டதாம்.

ரியல் எஸ்டேட்கார்கள் சாக்லேட் வார்த்தைகளையும் மீறி ஒரு சிலரே நிலங்களை விளைச்சலுக்குப் பயன்படுத்தி வந்தனர்.

உழந்தும் உழவே தலை என்றிருக்கும் சித்தப்பாவின் வைராக்கியத்தில் பத்து சதவிகிதமாவது வேண்டும் தனக்கு என்கிற ஆசை வந்திருந்தது இப்போது. நேரடியாகத்தான் இறங்க முடியவில்லை. போகட்டும்.

ஆனால் யார் என்ன ஆசை காட்டினாலும் குத்தகைக்கு விட்டாவது ஆயுளுக்கும் தனது தோட்டத்தை விளைநிலமாகவே தக்க வைத்துக் கொள்வது ஒன்றுதான் ஆளாக்கிய தாத்தாவுக்கும், பூமித் தாய்க்கும் செய்யக் கூடிய மரியாதையாக இருக்கும் என உறுதி எடுத்துக் கொண்ட போது மனது கொஞ்சம் இலேசான மாதிரி இருந்தது.

தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே போகாமல், பொங்கலைக் கொண்டாடிக் களித்து மறுநாள் விடைபெறுகையில், வளர்த்த பாசம் கண்ணில் வழிய விடை கொடுக்கத் திணறித்தான் போனார்கள் சித்தியும் சித்தப்பாவும். அம்மாவின் முன் அதிகம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாதவனாய் “”அடிக்கடி வந்து போறேன் சித்தப்பா.தோட்டத்தையும் பார்த்தாப்ல ஆச்சு” என்றான்.

“”அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்கப்பா.”

நினைவுகளிலிருந்து மீண்டு, தேர்ந்தெடுத்த படங்களை ஆல்பத்தில் ஏற்றி முடிக்கையில், கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தாள் மகள்.

இதோ ஆச்சுடா ஒரே நிமிஷம் ஷேர் ஆல்பம் என்பதைக் க்ளிக் செய்து தம்பியின் மெயில ஐடியை தட்டச்சிட ஆரம்பித்தான். கு ம ரே சன் அட் ஜிமெயில் டாட் காம் எனக் கூடவே நிறுத்தி வாசித்தவள், இவன் அனுப்பி விட்டுக் கணினியை மூடியதும், அப்பா சம்மர் லீவு வரப் போகுது. சின்ன தாத்தா வீட்டுக்குப் போலாம்னு நான் சொன்னா பாட்டியும் அம்மாவும் இப்பதானே போயிட்டு வந்தோம். அடுத்த வருஷம் யோசிக்கலாம் அப்படிங்கிறாங்கப்பா என்றாள்.

“”யோசிப்பாங்களாமா ம்ம் நான் அழைச்சுட்டுப் போறேண்டா செல்லம். உன் ஆசையெல்லாம் அவங்களுக்குப் புரியாது.”

ஆதங்கமாய் சொன்னவனைப் பார்த்து ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஆதுரமாய்த் தலையசைத்தன எங்களுக்குப் புரியும் என்பது போல், வீட்டைக் கட்டும்போது அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஹாலின் அளவு குறைந்தாலும் பரவாயில்லை எனப் பத்துக்குப் பதினைந்தடி அளவில் அமைத்திருந்த சின்ன தோட்டத்தில் அவன் நட்டு வைத்து, இப்போது நெடுநெடுவென வளர்த்து விட்டிருந்த நெல்லி மரமும், காய்த்துக் குலுங்கி நின்றிருந்த தென்னை மரமும்.

- ராமலக்ஷ்மி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:17 pm

தேவதை மகளும், நண்பர்களும்!
-------------------------

ந ள்ளிரவின் கரிய இருட்டில் அந்த வீட்டைக் கண்டுபிடித்ததே பெரிய விஷயமாய்ப் பட்டது பட்டாபிக்கு.

“”இனிமேல் நடந்து போய் நம்ம குரூப் மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. அவங்களும் நம்மைத் தேடிகிட்டுத்தான் இருப்பாங்க. அதனால ராத்திரி இந்த இடத்துல பாதுகாப்பா இருப்போம். விடிஞ்சதும் ஈஸியா அவங்க கூட சேர்ந்துடலாம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

நேசமலரும், ஷிவானியும் அதிக பயத்தில் இருந்தார்கள். அச்சுதனுக்கும் ஒரே உதறலாய்த்தான் இருந்தது. இதில் அலட்சியமாய் இருந்தது ஜஸ்டின் மட்டும்தான்.

“”இதுல என்ன இருக்கு. இந்த வீட்டுல தங்குறதைத் தவிர வேற வழியே இல்லே. சார் எவ்வளவோ சொன்னாரு. தனித்தனி குரூப்பா காட்டுக்குள்ளே போகாதீங்க. வழி தவறிடும்னு சொன்னாரு. பொழுதுபோன நேரத்துல கூழாங்கற்களைப் பொறுக்க இந்த ரெண்டு பெண்களும் போக நாம மூணு பேரும் இதுகளைத் தேடிகிட்டு இப்போ எங்கோ மாட்டிக்கிட்டோம்…” என்றான் ஜஸ்டின். ஏற்கனவே பயந்திருந்த ஷிவானி அழ ஆரம்பித்தாள்.

“”எங்களாலதானே எல்லாம். இப்ப என்ன செய்யறது?” -அவள் அழ, பட்டாபி அதட்டினான்.

“”ஷிவானி அழறதை விட்டு ஆகப் போறதைப் பாரு. ஜஸ்டின் உன்னோட பென் டார்ச்சை அடி. வீட்டில ஆள் இருக்கிற மாதிரி தெரியலையே..?”

ஐந்து பேரும் தயங்கித் தயங்கி வீட்டின் வாசலை அடைந்தார்கள். அச்சுதன் கதவில் கை வைக்க கதவு திறந்து கொண்டது.
“”ஹா… இதென்ன இவ்ளோ வாசனை. பிஸ்கட், சாக்லேட் வாசனை ஆளைத் தூக்குதே…” என்றான் ஜஸ்டின்.

“”ஷ்ஷ்ஷ்…” டார்ச் உதவியால் வீட்டை ஒரு வட்டம் அடித்தான் பட்டாபி.

“”காட்டுக்குள்ளே திகில் பயணம்னு சும்மா ஜாலிக்கு சொன்னேன். அதுவே நிஜமாயிடுச்சு. ஹலோ… வீட்டுல யாருங்க?”
- எந்த பதிலும் இல்லை. அது ஒரு சின்ன வீடு. ஒரு மூலையில் மேஜையும், ஆறு நாற்காலிகளும் இருந்தன. சுவரில் ஒரு தண்ணீர்க் குழாய் இருந்தது. தரையில் ஒரு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மேஜை மீது காலி தட்டுகளும், டபரா, கரண்டிகளும் இருந்தன. அறை முழுக்க வாசனையாய் இருந்தது.

“”என்னடா இது… பக்கத்துல ஏதாச்சும் பிஸ்கட் ஃபாக்டரி இருக்குமோ?” -அச்சுதன் சொல்ல, நேசமலர் ஒரு டபராவை எடுத்து குழாயைத் திறந்தாள். பாத்திரம் முழுக்க நுரை போல் வர, “”ஆ… இதென்ன தண்ணிக்குப் பதிலா வேற ஏதோ வருது. ஆனா ஸ்ட்ராபெர்ரி வாசனை வருதே” என்றாள்.

அவர்களுக்கு ஓரளவு இருட்டு பழக்கப்பட்டு விட்டது.

நாள் முழுக்க நடந்ததன் களைப்பு, பசி, பயம் இவையெல்லாம் சேர்ந்து வெள்ளை வெளேரென்ற அத்தனை பெரிய மெத்தையைப் பார்த்ததும், ஐந்து பேரும் அதில் ஆளுக்கொரு பக்கம் விழுந்து தூங்க ஆரம்பித்தார்கள்.

“பீப்… பீப்… பீப்…’ -என ஜஸ்டின் கைக் கடிகாரத்தின் அலாரம் ஒலித்தது. வழக்கமாய் ஐந்து மணிக்கு அவன் எழுந்து படிப்பதற்காக அவன் அம்மா செட் பண்ணியிருந்த அலாரம் அது. பழக்கதோஷத்தில் பட்டென்று எழுந்தான் ஜஸ்டின். புலர்ந்துக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அறையில் எல்லாம் பளிச்சென்று தெரிந்தது. அறையின் சுவரை பார்த்த ஜஸ்டின் “”மை காட்!” என்று கத்தினான். அவன் கத்தல் கேட்டு ஒவ்வொருவராய் விழித்துக் கொண்டனர்.

“”என்னடா…. ஏன் கத்தறே?” கண்களைத் திறக்காமலேயே கேட்டான் பட்டாபி.

“”டேய்… பாருடா அதிசயத்தை. இந்த அறைச் சுவர் பிஸ்கட்டால் ஆனது. பாருடா… முழுவதும் பிஸ்கட் சுவர்” கத்தினான் ஜஸ்டின்.

சுவரை லேசாக சுரண்டிப் பார்த்த ஷிவானி, “”ஆமா… ஆமா…” என்றாள்.

“”ஐயய்யோ… இங்கே பாருங்க” -அலறினாள் நேசமலர். அவள் கையில் நேற்று தண்ணீர் பிடித்த பாத்திரம் இருந்தது. அதில் தண்ணீருக்குப் பதில் ஐஸ்கிரீம் இருந்தது. குழாயைத் திருகினாள். அதிலிருந்து ஐஸ்கிரீம் கொட்டியது.

எல்லோரும் அதிர்ச்சியிலும், ஆனந்தத்திலும் கூக்குரலிட்டனர்.

“”இங்கே பாருங்க… நாம ராத்திரி படுத்திருந்தது வெறும் பெட் இல்லை. பிரெட் பெட்…” என்றான் அச்சுதன். அவர்களுக்கு மேலும் மேலும் ஆச்சரியங்கள் காத்துக் கொண்டிருந்தன.

ஆவலுடன் ஒரு பாத்திரத்தில் ஐஸ்கிரீமை நிரப்பிக் கொண்டு பெட்டிலிருந்து கொஞ்சம் பிய்த்துக் கொண்டு சாப்பிட்டு மேஜையில் உட்கார்ந்த ஜஸ்டின் சாப்பாட்டுத் தட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு, பிரெட்டைப் போட்டு விட்டு வெறும் தட்டை கடித்துத் தின்ன ஆரம்பித்தான்.

“”டேய்… என்னடா செய்றே?” -பட்டாபி கேட்க,

“”இந்தப் பாத்திரங்கள் எல்லாமும்… ஏன் இந்த மேஜை, நாற்காலி எல்லாமே சாக்லேட்டால் ஆனது” என்றான் ஜஸ்டின்.
இதைக் கேட்டதும் ஆனந்த இரைச்சலில் அந்த இடம் அதிர்ந்தது.

ஆளாளுக்கு பெட்டையும், தட்டையும் கடித்துத் தின்ன ஆரம்பித்தார்கள். வழிய வழிய ஐஸ்கிரீம் பிடித்து சாப்பிட்டார்கள். வயிறு நிறைய மட்டும் சாப்பிட்டு ஆட்டம் போட்டார்கள்.

ஒருவகையாய் பசியும், பிரமிப்பும் அடங்கியது.

“”நாம கனவு காணலியே…” இரண்டாவது தட்டை மென்று கொண்டே கேட்டான் அச்சுதன்.

“”சேச்சே… அஞ்சு பேரும் ஒரே மாதிரி கனவா காண முடியும். இது நிஜம்” என்றாள் ஷிவானி.

“”அப்படின்னா இந்த அதிசய வீடு யாருடையது? ஒண்ணுமே புரியலையே.” -இது அச்சுதன்.

“”சரி… விடிஞ்சிடுச்சு… நம்ம பசியும் அடங்கிடுச்சு… புறப்படலாமா?” -கேட்டான் பட்டாபி.

“”ஐயோ… இந்த அதிசய வீட்டை விட்டு எப்படி வர்றது? இப்படி ஒரு வீடு இருக்கிறதா வெளில சொன்னாக்கூட யாரும் நம்பமாட்டாங்களே…” -நேசமலர் அங்கலாய்த்தாள்.

அப்போது திடீரென்று வெளியே விமானம் தரையிறங்குவது போல் பெரும் சப்தம் எழுந்தது. பயந்து நடுங்கிப் போன சிறுவர்கள் மேஜைக்கடியில் புகுந்து கொண்டனர். கதவைத் திறந்து மிகப் பெரிய பறவை ஒன்று உள்ளே வந்தது.

அதன் சிறகில் அழகான சின்னஞ் சிறுமி ஒருத்தி இருந்தாள். அச்சிறுமி குட்டி சூரியனைப் போல பிரகாசித்தாள். அவளது ஆடை முழுக்க நட்சத்திரங்கள் பதிக்கப் பெற்றிருந்தன. தலையில் பிறைநிலவை சூடியிருந்தாள். ஆனால், அவள் முகம் மட்டும் சோர்ந்து இருந்தது. சிறுமியை இறக்கிவிட்ட பறவை அவள் முன் மண்டியிட்டது.

“”தேவதை மகளே… உன்னை நாள் முழுதும் பராமரிக்கும் வேலைக்காரப் பறவையாகிய நான் என்ன செய்தும் உன்னைச் சிரிக்க வைக்க முடியவில்லை. மாலையில் உன்னைக் காண வரும் உன் தாய் என்னை கோபிக்கிறார்கள். உனக்கென பிஸ்கட்டால் வீடு கட்டி பிரெட், சாக்லேட், ஐஸ்கிரீம் என்று நீ விரும்பியது போல் வீட்டை வடிவமைத்திருக்கிறேன். இருந்தாலும் நீ சந்தோஷப்படவில்லை. என்ன காரணம்?” என்று கேட்டது.

தேவதை மகள் மவுனமாக மேஜையைப் பார்த்தது. அவள் பார்வை போன திசையைப் பார்த்த வேலைக்காரப் பறவை மேஜைக்கடியில் பார்த்து உருமியது. அவ்வளவுதான் ஐந்து பேரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள்.
“”யார் நீங்கள்? இங்கு எப்படி வந்தீர்கள்?” -அதட்டியது பறவை.

காட்டுச் சுற்றுலா வந்த இடத்தில் வழி தவறி விட்டதை விளக்கிக் கூறினான் பட்டாபி.

“”தயவு செய்து எங்களை மன்னிச்சிடுங்க. நாங்க தெரியாம வந்துட்டோம். நாங்க வெளியே போயிடறோம்” என்றார்கள் ஒருமித்தக் குரலில்.

வேலைக்காரப் பறவை யோசித்தது.

“”பொழுது விடிந்து விட்டது. இனி யாரும் வெளியே போக முடியாது. இருட்டினால் தான் வெளியே போக முடியும். வேறு வழியில்லை. மாலை வரை அமைதியாக உட்கார்ந்திருங்கள்” என்று பணித்தது.

எல்லோரும் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். எவ்வளவு நேரம்தான் பொறுமையாக ஒரே இடத்தில் உட்கார முடியும்? அச்சுதன் நைஸôக ஜஸ்டினிடம், “”விளையாடலாமா?” என்று கேட்டான்.

ஜஸ்டின் தலையாட்ட அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். விளையாட்டு களைகட்டத் துவங்கியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த தேவதை மகள் “”நானும் வரலாமா” என்று கேட்க, சந்தோஷமாக வரவேற்றார்கள்.
நேரம் செல்லச் செல்ல சிரிப்பும், கும்மாளமும் காதைப் பிளந்தது. தேவதை மகள் ஆனந்தமாக விளையாடினாள்.
வேலைக்காரப் பறவை இதையெல்லாம் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தது.

தேவதை மகள் முகம் பிரகாசமாய் மலர்ந்திருந்தது.

“”இந்த சந்தோஷத்துக்குக் காரணம் என்ன?” என்று தேவதை மகளிடம் கேட்டது பறவை.

“”இத்தனை நண்பர்களுடன் சேர்ந்து நான் விளையாடியதே இல்லை. எனக்கு இதுவரை நண்பர்களும் இல்லை. நட்பு என்றால் என்ன என்று இன்றைக்குப் புரிந்து கொண்டேன். நீ எனக்காக என்ன செய்தாலும் நண்பர்களுடன் இருப்பதைப் போன்ற சந்தோஷம் வராது” என்றாள்.

“”சரி… நேரமாகிறது கிளம்புவோம்” -வேலைக்காரப் பறவை சிறகை விரிக்க, தேவதை மகள் நண்பர்களிடம் விடை பெற்றாள்.

“”உங்களை மறக்கவே மாட்டேன். ஆசைப்பட்டவை அத்தனையும் கிடைத்தாலும் நல்ல நண்பர்கள் கிடைப்பதுதான் பெரிய விஷயம். நாம் இனியும் நண்பர்களாகவே இருப்போம்… வருகிறேன்.” பறவை தேவதை மகளுடன் பறந்தது.

ஐந்து பேரும் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர்.

ஒருநாள் முழுதும் எங்கே இருந்தீர்கள்?” என்று ஆசிரியர் கேட்டார்.

“”வழி தவறி காட்டில் நடந்து கொண்டே இருந்தோம். இரவு ஒரு ஓடக் கரையில் தங்கியிருந்தோம்” என்றான் பட்டாபி. மற்ற நால்வரும் அதை ஆமோதித்தார்கள்.

தேவதை மகளின் நல்ல நட்பை இழக்க அவர்களுக்கு மனதில்லை.

- எஸ். ஜூலியட் மரியலில்லி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:19 pm

பரமபத விளையாட்டு!
------------------------------

வயது அதாகிறது எண்பதுச்சொச்சம். ஆனாலும் அவர் பலவீனராமன் அல்ல. பலராமன். பிள்ளைகள் வெளியூரில். அவர் வீட்டைத் தாண்டிப்போனாலே ஹோவென்று சேனலில் ஆரவாரம் கேட்டது. வாக்கிங் ஸ்டிக் மனுஷன் ஹாக்கி விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அல்லது கால்பந்து.

தெருநாய் முகர்ந்தபடி ஓடிக்கொண்டேயிருப்பதைப் போல கால்பந்து வீரர்கள், ஆனால் காலை கோல்போஸ்ட் வந்ததும் தூக்காமல் ஓடிக்கொண்டேயிருந்தார்கள். கிரிக்கெட், வாலிபால், ஹாக்கி, டென்னிஸ் என எல்லா ஆட்டத்திலும் பந்துகள் பாவம், அபாரமாய் உதை வாங்கின. ஓர் ஆட்டத்துக்கு உதைபந்து என்றே பெயர். ஜனங்கள் இரக்கப்படாமல் கைதட்டினார்கள்…

எத்தனையோ காப்டன் பார்த்தாச்சி. மன்சூர் அலிகான் பட்டோடி. சுனில் மனோகர் கவாஸ்கர். கபில்தேவ். அசாருதீன். கங்குலி. திராவிட். கும்ளே. தோனி என்று. காலம் மாற மாற விளையாட்டு உத்திகளும் மாறிவிட்டன. அஞ்சுநாள் கல்யாணம் ஒரு காலம். இப்ப ஒருநாள் கல்யாணம். அதிலும் சிலர் மதியத்தோடு சத்திரத்தைக் காலி செய்து விடுகிறார்கள்… ஓடி விளையாடு பாப்பா என்றான் பாரதி. இப்போது கிரிக்கெட்டிலேயே ஓ டி ஐ விளையாட்டுதான். அது எக்ஸ்பிரஸ் வண்டி என்றால், ட்வென்டி ட்வென்டி சதாப்திதான்… விளையாட்டுதான் சுருங்கிவிட்டது என்று பார்த்தால், காப்டன் பேரே அசாருதீன், கங்குலி, கும்ளே, தோனி – என்று ஒவ்வொரு எழுத்தாகச் சுருங்கி விட்டது. அடுத்த கேப்டன் பேர் என்னவோ. ஒரே எழுத்துதான் இருக்கும்.

மாமிக்கு தொலைக்காட்சித் தொடர்கள் மேல் பிரியம் இருந்தாலும் காது கேட்காது. பெட்டிக்குக் கிட்டத்தில் போய் உட்கார்ந்து கண் இடுக்கிப் பார்த்துவிட்டு பிளவுஸ் மேட்சாவே இல்லை, என்று சொல்வாள். பக்கத்து வீட்டு மாமியிடம் போய் எங்க ஓரகத்திபொண்ணு முழுகாமயிருக்கா… என்று செய்தியறிக்கை வாசிக்கப் பிடிக்கும். நியாய தர்ம பயம் உண்டு. எல்லாத்தையும் மேலயிருந்து ஒருத்தன் பாத்துக்கிட்டிருக்கான், என அடிக்கடி வசனம் பேசுவாள். மோட்டில் வெதரிங் கோஸ்ட் போட்டால் கூட அவன் எப்படியோ எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவளுக்கு. லேசாய் மின்னி இடி இடித்தால் கூட வெளியே இறங்கவும் மாட்டாள். அவரையும் வெளியே இறங்க விடமாட்டாள்.. இடி கேட்காது என்றாலும் மின்னலுக்கு இடிக்கும் என்று தெரியும்.

பிள்ளைகள் வைத்துக் கொள்ளவில்லை, என்கிற வருத்தத்தைக் காட்டிக் கொண்டதில்லை இருவரும்.

பலராமன் ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றவர். கையில் முதல்நாள் நீள இரும்புக்குச்சி தந்து தண்டவாளத்தில் ரயில் வந்துநிற்கையில் இதால் தட்டிப்பார், என்றார்கள். எதற்குத் தட்டிப் பார்க்கச் சொன்னார்கள் என்று தெரியாமலேயே பதவிகாலம் முடிந்துவிட்டது…. பதவி ஓய்வு பெற்றும் கையில் குச்சி பிடிப்பதை விடமுடியவில்லை. இப்போது வாக்கிங் ஸ்டிக்கே துணை.

தெருவில் நாய் பயம் இல்லாமல் நடக்க முடிந்தது.

எப்படியோ அவர்கள் வீட்டுக்கு ஒரு பூனை வந்துபோய்க் கொண்டிருந்தது. குப்பென்று வயிறை உள்ளிடுக்கி ஒருமாதிரி சோம்பல் முறிக்கும் ஜிம்னாஸ்டிக் பூனை. கிருஷ்ணவேணிக்கு அதன்மேல் பிரியம் உண்டு. அது மியா, என்று கிட்டவந்தால், ஏட்டி நானா உனக்கு மாமியா என்று தூக்கிக் கொஞ்சுவாள். பட்டுப்போன்ற புசுபுசு உடம்பு. அது உரச மாமிக்கு சிலிர்க்கும். மிருகங்கள்பாசத்தில் பொய் இல்லை. கூப்பிட்டால் நம்பி கிட்டே வருகின்றன. கிருஷ்ணவேணி பால் ஊற்றுவாள். பலராமனைக் கண்டால் அதற்கு பயம். நிறைய விளையாட்டு சேனல் பார்க்கிற மனுசன். கையில் வேறு குச்சி…

ஆனால் பலராமனுக்கு வீட்டுவிளையாட்டுகளில் – இன்டோர் கேம்ஸ் – ஆர்வம் இல்லை. செஸ், சீட்டு விளையாட மாட்டார். தாயம் பல்லாங்குழி என்று கிழவிகளாக ஆடினால் முகத்தைத் திருப்பிக் கொள்வார். ஆட்டுக்கிடை போட்டாப்போல கூடாரம் வரைந்து ஆடுபுலி ஆட்டம். மூணு கல்லு. சதுரத்துள் சதுரம் பிரித்து வரிசையாய் ஒரே நேர்கோட்டில் மூணு கல்லும் வைத்துக்காட்ட ஜெயம் நாலுசோழி, ஜோசியம் பார்க்கிறாப் போல ஒரு விளையாட்டு. நாலும் குப்புற விழுந்தால் பதினாறு. நிமிர்ந்து மல்லாக்க விழுந்தால் நாப்பது புளிமுத்தாட்டம், ஒத்தையா ரெட்டையா பம்பையா பரட்டையா – என்றெல்லாம் ஆட்டங்கள்.

விட்டால் படுத்துக்கொண்டே ஆட ஆட்டம் கண்டுபிடித்து விடுவார்கள். பெரிய விஸ்தாரமான களத்தில் நாலு பேர் பார்க்க ஆட வேண்டும். அதுதான் விளையாட்டு. அடிக்கிறான் பார் சிக்ஸர். சேவாக் அடித்தால் மைதானத்துக்கு வெளியே போய்த் தேடுகிறார்கள் பந்தை.

சீட்டாட்டம் என்றதும் ஞாபகம் வந்தது. முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அன்னாருக்கு சீட்டு விளையாட்டில் கொள்ளைப் பிரியம். ஓய்வு நேரம்னா சீட்டைக் கையில் எடுத்திருவார் போல. ஒருநாள் அவரும் சகாக்களும் உட்கார்ந்து சுவாரஸ்யமாய்ச் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்த நண்பர் அவரிடம் கேட்டார். ஏம்ளா விதின்னா என்ன, மதின்னா என்ன விதியை மதியால் வெல்லலாம்றாங்களே, அது நிசமாளா… டாக்டர் ராதாகிருஷ்ணன் சொன்னார். நீ கலைச்சிப்போட்டியே சீட்டு எனக்கு. என்கிட்ட வந்த சீட்டு, இது என் விதி.

இதை இப்பிடி அப்பிடி மாத்தி அடுக்கி, நான் ஜெயிக்கிறேன் பாரு, அது மதி நான் “ஜெயிச்சாச்சு’ என்று கடைசிச் சீட்டைக் கவுத்திப் போட்டாராம்

எதும்விளையாட்டு என்றால் மைதானத்தில் எப்படி கூடி விடுகிறார்கள். பாப்கார்ன் சிப்ஸ் குளிர்பானம் என தின்று தீர்க்கிறார்கள். தொலைக்காட்சிகளிலேயே கூட அதுபற்றிய விளம்பரங்கள்தான். ஆட்டக்காரர்களே இதைத் தின்னு, இதைக்குடி என்று ஆட்ட நடுவில் விளம்பரத்துக்குப் பேசுகிறார்கள். ஒரேயொரு சாக்லேட் சாப்பிட்டால் உடனே சிக்ஸர் அடிக்கிறான் அந்த விளம்பரம் முடிந்து அதில் நடித்த ஆட்டக்காரர் சிக்ஸர் தூக்கப்போய், அவுட் பேரன் பேத்திகள் வந்தால் சுற்றி உட்கார்த்தி வைத்து கல்சட்டியில் தயிர்ச்சோறு மையாய்ப் பிசைந்து கையில் போடலாம்… பிள்ளையும் பெண்ணுமே வர்றதில்லை. பேரன் பேத்திகள்தான் வரப் போறாங்களாக்கும்… அவளது மருமகள் பூனைக்குட்டிதான் என்றாலும் தவறாமல் ராசிபலன் படிக்கிறாள். அந்தப் பிள்ளை இந்த ராசி, அவனுக்கு இந்த வாரம் எப்படி இருக்கிறது பார்க்கலாம். அவன் மூல நட்சத்திரம். ஆண்மூலம் அரசாளும் என்பாள் கிழவி. குழந்தைகளிடம் அவருக்கு ஒரு ஒட்டுதலும் இல்லை.

என்னை ஏன் பெத்தே, என்று கேட்கிற பிள்ளையை என்ன செய்ய எலேய் அதைப்பத்திதான் நானே யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்… என்பார்.

ஐந்து நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அவருக்கு ஈர்ப்பு இல்லை. என்னாவுது, ரெண்டுபேரும் சரி சமமா நல்லா அடிச்சி விளையாண்டா கொள்ளாம். ஒருத்தன் வெச்சி நச்சிட்டான்னு வெய்யி, அடுத்தாள் நாதஸ்வரத்துல ஒத்து ஊதறாப்போல, உம்முனு இழுக்கறான். அந்தாள் எந்த ராகம்னாலும் பாடட்டும். என் வழி ம்ம்ம் என ஒரே இழுவைதான், என்கிற மாதிரி தடுத்து ஆடறான். நீ என்னதான் பந்து போடு, அடிக்க மாட்டேன், மாட்டேன்னா மாட்டேன்… என்று சண்டித்தனம் செய்யும் வண்டிமாடுபோல கிரவுண்டிலேயே படுத்துர்றான்.

கவாஸ்கர் போன்ற ஆட்கள் அதில் கில்லாடி. ஆர்ட் ஃபிலிம் பார்க்கிறதைப் போல இருக்கும். கலைப்படங்களில் அதும் மலையாளத்தில் பார்த்திருக்கிறார், உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பான்கள். அரிசி புடைப்பது, மாட்டு வண்டியில் போவது… ஒரு படத்தில் தூங்குவதையே அத்தனை நேரம் காட்டினான். சிறப்பான நடிப்பு என்று திரும்பிப் படுக்கச் சொன்னார் இயக்குநர்…

விளையாட்டுகள் சிறந்த உடற்பயிற்சிகள், என்ற காலம் எல்லாம் மலையேறிப் போயிற்று. இது துட்டுசார்ந்த உலகம். தோன்றிற் துட்டொடு தோன்றுக, அஃதிலார் கடன் வாங்கிச் சாக – என்று கிள்ளுவர் சொல்கிறார். பையன்காரன் அப்பனிடமே சொத்து என்ன வெச்சிருக்கே, என்று விசாரிக்கிற காலம். எதற்குச் சொல்ல வந்தது, விளையாட்டிலும் இப்ப நல்ல துட்டுப் புழக்கம். ஆடினால் காசு, ட்வெல்த் மேன், 13வது ஆசாமி, என்று ஆடாமல் காலாட்டிட்டு உட்கார்ந்திருந்தாலே காசு. இதுதவிர விளம்பரத்தில் வேறு ஆட்டக்காரர்களையே கூப்பிடுகிறார்கள். அந்த இஷாந்த் சர்மா பிளேடு விளம்பரத்தில் வருகிறான் – அவன் சலூனுக்கே போவானோ என்னமோ, பார்த்தால் போறாள் மாதிரியே இல்லியே…

இந்த ஒரு விளையாட்டில் நாடே கிறங்கிக் கிடக்கிறது என நினைத்துக் கொண்டார். தமிழில் சென்னை ஆறுலட்சத்தி இருபத்தெட்டு, என்று கிரிக்கெட்டைப் பத்தி ஒரு படமே வந்திட்டது…

விளையாட்டு மோகம் தலைக்கேறிய காலமாவுல்ல ஆயிட்டுது, என நினைத்துக் கொண்டார். சினிமாவுல நடிச்சி ஆட்சியப் பிடிச்சாப்ல இனி மேட்ச் ஆடி பாரிலிமென்டுக்குப் போயிருவாங்களோ என்று பயமாய் இருந்தது. ரசிகர் மன்றம் கின்றம்னு அவர்களுக்கும் இருக்கா என்ன தெரியாது. இனிமேல் கூட வரும். வராமல் போகாது…

பகலில்தான் என்றில்லை, ராத்திரியெல்லாம் விளையாடுகிறார்கள். எப்ப தூங்குவாங்கன்னே தெரியவில்லை.

ராத்திரி விளையாட்டு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. தினசரி மாத்திரை இருக்கிறது. கொஞ்சம் தூக்கம் குறைந்தாலும் மறுநாள் படியேற இறங்க கிர்ருங்கும். தூக்கம் முழித்து ஆட்டம் பார்ப்பது சிரமம். உடற்பயிற்சி என ஆரம்பித்த விளையாட்டு துட்டு என்று முகம் மாறிவிட்டது. ஒரு சிக்ஸருக்கு இத்தனை பணம் என்றெல்லாம் அறிவிப்புகள்.

வெள்ளைக்காரன் கண்டுபிடித்த விளையாட்டு கிரிக்கெட். வெயில் உடம்புல விழவேண்டும் என்பதற்காக நாள்பூரா ஆடுகிறா மாதிரி ஐந்துநாள் கிரிக்கெட் என்று அவன் வைத்தான். நம்மாட்கள் அதை இந்தச் சுட்டெரிக்கிற வெயிலில் விளையாடவும் வேணாம். இப்படி அதை ராத்திரிக்கு மாற்றியிருக்கவும் வேணாம் என்றிருந்தது…

நம்மாள் ராத்திரியில் என்ன விளையாடுவான் வைகுண்ட ஏகாதசி தூக்கம் முழிக்க என்று பரமபத சோபனப் படம் பாம்பும் ஏணியும். பாம்பு இறக்கும். ஏணி ஏற்றி விடும். ஆனால் பாம்பு கடிச்சால் விஷம் இறங்காது, ஏறும் வரவர அவரே ரசனையில் தேறியிருந்தார். யார்க்கர் பந்துவீச்சு கண்டுபிடிக்கத் தெரியும். பீமா, தூஸ்ரா என்றால் தெரியாது. எந்தெந்த பொசிஷன்களில் ஃபீல்டிங் நிறுத்தப் பட்டிருக்கிறது தெரியாது.

ஆனால் ஆட்டக்காரன் அடிச்சால் இது சிக்ஸர் நிச்சயம், இல்லை இது காட்ச் – என்று தெரிந்தது அவருக்கு. மட்டையாளனுக்கு ஒரு அம்பது வரும்வரை, நாற்பத்தியைந்து முதல் ஒரு படபடப்பு. வியர்த்து வழிகிறது. அம்பதைத் தொட்டாலே ஒரு அசட்டுச் சிரிப்பு. அநேகமாய் அடுத்த பந்தைக் கிழிச்சிர்றான்கள். அது நாலாக ஆறாக இருக்கலாம். நிறையத் தரம் அவ்ட் ஆவதும் உண்டு ஆறு பந்தில் ஆறு பவுண்டரி, ஆறு பந்தில் ஆறு சிக்ஸர் என்றெல்லாம் சாதனைகள்…

கும்ளே என்று நம்மாள், ஒரு டெஸ்ட்மேட்சில் பத்து விக்கெட்டும் அவனே எடுத்திட்டான். மத்த பெüலருக்கெல்லாம் சம்பளமே கொடுத்திருக்கக் கூடாது. கொடுத்தார்களா இல்லையா தெரியாது…

வயசு எண்பது. வேலை கிடையாது. உட்கார்ந்த வாக்கில் கொஞ்சம் இப்படி அப்படி அசங்கியபடியே முழு ஆட்டமும் பார்க்கலாம். இளைஞர்களும் இப்படி தொலைக்காட்சியில் முடங்கிக் கிடக்கிறார்களே என்றிருந்தது. பகல்-இரவு ஆட்டத்தன்று தெருவில் அத்தனைபேர் வீட்டிலும் ஆட்டத்தைத்தான் போட்டார்கள். ஹோ ஹோவென்று தெருவே அதிர்ந்து இரைந்தது.

அன்றன்றைய விளையாட்டு சுவாரஸ்யம் என்பது மட்டுமில்லை. ஐந்து டெஸ்ட். ஐந்து ஒருநாள் போட்டி என்று கோப்பை வைக்கிறார்கள். அதில் ஒண்ணு இவன் ஜெயித்து ஒண்ணு அவன் ஜெயித்தால் மூணாம் போட்டிக்கு டிக்கெட் அபாரமாய் விற்கிறது. சூதாட்டம் எல்லாம் இருக்கிறது, என்கிறார்கள். அதுபற்றிய விவரம் அவருக்குத் தெரியாது. ஒரு பந்துக்கு இவ்வளவு, இந்தப் பந்தின் விளைவு என்ன – ஒரு ரன், நாலு, ரன்அவ்ட், அவ்ட், போல்ட் அல்லது கேட்ச் – என்று துல்லியமாய் முன்பே சொல்லி இவ்வளவு காசு கட்டினால் இவ்வளவு பரிசு. சொன்னது தப்பானால் காசு போச்சு – என்று சூதாட்டம் எல்லாம் கேள்விப்பட்டார்.

இதில் விளையாடற ஆள்கூடவே பேரம் பேசி சூதாடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டார். பயமாய் இருந்தது எல்லாம்… ஏ தா (ஒரு கெட்ட வார்த்தை.) இதெல்லாம் எங்க கொண்டு விடுமோ. பேசாம தெரிஞ்ச விளையாட்டு விளையாடுங்களேன், என்றிருந்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர். இந்தியா ஸ்ரீ லங்கா. ஒண்ணு நாம ஜெயித்து, ஆகான்னு ஆசுவாசப்படுமுன் அடுத்ததை அவர்கள் லபக்கி விட்டார்கள். குப்பென்று ஆகிவிட்டது அவருக்கு. நாளை மறுநாள் மூணாவது போட்டி முக்கியமானது. தோற்றதில் அவருக்குள் குமுறலாய் இருந்தது.

எத்தனை கேட்ச்தான் விடுவார்கள். டி.வியில் அதையே திரும்பத் திரும்ப போட்டுக் காட்டுகிறான். இந்தியா பூராவுமே அவனை கெட்ட வார்த்தையில் திட்டும்வரை காட்டுவான் போல. ரன் அவ்ட், ஸ்டம்புக்கு அடிக்கிறான்னு பார்த்தால், ஃபாலோ த்ரு இல்லை. (வர்ணனையாளர் சொன்ன வார்த்தை.) பந்து இப்படி ஓடி நான்கு அதிகப்படி ரன்கள்… சச்சின் விளையாடுவான் என்று பார்த்தால் பந்தைக் கைவிரலில் வாங்கிக் கொண்டு உஸ் என்று உதறினான். அவன்ஆட்டம் முடிந்து அடுத்தாள் ஆடுகையில் அவனை பெவிலியனில் (வர்ணனையாளர் வார்த்தை.) காட்டினார்கள். தவில் வித்வான் போல கையில் தொப்பி. சர்த்தான், அடுத்த போட்டிக்கு விளையாட மாட்டான் என்றிருந்தது….

ஆட்ட சுவாரஸ்யத்தில் கிருஷ்ணவேணியை மறந்திருந்தார். லேசா நெஞ்சு வலி என்றிருந்தாள். சுக்குத்தண்ணி வைத்து அவளே எதோ கை வைத்தியம் போலப் பண்ணிக் கொண்டு நிலைப்படி யருகே படுத்திருந்தாள். வெளியே சீதோஷ்ணநிலையே அத்தனை சரியில்லை.

கடைசி ஓவர். ஆறு பந்து – பத்து ரன்கள். ரெண்டு விக்கெட் – எடுக்க மாட்டார்கள். எடுக்கக் கூடாது. இந்தியா வெற்றி பெற வேண்டும்… என்று படபடப்பாய் இருந்தது. ரொம்ப மோசமான விஷயம்தான். அவருக்கே தெரிந்தது. நம்ம ஆட்கள் அடி விளாசினால் கைதட்டத் தோணுகிறது. எதிரி அடிக்க ஆரம்பித்தால் பலூனில் காத்து போனாப் போல பொங்கும் பால் அடங்கி விடுகிறது… ஒரு நாலு, மோசமான ஃபீல்டிங்கினால் விட்டதுமே, தெரு பூராவிலிருந்தும் ஹவென்று சத்தம். கால் கப்பைக்குள் புகுந்து பந்து எல்லைக்கோட்டைக் கடந்துவிட்டது… கிழவி ம் என முனகினாள். அவளுக்குக் காது கேட்காது… தோற்ற அலுப்புடன் அவளிடம் வந்தார்.

என்னடி பண்றது

ம்

உடம்பு சரில்லியா

ம்ம்

டாக்டராண்ட போவமா…

ம்ம்

அவர் எதுவும் கேட்கவில்லை. அப்பவும் அவள் ம்ம் என்றாள்… பேச முடியாத உச்ச வலியாய் இருக்கலாம். எப்படி வந்தது தெரியவில்லை. பக்கத்து வீட்டில் போய் அந்தப் பையனைக் கூப்பிட்டார். சிரித்தபடி அந்த ஃபோர் – விட்டதுதான்… என்றான். கொஞ்சம் ஆட்டோ கூட்டிட்டு வரியா, என்றார்…

அவள் செத்துப் போனாள். ஒருவேளை அந்த ஃபோரை விட்டிருக்கா விட்டால் பிழைத்திருப்பாளோ, என நினைத்துக் கொண்டார். சே எனக்குப் பைத்தியம்

கடைசியாய் அந்த நர்சிடம் எதோ பேச நினைத்தாள் கிருஷ்ணவேணி. கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்கிறாளா, என்றிருந்தது.

பிள்ளைகள் உடனே விமானம், கால்டாக்சி என்று வந்து இறங்கிவிட்டார்கள்.

என்ன செய்ய என்று திகைப்பாய் இருந்தது. யாருடனாவது இனி அடைய வேண்டும். துக்கத்தை விட திகில் அதிகம் உள்ளாடினாப் போலிருந்தது… யாரோடும் பெரிதாய்க் கலந்துகொள்ளவில்லை. ரொம்ப செளக்கியமான சாவுதான் அவளுக்கு. வேளை வந்தது. போய்விட்டாள்… எல்லாருக்கும் வாய்க்காத சாவு… என நினைத்துக் கொண்டார்.

பரமபத சோபனம் விளையாடினாளா தெரியாது. பாம்பு கடித்ததோ, ஏணி ஏற்றியதோ கிருஷ்ணவேணி அடைந்தாள் பரமபதம்.

கிருஷ்ணவேணி காரியங்கள் முடிந்த அடுத்த நாள். பகலிரவு ஆட்டம் தொலைக்காட்சியில் பக்கத்து வீட்டில் யாரோ போட்டிருந்தார்கள். பேரன் வந்திருந்தான். உனக்கு கிரிக்கெட் பிடிக்குமா, என்று கேட்டார். மருமகளைப் பார்த்து குழந்தைக்கு போரடிச்சா போடு என்று அவள் முகத்தைப் பார்த்தார். (பூனை ஞாபகம் வந்தது)

யானை போல ஆடினான் சேவாக். என்ன வீச்சு. அவனுக்கு பந்து வீசவே எதிரணி பெளலர்கள் பயந்தார்கள். பேரன் முகத்தில் சிரிப்பு. அவருக்கும் புன்னகை.

எந்தப் போட்டியையும் செளகர்யமாக ஜெயித்ததே இல்லை நம் மக்கள். அதேபோல கடைசிப் பந்து. ரெண்டு ரன்கள். படபடப்பு அதிகமாய் இருந்தது அவருக்கு. அட முரளிதரன்… எப்பவும் போல அவன் மட்டையை கர்லாக்கட்டையாய்த்தான் சுத்துவான்.

பந்தைப் பார்க்க மாட்டான்… ஒரே வீசு வீ…

ஊஊ… என அழ ஆரம்பித்தார்.

- எஸ். ஷங்கரநாராயணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:21 pm

கல்வி வள்ளல்
---------------------
“”அப்ப நான் புறப்படட்டுமா கல்யாணம்?”

“”சரிங்கய்யா…”

“”உன்னை நம்பித்தான் இவன சேர்த்து விடறேன்… பெரிய ஆளா அவனும் வரணும்… உன்னை மாதிரியே காலேஜ் ஆரம்பிச்சு பல பேருக்கு இலவசமா கல்வி கொடுக்கணும்..”

“”ஐயா.. என்னை மாதிரின்னு சொல்றத விட உங்கள மாதிரின்னு சொல்லலாமே…”

“”நான் என்ன பண்ணிட்டேன் கல்யாணம்… உன்னை மாதிரி நிறைய ஸ்டூடன்ட்ஸ் கண்ணியமா வளர்றதுக்கு காரணமா இருந்தேன். ஆனா டொனேஷன் எதுவும் வாங்காம வாத்தியார் பையங்கிற ஒரே காரணத்துக்காக என் பையனுக்கு இன்ஜினியரிங் சீட் கொடுத்த பாரு.. அந்த மனசு யாருக்கு வரும்?” என்றபடி வாத்தியார் வரதராஜன் சீட்டிலிருந்து எழுந்தார்.

நின்று கொண்டிருந்த முத்துகிருஷ்ணன் அப்பாவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டான்.

சீட்டிலிருந்து எழுந்து நின்று கல்யாணம் என்கிற அந்த கல்வி நிறுவனத்தின் தலைவர், கல்வி வள்ளல் அவரது வாத்தியார் வரதராஜனை பார்த்து வணங்க… முத்துகிருஷ்ணனும் அவன் அப்பாவும் அறையை விட்டு வெளியே வந்தார்கள்.

“”பெரிய காலேஜ் இல்ல… நீ இப்ப சேர்ந்திருக்கற கோர்ஸ் இங்க மட்டும்தான் இருக்காப்பா… அது என்ன கோர்ஸ்ப்பா…”

“”ஏரோநாட்டிக் இன்ஜினியரிங். இன்னும் ரெண்டு காலேஜ்லயும் இருக்குப்பா.. ஆனா இங்க டீச்சிங் ரொம்ப நல்லா இருக்கும்பா…”

“”சிட்டில இருக்கற காலேஜ்லயே நல்ல காலேஜாப்பா?”

“”ஆமாம்ப்பா.. நூறு சதவிகித பேருக்கு காம்பஸ் இன்ட்டர்வியூல வேலை கிடைக்குதுப்பா…”

“”உனக்கும் கிடைச்சிடும்… கல்யாணம் ரொம்ப தங்கமானவம்ப்பா… பழச மறக்காம இருக்கான்…”

முத்துகிருஷ்ணன் அப்பாவைப் பார்த்தபடி நடந்தான்.

“”என் பையன்னோன சீட் கொடுத்திட்டான் பார்த்தியா?”

“”ஆமாம்பா… உங்க மேல ரொம்ப மரியாதைப்பா…”

“”என் மேல என்னப்பா மரியாதை? நான் சொல்லிக் கொடுத்த பாடம். தஞ்சாவூர் மாவட்டத்துல மட்டும் எட்டு ஊருப்பா. நாப்பது வருஷம் சர்வீஸ். ஸ்கூல் முடிஞ்சோன்ன ட்யூஷன். ஏழைப் புள்ளைங்களுக்கு என் செலவுல சாப்பாடு… இவன் மாதிரி எத்தினி பேரு… கல்யாணம் ரொம்ப கெட்டிக்காரன். எனக்கு நல்லா நினைவு இருக்கு. சின்ன வயசுலயே அப்பா, அம்மா தவறிட்டாங்க.. இவன் மாமா ஒருத்தருதான். குளிக்கரை பள்ளிக்கூடத்துல கொண்டு வந்து சேர்த்துவுட்டாரு. நான் எங்க தங்குவேன்? எங்க சாப்பிடுவேன்னு “ஓ’ன்னு அழுதான்… நான்தான் நம்ம வீட்லயே தங்க வச்சுக்கிட்டேன். உங்கம்மா கையாலதான் சாப்பிட்டான். அந்த நன்றிய மறக்காம இருக்கான். ட்யூஷன் முடிஞ்ச எல்லாப் புள்ளைங்களும் போன பிறகும் இவன் இருந்து படிப்பான்… அதான் இவ்வளவு பெரிய காலேஜ கட்டி இருக்கான்..”

“”ஆமாம்ப்பா…”

“”படிச்சா மட்டும் போதாதுப்பா? நாம எப்படி வளர்ந்தமோ.. அத மாதிரி பல பேருக்கு உதவி பண்ணனுங்கற நெனப்பு வரணும். அவன்தான் உண்மையான மனுஷன். கல்யாணம் அப்படிப்பட்ட ஆளுப்பா…”

முத்துகிருஷ்ணன் அப்பாவையே பார்த்தபடி இருந்தான்.

“”இவன் ஸ்கூல்ல சேர்றப்ப எல்லாம் முக்கால் ரூவா பீஸ் கட்டணும். அதகூட இவன்கிட்ட வாங்கல. பல பேருக்கு நானே கட்டிடுவேன்… அப்பல்லாம் அது பெரிய காசுப்பா.. அதையெல்லாம் ஞாபகம் வச்சிருந்து இன்னைக்கு எனக்கு உதவி பண்ணியிருக்கான்…”

“”அப்பா… கான்டீன்ல வெயிட் பண்றீங்களாப்பா… நான் சில பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணனும்…”

“”வாங்கிட்டு வாப்பா… இங்கேயே இருக்கேன்…”

வாத்தியார் வரதராஜன் வெயிட் பண்ண, முத்துகிருஷ்ணன் கல்லூரியின் தலைவர் கல்யாணம் அறை நோக்கி நடந்தான்.

முத்துகிருஷ்ணனைப் பார்த்ததும் கல்யாணம் மலர்ந்தார்.

“”வாப்பா… நேரம் ஆனோன்னே வீட்டுக்குப் போயிட்டியோன்னு பயந்துட்டேன். இன்னைக்கு கடைசி நாள்…”

“”சாரி சார், உங்க பேரையும் ஊரையும் தெரியாத்தனமா அப்பாகிட்ட சொல்லிட்டேன். என் ஸ்டூடன்ட்தான்னு என்கிட்ட டொனேஷன் வாங்க மாட்டான்னு அடம்புடிச்சு புறப்பட்டு வந்துட்டாரு…” என்றவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து பணக் கட்டை எடுத்து வைத்தான்.

“”அப்பாவோட பென்ஷன் அரியர்ஸ், அவரோட குளிக்கரை வீடு எல்லாத்தையும் வித்துதான் சார் பணம் ரெடி பண்ணினேன்… அவருக்கு ஏதும் தெரியாது சார்.. தெரியக்கூடாது சார்…”

“”உனக்காக, என் வாத்தியாருக்காக போர்ட் டைரக்டர்ஸ்கிட்ட போராடி பத்தாயிரம் குறைச்சிருக்கேம்ப்பா…”

“”ரொம்ப நன்றி சார்… ”

“”வாத்தியார் அந்தக் காலத்து ஆசாமி. இப்ப இருக்கற எஜுகேஷன் அவருக்குப் புரியாது. ரொம்ப தள்ளாட்டமா தெரியறாரே.. வீட்டை விட்டு வெளியே அனுப்பாதே..”

“”சரி சார்..”

முத்துகிருஷ்ணன் வெளியேறியதும், கல்யாணம் பெல் அடித்தார். உள்ளே வந்து பவ்யம் காட்டியவரிடம், “”இன்னைக்கு கலெக்ஷன் எவ்வளவு?”

“”ரெண்டரை கோடி சார்..”

“”அதுல அறுபதை என் அப்பாவுடைய டிரெஸ்ட் அக்கவுண்ட்டுக்கு மாத்திடுங்க. நாப்பதை, ஆயிரம் ரூபா கட்டா ரெடி பண்ணி வைங்க.. மெடிகல் காலேஜ் அப்ரூவல் சம்பந்தமா டெல்லி போகணும்.. இன்னொரு பத்து ரூபாய உடனே ஒரு சூட்கேஸில் ரெடி பண்ணுங்க. கும்பகோணம் இன்ஜினியரிங் காலேஜ் பர்மிஷன் தொடர்பா செகரெட்டரியேட் போகணும்.. தஞ்சாவூர் டீச்சர் டிரெயினிங் காலேஜ் பர்மிஷன் எந்த அளவுல இருக்குன்னு ரங்கநாதனை விசாரிக்கச் சொல்லுங்க.. இருபது அட்வான்ஸ் கேட்டாங்களாம்.. அதை உடனே கொடுக்கச் சொல்லுங்க.. ஏரோநேட்டிகல் அட்மிஷன் க்ளோஸ்ட்னு சொல்லிடுங்க. பேலன்ஸ் இருக்கற ரெண்டு சீட்டை கடைசில ரேட் ஏத்தி கொடுக்கலாம்” என்றார் கல்வி வள்ளல் கல்யாணம்.

- திருவாரூர் பாபு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:22 pm

மூளைக்கு விடும் சவால்
------------------------------

ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வசித்து வந்தார். அவர் மிகவும் திமிர் பிடித்தவர். ஊர் மக்கள் அனைவரும் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பது அவருடைய எண்ணம்.

அந்த கிராமத்தில் மூஸு எனும் ஓர் இளைஞன் வசித்து வந்தான். அவன் மிகவும் புத்திக்கூர்மை உடையவன்.

ஒரு நாள் பண்ணையார் தனது குதிரையில் அமர்ந்து கிராமத்தைச் சுற்றி வந்தார். ஊர் மக்கள் அவரைக் கண்டால் நடுங்குவார்கள். அதனால் அவர் எதிரே வருவதைக் கண்டவுடன் அவரை வணங்க ஆரம்பித்தார்கள். மூஸு மட்டும் அவரை வணங்கவில்லை. இதைக் கவனித்த அந்தப் பண்ணையார் மூஸுவை அழைத்தார்.

“”நீ யார்?”"

“”என் பெயர் மூஸு”"

“”நீ எந்த ஊர்? உன்னைப் பார்த்தால் இந்த ஊர் மாதிரி தெரியவில்லையே!”"

“”இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஊர்களும் எனது ஊர்தான்… தற்போது இந்த ஊரில் இருக்கிறேன்”"

“”நீ ஏன் என்னை வணங்கவில்லை?”"

“நான் எதற்காக உங்களை வணங்கவேண்டும்? என்னைவிட புத்திக்கூர்மை அதிகம் உள்ளவர்களைத்தான் நான் வணங்குவேன்”"

இதைக் கேட்ட பண்ணையாருக்குக் கோபம் வந்துவிட்டது.

“”நான் உனக்கு ஒரு சவால் விடுகிறேன். அதில் நீ ஜெயித்துவிட்டால் உன்னை புத்திசாலி என ஒப்புக்கொள்கிறேன்”"
இவ்வாறு பண்னையார் சொன்னதும் மூஸô அதற்கு ஒப்புக்கொண்டான்.

“”என்ன சவால் என்று சொல்லுங்கள்”

“”என்னைக் குதிரையின் மீதிருந்து, நீ உன் பேச்சு சாமர்த்தியத்தால் இறக்க வேண்டும். அதுவே சவாலாகும்”
மூஸு யோசித்தான்… “”பண்ணையார் அவர்களே, நீங்கள் கீழே நின்றால் உங்களைக் குதிரையின் மீது ஒரு நொடியில் ஏற்றிவிடும் சாமர்த்தியம் எனக்கு இருக்கிறது. நீங்கள் குதிரையில் இருந்து இறக்கச் சொல்லுகிறீர்களே!”

“”அப்படியா, சரி… உன்னுடைய சாமர்த்தியத்தை நான் பார்க்கிறேன்”

உடனே குதிரையிலிருந்து கீழே இறங்கினார் பண்னையார்.

“”சரி, இப்போது என்னைக் குதிரை மீது ஏறச் செய் பார்க்கலாம்”

இதைக் கேட்ட மூஸு சத்தம் போட்டுச் சிரித்தான்…

“”என்னைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?”

“”குதிரை மீது இருந்து உங்களை இறக்க வேண்டும் என்று சொன்னீர்கள். உங்களை இறக்கி விட்டேன் பார்த்தீகளா?”

மூஸுவின் வாய் ஜாலத்தில் தான் ஏமாந்து போனதை உணர்ந்த பண்னையார் கோபமாகக் குதிரை மீது ஏறி அமர்ந்து, புறப்படத் தயாரானார்.

“”பண்னையாரே, மீண்டும் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். குதிரை மீது உங்களை ஏற்றி உட்கார வைத்து விட்டேன் பார்த்தீர்களா?”

இப்போது மீண்டும் தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த பண்னையார் அவமானத்தால் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.

ஊர் மக்கள் மூஸôவின் புத்திசாலித்தனத்தை வியந்து பாராட்டினார்கள்.

-அ.நெளபல் ஹபீப், கடையநல்லூர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:24 pm

மூளையின் உழைப்பை புரிந்து கொள்ள
----------------------
பொதுவாகவே, உடல் உழைப்பால் சிரமப்படும் தொழிலாளர்கள் பலரும் மூளை உழைப்பாளர்களுக்குக் கிடைக்கும் அதிக கௌரவம் மற்றும் ஊதியத்தைக் கண்டு ஏக்கம் கொள்வார்கள்.
விறகு வெட்டி ஒருவனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. தன்னுடைய தேசத்து ராஜாவிடம், “”மகாராஜா, தங்களுடைய ராஜ்யத்தில் எல்லாம் சரிதான். ஆனால் எனக்கு மாத்திரம் தினம் ரெண்டு ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். மந்திரிக்கோ மாசம் ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறீர்கள். எல்லா மக்களையும் சமமாக நடத்தும் நீங்கள் சம்பள விஷயத்தில் மாத்திரம் ஏன் வித்தியாசம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டான்.

மகாராஜாவுக்கு சந்தோஷம் வந்துவிட்டது.

“”அப்படியா, பேஷ்… சரியான கேள்வி. உனக்கு இதைப்பற்றி சரியான பதில் சொல்கிறேன். முதலில் நீ ஒரு காரியம் செய்யவேண்டும். அதோ பார்! அங்கே ஒரு பாரவண்டி போகிறது. அதில் என்ன போகிறது என்று விசாரித்துவிட்டுவா…” என்றார்.

விறகு வெட்டி ஓடினான். கொஞ்சநேரத்தில் திரும்பிவந்து, “”மகாராஜா நெல் பாரம் வைத்துப் போகிறது…” என்று சொன்னான்.

“”அப்படியா எங்கே போகிறது..?” என்று கேட்டார் ராஜா.

“”அய்யோ.. அதைக் கேட்க மறந்துட்டேனே…” என்று ஓடினான்.

விறகு வெட்டி திரும்பிவந்து, “”அது பிரம்ம தேசம் போகிறதாம்!” என்றான்.

“”அப்படியா? எங்கிருந்து போகிறதாம்?” என்று கேட்டார் மகாராஜா.

“”அடடா அதைக்கேட்க மறந்துவிட்டேனே…” என்று விறகுவெட்டி மறுபடியும் ஓடினான்.

கேட்டுவிட்டு திரும்பிவந்த விறகுவெட்டி, “”மகாராஜா… அது, ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்ம தேசம் போகிறதாம்…” என்று சொன்னான்.

“”அப்படியா அது என்ன நெல்?” என்றார் மகாராஜா.

மறுபடியும் விறகுவெட்டி ஓட ஆரம்பிக்கும்போது, அங்கே தற்செயலாய் மந்திரி வந்து சேர்ந்தார்.

மகாராஜா, விறகு வெட்டியை உட்காரச்சொல்லிவிட்டு மந்திரியிடம், “”இந்தப் பக்கமாக ஒரு பாரவண்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போனது. அது எங்கே போகிறது என்று பார்த்துவிட்டு வாரும்…” என்று சொன்னார்.

மந்திரி நிதானமாகப் புறப்பட்டுப் போய் சிறிது நேரம் கழித்து வந்து, “”மகாராஜா, அந்த வண்டி ரங்கசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் போகிறது. நெல்பாரம். யானைக்கொம்பன் நெல் கோட்டை விலை ஏழரை ரூபாய். மழை காரணமாக பாதைகள் சரியில்லாததால், வண்டி இந்த வழியாகப் போகிறது. வண்டி ஓட்டிக்கொண்டு போகிறவனின் பெயர் வெள்ளையதேவன். தளவாய்த் தேவனின் மகன். சொந்த ஊரே ரங்கசமுத்திரம்தானாம். வயது இருபத்தைந்து இருக்கும்…”
- இப்படிப் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போய், “”கடைசியாய் கவனித்ததில் அவனிடத்தில் வித்தியாசமாக ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. மேற்கொண்டு தங்கள் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்…” என்றார் மந்திரி.
விறகு வெட்டிக்கு ஒரே ஆச்சர்யமாகப் போய்விட்டது. மந்திரி போனபின் மகாராஜாவிடம் அவன் சொன்னான், “”நம்முடைய மந்திரி எவ்வளவு கெட்டிக்காரராக இருக்கிறார்…” என்று தன்னுடைய ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் வெளியிட்டான்.

“”இப்போது புரிகிறதா? உனக்கும் மந்திரிக்கும் உள்ள சம்பள வித்தியாசம்…” என்றார் ராஜா.

“‘ஹி..ஹி..” என்று சிரித்து, “சரிதான்’ என்ற பாவனையில் தலையை ஆட்டினான் விறகுவெட்டி.
மூளை உழைப்பின் நுண்மையை உடல் உழைப்பாளிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். உடல் உழைப்பின் அருமையை மூளை உழைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிவுக் கூர்மையும் இருந்து அதனை செயல்படுத்தும் உடல் உழைப்பும் இருந்தால் அவனே சாதனையாளனாகிறான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:26 pm

ஆசை அதிகம் வெச்சு..

ஆசை அதிகம் வெச்சுசிறுகதை
adhigamஸ்கூட்டரை உள்ளே நிறுத்திய பின் மாருதியை வெளியே எடுத்தான். வாசலில் நிறுத்திவிட்டு வழக்குக் கட்டுகளை எடுத்துவர அலுவலகத்தினுள் நுழையப் போனவனைத் தடுத்தழைத்தது அனுராதாவின் குரல். நாற்பத்தைந்து வயதிருக்கும். வசதியின் வனப்பு மிளிரும் முகம்.

“”ஹலோ! கண்ணன் சார்! வீட்டில் எல்லாரும் சவுக்யமா இருக்காங்களா?”

“”ம்.. நல்லாருக்காங்க.”

“”சார்! ஒரு பத்து நிமிஷம் ஸ்பேர் பண்ணலாமா?” இவனிடமிருந்து பதிலேதும் வருமுன்பே, “பண்பலை’போல் தொடர்ந்தார் அனுராதா. பக்கத்து ப்ளாட், கணவர் பெரிய அதிகாரி. பணிபுரிய ஏவலாள்கள், டிரைவர் என வீட்டிலேயே நான்குபேர் வெளியாட்கள்.

“”உங்க வக்கீல் புரொஃபஷன்ல சம்பாதிக்கிறதோட அதிக ஸ்ட்ரெயின் இல்லாம, இன்னும்கூட சிம்பிளா மாசம் முப்பதாயிரம், ஐம்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம். ஒரு ஸ்கீம் – நாங்க இப்ப பிரமாதமாக பண்ணிக்கிட்டிருக்கோம். மேன்பவர் வேணாம்; எஸ்டாபிளிஷ்மெண்ட் வேணாம். வெறும் ஃபோன் காண்டாக்ட் போதும். உங்களுக்கு இருக்கிற வொயிடு கான்டாக்ட்ல ரொம்ப சிம்பிளா ஏர்ன் பண்ணலாம்.”

கண்ணன் நெளிய ஆரம்பித்தான். அனுராதா ஒரு வெள்ளைத்தாளில் பேனாவால் சதுரம் போட்டு அம்புக்குறியீடுகள் இட்டு, எண்களைக் குறித்தபடியே தொடர்ந்து பேசினாள்.

“”இந்த செயின் இன்ஸ்வெஸ்ட்மென்ட் ஸ்கீம்ல வெறும் இருபதாயிரம் ரூபாய் – அதுவும் அஞ்சாயிரம் அஞ்சாயிரமா நாலு இன்ஸ்டால்மெண்ட்ல கட்டினாப் போதும். இது மட்டும்தான் உங்க முதலீடு. ஒரு வருஷத்துக்கப்புறம் உங்க முதலீடு இருபதாயிரமும் திரும்பி வந்துவிடும். ஆனால், ஆறாவது மாசத்திலிருந்தே மாசா மாசம் ஆயிரத்திலிருந்து போனஸ் வந்து விழ ஆரம்பிச்சுடும். உங்க ஃபர்பார்மென்ஸ்க்கு ஏத்தபடி மாசம் இருபதாயிரம் வரை கூட வரும். நீங்க மாசம் நாலுபேர் இன்ட்ரட்யூஸ் செய்யணும். அந்த நாலு பேரும் தலா நாலுநாலு பேரைக் கொண்டு வரணும்…”
கண்ணன் கைக்கெடிகாரத்தைப் பார்த்தான்.

“”நீங்க ஃப்ரீயா இருக்கப்ப சொல்லுங்க… வந்து டீடெய்லா எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன். நீங்க ராத்திரி பூரா கண்முழிச்சு நோட்ஸ் எடுத்து கோர்ட்டுக்குப் போய் வாதாடி, வக்காலத்து வாங்கி ஜட்ஜ்மென்டுக்குக் காத்திருந்து உங்க உழைப்புக்கு ஏத்த வருமானம் உங்க புரொஃபஷன்ல வராதுன்னு நெனைக்கிறேன். அதுனால் இந்த ஸ்கீம்ல…”

கண்ணனின் நெஞ்சுக்குள் நெருப்புப் பற்ற ஆரம்பித்துவிட்டது. வாசலில் தெருவருகே வழிமறித்து வலைவீசும் அனுராதாவின் வாதத்தை நார்நாராய்க் கிழிக்கத் துடித்தது மனசு. நீதிமன்ற விசாரணை நேரம் பாசவலை வீச, இவன் உள்வாங்கும் சிற்றலையானான்.

“”இல்லை மேடம். என் வேலையும் அதன் வருமானமும் எனக்குப் போதும். நீங்க சொல்ற சம்பந்தமில்லாத வருமானம் எதிலயும் எனக்கு ஈடுபாடு இல்லை. இந்த மாதிரி, மத்தவங்களைக் கோர்த்துவிடற சங்கிலித் தொடர் முதலீடு – வணிகம் எதுவுமே எந்த வடிவத்திலயுமே எனக்குப் பிடிக்காத ஒண்ணு.”

“”நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை… இன்னும் மேலதிகமாகச் சம்பாதிக்கலாமேன்னு…”

“”இல்லைம்’மா நன்றி வர்றேன்!”

காரின் கதவைத் திறந்து பளிச்சென்று உள்ளே அமர்ந்தான்.

“”நட்ராஜ், கேஸ் கட்டெல்லாம் எடுத்து வச்சுக்கீட்டீங்கள்ல? வந்து உக்காருங்க!” அதி வேகமாய்க் கிளப்பினான் காரை. வாகனத்தைவிட அவன் எண்ணம்தான் வேகமாய் ஓடுகிறது…

“நகர சாலை நெரிசலில் காலைப் புயலில் புறப்பட்டுப் புகுந்து “பிளஷர் காரில்’ மகிழ்ச்சியுடனா பயணிக்க முடிகிறது?
வீங்கிப் புடைத்த நெற்றியாகவும் பல் விழுந்து குழியான பொக்கை வாயாகவும் திகழும் தெருவில் சாகச சர்க்கஸ் வித்தைத்தான் வாகனப் பயணம். எந்த வகை வாகன ஓட்டிக்கும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது தனது அவசியக் கடமை என்கிற உணர்வே இருப்பதில்லை. அட, சாலை விதிகள் என்னென்னங்கிற அறிவு இருந்தாலல்லவா அதைக் கடைப்பிடிக்கிற நினைவு வரும்? தான்-தான் மட்டுமே பயணிக்க இந்தச் சாலை என்கிற அபத்தமான அழுச்சாட்டிய மனோநிலை தொத்து வியாதியாய் வேகமாகப் பரவிவிட்டதே.

“காதைத் துளைக்கும் எச்சரிக்கை ஒலியால் மிரட்டி தொலைவில் தெருவைக் கடக்கும் ஜீவனைத் தேவையற்று சில நிமிடங்கள் நிற்க வைத்துத் தன் வாகன வேகத்தைக் குறைக்காமல் சுகமாகப் பயணிக்கிற அதிகாரத்தை யார் தந்தது இவர்களுக்கு? வாகனங்களுக்கு இடையே விட்டுப் பயணிக்க வேண்டிய தொலைவு என்று ஒன்று உண்டு என்கிற சட்டமும் காணாமல் போனது. இடதும் வலதும் மிக நெருங்கி வந்து தாண்டிச் செல்ல – காது வழியே நெஞ்சைப் பிளக்கும் “ஹாரன்’ சமிக்ஞை – அடையாளக் குறியீடு எதையும் காண்பிக்காமலேயே அருகில் வரும் வாகனத்தைக் கடப்பதும், திரும்புவதும் எனப் பிறரைத் திக்குமுக்காட வைப்பதும்… அவன் எப்படிப் போவான் எப்படி, எங்கே, எப்போது திரும்புவான், திரும்புவானா, நேரே போகப் போகிறானா? எனக்குத்தான் அந்தக் கவலை. தன் வண்டியைத் தான் இயல்பாய் ஓட்டுவதற்குப் பதில் அவன் எப்படி ஓட்டுகிறானோ அதற்குத் தக்கத் தன் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே, யோசிக்காத, அக்கறையற்ற அவனுக்காகவும் சேர்த்து நானல்லவோ யோசிக்க வேண்டியிருக்கிறது.

“பயணத்தில் மட்டுமா – வாழ்க்கையிலேயும் அல்லவா இந்தச் சுயநலம் பாசியாய்ப் படர்ந்துவிட்டதே! சுயநலச் சுதந்திரத்தின் எல்லை எதுவரை? மற்றவர் சுதந்திரத்தின் எல்லைக்கோடு வரை என்கிற அறிவு வேண்டாமா?’
நிமிர்ந்து நிற்கும் சிகப்புக் கட்டிடத்தின் உள்ளே ஒரு வழியாய் நுழைந்து மரத்தடியில் வண்டியை நிறுத்தி இறங்குகிறான் இவன். நீண்டு மடித்து வைக்கப்பட்ட கட்டுக்களை எடுத்துக்கொண்டு இவனைப் பின் தொடர்கிறார் இளைய வழக்கறிஞர்.
சுட்டெரித்த சூரியன் விடைபெறும் மாலை நேரம்.

ஆவி மேலெழும் இஞ்சி தட்டிப்போட்ட தேநீரைச் சுவைத்தபடியே எதிரே அமர்ந்திருக்கும் இளைஞர் ரகுவின் பேச்சை உற்று கேட்கிறானிவன். வெள்ளைத் தாளில் சிறுசிறு குறிப்புகளாக எழுதிக் கொள்கிறான்.

“”ம்…டீயக் குடிங்க, ஆறிடப் போகுது.”

“”தேங்க்ஸ்!”

கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே தேநீர் அருந்தி முடிக்கிறான் ரகு. தொடர்கிறான்:

“”நான் மட்டுமில்லை. எங்க கம்பெனியிலிருக்கிற ஆறேழு பேர், அப்புறம் மிடில்கிளாஸ்வுமன் கொஞ்சம்பேர், வயசானவங்க கொஞ்சம் பேரு – கிட்டத்தட்ட எனக்குத் தெரிஞ்சு நாற்பது அம்பது பேர் இப்படி இந்த “எவர் கிரீன் குரோ பைனான்ஸ்’ல பணம் கட்டி ஏமாந்திருக்கோம். ஒரு வருஷம் இருக்கும். முதல் நாலு மாசத்துக்குப் பின்னாடி மூணு மாசம் மட்டும் “செக்’ தந்தாங்க. அப்புறம் தரவேயில்லை. இன்னும் நாலைஞ்சு “ஸ்கீம் ப்ளோட் பண்றோம்ன்னு, மேலும் மேலும் எங்கக்கிட்டயிருந்து பணம் கறக்கப் பார்த்தாங்களே தவிர, அவுங்கக்கிட்டயிருந்து ரிட்டன் எதுவும் வரவேயில்லை. சொன்னபடி எதுவுமே சரியாத் தரலை.”

“”அவுங்க உங்களைக் குறி வைச்சு வளைச்சாங்களா? நீங்களா போய் விழுந்தீங்களா?”

“”அது வந்து… மீடியாவெல்லாம் செம விளம்பரம் செய்ஞ்சு எங்க மனசுக்குள்ள அவுங்க கம்பெனிய பத்தி ஒரு “இமேஜைப் பில்டப்’ பண்ணீட்டாங்க. அதுவுமில்லாம அப்பல்லாம் எங்கள மாதிரி ஐ.டி.தகவல் தொழில்நுட்பத் துறையில கைநெறையக் காசு புழங்குற தகவல்தான் உலகம் தெரிஞ்ச ரகசியமாச்சே. ஃபோன் மேல ஃபோன், எஸ்.எம்.எஸ்., பர்சனல் கேன்வாஸ்ன்னு நுனிநாக்கு இங்கிலீஷ்ல தேன் குழைச்சுப் பேசிக்கிட்டே இருந்தாங்க. ஒரு பத்து நிமிஷம் எப்ப ஸ்பேர் பண்ண முடியும்ன்னு கேட்டு அப்பாய்ண்டமெண்ட் வாங்கிக்கிட்டு வந்து லேப்-டாப்பில கிராஃப் காண்பிச்சு, அவுங்க இன்வெஸ்ட்மெண்ட் பிளான், ஹைப்பா டைரக்டர்ஸ் ஃப்ரொஃபைல்லாம் காண்பிச்சு அப்படியே கரைச்சாங்க. எங்களுக்கும் செலவு போக மிஞ்சியதை, ஃப்ளாட், வீடு வாங்க உதவுமேன்னு, இப்படி இன்வெஸ்ட் பண்ணினா பெட்டர்னு தோணுச்சு.”
தன் பேனாவால் மேஜையை “டக்டக்’கெனத் தட்டியபடியே இவன் குறுக்கிட்டான்.

“”ம்… அப்ப… அவுங்களாத் தேடி வந்தவங்கக்கிட்ட நீங்க அப்படியே இலகுவா “இந்தாங்க’ன்னு எடுத்துக் கொடுத்திருந்கீங்க…”
“”யெஸ் சார்.”

“”ஒங்க பணத்தைப் பாதுகாப்பான இடத்தில முதலீடு செய்யணுங்கிற அக்கறையில்லாம, உங்களைத் தேடிவந்தவங்ககிட்ட, அப்படியே கையில் இருக்கிறதைச் சுலபமா குடுத்தீங்க?”

“”இன் எ வே யெஸ்..”

“”ம்…”

வேதனையும் கசப்பும் கலந்த பெருமூச்சு இவனுள் – படித்த முட்டாள்களை அடிக்கடி தற்போது பார்க்க நேரிட்டு விடுகிறதேயென.

“”மிஸ்டர் ரகு! “ஸிஸ்டம்’ “நெட்’, கேளிக்கை சேனல் தவிர உங்களுக்குத் தெரிஞ்சது “பப்’பும் “வீக்என்ட் பார்ட்டியும்தானா? எவ்வளவு நியூஸ் பேப்பர் பத்திரிகை, சேனல்லாம் பொருளாதாரத் தகவலைத் தருது…”

“”நோ டைம் சார்!” படீரெனப் பதில் வருகிறது ரகுவிடமிருந்து.

“”ரகு! ஒங்களை நீங்களே ஏமாத்திக்கிற முயற்சியில் சுகங்காணாதீங்க. உங்களுக்குத் தெரிஞ்சுக்கிற ஆசையும் ஆர்வமும் இல்லை. முக்கியமாகப் பொறுப்பு இல்லை. ஒங்க பாட்டி காலத்தில அடுப்படிப் பாத்திரம், தகர டப்பாவில சிறுகச்சிறுகச் சேமிச்சாங்க. உங்க அப்பா காலத்தில.. எதில கூட வட்டி வரும். அதே சமயம் முதலுக்கு மோசம் வந்துடக் கூடாதுங்கிற அக்கறை கவலையோட பத்து எடம் அலைஞ்சு, நாலு பேர் கிட்டக் கேட்டு, அரசு நிறுவனங்கள்ல, அஞ்சலகச் சேமிப்பு, தேசவுடமை வங்கின்னு சேமிச்சாங்க. உங்களுக்கு எல்லாத்திலயும் போல இதுலயும் மிக எளிதான – சுகமான சோம்பேறித்தனம். நேரமில்லைங்கறது சால்ஜாப்பு. கூடுதல் சம்பளம் தர்றாங்கன்னா அதிகமாகத்தான் ஒழைக்கணும். ஆனா,சுயத்தை இழந்து, அப்படிக் கொத்தடிமையா ஒழைச்சுச் சம்பாதிப்பதைக் கவனமா சேமிச்சு, பாதுகாப்பா முதலீடு செய்யணுங்கிற அக்கறை வேண்டாமோ? நான் சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்காதீங்க. ஒங்களுக்கே “அவுங்க தர்ற சம்பளம் அதிகந்தான்; ஈஸியா சம்பாதிக்கிற பணம்தானே’ன்னு ஒரு அக்கறையின்மை உங்களுக்குள்ளே பரவிடுது. அதுக்கு மேலே எதிர்த்தாப்பில நவீனமா எப்படி திருட்றது, எப்படி ஏமாத்தறது, எப்படி கண்கட்டு வித்தை காண்பிச்சு கொள்ளயடிக்கிறதுன்னு புதுப்புது வழிகளை, நுட்பங்களைக் கண்டுபிடித்து ஒரு பெரிய கொள்ளைக்காரக் கும்பலே எல்லாத் துறையிலும் பகட்டா பவனி வருது. நாமதான் விழிப்போட செயல்படணும். சரி… இப்ப எப்படி நடவடிக்கை எடுக்கலாம்ன்னு யோசிக்கிறேன். ஒரு நாலு நாளுக்குள்ல பாதிக்கப்பட்டவங்களை ஒருங்கிணைச்சு ஒரு குழு அமைச்சுக்குங்க. காவல்துறை முறையீடு, வழக்குத் தொடுப்பது, மீடியாவிடம் போறதுன்னு எல்லா வழியிலயும் முயல்வோம். முழு விபரமும் சேகரிச்சு வையுங்க. சட்டபூர்வமாகச் செய்ய வேண்டியதை நான் திட்டமிட்டுச் செய்யிறேன்.”

“”தேங்க்ஸ்” எழுந்து நின்று வணங்குகிறான் ரகு. ரகுவின் தோள் அணைத்துப் பேசுகிறான் இவன்.

“”ரகு! நான் தனிப்பட்ட முறையில உங்களை விமர்சனம் செய்ததா நெனக்காதீங்க. நான் சொன்னதையெல்லாம் சரியான கண்ணோட்டத்தில எடுத்துக்குங்க…”

“”நோசார். ஒரு எல்டர் பிரதரா நீங்க உரிமையோட வழி காண்பிக்கிறதாத்தான் நெனைக்கிறேன்.”

கைகுலுக்கலில் இனிமை மலர்ந்தது. இவனையே ஊற்றுப் பார்த்து வியக்கிறான் நடராஜ். “சாந்தமான முகம்; ஆனால் கம்பீரமான உள்ளம். முப்பத்தைந்து வயதில் பக்குவமும் சமூக அக்கறையும் கொண்டவர் என் சீனியர்.”

“”என்ன அப்படிப் பார்க்கிறே நட்ராஜ், நான் சொன்னது சரியா, தப்பா சொல்லு?”

“”கரெக்ட்தான் சார். காலைல அந்தம்மாகிட்ட… “சார் ஏன் அவ்வளவு கோபப்பட்டார்’ன்னு நான் கொஞ்சம் யோசிச்சேன். ஆனா, இதோ இப்பப் பாக்குறேன்ல! துள்ளித் திரியிற மீன்லருந்து விலாங்குமீன் வரை மாட்டாதான்னு வலைய விரிய வீசுறவுங்க அதிகமாகிட்டாங்க. இப்பிடியிருக்கிறப்ப நீங்க எடுத்துச் சொல்றது எப்படி சார் தப்பாகும்?”

“”பக்கத்து ஃப்ளாட் அனுராதாம்மாவுக்கு என்ன தேவை? வீட்டுக்காரர் கைநெறயச் சம்பாதிக்கிறாரு. நல்ல வசதி. இது பத்தாதுன்னு தம்மோட பேராசை வலைக்குள்ள மத்தவங்களையும் இழுக்கறது தப்பில்லையா? ஆசைப்படு – தப்பில்லை. பேராசைப் படாதே. அதுவுமில்லாமல நம்ம உழைப்பு இல்லாம வரக்கூடிய பொருள் நமக்கு மகிழ்ச்சி தராதுன்னு நம்புகிறவன் நான். ஓ.கே., பேசிக்கிட்டிருந்தா பேசிக்கிட்டேயிருப்போம். வீட்டுக்குக் கிளம்பலாம். பூட்டிக்கிட்டு வா! கார்ல இருக்கேன்.”

கையில் மடித்துப்போட்ட கருப்புக் கோட்டுடன் வேக நடைபோடுகிறான் இவன்.

ஜில்லென்று பூ மணத்துடன் வீசும் வேப்பமரக்காற்று முகத்தில் பட்டு மோதுகிறது; நின்று அதை உள்வாங்கிச் சுவாசித்துப் பின் நடக்கிறான் இவன்.

- தினமணி கதிர்

அகிலன் கண்ணன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:28 pm

வெடிக்கும் பட்டாசு!


சிறுகதைவெடிவெடிக்கும் பட்டாசு

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தன. இது ரேவதி அக்காவுக்கும், மாமாவுக்கும் தலை தீபாவளி. அவர்கள் நாளைக்கே வந்து விடுவதாக அம்மா சொன்னார்கள். அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் திளைத்தனர் சௌந்தரும், நித்யாவும்.

இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் ரெடிமேட் ஆடை எடுத்துக் கொடுத்தார் அப்பா. அதனை தனது தோழிகளிடம் காட்டி, “”நல்லா இருக்கா?” என நித்யா கேட்க, “”மிகப் பிரமாதம்” என தோழிகள் சொல்ல, மனதுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது நித்யாவுக்கு.

“”டேய்… சௌந்தர், பட்டாசு வாங்க வரலையா? நாளைக்கு பட்டாசுக் கடையில் கூட்டம் அதிகமாய் இருக்கும். நமக்கு வேண்டியதை வாங்குவது சிரமம். இப்போதே போய் வாங்கி வரலாம் வா” -வீதியில் மிதிவண்டியை நிறுத்திக் கொண்டு சௌந்தரை அழைத்தனர் தினேஷும், அருண்குமாரும்.

“”அம்மா… அம்மா… ப்ளீஸ், இப்பவே பணம் கொடுங்க. எனக்கும், நித்யாவுக்கும் பட்டாசு வாங்கி வந்து விடுகிறேன்.” தாய் சங்கரியிடம் கெஞ்சினான் சௌந்தர்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்ட சங்கரி, சௌந்தரிடம் பணத்தைக் கொடுத்து, “”அதிகமாய் பட்டாசு வாங்காதே சௌந்தர். நாளைக்கு வரும் மாமாவும் பட்டாசு வாங்கி வருவார். அதிக சத்தத்தோடு வெடிக்கும் பட்டாசுகளை வாங்காதே” அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

“”அண்ணா… இந்தா இது என்னுடைய லிஸ்ட்.” நித்யா தனக்குத் தேவையான பட்டாசு பட்டியலை நீட்ட, “”ரொம்ப உஷார் பேர் வழிதான் நீ.” சிரித்தபடியே அதை வாங்கிக் கொண்டு நண்பர்களோடு சைக்கிளில் சிட்டாய் பறந்தான் சௌந்தர்.

அன்று இரவு மணி ஏழு. நண்பர்கள் ஒவ்வொருவராய் சௌந்தரின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். தனது வகுப்பில் படிப்பவனும், நெருங்கிய நண்பனுமான பீட்டரை தீபாவளிக்கு அழைத்திருந்தான் சௌந்தர். அவனும் ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டான். நித்யாவும் தனது தோழியான ஆயிஷாவை அழைத்திருந்தாள். நண்பர்களின் கூட்டத்தால் வீடு களைகட்டியிருந்தது.

“அக்காவும், மாமாவும் நிறைய பட்டாசு வாங்கி வருவார்கள். அவற்றை தீபாவளியன்று வெடிக்கலாம். அதற்கு முன்னதாக நமது பட்டாசுகளை இன்றே வெடித்து முடித்து விடலாம்’ என சௌந்தர் திட்டமிட்டான்.

தாய் சங்கரி தீபாவளிக்கான இனிப்பு வகைகளை செய்வதில் முனைப்போடு ஈடுபட்டிருக்க, நித்யா தாய்க்கு உதவியாய் இருந்தாள்.

நண்பர்கள் புடைசூழ பட்டாசுகளை வெடிப்பதற்கு தயாரானான் சௌந்தர். முதலில் வரிசையாய் ஐந்து புஸ்வாணங்களை வைத்துக் கொளுத்தினான். அவை பிரகாசிக்கும் வெளிச்சத்தோடு வானோக்கி உயர்ந்து நட்சத்திரப் பூக்களாய் தரையில் விழுந்தன. உற்சாகத்தோடு ஆர்ப்பரித்தனர் நண்பர்கள். இந்த ஆர்ப்பரிப்பு, தெருவில் இருந்த மற்ற சிறுவர்களையும் கவர, அவர்களும் திரண்டு வந்து சேர்ந்து கொண்டனர்.

யானைக்கால் பட்டாசை வெடிக்கும் போது உண்மையிலேயே ஒரு “த்ரில்’லாகத்தான் இருந்தது. உருளையாய் இருக்கும் அந்தப் பட்டாசை தரையில் ஆடாமல் நிற்க வைத்து அதன் திரியில் சரியாய் நெருப்பு வைப்பதே ஒரு கலையாக இருந்தது.

திரியில் நெருப்புப் பிடித்து, லேசாக தீப்பொறிகளை அது சிதறிவிடத் தொடங்கும் போது அனைவரும் காதுகளைப் பொத்திக் கொள்ள, கண்கள் இமைக்காமல் அந்தப் பட்டாசையே பார்த்துக் கொண்டிருக்க, சில வினாடிகள் இடைவெளியில் “டமார்’ என்ற சத்தத்தோடு அது வெடிப்பது காதுகளைத் துளைக்கும் ஒரு பயங்கர அனுபவமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு பட்டாசை வெடித்து முடிக்கும் போதும் ஏதோ “அட்வென்ச்சர்’ செய்து முடித்ததைப் போல் ஒரு உணர்வு ஏற்பட்டது சௌந்தரிடம்.

சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கத்தி, ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்த தான் ஏதோ வீரவிளையாட்டுக் களத்தில் இருப்பது போலவும், அதில் தான் மட்டுமே வெற்றி வீரனாய் ஜொலிப்பது போலவும் ஒரு உணர்வு மேலிட அதுவே மிகுந்த துணிச்சலைக் கொடுத்தது சௌந்தருக்கு.

அடுத்து யானை வெடியை ஒரு கல்லின் மீது நிற்க வைத்தான். தனது நண்பனை வீட்டுக்குள் சென்று ஒரு தேங்காய் ஓட்டை எடுத்து வரச் செய்தான். அந்தத் தேங்காய் ஓட்டின் மேற்பகுதியில் ஒரு ஓட்டைப் போட்டு அந்த ஓட்டை வழியே, வெடியின் திரியை மேலே இழுத்துவிட்டு பட்டாசின் மீது கவிழ்த்து வைத்தான். திரியை தனது நகங்களால் கொஞ்சம் சுரண்டினான்.

“”டேய்… அப்படிச் செய்யாதே. அது ஆபத்தானது” என எச்சரித்தான் அருண்குமார்.

“”போடா, திரி நீட்டாய் இருப்பதால் பிடிப்பதற்கு நேரமாகிறது” என பதில் சொன்னான் சௌந்தர்.

“எதற்கு இவ்வளவு அவசரமாய் வந்து தேங்காய் ஓட்டை எடுத்துக் கொண்டு ஓடுகிறான்?’ மனதில் ஏதோ ஒரு எச்சரிக்கை மணி ஒலிக்க, அவசர அவசரமாய் தெருப்பக்கம் சங்கரி ஓடிவர, எதுவும் புரியாமல் தாயைப் பின் தொடர்ந்து ஓடி வந்தாள் நித்யா.

திரியை விரல்களால் சுரண்டிய சௌந்தர் ஒரு மத்தாப்புக் குச்சியைக் கிழித்து அந்தத் திரியில் காட்டிய அடுத்த வினாடி கல்லின் மீதிருந்த பட்டாசு கீழே கவிழ்த்துக் கொண்டு “படார்’ என வெடிக்க, “ஐயோ…’ என்ற அலறல் சத்தம். தரையில் சீறிப் பாய்ந்த பட்டாசு எதிரில் இருந்த வைக்கோல் போரில் சென்று ஒளிந்துக் கொண்டது.

எதிரில் வைக்கோல் போர் தீப்பிடித்து எரிய, இங்கே உள்ளங்கைச் சதை புண்ணாகி “ஐயோ… ஐயோ…’ என கதறிக் கொண்டிருந்தான் சௌந்தர்.

கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விட்டது. செய்வதறியாது சங்கரி திகைத்து நிற்க, மகள் நித்யா “”அம்மா… அம்மா…” என கத்தியபடி தாயின் முந்தானையைப் பிடித்து இழுத்தாள்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாய் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி வைக்கோல் போர் நெருப்பை அணைத்தனர்.

கையில் ரத்தம் சொட்ட வலியால் துடித்துக் கொண்டிருந்த சௌந்தரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கடைத் தெருவுக்கு சென்றிருந்த சௌந்தரின் தந்தை செய்தி அறிந்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

மயக்கம் தெளிந்த நிலையில் கண் விழித்துப் பார்த்தான் சௌந்தர். தாய் சங்கரி தலையில் கைகளை வைத்தபடி இன்னமும் விசும்பிக் கொண்டிருந்தார். நித்யாவின் கண்கள் அழுது அழுது வீங்கிப் போயிருந்தன.

தீபாவளிக்காக அழைக்கப்பட்டிருந்த பீட்டரும், ஆயிஷாவும் வருத்தம் தோய்ந்த முகங்களோடு அங்கே நின்றிருக்க, தலை தீபாவளிக்காக அக்காவும், மாமாவும் வந்து விட்டிருந்தனர்.

மனதில் குற்ற உணர்ச்சி மேலிட, அவர்களை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாய் இருந்தது சௌந்தருக்கு.

“”என்ன சௌந்தர்… கை இப்போ எப்படி இருக்கு?” விசாரித்தபடி உள்ளே வந்தார் மருத்துவர்.

“”இப்போ வலி கொஞ்சம் பரவாயில்லை டாக்டர்” என அவரைப் பார்த்து சொன்னான் சௌந்தர்.

“”முன்பின் யோசனை இல்லாத உன்னுடைய விளையாட்டுத்தனமான செயல்பாடு ஏற்படுத்தி இருக்கும் விளைவுகளைப் பார்த்தாயா? தீபாவளி அனைவரையும் மகிழ்வோடு இருக்கச் செய்யும் ஒரு அற்புதப் பண்டிகை. இதோ உன்னைச் சுற்றியிருப்பவர்களின் முகத்தைப் பார். அந்த முகங்களில் இருக்க வேண்டிய மகிழ்ச்சி ரேகைகள் மறைந்து போனதற்கு யார் காரணம்?

ஆபத்து எனத் தெரிந்தே நீ தவறு செய்தாய். அதனால் நீ அனுபவிப்பது ஒரு விதத்தில் நியாயம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதோ இந்தத் தம்பதிகளுக்கு வாழ்வில் ஒரு முறைதானே தலை தீபாவளி. அவர்களின் குதூகலத்தையும், உனது பெற்றோரின் மகிழ்ச்சியையும், நண்பர்களின் சந்தோஷத்தையும் உனது அஜாக்கிரதையினால் உருக்குலையச் செய்தது எந்த விதத்தில் நியாயம்?” குடும்ப மருத்துவராய் இருக்கவே அக்கறையோடு சௌந்தரைப் பார்த்துக் கேட்டார் டாக்டர்.

பதில் சொல்ல வழியின்றி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தான் சௌந்தர்.

“”உனக்கு ஏற்பட்டுள்ள காயம் ஓரிரு நாளில் குணம் அடைந்து விடும். எனவே, எதிர்வரும் தீபாவளியை நீ நன்றாகவே கொண்டாடலாம். நல்வாழ்த்துகள்!” என்று கூறிவிட்டுச் சென்றார் டாக்டர்.

அன்று தீபாவளி. அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியோடு தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் சௌந்தரும், நித்யாவும். அவர்களிடம் வந்த சௌந்தரின் மாமா, தான் கொண்டு வந்த பட்டாசுப் பெட்டியைப் பிரித்தார். அதில் வகை வகையாய் ஏராளமான பட்டாசுகள். அதிலிருந்து பெரிய யானை வெடி ஒன்றைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, “”வா… சௌந்தர் வெளியில் போய் இதை வெடிக்கலாம்” என்று அழைக்க, “”ஐயோ… என் வாழ்நாளில் இனி வெடிக்கும் பட்டாசுகளைக் கையால் கூட தொடமாட்டேன்” என அங்கிருந்து சௌந்தர் ஓட ஆரம்பிக்க, அனைவரின் முகத்திலும் சிரிப்பலைகள். தீபாவளியான குதூகலம் அங்கே மீண்டும் குடிகொண்டது.

-தினமணி கதிர்

மு.நடராசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:29 pm

சிறுகதை : ழகரக் கொலை
--------------------

சினிமா ஸெட் கெட்டது – முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன.

“ஒராள் ஒராள்’ என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும். ஏனென்றால் கட்டிலில் ஒருத்தர்தான் – “ழ’ பித்தன் என்ற பெயர் கொண்ட கீழைப் பெருமழை எழிலெழு கிழவோன் – மட்டும்தான் அமர்ந்திருந்தான்.

இன்னும் ஒருத்தருக்காக கட்டில் காத்திருந்தது. அந்த ஒருத்தர் மல்லிகா.

அவன் தேர்ந்தெடுத்த அழகு தேவதை அவள். முத்து பவளத்தில் ஒளிந்திருக்கும் நீரோட்டம் போல அவள் மேனியில் எழில் ஓட்டம். இளமைக்குத் தக்க உயரம், உடற்கட்டு, அணிகள்.

யார் பார்த்திருக்கிறார்கள் ரம்பையையும், ஊர்வசியையும்.

இவள் மாதிரி அவர்கள் இருக்கக்கூடும்.

வெகு நேரம் நின்றுகொண்டே இருந்தவள் வாய் திறந்தாள். “”பளம் சாப்பிடுறீங்களா.”

திடுக்கிட்டான். “”ப்ளம்மா?”

“”இல்லை. பளம். ஒரு ஆப்பிள் பளம் நறுக்கட்டுங்களா?”

அவன் முதலில் ஏதோ ஒரு பள்ளியில் தமிழாசிரியராக இருந்தபோது அவனுக்கு “ழ’ வாத்தியார், ஊதுவத்தி வாத்தியார் என்ற பெயர்கள் உண்டு. இது மல்லிகாவுக்கு தெரியுமோ தெரியாதோ.

பள்ளி ஆசிரியருக்கு மாணவர்கள் சூட்டும் கேலிப் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்குமா என்ன.

அவள் மறுபடியும் கேட்டாள். “”எந்தப் பளம்?”

“”பழம் இருக்கட்டும். இன்னிக்கு என்ன கிழமை?”

“”வியாளக் கிளமைங்க.”

“”வியாழக் கிழமை! ரொம்ப சரி. போன வியாழன்தானே பிள்ளையார் சதுர்த்தி?”

“”ஆமாங்க.”

“”உனக்குக் கொழுக்கட்டை பிடிக்குமா?”

“”கொளுக்கட்டைங்களா? பிடிக்கும்.”

“”என்னென்ன வகை இருக்கு கொழுக்கட்டையிலே?”

“”எள்ளுக் கொளுக்கட்டை, உளுந்து கொளுக்கட்டை,

வெல்லக் கொளுக்கட்டை.”

“கழுகுகளுக்கு கொழுக்கட்டை பிடிக்குமா?”

ஒருத்தருடைய நடத்தையையும் பழக்க வழக்கத்தையும் உறவையும் துவங்குமுன் அவர்களை சோதனை செய்வான். நகர சோதனை மாதிரி “ழ’கர சோதனை. சாதாரணமானவர்களிடமே சோதனை நடத்துபவன் மனைவியாகிவிட்டவளிடம் நடத்தமாட்டானா?

மனையாளுக்கு ழகரம் எவ்வளவு தூரம் வருகிறது என்பதை அவனுடைய கெட்டிக்காரத்தனம் சோதிக்கத் துவங்கியது.

“”கேட்டனே, கழுகுகளுக்கு கொழுக்கட்டை பிடிக்குமா?” மறுபடியும் கேட்டான்.

“களுகுங்களுக்கா? வந்து… வந்து தெரியலீங்க. நான் களுகுங்களுக்கு கொளுக்கட்டை போட்டுப் பார்த்ததில்லே.”

“”கிழவி கிழவனுங்களுக்குக் கொழுக்கட்டை சாப்பிட ரொம்பப் பிடிக்குமில்லையா?”

“”கிளவன் கிளவிங்கள்னு எங்க வீட்டிலே யாருமில்லே. தாத்தா பாட்டியெல்லாம் கிராமத்திலே இருக்காங்க.”

“”ரொம்ப நேரமா நிற்கிறாயே உட்காரு. நான் நேரம் கழித்து வந்ததிலே உனக்கு வருத்தமா?”

“”நீங்க நேரம் களிச்சி வரலீங்களே. சரியாகத்தானே வந்தீங்க.”

“”வீட்டையெல்லாம் ஒழிச்சு வைப்பியா? அது பிடிக்குமா உனக்கு?”

“”நல்லா ஒளிச்சி வைப்பேனுங்க.”

“”நீ ஒளிச்சி வெச்சிட்டால் நான் எப்படிக் கண்டுபிடிக்கிறது?”

“”ஒளிச்சி இல்லீங்க. ஒளிச்சி..”

“”அதாவது ஒழிச்சி..”

“”ஆமாங்க ஒளிச்சி..”

பல்லைக் கடித்துக் கொண்டான்.

முதலிரவு அறை அவனைப் புழுங்கச் செய்தது. மல்லிகா பாஷையில் புளுங்கச் செய்தது.

“ழ’கரம் வராத பையனின் நாக்கில் அவன் ஊதுவத்தியால் சுட்டுப் பெரிய கலவரமே கீழைப் பெருமழையில் ஏற்பட்டு, விசாரணை, ஸஸ்பென்ட் அது இது என்று அமர்க்களமாகி கல்வி உயர் அதிகாரி கணேசனார் மட்டும் அவனை ஆதரிக்காமலிருந்திருந்தால் அவன் வேலையும் போய், சிறைத் தண்டனையும் அடைந்திருப்பான்.

“”உனக்கு “ழ’வைத் தவறாக உச்சரித்தால் அவ்வளவு கோபம் வருமா? உன்னைப் பாராட்டுகிறேன்” என்று மேலதிகாரி கணேசனார் அவனைச் சிக்கலிலிருந்து விடுவித்து அவனை மேலே மேலே உயர்த்தினார்.

அதெல்லாம் ஞாபகம் வந்தது. சிந்தனை இறுக்கமாயிற்று.

வாழ்க்கை பூராவும் “ழ’ சப்தத்தை விகாரப்படுத்துகிறவளுடனேயே கழிக்க முடியுமா?

வாழ்க்கையை மல்லிகா வாள்க்கை என்றுதான் சொல்லுவாள். கழிக்க என்பது களிக்க. வாழைப்பழங்கள் வாளைப்பளங்களாகத்தான் ஆயுளுக்கும் இருக்கும்.

அவளுடைய பளக்கம் ஐயோ இப்போதே பழக்கம், பளக்கமாகிவிட்டதே.

அவளைக் கழித்துக் கட்டுவதே புத்திசாலித்தனம். என்ன கலவரம் வந்தாலும் நஷ்டம் ஏற்பட்டாலும் குத்து வெட்டு அடி உதை விழுந்தாலும் விழுந்து விழுந்ததாக இருக்க வேண்டும். அது ஒரு நாளும் விளுந்ததாக ஆகக் கூடாது. அதுவும் தன் வீட்டுக்குள்ளேயே “ழ’ கொலை நிகழ்வதை அவனால் சகிக்க முடியாது.

கலவரமில்லாமல் சாமர்த்தியமாகக் கழற்றிக் கொள்ள வேண்டும்.

ஓரிரு மாதம் சகித்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு

ஏதாவது பிரச்னை கிளப்பி விவாகரத்து.

“ழ’வைக் கெடுப்பவர்களுக்கு மன்னிப்பே தரக்கூடாது.

“பால் வெச்சு ரொம்ப நாளி ஆவுதுங்க.”

“”ரொம்ப நாளி ஆவுதா? ஆகட்டும் ஆகட்டும், பழியை உன்மீது போட்டுவிட மாட்டேன். பயப்படாதே. நான் எந்த ஊர்க்காரன் தெரியுமா?”

“”தெரியும்”

“”சொல்லு பார்க்கலாம்.”

“”கீளைப் பெருமளை.”

அவன் நெஞ்சிலே கொள்ளியைச் செருகினாற்போலிருந்தது. அவன் ஊரின் தலையிலும் மேற்படி கொள்ளியையே வைத்ததுபோல் உணர்ந்தான். எழிலெழு கிழவோன் என்ற தன் பெயரை அவளால் சத்தியமாக ஆயுளில் சொல்ல முடியாது. எளிளெளு கிளவோன் என்று அவள் கொலை செய்யாதிருக்க அவள் வாயில் நுழைகிற மாதிரி சின்னதாக “ழ’ வராத பெயராக ஒன்றை அவன் சீக்கிரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அவனுடைய மனைவி அழகாக இருந்தால் மட்டும் போதாது. “ழ’ உச்சரிக்கத் தெரியாதவளோடு அவனால் அமைதியாக தாம்பத்தியம் நடத்த முடியாது முடியாது முடியாது.

பாலைத் தந்தாள்.

“”தமிழே! நீ வாழ்க! நீடூழி நீ வாழ வேண்டும்!” என்று கூறியவாறு அதை வாங்கி வெறுப்புடன் குடித்தான்.

விரல்களும் கையும் மெய்யும் அழகாக எழில் ஓவியமாகத்தான் இருக்கிறாள்.

ஆனால் “ழ’?

இத்தனை அழகியிடம் வெறுப்புக் கொள்ளலாகாது.

அவள் தமிழே பேசாவிட்டால் அவனுக்கு வெறுப்பு வராது.

அவளிடம் கேட்டான். “”உன்கிட்டே ஒரு வேண்டுகோள். தப்பாக எண்ணாதே.”

“”சொல்லுங்க.”

“”நீ தமிழே பேச வேண்டாம். ஓரளவுக்கு ஆங்கிலம் தெரியுமல்லவா? எனக்கும் ஓரளவு புரியும். ஆங்கிலத்திலேயே நீ பேசு. கஷ்டப்படுவாயோ.”

“”ஒரு கஷ்டமுமில்லை. இங்கிலீஷில் சரளமாகப் பேசுவேன்.”

“”சந்தோஷம். வேறு என்ன மொழி தெரியும்?”

“”இந்தி பேசுவேன். ராஜபாளையத்திலிருந்தபோது அங்கு சமஸ்கிருதம் கற்றேன். வடமொளியில் நன்றாகப் பேசுவேன். திராவிட மொளிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லாம் பேச, எளுத வரும்.

பெங்காளி படிப்பேன். எளுதுவேன் – தாகூரை ஒரிஜினலாக ரசிக்க பெங்காலி கற்றேன். டிப்ளமோ ஹோல்டர்.

மொளிகள் கற்பதுதான் என் பொளுது போக்கு.”

அவனுக்குத் தலை சுற்றியது. தமிழும், ஓரளவு ஆங்கிலம் மட்டுமேதான் அவனுக்குத் தெரியும். அவளோ சகல பாஷா பண்டிதையாக… சும்மா அளக்கிறாளா?

“”எங்கே, ஒரு வாக்கியம் சொல்கிறேன். நீ அதை உனக்குத் தெரிந்த எல்லா மொழியிலும் எழுதிக் காட்டுப் பார்ப்போம்.”

அவள் பேனாவை எடுத்தாள். பேப்பரை எடுத்தாள். “”சொல்லுங்க.”

சொன்னான். “”இனிய ஆச்சரியத்தை என் கணவர் வெளிப்படுத்தினார்.” இதையே இந்தி, கன்னடம், தெலுங்கு. பெங்காலி, பிரெஞ்ச், ஜப்பான் – உனக்குத் தெரிந்த எல்லா மொழியிலும் எழுது பார்ப்போம்.”

“”நேபாளிளீஸ்கூட வரும்.” எல்லாவற்றையும் இரண்டு நிமிஷத்தில் எழுதி அவனிடம் ஒப்படைத்தாள்.

அவனுக்கு படிக்கத் தெரிந்தால்தானே.

அவளது வித்தையின் முன் மானசீகமாகச் சுருண்டு விழுந்தான்.

“”எப்படி இத்தனை மொழி இந்தச் சின்ன வயசில்?” அவளை மிருதுவாக அணைத்துக் கொண்டான்.

“”மொளிகள் கற்பதுதான் என் பொளுது போக்கு!”

இப்போது “ழ’கரம் ளகரமாகக் கொலை செய்யப்பட்டாலும் அவனுக்கு ஏனோ ரத்தம் கொதிக்கவில்லை. ஏனோ என்ன ஏனோ?

மரியாதை தந்து தலை வணங்கினான்.

இவ்வளவு மொழி கற்ற இந்த சரஸ்வதி தேவியால் “ழ’ வை உச்சரிக்கக் கற்றுக்கொள்ள முடியாதா என்ன?

பன்மொழிப் புலவரான மனைவிக்கு அந்த விதத்தில் தான் ஆசானாகப் போவதில் அவனுக்குப் பெருமையே இப்போது ஏற்பட்டது.

“”நான்தான் – இந்தக் கீழப் பெருமழை எழிலெழு கிழவோன்தான் உனக்கு இனிமேல் ஆசிரியர்?”என்று அவள் காது மடலில் கிசுகிசுத்தான்.

குறும்பாக ஏதோ சொல்கிறான் என்று நினைத்து நிதானத்துடன் அவள் புன்னகைத்தாள்.

- தினமணி கதிர்

ஜ.ரா. சுந்தரேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:31 pm

சிறுகதை : தகுதி

----------------------------
ரோஜாப்பூ பந்தாய் குழந்தைக் கம்பித் தொட்டிலில் கிடந்திருந்தது. பிறந்து இரண்டு மணிநேரமே ஆகியிருந்தது. ரத்தக் கவிச்சியைப் போக்க நன்றாகக் குளிப்பாட்டி எடுத்துத் திண்ணமாய் பவுடரைப் பூசிவிட்டிருந்தாள் நர்ஸ். இன்னும் கண் திறக்கவில்லை. உதடுகள் இறுக்கமாய் ஒட்டிக்கொண்டுக் கிடந்தன. தான் பிறந்திருப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி முகத்தில் அலட்சியம் தொனிக்க அசைவின்றிக் கிடந்திருந்தது. ஜீவிதத்தின் சாட்சியாய் நடுவயிறு ஏறி இறங்க,சுவாசத்தை மட்டும் நாசிகள் வழியே சுவாரஸ்யமாய் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

தொட்டிலின் அருகில் நின்று குழந்தையை இமைகொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் அமுதவல்லி. அவளின் அடிவயிறு “சில்’லென்றுக் குளிர்ந்திருந்தது. கல்யாணம் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு குழந்தைப் பாக்கியத்திற்குக் கூட இடம் கொடுத்திராதிருந்தது அவள்வயிறு. இப்போது தன் தங்கைக்குக் குழந்தைப் பிறந்திருந்தாலும் அதைத் தான் பெற்றிருந்ததைப் போல நினைத்து சந்தோசப்பட்டாள். வறண்டப் பூமியில் மழைப் பெய்துக் குளிப்பாட்டியது போன்ற புத்துணர்ச்சி. கட்டிலில் படுத்திருந்த மலர்க்கொடியின் மீது நெகிழ்வாய் அவள் பார்வைத் தாவியது. அவளுக்கும் இன்னும் மயக்கம் தெளிந்திருக்கவில்லை. காற்றுப்போன பலூன் மாதிரி வெறுமையாகக் கிடந்திருந்தாள். முகத்தில் வேதனையின் மெல்லிய ரேகைகள்,மின்னல் வெட்டுக்களாய் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. காலிலிருந்துத் தொடங்கி கழுத்துவரைப் போர்த்தியிருந்த வெள்ளைக் கச்சை அவளை ஒரு சிலையாகக் காட்டிக் கொண்டிருந்தது. மல்லாக்கப் படுக்க வைத்திருந்தார்கள் “சிலை’யை. ஒரு குழந்தைக்குப் பிறப்புத் தந்திருந்த உணர்வில்லாமல் இறுக்கமாகக் கிடந்திருந்தது சிலை.

“அய்… தங்கச்சிப் பாப்பா”

கருணாநிதியை முந்திக்கொண்டு ஓடிவந்த அவனின் அண்ணன் பிள்ளைகள் குழந்தையைப் பார்த்ததும் கைதட்டிச் சிரித்தார்கள். டவுசரும் டீ-சர்ட்டும் அணிந்திருந்த சிறுவனும்,குட்டைப் பாவாடையும்,”தொளதொள’வென்று மேல்சட்டையும் அணிந்திருந்தச் சிறுமியுமே அண்ணனின் பிள்ளைகள். தொடர்ந்து அண்ணனும் அண்ணியும்,அப்பாவும்,அம்மாவுமாகச் சேர்ந்துப் பெருமிதத்துடன் உள்ளே வந்தனர். அவர்களைக் கண்டதும் தன் பார்வையை வெட்கப்பட்டுத் தாழ்த்தியவாறு நாசூக்காய் நகன்றுகொண்டு நின்றாள் அமுதவல்லி.

“நம்ம அம்மாவை மாதிரியே பேபி இருக்குலாடா,கருணா?”

“ஆமா… ஆமாண்ணே”

“நல்ல கவனிச்சுப் பாருங்க… அப்பாவோட முகச்சாடைத் தெரியுது”

“இல்லம்மா. உங்க முகச்சாடைதான்”

“அடிச் சக்கைன்னேனாம்… அத்தைப் “பிகு’பண்றதப் பாருங்களேன்”

தங்கள் குடும்பத்திற்குப் புது வாரிசு ஒன்று வந்த மகிழ்ச்சியில் மிகவும் சந்தோசப்பட்டார்கள் அவர்கள். அவர்களின் சந்தோசத்தில் கலந்துகொள்ள மனமில்லை அமுதவல்லிக்கு. மலர்க்கொடிக்குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள். அவர்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது மாதிரி பார்வையை மலர்க்கொடிமேல் படரவிட்டிருந்தாள். ஆயினும் அவளின் காதுகள் அவர்கள் சிதறியிருந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ளாமலில்லை. தன் இதயத்தில் சன்னமாய் கீறல் விழுந்திருந்ததை உணர்ந்தாள். எட்டு வருடங்களுக்கு முன்னால் அநியாயமாய் மரித்துப் போயிருந்த தன் உயிருக்கு உயிரான அம்மாவின் மறுபிறப்பாகவே குழந்தையை நினைத்திருந்தாள் அவள்.

கருணாநிதியின் குடும்பத்தார் அதை வேறு விதமாய் பெருமையடித்துக் கொண்டதில் மனம் கலவரப்பட்டுப் போயிருந்தது அவளுக்கு. சிறுவயதிலே விதவையாய் ஆகியிருந்த அம்மா, எத்தனைச் சிரம்ப்பட்டு அவர்கள் இருவரையும் வளர்த்திருந்தாள். காடுகரைகளில் கூலி வேலைகள் பார்த்து அமுதவல்லியையும் மலர்க்கொடியையும் மேல்நிலைப் பள்ளி வரையிலும் படிக்க வைத்துக் கரையேற்றியிருந்தாள். அமுதவல்லியின் திருமணம் வரைக்கும்தான் அம்மாவின் உயிர் நிலைத்திருந்தது. மலர்கொடிக்கு வாழ்க்கையை அமைத்துத் தந்தது,அமுதவல்லியும் அவள் கணவனும்தான். குழந்தையில்லாது போயிருந்த அவர்களுக்குக் குழந்தையாகிப் போயிருந்தாள் மலர்க்கொடி. கல்யாணமாகி பத்து வருடங்களாகியும் தங்கள் கைகளில் ஒரு குழந்தைப் பாக்கியம் தவழந்திராதிருந்த வெறுமமையை மலர்க்கொடியைச் சீராட்டுவதன்மூலம் நிறைவுச் செய்து கொண்டிருந்தார்கள் அவர்கள். வங்கிப் பணியிலிருந்த கருணாநிதி தன் குடும்பத்தாருடன் மலர்க்கொடியைப் பெண் கேட்க வந்ததில் பெரும்மகிழ்ச்சி அவர்களுக்கு. செலவு அதிகமானதைப் பற்றிக் கவலைக் கொள்ளவில்லை. தரிசாய்க் கிடந்த சிறிய நிலத்தை விற்றும், முகம் தெரிந்தப் புண்ணியவான்களிடம் கடன்களை வாங்கியும் ஊரே பொறாமைப் படும்படி கல்யாணத்தை நடத்தி வைத்திருந்தார்கள்.

இரண்டொரு மாதங்களில் மலர்க்கொடி கரு தரித்துக் கொண்டதில் இதயம் கொள்ளாத மகிழ்ச்சி அவர்களுக்கு. மாதாமாதம் ஊரிலிருந்து வந்துப் பார்த்துவிட்டுப் போனார்கள். தானே கரு தரித்துக்கொண்டது போன்ற சந்தோசம் அமுதவல்லிக்கு. பிரவசத்துக்கு ஒரு மாதம் மீதமிருந்த நாட்களில் மலர்க்கொடிக்கு உதவியாய் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

“என்னங்க எல்லாரும் சும்மாப் பார்த்துகிட்டு நிக்கிறிங்க? பேபிக்கு சேனைக் கொடுக்க வேண்டாமா? சீனி வச்சிருக்கீங்களா?”

“இல்லம்மா”

“வென்னீ”

“இப்போ வாங்கிட்டு வந்திர்றேம்மா”

“போங்க. மொதல்ல அதச் செய்யுங்க. எல்லாரும் இப்படிக் கூட்டம் போட்டுக்கிட்டு நின்னா பெரிய டாக்டர் வந்து எங்களைத்தான் சத்தம் போடுவாங்க.”

எல்லாரும் சலசலத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்கள். அமுதவல்லி மட்டும் ஃப்ளாஸ்க்கைத் தூக்கிக் கொண்டு துரித வேகத்தில் படிகளில் இறங்கிக் கடைத்தெருவுக்கு ஓடினாள். மருத்துமனையின் வாசலையொட்டிக் கிழக்குப் பக்கத்தில் தேனீர்க்கடை இருந்தது. சிமெண்டுத் திண்டின்மேல் பாறாங்கல் மாதிரி ஏற்றியிருந்த பாய்லரிலிருந்து அடர்ந்த மேகங்களாய் புகை மூட்டங்கள் மேலேறிக் கொண்டிருந்தன. நடைப்பாதையில் நின்றே தேனீர் வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தனர் மனிதர்கள். அந்தக் கொடும் வெயிலிலும் ஆவிப் பறக்கும் தேனீரை அவர்கள் ஆசைஆசையாய் ருசித்துக் குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவள் ஆச்சிரியப்பட்டாள். தேனீர் போட்டுக் கொண்டிருந்த ஒடிசலான மனிதரிடம் ஃப்ளாஸ்க்கை நீட்டி வென்னீர் வாங்கிக் கொண்டாள். குழந்தைக்கு என்றதும் தயக்கமில்லாமல் வெந்நீர் கிடைத்ததில் அவளுக்குப் பெரும் மகிழ்ச்சியாய் இருந்தது.

சாலையின் எதிர்ப்புறம் பலசரக்குக் கடைகள் வரிசையாக நின்றிருந்தன. உதிரிகளாய் வந்த சனங்கள் கூட்டமாய் நின்று வாங்குவதும்,வாங்கியப்பின் சருகளாய் சிதறிப்போவதுமாக சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாலையின் அக்கரைக்குப் போவதைப் பெரும்சிரமமாக உணர்ந்தாள். சாலையைக் கிழித்துக்கொண்டு வாகனங்கள் அதிக வேகத்தில் பறந்துப்போயின.

கணப்பொழுதில் கிடைத்த அவகாசத்தில் சாலையின் மறுகரையை அடைவதற்குள் அவள் உயிர் போய்விட்டுத் திரும்பி வந்தது போலிருந்தது. கொஞ்சம்தான் முந்தியிருந்தாள். ஒருநொடி தாமதித்திருந்தால்கூட எமகாதகனாய் உறுமிக்கொண்டு வந்த ஒரு டேங்கர் லாரிக்குள் அகப்பட்டுக் கூழாகச் சிதைந்திருப்பாள்.

அவள் இடுப்பில் செருகியிருந்த சுருக்குப் பையில் பணம் இருந்தது. கசங்கியப் பத்து ரூபாய் தாளைக் கவனமாய் உருவியெடுத்து கடைக்காரரிடம் தந்தாள். நூறு மில்லிச் சீனியைத் தாள் பொட்டலத்தில் போட்டுத் தந்தார் கடைக்காரர். பொட்டலத்தை வாங்கி,கைப்பிடிக்குள் பதுக்கிக் கொண்டாள். மீதமாய் கிடைத்த சில்லரைக் காசுகள் சுருக்குப் பைக்குள் சரிந்தன. மீண்டும் பதற்றத்துடன்தான் எதிர்ப்புறத்தைக் கடக்க வேண்டியிருந்தது. மருத்துவமனையின் வாசலை மிதிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.

தொழிற்சாலைகள் மிகுந்த அந்த நகரத்தில் பிரசித்திப் பெற்றிருந்த மருத்துவமனை அது. மூன்று அடுக்குகளில் அதன் பிரமாண்டத்தை,உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. சகலவித நோய்களுக்கும் சிகிச்சைகள் அளிக்கும் மருத்துவர்களையும், கருவிகளையும் தன்னகத்தே வைத்திருந்தது. நகரில் பசையுள்ளப் பணக்காரர்களும், பணியாளர்களும், அந்த மருத்துவமனையையே நாடினார்கள். காசு செலவழித்தாலும் பரவாயில்லை, சீக்கிரமாய் நிவாரணம் தருவேன் என்ற நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தது அது.

மலர்க்கொடிக்குத் தலைப்பிரவசம் என்பதால் மிகவும் அக்கறையுடன் அந்த மருத்துவமனையில் கொண்டுவந்துச் சேர்ந்திருந்தான் கருணாநிதி. வங்கியில் காசாளர் பணி,அவனுக்குக் கைநிறையச் சம்பளம் தந்தது. அவனின் அப்பாவும் அனல்மின் நிலையத்தில் தலைமை எழுத்தராய் பணிசெய்து ஓய்வுப் பெற்றிருந்தார். அண்ணன் உப்பளங்களை வைத்து நடத்திக் கொண்டிருந்தான். வறுமையை அனுபவித்ததிராத நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குடும்பம். அமுதவல்லியின் குடும்பத்தைப் போல அரக்கப்பரக்கப் பாடுபட்டு,வயிற்றைக் கழுவி,வாழ்க்கைக்குச் சேமித்துவைக்கும் எளிய குடும்பம் அல்ல. மலர்க்கொடி அழகாய் இருந்ததும்,அமுதவல்லியிடம் கொஞ்சம் பணம் இருந்ததுமே கருணாநிதியிடம் கைப்பிடித்துக் கொடுக்க தோதுவாகப் போயிருந்தன.

அவர்களின் மேட்டுக்குடி வாசம் அமுதவல்லியின் கிராமத்துக் காற்றை அலட்சியப் படுத்தியே ஒதுக்கியது. மனிதர்களில் சேர்க்கையில்லை என்கிறப் பாவனையில் அமுதவல்லியையும், அவளின் கணவனையும் பரிசாக இழையில் தொங்கிக்கொள்ள வைத்தது. அமுதவல்லியும் அவர்களிடம் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. அவர்களைக் காணும் தருணங்களில் வெறுமையுடன் புன்னகைத்துக் கொள்வாள். வார்த்தைகளை விரயமாக்கிக் கொண்டதில்லை. விசாரிப்புக்கு உட்படும் நேரங்களில் மட்டும்,”ஆமா இல்லை’ என்ற அளவானப் பதில்களுடன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டாள், தன் வயிற்றில் இன்னும் ஒரு புழு பூச்சிகூடப் பற்றிக் கொள்ளாதிருந்தால்தான் தன்னை அவர்கள் அருவருத்து ஒதுக்குகிறார்களோ என்று வேதனையாக நினைத்துக்கொள்ளத் தோன்றியது அவளுக்கு. அதை நிரூப்பிப்பது போலவே சில சமயங்களில் கருணாநிதியின் அம்மாவும் அண்ணியும் அமுதவல்லியின் காதுபடவே கேலிப்பண்ணிச் சிரிருத்திருந்தார்கள். “குழந்தைப் பாக்கியம் இல்லாதவள் எப்படி ஒரு பிள்ளைத் தாய்ச்சிக்கு ஒத்தாசைப் பண்ணப் போகிறாள்?’ என்று வக்கணையாய் வாயடிதிருந்தார்கள்.

அமுதவல்லிக்குத் தன் தங்கையின் சுகமே பிரதானமாகப்பட்டது. பிரவசம் என்பது மறுபிறவி மாதிரி என்று என்று எப்போதோ அவர்களின் அம்மா பேச்சுவாக்கில் சொல்லியிருக்கிறாள். அமுதவல்லியால் மலர்க்கொடியைத் தனியே தவிக்க விட்டுவிட்டு இருந்துவிட முடியாதிருந்தது. கருணாநிதியின் குடும்பத்தார் எல்லோரும் ஒரே வீட்டில் முடங்கிக் கிடந்ததால் அவர்கள் பாய்ச்சியக் கணைகளின் வலிகளைத் தவிர்க்க முடியாமல் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. கருணாநிதி மட்டும் அவர்களிடமிருந்து கொஞ்சம் விதிவிலக்காய் தெரிந்தான் அமுதவல்லிக்கு. அவன் அவளிடம் அணுசரனையாய் நடந்து கொண்டதில் சற்று ஆறுதல் கொண்டிருந்தாள். அவனும் அவளின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளைச் சில நேரங்களில் சிறந்த ஆலோசனைகளாக ஏற்றுக் கொண்டிருந்தான்.

அறைக்கு வெளியே எல்லோரும் கலகலப்பாய் பேசிக்கொண்டு நின்றிருந்தினர். வராந்தாவின் சந்தடியில் அவர்களின் குரல்களே தனி முழக்கங்களாய் கேட்டுக் கொண்டிருந்தன. சிறுவர்கள் இருவருக்கும் விளையாட்டுக் களமாய் போயிருந்தது வராந்தா.

வேர்க்க விறுவிறுக்க அமுதவல்லி வந்துக் கொண்டிருந்தாள்.

“என்ன வென்னியும் சீனியும் வாங்கியாச்சா?” பரிகாசம் இழையோடக் கேட்டாள் கருணாநிதியின் அம்மா. சதைக் கோளமாய் தொங்கிய அவள் முகப்பரப்பில் மிதப்பின் சாயல் மின்னியது.

“ஆமாஙக” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிக்கொண்டே விசைக்கூட்டிய எந்திரமாய் அறையை நோக்கி வேகமாய் நடைப்போட்டாள் அமுதவல்லி.

மலர்க்கொடி விழித்திருந்தாள். இமைகளை முழுவதும் விரித்துத் திறந்துகொள்ள முடியாத கிறக்கத்தில் மேம்போக்காகப் பார்த்தாள். அவளின் தலைமாட்டில் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்த கருணாநிதி அமுதவல்லியைக் கண்டதும் நாகரிகம் கருதி அவசரமாய் எழுந்து நின்றான்.

“வாங்கிட்டு வந்திட்டிங்களா அண்ணி?”

“ஆமாங்க.”

மலர்க்கொடியின் பார்வை இப்போது அமுதவல்லியின் கண்களைச் சந்தித்தது. கருணையும் பாசமும் ததும்பியக் கண்கள். ஓட்டமாய் வந்திருந்ததில் அவள் முகத்தில் வேர்வையின் ஊற்றுக்கள் பொங்கி வழிந்தபடி இருந்தன. சதா நேரமும் மலர்க்கொடியின் நன்மைக்காக ஓய்வு ஓழிச்சலில்லாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அக்கறையின் முழுவடிவம்.

வறட்சியில் ஒட்டியிருந்த தன் உதடுகளைச் சிரமப்பட்டுத் திறந்தாள் மலர்க்கொடி. “என்னக்கா?”

“கொழந்தைக்குச் சேனக் குடுக்கணுமில்லாம்மா? அதான் வென்னியும் சீனியும் வாங்கிட்டு வந்திருக்கேன்.”

குழந்தை இன்னும் விழித்திருக்கவில்லை. தரையில் வரைந்த ஓவியமாய் அசைவின்றியே கிடந்திருந்தது. அதன் உதடுகள் மட்டும் ஈரத்துக்காக தவித்ததுபோல மேலும்கீழும் காற்றைப் பிசைந்தன.

அமுதவல்லி சன்னமாய் அதிர்ந்து போனாள். “குழந்தைக்குப் பசிக்குதுப் போலம்மா. சீக்கிரம் சீனிய கலக்கிக் குடுக்கணும். நர்ûஸக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

அவளை அலைய வைக்கவில்லை நர்ஸ். பணியின் நிமித்தம் தற்செயலாக உள்ளே கொண்டிருந்தாள்.

“வாங்கிட்டு வந்தாச்சா? தம்ளர்லக் கொஞ்சமா வென்னீர் எடுத்து அதுக்குள்ள சீனிப்போட்டுக் கலக்குங்க.”

மேசைமேல் தனித்திருந்த தம்ளரைக் கையிலெடுத்தாள் அமுதவல்லி. அதை வென்னீர் விட்டுக் கழுவி வாஷ்பேஷினில் நீரைக் கொட்டினாள். மீண்டும் சிறிதளவு வென்னீரால் தம்ளரின் கால் பகுதியை நிறைத்தாள். பொட்டலத்தை அவிழ்த்து,சொற்ப அளவில் சீனியை அள்ளியெடுத்து வென்னீருக்குள் போட்டாள். கொஞ்சநேரம் தம்ளரைக் குலுக்கிவிட்டுப் பார்த்தபோது வென்னீருக்குள் சீனி முழுவதுமாய் தன் உருவத்தை இழந்திருந்தது தெரிந்தது.

பாந்தமாய் குழந்தையைத் தூக்கி மடியில் சாய்த்துக் கொண்டு ஸ்டூலில் அமர்ந்தாள் நர்ஸ். குழந்தை இப்போது நெளிந்து கொடுத்தது. பலநாள் உழைப்பின் அசதியைப் போக்கும் பாவனையில் மிகவும் சிரமப்பட்டு உடலை அசைத்தது. அதன் உதடுகளிலிருந்து சன்னமாய் அழுகுரல் வெளிப்படத் துவங்கிற்று.

“வாங்க உறவுக்காரங்கதான் சேனக் கொடுக்கணும்.”

“கொஞ்சம் பொறுங்க சிஸ்டர். வராந்தாவுல கொழந்தையோடப் பாட்டி நிக்கிறாங்க. கூட்டிக்கிட்டு வந்திர்றேன்.”அமுதவல்லி வெளியே போக முற்பட்டாள்.

மலர்க்கொடி அவசரமாய் அவளைத் தடுத்தாள். “சேனையை நீ குடுத்தா என்னக்கா? குழந்தையை நா பெத்து எடுக்கறதுக்கு நீதான கஷ்டப்பட்ட?”

கருணாநிதியும் தன் மனைவிக்கு ஒத்துவாசிக்கத் தொடங்கினான்.

“ஆமா அண்ணி. நீங்க குடுத்தா என்ன? உங்களுக்கு அந்தத் தகுதி இல்லையா என்ன?”

அமுதவல்லிக்கு ஆற்றாமையாய் இருந்தது. மனம் பேதலிப்பில் திணறியது. “அப்படிச் சொல்லாதிங்க. உங்க அம்மாவுக்குத்தான் எல்லாத் தகுதியும் இருக்கு. புள்ளக்குட்டிங்கப் பெத்தெடுத்து பேரன் பேத்திகளக் கண்டவங்க. என் தங்கச்சி மகளும் அவுங்கள மாதிரி குடும்பம், குழந்தையின்னு ஆகறதுதான் எனக்குச் சந்தோசம்.”

விறுவிறுவென்று வாசலை நோக்கி ஓடினாள் அமுதவல்லி. அவர்கள் நின்றிருந்த இடத்தில் வெறுமை நிறைந்திருந்தது. வராந்தாவின் அற்றம்வரைப் போய் தேடினாள். ஏமாற்றமே மிஞ்சியது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:33 pm

அலெக்சாண்டரை எதிர்த்துப் புறக்கணித்தவர்
-------------------
லௌகீகப் பற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்; வயதில் மட்டுமல்ல, ஞானத்திலும் மிகவும் முதிர்ந்தவர், உடல் வளைந்து கூனிக் குறுகி, பிறந்த மேனியராய் ஊரெங்கும்சுற்றித் திரிந்து கொண்டிருந்த அந்த ஞானியின் பெயர் டண்டமிஸ். கிரேக்கர் அப்படி அழைத்தனர், தட்சசீலத்தில் உச்சிக்கு வந்த உக்கிர பாஸ்கரனின் கொளுத்தும் வெயிலில், பாதத்தைப் பொசுக்கும் உஷ்ணத்தையும் உதாசீனப்படுத்தியவாறு நடந்து வந்து கொண்டிருந்தார் அந்த ஞானி.

ஓடிவந்த குதிரையொன்று அவரெதிரே ஒட்டி நின்றது. கூனிக் குனிந்திருந்த ஞானி தலையைத் தூக்கிப் பார்க்கவும், குதிரையிலிருந்து இறங்கிய – மாசிடோனிய மன்னன் அலெக்சாண்டரின் சொந்த அலுவலர் – ஒனெசிக்ரெடோஸ் அவரைப் பணிந்து வினவினான்.
“தாங்கள் தானே ஜிம்னோசோஃபிஸ்ட் டண்டமிஸ்?”

முற்றும் துறந்த துறவியர், முனிவர் போன்றோரை ஜிம்னோசோபிஸ்ட் என்று அழைப்பது கிரேக்கர் வழக்கம்.
“ஆமா, அதற்கென்ன?”
“எங்கள் மாமன்னர் மகா அலெக்சாண்டர் கூறியனுப்பிய செய்திகளைத் தாங்கள் பொருட்படுத்தவில்லையாமே?”
“நான் செவி சாய்ப்பதற்கு உன் மன்னனின் செய்தி என்ன அசரீரியா? அல்லது, அருள்வாக்கா? அதில் பொருள் இல்லை. ஆதலால் நான் பொருட்படுத்தவில்லை.”
வந்த எரிச்சலை அழுத்திக் கொண்டான் அவன். இந்த ஞானியை எப்படியாகிலும் தன்னிடம் அழைத்து வருமாறு அலெக்சாண்டர் அலுவலருக்கு ஆணையிட்டிருந்தான். ஆகவே அவனுக்கு நிதானத்தை உதாசீனப்படுத்த முடியாத சூழ்நிலையாக இருந்தது. மேலும் பணிந்தே சொன்னான்.
“எங்கள் பேரரசர் தங்களைத் தம் அரண்மனைக்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு கோரியிருக்கிறார்.”
“எதற்காக?”
“தங்களோடு நேருக்கு நேர் சம்பாஷிக்க அவர் ரொம்பவும் விரும்புகிறார்.”
“யோகி ஒரு போகியோடு கைகோர்க்க மாட்டான். கிழக்கும் மேற்கும் சந்திக்காது. நான் உன் மன்னனைப் பார்க்க முடியாது.”
வெண்கல மணியின் ஓசையன்ன குரலில் கணீரெனச் சொன்னார் ஞானி. எனவே ஒனெசிக்ரெடோஸ் தன் குரலைச் சற்று உயர்த்த ஆரம்பித்தான்.
“அவர் ஜீயஸ் தேவதையின் புதல்வர்.”
“இப்பூவுலகில் உள்ள எல்லோரும் கடவுளின் பிள்ளைகளே. நானும்தான்.”
“உலகத்தையே வென்றவர் உங்களை ஆவலோடு அழைக்கிறார்.
“அப்படி ஏன் அவன் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறான்? அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தப் பாரதத்தில் உள்ள அக்ர சிரேணியர், கதா, சகர், ஜனபதர், சிவி, சூத்ரகர், செüபூதி, பட்டனப் பிரஸ்தியர், மசாகார், மாளவர், பூச்சிகர், யெüதேயர் ஆகிய குடியரசுக்களோடு அவன் மோதிப் பார்த்தான் இல்லை. இதுநாள் வரை வியாச நதியின் அக்கரையைக் கூட அவன் கண்டான் இல்லை. இந்தத் தட்சசீலத்தின் அரசர் அம்பி விட்ட அழைப்பின் பேரில் படையெடுத்து வந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியின் ஒரேயொரு பெüரவ அரசன் புருஷோத்தமனை மட்டுமே அவன் வென்றிருக்கிறான். வலிமை வாய்ந்த ஜீவசக்தி மகதப் பேரரசை அவன் வெற்றி காணட்டும். அப்புறம் தான் அவன் உலகத்தை வென்றானா, இல்லையா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியும்.”
“பொன்னும் பொருளும் அளித்துத் தங்களைச் சிறப்பிக்கத் தானே எங்கள் பேரரசர் தங்களை அழைக்கிறார்!”
“துறவிக்கு அவை தூசு. எனக்குத் தேவையானவற்றை என் தாய்த்திருநாடு ஏராளமாக வழங்கியிருக்கிறது. உன் மன்னனின் சன்மானத்தைத் தன்மானம் இல்லாத யாருக்காவது தரச் சொல்!”
சினத்தால் ஒனெசிக்ரெடோஸ் சிவந்தான். தன் மன்னனை ஞானி மதிக்காததற்காகப் பொருமினான்.
“ஒன்றுமே இல்லாத பரதேசி உமக்கு இவ்வளவு வீறாப்பா!”
“ஒன்றுமே உடைமை வேண்டாதவன் தான் முனிவன். ஆனால் அவனியில் உள்ள எல்லாமும் அவனிடம் உள்ளதே! என்னைப் போன்ற ஒரு பரதேசி தானே உன் அரசனுக்குப் பேரரசு எவ்வாறு அமைய வேண்டும் என்று விளக்கிக் காட்டினான். அது உனக்கும் கூடத் தெரிந்திருக்குமே?”
ஞானியின் இந்தப் பேச்சு ஒனெசிக்ரெடோஸின் மூளையில் குத்தியது, முன்னொரு நாளில் நடந்த நிகழ்ச்சியொன்றை அவனுக்கு நினைவு கூர்ந்தது.
கலநோஸ் என்ற தத்துவ ஞானியை அலெக்சாண்டர் சந்தித்துத்தன் பேரரசு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கும்படி கேட்டுக் கொண்டான்.
உலர்ந்து காய்ந்து சுருங்கிய விலங்கின் தோலொன்றைத் தரையில் வீசி அதன் ஓர் ஓரத்தில் மிதித்தார் கலகோஸ். தோலின் எதிர் ஓரம் தலைதூக்கி எழும்பியது. அம்முனையில் மிதித்தார், இம்முனை தலைதூக்கியது. சற்றுப் பகுதிகளின் விளிம்பில் நடந்து காட்டினார். எந்த ஓரத்தில் நடந்தாலும் அவ்வோரத்தின் எதிர்முனை தலைதூக்கியது. தோலின் நடுப்பகுதியில் நின்றார் ஞானி. எம்முனையும் எழும்பாமல் தரையில் தட்டையாகக் கிடந்தது தோல்.
ஒரு நாட்டின் இதயமான நடுப்பகுதியை (தலைநகர்) அடக்கிக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் எல்லைப் பகுதிகள் தாமாகவே வசமாகும் என்பதை ஞானியின் இச்செயல் விளக்கத்தின் வாயிலாக தெளிவாகப் புரிந்து கொண்டான் அலெக்சாண்டர்.
எங்கோ நடந்த இந்நிகழ்ச்சி இங்குள்ள இந்த ஞானிக்கு எப்படித் தெரிந்தது என்ற வியப்பில் யோசிக்கலானான் ஒனெசிக்ரெடோஸ். தொற்றிக் கொண்ட அச்சத்தை வெட்கத்தால் வெளிக்காட்டாது ஞானியை லேசாக அதட்டிப் பார்த்தான்.
“நீர் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் எம் பேரரசரைப் பற்றி உமக்குத் தெரியாது.”
“தெரிய வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. துறவிக்கு அரசன் துரும்பு. உன் மன்னன் என்னை என்ன பண்ண முடியும்?”
“எச்சரிக்கிறேன். நீர் வராவிட்டால் உம்மை அவர் சிரச்சேதம் செய்வார்.”
தாம்பாளத் தட்டில் கொட்டும் தங்க நாணயங்கள் போல் கலகலவெனச் சிரித்தார் ஞானி. திருடன் போல் திருதிருவென விழித்தான் ஒனெசிக்ரெடோஸ். திராணியோடு உரைத்தார் ஞானி…
“என் மேனி என் தாய்த்திரு மண்ணில் விழத்தான் நான் விரும்புகிறேன். ஒருவருடைய ஆத்மாவை அழிக்க யாராலும் முடியாது. அது அழிவில்லாதது, நிலையானது. எனவே என்னைக் கொல்ல உன் மன்னனால் முடியாது. ஆசைக்கும் அதிகாரத்திற்கும் அடிமையானவர்க்கே உன் அரசனின் ஆணை செல்லுபடியாகும், எனக்கல்ல. திரவியத்திற்கும் மரணத்திற்கும் ஆட்படுபவன் உண்மையான பிராமணன் ஆக மாட்டான். நான் ஓர் உண்மைப் பிராமணன். உலகையே வென்றதாக சொல்லிக் கொண்டிருக்கும் உன் மன்னன் முதலில் தன்னை வெல்லட்டும். பின்னர் என்னைக் கொல்லலாம்…”
“இறுதியாக என்னதான் கூறுகிறீர்?”
“இனி உன்னோடு பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. ஆண்டவனின் ஆணைக்கே அடிபணியும் அடியவனாகிய யான் உன் கொற்றவனின் கட்டளைக்குக் கட்டுப்பட முடியாது என்று கூறுகிறேன். போ, போ! உன்னோடு வர முடியாது. போய்விடு!”
செய்வதறியாது சிலை போல் அசைவற்று நின்று விட்டான் ஒனெசிக்ரெடோஸ். தன் போக்கில் சென்று கொண்டிருந்தார் மாமன்னன் அலெக்சாண்டரை முதல் முதலாக எதிர்த்துப் புறக்கணித்தவர் என்று பெயர் பெற்ற ஞானி டண்டமிஸ்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:35 pm

மரத்துப் போன ஜென்மம்
--------------

கதைகள்சிறுகதை

குடும்பத் தலைவனாக இருப்பதால் ஒவ்வொரு தினமும் எனக்கே உரிய சில பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டு புதிய அலுவலகத்தின் நுழைவு வாயிலை அடைந்தேன்.

ஒரு அலுவலகத்தை விட்டு வேறொரு அலுவலகத்தில் பணியாற்றவிருக்கிறேன். முதல் நாள் என்பதால் சீக்கிரமே வந்து விட்டேன்.

எல்லா நடைமுறைகளையும் முடித்துவிட்டு எனது பணியிடத்துக்குச் சென்று அமர்ந்தேன். நிசப்தம், ஒரு சிலர் போனில் பேசுவதும், சிலர் கோப்புகளை தேடும் காகித சப்தம் மட்டுமே அங்கு இறைச்சலாய்க் கேட்டுக் கொண்டிருந்தது.

அடடா… என்று நினைத்துக் கொண்டு என் பணியை என்னவென்று கேட்டு அதனை செய்யத் துவங்கினேன். மதிய நேரம்… எங்கள் குழுவில் எல்லோரும் அவரவர் கொண்டு வந்த உணவை சாப்பிட ஒன்றாகக் கிளம்பினோம்.

அப்போது, எங்கள் குழுவைச் சேர்ந்த மூத்த ஊழியர் பேசத் துவங்கினார். அவரது சொந்த அனுபவங்கள், வளர்ந்த கதை முதல் அனைத்தையும் உணர்ச்சிப் பொங்க சொல்லிக் கொண்டிருந்தார். நானும் அதனை ஆவலோடு கேட்கலாயினேன். அவர் சொல்லிய விதம், சொன்ன விஷயங்கள் நன்றாக இருந்தன. சில சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டே அவரது பேச்சை உற்று கவனித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது வேறொரு விஷயம் என் கண்ணில் பட்டது. அதாவது எங்களுடன் வந்திருந்த மற்ற சகாக்கள், தாங்கள் ஏதோ தனித்தனியாக சாப்பிட வந்தவர் போல எந்த விஷயத்தையும் காதில் போட்டுக் கொள்ளாமல், எந்த உணர்வும் இன்றி, அவரவர் பாக்சில் இருந்த சாப்பாடுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நான் மட்டும் பேசுபவரின் வாயை பார்த்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். கடைசியாக வேகவேகமாக சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.

இதே போல தேநீர் இடைவேளையிலும், அடுத்தடுத்த நாட்களின் உணவு இடைவேளையின் போதும் நடந்தன.
அவர் ஏதோ உணர்ச்சிப் பெருக்குடன் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் அனைவரும் தேமே என்று அமர்ந்திருப்பார்கள். அவர் வாங்கிக் கொடுக்கும் தேனீர் மட்டும் தான் தொண்டையில் இறங்கும். வேறு முக பாவனைகளோ, பேச்சோ..ம்ஹூம்…

என்னடா இவங்க.. அவர் பேசிக்கிட்டே இருக்கார்.. எந்த பதிலும் இல்ல.. ஒரு ம் இல்ல என்ன மரத்துப் போன ஜென்மங்கள் என்று இருந்தது.

சில காலம் இப்படியே கழிய, முதல் நாள் அன்று பேச ஆரம்பித்த அந்த வயதில் மூத்த அதிகாரி, தனது பேச்சை மட்டும் நிறுத்தவேயில்லை. ஒரு மாத காலத்தில், மீண்டும் அந்த முதல் நாள் பேச்சையே துவக்கினார். மறுநாள் மீண்டும் அவரது அதே அனுபவம், வளர்ந்த கால கதைகள் என ரெக்கார்ட் தேய்ந்து கொண்டிருந்தது.

அடடா வசமாய் வந்து சிக்கினோமே என்று அப்போதுதான் புரிந்தது. யார் பேச வாய் எடுத்தாலும் அதை சிறிதும் காதில் வாங்காமல் அவரது பேச்சு மட்டுமே தொடர்ந்தது. அப்போது தான் நான் முதன் முதலாகக் கேட்டு ரசித்த விஷயங்கள், அவர்களால் பல ஆண்டுகளாக சகித்துக் கொள்ளப்பட்டு வந்த விஷயம் என்பது புரிந்தது.

சரியாக ஒன்றரை மாதத்தில்.. அவர் பேச நான் உட்பட அனைவரும் மௌனமானோம்.

என் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் மரத்துப் போன ஜென்மமானேன்.

-கணேசன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:40 pm

நட்புக்காக…
-------------------
”நான் அப்பவே நினைச்சேன். ஒழுங்காய் ஒரு பத்து நூறு ரூபாய் நோட்டுக்களைச் சரியாக எண்ணத் துப்பு இல்லாத நீங்க, மொய் எழுத உட்கார்ந்தபோது எனக்குத் தெரியும். ஏதாச்சும் தப்பு நடந்திடும்னு. இப்போ சுளையாய் ஆயிரத்து அறுநூறு ரூபாய், கணக்கிலே குறையுதுனு என்கிட்டே பணம் கேக்கிறீங்களே, உங்களை என்ன செய்யிறது?. நான் மதுரைக்கு வர்றபோதே, இங்கே அழகான பித்தளை மீனாட்சி குத்துவிளக்கு கிடைக்கும்; வாங்கிக்கிட்டுப் போகலாம்னு ஆசையாய் ரெண்டாயிரம் ரூபாய் கொண்டு வந்தேன். அந்த ஆசையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டு, ஆயிரத்து அறுநூறு ரூபாய் கொடுனு கேக்கிறீங்களே?” என்று குரலில் அதிர்ச்சி வெடிக்கப் புலம்பினாள் சரசு.

பதறிப்போன சுந்தரம் அறைக்குள் நின்றபடி வெளியே பார்வையைச் சுழற்றியவாறு “”ப்ளீஸ், சரசு! சத்தம் போட்டுப் பேசாதே… யார் காதிலேயாவது விழுந்திடப் போகுது…” என்று அவள் வாயை மூடத் துணிவு இல்லாமல் தன் வாயின் குறுக்கே விரலை வைத்து மூடிக் காட்டினான்.

“”யார் காதிலே விழுந்தா என்ன? யாராவது நான் ஆசைப்படற குத்துவிளக்கை வாங்கிக் கொடுக்கப் போறாங்களா?” என்று தொடர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள் மனைவி.

நல்லவேளையாக, திருமணம் சாப்பாடு எல்லாம் முடிந்து, திருமண மண்டபத்து அறைகளில் தங்கியிருந்தவர்கள் அறைகளைக் காலி செய்து விட்டுப் போயிருந்தார்கள். திருமண வீட்டு உறவினர் சிலர் மட்டும் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

நண்பன் சொக்கலிங்கத்தின் மகள் திருமணத்திற்கு, முதல் நாளே காரைக்குடியிலிருந்து மனைவியுடன் வந்துவிட்டான் சுந்தரம்.

எத்தனை ஆண்டுப் பழக்கம்?

தொடக்கப் பள்ளியிலிருந்து கல்லூரி வரை, ஒன்றாகவே படித்தவர்கள் சுந்தரமும் சொக்கலிங்கமும்.

சொக்கலிங்கம் கொஞ்சம் முன்னே பின்னே படிப்பான். ஒன்றிரண்டு “பெயில்’கள் ஒன்றிரண்டு “அரியர்ஸ்’ என்று கொஞ்சம் பின் தங்கியிருந்து, நண்பனை எட்டிப் பிடிப்பான் சொக்கலிங்கம்.

சுந்தரம் படிப்பில் கெட்டிக்காரன். எப்போதும் வகுப்பில் முதல் மாணவன். நல்ல மதிப்பெண் வாங்கித் தேறியதால் கல்லூரியில் முதல் குரூப் எடுத்துப் படித்து பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி பட்டதாரியாகி பி.எட். முடித்து ஆசிரியராகிவிட்டான்.

தொடக்கப்பள்ளி ஆசிரியரான மாணிக்கத்திற்கு தன் மகன் சுந்தரம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானதிலே, பெரும் மகிழ்ச்சி.

“வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழியை என் பிள்ளை பொய்யாக்கிட்டான்’ என்று நெஞ்சை நிமர்த்திக் கொள்வார் அவர்.

பி.ஏ. தேறுவதற்குள்ளே பாதி கஜினி முகமது ஆகிவிட்ட சொக்கலிங்கம், அலைந்து திரிந்து கடைசியாக ஓர் அரசாங்க அலுவலகத்திலே எழுத்தர் வேலையைப் பிடித்துவிட்டான்.

“கால்காசு உத்தியோகம் என்றாலும், கவர்மென்ட் உத்தியோகம்’ என்பது, வேலையில் சேர்ந்த பிறகுதான் அவனுக்குப் புரிந்தது.

தாலுகா அலுவலக பியூனாக இருந்த முனியாண்டிக்குப் பெரிய ஆதங்கம் “”என் புள்ளை காலேசுப் படிப்புப் படிச்சு பெரிய கலெக்டராக வருவான்னு நெனைச்சேன். கடேசியிலே ஒரு கிளார்க்காகத்தான் வர முடிஞ்சுது” என்று பெருமூச்சே விடுவான் அவன்.

நடுத்தர வர்க்கத்திற்கு மேல் போக முடியாமலும், கீழே தாழ்ந்துவிடாமலும் வாழ்ந்துகொண்டிருந்த அந்த நண்பர்களுக்கிடையே, நட்பு மட்டும் உயர்தரமாகவே நீடித்து நின்றது. ஒருவன் காரைக்குடியிலும் இன்னொருவன் மதுரையிலும் இருந்தாலும், தொடர்பு விட்டுப் போகாமல் இருந்தது.

சொக்கலிங்கம், தன் மகளுக்குத் திருமணம் நிச்சயமானதும், மனைவியோடு நேரே சுந்தரத்தின் வீட்டுக்கே வந்து அழைப்புக் கொடுத்தான்.

“”சுந்தரம்! மேலமாசி வீதியிலே ஆறுமுகா மண்டபத்திலேதான் கல்யாணம். அதிலே தங்குறதுக்கு நாலைஞ்சு ரூம் இருக்கு. அதிலே உனக்கு ஒரு ரூம் ஒதுக்கித் தந்திடறேன். “ஒய்ஃப்’போடு முதல் நாளே வந்திடணும்” என்று கேட்டுக் கொண்டான் அவன்.

அப்படியே, சரசுவோடு திருமணத்திற்கு முதல் நாளே, மண்டபத்திற்கு வந்து தங்கிவிட்டான் சுந்தரம். வந்ததிலிருந்து நண்பனுக்கு, கூடமாட ஒத்தாசையாக இருந்தான்.

திருமண நாள் அன்று, காலையில் ஒரு பெட்டியையும் “நோட் புக்’கையும் சுந்தரத்திடம் கொடுத்தான் சொக்கலிங்கம்.

“”சுந்தரம்! தாலி கட்டுற முகூர்த்தம் முடிஞ்சதும், நீயே முகப்பிலே மொய் எழுத உட்கார்ந்திடு… என் சொந்தக்காரர்களை நம்ப முடியாது. என்னோட வேலை செய்கிற “கிளார்க்’குகளை, அதுக்கு மேல் நம்ப முடியாது. சுனாமி நிவாரணத்திலேயே கமிஷன் சுரண்டிடுவானுங்க… நீயே உட்கார்ந்து எழுது” என்று ரகசியமான குரலில் அறைக்குள் வந்து அவன் சொன்னபோது, சுந்தரத்தால் மறுக்க முடியவில்லை.

சரசு சொன்னது சரிதான். சுந்தரம் படிப்பில்தான் கெட்டிக்காரனே ஒழிய, பணவிஷயத்தில் ரொம்ப “வீக்’. ஒரு நோட்டுக்கட்டை அவனிடம் கொடுத்து எண்ணச் சொன்னால், எண்ணுகிற ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கூட்டுத் தொகை வரும்.

அவள் பயந்தபடியே ஆகிவிட்டது. திருமணத்திற்கு வந்தவர்களெல்லாம் சொக்கலிங்கத்தின் “அந்தஸ்து’க்காக நூறு, இருநூறு, ஐந்நூறு என்று மொய் எழுதினார்கள். கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு எழுதும்போது, யாரோ நாலைந்து பேர், பெயர்களைச் சொல்லி எழுத வைத்துவிட்டுப் பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்கள்.

அந்த நெருக்கடியில் ஆயிரத்து அறுநூறு ரூபாய் குறைந்துவிட்டது, கடைசியில்தான் தெரிந்தது அவனுக்கு.

சரசுவுக்கு ஆத்திரம் சூடாகிக் கொதித்தது.

“”ஆத்ம நண்பருக்கு உதவி செய்யணும்னா அதுக்கு வழியா இல்லை? சமையற்கட்டிலே போய் மேற்பார்வை பார்க்கலாம். அல்லது வரவேற்பிலே நின்னு வர்றவங்களை “வாங்க, வாங்க’ன்னு கூப்பிட்டு, உட்கார வைக்கலாம்; அல்லது, பந்தியிலே நின்னு சாப்பிடறவங்கக்கிட்டே, “சாம்பார் வேணுமா, மோர் வேணுமா, பாயசம் போடச் சொல்லவா’னு விசாரிச்சுக்கிட்டு நிற்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு, மொய் எழுதுற இடத்திலே நீங்க உட்காரலாமா? மொய் எழுதின தொகையைக் கூட்டினதிலே ஆயிரத்து அறநூறு குறையுதுனு உண்மையைச் சிநேகிதர்கிட்டே சொல்ல முடியுமா? மத்தவங்களையெல்லாம் நம்பாமல்தானே, உங்களை நம்பி உட்கார வச்சார்? இப்போது, பணம் குறையுதுனு சொன்னா, மத்தவங்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?” “”ப்ளீஸ், சரசு! மெதுவாய்ப் பேசு… வெளியே யார் காதிலேயாவது விழுந்திடப்போகுது… தயவு செஞ்சு. நீ கொண்டு வந்திருக்கிற பணத்திலே ஆயிரத்து அறுநூறு ரூபாய் கொடு… மொய்ப் பணக்கணக்கை அவன்கிட்டே கொடுத்திட்டு ஊருக்குக் கிளம்பலாம். அப்புறமாய் நீ சொல்ற அந்த மதுரை மீனாட்சி குத்துவிளக்கை வாங்கிவிடலாம். மதுரையும் பித்தளை விளக்கும் எங்கேயும் போயிடாது. ஆனால், ஆயிரத்து அறுநூறு இல்லேன்னா, என் மானமும் மரியாதையும் போயிடும். சரசு!” என்று மெலிந்த குரலில் கெஞ்சினான கணவன்.

“”ஆமா… மதுரையும் குத்துவிளக்கும் இங்கேதான் இருக்கும். ஆனா, நாமதான் காரைக்குடியிலே இருப்போம். உங்களைக் கட்டிக்கிட்டு நான் என்ன பெரிசா ஆசைப்பட்டேன்? ஒரு மீனாட்சி குத்துவிளக்கு வாங்கி, பூஜையறையிலே வச்சுக் கும்பிடலாம்னு ஆசைப்பட்டேன். அதுகூட நிறைவேறலே…” என்று பிரலாபித்துக் கொண்டே, தன் கைப்பையிலிருந்து ஆயிரத்து அறுநூறு ருபாயை எண்ணி எடுத்துக் கொடுத்தாள் மனைவி.

அதைப் பெட்டிக்குள் வைத்து, மொய் எழுதிய “நோட்புக்’கையும் சொக்கலிங்கத்தடம் சேர்ப்பித்தான் அவன்

“”சுந்தரம்! ரொம்ப நன்றிடா… சின்ன வயசிலே இருந்த சிநேகித்தை மதிச்சு இங்கே வந்து கல்யாணத்துக்கு ரொம்ப ஒத்தாசையாயிருந்தியே…” என்று நன்றியுணர்ச்சி விழிகளில் ஈரமாகக் கசிய, நண்பனுக்குத் தாம்பூலப் பை, எவர்சிலர்வர் வாளியில் பழம், பலகாரம் எல்லாம் வைத்துக் கொடுத்து அனுப்பினான் சொக்கலிங்கம்.

ஒரு மாதம் கழித்து-

திடீரென்று காரைக்குடிக்கு வந்தான் சொக்கலிங்கம். மகிழ்ச்சியோடு சுந்தரமும் சுரசுவும் அவனை வரவேற்று உபசரித்தார்கள்.

“”அடுத்த வாரம் கார்த்திகைத் திருநாள் வருது, இல்லியா? அதுக்காக என் மகளுக்குப் பித்தளைக் குத்துவிளக்கு கொடுக்கலாம்னு தோணிச்சு.. கடையிலே வாங்கிக்கிட்டு நேத்து வந்தேன். “ஏற்கனவே எங்க வீட்டிலே ரெண்டு மீனாட்சி விளக்கு இருக்குப்பா! எனக்கு வேண்டாம்’னு சொல்லிட்டா மஞ்சு. அந்த விளக்கை மறுபடியும் மதுரைக்குத் தூக்கிச் சுமக்க வேண்டாம். உன்கிட்டேயே கொடுத்திட்டுப் போகலாம். நீ இதை பூஜை அறையிலே வச்சு தீபம் ஏத்திக் கும்பிடுவே’னு நினைத்துக் கொண்டு வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே தன்னுடன் கொண்டு வந்திருந்த அட்டைப்பெட்டியை பிரித்தான் நண்பன்.

அதனுள்ளே இருந்த குத்துவிளக்கின் ஒளியைவிட, கணவனின் முகம் பிரகாசிப்பதைக் கவனித்தாள் சரசு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:41 pm

மாசானம் விலாஸ் சைக்கிள்
------------------
“”என்னங்க… நா அப்போயிருந்து கத்திக்கிட்டே இருக்கேன். கொஞ்சங்கூட அசைஞ்சு குடுக்காமெ ஒக்காந்திருக்கீங்களே… பத்து கிலோ அரிசியும், பல சரக்கு சாமானும் நேத்தே வாங்கி வைச்சாச்சு. அதக் கொண்டுட்டுப் போயி அந்தப் பயல் அம்மாசியோட வீட்ல குடுத்துட்டு வர்றதுக்கு, வாரக் கணக்கிலேயா ஆவப் போவது? மூணு கிலோ மீட்டர் தூரந்தான் சுருளிப்பட்டி. ஒங்க மொபட்ல கொஞ்ச நேரத்துல போயிட்டு வந்துறலாம். இப்படிக் கொஞ்சங்கூடச் சொரணையத்துப் போயி ஒக்காந்துருக்கீங்களே…” ஐந்தாவது முறையாக வார்த்தைகளில் வெடித்தாள் மாசானத்தின் மனைவி பூங்கோதை. கடந்த நான்கு முறையும் ஊசிப் பட்டாசாய் சுதி குறைத்திருந்த அவளது வார்த்தைகள் இந்த முறை சலிப்பின் உச்சத்திற்கே சென்றது போலச் சரவெடியில் சத்தங்கள் கூட்டியிருந்தது.

அவளின் இந்த ஆத்திரக் கூப்பாடு மாசானத்தின் மனசை என்னவோ செய்வது போலிருந்தது. ஏற்க முடியாது நெட்டித் தள்ளியது இதயம். கண்களில் கனல். பார்வையில் கோப வெக்கை. “”இத… பார்டீ எதுக்கு இப்படி நாக்கால கும்மியடிச்சிட்டு இருக்குற? நானே, ராத்திரி ஹோட்டல்ல நிறுத்தி வைச்சிருந்த சைக்கிளக் காணோம்னுட்டு வேதனையில கெடந்து இருக்கேன். ரெண்டாயிரத்துச் சொச்சம் பெறுமானமுள்ள சைக்கிள எந்தப் பய களவாண்டுட்டுப் போனானோன்னு வெளங்காம விரக்திப்பட்டு கெடக்கேன்… நீ என்னடான்னா மனிதாபிமானம் மண்ணாங்கட்டின்னு நக்காலத் தாளிச்சிட்டிருக்க…” என்று எதிர்முனை வார்த்தை போர் செய்தவாறு மீண்டும் காணாமல் போய்விட்டிருந்த சைக்கிள் பற்றிய சிந்தனையிலேயே மனசை கவலையுடன் மேய விடத் தொடங்கினான்.

“”நமக்கு ஆயிரம் பிரச்னைங்க இருக்கத்தாஞ் செய்யும். அதுக்காக, அடுத்தவங்க கஷ்டத்தை உணர வேண்டாமா? பதினாலு வயசுக்குக் கம்மியா இருக்குற பையன்கள வேலைக்கு அமர்த்த கூடாதுன்னு சட்டம் கடுமையா பாய்ஞ்சதால அந்த பச்ச மண்ணு அம்மாசிய ஹோட்டல் வேலைக்கு வேணாம்னுட்டு நிறுத்திட்டீங்க. ஆனா அடுத்த வேளை சோத்துக்கு அவெ என்ன பண்ணுவான்னு யோசீச்சீங்களா? அத வுட்டுட்டு, சைக்கிளக் காணோம்னு பொலம்பிக்கிட்டு இருக்கீங்களே. நீங்களே பேனை ஈறு ஆக்கி அந்த ஈறுல வெண்ணெய் எடுக்கற ரகம். ஒங்ககிட்ட எவனாச்சும் சைக்கிளத் திருடிட்டுத் தப்பிச்சிற முடியுமா? எங்காச்சும் மறந்து வெச்சிருப்பீங்க. சாயங்காலமே யாராச்சும் “இந்தாப்பா ஒஞ் சைக்கிள்’னு கொண்டாந்து குடுக்கப் போறான் -அதான் சைக்கிள்ல பெரிசா “ஹோட்டல் மாசானம் விலாஸ்’ன்னு எழுதி வெச்சிருக்கீங்களே… அது போதாதா? நீங்க இப்ப ஒடனே கௌம்பிப் போயி, அரிசி மளிகைச் சாமான்கள் இருக்குற பைங்கள அம்மாசியோட அம்மாகிட்ட குடுத்துட்டு வாங்க.” என்றவாறு தானும் பிடிவாதத்தில் சளைத்தவள் இல்லை என்பதுபோல வார்த்தைகளால் எகிறிக்கொண்டு முடுக்கினாள், பூங்கோதை.

“இத… பாரு பூங்கோத. நாஞ் சொல்றத நம்பு… வெளீல எங்கேயும் சைக்கிள நிறுத்தல. நம்ப ஹோட்டல்லதான் நிறுத்தியிருந்தேன். நெசமாகவே எவனோ களவாண்டுட்டுப் போயிட்டான்” என்று மீண்டும் ஒரு முறை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்போல இருக்கிறது அவனுக்கு. ஆனால் தொண்டை வரையில் வந்துவிட்டிருந்த வார்த்தைகள் நாவிற்கு வரவிடாமல் கடிவாளமிட்ட குதிரையாக ஒருவித சஞ்சலம் நிறுத்தி விட்டிருந்தது.

ஆத்திரத்தின் உச்சஸ்தாயியில் பற்களை நறநறவென்று கடித்தவன் சட்டென்று உட்கார்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தவாறு ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து உடுத்திக் கொண்டவாறு அலமாரியில் வயிறு முட்டிக் கிடந்த, அரிசியும் மளிகைச் சாமான்களும் நிறைந்த துணிப் பைகளை கைக்கு ஒன்றாக இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டபடி வெளியில் போய், அவற்றை மொபட்டின் பின்பக்கக் கேரியரில் வைத்து இறுகக் கட்டிக் கொண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளிப்பட்டியை நோக்கி பயணப்படத் தொடங்கினான். “சீய்.. என்னதான் ஜென்மமோ. மனசுல ஈரம் இருக்க வேண்டியதுதான்… அதுக்காக தன்கிட்ட வேலை பார்த்த எவனோ ஒரு சிறு பையனுக்காக கட்டின புருஷங்கூட மல்லுக்கு நிக்கிற அளவுக்கு மன ஈரம்கிறது இப்டி ஐஸ் கட்டியாவா உருகிக் கொட்டி நம்ப உசிர வாங்கணும்?’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவாறு பயணப்பட்டவனை, இங்கிருந்து சுருளிப்பட்டி வரையில் உள்ள மேடு, பள்ளமுமான சாலையும் அச்சுறுத்த “இன்னிக்கு இந்த ரோட்டுல அஞ்சும் அஞ்சும் பத்து கிலோ மீட்டர் போய் வர்றதுக்குள்ளார ஈரக்கொலை அந்து போகும்டா சாமீ!’ என்று உள்ளுக்குள் புலம்பியவாறே பயணப்பட்டவன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இந்தச் சாலையில் பயணப்பட்டாலே பெரிய விஷயம் என்பது போலப்பட்டது அவனுக்கு.

அந்தச் சீரற்ற சாலைப் பயணத்திலும், தடம் புரளாமல் அம்மாசி பற்றிய சிந்தனையிலேயே எண்ண ஓட்டமிருந்தது.

நேற்றுமுன்தினம் காலையில், அம்மாசி ஹோட்டலுக்கு வந்து, “மொதலாளி… எனக்கு ஆயிரம் ரூவா கடன் வேணும். நாலஞ்சு மாசத்துல திரும்பத் தந்துடறேன்’ என்று பவ்யமாகவும், ஒருவிதப் பயத்துடனும் கேட்டான்.

அவனது அந்த எதிர்பார்த்திராத கோரிக்கை மாசானத்திற்கு செவிட்டிலறைவது போலிருந்தது. “”எதுக்குடா ஆயிரம் ரூவா? என்ன விஷயம்?’ என்று கேட்டான்.

“”குழந்தை தொழிலாளிங்கள வேலைக்கு வெச்சுக்கக் கூடாதுன்னு நீங்க என்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லிட்டீங்க… வேற எங்க வேலை கேட்டுப் போனாலும், “ஒனக்குப் பரிதாபப்பட்டு நாங்க வேல குடுத்துட்டு ஜெயில்ல கம்பி எண்ண சொல்றீயான்னு சொல்லிடறாங்க. அதனால நா மறுபடியும் ஆறாம் வகுப்புல சேர்ந்து படிக்கப் போறேங்க மொதலாளி. அட்மிஷன் ஃபீஸ், நோட்டுப் புஸ்தகம்னு ஆயிரம் ரூவா வரைக்கும் செலவாகும்போல, நீங்கத் தந்தீங்கன்னா…” ஆவலுந்தாவலுமான கெஞ்சல் குரலில் அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“என்னாதூ… ஆயிரம் ரூவா உனக்குக் கடனா தந்துட்டா முழு சீக்காலியா கெடக்குற ஙொப்பெ உடனே சீரஞ்சீவித் தன்மையோட எழுந்து தாவிக் குதிச்சு வேல வெட்டிக்குப் போயி சம்பாதிச்சு ஏங்கடன அடைச்சிருவானாக்கும்..? போடா எவனும் வேலைக்குச் சேக்கலைன்னா போயி கோலிக்குண்டு, கிட்டிப்புள்ள வெளையாடு, இல்லைன்னா நீயும் ஒரு மட்டைய எடுத்துட்டு ஓ சினேகிதங்களோட கண்மாயில் கிரிக்கெட் வெளையாடி நீயாச்சும் நம்ப நாட்டுக்கு ஒலகக் கோப்பைய வாங்கிக் குடு… ம் நிக்காத எனக்கு ஆயிரத்தெட்டு சோலி இருக்குது. ம்… கௌம்பு, கௌம்பு!’ அவரது நாக்கு கோபம் கொண்ட வெறிநாயாய் அவதாரமெடுத்து அம்மாசியைத் துரத்தியது.

அத்துடன், அவனை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு கல்லாவிலிருந்து இறங்கி ஹோட்டலின் சமையலறைக்குள் நுழைந்து கொண்டான் மாசாணம். மறுபடியும் கல்லாவுக்கு வந்தபோது, அவன் எதிர்பார்த்தது போலவே அம்மாசி அங்கு இல்லை. அவன் அழுதுகொண்டே சென்றுவிட்டதாக ஹோட்டல் சப்ளையர்களில் ஒருவன் தெரிவித்தான்.

அம்மாசி, ஐந்தாம் வகுப்பு முடித்த கையோடு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததாலும், குடும்பத்தின் வருமானத் தூணாக இருந்த அவனது அப்பா பெரும் வியாதியால் பீடிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டோடு முடங்கிப் போய் விட்டதாலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சுருளிப்பட்டியிலிருந்து இந்த நடுத்தர நகரத்துக்கு வேலை தேடி வந்து பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காமல், இறுதியாக மாசாணத்தின் ஹோட்டலில் “கிளீனர் வேலைக்குச் சேர்ந்திருந்தான். பம்பரமாகச் சுழன்று சுழன்று வேலை பார்ப்பான். எதற்கும் சளைக்காதவன் “மாஸ்டர்… அண்ணனுக்கு ஒரு தோசை… இதோ இந்த ஸாருக்கு ஒரு பூரி செட்… அப்புறம் அஞ்சு இட்லி பார்சல்…’ என்று ஒருவித தொழில் முறை இழுவைக் குரலில் அவன் உத்தரவு போடுவதை கேட்பதற்கே ஆசைஆசையாய் இருக்கும். மிகவும் நேர்மையானவன்; பொய் பித்தலாட்டம் என்று எதுவும் அறியாத பிஞ்சு’ என்று நற்பெயரை வேலைக்குச் சேர்ந்து ஓரிரு வாரங்களிலேயே சம்பாதித்துக் கொண்டவன். “எனக்கு ரெண்டு பையன்களிருந்தும் ரெண்டும் வெளங்காத வெளக்க மாறுகளா போய்ருச்சுங்க. ஒன்னப்போல செய்ற தொழில்ல அக்கறையுள்ள புள்ள ஒண்ணாவது எனக்கு இருந்திருந்தா, இதப் போல இன்னும் ஒரு ஓட்டலுக்கு ஒனராயிருப்பேன்’ என்று எப்போதாவது ஹோட்டலுக்கு வந்து போகிற மாசாணத்தின் மனைவி பூங்கோதை அவனை மெச்சி உச்சி மோந்து போவதுண்டு.

தினமும் ஹோட்டலில் விற்பனை போக மீந்துபோகிற இட்லி, புரோட்டாக்களை, வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகுமாறு, அவள்தான் அம்மாசியிடம் கூறியிருந்தாள். இதனால், வீட்டின் உணவுத் தேவையில் ஒரு பெரும்பகுதியையே சரிக்கட்ட முடிந்திருந்தது அம்மாசியினால்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு வரத் துவங்கியவுடன், அம்மாசியின் வேலையும் பறிபோய், சம்பளம் மற்றும் ஹோட்டலில் மீந்த உணவும் பறிபோயிருக்க, அவனது குடும்பமே பெரும் இக்கெட்டில் தவிக்கிற குரூரத்தைக் கேள்விப் பட்டிருந்த பூங்கோதை “என்னங்க நம்ப ஹோட்டல்ல வேல பார்த்தானே அம்மாசி… அவுங்க அப்பனும் நோயாளி. அவுங்க அம்மா சம்பாதிக்கிற கூலி பணத்துல அந்தாளு வைத்தியத்துக்கே பெரும்பகுதி போய்ருமாம். கால் வயிறும் அரை வயிறுமா சாப்பிட்டுக்கிட்டு கண்ணு முழி பிதுங்கிக் கெடக்காங்களாம். அந்தப் பையன் நம்பகிட்ட வேல பார்த்த வரைக்கும். சொந்த ஹோட்டல் கணக்கா ராப்பகலா உழைச்சானே… பாவம்ங்க. வேலையிலேர்ந்து அவனை நிறுத்திட்டு நாம ஒரு ஒதவியும் பண்ணல. நா பத்து கிலோ அரிசியும், கொஞ்சம் மளிகைச் சாமானும் வாங்கி வெச்சிருக்கேன். அதக் கொண்டு போயி அந்தப் பையனோட வீட்டுல குடுத்துட்டு வாங்களேன்.’ என்று கடந்த சில தினங்களாகவே அவனை வற்புறுத்திக் கொண்டிருக்க, அவன் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலங் கடத்தினான். ஆனால், இன்று அதைக் கொண்டு போய் தந்துவிட்டு வரும்படி நகர மறுக்கும் எருதுவை தார்க்குச்சியால் சீண்டி இணங்க வைப்பது போல, கட்டன் ரைட்டான வார்த்தைப் பிளிறலால் அவனது மனதைக் கனிய செய்திருந்தாள்.

நெடுஞ்சாலை துறையினரால் சாலை வசதியமைப்பதற்காக குண்டுங் குழியுமாகத் தோண்டிப் போட்டிருந்த அந்தச் சாலையில் அரிசி, மளிகைப் பொட்டலங்கள் சகிதமாக மொபட்டில் பயணப்பட்டிருந்த மாசாணம் குக்கிராமமான சுருளிப்பட்டியை அடைந்து, சிறுவன் அம்மாசியின் வீடு இருக்கிற அந்த முட்டுச் சந்துக்குள் நுழைந்து மொபட்டை நிறுத்திவிட்டு, அவனது வீட்டை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான்.

அவ்வளவுதான்… அந்தக் காட்சி அவனைக் கிறுகிறுக்கச் செய்தது. தேன் கசப்பாய் இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாதது போல் அம்மாசியா இப்டி மாறித் தொலைச்சிட்டான்? என்று நம்ப முடியாத தவிப்பு. ஆத்து வெள்ளங்கூட அரிக்க முடியாத ஆலமரத்து வேரு கணக்கா இருந்த நம்பள நேத்து முளைச்ச காளான் அசைச்சுப் பார்த்துட்டானே!’ என்று அவமானமாய்க் கூனிக் குறுகும் உள் மனசு.

நேற்று இரவு ஹோட்டலில் திருடு போய் விட்டதாகச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த மாசாணத்தின் சைக்கிள், அம்மாசியின் குடிசை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவனைப் பார்த்ததும், வாசலில் உட்கார்ந்திருந்த அம்மாசியின் தாய் வேகமாய் -ஆனந்தக் கூத்தில் ஓடி வந்து அவனது அருகில் நின்றவாறு, “”ஐயா… நீங்க நல்லாயிருக்கணும். ஏ மகன் படிப்புச் செலவுக்கு ஏங்ககிட்ட ஆயிரம் ரூவா கடன் கேட்டு வந்தப்ப “இப்போ கைவசம் பணம் இல்ல; இந்தச் சைக்கிள எடுத்துப் போயி வித்து, நோட்டுப் புஸ்தகம் வாங்கிப் படி!’ன்னு சொல்லி இந்தச் சைக்கிள அவெங்கிட்டக் குடுதனுப்பினீங்களாம். ஒங்களுக்கு எவ்வளோ பெரிய மனசு!’ என்று சந்தோஷச் சிரிப்பாணியுடன் சொன்ன அவள் “”வீட்டுக்குள்ள வாங்கய்யா… காபி சாப்பிட்டுப் போவீங்க…” என குதூகலப் பிரவாகத்துடன் கூப்பிட்டாள். வானம் பார்த்த வெக்கை பூமியான அவளது மனசில் ஈரம்போல அந்தக் கணம் பிரவாகமெடுத்திருந்த மகிழ்ச்சியை வறண்ட முகத்தில் ஒளிக்கீற்றாய்ப் படர்ந்த மலர்ச்சி அடையாளங் காட்டிற்று.

அந்தக் குறைந்தபட்ட மகிழ்ச்சியை “அது உன் மகன் திருட்டி வந்த சைக்கிள்’ என்று கூறி நொடிப் பொழுதில் கொன்று போட மனமின்றி, மொபெட்டில் இருந்து அரிசி, மளிகைச் சாமான்களடங்கிய துணிப் பைகளை அவிழ்த்து அவளது கைகளில் தந்துவிட்டு எதுவும் பேசாமல் தலைகவிழந்தவாறே மொபட்டை ஸ்டார்ட் செய்து, அந்த இடத்திலிருந்து புறப்பட்டான் மாசாணம்.

- அல்லி நகரம் தாமோதரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:43 pm

திருடனை விரட்ட முயன்ற கழுதை

(திரு.கி.ஆ.பெ. விசுவநாதம் கூறிய கதை)

வண்ணான் ஒருவன் நாயை வளர்த்தான். அது, துணிகளைத் திருடாமல் காவல் காத்து வந்தது. ஒரு சமயம் நள்ளிரவில் திருட வந்தவனைக் கண்டு குரைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான்.

இப்படியிருக்க சில நாட்களுக்குப் பின், வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். அப்போது நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.

வண்ணான் எழுந்தான். தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று அடித்து நொறுக்கினான்.

இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரிய வருகிறது. சில வேலைகளைச் சிலர்தான் செய்ய வேண்டும்; அந்த வேலையை மற்றவர் செய்வதால் இப்படித்தான் நேரும் என்பது உண்மைதானே?

இதற்கு நாம் தரும் பின் குறிப்பு :

நீங்கள் கழுதையாக இருந்தால், நாய்க்கு பதில் சத்தம் போட்டு அடி வாங்காமல் தப்பித்துக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை நீங்கள் அந்த வண்ணானாக இருந்தால், கழுதை ஏன் கத்துகிறது என்பதை அறிந்து பொருளை களவு கொடுக்காமல் காத்துக் கொள்ளுங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Oct 25, 2015 7:45 pm

ஏன் இப்படி..?
-------------------
இருட்டைக் குழைத்து அப்பினது போலக் கன்னங் கரேல் என்றிருந்தது அந்த அண்டங் காக்கை. சற்றே பெரிய உருவம். மின்னும் கறுப்பு. மாடி கட்டைச் சுவற்றின் மேல் அமர்ந்து கோலிக் குண்டு மாதிரி விழிகளில் என்னையே உறுத்துப் பார்த்திருந்தது.

துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக மாடிக்கு வந்த போதுதான் அதை நான் பார்த்தேன். இதற்கு முன் இந்தப் பகுதியில் தென்பட்டதில்லை இந்தக் காக்கை. இங்கே அடிக்கடி உலவுகிற பறவைகளை எனக்கு அடையாளம் தெரியும். மற்றவர்கள் அலட்சியம் செய்கிற சில விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகமுண்டு. “சலீம் அலி’ என்று நண்பர்கள் நக்கல் செய்வார்கள். பறவைகளிடமும் நட்பு பாராட்டுகிற புத்தி.

அதன் மீதிருந்த பார்வையை அகற்றித் துணிகளை உலர்த்தினேன். வெற்று வாளியோடு படியிறங்கப் போன வேளை ஏதோ ஒரு விசை என் தலைக்கு மேலே பறந்து வருவதை நான் உணர்வதற்குள், பட்டென்று என் உச்சந்தலையில் அடித்துவிட்டுப் பறந்தது. வலி பொறுக்காமல் “அம்மா’வென்று முனகியபடியே அண்ணாந்து பார்த்தேன்…

அந்த அண்டங்காக்கைதான்! அலகைப் பிளந்து காட்டியபடியே பறந்து மறைந்தது. எங்கிருந்து வந்தது? என்னாயிற்று அதற்கு? ஏன் காத்திருந்து என்னைத் தாக்கி விட்டுப் பறந்து செல்ல வேண்டும்?

உச்சந்தலையில் கை வைத்துப் பார்த்தேன். பிசுபிசுத்தது. கையை எடுத்துப் பார்த்தேன். ரத்தம். உடனே மனம் பதறத் தொடங்கியது. அவசரமாய்க் கீழே இறங்கி வந்தேன். அம்மாவிடம் நடந்ததைப் பதற்றம் விலகாமல் அப்படியே வர்ணித்தேன்.

“”ஏம்மா.. ஏன் இப்படி நடந்துச்சி…?”

அம்மா சிரித்தபடியே சுண்ணாம்பு கொண்டு வந்து காயத்தில் தடவினாள். எரிந்தது.

“”என்னம்மா சிரிக்கிறே? நான் எவ்வளவு பதற்றமா இருக்கேன் தெரியுமா? நீ என்னடான்னா சிரிக்கிறே?”

“”சிரிக்காம என்னடா செய்யச் சொல்றே.. இப்படி யதார்த்தமா நடக்கிற நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் கற்பிச்சிட்டிருந்தம்னா நம்மால நிம்மதியா வாழவே முடியாது!”

“”போம்மா, நீ ஆறுதலா ஏதாவது சொல்வேன்னு பார்த்தா பெரிய தத்துவ ஞானியாட்டம் பேசிட்டிருக்கே..”

“”சரிடா, உன் ஆறுதலுக்காக வேணும்னா நீ ஒரு காரியம் செய்.. இன்னிக்கு சனிக்கிழமை… சனீஸ்வர பகவானுக்கு எள்ளு விளக்கேற்றிக் கும்பிட்டுவிட்டு வா… அவரோட வாகனம்தான் காகம், தெரியுமில்லே…?”

“”இப்பத்தான் நீ அம்மாவாட்டம் பேசுறே, தேங்க்ஸ்மா”- அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஓடினேன்.

“”எங்கடா போறே, சாப்பிட்டுப் போ” அம்மா கத்தினாள்.

“”கோவிலுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடறேம்மா…” என்று குரல் கொடுத்தபடியே சைக்கிளை நடையில் இறக்கிக் கிளம்பினேன்.



அலுவலக நண்பன் ஆதிமூலத்திடம் இதைச் சொல்ல வேண்டாமென நினைத்தேன். அவன் சரியான கிண்டல் பேர்வழி. உச்சந்தலையில் சுண்ணாம்பைப் பார்த்துவிட்டு அவனே கேட்டதால் சொல்ல வேண்டி வந்தது. சொன்னேன்…

நான் எதிர்பார்த்ததற்கு மாறாய் சம்பவத்தை அக்கறையோடு கேட்டான். அவன் முகம் கலவரமானது. “”உங்கம்மா சொன்னதுதான் சரியான தீர்வாயிருக்கும்னு நெனக்கிறேன்… சாயங்காலம் கோவிலுக்குப் போகும் போது கூப்பிடு சாரதி, நானும் வர்றேன்” என்றான்.

“”ஏண்டா ஆதி, உனக்கு என்ன ஆச்சி?”

“”எனக்கும் வீட்டுல ஏகப்பட்ட பிரச்னைடா.. என் காதலை அப்பா ஏத்துக்க மாட்டேன்றாரு.. அவர் சம்மதம் இல்லாம கல்யாணம் பண்றதுக்கு காவ்யா ஒத்துக்க மாட்டேன்றா.. மனசுக்கு நிம்மதியில்லாம ஒரு ஜோசியரைப் பார்த்தேன்…”

“”நீ ஜோஸ்யரைப் பார்த்தியா, ஆச்சரியமா இருக்குடா.. எதுக்கெடுத்தாலும் வியாக்கியானம் பேசுவியே…”

“”எல்லாம் நேரம்தான்.. அந்த ஜோசியர் என்ன சொல்றாருன்னா.. இப்போ எனக்கு ஏழரைச் சனி நடக்குதாம்… இன்னும் ஒரு வருசத்துல எல்லா பிரச்னையும் முடிவுக்கு வந்திடுமாம்.. அதுவரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானுக்கு கருநீல மலர்கள் அணிவித்து எள் தீபம் ஏற்றி வழிபடச் சொல்லி இருக்காரு…”

“”உனக்கு காதல். எனக்கு காகம்… சரீடா, சாயுங்காலம் ஒண்ணாகவே சனீஸ்வர பகவானைச் சந்திப்போம். இப்ப ஆபீஸ் வேலையைக் கவனிப்போம்.. மேனேஜர் நம்மளையே பார்த்திட்டிருக்கான்..” என்று தன் தாழ்வான குரலில் சொல்லவும் ஆதி தன் இருக்கைக்கு நகர்ந்தான்.

அதன்பிறகு காகம் என் கண்ணில் படவில்லை. சனீஸ்வர பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு நான் இயல்பாய் இருக்கத் தொடங்கினேன். திரும்பவும் ஒருநாள் வந்து அந்த அண்டங்காக்கை என் தலையில் பலமாகத் தாக்கிவிட்டுச் சென்றது. ரத்தம், சிகிச்சை. அன்றும் சனிக்கிழமைதான். இப்படி கிழமை பார்த்துவிட்டு வரத் தெரியுமா காகத்துக்கு?

அடுத்த நாள் ஞாயிறுதானே என்று அலட்சியமாய் நான் மாடிக்குப் போனேன். துணி உலர்த்திவிட்டு நான் திரும்பின வேளை எங்கிருந்தோ அது பறந்து வந்தது. ராட்சசப் பறவையாய் அது என் கண்களுக்குத் தெரிந்தது. சுதாரித்து நான் விலகுவதற்குள், என் தலையில் வாகாய் உட்கார்ந்து கொத்தத் தொடங்கியது. வலி தாங்காமல் நான் “அம்மா..ஆ..!’ என்று அலறினேன்.

என் சத்தம் கேட்டு அம்மா மாடிக்கு ஓடி வந்தாள். என் தலையில் உட்கார்ந்து கொத்துகிற காகத்தைப் பார்த்ததும் அவளும் பதறினாள். ஓரத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து விரட்டவும், தலையைவிட்டுப் பறந்த காக்கை கட்டைச் சுவற்றின் மேல் சற்றே உட்கார்ந்து, எங்களை கரிய விழிகளால் வன்மத்தோடு பார்த்தது. அதன் அருகிலிருந்து என் ரத்தம் கொட்டியது. என்னவோ தன் மொழியில் யானைப் பிளிறலாய்க் கரைந்து விட்டுப் பறந்து மறைந்தது!

பயத்தில் என் உடம்பு நடுங்குவதைத் துல்லியமாய் உணர்ந்தேன். அம்மாவை இறுகப் பற்றிக் கொண்டேன்.

அவள் முந்தானையால் எனது நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தாள். “பயப்படாதேப்பா’ என்றாள். அவள் குரலிலும் நடுக்கம். பருந்திடமிருந்து தன் குஞ்சைக் காப்பாற்றும் அன்னைக் கோழியாய் அரவணைத்து என்னை கீழே அழைத்துச் சென்று படுக்கவைத்தாள். போர்வையால் போர்த்தின பிறகும் என் உடல் நடுங்கியது.

டாக்டருக்குச் சென்று திருநீறு எடுத்து வந்து எனக்குப் பூசிவிட்டாள். பக்கத்தில் உட்காரந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

டாக்டர் வந்தார்.

அம்மா நடந்ததை விவரித்ததும் ஆச்சர்யத்தோடு கேட்டார். லேசான சிரிப்பு கூட அவருக்கு வந்தது.

“”என்ன சாரதி, காகத்துக்கும் உங்களுக்கும் என்ன பகை? ஏதோ பழைய தேவர் சினிமால வர்ற காட்சி மாதிரி இருக்கு.. நீங்க அந்த காகத்துக்கு என்னவோ கெடுதல் பண்ணி இருக்கீங்க.. யோசித்துப் பாருங்க..” -என்று மறுபடியும் கிண்டல் செய்துவிட்டுக் கிளம்பினார்.

என்றாலும் அவர் பேசியதில் ஒரு வரி என் மனதில் தங்கி உறுத்திக் கொண்டே இருந்தது -”நீங்க அந்தக் காகத்துக்கு என்னவோ கெடுதல் பண்ணி இருக்கீங்க!’

தனிமையில் யோசித்த போது ஒரு வருடத்துக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வு என் மனதில் நிழற்படமாய் விரிந்தது…

அன்று பக்கத்துக் கிராமத்தில் உறவின் முறை திருமணம் ஒன்றுக்கு, ஆதியின் ஸ்கூட்டரில் சென்றேன். வழியில் ஓடின நசுவினி ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது, ஆற்று மதகிலிருந்து மேலே பறந்து வந்த ஒரு காகம் ஸ்கூட்டர் வருவதைக் கவனிக்காமல் சட்டென்று மோதிக் கீழே விழுந்தது.

அது மோதின வேகத்தில் மயக்கமடைந்து கிடக்கிறதென நினைத்து நான் பயணமானேன். திருமணம் முடிந்து நான் திரும்பின போது அந்தக் காகம் அதே இடத்தில் இறந்து கிடந்தது. என் மனசுக்குச் சங்கடமானது.

ஒருவேளை இந்த அண்டங் காக்கை அதன் துணையாய் இருக்குமோ?

என்னென்னவோ நினைவுகள் தாக்கிட, கண்கள் மூடினாலும் கெட்ட கனவுகளே வந்தன.



அடுத்த நாள் காலை ஆதி வீட்டுக்கு வந்தான். அவன் கூடவே ஞானப் பழமாய் ஒரு முதியவர்.

“”சாரதி, எப்படிடா இருக்கே?”

“”இப்ப பரவாயில்லடா.. ஆனா அந்தக் காகத்துக்கு என் மேல மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் இருக்குங்கிறது எனக்குப் புரியலை!”- என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு அந்த முதியவர் சிரித்தார்.

“”ஆதி, இவர் யாருன்னு நீ சொல்லவே இல்லையே?”

“”அன்னிக்கு நான் சொன்னேனே, அந்த ஜோசியர் இவருதான்.. உன் பிரச்னையை இவர்கிட்ட சொல்லிப் பரிகாரம் கேட்டேன்… கேட்டதும் உன்னைப் பார்க்கணும்னு உடனே கிளம்பி வந்திட்டாரு..”

“”தம்பி, உங்க அம்மாவை வரச் சொல்லுப்பா…” என்று அவர் சொன்ன போது, அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

அம்மாவின் நெற்றியை ஏறெடுத்துப் பார்த்த அவர், “”நான் நெனச்சது சரிதான்.. தம்பி.. உங்க அப்பா இறந்து எத்தனை வருசமாச்சு..?”

அவர் இப்படிக் கேட்டதும், அம்மாவின் முகச் சதை கோணி, அடுக்களைக்கு இடம் பெயர்ந்தாள்.

“”அது சரியாத் தெரியலீங்கய்யா..” என்றேன்.

“”என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க?” -அந்த முதியவரின் குரலில் ஆச்சர்யம்.

“”ஆமாங்கய்யா, நான் உண்மையைத்தான் சொல்றேன்.. அப்பா, வேறொருத்தியைச் சேர்த்துகிட்டு எங்கம்மாவைத் தளளி வச்சிட்டாராம்.. அம்மா இந்த ஊருக்கு வந்து தனியாவே என்னை வளர்த்து ஆளாக்கினாங்க.. அந்தாளு முகம் கூட எனக்கு மறந்திடுச்சி… நாலஞ்சி வருஷத்துக்கு முன்னாடி அந்தாளு செத்திட்டாருன்னு எங்களுக்குச் சேதி வந்துச்சி.. அவர் மேல இருந்த வெறுப்பில் நான் போகலை. அம்மாவையும் போக வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னும் சொன்னா அந்தாளு செத்துட்டாங்கிறதுக்காக எங்கம்மா அமங்கலி கோலம் பூண்டது கூட எனக்குப் பிடிக்கலை.”

நான் சொன்ன செய்தியின் தாக்கத்தில் சூழ்நிலை இறுக்கமானது. அந்த முதியவரே அதைக் கலைத்தார். “”சரி, தம்பி நடந்தது நடந்து போச்சி.. ஆயிரம் இருந்தாலும் உங்க அப்பாவுக்குத் தலைச்சன் பிள்ளை நீங்கதான்.. நீங்க பித்ருதோஷம் கழிக்கிறதுண்டா?”

நீங்க சொல்றது எனக்குப் புரியலீங்கய்யா.. என்றேன்.

அவர் சிரித்தார் “”உங்க அபபாவுக்கு திவசம் கொடுக்கிறதுண்டான்னு கேட்டேன்?

அந்த ஆளு முகமே மறந்திடுச்சின்னு சொல்றேன்..அவருக்கு நான் எதுக்காக திவசம் கொடுக்கணும்?

அங்கதான் தம்பி தப்பு பண்ணிட்டீங்க.. என்னதான் நீங்க அந்த மனுசனை வெறுத்தாலும் அவரோட ரத்தம்தான் உங்க உடம்பில் ஒடுதுங்கிறதை மாற்றிட முடியுமா.. சாகும் தருணத்துல அவர் உங்கம்மாவையும், உங்களையும் ஏக்கத்தோடு நெனச்சிருக்கலாம். தன்னோட தவறை உணர்ந்து உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கு ஆசைப் பட்டிருக்கலாம். இப்படி நிராசையோடு சாகிற ஆத்மாக்களை சாந்தப்படுத்தறதுதான் திவசம்கிற சம்பிரதாயம். அதைச் செய்யாதவங்களோட பித்ருக்கள் காக்கை வடிவத்துலத வந்து கோரிக்கை வைப்பாங்க..”

“”இங்கே கோரிக்கை வைக்கலேயே.. திடீர்னு வந்து கொத்தினா என்னங்கய்யா நியாயம்? தப்பு பண்ணினது அந்த மனுஷன் அந்தாளு ஏங்கிச் செத்தாருன்னா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“”நான் சொல்றது உலக நியதி தம்பி.. ஒரு மனுசன் செய்ற எல்லா பாவங்களும் அவனோட மரணத்துல கரைஞ்சிடும். நீங்க உங்க அப்பாவுக்கு திவசம் கொடுங்க.. அப்புறம் அந்தக் காகம் வருதான்னு சொல்லுங்க..” -அந்த முதியவர் எழுந்து கொண்டார்.

அம்மா அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள்.

அவளை கும்பிட்டுவிட்டு அந்த முதியவர் கிளம்பிப் போனார். பிறகு வருவதாய் செய்கையில் உணர்த்திவிட்டு ஆதியும் அவரோடு வெளியேறினான்.

சில நிமிட யோசனைக்குப் பின் நான் உதடு பிரித்தேன்.

“”என்னம்மா அந்தப் பெரியவர் இப்படி சொல்லிட்டுப் போறாரு.. நாளைக்கே அப்பாவுக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு பண்ணிடட்டுமா?”

“”பண்ணித்தான் பாரேன்..” என்ற அம்மா அடுக்களைக்கு நடந்தாள். அவள் எப்போதும் இப்படித்தான். கொஞ்சமாய்ப் பேசி நிறைய செயல்படுகிறவள்.



அடுத்த நாளே அய்யர்களை வீட்டுக்கு வரவழைத்து அப்பாவுக்கு திவசம் கொடுத்தேன். அவர்கள் திருப்திப்படுகிற அளவுக்கு அரிசி, காய்கறிகள், பணம் எல்லாம் கொடுத்தனுப்பினேன்.

பிறகு அம்மாவையும் அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்து இலையில் அன்னம் படைத்துவிட்டு, “”கா.. கா..கா..கா..” -என்று காகங்களை அழைத்தேன். நிறைய காகங்கள் வந்து உண்டன.

கடைசியாக அந்த அண்டங்காக்கையும் வந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்குப் பயமும் வந்தது. அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டேன். உட்கார்ந்து அன்னத்தில் ஒரு கவளத்தைக் கவ்வியது. எங்களை நன்றியோடு பார்த்துவிட்டுப் பறந்து மறைந்தது.

அம்மா என்னைப் பார்த்து அர்த்தம் பொதிந்த புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டுப் படியிறங்க, நான் அவளைத் தொடர்ந்தேன்.

அவளிடம் பேச வேண்டுமென மனசு ஆசைப்பட்டாலும் வார்த்தைகள் வெளிவரத் தயங்கின. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்பதை முகம் உணர்த்தியது.

இரவு கடந்தும் எங்கள் இருவரிடையேயும் மெüனம்தான் பேசியது.

எனக்கு உறக்கம் வருவதாயில்லை. அதற்கான காரணமிருந்தது. மறுநாள் சனிக்கிழமை. அந்த அண்டங்காக்கை திரும்பவும் வந்தால்?

என்னென்னவோ சிந்தனைக் கொக்கிகள் மனசைத் தத்தம் போக்கில் இழுத்ததில் விடியும் வரை என் இமைகள் மூடவே இல்லை.

எழுந்தேன். குளித்தேன். எனது அதிகாலைக் குளியலை அம்மா ஆச்சர்யமாய்ப் பார்த்தாளே ஒழிய எதுவும் கேட்கவில்லை.

துணிகள் உலர்த்த மாடிப்படிகளில் ஏறியபோது என் மனதை இனம் புரியாத பயம் கவ்விக் கொள்ளக் கால்களில் நடுக்கம் உணர்ந்தேன்.

படிகள் கடந்து மொட்டை மாடிக்கு வந்தேன். நாலாபுறத்திலும் மெல்ல விழிப் பார்வை சுழற்றினேன். காட்சிகள், ஒருவிதமான மிரட்சியோடு என் விழித் திரையில் பதிவாகின. கடைசியாக…

ஈசான மூலைக் கட்டைச் சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்த அந்த அண்டங்காக்கை என்னையே உறுத்துப் பார்த்திருந்தது. ஏன் இப்படி?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by ஸ்ரீராம் Mon Oct 26, 2015 9:16 am

கருத்தான கதைகள். சிந்திக்க வைத்தது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 3:55 pm

கருத்தான கதைகள். சிந்திக்க வைத்தது.

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 3:55 pm

மாசானம் விலாஸ் சைக்கிள்
-------------------------
“”என்னங்க… நா அப்போயிருந்து கத்திக்கிட்டே இருக்கேன். கொஞ்சங்கூட அசைஞ்சு குடுக்காமெ ஒக்காந்திருக்கீங்களே… பத்து கிலோ அரிசியும், பல சரக்கு சாமானும் நேத்தே வாங்கி வைச்சாச்சு. அதக் கொண்டுட்டுப் போயி அந்தப் பயல் அம்மாசியோட வீட்ல குடுத்துட்டு வர்றதுக்கு, வாரக் கணக்கிலேயா ஆவப் போவது? மூணு கிலோ மீட்டர் தூரந்தான் சுருளிப்பட்டி. ஒங்க மொபட்ல கொஞ்ச நேரத்துல போயிட்டு வந்துறலாம். இப்படிக் கொஞ்சங்கூடச் சொரணையத்துப் போயி ஒக்காந்துருக்கீங்களே…” ஐந்தாவது முறையாக வார்த்தைகளில் வெடித்தாள் மாசானத்தின் மனைவி பூங்கோதை. கடந்த நான்கு முறையும் ஊசிப் பட்டாசாய் சுதி குறைத்திருந்த அவளது வார்த்தைகள் இந்த முறை சலிப்பின் உச்சத்திற்கே சென்றது போலச் சரவெடியில் சத்தங்கள் கூட்டியிருந்தது.

அவளின் இந்த ஆத்திரக் கூப்பாடு மாசானத்தின் மனசை என்னவோ செய்வது போலிருந்தது. ஏற்க முடியாது நெட்டித் தள்ளியது இதயம். கண்களில் கனல். பார்வையில் கோப வெக்கை. “”இத… பார்டீ எதுக்கு இப்படி நாக்கால கும்மியடிச்சிட்டு இருக்குற? நானே, ராத்திரி ஹோட்டல்ல நிறுத்தி வைச்சிருந்த சைக்கிளக் காணோம்னுட்டு வேதனையில கெடந்து இருக்கேன். ரெண்டாயிரத்துச் சொச்சம் பெறுமானமுள்ள சைக்கிள எந்தப் பய களவாண்டுட்டுப் போனானோன்னு வெளங்காம விரக்திப்பட்டு கெடக்கேன்… நீ என்னடான்னா மனிதாபிமானம் மண்ணாங்கட்டின்னு நக்காலத் தாளிச்சிட்டிருக்க…” என்று எதிர்முனை வார்த்தை போர் செய்தவாறு மீண்டும் காணாமல் போய்விட்டிருந்த சைக்கிள் பற்றிய சிந்தனையிலேயே மனசை கவலையுடன் மேய விடத் தொடங்கினான்.

“”நமக்கு ஆயிரம் பிரச்னைங்க இருக்கத்தாஞ் செய்யும். அதுக்காக, அடுத்தவங்க கஷ்டத்தை உணர வேண்டாமா? பதினாலு வயசுக்குக் கம்மியா இருக்குற பையன்கள வேலைக்கு அமர்த்த கூடாதுன்னு சட்டம் கடுமையா பாய்ஞ்சதால அந்த பச்ச மண்ணு அம்மாசிய ஹோட்டல் வேலைக்கு வேணாம்னுட்டு நிறுத்திட்டீங்க. ஆனா அடுத்த வேளை சோத்துக்கு அவெ என்ன பண்ணுவான்னு யோசீச்சீங்களா? அத வுட்டுட்டு, சைக்கிளக் காணோம்னு பொலம்பிக்கிட்டு இருக்கீங்களே. நீங்களே பேனை ஈறு ஆக்கி அந்த ஈறுல வெண்ணெய் எடுக்கற ரகம். ஒங்ககிட்ட எவனாச்சும் சைக்கிளத் திருடிட்டுத் தப்பிச்சிற முடியுமா? எங்காச்சும் மறந்து வெச்சிருப்பீங்க. சாயங்காலமே யாராச்சும் “இந்தாப்பா ஒஞ் சைக்கிள்’னு கொண்டாந்து குடுக்கப் போறான் -அதான் சைக்கிள்ல பெரிசா “ஹோட்டல் மாசானம் விலாஸ்’ன்னு எழுதி வெச்சிருக்கீங்களே… அது போதாதா? நீங்க இப்ப ஒடனே கௌம்பிப் போயி, அரிசி மளிகைச் சாமான்கள் இருக்குற பைங்கள அம்மாசியோட அம்மாகிட்ட குடுத்துட்டு வாங்க.” என்றவாறு தானும் பிடிவாதத்தில் சளைத்தவள் இல்லை என்பதுபோல வார்த்தைகளால் எகிறிக்கொண்டு முடுக்கினாள், பூங்கோதை.

“இத… பாரு பூங்கோத. நாஞ் சொல்றத நம்பு… வெளீல எங்கேயும் சைக்கிள நிறுத்தல. நம்ப ஹோட்டல்லதான் நிறுத்தியிருந்தேன். நெசமாகவே எவனோ களவாண்டுட்டுப் போயிட்டான்” என்று மீண்டும் ஒரு முறை அவளிடம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்போல இருக்கிறது அவனுக்கு. ஆனால் தொண்டை வரையில் வந்துவிட்டிருந்த வார்த்தைகள் நாவிற்கு வரவிடாமல் கடிவாளமிட்ட குதிரையாக ஒருவித சஞ்சலம் நிறுத்தி விட்டிருந்தது.

ஆத்திரத்தின் உச்சஸ்தாயியில் பற்களை நறநறவென்று கடித்தவன் சட்டென்று உட்கார்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தவாறு ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து உடுத்திக் கொண்டவாறு அலமாரியில் வயிறு முட்டிக் கிடந்த, அரிசியும் மளிகைச் சாமான்களும் நிறைந்த துணிப் பைகளை கைக்கு ஒன்றாக இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டபடி வெளியில் போய், அவற்றை மொபட்டின் பின்பக்கக் கேரியரில் வைத்து இறுகக் கட்டிக் கொண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுருளிப்பட்டியை நோக்கி பயணப்படத் தொடங்கினான். “சீய்.. என்னதான் ஜென்மமோ. மனசுல ஈரம் இருக்க வேண்டியதுதான்… அதுக்காக தன்கிட்ட வேலை பார்த்த எவனோ ஒரு சிறு பையனுக்காக கட்டின புருஷங்கூட மல்லுக்கு நிக்கிற அளவுக்கு மன ஈரம்கிறது இப்டி ஐஸ் கட்டியாவா உருகிக் கொட்டி நம்ப உசிர வாங்கணும்?’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவாறு பயணப்பட்டவனை, இங்கிருந்து சுருளிப்பட்டி வரையில் உள்ள மேடு, பள்ளமுமான சாலையும் அச்சுறுத்த “இன்னிக்கு இந்த ரோட்டுல அஞ்சும் அஞ்சும் பத்து கிலோ மீட்டர் போய் வர்றதுக்குள்ளார ஈரக்கொலை அந்து போகும்டா சாமீ!’ என்று உள்ளுக்குள் புலம்பியவாறே பயணப்பட்டவன் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இந்தச் சாலையில் பயணப்பட்டாலே பெரிய விஷயம் என்பது போலப்பட்டது அவனுக்கு.

அந்தச் சீரற்ற சாலைப் பயணத்திலும், தடம் புரளாமல் அம்மாசி பற்றிய சிந்தனையிலேயே எண்ண ஓட்டமிருந்தது.

நேற்றுமுன்தினம் காலையில், அம்மாசி ஹோட்டலுக்கு வந்து, “மொதலாளி… எனக்கு ஆயிரம் ரூவா கடன் வேணும். நாலஞ்சு மாசத்துல திரும்பத் தந்துடறேன்’ என்று பவ்யமாகவும், ஒருவிதப் பயத்துடனும் கேட்டான்.

அவனது அந்த எதிர்பார்த்திராத கோரிக்கை மாசானத்திற்கு செவிட்டிலறைவது போலிருந்தது. “”எதுக்குடா ஆயிரம் ரூவா? என்ன விஷயம்?’ என்று கேட்டான்.

“”குழந்தை தொழிலாளிங்கள வேலைக்கு வெச்சுக்கக் கூடாதுன்னு நீங்க என்னை வேலைக்கு வேண்டாம்னு சொல்லிட்டீங்க… வேற எங்க வேலை கேட்டுப் போனாலும், “ஒனக்குப் பரிதாபப்பட்டு நாங்க வேல குடுத்துட்டு ஜெயில்ல கம்பி எண்ண சொல்றீயான்னு சொல்லிடறாங்க. அதனால நா மறுபடியும் ஆறாம் வகுப்புல சேர்ந்து படிக்கப் போறேங்க மொதலாளி. அட்மிஷன் ஃபீஸ், நோட்டுப் புஸ்தகம்னு ஆயிரம் ரூவா வரைக்கும் செலவாகும்போல, நீங்கத் தந்தீங்கன்னா…” ஆவலுந்தாவலுமான கெஞ்சல் குரலில் அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“என்னாதூ… ஆயிரம் ரூவா உனக்குக் கடனா தந்துட்டா முழு சீக்காலியா கெடக்குற ஙொப்பெ உடனே சீரஞ்சீவித் தன்மையோட எழுந்து தாவிக் குதிச்சு வேல வெட்டிக்குப் போயி சம்பாதிச்சு ஏங்கடன அடைச்சிருவானாக்கும்..? போடா எவனும் வேலைக்குச் சேக்கலைன்னா போயி கோலிக்குண்டு, கிட்டிப்புள்ள வெளையாடு, இல்லைன்னா நீயும் ஒரு மட்டைய எடுத்துட்டு ஓ சினேகிதங்களோட கண்மாயில் கிரிக்கெட் வெளையாடி நீயாச்சும் நம்ப நாட்டுக்கு ஒலகக் கோப்பைய வாங்கிக் குடு… ம் நிக்காத எனக்கு ஆயிரத்தெட்டு சோலி இருக்குது. ம்… கௌம்பு, கௌம்பு!’ அவரது நாக்கு கோபம் கொண்ட வெறிநாயாய் அவதாரமெடுத்து அம்மாசியைத் துரத்தியது.

அத்துடன், அவனை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு கல்லாவிலிருந்து இறங்கி ஹோட்டலின் சமையலறைக்குள் நுழைந்து கொண்டான் மாசாணம். மறுபடியும் கல்லாவுக்கு வந்தபோது, அவன் எதிர்பார்த்தது போலவே அம்மாசி அங்கு இல்லை. அவன் அழுதுகொண்டே சென்றுவிட்டதாக ஹோட்டல் சப்ளையர்களில் ஒருவன் தெரிவித்தான்.

அம்மாசி, ஐந்தாம் வகுப்பு முடித்த கையோடு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததாலும், குடும்பத்தின் வருமானத் தூணாக இருந்த அவனது அப்பா பெரும் வியாதியால் பீடிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டோடு முடங்கிப் போய் விட்டதாலும் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சுருளிப்பட்டியிலிருந்து இந்த நடுத்தர நகரத்துக்கு வேலை தேடி வந்து பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காமல், இறுதியாக மாசாணத்தின் ஹோட்டலில் “கிளீனர் வேலைக்குச் சேர்ந்திருந்தான். பம்பரமாகச் சுழன்று சுழன்று வேலை பார்ப்பான். எதற்கும் சளைக்காதவன் “மாஸ்டர்… அண்ணனுக்கு ஒரு தோசை… இதோ இந்த ஸாருக்கு ஒரு பூரி செட்… அப்புறம் அஞ்சு இட்லி பார்சல்…’ என்று ஒருவித தொழில் முறை இழுவைக் குரலில் அவன் உத்தரவு போடுவதை கேட்பதற்கே ஆசைஆசையாய் இருக்கும். மிகவும் நேர்மையானவன்; பொய் பித்தலாட்டம் என்று எதுவும் அறியாத பிஞ்சு’ என்று நற்பெயரை வேலைக்குச் சேர்ந்து ஓரிரு வாரங்களிலேயே சம்பாதித்துக் கொண்டவன். “எனக்கு ரெண்டு பையன்களிருந்தும் ரெண்டும் வெளங்காத வெளக்க மாறுகளா போய்ருச்சுங்க. ஒன்னப்போல செய்ற தொழில்ல அக்கறையுள்ள புள்ள ஒண்ணாவது எனக்கு இருந்திருந்தா, இதப் போல இன்னும் ஒரு ஓட்டலுக்கு ஒனராயிருப்பேன்’ என்று எப்போதாவது ஹோட்டலுக்கு வந்து போகிற மாசாணத்தின் மனைவி பூங்கோதை அவனை மெச்சி உச்சி மோந்து போவதுண்டு.

தினமும் ஹோட்டலில் விற்பனை போக மீந்துபோகிற இட்லி, புரோட்டாக்களை, வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகுமாறு, அவள்தான் அம்மாசியிடம் கூறியிருந்தாள். இதனால், வீட்டின் உணவுத் தேவையில் ஒரு பெரும்பகுதியையே சரிக்கட்ட முடிந்திருந்தது அம்மாசியினால்.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் தீவிரமாக நடைமுறைக்கு வரத் துவங்கியவுடன், அம்மாசியின் வேலையும் பறிபோய், சம்பளம் மற்றும் ஹோட்டலில் மீந்த உணவும் பறிபோயிருக்க, அவனது குடும்பமே பெரும் இக்கெட்டில் தவிக்கிற குரூரத்தைக் கேள்விப் பட்டிருந்த பூங்கோதை “என்னங்க நம்ப ஹோட்டல்ல வேல பார்த்தானே அம்மாசி… அவுங்க அப்பனும் நோயாளி. அவுங்க அம்மா சம்பாதிக்கிற கூலி பணத்துல அந்தாளு வைத்தியத்துக்கே பெரும்பகுதி போய்ருமாம். கால் வயிறும் அரை வயிறுமா சாப்பிட்டுக்கிட்டு கண்ணு முழி பிதுங்கிக் கெடக்காங்களாம். அந்தப் பையன் நம்பகிட்ட வேல பார்த்த வரைக்கும். சொந்த ஹோட்டல் கணக்கா ராப்பகலா உழைச்சானே… பாவம்ங்க. வேலையிலேர்ந்து அவனை நிறுத்திட்டு நாம ஒரு ஒதவியும் பண்ணல. நா பத்து கிலோ அரிசியும், கொஞ்சம் மளிகைச் சாமானும் வாங்கி வெச்சிருக்கேன். அதக் கொண்டு போயி அந்தப் பையனோட வீட்டுல குடுத்துட்டு வாங்களேன்.’ என்று கடந்த சில தினங்களாகவே அவனை வற்புறுத்திக் கொண்டிருக்க, அவன் ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்லிக் காலங் கடத்தினான். ஆனால், இன்று அதைக் கொண்டு போய் தந்துவிட்டு வரும்படி நகர மறுக்கும் எருதுவை தார்க்குச்சியால் சீண்டி இணங்க வைப்பது போல, கட்டன் ரைட்டான வார்த்தைப் பிளிறலால் அவனது மனதைக் கனிய செய்திருந்தாள்.

நெடுஞ்சாலை துறையினரால் சாலை வசதியமைப்பதற்காக குண்டுங் குழியுமாகத் தோண்டிப் போட்டிருந்த அந்தச் சாலையில் அரிசி, மளிகைப் பொட்டலங்கள் சகிதமாக மொபட்டில் பயணப்பட்டிருந்த மாசாணம் குக்கிராமமான சுருளிப்பட்டியை அடைந்து, சிறுவன் அம்மாசியின் வீடு இருக்கிற அந்த முட்டுச் சந்துக்குள் நுழைந்து மொபட்டை நிறுத்திவிட்டு, அவனது வீட்டை நோக்கிப் பார்வையைச் செலுத்தினான்.

அவ்வளவுதான்… அந்தக் காட்சி அவனைக் கிறுகிறுக்கச் செய்தது. தேன் கசப்பாய் இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாதது போல் அம்மாசியா இப்டி மாறித் தொலைச்சிட்டான்? என்று நம்ப முடியாத தவிப்பு. ஆத்து வெள்ளங்கூட அரிக்க முடியாத ஆலமரத்து வேரு கணக்கா இருந்த நம்பள நேத்து முளைச்ச காளான் அசைச்சுப் பார்த்துட்டானே!’ என்று அவமானமாய்க் கூனிக் குறுகும் உள் மனசு.

நேற்று இரவு ஹோட்டலில் திருடு போய் விட்டதாகச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த மாசாணத்தின் சைக்கிள், அம்மாசியின் குடிசை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அவனைப் பார்த்ததும், வாசலில் உட்கார்ந்திருந்த அம்மாசியின் தாய் வேகமாய் -ஆனந்தக் கூத்தில் ஓடி வந்து அவனது அருகில் நின்றவாறு, “”ஐயா… நீங்க நல்லாயிருக்கணும். ஏ மகன் படிப்புச் செலவுக்கு ஏங்ககிட்ட ஆயிரம் ரூவா கடன் கேட்டு வந்தப்ப “இப்போ கைவசம் பணம் இல்ல; இந்தச் சைக்கிள எடுத்துப் போயி வித்து, நோட்டுப் புஸ்தகம் வாங்கிப் படி!’ன்னு சொல்லி இந்தச் சைக்கிள அவெங்கிட்டக் குடுதனுப்பினீங்களாம். ஒங்களுக்கு எவ்வளோ பெரிய மனசு!’ என்று சந்தோஷச் சிரிப்பாணியுடன் சொன்ன அவள் “”வீட்டுக்குள்ள வாங்கய்யா… காபி சாப்பிட்டுப் போவீங்க…” என குதூகலப் பிரவாகத்துடன் கூப்பிட்டாள். வானம் பார்த்த வெக்கை பூமியான அவளது மனசில் ஈரம்போல அந்தக் கணம் பிரவாகமெடுத்திருந்த மகிழ்ச்சியை வறண்ட முகத்தில் ஒளிக்கீற்றாய்ப் படர்ந்த மலர்ச்சி அடையாளங் காட்டிற்று.

அந்தக் குறைந்தபட்ட மகிழ்ச்சியை “அது உன் மகன் திருட்டி வந்த சைக்கிள்’ என்று கூறி நொடிப் பொழுதில் கொன்று போட மனமின்றி, மொபெட்டில் இருந்து அரிசி, மளிகைச் சாமான்களடங்கிய துணிப் பைகளை அவிழ்த்து அவளது கைகளில் தந்துவிட்டு எதுவும் பேசாமல் தலைகவிழந்தவாறே மொபட்டை ஸ்டார்ட் செய்து, அந்த இடத்திலிருந்து புறப்பட்டான் மாசாணம்.

- அல்லி நகரம் தாமோதரன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 3:58 pm

திருடனை விரட்ட முயன்ற கழுதை


கழுதைதிருடன் வண்ணான்

(திரு.கி.ஆ.பெ. விசுவநாதம் கூறிய கதை)

வண்ணான் ஒருவன் நாயை வளர்த்தான். அது, துணிகளைத் திருடாமல் காவல் காத்து வந்தது. ஒரு சமயம் நள்ளிரவில் திருட வந்தவனைக் கண்டு குரைத்தது. வீட்டுக்கார வண்ணான் விழித்துக் கொள்ளவே, வந்த திருடன் ஓடிப்போய் விட்டான். இதனால் நாயைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தான்.

இப்படியிருக்க சில நாட்களுக்குப் பின், வேறொரு திருடன் துணிமணிகளைத் திருட வந்தான். அப்போது நாய் அங்கு இல்லை. திருடனைப் பார்த்த கழுதை சத்தம் போட ஆரம்பித்தது.

வண்ணான் எழுந்தான். தடியை எடுத்து வந்தான். “பகலெல்லாம் உழைத்து இரவிலே தூங்குகிற என்னைத் தூங்கவிடாமல் கத்தித் தொந்தரவு படுத்துகிறாயே! இது சரியா?” என்று அடித்து நொறுக்கினான்.

இதிலிருந்து ஒருவர் வேலையை மற்றொருவர் செய்யக் கூடாது என்று தெரிய வருகிறது. சில வேலைகளைச் சிலர்தான் செய்ய வேண்டும்; அந்த வேலையை மற்றவர் செய்வதால் இப்படித்தான் நேரும் என்பது உண்மைதானே?

இதற்கு நாம் தரும் பின் குறிப்பு :

நீங்கள் கழுதையாக இருந்தால், நாய்க்கு பதில் சத்தம் போட்டு அடி வாங்காமல் தப்பித்துக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை நீங்கள் அந்த வண்ணானாக இருந்தால், கழுதை ஏன் கத்துகிறது என்பதை அறிந்து பொருளை களவு கொடுக்காமல் காத்துக் கொள்ளுங்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:00 pm

ஏன் இப்படி..?
--------------------
இருட்டைக் குழைத்து அப்பினது போலக் கன்னங் கரேல் என்றிருந்தது அந்த அண்டங் காக்கை. சற்றே பெரிய உருவம். மின்னும் கறுப்பு. மாடி கட்டைச் சுவற்றின் மேல் அமர்ந்து கோலிக் குண்டு மாதிரி விழிகளில் என்னையே உறுத்துப் பார்த்திருந்தது.

துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக மாடிக்கு வந்த போதுதான் அதை நான் பார்த்தேன். இதற்கு முன் இந்தப் பகுதியில் தென்பட்டதில்லை இந்தக் காக்கை. இங்கே அடிக்கடி உலவுகிற பறவைகளை எனக்கு அடையாளம் தெரியும். மற்றவர்கள் அலட்சியம் செய்கிற சில விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகமுண்டு. “சலீம் அலி’ என்று நண்பர்கள் நக்கல் செய்வார்கள். பறவைகளிடமும் நட்பு பாராட்டுகிற புத்தி.

அதன் மீதிருந்த பார்வையை அகற்றித் துணிகளை உலர்த்தினேன். வெற்று வாளியோடு படியிறங்கப் போன வேளை ஏதோ ஒரு விசை என் தலைக்கு மேலே பறந்து வருவதை நான் உணர்வதற்குள், பட்டென்று என் உச்சந்தலையில் அடித்துவிட்டுப் பறந்தது. வலி பொறுக்காமல் “அம்மா’வென்று முனகியபடியே அண்ணாந்து பார்த்தேன்…

அந்த அண்டங்காக்கைதான்! அலகைப் பிளந்து காட்டியபடியே பறந்து மறைந்தது. எங்கிருந்து வந்தது? என்னாயிற்று அதற்கு? ஏன் காத்திருந்து என்னைத் தாக்கி விட்டுப் பறந்து செல்ல வேண்டும்?

உச்சந்தலையில் கை வைத்துப் பார்த்தேன். பிசுபிசுத்தது. கையை எடுத்துப் பார்த்தேன். ரத்தம். உடனே மனம் பதறத் தொடங்கியது. அவசரமாய்க் கீழே இறங்கி வந்தேன். அம்மாவிடம் நடந்ததைப் பதற்றம் விலகாமல் அப்படியே வர்ணித்தேன்.

“”ஏம்மா.. ஏன் இப்படி நடந்துச்சி…?”

அம்மா சிரித்தபடியே சுண்ணாம்பு கொண்டு வந்து காயத்தில் தடவினாள். எரிந்தது.

“”என்னம்மா சிரிக்கிறே? நான் எவ்வளவு பதற்றமா இருக்கேன் தெரியுமா? நீ என்னடான்னா சிரிக்கிறே?”

“”சிரிக்காம என்னடா செய்யச் சொல்றே.. இப்படி யதார்த்தமா நடக்கிற நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் கற்பிச்சிட்டிருந்தம்னா நம்மால நிம்மதியா வாழவே முடியாது!”

“”போம்மா, நீ ஆறுதலா ஏதாவது சொல்வேன்னு பார்த்தா பெரிய தத்துவ ஞானியாட்டம் பேசிட்டிருக்கே..”

“”சரிடா, உன் ஆறுதலுக்காக வேணும்னா நீ ஒரு காரியம் செய்.. இன்னிக்கு சனிக்கிழமை… சனீஸ்வர பகவானுக்கு எள்ளு விளக்கேற்றிக் கும்பிட்டுவிட்டு வா… அவரோட வாகனம்தான் காகம், தெரியுமில்லே…?”

“”இப்பத்தான் நீ அம்மாவாட்டம் பேசுறே, தேங்க்ஸ்மா”- அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு ஓடினேன்.

“”எங்கடா போறே, சாப்பிட்டுப் போ” அம்மா கத்தினாள்.

“”கோவிலுக்குப் போய்ட்டு வந்து சாப்பிடறேம்மா…” என்று குரல் கொடுத்தபடியே சைக்கிளை நடையில் இறக்கிக் கிளம்பினேன்.



அலுவலக நண்பன் ஆதிமூலத்திடம் இதைச் சொல்ல வேண்டாமென நினைத்தேன். அவன் சரியான கிண்டல் பேர்வழி. உச்சந்தலையில் சுண்ணாம்பைப் பார்த்துவிட்டு அவனே கேட்டதால் சொல்ல வேண்டி வந்தது. சொன்னேன்…

நான் எதிர்பார்த்ததற்கு மாறாய் சம்பவத்தை அக்கறையோடு கேட்டான். அவன் முகம் கலவரமானது. “”உங்கம்மா சொன்னதுதான் சரியான தீர்வாயிருக்கும்னு நெனக்கிறேன்… சாயங்காலம் கோவிலுக்குப் போகும் போது கூப்பிடு சாரதி, நானும் வர்றேன்” என்றான்.

“”ஏண்டா ஆதி, உனக்கு என்ன ஆச்சி?”

“”எனக்கும் வீட்டுல ஏகப்பட்ட பிரச்னைடா.. என் காதலை அப்பா ஏத்துக்க மாட்டேன்றாரு.. அவர் சம்மதம் இல்லாம கல்யாணம் பண்றதுக்கு காவ்யா ஒத்துக்க மாட்டேன்றா.. மனசுக்கு நிம்மதியில்லாம ஒரு ஜோசியரைப் பார்த்தேன்…”

“”நீ ஜோஸ்யரைப் பார்த்தியா, ஆச்சரியமா இருக்குடா.. எதுக்கெடுத்தாலும் வியாக்கியானம் பேசுவியே…”

“”எல்லாம் நேரம்தான்.. அந்த ஜோசியர் என்ன சொல்றாருன்னா.. இப்போ எனக்கு ஏழரைச் சனி நடக்குதாம்… இன்னும் ஒரு வருசத்துல எல்லா பிரச்னையும் முடிவுக்கு வந்திடுமாம்.. அதுவரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானுக்கு கருநீல மலர்கள் அணிவித்து எள் தீபம் ஏற்றி வழிபடச் சொல்லி இருக்காரு…”

“”உனக்கு காதல். எனக்கு காகம்… சரீடா, சாயுங்காலம் ஒண்ணாகவே சனீஸ்வர பகவானைச் சந்திப்போம். இப்ப ஆபீஸ் வேலையைக் கவனிப்போம்.. மேனேஜர் நம்மளையே பார்த்திட்டிருக்கான்..” என்று தன் தாழ்வான குரலில் சொல்லவும் ஆதி தன் இருக்கைக்கு நகர்ந்தான்.

அதன்பிறகு காகம் என் கண்ணில் படவில்லை. சனீஸ்வர பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு நான் இயல்பாய் இருக்கத் தொடங்கினேன். திரும்பவும் ஒருநாள் வந்து அந்த அண்டங்காக்கை என் தலையில் பலமாகத் தாக்கிவிட்டுச் சென்றது. ரத்தம், சிகிச்சை. அன்றும் சனிக்கிழமைதான். இப்படி கிழமை பார்த்துவிட்டு வரத் தெரியுமா காகத்துக்கு?

அடுத்த நாள் ஞாயிறுதானே என்று அலட்சியமாய் நான் மாடிக்குப் போனேன். துணி உலர்த்திவிட்டு நான் திரும்பின வேளை எங்கிருந்தோ அது பறந்து வந்தது. ராட்சசப் பறவையாய் அது என் கண்களுக்குத் தெரிந்தது. சுதாரித்து நான் விலகுவதற்குள், என் தலையில் வாகாய் உட்கார்ந்து கொத்தத் தொடங்கியது. வலி தாங்காமல் நான் “அம்மா..ஆ..!’ என்று அலறினேன்.

என் சத்தம் கேட்டு அம்மா மாடிக்கு ஓடி வந்தாள். என் தலையில் உட்கார்ந்து கொத்துகிற காகத்தைப் பார்த்ததும் அவளும் பதறினாள். ஓரத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து விரட்டவும், தலையைவிட்டுப் பறந்த காக்கை கட்டைச் சுவற்றின் மேல் சற்றே உட்கார்ந்து, எங்களை கரிய விழிகளால் வன்மத்தோடு பார்த்தது. அதன் அருகிலிருந்து என் ரத்தம் கொட்டியது. என்னவோ தன் மொழியில் யானைப் பிளிறலாய்க் கரைந்து விட்டுப் பறந்து மறைந்தது!

பயத்தில் என் உடம்பு நடுங்குவதைத் துல்லியமாய் உணர்ந்தேன். அம்மாவை இறுகப் பற்றிக் கொண்டேன்.

அவள் முந்தானையால் எனது நெற்றியில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தாள். “பயப்படாதேப்பா’ என்றாள். அவள் குரலிலும் நடுக்கம். பருந்திடமிருந்து தன் குஞ்சைக் காப்பாற்றும் அன்னைக் கோழியாய் அரவணைத்து என்னை கீழே அழைத்துச் சென்று படுக்கவைத்தாள். போர்வையால் போர்த்தின பிறகும் என் உடல் நடுங்கியது.

டாக்டருக்குச் சென்று திருநீறு எடுத்து வந்து எனக்குப் பூசிவிட்டாள். பக்கத்தில் உட்காரந்து என் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

டாக்டர் வந்தார்.

அம்மா நடந்ததை விவரித்ததும் ஆச்சர்யத்தோடு கேட்டார். லேசான சிரிப்பு கூட அவருக்கு வந்தது.

“”என்ன சாரதி, காகத்துக்கும் உங்களுக்கும் என்ன பகை? ஏதோ பழைய தேவர் சினிமால வர்ற காட்சி மாதிரி இருக்கு.. நீங்க அந்த காகத்துக்கு என்னவோ கெடுதல் பண்ணி இருக்கீங்க.. யோசித்துப் பாருங்க..” -என்று மறுபடியும் கிண்டல் செய்துவிட்டுக் கிளம்பினார்.

என்றாலும் அவர் பேசியதில் ஒரு வரி என் மனதில் தங்கி உறுத்திக் கொண்டே இருந்தது -”நீங்க அந்தக் காகத்துக்கு என்னவோ கெடுதல் பண்ணி இருக்கீங்க!’

தனிமையில் யோசித்த போது ஒரு வருடத்துக்கு முன்னால் நடந்த அந்த நிகழ்வு என் மனதில் நிழற்படமாய் விரிந்தது…

அன்று பக்கத்துக் கிராமத்தில் உறவின் முறை திருமணம் ஒன்றுக்கு, ஆதியின் ஸ்கூட்டரில் சென்றேன். வழியில் ஓடின நசுவினி ஆற்றுப் பாலத்தைக் கடந்தபோது, ஆற்று மதகிலிருந்து மேலே பறந்து வந்த ஒரு காகம் ஸ்கூட்டர் வருவதைக் கவனிக்காமல் சட்டென்று மோதிக் கீழே விழுந்தது.

அது மோதின வேகத்தில் மயக்கமடைந்து கிடக்கிறதென நினைத்து நான் பயணமானேன். திருமணம் முடிந்து நான் திரும்பின போது அந்தக் காகம் அதே இடத்தில் இறந்து கிடந்தது. என் மனசுக்குச் சங்கடமானது.

ஒருவேளை இந்த அண்டங் காக்கை அதன் துணையாய் இருக்குமோ?

என்னென்னவோ நினைவுகள் தாக்கிட, கண்கள் மூடினாலும் கெட்ட கனவுகளே வந்தன.



அடுத்த நாள் காலை ஆதி வீட்டுக்கு வந்தான். அவன் கூடவே ஞானப் பழமாய் ஒரு முதியவர்.

“”சாரதி, எப்படிடா இருக்கே?”

“”இப்ப பரவாயில்லடா.. ஆனா அந்தக் காகத்துக்கு என் மேல மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் இருக்குங்கிறது எனக்குப் புரியலை!”- என்றேன்.

நான் சொன்னதைக் கேட்டு அந்த முதியவர் சிரித்தார்.

“”ஆதி, இவர் யாருன்னு நீ சொல்லவே இல்லையே?”

“”அன்னிக்கு நான் சொன்னேனே, அந்த ஜோசியர் இவருதான்.. உன் பிரச்னையை இவர்கிட்ட சொல்லிப் பரிகாரம் கேட்டேன்… கேட்டதும் உன்னைப் பார்க்கணும்னு உடனே கிளம்பி வந்திட்டாரு..”

“”தம்பி, உங்க அம்மாவை வரச் சொல்லுப்பா…” என்று அவர் சொன்ன போது, அம்மா காபி கொண்டு வந்து கொடுத்தாள்.

அம்மாவின் நெற்றியை ஏறெடுத்துப் பார்த்த அவர், “”நான் நெனச்சது சரிதான்.. தம்பி.. உங்க அப்பா இறந்து எத்தனை வருசமாச்சு..?”

அவர் இப்படிக் கேட்டதும், அம்மாவின் முகச் சதை கோணி, அடுக்களைக்கு இடம் பெயர்ந்தாள்.

“”அது சரியாத் தெரியலீங்கய்யா..” என்றேன்.

“”என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க?” -அந்த முதியவரின் குரலில் ஆச்சர்யம்.

“”ஆமாங்கய்யா, நான் உண்மையைத்தான் சொல்றேன்.. அப்பா, வேறொருத்தியைச் சேர்த்துகிட்டு எங்கம்மாவைத் தளளி வச்சிட்டாராம்.. அம்மா இந்த ஊருக்கு வந்து தனியாவே என்னை வளர்த்து ஆளாக்கினாங்க.. அந்தாளு முகம் கூட எனக்கு மறந்திடுச்சி… நாலஞ்சி வருஷத்துக்கு முன்னாடி அந்தாளு செத்திட்டாருன்னு எங்களுக்குச் சேதி வந்துச்சி.. அவர் மேல இருந்த வெறுப்பில் நான் போகலை. அம்மாவையும் போக வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னும் சொன்னா அந்தாளு செத்துட்டாங்கிறதுக்காக எங்கம்மா அமங்கலி கோலம் பூண்டது கூட எனக்குப் பிடிக்கலை.”

நான் சொன்ன செய்தியின் தாக்கத்தில் சூழ்நிலை இறுக்கமானது. அந்த முதியவரே அதைக் கலைத்தார். “”சரி, தம்பி நடந்தது நடந்து போச்சி.. ஆயிரம் இருந்தாலும் உங்க அப்பாவுக்குத் தலைச்சன் பிள்ளை நீங்கதான்.. நீங்க பித்ருதோஷம் கழிக்கிறதுண்டா?”

நீங்க சொல்றது எனக்குப் புரியலீங்கய்யா.. என்றேன்.

அவர் சிரித்தார் “”உங்க அபபாவுக்கு திவசம் கொடுக்கிறதுண்டான்னு கேட்டேன்?

அந்த ஆளு முகமே மறந்திடுச்சின்னு சொல்றேன்..அவருக்கு நான் எதுக்காக திவசம் கொடுக்கணும்?

அங்கதான் தம்பி தப்பு பண்ணிட்டீங்க.. என்னதான் நீங்க அந்த மனுசனை வெறுத்தாலும் அவரோட ரத்தம்தான் உங்க உடம்பில் ஒடுதுங்கிறதை மாற்றிட முடியுமா.. சாகும் தருணத்துல அவர் உங்கம்மாவையும், உங்களையும் ஏக்கத்தோடு நெனச்சிருக்கலாம். தன்னோட தவறை உணர்ந்து உங்க ரெண்டு பேரையும் பார்க்கிறதுக்கு ஆசைப் பட்டிருக்கலாம். இப்படி நிராசையோடு சாகிற ஆத்மாக்களை சாந்தப்படுத்தறதுதான் திவசம்கிற சம்பிரதாயம். அதைச் செய்யாதவங்களோட பித்ருக்கள் காக்கை வடிவத்துலத வந்து கோரிக்கை வைப்பாங்க..”

“”இங்கே கோரிக்கை வைக்கலேயே.. திடீர்னு வந்து கொத்தினா என்னங்கய்யா நியாயம்? தப்பு பண்ணினது அந்த மனுஷன் அந்தாளு ஏங்கிச் செத்தாருன்னா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?”

“”நான் சொல்றது உலக நியதி தம்பி.. ஒரு மனுசன் செய்ற எல்லா பாவங்களும் அவனோட மரணத்துல கரைஞ்சிடும். நீங்க உங்க அப்பாவுக்கு திவசம் கொடுங்க.. அப்புறம் அந்தக் காகம் வருதான்னு சொல்லுங்க..” -அந்த முதியவர் எழுந்து கொண்டார்.

அம்மா அடுக்களையிலிருந்து வெளியே வந்தாள்.

அவளை கும்பிட்டுவிட்டு அந்த முதியவர் கிளம்பிப் போனார். பிறகு வருவதாய் செய்கையில் உணர்த்திவிட்டு ஆதியும் அவரோடு வெளியேறினான்.

சில நிமிட யோசனைக்குப் பின் நான் உதடு பிரித்தேன்.

“”என்னம்மா அந்தப் பெரியவர் இப்படி சொல்லிட்டுப் போறாரு.. நாளைக்கே அப்பாவுக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு பண்ணிடட்டுமா?”

“”பண்ணித்தான் பாரேன்..” என்ற அம்மா அடுக்களைக்கு நடந்தாள். அவள் எப்போதும் இப்படித்தான். கொஞ்சமாய்ப் பேசி நிறைய செயல்படுகிறவள்.



அடுத்த நாளே அய்யர்களை வீட்டுக்கு வரவழைத்து அப்பாவுக்கு திவசம் கொடுத்தேன். அவர்கள் திருப்திப்படுகிற அளவுக்கு அரிசி, காய்கறிகள், பணம் எல்லாம் கொடுத்தனுப்பினேன்.

பிறகு அம்மாவையும் அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்து இலையில் அன்னம் படைத்துவிட்டு, “”கா.. கா..கா..கா..” -என்று காகங்களை அழைத்தேன். நிறைய காகங்கள் வந்து உண்டன.

கடைசியாக அந்த அண்டங்காக்கையும் வந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்குப் பயமும் வந்தது. அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டேன். உட்கார்ந்து அன்னத்தில் ஒரு கவளத்தைக் கவ்வியது. எங்களை நன்றியோடு பார்த்துவிட்டுப் பறந்து மறைந்தது.

அம்மா என்னைப் பார்த்து அர்த்தம் பொதிந்த புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டுப் படியிறங்க, நான் அவளைத் தொடர்ந்தேன்.

அவளிடம் பேச வேண்டுமென மனசு ஆசைப்பட்டாலும் வார்த்தைகள் வெளிவரத் தயங்கின. அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்பதை முகம் உணர்த்தியது.

இரவு கடந்தும் எங்கள் இருவரிடையேயும் மெüனம்தான் பேசியது.

எனக்கு உறக்கம் வருவதாயில்லை. அதற்கான காரணமிருந்தது. மறுநாள் சனிக்கிழமை. அந்த அண்டங்காக்கை திரும்பவும் வந்தால்?

என்னென்னவோ சிந்தனைக் கொக்கிகள் மனசைத் தத்தம் போக்கில் இழுத்ததில் விடியும் வரை என் இமைகள் மூடவே இல்லை.

எழுந்தேன். குளித்தேன். எனது அதிகாலைக் குளியலை அம்மா ஆச்சர்யமாய்ப் பார்த்தாளே ஒழிய எதுவும் கேட்கவில்லை.

துணிகள் உலர்த்த மாடிப்படிகளில் ஏறியபோது என் மனதை இனம் புரியாத பயம் கவ்விக் கொள்ளக் கால்களில் நடுக்கம் உணர்ந்தேன்.

படிகள் கடந்து மொட்டை மாடிக்கு வந்தேன். நாலாபுறத்திலும் மெல்ல விழிப் பார்வை சுழற்றினேன். காட்சிகள், ஒருவிதமான மிரட்சியோடு என் விழித் திரையில் பதிவாகின. கடைசியாக…

ஈசான மூலைக் கட்டைச் சுவற்றின் மேல் உட்கார்ந்திருந்த அந்த அண்டங்காக்கை என்னையே உறுத்துப் பார்த்திருந்தது. ஏன் இப்படி?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:01 pm

சுழற்பந்து
---------------
“”வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம்.

ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச் செய்வோம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டு விட்டு பந்தை சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட் பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான் மதியழகன்.

அவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில் இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள்ளை அடிப்பதற்கோ அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வர்.

ஆனால் கணேசா கபே என்று சொல்லக்கூடிய ஒரு பாய்லர், சில கண்ணாடி டம்ளர்கள், ஓலைக் குடிசை, கால் உடைந்ததால் இருபுறமும் செங்கல் அடுக்கி அதன் மீது பாங்காக வைக்கப்பட்ட பழைய மரப் பலகை, மேலே கிடக்கும் கசங்கி படிக்க லாயக்கற்ற அன்றைய செய்தித் தாள் மற்றும் சில வறண்ட வடைகளைக் கொண்ட டீக் கடையில் இப்படி வேலை வெட்டி இல்லாத அல்லது வெட்டி வேலை செய்யும் ஒரு 15 பேர் தினமும் அரட்டை அடிப்பதை கவனிப்பதற்கு அந்த ஊர் மக்களுக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை.

“எவனாவது உருப்படற மாதிரி இருக்கறானா பாருங்க… அத்தன பேரும் வேலைக்குப் போகாம எப்பப் பார்த்தாலும் டீக் கடையில உக்காந்துட்டு அரட்டை… ஏதோ உலகத்தையே புரட்டுற மாதிரி மீட்டிங்கு…எல்லாம் இவனுங்க அப்பன், ஆத்தாளச் சொல்லோணும்’ உரக் கடை ராசுவிடம் புலம்பிச் சென்றார் பால்காரர் மணி.

“ஏண்டா மதி, நீ சொல்ற மாதிரி செஞ்சா நமக்கு வேண்டியது கிடைக்குமாடா?’- இது எங்கே நடக்கப் போகிறது என்ற தொனியில் கேட்டான் சுரேஷ்.

“ஆமா… போன முறை முத்துச்சாமிக்கு செஞ்சோம்… அவரும் புது பேட், கிட்ஸ் எல்லாம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு… ஆனா ஜெயிச்ச பின்னாடி என்னாச்சு… மனுஷன் ஒரு டீயாவது வாங்கித் தந்தானா?’ கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தான் ராஜூ.

“இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆளுக்கு 100 ரூபா போட்டா நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக்கலாம். எதுக்கு இவனுகள பிடிச்சுத் தொங்கோணும்’ என்றான் சிவா.

இல்லாட்டி அவருகிட்ட முன்னாடியே பணத்தை வாங்கிட்டா என்ன?…ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்லிக் கொண்டிருந்தனர்.

கவனமாகக் கேட்ட மதி பேசத் துவங்கினான். “அதெல்லாம் வேண்டாம். சுந்தரமூர்த்தி தான் இந்த முறை பஞ்சாயத்துப் பிரசிடன்ட்டுக்கு போட்டியிடுறார். எலக்ஷனுக்கு இன்னும் 15 நாள் இருக்கு. அவருகிட்ட ஆதரவு கொடுக்கறோம்னு சொல்லி பிரசாரம் செய்வோம். அதுக்குப் பிரதிபலனா நம்ம டீமுக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கறது அப்படின்னு ஒரு டீல் போட்டுக்குவோம். முன்னாடியே பணம் வாங்கிட்டம்னா அப்புறம் வேணுங்கிற போது நாம் போய் நிற்க முடியாது’.

“எந்தக் காலத்துலடா இருக்கிற நீ. எந்த அரசியல்வாதியாவது சொன்னதச் செஞ்சுருக்கானா? இவரு மட்டும் என்ன யோக்கியமா. தேர்தலுக்கு முன்னாடியே கழுத்துல துண்டப் போட்டு வேணுங்கிறத கறக்கணும்..அதுதான் நமக்கு சேஃப்’- இது சுரேஷ்.

எல்லோருக்கும் ஆறிப்போன டீ வந்தது. கடை பூட்டும் நேரமாகி விட்டது என்பதற்கு அதுவே சாட்சி. டேய் கணேசா மணி 9 ஆயிடுச்சா என்றபடியே டீயை உறிஞ்சினார்கள். கடைய பூட்டறேன்…எல்லாரும் கிளம்புங்கடா என்று வாய் தவறி சொல்லி விடக் கூடாது என்பதற்காக டீக் கடை கணேசன் செய்யும் வித்தைகளில் ஒன்று ஆறிப்போன டீ.

மறுநாள் காலை அணியின் மொத்த வீரர்களும் சுந்தரமூர்த்தியை பார்த்து என்ன சொல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர்.

“”டேய் மதி அங்க பாரு…அந்தாளு வர்றாரு…” பிரசிடென்ட் வேட்பாளர் அவர்களை நோக்கி புல்லட்டில் வந்து கொண்டிருந்தார்.

“தம்பிகளா வணக்கம். பதில் வணக்கத்தை தேர்தல் நேரத்தில் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிந்ததால் அவரே தொடர்ந்தார். போன முறை நம்ம எதிர் பார்ட்டி ஜெயிச்சதுக்கு உங்க பிரசாரமும் ஓட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு எந்த பிரதிபலனும் அவர் செய்யலைங்கிறதும் எனக்குத் தெரியும். அதனால இந்த முறை உங்க ஆதரவு அவருக்கு இருக்காது. எனவே எனக்கு பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் அணிக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்கிறேன். என்னப்பா சொல்ற மதியழகா?’

“சோடா குடிக்காதது மட்டும்தான் பாக்கி…மூச்சு விடாம பேசுறாண்டா’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மதி.

“சரிங்ணா..ஆனா ரெண்டு பேரும் நம்ம வார்டா போயிட்டீங்க…அவரும் நம்மகிட்ட வரல. போன முறை ஜெயிக்க வச்சதுக்கு ஒன்னும் பண்ணல. அதனாலகூட இருக்கலாம். நீங்க முதல்ல வந்துட்டீங்க. அணி வீரர்களிடம் பேசி முடிவு சொல்றேனே. அப்படியே டீ, வடை சொல்லீருங்க’ என்று தாடியை தடவிக் கொண்டான்.

கணேசா கபேவுக்கு பின்னால் உள்ள பாறைக் குழிக்கு விரைந்தனர். “டேய் மதி…கொஞ்சமாவது அறிவு இருக்காடா…எவ்ளோ பெரிய மனுஷன் நம்மகிட்ட ஆதரவு கேட்கிறார்..பெரிய இவனாட்டம் பந்தா பண்ற…சரின்னு உடனே சொல்ல வேண்டியது தானே’ செல்வராஜ் கோபப் பார்வை வீசினான்.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு பின்னால் இழுத்துக் கொண்டே பேசினான் மதி. “நீ கொஞ்சம் சும்மா இருடா. நடக்கப் போறது பார்லிமெண்ட் எலக்ஷன் இல்லை. பஞ்சாயத்து எலக்ஷன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். முத்துச்சாமி, சுந்தரமூர்த்தி ரெண்டு பேரும் ஒரே வார்டு. ஒருத்தன் நம்மள முன்னாடி ஏமாத்துனவன். இவனும் நம்மள ஏமாத்திறக் கூடாது. மொத்தம் 4 வார்டு இருக்கு. அதுல 2000 ஓட்டு இருக்கு. எப்படியும் 1200 தான் விழும். ரெண்டு பேருக்குமே செல்வாக்கு இருக்கு. வெட்டியாத்தானே இருக்கிறானுக கூப்பிட்டா வந்துருவோம்னு நினைப்புல வந்திருக்கார். பிரசாரம் பண்ண பெருசா எவனும் வர மாட்டான். நம்ம பண்ற கேன்வாஸ்ல ஓட்டு எங்க வேணா விழும். அதனாலதான் நம்மளத் தேடி வந்திருக்கார். நாம கொஞ்சம் பந்தா பண்ணாதான் மதிப்பானுக. சரி நம்ம தேவையை அவரே சொல்லிட்டார். சரின்னு போய் சொல்லீற வேண்டியதுதான்’ டீ, வடையை காலி செய்து விட்டு எல்லோரும் எழுந்தனர்.

எலக்ஷன் ரிசல்டை விட இவனுக என்ன ரிசல்ட் சொல்லப் போறானுகளோ என்ற எதிர்பார்ப்பில் பார்த்தார் சுந்தரமூர்த்தி. இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சில விநாடிகள் மெளனமாகப் பார்த்த மதி, “உங்களுக்குத் தான் பிரசாரம்னு முடிவு பண்ணியிருக்கோம்’ என்றான். ரொம்ப சந்தோஷம் தம்பி..அப்ப இப்பவே ஆரம்பிச்சிடுவோம் என்றபடி புல்லட் நோக்கிச் சென்றார்.

“அண்ணா…எங்களுக்கு திருப்பூர்ல ஒரு மேட்ச் இருக்கு. அதுக்குப் போகணும். நாளைக்கு ஆரம்பிச்சிடலாமா? சுந்தரமூர்த்திக்கு தன் விதியை நினைத்து கடுப்பாக இருந்தது. முகத்தில் எதுவும் காட்டாமல் ஆகட்டும் தம்பி என்றார். அவர் போகும் முன் அணிச் செலவுக்கு 500 ரூபாய் வாங்க மதி மறக்கவில்லை.

மறுநாள் உங்கள் ஓட்டு சுந்தரமூர்த்தி அண்ணனுக்கே. உங்கள் சின்னம் பேனாக் கத்தி என்று மதியழகன் தலைமையில் பிரசாரம் விண்ணைப் பிளந்தது. சுந்தரமூர்த்தி தனது சகாக்கள், அணி வீரர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அதுதான் பஞ்சாயத்து தேர்தலின் மகிமை. அதுதான் பிரச்னையும் கூட. யாருக்கு ஓட்டுப் போடுவது என்று வாக்காளர்கள் குழம்பித் தவித்தனர்.

இரவு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது மணி 10. “இப்படி வேலைக்குப் போகாம ஏண்டா ஊரச் சுத்திட்டு இருக்கற’ தட்டில் சாப்பாடு போட்டபடி பேசினார் அம்மா. “நான் சும்மா சுத்தல. தேர்தல் பிரசாரத்துல இருக்கிறேன்.’

“ஆமா இவரு பெரிய எம்.பி. ஆகப் போறாரு’ என்றார் கட்டிலில் படுத்திருந்த அப்பா.

“யாருக்கு பிரசாரம் பண்ணறீங்க?’

“நம்ம சுந்தரமூர்த்தி அண்ணனுக்குத் தான்.’

“ஏண்டா கொஞ்சமாவது ரோஷம் இருந்தா அந்தாளுக்குப் போய் பிரசாரம் பண்ணுவியா?’ வெந்நீர் காலில் பட்டது போல கொதித்தாள் அம்மா. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.

கேபிள் டி.வி. கனக்ஷனுக்கு பணம் வசூலிக்க வந்திருந்தார் சுந்தரமூர்த்தி. “ஏம்மா கற்பகம்…2 மாசமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்றியாமே…ஏன்?’

“உங்க கேபிள் டி.வி.யால ஒரு பிரயோசனமும் இல்ல. எப்ப பாத்தாலும் கோடு கோடா தெரியுது. இல்லாட்டி கட் ஆகுது. மாசத்துல 15 நாள் இப்படித்தான் தெரியுது. எதுக்குப் பணம் தரோணும்?’

“உங்க வீட்ல மட்டும் தான் இப்படி சொல்ற. மத்தவங்க வீட்டுல எல்லாம் நல்லா தெரியுது. பணம் கொடுக்க வக்கில்லைனா கனக்ஷன கட் பண்ணிக்கோ…வார்த்தைகள் எரிந்து விழுந்து தெருவில் உருண்டோடின.
பக்கத்து வீட்டுக்காரர்கள் சீரியல் பார்ப்பதை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவும் சளைக்காமல் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேச்சு முற்றி கையை ஓங்கியபடி அருகே வந்து போடி என்று கத்தினார் சுந்தரமூர்த்தி. எல்லோரும் ஒரு விநாடி அதிர்ந்து பார்த்தனர்.

அம்மா அழுது கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்தான் மதி. “நான் என்னமா பண்ணட்டும். டீம் பசங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. பிரசாரம் பண்ணாம இருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான்.

தேர்தல் நாள். நமக்குப் பார்த்து ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் முத்துச்சாமியும் சுந்தர மூர்த்தியும். வெளியே வந்தவர்களிடம் யாருக்குப் போட்டீங்க என்று கேட்டு அங்கேய தமது வெற்றியை உறுதி செய்து கொண்டிருந்தனர்.

வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சூழ வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் பதிவான 1267 வாக்குகளில் தங்களுக்கு எவ்வளவு வரும் என்று சுந்தரமூர்த்தியும், முத்துச்சாமியும் தத்தமது பரிவாரங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மதியும் தோழர்களும் கைகளில் பட்டாசுடன் அமைதியாக இருந்தனர்.

முதல் சுற்று எண்ணிக்கை முடிவு வந்தது. 2 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் சுந்தரமூர்த்தி. 2வது சுற்றிலும் இதே நிலைமை. மூன்றாவது சுற்றில் சுந்தரமூர்த்தி உற்சாகத்துக்கு வேட்டு வந்தது. முத்துச்சாமி-499. சுந்தரமூர்த்தி-500.

4வது வார்டு ஓட்டு எண்ணப்பட்டது. முடிவு தெரிய நகம் கடித்தபடி சுந்தரமூர்த்தியும், எப்படியும் ஜெயிச்சுருவோம் என்று முத்துச்சாமியும் நின்று கொண்டிருந்தனர்.

நம்ம பசங்க 15 பேர் வீட்லயும் நமக்குத்தான். நூர்ஜஹான் வீடு, ராமசாமி, நசீர் பாய், கறிக்கடை சண்முகம், மெட்ராஸ்காரர் வீடு, நடுத்தோட்டம் பழனிசாமி வீடு, நம்ம பங்காளிக வீடு என்று தனக்குத் தெரிந்த எல்லோர் வீட்டு ஓட்டுக் கணக்கையும் மனதுக்குள் போட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி. எங்கேயாவது மிஸ் ஆயிடுச்சா? என்று யோசித்துப் பார்த்தார். எப்படியும் 2, 3 வித்தியாசத்துல ஜெயிச்சிருவோம். ஏம்பா நமக்கு பிரசாரம் பண்ணீங்களே ஓட்டுப் போட்டீங்களா என்று எல்லோரையும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். என்ன இப்படி கேட்கறீங்க. உங்களுக்குத்தாங்ணா போட்டோம் என்றான் மதி.

முத்துச்சாமி அன் கோ பட்டாசு வெடித்து கொண்டாடியது. நிரந்தர பஞ்சாயத்துத் தலைவர் வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முத்துச்சாமி-635, சுந்தரமூர்த்தி-632. மூன்று ஓட்டுகளில் தோல்வியுற்ற சுந்தரமூர்த்தி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “இந்த முறையும் நமக்குத் தோல்விதானா, பேட், கிட்ஸ் எல்லாம் அவ்ளோதானா’ என்று கேட்டுக் கொண்டனர்.

“வெற்றிக்கும் தோல்விக்கும் ஒன்று தான் வித்தியாசம். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சம்பவமாக இருக்கலாம்’ மெல்லிய சிரிப்புடன் சொல்லிக் கொண்டான் மதியழகன்.

அதைக் கவனிக்காமல் எல்லோரும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
க.ரகுநாதன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:03 pm

தவிக்கும் இடைவெளிகள்
-----------------------------------

பையன் வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று. இன்னும் தன்னிடம் பேசவில்லை. “என்னப்பா, எப்டியிருக்கீங்க.’ ரெண்டு வார்த்தைகள்தான். கேட்கத் தெரியவில்லை. பேச வேண்டும் என்று தோன்றவில்லையா? அல்லது “என்ன வேண்டிக் கிடக்கிறது?’ என்ற அலட்சியமா, “எதைப் பேசினாலும் கோபமாகக் கத்தத்தானே போகிறார்? இதற்குப் பேசினால் என்ன பேசாவிட்டால் என்ன?’ என்று தோன்றி விட்டதா?

கோபமாகத்தான் பேசுவார் என்று அவனாகவே எப்படி முடிவு செய்து கொண்டான்? தான் பேசுவதெல்லாம் கோபமானதுதான் என்று ஏன் தோன்றிற்று அவனுக்கு? பேச்சே அப்படித்தான், அதனால் அதில் பொதிந்திருக்கும் கருத்தும், அக்கறையும், அன்பும்தான் முக்கியம் என்று ஏன் தோன்றவில்லை?

உள்ளே நுழைந்து நேரே அவன் அறைக்குள் சென்று அடைந்தாயிற்று. கணினியைத் திறந்து அதற்கு முன் உட்கார்ந்தாயிற்று. எவனோ வெளிநாட்டில் இருக்கும் நண்பனாம். அவனோடு பேச்சு, பேச்சு அப்படியொரு பேச்சு. மனதுக்குப் பிடித்தது அதுதான் போலும். அவன் கேள்வி கேட்க இவன் பதில் சொல்ல… இவன் திருப்பிக் கேட்க, அவன் பதில் சொல்ல… “சேட்’ பண்ணுகிறார்களாம்… என்ன இழவோ எவனுக்குப் புரிகிறது இதெல்லாம்?

அந்தத் திரையும், எழுத்தும், அதன் பிம்பங்களும் தரும் சந்தோஷத்தையும் நிறைவையும் வீட்டில் உள்ள நான் தரவில்லை… அதுதானே? என்னிடம் அவனுக்கு அது கிடைக்கவில்லை. இவன் கொடுப்பதை வாய் மூடி வாங்கிக் கொள்கிறதே அது… அதனால் அதைப் பிடிக்கிறதா? இவனுக்கு எதிர்ப்பு இல்லாத அரூபங்கள் இணக்கமாக உள்ளன. அப்படித்தானே? தனது எந்தச் செயலுக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் இருத்தல் கூடாது. அதுதான் சுதந்திரம் என்று நினைக்கிறானா? சுதந்திரம் என்ற வார்த்தை அதன் பொருள் இன்று பலரிடமும் இப்படித்தானே படிந்து கிடக்கிறது?

அனந்தராமன் ஹாலுக்குள் தலை நீட்டிப் பார்த்தார். அங்கே அவன் வழக்கமாக அமரும் இடத்தில் அந்த நாற்காலி மட்டும் கிடந்தது. அவருடைய மனைவியையும் ஹாலில் காணவில்லை. மகனைப் பார்க்க அவன் அறைக்குள் போய் உட்கார்ந்துவிட்டாள்.

“மகன் வந்ததும் அவனோடு போய் உட்கார்ந்து கொண்டாயிற்று. இனி தான்கூட அவளுக்கு ஒரு பொருட்டில்லை. அதுவரையிலான இருவருக்கும் பொதுவான தவிப்பு, மனச் சங்கடம், வருத்தம், பயம் எல்லாமும் எங்கே போயிற்று அவையெல்லாம் வெறும் பெயரளவிலான உணர்ச்சிகளா அவளுக்கு? அவனைக் கண்ணால் கண்டதும் எல்லாமும் மறைந்து, மறந்து போயிற்றா சொல்ல வேண்டியதை அவர் சொல்லிக் கொள்ளட்டும், நமக்கெதற்கு வம்பு என்று தான் ஒதுங்கிக் கொண்டு நல்லபிள்ளையாகிக் கொள்ளும் தந்திரமா… அடி பாதகத்தி.

“அவன் உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்று சொல்லிவிட்டுச் செல்பவனடி… இது புரியவில்லையா? கடைசியில் நீ என்னிடம்தானடி தஞ்சம் அடைந்தாக வேண்டும். இதுகூடப் புரியாத அப்பாவியா நீ?’

“எதுக்கெடுத்தாலும் கோபப்படுறதும், டென்ஷனாகுறதும், படபடன்னு பேசுறதும், எல்லாம் உங்க அப்பாதாண்டா. பெரிய டென்ஷன் பார்ட்டி. சொல்லியிருப்பாளோ… ராத்திரி பூராவும் எனக்குக் கூடத்தான் துôக்கமில்லை. இதே நினைப்பாத்தான் இருந்தது…’ என்றாளே அது பொய்யா?

“நியாயமாய்த் தோன்ற வேண்டிய உணர்ச்சிகள் அந்தந்த நேரத்தில் தோன்றவில்லையென்றால் அவன் என்ன மனுஷன்? நியாயமாய் என்றால் எது நியாயம் உங்களுக்கு? உங்களுக்கு நியாயமாய்த் தோன்றுவது மற்றவங்களுக்கும் நியாயமாத் தோணனும்னு அவசியமா கட்டாயமா? மனுஷாளுக்கு மனுஷாள் மனநிலை மாறுபடாதா? குணநலன்கள வச்சிதானே மனநிலை?’

“எனக்குத் தோணலை…’

“எல்லாத்தையும் அப்டி அப்படியே விட்டிடணும். வளர்க்கப்படாது. நம்ம பையன்தானே… விடுங்கோ… விட்டுடுங்கோ…’

“இப்போ விடாம அவன என்ன பிடிச்சா வச்சிண்டிருக்கு. விட்டு விட்டுத்தானே இந்த நிலைமைல வந்து நின்னிருக்கு?’

“என்ன நிலைமை. இல்ல என்ன நிலைமைன்னு கேட்கறேன். அவனென்ன கெட்டுச் சீரழிஞ்சு நிக்கிறானா உதவாக்கரையாப் போயிட்டானா? என்னவோ பெரிசாப் பேச வர்றீங்களே?’

“அடிப்பாவி. ராத்திரி பூராவும் என்னோடு ஒத்துப் பாடிட்டு, இப்போ வந்தவுடனே சட்னு இப்டிப் பிரண்டு பேசறியே இது அநியாயம்டி… நீ நல்லவளாகிக்கிறியா என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறியா இது அடுக்காதுடி… ஆண்டவனுக்கே அடுக்காதாக்கும்’

“அடுக்காட்டிப் போகட்டும்… அவன்தான் வந்துட்டான்ல… சரின்னு விடுவீங்களா. இதப் போயி தேவையில்லாம இழுத்திட்டிருக்கீங்க. வெட்டிப் பேச்சு எதுக்கு விட்டுத் தள்ளுங்க’

பேசப் புகுந்தால் நிச்சயமாய் அவள் என்னவெல்லாம் சொல்வாளோ அது அத்தனையையும் இவர் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டார். கேள்வியும் பதிலுமாகத் தான் இங்கேயொரு பெரிய மனப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில், உள்ளே பையனோடு ஜாலியாய் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, புரிகிறதோ புரியவில்லையோ “ம்ம்…அப்டியா’ என்றும் “அடடே என்னல்லாம் தெரிஞ்சி வச்சிண்டிருக்கே’ என்று செயற்கையாய் அவனைப் புகழ்ந்து கொண்டும், இயல்பாயும் போலியாயும் சிரித்துக் கொண்டும், (உனக்குத்தாண்டி காலம்…) இணக்கமாய்ப் பொழுது போனால் சரி என்று கழித்து விடுகிறாள்.

இதுவும் ஒரு வகையிலான சாமர்த்தியம்தானே? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எவ்வளவு சமர்த்து அவள் அப்படியானால், தான் என்ன அசடா ஆமா. அசடுதான். அதிலென்ன சந்தேகம்?

“இந்தக் காலத்தில் இப்டிச் சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசாக்குவாங்களா கோபப்படுறது, கத்துறது, இதெல்லாம் ரொம்பப் பழசு. எதையுமே கண்டுக்காம இருக்கிறதுதான் இப்போ நாகரீகம்… அதத் தெரிஞ்சிக்குங்கோ முதல்ல. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான். நடக்கிறபடி நடக்கட்டும்னு போயிட்டேயிருக்க வேண்டியத்தான்…’

“அதான்… அதான் சொன்னனே. கடைசில கேனக் கிறுக்கன் நானாத்தான் ஆவேன்னு. எனக்கொண்ணும் நஷ்டமில்லே இதுனால. நீ சொல்றதுனால அசடாயிட மாட்டேன் நான். ஆனா எது சரின்னு ஒண்ணு இருக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி… அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாதாக்கும்… இப்போல்லாம் அப்டி இருக்க முடியாது. காலத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் ஆகணும்னு சொல்லலாம். செய்யலாம். ஆனா அந்த மாதிரிச் சொல்றதும் செய்றதும் என்னைக்குமே நல்ல ரிசல்டைத் தராது. தந்ததுமில்லே. தெரிஞ்சிக்கோ.. அதுதான் சத்தியம்’ தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார் அனந்தராமன்.

உள்ளே பையனோடு சேர்ந்த தன் மனைவியின் சிரிப்பொலி கேட்கிறது. கொடுத்து வைத்தவள். சட்டுச் சட்டுன்னு நிறம் மாறிக் கொண்டு எத்தனை சகஜமாகி விடுகிறாள்? ராத்திரியெல்லாம் பட்ட பாடு இப்பொழுது அவள் நினைவில் இருக்குமா? “ஏங்க… இவனென்ன செல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கான். ஆபீசிலேர்ந்தும் போட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை… நீங்க பேசினீங்களா?’

“பேசாம எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும். அவன் ரூம் மேட் ராகுலுக்குப் போட்டேன்… ரிங் போகுது. எடுக்கவே மாட்டேங்கிறான். நம்ம பிள்ளையாண்டான் எங்க அப்பாதாண்டா பேசுவாரு. எடுக்காதன்னிருப்பான். சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா? ரொம்பப் பீத்திக்கிறியே பையன் பையன்னு… ஒரு போன் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுதா அவனோட உன்னால…?

உன்னை மதிச்சாவது ரெண்டு வார்த்தை சொல்றானா ஹாஸ்டல் வேண்டாம்னு தனியா வீடு பார்த்து வச்சு, எத்தனை செலவானாலும் பரவால்லன்னு நல்லா படிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்தாப் போதும்னு எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்து சென்னைல இவன உட்கார்த்தினா ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக் கூட ஐயாவுக்கு வலிக்குது. எப்பப் போட்டாலும் சுவிட்ச் ஆஃப், சுவிட்ச் ஆஃப்னு வருது. நம்ம கூடப் பேசப் பிடிக்கலைங்கிறதுக்காக ஃபோனை எந்த நேரமுமா ஆஃப் பண்ணி வைப்பாங்க? பிடிக்காமப் போற அளவுக்கு அப்படி என்ன கொடுமை பண்ணினோம்? நாம எல்லாம் நல்லதுதானே பண்ணி வச்சிருக்கோம். எதிர்பார்ப்புக்கு மேலதானே எல்லாமும் செய்து வச்சிருக்கோம்? உடனுக்குடனே சுலபமா எல்லாமும் கிடைக்குதுங்கிறதாலேயே அதுமேல இவனுங்களுக்கு மதிப்பு இல்லாமப் போச்சு போலிருக்கு. கஷ்டப்பட்டுக் கிடைக்காத எதுவுமே மதிப்பிழந்து போகும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம்.

அட, நம்ப கூடத்தான் பேச வேண்டாம்… அவன் ஃப்ரென்ட்ஸ்களோட பேச என்ன செய்றானாம்? ஒரு வேளை அதுக்குத் தனி ஃபோன் எதுவும் வச்சிருப்பானோ இருக்கலாம், எவனுக்குத் தெரியும்? பேங்க பாலன்ஸ் இறங்குறத மட்டும்தான நாம பார்க்கிறோம். என்ட்ரி போடறதைச் சொல்றேன்…என்ன செலவு, ஏது செலவுன்னு ஒண்ணும் கேட்குறதில்லையே செலவும் வேக வேகமாத்தானே ஆகுது…நின்னு நிதானிச்சு கேட்குற ஸ்பீடுலயா இருக்குது அப்டியே கேட்டாலும் அதுவும் தப்பாயிருமே எதத்தான் கேட்க முடியுது? இந்தக் காலத்துப் பசங்ககிட்டே எதாச்சும் பேசினா, எது நாகரீகம், எது அநாகரீகம்னு நமக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறானுங்க… எப்டியோ போகட்டும் வேண்டாங்கலே… இப்போ நமக்கு மதிப்பளிக்கலைன்னு யாரு கவலைப்பட்டா எவன் என்ன கேட்குறது அவன் ஒரு நல்ல இடத்துல உட்கார்ந்தாச் சரி.. அதுதான் நமக்கு வேணும்.

அதுக்குத்தான் இத்தனை கஷ்டமும் கேவலமும். ஆனாலும் ஒரு ரெண்டு வார்த்தை. கிளம்பிட்டேம்ப்பா… காலைல வந்திடுவேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் பேசறேன். சொல்லலாம்ல? தெரியலையே…’

“எத்தனை வாட்டி சொல்லிக் கொடுத்தாலும் தெரியலியே ஆரம்பிச்சிட்டீங்களா..?திரும்பவும் துவக்குறீங்க போலிருக்கு. அத்தோட விடமாட்டீங்க நீங்க…’

“ஏன் சொல்றேன்னா, அன்னைக்கே ரிசர்வ் பண்ணிட்டான்லடி. இதுவரைக்கும் ஒரு ஃபோனைக் கூடக் காணலியே எங்க போனான் என்ன ஆனான் மனசு தவிக்குமால்லியா? டிரெயின் எதையும் தவற விட்டுட்டானா பஸ்ல வரானா பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டில என்னாச்சு ஏதாச்சுன்னு எவனுக்குத் தெரியும்? யாரையாச்சும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமா சொல்லு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க… ஃபோன் இருந்து என்ன பிரயோஜனம் பேச முடியலியே இத்தன தவிப்புக்கு இவனைப் பேசாம ஹாஸ்டல்லயே இருத்தி வச்சிருக்கலாம் போலிருக்கு. ஏன்னா வார்டன்ட சொல்லாம வெளியேற முடியாது பாரு. ஆள் இல்லாட்டியும் ஹாஸ்டலுக்குப் பேசி விபரம் தெரிஞ்சிக்கலாமே? எப்பப் பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதுக்கா இவனுங்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தது? தண்டம்… தண்டம்…’

தான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல், எதுவும் ஓடாமல், பெருத்த மனத் தவிப்போடு கண்களில் நீர் தளும்ப செய்வதறியாது அமர்ந்திருந்த அவள், இதோ… உள்ளே இன்று கலகலவென்று சிரித்துக் கும்மாளமிட்டபடி மகனோடு ஒன்றியிருக்கிறாள். எல்லாம் முடித்து தன்னிடம் வந்து எப்படியும் ரெண்டு வார்த்தை பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அனந்தராமன்.

சீரழிஞ்சு நிக்கிறானா உதவாக்கரையாப் போயிட்டானா? என்னவோ பெரிசாப் பேச வர்றீங்களே?’

“அடிப்பாவி. ராத்திரி பூராவும் என்னோடு ஒத்துப் பாடிட்டு, இப்போ வந்தவுடனே சட்னு இப்டிப் பிறண்டு பேசறியே இது அநியாயம்டி… நீ நல்லவளாகிக்கிறியா என்னை மட்டும் மாட்டிவிடப் பார்க்கிறியா இது அடுக்காதுடி… ஆண்டவனுக்கே அடுக்காதாக்கும்’

“அடுக்காட்டிப் போகட்டும்… அவன்தான் வந்துட்டான்ல… சரின்னு விடுவீங்களா. இதப் போயி தேவையில்லாம இழுத்திட்டிருக்கீங்க. வெட்டிப் பேச்சு எதுக்கு விட்டுத் தள்ளுங்க’

பேசப் புகுந்தால் நிச்சயமாய் அவள் என்னவெல்லாம் சொல்வாளோ அது அத்தனையையும் இவர் தனக்குத்தானே சொல்லிப் பார்த்துக் கொண்டார். கேள்வியும் பதிலுமாகத் தான் இங்கேயொரு பெரிய மனப் போராட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில், உள்ளே பையனோடு ஜாலியாய் சிரிக்கச் சிரிக்கப் பேசிக் கொண்டிருக்கிறாள். அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு, புரிகிறதோ புரியவில்லையோ “ம்ம்…அப்டியா’ என்றும் “அடடே என்னல்லாம் தெரிஞ்சி வச்சிண்டிருக்கே’ என்று செயற்கையாய் அவனைப் புகழ்ந்து கொண்டும், இயல்பாயும் போலியாயும் சிரித்துக் கொண்டும், (உனக்குத்தாண்டி காலம்…) இணக்கமாய்ப் பொழுது போனால் சரி என்று கழித்து விடுகிறாள்.

இதுவும் ஒரு வகையிலான சாமர்த்தியம்தானே? காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு. எவ்வளவு சமர்த்து அவள்? அப்படியானால், தான் என்ன அசடா ஆமா. அசடுதான். அதிலென்ன சந்தேகம்?

“இந்தக் காலத்தில் இப்டிச் சின்னச் சின்ன விஷயத்தையெல்லாம் பெரிசாக்குவாங்களா கோபப்படுறது, கத்துறது, இதெல்லாம் ரொம்பப் பழசு. எதையுமே கண்டுக்காம இருக்கிறதுதான் இப்போ நாகரீகம்… அதத் தெரிஞ்சிக்குங்கோ முதல்ல. எல்லாமே டேக் இட் ஈஸி பாலிஸிதான். நடக்கிறபடி நடக்கட்டும்னு போயிட்டேயிருக்க வேண்டியதுதான்…’

“அதான்… அதான் சொன்னனே. கடைசில கேணக் கிறுக்கன் நானாத்தான் ஆவேன்னு. எனக்கொண்ணும் நஷ்டமில்லே இதுனால. நீ சொல்றதுனால அசடாயிட மாட்டேன் நான். ஆனா எது சரின்னு ஒண்ணு இருக்கு எந்தக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி… அதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாதாக்கும்… இப்போல்லாம் அப்டி இருக்க முடியாது. காலத்துக்கு ஏத்தமாதிரி மாறித்தான் ஆகணும்னு சொல்லலாம். செய்யலாம். ஆனா அந்த மாதிரிச் சொல்றதும் செய்றதும் என்னைக்குமே நல்ல ரிசல்டைத் தராது. தந்ததுமில்லே. தெரிஞ்சிக்கோ.. அதுதான் சத்தியம்’ தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறார் அனந்தராமன்.

உள்ளே பையனோடு சேர்ந்த தன் மனைவியின் சிரிப்பொலி கேட்கிறது. கொடுத்து வைத்தவள். சட்டுச் சட்டுன்னு நிறம் மாறிக் கொண்டு எத்தனை சகஜமாகி விடுகிறாள்? ராத்திரியெல்லாம் பட்ட பாடு இப்பொழுது அவள் நினைவில் இருக்குமா? “ஏங்க… இவனென்ன செல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கான். ஆபீசிலேர்ந்தும் போட்டுப் பார்த்துட்டேன். கிடைக்கவேயில்லை… நீங்க பேசினீங்களா?’

“பேசாம எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கும். அவன் ரூம் மேட் ராகுலுக்குப் போட்டேன்… ரிங் போகுது. எடுக்கவே மாட்டேங்கிறான். நம்ம பிள்ளையாண்டான் எங்க அப்பாதாண்டா பேசுவாரு. எடுக்காதன்னிருப்பான். சரி எங்கூடப் பேச வேண்டாம். நாந்தான் பகையாளி. உனக்குப் பதில் சொல்லலாமில்லியா? ரொம்பப் பீத்திக்கிறியே பையன் பையன்னு… ஒரு போன் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுதா அவனோட உன்னால…?

உன்னை மதிச்சாவது ரெண்டு வார்த்தை சொல்றானா ஹாஸ்டல் வேண்டாம்னு தனியா வீடு பார்த்து வச்சு, எத்தனை செலவானாலும் பரவால்லன்னு நல்லா படிச்சு, பெரிய உத்தியோகத்துல உட்கார்ந்தாப் போதும்னு எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்து சென்னைல இவன உட்கார்த்தினா ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லக் கூட ஐயாவுக்கு வலிக்குது. எப்பப் போட்டாலும் சுவிட்ச் ஆஃப், சுவிட்ச் ஆஃப்னு வருது. நம்ம கூடப் பேசப் பிடிக்கலைங்கிறதுக்காக ஃபோனை எந்த நேரமுமா ஆஃப் பண்ணி வைப்பாங்க? பிடிக்காமப் போற அளவுக்கு அப்படி என்ன கொடுமை பண்ணினோம்? நாம எல்லாம் நல்லதுதானே பண்ணி வச்சிருக்கோம். எதிர்பார்ப்புக்கு மேலதானே எல்லாமும் செய்து வச்சிருக்கோம்? உடனுக்குடனே சுலபமா எல்லாமும் கிடைக்குதுங்கிறதாலேயே அதுமேல இவனுங்களுக்கு மதிப்பு இல்லாமப் போச்சு போலிருக்கு. கஷ்டப்பட்டுக் கிடைக்காத எதுவுமே மதிப்பிழந்து போகும்ங்கிறதுக்கு இதுதான் உதாரணம். அட, நம்ப கூடத்தான் பேச வேண்டாம்…

அவன் ஃப்ரென்ட்ஸ்களோட பேச என்ன செய்றானாம்? ஒரு வேளை அதுக்குத் தனி ஃபோன் எதுவும் வச்சிருப்பானோ இருக்கலாம், எவனுக்குத் தெரியும்? பேங்க பாலன்ஸ் இறங்குறத மட்டும்தான நாம பார்க்கிறோம். என்ட்ரி போடறதைச் சொல்றேன்… என்ன செலவு, ஏது செலவுன்னு ஒண்ணும் கேட்குறதில்லையே செலவும் வேக வேகமாத்தானே ஆகுது… நின்னு நிதானிச்சு கேட்குற ஸ்பீடுலயா இருக்குது அப்டியே கேட்டாலும் அதுவும் தப்பாயிருமே எதத்தான் கேட்க முடியுது? இந்தக் காலத்துப் பசங்ககிட்டே எதாச்சும் பேசினா, எது நாகரீகம், எது அநாகரீகம்னு நமக்கே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறானுங்க… எப்டியோ போகட்டும் வேண்டாங்கலே… இப்போ நமக்கு மதிப்பளிக்கலைன்னு யாரு கவலைப்பட்டா எவன் என்ன கேட்குறது அவன் ஒரு நல்ல இடத்துல உட்கார்ந்தாச் சரி.. அதுதான் நமக்கு வேணும்.

அதுக்குத்தான் இத்தனை கஷ்டமும் கேவலமும். ஆனாலும் ஒரு ரெண்டு வார்த்தை. கிளம்பிட்டேம்ப்பா… காலைல வந்திடுவேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் பேசறேன். சொல்லலாம்ல? தெரியலையே…’

“எத்தனை வாட்டி சொல்லிக் கொடுத்தாலும் தெரியலியே ஆரம்பிச்சிட்டீங்களா..?திரும்பவும் துவக்குறீங்க போலிருக்கு. அத்தோட விடமாட்டீங்க நீங்க…’

“ஏன் சொல்றேன்னா, அன்னைக்கே ரிசர்வ் பண்ணிட்டான்லடி. இதுவரைக்கும் ஒரு ஃபோனைக் கூடக் காணலியே எங்க போனான் என்ன ஆனான் மனசு தவிக்குமால்லியா? டிரெயின் எதையும் தவற விட்டுட்டானா பஸ்ல வரானா பெரிய மெட்ரோபாலிட்டன் சிட்டில என்னாச்சு ஏதாச்சுன்னு எவனுக்குத் தெரியும்? யாரையாச்சும் கேட்டுத் தெரிஞ்சிக்க முடியுமா சொல்லு? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க… ஃபோன் இருந்து என்ன பிரயோஜனம் பேச முடியலியே இத்தன தவிப்புக்கு இவனைப் பேசாம ஹாஸ்டல்லயே இருத்தி வச்சிருக்கலாம் போலிருக்கு. ன்னா வார்டன்ட சொல்லாம வெளியேற முடியாது பாரு. ஆள் இல்லாட்டியும் ஹாஸ்டலுக்குப் பேசி விபரம் தெரிஞ்சிக்கலாமே? எப்பப் பார்த்தாலும் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கிறதுக்கா இவனுங்களுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தது? தண்டம்… தண்டம்…’

தான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல், எதுவும் ஓடாமல், பெருத்த மனத் தவிப்போடு கண்களில் நீர் தளும்ப செய்வதறியாது அமர்ந்திருந்த அவள், இதோ… உள்ளே இன்று கலகலவென்று சிரித்துக் கும்மாளமிட்டபடி மகனோடு ஒன்றியிருக்கிறாள். எல்லாம் முடித்து தன்னிடம் வந்து எப்படியும் ரெண்டு வார்த்தை பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் அனந்தராமன்.

_ உஷாதீபன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 26, 2015 4:05 pm

விடை வெண்திரையில்!
-------------------
ரங்கநாதனுக்கு முத்து சொன்ன யோசனையை ஏற்பது இயலாத ஒன்று. இன்னும் சொல்லப் போனால் சமூக நீதிக்கும் ஒழுங்குக்கும் புறம்பான ஒன்று. பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த அவரால் அதற்கு உடன்படமுடியாது.

ஆனால்,மனம் வலுவிழந்து நிற்கிற நேரத்தில் ஒரு சாதாரண நபர் சொல்கிற யோசனைகூட மிகப்பெரிய அறிவுரைமாதிரி தோன்றி விடுகிறது. அப்படி ஒரு குழப்பத்தில்தான் ரங்கநாதன் ஆழ்ந்திருந்தார். புரஜெக்டர் அறைக்கு வெளியே மடக்கு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ”டிர்ர்….”என்ற புரஜெக்டரின் சப்தம் மெலிதாய் காதில் விழுந்து கொண்டிருந்தது.

சைக்கிள் ஸ்டாண்ட் பக்கம் பார்த்தார். எண்ணி பத்து சைக்கிள் கூட இல்லை. மொத்த டிக்கட்டே ஐம்பதைத் தொட்டிருக்காது. கார்பன் செலவுக்கும்,மின் கட்டணத்துக்கும் கூட தேறாது போல இருந்தது வந்திருந்த ஜனங்களின் எண்ணிக்கை. பெண்கள் பகுதி முழுவதும் காலியாகவே இருந்தது. முத்து புரஜெக்டர் ரூமில் இருந்தான். படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. இனிமேல் ஆட்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.

இரண்டு வருடமாக சரியான மழை இல்லாததால் வயலெல்லாம் காய்ந்து கிடக்கிறது. அதே காரணம் ரைஸ் மில்லிலும் ஓட்டம் இல்லை. முன்பெல்லாம் விவசாயம் சரியாக இல்லாவிட்டால் திரையரங்கம் கை கொடுத்துவிடும். பணப்புழக்கத்துக்கு குறை வராது. ஆனால், நிலைமை இப்போது அப்படி இல்லை. பத்து வேலைக்காரர்கள் திரையரங்கை நம்பியே இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாய வேலை எதுவும் தெரியாது. அதுவும் முத்து, அப்பா காலத்திலிருந்தே ஆபரேட்டராக இருப்பவர். ரங்கநாதனை விட ஏழெட்டு வயது மூத்தவர். சின்ன பிள்ளையிலிருந்தே ரங்கநாதன் முத்துவை ‘அண்ணா அண்ணா’ என்றுதான் அழைப்பார்.

அப்பாவின் மறைவுக்குப்பின் அனைத்துப் பொறுப்புகளும் ரங்கநாதன் கைக்கு வந்தது. நாலைந்து வருடங்கள் முன்புவரை திரையரங்கில் கும்பல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். டிக்கெட் கவுண்டரில் அடிதடி நேர்ந்து சமயத்துக்கு போலீûஸ அழைக்க வேண்டி வரும்.

அப்பா எந்த வருடத்தில் இந்த திரையரங்கைக் கட்டினார் என்பதை வரவு செலவு கணக்கு நோட்டில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் ரங்கநாதன். மற்றபடி அவருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே திரையரங்கோடு தொடர்பிருக்கிறது. ரங்கா திரையரங்கம் நியாயப்படி டூரிங் டாக்கிஸ் என்றுதான் எழுத வேண்டும். அப்பாவுக்கு தமிழ் மேல் பற்று அதிகம். எனவே தமிழிலேயே திரையரங்கம் என்று எழுத வைத்தார்.

ரங்கா என்று பெயர் வைத்ததன் காரணம் மகனின் பெயர் ரங்கநாதன் என்பதால் அல்ல. மகனுக்கு ரங்கநாதன் என்று பெயர் வைத்ததன் ஆதி காரணம் பக்திதான். மாதம் தவறாமல் ஸ்ரீரங்கம் போய் ரங்கநாத சுவாமியையும் தாயாரம்மாளையும் சேவிக்காமல் இருந்ததில்லை.

பத்து மைல் சுற்றளவுக்கு வேறு டூரிங் டாக்கீஸ் கிடையாது. நகரத்துக்குப் போனால்தான் நல்ல திரையரங்கம். ரங்கநாதனுக்கு நினைவிருக்கிறது. சுற்று வட்டாரத்திலிருந்து ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு சினிமாவுக்கு வருவார்கள். சொந்த சினிமா கொட்டகை என்றாலும் ரங்கநாதனின் அப்பா அவரை தினமும் திரையரங்குக்கு வர அனுமதிக்க மாட்டார். படிப்பில் கவனம் சிதறி விடும் என்பதுதான்

அதற்குக் காரணம். புதிய படம் போடுகிற அன்று மட்டும் அம்மா தங்கைகளோடு ‘பாக்ஸில்’ உட்கார்ந்து படம் பார்ப்பது வழக்கம். புரஜெக்டர் அறையின் இரண்டு பக்கங்களிலும் பாக்ஸ் அமைப்பில் தடுப்புகள் இருக்கும். இரண்டு வரிசையில் நாற்காலிகள் இருக்கும். மொத்தம் பதினைந்து நாற்காலிகள். வலது பக்கம் இருக்கும் பாக்ஸ் ரங்கநாதனின் சொந்தக்காரர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு. வெளியூரிலிருந்து வரும் உறவுகாரர்கள் அன்றைய தினம் படம் பார்க்க வந்து விடுவார்கள். குழந்கைள் சிறுவர்கள் இருந்தால் ரங்கநாதனும் ஒட்டிக்கொள்வார்.

இடது பக்கம் இருக்கும் பாக்ஸ் அப்பாவின் நண்பர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தாசில்தார்,காவல்துறையினர்,மின்சாரவாரிய என்ஜினியர் மற்றும் அவர்கள் குடும்பம் என்று அங்கே உட்கார்ந்து பார்ப்பார்கள்.

பிரபல திரைப்பட நடிகர் ஒருவர்,ஒரு முறை வெளிப்புற படப்பிடிப்புக்கு

வந்தபோது, அப்பா மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்களுடன் பாக்ஸில் உட்கார்ந்து படம் பார்த்தார். எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம் என்பது ரங்கநாதனுக்கு நினைவில்லை. அப்போது எடுத்த புகைப்படம் ஒன்று ஃபிரேம் போட்டு புரஜெக்டர் ரூமில் மாட்டப்பட்டிருக்கிறது.

ரங்கநாதனுக்கு நினைவுகள் அலைஅலையாய் வந்து முட்டி மோதின. கடைசியாய் முத்து பேசியதும் கேட்டதும் நினைவுக்கு வந்தன. முத்து, ரங்கநாதன் சிறுவனாய் இருந்தபோது எப்படி ‘தம்பீ’ என்று அன்புடனும் வாஞ்சையுடனும் அழைத்தாரோ அப்படியேதான் இன்றும். ‘மொத்தம் எட்டாயிரம் அடிகள்தான் தம்பி. பத்து நிமிடம் கூட ஓடாதுன்னு வச்சுக்கங்களேன்.’ ரங்கநாதன் பதில் எதுவும் பேசவில்லை. சற்று யோசனைக்குப்பின்,”வேண்டாம்னே. அந்தப் பாவத்தை நாம் செய்ய வேண்டாம்.” ”எனக்கு தோணுன யோசனையைச் சொன்னேன். நானும் விசாரிச்சு பார்த்தேன். நடுப்பட்டு,ஆரியன் குளம்,அன்ன சத்திரம் எல்லா இடத்துலயும் செகண்ட் ஷோ இண்ட்டர்வெலுக்கப்புறம் போட்டுடறாங்களாம். கலக்ஷன் பரவாயில்லைன்னு பேசிக்கிறாங்க. நீங்க சரின்னு சொன்னா போலீஸ் ஸ்டேஷன்ல நான் ஏற்பாடு பண்ணிடறேன். அந்த ஊருங்கள்லயும் ஸ்டேஷனுக்கு மாமூல் குடுத்துடறதா கேள்விப்பட்டேன்.”

ரங்கநாதன் மெüனம் காத்தார். வயதில் பெரியவர் ஏதோ அசட்டுத்தனமாக பேசுகிறார் என்று தோன்றியது. ”கோயில் சிலைகள்லயும், தேர்லயும் பார்க்கறப்ப நமக்கு அது அசிங்கமாவோ,பாவமாவோ தோன்றதில்லையே. இயற்கைக்கு உட்பட்ட விஷயம்தானே. படிக்காத பாமரனின் தர்க்கம் மாதிரி தோன்றினாலும் அதில் எதுவும் தவறு இருப்பதாகப்படவில்லை. ஆனாலும்,பிரச்னைக்கான தீர்வு அதுவல்லவே. ”இப்பல்லாம் பள்ளிக்கூடத்து பசங்களோ பொம்பளைங்களோ தல வச்சு படுக்கிறதில்லை தம்பீ. ஏதோ கூலியாளுங்க அவுங்க இவுங்கன்னு ஒரு ஐம்பது டிக்கட் வந்தாலே பெரிசு. திருச்சியில் விசாரித்தேன். ஃபிலிம் இருக்குன்னு சொன்னாங்க. நீங்க பயப்படவேண்டாம். நான் பார்த்துக்கறேன். இதுல பழிபாவம் எதுவுமில்லை தம்பீ. அப்படியே எதுவும் வந்தாலும் பழிய என்மேல போட்டுடுங்க.”

”நான் யோசிச்சிட்டு சொல்றேன்.” ஆனால் ரங்கநாதனால் அதற்கு மேல் அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. மாறாக,அவருக்குப் பழைய நினைவுகள்தான் வந்து போயின. இப்போதைய நிலையைப் பார்க்கும்போது கசப்பாகவே இருக்கிறது. என்ஜினியரிங் முடித்த கையோடு வேலைக்குப் போயிருந்தால்,பெரிய பதவியில் இருந்திருக்கலாம்.

கண்ணுக்கெட்டிய தூரம் நிலம்,ரைஸ்மில்,ரூட் பஸ் மூன்று,டூரிங் டாக்கிஸ் என அப்பா தனியாக நிர்வகிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அனைத்தையும் நன்றாக நிர்வகித்தாலே போதும் என்கிற நிலை. கமலஹாசனின் கல்யாண ராமன் படம் ஓடியதில் கிடைத்த வருமானத்தில் இளையதங்கை சுலோச்சனாவின் கல்யாண செலவில் பாதிக்கும் மேல் வந்திருந்தது. டீ கடைக்காரப் பையன் ரங்கநாதனுக்கு எவர்சில்வர் டம்ளரில் காபி கொண்டு வந்து கொடுத்தான். அப்போதெல்லாம் திரையரங்கிற்குள் டீ கடை வைக்க நான் நீ என்று போட்டியிருக்கும். மாதம் ஓரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துவிடுவார்கள். காபியைக் குடித்தவாறே மீண்டும் ரங்கநாதன் யோசிக்கலானார். முத்துவையும் சேர்த்து எட்டு பேர் வேலை செய்கிறார்கள். பகல் நேரத்தில் ஒரு காவலாளி சாம்பசிவம் என்று பெயர். வயது அறுபதுக்கு மேல் சம்பளம் என்று எதுவுமில்லை.

சாப்பாட்டு நேரத்துக்கு ரங்கநாதன் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்துவிடுவார். மனைவி காலமாகிவிட்டாள். ஒரே மகன் மிலிட்டரியில் இருக்கிறான். எனவே சினிமா கொட்டகைதான் அவருக்கு வீடு. காபியைக் குடித்து முடித்தபின் டம்ளரைக் கீழே வைத்தார் ரங்கநாதன். சாம்பசிவம் அதை பவ்யமாக கையிலெடுத்து டீக்கடையில் கொண்டு போய் கொடுத்தார்.

போன வாரம் தேடிப்பிடித்து ஒரு நல்ல படத்தைக் கொண்டு வந்து திரையிட்டார்கள். அன்றைய தினம் பார்த்து அதே படத்தை டெலிவிஷனில் ஒளிபரப்பினார்கள். சாதாரணமாக வருகிற முப்பது நாற்பது டிக்கெட் கூட வரவில்லை. மூன்று நாள் கழித்து பெட்டியை அனுப்ப வேண்டியதாகி விட்டது.

முத்து சொன்னது ரங்கநாதனை மீண்டும் யோசிக்க வைத்தது. அதில் என்ன தப்பு? மனுஷக்கு வயிற்றுக்கு உணவு எப்படி தேவையோ அப்படித்தானே அதுவும். அதில் பழி சொல்லவோ பாவம் என்று எண்ணுவதற்கோ என்ன இருக்கிறது? லட்சோப லட்ச ஆண்டுகள் மனித இனம் அதைக் கடந்துதானே வந்திருக்கிறது.

முதல் காட்சி இடைவேளையின் போது வெளியே வந்தார். சிகப்பு கலர் ஈரிழைத் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். கொட்டைகைக்குள் பழைய எம்.ஜி.ஆர். பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது. ”என்ன முத்தண்ணா…..புதுப்பாட்டு எதுவும் இல்லையா?”புதுப்படத்துல வர்ற பாட்டுங்கள்ல எங்க தம்பி வரியெல்லாம் புரியுது” என்று சிரித்தார். மெüனமாகி,”தம்பீ…. நான் சொன்னதை யோசிச்சிங்களா!”மனமென்னவோ ஒப்பவில்லைதான். ஆனால் கொட்டகைக்கும் வாய்க்குமாவது ஓடட்டுமே என்கிற எண்ணத்தில் ஒரு ஆழ்ந்த பெருமூச்சுக்குப்பின் ரங்கநாதன், ”சரிண்ணே,பிரச்சனை வராம பார்த்துக்கங்க” என்று எழுந்தார்.

திரையரங்கினுள் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்கிற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. முத்துவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.”மெட்ராஸ்ல ஓரு வேலை இருக்கு முத்தண்ணா. வர்றதுக்கு பத்து நாள் பிடிக்கும். பார்த்துக்கங்க.”நான் பார்த்துக்கிறேன் தம்பி.நீங்க போயிட்டு வாங்க.”

மறுநாள் முத்து திருச்சிக்குப் போய் படச்சுருளை வாங்கி வந்தார். முதல் நாள் இரண்டாவது காட்சியில் இடைவேளை முடிந்து பத்து நிமிடம் கழித்து வருவதைப்போல் மெயின் படத்துடன் ஓடவிட்டார். தியேட்டரில் கூச்சலும் விசில் சப்தமும் எழுந்து அடங்கி ஓசையின்றி பார்க்கத் தொடங்கினர். முடிவடைந்த பின் மீண்டும் கூச்சல். பின்னர் அமைதி. ஸ்டேஷனில் பேசி மாமூலுக்கு எற்பாடு செய்துவிட்டு வந்தார் முத்து. கிட்டத்தட்ட திரையரங்கின் மேனஜர் அந்தஸ்துதான் முத்துவுக்கு. வருகிற கலெக்ஷனுக்குத் தனியாக மேனஜரெல்லாம் போட முடியாத நிலை.

முதல் நாள் திரையிட்டதின் பிரதிபலிப்பு மறுநாள் இரண்டாவது ஆட்டத்தில் தெரிந்தது. நூறு டிக்கெட்டுக்கும் மேல் கும்பல் வந்தது. மூன்றாம் பகற்பொழுதில் ஸ்டேஷனுக்குப் போய் கவனித்துவிட்டு வந்தார் முத்து. அதற்கடுத்த வாரம் இரண்டாவது ஆட்டத்துக்கு கும்பல் சூடு பிடித்தது. இரவு நேரப் பணியிலிருந்த கான்ஸ்டபிள் இருவர் கூட வந்து பார்த்து விட்டுப் போயினர். ‘அந்த சீன்களை மட்டும்’. இந்த விபரம் நாலைந்து தினங்களில் சுற்று வட்டாரத்தில் கற்றவர்களிடமும் கல்லாதவர்களிடமும் ரகசியமாக கசியத் தொடங்கியது. ஏழாம் நாள் இரவுக் காட்சியில் ஒரு கும்பல் மீண்டும் ஒரு தடவை அந்தப் பகுதிகளை ஓட்டச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தது. வேறு வழியின்றி அதே பகுதிகளை அரைமணி நேரத்தில் வெட்டி ஒட்டி மீண்டும் திரையிட்டார் முத்து. மறுநாள் வசூல் கணிசமாக கூடியது. அதற்குள் படச்சுருளைத் திருப்பி அனுப்பச் சொல்லி திருச்சியிலிருந்து ஆள் அனுப்பியிருந்தார்கள். மறுநாள் காலை தானே வந்து கொடுத்துவிட்டுப் பணத்தையும் தருவதாகப் பதில் சொல்லியனுப்பினார் முத்து. ஆனால் நடந்ததோ வேறு!

மெட்ராஸில் சொந்த வேலைகளை முடித்துக் கொண்டு ஒன்பதாம் நாள் மதியம் ரங்கநாதன் ஊருக்கு வந்து சேர்ந்தார்.

அவர் இந்த பஸ்ஸில்தான் வருவார் என்பதைச் சரியாக யூகித்து வைத்திருந்த இரண்டு காவலர்கள்,அவரை பஸ் ஸ்டாண்டிலேயே சந்தித்து,”இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை அவசரமா பார்க்கணும்னு சொன்னாங்க. கொஞ்சம் வந்து போனீங்கன்னா நல்லா இருக்கும்” மிகவும் பவ்யமாகவே அழைத்தார்கள். ரங்கநாதன் இதுவரை எந்த விஷயத்திற்கும் காவல்நிலையம் போனதில்லை. அதற்கு தேவையும் இருந்ததில்லை.

எதிர்பார்த்த மாதிரியே இன்ஸ்பெக்டர் சீக்கிரம் வரவில்லை. மதிய உணவை முடித்துக் கொண்டு சாவகாசமாக மூன்று மணிக்கு வந்து சேர்ந்தார். ரங்கநாதன் முகமன் கூறியும் அவர் அதை உரிய முறையில் ஏற்கவில்லை. முகத்தில் சற்று சிடுசிடுப்பு இருந்தது. ரங்கநாதனுக்கு மனதில் சுரீரென்றது.இன்ஸ்பெக்டர் காவலரிடம் சைகை காண்பித்தார். காவலர் உள்பக்கம் போனார்.மேற்கொண்டு என்ன கேட்கலாம் என்று ரங்கநாதன் யோசித்த சமயத்தில், முத்து தலையில் அடித்துக் கொண்டு அழுதவாறு வந்து ”என்னயை மன்னிச்சிடுங்க தம்பி. விஷயம் விபரீதமா போயிடுச்சி…” என்று காலில் விழுந்தார்.

திடுக்கிட்ட ரங்கநாதன் முத்துவை தூக்கி நிறுத்தினார். பக்கவாட்டில் திரையரங்கில் வேலை செய்யும் பணியாட்கள் இருவர் கை கட்டி நின்றனர். எஜமான் விசுவாசத்தில் அவர்களுக்கு கண்கலங்கியது. இப்போது ரங்கநாதனுக்கு தெளிவாக விளங்கிவிட்டது. இனிமேல் சொல்வதற்கோ,செய்வதற்கோ என்ன இருக்கிறது என்று யோசித்தார். இன்ஸ்பெக்டர் அலமாரியைத் திறந்து படச்சுருள் பெட்டி ஒன்றை எடுத்து வைத்தார். ”இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். நான் எதுக்கு உங்களைக் கூப்பிட்டேன்னு…” இன்ஸ்பெக்டர் பீடிகையுடன் சொன்னார். ” என்னோட அனுமதியோடதான் இது நடந்துச்சி.” குரலில் ஓரு அசாத்திய அமைதியும் அழுத்தமும் இருந்தது. கொஞ்சம் அதிகார தோரணைகூட இருந்தது. உண்மையை ஒப்புக் கொள்கிற ஒரு மனிதனுக்கு இயல்பாக வந்து சேருகிற தைரியம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.சட்டப்படி குற்றம்னு தெரியாதா? ”தெரியும்..” சற்று அழுத்தமாய். ”தெரிஞ்சா செய்தீங்க…?”

”ஆமாம்…சூழ்நிலை…” ரங்கநாதன் பழியைப் பணியாட்கள் மேல் போட்டுவிடுவார் என்றுதான் இன்ஸ்பெக்டர் எதிர்பார்த்தார். ஏனென்றால், முத்து இந்த சம்பவத்துக்கும் முதலாளிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால்,ரங்கநாதனோ அதற்கு தானே பொறுப்பு என்கிற மாதிரி பேசுகிறாரே என்றும் யோசித்தார். ”இப்போ என்ன செய்யலாம்?” என்றார் இன்ஸ்பெக்டர். ”சட்டப்படி நீங்க என்ன செய்யணுமோ அதை செய்யுங்க…” வீட்டுக்கு வந்தபோது ரங்கநாதன் குற்ற உணர்வோடு பிரேமாவைப் பார்த்தார். பிரேமா குரெலடுத்து அழுதாள். ஊரில் எப்படி தலைகாட்ட முடியும் என்கிற கவலை அவளுக்கு. ரங்கநாதனிடம் கலக்கம் எதுவுமில்லை. முத்துவும் வேலையாட்களும் திரும்பி வந்தனர். ”தம்பீ…உங்களை …இந்த நிலைக்கு ஆளாக்கிட்டேன்…பாவி…” ரங்கநாதனின் கால்களுக்கருகில் தரையில் விழுந்து கதறினார் முத்து. ”முத்தண்ணா….என்னா…நீங்க….கஷ்டம் யாருக்குத்தான் வர்றதில்லை. வயசுல பெரியவர்…தைரியமாக இருங்க”. தோள்களைப் பற்றி தூக்கி நிறுத்தினார். முத்து சமாதானம் ஆகவில்லை. குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுதார். புரஜக்டரை ஒரு குழந்தையைப் போல பாவித்து வந்தார் முத்து. ஒரு சின்ன சப்தம் கூடுதலாக வந்தால்கூட மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்துவிடுவார். மெலிதான குரலில்,”இன்ஸ்பெக்டருக்கான பங்கு சரியா போய்ச் சேரலைன்னு கேள்விப்பட்டேன். அதனாலதான்…” என்று இழுத்தார் முத்து. ”பரவால்லேண்ணே… எப்படி விழுந்தோம்கறது முக்கியமில்லை. எப்படி எழுந்திரிக்கறோம்கறதுதான் முக்கியம். நீங்க போய் பெருமாள் மேஸ்திரிய கூட்டிகிட்டு வாங்க.”

”மேஸ்திரியாவா…எதுக்கு தம்பீ?”

” நீங்க கூட்டிக்கிட்டு வாங்களேன்” முத்து வேகமாய் புறப்பட்டார்.

ரங்கநாதன் கூப்பிட்டனுப்பினார் என்றதும் வேலையைப் பாதியில் விட்டுவிட்டு ஓடி வந்தார் மேஸ்திரி. வேலைகள் மளமளவென்று தொடங்கப்பட்டு ஆறுமாத காலத்தில் ரங்கா திரையரங்கம்,ரங்கா திருமண மண்டபமாக மாறியிருந்தது. முத்து, ரங்கா திருமண மண்டபத்தின் மேலாளர் ஆனார். மற்ற பணியாளர்கள் மண்டபத்தின் இதர ஊழியர்கள் ஆனார்கள்.

ஓரு வருடம் கழித்து அந்த ஊருக்குப் புது இன்ஸ்பெக்டர் மாற்றலில் வந்தார். தன் மகளின் திருமணத்தை நடத்த கல்யாண மண்டபத்தைச் சகாய வாடகைக்கு தருமாறு ரங்கநாதனைக் கேட்டுக் கொண்டார். தனக்கு மூன்று பெண் பிள்ளைகள் என்றார். அவரைத் தன் வீட்டில் வரவேற்று உபசரித்த ரங்கநாதன் வாடகை எதுவும் இல்லாமல் இலவசமாக நடத்திக் கொள்ள அனுமதித்தார். இன்ஸ்பெக்டர் இரு கரம் கூப்பி நன்றி சொல்லி புறப்பட்டார்.

தவறான பாதையில் எவ்வளவுதூரம் பிரயாணித்தாலும் தவறில்லை. மீண்டும் திரும்பி வந்துவிட வேண்டும் என்று தீர்மானித்த பிறகு அதற்கான தைரியம்தான் முக்கியம்.

- காவ்யா புகழேந்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சின்னச் சின்ன கதைகள் - Page 2 Empty Re: சின்னச் சின்ன கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum