தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஈழத்து சிறுகதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:18 am

கூடுகள் சிதைந்தபோது.........
----------------------
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்.... நிம்மதியாய்..... மகிழ்ச்சியாய்.....

நான் மட்டும்......?

நான் மட்டும் ஏன் இப்படி...?

உள்ளும் புறமும் ஏதோ அனல் என்னைச் சுட்டெரிப்பதாய் நெளிகிறேன்.

தனிமை...!

வெறுமை....!

நெஞ்சிலே கனம்...!

தேசந்தாண்டி வந்தாலும் இன்னும் அந்த அச்ச உணர்வுகள் என்னைவிட்டு விலகவில்லை. கனவிலும் நனவிலும் கரிய பிசாசுகள் என்னை துரத்துவதாய் ஏதோ பிரமை. 'ஓடு... ஓடு...' என்று ஏதோ ஒரு குரல் என்னை உந்தித்தள்ளுகிறது. மண்டைக்குள் வண்டு குடையுமாப்போல், ஏதோ வாகனம் ஓடுமாப்போல் சதா அதிர்வுகள்.....

கடந்து போன பலரும் தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்த என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்தனர். என் நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறும் ரணங்களின் வலிகள் அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது. சரியாக வாரப்படாத முடி..... சவரம் செய்யப்படாத முகம்.... கசங்கிப்போன உடை..... கையில் சிகரெட்டு..... நானா இது....? எனக்கே நம்பமுடியவில்லை!

அதுசரி. காலையில சாப்பிட்டனானோ......?

வெளிக்கிடேக்கை கதவை சரியாக பூட்டினனானோ......?

அது இருக்கட்டும்.

ம்.... என்ர வீடு எங்க இருக்குது?

'சீ.... நான் இங்க வந்திருக்கக் கூடாது.'

'நான் இங்க வந்திருக்கக் கூடாது'

என்னுள் வெறுப்பு மண்டுகிறது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எறியத்தான் பார்த்தேன். அந்தச் சிறுமி மட்டும் என் குறுக்கே ஓடிவராமல் இருந்தால். பத்திரமாக சிகரெட்டுத் துண்டைக் கொண்டுபோய் அணைத்துவிட்டு மரநிழலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நடக்கிறேன்.

எங்கே போகிறேன்.....?

என் கால்கள் நடக்கச் சொல்கின்றன.

நான் நடக்கிறேன்.

எவ்வளவு தூரம்......? எத்தனை மைல்.....?

நடக்க நான் தயார். இப்படி நடந்தே ஊர்கள் கடந்துவந்த அகதித் தமிழன் நான்.

சந்தடியற்று நீண்டுகிடக்கிறது அந்த வீதி. ஒன்றிரண்டு கார்கள் ஓசைபடாமல் ஊர்ந்து செல்கின்றன. குடிமனைகள் தெருவின் இருமருங்கும் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் என் மனம் ஒட்ட மறுக்கிறது. தெருவின் ஓரமாய் பாதசாரிகள் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சீமெந்துத் தரையில் என் வெறும் கால்கள் தம்போக்கில் நடக்கின்றன.

'ஓ செருப்பு அணியக்கூட மறந்து போனேனோ..!

எனக்குள் நானே சிரித்துக்கொள்கிறேன்.

என் மேலாடையின் வியர்வை நாற்றம் எனக்கே அருவருப்பாக இருக்கிறது.

'இன்றைக்காவது போய்க் குளிக்கவேணும்'

ரோட்டைக் கடந்து மறுபக்கம் செல்ல நினைக்கிறேன். ஏதே சிறு சத்தம் என்னை தலைநிமிர வைக்கிறது.

அந்தக் கார் திடீர் என்று 'பிரேக்' போட்டு நிற்கிறது. பிறகு கொஞ்சம் பின்னுக்கு எடுத்து, கொஞ்சம் விலத்தி, பிறகு வேகமாக முன் நகர்கிறது. நடுவீதியில் ஏதோவொன்று வேகமாக அசைவதாய் தெரிகிறது. என் கண்கள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நிற்கின்றன. படபடவென்று இறக்கையை அடிக்கிறது ஒரு சிறு குருவி.

வெறிச்சோடிக்கிடக்கும் தெருவின் நடுவுக்கு என்னையும் அறியாமல் வந்துவிடுகிறேன்.

முதுகில் கருமையும்;, வயிற்றுப்புறம் இளமஞ்சளுமாய் அந்தக் குருவி துடிதுடிக்கிறது. இன்னொரு குருவி, அதன் ஜோடியாக இருக்க வேண்டும் இந்தக் குருவியைத் தவிப்புடன் சுற்றிச் சுற்றி நடக்கிறது. விழுந்து கிடக்கும் குருவியோ தன் சிறிய செட்டைகளை படபடவென்று அடிக்கிறது. தலையை இரண்டொரு முறை தூக்கிப் பார்த்துவிட்டு அப்படியே தொப்பென்று சரிய இறந்துபோகிறது. அதன் உடல் நசிந்துபோய், மேல் இறகு பிய்ந்துபோய்க் கிடக்கிறது. லேசாக இரத்தம் கசிகிறது.

குருவியை அடித்துவிட்டுக் கார் தன் போக்கில் போய் விட்டது.

'கண் மண் தெரியாமல் ஓட்டுறான். விசரன்..... இவன் எங்க போய் பிரளப்போறானோ.....' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.

ஜோடிக் குருவியால் தன் இணையின் பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் இறகுகளை விரித்து விரித்துக் காட்டி அதைத் தன்னுடன் பறந்து வருமாறு அழைக்கிறது. இழப்பை உணர்ந்து வேதனையுடன் இரண்டடி தூரம் பறப்பதும் திருப்பி வந்து இறந்து கிடக்கும் தன் ஜோடியை அலகாற் தொட்டுப் பார்த்துச் சத்தம் போடுவதுமாக அந்தரிக்கிறது. அங்குமிங்கும் பார்த்து தலையை ஆட்டியபடி நடக்கிறது.

தூரத்தில் இன்னுமொரு கார் வருகிறது. அது வருகின்ற வேகத்தில், அதன் சக்கரங்களுக்குள் அகப்பட்டு இறந்து கிடக்கும் சிறுகுருவியின் உடல் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகப் போகிறதே...! என் நெஞ்சு பதறுகிறது. என்னைப் போலவே அந்தக் குருவியும் பரிதவிக்கிறது. அச்சிறுகுருவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் ஜோடியை விட்டுப் போக மனமில்லாமல் அருகில் இருந்த மரத்தில் அமர்வதுவும், பின் தன் ஜோடியின் அருகில் போய் அமர்ந்து கொள்வதுவுமாக அதன் நிலை இருக்கிறது.

நான் அவசரமானேன். தெருவோரமாய் கிடந்த கடதாசி அட்டையை எடுத்துக்கொண்டு இறந்துகிடந்த குருவியை நெருங்கினேன். என் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. இரத்தமும் சதையுமாய் ஏதேதோ நினைவுகள்; என் மனதைச் சூழ்ந்துகொள்கின்றன. மரக்கிளையில் அமர்ந்தபடி அந்தக்குருவி என் செயலைக் கண்டதும் பயத்துடன் ஆரவாரிக்கிறது. ஒரு பூவைப் போல அந்தக் குருவியை மெதுவாகத் தூக்கியெடுத்து அட்டைப் பெட்டியில் கிடத்தினேன். என் விழிகள் நீரைச் சொரிந்து கன்னங்களில் வழிந்தோடுகிறது. இரு கைகளிலும் தூக்கி, முகத்திற்கு அருகே கொண்டு வந்து அந்தக் குருவியைப் பார்க்கிறேன்.

'இப்பிடித்தான் என்ர சசியும்......'

என் ஆன்மாவுக்குள் அடக்க முடியாத வேதனை. குலுங்கிக் குலுங்கி அழுகிறேன்.

இழப்பின் வலி அறிந்தவன் நான்.

குருவியின் இழப்பில் என் இழப்பின் வேதனை!! எவ்வளவு நேரம் அப்படியே நடுத்தெருவில் அமர்ந்திருந்து அழுதேனோ தெரியவில்லை.

என்னை விலத்திக் கொண்டு அந்தக் கார் மெதுவாக முன்னகர்கிறது. அதில் அமர்ந்திருந்த வெள்ளையின வயோதிபர் மென்முறுவலுடன், சிறு வியப்புமாய் என்னை அங்கீகரித்துத் தலையசைத்துவிட்டுப் போவது தெரிந்தது.

ஒரு குழந்தையைப் போல பத்திரமாக அந்தக் குருவியை எடுத்து தெருவோரமாய் நின்றிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு அப்பால் நடக்கிறேன். அதன் இணை என்னை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறது.

நடந்து நடந்து என் கால்கள் வலிக்கின்றன. அதைவிட என் மனம் வலிக்கிறதே.

அது இறக்க முடியாத சுமை. என் உயிரை அணுவணுவாய்க் கொல்லும் வேதனை. கனவிலும், நினைவிலும் சதா அந்த நிழல் விம்பங்கள். என் நினைவுகளைச் சுமந்தவள், என் கனவுகளின் உருவாக கருவான என் குழந்தை, இருவரையும் இழந்த நடைபிணம் நான்.

'நான் இங்க வந்திருக்கவே கூடாது...'

'நான் விசரன்..... நான் பைத்தியக்காரன்......' ஓலமிடும் என் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகவேகமாக நடக்கிறேன்.

'ஐயோ அம்மா எனக்கு பயமாயிருக்குதம்மா. என்னைக் கட்டிப்பிடியுங்கோ அம்மா' மூத்தக்காவின் நான்கு வயது மகன் கயன் அனுங்குவது இப்போதும் என் காதுகளில் கேட்கிறது. நாலாபுறமும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அக்கா மகனை அள்ளியெடுத்து அணைத்துக்கொள்கிறா. கயன் அவள் மார்போடு ஒட்டிக்கொள்கிறான். அவன் உடல் பயத்தில் நடுங்குகிறது. கண்கள் குழிவிழுந்து, எலும்பும் தோலுமாய் கயன்....

'தம்பி இனி இங்க இருக்கேலாது போல இருக்குது. சனமெல்லாம் வெளிக்கிடுதுகள். நாங்களும் அங்கால போவம். எல்லாத்தையும் இழந்திட்டம். இனி இதுகளையும் இழக்க ஏலாது. பார் பொடியன் பயத்தில நடுங்கிற நடுக்கத்தை' என்கிறா மூத்தக்கா.



இரணைமடுவில இருந்து வெளிக்கிட்டு இது மூன்றாவது இடம். சனத்தோட சனமா அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறம். எங்கட இடப்பெயர்வுக்கு ஒரு முடிவு இல்ல. எனக்கு சசியை நினைச்சால் தான் பயமும், கவலையும். சசிக்கு இப்ப ஏழு மாதம். வயிறு நல்லா வெளியில தெரியுது. அவளைப் பார்க்க எனக்கு நெஞ்சு பகீர் எண்டு இருக்கும். அவள் சுகம் பெலமாகப் பிள்ளையப் பெத்தெடுக்க வேணும் என்றதுதான் என்ர பிரார்த்தனையாக இருந்தது.

'அவளால வரிசையில நிக்க ஏலுமா?'

நான்தான் பாணோ, பருப்போ வரிசையில நிண்டு என்னென்டாலும் அவளுக்கு வாங்கிக்குடுக்கிறது.

'எத்தினைநாள் நான் சாப்பிட்டிட்டன் எண்டு பொய் சொல்லி அவளச் சாப்பிடப் பண்ணியிருப்பன்'

கலியாணங்கட்டி ரெண்டு வருஷத்துக்குப் பிறகுதான் சசிக்கு வயித்தில குழந்தை தங்கினது. அந்த செய்தி கேட்ட சந்தோசம் நீடிக்காமல் இந்த நாட்டுப் பிரச்சினையும் தொடங்கிற்றுது. அந்த நாள்த் தொடக்கம் ஆன சாப்பாடு கூட இல்லை. பயம்... பசி.... பட்டினியோட.... பிள்ளை எப்பிடி பிறக்கப் போகுதோ எண்டு சில நேரங்களில யோசிக்க பயமாகத்தான் இருந்துது.

ஒவ்வொருக்காலும் அவளப் பத்திரமா பங்கருக்குள்ள இறக்கி, ஏத்தி.....

எப்பிடி இருக்க வேண்டியவள். நாரி நோ, முதுகு நோ எண்டுகொண்டு அந்த வெறும் தரையிலயும், மண்புழுதீக்கையும் படுத்தெழும்பேக்க எனக்கு செத்திரலாம் போல இருக்கும். அவளும்தான் எலும்பும் தோலுமாய்.... ஆன சாப்பாடு கூட இல்லாமல்.....

எத்தினை இரவுகளை அவள் பங்கருக்குள்ளயே கழிச்சிருக்கிறாள். குண்டுக்குப் பயப்படுகிறத விட அவளுக்குப் பாம்பு, பூச்சியளுக்குத்தான் கூடப் பயம்.

ஆனால் கடைசியில.....



அடுத்தநாள் ஆமிக்காரங்கள் நாங்க இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியைச் சுத்திவளைச்சுட்டாங்கள். அக்கா வெளிக்கிடுவம் எண்டு சொல்லியும் யோசிச்சுக்கொண்டிருந்தது எவ்வளவு பிழையெண்டு அப்பதான் தெரிஞ்சுது. பீரங்கி, பல்குழல்.... பத்தாததுக்கு பிளேனுகளும் விட்டுவைக்க இல்லை. இந்தத் தாக்குதல் கடைசித் தாக்குதலாம் என்று எல்லாரும் கதைக்கினம். சனம் காடு கரம்பையளுக்குள்ளாலயும், கடல் பக்கத்தாலயும் வெளியேறப் போறதாய்க் கதைச்சவை. சனத்தோட சனமா நாங்களும் வெளிக்கிட்டம்.

சசிக்கு நடக்க ஏலாமல் இருந்துது. எனக்கு சில நேரம் கோபம் கூட வந்தது. இந்தப் பயங்கரத்தைத் தாண்டினால் காணும் எண்டு இருந்துது எனக்கு.

'கெதியா நடவப்பா. இன்னும் கொஞ்சத் தூரம்தான்' எண்டு அவளை அவசரப்படுத்தினேன். குண்டுகள் நாங்க வந்த பாதைகளில் எல்லாம் விழுந்து வெடிச்சுது. செத்தவெ சாக மிச்சமான ஆக்கள் நடந்துகொண்டிருந்தம்.

'ஐயோ... என்ர பிள்ளை. என்ர பிள்ளை...' திடீரென்று பின்னால வந்துகொண்டிருந்த அக்கா கத்திக் குழறினா. அக்காவின்ர கையில இருந்து ரெத்தம் வடிஞ்சுது. அவா கயனைத் தூக்கிக்கொண்டு வந்தவா. கயனுக்கு மண்டையில காயம்பட்டிருந்துது. நான் சசியின்ர கையில இருந்த உர 'பாக்'கில இருந்து ஒரு சீலையக் கிழிச்சு கயனுக்கு கட்டுப்போட்டன்.

'சசி நீ இதுகளைப் பார்க்கக்கூடாது. அங்கால போ'; மெல்லிய குரலில நான்தான் சொன்னன். அவள் விறைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றாள். தலை இல்லாத முண்டங்கள், கை கால் இழந்த உடல்கள் என்று எத்தினையக் கடந்து அவள் வந்துட்டாள். இதென்ன பெரிசா.....!!!

கட்டியிருந்த துணியையும் மீறிக்கொண்டு கயனுடைய தலையில இருந்து இரத்தம் வந்துகொண்டிருக்குது. கயன் அப்பவும் மயக்கமாகத்தான் கிடக்கிறான். பேச்சு மூச்சில்லை. அக்கா மயங்கி விழுந்திட்டா. கொஞ்ச நேரத்தால தானே கண்ணை முழிச்சிட்டா.



'வவுனியாவுக்குள்ள போயிட்டால் பிள்ளைக்கு ஏதாவது மருந்துபோடலாம்' யாரோ சொல்ல அத்தான் கயனைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். அக்காவும் அவருக்குப் பின்னால ஓடினா.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கிட்டவாகக் கேட்குது. ரெண்டுபக்கமும் சரியான சண்டை நடக்கிறமாதிரி சத்தம் கேக்குது. சனத்தோட சனமா நாங்களும் நடந்தம். சசியும் மூச்சிரைக்க நடந்து வந்தாள். நடக்க ஏலாமல் கஷ;டப்பட்ட சசியைப் பத்திரமா பிடிச்சுக்கொண்டு நடந்ததில நான் அக்காவையளையும் தவறவிட்டுட்டன்.

கண் எட்டுற தூரத்தில மண் மூடை அடுக்கியிருக்கிறது தெரிஞ்சுது. அது கடந்தால் அங்கால ஆமியின்;ர 'காம்ப்'தான் என்டு யாரோ சொன்னது கேட்டுது. சசியின்ர முகத்திலும் கொஞ்சம் தெம்பு வந்தமாதிரித் தெரிந்தது. நேரமும் இருட்டிக்கொண்டு வந்துது. என்ன பாம்பு, பூச்சி எங்க கிடக்குதோ தெரியாது. நான்; புதர்களை விலக்கிக்;கொண்டு சசிக்கு முன்னால நடக்கிறன். அப்பத்தான் அந்த இடிமாதிரிப் பெரிய சத்தம்....

நான் ஒரு புதருக்குள்ள விழுந்துகிடந்தன். எனக்குக் கையில காயம் பட்டு ரெத்தம் ஓடிக்கொண்டிருந்துது. கண்ணைத் திறக்க முடியாமல் கண்ணுக்குள் மண்ணும், தூசியுமாய்.... புழுதி மண்டலம் அடங்க சில நிமிசங்கள் எடுத்துது. அழுகுரல்களும், ஓலமும் தான்.....

'சசி.....'

'என்ர சசி....' நெஞ்சு பதைபதைக்க சசியைத் தேடினேன்.

சசி ஒரு தென்னைமரத்தோடு குப்புறக்கிடந்தாள். அவள் கிடந்த தோரணை....?

'ஐயோ சசி....!'

'ஓம் என்ர சசி செத்துப்போயிட்டாள்'

'என்ர சசி என்னை விட்டுட்டுப் போயிட்டாள்...'

'சசியோட சேர்ந்து வயித்தில இருந்த பிள்ளையும்........'



சன்னங்கள் அவளின்ர கழுத்து, நெஞ்சு, வயிறு என்று எல்லா இடங்களிலையும் துளைச்சிருந்துது. அவளின்ர ஒரு கால்ல முழங்கால் மட்டும்தான் இருந்துது. ஒரே இரத்தவெள்ளம்.

'ஐயோ சசி... என்ர சசி....'

'நான் என்ர சசிக்காக அழவா? இல்ல வயித்திலயே அழிஞ்சுபோச்சுதே அந்த என்ர குழந்தைக்காக அழவா.....?' முகத்திலயும்;, தலையிலயும் அடிச்சுக்கொண்டு அழுகிறன்.

'டொக்டர் ஆம்பிளைப் பிள்ளை என்டு சொன்னவர்...'

'நான் கண்ட கனவெல்லாம் அழிஞ்சுபோச்சுது. எனக்கினி ஆரு.....'

ஆறுதல்ப்படுத்த யாருமில்லாமல் பைத்தியக்காரனைப் போல கொஞ்சநேரம் அவளை என்ர மடியில போட்டுக்கொண்டு இருந்தன். என்ர காயத்தின்ர வலியோ, அதில இருந்து ரெத்தம் வடிகிறதோ எனக்கு தெரியேல்ல.

'எவளின்ர மடியில என்ர உயிர் போகவேணும் என்டு நினைச்சனோ, இன்றைக்கு அவள் பிணமா என்ர மடியில.....'

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் இப்ப இன்னும் கிட்டத்தில கேட்குது.

ஆட்கள் ஏதோ சொல்லிக்கொண்டு போகினம். என்ர காதில எதுவுமே விழேல்ல. குண்டுகள் விழுந்து வெடிச்சுப் புழுதி கிளம்புது. சன்னச் சிதறல்கள் நெருப்புப் பொறிகளாத்; தெறிக்குது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கிட்டவாய்க் கேட்குது. நாய், நரியளின்ர ஊளைச் சத்தங்களும் தூரத்தில கேட்குது.

'தம்பி அழுதுகொண்டிருக்க இப்ப நேரமில்ல. எழும்புங்க தம்பி' யாரோ ஒரு வயதானவர் என்னை நெருங்கி என்ர நிலமையைப் பார்க்கிறார். என்ர கைக்காயத்தைப் பார்த்து தன்ர இத்துப்போன சாரத்தின்ர ஒரு மூலையைக் கிழிச்சுக் கட்டுப்போடுறார்.



'என்ர ஆருயிர் மனைவி.... அவளை இப்படியே போட்டுவிட்டு எப்படி வரஏலும். ஏழுமாதக் குழந்தை அவள் வயிற்றுக்குள்ளேயே கருகிப்பேச்சுது. இவையள் இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறன்....?'

கிழவர் எங்கேயோ இருந்து ஒரு தகரத் துண்டைக் கொண்டு வாறார்.

'தம்பி இதால கிடங்கைக் கிண்டு......' என்றபடி அவர் வேகமாக அந்த தகரத் துண்டால மண்ணை கிளறுறார். எனக்குள்ள ஒரு வேகம்... அவரிட்ட இருந்து அதைப் பிடுங்கி வேகவேகமாக மண்ணைக் கிளறுறேன். காய்ந்து வறண்ட நிலம் அவ்வளவு லேசில் குழியைத் தோண்டமுடியேல்லை. கிழவனும் ஏதோ தடியை முறிச்சு தன்ர பங்குக்கு நிலத்தை குத்தி எனக்கு உதவுறார்.

துவக்குச் சூட்டுச் சத்தம் இப்ப நல்லாக் கிட்டக் கேட்குது. சனம் விழுந்தடிச்சு ஓடுதுகள். ஆமிக்காரங்கள் ஏதோ கத்திக் கதைக்கிற சத்தம் கூடக் கேக்குது. வாகனங்களின்ர உறுமலும் கேட்குது. சனங்கள் என்னையும் கிழவனையும் பார்த்து புறுபுறுத்துக்கொண்டு போகினம்.

'அவையளுக்காக என்ர மனுசியின்ரயும்;, பிள்ளையின்டயும் உடம்பை நாய், நரி தின்னவும், காக்காய் கொத்தவும் இப்பிடியே போட்டிட்டு வரேலுமே?'

அதுக்குள்ள எரிகுண்டொன்று எங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்குது. ஒரு குடும்பம், இரண்டு, மூன்று குழந்தைகள் என்ர கண்ணுக்கு முன்னாலேயே எரிஞ்சு துடிதுடிக்கியினம். அதைப் பார்த்ததும் என்ர உடம்பெல்லாம் பதறத் தொடங்கிற்றுது. மரண பயம் என்னைப் பிடிச்சுட்டுது. அந்தக் கோரச் சாவைப் பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போனது. எப்பிடியாவது ஓடித்தப்பவேணும். எனக்கு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. கிழவனையும் இழுத்துக்கொண்டு நான் ஓடுறன்.

உடம்பைக் குறுக்கியும், குனிந்தபடியும், ஊர்ந்தும், தவழ்ந்தும் அந்த சென்ரிபொயின்ட்டை நெருங்கி விட்டம். சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம்..... என்ர கையைப் பிடிச்சிருந்த கிழவரினர் கைபிடி நழுவிப்போச்சுது. அவர் விழுந்துட்டார். நான் மற்ற சனத்தோட சேர்ந்து கைகளை மேல தூக்கிக்கொண்டு நடக்கிறன். இராணுவம் அப்பிடியே எங்களச் சுத்திவளைச்சுது. ஏதேதோ விசாரணைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த எங்களை தங்களின்ர வாகனங்களில ஏத்திக்கொண்டு முகாமுக்கு கொண்டுவந்தவை.

அங்கதான் பெரியக்காவைப் பார்த்தன். தலையில் காயம்பட்டிருந்த கயனும் இறந்து போய் அத்தான்தான்; வழியில ஒரு பாழுங்கிணத்துக்குள்ள அவனை தூக்கிப் போட்டுட்டு வந்தவராம்.

'நரியள் குதறாமல் என்ர மகன் பத்திரமா இருப்பான்..' அத்தான் தலையில் கைவைத்தபடி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்;. சசியின்ர செய்தி கேட்டதும் அக்காவால அழக்கூட முடியேல்லை. யாருக்காக அழுகிறது? எதை நினைச்சு அழுகிறது எண்டு தெரியேல்ல.

பிறகு முகாம் வாழ்க்கை, விசாரணைகள் எண்டு தொடர, அக்காதான் முகாமுக்கு வெளியில போய் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வேணும் எண்டு காரியங்களைச் செய்தவா. என்ர அம்மாவும், பெரியண்ணன் குடும்பம், சின்னக்கா குடும்பம், தங்கச்சி எல்லாரும் இங்க கனடாவிலதானே இருக்கினம்.

'ஆரு இருந்தென்ன என்ர சசியும்... பிள்ளையும் எனக்கில்லையே.....'

மூத்தக்கா தான் என்னை சின்னன்னில இருந்து வளர்த்தவா. என்னில சரியான பாசம்.

'நான் பெத்த பிள்ளையத் தான் இழந்திட்டன். உன்னையும் இழக்க என்னால ஏலாது' எண்டு என்னோட பிடிவாதமா நிண்டு என்னை இங்க அனுப்பிவைச்சது அவாதான்.

என்ர மனம் முழுக்க அந்த முள்ளிவாய்க்கால் காட்டுக்குள்ள தான் சுத்திக்கொண்டு இருக்குது.

'என்ர சசி.... என்ர பிள்ளை...'

'இவ்வளவு காலமும் எனக்குச் சோறு போட்டுத் தாய்க்கு தாயாய் இருந்து என்னைப் பார்த்தவள். அவளின்ர உடம்ப நல்ல விதத்தில அடக்கம் செய்யக் கூட என்னால முடியேல்லையே...'

'பாவி...'

'நான் பாவி.... மகா பாவி. அந்தக் குழந்தைய கையில வைச்சுக் கொஞ்சத் தான் ஏலாமல் போச்சு. கடைசியா நாய் நரியள் தான்...'

'ஐயோ... நினைச்சால் எனக்குப் பைத்தியம் தான் பிடிக்குது'

'நான் ஏன் இங்க வந்தன். நான் சுயநலக்காரன், எனக்கு என்ர உயிர்தான் பெரிசாப்போச்சுது.... சீ.... நான் விசரன்...'

'நான் விசரன்...'

என் கால்கள் வலியெடுக்கின்றன. நான் நடக்கிறேன்.

நடந்துகொண்டே இருக்கிறேன்.



( 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, புலோலியூர் க. சதாசிவம்; ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற கதை)

ஞானம்
உயிரோசை,
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:21 am

அசோகன் கொழும்பில இருக்கிறான்...
-------------------------
தேவமுகுந்தன்
------------------------
வீடு குழம்பிப்போயிருந்தது. முதலாவது அறையை ஒதுக்கி சேந்தனின் குடும்பத்திற்குக் கொடுத்ததில், இவனது குடும்பத்தவர் எல்லோரும் இரண்டாவது அறையையே பயன்படுத்த வேண்டியிருந்தது.
இப்போது இரண்டாவது அறையிலிருக்கும் சாமான்களை எடுத்து முதலாவது அறைக்குள் அடுக்க வேண்டியுள்ளது. இனி இரண்டாவது அறையைத் துப்பரவாக்க வேண்டும்.

குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முதுகு உளைந்தது. வியர்த்துக் கொட்டியது. அவர்களை ஊருக்கு அனுப்ப அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து இரத்மலானை விமான நிலைத்திற்குச் சென்றிருந்தான். இப்போது நித்திரை தூக்கியடிக்கின்றது. வருடாந்தம் சுமார் பத்துப் பன்னிரண்டுதரம் இப்படிப்பட்ட வேலைவந்து சேர்ந்து விடுகின்றன. மகனும் மகளும் பாடசாலைகளிலிருந்து இரண்டு மணிக்குப் பின்புதான் வருவார்கள். மனைவி வர ஐந்து மணியாகும். இந்த வேலைகளை முடித்து பத்தரைக்கு முன்பு அலுவலகத்துக்கு போய்ச் சேர்ந்தால் 'ஷோர்ட் லீ'விலை சமாளிக்கலாம். இல்லாவிட்டால் அரைநாள் லீவு போடவேண்டியிருக்கும். லீவுகள் முடிந்து கொண்டிருக்கின்றன.

வந்தவர்களை விமான நிலையத்திலிருந்து கூட்டிவர ஒருநாளும், அவர்களுடன் வங்கி, பொலிஸ் நிலையம், கடைகள் என்று திரிய இன்னொரு நாளுமாய் இரண்டு நாட்கள் 'லீ;'வெடுத்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்தால் அவர்கள் திரும்பி வரும்போது, கூட்டித்திரியவும் கட்டுநாயக்காவுக்குப் போகவுமாய்; இருநாட்கள் லீவு எடுக்க வேண்டி வரலாம்.
...

அவனது வீடு ஊரிலோ வெளிநாடுகளிலோ இல்லாமல் இடையில் கொழும்பில் இருப்பதனாற்தான் இந்தச் சிக்கல். இரண்டு அறைகளையும் கூடத்தையும் சமையல் அறையையும் கொண்ட இந்த வாடகை வீட்டில் வேறு ஆட்கள் தங்குவதென்பது சிரமம்தான். பிள்ளைகளின் படிப்புக் குழம்பும். இவனது எழுத்து வேலைகள் வாசிப்புக்கள் குழம்பிப் போகும். தனிப்பட்ட சுதந்திரம் தொலைத்தவர்களாக இவர்கள் நான்குபேரும் அந்த நாட்களில் உணர்வார்கள்.

வருபவர்களை பொலீஸில் பதிவு செய்வதற்காய் அவர்களையும் வீட்டுச் சொந்தக்கார பெரேராக் கிழவனையும் கூட்டிக் கொண்டு பொலீஸ் நிலையத்திற்கு அலைய வேண்டும். பெரேராக் கிழவன் முகம் சுழிப்பான், புறுபுறுப்பான். அந்த மாத வாடகையைச் செலுத்தும் போது இரண்டாயிரமோ மூவாயிரமோ கூடுதாலாக அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதப் பட்டியல்கள், நீர் அளவீட்டுமானியும் மின்சார அளவீட்டுமானியும் சிக்கன எல்லைகளைத் தாண்டிச் சுற்றியிருப்பதைத் சுட்டிக் காட்டும். தொலைபேசிக் கட்டணம் உயர்திருக்கும். அடுத்த மாதச் செலவுகள் கையைக்கடிக்கும்.

இவற்றை தவிர்க்கவே அசோகன் முயற்சிக்கிறான். ஆனால் தவிர்க்க முடியாமல் தடுமாறுகிறான். வெளிநாடுகளில் இருக்கும் இவனது-மனைவியினது நெருங்கிய உறவினர்கள்-சிறுவயதில் ஒன்றாய்ப் படித்த- விளையாடிய நண்பர்கள் எந்தவொரு தொடர்புமற்று இருப்பார்கள். இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரத்திற்கு முன்பு திடீரென தொலைபேசியில் அன்பொழுகத் கதைக்கத் தொடங்கி பின்னர் தாங்கள் இலங்கைக்கு வரும் தினம், விமானத்தின் இலக்கம் என்பவற்றைக் கொடுத்து கட்டுநாயக்காவில் வந்து தங்களைக் கூப்பிடும்படி கூறுவார்கள்.
...

மகனின் புத்தக மேசையை இழுத்து வந்து முதலாவது அறைக்குள் வைத்தவன், புத்தகங்களை அள்ளிக் கொண்டுவந்து அதில் குவித்தான். இனி மகளின் மேசையை இழுத்து வரவேண்டும். பாடசாலைகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக்களில் ஆசிரியர்கள்;, பிள்ளைகள் வீட்டுவேலைகளை ஒழுங்காகச் செய்து வருவதில்லை- வீட்டில் படித்துக் கொண்டு வருவதில்லை என இவனிடம் முறைப்பாடுகள் செய்வார்கள். இவனால் பிள்ளைகளைக் கண்டிக்க முடிவதில்லை. தனது வீட்டில் படிக்கும் சூழல்; இல்லையென்பதை ஆசிரியர்களிடம் சொல்ல இவனுக்கு வெட்கமாக இருக்கின்றது.

வருபவர்கள், தங்களுடன் இவர்கள் முழுநேரமும் இருந்து கதைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும்போது, மகனோ மகளோ தங்கள் வீட்டுப் பாடங்களைச் செய்வதற்காகப் புத்தகம் கொப்பிகளை எடுத்தால், 'இவரின் மகனுக்கு பெரிய லெவல் எங்களோடை சேருறான் இல்லை. எந்த நேரமும் புத்தகங்களோடை இருக்கிறான்.' என்றோ 'மகளுக்கு தான்தான் பெரிய படிப்புப் படிக்கிறா என்ற நினைப்பு, எங்களைக் கணக்கெடுக்கிறா இல்லை' என்றோ ஊரிலுள்ள உறவினர்களுக்கு சொல்வார்கள்.

'இஞ்சத்தைப் படிப்பு 'ஸ்ராண்டட்' காணாது. அங்கை என்றால்.............' என்று தங்கள் பெருமைகளை வீட்டுப்பாடம் செய்ய கொப்பியையும் பேனாவையும் எடுக்கும் பிள்ளைகளிடம் விளக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகள் கொப்பி, புத்தகங்களை மூடிவைத்து விட்டு கொட்டாவி விட்டபடி அவர்களின் அலட்டல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்குத் தர்ம சங்கடமாயிருக்கும்.
...

சாப்பாட்டு மீதிகள், சிகரெட் அடிக்கட்டைகள், ரொபி மேலுறைகள்... என குப்பைகள் அறையினுள்ளே பரவியிருந்தன. அடிக்கடி கனடா நாட்டின் சுத்தத்தையும் அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்களையும் பெருமைபொங்கக் கதைக்கும் அவர்களுக்கு கழிவுப் பொருட்களை குப்பைக் கூடைக்குள் இடவேண்டுமென்ற அடிப்படைப் பண்பு கூட இல்லாதது இவனுக்கு ஆச்சரியமாயுள்ளது.

இவனது குடும்பத்தவர் கொதித்தாறிய குழாய் நீரையே வழமையாகப் பருகுவார்கள். அந்த நீர் சுத்தமானதல்ல என்று சேந்தன் ஆட்கள் கருதியதால் இவன் போத்தலில் அடைக்கப்பட்ட 'மினரல் வோட்டர்' வாங்கி வைத்திருந்தான். அப்படியெல்லாம் சுத்தம் பார்த்தவர்களின் குப்பைகளை அள்ளி பெரிய கறுப்பு நிற பொலித்தீன் பையில் இட்டுக்கட்டி வெளிவாசலில் வைத்தவன், ஈரத் துணியால்; நிலத்தைச் துடைக்கத் தொடங்கினான்.

இவனது வீட்டிலுள்ளோர் வீட்டுக்குள்; காலணிகள் அணிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து வருவோர் குளியலறை, மலகூடம், சமையல் அறையென வீடு முழுதும் இறப்பர் செருப்புக்களை அணிந்தபடி திரிவார்கள். அவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியாது.
...

கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான பாதை மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் வசிப்போர்;, கொழும்புக்கு வந்து 'கிளியரன்ஸ்',விமானப் பயணச் சீட்டு என்பவற்றைப் பெற்றே யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கொழும்பில் ஒருவாரமளவில் தங்க வேண்டியுள்ளது. அவர்களிடம் இருக்கும் வசதிக்கு பெரிய நட்சத்திர விடுதிகளில் கூடத் தங்கலாம். ஆனால் உறவினர், நண்பர்கள் வீடுகளிலேயே தங்குகின்றனர். கொழும்பில் தங்கள் தேவைகளுக்காக பல கூட்டிச் செல்ல நண்பர்கள், உறவினர்களை அழைக்க இது வசதியெனக் கருதகிறார்கள்.
...

சேந்தன் இவனது உறவினன். தூரத்து உறவுவழியில் சகோதரன் முறை. சமவயதினன். உறவினன் என்பதிலும் பார்க்க இருவரும் நண்பர்களாகவே பழகியிருக்கிறார்கள். சிறுவயதில் ஒன்றாக விளையாடித் திரிந்தவர்கள்.

சேந்தன் பத்தாம் வகுப்புக் கடைசியில் கனடா போனதன் பின்னர் அவனுக்கும் இவனுக்கும் தொடர்பறுந்து போயிருந்தது. பதினெட்டு வருடங்களாக எந்தத் தொடர்புமில்லாதிருந்த சேந்தன், திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கை வருவதாகவும் தங்களை கட்டுநாயக்காவுக்கு வந்து கூட்டிச் செல்லுமாறும் கூறி விபரங்களைக் கூறிபோது இவனால் மறுக்க முடியவில்லை.

இந்த வீட்டில் மேலதிகமாக ஒருவரை தங்க வைப்பதே சிரமமாயுள்ள போது நால்வரைக் கொண்ட சேந்தனின் குடும்பத்தினரை தங்க ஒத்துக் கொண்டது தவறெனப் புரிகின்றது. ஆனால் மறுத்திருந்தால், அசோகன் இப்ப மாறிப் போய்விட்டான் என்று சேந்தன் பலரிடம் சொல்லித் திரியலாம்.


அவனின் குடும்பம் வந்து நின்ற நாட்களில் பிள்ளைகளுக்கு தவணைப் பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்த பிள்ளைகள் சிரமப்பட்டதை இவன் அவதானித்திருந்தான். வந்தவர்கள் நடுக்கூடத்தில் இருந்து தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு கத்திக் கும்மாளமிட்டார்கள்.

சேந்தனின் குடும்பத்தவர்களுடன் புறக்கோட்டைக்குச் சென்றிருந்தான். சேந்தனும் மனைவியும் ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு பேரம்பேசியது இவனுக்கு ஆச்சரிமாயிருந்தது.
சேந்தன் சிறுவனாக இருந்த காலத்தில் கொழும்பில் தொழில் புரிந்த தகப்பன் வங்கியொன்றில் அவனின் பெயரில் சிறுவர் சேமிப்புக் கணக்கொன்றை ஆரம்பித்திருந்தார். அந்தக் கணக்கை மூடி பணத்தை மீளப் பெற வேண்டுமென சேந்தன் இவனைக் கூட்டிக் கொண்டு கொட்டாஞ்சேனையில் இருந்த அந்த வங்கிக் கிளைக்கு வெள்ளவத்தையில் இருந்து பஸ்ஸில் சென்றான்.

தொடர்ச்சியாக பல வருடங்களாக நடவடிக்கைகள் ஏதுமற்றிருந்த அந்தக் கணக்கு அரசின் புதிய சட்டதிட்டங்களின்படி மூடப்பட்டு பணம் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அசோகன் வங்கி முகாமையாளருடன் கதைத்துப் பார்த்தான். அவர் இவனுக்கு புதிய சட்டதிட்டங்களை தெளிவாக விளக்கினார். ஆனால் சேந்தன் முகாமையாளரை ஏசியபடி வந்து, இவனை மத்திய வங்கிக்கு வருமாறு கூப்பிட்டான். அங்கு சென்றாலும் இந்த பணத்தை பெறமுடியாது என்பது இவனுக்குப் புரிந்தது. ஆனால் சேந்தன் இவனை விடுவதாயில்லை. இருவரும் அங்கு போய் அலைந்ததுதான் மிச்சம்.
...

யாழ்ப்பாணம் சென்று திரும்பியவர்கள் சற்றுக் கறுத்திருந்தார்கள். பிள்ளைகளில் வாட்டம் தெரிந்தது. யாழ்ப்பாணக் காலநிலை ஒத்துவராமல் பிள்ளைகளுக்கு வருத்தம் வந்ததாகச் சேந்தன் சொன்னான். அந்த வெக்கைக்குள்ளை எப்படித்தான் மனிஷர் சீவிக்கிறார்களோ என ஆச்சரியப்பட்டுக் கதைத்தான்.

இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பித்திருந்ததால் அசோகனின் பிள்ளைகளும் சேந்தன் குடும்பத்தினருடன் காலையில் தெகிவளை மிருகக் காட்சிச்சாலைக்குச் சென்றிருந்தனர். மாலையில் அவர்களுடன் பொருட்கள் வாங்க பல கடைகளுக்கு அலைய வேண்டியிருந்தது.


யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்த - கொழும்பில் வாங்கிய பொருட்களை சேந்தன் சூட்கேஸ்களில் அடுக்கிக் கொண்டிருந்தான். அவர்களது விமானம் அடுத்தநாள் காலையில் புறப்படவிருந்தது.
...

அதிகாலையில் கட்டுநாயக்கா விமான நிலைத்துக்குச் சென்று சேந்தனின் குடும்பத்தவர்களை வழினுப்பிவிட்டு வந்தான். இனி, அவர்கள் கனடா போய்ச் சேர்ந்ததை அறிவிக்க ஒருமுறை தொலைபேசி எடுக்கக்கூடும். பிறகு அடுத்தமுறை இலங்கைக்கு வருவதற்கு ஓரிரு வாரங்கள் முன்னதாக கட்டாயம் அழைப்பு எடுப்பார்கள்.


இப்போது வீட்டைச் சுத்தம் செய்ய பாடசாலை விடுமுறையில் நிற்கும் பிள்ளைகள் அசோகனுக்கு உதவினர்.

தொலைபேசி ஒலித்தது. சேந்தனின் அம்மா-இவனுக்கு தூரத்துப் பெரியம்மா கதைத்தார். சேந்தனாக்களை விமான நிலையத்துக்கு கூட்டிச் சென்ற விபரங்களை முதலில் விசாரித்து அறிந்தவர், .

'...அசோகன், நீ வடிவாக சேந்தன் ஆட்களைக் கவனிக்கேலையாம். கனகாலமாய் கொழும்பிலை இருக்கிறனி நினைத்திருந்தால் அவன்ரை 'பாங்' கணக்கை மூட உதவிசெய்திருக்கலாமாம். உன்ரை பெண்சாதி பிள்ளைகள் அதுகளோடை வடிவாய்ச் சேரேலையாம். சொந்தக்காரன் அசோகன் கொழும்பில இருக்கிறான் என்றுதானே உன்னைத் தேடி அதுகள் வருகுதுகள்....' என்று தொடர்ந்து
'மார்கழியிலை இளையவன் வசந்தன், குடும்பத்தோடை லண்டனிலிருந்து வாறான். அதுகளை ஒருக்கா கவனமாய் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடு ராசா' என்று முடித்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:24 am

நீயே நிழலென்று
----------------
ஸ்ரீரஞ்சனி
-----------------
தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்த கையை அவசரமாகக் கழுவி விட்டு, அது தீபாவாகத் தானிருக்கும் என்று ஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான். ஆனால் அது வழமையாக வரும் மாதாந்த கிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு என தொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறது. எனக்குத் தேவையற்ற அந்தச் செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும் வைத்து, வந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன். இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில் எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.
அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன் காம்பிங்க்குப் போன போது. எதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்திய அவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

'மம், கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?'
'ஏ, பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்தது? எங்கையிருந்து போன் எடுக்கிறாய்?'
'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன். என்ன நடந்தது எண்டு கேக்கிறதுக்காண்டியும், உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டு மைல் தூரம் ஓடி வந்தனான.;'
'ஓ மை பேபி, ற் வாஸ் ஒகே. அவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?'
'யேஸ், ஐ லவ் யு, என்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'
'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற் வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக் கொள்கிறது. உண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

ஏதாவது சாப்பிடக் கொடுத்தால், 'நல்லா இருக்குது, தாங்ஸ். நீங்கள் சாப்பிட்டியனியளே?' என பாராட்டும் கரிசனையுமாக கேட்பாள். வீட்டில் நிற்கும் பொழுதுகளில் 'அம்மா நான் சாப்பாடு செய்யப் போறன், உங்களுக்கு நூடில்ஸ் சாப்பிட வேணும் போலிருக்கா அல்லது ஏதாவது சான்ட்விச் செய்யட்டா?' என்பாள். 'கடைக்கு நீங்கள் மட்டும் போக வேண்டாம். நானும் வருகிறேன் போட்டு வந்து கோம் வேக் செய்யலாம். ஐ டோன்ற் வான்ற் யு பி எலோன்,' பிடிவாதாமாய்ச் சொல்வாள்.
அப்படி அவள் என்னுடன் ஒட்டிக்கொண்டு இருந்ததால் தான் இப்ப இப்படி இருக்கும் தனிமையைத் தாங்க முடியவில்லை என்ற நிதர்சனத்தில் மனது மிக வலிக்கிறது.

கலியாணம் செய்து ஐந்து வருடங்களாகியும் கர்ப்பம் தங்கவில்லை. அதற்காகப் பல வேண்டுதல்கள், ஆயிரம் பரிசோதனைகள், அதை விட மற்றவர்களின் கேள்விகள், குடையல்கள் என்று இருந்த போது எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமாய்ப் போல் எதிர்பாராத ஆச்சரியமாய் தீபா என் வயிற்றில் வந்த போது எனக்கு வந்த ஆனந்தம் அளவிட முடியாதது.

அன்றிலிருந்து வேலையைக் கலியாணம் கட்டியினியளோ, என்னைக் கட்டினியளோ என அவரிடம் போட்ட சண்டைகளுக்கும் கூட முற்றுப்புள்ளி வந்தது. அவளை என் கைகளில் வாங்கிய கணத்திலிருந்து அவரைக் காணவில்லை என தவித்து, ஏங்கிப் பின்னர் அந்தக் காத்திருப்பு எரிச்சலைத் தர அவருடன் பிரச்சனைப்பட்ட பொழுதுகள் போய் அவர் வீட்டுக்கு பிந்தி வந்தால் நல்லம் என மனம் எண்ணும் அளவுக்கு தீபாவுடன் என் வாழ்க்கை ஐக்கியமாய்ப் போய் விட்டது.
காலையில் பாடசாலைக்குப் போய் மாலை 2 மணிக்கு வீட்டுக்கு வந்த பின் இரவு படுக்கும் வரை அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் எப்படி போவது என்றே தெரிவதில்லை.
பின்னர் அவளுக்கு மூன்று வயதான போது விஸ்வருபம் எடுத்த நாட்டுப் பிரச்சனை எம்மை நாட்டை விட்டுத் துரத்தி கனடாவில் தஞ்சம் கேட்க வைத்தது. அங்கு செய்த தொழிலை இங்கு தேட வேண்டுமானல் மேலும் படிக்க வேண்டும் என்று ஆன போது விடியவெள்ளன நித்திரையில் பிள்ளையை இழுத்துக் கொண்டு போய் பிள்ளைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு அதற்காகப் படிக்க போவதையோ அல்லது வேறு வேலைக்கு ஓடுவதையோ என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கவும் முடியவில்லை.
'ஒரு பிள்ளை தானே நான் வீட்டில் இருக்கிறேன் நீங்கள் உழைத்தால் போதும்' என கணவனிடம் சம்மதம் வாங்கிக் கொண்டேன்.
ஒருநாள் நாங்கள் இருந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் முன் இருந்த நூலகத்துக்குப் போய் 'மூன்று வயதுப் பிள்ளையை உள்ளே கூட்டி கொண்டு வரலாமோ' என நான் அசட்டுத்தனமாய்க் கேட்கிறேன். அந்த நூலகர் பிள்ளையின் பெயரில் 'லைபிரரிக் காட்' கூட எடுக்கலாம் என கனடாவில் பிள்ளைகளுக்கும் இலக்கியத்துக்கும் கொடுக்கப்ப்டும் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார். பிறகென்ன எங்கள் பொழுதுகள் அங்கு ஆனந்தமாய்க் கழிகின்றன.

தீபா பாலர் வகுப்பை ஆரம்பித்த போது பெரிய கதைப் புத்தகங்கள் வாசிக்குமளவுக்கு அவளின் வாசிப்புத்திறன் விஸ்தரித்திருந்தது. அப்போது அந்தப் பாடசாலையில் ஆரம்பித்த ஒரு பரீட்சார்த்த வாசிப்புப் பயிற்சியின் வெற்றியைப் பற்றி மற்றவர்களுக்கும் அறிவிப்பதற்கு அவர்கள் செய்த விளம்பரத்தில் an immigrant child in JK can read chapter books without any hesitance என வருகிறது. இதனால் அவளின் கெட்டித்தனம் செய்தியாக, பல பெற்றோர் என்னை ஒரு வெற்றியாளராகப் பார்க்கின்றனர். எப்படி நான் அவளைப் படிப்பிக்கிறேன், தங்கள் பிள்ளைகளுக்கு தாம் எப்படி உதவலாம் என என்னைப் பல விசாரணைகள் செய்கின்றனர். நானும் புளகாங்கித்துப் போகிறேன். அவளின் வெற்றி மட்டும் என் வாழ்வுக்குப் போதுமானது என மனம் நிரம்பி விடுகிறது.

முதலாம் வகுப்பில் அவளுக்கும் மட்டும் அவளின் ஆசிரியர் பிரத்தியேகமாய் கொடுத்த project ல் Red Panda பற்றி எழுத அவள் முடிவெடுக்கிறாள். நூலகரிடம் போய் Red Panda பற்றிய புத்தகங்கள் அங்கு இருக்குமா என அவரின் மின்கணிணியில் உள்ள பதிவுகளில் தேடிப் பார்த்துச் சொல்ல முடியுமா எனக் கேட்கிறோம்.

அவர் ஒரு குறித்த இலக்கத்தைத் தந்து அந்த இலக்கத்தின் கீழ் தான் Red Panda சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் இருக்கும் என்கிறார். அதற்குத் தீபா Red Panda ஒரு Panda இல்லை,' எனச் சொன்ன போது அவருக்கே அது செய்தியாக இருக்கிறது. அவளின் அறிவில் அவர் வியந்து போகிறார்.

'தீபா, உனக்கு எப்படித் தெரியும்? ரீச்சர் சொன்னவவா?' என ஆவலுடனும் பெருமையுடனும் கேட்கிறேன்.

'இல்லை ரீவியிலை பார்த்தனான்,' என்கிறாள். இப்படி அவளின் அறிவை, ஞாபகசக்தியை, புத்திக் கூர்மையைப் பார்த்து வியந்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பதில் தேடி நான் ஆராய்ந்த பொழுதுகள் கணக்கில் அடங்காதவை. அவளின் பாசமும் கெட்டித்தனமும், அமைதியான சுபாபமும் இவளைப் பிள்ளையாகப் பெற நான் என்ன புண்ணியம் செய்தேன் என எப்போதும் என்னைக் கண் மல்க வைக்கும். அவளின் சான்றிதள்களையும் தேர்ச்சித்தாள்களையும் வங்கியில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அதுவே எமது சொத்தாக மனம் மகிழ்கிறோம்.

ஒவ்வொரு முறையும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்து வந்த பின் ஆசிரியர் அவளைப்; பற்றிச் சொல்லிப் பாராட்டியவை யாவும் பல தடவைகள் மீள மனதில் ஓடி ஒரு இனம் புரியா மகிழ்வைக் கொண்டு வரும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் Science centre, museum என்று அவளுடன் போவதும் நாள் முழுக்க அங்கு கழிப்பதும் எமது வாடிக்கையாகின. கோடை விடுமுறை வந்து விட்டால் Wonderland, Ontario Place, strawberry picking, camping என்று போய் நானும் அவளுடன் என்னை மறந்து மகிழ்வது தான் எமது வாழ்க்கையாகிறது. போதாதற்கு piano வகுப்புக்கள் swimming பயிற்சிகள் என்று எப்போதுமே ஓட்டம் தான்.

பின்னர் அவள் வளர்ந்த பின் 'கை உளையுது, கால் உளையுது, சோம்பலாயிருக்குது' என நான் சொன்ன பொழுதுகளில் என் உடல் வலுவைப் பேண, என்னை இழுத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிச் சுற்றி அவள் ஓடிய ஓட்டங்கள்... இப்படிப் பல நினைவுகள் மாறி மாறி வந்து கண்ணீரை கொட்ட வைத்துக் கொண்டிருந்தன.

மருத்துவக்கல்லூரியில் அவள் விசேட சித்தியடைந்து மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்து அமெரிக்காவுக்குப் போய் பத்து மாதங்கள் ஆகிவிட்டன. எனக்கு இன்னமும் அதை ஏற்கும் மனப்பக்குவம் வரவில்லை. அது மட்டுமன்றி மன அழுத்தம் என்று குளிசை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் வந்து விட்டேன்.

சென்ற முறை இது பற்றிக் கவுன்சிலருடன் கதைத்தவை நினைவுக்கு வருகின்றன. 'சரி! உங்களுக்கே உங்கடை பிரச்சனை விளங்குது. பிள்ளைக்காக வாழ்ந்து போட்டு இப்ப இப்படி இருக்கிறது எந்த வித நோக்கமும் இல்லாத வாழ்வு எண்டு நீங்கள் நினைக்கிறியள். அது உங்களுக்கு சலிப்பை, ஏமாற்றத்தைத் தருது.'

'ஓம்! நீங்கள் சொன்ன மாதிரி தொண்டர் வேலைக்கு போறனான். ஆனாலும் அது பெரிசாய் உதவேல்லை,' மீண்டும் கண்ணீர் தடைசெய்ய முடியாமல் ஓடுகிறது.

'இந்த விரக்தியிலிருந்து வெறுமையிலிருந்து மீள என்ன செய்யலாம் எண்டு நீங்கள் நினைக்கிறீர்கள்?'

மௌனமாய் இருக்கிறேன்.

கவுன்சிலரே தொடர்கிறார், 'ம், உங்கடை மனம் நிறைஞ்சு போற மாதிரி ஏதாவது ஒண்டோடை ஒட்டிப் போகவேணும். மகளோடை போய் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிறியளோ, அதுக்கு வழி இருக்குதோ அல்லது இங்கை உங்களுக்கு எண்டு ஒரு வாழ்வை உருவாக்கப் பாருங்கோ. எதையும் யோசியாமல் மனம் லயித்து செய்யக்கூடியதாய் ஏதாவது படிக்கலாம் அல்லது வேலை செய்யலாம். ஏன் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து கூட வளர்க்கலாம். இந்த மன நெருக்கீட்டிலிருந்து இருந்து வெளியேற வேணும் இல்லையா? யோசித்துப் பாருங்கோ. அடுத்த முறை வரும் போது ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாய்க் கதைப்பம்,'

அப்படி கவுன்சிலர் சொன்னது பற்றி யோசித்துப் பாக்கிறேன்.

பல்கலைக்கழகத்திற்கு போன பின் தானே தன் வேலை எல்லாம் செய்யப் பழகி, என்னில் தங்காமல் வாழ தீபா பழகிக்கொண்டாள். நான் விடிய எழும்பி சாப்பிட்டிட்டியா, சாப்பாடு எடுத்தியா எண்டு கேட்டால், சில வேளைகளில் அவளுக்கு எரிச்சல் கூட வந்திருக்கிறது. அப்பவெல்லாம் அவளின் மற்றவர்களில் தங்கியிராத தன்மையைப் பற்றி மகிழாமல், 'என் தேவையை நாடுகிறாள் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறேன';. இப்ப என்னில் ஒரு பகுதியை இழந்தது போல் என்ன செய்வதெனறு தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறேன், அவளின் அசைவை எப்போ என் கருப்பையில் நான் உணர்ந்தேனோ அன்றிலிருந்து நான் அம்மாவாக மட்டுமே இருந்திருக்கிறேன்.
என்னைப் பற்றி எந்த நினைவும் இல்லாமல், எனக்கென ஒரு அடையாளமும் இ;ல்லாமல,; வெறும் தீபாவின் அம்மாவாக மட்டுமா வாழ்ந்ததால் தான் எனக்கென ஒரு இலக்கு இல்லாது என் வாழ்க்கைப் படகு ஆட்டம் காண்கிறது என்பது புரிகிறது. வாழ்க்கை பல பக்கங்களைக் கொண்டது எல்லாவற்றிலும் ஒரு சமநிலையான அணுகுமுறை இருந்திருக்க வேண்டும் என்பதும் விளங்குகிறது.

மீண்டும் தொலைபேசி மணி ஒலிக்கிறது.
அது தீபா தான்.
'அம்மா எப்படியிருக்கிறீங்கள்?' அவளின் குரல் என் காதுகளில் தேனாய் ஒலிக்கிறது. 'நல்லாய் இருக்கிறன். நீ எப்படி இருக்கிறாய்?' குரலில் மனம் நிறைந்த மகிழ்வுடன் கேட்கிறேன்.

'ஒவ்வொரு முறையும் நான் கதைக்கேக்கை நீங்கள் அழுகிறது, பிறகு அதை நினைச்சு நான் கவலைப்படுகிறது பற்றியெல்லாம் யோசித்துப் பாத்தன். அப்பாவும் தன்ரை வேலையை விட்டுவிட்டு இங்கே வரமாட்டன் என்கிறார். நீங்களும் அவரை விட்டுவிட்டு எப்படி வாறது என்று யோசிக்கிறியள். என்ரை படிப்பு முடிய இன்னும் 2 வருஷம் இருக்குது. அது தான் அப்பாவோடை கதைச்சுப் பாத்தன். இங்கை ஆறு மாசம், உங்கை ஆறு மாசம் நீங்கள் இருக்கலாம் எண்டு அவர் ஒத்துக்கொண்டிட்டார,;'
மிகச் சந்தோஷமாகச் சொல்கிறாள் அவள்.

'தீபாக்குஞ்சு, நான் உன்னை எவ்வளவு மனக்கஷ்டப்படுத்திப் போட்டனெண்டு விளங்குது. அப்பாவுக்கு சமைச்சுச் சாப்பிட்டுப் பழக்கமில்லை. சாப்பாட்டுக்கு என்னிலை தங்கியிருந்து அவருக்குப் பழகிப் போச்சுது. அங்கை நான் வந்தால் பிறகு அதைப் பற்றி வேறை கவலைப்பட வேணும், அதோடை நீயும் நான் தனிய இருக்கிறன் எண்டு நேரத்துக்கு வீட்டை வர வேணுமே எண்டு பரிதவிப்பாய். அதை விட அப்படி இரண்டு வருஷத்திலை படிப்பு முடிஞ்சதும் நீ அவசரப்பட்டு இங்கை ஓடி வர வேணும் எண்டுமில்லை.'

'அம்மா, அப்ப என்ன தான் செய்யலாம் என்றியள்.'

'நானும் யோசித்துப் பார்த்தனான். இவ்வளவு நாளும் நான் என்னை வளர்க்கேல்லை இப்ப இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவிச்சு அதைச் செய்வம் எண்டு நினைக்கிறன். அதாலை இனி என்னைப் பற்றிக் கவலைப்படாதை.'

'அம்மா உண்மையாகவா சொல்லுறியள்? எனக்காண்டிச் சொல்லேல்லைத் தானே? நீங்கள் உங்களுக்காண்டி வாழ வேணும் எண்டு நான் எவ்வளவு ஆசைப்பட்டனான்,' அவளின் குரலில் மகிழ்ச்சி கொப்பளிக்கிறது.

'ஓம், நான் இனி எனக்கெண்டு ஒரு வாழ்வை வாழுவம் எண்டு யோசிக்கிறன். அடுத்த முறை கதைக்கேக்கை ஒரு சப்பிரைஸ் உனக்குக் கிடைக்கும். இப்ப சொல்லு உன்ரை லைவ்வைப் பற்றி. மோகன் என்னவாம், படிச்சு முடிச்ச பிறகு தான் கலியாணம் எண்டதுக்கு சம்மதமாமோ? இல்லாட்டில் கட்டிப்போட்டும் படிக்கலாம் தானே! யோசித்துப்பார். அம்மாவுக்கு எல்லாம் சம்மதம் தான். இது உன்ரை வாழ்வு. உனக்குப் பிடிச்ச மாதிரி நீ முடிவு செய். மற்றவையைப் பற்றி அதிகம் போசிக்காதை,'
மனதார அவளுக்கு அதைச் சொல்லும் போது அதை எனக்கு நானே சொல்வது மாதிரியும் என் காதினுள் அது ஒலிக்கிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:27 am

ஆலமரம்
----------------
தாளையடி சபாரத்தினம்
-----------------
அவளுடைய மூதாதைகள் 'அவளுக்கு' என்று வைத்து விட்டுப் போனது அந்த ஆலமரம் ஒன்றைத்தான். அந்த உடைந்த சட்டி, விளிம்பில்லாத பானை, அடுப்பாக உபயோகிக்கும் மூன்று கற்கள், தென்னம்பாளை – யாவும் அவளாகத் தேடிக்கொண்டவை. அவள் அறிந்தமட்டில் அவளுக்கு இன பந்துகள் யாருமிருப்பதாகத் தெரியவில்லை. எலும்பினாலும், தோலினாலும் மாத்திரமே ஆக்கப்பட்டது போன்ற ஒரு நாய்தான் அவளுடைய பந்து: உயிருக்குயிரான காவலாளியுங்கூட....

காலையில் எழுந்தவுடன் தென்னப்பாளையினால் அம்மரத்தைச் சுற்றி நன்றாகச் சுத்தம் செய்வாள். அருகே இருக்கும் நீரோடைக்குச் சென்று பானையில் நீர்கொண்டு வந்து தான் கூட்டிய இடங்கட்குத் தெளிப்பாள். பின் பழைய சோறு ஏதாவது இருந்தால் தானுமுண்டு தன் நாய்க்கும் கொடுப்பாள். பொழுது நன்றாகப் புலர்ந்ததும், அந்த உடைந்த சட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு பிச்சைக்குப் புறப்படுவாள். போகும்போது தன் நாயை வாத்சலயத்தோடு தடவிவிட்டுச் செல்வாள். அதுவும் தன் வாலைக் குழைத்து இருதயபூர்வமான நன்றியைக் கண்கள் மூலம் தெரிவிக்கும்.

தெருத் தெருவாக அலைவாள் - மூலை முடுக்கெல்லாம் போவாள் - யாராவது இரங்கி ஏதாவது உணவு கொடுத்தால், அதைப் பத்திரமாக உண்ணாமல் வைத்துக் கொள்வாள். 'ஏன் சாப்பிடாமல் கொண்டு போகிறாய்?' என்று கேட்டால் 'நடக்கமுடியாத ஒரு கிழவனுக்குக் கொண்டு போகிறேன்' என்று கூறுவாள். அவள் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு ஏங்கியிருக்கும் அந்த நாயின் அருமை அவளுக்கல்லவோ தெரியும். ஆலமரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கந்தல்களையும் மற்றப் பொருட்களையும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலாளி அல்லவா அது.

சுமார் இரண்டு மூன்று மணிக்குத் தன் இருப்பிடம் நோக்கி விரைந்து செல்வாள். அவளுக்கு முன்னால் அவளுடைய உள்ளம் பறந்துகொண்டிருக்கும். தூரத்தில் வரும் பொழுதே கரிய முகில் கூட்டத்தைப்போல ஆலமிலைகளின் கூட்டம் காட்சியளிக்கும். அவளுடைய உருவங் கண்ணிற்பட்டதும் தாயைக் கண்டவுடன் துள்ளிக்குதித்தோடும் பசுக் கன்றைப்போல் அந்த நாய் ஓடிச்சென்று அவளைத் சுற்றி சுற்றி வாலைக் குழைக்கும். அவளும் அன்போடு அதைத் தடவிக் கொடுப்பாள்.

ஆலமரத்தின் கிழே உட்கார்ந்ததும் அவளுடைய களைப்பெல்லாம் மாயமாய் மறைந்துவிடும். கொண்டு வந்ததை நாயோடு பகிர்ந்து உண்பாள். சிறிது நேரம் சென்றபின் பக்கத்திலுள்ள நீரோடைக்குச் சென்று குளிப்பாள். சுமார் ஆறு, ஏழு மணியளவில் அரிசி இருந்தாற்சோறாக்குவாள். இதற்கிடையில் அவளுடைய நண்பர்கள் - காகங்கள், குயில்கள் முதலியன – கா, கூ என்று ஆரவாரித்துத் தாங்கள் வந்திருப்பதை அவளுக்குத் தெரிவிப்பார்கள். எல்லோருமுறங்கியபின் அவளும் அந்த வேரில் தன் தலையைச் சாய்ப்பாள். அந்த ஆலம்வேர்தான் அவளுடைய தலையனை. அவளுடைய குருட்டுத் தாத்தா உறங்கியதும் அதே வேரில் தலைவைத்துத்தான். சீமேந்தால் மெழுகப்பட்ட கவரைப்போல அந்தவேர் அழுத்தமாக இருந்தது.

அன்றும் அவள் அதே வேரில் தான் தலைவைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாள். அந்தநாயும் அவளின் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு பயங்கரமான கனவு கண்டு துடித்து எழுந்தாள். வாய் என்னவோ கூறி உளறியது. மரத்தைச்சுற்றி ஒருமுறை வந்தாள். அப்பொழுதும் அவளுக்குத் திருப்தி உண்டாகவில்லை. நன்றாக ஒருமுறை அண்ணாந்து பார்த்தாள். மரம் மரமாகத்தானிருந்தது. அது முறிந்து வீழ்ந்து விடவில்லை. கண்டது வெறும் கனவாக இருந்தாலும் அவளுடைய உள்ளத்தில் சகிக்கமுடியாத வேதனை குடி கொண்டது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கினாள்: ஆனால் அடக்கமுடியவில்லை. அருகே கவலை தேங்கிய முகத்தோடு நின்ற நாயை அருகிழுத்து அணைத்துக்கொண்டாள். அதுவும் தன்னுடைய நாவால் அவளுடைய கரத்தை நக்கியது. இரவுமுழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள்.

பொழுது புலாந்ததும் வழக்கம்போல் சட்டியைக் கையில் எடுத்துக்;கொண்டு புறப்பட்டாள். அவளுடைய மனம் சஞ்சலப்பட்டது. தான் கண்ட பயங்கரமான கனவை ஒருமுறை நினைத்துப் பார்த்தாள். ஒருவேளை உண்மையில் அப்படி நடந்தால்..... நினைக்கவே அவளுடல் நடுங்கியது. கால்கள் செல்ல மறுத்தன. எத்தனை நாட்களுக்குப் போகமலிருக்க முடியும்? ஒருநாள் பிச்சைக்குச் செல்லாவிட்டால் அவளுடைய கதி என்ன? அவளையே நம்பிக் கொண்டிருக்கும் நாயின் கதிதான் என்ன? மனக்கலக்கத்தோடு புறப்பட்டாள். மரத்திலிருந்து இரண்டு மூன்று பனித்துளிகள் அவள்மேல் வீழ்ந்தன. பரிதாபத்தோடு அண்ணாந்து பார்த்தாள். மறுபடியும் பனித்துளிகள் வீழ்ந்தன. அவள் அதைக் கேவலம் பனித்துளிகளாக நினைக்கவில்லை. 'நிராதரவாக என்னை விட்டுப் போகிறாயா' என்று அந்த ஆலமரங்கதறிப் பெருக்குங் கண்ணீர்தான் அத்துளிகள் என்று நினைத்தாள். அவள் கண்களும் நீரைச் சொரிந்தன.

அவள் பிச்சைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் மனம் மட்டும் நிம்மதியாயில்லை. வழக்கத்திற்கு விரோதமாகப் பன்னிரண்டு மணிக்கே இருப்பிடத்தை நோக்கி நடந்தாள். எல்லோருங் கூட்டங் கூட்டமாக நின்று எதையோபற்றி ஆனந்தத்தோடு பேசிக்கொண்டு நின்றார்கள். அதை என்னவென்றறிய அவளுக்குமாசைதான், ஆனால் அவர்களிடம் சென்று அறியக்கூடிய தகுதி அவளுக்கு இல்லை. அவ்வழியால் வந்த ஒரு சிறுமியிடம் விசாரித்தபொழுது, 'எங்கள் கிராமத்திற்கு றெயில் பாதைபோடப்போகிறார்களாம். இன்னுமிரண்டு, மாசத்துள் றெயில் ஓட ஆரம்பித்துவிடும் என்று அப்பா சொன்னார்' என்றாள் சிறுமி.

றெயில் வந்தாலென்ன?, ஆகாயக்கப்பல் வந்தாலென்ன? பிச்சைக்காரியாகிய அவளுக்கு இரண்டுஞ்சரிதானே? இருப்பிடத்தை நோக்கி அவள் விரைவாக நடந்தாள்.

'இதென்னடா சனியன்! வேலைசெய்ய விடமாட்டேனென்கிறதே' என்றானொருவன். ஆங்கில உடையில் நின்ற எஞ்சினியரின் கைத்துப்பாக்கி 'டுமீல்' என்ற சத்தத்தோடு வெடித்தது. இவ்வளவு நேரமும் மரத்தைச் சுற்றிச்சுற்றித் தன் எஜமானியின் பொருட்களுக்காகப் போராடிய அந்த நாய் மண்ணிற் சாய்ந்தது.

சுமார் கால் மைல் தூரத்தில் வரும்பொழுதே தென்படும் ஆலமரம் இன்று வெகு சமீபத்தில் வந்ததும் அவள் கண்ணுக்குப் புலப்படவில்லை. ஆலமரம் இருந்த இடம் ஒரே வெளியாக இருந்தது. இரவு கண்டகனவு அவள் ஞாபகத்திற்கு வந்தது. கையிலிருந்த சட்டி 'தடா'லென்று வீழ்ந்தது. மரத்தடியை நோக்கி ஓடினாள். அவளுடைய சாமான்கள் ஒரு பக்கத்தில் எறியப்பட்டுக் கிடந்தது. இன்னொரு பக்கத்தில் அவளுடைய நாய் உயிரற்றுக் கிடந்தது. மறுபக்கம் திரும்பினாள். மாறி மாறி விழும் கோடாரிக்கொத்தைத் தாங்க மாட்டாமல் தவிக்கும் மரத்திலிருந்து உதிரம் பெருகுவது போலிருந்தது அதிலிருந்து வடிந்த பால், 'ஐயோ' என்றலறிக்கொண்டு ஓடிப்போய் வீழ்ந்தாள். திடீரென்று ஒரு கோடாரிக் கொத்து அவளுடைய தலையில் வீழ்ந்தது. எல்லோருந் திகைத்துப்போய் நின்றார்கள். வெண்ணிறரத்தமும் செவ்விரத்தமும் கலந்து அடிமரத்தைக் கழுவிக்கொண்டன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:32 am

வெள்ளைப்புறா ஒன்று......!
-------------
க.நவம்
------------
மனசு குதூகலித்தது!

'யுரேக்கா' எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது.

இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் - அதிலிருந்து திருட்டுத் தனமாக என்னையே ஆலிங்கனம் செய்யத் துருதுருக்கும் இரண்டு கண்கள் என்ற பொன்வண்டுகள் - பொன்னை உருக்கி உச்சந்தலையில் வழிந்தோட வார்த்தாற் போன்று, பாளம் பாளமாகப் பளபளக்கும் கழுத்தளவோடிய காந்தக் கூந்தல் - இவையாவும் சேர்ந்து என் நிஷ்டையைக் குழப்பிவிட்டன.

'வாழ்நாள் பூராவும் அந்த அழகு தேவதையின் கடைக்கண் கடாட்ஷத்திற்காக, அவளது காலடியில் ஆயுட் கைதியாகவே கட்டுண்டு கிடக்கலாம்'

மனசு அங்கலாய்க்கிறது!

அந்த வெள்ளைக்காரப் பெண்புறாவின் தாபம் ததும்பும் கண்ணெறிகையை எதேச்சையாகக் கண்டுகொண்ட கணம் முதலாக என் இதயம் பீரங்கியாய், அவளுக்காக அடையாள அணிவகுப்பு மரியாதை வேட்டுக்களைத் தொடர்ந்தும் தீர்த்துக்கொண்டே இருக்கிறது.

'சீ.. சீ மனசே, நீ திருந்தவே மாட்டாயா?'

மனசின் கீழ் மாடியிலிருந்து யாரோ குறுகுறுப்பது போன்று ஓர் அசூசை.

நான் கனடாவில் கரையிறங்கி, ரொறோன்ரோவில் நிரந்தரமாக நங்கூரமிட்டு மூன்று மாதமாகவில்லை. இந்த 'ஈட்டன்ஸ் ஷொப்பிங் கொம்ப்ளெக்சுக்கு' இன்று இரண்டாவது தடவையாக வந்திருக்கின்றேன்.

முதன் முறை என்னை இங்கு கூட்டி வந்து, மாரிகால அட்டைகள் போல சதா மேலும் கீழுமாக ஊர்ந்துகொண்டிருக்கும் தானியங்கி மாடிப்படிகளில் என்னை ஏற்றி இறக்கி, 'கடை காட்டிப்போன' என் நண்பன் இன்று வரவில்லை.

உலகிலுள்ள அனைத்து ஆடம்பரப் பொருட்களும் இந்த ஈட்டன்ஸினுள் அடக்கம் எனலாம். அந்தளவு பிரமாண்டமானது!

கனடிய அரசாங்கம் மாதாந்தம் அளந்து தரும் 'வெல்ஃபெயர்' பணத்தில் ஒட்டுண்ணிச் சீவியம் நடத்தும் இந்த நாட்களில் நான் ஈட்டன்ஸில் 'ஷொப்பிங்' செய்ய நினைத்ததற்கும், ஏழைச் சோமாலிப் பையன் ஒருவன் 'சொக்ளேட்' வாங்கிச் சாப்பிட ஆசைப்பட்டதற்கும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இல்லை!

ஏதோ தரங்கூடியதுகளுக்குள் விலை குறைந்தது ஏதாவது தட்டுப்படாதா என்ற ஆசையில், துணிமணிகளுக்கு நடுவே சுழியோடிக்கொண்டிருந்த என்னை நோக்கி.... மறுபடியும்.... மறுபடியும்.... அதோ, பெண்கள் பகுதியில் நிரை நிரையாகத் தொங்கிக்கொண்டிருக்கும் ஆடைகளினாலான வேலி இடுக்குகளின் ஊடாக அவள்...........
விழிகளால் என்னை விசாரித்தபடி!

சொல்லுக்குள் அகப்படாத இன்பக் கிளுகிளுப்புடன், நெஞ்சுக்குள் இலேசான படபடப்பு! ஒரே நேரத்தில் என் காதுக்குள் ஓராயிரம் உய்யலாக்கள்!
அருகாக சுவரில் பொருத்தப்பட்டுள்ள ஆளுயர நிலைக் கண்ணாடியில் தெரியும் என் மாயவிம்பம் ஆய்வுக்குட்படுகிறது.

அகதிகளுக்கே உரிய, அவநம்பிக்கை தோய்ந்த பயப்பிராந்தியையும் மீறி என் முகத்தில் 'அறிவு ஜீவித்தனம்' ஏதாவது பளிச்சிடுகின்றதோ? வாளிப்பான என் உடலின் வாலிப முத்திரைகளில் தன்னைப் பறி கொடுத்திருப்பாளோ? ஏன், பூர்வ ஜென்ம பந்தம் கூடக் காரணமாயிருக்கலாம் தானே?

விருப்பம் துளிர்ப்பதற்கான காரணங்கள் வேடிக்கையானவை! சில வேளைகளில் விநோதமானவையும் கூட!

'முட்டாள்!........ கண்டதும் காதல் கனடாவிலும் சாத்தியம் என்ற நினைப்போ, உனக்கு? '

மனசுக்கடியிலிருந்து வரும் எச்சரிக்கையா? அல்லது நையாண்டியா?
என் மனவீட்டுக்குள்ளேயே எனக்கு எதிரி வேறு!

நீலவான் ஆடைக்குள் முகம் புதைத்து நின்று, நிலவென்று அழகுகாட்டும் அவளது சுடர் விழிகளின் யாசிப்புக்கு வேறு என்னதான் அர்த்தமோ?

உடுப்புத் தேடும் பாவனையில் இப்போது என் கால்கள் அவளைத் தேடுகின்றன. நான் கிட்ட நெருங்குவதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, அவள் எட்ட எட்ட ஓடி, ஆடைகளின் வரிசைகளுக்குள் ஒளிந்துகொண்டு அடம் பிடிக்கின்றாள்.

'இந்த நாட்டிலை, ஓராளை இன்னொராளுக்குப் பிடிச்சுக் கொண்டால் நேரடியாகப் பேசி, ஒரு 'டேட்டிங்' ஒழுங்கு செய்து, ஒரு 'பார்' அல்லது ஒரு 'கிளப்'புக்குப் போய், தண்ணியில் சற்றே ஆளையாள் குளிப்பாட்டி, பின் ஆடிப்பாடி, வேண்டின மாதிரி அனுபவிச்சுப் போட்டு, அடுத்த நாளே விட்டிடலாம் - விருப்பமெண்டால் தொடரலாம். ஊரிலை வருசக் கணக்காக வேர்க்க விறுவிறுக்க சையிக்கிள் சீட்டிலை உழுந்தரைச்சு, அலைஞ்சு திரிஞ்சு சரக்குச் சுழட்டின மாதிரி இங்கை செய்யத் தேவையில்லையடாப்பா'

நான் இங்கு வந்து சேர்ந்த புதிதில் அனுபவசாலியான என் நண்பன் முன்கூட்டியே என் காதில் போட்டுவைத்த புத்திமதி.

இத்தனைக்கும் மாறாக இவளிடத்தில் மட்டும் எப்படி எங்கள் தமிழ்த்தனம் புகுந்துகொண்டதோ? இங்குமா காவியப் பாங்கில் கண்ணோடு கண்ணோக்கல்? இப்போதுமா? இவளிடத்திலுமா?

வந்த நோக்கம் திசைமாறி, நான் இப்போது அவளைத் தேடுகிறேனா? பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கியிருந்த ஓமோன்களைச் சீண்டி வேடிக்கை காட்டுகிறாளா, இந்தச் சிங்காரி?

மழைக்கால மின்னலாய்த் தோன்றி மறைந்தும், மறைந்து தோன்றியும் என்னை அலைக்கழித்துக் கண்ணாமூச்சி விளையாடுகிறாள்.

ரொம்பவும் பிடிவாதக்காரியாக இருப்பாளோ?
பிடிவாதக்காரிகளைத் தான் எனக்கும் வெகுவாகப் பிடிக்குமே!

'ஒன்று மட்டும் நிச்சயம். ஏதோ ஒரு விதத்தில் நான் இவளுக்கு மிகவும் தேவைப்பட்டவனாகிவிட்டேன். நான் இங்கிருந்து வெளியேறும் போது இவள் என்னைப் பின்தொடர்ந்து வருகிறாளா பார்ப்போமே'. மனசு தனக்குள் மெதுவாகச் சொல்லியது.

'காஷ்; கவுண்டர்' அருகே 'பெர்ஃபியூம்' பகுதியில் 'சாம்பிள்' ஆக வைக்கப்பட்டிருந்த புட்டியை எடுத்து எனது ஜக்கெட்டுக்கு விசிறியடித்தேன். ரம்யமான 'கல்வின் கிளெய்ன் - ஒப்ஸெஷன்' வாசனை மயக்கத்தில் மீண்டும் அவளைத் தேடிக் கண்கள் சுழல்கின்றன.

அவள் என்னை ஏமாற்றவில்லை. அதோ, சுழல் தாங்கிகளில் தொங்கும் 'ஸ்வெட்டர்'களுக்கு நடுவே நின்று என்மீது கடைக்கண்ணால் கணை தொடுக்கிறாள். 'பெர்ஃபியூம்' புட்டியைத் தூக்கிக் காட்டி, அவளுக்கு 'ஸ்ப்றே' பண்ணுவது போல, சின்னதாய் ஒரு சில்மிஷம்!

தோளில் தொங்கப்போட்டிருந்த 'ஹாண்ட் பாக்'கினால் தன் முகத்தை மூடியபடி நாணத்தால் முறுவலித்துப் பின் மீண்டும் மறைந்துகொள்கிறள்!

நான் புறப்படத் தயாரானேன்.

நான் எனக்கெனத் தெரிவு செய்த ஒரேயொரு 'ரீஷேட்'டைக் கவுண்டரில் கொடுத்துப் பணம் செலுத்துகின்றேன்.

மனசு என்னவோ இன்னமும் அவளைத் தேடி அலைகிறது!

'ஈட்டன்ஸ் பாக்' ஒன்றினுள் ரீஷேட்டையும் 'றிஸீட்'டையும் போட்டு மிச்சச் சில்லறைகளை என் கையில் திணிக்கும் போது, 'ஈட்டன்ஸில் ஷொப்பிங் செய்தமைக்கு நன்றி;' என்று 'காஷியர்' சிட்டு உதிர்த்த வார்த்தைகள் கூட இலேசாகத்தான் காதில் விழுகிறது. ஆர்வமற்ற நன்றிச் சிரிப்புடன் வாசலை நோக்கி அடியெடுத்து வைக்கின்றேன்.

என்ன அதிசயம் இது!

என்னைச் சுற்றிச் சுழன்ற அந்தச் சுந்தரி, எங்கிருந்தோ பறந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டாள்.

இதயம் ஒரு கணம் தரித்துத் துடித்தது!

ஆவெனத் திறந்தவாறு அணிந்திருந்த என் 'ஜாக்கட்' சற்று பொருமியிருக்கத் தக்கவாறு, உள் பையினுள் சொருகி வைத்திருந்த 'வின்ரர் க்ளவுஸ்' சோடியை அவள் வெளியே எடுக்கும்படி கட்டளையிட்டாள்.

கட்டளைக்கு அடிபணியும் இயந்திரமாய், எடுத்து நீட்டுகின்றேன். அவற்றை மேலும் கீழுமாகப் புரட்டிப் பார்க்கிறாள்.

'என்ன செய்கிறாய் நீ?'

இறுகி உறைந்து போன என் முகத்தைப் பார்த்தே, என் கேள்வியை அவள் ஊகித்திருக்க வேண்டும்.

'ஹாண்ட்பாக்'கிலிருந்து அட்டை ஒன்றை எடுத்து என் முகத்துக்கு நேராகப் பிடித்தாள்.

அவளது அழகான படத்துக்கு அருகாகப் பெயரும் பதவியும் பொறிக்கப்பட்ட அடையாள அட்டை, அது.

'ஈட்டன்ஸ் களவு தடுப்பு அதிகாரி'

எலும்பை உறைய வைக்கும் இந்த 'வின்ரர்' குளிரிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது.

மூன்று மாதமாக நான் பாவித்து, புதுமெருகை இழந்துபோன குளிர்க் கையுறையான எனது 'க்ளவுஸை'ப் பார்த்தவுடனேயே அவளுக்கு உண்மை தெளிவாகிவிட்டது.

'நான் உனக்காக வருந்துகின்றேன் என்று சிறு மன்னிப்புக் கோரல்கூடக் கிடையாது.

எனது பழைய 'க்ளவுஸை' என் கைகளுக்குள் திணித்துவிட்டு, தொடர்ந்தும் இன்னொரு நிறத்தோலைத் தேடி வலைவிரிப்பதற்குப் போலும், உள்ளே நடக்கத் தொடங்கியது, அந்த வெள்ளைப் புறா!

என் மனசின் கீழ்மாடியிலிருந்து யாரோ ஈனமாய் அழுதபடி......!

கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபேர் கண்களிலும் ஓர் அற்ப ஜந்துவாய்க் கூனிக் குறுகிச் சமைந்துபோய் நிற்கிறேன், நான்!.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:34 am

வடலிகள்
---------------
கே.ஆர்.டேவிட்
----------------
குரல் வளையோடு வெட்டப்பட்டு தலையை இழந்து விட்ட அந்த மொட்டைப் பனைமரம் வெதும்பி.... அழுகின்றது. இன்று நேற்றல்ல கடந்த பல மாதங்களாக அந்த மொட்டைப் பனைமரமும், அதைச் சூழநின்ற எண்ணுக் கணக்கற்ற மொட்டைப் பனைமரங்களும் அழுது கொண்டேயிருக்கின்றன.

இந்த மொட்டைப் பனைமரங்களின் அழுகைக்கான காரணம்....? அது ஒன்றும் இரசிகசியமானதல்ல... பரகசியமானது... அதுவும் சர்வதேசம் வரை விரிந்திருக்கும் பரகசியம்....!

'முகமாலை'.....

அந்த மொட்டைப் பனைமரங்கள் நிறைந்திருக்கும் பகுதியை 'முகமாலை' என்ற பெயரினால்தான் அழைக்கின்றனர். யாழ்ப்பாண நகரத்தின் முழுகெலும்பு போன்ற கண்டி வீதியில் கொடிகாமம், மிருசுவில்> எழுதுமட்டுவாழ், அதையடுத்து இந்த முகமாலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று> நான்கு வருடங்களுக்கு முன்புவரை> சர்வதேசங்களிலும் வாழ்கின்ற தமிழர்களால் உச்சரிக்ப்பட்ட ஒரு கிராமம் தான் இந்த முகமாலைக் கிராமம்.

தியாகம் கலந்ததொரு வீரவரலாற்றுக்குரித்தான இந்த முகமாலைக் கிராமம் இன்று.... தலைகளை இழந்த வெறும் முண்டங்கள் நிமிர்ந்து நிற்கும் மயானமாகக் காட்சிதருகின்றது.....!

முகாமாலைக் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்ற கண்டி வீதியில் பயணிக்கின்ற ஒவ்வொரு மனிதனும்> அந்த மொட்டை மரங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடிதான் செல்கின்றான்...!

அந்த மொட்டைப்பனைமரம்.... இன்னமும் அழுது கொண்டுதான் இருக்கின்றது... இந்த மொட்டைப்பனை மரத்தை அண்மித்து இன்னொரு பனைமரம்..... 'வடலி' என்ற விடலைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்துவிட்ட பனைமரம்.... எந்தச் சேதமுன்றித் தப்பித்துக் கொண்டது சகலருக்கும் ஆச்சரியம் தான்!

எதிரியின் முதுகைச் சொறிந்து தான் இந்தத் தனிமரம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது என்ற நையாண்டித் தனமான பேச்சுகளும் இதுவரையில் எழுந்ததில்லை....!

அந்தத் தனிமரம் நேர்மையானது என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை... தற்செயலாக அந்தத் தனிமரம் தப்பிவிட்டது... இதுதான் உண்மை!....

அந்தத் தனிமரமும் தனக்குள் அழுதுகொண்டுதான் இருக்கின்றது. அந்த மொட்டைமரத்தின் துயரத்தில் பங்குகொள்ள விரும்பிய அந்தத் தனிமரம் அந்த மொட்டை மரத்திடம் பேச்சுக் கொடுக்கிறது.

'அண்ணை.... இப்படி எத்தினை நாளைக்குத்தான் அழப்போறியள்.... நடந்தது நடந்துபோச்சு.... இனிமேல் நடக்கவேண்டியதைக் கவனிக்கிறதுதான் புத்திசாலித்தனம்' அந்தத் தனிமரம் வேதனையோடு கூறுகின்றது.

அழுது கொண்டிருந்த அந்த மொட்டைமரம், தனிமரத்தின் குரல் கேட்டுத் தனது கவனத்தைத் தனிமரத்தின் பக்கம் திருப்புகின்றது.

'இப்படியொருமுடிவை நான் எதிர்பார்க்கவில்லை...?' அந்த மொட்டை மரத்தின் அவிந்துபோன இதயம் பேசுகின்றது. மொட்டைமரத்தின் பேச்சைக் கேட்ட தனி மரத்திடம் எந்த கலங்கமும் தோன்றவில்லை. சில விநாடிகள் மௌனமாக நின்ற அந்தத் தனிமரம் திருப்பவும் பேச ஆரம்பிக்கின்றது.

'அண்ணை இப்படிப்பட்ட தொரு முடிவை எதிர் பார்க்கவில்லை எண்டுசொன்னீர்களே... அப்படி யெண்டால்... என்ன மாதிரி முடிவை எதிர்பார்த்தனீங்கள்...' தனிமரத்தின் கேள்வியில் காந்தக் கூர்கள்.....' மொட்டைமரம் குழம்பிப்போய் மௌமாக நின்றது.

'அண்ணை... கொஞ்சம் நிதானமாக யோசிச்சுப் பாருங்கோ.... என்றுமே தோல்வியற்ற நிட்சயிக்கபட்டதொரு வெற்றி உணர்வோடைதானே இருந்தனீங்க...' தனிமரம் திரும்பவும் மௌனமாகவே நிற்கின்றது.

'தனிமனிதனாக இருந்தாலென்ன... குழுவாக இருந்தாலென்ன...! 'தற்திருப்தி' என்ற 'ஆணவ' உணர்வு எப்ப எற்படுகிறதோ... அப்பவே அவன் தோல்வியை நோக்கி நகர ஆரம்பிக்கின்றான், எண்டுதான் அர்த்தம்....' தனிமரத்தின் இந்தப் பேச்சு நகக்கண்ணுக்குள் சிராம்புக் கூர் ஏறியதைப் போல்.... மொட்டைமரத்தின் இதயத்தைக் குத்தி வலிக்க... மொட்மைமரம் அதிர்ந்து போய் நின்றது!

'....நீ சொல்றதை என்னாலை புரிச்சு கொள்ள முடியாமல் இருக்கு....' மொட்டைமரம் கூறுகின்றது.

'.... சல சலப்பில்லாமல் பலகாரம் சுடேலாது... ஆனால் அந்தச் சலசலப்பே பலகாரமாகிவிடவும் முடியாது.... அதைத்தான் நான் சொல்றன்...' தனிமரம் பூடகமாகவும் அதேவேளை நிதானமாகவும் கதைக்கிறது.

'தயதுசெய்து என்னைச் சோதிக்காதை... சொல்றதை விளக்கமாகச் சொல்லு' மொட்டைமரத்தின் பேச்சில் வேதனையும் ஆவலும் கலந்து கசிகின்றது.

'...உங்களிடமிருந்த ஆயுத பலம் அற்புதமானது.... அதேபோல உங்களிடமிருந்த தியாகபலம்... அது வணக்கத்துக்குரியது... அதேயளவுக்கு உங்களிடம் மக்கள் பலமும், அரசியல் பலமும் போதுமானதாக இருக்கவில்லை....' தனிமரம் விளக்கமாகக் கூறுகின்றது.

'...ஏன் பொதுமக்கள் எங்களைப் பாராட்டினார்கள் தானே' மொட்டைமரம் கேட்கிறது.

'...பொதுமக்களின் பாராட்டுதல் என்ற 'சல சலப்பை' நீங்கள் 'பலகாரம்' என்று நம்பிவிட்டீர்கள்....'

'பொதுமக்கள் பார்வையாளர்களாக நின்று பாராட்டுவதோடு நின்று கொண்டார்களே தவிர... அவர்கள் தங்களைப் பங்காளர்களாக்கிக் கொள்ளவில்லை.... இறுதிநேரத்தில் சிக்குண்டிருந்த இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆயுதங்களைத் தூக்க வேண்டாம்... அத்தனை பேரும் ஒவ்வொரு விறகுக்கட்டையைத் தூக்கியிருந்தால்....?... முடிவு எப்படி இருந்திருக்கும்....' தனிமரம் இப்படிக் கேட்டுவிட்டு மொட்டைமரத்தைப் பார்க்கின்றது.

மொட்டைமரம் தனது அழுகையை நிறுத்திக் கொண்டு ஆச்சரியமாகத் தனிமரத்தைப் பார்க்கின்றது.

'....எல்லாம் முடிஞ்சு போச்சு' சில வினாடிகளின் பின் மொட்டைமரம் இப்படிக் கூறுகின்றது.

'... அப்பிடித் சொல்லாதை... உன்ரை காலடியை ஒருக்கால் குனிஞ்சுபார்....

நீ உன் தலையில் தாங்கிய பனம்பழங்கள் உதிர்ந்து என் காலடியில் விழுந்து.... தன்னிச்சையாகவே வேரோடி பனங்கிழங்காகி... அந்தக்கிழங்கு முத்தி... பீலி வெடித்து பூமியைக் குடைந்து மேற்கிழம்பி... வடலிகளாக நிற்கின்றன.

இவைகள் வளரத்தான் போகின்றன...

உன்னைப் போல நிமிர்ந்து மரங்களாகத்தான் போகின்றன.

நீயும் நானும் உயிரோடை இருப்பமோ.... இல்லையோ...

ஆனால்... வரலாற்றுக்கு மரணமில்லை

அந்த வரலாறு...

இன்றைய வடலிகள்.... நாளை தலைநிமிர்ந்து....

உன்னைப்போல் மரங்களாகும் போது.... இன்று நடந்தவற்றை உணர்த்தத்தான் போகின்றது!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:37 am

கொக்குக் குஞ்சுகள்
--------------
அகளங்கன்
----------------

பம்பைமடு ஓர் அழகிய கிராமம்.

வவுனியா வாவட்டத்தில் வவுனியாவின் மேற்கே ஏழுமைல் தொலைவில் உள்ளது.

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியில் ஐந்து மைல் தூரம் சென்று பம்பைமடுச் சந்தியை அடையலாம்.

சந்தியிலிந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தூரம் காட்டுக்குள் சென்றால் அந்த அழகிய கிராமத்தைக் காணலாம்.

இது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முந்திய நடைமுறை இப்பொழுது சந்தியில் பெரிய இராணுவ முகாம் இருப்பதால் அதைத் தாண்டிப் புதுப் பாதை வழியே செல்ல வேண்டியிருப்பதால் இன்னும் ஒரு மைல் தூரம் அதிகம்.

நகரை நோக்கிய நகர்வை விரும்பும் மக்களுக்கு ஒரு மைல் பின்னடைவு, வாழ்க்கையில் நீண்ட காலம் பின்னடைவு.

இதுதான் வளர்ச்சி.

பம்பைமடுவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது.

ஐம்பது குடும்பங்கள் வரைதான் அக்கிராமத்தில் வாழ்ந்தனர். இப்பொழுதும் சில குடும்பங்கள் வாழ்கின்றன.

வாழ்கின்றனவா. இல்லை. இல்லை. இருக்கின்றன.

குளம் பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் உள்ளது.

குளம் நிறையத் தண்ணீர் இருக்கும்போது பார்க்கவேண்டுமே.

அழகு என்றால் அது தான் அழகு.

குளக்கட்டில் நின்று இரவு நேரத்தில் கிழக்கே பார்த்தால் வவுனியா நகரின் மின்சார வெளிச்சம் தெரியும்.

கிழக்குப் பார்த்த குளம்.

பொதுவாகவே வவுனியாவிலுள்ள பெருங்குளங்கள் எல்லாம் கிழக்குப் பார்த்தவைதான்.

குளக்கட்டிலிருந்து குறுக்காக நேரே வவுனியாவிற்குச் செல்வதாயின் நான்கு மைல்கள் தான் இருக்கும்.

ஆனால் செல்ல முடியாதே.

குளம் நிரம்பியிருக்கும் போது காலையில் குளக்கட்டில் நின்று பார்த்தால் சின்னஞ்சிறு அலைகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்கின்ற காட்சியைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

குளம் நிரம்பியதும் தாமரைகள், ஒலுக்கள், கொட்டி, ஆம்பல் எனப் பலவகைப் பூக்களால் குளம் நிறையும். 'பொய்கை எனும்நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள்' என்று புலமைப் பித்தன் இந்தக் குளத்தைப் பார்த்துத்தான் எழுதினானோ,

குளத்தில் விரால், வாளை, ஜப்பான், பொட்டியன், கணையன், கெளிறு, கொக்கச்சான், மண்விரால், குறவை, அயிரை, மாங்கன், ஒட்டி, விலாங்கு, உழுவை எனப் பலவகை மீனினங்கள் உண்டு.

குளம் வற்றி வறண்டு போவது மிகக்குறைவு.

முன்பெல்லாம் வவுனியா நகரிற்கு உத்தியோகம் பார்க்க வரும் பிற பிரதேச நண்பர்களை எங்கள் ஊரிற்கு அழைத்துச் சென்று குளத்தின் அழகையும் வயல் வெளிகளையும் காடுகளையும் காட்டுவோம்.

காட்டுப் பழவகைகளை உண்ணக் கொடுப்போம்.

எனது பிறந்த ஊர்தான் இந்தப் பம்பைமடு.

கடுங் கோடைக் காலத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது குளம் வற்றிப் போகும். குளம் வற்றிப் போனால் அலைகரை வெட்டையாகி விடும். நீர் ஏந்தும் பகுதியை மரநிழல்களுக்கூடாகச் சுற்றி வருவதே பெருஞ் சுகமான மகிழ்ச்சிதான்.

மருத மரங்கள், அடம்பு மரங்கள் பொருந்திய வெட்டையாக அலைகரை இருக்கும்.

விளாத்தி மரங்கள் பழங்களைக் கொட்டும்.

பொறுக்கி மகிழ்வோம்.

முள்ளுப் பற்றைகள் கிடையாது.

யாரிடம் செருப்பு இருந்தது அணிவதற்கு.

மழை மேகம் வானத்தில் கூடிவிட்டால் குளத்து அலைகரையில் நூற்றுக்கணக்கான மயில்களைக் காணலாம்.

மயில்களின் நடனத்தைக் காணாத கண்ணென்ன கண்ணே. மாலை வேளையில் மழை மேகத்தைக் கண்டு மகிழ்ந்து சிலிர்த்துத் தம் தோகைகளை விரித்து மயில்கள் சுழன்று சுழன்று ஆட, மயில்களின் தேகைகளிலே, கரு முகிலை ஊடறுத்து வரும் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்க, அந்த அற்புதத்தை எப்படி வர்ணிப்பது?

குளம் நிரம்பியிருக்கும்போது காலையிலே குளிக்கச் செல்வோம்.

காலையிலே மட்டுமென்ன, காலை, மதியம், மாலை என வசதிப்பட்டால் மூன்று நேரமும் குளத்தில் முழுகுவதுதானே எமது வேலை.

நீச்சலிலே உடல் வியர்க்க குளத்தை விட்டு வெளியேறுவோம்.

தட்டைக் கல்லை எடுத்து தண்ணீரிலே படும்படி சரித்து எறிந்து அக்கல் தத்தித்தத்திப் போவதைப் பார்த்து மகிழ்வதும், அதையே போட்டியாக்கி எறிவதும் இனிக் கிடைக்காத மகிழ்ச்சியே.

ஊரில் பணக்காரர் என்று யாரும் இல்லை.

பிச்சைக்காரர் என்றும் யாரும் இல்லை.

வீட்டுக்கு வீடு பசுமாடுகளாலும் பிள்ளைகளாலும் நிறைந்தே இருக்கும்.

ஒரு வேளைச் சாப்பாடு சாப்பிடாத குடும்பம் என்று எந்தக் குடும்பத்தையும் சொல்ல முடியாது.

மீனும், இறைச்சியும், பாலும், தேனும், நெய்யும், மரக்கறிகளும், அரிசியோடு சகலதும் கிடைக்கும்.

விலைக்கு அல்ல.

ஊரில் கடையே இல்லை.

கீரை வகைகள், பிரண்டத் தண்டு, வட்டுக்காய் போன்றவைகள் வீதியோரத்துச் செல்வங்கள்.

பன்றி இறைச்சிக் கருக்கல், மான் மரை இறைச்சி வத்தல்கள், குளத்து விரால், ஜப்பான் மீன் கருவாடு, பாலைப்பாணி, இலுப்பைப்பூப்பாணி, உலுவிந்தப் பழப்பாணி, சாத்துப் பூசணிக்காய், நீத்துப் பூசணிக்காய், தீன் பிலாக்காய், கெக்கரிக்காய், வெள்ளரிப் பழம், வத்தகப் பழம் என சேமித்து வைத்து வாழ்ந்த எம் மக்களுக்கு பஞ்சம் எப்படி வரும்.

அரிசிக்குப் பஞ்சம் இல்லை.

தேங்காய், மிளகாய், மரக்கறி வகைகள் வீட்டிலேயே கிடைக்கும். கோழி வளர்க்காத குடும்பங்களே இல்லை.

சீனி, உப்பு, மண்ணெண்ணெய், சவர்க்காரம் முதலான சில பொருட்கள் தான் வாங்க வேண்டிய பொருட்கள்.

கிராமத்து வாழ்க்கையின் சுகத்தை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.

எங்கள் குளம் நிரம்பி கலிங்கு (வான்) பாய்ந்து கொண்டிருந்த நேரம் அது.

அயிரை வாருபவர்களும், மீன் அடிப்பவர்களும், தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் என ஆண், பெண் இரு பாலாராலும் குளத்தின் பல பாகங்களும் நிரம்பியிருந்த நேரம் அது.

ஊரிலே ஒரு பிரமுகர்.

நாற்பது வயதைத் தாண்டியவர்.

அவரை ஊர்த் தலைவர் என்று சொல்ல முடியாது.

அவர் வவுனியாவிற்கு வெளியே சென்று படித்தவர்.

கொஞ்சம் விசய ஞானம் உள்ளவர்.

இளைஞர்களோடும், சிறுவர்களோடும் கிளித்தட்டு, கோப்பைப்பந்து, வொலிபோல் முதற்கொண்டு கிட்டிப்புள், வார்ப்பாய்தல், கடுதாசி விளையாட்டுவரை சேர்ந்து விளையாடுவார்.

குடும்பஸ்தர், எட்டுப்பிள்ளைகளைப் பெற்றவர்.

வயது முதிர்ந்தவர்களோடும் அவர்களுக்கு ஏற்ற வகையிலே பழகுவார்.

அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது.

எனது நெருங்கிய உறவுக்காரர்.

மத்தியான நேரம் பக்கத்து ஊர் உறவினர் ஒருவரையும் தனது ஒத்த வயது நண்பர் ஒருவரையும் அழைத்து வந்தார்.

வந்தவர்கள் இருவரும் கொஞ்சம் ஊரடி பட்டவர்கள்.

சிறுவர்கள் குளத்திலே நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். பெண்களும் ஆண்களும் சேர்ந்து குளிக்க முடியாது. வேறு வேறு இடங்களில்தான் குளிக்க வேண்டும். குளக்கட்டில் ஏறும்போது, பெண்கள் குளித்துக் கொண்டிருந்தால் ஆண்கள் புறக்கட்டினூடாகச் சென்று கொஞ்சம் தள்ளித்தான் குளக்கட்டில் ஏறுவார்கள்.

பெண்கள் குளிப்பதை யாரும் பார்;க்க மாட்டார்கள்.

குளக்கட்டில் நடந்து செல்வதே நாகரிகமற்ற செயல் எனக் கருதிய காலம் அது.

குளத்து அடம்பு மரங்களில் ஏராளமான கொக்குக் கூடுகள். ஒரே இரைச்சல்.

அலைகரையில் தான் கொக்குகள் அடம்பு மரங்களில் கூடுகளைக் கட்டியிருந்தன.

கொக்குக் குஞ்சுகளின் இறைச்சி மிகவும் சுவையானது.

யாரும் சிலர் எப்போதாவது கொக்குக் குஞ்சுகளைக் கூட்டுக்குள்ளேயிருந்து பிடித்து வந்து சாப்பிட்டிருப்பார்கள்.

பெருமளவில் ஊரார் அந்தப் பாவச் செயலை விரும்புவதில்லை.

மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகள் பொரித்துப் பறக்கும் வரையில் உணவூட்டி தாய்க் கொக்குகள் நடாத்துகின்ற குடும்ப வாழ்க்கை அற்புதமானது.

சிறகுகள் முளைக்காத பிஞ்சுக் குஞ்சுகளை, எதிர்த்துப் போராட வல்லமை இல்லாத கொக்குகளிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து பொரித்து, கறிவைத்து சாப்பிடுவது என்பது மிகமிகக் கொடுமையான பாவச் செயல்தானே. இப்பொழுதுகூட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவத்தை நினைக்க என் மனம் பதறுகிறது.

குளக்கட்டில் நின்று அலைகரையிலே தெரிந்;த கொக்குக் கூடுகளையும் இரைச்சலையும் பார்த்த பக்கத்து ஊர் உறவினர்,

'கொக்குக் குஞ்சு இறைச்சியப் போல ருசியான இறைச்சியக் காணேலாது. உந்த அடம்பு மரங்களில் இருக்கிற கூடுகளில் இருக்கிற குஞ்சுகளைப் பிடிச்சு வந்தா இறைச்சி அந்த மாதிரி இருக்கும். நல்லா உறைப்புப் போட்டு பொத்த மிளகாயும் வெட்டிப்போட்டு, கண்ணில கண்ணீர் வாற மாதிரி உறைப்போட கொக்குக் குஞ்சு இறைச்சியச் சாப்பிட்டுப் பாத்தாத்தான் தெரியும் இறைச்சியின்ர அருமை. எலும்பும் இருக்காது எல்லாம் கடிச்சுத் தின்னலாம்.'

ஊர் பிரமுகருக்கும் ஆசை வந்துவிட்டது.

குளத்தில் நிறை தண்ணீர்.

எப்படி மரங்களிருக்கும் அலைகரைக்குச் செல்வது? 'அது சரி என்னண்டு காணும் அடம்பு மரத்தடிக்குப் போறது. நிறை தண்ணியில்லே. நீந்திப் போறதெண்டாச் சும்மாவே கொஞ்சத் தூரமே. ஏலுமே ஆராலயும்'

'ஏன் காணும் நீந்துவான், கட்டுமரம் கட்டினால் போகலாந்தானே.'

'என்னண்டு கட்டுறது'

'இலவ மரத்தப் பிளந்து அதில் கமுகஞ் சிலாகையள வரிஞ்சு கட்டி வலிச்சுக் கொண்டு போகலாம். இதென்ன பெரிய கஸ்ரமே...'

'அது சரி.... அங்க மரத்தில இருந்து கொக்குக் குஞ்சுகள் தவறி விழுந்தா முதலயள் கிடக்கும் பார்த்துக் கொண்டு கௌவிறதுக்கு. அதுக்குள்ள போய் முதலயளுக்க அம்பிட்டிட்டா...'

'என்ன பெரிய முதல, முதல என்ன கொக்குக் குஞ்சுக்காகவே கிடக்குது. ஆக்கள் போற அசுமாத்துக் கேட்டா ஓடிப்போகுது...'

'சீ... சீ... அப்பிடிச் சொல்லேலாது. முதல கடிச்சாத் தப்பேலாது. அதுக்கொரு வழி பண்ணவேணும்'

'உந்தக் குளக்கட்டுக்குக் கீழ் உள்ள வயிரவருக்கு நேத்திவைச்சா முதல கடிக்காது. வயிரவர விட முதல என்ன பெரிசே'

'ஓம் ஓம் அதுதான் சரி'

குளித்துக்கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துத் திட்டத்தைச் சொல்லி ஆசை காட்டினார் அந்தப் பிரமுகர். அவர் சொல்வதை வேத வாக்காகக் கருதிச் செயற்படும் சிலர் அங்கே இருந்தார்கள்.

பாவம் புண்ணியம் பார்க்கும் பருவமல்ல அவர்களது பருவம்.

கொக்குக் குஞ்சு இறைச்சியை ருசிக்க வேண்டும் என்பதும் விளையாட்டுக் குணமுமே அவர்களிடம் இருந்தன.

அவர்களது பயம் முதலை பற்றி மட்டுமே தான்.

நீந்தத் தெரிந்தவர்கள். அதனால் தண்ணீர் என்ற பயமும் இல்லை.

கட்டு மரத்தைக் கட்டினார்கள்.

நாலுபேர் இரண்டு சாக்குகளோடு கட்டு மரத்தில் ஏறியிருந்து வலிக்கத் தொடங்கினார்கள்.

அதைக் கேள்விப்பட்ட ஊர்ப் பெரியவர்கள் சிலர் தடுத்துப் பார்த்தார்கள்.

'டேய்... பாவமடா குஞ்சுகளையும் ஆரும் கொல்லுவாங்களோடா... அதுவும் கூட்டுக்க இருக்கிற சிறகு முளைக்காத குஞ்சுகள... பாவமடா, பறந்து தப்ப வழிதெரியாத குஞ்சுகளக் கொல்லுறதோ, நாங்களும் குழந்த குட்டியளோட வாழுற நாங்கள். வீணா ஊர்ப் பழியத் தேடாதேங்கடா...'

எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.

பிரமுகரோ விடுவதாயில்லை. அவரோடு நின்றவர்கள் உசார்க் கொடுத்து நின்றார்கள்.

பாவம் அப்பாவி இளைஞர்கள் நால்வர், ஏதும் அறியாத ஒரு உணர்ச்சியில் விளையாட்டாக கட்டு மரத்தை வலித்துக்கொண்டு அலைகரையை அடைந்தார்கள்.

ஊர்ப் பிரமுகர் ஒரு தேங்காயைக் கொண்டுவந்து குளத்திலே கழுவி கும்பிட்டுவிட்டு வைரவருக்கு நேர்த்தி வைத்து விட்டுக் குளக் கட்டில் தன் சகாக்களோடு நின்று மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஊரெல்லாம் குளக்கட்டில் கூடிவிட்டது.

அலைகரையிலிருந்து அடம்ப மரங்களில் கூடு கட்டி இருந்த கொக்குகளெல்லாம் தம் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியாமல் பதகளித்துப் பறந்து இரைந்து அலறிச் சத்தமிட்டன.

மரங்களுக்கு மேலே வெள்ளைக் கொக்குகளின் அவல ஓலம்.

கட்டு மரத்திலிருந்த இருவர் மரங்களிலே மளமளவென ஏறி கூடுகளுக்குள்ளே இருந்த குஞ்சுகளைப் பிடித்துக் கீழே எறிய, சாக்குக்குள்ளே குஞ்சுகளை ஏந்தத் தொடங்கினார்கள் இருவர்.

சில குஞ்சுகள் பறக்க முயன்று தவறி வீழ்ந்து தண்ணீரில் தத்தளித்தன. அவற்றையும் எட்டி வாரிப்பிடித்து கழுத்தைத் திருகியும், சிறகுகளை ஒடித்தும் சாக்குக்குள் போட்டனர்.

இரண்டு சாக்குகளும் நிறையும் வரையில் பல மரங்களிலும் ஏறி இறங்கி கொக்குக் குஞ்சுகளை வேட்டையாடின அந்த வெறிநாய்கள்.

சிறகு முளைக்காத குஞ்சுகளையும், கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்க முயன்ற குஞ்சுகளையும் வேறாக்கியிருக்கலாம் என்று தங்களுக்குள்ளே கதைத்துக் கொண்டு சாக்குகளை இறுக்கிக் கட்டினார்கள்.

'அட படுபாவியளே மனுசன் செய்யிற வேலயாடா இது...' என்று திட்டித் தீர்த்துவிட்டுச் செய்வதறியாத ஊர்ப் பெரியவர்கள் திரும்பிவிட்டார்கள்.

சின்னஞ்சிறுசுகளைக் கையைப் பிடித்து இழுத்தாலும் அச்சிறிசுகள் கைகளை உதறிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தன.

கட்டு மரம் திரும்பிக்கொண்டிருந்தது. நடுக்குளத்துக்கு வந்துவிட்டார்கள்.

கட்டு மரத்திலே வந்துகொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்கள் தண்ணீரில் குதித்து நீந்திக் கரைக்கு வந்திட்டார்கள்.

மற்றைய இருவரும் மௌ;ள மௌ;ள கட்டு மரத்தை வலித்துக்கொண்டு கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

'டேய்! முதலயால தப்பிச்சாச்சு. இனி என்னத்துக்கிடா வைரவருக்கு நேத்தி...'

ஒருவன் ஓடிப்போய் மரத்தின் கீழே வைரவருக்கு நேர்த்திக் கடனுக்காக வைத்திருந்த தேங்காயை எடுத்து அடித்து உடைத்தான்.

குஞ்சு குருமன்கள் எல்லாம் ஓடிப்போய் பொறுக்கித் தேங்காய்ச் சொட்டுக்களைத் தின்னத் தொடங்கிவிட்டன. நடுக் குளத்தைத் தாண்டியது கட்டுமரம்.

இன்னும் சிறிது தூரம்.

குளக்கட்டிலிருந்து ஒரு ஐம்பது அடிதான் இருக்கும்.

கட்டுமரத்திலே இருந்த இன்னொருவன் குதித்து நீந்திக் கரைக்கு வந்தான்.

கட்டு மரத்திலிருந்தவன் சத்தம் போட்டான்.

'அண்ண! சாக்கு மூட்டையளக் காணேல்ல அண்ண...'

'டேய்! வடிவாப் பாரிடா..'

'இல்லயண்ண. கட்டு மரத்தில நான் மட்டுந்தான் இருக்கிறன் அண்ண. வேற ஒண்டும் இல்லயண்ண.'

'அட நாசம் விழுவானே. எங்கடா சாக்குகள்? எங்கடா கொக்குக் குஞ்சுகள்?'

'ஒண்டயும் காணேல்ல அண்ண...'

'மூதேவி. குதிச்சுச் சுழியோடிப் பாரிடா...'

'எங்கேண்டண்ண பாக்கிறது. எவளவு ஆழம் தெரியுமே...'

'டேய், உவடத்திலதான் விழுந்திருக்கும் சுழியோடிப் பாரிடா...'

'கொஞ்ச ஆழமே அண்ண. ரெண்டாள்த் தாழ்ப்பம் இருக்கும். என்னண்டு சுழியோடுறது'

'நானென்னண்ண செய்யிறது...'

'வேசமோனே! கரைக்கு வந்தியோ வெறுங்கையோட, கொல்லுவேன்...'

'டேய் அங்க பார்ரா திரும்பி, ஏதோ மிதக்குதடா...'

'சாக்குத் தானோ பார்ரா...'

'அய்யோ முதல அண்ண....'

தேங்காய்ச் சிரட்டையைக் கோதிக் கொண்டு சிறுவர்கள் குளக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:42 am

இரவு பகல் நான் நீங்கள்
--------------
சாந்தினி.வரதராஐன்
---------------
எல்லா சிறைகளையும் உடைத்துக்கொண்டு எண்ணங்கள் ஒரு முற்றுப்புள்ளியின்றி நீண்டு கொண்டே போகின்றது. வாழ்வு பற்றிய நினைவுகள் வெறுப்பும், சோதனைகளும் நிறைந்ததாகவே காணப்படுகின்றன. இரவும் பகலும் அமைதியை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் காலம் நீண்டுகொண்டே போகின்றது. அப்போதைய பிணங்களின் வாடையும் அழுகையும் இன்னமும் அகலாது காற்றில் ஒட்டியிருக்கும் மண்ணில் அன்று பிணம் புசிப்பதற்காய் பக்கத்திலிருந்துவந்த கழுகுகளும் ஓநாய்களும் இன்னொருதருணத்திற்காய் ஏங்கிக்கொண்டு காடுகளிலும் மரங்களிலும் ஒழிந்திருந்திருக்கின்றன என்பதை அறியாத அப்பாவிகள் யுத்தம் அற்றுப்போன காற்றை அவசர அவசரமாய் சுவாசித்து திரிந்தற்கான அடையாளங்களாய் எழும்பிய வீடுகளும், கோயில்களும், பாடசாலைகளும், வயல்களும், தோட்டங்களும் இன்னும் எத்தனை எத்தனை அத்தனையும் இன்று கரிபடிந்த முகத்தோடு வீழ்ந்து கிடக்கின்றது. சிரித்தும் கதைத்தும் கதைசொல்லியும் திரிந்த வீதிகள் சருகுகளால் மூடிக்கிடக்கின்றன. மூடின சருகுகளின் கீழ் இங்கு வாழ்ந்தவர்களின் அடையாளங்கள் அத்தனையும் அழுதுகிடக்கின்றது என்பதை யார்ரறிவார்?

கால காலமாய் கதை சொல்லியும் கதை கேட்டும் வளர்ந்தவர்கள் நாங்கள். கதைகளும் பாத்திரங்களும் எந்தகாலத்திலும் மாறியதே இல்லை. ஆனால் இன்று கதைசொன்னவர்களும் கதைகேட்டவர்களும் மரணத்தையல்லவா சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து எத்தனையோ கதைகளைக்கேட்டு கேட்டு வளர்ந்த நான் இன்று உங்களோடு பேச வரவில்லை. கதைசொல்லியாகவும் வரவில்லை. நான் மரணத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றேன். அவர்களுடையதும் என்னுடையதுமான மரணத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

இப்போது துயரத்தின் சாம்பலை தன் முகத்தில் அப்பிக்கொண்ட இந்த கிரமம்பற்றிய என்னைக்கடந்து போன நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். பொழுதெல்லாம் புன்னகையை அள்ளி அள்ளித் தூவிய நாட்கள் அவை. அப்பாச்சியும், அம்மாவும், அப்பாவும், தங்கையும், தம்பியும், நானும். அவர்கள் என்னையும் தங்கள் பிள்ளையைப்போல்தான் நேசித்தார்கள். அவர்கள் வாழ்க்கையை ஒரு தேன்கூட்டைப்போல் பொத்தி பொத்தி வாழ்ந்த வீட்டிலும், மண்ணிலும் இப்போ பெரிதும் சிறிதுமாய் மண் மூட்டைகள் அடுக்கி கிடக்கின்றன. எங்கும் பதுங்குகுழிகள் வாயை ஆவென்று பிளந்தபடி அதுக்குள் விழுந்து பதுங்கிக்கிடக்கும் சனியன்கள். எதையோ எதிர்பார்த்துக்கிடப்பதுபோல் அப்பாச்சி அடிக்கடி சொல்லுவா முந்தி வன்னியெண்டா சிலருக்கு ஏதோ காஞ்சுபோனகாடும், நுளம்பும்,
மலேரியாவும், குளமும், இதுமட்டும்தான் நினைவிலவருமாம். அம்மாவீட்டாக்களைப் பற்றி நினைக்கிற பொழுதெல்லாம் இப்படித்தான் அப்பாச்சி தன் கோபத்தை வெளிப்படுத்துவா.

பின் ஒரு இரவில் காலம் எல்லாவற்றையும், எல்லோரையும் மாற்றிப்போட்டபோது அப்பாச்சியும் எல்லாவற்றையும் மறந்து காடுகளைப்போல சிரித்து அணைத்தா. எனக்கு விளங்கவேயில்லை ஏன் எல்லா நிகழ்வுகளும் இரவில நடக்கிது? இரவு சாத்தான்களுக்காவே பிறந்ததுபோல அவர்களோட சேர்ந்து எங்களைப்பார்த்து கைகொட்டிச் சிரிக்கிது.
அந்தத் துயர் நிறைந்த நாளும் அதுவும் ஒரு இருண்ட இரவுதான். எத்தனை கெஞ்சல்கள், அழுகைகள், மன்றாட்டங்கள் அப்பாச்சி எது சொன்னாலும் சிரித்த முகத்தோடு இந்த வீட்டை நிறைத்து நிற்கும் அம்மா இரும்பு சப்பாத்தினொலிகளோடு வந்தவர்களின் கால்களை பிடித்துக் கெஞ்சி அழுதா எதற்கும் இரங்காத பிணம்தின்னிகள் அம்மாவை எட்டி உதைத்துவிட்டு அப்பாவை இழுத்துச்சென்றார்கள். அவர்களின் சிரிப்பொலியையும் அப்பாச்சியினதும் அம்மாவினதும் கதறல்களையும் அள்ளிக்கொண்டு கறுப்பு புகையை கக்கியபடி அந்த வெள்ளைவான் பறந்தது. மண்ணில் உருண்டு உருண்டு அழுதவர்கள் முடிவில் மண்ணை அள்ளி அள்ளித்திட்டினார்கள், சாபம் போட்டார்கள். இந்த உலகத்தினுள்ள அத்தனைகடவுள்களையும் திட்டினார்கள். சாபங்கள் பலிக்குமாமே? அப்படியானால் எத்தனைகோடி சாபங்கள் அவர்களின் தலையில் கூடுகட்டி இருக்கும்? அப்பாவை அவர்கள் இழுத்துச்செல்லும்போது அவரின் கண்களில் மரணபயம் தெரிந்தது. அவர் என்னைப் பார்த்த பார்வை என்னிடம் ஏதோ சொல்லத்துடிப்பது போலிருந்தது. பாவிகள் எதையுமே சொல்லவிடவில்லை. அப்பா என்ன சொல்ல நினைத்திருப்பார்.? சொன்னவார்த்தைகளைவிட சொல்லாமல்போன வார்த்தைகளை தேடுவது இயல்புதானே. என் நெஞ்சறை காய்ந்துபோனது. எதுவுமே செய்ய இயலாது எல்லாவற்றையும் பார்த்தபடி நான் நானாகவே நின்றேன்.

எங்களுக்காவே வாழ்ந்த அப்பாவைப்பற்றிய எந்தச்செய்தியும் தெரியாத நிலையில் இந்த வீடும் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காததுபோல் ஊமையாகி நின்றது. போர் என்றுவந்தால் புல்லும் புழுக்கழும் நசிபடுவது இயற்கைதானே என்று வீடும் நினைத்திருக்குமோ? வீடு மட்டும்தான் ஊமையாகி நின்றது. துப்பாக்கிகளின் ஒலிகளும் ஒளிகளும் புரியாத மொழிகளில் கேள்வி கேட்டகத்தொடங்கிவிட்டன. அதற்கான பதில்களும் அவசர அவசரமாய் வந்து கொண்டே இருந்தன. ஒளியற்ற இரவுகளுக்கும் ஓலங்களுக்கும் வாழ்க்கை பழக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

முன்பும் அப்படித்தான் இடப்பெயர்வு அப்பாச்சியை மட்டும்தான் சந்தோஷப்படுத்தியது. பின் எல்லாமே குரங்குகளும், யானைகளும், வயல்களும், வெளிகளும், பள்ளிக்கூடமும், கள்ளாமில்லாத கண்களோடு நிறைந்து வழிந்த பிள்ளைகளும் பழகிப்போக இதுவே இவர்களுக்கு நிரந்தர இடமானது. சில வேளைகளில் தம்பியும், தங்கச்சியும் அப்பாச்சியோடு யாழ்ப்பாணக்கதைகளை தம்மை மறந்து சொல்லத்தொடங்குவார்கள். நானும் ஆசைஆசையாய் கேட்டுக்கொண்டே இருப்பன். அந்த அழகிய பட்டினத்தில் உங்களை யாழ்ப்பாணம் வரவேற்க்கிறது என சிரித்த முகத்தோடு இருந்த எல்லைகள் ஒவ்வொன்றும் தொப்பிபோட்டு தூப்பாக்கி ஏந்திய ராணுவ எல்லைகளாய் மாறிய பின் அதன் கண்கள் ஒரு நாள்கூட தூங்கியதே இல்லையாம். அதுக்கு கண்களும், வாயும் மட்டும்தான் இருந்திருக்கிறது. ஒரே கதையைதிரும்ப திரும்பச்சொல்வார்கள். சொல்லி முடித்த பின்னும் அவர்களின் கண்கள் பழைய நினைவுகளில் வீழ்ந்து கிடப்பதை பலமுறை பார்த்திருக்கின்றேன்.

குழந்தைகளின் சிரிப்பொலி நிறைந்து வழிந்த பாடசாலையில் இப்போது அழுகை சத்தத்தை தவிர வேறெதுவுமே இல்லை. இங்கு அத்தனை புன்னகைகளும் நிலத்தினுள் புதையுண்டு கிடக்கின்றன. சூரியனின் வருகையை கடல்போன்ற கைகளால் மறைத்தபடி இந்த இருட்டு ஏன் திரும்பத்திரும்ப வருகிறது? முன்பெல்லாம் காலை எட்டுமணியானால்போதும் இந்த வீதியெல்லாம் குழந்தைகள் பூக்கள் நடந்து வருவதுபோல் வருவார்கள். மணி அடித்தவுடன் தேவாரம் திருவாசகம் என்று ஒரே குரலில் ஒரே மொழியில் சங்கீதமாய் பாடுவார்கள். முடிவில் எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க என்றுதானே ஒவ்வொரு நாளும் சொன்னார்கள். சுயநலமாக சிந்திக்கக்கூட தெரியாத குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் இலங்கையில் எத்தனை இனம் உண்டு? நீங்கள் என்ன இனம் ? என்ற கேள்வி கேட்க்கப்பட்டிருக்கும். நாங்கள் தமிழர்கள் என்ற பதில் சத்தமாக உறுதியாக வந்து விழும். அதிலும் தம்பியின் குரல் மிகச்சத்தமாக கேட்கும். அந்தகுஞ்சுக் குழந்தைகள் வழக்கம்போல் எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க என்று சொல்லிக்கொண்டிருந்த காலைப்பொழுதொன்றில்தான் ஏன் எங்களை கொல்கிறார்கள்? என்று தெரியாத பிஞ்சுகளின் தொண்டையிலிருந்து குடித்த தண்ணீரும், உண்ட உணவும் இறங்கக்கூட இல்லை.

வெள்ளைப்புறாக்களை சிவப்பு நிறமாக்கிய பெருமிதத்தில் விமானம் மேலெழுந்து பறந்தது.அது அடையாளம் காட்டமுடியாத மரணம். தமிழ் பேசியதை தவிர அந்தக்குழந்தைகள் வேறு என்ன பாவம் செய்தார்கள்? மரணம் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள். அதை நினைத்துக்கூட பார்க்கத்தெரியாதவர்கள் அவர்களது சந்தோஷங்களை கனவுகளை அந்த ஒரே நாளில் கீபீர் குண்டுகள் அள்ளிக்கொண்டு போயின.

நீளக்கிடந்த நிலமெல்லாம் துயர் படர்ந்து கிடந்தது. வெளிகளிலும் வயல்களிலும் உயிரற்ற உடல்கள் அண்ணாந்தும் குப்புறவும் கிடந்தது நாங்கள் என்ன செய்தோம்? என்று கேள்வி கேட்கத்தொடங்கின. தலையில்லாத மனிதர்களும், கோழிகளும், ஆடுகளும் நிறைந்து வழிந்தன. மரணத்தின் நிழல் தங்கள் மீதும் படரத்தொடங்கிவிடும் என்ற அச்சத்தில் ஊர் நடுங்கியது. பின் மெல்ல மெல்ல நகரத்தொடங்கியது. தங்கச்சியும் இப்போது என்னிடம் எந்தப்பதிலும் தேவையில்லை என்பதுபோல் தானே கேள்வியைக்கேட்டு தானே பதிலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"அண்டைக்கு அவங்கள் என்னைத்தான் தேடிவந்தவங்கள் நான் இல்லாததால்தானே என்ரை அப்பாவை கொண்டுபோனவங்கள். இனியும் வருவாங்கள் நீயே சொல்லு நான் போகாம இருக்கிறதுக்கு சில காரணங்கள்தான் இருக்கிது. ஆனா போறதுக்கு நிறைய இருக்கிது. ஓவ்வொன்றாய் அடுக்கிக்கொண்டே போகலாம் ஆனா எனக்குத்தான் நேரமில்லை ஏனெண்டா அதுக்கான காரணமும் அதிகமாகிக்கொண்டே போகுது. ஆனா ஒண்டுமட்டும் சொல்லிறன் கேள் என்ரை குழந்தைப்பருவத்தை பாவிகள் தங்கட சப்பாத்துக்காலாலும், துப்பாக்கியின்ர ஒலியாலையும் நசுக்கிவிட்டிட்டினம். என்ரை குழந்தை நினைவுகளில மரணமும், பயமும் இதைத்தவிர வேறெதுவுமேயில்லை. விளையாட்டைத்தவிர எதுவுமே தெரியாத அந்தப்பருவத்தை அவையளால இனி திரப்பிதர ஏலுமே சொல்லு? ஆனா அவையளின்ர பிள்ளைகள் மட்டும் விளையாடினம், அவையளின்ர அம்மா அப்பாவோடு சேர்ந்து பள்ளிக்கூட விளாயாட்டுப்போட்டியிலும் விளையாடினம். ஆனா நாங்கள் பிளேனைக்கண்டால் ஓடிவந்து அண்ணாந்து பார்க்கிற வயதிலயிருந்து இண்டைக்குமட்டும் ஓடிப்போய் பதுங்குகுழிக்குள்ள கிடக்கிறம். எங்களுக்கு தெரிய விமானம் எண்டால் பிராயணம் செய்யிற வாகனம் எண்டு பாடப்புத்தகத்தில படிச்சதோட சரி. ஆனா எங்களைப்பொறுத்தவரை எங்களுக்கு மேல குண்டுபோட வாற ஒரு எமன் எண்டுமட்டும்தான் தெரியும்". தங்கச்சி போய்விட்டாள். அவளும் என்னை சாட்சியாக வைத்துவிட்டுத்தான் போனாள்.

அவளின் கால்தடயங்களின் பக்கத்தில் எத்தனையோ காலடிகள் தொடர்ந்தவண்ணமிருந்தது. இப்படியே தொடர்ந்தால் இந்த தேசத்தின் துயர் நிறைந்த வரலாற்றை யார் கூறப்போகிறார்கள்? எந்தக்குழந்தை கண்கலங்க கதை சொல்லப்போகிறது? அவள் போனபின்னும் விதியே விதியே தமிழ்சாதியை என்ன செய்ய நினைத்திட்டாய்? என்ற பாட்டு மட்டும் அவளின் குரலில் என்னைச் சுற்றி சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கிது.

வழக்கம்போல் முற்றம் கூட்டும்பொழுது என் பக்கத்தில் வந்த அம்மா எதையெல்லாம் சொல்ல நினைக்கின்றாவோ அவ்வளவையும் ஒரு பார்வையால் ஒரு துளி கண்ணீரால் மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தா. அப்பாவின் பிரிவுக்கு பின் அம்மாவின் குரலை நான் எப்பவும் கேட்டதேயில்லை. மரணம் பின்வேலியால் வந்து கொண்டிருந்த காலம் மாறி முன்னாலும் கால்களுக்கிடையிலும் வளர்ந்து கொண்டேயிருந்தன. சபிக்கப்பட்ட அந்த இரவைப்போலவே மறுபடியும் ஒரு இரவு பேயைப்போல், பிசாசைப்போல் அவர்களோடு கைகோர்த்து இயற்கையும் என் மக்களை ஓட ஓட விரட்டியது. மனிதர்கள் கட்டிய கட்டிடங்களை மனிதர்களே இடித்தார்கள் மனிதர்களை மனிதர்களே கொன்றும் குவித்தார்கள். கனவு காண்பதற்கு நேரமே இல்லாமல் இரவும் பகலும் உழைப்போடு வாழ்ந்த மக்கள். இயற்கைக்கும் நன்றி சொல்லி விழா எடுத்தவர்கள். எத்தனை கடவுளை நம்பினார்கள். எல்லாக்கடவுள்களையும் தோளில் சுமந்து ஊர் காட்டினார்களே. ஆண்டவரே ஆண்டவரே யாரை நாம் சபிப்பது? எந்தச்சூனியக்காரியின் கண்பட்டு கருகிக்கிடக்கிறது இந்த மண்? குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக்கூட நம்பினார்களே. நம்பி ஏமாந்த மக்களை இன்று மரணம் துரத்தி துரத்தி கொல்கிறதே. இந்த துயர் நிறைந்த வாழ்க்கையை சொல்ல என்னிடமும் எந்த மொழியும் இல்லை.

இரவானால் போதும் அப்பாச்சி தம்பிக்கும் தங்கச்சிக்கும் கதை சொல்லத் தொடங்குவா பாரதக்கதை சொல்லும்போது தங்கச்சிக்கு கோபம் வரும்." ஐந்து வீடும், ஐந்து ஊரும் பிச்சையாவோ கேட்கவேணும்".? இராமயாணக்கதை சொல்லும்போது தம்பிக்கு கோபம்வரும்" அந்தக்குரங்கு எப்படி எங்கட நாட்டை எரிக்கும்? அதுதானே எண்டு எனக்கும் சொல்லவேனும்போலயிருக்கும்". ஆனால் இன்று கொட்டும் மழையில் பொதிகளை சுமந்தபடி தாம் வாழ்ந்த மண்ணை, மனையை எல்லாவற்றையும் இழந்து போகும் பொழுது இந்த ஊரே அழுதது. ஆரும் ஆருக்கும் ஆறுதல் சொல்லமுடியாத அழுகை அது.

அப்பாச்சியும் அழுதா தனக்காக இந்த வீட்டையும் மகனையும் மட்டும் விட்டுப்போக தனிச்சு நிண்டு போராடி ஆரம்பிச்ச வாழ்க்கையை ஆரோ முடிச்சுவைக்கின்றானே என்று ஒப்பாரிவைத்து அழுதா. அம்மா எதுவுமே சொல்ல முடியாமல் என்னையும் தோட்டத்தையும் ஆட்டையும் வீட்டையும் கண்ணால் தடவி தடவிப் பார்த்தா பாவம் அம்மா. தான் வாழ்ந்த அந்த காதல் வாழ்க்கையையும் ஆருக்கும் சொன்னதில்லை துயரத்தையும் சொல்வதில்லை. ஆனால் அத்தனையையும் அம்மாவின் கண்கள் சொல்லிக்கொண்டேயிருக்கும்.

ஊரே ஓடியது நிழல்தரும் மரங்களெல்லாம் வேரோடு பிடிங்கி எறியப்பட, சில மரங்கள் தானே காணமல் போயின காற்றும் தன்பாட்டில் கதைகளை பரப்பிக்கொண்டிருந்தது. மரங்களற்ற வெளி வியாபித்துக் கொண்டுபோக ஊர் வெக்கை தாங்க முடியாமல் அந்தரித்தது. முன்புபோல் சாவுக்கு ஓடி ஒளிந்து கொள்வதற்கு எந்த அவசாகமும் கொடுக்காது சத்தமில்லாது என்ன நடக்கின்றது? என்று யோசிக்கவும் விடாது உச்சந்தலையில்வந்து சிதறடிக்கும் குண்டுகள் புதிது புதிதாக எம்மக்களில் மீது பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளமென திரண்டார்கள். அவர்கள் மனதில்மட்டும் பெரும் தீயொன்று மெலெழுந்து எரிந்து கொண்டிருந்தது. ஆயிரம் ஆயிரம் காலமாக பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் ஒரே நாளில் விட்டு விட்டு ஒரு பைக்குள் உயிரைமட்டும் பொத்திப்பிடித்தபடி வாழ்வு சமைத்திட்ட மக்கள் கண்ணீரால் முகம் கழுவி வாழ்விடம் தேடி ஓடினார்கள். சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாக என்னை மட்டும் விட்டுவிட்டு.

இந்த துயர்பீறிட்டு வருகின்ற பொழுதுகளில் மட்டுமல்ல இப்போது எல்லாப் பொழுதுகளிலும் என்னிலிருந்து எல்லாவற்றையும் இழப்பதாய் உணர்கிறேன். என்னைப்பொறுத்தவரை எனக்கும் என்ரமக்களுக்கும் இது இலையுதிர்க்காலம்.

இப்போ விடிந்ததும் வெளிச்சத்தை முந்திக்கொண்டு வெறும் காடாக மௌனித்து நிற்கும் என்ரை மண்ணில் எங்கு பார்த்தாலும் புரியாத பாஷையும் பழக்கப்பட்ட அழுகுரல்களும், சிங்கங்களின் சிரிப்பொலியும். வாழ்ந்த மக்களை தொலைத்த ஊரில் துயர் நிரம்பி நிரம்பி வழிந்து கொண்டேயிருந்தது.

சிறிசேனாவும், நிமலும் பதுங்கு குழிக்குள் தங்கள் வாழ்க்கையை ஒழித்துவைத்துக்கொண்டு எந்த நிமிடமும் மரணம் காலடிக்குள் வரலாம் என்ற பயத்தோடு துவக்கை கட்டிப்பிடித்தபடி இருக்கிறார்கள். சிறிசேனாவின் விரல்களிலிருந்த வயர்மோதிரங்கள் எங்கேயோ தொலைந்து போயிருந்தன. அவனுக்கு சம்பந்தமே இல்லாத எழுத்துக்களில் மோதிரங்கள் அவன் விரலை நிறைத்திருந்தது. துவக்கை துடைப்பதைவிட அவன் மோதிரங்களை துடைக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே போனது.

இவன் நிமல் பரவாயில்லையோ என சில சமயம் நினைக்கவைப்பான். தனக்குவரும் கடிதங்களை தனியாக இருக்கும்பொழுதுகளில் எழுத்துக்கூட்டி சத்தமாகப் படிப்பான். கடிதம் எழுதும் பொழுதும் சொல்லிச்சொல்லி எழுதுவான். மகே அம்மே இப்போவெல்லாம் இந்தச்சொல்லைத்தான் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறன். சிறிசேனாவின் ஓலைவீடு ஓட்டுவீடானகதையும் அவர்கள் இப்போ கக்கூஸ்சும் கட்டிவிட்டார்கள் என்ற வரிகள் கடிதத்தை நிறைத்து நிற்கும். அம்மே சிறியின் ஓலைவீடு ஓட்டு வீடாமாறுவதுக்கு இங்கு காலம் காலமாக வாழ்ந்த எத்தனை தமிழர்களின் வீடு மண்ணோடு மண்ணாய் போனது உனக்கு தெரியுமா அம்மே? அவையளின்ர ஒவ்வொரு சுவரிலும் நிலத்திலும் தமிழரின்ர இரத்தமும் கண்ணீரும் படிந்துபோயிருக்கும். சிறிசேனவின் வீட்டுச்சுவரிலை காதை வைச்சு உன்னிப்பாக கேள் அம்மே அதிலையிருந்து அழுகுரல்களும் சாபங்களும் உனக்கு கேட்கும் எனக்கு இவர்களின்ர சாபத்திலையும், கண்ணீரிலையும் எந்தவீடும் வேண்டாம். கக்கூசும் வேண்டாம். எனக்கு பன்சலையிருந்து பிரித்ஓதி ஒரு கூடு வாங்கி அனுப்பு சிலவேளை அதுதான் ஒருநாள் என்னை உனக்கு அடையாளம் காட்டும் அம்மே. அவன் அழுதான். எனக்கும் அழுகைவந்தது.

பாதுகாப்பு வலையமென சொல்லப்படும் பொறிக்குள் அகப்பட்ட எங்கட பிள்ளைகளின்ர அழுகுரல்கள் பழுக்கக்காய்ச்சிய இரும்பாக காதுகளில் இறங்கும். அப்போது நிமல் மெல்ல சாய்ந்து கண்களை மூடிக்கொள்வான். சிறிசேனாவின் காதுகள் யானையின் காதுகளைப்போல் விரியும் அவனின் முகம் பிரகாசிக்கும். என்னைச்சுற்றி பாம்புகளும், ஓநாய்களும், கழுகுகளும் பெருகிக்கொண்டே போகின்றது. மரங்களில்லா ஊரை நிரப்ப மரங்களை பிடிங்கிவந்து நட்டார்கள்.எல்லா மரங்களின் கீழும் புத்தர் தோன்றினார். மரணக்கிடங்குகளின்மேல் பூச்செடிகளை நட்டு நீர்வார்த்தார்கள். யாரோ சில அரசர்களின் நகர்வலத்துக்காய் அழுகை அழித்து சிரிப்பது எப்படி? என துவக்கோடு பயிற்சி கொடுக்கிறார்கள். இரவு மட்டுமல்ல பகலும் அவர்கள் கையில் சரணடைந்து கிடக்கின்றது.

சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கும் போர் மேகத்தினுள் சிக்குண்டு சருகாய்கிடக்கும் இந்த வளம்கொழித்த மண்ணில் பூத்த என்ரை குஞ்சுகளின் முகம் பார்க்க வருகைதரும் அரசர்களுக்காய் இரத்தம் ஆறாய்பெருகி ஓடிய மண்ணெல்லாம் பூக்களின் இதழ்களைத் தூவினார்கள். புதைத்த புன்னகைகளை தோண்டி எடுத்து எல்லோர் முகங்களிலும் ஒட்டினார்கள். அவர்களும் வந்தார்கள் வேலிகள் தூப்பாக்கி ஏந்த புத்தரின் சீடர்கள் உடைமாற்றி பூச்சிகளின் காருண்யம் பரப்ப கையில் விசிறியுடன் அவர்களும் வந்தார்கள். எங்கும் வெக்கை தாங்கு முடியாத அந்தரிப்பு. கேள்விகள் துவக்கின் வாயிலிருந்து வெளிவந்தன. ஆனால் பொய்யாக ஒட்டிவைத்த புன்னகைகள் என்னிலிருந்து உதிர்ந்து விழுந்த இலைகளைப்போல் உதிர்ந்து விழுந்தன அந்த பொய்யான புன்னகைகள். ஆனால்
கண்ணீர் மட்டும் வழிந்தோடிக்கொண்டிருந்தன அவை பொய்யில்லாத கண்ணீர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:46 am

ரூபம்
------------
ஷோபாசக்தி
------------------
இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.

இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.


இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.

பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.

கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.

தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.

பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.

பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.

இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.

நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.

இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.

ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.

புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.

வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.

இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.

சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.

அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.

முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.

நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.

படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.

தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.

தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.

அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.

இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.

இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.

சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.

அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.

கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.

அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.

அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.

வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.

வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.

நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.

அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 8:48 am

எண்பது ரூபா
--------------
நெல்லை க.பேரன்
---------------------
தூரத்தில் எங்கேயோ பௌத்த ஆலயத்திலிருந்து பிக்குகள் பிரித் ஓதும் சத்தம். 'புத்தம் சரணம் கச்சாமி' 'சங்கம் சரணம் கச்சாமி' என்று விட்டு விட்டுப் புத்தர் பெருமானின் திருப்பாதங்களைத் தொழுகின்ற அடியார்களது ஒலிகூடக் கந்தையாவை அமைதிப் படுத்தவில்லை. படுக்கையில் புரண்டு படுத்த அவனைக் கணநேரத்திற்குள் சுள் என்று குத்திய மூட்டைப் பூச்சி தட்டி எழுப்பிவிட்டது. பக்கத்து அறையில் இருந்த தனிக்குடித்தனக் காரர்களின் பழைய காலத்துப் 'பிக்பென்' மணிக்கூடு டாண் டாண் என்று பன்னிரண்டு தடவைகள் அடித்து ஓய்ந்தது. கந்தையாவுக்குப் பெரியதொரு பெருமூச்சு வெளிப்பட்டது. கடந்த காலமும் குடும்ப நினைவுகளும் அவனை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன.

அப்பொழுது கந்தையாவுக்கு இருபது வயதிருக்கும். நெல்லியடி சென்றல் ஸ்கூலில் படித்து எஸ்.எஸ்.சி யைப் பாஸ் பண்ணிவிட்டு அதற்கு மேலே படிக்க முடியாமல் ஊர்ப்பொடியள் ஒன்றுகூடும் முருகையன் கோவிலின் பிள்ளையார் மண்டபத்திற்கு முன்னால் அந்தப் பன்னீர் மர நிழலில் உட்கார்ந்து அரசியல் தொடக்கம் சினிமா உலகம் வரையில் நண்பர்களுடன் விளாசித் தள்ளுவான் கந்தையா. சிலவேளைகளில் சுவாமியை வைத்துத் தள்ளும் பெரிய சகடைச் சில்லுகளின் மேல் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன் உலக விவகாரங்களையும் ஊர் விவகாரங்களையும் அவன் அலசும் விதமே தனி அலாதியாகவிருக்கும். அப்போதுதான் எல்லோரும் கிளறிக்கல் உத்தியோகத்திற்குப் பரீட்சை எடுப்பதற்கு விண்ணப்பம் போடுகிறார்கள் என்று அறிந்து 'கோழி மேய்ச்சாலும் கோறண மேந்து உத்தியோகம் வேணுமடா மேனை' என்று பக்கத்து வீட்டுச் சின்னாச்சியக்கை சொன்னதையும் ஞாபகத்திலை வைச்சுக்கொண்டு தானும் பதினைஞ்சு ரூபா முத்திரையொட்டிச் சமாதான நீதவானைப் பிடிச்சு ஒரு கையொப்பமும் வேண்டித் தன்னுடைய பேரில் ஒரு விண்ணப்பத்தைப் போட்டு வைத்தான். சமாதான நீதவானுடைய பெண்சாதி கூடத் தம்பி 'நீ கவனமாகப் படிச்சுக் கிளறிக்கல் உத்தியோகம் பார்க்க வேணும். கொய்யாவின்ரை தோட்ட முயற்சி சரிப்படாது. இந்தக் காலத்துப் பொடியளுக்கும் தோட்டஞ் செய்யவோ, குனிஞ்சு நிமிர்ந்து மண்வெட்டவோ தைரியம் இராது. ஏதோ நல்லா வா மேனை. நாலு காசு சம்பாதிக்க வேணும்' என்று வாழ்த்தி அனுப்பினது அவனுக்கு ஞாபகம் வந்தது.

எப்படியோ சோதினையும் பாஸ் பண்ணித் தபாற் தந்தித் திணைக்களத்திலை வேலை பார்க்க விட்டு விட்டார்கள். கந்தையா வேலையேற்று இப்ப கிட்டத்தட்ட எட்டு வருஷங்கள் முடிந்து விடடன. இன்னும் கந்தையா அந்த அடிப்படை எண்பது ரூபாச் சம்பளத்திலைதான் இருந்து வருகிறான். ஆனால், வேலை அதுவும் கந்தையா கொழும்பிலை அரசாங்க உத்தியோகம் என்றவுடன் சின்னாச்சியக்கை ஊரிலை ஆரையெல்லாமோ பிடிச்சு ஒருபடி தன் மகள் பாக்கியத்தைக் கந்தையாவுக்குக் கலியாணமும் கட்டி வைச்சுப் போட்டா. மகளின் கலியாணம் முடிஞ்ச அடுத்த மாசமே சின்னாச்சியக்கை சிவலோகம் போய்விட்டா. கந்தையாவுக்கு இந்தச் சிவலோகம் பரலோகத்திலை எல்லம் நம்பிக்கையில்லை. ஆனால் பிறப்பிலை சரியான நம்பிக்கை.

எட்டு வருஷத்திலை ஆறு பெண்களுக்கும் ஒரு ஆண்குழந்தைக்கும் தகப்பன் என்ற பெயரைப் பெருமையோடு தட்டிக் கொண்டான் கந்தையா. இதைப்பற்றி நண்பன் ஒருவன் கேட்டபோது 'நானென்னப்பா உணர்ச்சியற்ற மரக்கட்டையா? அதுவும் இலங்கை பூமத்திய ரேகைக்கு அண்மையில் இருக்கும் உஷ்ண நாடு. அதன் சுவாத்தயத்தில் ஆண்டுக்கொன்றென்ன ஆறுமாசத்திற்கொரு குழந்தை பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்று லாவகமாகப் பேசித் தப்பித்துக் கொண்டான் கந்தையா.

கொழும்பில் ஒரு வீடு எடுத்து ஏழு குழந்தைகளையும் மனைவி பாக்கியத்தையும் கொண்டுவந்து வைத்திருக்கக் கந்தையாவுக்கு எவ்வளவோ ஆசை. வெள்ளவத்தை சவோய் தியேட்டரில் பாக்கியத்துடன் ஒரு ஆங்கிலப்படம் பார்க்க வேண்டுமென்றும் அப்புறம், முன்னாலுள்ள 'சைனிஸ்' ஹோட்டலில் அவளை அழைத்துச் சென்று முள்ளுக் கரண்டி பிடித்து 'நூடிள்ஸ்' சாப்பிட வேண்டுமென்றும் அவன் பல நாட்களாகக் கனவு கண்டிருக்கிறான்.

பிரதி வெள்ளிக்கிழமையும் வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவிலுக்குக் கணவனும் மனைவியுமாகத் தம்பதிகள் செல்வதையும் பெண்கள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை உடுத்தித் தலைக்குப் பூவைத்துத் தேர்போல அசைந்து செல்வதையும் கண்டு தானும் பாக்கியமும் இப்படி இருக்க முடியவில்லையே என்று எத்த்னையோ தடவைகள் மனத்துள் பொருமியிருக்கிறான்.

'அலறிக்ஸ்' ஐஸ்கிறீம் கடையில் ஆடும் கதிரையில் உட்கார்ந்து தானும் மனைவியும் 'புருட் சலாட்' சாப்பிடவில்லையே என்று வேதனைப்பட்டிருக்கிறான். இத்தனை இன்பங்களுக்கும் ஆசைகளுக்கும் அவனது சம்பளம் ஒத்துவரவில்லை.

ஆம். இன்னும் அவன் எண்பது ரூபா அடிப்படைச் சம்பளக்காரன். மாத முடிவில் மொத்தமாக நூற்றித் தொண்ணூறு ரூபா பத்துச்சதம் வரும். அதில் முத்திரை ஒட்டிக் கையொப்பமிடுவதற்குப் பத்துச் சதம் போக மீதி நூற்றித் தொண்ணூறு. மேலும் அஞ்சல் எழுதுவினைஞர் சங்கச் சந்தாப்பணம் இரண்டு ரூபாய் போக மீதி நூற்றி எண்பது. அதிலும் போன தீபாவளிக்கு என்று எடுத்த உற்சவ முன்பணம் பத்துரூபா கழித்து மொத்தமாக நூற்றி எழுபது கையில் கிடைக்கும்.

இதில் காரியாலய கண்டீனுக்குப் பத்துரூபா. 'போட்ரெஸ்ரோறண்ட்'டுக்கு முப்பது ரூபா. வெள்ளவத்தை கிருஷ்ணபவனுக்கு இருபத்தைஞ்சு ரூபா. மல்லிகா வீதியிலுள்ள தனது இருண்ட அறைக்கு (பார்வைக்கு அறைபோல இருக்கும்) முப்பது ரூபா. மொத்தம் தொண்ணூற்றி ஐந்து ரூபா போக எழுபத்தி ஐந்து ரூபா. இது மட்டுமா? காமினி லோண்டரிக்கு எட்டு ரூபா. சிகரெட் ஐந்து ரூபா. புகையிரத சீசன் டிக்கட் ஒரு ரூபா. பஸ் போக்குவரத்தும் இடைத் தேனீர்ச் செலவும் பத்து ரூபா. சினிமா பார்த்தால் மாதத்திற்கு மூன்று ரூபா முப்பது சதம். மீதி 42 ரூபா 70 சதம்.

பாக்கியத்திற்கு ஒரு நல்ல சேலை எடுக்கக்கூட இந்தப் பணம் போதாது. இதற்கிடையில் ஏழு பிள்ளை நல்ல தங்காளின் குடும்பம் போலவுள்ள தன் பெரிய குடும்பத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது?

நல்ல காலம் பாக்கியம் நல்ல தங்காளைப் போலத்தன் பிள்ளைகளைக் கிணற்றுள் தூக்கிப் போடவில்லை. தாய் மீனாட்சியக்கை செய்து வந்த தோசை சுட்டு விற்கும் வியாபாரத்தை அவள் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தாள். கந்தையாவுக்குத் தன் மனைவி தோசைசுட்டு விற்பது பெரிய கவலையைக் கொடுத்தது. ஆனால் என்ன செய்வது? வாழ்க்கை வண்டி ஓட வேண்டுமே?

ஊரில் மற்ற உத்தியோகத்தர்களின் மனைவிமார் மரக்கறி, மீன் வாங்கக்கூடக் கடைத் தெருவுக்குப் போறதில்லை. ஏதோ சமையலுண்டு அடுத்தவனின் வீட்டுக்கதையுண்டு என்று அவர்கள் உல்லாசமாக இருப்பதை எண்ணி எவ்வளவோ சிந்தித்திருக்கிறான். தன்னுடைய மனைவியும் ஏன் அப்படியிருக்க முடியவில்லை என்று சிந்தித்திருக்கிறான்.

ஆனால் அவன் தான் எண்பது ரூபா அடிப்படைச் சம்பளக் காரனாச்சே! சிங்கள மொழிச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசாங்க ஊழியருள் கந்தையாவும் ஒருவன். சிங்களம் படிக்கவில்லை என்பதால் அவனுக்கு ஆண்டுப்படி உயர்வு (இன்கிறிமென்ட்) இல்லை! இரண்டாந்தர உயர்வுப் பரீட்சை எடுக்கும் வாய்ப்பு இல்லை.

கந்தையாவுடன் ஒரே தினத்தில் சுகாதாரத் திணைக்களத்தில் வேலைக்குச் சேர்ந்த உமாகயிலாயநாதன், இறக்குமதித் திணைக்களத்தைச் சேர்ந்த தில்லைவாணன் ஆகியோர் சிங்களம் எஸ்.எஸ்.ஸி பாஸ் பண்ணி இரண்டாந்தர உயர்வுப் பரீட்சையும் எடுத்துச் சித்தியடைந்து இப்போது கொழுத்த சம்பளம் வாங்குவதும் அவனுக்குத் தெரியும். ஆனால் ஏதோவொரு வைராக்கியம் அவனைச் சிங்களம் படிக்காமல் செய்துவிட்டது.

கந்தையாவுக்கு வேற்றுமொழிகள் மீது வெறுப்பில்லை அல்லது தனது தமிழ் மீது அபார வெறியுமில்லை. ஆனால் பெரும்பான்மை இனம் தனது பலத்தைப் பிரயோகித்துச் சிறுபான்மை இனத்திடம் தனது மொழி ஆதிக்கத்தைத் திணிப்பதை அவன் விரும்பவில்லை. தமிழ் ஊழியர்கள் மூன்று வருடத்துள் சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்திராவிட்டால் அவன் ஒருவேளை சிங்களத்தைப் படித்து ஒரு பண்டிதனாகக்கூட வந்திருப்பான்.

வெசாக் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளவத்தை டபிள்யூ ஏ.சில்;வா மாவத்தையில் போடப்பட்டிருந்த உயர்ந்த மேடையில் நடைபெற்ற கிராமிய நாடகத்தில் நடிகர்கள் சம்பாஷிக்கும் சத்தம் கந்தையாவின் காதுகளுக்கு எட்டியது.

தான் உத்தியோகம் பார்த்த இந்த ஏழு வருடத்தில் தனியாக நண்பர்களுடன் வெசக் பார்த்ததையும் அவர்கள் இளம் கன்னியர்களை வேண்டுமென்று கிட்டச் சென்று முட்டிமோதித் திரிந்ததையும் நினைத்து பெருமூச்சு விட்டான்.

அவனது தற்போதைய சூழ்நிலையில் எவ்வித கேளிக்கைகளிலுமே நாட்டஞ் செல்லவில்ல. காலையில் வந்த பாக்கியத்தின் - கடிதம் நெஞ்சை உறுத்தியது. 'மூத்தபிள்ளை செம்பவளம் கிழிஞ்ச பாவாடையுடன் பள்ளிக்கூடம் செல்ல எனக்குக் கவலையாகவிருக்கிறது. பருவம் வந்த அவள் இனியும் கவனிக்காமல் விட முடியாது' என்று என்னவெல்லாமோ எழுதியிருந்தாள்.

'பாவம் பாக்கியம் கொழும்பமிலை குழாய்மாட்டின மாப்பிள்ளை என்று நம்பி வந்தாள். உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டாள் - அனால் அவள் கணவன் கந்தையாவோ இன்னும் எண்பது ரூபா சம்பளக்காரன் - பட்டமில்லை – பதவி உயர்வேயில்லை. ஒரே கதைதான்.

அதிகாலை ஐந்து மணிக்கு ஊதுகின்ற வெள்ளவத்தை நெசவாலைச் சங்கு பூம்.... பூம்..... என்று முழங்கியது. அப்போது விடிந்துவிட்ட தென்பதையும் தான் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பதையும் கந்தையா உணர்ந்தான்.

பக்கத்துக் கட்டிலில் சுப்பிரமணியம் நன்கு குறட்டைவிட்டு அசந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அவனுக்கென்ன? தனிக்கட்டை. கலியாணமும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம் என்று விட்டு இருக்கிறான். சிங்களமும் எஸ்.எஸ். ஸி பாஸ் பண்ணிப் போட்டு இரண்டாந்தர உயர்ச்சிப் பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிறான். வேறு புதிய ஊழியர்களுக்குப் பின்னேர வேளையில் மாதம் பதினைந்து ரூபாய் வாங்கிச் சிங்களம் சொல்லிக் கொடுக்கிறான்.

ம்.... கந்தையா தனது துவாயைத் தட்டித் தோளில் போட்டான். கோபால் பற்பொடியைத் தேய்த்தபின் குளிக்கும் அறையை நோக்கி நடையைக் கட்டினான்.

அவன் குளித்த பிறகு அதே கிடாரத் தண்ணீர் ஒன்பது பேர் குளிக்க இருப்பதும் அவனுக்குத் தெரியும். எனவேதான் நேரத்தோடேயே காலைக் கடன்களை கழிக்கச் சென்று விட்டான். அவனது நடையிலே தளர்ச்சி, உடலிலே சோர்வு. உள்ளத்திலே குமைச்சல். பாவம் கந்தையா இப்பவும் அடிப்படைச் சம்பளம் எண்பது ரூபா.

(சுதந்திரன் - 03.09.1967)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 6:41 pm

மீன்கள்
--------------
தெளிவத்தை ஜோசப்

தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான்.

மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில் விழுந்த அடியால் ஓடிப்போக குப்பி விளக்கின் கொஞ்ச வெளிச்சத்தில் நிலைமையைப் புரிந்து கொண்டவன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று கிள்ளிய கொழுந்தாய் தலை தொங்கிப் போய் உட்கார்ந்திருந்தான்.

வெலவெலத்துப் போய் குனிற்த தலை நிமிராமல் ஒரு வினாடி உட்கார்ந்து இருந்தவனுக்கு கழிந்துவிட்ட அந்த ஒரு வினாடியே ஒரு யுகமாகத்தோன்ற வெறும் தொண்டைக்குள் காற்றை விழுங்கியபடி விருட்டென்று எழுந்தான்.

எழுந்த பிறகு மறுபடியும் குனிற்து தனது போர்வையை எடுப்பதன் மூலம் இக்கட்டான அந்த இடத்தில் இன்னொரு வினாடி இருக்க நேரிடுமே என்ற உழைவில், கம்பளியை எடுத்துக்கொண்டே எழுந்தவன், அதை இழுத்துத் தோளில் எறிந்தவாறு வெளியே நடந்து இஸ்தோப்பின் இருட்டில் அமர்ந்துகொண்டான்.

தூண்தூணாய் நிற்கும் மரங்களிடையே தூரத்தில் தெரியும் மலைச்சரிவுகள் கருப்பு வண்ணத்தால் தீட்டி மாட்டிய ஓவியங்கள் போல் தெரிகிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கும்மென்று கிடந்த கறுப்பையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தவன் இருட்டிய உலகின் அத்தனை அந்தகாரத்தையும் விட தன் மனதின் அந்தகாரம் அதிகமானதாக தனக்கே தெரிவதை உணர்ந்து அதன் கனம் தாளாது தனிமையாக அமர்ந்திருக்கும் அந்த நேரத்திலும் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான்.

ஆனால் மனதின் இருட்கனத்தால் தானாகவே கவிழ்ந்துவிடும் தலையை எந்த அணையைக் கொண்டு நிமிர்த்தி வைப்பது?

'கசமுச'வென்று உள்ளே ஏதோ பேச்சு கேட்கிறது.

ஊயர்ந்த தோளிடை தொங்கும் தலையை ஒரு சிறிதும் உயர்த்தாது மிகவும் சிரமத்துடன் பக்கவாட்டில் திரும்பி ஓரக்கண்ணால் உள்ளே பார்க்கிறான்.

ஒருக்களித்திருக்கும் கதவினூடாக உள்ளே இருக்கும் வெளிச்சம் கோடாக நீளுவதிலிருந்து உள்ளே இன்னும் நிலைமை சீரடைந்து அமைதியாகவில்லை என்பதைப் புரிந்து கொண்டவன் உள்ளேயிருந்து யாராவது ஒருவர் தன்முன்னால் எந்த வினாடியும் வந்து நிற்கலாம் என்ற பயத்தில் அப்போதைக்குத் தப்பிக்கொண்டாலே போதும் என்ற அவசரத்தில் இஸ்தோப்பிலிருந்து இறங்கி இருளில் நடந்தான்.

லயத்துக்கோடியில் கிடந்த நாய் அரவம் கேட்டு குரைக்க வாயெடுத்து அவனை இன்னாரென்று கண்டு கொண்டு குரைப்பை ஏப்பமாகவோ ஊளையாகவோ மாற்றிச் சமாளித்து கொட்டாவியுடன் முன் காலை நீட்டி சோம்பல் முறித்து விட்டு வாலை ஆட்டியபடி மீண்டும் சுருட்டிக்கொண்டது.

எங்கோ உச்சியிலிருந்து ஓடிவந்து இரண்டு பாறைகளுக்ளகிடையில் விழுந்தோடும் நீர்வீழ்ச்சி எழுப்பும் 'சோ' எனும் பேரிரைச்சலை தவிர்த்து முழுத்தோட்டமுமே இருட்டைப் போர்த்திக் கொண்டு குறட்டை விட்டது.

இரவு பதினொரு மணி பயங்கரத் தனிமையில் இந்த நாற்பத்தெட்டு வயதிலும் உருவத்தில் குனிவோ நடையில் தளர்ச்சியோ இல்லாமல் எங்கே போகின்றோம் என்ற கட்டுப்பாடற்ற ஏதேட்சையுடன் நடந்து கொண்டிருந்தவன் முகத்தில் பாய்ந்து கண்ணை மயங்கச் செய்த 'டோர்ச்' லைட்டின் ஒளியால் நின்றான்.

என்ன பெரியப்பா 'இந்த ராவுலே...' உரப்பட்டிக் காவல் செய்பவன்தான் லைட்டும் கையுமாய் நின்றான்.

'தூக்கம் வரல்லேடாப்பா.... ஒரே புளுக்கமாக் கெடந்திச்சு. அதுதான் இப்பிடிக் காத்தாட...'

புளுக்கம் மனதில் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாக 'இப்படி இந்த உரப்பட்டி விறாந்தையில் படுத்துக்கிறேன். காத்தோட்டமாக இருக்கும்' என்கிறான்.

தூக்கம் தாங்காமல் கண் மயங்கும் வேளைகளில் ஒரு வாய் தேநீர் சுடவைத்து ஊற்றிக் கொள்வதற்கும் குளிர் தாங்காமல் பல்லடிபடும் வேளையில் நெருப்புப் போட்டுக் குளிர் காய்வதற்குமாக விறாந்தை மூலையில் காவல்காரர்கள் போட்டு வைத்திருக்கும் கரி பிடித்த மூன்று கற்களில் ஒன்றை இழுத்து விரிக்கும் போர்வையில் ஒரு முனையை அதன்மேல் போட்டு கரியை மறைத்து அந்த உயரத்தில் தலையை வைத்து மல்லாந்து படுத்துக்கொண்டான்.

தேயிலைத் தளிர்களில் மிதந்து வரும் காற்று திறந்த வெளியில் கிடக்கும் உடலைத் தழுவி ஓடுகையில் எத்தனையோ சுகமாகவும் லேசாகவும் தான் இருக்கிறது. என்றாலும் உள்ளம் பாரமாகவும் சூடாகவும் இருக்கையில் எப்படி நித்திரை வரும்.

சினிமாப்பாட்டொன்றை சீட்டியில் ஒலித்தபடி லைற்றை வீசிக்கொண்டபடி உரக்காம்பிராவின் மறு முனைக்கு நடந்தான் காவல்காரன்.

வீட்டில் நிகழ்ந்து விட்ட அசம்பாவிதத்திற்கு முழுமுதற்காரணமும் தான் தானென்றாலும் தன்பக்கம் ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வதற்காக நடந்து விட்டதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பார்க்கிறான்.

கசப்பானதுதான்! ஆனால் கட்டாயம் நினைவுபடுத்திக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

எத்தனை அசிங்கமானது எல்லாம் நடந்து விடுகிறது....!

இரவு பத்துமணிக்குப் பிறகு நாட்டிலிருந்து திரும்பியவன் மெதுவாகக் கதவைத் திறந்து மூடிவிட்டு இருளுடன் இருளாக கதவடியில் ஒரு வினாடி நின்று கண்களை பழக்கப்படுத்திக் கொண்டான்.

கம்பளிக்குள்ளும் சேலைக்குள்ளுமாக சுருட்டிக் கொண்ட உருவங்கள் இருட்டில் லேசாக தெரியத் தொடங்கின.

நாட்டிலிருந்து வந்திருக்கும் மயக்கத்ததுடன் இருட்டில் காலை உயர்த்தி முதலில் கிடந்த உருவத்தை தாண்டியபடி 'அதோ அதுதான் அவ' என்று மனதிற்குள் முனகிக் கொண்டான்.

அவனுடைய கணிப்புத் தவறிவிட்டது. 'அது மகள் இந்தப் புள்ளை எப்பிடி சேச்சே...' என்று எச்சிலை விழுங்கிக் கொண்டவன் அருவருப்பான அந்த எண்ணங்களை வெட்டித் துண்டாக்கிக் கொண்டான்.

அந்த ஆறு காம்பிரா லயத்தின் மூன்றாவது காம்பிராவுக்குள் அவன் பிரவேசம் செய்து ஏறத்தாழ இருபது வருடம் இருக்கும். அப்போது அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளுமாக ஐந்து பேர்களுக்கு அந்த ஒரு காம்பிரா போதுமானதாக இருந்தது.

நான்கு சுவர் உள்ள அந்த சதுரத்துக்குள் அடுப்பைப் போட்டு 'இது குசினி' என்று ஒரு பகுதியை ஒதுக்கிவிட்டு மிஞ்சியிருக்கும் முக்கால் அறைக்குள் மூன்று பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு அவைகள்கண்டும் காணாமலும் சம்சாரம் பண்ணி இன்னும் மூன்றைப் பெற்றுக்கொண்டது வரை எல்லாம் அந்த ஒரே காம்பிராதான்.

அவனும் எத்தனையோ தடவை ஆபீசுக்குப்போய் துரையிடம் காலில் விழாக் குறையாகக் கெஞ்சியும் சண்டைபோட்டும் பார்த்து விட்டான் தனக்கு இன்னொரு காம்பிரா வேண்டுமென்று.

பகல் வேளைகளில் வீடு இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சினையே கிடையாது. எல்லாத்தொல்லைகளும் இரவில்தான். அத்தனையையும் படுக்கவைத்தாக வேண்டுமே! கைகால் முளைத்து விட்ட பிள்ளைகள் என்றாலும், இடநெருக்கடி என்று வெளியே எங்கயாவது போய் சுருட்டிக்கொள்ளும். முளைக்கும் மீசையை நாசுக்காக நீவிவிட்டபடி படுக்கையும் தானுமாக நடந்துவிடுகிறானே மூத்த பையன். 'நண்பனுடன் படுத்துக் கொள்ளுகிறேன்.' ஏன்று அதே போல் இந்தச் சின்னஞ் சிறுசுகள் எங்கே போகும்?

வீடு வளரவில்லை என்பதற்காக பிள்ளைகளும் வளராமல் இருந்துவிடுவார்களா? அதுவும் பெண் பிள்ளைகள்!

'பெண் வளர்ச்சி பேய் வளர்ச்சி என்பார்கள்' பார்த்துக்கொண்டிருக்கும் போதே வளர்ந்து விடுவார்கள்.

இவன் வீட்டிலும் இரண்டு வளர்ந்துபோய் இருக்கின்றதே. அது எங்கே போய் படுத்துக்கொள்ளும்.

மூத்த பையனைத் தவிர மற்றது அத்தனையும் அந்த முக்கால் அறைக்குள் 'ஒண்ணடிமண்ணடியாக' உருள வேண்டியதுதான். இந்த லயப்பிரச்சனை பெரும் தலை வேதனையாக உனருமாறிக்கொண்டு வருகிறது என்று கண்டவுடன் துரை நைசாக நழுவிக்கொண்டார்.

யார் யார் எந்தெந்த லயத்தில் இருக்கிறார்கள்? ஒரு காம்பிராவில் எத்தனை பேர்? பேண் எத்தனை ஆண் எத்தனை? என்பது போன்ற விபரங்களை காட்டும் 'லயத்துச் செக்ரோலை' தூக்கிப் பெரிய கங்காணியிடம் கொடுத்துவிட்டார்.

தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராகத்தான் இருந்தாக வேண்டும் கங்காணி என்பவர். தொழிலாளரின் நலனில்தான் இருக்கிறது அவருடைய நல்வாழ்வு.

துரையிடம் இல்லாத ஒரு பயம், துரையிடம் காட்டாத ஒரு மதிப்பு, துரைக்குக் காட்டாத ஒரு ஒத்துழைப்பு பெரிய கங்காணியாகப்பட்டவருக்கு உண்டு என்பது துரையின் நம்பிக்கை. ஆகவே நெருக்கடி மிக்கதான இந்த வீட்டுப் பிரச்சனையை அவரிடம் நீட்டிவிட்டு ஒதுங்கிக்கொண்ட துரை சாமர்த்தியசாலிதான். தனக்கு லயம் போதாது என்பவர்கள் துரையிடம் போவார்கள். துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். துரை பெரிய கங்காணியிடம் அனுப்புவார். கங்காணி அவர்களை விசாரித்து பெயர்களை எழுதிக்கொண்டு லயம் ஏதாவது காலியானால் இல்லாட்டி புது லயம் கட்டினால் உனக்குச் சொல்கிறேன் 'போ' என்பார்.

'என் வீட்டில் ரெண்டு கொமரோட இன்னும் ஆறுபேர் இருக்கோமுங்க' என்று கூறிக்கொண்டு நின்ற இவனையும் பெரியகங்காணிகிட்டே போ' என்றார் துரை.

'அவங்ககிட்ட ஏன் நான் போவனும், துரை நீங்க இருக்கீங்க தகப்பன் மாதிரி, நீங்க பார்த்து காம்புரா ஒழுங்கு செய்யுங்க' என்று ஆபீசில் சத்தம் போட்டாலும் படி இறங்கியதும் நேராகப் பெரிய கங்காணியிடம் போகவும் தவறவில்லை.

'போ பார்ப்போம்' என்று கூறி வைத்தார் பெரிய கங்காணி. வுரப்பிரசாதம் போல் அவனுக்கு காவல் வேலை கிடைத்தது.

ஆதன் பிறகு உரப்பட்டி, புது மலை, ஆயுதக் காம்பிரா என்று எங்காவது இராப்பொழுதை போக்கி விடுவான். வீட்டுப்பிரச்சனை அவ்வளவாகத் தோன்றவில்லை.

தூன் ஒருங்கிக் கொள்வதால் மட்டும் தீர்ந்துவிடும் தொந்தரவு இல்லையே குடும்பத் தொந்தரவு! அது தொடர்ந்து கொண்டே இருந்தது.

மனைவியின் நச்சரிப்புத் தாளாத போதெல்லாம் துரையிடம் போலான். துரை 'கங்காணியிடம் போ' என்பார். கடபுடா என்று கத்திவிட்டு திரும்பி வருவான்.

அவன் படியேறும் போதே துரை மனதிற்குள் சிரித்துக் கொள்வார். 'சலாங்கையா' என்று ஜன்னலிடம் வரும்போதே 'கங்காணிகிட்டே போ' என்று கூறிவிடுவார். ஒரு தடவை அவன் வேறு எதற்காகவோ வந்து நின்று 'சலாங்க' என்றபோது 'கங்காணிகிட்டே போ' என்று துரை கூற 'நான் லயத்துக்கு வரலிங்க' என்று அவன் தலையைச் சொறிய துரை கிளார்க் அவன் மூவருமே சிரித்து விட்டனர். தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல்.

அவன் ஆபீசுக்கு வந்தால் லயம் கேட்கத்தான் வருவான் என்பதும் லயம் கேட்டால் 'கங்காணிகிட்டே போ' என்றுதான் துரை கூறுவார் என்பதும், அந்தளவுக்கு துரைக்கும் அவனுக்கும் தெளிவான ஒன்றாகிவிட்டது.

அவனுக்கு கிடைத்திருந்த காவல் வேலையும் நின்று விட்டது. மறுபடியும் அவன் நேரடியாகப் பிரச்சினைக்குள் அகப்பட்டுக் கொண்டான், அதன் விளைவு,

அடுத்தநாள் அந்தி நேரத்தில் பெரிய கங்காணி வீட்டுக்குப் போனான்.

'ஏன் தொரை கிட்ட போவலியா?' பெரிய கங்காணி குத்தலாகக் கேட்டார்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க?' அவன் குழைந்தான்.

'இல்லை ஐயா நேரே ஆபீசுக்குப் போய் துரைகிட்டத்தானே கம்பிளேன் பண்ணுவீக அதுதான் கேட்டேன்.' அவனுக்கு விளங்கிவிட்டது ஐயா அவனை அடையாளம் பண்ணித்தான் வைத்திருக்கிறார் என்பது. புதிதாகக் கட்டியப த்துக் காம்புராவில் தனக்கு ஒரு காம்புரா கிடைக்காமல் போனதற்கும் அவ்வப்போதும் காலியாகும் பழைய காம்புராக்களும் தன்னை ஒதுக்கி விட்டதற்கும் இந்த அடையாளம் தான் காரணமோ...!

சாமிக்கு ரெண்டுன்னா பூசாரிக்கு நாலு தேங்காய் ஒடைக்கணும் போலிருக்கே! என்று புழுங்கியபடி ஐயாதான் ஒதவி செய்யணும் என்று காலில் விழாத குறையாகக் கூறிவிட்டு நடந்தான். 'என்னா இந்த நேரத்தில் கங்காணி வீட்டுப் பக்கம்....'

'அதையேன் கேட்கிறே நானும் தான் நாளாய்ப் பொழுதாய் நாய் கணக்கா அலைஞ்சு பார்க்கிறேன் ஒரு காம்புராவிற்கு. மனுசன் அசையுறாப்பிலே காணாமே. பார்ப்போமிங்கிறாரு நாமும் பார்த்துக்கிட்டிருக்க வேண்டியது தான்.'

'லயம் ஏதும் காலியானால் இன்னொருத்தனுக்குப் போயிறுது..... அதைத்தானே சொல்லவாரே...'

'பின்னே என்னாங்கிறேன்...'

'லேய் சும்மா கத்தாதறேலே... வெறுங் கையி மொழம் போடுமா... ஒரு காம்புராவிலே ஏழைட்டை அடைச்சுக்கிட்டு கஸ்டப்படுகிறதை விட கங்காணிக்கு ஒரு போத்தல் சாராயத்தை வாங்கிக் கொடுத்திட்டா என்னா கெட்டுப்புடுது... என்ன கொறைஞ்சுப்புடுது.

ஒரு போத்தல் சாராயத்தை வாங்கித் தொலைத்து விடுவதால் ஒன்றும் குறைந்து விடாது என்பது அவனுக்குத் தெரியும். ஏன் கொடுக்க வேண்டும் என்ற வீம்பில்தான் இத்தனைநாளும் இருந்தான்.

ஆனால் இப்போது...!

'எந்த எளவைக் கொடுத்தாவது ஒரு காம்பிரா கேட்டாகணும். முனம் முனகிக் கொள்கிறது'

'அந்தக் கொய்யாமரத்தடியிலே அப்பவே ஒரு குடிசை போட்டேன்....'

முனதை அவன் அடக்கப்பார்த்தாலும் நடந்து விட்ட கசப்பான நிகழ்ச்சிக்கான காரண காரியங்களை சுற்றியே அது ஓடுகிறது.

லயம் கேட்டு ஏமாந்த ஆரம்ப நாட்களிலேயே தனது வீட்டுக்கு முன்னால் உள்ள தோட்டத்தில் நிற்கும் கொய்யாமரத்தடியில் ஒரு சிறு குடிசை போடத் தொடங்கினான். மூலைக்கொன்றாக நான்கு மரங்களை ஊன்றி நாணல் வசிச்சுகளைப் பிடித்து வரிச்சு மறைய மண்ணைக் குழைத்து ஒரு பக்கம் அறைந்தும் ஆயிற்று. வேலிக்கு வெளியே லயத்தை ஒட்டி நிற்கும் ஈரப்பலாமர நிழலில் நின்றபடி முளைத்தெழும் குடிசையையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய கங்காணி தலையை ஆட்டிக்கொண்டார்.

என்னடாலே அது குடிசை... வீடு கட்றீகளோ இன்னைக்கு நீ கட்டிக்காட்டு நாளைக்கு ஒருத்தன் நாளான்னைக்கு ஒருத்தன்னு அத்னைபேரும் குடுசை போட தொவங்கிறுவானுக. ஓனனக்குத்தான் வீட்டுக்கு முன்னுக்கு தோட்டம் இருக்கு. தோட்டத்திலே போட்டுக்கிறே. தோட்டம் இல்லாதவன் என்னா செய்வான். ராவோடராவா பத்து தேயிலையை புடுங்கிப்புட்டு அதிலை போட்டுக்குவான் வொளங்குதா.... அதனாலே இந்தக் குடிசை விவகாரமே வேண்டாம். ஆபீசு கீபீசுன்னு...தொரையருதி போறதுக்குங் காட்டியும் மருவாதியாய் சொல்கிறேன். இப்பவே போய் உடைச்சு போட்டுரு. இல்லை....'

தன் அழைப்புக்கிணங்க வந்து தனக்கு முன்னால் குன்றிப்போய் நிற்பவனை ஏசிப்பயம் காட்டி அனுப்பியதுடன். அடுத்த நாள் அந்தப் பக்கமாக நடந்து குடிசை உடைந்திருக்கிறதா இல்லையா என்பதையும் செக் பண்ணிக்கொண்டார். கொய்யாமரத்தடியில் குடிசைக்குப் பதில் குட்டிச் சுவர் மட்டுமே நின்றது.

இத்தனை மன உழைச்சல்களிலேயும் எந்த எளவைக் கொடுத்தாவது என்ற எண்ணத்துடன் எப்படியோ தூங்கிப்போனான்.

ஆம்... தூக்கம் என்பது மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்!

தேயிலைக் குச்சியால் பல்லைத் தேய்த்துத் துப்பிவிட்டு ஜில்லென்று ஓடும் ஆற்று நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டு பெரட்டுக்களத்தை அடைந்தான்.

மற்ற நாட்களில் என்றால் கை வாளியில் சுடுதண்ணீர் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இன்று?

விரித்துப்படுத்திருந்த துப்பட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டுப் பெண்கள் துண்டு வாங்க வரும்;போது எங்கே தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் சற்று மறைவாக நின்றுகொண்டிருந்தான்.

'எப்ப காம்பிரா விட்டுப்போறே...?'

'வீடெல்லாம் சரி... இன்னொரு நாலு நாள்லே..' பின் வரிசையில் பேச்சுக் குரலால் திரும்பிப் பார்த்தவனுக்கு விஷயம் பிடிபட்டுக்கொண்டது.

தோட்டத்திற்கே பழைய ஆளான பண்டா லயத்தைக் காலி செய்துவிட்டு நாட்டில் சொந்தமாகக் கட்டியுள்ள வீட்டிற்கு குடிபெயருகிறான்.

இவனுக்கு செய்தி இனித்தது.

'காலியாகும் இந்தக் காம்பிராவை எப்படியாவது அமுக்கிக்கிறணும்.... எந்த இளவைக் கொடுத்தாவது...' என்ற எண்ணத்துடன் அன்றே பெரியவரைக் கண்டு தனக்குள்ள கஷ்டங்களைக் கூறி ஒரு பாட்டம் அழுதுவிட்டு ஐயாவுக்கு சந்தோசம் செய்வது பற்றியும் இலேசாக இழையோட்டிவிட்டு 'சரி பயப்படாதே...' என்ற பெரியவரின் உத்தரவாதத்துடன் வெளியேறியவன், ஒரு வெள்ளையை வாங்கிக் கொண்டு வந்து தயாராய் வைத்துக்கொண்டான். வீடு காலியானதும் சென்று ஐயாவைக் கண்டு கொள்ள.

காலியாகப் போகும் காம்பிராவுக்கு முழுமூச்சாக இவனும் அடிபோடுகிறான் என்பது 'எப்ப காம்பிரா விட்டுப்போறே' என்று பண்டாவைக் கேட்டுக்கொண்டேயிருந்த இன்னொருவனுக்கு சுக்கென்றது. முந்திக்கொண்டான்.

ஒரு வெள்ளையை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு இவன் இருக்க இரண்டை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து ஐயாவைப் பார்த்தும் விட்டான் அவன்.

எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!

இரண்டு வெள்ளையைக் கண்டதும் ஐயா அசந்தே விட்டார். 'காம்பிரா உனக்குத்தான்டா' என்று கையடித்துக் கொடுத்தவர் 'அவனுக்கும் தரேன்னோமே' என்று ஒரு விநாடி குழம்பி உடனே சுதாகரித்துக்கொண்டு 'பண்டா லயம் விட்டுப் போற அண்ணிக்கு கட்டாயம் வா' என்று கூறி அவனை அனுப்பிவைத்தார்.

பண்டா குடிபெயரும் தினம்! சந்தோசத்தை ஒரு பேப்பரில் சுற்றி கமக்கட்டில் இடுக்கிக்கொண்டு ஐயா வீட்டுள் நுழைந்தவன் அங்கு வேறுமொருவன் இருப்பதைக் கண்டு சற்றுத் தயங்கினான்.

யாரு...? அட நீயா...? வுh வா. என்னா கையிலே பார்சல்....?

'ஒண்ணுமில்லைங்க என்று மழுப்பியவனை விடாமல் இழுத்துப் பிடித்தார் கங்காணி.

புண்டா காலியாக்கிறான்லே காம்புரா அதை இவனுக்குத்தான் குடுக்கப் போறேன்... என்று மற்றரிடம் கூறியவர், இவன் பக்கம் திரும்பி 'என்னப்பா என்னமோ வைச்சிருக்காப்போலே இருக்கு. கேட்டா ஒண்ணுமில்லேங்கிறா. கொண்டாயேன் பார்ப்போம்....' ஏன்று அதை இழுத்துப் பிரிக்கிறார்.

வெள்ளைப் போத்தல் வெளியெ வருகிறது!

ஐயாவின் முகம் ஏன் இப்படிக் கோரமாக மாறவேண்டும். குழம்பிப்போய் நிற்பவனைக் கோபமாகப் பார்த்து ஐயா கத்துகிறார்.

'லயம் வாங்குறத்துக்கு லஞ்சம் கொண்டாந்தியோ... இந்தாப்பா நீ சாக்கி....' என்று போத்தலை உயரத் தூக்கி மற்றவனிடம் காட்டிவிட்டு 'இந்தாடா நீயே கொண்டு போ. ஒனக்கு லயம் கெடயாது ஒண்ணும் கெடயாது ஓடிப்போ... படவா... அதோட நாளைக்கு காலையிலே ஆபீசுக்கு வந்துடு. நீயும்தாம்பா... நல்ல வேளை நீ இருந்தே.' பெரிய கங்காணி மூச்சுவிடாது கத்தினார்.

வேலவெலத்துப் போனவன் நடுங்கும் கால்களுடன் வெளியே நடந்தான்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 6:44 pm

நவகண்டம்
----------------
ரஞ்சகுமார்
---------------
நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

'முப்பது ஆண்டுகள்' என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்றுவிடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துடன் தமிழர்களின் விடுதலைப் போரை அக்குவேறு ஆணி வேறாய் அலசுபவர்கள் 'முப்பது ஆண்டுக் கால' சாதனைகளையும் வேதனைகளையும் புட்டுப்புட்டு வைக்கிறார்கள்.

அதைவிட முக்கியமானது; இந்த வீரநாயகன் கொல்லப்படும்போது அவனுக்கு முப்பது வயது நிறைந்திருந்தது. ஆகவே மேலும் முப்பது ஆண்டுகளை இந்தக் கதை கொண்டிருக்கிறது. அதாவது அறுபது ஆண்டுக் கால வரலாற்றினூடாக நாம் பயணம் செய்யப்போகிறோம். இந்த அழகிய சிறு மரகதத் தீவின் வரலாற்றை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து எழுதுபவர்கள், 'அறுபது ஆண்டுக் காலம்' என்பதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து ஆராய்வார்கள்.

அறுபது ஆண்டுகளுக்குச் சற்று முன்னராக எமக்குச் சுதந்திரம் கிடைத்ததாம். அதுவும் வெள்ளைக்காரன் பாரத மாதாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும்போது பக்கத்திலிருக்கும் இந்தச் சுண்டைக்காய் நாட்டுக்கும் வஞ்சகம் செய்யாமல் அதிலே கொஞ்சம் கிள்ளிக் கொடுத்துவிட்டுப் போனானாம்.
எம் வீரநாயகன் பள்ளிக்கூடத்தில் தன் சரித்திர ஆசிரியரைக் கேட்ட ஒரு 'மோட்டுக் கேள்வியை' இப்போது உங்களிடம் சொல்ல வேண்டும். சுதந்திரமடைந்த நாட்டில் பிறந்த ஒருவனுக்குக் கேள்வி கேட்பதிலும் அதற்குரிய மிகச் சரியான பதிலைப் பெற்றுக்கொள்வதிலும் உள்ள பற்றுறுதியைத் தெரிந்துகொள்ளும் உரிமையை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

'சேர்….. அப்ப மற்ற வளமாப் பார்த்தால் இந்தியாவைப் பிடிச்ச படியால்தான் எங்கடை நாட்டையும் வெள்ளைக்காரங்கள் பிடிச்சவங்களோ?''

இப்போது உள்ள விஷயம் தெரிந்த அரசியல் அறிஞர்கள் போல அப்போது எவரும் இருக்கவில்லை. புவிசார் அரசியல் போன்ற புத்திஜீவித்தனமான பெரிய பெரிய விஷயங்கள் ஒருவருக்கும் புரியாத காலம் அது.

காந்தி சுட்டுக் கொலைசெய்யப்பட்டுச் சரியாகப் பத்து ஆண்டுகள் கழிந்திருந்தன.

'ரகுபதி ராகவ ராஜாராம்...' என்னும் உருக்கமான பாடல் ஆகாஷ வாணியில் அடிக்கடி ஒலிபரப்பான காலம்…..
நேருவும் இந்திரா பிரியதர்சினியும் எமது நாட்டுக்கு விஜயம் செய்து சில ஆண்டுகள் கழிந்திருந்த காலம்.

இந்தியா என்றாலே எல்லோருக்கும் பக்தி, மரியாதை, ஒரு 'இது'...

எனினும் நமது வீரநாயகன் சரித்திர ஆசிரியருக்கு அஹிம்சையில் நம்பிக்கை குறைவு என்பதை அந்தக் கேள்வியைக் கேட்டதன் மூலம் ஐயந்திரிபறப் புரிந்துகொண்டான். அந்தப் புரிதல் அவனை 'வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள வேண்டும்' என்ற தர்க்கரீதியான அடுத்த தளத்துக்கு இட்டுச்சென்றது. அப்போது அவனுக்கு வயது பத்து.

அந்தப் புரிதலுக்கு அவனை இட்டுச்சென்றதில் அவனுடன் கூடப்படித்த ஒரு பெண்ணுக்கும் அவளது சிரிப்புக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. நம் வீரநாயகன் சரித்திர ஆசிரியரைக் கேள்வி கேட்ட பொழுதும் அவர் அவனுக்குப் புளியம் மிளாறால் பதிலிறுக்கும் போதும் பதிலுக்கு அவன் அவர் வயிற்றில் தலையால் மோதிவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியே பாய்ந்தபோதும் 'களுக்' என அவள் நளினமாகச் சிரித்தாள்.

பெண்கள் எப்போது எதற்குச் சிரிப்பார்கள், எப்போது எதற்கு அழுவார்கள் என்று யாருக்குத்தான் தெரியும்?

இந்த இடத்தில் நமது வீரநாயகனையும், 'களுக்' என்று நளினமாகச் சிரித்த அந்தப் பெண்ணையும் முறைப்படி அறிமுகம் செய்துகொள்வது நல்லது.

அவன் பெயர் சிவஞான சோதிலிங்கம். பள்ளிக்கூடத்திலிருந்து சரியாக ஐந்து வீடுகளுக்கு அப்பால் அவனது வீடு இருந்தது. கற்கள் துருத்தித் தெரியும் தார் கரைந்து போயிருக்கிற ரோடு முழங்கைத் திரும்பல் வடிவில் அவனது வீட்டைச் சுற்றிக்கொண்டு போகும். ரோட்டில் போகும் எவருக்கும் அழகான சிமெந்துத் தூண்கள் சில, ஓட்டுக்கூரையை ஏந்துவது தெரியும். சிறிய, இரண்டறைக் கல் வீடு. கொஞ்சம் விசாலமான விறாந்தை, வளவைச் சுற்றி எப்போதும் சிதிலமடைந்திருக்கும் கிடுகு வேலி.

அவளது பெயர் நாகராணி. சிவஞான சோதிலிங்கத்தின் வீட்டிலிருந்து சரியாகப் பதினைந்து வீடுகளுக்கு அப்பால் அவளது குளுமையான வீடு இருந்தது. அவள் வீட்டுக்குப் போவதற்கு மரங்கள் வரிசையாக நிழல் தரும் ஒடுங்கிய ஒழுங்கைக்குள் திரும்ப வேண்டும். பாதங்கள் புதையும்வண்ணம் சொரசொரவென்ற மணல் நிறைந்திருக்கிற அந்த ஒழுங்கையில் எப்போது பார்த்தாலும் இரட்டை வரிகளாக மாட்டுவண்டி போன சுவடு தெரியும். அடுத்தடுத்து அமைந்திருந்த மூன்று பனை ஓலைக் குடிசைகள் சேர்ந்ததுதான் அவளது வீடு. பெரிய வளவின் முற்றம் முழுவதும் நிறைந்திருக்கும் மணல், ஒழுங்காக அழகாகப் பனை ஓலைகளால் அடைக்கப்பட்டிருக்கும் வேலி.

எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஒழுங்கைகள் எல்லாம் தார் ரோட்டில் போய் ஏறுகின்றன. ரோடு மர்மமான வளைவு நெளிவுகளுடன் போய் ஒரு நாற்சந்தியில் கலக்கிறது. அந்த நாற்சந்தியில் பஸ் நிலையம், பஸ் நிலையத்தின் சந்தடியில் காதைப் பொத்திக்கொண்டு கூசி நிற்கும் சின்னஞ்சிறு கடைகள், பஸ் நிலையத்திலிருந்து நான்கு புறமும் புறப்பட்டுப் போகும் தார் ரோடுகளின் இரு மருங்கும் நெருக்கியடித்துக்கொண்டு வரிசை வரிசையாக மேலும் கடைகள், தினமும் கூடும் கலகலப்பான சந்தை, பெற்றோல் ஷெட், அதிகாரப் பரவலாக்கலின் அடையாளச் சின்னங்களான பொலிஸ் நிலையம், தபால் கந்தோர், பட்டின சபைக் கட்டடம், கூட்டுறவுச் சங்கக் கடை, இத்யாதி.
இந்தக் கதைக்கு அவசியம் என்பதால் நாகராணிக்கு இரண்டு தம்பிகள் இருந்தார்கள் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும்.

அவர்களும் அந்தப் பள்ளிக் கூடத்தில்தான் படித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல இந்த ஊரில் பிறந்த அனைவரும் படித்த பள்ளிக்கூடம் அது. ஊரவர் எல்லோரது செவிகளிலும் அந்தப் பள்ளிக்கூடத்தின் மணியோசை ஆயுள் முழுக்க நிறைந்திருக்கும். இரும்புத் தண்டவாளத் துண்டு ஒன்றில் சிறிய தடித்த இரும்பு உலக்கையால் 'கண கண கண' என்று வெகுதூரத்துக்குக் கேட்கும்வண்ணம் யாராவது ஓங்கி அடிப்பார்கள்.

எல்லா ஊர்களையும் போலவே இந்த ஊரிலும் நிறையக் கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான ஓசை பெருக்கும் காண்டாமணிகள். கோயில் மணி ஓசைகளுக்கும் பள்ளிக்கூட மணியோசைகளுக்கும் இடையே வாழ்க்கை அழகாகவும் அமைதியாகவும் ஓடிச் சென்றுகொண்டிருந்த காலம் அது.

ஒழுங்கைகளில் தோன்றி தார் ரோடு வழியாக ஓடிச் செல்லும் வாழ்க்கை. நாற்சந்தியில் நின்று ஒரு பெருமூச்சு எறிந்துவிட்டு, ஊரைப் பிரிந்து, பஸ் ஏறிக் கொழும்புக்குப் போய்க்கொண்டிருந்த காலம் அது.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு இந்த மணியோசைகளுடன் சோதியின் சைக்கிள் மணியின் ஓசையும் சேர்ந்துகொண்டது. பள்ளிக்கூடத்தையும் பெண்களையும் தாண்டிச் செல்லும்போது 'கிணிங் கிணிங்' எனத் தவறாமல் மணி அடிப்பது சோதியின் வழக்கம்.

ஆனால் 'சோதியின் சைக்கிள்' என்பது அடையாளமும் மரியாதையும் கருதிச் சொல்லப்படும் வார்த்தை. அந்தச் சைக்கிளின் உண்மையான சொந்தக்காரன் யார் என்பது சோதிக்குக்கூடத் தெரியாது. 'அடோ' என்று மட்டும் தமிழில் பேசத் தெரிந்த போலிஸ்காரர்களுக்கும் தெரியாது. யாராவது சோதிக்கு எதிராகப் போலிஸில் முறைப்பாடு செய்யத் துணிவார்களா?

சந்தியில் நிற்பாட்டியிருக்கும் எந்தவொரு சைக்கிளையும் கேட்டுக் கேள்வியற்று ஓட்டிச் சென்றுவிடுகிற 'ஏகப் பிரதிநிதித்துவ' உரிமையை சோதி பெற்றுக்கொண்டு நிறைய நாட்கள் ஆயிற்று.

அவனது டெரிலீன் சேர்ட்டின் பொக்கெற்றில் எப்போதும் வெளியே தெரியும்படி பண நோட்டுக்கள் இருக்கும். சந்தைக்குத் தமது விளை பொருட்களை விற்க வந்தவர்கள், ரியூட்டரிகளுக்குப் படிக்கவென வந்து சந்தியில் நின்று அரட்டையடித்த மாணவர்கள், வெளியூரிலிருந்து வந்தவர்கள். யாரோ தனியாக அவனிடம் மாட்டிக்கொண்டார்கள் என்பது அதன் பொருள்.

சோதியைப் போல இன்னும் இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். அடிக்கடி அவர்களுக்கிடையே சந்தியில் சண்டை நடக்கும். பெரும்பாலும் சோதி வென்றுவிடுவான். ஆனாலும் அவன் தோற்றுப்போன சில சந்தர்ப்பங்களும் உண்டு. அவற்றில் இரண்டு இந்தக் கதைக்கு மிகவும் முக்கியமானவை.

பள்ளிக்கூட வெளிவாசலை ஒட்டினாற்போலச் சற்றுத் தள்ளிப் பொதுத் தண்ணீர்க் குழாய் இருக்கிறது. சோதிக்குக் குளித்து முழுகுவதில் மிகவும் விருப்பம். சண்டை போடாத சமயத்தையும் சாராய வெறி தலைக்கேறாத சந்தர்ப்பங்களையும் தவிர மிகுதி நேரங்களில் எல்லாம் மிகுந்த சுத்தமாகவும் அமைதியாகவும் காணப்படுவான். அவன் எவருடனும் பேசுவது கிடையாது. அவனுக்கு உற்ற நண்பர்கள் என எவரும் இல்லை.

பல நாட்களில் பள்ளிக்கூடம் தொடங்கும் சமயத்தில் அந்தக் குழாயில் இரண்டு வாளிகளை மாறி மாறி வைத்துத் தண்ணீர் நிரப்பித் தலையில் ஊற்றி ஊற்றி நெடுநேரம் முழுகிக்கொண்டிருப்பான். இடையில் சிறு வெள்ளைத் துண்டு. கட்டுமஸ்தான உறுதியான உடல் முழுவதும் மெல்ல வழிகின்ற முத்து முத்தான தண்ணீர்த் திவலைகள், செழுமையான சோப்பு நுரை, நெடுநேரம் பச்சைத் தண்ணீரில் நீராடுவதனால் சிவந்துபோகும் கண்கள், 'கர்ரர்' எனக் காறி உமிழும் ஓசை என சோதி கோலாகலமாக நீராடுவான். அழுக்குப் போகவென உடலை அழுத்தித் தேய்ப்பான். ஒரு காலைத் தூக்கி குழாயின் மீது வசதியாக வைத்துக்கொண்டு ஆபாசம் வெளித் தெரியத் தெரியத் தேய்ப்பான். ஆனாலும் பெண் பிள்ளைகள் வரும் சமயம் பார்த்து அவனது கால்களில் அழுக்கு அதிகரித்துவிடுவதுதான் விசித்திரம்!

ஒரு நாள் அவன் தன்னை மறந்து நீராடியபோது 'சடார்..' என்று பெல்ட்டினால் ஒரு அடி விழுந்தது. அவன் சுதாரிப்பதற்குள் தொடர்ந்து அடிகள். சோதி வாளிகளைத் தூக்கிக்கொண்டு ஓடியவாறே திரும்பிப் பார்த்தான். கோபத்தால் உடல் முழுவதும் சிவந்து பதற, பாம்பெனக் கையில் பெல்ட் நெளிய, ருத்ர மூர்த்தியாய் இங்க்லீஷ் சேர் நின்றுகொண்டிருந்தார்.

ஆனாலும் மோதலில் ஈடுபட்ட தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் விருந்துபசாரங்களில் ஈடுபடுவதும் வழக்கம் என்ற உலக நியதிப்படி சில நாட்களின் பின்னர், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியில் ஒரு கச்சேரி நடந்தது!

இங்க்லீஷ் சேர் கை தட்டித் தட்டி உற்சாகப்படுத்த, சோதி ஆனந்த நடனம் ஆடினான். ஒரு கையால் சாறனை தொடை தெரிய உயர்த்திப் பிடித்தபடி, கைகளால் தாளலயத்துடன் சொடக்குப் போட்டபடி, பிருஷ்டத்தை நெளித்து நெளித்து ஆடினான். இரண்டு பேருக்கும் கண்மண் தெரியாத வெறி. இறுதியில் இங்க்லீஷ் சேர் தனது சேர்ட்டைக் கழற்றி வானில் வீசிக் கச்சேரியை நிறைவு செய்தார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் ஊர் இளைஞர்களுக்கு ஆதர்ஸ புருஷர்களாய் விளங்கிய காலம் அது. பள்ளிக்கூடத்துக்கு முன்னே பரந்திருந்த சிறு வயல்வெளியில் ஒரே சமயத்தில் நான்கைந்து குழுக்கள் அக்கம் பக்கமாக, காலையிலிருந்து பொழுது மங்கும்வரை கிரிக்கெட் விளையாடும்.

சோதிக்குப் பொதுக் குழாயில் நீராடும் 'அடிப்படை உரிமை' மறுக்கப்பட்ட பின்னர் அவன் வயல்வெளிக்குப் பின்னால் இருந்த தோட்டக் கிணறுகளில் நீராடத் தலைப்பட்டான். நீராடும் நேரத்தையும் மாலை நேரமாக மாற்றியமைத்தான். கிரிக்கெட் விளையாடுபவர்களை அவன் கண்டுகொள்வதே இல்லை. கிறீஸிற்குள் புகுந்து திமிர்த்தனமாக நடந்துபோவான்.

ஒரு நாள் அவன் நீராடித் திரும்புகையில் ஒரு பெரிய மண்ணாங் கட்டி விசையாக வந்து அவன் முதுகில் விழுந்தது.

'ஆரடா அவன். .?'

எதிரி ஒருவனாக இருந்தால் சோதி பின்வாங்குபவனல்ல. ஆனால் எட்டுப் பத்து கிரிக்கெட் துடுப்புகளும் ஸ்டம்ப்புகளாக பாவனை செய்யப்பட்ட டசின் கணக்கான பொல்லுகளும் ஏந்தியபடி ஏராளமான இளைஞர்கள் அவனை நோக்கி உறுதியாக, ஆனால் மெதுவாக முன்னேறிச் சுற்றி வளைத்துத் தாக்குதல் தொடுக்க ஆயத்தமாவதைக் கண்டான். எதிரி ஆட்பலம், ஆயுத பலம் ஆகியவற்றில் அபரிமித மேலாண்மையுடன், அவனுக்குச் சாதகமான கள முனைகளில் முன்னேறும்போதுதான் வெற்றிகரமாக இழப்புகளின்றிப் பின்வாங்க வேண்டும் என்ற அடிப்படை இராணுவ அறிவுகூட அற்றவனல்ல சோதி...!

எனவே வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி ரோடில் ஏறினான். மாலை வெயில் மஞ்சளாக விழுந்துகொண்டிருந்தது. அப்போது நாகராணி எதிரே வந்து கொண்டிருந்தாள். மஞ்சள் வெயிலில் மினுங்கியபடி தேவதைபோல மெல்ல ஆடி அசைந்து நடந்து வந்து கொண்டிருந்த நாகராணி, இந்தத் தடவையும் அவனைப் பார்த்து 'களுக்' என நளினமாகச் சிரித்தாள். அது மட்டுமல்லாமல் பரந்த நெஞ்சு விம்மி விரிய மூச்சு வாங்கிக்கொண்டிருந்த அவனை ஆசை பொங்க ஓரக் கண்ணால் பார்த்தாள்.

அதற்குப் பிறகு ஊரில் வதந்திகள் பலவாறாகப் பல்கிப் பெருகின. சோதி நாகராணி வீட்டு ஒழுங்கைக்குள்ளே அடிக்கடி சைக்கிளில் திரிகிறான் என்றும் அவளது வீட்டுக்கு முன்னால் நடுநிசி வேளைகளிலும் சைக்கிள் மணி கிண்கிணி நாதமெனக் கேட்கின்றதென்றும் அவர்களை ஒன்றாக அங்கே கண்டதாகவும் இங்கே கண்டதாகவும் . . .

உண்மையாகவே ஊரார் அவர்களை ஒன்றாகக் கண்டபோது கண்திருஷ்டி பட்டுவிடும்போல இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சோதி வைத்திருந்த சைக்கிள் புத்தம் புதிதாய்ப் பற்பல அலங்காரங்களுடன் மிளிர்ந்தது. சைக்கிள் பாரில் அவளை ஏற்றிவைத்துக்கொண்டு தங்கரதம் போல ஊர்கோலம் போவதென அவன் மெதுவாக சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிந்தான். ஆனால் இப்போது சைக்கிள் மணியை அடிப்பது நாகராணிதான்.

'கிணிங்.. கிணிங்...'

யார் அதிக அழகு, அவனா அல்லது அவளா? என 'கிணிங்.. கிணிங்..' என்று சைக்கிள் மணி அடிக்கடி ஊரைக் கேட்டது.

பள்ளிச் சிறுவர்கள் அவர்களது சைக்கிளின் பின்னே ஓடினார்கள். துணிச்சலானவர்கள் சைக்கிளைத் தொடவும் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் 'கிளுகிளு' வெனச் சிரிக்கவும் செய்தார்கள்.

கடைசியில் ஒரு நாள் சோதி சிறுவன் ஒருவனைக் காலால் எற்றி உதைத்து விழவைத்தான்.

நாய் வாலை யாராவது நிமிர்த்த முடியுமா?

இன்பம் தந்த சைக்கிள் சவாரிகள் எல்லாம் சில நாட்களில் மறைந்துவிட்டன. நாகராணிக்கு சோதியிடம் அடிமேல் அடிவாங்கி அலுக்க சோதிக்கும் அவளை அடித்து அடித்து அலுத்துப் போய்விட்டது. யாருக்காவது தொடர்ந்து ஒரு பெண்ணை அடித்துக்கொண்டே இருக்க முடியுமா? எனவே நாகராணியின் தம்பிகள் சோதியின் தாக்குதலுக்குத் தோதான இலக்குகள் ஆனார்கள்.

ஆனால் அந்தப் பையன்களுக்கு நேருக்கு நேர் மோதும் பாரம்பரியப் போர் முறைகளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நவீன இரசாயன ஆயுதங்களைப் பாவிக்க முடி வெடுத்தார்கள். பள்ளிக்கூட ஆய்வுக் கூடத்தில் செறிவான நைத்திரிக் அமிலம் பல காலமாக உபயோகிக்கப்படாமல் எதற்கு இருக்கிறதாம்?
குறி பிசகாத பின்னிரவு நேரத் தாக்குதல்.
சோதியை வைத்தியசாலைக்குக் கொண்டுபோனது நாகராணிதான். என்ன இருந்தாலும் கட்டிய கணவனல்லவா? சலவைச் சவர்க்காரத்தின் மணமும் சுவையும் உடைய ஆஸ்பத்திரிச் சோற்றை விழுங்கிக் கொண்டு பல மாத காலம் சோதி படுத்தபடுக்கையாகக் கிடந்தான்.

சோதி வெளியே வந்தபோது ஊர் அவனைக் கண்டு மேலும் பயந்தது. குழந்தைகள் கனவிலும் அவனது கோர முகத்தைக் கண்டு வீரிட்டு அலறினார்கள்.

ஆனால் சோதியும் ஊரைக் கண்டு பயந்தான்.

ஊர் மிகவும் மாறியிருந்தது.

அவனுடன் சண்டைபிடித்தவர்கள் சிலர் சமூக விரோதிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டு, சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் இயக்கங்களில் சேர்ந்து கண்காணாத இடங்களுக்குப் போய்விட்டார்கள்.

அப்படிப் போனவர்களில் ஒருவன்தான் சோதியைக் கொன்றான்.

நாகராணி வீட்டுக்குப் போகும் ஒழுங்கைக்கு ரோடிலிருந்து திரும்பும் திருப்பத்தில் அவனது முண்டம் கிடந்தது. சற்றுத் தள்ளி மணலில் தனது கோர முகத்தைப் புதைத்த படி தலையும் கிடந்தது. தொடர்ந்து பல மணிநேரத்துக்குக் கொளு கொளுத்த தடித்த இரத்தம் வடிந்து மணலில் கலந்தது. தொடர்ந்து பல நாட்களுக்கு அந்த இடத்தில் ஈக்கள் கணமணவென மொய்த்துக்கொண்டிருந்தன.

மகாபாரதம் நிகழ்த்திய பெரும் குருஷேத்திரத்திற்குக் களப்பலி கொடுக்கப்பட்ட அரவானைப் போல, ஊரின் முதல் நவகண்டமாக சோதியின் தலை கொய்யப்பட்டபோது அவனுக்கு ஏறத்தாழ முப்பது வயதாகியிருந்தது.

னீ
அதற்குப் பிறகு முப்பது வருடங்களாக நடந்தவை புதிதாக வேறு ஒன்றுமில்லை. ஏறத்தாழ எல்லாமே இதுவரை கூறியவற்றின் விஸ்வரூபங்கள்தாம் என ஒரு வரியில் சொல்லிவிடலாம்.

வரலாற்றில் ஒரு தலைமுறைக் காலத்தைச் சுற்றி முடித்துவிட்டு வந்திருக்கிறோம்.

பல வருடங்களுக்குப் பிறகு கொழும்பிலிருந்து வரும் பஸ்கள் நேரடியாகச் சந்திக்கு வருகின்றன. அதில் வருபவர்களும் பல வருடங்களுக்குப் பின்னரே வருகின்றார்கள்.

சிலர் அதிகாரம் செலுத்தவும் பலர் ஆளப்படவும் அப்படியாக வரும் ஒருவர் கொஞ்சம் துணுக்குற நேரிடலாம்.

அதிகாரப் பரவலாக்கலின் தவிர்க்க முடியாத அடையாளச் சின்னங்கள் எல்லாவற்றுக்கும் காவலாகப் பல காவலரண்கள் இருக்கின்றன. பஸ் நிலையம் கொஞ்சம் கிழடுதட்டிப்போய் இருக்கிறது.

அங்கே சோதியைப் போன்ற பலர் உருவாகிவிட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் வெறியில் நடனமாடவும் கூடும். ஒரே ஒரு வித்தியாசம். இப்போ கைதட்டி உற்சாகப்படுத்துவது ஊரின் ஆசிரியர் ஒருவரல்ல. மாறாக காவலரண்களிலிருந்து சில பைலாப் பாடல்கள் கேட்கக்கூடும்.
சந்தியிலிருந்து பள்ளிக்கூடத்துக்குப் போகும் ரோடில் போடப்பட்டிருந்த தார் முழுவதும் வீணே சிந்தப்பட்ட குருதியைப் போல வழிந்து ஓடிவிட்டது. கற்கள் வெளியே தள்ளித் தெரிகின்றன.

ரோடில் செல்லும் பலருக்கு அந்தக் கற்களில் இரத்தம் பல ஆண்டுகளாகப் படிந்திருப்பதான பிரமை தோன்றக்கூடும்.

நாகராணியின் வீட்டுக்குப் போகும் ஒழுங்கையில் சன நடமாட்டமே இல்லை. வேலிகளும் கூரைகளும் இற்றுப்போய்ப் பாறி விழுந்துவிட்ட வீட்டில் ஒரு வயதான பெண் தனக்குத்தானே பேன் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தனியே அலகையைப் போல வாழ்கிறாள். அவளது தம்பிகள் வெளிநாட்டுக்கு எனப் பயணம் போனார்களாம். பிறகு தொடர்பே இல்லை. என்னவானார்களென யாருக்கும் தெரியாது.

அவளுக்குச் சிலவேளைகளில் சித்தம் கலங்கிவிடும் என்கிறார்கள். அவ்வேளைகளில் தன் காதலனைக் கொன்றவர்களை அவள் மண் அள்ளித் தூற்றுவதாகச் சொல்கிறார்கள்.

வேறு ஏதாவது சொல்ல மறந்துவிட்டேனா?

ஆம், சோதியின் வீடு இருந்த இடத்தில் இப்போ ஒன்றுமே இல்லை. ஒரு சிறிய குப்பை மேடும் சில கற்களும் மட்டுமே இருக்கின்றன. வெடிபொருட்கள் ஏதாவது இருக்கலாம் என்ற அச்சத்தில் எவரும் கிட்ட நெருங்குவதில்லை.

சோதியின் வீடு மட்டுல்ல, பல வீடுகள் அப்படித்தான், சுடலை போல இருக்கின்றன.

அங்கெல்லாம் காற்று மட்டும் மாளாத துயரத்துடன் ஊளையிடுகிறது.

.......................................................................................................................

குறிப்பு: நவகண்டம் - பழங்காலத்தில் முதல் களப்பலி கொடுக்கப்படுப வரின் துண்டிக்கப்பட்ட தலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 6:46 pm

வண்டிற்சவாரி
-----------------
அ.செ.முருகானந்தன்
--------------------

இறைப்பு ஆரம்பமாயிற்று.

ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. 'ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி' என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள்.

இந்த அமளியில் பக்கத்தே பூவசரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது.

ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. 'கச்சேரி' ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க்கொண்டிருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத்தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர்களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.

மண்காவி ஏறிய கொடுக்கு இடுப்பில்: அதே செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய ஒரு 'தலைப்பா': வாயில் ஒரு குறைச் சுருட்டு, தோளில் ஒரு மண்வெட்டி இத்தனை அலங்காரத்தோடும் ஒருத்தன் வந்தான்.

இறைப்பு அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.

'கூ.....ய் எங்கே..... தண்ணியைக் காணவில்லை....'

தூரத்தே புகையிலைக் காட்டிலிருந்து திடீரென்று இப்படி ஒரு குரல் எழும்பிற்று. எல்லோரும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போய் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அள்ளி ஊற்றிய தண்ணீர் ஒரு பக்கத்திலே உடைத்து ஆறாகப் பெருக்கிக் கொண்டிருந்தது. 'ஓடு ஓடு அங்கே உடைத்து விட்டது. ஓடிப்போ' என்று மூன்று குரல்கள் அதைப் பார்த்துக்கத்தின. மண்வெட்டி கொண்டு வந்தவன் ஓடிப்போய் உடைப்புக்கு மண்வெட்டிப் போட்டு அதை அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான். ஸ்தம்பித்துப் போயிருந்த இறைப்பு மறுபடியும் ஓடத் தொடங்கிற்று.

'சின்னத்தம்பி நல்ல சமயத்தில் வந்தாயப்பா!' என்று உபசாரங் கூறினான் இறைத்துக்கொண்டு நின்றவன்.

'அது கிடக்கட்டும் அண்ணே! வல்லிபுரக் கோயிலுக்கு எப்போ வண்டில் பூட்டிறியள்? அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிற யோசனையே....?'

'நல்லாயிருக்கு! வரிசத்திலே ஒருக்கா வருகிற இதைக்கூட விட முடியுமோ? அதுவும் போக....'

'ஓ! சொன்னாப்போல் இந்தமுறை சவாரிச் சங்கதி ஒண்டும் இருக்குதல்லோ...?'

'வேறென்ன? என்னவோ குருட்டுவாக்கிலே அன்றைக்குத் தச்சன் காட்டில் காரியம் பார்த்து விட்டான்கள். வாற சனிக்கிழமை அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டட்டும் பார்ப்போம். சனிக்கிழமை பூச்சியன்கள் கழுகன் சோடிகளை இறக்கி எடுக்காவிட்டால் நான் இந்தச் சவாரி வியாபாரத்தையே அன்றோடு கைகழுவி விடுகிறேன்....'

'சரி சரி, எல்லாம் நடக்கட்டும். ஆனால் சண்டை கலாதி ஒண்டும் இல்லாமல் நடந்து முடியட்டும்....'

இத்துடன் சின்னத்தம்பி அவ்விடத்தை விட்டுக் 'கழண்டு' விட்டான். தூரத்தே புகையிலைக் கன்றுகளுக்குள்ளிருந்து மனித சாரீரம் எட்டக் கூடிய உச்சஸ்தாயியில் 'கூ....ய்' என்றொரு குரல் பிறந்தது. இறைப்பு நின்றது.

11

அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாள். இரவு முழுவதும் ஜெகஜ்ஜோதியான நிலவு. யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தைப் பகற்காலத்தில் வெயில் தகித்து அக்கினிக் குண்டமாக்கி விடும். ஆனால், வளர்பிறை காலத்து இரவோ இதற்கு மாறான நிலைமை. வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமுத கிரணங்களை வாரி இறைத்து அதைக் குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப்போல் பரந்து கிடக்கும் மணல்வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் அந்தத் தெரு வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணஞ் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப்பொருத்தம் என்று சொல்லவேண்டும்.

வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் மண் கிண்டி, தண்ணீர் ஊற்றி, அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும், ஆறுதலுக்கும் உகந்த ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகப் பால் போன்ற வெண்ணிலவு: வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவற்றைக் கடந்து கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் ஒரே வெண்மணல் வெளியும், பால் நிலவும் தென்றற் காற்றும்தான். இவற்றோடு கோவிலிலேயிருந்து நாதசுரம் இன்னிசையை பிழிந்து மிதந்து வரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். பாமரன் உள்ளத்தின் மலர்ச்சிக்கும் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?

வருஷா வருஷம் வல்லிபுரக் கோயிருக்குக் கூட்டம் கூட்டமாக சனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. வல்லிபுரப் பெருமான் மேல் உள்ள பக்தி சிரத்தையினால் அல்ல. அந்த மணற்காட்டுக்கும், அங்கே எறிக்கிற வெண்நிலவுக்கும், ஆடல் பாடலுக்கும்தான். சுருங்கச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமாளுக்குக்கூட கோவிலுக்குள் அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்றலும், இன்னிசையும், வெண்ணிலவும், பால் மணலும் சேர்ந்து வல்லிபுரக் கோவிலை – பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத காண்டாவனத்தை ஓர் அமர உலகமாக மாற்றிவிடும்.

இந்த 'அமர உலகை'த் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகளின் வழிப்பயண வண்டி ஒன்று. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது! மேல்மாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும், கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன், மனைவி, தாய், பிள்ளை, பேரன், பேத்தி எல்லோரும் இருந்து கதைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள். மேல் மாடியிலே இரண்டொரு குழந்தைகள் தூங்குகின்றன. இன்னொரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இத்தனை வைபவங்களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது.

'ஷூட்' மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பறக்கின்றன. அவற்றைப் பின்பற்றி சைக்கிள் வண்டிகளும் ஒருபுறம் கிணுகிணுத்துக்கொண்டு ஓடுகின்றன. கால்நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி, சிரிப்புக் கச்சேரி, கூக்குரல் கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டங் கூட்டமாகப் போகிறார்கள். மிருகத்துக்கும். மனிதனுக்கும், மெஷீனுக்கும் வெண்ணிலவு ஒரே அளவாகப் பொழிகின்றது. வழி நெடுக இப்படியே உல்லாசமான ஊர்வலம். இன்னும் சிறிது மேலே போனால் இந்த இயற்கை அற்புதத்தால் உற்சாகம் மேலிட்டுவிட்ட பேர்வழிகளைப் பார்க்கலாம். வாலிபத் தோற்றங் கொண்ட மொட்டை வண்டிகள் நூற்றுக்கணக்கில் குவிந்து நிற்கின்றன. வண்டிச்சவாரி நடக்கப் போகின்றது.

சரி, இரண்டு வண்டிகள் முன்னே வந்து விட்டன. மாடுகள் பூட்டியாய் விட்டன. குத்தூசி, சவுக்கு, துவரங்கம்பு – எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஓட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறிவிட்டார்கள்.

'சின்னத்தம்பி!' என்கிறான் முன் வண்டிக்காரச் சாரதி.

'சரி, சரி எல்லாம் தெரியும்' என்றான் வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருத்தன்.

வண்டிகள் கிளம்பிவிட்டன. 'கடகட'வென்ற முழக்கத்தோடு ஒன்றையொன்று உராய்ந்துகொண்டு அந்தரநிலையில் பறக்கின்றன. இதோ அதோ? சவுக்குகள் 'நொய் நொய்' என்று கீச்சிடுகின்றன. குத்தூசிக்காரன் வண்டியில் படுத்துக்கொண்டு சாவகாசமாக மாடுகளுக்கு ஊசி ஏற்றினான். துவரங் கம்புகள் 'சடார்' 'சடார்' என்று விழுந்தன.

கழுத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்த வண்டி மாடுகள். இவைதான் பூச்சியன்களோ? முன் வண்டியைத் தாண்டிவிடுகிற சமயம் - இதோ தாண்டிவிட்டன. ஒரு நொடிக்குள்.... இதோ....

'ஐயோ! அம்மா!'

'பூச்சியன் வண்டியிலிருந்து ஒருத்தன் சுருண்டு கீழே விழுந்தான்.

111

மல்லாகம் பொலீஸ் கோர்ட்டில் அன்றைக்கு ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தனை நாளும் அதற்குப் போடப்பட்ட தவணைக்கு ஒரு அளவில்லை. இரண்டு கட்சிக்காரரும் 'வேண்டாம் அப்பா இந்தக் கோர்ட்டு விவகாரம்' என்று சொல்லிக் களைத்துப் போகும் சமயத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்குக் கொடுத்தது, அதாவது வாதி கந்தையா: பூச்சியன் கந்தையா என்றால்தான் தெரியும். சவாரி உலகில் பூச்சியன் கந்தையா ஒரு மங்காத தீபம்! எதிரி, கழுகன் செல்லையாவும் சின்னத்தம்பியும். முறைப்பாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் வழியில் வண்டிச்சவாரி நடக்கும்போது தன்னைச் சவுக்கால் அடித்துப் படுகாயப்படுத்தியதுடன் பிராணாபத்தும் உண்டாக்க எத்தனித்தது என்பது.

சின்னத்தம்பியும் 'கழுகன்' செல்லையாவும் கோர்ட்டுப் புள்ளிகள். அதாவது இப்படி எத்தனை எத்தனையோ வழக்குகளுக்கும், முறைப்பாடுகளுக்கும் வகை சொல்லிக் கைதேர்ந்தவர்கள். அப்புக்காத்துமாரையும், பிரக்கிராசிமாரையும், கோட்டை முனியப்பரையும் கைக்குள் போட்டுக்கொண்டு வானத்தை வில்லாகவும், மணலைக் கயிறாகவும் திரித்துவிடக் கூடியவர்கள். சட்ட உலகத்தின் நுட்பங்களையும் சூதுவாதுகளையும் தெரிந்தவர்கள். கந்தையாவுக்கோ இவையெல்லாம் ஓடாது. ஒரு பாவி. சின்னத்தம்பியும் செல்லையாவும் செய்த அட்டூழியத்தைப் பொறுக்கமுடியாமல் போய் வழக்குத் தொடுத்துவிட்டார். நீதி அநீதியைத் தெய்வம் கேட்கட்டும் என்று சிவனே என்று இருந்துவிட்டார். இந்தக் காலத்தில் நீதி அநீதியைக் கேட்பவர்கள் யார் என்பது செல்லையா கோஷ்டிக்குத் தெரியும். அவர்கள் அதற்கான வேலையை இரவுபகலாகச் செய்து வந்தார்கள்.

விசாரணை தினத்தன்று செல்லையாவும் சின்னத்தம்பியும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் சொல்லியது: தச்சன் காட்டில் நடந்த சவாரியில் கந்தையாவின் பேரான பூச்சியன் சோடிகளை என்னுடைய கழுகன் இறக்கிவிட்டன. அதிலிருந்து அவருக்கு எங்கள் மேல் பெரிய ஆத்திரம். வல்லிபுரக் கோயிலுக்குப் போகும்போது அவரும் அவரோடு வண்டியிலிருந்தவர்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்து என்னை மாடுவிடும்படி கேட்டார்கள். நான் முதலில் மறுத்துவிட்டேன். அவர்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் பின்னர் ஒப்புக்கொண்டு மாடு பூட்டினேன். என்னுடைய வண்டில்தான் முன்னுக்குப் போனது. கந்தையாவின் வண்டில் பின்னுக்கு. சவாரி ஓடும்போது கந்தையா வண்;டியிலிருந்து விழுந்ததைப் பார்த்தேன். வேறொன்றும் எனக்குத் தெரியாது.

கந்தையாவின் வண்டியில் அன்று போன இரண்டொருத்தன்கள் இந்த வாக்குமூலத்துக்கு 'ஓம்' வைத்துச் சாட்சியங் கூறினார்கள். அதாவது தாங்கள் அன்றைக்குக் குடித்திருந்ததாக ஒப்புக் கொண்டார்கள்! உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்கவில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் 'குடியர்கள்' என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே சூட்டத் துணிந்து விட்டார்கள்! விநோதப் பிறவிகள்!

வழக்கு முடிவைச் சொல்லவேண்டியதில்லை. செல்லையா கோஷ்டியினர் சொல்லியது போல, 'கந்தையாவின் வழக்குப் பறந்து போய்விட்டது!'

பட்டணத்து இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் ஒரு சிறிது விலகி பரந்து கிடக்கும் பசும்புல் வெளியிலே ஒரு கோவில். சிறிய கட்டிடம். டச்சுக்காரன் கட்டிவிட்ட அந்தப் பிரமாண்டமான கோட்டைக்கு முன்னாலே இந்தக் கோயிலின் சிறுமையை நன்றாக உணரலாம். இதுதான் கோட்டையடி முனியப்பர் வாசஸ்தலம். யாழ்ப்பாணத்திலே கோட்டுப் புள்ளிகளின் 'கண்கண்ட தெய்வம்.'

திருவிழா ஒன்று நடைபெறுகிறது. வுழக்கில் வென்ற சின்னத்தம்பி செல்லையா கோஷ்டியாரின் 'உபயம்'. திருவிழாவின் கலாதியைச் சொல்லவேண்டாம். செல்லையா கோஷ்டியாருக்குச் சாதகமாக வழக்கைத் தள்ளிவிட்ட அந்த நீதிபதி அவரை அறியாமலே பதினைந்து ஆடு கோழிகளின் தலையெழுத்துக்கும் அன்றைக்குத் தீர்ப்பளித்துவிட்டார்.

வழக்கு வெற்றியைக் கொண்டாடுவதற்கு சின்னத்தம்பி கோஷ்டிக்கு இந்த ஒன்று மட்டும் திருப்தியளிக்கவில்லை. இது சாதாரணமாக நடத்தும் ஒரு சில்லறைக் காரியம்.

கந்தையாவைத் தாங்கள் வழக்கில் தோற்கடித்துவிட்டால் ஊரிலே உள்ள வைரவர் கோவிலில் ஒரு பெரிய திருவிழாச் செய்வதாக வைரவசுவாமிக்கு வேண்டுதல் செய்திருந்தார் செல்லையா. 'பொல்லாத வைரவர்' ஆகையால் அவர்கள் அவரை அலட்சியம் செய்வதற்கில்லை.

ஒரு பெரிய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்தார்கள். பெரிய மேளங்கள், சின்ன மேளங்கள் அத்தனையும், முத்துச்சப்பறம், லைட்மெஷின் அத்தனையும் பங்குபற்ற இரவுபகலாக ஒருநாள் முழுவதும் திருவிழா நடைபெற்றது. வாணவேடிக்கைக்கு நூற்றுக்கணக்கில் ரூபா ஒதுக்கியிருந்தார்கள்.

இவையெல்லாம் நடந்து முடிந்து ஒரு கிழமைக்குப் பின்,

கழுகன் செல்லையா வீட்டில், மனைவி புருஷனைக் கேட்கிறாள்:

'அண்டைக்கு திருவிழாவிலே வேலனை அடித்துப் போட்டீர்களாமே, எதற்காக?'

'எதற்காகவா? சபைப் பழக்கம் தெரியாத மாடுகள்! கோயிலுக்கு உள்ளே வந்து நுழைந்து விடுவான் போல நின்று எட்டி எட்டிப் பார்த்தானே.....'

'அதுபோக, பெட்டிக்குள்ளே கழட்டிவைத்த என் கழுத்துக்கொடி எங்கே? வைத்த இடத்தில் காணவில்லை.'

செல்லையா ஆடு திருடிய கள்ளனைப் போல முழிசினார்.

இந்தச் சமயத்தில் தெருவிலே இரண்டுபேர் கதைத்துக்கொண்டு போனார்கள்:

'பூச்சியன் கந்தையாவின் திமிரை செல்லையா அண்ணை அடக்கிப் போட்டார். அவன் இனிமேல் தலை தூக்கமாட்டான். அண்டைக்கு நடந்த திருவிழாவைப் பாத்தியா? ஒரு திருவிழாவும் இப்படி நடக்கேல்லை. எப்படியானாலும் செல்லையா அண்ணர் ஆள் கெட்டிதான்...'

சகதர்மிணி அம்மாளுக்கு முன்னால் அஞ்சறிவும் ஒடுங்கிப்போய் நின்ற செல்லையா 'அண்ணை'க்கு மனங் குளிர்ந்தது. தான் எங்கேயோ ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று.

'ஈழகேசரி'
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 9:27 am

மெய்பட புரிதல்
--------------------
பி. ரவிவர்மன்
-------------------------
முழுவதுமாய் வெறுமை படிந்து ஒரு மழைக்காலத்தின் வெப்புவானமாய் பீறிட்டு வழியும் துயரினையெல்லாம் அள்ளியெடுத்து தொடுவானின் உள்ளடங்கல்களில் கொட்டித் தொலைத்துக்கொண்டிருந்தது அந்த மாலைப்பொழுது.

இப்போதெல்லாம் எதனிலும் முழுவதுமாய் உள்நுழைந்து வாழ்க்கை பற்றிய படிப்பினை அறிதல், இல்லையேல் அதனை அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வமென்பது துளியளவும் இல்லையென்பதைக்கூட எப்படி உணர்த்துவது.

வெகுகாலத்திற்கு முன்னரே தோன்றி மனப்பெருவெளியெங்கும் உடைந்து கொட்டுண்டு கூட்டிப்பெருக்கிய கூழங்களாய் பெருகிய எதை எதையெல்லாமோ போட்டுப்புதைத்த பெருங்கிடங்காய் உள்நிறைந்து கிடக்கிறது.

ஒருதரமல்ல பலநூறு தடவைகளுக்குமேல் பட்டுத்தேறிய அனுபவக்கிடக்கைள். முழுவதும் முள்தரித்துப்போன நட்புகள். மெல்ல மெல்ல விடுபட்டே தலைகுனியும் துரோக நிகழ்வுகள் அப்பிய முகங்கள் எல்லாம் கனவுகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

காலம் கடத்தலிலும் மூட்டைப்பூச்சிகளைப்போல் வாழ்வினை நசுக்கி மணத்தலிலும், ஆயிரமாயிரம் பொய்களை ஒவ்வொரு வார்த்தையிலும் பூசிமெழுகி வீரம் பேசியதிலும் வாழ்வுகடத்திப் பொய்த்துப்போன நாட்களிடம் என்ன சொல்வது?

வேரிடம் நம்பிக்கையற்றுப்போன பெருவிருட்சங்களின் கோபாவேசங்களாய், எண்ணங்களில் பட்டுத்தெறித்த பார்வைகளின் தோல்விகளும் நம்பிக்கையீனங்களும் சேர்ந்தேயெழுகிறபோது எதைத்தான் உள்ளடங்கல்களில் போட்டு அடைத்துவைப்பது?

துயரங்கள் பீறிட்டு வழிகிற இரவுகளில் மட்டுமல்ல எல்லாப் பொழுதுகளிலும் எதையோ என்னிலிருந்து இழப்பதாய் உணர்கின்றபோது வீட்டிலிருந்து விடைபெற்ற ஒரு மார்கழியின் ஈரம் கசிகின்ற நாளொன்றின் உடைந்து நொறுங்கிப்போன நம்பிக்கைகளை இனி எங்கு பொறுக்கியெடுப்பது?

சைக்கிள் மிதித்து மிதித்து அவர்களைத் தேடி அலைவதே பெரும்பாடாய் இருந்தது ஒரு காலம். என்னிலிருந்த எல்லா முகங்களும் எப்படியோ போயிற்று.

வெட்கித் தலைகுனியட்டும், வேரோட அழியட்டும், வேண்டாம் இனியும் அந்த நட்புகள். மனம் கூனிக்குறுகி விரிகிறதுளூ ஊரில் தொடங்கி அண்டார்டிக்கா வரை இடம் தேடி, தனிமை வேண்டி அலைகிறது.

ஊர்பற்றிய நினைவுகளும் அவர்கள் பற்றிய பிரமைகளும் தோன்றியெழும்போதெல்லாம் வெப்புசாரம் கொள்கிறது. சிலவேளைகளில் வேண்டாவெறுப்பாய் அருவருப்புக் கொட்டுகிறது.

பள்ளிக்கூடத்தில் பாடங்கள் ஓடமறுத்த நாட்கள் புத்தக அட்டைக்குள்ளும் கொப்பி ஒற்றைக்குள்ளும் ஒளித்து வைத்திருந்த பிரசுரங்களை உட்சுற்று வட்டங்களுக்குள் ஓடவிடுவதிலேயே அனேகமான பாடநேரங்கள் கழிந்து போயின.

யாரை, யார், விட்டு விட்டு முந்தியோடுவது என்பதிலேயே முழுநேரச் சிந்தனைகளும் நரம்புமண்டலம் முழுவதிலும் சுற்றிச்சுற்றித் திரிந்தன.

ஷஷடேய் என்னையும் இந்த ஷபச்|சில எப்பிடியாவது அனுப்பிப்போடு.|| பதினைந்து வருடங்களிற்கு முந்திய ஏதோ ஓர் நாளில் கெஞ்சிக்கெஞ்சி கேட்பது இன்னமும் மனத்திரைகளில் விரிந்தோடிக் கண்முன்னே பளிச்சிடுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே கிளர்ந்த பொறிக்கிடங்கு ஒன்றாய்த் தீப்பற்றிக் கொண்டது. கண்களில் புதிய உலகு ஒன்று பிரகாசமாய் எழுந்தது. நரம்புகள் புடைத்துக்கொண்டு குறுகுறுத்தன.

ரத்தம் வேகமாய் ஓடியது. வெடித்துப் பிளந்துவிடுமாப்போல் இருந்தது. சிலவேளைகளில் யாரையாவது தேடிப்பிடித்து மண்டையில போடவேணும்போல் இருக்கும். ரத்தம் கருஞ்சிவப்பென்பதைத் தொட்டுப்பார்த்தே தெரிந்துகொள்ள வைத்த ஒரு வாழ்க்கை.

விடுதலையின் பேரால் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் எத்தனை அற்புதமானவை. மின்கம்பங்களுக்கே அழுகையும் துயரையும் வெறுப்பையும் உண்டுபண்ணி, பங்கர்களில், இருட்டறையில் மனிதர்களையும் விஷ ஜந்துக்களையும் ஒன்றாகப்போட்டு அடைகாக்கவைத்த வாழ்க்கை எத்தனை அற்புதமானவை

முழுவதுமாய் இருண்டுபோன ஒரு மாலை நேரத்துக்குப் பிந்திய ராத்திரி. ஒருத்தரின் முகம் ஒருத்தருக்கு இதுவெனத் தெரியாத கரிய இருள்.

வங்காள விரிகுடா அலைகளை அள்ளியெறிந்து கரைமுழுவதும் நனைத்துக் கொண்டிருந்தது. உயர எழுந்து உடைகிற அலைகளின் பேரிரைச்சல் வங்காள விரிகுடா எப்போதுமே அயர்ந்து தூங்கியதாய் யாருமே கண்டதில்லை.

கொடூரம் கொண்டு ஆவேசமாய் எழுகிற அலைப்படுக்கைள் தொடுவானின் தொலைதூரம்வரை எழுந்தும் மடிந்தும் கண்ணுக்குள் மறைந்துபோகிற கரும் இருள்.

கருஞ்சுழியும் பேரலையும் அறியமுடியா ஆழமும் கொண்டே வயிறு பிளந்து வான் பார்த்தே மல்லாந்து கிடந்து மல்லுக்கட்டும் அதன் பெரும் துயரை யாரறிவார்? அழகென்பர் அற்புதமென்பர் அதையும் மீறி அதன் அலைகள் எழுப்பும் பெருங்குரல் யாரையாவது தொட்டதுண்டா?

கடற்கரையையொட்டிய அந்தத் தென்னந்தோப்புகளுக்குள்தான் ஷஷவகுப்புகள்|| நடக்கும். மந்திரத்தால் கட்டுண்டுபோக வைத்த அந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன. இப்போதெல்லாம் அவர்கள் எங்கே போனார்கள்?

ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி உள்வாங்கிப் பிடிப்புற்று அதீத நம்பிக்கைகொண்டு துரோணாச்சாரியார்களின் முன்னால் மண்டியிட்டு எழுகின்ற ஏகலைவன்களாக கட்டை விரலை மட்டுமல்ல உடலையும் உதிரத்தையும் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருந்த நாட்கள்.

அந்தக் கடலின் பேரலைகளில் அடிபட்டு, சுவடே தெரியாமல்போன காலடிச்சுவடுகளில் எதுவுமற்று பெருங்குரலெடுத்து அழுகிறது வாழ்க்கை.

பேரலைகளின் பிடிமாணம் தளர்ந்துபோய், குளக்கட்டுகளில் பாசிபடிந்து, ஓடைகளில் நீர்வற்றி, ஆற்றங்கரைகளில் செத்து அழுகிய மீன்களும் கவிழ்ந்த தோணிகளும் கரையொதுங்கும். வாசற்படிகளில் தூசுபடிந்து, பூட்டிய வீடுகளின் முன்முகப்புகளில் ஒட்டறைபடிந்து சிலந்திக்கூடுகள் தொங்க, வெளிறிய முற்றத்து மணல்மேல் சருகுகள் நெரிபட, தீண்ட உயிர்தேடி கருநாகங்கள் நுழையும்வரை.... எல்லோரும் எங்கே போனோம்?

விடுபட்டோம்; விதைகளில் விஷம் பூசி ஒருத்தரில் ஒருத்தர் தொட்டுப்பார்த்தோம். உடன்பிறப்புகளின் ரத்தம் சுவையென்றோம்ளூ எரியும் டயர்கள் அழகென்றோம். எப்பிடிப்போயிற்று எங்கள் வாழ்க்கை? வாசலில் மழைக்குக் கொட்டிய பூவும் பிஞ்சுமாய் உதிர்ந்துபோயிற்று வாழ்க்கை.

என்ன நடந்தது? எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. உயிரின் நுனிவரையும் வேதனை வழிகிறது. இயலாமையின் நெகிழ்வுகளும், சுமைகளின் அழுத்தங்களும் எதிரும்புதிருமான மாற்றீடுகளின் பொய்மைகளும் எல்லா முன்நிகழ்வுகளும் தவறின் கசிவுகளாய் மேய்ப்பர்களால் வெட்டித்தறிக்கப்ட்ட மந்தைகளின் உயிர் ஒடுங்குதல்களாய் உள்நுழைகிறது.

தொண்டைக்குழியில் நீர்வற்றி எழுகிற வறண்ட வார்த்தைகளிலும் இன்னும் நம்பிக்கை கொள் என இனியாகிலும் யாரும் சொல்லாதீர்கள்.

இப்படித்தான் அனேகமான நாட்களில் உள்மனசு இன்னும் இன்னும் அடைந்துகொண்டே போகிறது. முகம் இறுகிக் கடுப்பாகிறது. எதிர்ப்படும் எல்லாமே பழைய ஞாபகங்களின் கொடுக்குகளாய் எதிர்கொள்கிறது.

சிரித்துக் கலகலப்பதென்பது சுகமான விடயமெனிலும் எல்லா நாட்களிலும் முடிவதில்லை ஆதிக்கம்கொள்ளும் நினைவுகளின் கணங்கள் எதிர்மாறானவையாகவே சுழல்கின்றன.

எத்தனையெத்தனை ஆயிரம் முகங்கள் எல்லாம் எங்கே போயின? நம்பிக்கைகொண்டு வாழ்வின் முகங்களில் மரணத்தை எதிர்கொண்டு நம்பிக்கைகளின் மேல் தீரா அவா கொண்டு இழந்துபோன முகங்களை எப்படி எம்மிலிருந்து பிரிப்பது? நரம்பு மண்டலங்களின் உள்சுற்றில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குருதித்துணிக்கைளிலும் அந்த முகங்கள் அடைகாத்துக்கொண்டிருக்கின்றன.

அணைகளையும் உடைத்துக்கொண்டு ஓடுகின்ற பெருவெள்ளத்தின் ஆவேசமாய் எதிர்ப்பட்டதையெல்லாம் இழுத்துக்கொண்டோடிய கலங்கிய நீராய் அந்தக்கால வெள்ளம் வேகமாய் ஓடிற்று. உயிர்தப்பி கரைகளில் கிடந்து துடிக்கும் மீன்குஞ்சுகளின் ஞாபகங்களாய் எதைச் சொல்வது?

இயல்பாகவே வரம்புகளை மீறி உடைத்துக்கொண்டு கொட்டுகின்ற ஒரு கோடைகாலத்தின் கடும் மழையாய் உள்இறங்கிய நினைவுகளின் வெப்பம் பீறிட்டுக் கிளம்புகிறது.

உடைதலால் அடங்கிப்போகின்ற குரலின் உச்சஸ்தாயி அடங்கிப்போய் உயிரின் ஆன்மா களைப்புறுகிற இறுதிநேரமா இது எனக் கொள்ளமுடிகிறது.

தேகம் முழுவதும் துணுக்குற்று உடல்முழுவதும் வியர்த்துக் கொட்டுகிறது. கமக்கட்டுகளிலும் கழுத்துமடிப்புகளிலும் வெப்புவிசாரமாய் வியர்வை ஊற்றாய் வழிகிறது.

மயிர்க்கணுக்கள் ஈட்டிகளாய்க் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் அனல் பரவுகிறது. இதயம் அடித்துக்கொள்கிறது. கண்கள் தப்பிக்கொள்ளமுடியா குரூரமொன்றின் துயரையும் அச்சத்தையும் தவிப்பையும் உள்வாங்கி அசைவற்றுப்போயின. நாவறண்டு, உதடுகள் காய்ந்து ஒட்டிக்கொள்கின்றன.

இப்படித்தான் இருந்தது அந்தக் கணங்கள் ஒவ்வொன்றும் வேட்டைநாய்களின் கோரப்பிடி, பற்களில் கிழிபட்டெழும் தசையும் வழியும் ரணமுமாய் ஆன்மா தவிக்கிறது.

கண்பொட்டுக்குள் இன்னமும் அப்பிடியே உருகி வழிகிறது. அந்த ஒற்றை அலரிக்குக் கீழே சைக்கிள் சாத்திக்கிடக்கிறது.

மங்கல்பொட்டாய் முகம் தெரிகிற மாலைநேரம் மேசை விளக்கொளியில் படித்துக்கொண்டிருந்த அவனைச் சைகை கொடுத்துக் கூப்பிட்டு வெளியே வந்து ரகசியம் பேசி தொலைந்துபோன நாள் இன்னமும் கண்ணுக்குள் நினைவழியாத் தடங்களின் ஞாபகங்களாய் நீள்கிறது.

பஸ்ஸில் ஒருநாள் பொழுது கழித்து தெரியா ஊர்மனைகளின் ஒதுக்ககுப்புற மறைவிடங்களில் பேர்மாற்றி ஊர்மாற்றி வாழ்வின் முகங்களில் பொய்புனைந்து அவனும் நானும் பிரிந்தோம்.

கட்டையாய் முடிவெட்டி முகம் இறுகி, தசை முறுக்கேறி முழங்காலும் முழங்கையும் அரைபட்ட தோல்கிழிந்து தசைதெரிய, கருவேலங்கட்டைகளின் நிறமாய் சரீரம் மாறிப்போன ஒரு அரைவருடத்தில் சந்தித்துக்கொண்டோம். பழைய நட்பையும் பழைய பெயரையும் உருமாற்றிக்கொள்ள பெரும்பிரயத்தனப்பட்டோம்.

முகம் தெரிய இருளில் வழிகிற பனியில் உடல் நனைய ஓடிஓடிக் களைப்புற்றோம். கிறவல்மணல் தோல்கிழித்து தசையில் ஒட்டிக்கொள்ள முகத்தில் கொட்டுகிற பனிமறந்து வியர்வை நெடி உள்நுழையும்.

பகல் பொழுதுகளில் வகுப்புகள் நடக்கும். மக்ஸிம் கோர்க்கியும் தோல்ஸ்தோயும் படித்தோம். சிலநேரங்களில் நிரம்பிவடிந்தும் சிலநேரங்களில் கணுக்கால் தொடுகிறவரையும் ஓடிக்கொண்டிருக்கிற காட்டாறுகளில் உடல்நனைத்தும், நீரில் பீச்சல்களில் இழுத்துக்கொண்டோடுகிற குறுணிக் கற்களும் வெண்மணல் துளிகளும் உரஞ்சிக்கொண்டு நழுவும்.

மகிழ்ச்சியும் உறுதியும் மனப்பிரவாகமெங்கும் பளிச்சிட்ட நாட்கள் ஓடிமறைந்து பழைய குற்றங்களின் நம்பிக்கையீனங்களின் வெறுப்பூட்டல்களாய் ஒவ்வொரு கண நினைவுகளும் கொத்திப்பறக்கிற காகங்களாய் கண்ணுக்குள் எழுகின்றன.

ஓடிக்களைத்து உருண்டு பிரண்டு எல்லாம் முடிந்து கடலை கொறித்து சக்கரையோடு கடித்துக்கொண்டு தேத்தண்ணி குடித்துக் கொஞ்சம் களைப்புத் தணிந்து மீண்டும் எல்லோரும் ஒதுங்கிக்கொள்ள ஷசற்| வடிவில் வெட்டிய பங்கர் இருபக்கமும் சிதறிக்கிடக்கும் காட்டுக்கொடிகள் இலையுதிர்;த்தி அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிற்கும் கருவேல மரங்கள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையும் ஓடி மறைகிற சிற்றாறு, புழுதி பறக்கிற காற்றில் செம்மண் தூசுகள் சருகோடு சேர்ந்தே பறக்கும்.

பங்கருக்குள் பாய்ந்து இறங்கிய அவன் எதிரிகளை எவ்வாறு எதிர்கொண்டு தாக்குவது என விளக்கினான். எதிர்ப்புறமும் பின்பக்க வாட்டிலும், எதிர்கொள்ளும் எந்தத்திசையெனிலும் எதிரிகளை எவ்வாறு இனங்கண்டு தாக்குவது என்பது பற்றி செய்து காட்டினான்.

பங்கருக்குள் பாய்ந்து உருண்ட அவன் மீண்டும் எழுவதற்கு அவகாசமில்லாத கணங்களில் பங்கருக்ககுள் இருந்து பலத்த சத்தத்துடன் கருந்தீப்பிளம்பாய் பெரும்புகை கிளம்பியது.

பெரும்புகையும் கந்தக நெடியும் செம்மண்புழுதியும் மண்ணும் சேர்ந்தேயெழ செவிப்பறைகள் பிளந்தன. நிலம் அதிர்ந்து குலுங்கியது. ஆயிரமாயிரம் எண்ணங்களில் துளிர்கொண்ட ஒரு வாழ்வு ஒருசில கணங்களில் முடிந்துபோயிற்று.

இருகைகளும் பிய்த்து வீசுண்டு முகமும் கழுத்தும் கிழிபட்டுத் தசைகள் தொங்க தேகம் முழுதும் ரத்தம் கொட்ட செம்மண் புழுதியில் அவன் கிடந்தான்.

சுற்றி நின்ற எல்லோரும் ஓவென்று அலறிப்பிடித்து பாய்ந்து விழுந்து அவனைத் தூக்கிக்கொண்டோம். கந்தக நெடியும் கரும்புகையும் கண்ணுக்குள் புகுந்து இருண்டுகொண்டு வந்தது. எல்லோருடைய உடம்பிலும் சின்னக்கீறல்கள் என்ற எந்த உணர்ச்சியுமற்று அவனிலேயே முழுமனது கொண்டிருந்தோம்.

கரும்புகை மேலே மேலே போய் வானெங்கும் படிந்துபோயிருந்தது. கிழிபட்ட தசைகளிலிருந்து கருஞ்சிவப்பாய் ரத்தம் கொட்டியது. தலைமயிர் முழுதும் கருகிப்போயிருந்தது.

அவனுடைய ஒற்றைக்கண் மட்டும் லேசாய் திறந்திருந்தது. ஏதோ பேசவேண்டும் போலிருந்திருக்கும். வாயைத் திறந்து பிராயத்தனப்பட்ட போதெல்லாம் குபுகுபுவென கருஞ்சிவப்பாய் ரத்தம் கொட்டியது.

சற்று நேரத்திற்குள்ளேயே அந்த ஒற்றைக் கண்ணையும் மூடிக்கொண்டான். காந்தன் என்ற ஆதம்பாவா ஷாஜகான். அந்தக் கணங்களில் கரும்பாறையாய் திரண்டுபோயிருந்த மனசு வெடித்துப்பிளந்து துயர்கொண்டது.

கருவேல மரங்களுக்கும் பற்றைக்கொடிகளுக்கும் சற்றே தள்ளியுள்ள பெருவெளியொன்றில் அவனைப் புதைத்தபோது வானம் இருண்டு கிடந்தது. அந்த இரவுகளில் யாரும் தூங்கியதாய் ஞாபகமில்லை.

திசையற்று சிறுகுருவிகளாய் சிதறுண்டு கலைந்தோம். அவனை நினைக்கும்போதெல்லாம் சோனிகளைத் துரோகிகளென்று சொல்லும் இந்நாளொன்றில் வெட்கித் தலைகுனிய இறுகிய மனப்பெருவெளி வெடித்துச் சிதறிவிடுமாப்போல் கனம் கொள்கிறது.

உள்நிறைந்து கிடக்கும் அவனின் நினைவுகளை ஒவ்வொன்றாய் அசை போட்டுப் பார்க்கும்போது மனசு வெட்கித் தலைகுனிகிறது. துயர்கொண்டு காலம் நழுவுகிறது.

பேரலையெனப் பெருந்துயர்கொண்டு மனப்பெருவெளியெங்கும் வங்காள விரிகுடா கருஞ்சுழி கொண்டேயெழுகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 10:01 am

கிருஸ்ணபிள்ளை
--------------------
அம்ரிதா ஏயெம்
---------------------
டேய், அந்த டம்ளரெல்லாத்தையும் கெதியாய் எடுத்து வாடா? என்ற அரக்கச் சத்தம் கிருஸ்ணபிள்ளையை நோக்கி அந்த தடியன் முதலாளியின் பானை வயிற்றிலிருந்து வந்தது. கெதியாய் எடுத்துக் கொடுக்க வேணும், இல்லாட்டி இந்த தடியன் காதை மின்னிவிடுவான். இல்லாட்டி பணிஸ், பாண் வக்கிற பட்டறை பொட்டிக்கு பின்னால என்ன கூட்டிக்கு போய் நாலு சாத்து சாத்துவான். சாத்துப்பட்டத வெளிய சொல்லவும் கூடாது. சொன்னால் திரும்பி அடிச்சி வெளியே அனுப்பிவிடுவான்.. அனுப்பினா என்ர வயிறுதான் காயும்.

நான் கிருஸ்ணபிள்ளை, இந்த கெம்பஸ் கென்ரீன்ல ஒரு நாளைக்கு பத்து ரூபாவுக்கும் மூணு வேளைச் சாப்பாட்டுக்கும் வேல செய்றன். இந்தக் கெம்பஸ்ல படிக்க அக்காமாரும் அண்ணன்மாரும் கதச்சிச்கிருக்க அந்த வட்டமான மேசயவிட என்ர உயரம் என்னவோ அர அடிதான் கூட. ராவையில ரெண்டு மணிக்கி எழும்பி, ராவு புளிக்க போட்ட மாவ எடுத்து ரொட்டி வீசி, கிளாஸ் கழுவி, சாப்பாட்டு பிளேட் துடைச்சி, அதுக்கு மேலே லன்ச் பேப்பர் போட்டு சாப்பாடு கட்டி அத வெறுங்காலோட அந்தக் கறுத்த தார் வீதியால வெயிலுக்குள்ள தலைக்கு மேல வச்சி சுமந்து மெயின் கென்ரீனுக்கு கொண்டு போயி, பின்ன நான் வேல செய்யிற கென்ர்pனுக்கு சாமான் தடடுபட்டா மதிலுக்கு மேலால பாய்ஞ்சி கடைக்கு போய், மீண்டும் மதிலுக்கு மேலால ஏறி கொண்டு வந்து, எல்லாம் செஞ்சி முடிக்கையில ராவு பத்து மணி வேற. அதுக்கிடையில கெம்பஸ்ல படிக்க அண்ணன்மார ஏச்சு வேற. என்ர சம்பளமோ பத்து ரூபா. ஆனா அந்த தாடிக்கார அண்ணன் ஒரு நாளக்கி பத்து கோல்லீப் வாங்கிறவரு. பத்துக்கும் அம்பத்து அஞ்சி ரூபா வரும். என்ர சம்பளம் ஒண்ணேமுக்கா கோல்லீப். பதினாலு வயசிற்கு கீழே சின்னப் பிள்ளயள் வேல செய்யப்போடாதாம், செஞ்சா பொலிஸ்ல புடிச்சிக் குடுக்கலாமாம் எண்டு அந்த கண்ணாடிக்கார அண்ணன் கத்திக்கிட்டு இருப்பாரு. ஒரு வேள அவன் புடிச்சிச்குடுத்து, எனக்கு வேல போனா என்ர வயிறு காயும் எண்டுபோட்டு ரிப்போட் பண்ணாமலும் விட்டிருக்கலாம்.

நான் கிருஸ்ணபிள்ளை. வயது பத்து, இன்னேரம் நாலாம் வகுப்பு படிக்கணும். ஆனா படிக்கல. கென்ரீன்ல எச்சிக்கல்ல கழுவுறன். நான் படிக்காட்டியும் படிப்புக் கூடின இடத்துக்கும் எனக்கும் என்னவோ ஒரே ராசிதான். பத்து வருசத்துக்கு முன்னால இந்த கெம்பஸின் 13ம் நம்பர் ரூம்லதான் ஒரு வெள்ளி கிழமை நான் பிறந்தேன். நானும் அம்மாவும் ரெத்தத்தில துவைஞ்சி கிடக்கிற நேரத்திலதானெ அப்பாவும் ரெத்தத்;தில துவைஞ்சி கிடந்தாராம். அந்த மாமரக் கட்டையில, நெஞ்ச வளத்தாட்டி கத்தியால குத்திச் சாவச்ச 153 பேரில என்ர அப்பாவும்தானெ ஒராள். இந்தக் கெம்பஸ்ல இருந்துதானாமே அப்பாவையும் மத்த எல்லாரையும் கூட்டிக்கிட்டு போனாங்களாம். அம்மா தந்த அப்பாட போட்டோவ நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கன். அப்பா என்ன வடிவு. நடுவால தல புறிச்சி, எருமகடா மீசையோட என்ன வடிவு. அப்பாவ கத்தியால குத்திச் சாவைக்காம இருந்திருந்தா நான் எச்சிக்கல்ல கழுவுவேனோ என்னமோ? நான் பிறந்த கெம்;பஸ்லயே நான் வேலை செய்றன். ஒரு வித்தியாசம் எல்;;;லாரும் படிச்சி முடிச்சிட்டுத்தான் கெம்பஸ் வருவாங்க. நான் படிக்காமலே வந்து அடிபட்டு ஏச்சுப்பட்டு கல்ல கழுவுறன்.

ஏனெண்டா நான் கிருஸ்ணபிள்ளை எச்சில் பாத்திரம் தொறைக்க பொறந்த எச்சம். என்னோட படிச்சவனுகளுக்கெல்லாம் றுசாந்தன். தினோஜன், அபராஜிதன் எண்டு பேரிருக்க எனக்கு மட்டும் கிருஸ்ணபிள்ளை, கிழட்டு பேர். அம்மாவுக்கு நெனவு தெரிஞ்சிருந்தா நல்ல மொட்டான பேர் வச்சிருப்பாவுக்கும். எனக்கு பேர் வக்கற ரைம்ல அவட உடம்புக்கும் மனசுக்கும் வலி கட்டி மயங்கிக் கிடந்தாவாமே. என்ர பாட்டிதான் இந்த பேர வச்சதாம். அப்;படியே பதியுறவனுகளும் பதிஞ்சிட்டானுகளாம். ஆனா கிருஸ்ணன் என்டா பகவானாம்.... நான் பகவானின் பிள்ளையாம்..... கிருஸ்ணனை எப்படியும் கிருஸ்ணன் எண்டுதானே கூப்பிடுறம் எண்டு அந்த அழகான செத்தையில மாட்டியிருக்க குழந்தை கிருஸ்ணன் படத்தைக் காட்டி பாட்டி கதை சொல்லுவா. அந்த வடிவான குழந்த மாதிரியா நான் இருக்கன். அந்தக் குழந்தைக்கோ நெற்றியில மட்டும்தான் கறுத்தப்பொட்டு . எனக்கோ உடம்பு, முகம் பூரா கரிச் சட்டிப் பொட்டு. ஷகிருஸ்ண| எண்டா உலகத்த ஆக்கி அழிக்க சக்திகொண்ட அரச எஜமானன் எண்டு கருத்தாம் எண்டு பாட்டி சொல்லுவா. அப்ப நான் அரச எஜமானின் பிள்ளையா? அப்பிடியெண்டா என்ர கோட்ட கொத்தளமெல்லாம் எங்கே?. முட்டக்கோது வீசுற மூலையும், கொத்து ரொட்டிக் கல்லுமா?

நான் ரெண்டாம் வகுப்பு வரயும்தான் படிச்சன். முதலாம் வகுப்புல ரெண்டு ஏயும் நாலு பீயும். நான் கெட்டிக்காரன். ஆனா படிக்க இப்ப விருப்பமில்ல. ஒரு நாள் வகுப்பில இருக்கன். டீச்சர் அப்ப படிச்சி தந்திகிட்டு இருக்கா. டப், டப்பெண்டு குண்டு சத்தம். அதுக்குப் பின்னே படபடவெண்டு சத்தம். அப்ப ஒரு ஓடு உடைஞ்சி நொறுங்கி சனோஜாவுக்கு தலையில விழுந்து ரத்தம் ஒடிச்சு. கொஞ்ச நேரத்துக்கு பின்ன றுசாந்தன்ட காலுக்;குள்ள என்னவோ வெடிச்சி கால இருந்து ரெத்தம்; வழியத் தொடங்கிச்சு. றுசான்தன்ட சேட்டு களிசான் புள்ளா ரெத்தம்தான். றுசாந்தனும், சுனோஜாவும் அண்டக்கிக் கத்தின கத்துவ இன்னமும் ஞாபகத்தில இருக்கி. போன ஜனவரி மாசம் முதலாம் தேதி சாமிக்கு பூச்சாத்த வீட்டு முற்றத்திற்கு மல்லிகைப் பூ ஆயப் போன என்ர பள்ளியில மூண்டாம் வகுப்பு படிக்க அந்தப் பிள்ளையும் மண் மூடப் பக்கம் இருந்து வந்த குண்டு பட்டு சாகற ரைம்ல இப்பிடித்தானே கத்திச் செத்திருக்கணும். றுசாந்தனும், சனோஜாவும் கத்தி, அபராஜிதன் மயங்கிக் கிடக்கற ரைம்ல அப்ப சிவப்பு நெருப்புக் கட்டி ஒண்டு சத்தத்த தூக்கிக்கிட்டு என்ர சொத்தைக்கி நேராய்ப் போய் வெடிச்சிது. அண்டு பள்ளிக்கு பயந்த நான்தான், அதுக்கு பிறகு பள்ளிப் பக்கமே போனதில்ல. இப்படி என்னப்போல எத்தன பிள்ளையள் பள்ளிக்கி போகாம இருக்காங்களோ தெரியாது. கோரப் பல்லு முளச்சி பெரிய நகம் வளர்த்து, நாக்கால ரெத்தம் ஒழுக ஒழுக ராவையில சங்கிலிக் கறுப்பன் வருவானாம் எண்டு பாட்டி கத சொல்லுவா. எனக்கு பள்ளி எண்டா சங்கிலிக் கறுப்பன் போல கனக்கா தரம் பயம். அப்பா செத்தோடனேயெ அம்மா ரெண்டாம் கலியாணம் செஞ்சா. சித்தப்பா மப்புல ஒருவனை கத்தியால குத்திட்டு மறியலுக்கு போயிட்டாரு. அம்மா பொறகு கஸ்டப்பட்டு வெளிநாடு போனா... ரெண்டு வருசமாகியும் இன்னமும் ஒரு கடிதம் கூட வாறதேயில்ல. ஒரு வேள கடிதம் வந்தாலும் எங்களுக்கு கிடக்கிதில்ல என்னமோ? இப்பிடி எத்தனை கிருஸ்ணபிள்ளைகளின்ர அம்மாக்களின்ர கடிதங்கள் கிருஸ்ணபிள்ளைகளின்ர பாட்டிமாருக்கும், கிருஸ்ணபிள்ளைகளுக்கும் கிடைக்கிகறதில்லையோ? அம்மா இருந்திருந்தாவெண்டா, இல்லாட்டி அம்மா காசு அனுப்பினாவெண்டா இ;ல்லாட்டி அம்மா அனுப்பின காசு கிடைச்சிருந்தா இந்தக் கென்ரீன்ல கறிகொதிச்சி சட்டியிலிருந்து அடிச்ச வெக்க என்ட முகத்தில பட விட்டிருப்பாவோ என்னமோ?

அண்டைக்கி ஒரு சேர் அவர்ர மகன கென்ரீனுக்கு கூட்டிக்கி வாறாரு. என்ர வயசிதான் அவனுக்கு இருக்கிம் போல. சேர் அவனுக்கிட்ட கேட்ட கேள்ளிவியொண்டுக்கு அவனுக்கு விட தெரியல்ல. எனக்கு தெரிஞ்சிது. நான் அப்ப அவனோட கெட்டிக்காரன்தானெ. அப்ப நான் ஏன் இப்படி இருக்கன்? அவன் வடிவா சிவத்த ரீசேட், மஞ்சள் கோடு பச்சக் கரை போட்ட சோட்ஸ் போட்டு வடிவா இருக்கான். என்ர உடு;ப்போ எப்பவும் ஊத்தையாத்தானே இருக்கிம்;. ரெண்டு உடு;;ப்பத் தவிர வேறு உடுப்பு இல்லையே. என்ர உடுப்பிலயும் சிவப்பு, பச்சை. மஞ்சள் எல்லாம் கோடு கோடா, கரை கரையா இருக்கிம். ஆனா, அது கரட் பீற்றூட்டாலயும், மஞ்சளாலயும், மரக்கறியாலயும் வச்சதாக்கும். நான் ஏன் இப்பிடி? அவன் ஏன் அப்பிடி? நான் மாறிப் பொறந்திருந்தா? அந்த சேர்ற மகன் இந்த வேலையெல்லாம் அடிபட்டு ஏச்சுப்பட்டு செய்வானா? எல்லாம் பாட்டி சொல்லுற கிருஸ்ணன்ட வேலையாக்கும்.

கிருஸ்ணபிள்ளை என்பது நான் மட்டுமா? கிருஸ்ணபிள்ளைகள் பிறக்கிறதே எச்சில் கல்ல கழுவவும், குறப்பால் ஊத்தவும்தானே. ஏன் மணியக்காட சாப்பபாட்டுக் கூட சுமக்கும் தியாகும் கிருஸ்ணபிள்ளை. விக்னேஸ்வராட கிளாஸ் கழுவுற இளங்கோவும் கிருஸ்ணபிள்ளை. பூச்சி அண்ணனுக்கு ராவைக்கு இரவு ரெண்டு மணியிலிரு;ந்து ரொட்டி வீசும் கண்ணனும் கிருஸ்ணபிள்ளை. ரசீத் காக்காவுக்கு அரிசரிக்க அமீரும் கிருஸ்ணபிள்ளை. மயில் அண்ணனிற்கு விறகும் அரிசிம் சுமக்கும் சத்யனும் கிருஸ்ணபிள்ளை. ராசிக் காக்காட பீங்கான் கழுவுற பிரபாகரனும்; கிருஸ்ணபிள்ளை. முரளிர கென்ரீன்ல மாவாட்டுற அருளும் கிருஸ்ணபிள்ளை. பாலகிருஸ்ணனின் சாப்பாட்டு பார்சல்களை லாம்பு பிடிச்சி ராவையில கெம்பசுக்கு கொண்டு போற பாலுவும் கிருஸ்ணபிள்ளை. கிருஸ்ணபிள்ளை என்பது நான் மட்டுமில்ல.

டேய் என்னடா? ஒரு அஞ்சாறு டம்ளர் எடுக்க இவ்வளவு நேரம்? என அந்த தடிச்ச வயிறன் காத முறுக்கி தலையில குட்டுறான். குட்டுச் சத்தம் பெரிசாக் கேட்டது. ஆனா வலிக்கல்ல. ஏனென்டா, நான் கிருஸ்ணபிள்ளை, அடக்குப்படவும் அடிபடவும் பிறந்தவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 8:07 pm

மாறித் ஹிப்சன்
---------------------------
தமயந்தி
---------------------------
மணி காலை ஐந்து.

மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது அந்தச் சிறிய, சதுர வெள்ளை மணிக் கூடு. அது எதிர்பார்த்ததுபோலவே மூன்று சத்தத்தின்பின் மாறித் ஹிப்சன் அதன் பிடரியைத் திருகி சத்தத்தை நிறுத்தினாள்.

சன்னல் திரைச்சீலையை மெதுவாக நீக்கி தெருவை நோட்டமிட்டாள் கிழவி. இருள் கலையாத காலை. ஆனாலும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சத் துண்டுகளை பன்மடங்காக்கி கண்களுக்கெட்டிய தூரம்வரை பட்டப்பகல்போல் மிளிரச் செய்து கொண்டிருந்தது படர்பனி. மார்கழிப்பனி இந்தமுறை நத்தாருக்கு முன்பே தாராளமாய் கொட்டியிருந்தது. தெருக்கள், இலைகளைத் தொலைத்த மரக் கிளைகள், வீட்டுக் கூரைகள், தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனக்கூட்டத்தின் மொட்டந் தலைகள் எல்லாம் பனி படர்ந்திருந்தது.

கிழவியின் வீடு பழையவீடாதலால் சன்னல், கதவுத் துவாரங்களால் மெல்லிய குளிர் உள்ளே வரத்தான் செய்தது. கிழவிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. கம்பீரமாகவே எழுந்து தனது பணியில் இயங்கலானாள். கிழவியின் சுறுசுறுப்பைப் பார்க்கும் எவரும் அவள் அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்டவளென்பதை நம்ப மறுப்பார்கள். போர்க் காலக் குமரியாய் அவள் இருந்தபோது எப்படி சுறுசுறுப்பாய் இயங்கினாளோ, அதே கதியில் இப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாள்.

விவிலியத்தைத் திறந்து அன்றைய வாசகத்தை மவுனமாய் வாசித்தபின் அதனை முத்தமிட்டு மூடி வைத்தாள். பின் தனது கட்டாயமான காலைப் பணியை கிழவி விரை வாகத் தொடங்கினாள். அளவான தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்தாள். கொதித்த தண்ணீரில் சிற்றரிசியை கழுவிப் போட்டாள். பதமாய் வந்தபின் குளிர்ப் பெட்டியிலிருந்த பால்ப்பெட்டியை எடுத்தாள். அளவாய் விட்டாள். சிறிது நேரத்தில் இறக்கி குடுவைக் கிண்ணத்திலிட்டாள். அதனை தூக்குப் பையிலிட்டு, குளிருடைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு, பனிக்காலச் சப்பாத்தையும் கொழுவிக்கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானாள்.

அவர்கள் எந்தெந்த வீடுகளில் இருக்கிறார்களென அறிந்து முன்னமே ஒவ்வொரு வீட்டு
வாயிற்படியருகில் ஒவ்வொரு கிண்ணத்தை வைத்திருந்தாள். அந்தக் கிண்ணங்களிலெல்லாம் சிற்றரிசிக் கஞ்சியை அளவளவாய் இட்டபடி அவளது அன்றைய பணி தொடரலானது.

கற்குடாத்தெருவிலிருந்து தனது பணியைத் தொடங்கியவள், சின்னக்கோயில்த்தெரு, குரவர்வீதி, மேட்டுத்தெரு, பூங்காவீதி, பேத்தர் வீதியென நீண்டு, கடற்கரைவீதி, சந்தைத்தெரு, குறுக்குவீதியென சென்று, ஊலாவ் வீதி, துரொண்ணிங் வீதியென முடித்துவிட்டாள். இறுதித் தெரு கீழ்த்தெரு. வந்தவள் திகைத்தாள். நேற்று கோப்பையிலிட்ட கஞ்சி அப்படியே இருந்தது. பன்னிரு தெருக்களிலும் மொத்தம் நாற்பத்தியேழு கோப்பைகள். கீழ்த்தெருவிலிருக்கும் இந்த கோப்பையில் மட்டும் நேற்றைய கஞ்சி அப்படியே இருக்கிறது. அப்படியானால்....? மறைச்சிக்கு
என்ன நடந்தது....?

மறைச்சி, கறுப்பி, கறுப்பன், பஞ்சு, கற்கண், வெள்ளைப்புலி..... இப்படி அந்த பன்னிரு
தெருக்களிலுமுள்ள அனைத்துப் பூனைகளுக்கும் தன்னிஸ்டம்போல் ஒவ்வொரு பெயராய் இட்டு, அழைத்து வந்தாள் கிழவி.

இன்று இந்த மறைச்சிக்கு என்ன நடந்தது...? சிந்தித்தவளாய் கிழவி மறைச்சியின் தட்டிலிருந்த பழையதைக் கொட்டிவிட்டு, தட்டைத் துடைத்து இன்று கொண்டுவந்த கஞ்சியில் மீண்டும் புதிதாய் இட்டாள். அவளது இதயம் படபடத்தது. நேற்றைய கஞ்சி அப்படியே இருக்கிறதென்றால் மறைச்சிக்கு எழுந்து நடக்க முடியாத சுகயீனமாயிருக்க வேண்டும், அல்லது மறைச்சி வாழ்ந்த வீட்டுக்காரர் எங்காவது நெடுநாள் பயணித்ததால் மறைச்சியையும் கொண்டுபோயிருக்க வேண்டும். அதுவுமில்லையேல்....?! கிழவியால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. பனிக்காலச் சூரியன் தனது தலையை காட்டாமலும், மேலெழுந்து வராமலும் இன்று மெல்லிய வெய்யிலை விசிறி எறிந்து
கொண்டிருந்தான்.

வீடு வந்து குடுவைக் கிண்ணத்தைக் கழுவி வைத்தாள். அடுக்களைக்குள்ளிருந்த
நாற்காலியிலே அப்படியே அமர்ந்தாள். அடுக்களைச் சன்னலூடாக வெளியே விழியெறிந்தாள். பச்சையப்பிள் மரத்தின் இலைகளற்ற கிளைகளில் கவிந்திருந்த பனி உருகி சொட்டுச் சொட்டாய் நிலத்தை நோக்கி விழுந்துகொண்டிருந்தது. கீழே விழும் ஒவ்வொரு துளியும் நிலத்தில் படர்ந்திருந்த பனிப்படையின்மேல் ஓட்டைகளிட்டு தம்மை அதனுள் புதைத்துக்கொண்டிருந்தன. கிழவியின் விழிகளும் அவளையும் அறியாமல் பனித்து உதிர்த்தன. இருக்கையை விட்டெழுந்து அறைக்குள் சென்றவள் விவிலியத்தை எடுத்து இன்றைய வாசகத்தை மீண்டும் வாசித்தாள். கண்களால் நீர் சொரிந்தது.

வீட்டில் இருப்புக்கொள்ள முடியவில்லை அவளால். மறைச்சியின் வீட்டுக்குச் சென்றாள். நேற்றையிலிருந்து தங்கள் பூனையைத் தாங்களும் காணவில்லைத்தான் என்ற மறைச்சி வீட்டுக்காரரின் பதில் பொறுப்பற்ற பதிலாய் கிழவிக்குப் பட்டதுடன், கோபமும் வந்தது. அவர்களிடம் விடைபெற்று நடக்கலானாள்.

சாயங்காலம் மூன்றுமணி. மறைச்சியை எல்லா இடமும் தேடிக் களைத்து மாறித் கீழ்த்தெருவின் சிறுவர் விளையாட்டுத் திடலின் அருகாமையிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தினுள் இருக்கும் இருக்கையில் வந்தமர்ந்தாள். விளையாட்டுத் திடலின் கரையோரமாய் நீளத்துக்கும் வேலிபோல் அமைந்திருந்த பனி உருகிய புதருக்குள்ளிருந்து கிழவி மாறித்தின் கண்களில் தற்செயலாய்ப் பட்ட ஒன்று அவளை கதி கலங்க வைத்தது.

மெல்ல எழுந்து சென்றாள். அண்மித்தாள். அறிந்துகொண்டாள். அதிர்ந்தாள். அழுதாள். இரு கைகளாலும் தனது கன்னங்களிரண்டிலும் பலமுறை அறைந்தாள். அழுதாள். அழுதாள்.

வீதியைக் கடக்கும்போது ஏதோ வாகனம் மறைச்சியைத் தாக்கியிருக்கவேண்டும்.
கடுங்காயங்களோடு ஓடிவந்து புதருக்குள் படுத்த மறைச்சி அப்படியே உயிரையும் விட்டது.

சமாதி. ஹிப்சனின் சமாதி. அதனருகில் மறைச்சிக்கும்.

புத்தம்புது றோசாப்பூ வளையம் மறைச்சியின் குட்டிச் சமாதியின் நெஞ்சில்
சிரித்தழுதபடியிருந்தது.

மாறித் தனதொரு குழந்தையை கணவனுக்கருகில் புதைத்த துக்கத்தோடு......
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 8:11 pm

புறமுதுகுகள்
----------------------
அல் அஸூமத்
--------------------
போர் நிலத்தவர்கள் தங்களின் அனுபவங்களைப் பற்றி என்னிடம் கூறும் போதெல்லாம், ‘அடடா! அப்படியொரு மண்ணில் இல்லாமல் இருக்கிறேனே’ என்றொரு கொடுத்துவைக்காத ஏக்கம் சீண்டிக்கொண்டே இருந்தது.

குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையாளனாகவாவது இருந்திருக்கலாம்;....

இதில் வேறு எனக்கு அடையாள அட்டையும் இல்லை. ஜேவீப்பீக்காரர்கள் பிடுங்கிக்கொள்ளவுமில்லை. ஜேப்படிக்காரர்கள் தடவிக்கொள்ளவுமில்லை. அடையாள அட்டைக்கு எழுதாமலேயே விட்டவன் நான்.

நாட்டின் ஒரு பகுதியினருக்கு - குறிப்பாக எனக்குப் பிரஜாவுரிமையே இல்லாதபோது இந்த அடையாள அட்டையா ஒரு கேடு?

இந்த அட்டை விஷயத்தில் எனக்குத்தான் நஷ்டம் என்பது இவளின் கண்டுபிடிப்பு!

ஏதோ போன மாதம்தான் எனக்கும் பிரஜாவுரிமை வந்திருக்கிறது - கத்தியின்றி இரத்தமின்றி! அடையாள அட்டையைப்பற்றி இனி யோசிக்கலாம் - சாவதற்காகவாவது!

போர்க்களத்துக்குப் போகும் பாக்கியம் திடீரென்று எனக்கும் ஏற்பட்டது. என் மனஏக்கம் மானசீகமாக சத்தியநாதனுக்குள் புகுந்திருக்க வேண்டும். எழுதியிருந்தான்.

நூற்றெழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பேயே இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். அது இன்னும் தொடர்கிறது. 'இடமிலர்'- அதாவது ‘இடம் இல்லாதவர்கள்’ என்பதுதான் ‘தமிழர்’ என்று மருவியதோ என்ன இழவோ தெரியவில்லை.

‘அன்லக்கி டபள் செவ’னுடைய திருஷ்டிபட்டுப் புலம் பெயர்ந்து கிழக்கே போன மலையகத்தான் சத்தியநாதன். அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் கொழும்புப் பக்கமாக ஓடி வந்திருந்தேன்.

நான் மூட்டை முடிச்சில்லாமல் ஓடி வந்தவன். சத்தியநாதன் குடும்ப மூட்டையோடு லொறிபிடித்துப் போனவன்.

செங்கலடியில் நிம்மதியாக இருந்தான். அமைதி மைந்தனின் அமைதிப்படை தமிழர்களின் சில விஷயங்களுக்குச் சமாதி கட்ட இங்கே வரும்வரையில்.

யார் எப்படியானாலும் தன் ஒரே மகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.

எக்கச்சக்கமாகக் கடன்பட்டு பதுளையில் ஒரு மாட்டை - மன்னிக்கவும் மாப்பிள்ளையை வாங்கினான்.

மாட்டை வண்டியில் பூட்டும் வைபவத்திற்கு என்னாற் போக முடியவில்லை. தந்தியைத்தான் அனுப்பி வைத்தேன். ஏனென்றால் அவன் கேட்டிருந்த ஐம்பதினாயிரம் அதுவரை என்னிடம் வந்திருக்கவில்லை.

தோட்டத்தில் இருந்த காலத்தில் இவனுடைய பணப்பெட்டியின் மீதுதான் நான் படுத்துக்கிடந்ததே. இப்போது கொஞ்சம் சரிவு. நிமிர்த்த வேண்டியது என் கடன். பணம் புரண்டபோது கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று மாதமாகி இருந்தது. அவனுக்கு அறிவிக்காமலேயே புறப்பட்டேன்.

சத்தியநாதன் மகிழ்ச்சியால் நெகிழ்ந்துபோனான். தடல்புடலாகத் தன் கண்ணாடிக் கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கூட்டிப்போனான்.

வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. பாதுகாப்புக் கருதி இவனைத் தவிர எல்லாருமே மாப்பிள்ளையின் ஊருக்குப் போயிருந்தார்கள்.

சமையல், அது - இதென்று சத்தியநாதன் இயங்கிக்கொண்டே கதைத்தான். மாலை மூன்று மணிக்குச் சாப்பிட்டோம். கதைத்தபடியே ஓய்வு. கதைத்தபடியே ஐந்து - ஐந்தரைக்கு ஒரு டீ. கதைத்தபடியே சினிமா. கதைத்தபடியே ஒரு கடையில் இட்லி. கதைத்தபடியே வீடு. கதைத்தபடியே படுக்கை.

பன்னிரண்டு வருஷத்திய கதைகள்!

ஏறக்குறையக் குடும்பக் கதைகள் தீர்ந்து வந்தபோது, இரத்தமே இல்லாதவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய கதைகளைக் கொலை கொலையாக, கொள்ளை கொள்ளையாக, கற்பழிப்புக் கற்பழிப்பாகக் கனல் கனலாகக் கோர்த்துக்கொண்டே போனான்.

விடிந்து வந்தபோது கண்கள் செருகின.

எழும்பியபோது எட்டைத் தாண்டியிருந்தது. அவனைப் படுக்கையில் காணோம். விறாந்தைக்கு வந்தேன். எழுவான் கதிர்கள் அப்போதே விறாந்தையை வறுக்கத் தொடங்கியிருந்தன. மூன்று பக்கமும் கிராதி அடித்திருந்தான். ஒரு ஜன்னலடியிற் போய் அதைத் திறந்துவிட்டேன்.

பரந்த தென்னந் தோப்பு. தென்னைகளோடு சில பனைகள், பற்றைகள், பல குடிசைகள், சில கல் வீடுகள். அரைக் கிலோ மீட்டருக்கப்பால், வலது பக்கமாகக் கூடாரமொன்றின் மிலிட்டறிப் பச்சை குனிந்துபோய்த் தெரிந்தது.

“எழும்பிட்டியா?” என்றவன், “இரு, டீ கொண்டாறேன்” என்று உள்ளே திரும்பினான்.

“பிளேன் டீ தாடா,” என்றுவிட்டுத் தோப்பில் ஊடுருவி நித்திரைக் களைப்பைத் தொலைக்க முற்பட்டேன்.

குடிசைப் பக்கமிருந்து ஐந்தாறு பையன்கள் ‘லெஃப்ட் றைட்’களில் தோப்பை நோக்கி வருவது தெரிந்தது. எதிர்ப் பக்கமிருந்தும் ஏழெட்டுப் பையன்கள்.

'ட்றே'யை ஜன்னலோர மேசைமீது வைத்தான் சத்தியநாதன். தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்துத் துப்பினேன்.

“இப்ப பாரு ஓய் வேடிக்கய!” என்றான் நண்பன் கிளுகிளுப்பை மாதிரிச் சிரித்தபடியே. “யுத்தம் பாக்க ஆசயா இருக்குன்னு சொன்னீயே, இப்ப நேர்ல்யே பாத்துக்க! பையன்க வெளயாடுறதா நெனைக்காத! இன்றைய யதார்த்தம் நாளைய ஒரிஜினல்!”

தேநீரை உறிஞ்சத் தொடங்கினேன்.

இருபக்கத்துப் பையன்மார் ஒன்றாகினார்கள். பிறகு இரண்டு நிரைகளில் நின்றார்கள். உயரமான ஒருவன் கமாண்டராகத் தனியாக நின்று ‘வெட் வெட்’ டென்று ‘கத்தளை’ இட்டுக்கொண்டிருந்தான்.

ஒவ்வொருவரின் தோளிலும் ஒவ்வொரு தடி. தும்புத்தடியாகவும் இருக்கலாம்! இடுப்பைச் சுற்றிப் பனங்காய், குரும்பட்டிக் குண்டுகள். மார்புக்குக் குறுக்கே நிற நிறமான - டோர்ச் லைட் :பெட்றிகளின் கோர்வை. பல நிறங்களில் விறைத்த தொப்பிகள், விறைத்த உடைகள், விறைத்த உடல்கள், விறைத்த பார்வைகள்.

“இந்தூர்ப் புள்ளைகளுக்குப் பொழுது விடிஞ்சாப்போதும்டாப்பா! வீட்டுகள்ல ஒரு பெட்றித் துண்டு வைக்க விடமாட்டானுக! பிச்ச எடுக்கிற மாதிரி வீடு வீடாக் கேட்டு வருவானுகன்னா பாரேன்!.. இப்பப் பாரு, இன்னுங் கொஞ்ச நேரத்தில மெஷின் கன் சத்தமும் குண்டுச் சத்தமும் இந்தத் தோப்பே கிடு கலங்கப் போகுது!” என்று சிரித்தான் சத்தியநாதன்.

கால்களைத் தூக்கி அடித்தும் திரும்பியும் ஓடியும் நடந்தும் சரிந்தும் உருண்டும் புரண்டும் - தோப்பில் ஒரே வியர்வைக் கூத்து.

தேநீர்க் கோப்பையை ட்றேயில் வைத்துவிட்டுச் சத்தியநாதன் நீட்டிய சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.

சத்தம் அதிகரித்தபோது மேலும் பத்திருபது தறுதலைகள் குடிசைகளிலிருந்து ஓடி வந்தன.

தேகப்பயிற்சி பிரமாதமாகத்தான் இருந்தது. மிலிட்டறிக் கேம்பில் நடப்பவற்றைப் பையன்கள் எவ்வளவுக்கு ஊன்றிக் கவனித்திருக்கிறார்கள் என்பதை அது நிரூபித்தது.


“ஐப்பீக்கேயெஃப் பத்தியும் புலிகளைப் பத்தியும் நமக்குத் தெரியாததெல்லாம் இந்த வாண்டுகளுக்குத் தெரிஞ்சிருக்குடாப்பா!” என்று சிரித்தான் அவன்.

வயிற்றைக் கலக்கியதால் நான் பாத் றூம் போய் உட்கார்ந்தேன்.

கமாண்டர்ப் பயலின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

‘மக்களைக் கொல்ல இவ்வளவு பயிற்சிகளா?’ என்றொரு வினாவும் எனக்குள்!..

நான் மறுபடியும் ஜன்னலடிக்கு வரும்போது, “இனித்தான்டா 'அட்டாக்'கே தொடங்கப்போகுது வா!” என்று அதே கிளுகிளுப்புச் சிரிப்பை உதிர்த்தான் சத்தியநாதன்.

கமாண்டர் கத்திக்கொண்டிருந்தான். பையன்கள் இருவரிருவராகவோ மூன்று - நான்கு பேர்களாகவோ பிரிந்துபோய் நின்றுகொண்டும் கிடந்து கொண்டும் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டுமிருந்தார்கள்.


இடது புறமாகத் தெரிந்த குடிசைகளின் பக்கமிருந்து, இலை - குழைகளால் செய்யப்பட்ட ஒரு வாகனம் வரத்தொடங்கியது!

“வாகனத்தில் வாறது பொடியங்க!” என்றான் சத்தியநாதன் தானும் அவர்களுள் ஒருவனான குதூகலத்தில்.

வாகனத்தில் மூன்றே மூன்று புலிகள். வாகனம் நின்றது.

புலிகள் கீழே இறங்கிப் பதுங்கி முன்னேறினார்கள்.

வசதியான ஓரிடத்தில் கால்களை அகட்டி நின்றார்கள்.

சரமாரியாக அவர்களின் மெஷின் கன்களிலிருந்து சன்னங்கள் கிளம்பும் ஓசைகள் கேட்டன! ஏற்கெனவே பயிற்சி செய்துவிட்டு நிலைகளில் நின்றிருந்த ஐப்பிகேயெஃப், பதுங்கி ஒதுங்கிப் புரண்டு கிடந்து எதிர்த் தாக்குதலில் இறங்கியது.

மூன்று புலிகள், இருபது முப்பது அமைதிப்படை.

கூச்சல், குழப்பம், வெடியோசைகள்!

மூன்று புலிகளும் கம்பீரமாகச் சுட்டுக்கொண்டே இருக்கச் சாகவே பிறந்தவர்கள் மாதிரி இராணுவத்தினருள் பலர் பட்பட்டென விழுந்து கொண்டிருந்தார்கள்!

சுடுவதை நிறுத்திய புலிகள், தங்கள் இடைகளில் தொங்கிய பனங்காய்களையும் குரும்பட்டிகளையும் பிடுங்கி எறிந்தார்கள்.

‘குண்டு’ போய் விழுந்த பக்கங்களில், இராணுவத்தினர் சிலர் மேலே எகிறிக் கீழே விழுந்து துடித்ததையும் செத்ததையும் பார்த்தபோது, அந்தத் தத்ரூபக் காட்சி என்னை நிஜமான ஒரு போர்க்களத்திலேயே ஒரு கணம் நிறுத்திவிட்டது!

அமைதிப்படை அமைதி இழந்தது!

“அட, எப்படி நடிக்கிறானுகன்னு பாரேன்!”என்று வாயூறினான் இவன்.

புலிகளோ தங்கள் வேலை முடிந்துவிட்டதைப்போல வண்டியில் ஏறி ஒரு வட்டமும் அடித்துவிட்டுப் பறந்துபோனார்கள்!

சாகாமற் சமாளித்துக் கிடந்த ஜவான்கள் சிலரே. அவர்களுக்குள்ளும் யார் பிழைப்பது என்பதைப் போன்ற குழப்பம்! அவர்களது மொழிக் கச கசாப்பு வேறு!..

“இது புலிகளுக்கு சப்போர்ட்டா நடக்கிற நாடகம்னு நெனைக்காத! உண்மையே இதுதான்! லானா பூனா சொல்றதத்தானே நீங்க நம்பிக் கெட்டுப் போறீங்க” என்று மறுபடியும் அவனிலிருந்து சிரிப்பு.


“இன்னும் பத்து வருஷங் கழிச்சி வாற பரம்பரை யுத்த தாகத்தோடதான் இருக்கப்போகுது பாரு!”

“எங்க இலக்கியமே யுத்த தாகம்தானே!” என்றேன் நான். “எந்த மதம் யுத்த தர்மத்தப் பத்திச் சொல்லாம இருக்கு? எந்த இலக்கியம் சொல்லாம இருக்கு? இவ்வளவு காலமும் நம்ப நாட்ல யுத்தமே இல்லாததால கோழைகளா வளந்துட்டோம்! அதனாலதான் அமைதி அமைதின்னு கத்த வேண்டியதா இருக்கு! அமைதியும் வேணும், யுத்தமும் வேணும்!”

‘நீ எப்பவுமே தறுதலத்தனமாகத்தானே கதைப்ப! நாடகத்தப் பாரு!’

பிணத் தறுதலைகள் இன்னும் செத்தே கிடக்க, உயிரோடு எழும்பியவர்கள் அட்டகாசத்தில் இறங்கியதோடு, விளையாட்டின் - நாடகத்தின் - போரின் - மூன்றாங்கட்டம் ஆரம்பமாகியது.

மிரண்டவன் கண்களுக்கு உருவோடிருந்த அனைத்துமே புலிகளாகத் தெரிந்தன!

“யா ஹரே அச்சா ஹை” போன்றவை ஒலி ரூபங்களானாலும் “சுடு - கொளுத்து - வெடி - எறி - கொல்லு – “ போன்றவை மனத்திலாகின!

விபரமற்ற ஒரு யுத்த முனையின் உதாரணம்!

பொறுப்பற்ற ஓர் இராணுவத்தின் செயற்பாடு!

எங்கள் ஜன்னலுக்குள்ளும் ஒரு குரும்பட்டி எறிகுண்டு வந்து விழுந்தது!

“கண்ணாடி தப்பிச்சதே போதுண்டாப்பா, சனியன்!” என்று கை கொட்டிச் சிரித்தான் இவன்.தொடர்ந்து ஜவான்களின் கைக்குண்டுகளும் குறிகளும் குடிசைகள் மீது திரும்பின.


அகாலம் புரியாத அகதிகள் மூட்டை முடிச்சுகளோடு அந்தப் பக்கமாக வரலானார்கள்!

வந்தவர்கள் அமைதிப் படையைக் கண்டு மூக்கையும் பிடித்துக்கொண்டு தறிகெட்டு ஓடத் தலைப்பட்டபோது, ஒரு ஜவான் என்னவோ சொல்லிக் கத்த, அவர்கள் நின்று கும்பிட்டுக் கூத்தாடி நடுங்க, நாலைந்து துப்பாக்கிகள் அவர்களின் பக்கமாக உயர்ந்தன.


கிழவிகள், கிழவர்கள், முஸ்லிம் வாலிபர்கள், குமர்கள், இரு பையன்கள்! அங்குலம் அங்குலமாக நகர்ந்து அப்பட்டமான ஒரு காட்சியை உருவாக்கினார்கள்!

ஒரு கிழவி பலியாகி விழுந்தாள்.



“அடப் பாவீ, அந்தக் கெழவியும் புலியாடா!” என்று சிரித்தான் சத்தியநாதன்.


ஒருவனின் துப்பாக்கி அங்கு நின்ற அத்தனை பேரையுமே புலிகளாக்கிச் சுட்டு வீழ்த்தியது! “கொஞ்சக் காலமா எங்களுக்கு இதுதான்டா பைஸ்கோப்பு!” என்று இன்னொரு சிகரட்டைத் தந்து தானும் ஒன்றைக் கொளுத்தினான்.

“வாண்டுப் பயலுகளோட வெளயாட்டுனு நெனைச்சீன்னா இதுல ஒண்ணுமே இல்ல. இதையும் பாத்துட்டு நாளைக்கி நாளாண்டைக்கி லானா பூனா என்னா சொல்றான்னும் கேட்டீன்னாத்தான் எது நெசம்னு ஒனக்குப் புரியும்!.”

இந்த ஜவான்களுக்குத் துணையாக மேலும் பத்துப் பதினைந்து பேர்கள் வந்து சேர்ந்த பிறகு, எல்லாருமாகக் குடிசைப் புறத்தை நோக்கி ஓடினார்கள்.

“ரவுண்டப் - எய்ம் - ஷுட் - கில் –“என்றெல்லாம் கமாண்டர் கத்தினான்.

சுட்டுக்கொண்டே ஓடியவர்கள் குடிசைகளை வளைத்தார்கள். குண்டுகளும் சன்னங்களும் சடுசடு விளையாடின.

குடிசைகளிலிருந்து ஒரு பத்திருபது வாண்டுகள் உயிர் தப்பும் கோஷங்களோடு தோப்புக்குள் ஓடிவரும் ஒரு செட் - அப்! சூடுபட்டுச் சிலர் விழச் சிலர் துப்பாக்கி முனைகளில்!
ஒருவனுடைய வயிற்றில் துப்பாக்கி குத்துகிறது. “அம்மா!” என்று அவன் விழுகிறான். இன்னொருவனுக்கு மண்டையில் துப்பாக்கி அடி. அவன் “கடவுளே!” என்று விழுந்து துடிக்கிறான்...

கமாண்டர் கத்தினான்.

எல்லாருமே மளமளவென்று குப்புறக் கிடக்கத் தொடங்கினார்கள்.

ஒரு ஜவான் தன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுக் குப்புறக் கிடந்த ஒரு பெண்ணை இழுத்து, மல்லாக்கக் கிடத்தி, அவள் மீது –

“அதென்னா இன்னைக்குப் புது..” என்ற சத்தியநாதன் விளங்கிப்போய் அதிர்ந்தவனாக,”டேடேய்!” என்று கத்தியவாறே வெளியே பாய்ந்தான். “அந்த விளையாட்டுக்கெல்லாம் போகாதீங்கடா! அத விட்டுட்டு மத்ததுகள விளையாடுங்க!”

அதிர்ந்துபோய் நின்றிருந்தேன் நான்.

இதுவரையில் சிரித்துக்கொண்டிருந்த சத்தியநாதனின் முகத்தில் திடீரென ஒரு வகைக் கிழடுதட்டியிருந்தது.

நன்றி ;ஈழத்து கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 8:13 pm

அரசனின் வருகை
----------------
உமா வரதராஜன்
--------------------------
மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.

ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக் குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.

ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.

ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.

கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்று வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.

ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்த சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில் நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.

மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனாள் தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.

வாழ்வதற்கான வரமும் அதிர்ஷ்டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன. வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.

பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் 'எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனான் அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து 'நாங்கள் என்ன குற்றம் செய்தோம்' என்று முனகின. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.

ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப் பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்.

அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.

அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.

'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'

அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.

'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம்'?....

ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.

'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'

ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.

போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? '

அரசன் புன்னகைத்தான். 'தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'

'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ' என்றான் ஊமையன்.

அரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்!' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.

அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள். இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.

'கோயில் தந்தான்
எங்கள் மன்னன் 'கோவில் தந்தான்
இன்னுந்தருவான்
கேட்கும் எல்லாம் தருவான்.
தில்லாலங்கடி......தில்லா....
பிச்சைப் பாத்திரம் இந்தா......'

திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.

'கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.
அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.

வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.

பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்கின்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன். ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.

விடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.

'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள்’ என்று அதட்டினான்.

அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்த. இடியுண்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர். வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள். உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.

ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.

'என் உயிரிலும் மேலான மக்களே.....'

மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.

குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.

'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'

காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.

'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும் உடனே கேளுங்கள்.'

ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள் சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.

'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'

அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.

ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.

பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.


- இந்தியா டுடே, ஏப்ரல் 1994

நன்றி ;ஈழத்து கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 8:15 pm

அவர்கள் வருவார்கள்
--------------------

முல்லைக் கோணேஸ்

---------------------------
மடியும் ஒவ்வொரு நிமிசங்களிலும் பாதாளத்தின் நடுவே மெல்லிய கயிற்றில் தொங்குவதானதொரு உணர்வையே தருகிறது. வாழ்வின் இழையங்கள் அறுந்துபோனதாகவும் எதிலுமே பிடிப்பில்லாததான விசனமுற்ற நாட்களாகவுமே கழிகின்ற பொழுதுகள்தான் தொடருகின்றன.

யாருடனும் கொஞ்சநேரமாவது மகிழ்ச்சியாகப் பேசவே இயலாத இந்தப் பொழுதுகளில் இப்போதே மரித்துவிட வேணுமென்பதாய் மனசு அலைகிறது. நிம்மதியைத் தொலைத்த நீளும் இரவுகளில் சிலுவை சுமக்கும் கல்வாரிப் பயணமெனத் தைக்கிறது படுக்கை.

இப்படித் தூக்கத்துக்காய் கிடந்து தவிக்கும்போதெல்லாம் தொலைந்துபோன அந்த இனிமையான பொழுதுகள்தான் நினைவுக்குமிழ்களாய் நெஞ்சில் கசிகிறது.

ஏ.எல். பரீட்சை எழுதிவிட்டு றிசல்ற்றுக்காய் காத்திருந்த அந்த நாட்களில் கூடிக்கூடித் திரிந்து களைத்துப்போனபோது கடலையும் பனங்கிழங்கும் வாங்கிக்கொண்டு வந்து, நீண்டு நிமிர்ந்த அந்தப் பனைகளின் நடுவே வளைத்திருந்து சாப்பிடும் அலாதி சுகம் எப்போது எங்களை விட்டுப்போனது என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்ளூ கனத்துப் போகும் நெஞ்சில் இரத்தம் கசிவதாய் எங்கோ தாளாத வலிதான் ஏற்படுகிறது.

கிராமக்கோட்டுச் சந்திக்குப்போகும் மெயின் ரோட்டில் இருந்து இருநூறு யார் தள்ளிக் கிடக்கும் வெட்டைவெளியில் வெயில் வெயிலாய் கிறிக்கற் ஆடியபடி சிறுவர்கள் குதூகலிப்பர். பனைகளின் கீழே விரிந்து போய்க்கிடக்கும் நிழலில் நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்போம். மாலை வரும்வரை யாருமே அந்த இடத்தை விட்டு நகரவே முடியாதளவுக்குச் சுவாரஸ்யமான விடயங்களெல்லாம் சம்பாஷனைகளில் வந்து போகும்.

சீலன் தன் சிநேகிதி பற்றி எந்தநேரமும் கதைத்துக் கொண்டேயிருப்பான். அவள்மீது தான் உயிரையே வைத்திருப்பதாகவும், அவளையே கல்யாணம் செய்துகொள்வதாகவும் கூறிக்கொண்டிருந்தான். பீற்றரின் கனவெல்லாம் விழுந்துபோய்க்கிடக்கும் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவே இருந்தது. என்னென்ன தொழில் செய்தால் முன்னேறலாம் என்பதை ஆலோசித்தபடியே இருப்பான். றிசல்ற்றைப் பார்த்து விட்டு ஏதாவது சொந்தமாய் தொழில் தொடங்கப்போவதாக அவனுக்கு எண்ணம் இருந்தது. சுரேசுக்கு எந்த விதமான ஐடியாக்களும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் சிரித்தபடியே இருப்பான். அப்பாவி.

ஆனால் பின்னாளில் கூட்டைப்பிய்த்தெறிந்து குருவிகள் கலைந்து பிரிந்து போனது மாதிரி எவ்வாறெல்லாம் ஒருவரை ஒருவர் அறியாதபடிக்கு கண்காணாத தூரங்களிலெல்லாம் தொலைந்துபோனார்கள்.

இப்போதும் அந்த வெளியில் அடித்த பந்தை எடுக்கச் சிறுவர்கள் ஓடுவதாகவும் கிராமக்கோட்டுச் சந்திக்குப் போகும் தெருவில் சந்தையால் போகும் கதிரேசு மாமா கள்ளுக்குடித்த உற்சாகத்தில் காத்தவராயன் பாட்டுப் பாடிக்கொண்டு போவதுபோலவும் 'கீக்கிறீக்.. கீக்கிறீக்...' என்று அவரது சைக்கிள் சத்தம் காதில் ஒலிப்பதாகவுமே படுகிறது!

மீண்டும் மீண்டும் அந்தப் பனைகளும் அவற்றுக்கப்பால் விரியும் வெளியும்தான் ஞாபகத்தில் படர்கிறது.

இப்போது அந்தக் கிறிக்கற் சிறுவர்கள் எங்கெல்லாம் சிதறிப் போனார்களோ..? அதில் எத்தனை பேர் காணாமல்போனோர் பட்டியலில் இடம் பிடித்தார்களோ..?

எங்கள் ஊருக்கு இராணுவம் வந்தபோது முதன் முதலில் அந்தப் பனைகளின் நடுவேதானாம் சென்றி போட்டு உட்கார்ந்தது. பின் ஒவ்வொரு பனையாய்த் தறித்து பெரிய பண்டும் பங்கரும் அமைத்து நிரந்தரமாய் தன் இருப்பைப் பலப்படுத்தியபோது அந்த இராணுவ மினி முகாமைச் சுற்றியிருந்த ஏராளமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இதைக் கேள்வியுற்றதும் தான் சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு இப்படிப் போனதே என்று அப்பா அதிர்ந்து போனார். அவரைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் ஏகப்பட்ட பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது.

வெளியில் உயிரை உறைய வைக்கும் பீதியைத் தருவதாய் இருள் கவிந்து கிடக்கிறது. எங்கும்; நிசப்தமே நிலவுகிறது. இந்த நாய்கள் கூட இப்போது குரைப்பதை நிறுத்தி விட்டனவோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. சரி, இந்த முற்றத்து வேப்பமர வெளவால்கள் எங்கே போய்த் தொலைந்தன. முந்தியெண்டால் வேம்பம்பழக் காலத்துக்கு எங்கிருந்துதான் அப்படி வருகின்றவோளூ கொள்ளை கொள்ளையாய் வந்து மரத்தில் மொய்த்துக்கிடந்து கத்தலும் சடசடப்புமாகவே இரவிரவாகத் தொல்லைகள் கொடுப்பன.

இப்போது எங்கேயும் அவற்றின் அசுகைகூடத் தெரிவதில்லை. அதுகள்கூட எங்காவது தொலைதூரங்களுக்குப் புலம்பெயர்ந்து போய்விட்டனவா? அல்லது ஓசைபடாமல் வந்து தங்களின் கருமங்களை முடித்துக்கொண்டு போய்விடுகின்றனவா?

எதுவுமே நிலையற்றதாகிப்போன துயர்தரும் வாழ்வு. நாளைய இருத்தல் என்பது நிச்சயமில்லாதபோது எதிலுமே லயிப்பற்ற ஜடமாகத்தானே நடமாடமுடிகிறது.

முன்னரென்றால் எங்கள் ஊர் ஆழ்வார் கோயில் ஆவணி மாதத்தில் வரும் கடைசி மூன்று தினங்களும் விடிய விடியத் திருவிழாவில் மூழ்கிக் கிடக்கும். சுற்றுப்புறமெல்லாம் ஒளி வெள்ளத்தில் பளிச்சிடப் பட்டுச் சாறிகள் மினுங்கும். நாலுமுழ வேட்டிகளோடு நாலைந்து பேராய் அந்த ஜன நெரிசலில் உலாவருவதே சுவர்க்க சுகம். அவ்வாறான ஒரு வருடத் திருவிழாவில்தான் மனேச்சற்ற மகள் வசந்தனோடு ஓடிப் போனாள். கனகம் மாமியின் மகளை வரணியில இருந்து வந்த மாப்பிளை பகுதி இந்தத் திருவிழாவில்தானாம் பெண் பார்த்தார்கள். இன்னம் என்னென்னமோ சங்கதிகள் எல்லாம் அங்கு நடந்து முடியும்.

மூன்றாம் நாள் பொங்கல் வைத்து திருவிழா நிறைவெய்தும்போது மூன்று நாளும் இளசுகள் தாம் பரிமாறிக்கொண்ட பார்வைகளையும், பறிகொடுத்த மனசுகளை மீளப் பெறமுடியாத துயரங்களையும் மீட்டியவாறு வீடு நோக்கிப் போய்க்கொண்டிருப்பர்.

மூன்று நாளும் மாமிசம் உண்ணாது விரதமிருந்து பூசை முடித்த கனபேர் வெறும் மேலுடன் நேரே கள்ளுக்கடை நோக்கித் திருவிழாவில் நடந்த குற்றம் குறைகளைப் பற்றிக் கதைத்தவாறு நடப்பர். வீடு திரும்பும்போது மீனோ இறைச்சிப் பார்சலோ கையில் இருக்கும். இன்னும் சிலர் வெறிச்சோடிப்போன வெளிமண்டபத்தில் இருந்து கூடிக்கதையளப்பர். சிலவேளைகளில் அதில் ஐயரின் தலையும் தெரியும்.

இவையெல்லாம் எம்மை விட்டுப்போய் நெடுநாளாயிற்று.

எங்குபோனாலும் ஐந்து மணிக்குள் வீடு திரும்பும் அவசரம். ஒப்பாரி கேட்டால் உறவுக்காரரெண்டாலும் விடிந்த பின்பே துக்கம் விசாரிக்கும் துர்ப்பாக்கியம்.

இந்த முன்னிரவில் நிம்மதியற்றுத் தூக்கம் வர மறுக்கும் இந்நிமிசங்களில் யாருமே அறியமுடியாதபடிக்கு என் ஜீவன் கதறுகிறது. ஊ.. ஊ.. என்றிரையும் காற்று பனையோலைகளில் பட்டுச் சரசரக்கிறது. இப்படி வீசும் இந்தக் காற்று மனித வெறியர்கள் குறிவைத்துக் காத்திருக்கும் அந்த முகாமினுள்ளும் உக்கிரமாய் பெரும்புயலென அவர்களை அள்ளுண்டு அடிபட்டுத் திணறடிக்கப் பண்ணுவதாய் வீசவேண்டுமென மனம் அவாவுகின்றது.

இந்த இரவின் அந்தகார இருளில் அந்த முகாமினுள்ளே புகை பிடித்தவாறோ - குரூரம் கொப்பளிக்கும் தொனியில் ஏதாவது கதைத்தும் சிரித்தும்கொண்டே அவர்கள் இருப்பார்கள். சென்றியில் நிற்பவனின் துப்பாக்கி அப்பிராணி ஒருவனைத் தீர்;த்துக்கட்டிய பெருமிதத்தில் ஓய்ந்துறங்கும்ளூ அல்லது யாரையாவது குறி வைத்தபடி வெடித்துச் சிதற இருக்கும் அந்தக் கொடூர கண நேரத்துக்காகக் காத்துக்கிடக்கும்.

இன்னும் உள்ளே கிருஷாந்தியைப் போலோ ராஜினியைப் போலோ யாராவது அவர்களின் காம இச்சைக்குக் கதறிக் கதறித் தங்களை இழந்துகொண்டிருக்கலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பும்கூட முகாமினுள்ளே யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். அந்த முகாமிற்கு அவர்கள் வந்த புதிதில் ஊரில் உள்ள சனங்களோடு மிகவும் பண்பாகவே நடந்துகொண்டதாகப் புளுகித் திரிந்தவர்களில் அநேகம் பேரினது உறவினர்கள் அவர்களைத் தேடி ஒரு நாளைக்குப் பல தடவை முகாமை நோக்கி அலைந்து திரிவதுதான் மிகவும் மனவேதனையைத் தருகிறது. சனங்கள் அவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை கொண்டு நடந்தார்கள்.

உயிர்கரையும் இந்த அர்த்த ராத்திரியிலும் சென்றியில் இருந்தவாறு அந்தக் கொடிய விழிகள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனவோளூ அவர்கள் இந்த இருளை ஊடறுத்துக் கிழித்தவாறோ - இந்த இருளோடு இருளாய்க் கலந்தவாறோ வருவார்கள்.

அவர்களது வரவுக்காய் அந்த மீட்பர்களின் வருகைக்காய் இங்கு எத்தனை பேர் காத்துக்கிடக்கிறார்கள்.

அவர்கள் வருவார்கள் என்கிற நினைவே நெஞ்சில் நிறைவைத் தருகிறது.

நன்றி ;ஈழத்து கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 8:18 pm

திரேசா
--------------------
நாவாந்துறை டானியல் ஜீவா
-------------
நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் தூக்கம் வராமல் தூரத்தே செல்ல என் கால கநர்வில் கடந்து சென்ற ஐந்தாண்களுக்கு முன் முற்றுப்பெற்று விட்ட அந்த மனிதத்தின் நினைவு எனக்குள் ஓடத்தொடங்கியது.வயதெல்லை தாண்டி வார்த்தைகள் வலுவிழந்து மானிடமே ஒவ்வொரு கணமும் மரணித்துக் கொண்டும் மரணத்தினுடாக வாழ்வைத்தேடுகின்ற மைந்தர்களில் திரேசாவின் இழப்பு ஆயிரத்தில் ஒன்றாக மறைந்து போயிருக்கலாம். ஆனால் என் கண்முன்னே கணப்பொழுதில் சிதைந்து போன அவளது உடல் என் இதயத்தில் ஆழமாய் பதிவாகிவிட்டது. அவளது மரணம் நேற்று நிகழ்ந்தது போல இன்னும் என்னும மனத்திரையிலிருந்து விலகாது ஒட்டுக்கொண்டிருக்கின்றது. என்னில் எழுந்து பின் மறைந்து போகின்ற நிகழ்வுகளைப்போல் அல்லாது என் இதயமே வெடித்திடும் போல் இருக்கின்றது. என் வாழ்வில் முடிந்து போன சோகங்களில் முற்றுப்பெறாத கவிதை வரிகளுக்கு கருப்பொருளானள். . . .

திரேசாவின் மரணம் அந்த மீனவகிராமத்தே வியப்பில் ஆழ்திய நிகழ்வுதான். அன்று எல்லோர் முகங்களிலும் சோகம் கவிழ்ந்து கிடந்தது ஊர் எங்கும் வீசிய உப்புக்காற்றுக் கூட இழப்பைத் தாங்கிக் கொள்ளும் முடியாமல் சோகத்தை சுமந்த படி சென்றது. மண்ணுக்குள் நேர்ந்த மாரடைப்பi நிணைந்து என் செஞ்சே தீப் பிளம்பானது. இருள் விலகிடாப் பூமியில் இன்னுயிர் ஈந்தும் முடிவவுறாத சோகங்களுமே சொந்தமாயின. அடிவானத்தைக் கடல் குடிக்க உயிர்களை இரும்பு உண்ணும். வைகறையின் சத்தம் அதிகாலை ஆறு மணியை நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.

தொழிலாளர்களும் காக்கை தீவு செல்கின்ற மீன் வியாபாரிகளும் நாவந்துறை மீன் சந்தைக்கு முன்பாக கூடுவார்கள். நாவாந்துறை சந்தை நாவலர் வீதியும் காரைநகர் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மீன் சந்தைகளில் ஓலளவு வசதியாக உள்ள சந்தைகளில் நாவந்துறை மீன் சந்தையும் ஒன்று. இறைச்சி வகைகளும் மரக்கறி வகைகளும் உட்பட விற்பனை செய்யப்படுகின்றன. இச் சந்தையில் இருந்து காக்கை தீவுச் சந்தை ஒன்ரரை மைல் தொலைவில் உள்ளது. விடியற்காலை ஏழு மணியில் இருந்து பதினொரு மணி வரை கூடி பின்னர் கலையும். நாவாந்துறைச் சந்தை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி பிற்பகல் வரை நீடிக்கும்.

இரண்டு மீன் சந்தைகளிலும் வியாபாரம் செய்பவர்களில் திரேசாவு; ஒருத்தி சந்தைக்கு முன்பாக தேனீர்க் கடையும் இருக்கின்றன. பின்பக்கமாக அழகிய கடற்கரை இருக்கின்றது. இந்தக் கடலை நம்பியே இங்குள்ள மீனவர்கள் வாழ்கிறார்கள். கரையோர்தில் மேவப்பட்ட வெண்மணல் புதிய அழகை கொடுத்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசைகள் முளைக்கத் தொடங்கின.

திரேசா தேனீர்க் கடை வாசல் படியில் நின்ற படி ''கடகத்தை கொஞ்சம் இறக்குமோன'' என்று விடுவலை வானைப் பார்த்துக் கொண்டிருந்த ரவியிடம் சொன்னாள். இறக்கிய கையோடு கபூர் காக்காவிடம் க10டான தேனீர் போடச் சொன்னாள். கபூர்க்காக்காவின் தேத்தண்ணிக் கடையில் வாடிக்கையாளர்களில் திரேசாவும் ஒருத்தி. காலையில் காக்கை தீவு மீன் சந்தைக்கு போவதற்கு முதல் கப|ர்க்காக்காவிடம் ஒரு பிளேன் ரீ சுடச்சுட குடித்துப் போட்டுத்தான் கால் நடையாக காக்கை தீவுக்கு போவது வழக்கம். தனக்காக எதையும் சேர்த்து வைக்காது பிள்ளைகளின் வாழ்விற்காக உழைத்து ஓடப் போனவள் நீண்டு நெடுத்த உடல்கட்டும் ஒன்று இரண்டு கறுப்பைத்தவிர வெண் நாரையின் நிறம் போல் தலைமுடி வெளுத்துப்போன சீத்தச் சட்டையும், பச்சை நிற நூல் சேலையும், இடுப்பினில் துணிப்பையும், அதன் பக்கமாக செபமாலையும் இதுதான் அவளது வெளித்தோற்றம். அனால் அவளது மனசு கடலைப்போல் எல்லையற்று, பரந்து விரிந்து கிடக்கின்றது. மனித நேயம் மடியினில் அடைகாத்து வைப்பாள் வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியையும் தன் அறிவுக்கேற்ப்ப வெற்றி கொண்டு வாழ்பவள். காலை எழுந்ததும் தேத்தண்ணீக்கடை, காக்கை தீவுச் சந்தை , நாவாந்துறைச் சந்தை வீ திரும்பியதும் கோடிப் பக்கமாக கடகத்தையும், சுளகையும் கழுவி வைத்து விட்டு, சின்னத்தூக்கம். அழுந்ததும் கிழவிகளோடு ஊர்க்கதை பின்னர் ஓலைக் குடிசையில் ஒட்டுத்தூவாரத்தில் உறைவிடம் மீன்டும் அடுத்த நாள் காலை காக்கை தீவை நோக்கி இப்படியோ அவளது பத்து வருடமும் ஓடியது. இந்த மீன் வியாபாரத்திற்கு வருவதற்கும் அவளுக்குள் ஒரு சோகம் ஒளிந்து கடந்ததை மறக்கமுடியாது.

ஒவ்வொரு ஆவணி பதினைஞ்சும் இங்கு பரலோகமாதா திருவிழா நடைபெறும் ஒன்பது நாள் நோவினையும் ஒரு நாள் பாடல் பூசையுடன் திருவிழாவை சிறப்பிக்க நாட்டுக் கூத்தும் நடைபெறும். இம்முறை கலைக்கவி நீ. எஸ்தாக்கி எழுதி பெலிக்கான் அண்ணாவியாரால் நெறிப்படுத்தப்பட்ட தென்மோடி நாட்டுக் கூத்தான செபஸ்தியார் நாட்டுக் கூத்து நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்த்தவ மதத்திற்காக தங்கள் உயிரை இன்னுயிர் ஈந்தவர்களில் செபஸ்தியாரும் ஒருவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டதே செபஸ்தியார் நாட்டுக்கூத்து.

திரேசா அவளது கணவர் அருளர், பிள்ளைகள் எல்லோருக்கும் நாட்டுக்கூத்தென்றாள் உயிர். வறுத்த சோளகம் கொட்டையும், கச்சானும் , சுடுதண்ணிப் போத்தலில் தேத்தண்ணியோடும் மேடைக்கு முன்னால் உட்காந்திருவார்கள்.கடசிசெபத்தியாரின் கட்டத்தை பார்த்துவிட்டுளூவலை இலுக்கப் போகலாம் என்ற முடிவெடுத்து காத்திருந்தார் அருளார். இரவு மூன்று மனியாகிவிட்டது.
பனி உதிர்ந்து கொண்டிருந்தது.நட்சத்திரங்கள்வான்வெளியில் விரவிக்கிடந்தன குளிர்நிலாவில் திரேசாவின் தலைஈரமாகியது.கூத்தும் நடுப்பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தது வழமை போல் கடசிப்பகுதியில் வரும் செபத்தியார் வேடத்தை அண்ணவியார் பெலிக்கான் அவர்களே ஏற்று நடிக்கிறார்.கடசியில் வரும் யோகன் இராசாவும் வந்திட்டார் இனிக்கடசி செபத்தியார் வரப்போகிறார் என்ற ஆவலோடு அருளாரின் கண்கள் அகல விரிந்தன. திரேசாவின் பார்வையும்தான்.
இயேசுவின் மறுஉருவம்போல் சித்திரவதை செய்யப்பட்ட உடல்காயயங்களோடு சிகப்புநிறஆடை உடலோடு இறுக்கப்பட்டு மேடையில் தோன்றினார் அண்ணாவியார் பெலிக்கான்.காத்திருப்பின் அர்த்தம் உள்ளத்தில் இன்பஉணர்வலையை மீட்டிய கணமே தொழிலுக்கும் போகவேண்டிய கடமை உணர்வும் அவனுள் எழுந்தது.தொழிலுக்கு போகவில்லையென்றாள் பிள்ளைகள் பட்டினியாய் கிடப்பார்கள் என்றுமனதிற்குள் நினைத்துக்கொண்டு தொழிலுக்கு ஆயுத்தமானன்.
திரேசா நான்போயிற்று வாறேன் என்றார் அருளார். நாட்டுக்கூத்தையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிந்த திரேசா ஒரு கணம் அருளாரை திரும்பிப்பார்த்து
ஏனணன இன்னும் கொஞ்சம் தானே இருக்குது தொழிக்கு போகமல் பார்க்கலாம்தானே என்று ஒரே மூச்சில் சொன்னாள்.
இங்கெரப்பா இண்;டைக்கு மங்களம் பாடமாட்டாங்க..... ஏனென்றாள் அடுத்த சனிக்கிழமை நிலவு
வந்துவிடும் தொழிக்கு போகத்தேவையில்லை விடிய விடிய பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டார் அருளர்.கடலில் நீந்தியும்சுழியோடியும் களம்கட்டிவளைத்தும் புயலோடும்அலையோடும் போரடச்சென்ற அருளர்
இன்று வரை வீடுதிரும்பவில்லை.மண்டைதீவிலிருந்து வீசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகத்தில் இனம்
புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தொராம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகமும் சுமக்கத்தொடங்கியவள் இன்றுவவரை சுமக்கிறாள்;
கடலில் நீந்தியும் சுழியோடியும் களம்கட்டி வளைத்தும் புயலோடும் அலையோடும் போரடச்சென்ற அருளர் இன்று வரை வீடு திரும்பவில்லை மண்டைதீவிலிருந்து வுpசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகங்களில் இனம் புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தோரம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகும் சுமக்கத் தொடங்கியவள் தான் இன்றுவரை சுமக்கத்தொடங்கியவள் இன்று வரை சுமக்கிறாள்
திரேசா தேத்தண்ணீயை ஒரு முறடு குடித்து விட்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.அடிவானம் சிவந்து இரவு நிலா குறுகிக் குறிகி கடலுக்குள் கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் காக்கை தீவு போகாமல் நிற்பதை திரேசா உணர்ந்தாள். வெள்ளாப்புக் கொடுத்து விடிவதற்குள் காக்கைதீவு போச்சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கில் விறுவிறுப்பாக நடக்கத்தொடங்கினாள். வழமையான நடையைவிட இன்று வேகமாகத்தான் நடக்கிறாள். சொந்த வாக்கையிலும் கூட திரேசா ஒரு நாளோ இருநாளோ நடக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடமாக நடதே பழக்கப்பட்டவள்.

மொத்தமாக ஆறு பிள்ளைகள் ஐந்து பெண்களும், ஒரு பையனும். ஐந்து பெண்களுக்கும் தன்னால் முடிந்ததைக் கொடுத்து சீரும்சிறப்புமாக திருமணம் செய்து வைத்தாள். கடைசி மகன் தாசனை பி. ஏ வரை படிக்க வைத்தாள். படித்து முடிந்ததும் கொழும்பில் உத்தியோகத்தோடு திருமணம் செய்து கொண்டான். ஊர்ப்பக்கமே திரும்பிப் பார்ப்பது கிடையாது. நன்றி கெட்டவனாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் கூட இவ்வளவு வயது வந்தும் ஆச்சி காக்கைதீவு போய் கஸ்ரப்பட வேண்டுமா என்று ஒரு கணம் கூட சிந்திப்பதில்லை. தானும் தன் குடும்பமும் என்று கொழும்பில் உல்லாச வாழ்க்கை.

செபமாலை சொல்லிக் கொண்டு வந்த திரேசா வசந்தபுரத்தைத் தாண்டி காக்கைதீவை நெருங்கி விட்டதை உணர்ந்தாள். கடசிக் காரணிக்கத்தை விரைவாக சொல்லி முடித்தாள். நேற்றும் ஓடா நீராம் மச்சச் சாதி ஒன்றையும் காணல எங்களுக்குத்தான் சுனை நீர், ஓடா நீர் வெள்ளிக் கிழமை நிலவு என்று தனக்குள் முனுமுத்தபடி நடந்தாள்.

வாடைக்காற்று வந்தால் சோர்ந்து கிடக்கும் மீனவர்கள் விழிப்பார்கள். நல்ல மீன் சாதிகள் பிடிபடும். களங்கண்ணியில் வெள்ளை இறால் பாட்டு இறால் என்று பிடிபடும். மீனவர்கள் குடும்பம் செல்வச் செழிப்பில் சிரித்து விளையாடும். திரேசாவும் அப்படித்தான். ஏனென்றாள் அவர்களை நம்பித்தான் அவளது வாழ்க்கை.
என்றும் இல்லாதாவாறு அறியப்படாத அன்னியமுகங்களால் காக்கைதீவு மீன் சந்தை நிரம்பி வழிந்தது. கோட்டையில் இருந்து ஆமி செல்லடிக்கிறாங்கள் என்றதால் யாழ்ப்பாணத்துச் சந்தைகள் இயங்காமல் போய்விட்டது. அதனால் மீன் வாங்குவதற்காக புதிய புதிய முகங்கலெல்லாம் சந்தையில் கூடிவிட்டது.

வள்ளத்தில் இருந்து கூறி விற்கும் கூறியான் அந்தோனியின் குரல் வானத்தைத் தொடும்போல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மீன் வாங்க வந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடித்திரிந்தார்கள் எங்கு மலிவான விலையில் மீன் விற்பார்கள் என்பதற்காகவோ தெரியவில்லை. கரையைத் தட்டிக்கொண்டிருந்த வள்ளங்களில் தொழிலாளர்கள் மீன் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். இறால் வியாபாரி முருகேசு தராசு படியோடு ஓரமாக நின்று கொண்டிருந்தார். கனிபாவின் பாயாச அடுப்பைச் சுற்றி பக்கத்தில் இருக்கும் வடைக்கார கிழவியை முற்றுகையிட்டபடி இளவட்டங்கள்.

திரேசா அவசர அவசரமாக தான் கொண்டு வந்த கடகத்தை தலையில் இருந்து இறக்கினாள். கடகத்துக்குள் இருந்த பலகையை எடுத்து தனக்கு வசதியாக வைத்துவிட்டு உற்காந்தாள். வள்ளத்தில் இருந்து வந்த வாசு மீனை ஒரு சுளகிலும், இறாலை ஒரு சுளகிலும் போட்டான். அந்தக் கணமே தென் திசையில் இருந்து இரைச்சலோடு ஹெலி வந்துகொண்டிருந்தது. ஹெலிச் சத்தத்தைக் கேட்டு ஒரு சிலர் ஹெலி வருகுது சுடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார்கள். தாழப்பறந்து வந்த ஹெலி சுடத்தொடங்கியது. வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மனித நாகரிகத்திற்கு அப்பால் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்திற்கு சிதறி ஓடினார்கள். பின்னர் இடியோடு வந்த புயல் மழை ஓய்ந்து விட்டது. ஹெலியின் சத்தம் குறைந்தது. திரைப்படங்களில் காணப்படும் அழிவுகளின் காட்சியாக காக்கை தீவு சீரழிந்து கிடந்தது. மரங்களில் ஹெலி சுட்ட காயங்களின் தழும்புகள் இந்துமா சமுத்திரத்தையும் தாண்டி எங்கள் அழுகுரல் உலகம் எங்கள் பக்கம் விழிக்கவில்லை. மையான அமைதி. வயதான திரேசா எழும்பி ஓடுவதகுள் வேட்டுக்கள் தீர்ந்து விட்டது. சிதறிப்போய்க் கிடந்த மீன்களுக்கிடையில் திரேசா இரத்த வெள்ளத்தில கிடந்தாள்.

என் கட்டிலில் அருகில் இருந்த மணிக்கூடு எலாம் அடிக்கத் தொடங்கியது. என் நினைவுகளெல்லாம் கலைந்தது. நான் இன்னும் தூங்கவில்லையே? நேற்றிரவு கழுவித் துடைத்த சட்டிகள் நினைவிற்கு வந்தது. ஓடு ஓடு வேலைக்கு ஓடு என்று என் மனம் சொல்லியது.

(முற்றும்)

நன்றி ;ஈழத்து கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 27, 2015 8:24 pm

கொத்தமல்லிக்குடிநீர்
------------------------------------
இரா.சம்பந்தன்
------------------------------------

அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும் சுகமில்லைத் தான். போன கிழமை பேரப்பிள்ளைகளோடு கடற்கரைக் குளிரில் உலாவினதாக்கும் ஆச்சிக்கு நெஞ்சுத்தடிமன் ஆக்கிப் போட்டுது. சனியும் ஞாயிறும் ஒரே தலை அம்மல். மண்டையிடி. சாப்பாடு மனமில்லை. எழுந்து நடக்க உலாஞ்சியது.

இராத்திரிப் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது தொடர்ந்து நாலைந்து தடவைகள் இருமியதற்காக என்னம்மா படம் பார்க்க விடமாட்டீங்களா? போய் அறைக்குள்ளே இருந்து இருமுங்கோவன் என்று பட்டும்படாமலும் சிரித்துக் கொண்டு சொன்ன மகளை எண்ணி மனதுள் வேதனைப் பட்டுக்கொண்டு ஒரு தைனோலோடு படுத்த ஆச்சிக்கு இரவு முழுவதும் நித்திரை வரவில்லை. தொண்டைக்குள்ளே யாரோ கோழிச்செட்டையாலே தடவின மாதிரி ஏதோ ஊர்ந்து ஒரு கண் நித்திரை கொள்ள விடாமல் ஒரே புகைச்சல்.


இரவு முழுவதும் தான்பட்ட பாட்டைப் பார்த்து மகள் எழுந்து வந்து என்னம்மா செய்யுது? சுடுதண்ணீர் வைத்துத் தரட்டோ என்று கேட்பாள் என்று எண்ணி ஏமாறுவதற்கு ஆச்சி கனடாவுக்கு வந்த புதிதல்ல. அம்மாவுக்கு அனுதாபம் காட்டி என்ன ஏதென்று விசாரித்தால் பிறகு தான் நின்றுதானே பிள்ளைகளைப் பார்க்க வேணும் என்ற நினைப்போடு பொன்சர் பண்ணிக் கூப்பிட்டது வேறு என்னத்துக்கு என்ற எண்ணமும் சில வேளைகளில் இருக்கலாம் என்று நினைத்து ஆச்சியும் ஒன்றையும் பெரிது படுத்துவதில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு மனுசனும் மனுசியும் வேலைக்குப் போவினம் என்று ஆச்சி கனவிலும் எண்ணி இருக்கவில்லை.

ஒருமுறையல்ல விடிய ஒருமுறை மத்தியானம் இரண்டு முறை பின்னேரம் ஒருக்கால் என்றும் பெரியதை ஒருகையில்; பிடித்துக் கொண்டும் சிறியதை இடுப்பிலே சுமந்து கொண்டும் பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நாயாக அலையும் வாழ்க்கைக்கு வருத்தத்தைக் காரணம் காட்டி இன்றைக்கு லீவு தருவார்கள் என்று எண்ணியிருந்த ஆச்சிக்கு உண்மையில் ஏமாற்றமாகத் தான் இருந்தது.

தலையைக் கூட்டி முடிந்து கொண்டு கட்டிலை விட்டு இறங்கி ஒரு அடி வைக்கவில்லை. பித்தமாக்கும் வயிற்றைப் புரட்டியது. தற்செயலாக சத்தி வந்தாலும் என்று நினைத்து நேற்றே எடுத்துத் தலகணிக்குக் கீழே ஒளிச்சு வைத்திருந்த பொலித்தீன் பையை எடுத்து முகத்துக்குக் கிட்டப் பிடித்து ஆவென்று வாயைத் திறந்த போது தான் சின்னன் அதுதான் பேத்தி அஜி தொட்டிலுக்குள்ளே கிடந்து சரசரத்துச் சிணுங்கியது. ஓடியாறேன் குஞ்சு என்று சொல்லு முன்பே அம்மம்மா தங்கச்சியைத் தூக்குங்கோ என்று படுக்க விடுகுதில்லை என்று கத்தினான் பேரன்.

ஆச்சிக்கு வந்த சத்தியும் நின்று விட்டது. நெஞ்சைத் தடவிக்கொண்டு குழந்தையையும் தூக்கித் தோளில் அணைத்தபடியே பால்வைக்கப் போன ஆச்சிக்கு பால் காச்சும் கிண்ணத்தை அடுப்பில் வைத்த போதுதான் ஒருநாள் பால் பொங்கி அடுப்புக்குள்ளே ஊற்றுப்பட்டதுக்காக மகளிடம் வாங்கிய ஏச்சு ஞாபகத்துக்கு வந்தது. என்ன உயிர் போற வேலை இருந்தாலும் பால் அடுப்பிலே வைத்தால் பக்கத்திலே நில்லுங்கோ அம்மா! கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் பிள்ளை சொன்னவள். சொன்ன விசயம் நியாயமானது தான் என்றாலும் சொன்ன விதம் இருக்கே அது ஒரு மாதிரித்தான். என்றாலும் பிள்ளைப்பாசம் ஆச்சி பொறுத்துக் கொண்டாள்.

குழந்தையைக் கழுவித் துடைத்து உடுப்பு மாற்றி ஒரு விசுக்கோத்தும் எடுத்துப் பாலோடு கொடுத்து இருத்திவிட்டு மூன்று நான்கு தடவைகள் அடுப்புக்கு மேலே கையை வைத்துப் பார்த்தாள் ஆச்சி. சூடு குறையத் தொடங்கி விட்டது. அடுப்பு நிற்பாட்டியதை உறுதி செய்து கொண்டு இரண்டு துண்டு பாணுக்குச் சூடுகாட்டி பட்டரும் பூசி மூத்த பொடிக்கு கோப்பியும் ஊத்தி வைத்துவிட்டு மேலே போனாள்.
ஏழரை மணிக்கு எழுப்பியம்மா வெளிக்கிடுத்திச் சாப்பாடு கொடுத்துப் போட்டு எட்டுமணிக்கு வெளியாலே கூட்டிக் கொண்டு இறங்கினீங்கள் என்றால் அவசரப்படாமல் போகலாம் என்று ஒருமுறை மகள் விளங்கப்படுத்தினவள். அப்படிப் பார்த்தால் இன்னும் நிறைய நேரம் இருக்குத்தான். ஆனால் பொடியன் எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டுத் தங்கச்சியாரை ஒரு ஐந்து நிமிடம் பார்த்தால் தானே மற்ற அலுவல்களையும் பார்க்கலாம். வீடு கூட்டுவது சுவாமி கும்பிடுவது சமைப்பது சாப்பிடுவது போன்ற வேலைகளைக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு செய்தாலும் குழந்தையையும் வைத்துக்கொண்டு செய்ய முடியாத ஒருசில வேலைகளும் உண்டு.

ஆச்சிக்கு இப்பவும் வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஒருமுறை இருந்து பார்க்கலாம் தான் .பெட்டையை இறக்கி விட்டால் பேயடிச்சதைப் போல குழறும். பிறகு ஆத்தேலாது. அதுக்குப் பயந்து ஆச்சி அடக்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.

தம்பி குஞ்சு எழும்பு மோனை! பள்ளிக்கூடத்துக்குப் போகவேணுமல்லோ. என்னை விடுங்கோ அம்மம்மா. அப்படிச் சொல்லக்கூடாது ராசா. எழும்பு அப்பு! நான் பிள்ளைக்கு பாண் பட்டர் எல்லாம் பூசி வைச்சிருக்கிறன். எனக்கு பாண் வேண்டாம் அம்மம்மா. சூப் தான் வேணும். இனிச் சூப்பு காய்ச்ச நேரமல்லோ போய்விடும். அம்மா பாண் தானே குடுக்கச் சொன்னவள்? நேற்றும் சூப்புத்தானே குடிச்சது. நான் பிள்ளைக்கு இரவு காய்ச்சித் தாறன். அம்மம்மா எனக்குச் சூப் தான் வேணும். ஒரு சொல்வழி கேளாத பிள்ளை எழும்பிவா காச்சித் தாறன்.

சூப்பு என்றதும் தான் பரிமளம் ஆச்சிக்கு சடாசு அண்ணரின் மணியம் பெண்சாதி போனிலே சொன்னது நினைவுக்கு வந்தது. பரிமளம் அக்கா ஒரு சிறங்கை கொத்தமல்லி நாலைந்து மிளகு கொஞ்ச வெந்தயம் இரண்டு பல்லு உள்ளி கடுக சீரகம் எல்லாவற்றையும் இலேசாக வறுத்து எடுத்து கோப்பிக் கிறைண்டர் இருக்கல்லோ அதிலே போட்டு இரண்டு தரம் அரைத்துப் போட்டு தண்ணியைக் கொதிக்க வைத்து அவித்துக் குடி. துடிமன் தலைச்சுற்று எல்லாம் ஒரு நாளிலே பறக்கும் கண்டியோ. ஆதை விட்டுப் போட்டு இங்கே ஒன்றும் செய்ய மாட்டாய் அக்கா என்று சொன்னது. இன்றைக்கு அதையும் ஒருக்கால் செய்து குடித்துப் பார்க்க வேணும். இந்தப் பொல்லாத இருமல் ஒன்றுக்கம் நிக்குதில்லையே ஆச்சி நினைத்துக் கொண்டாள்.

எல்லாம் சரிதான். ஆச்சிக்கு கிரைண்டர் போடத் தெரியாது. சுpன்னக் கோப்பிக் கிரைண்டர் என்றால் சுகம். முகளிடம் இருக்கும் கிரைண்டர் வேறு மாதிரி. பெரிசு. மகள் போட்டுவிட உழுந்து அப்படி அரைத்துத் தான் ஆச்சிக்கப் பழக்கம். பொடியன் பள்ளிக்கூடம் போவதற்கு முதல் கேட்டு வைத்துக் கொண்டால் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்து குடிக்கலாம்.

எடதம்பீ! மோனே! இந்தக் கிரைண்டர் எப்படிப் போடுறது என்று சொல்லு ராசா.
அம்மம்மா இங்கே பாருங்கோ இந்த வயரைப் பிளக்கிலே இப்படிக் குடுங்கோ. பிறகு எதைக் கிரைண்ட் பண்ணப் போறியளோ அதைப் போட்டு மூடியாலே மூடிப்போட்டு இப்படி அமத்துங்கோ இப்ப வேலை செய்யுதல்லோ
சரிசரி நீ சாப்பிட்டுப் போட்டு இறங்கு. நான் பிறகு வந்து செய்யுறன். அம்மாடி உனக்கு சூப்பு ஆறட்டும் அண்ணாவை விட்டுப் போட்டு வந்து குடிப்பம்.
ஆச்சி முகம் கழுவிக்கொண்டு வெளியாலே இறங்கிய பொது எட்டுமணி. அம்மா பள்ளிக்கூட வாசலிலே விட்டுப் போட்டு உள்ளே போறானோ என்று பார்த்துப் போட்டுத் தான் நீங்கள் வரவேணும். தற்செயலாக இவன் வாசலிலே நின்று ஏமலாந்த ஆராவது பிடிச்சுக்கொண்டு போய்விடுவான்கள் கவனம் என்ன? மகள் முதல் நாளே சொன்னவள். பேரன் உள்ளே போக ஆச்சி திரும்பி நடந்தாள். குடிநீர் வெறும் வயிற்றிலே குடிச்சால்தான் நல்லது என்று ஆச்சி இன்னமும் தேத்தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. பொடியைப் பதினொன்றரைக்குப் போய் கூப்பிடுவதற்குள் குடிநீரும் அவிச்சு பாத்திரங்களும் கழுவி கறியளும் வைக்க நேரம் காணுமா? காணும் காணும் ஆச்சி தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
குழந்தைக்கு சூப்பைக் கொடுத்து முடித்து விளையாட இருத்திவிட்டு ஆச்சி ஒரு சிறங்கை கொத்தமல்லியை எடுத்து மிளகு சீரகத்தோடு இரண்டு செத்தல் மிளகாயும் சேர்த்து வறுத்தாள். புதுச் செத்தல் ஆக்கும். சூடு பட்டவுடன் மிளகாய் புகைச்சூழ்ந்து இருமியது. ஆச்சி எல்லாவற்றையும் இறக்கி ஆறவிட்டாள். கிரைண்டரிலே போட்டுப் பேரன் சொன்னது போல அமர்த்தினாள். கிரைண்டர் வேலை செய்யவில்லை. ஆச்சிக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. அரைக்காட்டில் என்ன முழுசாகப் போட்டு அவிச்சுக் குடிப்பம் என்றுதான் ஆச்சி முதலில் எண்ணினாள். ஏதற்கும் பொடியன் இன்னும் ஒன்று ஒன்றரை மணித்தியாலத்திலே வந்திடும் கேட்போம் என்று நினைத்தவளாக மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
குடிநீர் பொருட்களை அப்படியே கிரைண்டரோடு தள்ளிவைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவினாள் ஆச்சி. அதற்குள் பேத்தி அஜி அவித்து அரித்து பக்குவப்படுத்தி வைத்த மா வாளிக்குள் அரிசியை அள்ளிக் கொட்டி விட்டது. ஆச்சிக்கு இன்னொரு வேலை கூடி விட்டது. இங்கே விடு பிள்ளை என்று அரிசி அளவு பேணியைப் பறித்ததும் குழந்தை அழத் தொடங்கியது.
ஆச்சி நேரத்தைப் பார்த்தாள். இன்னும் பத்து மணி ஆகவில்லை.பத்து மணிக்குத்தான் மகள் முதல் டெலிபோன் எடுக்கிறவள். அவள் போன் எடுக்கும் போது குழந்தை அழுதால் பிள்ளையை என்ன செய்யுறியள் என்றுதான் முதலில் கேட்பாள். அந்தக் கேள்விக்குப் பயந்து குழந்தையைப் பத்து மணிக்கு அழ விடுவதில்லை ஆச்சி.

ஆச்சி பார்த்தாள். இன்றைக்கு என்ன சமைப்பது? மருமகனுக்கு கத்தரிக்காய் பிடிக்காது. தக்காளிப்பழம் கிரந்தியாம். உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம் என்று டாக்டர் சொன்னவராம். முருக்கங்காய்க் கறி வைக்கலாம். கீரை காச்சலாம். கோழிக்கால் இருக்குத்தான். ஒரு முறை சமைத்து வைத்ததற்கு கொம்மா ஏன் தெரியாத வேலைக்கெல்லாம் போறவ? இதை எப்படித் தின்னுறது? என்று மருமகன் சத்தம் போட்டது ஆச்சியின் காதிலும் விழுந்து விட்டது. அதற்குப் பிறகு ஆச்சி அந்த வேலைக்கெல்லாம் போவதில்லை.
முன்பெல்லாம் பன்னிரண்டு மணிக்கு முன்பே ஆச்சி சமைத்துப் போடுவாள். ஆனால் வேலையாலே வந்து சாப்பிட சோறு காய்ந்து போகுது என்று மருமகன் மகளுக்குச் சொல்லி மகள் தனக்குச் சொன்ன பிறகு ஆச்சி கறிகளை மத்தியானமும் சோற்றை மூன்று மணிக்குப் பிறகும்தான் போடுறவள். ஆனால் ஆச்சிக்கு வேளைக்கப் பசிக்கும். அதனால் அனேகமாக முதல் நாள் மிஞ்சும் சோற்றைச் சூடாக்கி ஆச்சி சாப்பிட்டு விடுவாள். பேரனுக்கும் சிலவேளை அதுதான்.
ஆச்சி திரும்பவும் முகம் கழுவப் போனாள். பிள்ளைகளின் உடுப்பு மகளின் உடுப்பு என்று எல்லாமே மூன்று நாட்களாக வாளிக்குள் கிடந்து புளித்து மணத்தது. அவளாலே ஏலாது என்றாலும் ஒருவரும் திரும்பிப் பார்க்காத அவற்றை தானும் அலம்பிப் போடாமல் வர மனதுக்கு ஒரு மாதிரியாய் கிடந்தது. எல்லாவற்றையும் துவைத்துப் பிழிந்து குளியலறைக் கம்பியிலே காயப் போட்டுவிட்டு நிலத்திலே குனிந்து தண்ணீh சொட்டு விழுகிறதா என்று பார்த்தாள் ஆச்சி. தண்ணீர் சொட்டுப் போடும் இடங்களில் பழந்துணிகளை விரித்து விட்டு முகம் கழுவிக் கொண்டு சுவாமிப் படத்துக்கு முன்னால் வந்தாள்.

முருகா! என்ரை பிள்ளை மருமகன் பேரப்பிள்ளைகள் எல்லாரும் நல்லாக இருக்க வேணும். ஒரு நோய் நொடி வரப்படாது. விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள். பத்து மணி. இப்ப போன் வரும்.


கலோ அம்மா என்ன செய்யுறியள்? இருக்கிறன் பிள்ளை. அஜி என்ன செய்யிறாள்? விளையாடுறாள்! வடிவாகச் சாப்பிட்டவளோ? அவள் எங்கே மோனை சாப்பிடுகிறது. தமையனுக்குக் காச்சின சூப்பிலே கொஞ்சம் குடிச்சாள். இதைச் சொல்வதற்குள் ஆச்சி மூன்று முறை இருமியிருப்பாள். டெலிபோனிலே கேட்டிருக்கும். மன ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை! ஆச்சிக்கும் கவலைதான். சரியம்மா நேரமாகுது. நான் பிறகு எடுக்கிறன். ஆச்சி போனை வைத்தாள். தேத்தண்ணீர் ஊற்றிக் குடித்தாள். குடிநீர் குடித்தால் சுகமாக இருக்கும். அதற்குக் கொடுப்பனவு இல்லைப் போலும்.

ஆச்சி பேரனுக்கு மிளகாய் போடாமல் பால்கறி ஒன்று வைத்தாள். நேரம் பதினொரு மணி. அவளுக்கு மனதிலே சந்தோசம். பன்னிரண்டு மணிக்குப் பொடியனைக் கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கும் போது எப்படியும் இந்தக் குடிநீர்ப் பிரச்சனையைப் பார்த்துப் போட வேணும். ஆச்சி சேலையை உடுத்தாள். வெளியாலே மழைக் குணமாய்க் கிடந்தது. குழந்தைக்குக் கம்பளி உடுப்புப் போட்டுக் கட்டினாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இறங்கினாள்.

பொடியனைத் திரும்பவும் கொண்டுபோய் விட்டுப் போட்டு வரும் போது தெரு மூலையில் காயிதம் பார்க்க வேணும். இல்லாவிட்டால் இன்றைக்கு கடிதமும் பார்க்க நேரமில்லாமல் மணித்தியாலக் கணக்கிலே போன் கதைச்சு இருக்கிறியள் போலக்கிடக்குது என்று சொல்லி மகள் சிரிக்கும் போது சரியான கவலையாக இருக்கும். தெரிந்தவர்கள் எடுக்கும் டெலிபோன்களே வயது முதிர்ந்த சனங்களுக்கு ஆறுதலான விசயம் என்பதை இந்தப் பிள்ளையும் உணரும் ஒரு நாள் வருந்தானே ஆச்சி நினைத்துக் கொள்வாள்.


பள்ளிக்கூடம் விடமுன்பே போய் ஆச்சி ஐந்து பத்து நிமிடங்கள் காத்துக் கொண்டு நிற்பது வழக்கம். அப்படி நிற்கும் போது சில தமிழ்ச் சனங்கள் பேரப்பிள்ளைகளைக் கூப்பிட வருவார்கள். அவர்களின் நடை உடை பாவனையைப் பார்க்கும் போதும் கதைகளைக் கேட்கும் போதும் தான் கொத்தடிமையோ என்ற எண்ணம் கூட ஆச்சிக்கு ஏற்படுவதுண்டு.

வந்த புதிதிலே விசயம் தெரியாமல் ஆச்சியும் கொஞ்சம் முரண்டு பிடித்தவள் தான். சத்தமாகக் கதைத்தவள் தான். அதற்காக மாதக் கணக்கிலே மகள் கதைக்காமல் இருந்ததும் மருமகன் காசு கொடுத்துப் பிள்ளைகளைப் பக்கத்து வீட்டிலே பார்க்க விட்டதும் ஆச்சிக்குப் பெரிய துன்பமாகப் போய் விட்டது. எல்லாவற்றையும் விடப் பேரப்பிள்ளைகளைத் தன்னுடன் கதைக்க விடாமல் தடுத்து வைத்திருந்த அந்த நாட்களை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சிக்குத் தேகமெல்லாம் நடுங்கும்.

இப்போதெல்லாம் ஆச்சி அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டு இருந்து விடுவாள்.
மோனே! கிரைண்டர் வேலை செய்யேல்லையடா! பேரன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்த ஆச்சி சொன்னாள். கையைத் துடைத்துக் கொண்டு கிரைண்டரை என்னவோ செய்யும் பேரனை ஆசையோடு பார்த்தாள்.

அம்மம்மா! நீங்கள் கிரேஸி. சுவிச்சைப் போட்டால் தானே பவர் வரும். கிச்சின் லைட்டைப் போடுங்கோ. இப்ப பாருங்கோ கிரைண்டரிலும் சிவப்பு லைட் எரியுதல்லோ இனி வேலை செய்யும் அம்மம்மா!

எட கடவுளே நான் அதை யோசிக்கவில்லை அப்பு. பகலிலே லைட்டு எரிஞ்சால் கொம்மா பேசுவாள் என்று பயந்து நான் தான் நிப்பாட்டினனான். பிறகு மறந்து போனன். உப்பிடித்தான் சில வேளை கேத்திலையும் வைத்துப்போட்டு இருந்து கொதிக்குது கொதிக்குது என்று இருந்து ஏமாறுறது.

அம்மம்மா! நான் கிரைண்ட் பண்ணித் தரட்டோ? குஞ்சு! பிள்ளைக்கு மிளகாய் கண்ணெரியும். தும்மும்! நீ விடு ராசா நான் உன்னைக் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்யுறன்.

ஆச்சி பள்ளிக்கூடத்தில் இருந்து ஓட்டமும் நடையுமாக வந்தாள். வரும் போதே குழந்தை வழியில் நித்திரையாகி விட்டது. மெதுவாகக் கொண்டுபோய் மேலே கிடத்திவிட்டு பூனை போல இறங்கி வந்தாள். அடுப்பிலே தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். சிறிது உப்பும் போட்டாள். கிரைண்டரை இழுத்து இடக்கையால் வயிற்றோடு அணைத்துக் கொண்டு வலது கையால் மூடியைப் போட்டு அழுத்தினாள். சத்தத்துக்குப் பிள்ளை எழும்பி விடுகிறதோ தெரியாது. அது வேலை செய்யவில்லை. கிரைண்டர் தட்டுப்பட்டு மின் தொடர்பை இழந்திருந்து.


மூடியை எல்லாப் பக்கத்துக்கும் திருப்பிப் பார்த்தாள் ஆச்சி. ஒரு பலனும் இல்லை. கிடக்கட்டும். தற்செயலாக உடைந்தாலும் அது பிறகு கரைச்சல் பிடிச்ச வேலையாகப் போய்விடும். பொடியனே வரட்டுக்கும்.

ஆச்சி குக்கரைக் கழுவி அரிசி போட்டாள். அடுப்பை நிறுத்திவிட்டு நிலமெல்லாம் கூட்டி அள்ளினாள். குழந்தை அஜி சிதற அடித்திருந்த விளையாட்டுச் சாமான்களை எல்லாம் பொறுக்கி ஒழுங்கு படுத்தினாள். இரவு புட்டு அவிக்கத் தேங்காய் திருவி வைத்தாள். குழந்தை எழுந்து விட்டது. சாப்பாடு தீத்தினாள். ஆச்சிக்கும் பசிப்பது போல இருந்தது. என்றாலும் பொடியனும் வரட்டும் என்று நினைத்துக் கொண்டாள். மூன்றேகால் ஆனது. ஆச்சி திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு இறங்கினாள்.

தம்பீ! நான் இன்னமும் குடிநீர் வைத்துக் குடிக்கவில்லை ராசா! அம்மம்மாவுக்கு நீ ஒருக்கால் அரைத்துத் தா தம்பி!


வாங்கோ அம்மம்மா நான் கிரைண்ட் பண்ணித் தாறன். நீங்கள் இன்னமும் ஒன்றும் சாப்பிடல்லையா? பசிக்கலையா? உங்களுக்கு காச்சலா? அம்மான்ரை டாக்டரிட்ரை பஸ்சிலே போவமா? வாறீங்களா?
கேள்விகளாகவே கேட்டுக்கொண்டு பக்கத்தில் நடந்துவந்த பேரனின் தலையைத் தடவினாள் ஆச்சி. நீ எங்களின்ரை அடி மோனை! அதுதான் உனக்கும் சரியான இரக்க குணம் ராசா! உன்னைப் போலத்தான் செத்துப்போன அப்பப்பாவும்! ஆருக்காவது வருத்தம் துன்பம் என்றால் மனுசன் உயிரை விட்டுப்போடும். அந்தாளின்ரை ஞாபகத்துக்கு நீ இருக்கிற படியால் தான் இந்த வீட்டிலே எனக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது.

அம்மம்மா அழுகிறியளா? ஏன் தலை இடிக்குதா? இல்லைக்குஞ்சு நீ நட!
ஆச்சி திரும்பவும் அடுப்பைப் போட்டாள். பேரன் அரைத்துத் தந்த குடிநீர்ப் பொடியை பழைய பேப்பரில் கொட்டினாள். தேயிலை வடியையும் தேடி எடுத்தாள். ஒரு கிண்ணத்தில் பழப்புளியையும் ஊறவிட்டாள். கிரைண்டரை ஈரத்துணியாலே துடைத்து மூடியையும் கழுவி வைத்தாள். கொதிக்கும் தண்ணீரில் அரைத்தெடுத்தவற்றைக் கொட்ட இருந்த சமயம் அம்மம்மா ஓடிவாங்கோ அஜியின்ரை ஒரு தோட்டைக் காணவில்லை என்றான் பேரன்.

ஆச்சிக்கு வருத்தம் எங்கு போனதோ தெரியவில்லை. அடுப்பை நீறுத்திவிட்டு ஓடி வந்தாள். வலக்காதுத் தோட்டைக் காணவில்லை. ஆச்சிக்குத் தேகம் நடுங்கியது. குழந்தையின் உடுப்பெல்லாம் கழட்டி உதறிப்பார்த்தாள். தனது தாவணிச் சேலை மடி எல்லாம் உதறிப் பார்த்தாள். இல்லை.

வீட்டிலே விழுந்துதோ வெளியிலே விழுந்துதோ கடவுளே நான் எங்கே தேட? வுந்து ஏசப் போறாளே. இன்றைக்கு வேலைக்குப் போன காசு அநியாயமாகப் போட்டுது என்று சொல்லப் போறாளே! நான் எங்கே போய்த் தேட? குட்டில் தொட்டில் கட்டிவைத்த குப்பை எல்லாம் கிளறி ஆச்சி ஏமாந்து விட்டாள். ஆச்சிக்கு வியர்த்தது. முகம் கழுவின போது பைப்புக்குள்ளே விழுந்துதோ தெரியவில்லையே!

மூன்று தடவைகள் ஆச்சி பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நடந்து பார்த்தாள். கிடைக்கவில்லை. ஆச்சிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எவ்வளவு கவனமாகப் பார்த்தும் கடைசியிலே இப்படி ஒரு குறை கேட்க வேண்டியதாயப் போட்டுது. என்ரை தலை விதி! பேசினால் பேசட்டும். வீட்டு வாசலிலே குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தாள்.

ஏனம்மா உதிலே இருக்கிறியள்?
என்னைப் பேசாதே பிள்ளை. இதின்ரை ஒரு காதுத் தோடு எங்கையோ விழுந்து போச்சுது மோனை. எல்லா இடமும் தேடிக் களைத்துப்போய் இதிலே இருக்கிறன்.

அது தொலையேல்லை. நான் தான் கழட்டி வைச்சனான். உங்களுக்கச் சொல்ல மறந்து போனன்.

நான் குடிநீர் வைக்க வெளிக்கிட்டுப் போட்டு தோட்டைக் காணவில்லை என்று நீ வந்து பேசப் போறாய் என்ற பயத்திலே இதிலே குந்திக்கொண்டு இருக்கிறன்.

உங்கே மல்லி ஒன்றும் அவிக்க வேண்டாம். மல்லி மணம் ஒரு கிழமை சென்றாலும் போகாது. பிறகு மனுசன் என்னோடைதான் கத்தும்.

ஆச்சி ஒன்றும் பேசவில்லை. பரிமளம்! நீ இங்கே வாம்மா! எனக்குப் பக்கத்திலே வா! என்று ஆகாயத்தில் இருந்து விசுவலிங்க அப்பு அவர்தான் பரிமளம் ஆச்சியின் கணவர் கூப்பிடுவது மட்டும் ஆச்சிக்குக் கேட்கின்றது.

நன்றி ;ஈழத்து கதை தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:06 pm

.இந்த கதைகள் சுமார் 10 வருடங்களுக்கு முன்னார் எழுதபட்டவை . தொடர்ந்து வாசிக்கும்போது .இன்றைய எதிர் கட்சி தலைவர் எழுதிய கதையும் வருகிறது என நினைக்கிறன் . "கொத்தமல்லி தண்ணி ' என்ற கதை . எனவே இவை பழைய பதிவுகள் . புதிய கதைகள்தேடி
இன்னுமொரு திரியில் ஆரம்பிப்பேன்

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 4:16 pm

தீவு மனிதன்
----------------
பார்த்திபன்
--------------
கீழ்வரும் தகவல்கள் சிலவேளை உங்களுக்கு உதவக் கூடும்.

....... அன்ரனிக்கும், வத்சலாவுக்கும், எதிர்வீட்டு சிறீயையும், மஞ்சுளாவையும் கண்டால் பயம்.
...... சாந்தி விரும்பியதால் தயாபரன் திலக்சனையும் கூட்டிக்கொண்டு கனடா போய்விட்டான்.
..... சபாரத்தினமும், கனகேசுவரியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாததிலிருந்து பரதனும், பத்மினியும் வெளியில் போவதில்லை.

நான் மீண்டும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப்பட்டு விட்டேன்.

எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்த்து உயிருடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு செற்றி, ஒரு யன்னல் மட்டும்தான்.

யன்னலூடாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வீடுகள், மரங்களுக்கு அப்பால் மேலே மிக உயரத்தில் வானம். அதன் நீல நிறம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனது தீவின் சுவர்களை நீலமாக்கி வைத்திருக்கிறேன். தரைக்கும் நீலம் விரித்திருக்கிறேன். தவிர நாலு சேட்டு நீலக் கலரில் வைத்திருக்கிறேன்.

எனக்கு வானம், அதன் நீலம் பிடிக்கும். பஞ்சு பஞ்சாகப் போகும் மேகங்கள் பிடிக்கும். எனக்கும் அவற்றுக்கும் இடையில் நீண்ட நீண்ட தூரம். எந்த நெருக்கமோ, உறவோ இல்லை. எனினும் அவற்றை எனக்குப் பிடிக்கும் அல்லது அதனால்தான் பிடிக்குதோ என்னவோ.

கசற் றெக்கோடரிலிருந்து மகாகவியின் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் பாடல் மெல்லிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.

வானம் நீலமாகவே இருந்தது.

பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

அழுகை வந்தது.

எனது தீவில் மட்டும்தான் நான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்றபோதெல்லாம் அணிந்து செல்கிற சிரிப்பை கழட்டி எறிந்துவிட்டு சுதந்திரமாக அழுவேன். யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்.

இப்போதும் அழுதேன்.

முப்பத்தியைந்து வருடங்கள் தாண்டியிருக்கிறேன்.

இதுவரையில் எனது தீவுதான் இடம் மாறியிருக்கிறது. தீவில் எதுவும் மாறவில்லை. என்னாலும் இங்கிருந்து நிரந்தரமாக வெளியே போக முடியவில்லை. எவ்வளவுதான் முயற்சித்தாலும் எனது தீவிற்கே மறுபடி மறுபடி என்னை திருப்பியனுப்பிவிடுகிறார்கள்.

நானும் என்னைப் பல வகைகளில் பலமாக்கி, எச்சரிக்கையாக்கி வைத்திருக்கிறேன். இருந்தும் என்ன... நான் தோற்றுப் போவதுதான் யதார்த்தம். இல்லையில்லை யதார்த்தம்தான் என்னைத் தோற்கடிக்கிறது.

அழுவதால் ஒன்றும் நடக்காது என்பது எனக்குத் தெரியாததல்ல. அதைவிட அழுவதும் எனக்குப் பிடிப்பதில்லை. அழுகை என்ன எனது விருப்பத்தை விசாரித்துக்கொண்டா வருகிறது. தானாக வருகிறது இப்போது வருவதைப் போல. தொண்டை பாரமாகியிருந்தது.

அழுதேன்.

யன்னலால் வானத்தைப் பார்த்தபடி அழுதேன்.

எங்கள் வீட்டு சேவலுக்கும், பேட்டுக்கும் எப்போது சண்டை ஆரம்பித்தது என்று எனக்கு ஞாபகமில்லை. நான் அவதானித்த நாளிலிருந்து அவை ஒன்றையொன்று உர்ரென்று முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருந்தன. குஞ்சுகள் தங்கள் பாட்டில். இத்தனைக்கும் அவை ஒரே கரப்புக்குள்தான் இருந்தன.

இந்த ஏனோ தானோவை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி அந்தச் சின்னக் குஞ்சுகளை இந்த நிலமை பாதி;க்காதா என்பதுதான்.

பாதித்தது.

எனக்கென்று ஒரு தீவை நான் முதன் முதலில் அமைத்துக் கொண்ட காலம் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.

அப்போது நான் சின்னப்பிள்ளை.

வெளியே போய் என்னைப் போலிருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து கள்ளன் பொலிஸ் விளையாடினேன். போளை அடித்தேன். கோவில் கட்டித் தேர் இழுத்தேன். இலந்தைப்பழம் பொறுக்கினேன். பிள்ளையார் பந்து எறிந்தேன்.

அவர்களைப் பெற்றோர் எனக்கும் அவர்களுடன் சேர்த்து அன்பு காட்டி உபசரிப்புச் செய்தனர். அவர்கள் வாசலில் நான் தினமும் வரம் கேட்டேன்.

எனக்கும் சில விசயங்கள் பிடிபடும்வரை எல்லாம் உண்மையென்றுதான் நம்பினேன்.

எனது ஏக்கத்தை வைத்து பெரிசுகள் வேடிக்கை பார்ப்பதை உணர எனக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை.

எங்கள் தோட்டப் பயிரை மட்டும் வெள்ளாடு மேய்ந்ததாக கதையளந்தார்கள். எங்கள் தோட்டத்திற்கு மட்டும் வேலியில்லையென்று சொல்லிச் சிரித்தார்கள்.

நான் கூசிக் குறுகிப் போனேன்.

இது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னைப் பிளந்து, கதை பிடுங்கி, தங்களுக்குத் தீனி தேடுவதற்காக என்னை அணைத்து தங்கள் கூட்டுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு அந்தச் சமூகப் பிராணிகள் ஓங்கி ஊளையிட்டன.

நான் சிதைந்து போனேன்.

அழுகை வந்தது.

இந்தப் பிராணிகளுக்கு முன் அழக் கூடாது. இவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது. இந்த உலகம் கெட்டது. இனி எனக்கென்று நானே ஒரு உலகம் செய்து கொள்ள வேண்டும். எனக்கே எனக்கென்று. அதற்குள் எவருக்கும் இடமில்லை.

பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த சின்ன அறைக்குள் எனது கட்டிலைப் போட்டுக் கொண்டேன். கதவைச் சாத்தினேன். இரண்டு யன்னல்களில் ஒன்றைப்பூட்டி ஒன்றைத் திறந்து வைத்தேன்.

எனது தீவு தயார்.

வீடு பழைய கால சுண்ணாம்புக் கட்டிடம். அகலமான சுவர்கள். யன்னலில் ஏறி இருக்கலாம். ஏறியிருந்தேன். வேலிக்கப்பாலே என்னைப் போலிருந்தவர்கள் கிட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

போகவா? சிரிப்பார்கள். போகக் கூடாது. போக மாட்டேன். இவர்களையேன் நான் பார்க்க வேண்டும்.

மேலே பார்.

அழகான வானம்.

நீல நிறம்.

அதன் கீழாக வெண் பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் சில நேரங்களில் சில உருவங்களாக மாறும்.

இப்போது அவர்கள் போளையடிப்பார்களா? வாத்தியார் வீட்டு மாங்காய் மரத்திற்கு கல்லெறியப் போயிருப்பார்களா?

இந்த யோசனையேன் எனக்கு?

மேகங்கள் எவ்வளவு அழகு. இத்தனை வேகமாய் அவை எங்கே போகின்றன?

இப்போது அவர்கள் மாங்காயைக் கல்லில் குத்தி, உப்புத்தூள் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஏன் எனக்கு அழுகை வருகிறது?

கண்ணீர் கண்களை மறைக்க முயன்றாலும் நான் யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி மேலே ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு ஆகாயம் பிடித்தது. அதன் நீலம் மிகவும் பிடித்தது. ரசித்துப் பார்த்தேன். பார்த்துக் கொண்டேயிருந்தேன். பள்ளிக்கூடம் போய் வந்து மிச்ச நேரங்களில் எனது தீவுக்குள் வந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.

வெளியே எங்கும் போவதில்லை.

யாரையும் சந்திப்பதில்லை.

எனக்குத்தான் எனது தீவு இருக்கிறதே.

'.... மனிதன் ஒரு சமூக விலங்கு. இந்த சமூக விலங்குகள் ஒரு கூட்டமாக வாழும். இந்த விலங்குகளுக்கு ஒன்றையொன்று தேவை. அவ்வப்போது இவை தமக்குள் கடித்துக் குதறினாலும் தமக்குள் அனுசரித்துப் போக வேண்டியது இயற்கை விதியாகும்....' என்று ஆசிரியர் பாடசாலையில் படிப்பித்தார்.

எனக்கு முழுதாகப் புரியிவில்லை. என்னை ஏன் இந்த சமூக விலங்குகள் தம்முடன் சேர்த்துக் கொள்வதில்லை? என்னைத் தேவையில்லையா?

நான் எனது தீவிலிருந்த நேரங்களிலெல்லாம் யோசித்துப் பார்த்தேன். எப்படியும் ஏனைய பிராணிகளுடன் கூட்டுச் சேர்ந்தால்தான் வாழ முடியும் என ஆசிரியர் நம்புகிறாரா?

எதற்கும் எனது காயங்கள் ஆறட்டும். இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கலாம். அதுவரை இந்தத் தீவே எனக்குப் பாதுகாப்பு. எவ்வளவு சுதந்திரமான தீவு இது. சொல்லாலும், சிரிப்பாலும் காயப்படுத்துகிற எதிரிகள் இங்கு வர அனுமதியில்லை.

எனக்கா ஒன்றும் இல்லை.

எவ்வளவு பரந்த ஆகாயம். அதன் நீல நிறம். அதன் கீழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மேகங்கள். எவ்வளவு அழகு.

கடல்கள் பல கடந்து நான் நாடு கடத்தப்படுவேன் என கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

புதிய இடம்.

புதிய மனிதர்கள்.

புதிய சமூகம், புதிய விலங்குகள்.

இங்கே நான் மற்றவர்களுடன் கூட்டாக வாழ முயற்சித்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் சரிவரக் கூடும். அப்படி நடந்தால் எவ்வளவு நல்லது. எனக்கென்று ஒரு தீவை நான் உருவாக்கத் தேவையில்லை. தனித்திருந்து வானம் பார்க்கத் தேவையில்லை.

என்னைப் புனரமைக்கும் முயற்சியில் முழுமையாக இறங்கினேன். என்னுடன் நானே சண்டை பிடித்துக் கொள்வதென்பது அவ்வளவு சுலபமானதில்லை. காயங்கள் விரைவில் காய்ந்து விடுவதில்லை. அவற்றை மூடுவதற்காக சிரிப்புச் செய்து அணிந்து கொண்டேன்.

புது ஆரம்பம்.

அவனை நான் சந்தித்தது தற்செயல்தான். அப்போது அவன் கவிதைகளை மனதில் வைத்திருந்தான். எனக்குச் சொல்லிக் காட்டினான். எனக்கு உடனேயே கவிதைகளுடன் அவனையும் பிடித்துப் போயிற்று. அவ்வளவு சீக்கிரத்தில் அவனுக்கும் எனக்கும் நெருக்கம் வந்தது அதிசயம்தான். எனது ஏக்கமும், காயங்களும், அவனது பண்பும் இதற்கு காரணமாயிருக்கலாம்.

நாங்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் விரும்பும் உலகையும், மனிதர்களையும் எழுத்தால் செய்தோம். எமது உலகில் எமது பிடித்தமானவைகளுக்கு மட்டும் இடமளித்தோம்.

இந்த உலகம் சரிவருமா? என்று எங்களை நாங்களே கேட்டு, கடைசியில் நாங்களாவது அங்கு போய் சீவிப்போம் என்று உறுதியெடுத்தோம்.

நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கென்று தனித் தீவு இனித் தேவையில்லை. வெளியே மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் சேர்ந்து கொள்வேன். அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்வார்கள்.

எனது காயங்கள் மாறாவிட்டாலும் மறந்து போயின.

நாங்கள் ஒன்றாகக் கனவு கண்டோம். ஒன்றாக எழுதினோம்.

பிறகு அவன் தனக்கென ஒரு துணை தேடிக் கொண்டான். எனது உலகம் இன்னும் விரிந்தது. ஆதரவின் இன்னொரு பரிமாணம் கிடைத்தது. நான் மறுபடி ஒருமுறை குழந்தையாகினேன். என்ன ஆனந்தம்.

அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

இப்போது எனக்கு மூன்றாவது பரிமாணமும் கிடைத்தது.

எனக்குக் குழந்தைகள் பிடிக்கும். மிகவும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் உலகத்தில் வாழ எனக்கு இன்னும் பிடிக்கும்.

குழந்தையை எனது முதுகில் ஏற்றி யானையாகினேன். அதுக்குச் சிரிப்புக் காட்ட குரங்கானேன். அடி வாங்கினேன். மூத்திரத்தால் நனைந்தேன். அது ஓடி வந்து என்னில் தாவி ஏறும்போது எனக்கு எல்லாம் மறந்து போனது.

என்ன இனிமையான உலகம். அதிசயங்கள் என்னெவெல்லாம் கொட்டிக் கிடக்கின்றன.

இந்த மனிதர்களுடன் நான் கொண்டிருக்கும் உறவுக்கு எனக்குப் பெயர் தெரியவில்லை. அது ஏதோ ஒன்று.

எல்லாம் நிரந்தரமா என்ன?

நாங்கள் வேறு உலகம் போகின்றோம் என்று ஒருநாள் அவன் புதுக் கவிதை எழுதினான்.

நான் அதிர்ந்து போனேன்.

அப்ப நாங்கள் குடியிருப்பதற்காகச் செய்த உலகம்? என்று கேட்டேன்.

இப்போது நாங்கள் இருப்பது உண்மை உலகம். இனி நாங்கள் போகப் போவதும் உண்மை உலகம்தான். உண்மையைப் புரிந்து கொள். யதார்த்தமாய் வாழப் பழகிக் கொள் என்றான்.

எனக்குப் புரியவில்லை.

உலகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் வரைவிலக்கணங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. என்னைத் திரும்பவும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப் போகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை. ஐயோ.. வேண்டாம் தயவு செய்து வேண்டாம். யாரின் காலை நான் பிடித்துக் கெஞ்சலாம்.

எனக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்று இரந்தேன்.

உலகம் பெரியது. தவறு யாருடையது என்று கேட்டான்.

இவர்களுக்குத் தெரியுமா எனது தீவைப் பற்றி... அதன் தனிமை பற்றி... அதன் கொடுமை பற்றி... நான் எவ்வளவு கடுமையாகப் போராடி மிகவும் கஸ்ரப்பட்டு எனது தீவிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். இப்போது மீண்டும் அங்கே கொண்டுபோய் விடப் போகிறார்கள். எனது உணர்வுகளுக்கு மொழியில்லை என்பதால்தான் அது யாருக்கும் கேட்கவில்லையா?

உண்மையில் கேட்கவில்லையா?

நாங்கள் போய் வருகிறோம் என்று எல்லோருமாகப் போய் விட்டார்கள்.

குழந்தையும் போய்விட்டது. எனக்கு எல்லாமாக இருந்தது. அதுவும் போய்விட்டது. இப்போது யானையும், குரங்கும்தான் மிஞ்சிப் போயிருக்கின்றன.

நான் அவர்களை விளங்கிக்கொள்ள முயற்சித்தேன்.

அவர்கள் வாழ்தலை அவர்கள்தான் தீர்மானிக்கலாம்.

அவர்கள் குழந்தையை அவர்கள்தான் வைத்திருக்கலாம்.

அவர்கள் வானத்தில் பறந்த கையோடு நான் துண்டு துண்டாகச் சிதறிய நிலையில் எனது தீவுக்குத் திரும்ப வந்தேன்.

நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது எனது தீவு. ஒரு செற்றி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு புத்தக அலுமாரி, ஒரு யன்னல் இவை மட்டும்தான் இப்போது என்னோடு.

செற்றில் அமீரின் இமாஜினேசனை ஒலிக்க விட்டு, ஒரே ஒரு யன்னலின் வழியாக வெளியே வெறித்துப் பார்த்தேன்.

எனக்கு மிகவும் பழகிப் போயிருந்த, இடையில் பலகாலம் பார்க்காமலிருந்த அதே ஆகாயம். அதே நீல நிறம்.

அழுகை வர வாய்விட்டு அழுதேன். தொடர்ந்து அழுதேன்.

ஏன் எனக்கு இப்படி?

நான் மட்டுமேன் தீவில்?

வாழ்தல் நீண்டது. நான் மறுபடி என்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். எனக்கான சொந்தத்தை நான் மறுபடி வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

வெளியே, மேலே.. அதே ஆகாயம். அதன் நீல நிறம்...

அந்தக் குழந்தை இப்போது யார் முதுகில் ஏறும்? என்னைத் தேடமாட்டாதா?

அழுகை அழுகையாக வந்தது.

ஏன் திரும்பத் திரும்ப அதையே நினைக்க வேண்டும்.

இதோ பார். மேலே பார். எவ்வளவு பரந்த ஆகாயம். அதன் கீழாக மிதந்து கொண்டிருக்கும் மேகங்களின் அழகைப் பார்.

அவர்கள் இப்போது போன உலகத்தில் யாருடன் சேர்ந்து கூழ் குடிப்பார்கள்? யார் காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பார்கள்?

அழுகை அழுகையாக வந்தது.

செற்றியில் விழுந்து அதை நனைத்தேன்.

எனது தனிமையை விரட்ட ஒரு புது வழி கண்டுபிடித்தேன். வேலை. வேலை. வேலை.

தகரங்களையும், இரும்புத் தூண்களையும் பத்து மணித்தியாலத்திற்கு மேலாகச் சுமக்கையில் வேறு பாரங்கள் எப்பிடி நினைவு வரும்? வேலையை எனக்கான போதை மருந்தாக்கிக் கொண்டேன். வேலைத்தளம் வேறு உலகம். அங்கு மனிதர்களைவிட பொருட்கள்தான் அதிகம் இருந்தன. உணர்வுப் போராட்டங்கள் எதற்கும் இடமில்லை. சுகமான பாரங்கள்.

தனிமையில் இருக்கின்ற நேரங்களைக் குறைத்து என்னை எதிலாவது ஈடுபடுத்துகையில் ஒரு வித வெற்றி இருக்கத்தான் செய்கிறது.

அதைவிட இருக்கவே இருக்கிறது எனது தீவு.

இனிமேல் கவனமாயிருக்க வேண்டும். எனது தீவை விட்டு வெளியே போக வேண்டி வரும்போது வெளி உலகோடு அவதானமாயிருக்க வேண்டும். மறுபடி என்னோடு உறவு சேர்த்து தங்களுக்குத் தேவையானபோது அறுத்துக்கொண்டு போவதற்கு அல்லது யதார்த்தம் அப்படி என்று சொல்வதற்கு விடக் கூடாது. யாரோடும் சேர வேண்டாம். ஏமாற்றுவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். என்னைத் தங்கள் உலகத்தில் சேர்த்துக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொண்டு சமயம் வரும்போது என்னை மறுபடி எனது தீவுக்கே திருப்பியனுப்பி விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது யதார்த்தம். எனக்கு மறுபடி மறுபடி செத்துவிடுவது.

வெளியே போகையில் எனது சிரிப்பை எடுத்து அணிந்து கொண்டேன். எனது ஒரேஒரு கவசம் அதுதான்.

என்னைத் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னாள் அவள்.

இப்படி எனக்குச் சொல்லப்பட்டது இது முதல் தடவை. நான் திகைத்துத்தான் போனேன். நிலைகுலைந்து போனேன். பலவீனமான இடங்களில்தான் தாக்குகிறார்கள்.

எனக்கு நிறைய அனுபவங்கள். எனது பழைய காயங்கள், எனது தீவு இவைகளை நினைத்து இம் முறை நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன். மறுபடி மறுபடி பிய்ந்து போனால் எப்படித் தாங்குவேன்.

அவள் விருப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் தேவை. எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும். சும்மா சொல்லக் கூடாது. சில விசயங்களில் வெளியுலகம் என்னைக் கெட்டிக்காரனாக்கியிருக்கிறது.

காலத்தை இழு இழு என்று இழுத்தேன்.

இப்போது எனக்கு அவனையும் பிடித்திருக்கிறது என்றாள்.

எவ்வளவுதான் நான் எச்சரிக்கையாக இருந்தாலும் கவலை வருவதைத் தடுக்க முடியவில்லை. சகித்துக் கொண்டேன். இதென்ன புதிசா எனக்கு.

எனக்கு குழப்பமாயிருக்கு முடிவெடுக்க என்றாள்.

ஆக, ஒரு சிக்னல் தரப்படுகிறது தனக்குத் தேர்வு இருப்பதாக. இம் முறை நான் தப்பிவிட்டேன். என்னை யாரும் எனது தீவுக்குத் திருப்பியனுப்ப முடியாது. ஏனென்றால் அங்கேதானே இன்னும் நான் இருக்கிறேன்.

சில காலம் செல்ல, அவள் தனது துணையுடன் வந்து எனக்கு அறிவுரை சொன்னாள், இப்பிடியே எத்தினை காலத்திற்கு தனியே இருப்பதாக உத்தேசம் என்று.

நான் பதில் சொல்லவில்லை. மற்றவர்களுக்குப் புரியாத பதிலை நான் சொல்லி என்ன லாபம்.

எனது தீவுக்கு வந்து, யன்னலூடாக ஆகாயத்தைப் பார்த்தபடி ஓரு பாட்டம் அழுது தீர்த்தேன்.

மறுபடி அவளைக் காணவேயில்லை.

தற்செயலாகத்தான் எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் எவ்வளவோ கவனமாக இருந்தும் இது நடந்துவிட்டது. இதுதான் எனது பலவீனம் என்றேனே. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

அவர்களுடன் பழகியதற்கு எனக்கு வழக்கம் போல் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒன்றிவிட்டேன்.

எனது பலவீனம் எனக்கு இப்போது தெரிந்தது. நான் சிறிசாக இருந்த காலங்களில் எனக்குக் கிடைக்காததைத் தேடி மனம் அலைந்து கொண்டிருந்திருக்கிறது. எங்காவது கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். எனது பாதுகாப்பு, எச்சரிக்கையெல்லாம் தூளாகிவிடுகின்றன.

எனக்கு மறுபடி எனது தீவு மறந்து போயிற்று. அந்த யன்னல், நீலவானம், மேகங்கள் .... எதுவும் தேவைப்படவில்லை.

என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பதுபோல் உணர்கையில் நான் உண்மையில் மகிழ்ந்துதான் போனேன்.

அவர்கள் வீட்டிலும் குழந்தை வந்தது.

எனது உலகம் இன்னும் இன்னும் விரிந்தது.

நீண்டகாலத்தின் பின் நான் மீண்டும் யானையாகினேன். குரங்கானேன். ஆனந்தம்.

எப்போதாகிலும் யாராவது என்னிடம், உனக்கென்று சொந்தங்கள் வேண்டாமா என்று கேட்கையில் சிரிப்பு வந்தது. முட்டாள்களா நான் என்ன நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட தீவிலா இருக்கிறேன். நன்றாகப் பாருங்கள். என்னைச் சுற்றிலும் எனக்கு ஆதரவு காட்டும் மனிதர்கள். என்னை நன்றாக அடையாளம் கண்டுகொள்ளும் குழந்தைகள்.

எனக்கும் சந்தோசத்திற்கும் அப்படி ஒரு உறவு. மறுபடி அது நிகழ்ந்தது.

எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீ வந்து போவதை தெருவில் கிடக்கிற கண்கள் கவனித்து வாய்கள் தவறாகப் பேசலாம். அதனால்.... என்று அவன் சொன்னபோது நான் திரும்ப துண்டு துண்டாய் உடைந்து போனேன்.

மீண்டும் உறவு அறுக்கப்பட்டது. மீண்டும் ஒரு நிராகரிப்பு. என்னை எனது தீவுக்குத் திருப்பியனுப்புவதற்கான ஆயத்தம் ஆரம்பமாகிவிட்டது.

என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எனது மொழி உணர்விலிருந்து வெளியில் வருவதற்கிடையில் செத்துப் போனது.

மிகவும் சிரமப்பட்டு எனது சிரிப்பை எடுத்து அணிந்து கொண்டேன். எனது காயங்களை மூடிக் கட்ட என்னிடமிருக்கும் ஒரே ஒரு பான்டேஜ் அதுதான்.

தெருவில் கிடக்கின்ற வாய்களும், கண்களும் இத்தனைநாள் எங்கே போயிருந்தன, இன்றுவரை உங்களுக்கு என்ன செய்தன என்று நான் அவர்களை கேட்க முடியாது.

அவர்கள் குடும்பம், அவர்கள் வாழ்தல் பற்றி அவர்கள் மட்டுமே தீர்மானிக்கலாம்.

இதே தெருவில் இதே வாய்களுடன்தான் நாங்கள் கதைக்க வேண்டும் என்பதும், இதே கண்களைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும் என்பதும்தான் யதார்த்தம் என்று அவர்கள் மேலதிக விளக்கம் தந்தார்கள்.

இப்போதுதான் தெரியவந்த யதார்த்தத்தின் முன் நான் திடீரென ஒன்றுமில்லாதவனாகிப் போனேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் காணாமல் போனார்கள். மழலைச் சத்தம் நான் தொட முடியாத நீண்ட தூரத்திற்குப் போய்விட்டது.

நான் மறுபடி எனது தீவுக்கு திருப்பியனுப்பப்பட்டேன்.

இது நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட எனது தீவு. ஒரு செற்றி, ஒரு புத்தக அலுமாரி, ஒரு செற் என்பவற்றுடன் ஒரு யன்னலும் இருந்தது. அதனருகில் வந்து வெளியே வெறித்துப் பார்க்கிறேன்.

அதே வானம். நீலமாய் மேகங்களால் மூடியும், மூடாமலும் இருக்கிறது.

எவ்வளவுதான் அடக்கி வைத்தாலும் துக்கம் தொண்டையையும் பிய்த்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டது. கண்கள் கன்னங்களை ஈரமாக்கினாலும் வெப்பமாயிருந்தது.

இது எனது தீவு. இங்கு நான் அழலாம். தாராளமாக அழலாம். சத்தம் போட்டு அழலாம். எந்தப் பொய்யான அனுதாபங்களும், பரிதாபங்களும் இங்கு என் மீது படமுடியாது.

நீ எங்களிலை ஒராள் என்று சொன்னார்களே..

மற. மற.

இதோ பார். ஆகாயம். அதன் நீல நிறத்தைப் பார். எவ்வளவு அழகு.

உனக்கும் எங்களுக்கும் இடைவெளி வரக் கூடாது என்றார்களே.

மறந்துவிடு. தயவு செய்து மறந்துவிடு. சொற்களுக்கெல்லாம் உயிர் இருக்க வேண்டுமென்றில்லை. நினைவுகள் என்னைப் பிய்த்து துண்டு துண்டாக்குவதைவிட வேறொன்றும் நடக்காது.

எல்லாவற்றையும் மறக்கத்தான் வேண்டும்.

அதுதானே யாதார்த்தம்?

ஏனோ தெரியவில்லை போட்டோ அல்பம் எடுத்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பார்த்தேன்.

என்னைத் திரும்ப எனது தீவுக்கே திருப்பியனுப்பி வைத்தவர்கள், எனக்கு யதார்த்தம் விளக்கியவர்கள்... எல்லோரும் இருந்தார்கள். எனது குழந்தைகளும் இருந்தார்கள். போட்டோவிலிருந்து இறங்கி வந்து என்னோடு விளையாடினார்கள். என் தலைமயிரைப் பிடித்து இழுத்தார்கள். தோள் மீது ஏறினார்கள். தூக்கச் சொல்லிக் கைகளை நீட்டினார்கள். என்னைத் தேடினார்கள்.

ஏன் மனசு பாரமாகிறது. ஏன் கண்ணீர் தொடர்ந்து வருகிறது. எனக்கு இந்தத் தீவுதான் சாத்தியம் என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுவிட்டதே. பிறகேன் நான் அழ வேண்டும்.

என்னை நான் மறுபடி புனரமைத்துக்கொள்ள வேண்டும். திரும்ப சிரிப்பை அணிந்துகொள்ள வேண்டும். இனிமேலாவது மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். யாருடனும் நெருங்கிப் போகக் கூடாது.

ஆனால்...

எனது பலவீனம் எனக்குத் தெரியும். நான் சின்னவனாக இருந்தபோது எதற்கெல்லாம் ஏங்கினேனோ அது இப்போது கிடைத்தாலும் நான் விழுந்துவிடுவேன். எனது உறுதி, எச்சரிக்கை, பாதுகாப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

என்ன செய்ய?

இன்னொரு யதார்த்தத்தைச் சந்திக்கும்வரை இந்தத் தீவுதான் எனக்குச் சொந்தம்.

அல்பத்தை மூடி வைத்துவிட்டு திரும்ப யன்னலடிக்கு வந்து வெளியே பார்க்கிறேன்.

அந்த வானத்துக்கும் எனக்கும் நீண்ட தூரம். என்னோடு எந்தச் சம்பந்தமும் அதற்கில்லை. அதனால்தானோ என்னவோ என்னால் அந்த வானத்தை ரசிக்க முடிகிறது. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.....

.... கண்ணீர் வரும் வரைக்கும்.


17.10.1998
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 4:18 pm

நெல்லிமரப் பள்ளிக்கூடம்
--------------
நந்தினி சேவியர்
--------------

அந்தப் பள்ளிக்கூடம் கட்டப்பட்ட காலம் பற்றி இவனுக்கு எதுவும் தெரியாது.

இவனது அம்மா அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும், இவனது மாமா குஞ்சியப்புமார் எல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததாகவும் இவன் அறிந்திருந்தான்.

மதுர மரங்கள் சூழப்பெற்ற வயல் வெளித் தாமரைக் குளத்தைத் தாண்டி வரம்பினால் நடந்து ஒரு மண் ஒழுங்கையால் ஏறி இவன் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போயிருக்கிறான்.

பெரிய தாட்டான் குரங்குகள் வாகை மரங்களில் தாவுகின்ற குழைக்கடைச் சந்தியால் திரும்பி கேணியடியால் செல்லும் பிறிதொரு பாதையாலும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு இவன் போயிருக்கிறான்.

சுற்றிவர மாமரங்கள் சூழப்பெற்ற கிடுகால் வேயப்பெற்ற இரண்டு மடுவங்கள் கொண்டது தான் அந்தப் பள்ளிக்கூடம்.

இவனது அப்பு இவனைத் தோளில் உட்கார வைத்து ஒரு சரஸ்வதி பூசைக்கு மறுதினம் அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தது இவனுக்கு ஞாபகம்.

கந்தசாமி, செல்லம், சபாரத்தினம், சந்தியாப்பிள்ளை பூமணி, கோயிலம்மா, ராசலிங்கம், சின்னான் என்கின்ற கதிரவேலு ஆகியோருக்கு ஏடு திறந்ததும் அதே நாள்தான்.

தொய்வுக்கார மீனாட்சியம்மா என்கின்ற ரீச்சர் தான் இவனுக்கு ஆனா, ஆவன்னா, சொல்லிக் கொடுத்த முதல் ரீச்சர்.

பள்ளிக்கூட வாயிலில் நெடுத்து வளர்ந்திருந்த சர்க்கரை நெல்லி மரத்தின் கீழ் வட்டமாக இருந்து ‘அறஞ் செய விரும்பு’ என்று கத்திக் கத்தி ஆத்திசூடி வரிகளைப் படித்ததும் இவனுக்கு நினைவிருந்தது.

வேறு பாடசாலை மாணவர்கள் ‘உமா வாசகம்’ படிக்க இவனும் நெல்லி மரப்பள்ளிக்கூட மாணவர்களும் பாலபாடம், பாலபோதினி படித்ததும் இவனுக்கு ஞாபகத்திலிருக்கிறது.

மிக நோஞ்சானாக இருந்த இவனை நாலாம் வகுப்பு காசிநாதன் ஷகடுகர்| என்று செல்லமாக கூப்பிட்டதும் இவனுக்கு நினைவிருக்கிறது.

முரடான காசிநாதன் பின் நாட்களில் ஷசண்டியன் காசி|யாகியதும் இவனது நினைவிலில்லாமலில்லை. நெல்லிமரப் பள்ளிக்கூடத்தில் இவன் படித்த காலத்தில் பெரிய சூரியகிரகணம் ஒன்று வந்ததும் இவனுக்கு நினைவிருக்கிறது.

பொன்னையா வாத்தியார் கண்ணாடி ஒன்றில் கரும்புகை பிடித்து அதற்குள்ளால் மாணவர்களைச் சூரியன் பார்க்க வைத்ததும் இவன் நினைவில் உண்டு.

பொன்னையா வாத்தியார் கரும்பலகையில் கீறும் பூனைக்குட்டிகளின் படமும் இவனுக்கு ஞாபகமிருக்கிறது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள், அச்சைக்கிளின் பின்புறமுள்ள மருந்துகள் உள்ள பெட்டி எல்லாம் அவனது ஞாபகத்திலுண்டு. பொன்னையா வாத்தியார் ஒரு முறிவு நெரிவு வைத்தியரும், விசகடி வைத்தியரும் கூட.

நெல்லி மரப்பள்ளிக்கூடத்தின் பொறுப்பாளராக - பொறுப்பாளர் போல - அவர் இருந்தாலும் தலைமை ஆசிரியர் பொறுப்பு மீனாட்சியம்மா ரீச்சருக்குத்தான்.

இவன் முதலாம் வகுப்பில் படித்த காலத்தில்தான் தாமரைக் குளத்தடியில் நன்னியரின் மகன் செல்லையன் கண்டங்கருவாலை பாம்பு கடித்து மரணித்துப் போனான்.

பொன்னையா வாத்தியாரின் விசகடி வைத்தியம் சரிவராமல் நீலம் பரிந்து சின்னானின் அண்ணன் செத்துப்போனான்.

சரஸ்வதி பூசைக்கு பூ பிடுங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் இவனும் இவனைச் சேர்ந்தவர்களும்.... பல நாட்கள் தாமரைக் குளத்தடிக்கு போகாதிருந்ததும் இவனுக்கு நினைவிலிருந்தது.

சபாரத்தினம் தண்ணீர் அள்ளி வைக்கும் கரள் பிடித்த வாளியும், பால் பேணியும், அது வைக்கப்படும் குச்சுச் சுவரும் இவனுக்கு நினைவிலேயே இருந்தது.

பூமணி தண்ணீரள்ளி வார்க்க காசியும், கந்தசாமியும், இவனும் கைமண்டையில் தண்ணீர் குடித்தமையும் ஞாபகத்திலேயே இருந்தது.

இவன் அரிவரி முடித்து வகுப்பேறி முதலாம் வகுப்புக்கு வந்த சிலநாட்களின் பின்பு நெல்லிமரப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு புது வாத்தியாரும் ஆங்கிலம் படிப்பிக்கவென பெரிய தோடு போட்ட ரீச்சரும் வந்திருந்தனர்.

காசிநாதன் புதுவாத்தியாருக்கு ஷமுட்டுக்காய் தலைவர்| என்று பட்டப்பெயர் வைத்து கதைத்ததுவும் இவனுக்கு ஞாபகம்.

குண்டான அந்த வாத்தியார் தடிப்பான ஒரு மூக்குக்கண்ணாடி போட்டிருப்பார். காது நிறைய மயிர் சடைத்திருக்கும் அவருக்கு உண்மையிலேயே பெரிய தலை.

பல தடவைகளில் அந்த வாத்தியார் மாணவர்களை பிரம்பால் விளாசியதை இவன் அறிவான்.

பொன்னையா வாத்தியாரின் சாந்த குணத்திற்கு நேர் விரோதம் முட்டுக்காய் தலை பஞ்சாட்சர வாத்தியார்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்திற்கு மேற்கேயுள்ள வேதக் கோயில் கிராமத்தின் மாணவர்களில் பலர் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே படித்தவர்கள்.

ஐந்தாம் வகுப்பு வரையேயுள்ள இந்தப் பள்ளிக்கூடத்தில் மிகக் குறைவான மாணவர் உள்ள வகுப்பு ஐந்தாம் வகுப்புத்தான் அதில் ஐந்து பேரே படித்தனர்.

நெல்லி மரப் பள்ளிக்கூடத்தை உருவாக்கியவர் ஒரு சைவப் பெரியார் என்பதை இவன் அப்போது அறிந்திருக்கவில்லை. இவனது அம்மா இராமு வாத்தியார் என்கிற ஒருவரைப்பற்றி அடிக்கடி கூறியிருப்பதும் இவனுக்குத் தெரியும்.

இவனது அப்பு வேதக் கோயில் கிராமத்திற்கு பெண் எடுக்க வந்தமையால் வேதக் கோயில் கிராமத்தவரானவர்.

இவனது அம்மாவும், மாமாவும் குஞ்சியப்புமாரும் நெல்லி மரப்பள்ளிக்கூடத்தில் தான் படிக்தார்கள் என இவன் அறிந்திருந்தான். இவனது மாமாவும், சின்னக்குஞ்சியப்புவும் மூன்றாம் வகுப்பில் மூன்று வருடங்கள் படித்து பின் படிப்பை விட்டதுவும் இவனது அம்மா மூலம் இவன் அறிந்தேயிருந்தான்.

இவனது மாமாவுடன் சேர்ந்து ஆரம்ப நாட்களில் தாமரைக்குளத்தில் தூண்டில் போட்டு கெழுத்தி மீன் பிடித்தமையும், நுளம்புக்காக மதுரங்காய்கள் பொறுக்கியமையும், செல்லையன் செத்த பிறகு தாமரைக்குளத்துப் பாதையை மறந்தமையும் கூட இவனுக்கு நினைவிலிருந்தது.

பள்ளிக்கூடம் விட்ட பிறகு வயல் வெளியில் சின்னான் கதிரவேலுவும் சபாரத்தினமும் மல்யுத்தம் புரியும்போது கந்தசாமியே மத்தியஸ்தம் செய்வதும் கந்தசாமி சின்னானின் பக்கச் சார்பாக நிற்பதுவும், தான் சபாவின் பக்கம் நிற்பதுவும் இவனக்கு ஞாபகம்.

ஓரு தடவை செல்லம் தன் கல்லுச் சிலேற்றால் இவனை அடித்தபோது சபா தான் இவனுக்காக செல்லத்தின் சிலேற்றை வாங்கி உடைத்தமையையும் இதற்காக இவனது அப்பு செல்லத்திற்கு ஒரு புதுச் சிலேற் வாங்கிக் கொடுத்தமையும் இவனுக்க ஞாபகம்.

சின்னச் சின்னச் சண்டைகளில் சபாவும், காசியும் இவனுக்கு துணையாக இருந்தமையை இவன் மறந்திடவில்லை. ஆனால் முட்டுக்காய் தலையர் இவனை அடித்தபோது சபாவும், காசியும், கந்தசாமியும், செல்லமும், துணைக்கு வரவே முடியாமல் போனமை இவனுக்கு ஞாபகத்திலிருந்தது.

ஷஷவாத்தியார் இவன் கிணத்துக் கட்டிலை ஏறி துலாக் கயித்தைப் பிடிச்சவன்||
ஜீவ காருண்யம் தான் இந்த விசயத்தை பஞ்சாட்சர வாத்தியாருக்கு சொல்லி வைத்தான்.

இரண்டாம் வகுப்பில் படிக்கும் கடுகரென்ற நோஞ்சானுக்கு அன்று விழுந்த அந்த அடிகள்....

இரண்டு பிரம்புக்ள முறிந்து தும்பு தும்பாக........

அடுத்து வந்த நாட்களில் வேதக் கோவில் கிராமத்து மாணவர்கள் எவரும் பள்ளிக்கூடம் போகவில்லை....

கிராமமே உறுதியாக இருந்தது.

பொன்னையா வாத்தியாரின் மோட்டார் சைக்கிள் பல தடவைகள் வேதக்கோவில் கிராமத்திற்கு வந்து போனதைப் பலர் பார்த்தார்கள். ஒரு தடவை தொய்வுக்கார மீனாட்சியம்மா ரீச்சரும்.... அவரது கணவரும் வந்து போனார்கள்.

பஞ்சாட்சர வாத்தியாருக்கு மாற்றம் கிடைத்து கிழக்கு ஊர் போனதாக ஒரு வதந்தியும்.... சிலகாலம் கிராமத்தில் உலாவியது. யாரும் அதை காது கொடுத்து கேட்கவேயில்லை.

வேதக் கோவில் கிராமத்தில் திடீரென பள்ளிக்கூடம் ஒன்று உருவாகியது. தென்னங்குற்றிகளில், பலகை அடிக்கப்பட்ட வாங்கு மேசைகளில் மாணவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.

காசிநாதன் சண்டியனாக அறியப்பட்டது போலல்லாமல் சின்னான் கதிரவேலுவின் பெயர் வேதக் கோவில் கிராமத்திற்குமப்பால் பெருமையோடு பேசப்படும் வண்ணம் அவன் இறந்து போனான்.

நெல்லிமரப் பள்ளிக்கூடம் சில காலம் நெசவுசாலையாகவும்.... ஒரு தற்காலிக அச்சுக்கூடமாகவும் இயங்கி பின்னர் வெற்று நிலமாகி விட்டதாக இவன் அறிந்து கொண்டான்.

இவனது நண்பர்கள் சபா, ராசலிங்கம்.... சந்தியாம்பிள்ளை காசி, சின்னான் கதிரவேலு ஆகியவர்களைப் போல...... இவனது நினைவுகளில் இன்னும் பொன்னையா வாத்தியார், மீனாட்சியம்மா.. ரீச்சர், பஞ்சாட்சர வாத்தியார்...... அதோடு சிதைந்து போன.... நெல்லிமலைப் பள்ளிக்கூடமும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Jan 04, 2016 4:20 pm

முறியாத பனை
----------------
சந்திரா இரவீந்திரன், லண்டன்
----------------
நீண்டகாலமாய்த் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய்ப் பரபரப்பு; சுறுசுறுப்பு! ஒருநாளில் இரு தடவைகள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊரும் ரயில் வண்டிகளின் சத்தங்கள்! ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்!

சப்தங்கள் யாவும் ஓய்கிறபோது, பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலைநெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும்!

சிலசமயம் வயிற்றைக் குமட்டும்; பலசமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டுகொண்டே கிடக்கும்!

சூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ‘ரயில்’ பெட்டிகளினுள்ளேயிருந்து “ஐயோ.. அம்மா..” என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்!

சில நிமிடங்களிற்கு எங்களின் தொண்டைக்குழிகள் அடைத்துப்போகும்! வீடு அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்கும்!

ஆனால் நாம் பயப்படவே தேவையில்லை! அப்படித்தான் அறிவு சொல்லியது. எத்தனை நம்பிக்கை, அவர்களுக்கு எங்கள் மேலிருந்தது. ரெயில்வே ஸ்ரேசனின் பெரிய பெரிய கட்டடப்பகுதிகளை இணைத்து, பிரதான முகாமாக்கியிருந்த அந்த இந்திய ‘சிங்’ குகளுக்கு, நிலையத்தின் தலைமை அதிபரான அப்பாவில் மட்டும் நிறைய மரியாதை!

தண்டவாளங்களோடு ஒட்டியிருந்த எங்கள் ரெயில்வே குவாட்டர்ஸ் மிகவும் அழகானது; வசதியானது! ஸ்ரான்லி வீதிப் பக்கமாயிருந்த, வீட்டின் முன்புறத்தில், முல்லையும் அடுக்கு மல்லிகையும் பந்தலிட்டு நின்றன. மணல் பரவிய நீண்ட முற்றம். இருபுறமும் பச்சைப் புற்கள். வேலி முழுவதும் பின்னிப்படர்ந்திருக்கும் பூங்கொடிகள்ளூ அவை பெரிய பெரிய இலைகளைப் பரப்பி, வேலிக்கு மிகவும் பாதுகாப்பாய் இருந்தன. அவை 'ரெயில்வே குவாட்டர்ஸ்'க்கே உரியவை போல, தனித்துவமாயிருக்கும்! றோஜா நிறத்தில் கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கும்! ஆனால் வாசனையற்றவை! அவை சிங்களப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் ‘சிங்களக் கொடி’ என்று பெயர் சூட்டியிருந்தோம்.

வீட்டின் இடதுபுறமிருந்த நீளமான பெரிய வளவில், நெடு நெடுவென்று வளர்ந்த பத்துப்பன்னிரண்டு பனைமரங்களும், ஓரமாய் இரண்டு முருங்கை மரங்களும்! முருங்கைகள் ஏராளமாய்க் காய்க்கும்! வீட்டின் வலது பக்கமிருந்த சிறிய வளவிலும், பின் வளவிலும் இதரை வாழைகள், தென்னைகள், தூதுவளை, துளசி, பயிற்றங்கொடி, கரும்பு... என்று பசுமையில் நிலம் செழித்துக் கிடந்தது!

இவற்றிற்கு நீர் பாய்ச்சுவதற்காய், நான் நீண்டநேரம் நீராடுவது வேறு விடயம்.

பனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்!
வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு ‘சென்றிப் பொயின்ற்’! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ‘சென்றிப் பொயின்ற்’!

அவர்கள் வெளியில் ‘சென்றி’யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்! போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு! ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்’, ‘மேஜர்’ என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.

“இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறது; இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்..” - என்று ஒரு இந்தியக் ஷகேர்ணல்| அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.

‘விளக்கம் கொடுக்கவேண்டிய வினாதான்! ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா?’ - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ‘சென்றிப் பொயின்ற்’வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், ‘சென்றிப் பொயின்ற்’ றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் ‘கேற்’றால் வீட்டினுள் நுழைபவர்களை ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு ‘ஹோலி’னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்’ குப்பி இருக்கும்! பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ‘சென்றிப் பொயின்ற்’ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக்கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! ‘போகிறாளே’ என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும் போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள்! ‘சென்றிப் பொயின்ற்’ நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக ‘ கிறனைற்’ குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! ‘திபுதிபு’வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள்! ‘சட சட’ வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துவெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி. ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.

துப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் ‘றிம்’இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ‘ரைப்’ செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. “தேவகி.. தேவகி..” என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

“ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்..” என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்! இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது! நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.

இலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!

“நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள்! மகனே! நானினி உன்னை எங்கை தேட....” என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா. எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.
பனைமரங்கள் எப்பவும் பேரிரைச்சலுடன் கம்பீரமாய் அசைந்து அசைந்து சலசலத்துக் கொண்டேயிருக்கும். படுக்கையறையின் விசாலமான ஜன்னலினூடாய் பனம்பூக்கள் பறந்து வந்து வாசனையோடு சிதறும்!
வீட்டின் ஓரமெங்கும் மஞ்சள் பூப்பந்துகள் திரள் திரளாய் ஒதுங்கிக் கிடக்கும். வளவைப் பார்க்கப் பார்க்க எப்பவும் எனக்குப் பெருமையாயிருக்கும்!

பின்னால், ரெயில்வே ஸ்ரேசன் வளவில், எமது வீட்டு வேலியோடு ஒட்டியவாறு உயரமான ஒரு 'சென்றிப் பொயின்ற்'! பனங்கொட்டுகளும் மண்மூட்டைகளும் போட்டு வசதியாக அமைத்திருந்த ஷசென்றிப் பொயின்ற்|!

அவர்கள் வெளியில் 'சென்றி'யில் ஈடுபடுவதைவிட வேலிக்கு மேலால், எமது வீட்டிற்குள் கண்மேய்ச்சல் விடுவதே அதிகம். கங்கு மட்டை, காய்ந்த ஓலை, பனங்காய், பன்னாடை என்று சடசடத்து விழும்போதெல்லாம், ஆரம்பத்தில் துடிதுடித்துப் பதைத்து வெற்றுவேட்டு வைத்து, கூச்சல்களோடும் அதட்டல்களோடும் பத்துப்பதினைந்து பச்சைத் தலைகள் வேலியின் மேலால் எட்டிப்பார்த்து ஆராயும்! போகப்போக, அது அவர்களுக்குப் பழக்கமாகி விட்டதால், பனைகளுக்குப் பாரிய பிரச்சினையேதும் ஏற்படவில்லை.

தண்டவாளங்களை நோக்கித் திறபடும் எமது பின்புறப் படலையை சங்கிலி போட்டுப் பூட்டக்கூடாது என்பது அவர்கள் கட்டளை! சாட்டாக நினைத்த நேரத்தில் உள்ளிட்டு விடுவார்களோ என்ற பயம் நமக்கு! ஆனால் அநாவசியமாக அவர்கள் உள்ளிட்டதில்லை என்பது நம்பமுடியாத உண்மை!

அப்பாவிற்கு, பின் படலையால் வேலைக்குப் போய்வருவது பெரிய சௌகரியமாய் இருந்தது. நேரம் கிடைக்கும் நேரங்களில் வந்து, தேநீர் அருந்தி, நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டுப் போவார்.

சில சமயங்களில் அப்பாவுடன் சேர்ந்து 'கேர்ணல்', 'மேஜர்' என்று அலங்காரப் பட்டிகளுடன் ஹிந்திப்பட்டாளங்களும் வருவதுண்டு! அப்பா எச்சிலை மென்று விழுங்கியபடி இழுபட்டுக்கொண்டு வருவது எனக்கு விளங்கும். அவர்கள் கதையோடு கதையாய் வீடுமுழுவதும் கண்களால் கணக்கெடுத்துக்கொண்டு போவார்கள். போகும்போது நட்பாக விடைபெறுவார்கள்.

"இங்கு எல்லோருக்கும் பெரிய பெரிய வீடுகள் இருக்கிறதுளூ நிறையத் தண்ணீர் வசதியிருக்கிறதுளூ இதைவிட வேறென்ன வேணும் உங்களுக்கு? எதுக்காக சண்டை போடுகிறார்கள்.." - என்று ஒரு இந்தியக் 'கேர்ணல்' அப்பாவிடம் கேட்டானாம். அவன் ராஜஸ்தானைச் சேர்ந்தவன்.

ஷவிளக்கம் கொடுக்கவேண்டிய வினாதான்! ஆனால் இவன்களுக்கு இதெல்லாம் விளங்குமா? இந்தியப் பெரும்பான்மையினக் குடிமகன் இவன்! - இந்தச் சிறுபான்மையின இலங்கைத் தமிழனின் உரிமைப் பிரச்சினைகள், அரசியல் துரோகங்கள், நிரந்தர இழப்புகள், பரிதாபங்கள், ஏக்கங்கள்.. எல்லாம் சொன்னாலும்தான் இவனுக்குப் புரியமா?| - அப்படித்தான் அப்பா உடனே யோசித்தாராம். யோசனையின் விளிம்பிற்கு வரமுன்பே, அவன் இந்த மண்ணின் நாணம் மிக்க பெண்களைப் பற்றிச் சிலாகிக்கத் தொடங்கிவிட்டானாம். அதன் பின்னர் அவன் பதில் சொல்லக்கூடிய கேள்வியெதுவுமே கேட்கவில்லையாம்.

வீட்டு வளவிற்குள் கள்ளுச்சீவ வருபவன், வேலியோடு ஷசென்றிப் பொயின்ற்| வந்ததிலிருந்து பனையில் ஏறமாட்டேன் என்று பிடிவாதமாக நின்றுவிட்டான். ஒரு பனையில் அவன் கட்டிவிட்ட முட்டி கவிண்டபடி அப்படியே கிடந்தது. அதிலிருந்து கள்ளு நிரம்பி வழிகிறதோ என்று குமரியாகி நிற்கும் என் குட்டித் தங்கை, பனையோடு ஒட்டிநின்று அடிக்கடி அண்ணாந்து பார்ப்பாள். அவள் பனைமரங்களருகே போனால், 'சென்றிப் பொயின்ற்' றிலிருந்து மெல்லிய விசிலடிப்பும் இனிமையான பாடலிசையும் மாறிமாறிக் கேட்கும்! அதனால் பனைகளருகே நின்று நாம் அனுபவிக்கும் சுகம் படிப்படியாகக் குறைந்துகொண்டே போனது!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியதும் ஆசை தீர அள்ளிக்குளித்துவிட்டு, சின்னத் தூக்கத்திற்காய் படுக்கையறைக்குள் நுழைந்தால், முகாமிலிருந்து வரும் மும்முரமான சத்தங்கள் தூக்கத்தைக் கெடுக்கும்! அச்சமயங்களிலெல்லாம், ஜன்னலினூடாய், கரும்பனைகளில் சிதறிக் கிடக்கும் சின்னச் சின்னக் குழிகளையெல்லாம் ஏகாந்தமாய் எண்ணிப்பார்த்துக்கொண்டு படுக்கையில் கிடப்பேன்.

அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த சிலநாட்களில் வெறித்தனமாக ஏற்படுத்திய பேரழிவின் சிறு வடுக்கள் மட்டுமே இவை! இந்த வளவிற்குள் எந்தப் பனையும் இதனால் சாய்ந்து விழுந்துவிடவில்லை! நிறைந்த வடுக்களோடும் நெடு நெடுவென்று கம்பீரமாய்த்தான் நிற்கிறது!

முன் 'கேற்'றால் வீட்டினுள் நுழைபவர்களை 'சென்றிப் பொயின்ற்'ல் இருப்பவன் முழுமையாகக் காணமுடியாது. ஆனால் வருபவர் வீட்டின் நடு 'ஹோலி'னுள் நுழைந்துவிட்டால், பின் வாசலூடாய் பைனாகுலர் மூலம் மிகத்தெளிவாய்க்; காணலாம்.

என் சிநேகிதி அபி, பெரிய ஓலைத்தொப்பியும் கவர்ச்சியான உடையும் அணிந்துகொண்டு அழகான சைக்கிளில் வந்திறங்கிக் கதைத்துவிட்டுப் போவாள். அவளின் கைப்பையினுள் ஏகப்பட்ட கடுதாசிகள், குறிப்புகள் இருக்கும், உடம்பின் ஒரு பகுதியில் 'சயனைட்' குப்பி இருக்கும்! பின்புறம் சமையலறைப் பக்கமாய் அவள் வரும்போது ஷசென்றிப் பொயின்ற்|ல் இருப்பவன் தலையை வெளியே நீட்டி கண்ணடித்துச் சிரிப்பான்ளூ களிப்பில் கையசைப்பான்!

எனக்கு இதயம் படபடத்துக்கொண்டேயிருக்கும்! அவள் வெகு சாதாரணமாய், அண்ணரின் கதையிலிருந்து ஆஸ்பத்திரிக் கதைவரை பரிமாறிவிட்டு, தேவையானவற்றை சேகரித்துக்கொண்டும் சிரித்தவாறே போய்விடுவாள்! 'போகிறாளே' என்று மனதிற்குள் ஏக்கமாயும் இருக்கும்ளூ போனபின் ஏனோ ஆறுதலாயும் இருக்கும்.

வீடு வீடாகச் சோதனை நடக்கிறபோதும் இந்த ரெயில்வே பகுதிக்குள் மட்டும் யாரும் சோதனை போட வருவதில்லை என்று இறுமாப்புடன் இருந்த எமக்கு ஒருநாள் காத்திருந்தது!

அது ஒரு சுட்டெரிக்கும் வெயில்நாள்! 'சென்றிப் பொயின்ற்' நோக்கி யாரோ உற்றுப் பார்த்திருக்கிறார்கள். அடுத்த நிமிடம் அதற்கருகாக 'கிறனைற்' குண்டொன்று வெடித்திருக்கிறது! வந்தவனின் குறி தப்பிவிட்டது! வேலியோடு நின்ற சீனிப்புளி மரத்தின் கிளைகளுக்கு மட்டும்தான் சேதம்! ஸ்ரேசன் பகுதி முழுவதும் மிருகத்தனம் தலைதூக்குவதற்கு இது ஒன்று போதுமே! 'திபுதிபு'வென்று எமது பனம் வளவிற்குள் பச்சைப்புழுக்களாய் அவர்கள்! 'சட சட' வென்று காற்றைக் கிழிக்கும் இரைச்சலுடன் துப்பாக்கி வேட்டுக்கள்! வீதியால் போய்க்கொண்டிருந்த அப்பாவிகள் பச்சை உடைக்காரரால் பன்னாடையாக்கப்படும் அகோரம், ஈனஸ்வரமாய் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது!

எல்லாம் ஓய்ந்த பின், ஜன்னலினூடாய் வளவைப் பார்த்தேன். மருந்துவெடி வீசியது! அடிவயிற்றுக்குள் இன்னமும் அச்சம் அப்பிக்கிடப்பதான உணர்வு! கரும் பனைகளில் புதிய குழிகள் தோன்றியிருந்தன. சன்னங்களின் பல வெற்றுக் கவசங்கள் மரங்களின் அடியில் ஆங்காங்கே சிதறியபடி. ஆயினும் அழகிய விசிறிகளென, வளவு முழுவதும் பசுமையாய்ப் போர்த்தியிருக்கும் பனைகள் எல்லாம் கெக்கலித்துச் சிரிப்பதுபோல் காற்றில் அழகாய் அசைந்துகொண்டுதானிருந்தன!

ஒரு உற்சாகமான வார இறுதிநாள், ரெயில்வே தொழிலாளிகளை அப்பா அழைத்திருந்தார். அவர்கள் புற்கள் நிறைந்த வளவைத் துப்பரவாக்கத் தொடங்கிவிட்டார்கள். வீடு முழுவதும் பச்சைப்புற்களினதும் காயம்பட்ட வடலி இலைகளினதும் மணம் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது.

மேஜர் முக்தயர், ஏணிப்படிகளில் ஏறி நின்றவாறே வளவிற்குள் நின்ற அப்பாவுடன் வெகு சந்தோஷமாய் கதைத்துக்கொண்டிருந்தான். அப்பா, வளவைத் துப்பரவு செய்விப்பது அவனுக்குப் பெருமகிழ்ச்சி என்று விளங்கியது. புற்களினூடாக வேலிவரை யாராவது தவழ்ந்து வந்து விடுவார்களோ என உள்ளூர ஊறிக்கிடந்த அச்சத்திற்கு, அது பெரிய ஆறுதல்தானே.

துப்பரவு செய்யப்பட்ட வளவிற்குள், நிறையப் பனங்கொட்டைகள் ஆங்காங்கே புதைந்து, புதிதுபுதிதாய் முளைவிட்டிருப்பது தெரிந்தது. அப்பா, அவற்றைப் பிடுங்கி எடுக்கச் சொல்லவில்லை. அவை நெடும்பனையாகும் அழகைக் கற்பனையில் நான் அடிக்கடி கண்டு களிப்பேன்.

வைகாசி மாதத்து முதல் நாள், நல்ல வெயிலும் கூடவே சுழன்றடிக்கிற காற்றுமாயிருந்தது. சைக்கிள் 'றிம்'இல் சுரீர்சுரீரென்று மணற்புழுதி வந்து மோதிக்கொண்டிருந்தது. நான் அலுவலகத்தில் ஷரைப்| செய்ய வேண்டியிருந்த அனைத்துப் பிரதிகளையும் முழுமையாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன், ஆசுவாசமாய் சைக்கிளில் வந்திறங்கினேன். வீட்டினுள் பரபரப்பாக ஆளரவம்! வல்லைவெளி தாண்டி வந்த வடமராட்சி உறவினர்கள் சிலர் என்னைக் கண்டதும் எட்டிப்பார்க்கிறார்கள். ஏதோ வித்தியாசமாய்த்தான் இருந்தது!

அம்மா அழுத கண்ணீருடன் படியிறங்கி ஓடி வந்தா. "தேவகி.. தேவகி.." என்ற விம்மலுடன் என்னைக் கட்டியணைத்து ஓசையை அடக்கி ஒப்பாரி வைத்தா. எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது!

"ஊரில் என் தம்பி போரிட்டு மாண்டான்.." என்று மார்தட்டிப் புலம்பவோ, தலையைப் பிசைந்து குழறவோ ஊரைக்கூட்டி ஒப்பாரிவைக்கவோ எல்லாம் முடியாத ஊமைச்சாபம் எங்களுக்கு! நடுஹோலைத் தாண்டி, பின்புறமாய் போயிருந்து அழுதுதீர்க்க முடியாத அவலம்!

எல்லா சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, இப்போ அழுவதற்குரிய ஆகக்குறைந்த சுதந்திரமும் இரகசியமாய்ப் பறிக்கப்பட்டிருந்தது யாருக்குத் தெரியும்! இதில் யார், யாரைப் போய்த் தேற்றுவது?!

சில மாதங்கள் எமக்குள் நெருப்புத் துண்டங்களாய் கனன்று பொசுங்கிக் கழிந்தது! நம்பமுடியவில்லை நமது சின்னச் சின்னச் சந்தோஷங்களும் இத்தனை விரைவில் சீர்குலைந்து போகுமென்று நம்பவில்லை.

இலையுதிர்காலம் தொடங்கி, சீனிப்புளி உருவியுருவி தன் இலைகளை வளவெல்லாம் கொட்டத் தொடங்கியபோது, ஒருநாள் திடுதிப்பென்று அவர்கள் மூட்டைகட்டத் தொடங்கிவிட்டார்கள். ரெயில்வே ஸ்ரேசனுக்குரிய கட்டடங்களெல்லாம் அவசரம் அவசரமாய் விடுவிக்கப்பட்டு வெறிச்சோடி விட்டது! அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மேஜர், கேர்ணல் என்ற பதவியிலிருந்தவர்கள், விடைபெற்றுப்போக வீட்டுக்கு வந்தார்கள். சிநேகமும் பண்பும் மிக்க எங்களைப் பிரிந்து போவதில் பெரிய மனவருத்தம் என்று கூறி விடைபெற்றுப் போனார்கள் - சொந்த உடைமையை துறந்து போவது போன்ற துக்கம் அவர்களின் கண்களில்!

இரவு, ஈ காக்கைகூட அங்கில்லை என்ற தெளிவான நம்பிக்கையில், இத்தனை நாள் அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டெழ, நெஞ்சிலடித்து அம்மா கதறத் தொடங்கிவிட்டா!

"நாசமாய்ப் போவாங்கள்.... என்ரை பிள்ளையையும் நாசமாக்கிப் போட்டெல்லோ போறாங்கள்! மகனே! நானினி உன்னை எங்கை தேட..." என்று பின்வளவில் குந்தியிருந்து குழறிக்கொண்டேயிருந்தா. எனக்குக் கண்களிற்குள் நீர் முட்டிக்கொண்டு வந்துவிட்டது! ஆயினும் யாரும் யாரையும் அழவேண்டாமென்று தடுக்கவில்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈழத்து சிறுகதைகள்  Empty Re: ஈழத்து சிறுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum