தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கதை படைப்புகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கதை படைப்புகள்  Empty கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:15 pm

பசியாக இருக்குமோ…
---------------------
கோ. மன்றவாணன்
-------------------------------

“மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் சிதறடித்துவிடும். எனவே கதவைத் திறந்து வெளியில் வந்தேன்.

வெளிப்புறத்தில் இருந்துதான் மாடிக்குப் படிகள் உள்ளன. மெதுவாகச் சத்தம் காட்டாமல் மாடிக்குச் சென்று பார்த்தேன். நாலைந்து சிறுவா்கள் மாங்காய்ப் பறித்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் திடுதிப்பென என்னைத் தள்ளிவிடாத குறையாகக் கீழே இறங்கி ஓடினார்கள். மதில் பக்கத்திலேயே தயாராக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டார்கள். அவர்கள் பறித்த மாங்காய்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து இல்லத்தரசியிடம் அறிக்கை சமர்ப்பித்தேன்.

“தெண்டம் தெண்டம்… அந்தப் பசங்கள புடிக்கத் துப்பில்ல ஒங்களுக்கு. விட்டுவிட்டு வந்து கத சொல்றீங்க கத. புடிச்சுக் கட்டி வச்சிருக்க வேணாமா?” என்று வார்த்தைகளை வாரி வீசினார். வேறு யாரு? என் மகாராணியார்தான்.

“அணில் சாப்பிட்டுப்போறத ஆசையா சாப்பிடப் பறிச்சிருக்கானுவ.”
அணில் சாப்பிடலாம்ங்க. அதுக்கு அதுதான் விதி. அணில் என்ன வேலைக்குப் போயி சம்பாதிச்சு வந்தா சாப்பிட முடியும்.
“சரி விடு சின்னப் பசங்க.”
“என்ன சின்னப் பசங்க? இன்னைக்கு மாங்கா திருடுறவன் நாளைக்கு நகைநட்ட திருடுவான். இந்த மாதிரிப் பசங்கள சும்மா விடக்கூடாது”
“அதுக்கு நாம என்ன செய்றது.

சின்ன வயசுல இதெல்லாம் சகஜம்தான். ஏன் நானே சின்ன வயசில ஒரு வீட்டுத் தோட்டத்துல வேலியை லாவகமா விலக்கிட்டு, கைய உட்டு, பட்டு ரோஜா செடிய திருடிட்டு வந்து எங்க வீட்டுல நட்டிருக்கேன் தெரியுமா… அதனால நான் என்ன இப்ப திருடனாவா ஆயிட்டேன்?”

“அதனாலதானோ என்னவோ திருடனுக்கு ஆஜராவற வக்கீலா ஆயிட்டீங்க” என்று சொன்ன என் மனைவி, “சொரட்டுக்கோல எடுத்துக்கிட்டு என் பின்னாலேயே வாங்க” என்ற ஆணையை பிறப்பித்துவிட்டு, ஒரு சாக்குப்பையோடு மாடிக்குப் போனாள். நானும் பின்தொடா்ந்தேன்.

கைக்கு எட்டிய மாங்காய்களை என் மனைவியின் வளைக்கரம் வளைத்துப்போட்டது. வாங்கரிவாளுக்கு எட்டிய மட்டும் மாங்காய்க் காம்புகளைத் திருகி மாங்காய்களை விழச்செய்தேன். விழுந்த மாங்காய்களை நானும் என் மனைவியும் எடுத்துச் சாக்குப்பையில் நிரப்பினோம். அந்த மூட்டையைப் படியில் தேய்த்தவாறே இருவரும் சோ்ந்து இழுத்துவந்து வீட்டுக்குள் போட்டோம்.

“த்தோ பாருங்க இப்படியே விட்டா எல்லா மாங்காயையும் திருடிட்டுப் போயிடுவாங்க. யாருகிட்டயாவது விலைபேசி மரத்துல இருக்கற மாங்காய பறிச்சிட்டுப் போ சொல்லுங்க”
“எங்க போயி ஆளத் தேடறது?”
“ம்க்கும்… அதெல்லாம் நான்தான் சொல்லணும்?”

“யாராவது மொத்தமா மாங்கா பறிச்சிட்டுப் பணம்கொடுக்குற ஆளு இருந்தா சொல்லுங்க. வீட்டு மரத்துல நிறைய மாங்கா இருக்கு” என்று தெரிந்தவா்களிடம் எல்லாம் சொல்லி வைத்தேன்.

***
நாலைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலை ஆறு மணிக்கு அழைப்பு மணி ஒலித்தது. வெளியில் வந்து பார்த்தேன்.

“மாங்கா தரீங்களா?”
“ஆமா… தர்றதுதான். யார் சொல்லி அனுப்புனது?”
“யாரும் சொல்லலீங்களே… நானாத்தான் வா்றேன்.”
“சரி என்ன வெல சொல்றே?”

“மரத்துல மாங்கா ஒண்ணும் அதிகமா இல்லீங்களே”
“அதுக்கு நான் என்ன பண்ணுவேன். இருக்குற மாங்காய பறிச்சிட்டுப் போ. சீக்கிரம் வெலய சொல்லு”
“நானூறு ரூவா தர்றன். அதுக்கே எனக்கு நஷ்டம்தான்” என்று இழுத்தார்.
“கடையில கிலோ 20 ரூபா விக்குது. நீ என்னா இவ்வளவு கம்மியா கேக்குற?”
“அது வேற மாங்காங்க. இது ஓடாது.”

“யோவ் நாங்க இந்த மாங்காயைச் சாப்பிடுறோம் அவ்வளவு டேஸ்டா இருக்கு”
“அதோ பாருங்க… மாங்காய் கருப்படிச்சிருக்கு. யாரு வாங்குவாங்க?”
“சரி என்ன சொல்றே”
“நானூறுன்னு நான் சொன்னதே அதிகங்க.”

இதைக்கேட்டபடி உள்ளே இருந்துவந்த என்மனைவி “ஆயிரத்து ஐநூறு கொடுத்துட்டுப் பறிச்சிட்டுப் போ” என்று சொன்னார்.
என் மனைவி சொன்ன விலையைக் கேட்டு, வியாபாரி அதிர்ச்சி அடையவில்லை. நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னார்.
“ஆமாம்மா… இரண்டாயிரம்கூடக் கேளுங்க… அப்படியே விட்டுவையுங்க. அழுகித்தான் போவும். இந்த நானூறுகூடத் தேறாது.”
“நானூறுக்கெல்லாம் தர முடியாது.” என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். வியாபாரி வாசலிலே நின்றுகொண்டிருந்தார்.

“சார்… சார்…” என்று வியாபாரியின் குரல்கேட்டு மீண்டும் வெளியில் வந்தேன்.
சார்… யோசித்துச் சொல்லுங்க சார். காய் ஒண்ணும் அதிகம் தேறாதுங்க.
யோசிக்கறதுக்கு என்னய்யா இருக்கு. பத்து மூட்ட காய் வரும்.
அட நீங்க ஒண்ணு. இரண்டு மூட்ட கூட வராது. ஒன்றரை மூட்ட வர்றதே ரொம்ப பெரிசு
நான் ஒன்றும் பேசவில்லை. அவரே பேசினார்.

“சார்… ஒங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம். நானூத்தைம்பது ரூவா தர்றேன்.”
“வேணாம் வேணாம் நீ கிளம்பு. ஊங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனக்கு நெறய வேல இருக்கு.”
அப்படியும் அவர் விடுவதாயில்லை. ஒரு வழியாக ஐநூறுக்கு முடிவானது. நூறு ரூபாய் முன்பணமாகக் கொடுத்தார். சாக்கு எடுத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிப் போனார். ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தார். கூடவே ஒரு பையனும் வந்தான். அவன் அவருடைய மகனாக இருக்கக் கூடும். நான் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. முனையில் வலைக்கூடை கொண்ட ஒரு நீண்ட வாங்கரிவாளை அவர்கள் வைத்திருந்தார்கள். அவரும் அந்தப் பையனும் மாடிக்குப் போனார்கள்.

“சார்… நீங்க கீழேயே இருங்க. பறிச்சிட்டு வந்து சொல்றோம்” என்றார் வியாபாரி. நானும் வீட்டுக்குள்ளே நாளிதழ் படித்துக்கொண்டிருந்தேன். மாங்காய் விழும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தோட்டத்தில் கீழே விழுந்த மாங்காய்களை அந்தப் பையன் பொறுக்கிச் சாக்குப்பையில் போட்டுக்கொண்டிருந்தான். அருகே இருந்த எலுமிச்ச மரத்தின் மீது மாங்காய் விழுந்து எலுமிச்சம் பழங்கள் வேறு கீழே விழுந்துகொண்டிருந்தன. சன்னல் வழியாக எட்டிப் பார்த்து அந்தப் பையனிடம் சொன்னேன்.

“ஏய் எலுமிச்சம் பழத்த எல்லாம் வெல பேசல்ல. அதெல்லாம் எங்ககிட்ட கொடுத்துட்டுப் போவணும்.”
“அது எங்களுக்கு எதுக்கு சார்? அத பொறுக்கி அப்படியே கொடுத்துட்டுப் போறோம்” என்று நாணயத்தைத் தம்பட்டம் அடித்தான்.
கொண்டுவந்த சாக்குப்பைகளில் பறித்த.. விழுந்த மாங்காய்களை நிரப்பினார்கள். பன்னிரண்டு மூட்டைகள் நிரம்பி, பதிமூன்றாவது மூட்டையில் பாதியளவு மாங்காய்கள் இருந்தன.
“யோவ்… ஒன்றரை மூட்டக்கூட வராதுன்னு சொன்ன… இப்ப 13 மூட்ட வா்றது.”
“சார்… ஒங்ககிட்டெல்லாம் அப்படிப் பேசினாத்தான் இறங்கி வருவீங்கன்னு எங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். என் ஏமாளித்தனம் என் முகத்திலேயே எழுதி இருக்குறத அவன் படிச்சிருக்கான் போலிருக்கு என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டேன். ஆனாலும் பிடி கொடுக்காமல்,

“13 மூட்ட மாங்கா வந்துடுச்சி. ஆயிரம் ரூபாயாய கொடுக்கணும்” என்று கண்டிப்பாகச் சொன்னேன்.
“பேசனது பேசனதுதான். ஐநூறுக்குப் பேசி முடிச்சாச்சு. இப்பக் கூட கேக்குறது ஒங்களுக்கே நல்லா இருக்கா சார்”
இதை எதிர்வீட்டுக்காரர் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு வியாபாரியிடம் மேற்கொண்டு பேசவில்லை. எப்படியாவது ஒழியுது என்று விட்டுவிட்டேன்.
டிவிஎஸ் 50ல் இரண்டிரண்டு மூட்டைகளாக வைத்துக்கட்டி மார்க்கெட்டுக்கு எடுத்துச்செல்வதாகச் சொல்லிச் சென்றார்கள். கடைசி நடையின் போது, மீதிப் பணத்தைத் தருவார்கள் என்று வாசல்படியிலேயே நின்றுகொண்டிருந்தேன்.

“சார்… இந்த மூட்டையை போட்டுட்டு வந்து பைசல் பண்றோம்.”
“யோவ்… இப்பவே கொடுத்துட்டுப் போய்யா.”
“சார்… நாங்க சின்ன வியாபாரிங்க. மொத்த வியாபாரிக்கிட்ட போடுறோம். த்தோ… அரை மணிநேரத்துல பணத்தை வாங்கிட்டு வந்து கொடுத்துடுறோம். உங்க பணம் எங்களுக்கு எதுக்கு சார்.”
அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே என்று நம்பினேன். வியாபாரி விர்ரென்று பறந்தார். பையனைக் காணவில்லை. அவன் எப்பொழுது போனான்? எப்படிப் போனான்? என்று தெரியவில்லை.
தோட்டத்தைச் சுற்றி வந்தேன். விழுந்த எலுமிச்சப் பழங்களில் ஒன்றைக்கூடக் காணோம். ஐம்பது பழங்களாவது தேறும். அவற்றையும் மூட்டையிலேயே வைத்துக் கட்டிக்கொண்டு போய்விட்டிருக்கிறார்கள். ஓஸ் பைப்பையும் காணவில்லை. அதன் மதிப்பு ஐநூறு ரூபாய் இருக்கும்.

பணம்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்ற வியாபாரி, மூன்று மணிநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
“என்னங்க… மீதி நானூறு ரூபாய வாங்கினீங்களா?”
“கொண்டுவந்து தர்றதா சொல்லிப் போன ஆள இன்னும் காணல”
“அப்ப நாமந்தான் போங்க. அவன் அட்ரஸ கேட்டீங்களா? கேட்டிருக்க மாட்டீங்களே… நீங்களும் ஒரு வக்கீலு? எனக்கென்னு வந்து வாச்சீங்களே”

“அப்படியே அட்ரஸைக் கேட்டாலும், ஏமாத்த நெனக்கறவன் சரியான அட்ரஸையா சொல்லிட்டுப் போவான்?”
ஒரு வாரம் ஓடிப் போனது. மார்க்கெட்டில் எல்லாம் விசாரித்துப் பார்த்துவிட்டேன். அப்படி ஒருவரை யாருக்கும் தெரியவில்லை.

***
மரத்தில் அணில்கள் கிறீச் கிறீச் என்று ஓயாமல் சத்தம் போட்டுக்கொண்டிருக்கின்றன.
பசியாக இருக்குமோ…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:19 pm

அடையாளம்
---------------------
தருணாதித்தன்
--------------------
ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒருதிறமை இருக்கும். சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் அமைந்து பாட வரும், சிலர் சுலபமாக ஸிக்ஸர் அடிப்பார்கள், சிலர் ஃபோட்டோவில் பளிச்சென்று தெரிவார்கள், சிலர் எப்பேர்ப்பட்ட மூடியையும் வெறும் கையால் திறப்பார்கள். அந்த மாதிரி சுந்தருக்கு ஒரு திறமை இருந்தது. சுந்தர் எப்போதோ, எவ்வளவு வருடங்கள் முன்போ பார்த்திருந்தால் கூட, அவர்களது முகத்தையும், பெயரையும், குரலையும் நினைவில் வைத்திருப்பான். கூடவே உபரியாக அவருக்கு மசாலா டீ பிடிக்கும், வருடம் தவறாமல் சொந்த ஊரில் அய்யனார் கொடைக்குப் போவார், அக்கா புருஷன் சௌதியில் இருக்கிறான் என்று நிறைய விஷயங்களுடன். தொழிலுக்கு அவசியமாக வளர்த்துக் கொண்ட திறமை. சுந்தர் ஒரு இன்சுரன்ஸ் ஏஜன்ட். கூடவே ம்யூசுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாஸிட், மார்ச் மாசத்தில் இன்கம்டாக்ஸ¤க்கு சேமிப்புகள் எல்லாம் செய்து கொடுப்பான்.

கல்யாணத்தைக்கூட இன்டர்நெட்டில் முடிக்கின்ற காலத்தில், இன்சுரன்ஸ் ஏஜன்ட் வாழ்க்கை சிரமம்தான். இருந்தாலும் சுந்தருக்கு ஒரு சாமர்த்தியம் உண்டு. இன்டர்நெட் உபயோகிக்கத் தெரியாத புற நகர் கீழ் மத்திய தர குடும்பங்கள், மத்தியான வேளையில் ஷாப்பிங் மாலில் க்ரெடிட் கார்டுடன் சுற்றும் வீட்டு மனைவிகள், கையில் பணத்துடன் குழப்பத்தில் இருக்கும் சமீபத்தில் ரிடயர் ஆன ஆசாமிகள் என்று பார்த்தவுடனேயே இன்சுரன்ஸ் வாங்கக்கூடியவர்கள், டெபாஸிட் செய்பவர்களை சரியாக அடையாளம் கண்டு கொள்வான். நிரந்தர புன்னகையுடன் நட்பான உருண்டை முகம், அதிகமாகவே நரைத்த தலை, சற்று பருத்திருந்தாலும் நடையில் உற்சாகம், மேலாக சற்றே இணக்கமான குரல் சுந்தர் எல்லோருக்கும் நண்பன். எப்போதும் சற்று அதட்டும் சுமதியின் குரலுக்குத் தணிந்த மாதிரி நடிக்கும்போது, எட்டாம் வகுப்பு படிக்கும் அவனுடைய பெண் சுந்தரைப் பார்த்து கண்ணடிப்பாள்.

ஊரில் இல்லை அடுத்த வாரம் பார்க்கலாம், இப்பத்தான் ஸ்கூலுக்கு டொனேஷன் குடுத்து கையில் பணமில்லை, நாள் சரி இல்லை அடுத்த அம்மாவசைக்கு அப்புறம் என்று மிதமான பொய் சொல்பவர்களை எளிதாக வசப்படுத்துவான். வேற வேலை இல்லை காலையில வந்து கழுத்தறுக்காதே என்று எரிந்து விழுபவர்கள், நாயை அவிழ்த்து விடுபவர்கள் எல்லோரையும் சமாளிப்பான். பொறுமையாக பேசி , ஒத்துக் கொள்ள வைத்து அவர்களுக்கு ஃபார்ம் நிரப்புவான். எடையைக் குறைத்து, கொலஸ்ட் ரால் இருந்தாலும் அதிக அபாயம் இல்லை என்று எழுதக்கூடிய டாக்டரிடம் பரிசோதனைக்கு தன்னுடைய காரில் அழைத்துச் சென்று, திரும்ப வீட்டில் விடுவான். நாளில் பாதி நேரம் யாருக்காகவாவது காத்திருந்து, ட்ராஃபிக்கில் திண்டாடி நொந்து போய் வீட்டுக்கு வரும் போது சில சமயம் தன்னுடைய பத்து வருடப் பழைய மாருதி 800 டன் பேசிக் கொள்வான். அவனுக்கு புதிய கார் வாங்க அவ்வளவாக இஷ்டம் இல்லை. இரண்டு காரணங்கள். முதலாவது – கையில் பணம் இல்லை, இரண்டாவது அந்தப் பழைய காரின் மேல் ஒரு பாசம்.

புதிய கார் வாங்க வேண்டிய நெருக்கடி நிலை உருவானது சென்ற வார சம்பவத்துக்குப் பிறகு. அன்று சுமதியின் பெரியப்பா பையன் மகளுக்குக் கல்யாணம். பெரியப்பா அமிதாப் பச்சன் உயரத்தில் ,தடியான கருப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடியும், முழுசாக நரைத்த மீசையும், மூக்கில் ஒரு பெரிய பருவும், அகலமான கருப்புக்கரை வேட்டியுமாக உரத்த குரலில் யாரையாவது விரட்டிக் கொண்டிருப்பார். முதல் நாளே வரச் சொல்லி இருந்தார், வேலை காரணமாக போக முடியவில்லை. சுமதி சற்று நிம்மதியாக தூங்க விரும்பிய சுந்தரை எழுப்பி விட்டாள். எல்லோரும் அவசரமாக குளித்து, காலை டிஃபனுக்கே கல்யாண மண்டபத்துக்கு போவதாக திட்டம். தூரம் வேறு – மண்டபம் எங்கோ மடிப்பாக்கத்தில். அன்றைக்கு வழக்கமாக வரும் பூக்காரி வரவில்லை. பூக்காரியின் கணவன் சிறிது அதிகம் பணம் வரும் என்றால் வாடிக்கை வீடுகளை விசேஷ நாட்களில் விட்டு விடுவான். எப்போதும் குடித்ததுக் கலங்கிய கண்களுடன், , மடித்துக் கட்டிய அழுக்கு ப்ரௌன் லுங்கியில் வந்து, தலையைக் குனிந்து கொண்டே பூவைக் கொடுத்து விட்டுப் போவான்.

அன்றும் எல்லா பூவையும் வேறு எங்கேயோ விற்கச் சென்றிருக்க வேண்டும். பூ இல்லாமல் அப்போதிலிருந்தே சுமதி டென்ஷன்தான். நீல நிறப் பட்டுப் புடவையின் மாட்சிங் ப்ளவுஸ் அன்று ஏனோ சற்று சின்னதாகப் போன காரணத்தால், வேறு புடவை மாற்றி, கடைசியில் கிளம்பியதே தாமதம்.
சுந்தருடைய அருமைக் கார் அன்று பாதி வழியில் நின்று போனது. இந்தப் பத்து வருஷத்தில் ஒரு தடவை கூட இப்படி நின்று போனதில்லை. அதுவும் சுமதியின் உறவினர் கல்யாணத்துக்குப் போகும் போது.
சுந்தர் ஏதோ தனக்குத் தெரிந்த அளவில் கிளப்பப் பார்த்தான். விதம் விதமாய் சத்தம் வந்தது, கார் கிளம்புவதாக இல்லை. பானட்டைத் திறந்து பார்த்தால், ஒன்றும் புரியவில்லை. தொட்டால் ஒரிடத்தில் கை சுட்டது, கரிய எண்ணெய் பிசுக்கு ஒட்டியது. சுந்தர் மெகானிக் கடைக்குப் ஃபோன் செய்து பார்த்தான். கடை இன்னும் திறக்கவில்லை, ஒருவரும் எடுக்கவில்லை. அவனிடம் கடந்த மூன்று வருடமாக இன்ஸுரன்ஸ் விற்க முடியவில்லை. அந்த மெகானிக் தினமும் ராத்திரி சீட்டு விளையாடி விட்டு, நண்பர்களுடன் அரட்டைக்குப் பிறகு தூங்கப் போவது நள்ளிரவுக்குப் பிறகுதான். அதனால் எப்போதுமே தாமதமாகத்தான் கடையைத் திறப்பான். அதற்குள் சுமதிக்கு கோபம் வந்து விட்டது.

” நாம இப்படி ஆடி அசஞ்சு போகறத்துக்குள்ள, முகூர்த்தமே முடிஞ்சுடும், கால் டாக்ஸி கிடைக்குமான்னு பாருங்க, இந்த ஓட்டைக் கார முதல்ல தூக்கிப் போடுங்கன்னு எத்தன வருஷமா நானும் சொல்லிட்டுருக்கேன்” இந்த மாதிரி சமயங்களில் சுந்தர் அதிகம் பேச மாட்டான். அன்று அதிர்ஷ்டம் இல்லை, கால் டாக்ஸி எல்லாம் கல்யாண நாள் ஆனதால் முதலிலேயே புக் ஆகி இருந்தன. காலை பள்ளிக்கூடத்துக்கு போவதாக ஆட்டோக்களும் வர மறுத்து விட்டன. கடைசியில் அரை மணி நேரம் காத்திருந்து ஒரு ஆட்டோவைப் பிடித்து, கல்யாண மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்த போது சுமதி வியர்த்து, முகத்தில் பவுடர் எல்லாம் கலைந்து, முக்கிய சடங்குகள் பாதி முடிந்து, டிபன் வேறு தீர்ந்து போய் காபி மட்டும் கிடைக்க, மறு பேச்சு இல்லாமல் வேறு கார் வாங்குவதாக முடிவு ஆயிற்று. சேர்த்து வைத்த பணமும், பாதி கடனுமாக புதிய கார் புக் செய்தான். எல்லோருமாக தேர்வு செய்திருந்த கருஞ்சிவப்பு நிறம் வர ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று,

புதுக் கார் வந்த தினம் சுந்தருடைய வாழ்க்கையில் பிரகாசமாகத்தான் ஆரம்பித்தது. காலை கார் டெலிவரி எடுத்துக் கொண்டு, அடிக்கடி தடவிப் பார்த்து மகிழ்ந்து, நேரே குடும்பத்துடன் பிள்ளையார் கோவிலுக்குப் போனான். அன்று கோவிலில் பூஜை செய்யும் வயசானவர் இல்லை. சமீபத்தில் அவர் யு எஸ்ஸில் ஒரு கோவிலுக்கு அய்ந்து வருட கான் ட்ராக்டுக்கு முயற்சி செய்து கிடைக்காமல் சற்று வெறுத்துப் போயிருந்தார். அதனால் சரியாக பூஜை வேளைக்கு வருவதில்லை. அவர் ஒரு டெபாஸிட் தருவதாக சொல்லி இருந்தார். அவர் பையன் தான் இருந்தான். அவன் காலையில் ஒரு மணி நேரம் பூஜை செய்து விட்டு ஜீன்ஸ் பேன்ட் மாற்றிக் கொண்டு பைக்கில் வேலைக்குக் கிளம்பி விடுவான். அவனுடைய தங்கை ஒருத்தி, பார்க்க சுமார் நிறம், வயசாகியும் கல்யாணம் ஆகவில்லை. வண்டிக்கு மாலை போட்டு, கற்பூரம் காண்பித்து, தீர்த்தம் தெளித்து , சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சம் பழம் நசுக்கி, நன்றாக கணீரென்ற குரலில் பூஜை செய்ததில் மகிழ்ந்து, சுமதி நூறு ரூபாய் தட்டில் போட்டாள். அப்படியே பெண்ணை ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டு விட்டு, சுமதியை வீட்டில் விட்டு விட்டு சுந்தர் அன்று பார்க்க வேண்டிய ஒரு இன்சுரன்ஸ் கேஸ¤க்கு கிளம்பினான். மெட்ரோவுக்காக தோண்டி இருந்தார்கள், மீதி இருந்த இடத்தில் ட்ராஃபிக் அதிகமாக இருந்தது. ரோடு முழுவதும் இன்ச் இன்ச்சாகத்தான் நகர்ந்தது. பக்கத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் இடிக்கிற மாதிரி வந்தன. சுந்தருக்கு அவர்களை பார்த்து, ஒரு நிமிடம் நிற்க முடியாமல் அப்படி என்ன அவசரமோ என்றும், இந்த வேளையில் முதல் முதலாக காரை எடுத்து வந்ததே தப்பு என்றும் தோன்றியது.

கோயம்பேடு அருகே சிக்னலுக்கு நின்றிருந்தான். அப்போதுதான் பின்னால் கோபமாக ஒலித்த ஹாரன்களைக் கேட்டு ,அந்த பைக் இளைஞனை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தான். அவன் குறுக்காக அங்கும் இங்கும் புகுந்து , எல்லா வண்டிகளையும் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்தான். முகத்தில் ஒழுங்கில்லாமல் பல நாள் தாடி, ஹெல்மட் அரைகுறையாக தொற்றிக் கொண்டிருந்தது, ஒரு கையால் செல் ஃபோனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான், உயர்ந்த மாடல், தூரத்துலேயே திடும் திடும் என்று ஒலி கேட்டது. வண்டியைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு கையில் சிகரெட், க்ரீம் நிறத்தில் அழுக்கு கார்ட் ராய் பேன் ட், பாசி பிடித்த மாதிரி ஒரு கருப்பு டீ ஷர்ட், ஒரு தடி தங்கச் சங்கிலி கழுத்தில், வண்டி நம்பர் 9999, பார்வையில் அலட்சியம். பின்னால் ஒரு காருடைய சைட் கண்ணாடியை இடறி விட்டு நிறுத்தி கார்க் காரனைத் திட்டி விட்டு வந்தான்.

அதற்குள் சிக்னல் பச்சை ஆகி விட, சுந்தர் காரைக் கிளப்புவதில் கவனமானான். புதுக்கார் இன்னும் க்ளட்ச் சரியாக பழகவில்லை, வண்டி ஸ்டார்ட் ஆகி ஒரு துள்ளலில் நின்று போயிற்று. சில வினாடிகள் தான் ஆகியிருக்கும், அதற்குள் அந்த பைக் சீறிப் பாய்ந்து முன்னே வந்தது. ” ஏய் மொதல்ல ஒரு எல் போர்டு போடு ” நேராக சுந்தரை முறைத்து சொன்னான். உடனே பைக்கை முரட்டுத்தனமாக திருப்பி, ப்ரேக்கைப் பிடித்துக் கொண்டே வலது கை திருக வண்டி பயங்கரமாக உறுமியது. ஒரு உதறல் செய்து விட்டு வேண்டும் என்றே பக்க வாட்டில் அகலமாக இருந்த க்ராஷ் கார்ட்டில் இருந்த கூரான நுனி சுந்தருடை புதுக் காரில் ஒரு இடி. சுந்தர் திரும்பி என்ன சப்தம் என்று பார்ப்பதற்குள் அவன் கையை நீட்டி ஏதோ உதட்டை மடித்து ஏளனமாகச் சொல்லி விட்டுப் பறந்தான். சுந்தர் சிக்னலைத் தாண்டி ஓரமாக வண்டியை நிறுத்தி சேதம் என்ன அன்று பார்த்தான்.
வண்டியின் பின் கதவில் ஆழமாக ஒரு குத்து, தொடர்ந்து நீளமான கீறல், துருவிய மாதிரி ஆகி மெட்டல் தெரிந்தது. கையால் தொட்டால் பெயின் ட் உரிந்து வந்தது.வழக்கமாக அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத சுந்தருக்கே வலித்தது, உடனே கோபம் பொங்கி தலைக்கு ஏறி கண்கள் இருண்டது. என்ன செய்ய முடியும், பைக் எங்கேயோ போய் விட்டிருந்தது. சுந்தருக்கு அந்தத் தருணத்தில் கை கால்களைக்கூட அசைக்க சக்தி போய்விட்டால்போல இருந்தது. சுதாரித்துக் கொள்ள சற்று நேரம் ஆயிற்று.

பதினோரு மணிக்கு வருவதாக கும்மிடிபூண்டியில் ஒரு பேக்கரி கடைக்காரருக்குச் சொல்லி இருந்தான். மதியம் ஒரகடத்துக்குப் பக்கத்தில் இன்னொருவர். பேக்கரி ஆசாமி சிறிது நம்பிக்கையாக இருந்தது. அடுத்தவாரம் ஏதோ பணம் வரவேண்டுமாம், தானே கூப்பிடுவதாகச் சொன்னார். அடுத்த இடத்துக்குப் கிளம்பி, நடுவில் இரண்டு ஃபோன் ,வேலை மும்முரத்தில் கிட்டத்தாட்ட கார் விவகாரத்தை மறந்து விட்டான்.

மாலை லேசாக மழை வேறு ஆரம்பித்தது. அப்போதுதான் மழை விட்டு எல்லோரும் ஏக காலத்தில் கிளம்பி, ஆட்டோ டூ வீலர்கள் ரோட்டை அடைத்துக் கொள்ள, பொறுமை இல்லாமல் ஒரு சைட் ரோடில் திரும்ப, அங்கே ஏதோ ஒரு புது காலனி அமைதித் தீவாக இருந்தது. வரிசையாக வீடுகள்,மரங்கள், ஆள் நடமாட்டம் இல்லை. அங்கே ஒரு கமர்ஷியல் காம்ப்லெக்ஸ். ட்யூப் லைட் கசியும் ஒரு பல் டாக்டர் அறை, வாசலில் ஒரு பையன் ஸ்டூலில் , ஒரு செராக்ஸ் கடை வேலை இல்லாமல் ஒரு ஆள் டீ வியில் பார்த்துக் கொண்டிருந்தான், காய்ந்து போன பழங்கள், வாடின காய்கறிகளுடன் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவும் கிழவி, இரும்பு பெயின் ட் சிமென் ட் கடையில் கால்குலேடரை தட்டி நாள் கணக்கை முடித்துக் கொண்டிருந்த ஒரு அரை ட் ராயர் பனியன் ஆசாமி, இத்தனையும் தாண்டி கடைசியாக வரிசையாக பூட்டிக் கிடந்த கடைகளைத் தாண்டி சற்று தள்ளி ஒரு ஏடிஎம். ஏடிம் பார்த்தவுடன் சுந்தருக்கு வரும்போது சுமதி பணம் எடுத்து வரச் சொன்னது நினைவுக்கு வந்தது. அருகே நிறுத்தி இறங்கும்போது இன்னும் கார் ரிப்பேருக்கு எவ்வளவு ஆகுமோ என்று மறுபடியும் வலித்தது.
அப்போதுதான் கவனித்தான். ஏடிஎம் படிகளில் ஒருவன் விழுந்திருந்தான். குடித்து விட்டுக் கிடந்தவன் மாதிரி இருந்தது. ஆழ்ந்த மூச்சில் மார்புக்கூடு ஏறி இறங்கியது, வற்றிய முகம் , நரைத்த தாடியுடன், அரைக் கண்கள் திறந்து, நிறம் தெரியாத அழுக்கு பேன்ட், பாதி நிறம் போன சிவப்பு அரணாக் கயிறு, பட்டன்கள் இல்லாத ,காலர் கிழிந்த ஒரு பெரிய சைஸ் சட்டை இப்படியாக கிடந்தான். வயது நாற்பது முதல் எழுவது வரை என்ன வேண்டுமானலும் சொல்லலாம், அருகே பார்த்தால் பசி மயக்கத்தில் கிடந்த மாதிரி, பார்த்தால் பாவமாக இருந்தது.

” யாருப்பா, என்ன ஆச்சு உனக்கு ? ”

கிடந்தவன் லேசாக கண்களைத் திறந்தான். ஏதோ முனகினான். சுந்தர் காருக்குச் சென்று தண்ணீர் பாட்டில் எடுத்து வந்தான். நாள் முழுவதும் வண்டியில் இருந்த பாட்டில் தண்ணீர் வெதுவெதுப்பாக இருந்தது.
“இந்தாப்பா, முதல்ல தண்ணீர் குடி, இதோ ஒரு நிமிஷம் சாப்பிட ஏதாவது வாங்கித் தறேன் ”
அவன் சற்று அசைந்து சிரமப்பட்டு கை நீட்டி தண்ணீர் பாட்டிலை வாங்கினான். பர்ஸில் சில்லறை நோட்டுகள்தான், பணம் எடுத்தால் ஒழிய எதுவும் வாங்க முடியாது. சுந்தர் சுற்றிலும் பார்த்தான், யாரையாவது உதவிக்கு அழைக்க. இரும்புக் கடைக்காரன் அதற்குள் கடையை மூடி விட்டு, எதிர்த்திசையில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான். பல் டாக்டர் வாசலில் ஸ்டூல் காலி, கிழவிக்கு கூப்பிட்டாலும் காது கேட்கும் என்று நிச்சயமில்லை.
சரி பணம் எடுத்துக் கொண்டு அவனுக்கு ஏதாவது வாங்கித் தரலாம் என்று ஏடிஎம் உள்ளே நுழைந்தான். சுமதி அய்ந்தாயிரம் கேட்டிருந்தாள். பால்காரன், மளிகைக் கடை இதற்கே போதாது. அக்கௌன்டில் எவ்வளவு மிச்சம் என்று முதலில் பார்க்க வேண்டும், எல்லாம் எடுத்தால் பிறகு ஏதாவது அவசரத்தேவைக்குக்கூட பணம் இல்லை. அடுத்தது பெண்ணுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டும், கார் லோனுக்கு மாதாந்திரத் தவணை கட்ட வேண்டும். அக்கௌன் டில் ஏழாயிரம் இருந்தது. பேக்கரிகாரர் ஒத்துகொண்டால்தால் இரண்டு வாரத்துக்குள் சிறிது வரக்கூடும், யோசித்து நாலாயிரம் எடுத்தான். டெபிட் கார்டை எடுத்து பர்ஸில் வைத்துக் கொண்டு, பணத்தை எண்ணும்போது, பின்பக்கம் நிழல். அடுத்த ஆள் காத்திருக்கிறார் என்று திரும்பிப் பார்த்தால், வாசலில் விழுந்து கிடந்தவன். நிதானம் இல்லாமல் தடுமாறிக் கொண்டு முன்னேறினான். சுந்தர் “இதோ வந்துட்டேன்பா, பக்கத்துல ஏதாவது ஓட்டல் இருக்குதான்னு பார்..” அதற்குள் அந்த ஆள் “ஏய்” என்று கத்தி, இன்னும் என்ன என்று புரியாத சத்தம் போட்டு, கையை ஓங்கினான் – கையில் ஒரு பெரிய கல். எதிர்பார்க்காத சுந்தர் சுதாரித்து நகருவதற்குள், காட்டுத்தனமாக தலையில் ஒரு அடி – சுந்தர் அப்படியே சரிந்தான்.

சுந்தர் மறுபடி கண் விழித்த போது, சுமதிதான் கலங்கிய கண்களுடன் இருந்தாள். ஆஸ்பத்திரியில். தலையில் பெரிய கட்டு, சுந்தருக்கு அதிகம் பேச முடியவில்லை. மறு நாள்தான் சிறிது உணவு சாப்பிட்ட பின்பு பேச முடிந்தது. தலையில் அடி பட்டு, ரத்தம் வந்து மயங்கிக் கிடந்தானாம். இரவில் யாரோ பணம் எடுக்க வந்த ஆள் ஒருவர் பார்த்து போலீசுக்குச் சொல்லி, ஆம்புலன்ஸில் இந்த நர்சிங் ஹோமுக்கு அழைத்து வந்தார்களாம். சுமதி மிகவும் பயந்து போயிருந்தாள், வழக்கமான அதட்டும் குரலே கம்மிப் போயிருந்தது. பர்ஸில் இருந்த சில்லறை நோட்டுகளை மட்டும் எடுத்திருந்தான், மீதிப் பணம் அப்படியே இருந்தது. சுமதி யார் அடித்தது என்ன ஆயிற்று எவ்வளவு பணம் போயிற்று என்று பல முறை கேட்டாள், சுந்தர் எதுவும் சொல்லவில்லை, அந்தப் பசித்த முகத்தை நினத்தால் இப்போதுகூட வருத்தமாக இருந்தது. மன நிலை சரி இல்லாதவானாக இருக்க்க் கூடும், தூங்குவது மாதிரி கண்களை மூடிக் கொண்டான்.

சுமதி செய்திப் பத்திரிகை காண்பித்தாள் – ” நகரத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, போலீஸ் தூங்குகிறதா ?” அது எதிர்க் கட்சிப் பத்திரிகை.
மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்.
” சொல்லுங்க சுந்தர், இப்ப எப்படி இருக்கீங்க ?”
சுந்தர் மெல்லிசாய் புன்னகைத்தான். கண்கள் சேராமல், உதட்டளவில்.
” என்ன ஆச்சு சொல்லுங்க ”

” விட்டிருங்க சார், பரவாயில்லை பணம் அவ்வளவாக போகவில்லை”
“பணத்துக்கு மட்டும் இல்ல, கல்ல வெச்சு தலைல அடிச்சிருக்கான், பணம் எல்லாத்தையும் எடுத்தாலும் பரவா இல்ல, இந்த மாதிரி கேஸ்தான் அபாயம், நாளைக்கு வேற யாராவது அடிச்சு வெச்சா…”
அதற்குள் அவருக்கு அவருடைய செல் ஃபோன் அலறியது. எடுத்தவர் அடென்ஷனில் நின்றார், ” யெஸ் சார், இங்க ஆஸ்பத்திரியிலதான் இருக்கேன் ”

மறுபக்கம் உரத்த குரல் வெகு நேரத்துக்குக் கேட்டது.
“இல்ல சார், கட்டாயமா, நாளைக்குள்ள பிடிச்சுடுவோம்”
“யெஸ் சார், நானே பார்க்கறேன்”

” டிஜீபியே ஃபோன் பண்றாரு” சற்று இறுக்கமாகப் பேசினார். இது அரசியல் விவகாரமாக ஆகி விட்டதாம் – ஆளும் கட்சி உடனடியாக ஏதாவது நடவடிக்கை காண்பிக்க வேண்டுமாம்.
இன்ஸ்பெக்டர் விடுவதாக இல்லை. சுந்தர் ஒரு கணம் யோசித்தான்.
“சரி சொல்றேன் – அன்னிக்கு நான் ஏடிஎம் தேடி கார்ல மெதுவா இரண்டு பக்கமும் பார்த்துக்கிட்டே போய்ட்டே இருந்தேனா, அப்ப கூடவே வந்தான் பார்த்தாலே சந்தேகமா இருந்தது”

இன்ஸ்பெக்டர் சற்று தளர்ந்தார். கூட வந்திருந்த போலீஸ் ஆசாமி எழுத ஆரம்பித்தார்.
” பைக்ல, திடும் திடும்னு சத்தத்தோட, கையில் ஒரு கையில் சிகரெட், க்ரீம் நிறத்தில் அழுக்கு கார்ட் ராய் பேன் ட், பாசி பிடித்த மாதிரி ஒரு கருப்பு டீ ஷர்ட், ஒரு தடி தங்கச் சங்கிலி கழுத்தில், பைக் நம்பர்….”

– தருணாதித்தன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:21 pm

வாரிசு
-----------------
வளவ. துரையன்
---------------
அந்த வனாந்தரமே மகிழ்ச்சியில் மூழ்கியிருந்தது. கருங்காலி மரங்களும், தேவதாரு மரங்களும் வீசிய மெல்லிய காற்றில் கிளைகளை ஆட்டி ஆனந்தத்தில் ஆழ்ந்திருந்தன. செடிகளும், கொடிகளும் தத்தம் பூக்களைச் சொரிந்து மண்ணை மறைத்து மலர்ப்படுக்கை அமைக்க முயன்று கொண்டிருந்தன. நீர்நிலைகளில் இருந்த முதலைகள் கரையேறி யாருக்காகவோ காத்திருப்பதுபோல் காட்சியளித்தன. தடாகத்தின் மீன்கள் தங்களைப்போன்று முதல் அவதாரம் எடுத்தவன் வரும்போது பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் துள்ளிக் குதித்தன.
காய்ந்த தேக்குமர இலைகள் மெதுவாகச் சத்தமிடும் வண்ணம் அவற்றின் மீது கால் வைத்து அவன் வந்து கொண்டிருந்தான். வயதின் தளர்ச்சி தெரிந்தாலும் உடலின் கம்பீரம் குறையவில்லை. துவாரகையைவிட்டுக் கிளம்பியதிலிருந்தே மனம் சரியாக இல்லை என்பது அவன் முகத்தைப் பார்த்தாலே தெளிவாகத் தெரிந்தது. “முடிந்தது; எல்லாம் முடிந்துபோய் விட்டது” என்று அவன் வாய் அவன் அறியாமலே முணுமுணுத்தது. ஆனாலும் அவன் மனம் கேட்டது.

“கண்ணா! எல்லாவற்றையும் முடித்துவிட்டு முடிந்தது என்று இப்போது முணுமுணுக்கிறாயே? ஏன் வருத்தம்? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்களே! அது இதுதானா? உன் குலம் அழிந்தால்மட்டும் உனக்குத் துரம் வருகிறதா?”

மனச்சாட்சியின் வினாவுக்குக் கண்ணனால் விடையிறுக்க முடியவில்லை. தனக்கே தெரியாமல் யதுகுலம் அழிய யாரோ திட்டமிட்டிருக்கிறார்களே என்பதைத்தான் அவனால் தாங்க முடியவில்லை.

கொன்றைப்பூ ஒன்று தலைமீது விழுந்தது. நிமிர்ந்து பார்த்தான். மரத்தில் இருந்த குயிலும் நாகணவாய்ப்புள்ளும் அவனை வரவேற்பதுபோல் கீதம் இசைத்தன. அவற்றை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லையே!
”இந்த யதுகுமாரர் விளையாட்டுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டது. இல்லை; விதி விளையாடிவிட்டது. சாம்பனுக்குப் பெண் வேஷமிட்டு, ”என்ன குழந்தை அவனுக்குப் பிறக்கும்” என்று மகரிஷிகளிடம் கேட்டார்கள். அவர்களோ சினவயப்பட்டு, “இவனுக்கு உலக்கைதான் பிறக்கும்; அதனால் உன் குலம் அழியும்” என்று சாபமிட்டார்கள். நான் கூட அச்சாபத்தைச் சாதாரணமாகத்தான் நினைத்தேன். அந்த உலக்கையைப் பொடி செய்துவிட்டாலும் அதன் தூள்கள் மக்கிக் கோரைப் புல்லாய் வளர்ந்தனவே! ‘மைரேயம்’ எனும் மதுவால் மதி இழந்த யாதவர்களுக்குள் சண்டை மூள அக்கோரைப் புற்களைப் பறித்துத் தாக்கியே அனைவரும் மாண்டனர். நானும் அண்ணன் பலராமனும் எவ்வளவு முயன்றும் அதைத் தடுக்க முடியவில்லையே! என் வாரிசும் அழிந்த்தே! என் குலமும் அழிந்ததே!” என்றெல்லாம் எண்ணிய அவனுக்குச் சலிப்பு வந்தது.

கால்கள் லேசாக வலிப்பதுபோல் தோன்றியது. “எனக்கு மூப்பு வந்து விட்ட்தா? ஆமாம்; நானும் மானிடன்தானே? மேலும் சிறையில் தேவகியின் வயிற்றிலிருந்து பிறந்து நூற்று இருபது ஆண்டுகள் ஆகியிருக்குமே” என எண்ணிய கண்ணன் எங்காவது சற்று அமர்ந்து கொள்ளலாம் என எண்ணினான்.
அருகில் இருந்த அச்வந்த மரத்தைப் பார்த்தான். அதன் ஒரு கிளை சற்று சாய்வாகப் படுப்பதற்கேற்றவாறு வளைந்திருந்தது. அதன் மீது ஏறி வலது தொடை மேல் இடது பாதத்தைத் தூக்கிவைத்து அமர்ந்தான். இடுப்பின் பீதாம்பரத்தில் புல்லாங்குழலும், தலைமுடியில் மயிற்பீலியும், மார்பில் இரத்தின ஆரங்களும், மேலே உத்தரீயமும் வலுவான அழகிய தோள்களும், உறுதியான கால்களும், பறவைபோன்ற பாதங்களும் அழகுக்கு அழகு செய்தன.
சிந்தனை மீண்டும் ஓடியது. குலஅழிவே மீண்டும் மீண்டும் கண் முன் தோன்றியது. ”முனிவர்கள் சாபமிட்டார்கள்; சரி; பெண் வேஷம் போடச் சொன்னது யார்? அதற்கு அடிப்படை என்ன? அவர்கள் மதி மயங்கியது ஏன்? எங்கோ ஒரு தவறு நேர்ந்திருக்கிறது” என்றுதான் அவனால் நினைக்க முடிந்தது.

வானம் இருட்டத் தொடங்கியது. “மழை வரும் போலிருக்கிறது; தான் கிளம்ப வேண்டியதுதான்” எனக் கண்ணன் எண்ணியபோது நடந்ததை எல்லாம் மீண்டும் மீள்பார்வைக்குக் கொண்டு வரும் சிந்தனை முளைத்தது.
”குழந்தைப் பருவ விளையாட்டுகள், கம்ச வதம், திரௌபதிக்கு மானம் காக்க ஆடை தரல், தூது போதல், போர்க்கு நாள் குறித்தல், சகதேவனுக்கு வாக்களித்தல், அரவானைக் களப்பலியிடல்” என்று எண்ணிய தொடர்ச்சி அரவான் நினைப்பு வந்ததும் சட்டென அறுபட்டது.

கண்ணனின் வருகையை அரவான் எதிர்பார்க்கவே இல்லை. ஊர்ந்து செல்லும் நாக குலத்தில் தோன்றிய தன்னையும் ஒரு பொருட்டாக மதித்துப் பரந்தாமனின் பாதங்கள் இம்மாளிகையில் பட்டதே என்று அவன் இறும்பூதெய்தினான்.
தனது திருவடிகளில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்த அரவானைத் தூக்கி நிறுத்திய கண்ன்ன் அவனுக்கு ஆசி வழங்கினான். கண்ணனை ஆசனத்தில் இருத்திப் பழங்களும், பாலும், தேனும் கொடுத்து உபசரித்தபின் அரவான் கேட்டான்.
“பெருமானே! என் தந்தையார், சித்தப்பாக்கள், பெரியப்பா, பாட்டியார் அனைவரும் நலம்தானே?”
“எல்லாரும் நலமாக உள்ளனர் குழந்தாய்”
“போர் ஏற்பாடுகள் எல்லாம் எப்படி உள்ளன?”

“எல்லாம் அணியமாகி விட்டன. பாசறைகள் காட்டி முடிக்கப்பட்டு விட்டன. தினமும் ஒத்திகை நடைபெறுகிறது. தண்ணீரும் உணவுப் பொருள்களும் சேகரிக்கப்பட்டு விட்டன. குதிரைகள், யானைகள் ஆகியவற்றுக்குத் தீவனங்கள் மலைபோலக் குவிந்து காட்சியளிக்கின்றன. உன்னைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.”
”என் தாயைவிட்டு என் தந்தை பிரியும்போது கேட்டதற்கு ஏற்ப நானும் போரில் ஈடுபடப் புறப்பட வேண்டியதுதான் பெருமானே!” என்ற அரவான் சற்று சந்தேகத்துடன் “அது சரி; தாங்கள் இங்கு எழுந்தருளியதன் நோக்கம் என்னவோ?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

சற்று நேரம் பேசாமல் இருந்த கண்ணன் அரவானின் முகத்தைத் தீர்க்கமாக நோக்கி, “உன்னிடம் விடை பெற்றுப் போக வந்தேன்” என்று கூற அரவான் வியப்புடன் கேட்டான்.
“என்ன பெருமானே! விடைபெற வந்தீரா? எங்கு செல்கிறீர்? துவாரகைக்கா? போர்மேகம் சூழ்ந்துவிட்ட இச்சூழலிலா” என்று கேள்விமேல் கேட்கக் கண்ணன் மௌனமாக இருந்தான்.

“அரவானுக்குச் சினம் மூண்டது. “உத்தம புருஷன் என்று பெயர் பெற்றவர்கள் இப்படித்தான் செய்வார்களா? போருக்குத் திட்டம் தீட்டினீர்கள்; போர் தொடங்க வேண்டிய நேரத்தில் போய்விட்டால் தங்களையே நம்பிக் கொண்டிருக்கும் என் தந்தைமாரின் கதி என்னாவது? என் தாய் எப்படி கூந்தலை முடிப்பார்? என் தந்தை எப்படிக் கர்ணனை முடிப்பார்? பெரியப்பா எப்படித் துச்சாதனின் குருதியைக் கொப்பளிப்பார்? அந்தத் துரியோதனாதியர் செய்யும் சூழ்ச்சிகள், அவற்றை முறியடிக்கும் வகைகள் எல்லாம் யார் சொல்லித் தருவார்? என்று அரவான் பொரிந்து தள்ள கண்ணன் எழுந்து வந்து அவன் தோள்களைப் பற்றினான்.

மெதுவாகக் கூறினான். “இல்லை அரவான்! துவாரகைக்குச் செல்லவில்லை; இப் பூவுலகை விட்டே போகப் போகிறேன்.”
இப்போது அரவானுக்குச் சிரிப்பு வந்தது. என்ன பெருமானே? இதுவும் ஒரு விளையாட்டா? என்று கேட்கக் கண்ணனோ “இல்லை அரவான்; இது விளையாட்டன்று; இறுதியான முடிவு” என்று உறுதியான குரலில் கூறினான். அரவான் திடுக்கிட்டான். கண்ணன் குரலில் தெரிந்த கண்டிப்பின் கரணம் அவனுக்குப் புரியவில்லை. கண்ணனே பேசத் தொடங்கினான். “அரவான்; உனக்குத் தெரியுமே! போரை எப்படித் தொடங்க வேண்டும்? சொல் பார்ப்போம்”
“தெரியாதா? களத்திற்குக் காத தூரத்தில் பாசறை வீடுகள் அமைக்க வேண்டும்; வசதிகள் செய்யப்பட வேண்டும். போர் தொடங்குமுன் களப்பலி தர வேண்டும்”

“சரியாகச் சொன்னாய்; அந்தக் களப்பலி நான்தான்”

“தாங்களா? வேறு யாரும் இல்லையா? அவர்களுக்குத் தெரியமா? ஒப்புக் கொண்டார்களா?” என்று அரவான் கேட்கக் கண்ணன், “சம்மதிக்க வைத்தேன்; வேறு யாரும் இல்லையாமே! எல்லா சாமுத்திரிகா லட்சணமும் பொருந்தியவன் நான்தானே?” என்று பெருமிதத்துடன் கூறினான்.

கண்ணன் குரலில் தெரிந்த கர்வம் அரவானைத் தூண்ட, “ஏன் நான் ஒருவன் இருக்கிறேனே?” என்று பட்டென்று சொன்னான்.
வலையில் மீன் தானே விழுந்ததைக் கண்ட கண்ணன், “களப்பலி கொடுப்பவர் தாமாக முன்வர வேண்டுமே” என்று அரவானைச் சீண்டினான். அரவான் உணர்ச்சி வயப்பட்டான்.
”என் தாய் உலூபி மீது ஆணை; நடைபெற இருக்கும் குருச்சேத்திரப் போரில் என் தந்தைகளின் வெற்றிக்காக நான் அவர்கள் பொருட்டுக் களப் பலியாகிறேன்.”
அரவானின் சபதம் கேட்ட கண்ணன் தன் மகிழ்ச்சியை வெளிக் காட்டாமல், “வேண்டாம் அரவான்; நீ இள வயதுக்காரன்; எதுவும் அனுபவிக்காதவன்.” என்றான். சற்றுப் பேசாமல் இருந்த அரவான் பின் தெளிவாகப் பேசினான். ”பெருமானே! தாங்கள் நினைத்தால் என் குறையைப் போக்க முடியும்.”
”என்ன அரவான்?”

“நான் பெண்சுகம் அறியாத மனக்குறையுடன் களப்பலியாகக் கூடாது. எனவே நான் பலியாவதற்கு முன்னம் ஓரிரவாவது சுகம் அடைய வேண்டும்”
“என்ன அரவான்? மடியப்போகிறவனை மணக்க எந்தப் பெண் முன்வருவாள்?”
அரவான் சிரித்தான். “நீங்கள்தாம் மாயத்தில் வல்லவராயிற்றே! உங்களால் முடியாததா? நீங்கள் தேடினால் பெண் கிடைக்க மாட்டாளா?” என்று கேட்டுக் கைகளைக் குவித்தான்.
கண்ணன் பெண் தேடும் பொறுப்புடன் விடை பெற்றான். பெண்ணும் மோகனாங்கி எனும் பெயரில் மகிழ்ச்சியுடன் வந்தாள். மண மேடையில் அமர்ந்தாள். இன்பமும், துன்பமும் எல்லார் முகத்திலும் உள்ளேயும் குடியிருக்கத் திருமணமும் முதல் இரவும் நடந்தேறின.
நீராடி முடித்துப் புத்துணர்ச்சியுடனும் களைப்புடனும் இருந்த அரவானிடம் அப்போதுதான் அங்கு வந்த கண்ணன் கேட்டான்.
“என்ன திருப்திதானே?”
அரவான் வெட்கத்துடன் தலைகுனிந்தான். மெதுவாகச் சொன்னான். “நான் அணியமாகி விட்டேன். ஆயத்தங்கள் தொடங்கலாம்.”
“சரி! உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்று கூறிக் கண்ணன் புறப்பட்டான். வாயில்வரை சென்ற அவனை அரவானின் குரல் இழுத்தது

“தலைவா! ஒரு செய்தி”
“என்ன அரவான்?” என்று கேட்டு அருகில் வந்தான் கண்ணன்.
“விதவைக் கோலம் பூண இருக்கும் அவளின் துன்ப முகத்தைக் காண விரும்பவில்லை நான். இரவு முகமே இருக்கட்டும்.”
“சரி; நீ அவளை மீண்டும் பார்க்க முடியாது.”

அரவான் மெல்லிய குரலில் பேசினான். “உங்களால்தான் இதுவும் முடியும்; என்னால் மோகனாங்கிக்குக் கரு உண்டாகிக் குழந்தை பிறந்தால் அந்த வாரிசை அது ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! தங்களே வளர்த்து உருவாக்க வேண்டும்.”
கேட்ட கண்ணன் கடகடவென்று சிரித்தான். “வாரிசா? கவலைப்பட வேண்டாம்; நிச்சயம் உருவாகாது.”
கண்ணன் உறுதியாகக் கூற அரவான் வியப்புடன் கேட்டான். “என் உருவாகாதா?”
“ஏன் தெரியுமா? அரவான், இதோபார்; என்னை நன்றாகப் பார்”. கண்ணன் உரு ஒரு கணம் மறைந்துபோய் மோகனாங்கி தெரிய அரவான் வியப்படைய மீண்டும் கண்ணன் தோன்றினான்.
“எந்தப் பெண் மரணம் அடையப்போகும் மணமகனுக்குக் கழுத்தை நீட்டுவாள்? பைத்தியக்காரா! நான்தான் மோகனாங்கியாக வந்தேன்; வாரிசு எப்படி வரும்?”

கேட்ட அரவான் இருகைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு குனிந்தான். அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஆறுதல் கூற அருகே வந்த கண்ணன் அவன் தோளைத் தொட்டான். தொட்ட கையை அரவான் தட்டிவிட்டான். அவன் வார்த்தைகள் வெடித்துக் கிளம்பின.
“நான் பைத்தியக்காரன்தான்; உங்கள் பேச்சை நம்பியவன் அல்லவா? கடைசியில் என்னிடமே மாயாஜாலம் காட்டிவிட்டீரே! திருமணத்தில் தங்களைக் காணாதபோதே நான் சந்தேகப்பட்டிருக்க வேண்டும்; மோகனாங்கியின் மோகம் என் கண்களைக் கட்டி விட்டது. எவ்வளவு பெரிய மோசம் செய்து விட்டீர்கள்? எனது வேண்டுதலை இப்படியா நிறைவேற்ற வேண்டும்? முடியவில்லை என்று சொல்லியிருக்கலாமே?” என்று அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

“வேண்டாம் அரவான்; பொறுமையாக இரு” என்ற கண்ணன் குரல் அவனுக்கு இன்னும் கோபமூட்டியது.
“பொறுமை எப்படி வரும் பெரியவரே! எப்படி வரும்? பெரியவர்கள் பெரிய தவறு செய்வார்கள்; நாங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?” அரவானின் குரலில் ஆத்திரம் தொனித்தது.
“பெரிய தவறா?” ஏதோ கேட்க வேண்டும் என்பதற்காகக் கண்ணன் கேட்டான்.

“ஆமாம்; இதைவிட எனக்கென்னத் தீங்கு செய்ய முடியும்? திருமணம் புரிய ஏன் ஆசைப்பட்டேன்? சுகம் அனுபவிக்க மட்டுமா? எனக்கோர் மகன் பிறப்பான்; நல்ல நோக்கத்துக்காக நான் மறைந்தாலும் அவன் வாரிசாக உருவாகி எங்கள் நாக குலத்தை வாழ வைப்பான் என்று நம்பினேனே! என் ஆசையைத் தவறாகப் புரிந்துகொண்டு மண் அள்ளிப் போட்டு விட்டீரே!”

“நடந்தது நடந்து விட்டது; விடு அரவான்”
“விட்டு விடுவதா? உங்களுக்கென்ன எளிதாகச் சொல்லி விட்டீர்கள்” என்று கத்தினான் அரவான். கண்ணன் சிரித்தான்.
“சிரிக்காதே கண்ணா! நான் சாபமிடப் போகிறேன்”
“எனக்கே சாபமா?” கண்ணன் குரலில் கேலி தொனித்தது.
”ஆமாம்; இந்த உத்தம புருஷனின் சாபம் நிச்சயம் பலிக்கும்; எனக்கு வாரிசு இல்லாமல் செய்து என் குலம் அற்றுப் போகக் காரணமாய் இருந்த உன் குலம் அடியோடு அழிந்து போகும். நீ உட்பட யதுகுலத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். இது நிச்சயம்.”

அரவானின் இறுதிக் கட்டப்பேச்சு சாபக் குரலாய் மரத்தில் சாய்ந்து கொண்டிருந்த கண்ணனின் செவிகளில் இப்போது ஒலித்தது. கண்ணன் தெளிவடைந்தான்.

அப்போது உடைந்துபோன உலக்கையின் சிறு இரும்புத் துண்டைத் தன் அம்பு நுனியில் பொருத்தி இருந்த ‘ஜான்’ என்னும் வேடன் தொலைவிலிருந்து கண்ணன் பாதத்தை ஒரு பறவை என்று நினைத்து அதை நோக்கி அம்பு எய்ததால் கண்ன்ன் கதையும் முடிந்தது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:25 pm

வாழையடி வாழை!
---------------
பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்)
-----------------
சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கண்டாங் கெர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கருத்தரித்து சிலவாரங்களே ஆன தாய்மார்களும், குழந்தை வரம் வேண்டி நம்பிக்கையோடு வந்திருக்கும் பெண்களும் அங்கே வண்ணப்பூக்களாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தாதியர்கள் பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்துகொண்டிருந்தார்கள்.

டாக்டர் சத்தியநாராயணன் என்ற பெயர்ப் பலகை தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் ரம்யாவும் அவளது அம்மா கௌரியும் பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவிகள்போல் பதட்டத்தோடு காணப்பட்டனர். மூக்குக் கண்ணாடிக்குள் ஒளிந்திருந்த டாக்டர் சத்தியநாராயணன் இரத்தப் பரிசோதனை முடிவுகள் அச்சடித்த அறிக்கையைக் கவனமாக மீண்டும் ஒரு முறை பார்வையிட்டார்.

“வாழ்த்துக்கள்! இட்ஸ் பாசிட்டிவ்” புருவத்தை உயர்த்தி தெத்துப்பல் தெரிய வெற்றிச் சிரிப்போடு அவர்களைப் பார்த்த்தார் டாக்டர் சத்தியநாராயணன்.
“வாவ்” வாய் திறந்ததே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை தாய், மகள் இருவருக்கும்.
“ரம்யா உன் கனவு நனவாகப்போகுது” ஈரமான கண்களுடன் கௌரி மகளை ஆரத் தழுவினாள். அம்மாவின் அரவணைப்பில் நெகிழ்ந்துப் போனாள் ரம்யா.

“டாக்டர், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை”
“நோநோ, நான் என் கடமையைத்தான் செய்தேன் மிசஸ் ரம்யா. உங்கள் கணவரிடம் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்”
“அவர் வேலை நிமித்தம் இந்தோனீசியா சென்றிக்கிறார்.

இந்தச் செய்தி அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். கடமையைத் தவிர்த்து, இந்தக் கேசில் நீங்க சிரத்தை எடுத்து எங்கள் குடும்ப வாரிசை உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். இதை நாங்கள் மறக்கவேமாட்டோம்” ரம்யாவின் நெகிழ்ச்சியான சொற்கள் டாக்டர் சத்யநாராயணனின் மனதையும் இளகவைத்தது. அம்மாவும் மகளும் வெளியாகும் வரை அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
மருத்துவமனை மருந்தகத்தில் மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் குமாருடன் தொடர்புகொண்டாள்.
“குமார், ரிசல்ட் இஸ் போசிடீவ். டாக்டர் இப்போதான் உறுதிப் படுத்தினார்” வாயெல்லாம் பல்லாக ரம்யா குமாரிடம் பேசுவதை பக்கத்து இருக்கையில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள் கௌரி.
“காட்! உண்மையாகவா ரம்யா, அம்மா என்ன சொன்னார்?” இந்த நேரத்தில் தான் அங்கே இல்லாத வருத்தத்தை மறைத்து குமார் கேட்டான்.
“உண்மைதான், அம்மா இங்கேதான் இருக்கார், போனை அவங்ககிட்டே கொடுக்கிறேன்” அம்மா எதுவும் கூறுமுன்னே டக்கென்று கைபேசியைக் கொடுத்தாள் ரம்யா.

“சொல்லுங்க மாப்பிள்ள” அம்மா பூரிப்போடு பேசிகொண்டேப்போனார்,
ஒரு குழந்தைக்காக ஏங்கிய நாட்கள் நினைவுத்திரையில் வழுக்கிக் கொண்டு வந்தது ரம்யாவுக்கு. மாதவிலக்கு தள்ளிப் போகும்போதெல்லாம் கர்ப்பம் தங்கியிருக்குமா என்ற சந்தேகத்தோடு, வாந்தி, தலைசுற்றல் ஏதேனும் அறிகுறிகள் தெரிகிறதா என்று வராத வாந்தியையெல்லாம் வருவது போல கற்பனை பண்ணுவாள்.
ஆவலோடு மருந்தகத்திலிருந்து ‘செல்ப் பிரேக்னன்சி டெஸ்ட் கிட்’ வாங்கி சுய பரிசோதனை செய்துகொள்வாள். கடற்கரையில் கட்டிய மணல் வீடுகளை அழித்துவிட்டுப் போகும் அலைகள் போல வழக்கமான ஒற்றைக் கோடு குறியீடு ‘நெகடிவ்’ என்றே காண்பித்து, அவளது கனவுகளை சுக்குநூறாக்கியது. பாழாய்ப்போன கர்ப்பம் தங்காமல் ரம்யாவைப் பரிதவிக்க வைத்தது.

தாமதித்து வந்த மாதவிலக்கு அவளது தாய்மை அடையும் பாக்கியத்தையும் தூரத்தள்ளியது. எல்லாவித பரிசோதனைக்கும் தன்னையும் தன் கணவன் குமாரையும் உட்படுத்தி பணம் விரையமானதுதான் மிச்சம்.
“மிஸ்டர் அண்ட் மிசஸ் குமார், உங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. சிலருக்கு சீக்கிரம் கரு தரிக்கலாம், சிலருக்கு நாள் ஆகலாம். நீங்கள் மனவுளைச்சல் இல்லாமல் ஜாலியாக இருங்கள், தானாக கருத் தரிக்கும்” என்ற மருத்துவர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப்போனது.

‘குழந்தை பாக்கியம் இல்லையே’ என்று கணவனின் நெஞ்சிலும், தன் கருவறை காலியாகக் கிடக்கிறதே’ என்று அம்மாவின் மடியிலும் புலம்பித் தீர்த்தாள்.
அவளது கண்ணீருக்கு அணை போட்டதுபோல ஒருநாள் ரம்யா கருவுற்றாள். வழக்கத்துக்குமாறாக அன்றைய சுய பரிசோதனையில் இரண்டு கோடு காண்பித்து அவளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. மறுநாளே குமாரையும் அழைத்துக்கொண்டு மருத்துவரைச் சென்று பார்த்தாள்.

‘கர்ப்பம் கன்பார்ம்’ என்றதும் இருவரும் ஆனந்தக் கடலில் மிதக்கலாயினர். இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடுவதற்கு குமார், ரம்யாவை சிங்கப்பூர் ‘ஃப்ளை ஓவருக்கு’ அழைத்துச் சென்றான். இரவு உணவு, பூங்கொத்து அவளுக்குப் பிடித்த உயர்தர ‘சாக்லேட்ஸ்’ மற்றும் பரிசுப்பொருட்கள் எனக் கொடுத்து அவளைக் கொண்டாடினான்.

சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். இவர்கள் மகிழ்ச்சியில் யார் கண் பட்டதோ ‘இது ‘எட்டோப்பிக் பிரக்னன்சி’, கரு கர்ப்பப்பைக்கும் வெளியே இருக்கிறது. உடனடியாக கருவை அகற்றவேண்டும் என்று மருத்துவர் கூறிவிட்டார்.
உடைந்துபோன ரம்யாவை அவளது அம்மா கௌரி தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.
“எனக்கு மட்டும் ஏம்மா இப்படி நடக்குது”
“கொஞ்சம் பொறுமையா இரு ரம்யா, நாம கும்பிடற கடவுள் கை விடமாட்டார்”
“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியேம்மா, எல்லாரும் என்னை ஏளனமா பாக்கற மாதிரி இருக்கும்மா” ரம்யாவுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
“நீயே வீணா கற்பனை பண்ணாதே ரம்யா, பேசாம நீயும் குமாரும் ‘ஹொலிடே’ போயிட்டு வாங்க, உங்க ரெண்டுபேருக்கும் ஆறுதலா இருக்கும்” என்று கூறியது மட்டுமல்லாமல் இருவருக்கும் கேரளாவுக்குச் சென்று வர பயணச் சீட்டு எடுத்து கேரளாவைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தாள்.
சுற்றுப்பயணம் முடித்து வந்ததும் ரம்யா இயல்பான நிலைக்குத் திரும்பியிருந்தாள். வேலைக்குப் போவதும் வருவதும் அம்மாவுடன் கோவிலுக்குப் போவதுமாக பொழுதைக் கழித்தாள்.

அவள் சும்மா இருந்தாலும் அவளைச் சுற்றி இருப்பவர்கள் அவளைச் சும்மா இருக்கவிடவில்லை. எம்.பி.பி.எஸ். படிக்காதவர்களெல்லாம் வைத்தியம் சொல்ல ஆரம்பித்தார்கள். இதைச் செய், அதைச் செய், இப்படிச் செய், அப்படிச் செய் என்று குழந்தை பாக்கியத்துக்காக நண்பர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்தாள். ஒரு பலனும் இல்லை.

குமார் ஆரம்பத்தில் அவளது இழுப்புக்கெல்லாம் வளைந்துக் கொடுத்தாலும், நாள் ஆக ஆக அவளது செய்கைகள் அவனுக்கு அத்துமீறுவதாகத் தெரிந்தன. மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானான்
“அடச்சீ, ஒரு குழந்தைக்காக எவ்வளவு அவமானங்கள், பேசாம ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கோ, என்னை விட்டுரு” முடிவாகக் கூறிவிட்டான் குமார். அவளைத் தவிர்ப்பதற்காக பணியிடத்தில் வழங்கிய புதிய இந்தோனீசியா ‘ப்ரோஜெக்ட்டை’ ஏற்றுக்கொண்டான். அதனால், அவன் அடிக்கடி இந்தோனீசியா சென்று வர வேண்டியிருந்தது. சிலநேரங்களில் மாதக்கணக்கில் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.
“ரம்யா, ஆஸ்பித்திரி போய் விட்டு வந்ததலிருந்து ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” அம்மாவின் கேள்வி ரம்யாவை நினைவுப் புத்தகத்தை மூடச் செய்தது.

“அம்மா, கடவுள் கருணையானவர்தான்னு நிரூபிச்சுட்டார். பதினைஞ்சு வருஷத்திற்குப் பிறகு, இப்போதான் அவர் மவுனம் கலைத்திருக்கிறார்”

“ஒரு குழந்தைக்காக நீ பட்டபாடு எனக்குத்தானே தெரியும், பழசையெல்லாம் மறந்துடு. அடுத்து, ஆரோக்கியமான சாப்பாடு, மருந்து மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிடணும் . மத்தபடி வீட்டைச் சுத்தப்படுத்தி குழந்தைக்கான அறையை தயார் பண்ணணும், இதுலதான் நாம கவனம் செலுத்தணும், என்ன சரியா?”
“மம்மி சொன்னா சரியாத்தான் இருக்கும், ‘லவ் யூ’ அம்மா” ரம்யா அம்மாவை இறுக்கமாக கட்டிப்பிடித்து அம்மாவின் கன்னத்தில் மூக்கை உரசி தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

அப்பா இறந்தபோதுகூட அம்மா தைரியமாக இருந்து ரம்யாவை வளர்த்தாள். ஆனால் ரம்யா ஒரு குழந்தைக்காக அவளையும் அவள் உடலையும் வருத்திக் கொண்டப்போது, தரைமட்டமான கட்டிடம் போல நொறுங்கிப்போனாள். குமாருக்கும் ரம்யாவுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்து வருவதை உனர்ந்ததும், அதனால் குமார் வேலையைக் காரணம் காட்டி அடிக்கடி வெளியூர் போவதையும் அறிந்து ரம்யாவுக்கு துணையாக அம்மாவும் ரம்யா வீட்டுக்கே குடிவந்துவிட்டாள். அன்றிலிருந்து அம்மா நிழல் தரும் மரமாக ரம்யாவுக்குத் துணையாக இருக்கிறாள்.

“ரம்யா, நன்றாகச் சிந்தித்துத்தான் இந்த முடிவு எடுத்தீர்களா” ரம்யாவின் ராஜினாமா கடிதத்தைப் பிரிக்காமலே கேட்டார் அவளது மேலதிகாரி.
“எஸ் சார், எனக்கு வேறு வழியில்லை”
“அடுத்தமாதம் வெளிவரவிருக்கும் பதவி உயர்வு பெயர் பட்டியலில், உங்க பெயரும் பரிந்துரைக்கப் பட்டிருக்குன்னு தெரியும்தானே? உங்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?”
“தெரியும் சார், இருந்தாலும் என் முடிவில் மாற்றமிருக்காது, காரணத்தைப் பகிர்ந்துக்கொள்ள விருப்பமில்லை, ‘பர்சனல் மேட்டர் சார்’, என்னை மன்னிச்சுடுங்க” குழந்தை பற்றிய செய்தியை ரகசியமாக வைத்திருக்க விரும்பினாள் ரம்யா. அவளின் முடிவில் தீர்க்கமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் அவளது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“அம்மா..!” கூவிக்கொண்டு வந்த ரம்யாவின் குரல் உற்சாகத்தின் உச்சியில் இருந்தது.
கௌரி, அவள் வேலையை ராஜினாமா செய்ததைக் கேள்விப்பட்டதும் முதலில் பயந்தாள். ஆனால், குமாரின் அனுமதியோடு எடுத்த முடிவு என்பதை அறிந்ததும் ஆறுதல் அடைந்தாள்.
“வாங்கம்மா, என்.டி.யு.சி. க்குப் போய் சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரலாம்” பையைத் தூக்கிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

“அம்மா! இங்கே பாருங்க, கைக்குழந்தையோட குட்டி சட்டை, எவ்வளவு கியூட்டா இருக்கு. அட! இதப் பாருங்க, எவ்வளவு குட்டி சோக்ஸ், அம்மம்மா வாங்குவோமா?” குழந்தையாகவே மாறிவிட்டிருந்த ரம்யாவைப் பார்க்க கௌரிக்குச் சிரிப்பு வந்தது.
“பாரு ரம்யா, ‘பேபி’ பிறக்குறதுக்கு முன்னாடி எந்தப் பொருளும் வாங்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்கம்மா. குழந்தை பிறக்கட்டும், அப்புறம் வாங்குவோம்” ரம்யா அப்போதைக்குத் தன் ஆசைக்கு, அணைபோடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நன்கறிவாள். மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டு அங்காடிக் கடையை வந்தடைந்தனர்.

“அம்மா, இந்தப் பால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்று என் தோழி கூறியிருக்கிறாள், இரண்டு பேக்கட் வாங்கட்டுமா?”
“ரம்யா, விலையைப் பார்த்தியா? இது வெறும் விளம்பரத்துக்காக சொல்லறது, அந்தக் காலத்துல ஏது இந்த மாதிரியான ‘ஸ்பெஷல்’ பால்? சாதாரண பால் குடிச்சுத்தான் நீ பிறந்தே, மறந்திடாத..”
“எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுங்க, சரி இதைப்பாருங்க, ‘ஸ்ட்ரெச் மார்க் கிரீம்’, வயிற்றுக்குத் தேய்ப்பது, அப்போதான் ‘பேபி’ பிறந்து வயிறு சுருங்கும்போது ரொம்ப கோடுகள் தெரியாது” அம்மா சொல்லச் சொல்ல கேட்காமல் கர்ப்பவதிகளுக்குத் தேவையானப் பொருட்களை ஒரு கூடையில் அடுக்கி பணம் செலுத்தப் போனாள்.
“நீங்கள் இருவரும் சிஸ்டர்ஸா” ‘கேஷியர் பில்’ கொடுக்கும்போது கேட்டதை நினைத்து வீட்டுக்கு வந்தும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“உங்களை என்னோட தங்கச்சியான்னு கேட்டது கொஞ்சம் ஓவரா இருந்தது” என்று வாய்விட்டுச் சிரித்தாள் ரம்யா. வெகு நாட்களுக்குப் பிறகு அவள் இப்படிச் சிரிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டாள் கௌரி.
அம்மாவின் ஒற்றைப் புன்னகை பதிலை மிகவும் ரசித்தாள் ரம்யா. அம்மாவின் பளபளப்பு குறையாத கன்னங்களும், அகல விரிந்த கூர் கண்களும், காதோரம் சுருண்டு விழும் சுருள் கேசமும் அம்மாவை இன்னும் அழகாகக் காண்பித்தது. தன்னைவிட அம்மா அழகாகவும் இளமையாகவும் இருப்பதை, அப்பொழுதுதான் கவனித்தாள் ரம்யா. ‘கேஷியர்’ சொன்னது உண்மைதான் என்பதை அப்பொழுது உணர்ந்தாள்.
அம்மாவுக்கு இருபத்து இரண்டு வயதிலேயே திருமணம் முடிந்து மறுவருடம் ரம்யா பிறந்தாள். ரம்யாவுக்கு எட்டு வயதாயிருக்கும் போதே கார் விபத்தில் அப்பா தவறிவிட்டார். அப்பா உயிரோடிருந்தால் தனக்குத் தம்பியோ தங்கையோ இருந்திருப்பார்கள் என்று அவள் ஏங்கியதுண்டு.

“அம்மா இப்ப நீங்க பூசினாப்பல இருக்கீங்க, என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு, இருங்க உங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடுறேன்” ரம்யா உடனே சமையலறைக்குப் போனாள். போனவேகத்தில் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து, “பாம்புக் கண்ணு, பல்லிக் கண்ணு, ஊருக் கண்ணு, கேஷியர் கண்ணு, எங்கண்ணு எல்லா கண்ணும் போக” என்று அம்மாவுக்குத் திருஷ்டி கழித்தாள்.

ரம்யாவின் குறும்பை ரசித்துவிட்டு சமைக்கப் போவதாகக் கூறிக்கொண்டே சமையலறைக்குள் செல்லும் அம்மாவை இமைகொட்டாமல் பார்த்துகொண்டிருந்தாள் ரம்யா. அப்போது, அவளுக்குக் குமாரின் ஞாபகம் வந்தது. குமாருக்கு தன்னால் எவ்வளவு தொல்லை என்று நினைத்து வேதனைப் பட்டாள். கண்ணில் திரண்ட நீர்த் துளிகள் தரையைத் தொடும்முன், கைப்பேசியை எடுத்து குமாரின் எண்களை சுழற்றினாள்.

மறுமுனையில் குமாரின் குரல் அவரசமாக ஒலித்தது.
“சாரி குமார், ‘பிஸியா’ இருக்கற நேரத்திலே கூப்பிட்டுடேனா?”
“அவசரமா ஒரு ‘மீட்டிங்’ போய்கிட்டு இருக்குறேன், என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு, அங்கே எல்லாம் ‘ஓகே’ தானே?”
“இங்கே ஒரு பிரச்சனையும் இல்லே, உங்கள ரொம்ப ‘மிஸ்‘ பண்ணுறேன். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்”
மறுமுனையில் மௌனம்.
“ஐ லவ் யு குமார், ரொம்ப உங்க மனச நோகடிச்சுட்டேன், வெரி சாரி குமார்” ரம்யா விசும்புவது குமாரின் இதயத்தையும் பிசைந்தது.
“ஏய் லூசு மாதிரி பேசாத, ‘ஐ டூ லவ் யுடா’, இந்த மாதிரி நேரத்திலதான் நீ தைரியமா இருக்குனும், அம்மா எங்கே?
“உள்ளே ‘கிச்சன்ல’ இருக்காங்க, டுயூ டேட் (Due Date) செப்டம்பர் ஏழுன்னு சொல்லியிருக்கிறார் டாக்டர், ஆகஸ்ட் கடைசிக்குள்ள வந்துருங்க, ‘பேபி’ பிறக்கும்போது நீங்களும் என் பக்கத்தில இருக்கணும்னு ஆசைப்படுறேன்”
“ஒரு மாசத்துக்கு முன்னாடியே லீவு போட்டுட்டேன். ஆகஸ்ட் பதினைஞ்சுல நான் சிங்கப்பூர்ல இருப்பேன் ரம்யா. இப்போ அவசரமா போகணும், ராத்திரி கூப்பிடுறேன்” குமார் தொடர்பை துண்டித்தும் ரம்யா கைப்பேசியை காதிலேயே வைத்திருந்தாள். பெருமூச்சு ஒன்றே அப்போது அவளுக்குத் துணையாக இருந்தது..
உருளும் காலத்தோடு கருவும் குழந்தையாக உருமாறி வளர்ந்துக்கொண்டிருந்தது. நாள் நெருங்க நெருங்க ரம்யாவுக்கும் கௌரிக்கும் சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால், டாக்டர் ஸ்கேன் படங்களைக் காண்பித்து “உங்க ‘பேபி’யோட கன்னம் பெரிசா புசுபுசுன்னு இருக்குன்னு” என்று கூறி, கருமை படர்ந்த வெண்புகையைக் காட்டியபோது அவர்கள் பூரித்துப் போனார்கள்.

“முப்பத்தைந்து வாரம் முடியப்போகிறது, இனிமேல் வாரம் ஒரு முறை பரிசோதனைக்கு வாருங்கள், ‘பேபி’யோட தலை இன்னும் கீழ் நோக்கி இறங்கல, இப்படியே இருந்தா ‘சிசேரியன் ஆபரேஷன்’ செய்யும்படி இருக்கலாம், அடுத்த வாரங்களில் ‘பொஸிஷன்’ மாறுதான்னுப் பார்ப்போம். மற்றப்படி எல்லாம் ‘நார்மலா’ இருக்கு, வாழ்த்துக்கள்” டாக்டர் தெத்துப்பல் தெரிய சிரித்தபோது சாட்சாத் பெருமான் சத்தியநாராயணன் மூர்த்தியே ஆசீர்வதிப்பதுபோல இருந்தது இருவருக்கும்.
குமார் வரும்வரை காத்திருக்க முடியாது என்று பிடிவாதமாக குழந்தை படுப்பதற்காக தொட்டில், பால்’புட்டி’, ‘பவுடர்’, குளிக்கும் ‘சோப்’, தலைக்கு ‘ஷாம்பூ’ என்று கண்ணுக்குத் தெரிந்த பொருட்களை எல்லாம் வாங்கி குழைந்தைக்கான அறையைத் தயார் செய்துவிட்டாள். மேலும் ‘கார்ட்டூன்’ படங்களை சேகரித்து அவைகளை வெட்டி அறை முழுதும் ஒட்டி அழகு பார்த்தாள் ரம்யா.

“ரம்யா அலங்கரித்தது போதும், வந்து ஒரு வாய் சாப்பிடு” என்று அறைக்குள் வந்து ரம்யாவின் பின்னால் நின்று மகளின் கைத்திறமையை இரசித்துக்கொண்டிருந்தாள் கௌரி.
“அம்மா சட்டையெல்லாம் தண்ணீர், தரையெல்லாம் தண்ணீர், எப்படி வந்தது” திடுக்கிட்டு வினவினாள் ரம்யா.
கௌரியும் தரையெல்லாம் வழிந்துக்கிடக்கும் நீரைப்பார்த்து பயந்துவிட்டாள்.
“எனக்கும் தெரியல ரம்யா, ஒருவேளை பனிக்குடம் ஒடைஞ்சிருக்குமோ, வா நாம உடனே ‘ஆஸ்பித்திரி’க்குப் போவோம்” பதற்றத்தோடு இருவரும் கே. கே. மருத்துவமனைக்கு விரைந்தனர்.
“அம்மா பயமா இருக்கும்மா..” ரம்யா கலவரமாகக் காணப்பட்டாள்.
“பயப்படாதே ரம்யா, பனிக்குடம் ஒடைவது இப்போ சகஜமான நிகழ்வுதான், உடனே மருத்துவமனைக்குப் போய்ட்டா பிரச்சனை வராம தடுக்கலாம் ” கௌரி உள்ளுக்குள்ளே சிறிது பயந்திருந்தாலும் ரம்யாவிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

“நான்தான் உங்க பேச்சைக் கேட்காம பேபிக்கு எல்லாத்தையும் முன்னேற்பாடாய் வாங்கிட்டேன், நான் பாவி” வழியெல்லாம் புலம்பிக்கொண்டே வந்தாள் ரம்யா.
மருத்துவமனையில் கருப்பைக் கழுத்து விரிவடைந்திருப்பதாகவும் குழந்தையின் தலை மேல் நோக்கி இருப்பதகாவும் கூறி உடனே சிசேரியன் ஆபரேஷனுக்குத் தயாராகும்படியும் கூறிச் சென்றார் டாக்டர் சத்தியநாராயணன்.

“டாக்டர், இப்ப நீங்கதான் எனக்குக் கடவுள்” கையெடுத்துக் கும்பிட்ட ரம்யாவுக்குத் தைரியம் கூறி தன் பணியைச் செய்யக் கிளம்பினார் டாக்டர் சத்தியநாராயணன்.
அம்மா அமைதியாக இருப்பதைப் பார்க்க ரம்யாவுக்கு சிறிது கவலையாக இருந்தது. அம்மாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். கௌரி தன் இரு கைகளாலும் அவள் கையை அணைத்து “தைரியமா இரு, நாம கும்பிடுற தெய்வம் கைவிடாது” ரம்யாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகச் சொன்னாள்
தொய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஏசியின் உதவியால் அந்த அறை ஜிலுஜிலுவென்று இருந்தது. இருந்தும் ரம்யாவுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. சுவற்றில் அடித்தப் பந்துப்போல பழைய ஞாபகங்கள் மோதிக்கொண்டிருந்தன. மனம் துடுப்பில்லாதப் படகைப் போல தத்தளிக்கும் போது ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்வது வழக்கம். திடீரென்று ஞாபகம் வந்தவளாய் கண்களை மூடிக்கொண்டு மனதுக்குள்ளேயே ராம நாமம் சொல்ல ஆரம்பித்தாள்.
எத்தனை முறைச் சொல்லியிருப்பாள் என்று தெரியவில்லை. தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்ட பிறகுதான் அவள் கண்களைத் திறந்தாள்.

“வாழ்த்துக்கள், ஆபரேஷன் சக்ஸ்சஸ், பெண் குழந்தை பிறந்திருக்கிறது” தேவதையைப்போலச் சொல்லிச் சென்ற தாதிக்கு நன்றி சொல்லக் கூடக் தோன்றாமல் கண்ணீர் திரைக்குப் பின் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

உடனே குமாரின் நினைவு வந்தது. தான் இருந்த குழப்பத்தில் குமாருக்குத் தகவல் சொல்ல மறந்துபோனது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. கைப்பேசியை எடுத்து குமாருடன் தொடர்பு கொண்டாள்.
“குமார்…., நீ அப்பாவாயிட்டே, நான் அம்மாவாயிட்டேன், நமக்கு பேபி கேர்ள் பிறந்திருக்கு” திக்கித் திணறி தன் சந்தோசங்களை வார்த்தைகளால் கொட்டினாள்.
“என்ன சொல்லற, தேதி இன்னும் இருக்குல்ல?” பதற்றத்தோடு வினவினான் குமார். ரம்யா நடந்த விவரங்களை விரிவாகக் கூறினாள்.

“அம்மா?”
“இன்னும் ஆபரேஷன் தியேட்டரில்தான் மயக்கமாஇருக்காங்க, ஒருமணி நேரத்தில் அவங்களுக்கு மயக்கம் தெளிந்ததும் பார்க்கலாம்னு நர்ஸ் சொன்னாங்க” மறுமுனையில் அமைதி. மெல்லிய விசும்பல்கள் கரை தொடும் சிறு அலைகளென மேலெழுந்து மௌனத்தில் கரைந்து போயின.
நிறைவு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Dec 28, 2015 9:28 pm

துன்பம் நேர்கையில்..!
-------------------
குரு அரவிந்தன்
----------------------------
(ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக குடும்பத் தலைவனை இழந்து நிர்க்கதியாய் இருப்பவர்களுக்கு உதவும் நல்ல நோக்கத்தோடு செயற்படும் அன்பு நெறிக்காகப் புனையப்பட்ட சிறுகதை)
சீதா..!

யாரோ வாசலில் கூப்பிடும் சத்தம் கேட்டது.

அவள் கனவிலிருந்து வெளிவந்து கண் விழித்துப் பார்த்தாள். தட்டிக்குள்ளால் நுழைந்த வெளிச்சம் கண்ணுக்குள் பட்டுத் தெறித்ததிலிருந்து விடிந்து போயிருப்பது தெரிந்தது.

‘யாராய் இருக்கும்..?’ நெஞ்சில் ஒருவித பய உணர்வு சட்டென்று தேங்கி நின்றது.
மீண்டும் அதே குரல் கேட்டது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டாள், பெண் குரல், பக்கத்து வீட்டு ரேவதி மாமியின் குரலாகத்தான் இருக்கும் என்ற நினைப்போடு அவசரமாக எழுந்து சோம்பல் முறித்து, கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள்.

இப்போதுதெல்லாம் முன்புபோலப் பயப்பட வேண்டியதில்லை. நாட்டில் நடப்பதைப் பார்த்தால், ஆட்சி மாறினாலும் அதிகாரம் மாறாமலே இருப்பது போன்ற ஒருவித பிரேமை தோன்றலாம். ஆனாலும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. முன்பெல்லாம் யாராவது அழைத்தாலே பயம் பிடித்துக் கொள்ளும். வாசல்வரை வந்து அழைத்துச் சென்றால், அப்புறம் பிணமாகத்தான் வீடு வரவேண்டும். இல்லாவிடால் தொலைந்து போனவர்களின் பட்டியலில் இடம் பெறவேண்டும். எதுவாக இருந்தாலும் முடிவு என்னவென்பதை வந்தவர்களே தீர்;மானிப்பார்கள். எஞ்சியிருக்கும் நீங்கள்தான் அந்த இழப்பின் வலியைக் காலமெல்லாம் சுமக்க வேண்டிவரும்.

இவளது கணவனையும் ஒரு நாள் அதிகாலையில் இப்படித்தான் வெளியே வரும்படி அழைத்துக், கூட்டிச் சென்றார்கள். அப்புறம் கணவனுக்கு என்ன நடந்தது, இருக்கிறானா இல்லையா என்றுகூட இதுவரை தெரியவில்லை. சித்திரவதை முகாமுக்கு அவனைக் கொண்டு சென்றதாகவும் கதைகள் அடிபட்டன. ஒரே நாளில் அவளது தலைவிதி மாற்றப்பட்டிருந்தது. கைக்குழந்தையோடு தனித்துப் போன அவளது வாழ்க்கை இதுவரை அர்த்தமற்றதாய் போயிருந்தது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதுவரை காலமும் அவள் பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. குழந்தைக்காகவாவது வாழவேண்டும் என்று அவள் உறவுகளால் நிர்பந்திக்கப் பட்டாள். வருமானத்திற்கு எங்கே போவது, அதுவே பெரிய தொரு கேள்விக்குறியாய், பூதாகரமாக கண்முன்னால் பயம் காட்டியது. யுத்த சூழலில் யாரும் வலிய வந்து உதவுவதற்கு முன்வரவில்லை. தெரியாத வேலை என்றாலும், இன்னும் ஒரு உயிர் வாழவேண்டுமே என்ற ஆதங்கத்தோடு அடுத்த நேரக் கஞ்சிக்காகக் கூலி வேலைக்கும் சென்றாள். ஆனாலும் என்னதான் மறக்க நினைத்தாலும், அவளது கணவனை அன்று அழைத்துச் சென்ற அந்த வெள்ளைவான் மட்டும், யமதர்மனின் எருமைமாடுபோல, அவள் கண்ணுக்குள் அடிக்கடி நிழலாடிக் கொண்டே இருந்தது.
காலம் எப்படி எல்லாம் மனித மனங்களை மாற்றிவிடுகின்றது. நல்லவன் கூடாதவனாகவும், கூடாதவன் நல்லவனாகவும் பட்டியலில் இடம் பெற்றுவிடுவது காலத்தின் கோலம்தான். காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பது போல, எப்படியோ இழுத்துப் பறித்து நடந்த தேர்தலால் அரசியல் பட்டியலும் இப்போது மாறிவிட்டது. நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவளால் இழப்பை முற்றாக மறக்க முடியாவிட்டாலும், இப்போதெல்லாம் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சாவது விடமுடிகின்றது.

ஆழ்ந்த சிந்தனையோடு வெளியே வந்து பார்த்தாள். மாமியுடன் இன்னும் இருவர் வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

‘என்ன மாமி, காலங்காத்தால.. என்ன விஷயம்..?’ குரலில் அவளையறியாமலே ஒருவித பதட்டம் கலந்து வந்தது.
‘விஷயம் இருக்கு, அதுதானே வந்தனாங்கள்’ என்றாள் மாமி.
ஒன்றும் புரியாமல் பார்த்தாள், மாமியின் வார்த்தைகளில் பதட்ம் இருக்கவில்லை. அருகே இரண்டு பேர் நன்றாக உடுத்தபடி, புன்னகையோடு நின்றிருந்தார்கள். வெளிநாட்டவர்போல தெரிந்தார்கள்.
‘சீதா, இவங்க கனடாவில் இருந்து வந்திருக்கிறாங்கள்’ என்று மாமி அறிமுகப்படுத்தினாள்.
கையுயர்த்திக் கும்பிட்டு, சைகையாலே வணக்கம் சொன்னாள். அவர்களும் அப்படியே செய்தார்கள்.
‘அக்கா, நாங்க அன்பு நெறியில இருந்து வந்திருக்கிறோம்.’

‘அன்பு நெறியா, கனடாவில இருக்கிற அன்பு நெறியா?’ அவளது விழிகள் விரிந்து ஒரு கணம் நிலைத்து நின்றன.
‘ஓம், அங்கையிருந்துதான் வாறம், உங்களுக்கு அன்பு நெறி பற்றித் தெரியுமாக்கா?’
‘ஓம் ஓம் என்ன நீங்கள், தெரியுமா எண்டு கேட்டிட்டீங்க, ஒண்டுமே தெரியாமல் இருந்த எனக்கு தங்கட செலவில தையல் வகுப்பு நடத்தி எனக்கு பாடம் சொல்லித் தந்தது அவைதானே..!’
‘ஓ அப்படியா, மறந்து போயிடுவீங்களோ எண்டு பார்த்தேன், நல்ல விஷயத்தை ஞபகம் வைச்சிருக்கிறீங்கள்.’
‘அவை செய்த உதவியை எப்பிடி மறக்கமுடியும். இப்ப கூழோ கஞ்சியோ குடிக்க அவை சொல்லித் தந்த இந்த தையற்கலைதானே எனக்கு உதவியாய் இருக்கு’ என்றாள்.

என்னக்கா சொல்லுறீங்க, தையல் செய்ய உங்களுக்கு விருப்பமாக்கா?
‘தினக்கூலிக்கு தைக்கப் போறனான். உண்மையாகவே இதுதான் சாப்பாட்டிற்கு எனக்கு மட்டுமில்லை, இங்கை இருக்கிற என்னைப் போன்றவைக்கும் வருமானம் தருகுது, எவ்வளவு நாளைக்கோ தெரியாது. என்னைப்போல நிறையப் பெண்கள் இங்க குடும்பத் துணையில்லாமல் இருக்கினம். அதுசரி உங்களை வெளியாலை வைச்சுக் கதைச்சுக் கொண்டிருக்கிறன், உள்ள வங்கோ.’ சீதா அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.
அவர்கள் வந்த வழியெல்லாம் யுத்தத்தின் பாதிப்பை அவதானித்துக் கொண்டுதான் வந்தார்கள். வசதி உள்ளவர்கள் வசதி அற்றவர்களுக்கு தங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். கனடிய வர்த்தகப் பிரமுகர்கள் அவர்களுக்கு நிறையவே உதவி செய்தார்கள்.
‘அப்ப உங்களுக்கு வேற வேலையே தெரியாதாக்கா?’

‘இந்தக் கிராமத்திலா, வேறை என்ன கூலி வேலைக்குத்தான் போகலாம்’
‘இல்லை அக்கா, இதுக்காகத்தான் இந்;த தையல் பயிற்சியை முதல்ல கிழக்கு மாகாணத்தில பாதிக்கப்பட்டவைக்குத் தந்தனாங்கள். அது உங்களுக்குப் பயன்பட்டிருக்கு என்று தெரியுது. ஆதனால நாங்கள் உங்களுக்கு ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறம்.’

‘எனக்கா நல்லசேதி, அப்பிடி என்றால் என்ர புருசன் உயிரோட இருக்கிறாரா?’ அவள் முகத்தில் எதையோ எதிர்பார்த்த, பொங்கி வந்த ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தாள்
‘இல்லை அக்கா அதுபற்றி எங்களுக்கு உண்மையாகவே தெரியாது, ஆனால் உங்கள் எதிர்காலம் வளமாய் இருக்க வேணும். ஆதனால நாங்கள் ஒரு திட்டத்தோட வந்திருக்கிறம்’

‘என்ன ராசா, என்ன திட்டம், சொல்லுங்கோ’
‘நாங்கள் உங்களுக்கு தவணை முறையில் பணம் கட்டக்கூடியதாகத் தையல் மெசின் ஒன்று வாங்கித் தரப்போறம்’
‘தையல்மெசினா.. எனக்கா..?’ அவள் நம்ப முடியாமல் ஆச்சரியமாய் அவர்களைப் பார்த்தாள்
‘அதாவது நாங்கள் உங்களுக்கு மட்டுமல்ல, எங்கட திட்டத்திலை தையல் படித்தவர்களுக்கு கடனாக ஒரு தையல் மெசின் தரப்போகிறம். நீங்களே அதை வைச்சுப் பிழைக்கலாம். மாதாமாதம் வருகிற வருமானத்தில தவணைப் பணத்தை கட்டி முடிச்சால் போதும்.’
‘உண்மையாவா?’
‘ஓம், இந்தத் திட்டத்தின்படி, நீங்கள் கடனைக் கட்டி முடிச்சதும் அந்தப் பணத்தை எடுத்து தேவையான இன்னுமொருவருக்கு உதவி செய்ய நினைச்சிருக்கிறம்.’
இப்படியும் மனிதர்களா, அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்து எங்களுக்கு உதவி செய்கிறார்களா? உணர்ச்சி வசப்பட்டதில் அவளது கண்கள் கலங்கின.

‘நீங்கள் எல்லாம் இந்த மண்ணைவிட்டுப் போனபோது நாங்க உங்களைப்பற்றித் தப்பாய் பேசினோம். ஆனால் இப்போதுதான் புரியுது, நல்ல மனசு படைத்த வெளிநாட்டில் இருக்கும் உங்களைப் போன்றவர்களால்தான் நாங்கள் இந்த மண்ணில் மானத்தோடு நிம்மதியாய் வாழமுடியுது.’ வார்த்தைகள் விம்மலோடு வெளிவந்தன.
‘இல்லை அக்கா, எங்கட உடன் பிறப்புகளுக்கு எங்களால முடிஞ்ச அளவு உதவியைச் செய்யிறம், அவ்வளவுதான்.’
‘உதவி என்று செய்யிறத்திற்கும் நல்ல மனசு வேணுமெல்லே, நீங்கள் எவ்வளவோ தூரத்தில இருக்கிற கனடாவில இருந்தாலும் உங்கட சிந்தனை எல்லாம் எங்களோடதான் இருக்குது எண்டு இப்பதான் எங்களுக்கும் புரியுது.’
‘இது எங்கட இனத்திற்குச் செய்ய வேண்டிய எங்கட கடமையக்கா. தனித்தனியாய் செய்யாமல் ஒன்றாய் சேர்ந்து ‘அன்பு நெறி’ என்ற பெயரிலை செய்யிறம். நாங்க மட்டுமல்ல, எங்கட அடுத்த தலைமுறையும் கட்டாயம் தொடர்ந்து இதைச் செய்யும்.’

‘ஒரு நிமிசம் இருந்து தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்கோ’ என்று சொன்ன சீதா சமயல்கட்டு நோக்கி நடந்தாள்.
அவர்களின் பார்வை சுவரில் மாட்டியிருந்த அந்தப் படத்தில் பதிந்தது. ஒரு அழகான பட்டுத் துணியில் சீதாவின் தையற்கலைக்கு அடையாளமாகவோ, அல்லது நன்றியுணர்வின் வெளிப்பாடகவோ வண்ண நூல்களின் தையல் வேலைப்பாட்டோடு கூடிய வாசகம் அடங்கிய பிறேம் கண்ணில் பட்டது. தையற்கலை தெரிந்த பெண்கள் உள்ள எல்லா வீட்டிலும் யுத்தத்திற்கு முந்திய அந்த நாட்களில் ‘வெல்கம்’ என்றோ அல்லது வேறு வாசகம் கொண்ட எழுத்துக்கள் தைக்கப்பட்டோ இதுபோல சுவரில் ஏதாவது பிறேம் அழகுபடுத்திய ஞாபகம் வந்தது. அங்கே இருந்த அந்த வாசகத்தை மீண்டும் வாசித்துப் பார்த்தார்கள்.

‘இடுக்கண் களையுமாம் அன்பு நெறி’

பழைய வாழ்க்கை திரும்பிவிட்டது போல, இவர்களின் கண்கள் கலங்கிப் போனது. சீதா சுடச்சுட கொண்டு வந்து கொடுத்தது வெறும் தேத்தண்ணி எண்டாலும், பாதிக்கப்பட்ட அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம் என்ற திருப்தியில் இவர்களின் மனசெல்லாம் இனிப்பாய் நிறைந்து போனது.
(நன்றி: அன்பு நெறி ஆண்டு மலர்)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 8:21 am

அழைப்பு
-------------------
மாதவன் ஸ்ரீரங்கம்

-------------------

வின்சென்ட் காலிங்பெல்லை அழுத்திக் காத்திருந்தான். வீட்டிற்குள்ளிருந்து டீவி இரைந்தது. இவனுக்கு கால் வலித்தது. பொறுமையாகக் காத்திருந்தான். இரண்டு நிமிடம் கழித்து மறுபடி முயற்சித்தும் யாரும் வராமல்போக, இரும்புக்கதவில் தட்டி சத்தமெழுப்பியபடியே குரல் கொடுத்தான்.

“சார்…”
உடனே பதில்வந்தது. “ஒரு நிமிஷம்.”
வெளியே வந்த பெண்மனி நடுத்தர வயதிலிருந்தார். புருவம் சுருக்கினார்,
“யாருங்க ?
“கோபாலன் சார் வீடு ?”
“இதுதாங்க. இருங்க வறேன் என்று உள்ளே சென்று சாவிகொண்டுவந்து கேட்டைத்திறந்துகொண்டே “நீங்க “? என்றாள்.
“என் பேரு வின்சென்ட். பெங்களூர்லயிருந்து வறேன். என் அப்பா சார்கிட்ட படிச்ச ஸ்டூடன்ட்”.
“ஓ. அப்படிங்களா ? உள்ளவாங்க. உக்காருங்க”
ஹால் கொஞ்சம் அகலமாக இருந்தது. டீவியில் 20/20 கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த பைய்யனுக்கு பதினாறோ பதினெட்டோ வயதிருக்கும். அவள் தண்ணீர் தம்ளரோடு வந்ததாள்.
“ஸ்ரீ… டிவி வேல்யூம் ரெட்யூஸ் பண்ணு.”
“பாவம் பையனை தொந்திரவு பண்ணவேணாம் மேடம். சின்னப்புள்ளைங்கதானே ?”
அவள் எதுவும் பேசாமல் சன்னமாக புன்னகைத்தபோது அழகாக இருந்தாள்.
வின்சென்ட் ஆரம்பித்தான்,
“நீங்க சாரோட டாட்டர்ங்களா ?”
“இல்லங்க நா அவரு மருமக.”
“சார் நல்லா இருக்காருங்களா ?”
” நல்லான்னு சொல்லமுடியாது. இப்ப கொஞ்சநாளா முடியறதில்லை. இப்பக்கூட பக்கத்துல அவரைக்கூட்டிடு ஹாஸ்பிடல்தான் போயிருக்காரு. வரநேரந்தான்.”

“அடடா. ஒடம்புக்கு என்னங்க ?”

“வயசாயிடுச்சில்லிங்களா, அதான். அப்பப்ப எதாச்சும் சிரமம். நைட்டு கொஞ்சம் மார்வலின்னு சொல்லிட்டிருந்தாரு. இப்பத்தான் போன்பண்ணாங்க. ஒன்னும் பிரச்சனையில்லன்னு.”
டீவியில் யாரோ சிக்ஸர் அடிக்க அந்தப்பையன் ‘ஹே’ வெனத்துள்ளினான்.
“என்ன சாப்பிடுறீங்க டீ காபி ?”
“வேணாங்க. ஒங்களுக்கு ஏன் வீண்சிரமம்.”

“அதெல்லாம் ஒன்னும் சிரமமில்ல. ஒரேநிமிஷம் வந்துடுறேன்” என உள்ளே சென்றுவிட்டாள்.
வீடு நல்ல வெளிச்சமும் காற்றோட்டமுமாயிருந்தது. பெங்களூரில் இதுமாதிரியான வீட்டிற்கு சாதாரணமாக முப்பதாயிரம் ரூபாய் வாடகை கேட்பார்கள். ஹாலில் செல்போன் ஒலித்தது.

“ஸ்ரீ யாருன்னு பாரு”.
“மா ரேவதி ஆன்ட்டி. ஹலோ, ஒன் மினிட் ஆன்ட்டி. மம்மிட்ட தறேன்.”
அவள் ஹாலுக்கு வந்து போனை காதில்வைத்துத் தோளில் அழுத்தியபடியே சமையலறைக்குச் சென்றாள். உள்ளிருந்து அவள் பேசுவது ஹால்வரை கேட்டது.

“இல்லப்பா கெஸ்ட் வந்திருக்காங்க. இல்ல… என் பாதரின்லாவுக்கு தெரிஞ்சவங்களாம்”
உள்ளிருந்து காபியின் மணம் வெளிப்பட்டது. வின்செண்ட் தன் கைப்பையிற்குள் கைவிட்டு பத்திரிக்கைகளைத் துழாவினான். ஏதேதோ பெயர்கள் எழுதிய பத்திரிக்கைகள் கிடைத்தன. இறுதியாக ‘கோபாலன் வாத்தியார்’ என்று எழுதபட்ட பத்திரிக்கையை சுலபமாக எடுக்கும்படி வைத்துக்கொண்டான். அவள் காப்பியுடன் வந்தாள்.
“உங்களுக்கு ஒரே பையனா”?

” ஆமாங்க” என்றபோது அவள் முகம் சற்றே கவலைகொண்டது. காப்பி சுலபத்தில் ஆறுவதாகத் தெரியவில்லை. வின்செண்ட் டவராவில் நன்றாக ஆற்றினான். அவள் சுவரில் சாய்ந்துகொண்டு டீவியையும் இவனையும் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இப்புடித்தான் அடிக்கடி வருங்களா”?
” இப்ப கொஞ்சநாளாத்தாங்க”
அவன் என்ன பேசுவதென்று தெரியாமல் காபியை உறிஞ்சத்துவங்கினான். தொலைவில் எங்கோ பலமாக இடி இடித்தது. காற்று வாசற்புழுதியை வாரி பால்கனியில் கொண்டுவந்து போட்டது. ஒரு பெரும் மழைக்கான முஸ்தீபுகள் தெரிந்தன.

“ஸ்ரீ… மாடில துணி காஞ்சிட்ருக்கு போயி எடுத்துட்டுவாப்பா”
அவன் சலித்துக்கொண்டே எழுந்து மாடிக்குச்சென்றான். மழைத்துளிகள் மெல்ல மெல்ல விழத்தொடங்கி பெரிதாகக்க்கொட்ட ஆரம்பித்ததும் அவள் கைகளைப் பிசைந்தாள்.

“கொடை எதாச்சும் கொண்டுபோயிருக்காங்களா”? என்று இவன் கேட்டுமுடிப்பதற்குள் வாசலில் டூவிலர் ஹாரனடித்தது. மழையில் நனைந்தபடி அந்த பெரியவர் உள்ளே நுழைய, பின்னாலேயே பைக்கை ஸ்டான் இட்டுவிட்டு அவரும் நுழைந்தார். வின்செண்ட் எழுந்து பெரியவரை வணங்கினான். அவள் கொடுத்த துவாலையால் துவட்டியபடி அருகிலிருந்த மர நாற்காலியில் சாய்ந்துகொண்டார். இவனை யார் என்பதுபோல அவளிடம் பார்வையை வீசினார்.

” மாமா இவுரு உங்களுக்காகத்தான் வந்திருக்காரு. உங்க ஸ்டூடண்டோட மகனாம்” என்று சத்தமாகக் கூறினாள். பவர் கட்டாகி டீவி அணைந்துவிட அந்தப்பையன் ‘ச்சே’.. என்றபடி எழுந்து உள்ளே சென்றான்.
“என் ஸ்டூடண்ட்னா யாரு”?

வின்செண்ட் சொன்னான்,
” உங்ககிட்ட லெவந்த் டுவெல்த் படிச்சாரு. சூசையப்பர்னு பேரு’
“கொஞ்சம் சத்தமா பேசுங்க. அவருக்கு கொஞ்சம் காது சரியா கேக்குறதில்ல இப்பல்லாம்” என்றாள் அவள். அவன் இம்முறை சத்தமாகச் சொன்னான்.

“சூசையப்பனா”? என்றபடி யோசிக்கத்துவங்கினார் பெரியவர்.
“ஒரு பையன் இருந்தான். சுப்பிரமணியன்னு. அவன் நேவில இல்ல இருந்ததாக் கேள்வி. அப்பா பேர் என்ன”?
“தேவசகாயம். கும்மோணத்துல மொதலியார் கடையில கணக்கப்பிள்ளையா இருந்தாரு”
அவருக்கு இன்னும் பிடிபடவில்லை என்று புரிந்தது. அவர் மகன் வேறு உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்து இவர்கள் பேச்சில் கலந்துகொண்டார்.

“அப்பாக்கு இப்பல்லாம் சரியா ஞாபகம் இருக்கிறதில்ல. நாலு மணிக்கி காபி சாப்டு நாலறை மணிக்கு ஏன் இன்னும் காப்பி தரலைன்னு சண்டைக்கு வருவார். பாவம் வயசாச்சில்லிங்களா”?
வின்செண்ட் அவரை ஆமோதிப்பதுபோல மென்மையாக புன்னகைத்தார். பெரியவர் இன்னும் புருவம் சுருக்கி தனக்குள் ஆழத்தில் அமிழ்ந்தார். ஜன்னல்வழியே மழைச்சாரலும் குளிர்காற்றும் ஹாலை நிறைத்தது. சட்டென்று மின்விசிறி ஒருமுறை சுழன்றுவிட்டு மறுபடி பவர் கட்டானது.
வின்செண்ட் தாமதமாவதை உணர்ந்துகொண்டு எழுந்து பைக்குள்ளிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினான்.

“வீடு கட்டிருக்கேன். ஒப்பனிங் பங்சன். பெங்களூர்லதான். அப்பா அவசியம் சாரைக் கூப்டுகிட்டு வரச்சொன்னாரு”
அவர் பத்திரிக்கையை வாங்கி மேலோட்டமாக ஒரு பார்வையிட்டுவிட்டு பெரியவரிடம் கொடுத்தார். பெரியவர் ஒருமுறை பார்த்துவிட்டு அந்தப்பெண்ணிடம் கொடுக்க, அவள் அதைக்கையில் வைத்துக்கொண்டே கேட்டாள்.
“அப்பாவையும் அழைச்சிட்டு வந்திருக்கலாங்களே. மாமா சந்தோஷப் பட்டிருப்பாரு”
வின்செண்ட் முகம் சட்டென்று இருண்டது.

“மூணுமாசமா அவரு நடமாட்டமில்லங்க. பராலிஸிஸ்”
“அடடா !”
சிலவிநாடி யாரும் பேசாமலிருக்க, தெருவில் யாரோ டூவிலரில் விடாமல் ஹாரனடித்துசென்றார்கள்.
“அக்கா கல்யாணத்துக்கே கூப்பிடனும்னு சொல்லிட்ருந்தாரு. எவ்ளவோ முயற்சி செஞ்சோம். அட்ரஸே கெடைக்கல”
அவர்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“போனமாசம் அப்பாவோட கிளாஸ்மேட் ஒருத்தரு வந்திருந்தாரு. அவருதான் சொன்னாரு. சார் இங்க இருக்கிறதா”
மகன் கேட்டார்.

“நீங்க என்ன பண்றீங்க”?
” ஆடிட்டரா இருக்கேன் சார்”
“சூசையப்பன்னா.. இல்லியே அவன் போஸ்டாபீஸ்லல்ல வேல பார்க்கிறதாச் சொன்னான்.. ஆனா அவம்பேரு வேற என்னமோல்ல சொன்னதா ஞாபகம்” என்று பெரியவர் தனக்குத்தானே முனகிக்கொண்டிருந்தார்.
அந்தப்பெண்மணி சொன்னார்,
“ஆனா இந்தக்காலத்திலும் வாத்யார்ங்களை ஞாபகம் வச்சிருக்கிறதே பெரிசுதான்”
“எங்கப்பா சாரைப்பத்தி நிறைய சொல்லியிருக்காரு. படிக்கிற காலத்தில நெறைய உதவி செஞ்சிருக்காராம். பலதடவை ஸ்கூல் பீஸெல்லாம் சார்தான் கட்டினதாச் சொல்லிருக்காரு. அப்பாக்கும் இன்னும் சில வசதியில்லாத பசங்களுக்கும் ப்ரீயா டியூசனெல்லாம் எடுத்திருக்காரு”
அவர்கள் அமைதியாக இருக்க வின்செண்ட் தொடர்ந்தான்.

“அப்ப அப்பா கோவிந்தபுரத்துல இருந்தாராம். சைக்கிள்ல தாத்தாகூட ரதவீதி ஸ்கூல் வரை வருவாராம். தெனம் லேட்டா போவாராம். சார் புரிஞ்சிண்டு திட்டாம விட்ருவாராம்”
இப்போது மகன் குழப்பத்துடன் சொன்னார்,
“ரதவீதியா ? எங்கப்பா மாடவீதிலதானே டீச்சரா இருந்தார்”?
பெரியவர் கேட்டார்,
” ஏம்பா உங்கப்பா எந்த கோபாலண்ட்ட படிச்சார் ? ஏன்னா அங்க ராம கோபாலன்னு ஒருத்தன் ஹிஸ்ட்ரி டீச் பண்ணிட்ருந்தான். என் பேரு சேஷகோபாலன்”
வின்செண்ட் திறுதிறுவென விழித்தான். அந்தப்பெண்மணி காபி தம்ளரை உள்ளே எடுத்துச்சென்றாள்.
வின்செண்ட் தயக்கத்துடன் சொன்னான்..

“இல்ல அப்பா படிச்சது ராஜகோபாலன் சார் கிட்டன்னு சொன்னதா ஞாபகம்”
அவன் சொன்னது பெரியவருக்கும் கேட்டிருக்கவேண்டும்.
“அதான பார்த்தேன். ராஜகோபாலனா ? இவண்டா… வெடவெடன்னு ஒசரமா மாநெறமா இருப்பானே, ரதவீதி ஸ்கூல்ல இருந்தானே… அதாண்டா யானையடி குதிரையடிட்ட குடியிருந்தானே ? ரெண்டு பசங்கன்னு நெனைக்கிறேன். ஆனா அவன் ரெண்டுவருசம் முன்னாடியே போயிட்டதா சென்னாங்களே” என்றார் தன் மகனிடம். அவர் புரிந்துகொண்டதாகத் தலையாட்டினார்.
சட்டென்று அங்கே நிலவிய மவுனத்தை கலைத்தது மின்சாரம் வந்து ஓடத்தொடங்கிய டீவி.
வின்செண்ட் மெல்ல எழுந்துகொண்டான்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 8:23 am

பத்திரிகைல வரும்
----------------
நேதாஜிதாசன்

---------------

இரவு ஒரு பதினோரு மணி,கதையில் பதினைந்தாம் பத்தியை தட்டச்சு செய்து கொண்டிருந்தான் கணினியில்.
அவன் ஒரு பொறியியல் மாணவன்.ஆனால் அதில் விருப்பம் இல்லை.பாடப்புத்தகத்தை தவிர அனைத்தையும் படிப்பதில் கொள்ளை பிரியம் அவனுக்கு.விளைவு அனைவரும் இயந்திரங்களை கற்றுக்கொண்டிருக்க இவன் ஜெயகாந்தனை கற்றுக்கொண்டிருந்தான்.

கையில் ஒரு செல் போன் அதில் எப்போதுமே இணையதள வசதி இருக்க வேண்டும் என்ற ஆசையே அதிகம்.அதேபோல அவன் செல் போனில் எப்போதுமே இணையதள வசதி வீட்டின் எதிர்ப்பை மீறி.
அவனுக்கு எழுதுவது பிடித்து போனது.ஏதோவும் ஏதாவதுமாக எழுதி தள்ளி ஒரு சில படைப்புக்கள் அவன் நண்பர்கள் மற்றும் இணையதள வாசகர்களின் பாராட்டை பெற்றது.அவனுக்கு ஒரு கனவு இருந்தது.இந்த இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஒரு தடவையாவது தொட்டு பார்த்துவிட வேண்டும் என.
அவன் எழுதுவதை வாசகர்கள் விமர்சிக்கிறார்களோ இல்லையோ அவன் வீட்டில் கடுமையாக விமர்சிப்பார்கள்.”சும்மா மென்டல் மாதிரி எழுதாதே” “நீ என்ன பைத்தியமா” “உனக்கு என்ன அவார்டா கொடுக்க போறாங்க” மற்றும் சில வருந்த வைக்கும் எள்ளல் சிரிப்புக்கள்.ஆனாலும் கவலைபட்டதில்லை அவன்.அவன் வலைப்பூவில் எழுதி தள்ளினான்.பல அரசியல் கட்டுரைகள்,பல கவிதைகள் என படைப்புகள் பரந்துவிரிந்தன.வாசகர்கள் வருகை அவன் வலைப்பூவில் எழுதுவதை விட வில்லை.
பல பத்திரிகைகளின் இணையதளங்களுக்கு சென்று செய்திகளை படிப்பதை தவிர்த்து அந்த பத்திரிகையின் மின்னஞ்சல் முகவரியை தேட ஆரம்பித்தான்.

அவனது போன்புக்கில் நண்பர்களின் தொலைபேசி எண்களை விட பத்திரிகைகளின் மின்னஞ்சல் முகவரி அதிகமானது.

எழுதியதை சகட்டு மேனிக்கு பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு ஒரு நாளுக்கு 40 தடவைக்கும் அதிகமாக மெயில் செக் செய்து பார்த்தான்.ஒரு மாதம் இது தொடர்ந்து.அவனுக்கு எந்த பதிலும் இல்லை.சில நாட்களுக்கு படைப்புக்களை அனுப்புவதை நிறுத்தி விட்டான் காரணம் பயங்கர சலிப்பு அவனுள்.போதாக்குறைக்கு வீட்டில் அவனை கடுமையாக ஏளனம் செய்தனர்.அது அவனுள் வடுவாகவே மாறிவிட்டது.
ஒரு நாள் சாதாரணமாக மெயில் பாக்ஸ்ஸை திறந்து பார்க்கையில் ஒரு சிற்றிதழில் இருந்து மெயில்.அவனது கட்டுரை பிரசுரமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த கணம் அவன் தன்னை ஒரு எழுத்தாளனாக நினைக்க தொடங்கினான்.அந்த முதல் பிரசுரத்தை தன் வீட்டில் தன்னை எள்ளி நகையாடியவர்களிடம் காட்டினான்.அவர்களுக்கு அது சாட்டையடி போல இருந்தது.அவன் கட்டுரை வந்தது சிறிய சிற்றிதழ் என்றாலும் அது அவன் சாதனையாக இருந்தது.மேன்மேலும் எழுத்துவேலைபாட்டை தொடர்ந்தான்.பெரிய பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தான்.
அத்தோடு அவன் வசம் ஒரு 60 சிறுகதைகள் இருந்தது.நாம் ஏன் அவற்றை புத்தகமாக்கி வெளியிட கூடாது என்ற கேள்வி அவனுக்குள் தோன்றியது.என்றாவது தன் படைப்புக்கள் பெரிய பத்திரிகையில் பிரசுரமாகும் என்ற கனவு மறையவில்லை.தானும் ஒரு படைப்பாளியே என்ற போதை புத்தகம் எழுது என அவனை உந்திதள்ளியது ஜெயகாந்தன் எழுத்துக்களை நோக்கி புதிய எழுத்தாளனான அவனை.சென்னை மாநகரில் பதிப்பகத்துக்கா பஞ்சம் என பதிப்பக வாசற்படிகளை ஏறி பயிற்சி எடுக்க ஆரம்பித்துவிட்டான்.

ஒரு பதிப்பகத்தாரை சந்தித்து விட்டு வீட்டிற்கு போகும் வழியில் புத்தக கண்காட்சி என பெரிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.அதை பார்த்த உடன் அவன் மனதில் நினைத்து கொண்டா ன்”அடுத்த வருஷம் புத்தக கண்காட்சியில நம்ம புக் தான் டாப்”.சாலையில் கடும் டிராபிக் ஜாம் அவனுக்கோ “எழுத்தாளர் வரார்.வழி விடுங்கடா” என கத்த தோன்றியது.

ஒரு நாள் அவன் நண்பர்கள் அவனிடம் கேட்டார்கள் “எப்படிடா இப்படி எழுதுற? பத்திரிகைல வரும்னு எப்படிடா இப்படி நம்பிக்கையா இருக்க? அவன் சிரித்து கொண்டே சொன்னான் “நம்பிக்கை அதானே எல்லாம்”.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 8:28 am

பத்திரம்
--------------
சுப்ரபாரதிமணியன்
---------------
செல்லம்மாளுக்கு இரை கிடைத்து விட்ட மாதிரித்தான் தோன்றியது. முகத்தில் ஒரு வார தாடியுடன் தலையைக் குனிந்த படியே அவன் வாசலில் நுழைய முற்பட்டான். கையில் ஒரு பிரபலத் துணிக்டையின் இலவசப் பை இருந்தது. அதில் துருத்திக் கொண்டு சட்டையொன்று தெரிந்தது.
“ என்ன பாசஞ்சரா.. டிக்கெட்டைகாம்பிச்சுட்டு இங்க பதிவு பண்ணிக்குங்க “
அவன் முகத்து தாடியை வறக் வறக்கென்று சொறிந்தபடி செல்லம்மாளைப் பார்த்தான். ஒருவகையில் அவளின் இரண்டாம் மகன் பக்தவச்சலம் சாயல் அவனிடம் இருந்தது. குடிகாரப் பயல். குடித்து விட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்கிறவன். அவன் அப்பாவைப் போல. அவன் அப்பா அற்பாயுளில் போனவர். இவனையும் அப்படித்தான் பறி கொடுக்க வேண்டியிருக்குமோ என்னமோ.

“ என்ன பேச்சைக் காணம். பேசஞ்சர்தானே..” மேசையின் மீது கிடந்த பதிவேட்டைக் காட்டினாள் செல்லம்மாள். பதிவேட்டில் வகை வகையான கிறுக்கல்களில் பெயர்கள் வரிசையாய் பல்லிளித்தன. ஒழுங்கற்று குழந்தையொன்று கிறுக்கி விட்டது போல் பல பெயர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தன. பெயர்கள், நேரம், வந்த தொடர்வண்டி , போகும் தொடர்வண்டி , கையெழுத்து என்று கட்டம் கட்டின அவை.
அவன் மேசையின் அருகில் வந்து பத்து ரூபாய் ஒன்றை பதிவேட்டின் கீழ் வைத்தான். அதை மெல்ல உள்ளே தள்ளினான். “ செரி.. செரி .. நானே பேர், ரயில் நெம்பர்ன்னு ஏதாச்சும் எழுதிக்கறேன். ஆனா ஒரு மணி நேரத்துக்கு மேல இருக்கக் கூடாது.. ஆமா..” அவன் எதுவும் சொல்ல விரும்பாதவன் போல் தலையை நிமிர்த்திக் கொண்டு கதவருகில் சென்றான்.ஒரு கணம் அவன் தலை திரும்பி செல்லம்மாவைப் பார்த்து விட்டு இயல்பாகிக் கொண்டது.
பதிவேட்டைத் திருப்பி தன் மார்புப்பகுதிக்குக் கொண்டு வந்தாள். நூலால் கட்டப்பட்தாய் ஒரு பேனா இருந்த்து. அந்த நூல் அதனது வெள்ளை நிறத்தை இழந்து அழுக்கில் அவலட்சணமாகியிருந்தது. அவள் ஏகதேசம் அவளின் கையெழுத்தைத்தான் சரியாகப் போடுவாள். மற்றபடி எதுவும் எழுதவராது. குமரேசன் அவளது துறையில் எழுத்தராகப் பணிபுரிகிறான். இப்போதெல்லாம் இந்தியில் கையெழுத்துப் போட வேண்டும் என்று கட்டாயம் வந்த பின் எப்படியோ கற்றுக் கொண்டு விட்ட்தாகச் சொன்னான்.

“ இந்தி பரிட்ச்சை ஒண்ணு பாஸ் பண்ணனும் . சம்பளம் எச்சாக்குடுப்பாங்க “ என்று ஒருதரம் காதுகுத்து விசேசமொன்றில் பார்த்தபோது சொல்லியிருந்தான். பதிவேட்டில் பல பெயர்கள்,விலாசங்கள், கையெழுத்தெல்லாம் இந்தியில் தென்பட்டன.

” இதென்ன சாமன்ய ஊரா.. கோடிக்கணக்கிலெ பணம் பொழங்கற எடம். நாலு மனுசங்க வந்துதா போவாங்க “
பெரிதாய் சப்தம் போட்டபடி ஆட்டோ ஒன்று அரசு உயர்நிலைப்பள்ளி சாலையில் சென்றது. அவளின் பார்வைக்கு ஆட்டோவின் பின்புறம் தெரிந்து மறைந்தது. ஏதோ பாட்டுசப்தத்தை அது கிளப்பி மறைந்தது. பாட்டுச்சப்தம் இல்லாவிட்டால் அது விரைந்து போனது தெரியாது.

வடக்குப்புறம் இருக்கும் மசூதியிலிருந்து தொழுகை நேரத்துச் சப்தம் கேட்கும். அப்படி சப்தம் போட்டுத்தான் சிவராமன் தன்னைக் காட்டிக் கொள்வான். சிவராமன் வீட்டில் தான் அவள் தங்கியிருக்கிறாள்.பக்தவச்சலம் வீட்டில் அய்ந்து வருடங்கள் தங்கி விட்டாள். போது வேறு எடம் பார்க்கலாம் என்ற முடிவு வந்தபோது இரண்டாம் மகன் சிவராமனிடம் வந்து ஒட்டிக் கொண்டாள்.
“ அத்தை இன்னிக்கு ஒரு இரநூறு ரூபாயாச்சும் தெரட்டித் தாங்க. கையில் சுத்தமா காசு இல்லே..” வேலைக்குக் கிளம்புகிறபோதே சைலஜா சொல்லியிருந்தாள்.
இப்போதைக்கு எண்பது ரூபாய்தான் தேறியிருக்கிறது. இருநூறு ரூபாய் என்பது சிரமமாகத்தான் தோன்றியது.. பயணிகள் தங்கும் அறையைக் கவனித்துக் கொள்வது அவள் வேலை. இன்றைக்கு காலை சிப்ட். அவள் உதவியாளர்தான். பதிவு செய்வதை கிறிஸ்டோபர் பார்த்துக் கொள்வான். பார்வையற்றவன் என்பதால் ஏதோ கோட்டாவில் அவனுக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது. அவன் நடந்து வருகிறவர்களை அடையாளம் கண்டு கொள்பவன் போல் காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்வான். வாங்க.. டிக்கெட்டை எடுத்துப்பாத்துப் பதிவு பண்ணிக்கோங்க என்பான். பதிலில்லாமல் போகிற போது கையிலிருக்கும் குச்சியால் தட்டுவான். அதட்டி என்ன சொல்றது காதுலெ கேட்குலியா என்பான். அவனின் குரல் உச்சத்திற்குப் போகிற போது யாராக இருந்தாலும் ஏதாவது பதில் சொல்லியாக வேண்டும்.

அவனின் அதட்டலை மீறி யாரும் நகர்ந்து விடமுடியாது.இன்றைக்கு அவன் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்லியிருந்தான்.அதுவரைக்கும் அவளின் ராஜ்ஜியம்தான்..
கிறிஸ்டோபருக்கு அவளின் காசு புடுங்கும் வேலையெல்லாம் பிடிக்காது. அவனுக்குத் தெரியாமல்தான் அவள் செய்வாள். பயணி என்றில்லாமல் யாராவது வந்தால் அதட்டி காசு பிடுங்கிக்கொள்வாள். வடநாட்டுக்காரர்கள் என்றால் சாப்.. சாப் என்று குழைந்தால் காசு கொடுத்து விட்டுப் போவார்கள்.இப்போதெல்லாம் வடநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகும் ஊராகப் போய் விட்டது..எட்டு மணி தொடர்வண்டி வருவதற்கான அறிவிப்புச்சபதம் கேட்டது, கிறிஸ்டோபர் வந்து விடுவான் எனப்தை நினைக்கும் போது சற்றே பரபரப்பு வந்து விட்டமாதிரி இருந்தது.
சூப்பர்வைசர் வைத்தியநாதன் வருகிற போதுதான் திண்டாடிப்போய் விடுவாள் அவள். பதிவேட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உள்ளே எவ்வளவு பேர் தென்படுகிறார்கள் என்று சரிபார்ப்பான். யாராவது அதிகமாகத் தென்பட்டால் “ உங்காளுகளெ வெளியே போகச் சொல்லு .. சொல்றியா. இல்லே .. நான் வெளியேத்தறதா.. “ என்று கடுமையாகச் சொல்வான். சிலசமயங்களில் கோபமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி விடுவான். “ உன்னையெல்லா இங்க வெச்சுருக்க்க் கூடாது ” என்பான். இதை விட்டால் வேறு எங்கு மாற்றி விடப்போகிறான். பயணச்சீட்டு கொடுக்கும் அறையில் உதவியாள் உண்டு அங்கு வேண்டுமானாலும் மாற்றலாம்.

தூரத்து பேருந்துகளின் தொடர்ச்சியான இரைச்சல் ஏகமாய் வியாபித்தது. காலடியில் ஆட்டோ ஒன்று ஓடுவது போல் பெருத்த சப்தம் கேட்டது. உடம்பை நகர்த்திக் கொண்டு போய் அறையைப் பார்த்தாள்.
நின்ற இடத்திலிருந்து உள் அறையின் 16 x 16 விஸ்தாரம் தென்படவில்லை. முன் அறையின் 30 x 20ல் இருபது பேராவது இருப்பர் என்பது தெரிந்தது. மெழுகிப் பேசினது போல் ஒரு மர பெஞ்ச் அகலமாய் விரிந்து கிடந்தது. அதில் படுத்துக் கிடந்த தமயந்தியின் ஆழ்ந்த தூக்கத்திலான முகம் உப்பிக்கிடந்தது. இரண்டு வீதி தள்ளி அவள் இருக்கிறாள். ஏதோ வீட்டில் பிரச்சினை .

கணவன் அடித்து விட்டான். “ கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேனெ..” என்று உள்ளே வந்தவள்.செல்லம்மாள் முறைத்தாள். ‘காசுதானே கொடுக்கறனம்மா.. என்ன முறைப்பு பெரிசா இருக்குது . இந்தா காசு வாங்கிக்க என்று இருபது ரூபாய் நேட்டை அவள் கையில் திணித்து விட்டு உள்ளே வந்தாள். உள் அறை மூலையில் தான் போய் படுத்துக் கிடப்பாள் என்று நினைத்தாள். பெஞ்சு கிடைத்ததென்று முன்னறையில் உடம்பைக்கிடத்திக் கொண்டாள் போலிருக்கிறது. நல்ல தூக்கத்திலிருக்கிறாள். எழுப்பி உள்ளே போகச் சொல்ல முடியாது. உள் அறையில் இப்படி ஆசுவாசமாய் தூங்க பெஞ்சு எதுவும் இல்லை.
நேற்றைக்கு இப்படித்தான் அவள் மதியம் டூட்டியில் சற்றே கண் அயர்ந்து விட்டாள். யாரோ எழுப்பி விட்டமாதிரி இருந்தது . “ இது என்ன வெயிட்டிங் ஹாலா… ஒரு மாதிரிப் பொம்பளைக தங்கற எடமா ‘ என்று சப்தமிட்டபடி அவன் நின்றிருந்தான். ஆஜானுபாகு உடம்பு. குரலில் ஒரு அதட்டல். சற்றே பயந்து போனவள் போல்தான் பார்த்தாள். அவன் விறுவிறுவென்று உள்ளே போனான். அவனுக்குப் பின்னால் போன செல்லம்மாள் வலது பக்க மூலையைப் பார்த்தாள். உடம்பையும்,முகத்தையும் சுவர் ஓரம் திருப்பிக் கொண்டிருந்தவள் உரக்கச் சப்தமிட்டபடி ஏதோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

“ ஏம்மா.. உனக்கு இங்க வேலை. என்ன பண்ணிட்டிருக்கே.. “ அவள் உடம்பை செல்லம்மாள் பக்கம் திருப்பியவள் கை பேசியை அணைத்தாள். கைப்பையில் அதைத் திணித்தாள். “ கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேனே..” “ யாரைக்கேட்டுட்டு உள்ள வந்தே.. “
“ யாரைக் கேட்கணும். சகஜமான எடம் தானே.”
“ இதெல்லா வெச்சுக்காதே. “

‘ போய்யறம்மா..கவனிக்கறன் “ செல்லம்மாள் முன் அறை வாசலுக்கு வந்து விட்டாள். புகார் தந்தவன் மறுபடியும் வந்து தொல்லை தருவானா என்ற பயம் சற்றே இருந்தது செல்லம்மாளுக்கு.
தங்கிப் போகிறவர்களின் நடவடிக்கை விசித்திரமாக இருக்கும். வீட்டில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு உடம்பைப் பரப்பிக் கிடப்பர். குளியல் றையிலிருந்து சளசளவென்று ஓயாது சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்..குளிக்கப் போகிறவர்களில் யார் முன்னே என்பதில் வாக்குவாதங்கள் அவளை எங்கு நின்றிருந்தாலும் ஓடி வரச் செய்யும்.ஆணோ, பெண்ணோ அடிதடியில் இறங்கி விடுகிற வேகம் வந்து விடுகிறது. ” பொறுமையுன்னு ஒண்ணு இல்லாமெப் போச்சு.” என்பதைச் சொல்ல்லிக் கொள்வாள். யூசூப் டுட்டி ஒன்றில் அடிதடி நடந்து இருவர் காயம் பட்டுக் கொண்டார்கள். யூசுப்பிற்கு மெமோ கிடைத்தது.இரநூறு ரூபாய் சிரம்த்திற்கு கொண்டு வந்து விடும் என்பதாய் மனபட்சி சொல்லிக் கொண்டது.

வாசலில் நின்று பார்த்தாள். இரு சக்கர வாகன நிறுத்தத்திற்கு அந்தப்புறம் வந்து கொண்டிருந்த உருவம் கிறிஸ்டோபரா,வைத்தியநாதனா என்பது விளங்கவில்லை. மங்கலாகத் தெரிந்தது. கலங்கலாகவும் இருந்தது. சாளேஸ்வரத்திற்கு கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் ஆறு மாதமாய் மனதில் இருந்தது. அதற்கு பணம் சேர்த்து வைக்க வேண்டும்.அது பெரிய தொகை இல்லைதான். ஆனால் இன்றைக்கு சைலஜா கேட்டப் பணம் பெரிய தொகையாய் அவள் முன் நின்று மிரட்டுவது போலிருந்தது. வருவது கிறிஸ்டோபரா,வைத்தியநாதனா…. யாராக இருந்தாலும் சிரமம்தான்.கைவசம் இருந்த எண்பது ரூபாயை பத்திரமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பு வந்தது.
கலங்கலாக உருவம் நெருங்கிக் கொண்டிருந்தது.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 8:35 am

தண்ணீரிலே தாமரைப்பூ
---------------
வே.ம.அருச்சுணன்
--------------
வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான்
திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு
தண்ணீரில்  இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி
கமலமும் வருகிறாள். வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் பார்வையைச்
செலுத்துகிறேன்.தோட்டத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால்
சூழப்பட்டிருந்தன.

நேற்றிரவு பெய்த கடும் மழையினால் சுமார் இரண்டு மீட்டர் அளவிற்குத்
தோட்டமெங்கும் வெள்ளக் காடு. கடந்த ஆண்டைக் காட்டிலும்  இந்த ஆண்டு சற்று
அதிகமாகவே வெள்ளம் ஏறியிருந்தது. தோட்டத்தின் நடுவே ஓடும்  பெரிய ஆற்றின்
அருகிலேயே என் வீடு அமைந்திருந்ததால்,தோட்டத்தில் வெள்ளம் ஏற்படும்
போதெல்லாம் என் வீடுதான் வெள்ளத்திற்குப் பலியாகும் முதல் வீடாகவும்
அமைந்திருந்தது.
யாருடனோ போட்டிப்போட்டுக் கொண்டு, முப்பது கிலோ மீட்டரில்
அமைந்திருக்கும் கடலை நோக்கி வீட்டைச் சூழ்ந்திருந்த வெள்ளம் விரைந்து
செல்கிறது. காலை இளம் சூரியன் ஒளி பட்டு தண்ணீர்  வெள்ளியைப் போல் தகதக
வென்று மின்னிக் கொண்டிருக்கிறது.

“அடக் கடவுளே…இந்த ஆண்டும் நமக்குத் தீபாவளி தண்ணீரில்தானா….?”
மனைவி கமலம் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அங்கலாய்த்துப்
போகிறாள்.தீபத்திருநாளைக் கொண்டாட இன்னும் ஒரு வாரம் மட்டுமே
எஞ்சியிருந்த வேளையது.

“கமலம்….வெள்ளம் ஏறுவதெல்லாம் நமக்கென்ன புதுசா….? இந்தத் தோட்டத்துல
நாற்பது வருசமா வாழ்றோம்.பெரும்பாலும் நாம தீபாவளிய வெள்ளத்துலதானே
கொண்டாடியிருக்கோம்.மேக்கடை வீடு என்பதால் தண்ணீரில் கால்படத்
தேவையில்லை.வழக்கம் போல மேக்கடையிலேயே தீபாவளியைக் கொண்டாடுவோம்” என்று
சிரித்தவாறு கூறிய போது மனைவிக்குக் கோபம் வந்துவிடுகிறது.நான் எரியும்
நெருப்பில் எண்ணையை ஊற்றி விட்டது போல் எண்ணிக்கொண்டாளோ? அவள் முகம்
வாட்டத்துடன் காணப்படுகிறது.அவள் முகத்தை காண எனக்கும் வருத்தமாகவே
இருந்தது.

வழக்கம் போல் கிழக்கில் சூரியன் தோன்றி  அது தன் பணிகளைச்
சுறுசுறுப்புடன் செய்து கொண்டிருந்தன.வழக்கமானப் பணிகளைச்
செய்யவிடாமல்,வெள்ளம் என்னை முடக்கிப் போட்டதுதான் வருத்தமாக இருந்தது.
ஆனால், உலகை வலம் வரும் சுரியனுக்கு எந்த தடங்களும் இல்லையே?
வீட்டின் முன்னே நிலை கொண்டிருக்கும் வெள்ளத்தை வெறித்துப் பார்க்கிறேன்.
இன்னும் சில நாட்களுக்கு பூமியில் கால் வைக்க இயலாது என்ற உண்மையை
மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்கிறேன்.
குப்பைகளும்,கட்டைகளும்,பிளாஸ்டிக் பாத்திரங்களும்,   இறந்து
உப்பிப்போயிருந்த நாய் ஒன்றும்  வெள்ளத்தில் அடித்துச்
செல்லப்படுக்கின்றன.முகம் சுழித்தவாறு விரைந்துசெல்லும் வெள்ளத்தைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அண்டை வீட்டுக்காரர் முற்றத்திற்கு வருகிறார்.அவர் என்னைக் கண்டதும் ஏதோ
பேச எத்தனிக்கிறார்.நான் முந்திக்கொள்கிறேன்.
“வெள்ளச்சாமி அண்ணே….உங்க காரு எங்கே….?”அவரை நோக்கிக் வேகமாகக்
குரல் கொடுக்கிறேன்.

“பொன்னம்பலம்…..நேற்று இரவு வெள்ளம் ஏறதுக்கு முன்னாடியே மேட்டு
லயத்துல இருக்கிற என் மாமா இருசன் வீட்டுலக் காரைக் கொண்டு போயி
பத்திரமாக வெச்சிட்டேன்….” ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனைப்
புரிந்தவர் போன்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
“நல்ல காரியம் பண்ணிட்டிங்கண்ணே.உங்க தொலை நோக்குப் போல வேறு யாருக்கு
வரும்?” அவரைப் பாராட்டும் போது அவர் மிகவும் மகிழ்ந்து போகிறார்.ஆபத்து
அவசர வேளைகளில்,தோட்ட மக்களுக்குச் சேவை செய்யும் ஆம்புலன்ஸ் என்று அவரது
கறுப்பு நிறக் காரைத் தாராளமாகக் குறிப்பிடலாம். பட்டணத்திலுள்ள அரசாங்க
மருத்துமனையில் சிகிட்சைப் பெற தோட்டத்திலிருந்துப் பத்து கிலோ மீட்டர்
தூரம் பயணிக்க வேண்டும்.

என் வீட்டிற்குச் சற்று தள்ளி வேகமுடன் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தில்
பல சிறுவர்கள் பயமின்றி நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.நீச்சல்
இன்னும் கற்றுக் கொள்ளாத சிறுவர்கள் வீட்டின் படிக்கட்டுகளில்
அமர்ந்தவாறு  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருதனர்.
“நம்ம பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைங்களோடும் சந்தோசமா இந்த ஆண்டு
தீபாவளியைக் கொண்டாடலாம்னா நினைச்சேன்,ஆனா….கடவுள் கருணைக் காட்டாம
நமக்கு எதிராக இருக்கிறாரே!” கவலையோடு பேசும் வேளை அவளது கண்களில் நீர்
தொக்கி நிற்கிறது.

“கமலம்…..நமக்கு மட்டுமா தண்ணீரிலத் தீபாவளி? இந்தத் தோட்டத்துல வாழ்ற
ஐநூற்றுக்கும் மேற்பட மக்களுக்கும் தான்…..! ம்…..சரி கமலம்
தீபாவளிப் பலகாரமெல்லாம் செய்து முடிச்சிட்டியா?”
“நேற்றே எல்லா பலகாரங்களை எல்லாம் செய்து முடிச்சிட்டேன்”மகிழ்ச்சியுடன்
கூறியவள் சிறு குழந்தை போல துள்ளல் நடையுடன் அறைக்குச் செல்கிறாள்.அவள்
முகத்தில் இழையோடிய அளவற்ற மகிழ்ச்சிதைக் கண்டு இரசிக்கிறேன்.
“கடந்த இரண்டு வாரமா வீடே பலகார வாசனையிலத்தானே மூழ்கி இருந்துச்சு”
என்று சொல்லிச் சிரிக்கிறேன்.

அறையில் அடுக்கி வைத்திருக்கும் டின்களில் ஒன்றை எடுத்து வந்து, “இதோ
பாருங்க……உங்களுக்குப் பிடிச்ச முறுக்கு…..” என்று ஆவலுடன்
டின்னைத் திறந்து முறுக்கொன்றை எடுத்து என்னிடம் நீட்டுகிறாள்.அதனை
வாங்கிக் கொண்டு கலையம்சத்தோடு   மனைவி செய்திருந்த முறுக்கை வியந்து
போகிறேன்.

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சும்மாவா சொன்னாங்க…..!
வரைந்த வட்டம் மாதிரி எந்தப் பிசிரும் இல்லாம, நீ சுட்ட முறுக்கோட
அழகைப்பார்க்கும் போது….சும்மா சொல்லக்கூடாது.எது எதுக்கோ டாக்டர்
பட்டம் கொடுக்கிறப் பல்கலைக் கழகங்கள் உன்னோட முறுக்குக்குத் தாராளமா
டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” என்று வாய் விட்டு சிரிக்கிறேன்.
நல்லவற்றைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் கடுகளவும் என்னிடம் இல்லை என்பதை
என் நெருங்கிய நண்பர் டாக்டர் மலையப்பன் இராமசாமி அடிக்கடிக் கூறுவது
மனைவிக்கும் தெரிந்த விசியம்தான்.

“மண்ணாங்கட்டி மகன் தண்ணீர்ல விழுந்துட்டான்……! மண்ணாங்கட்டி மகன்
தண்ணீர்ல விழுந்திட்டான்…..! ஓடிவாங்க….ஓடிவாங்…..!
காப்பாத்துங்க…..! காப்பாத்துங்க…..!” குரல் கேட்டு அறையை விட்டு
வெளியே ஓடி வருகிறேன்.வீட்டின் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்த பையன் தவறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிடுகிறான்.
அவனைக் காப்பாற்றுவதற்காகப் பையன் விழுந்த இடத்தை நோக்கிப் பலர் வேகமாக
நீந்திச் செல்கின்றனர்.
“கமலம்…..நீ பத்திரமா இரு…. தண்ணீரில விழுந்த பையனைப் போய்ப்
பார்த்திட்டு வர்றேன்.”  அவசரமாகப் புறப்படுகிறேன்.
“பார்த்துப் போங்க….! பார்த்துப் போங்க…..! பத்திரம்…..பத்திரம்”
மனைவி பதற்றமுடன் கூறுகிறாள்.

“பொன்னம்பலம்…..இப்படி நீந்தி வாப்பா….” வெள்ளைச்சாமி குரல் கொடுக்கிறார்.
“இதோ….வந்துட்டேண்ணே நீங்க அங்கேயே இருங்க….” பையன் விழுந்த இடத்தை
நோக்கி வேகமாக நீந்துகிறேன்.என்னைப் பின் தொடர்ந்து பலரும் நீந்தி
வருகின்றனர்.பையனின் உயிரைக் காப்பாற்ற நொடிப்பொழுதில் அங்கு தோட்டமே
திரண்டுவிட்டது.
“இதோ…..நான் பையனைக்  காப்பாற்றிட்டேன்….! இதோ….பையனைக்
காப்பாற்றிட்டேன்….!” என்று உரத்தக் குரலில் கூறியபடி துடிப்பு மிக்க
இளைஞர் எட்டி தண்ணீரில் மூழ்கிய ஆறு வயதே நிரம்பிய பையனை தனது வலது
கரத்தில் உயர்த்திப் பிடித்தவாறு  நீந்தி பையனின் வீட்டுப்படிக்கட்டை
அடைகிறார்.நல்ல வேளை வெள்ளம் பையனை நீண்ட தூரத்திற்கு அடித்துச்
செல்லவில்லை. அப்போது எட்டியும் பையனின் வீட்டுக்கருகில்தான்  தண்ணீரில்
நீந்திக் கொண்டிருந்தார்.

“எட்டி…நீ தெய்வமா தக்க சமயத்தில் வந்து என் ஒரே பிள்ளையக்
காப்பாத்திடியேப்பா…! என் உயிர் உள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்பா”
கண்ணீருடன் கைகூப்பி வணங்குகிறார் அக்குழந்தையின் தாய். தன் அன்புக்
குழந்தையை மார்போடு அணைத்துக்கொள்கிறார்.
இருபத்து மூன்று வயதே நிரம்பிய கட்டிளங்காளை எட்டி அழுந்து புலம்பும்
குழந்தையின் தாயை வியப்போடு பார்க்கிறார்.தன்னாலும் ஒரு உயிரைக்
காப்பாற்ற முடிந்ததே என்று நினைக்கும் போது எட்டியின் கண்களில் ஆனந்தக்
கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

மூன்று நாட்களாக வெளியில் எங்கும் போக முடியவில்லை.வெள்ளம் முற்றாக என்னை
முடக்கி  விடுகிறது.மூன்று நாட்களுக்குப் பின் வெயில் நன்றாக
அடிக்கத்தொடங்குகிறது; வெள்ளமும் வடிந்துவிட்டது.தோட்டம் முழுவதும்
சேரும் சகதியுமாய்க் காணப்படுகிறது.செத்து கிடக்கும் பெரிய பெரிய மண்
புழுக்கள், பெருமளவில் மாண்டு கிடக்கும்
கோழிகள்,பூனைகள்,எலிகள்,ஆங்காங்கே அகோரமாய்ச் சிதறுண்டு கிடக்கும்
பலகைகள்,கட்டைகள் அவற்றுக்கிடையில் எழும் துர்நாற்றம் வயிற்றைக்
குமுட்டிக் கொண்டு வந்தது.

“கமலம்….கடவுள் நமக்குக் கண் திறந்துட்டாரு.அடுத்த சில நாட்களுக்கு மழை
பெய்யாதுன்னு இப்பதான் வானிலைப்பற்றி  தொலைக்காட்சியில்  அறிவிப்புச்
செய்தாங்க….” மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

“இத கேட்க ரொம்ப சந்தோசமா இருக்குங்க. வெள்ளம் வந்ததும் வேதனையா போச்சு.
இன்னும் மூன்று நாள்ள வரப்போகும்  தீபாவளியை விமரிசையாக் கொண்டாடிவோம்.
டவுன்ல இருக்கிற நம்ம பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் தீபாவளிக்கு
வரச்சொல்லிடுங்க. இயற்கையானச் சூழல்ல நம்மோடு தீபாவளிய தோட்டத்துலக்
கொண்டாடினாத்தான் பிள்ளைகளுக்குப் பிடிக்கும்”

“நம்ம நாளு பிள்ளங்களும் இந்தத் தோட்டத்திலதானே பிறந்தாங்க.இங்க
இருக்கிறத் தமிழ்ப்பள்ளியிலத்தான் படிச்சி, நம்ம இரண்டு பிள்ளைங்க
முனியம்மாவும்,இருசம்மாவும் டாக்டரானாங்க” மனைவி பெருமையுடன் கூறுகிறாள்.
“பெரியவன் சாமிக்கண்ணும்,கடைக்குட்டி சங்கரனும் இப்ப வழக்கறிஞர்களா
கோலாலம்பூரில தொழில் நடத்தி வராங்கனு நினைக்கும் போது பெருமைப் படாம
இருக்க முடியல கமலம்”  பெற்ற வெற்றியை நினைத்து உணர்ச்சியடைகிறேன்.

“அதுக்கெல்லாம் நீங்க பட்டப்பாடு இருக்கே சும்மா சொல்லக்கூடாது.தோடத்துல
காலையில் வேலை செஞ்சிட்டு,மாலையில வளர்த்த முப்பது பசு மாடுகள, பால்
கறந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில இருக்கிற பட்டணத்துக்கு சைக்கிளை
மிதித்துக் கொண்டு போய் பாலை விற்ற பணத்துலதானே நான்கு பிள்ளைகளையும்
நல்லா படிக்க வைச்சிங்க….”
“கமலம்….முயற்சி என்னுடையதா இருந்தாலும்,உன்னோட ஒத்துழைப்பும் கடவுள்
உதவியும் இல்லாம நான் எதையும் சாதிச்சிருக்க  முடியாது…”

“மறந்திடாம….இப்பவே போன் பண்ணி பிள்ளைங்களத் தீபாவளி முதல் நாளே
வீட்டுக்கு வந்திடச் சொல்லுங்க…..” கமலம் எனக்குக் கட்டளை விட்ட கையோடு
தீபாவளிக் கொண்டாடத்திற்கான வேலைகளிலும் இறங்கிவிடுகிறாள்.
தீபாவளிக்கு முதல் நாளே,கமலம் நினைத்த மாதிரியே பிள்ளைகளும்,பத்து
பேரப்பிள்ளைகளும் வீட்டிற்கு வந்துவிடுகின்றனர்.இரவு படையலுக்குப்
பின்,குடும்பமே குதுகலத்துடன் மத்தாப்பு கொளுத்தியும்,பட்டாசு வெடித்தும்
நல்லிரவு வரை வீடே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போகிறது!மறுநாள் தீபாவளி
அல்லவா?

விடியற்காலை நான்கு மணி இருக்கும்.வீட்டிலுள்ள அனைவரும் அயர்ந்து
உறங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது, திடீரென வானத்தில் பலமாக இடி
இடிக்கிறது. திடுக்கிட்டு அனைவரும் படுக்கையிலிருந்து எழுகின்றனர்!

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 8:43 am

எல்லையைத் தொட்டபின்பும் ஓடு!
------------------
நிலாவண்ணன்
----------------------
அந்த வலி நிரம்பிய செய்தியைக் கேட்டவுடன் செண்பகம் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாள்.
அந்தத் தடுமாற்றம் மருத்துவர் கூறிய செய்தியிலிருந்தும் அவர் காட்டிய அறிக்கையிலிருந்தும் ஏற்பட்டிருந்தது.
“டாக்டர் உங்களுடைய அறிக்கை மிகச் சரியானதுதானா… ஒரு தாய் என்னும் முறையில் என்னால நம்பவே முடியலையே… இது ஏன் பொய்த்துப் போகக் கூடாது…?”

செண்பகம் அந்தக் கை தேர்ந்த மருத்துவரைப் பார்த்துத் தன் மன ஆதங்கத்தை வெளியிட்டாள்.
அவளைக் கூர்ந்து நோக்கிய டாக்டர், “இல்லம்மா, உங்க மகளோட ரிபோர்ட்ல எந்தத் தவறோ குழப்பமோ கிடையாது. உங்க மகளுக்கு போலியோ நோய்தான் கண்டிருக்கு. இது ஒரு குணப்படுத்த முடியுன்ற வியாதின்னு சொன்னாலும் உங்க மகளுக்கு பாதிச்சிருக்கிறது முடக்குவாத போலியோ. உயிருக்கு ஆபத்து இல்லைன்னாலும் கால்களிலோ கைகளிலோ பாதிப்பு ஏற்படுத்தி அந்தப் பகுதிய முடங்கச் செய்துடும். அப்படித்தான் உங்க மகளோட வலது கால் வலுவிழந்து சூம்பிப் போயிடுச்சி. உங்களுக்காகவும் உங்க குழந்தைக்காகவும் நான் அனுதாபப் படுவதைத் தவிர நான் வேற ஒன்றும் செய்ய முடியாது.

“நீங்கள் அப்படியெல்லாம் சொல்லாதீங்க… எல்லா வியாதிக்கும் மருந்தும் தீர்வும் இருக்கும்போது என் மகளுக்கு அப்படி ஏதாவது ஒன்று மருத்துவ உலகத்தில் இல்லையா..? எது எப்படி முடியாத ஒன்றாக இருக்க முடியும்…!”
பாசமுள்ள அந்தத் தாயின் பரிவு மிக்க வினாவுக்கு விடை சொன்னால் அது அவளுக்கு நிவாரணமாக இருக்க முடியாது என்ற நிலையில், “என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால்… தாராளமாக வேறு எந்த மருத்துவரையும் பார்க்கலாம்… நான் அதற்கு எந்த ஆட்சேபணையோ வருத்தமோ கொள்ள மாட்டேன்..!”
அந்தக் கைதேர்ந்த மருத்துவர் இறுதியாகவும் உறுதியாகவும் கூறிவிட்டார். அதன் பின்பு அந்தத் தாய் போலியோவால் பாதிக்கப்பட்ட தன் மகள் எல்லாக் குழந்தைகளையும் போல் தத்தி நடக்க ஓடி விளையாட பல மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கினாள். சொல்லி வைத்தாற்போல் பதில் ஒன்றாகவே இருந்தது.

ஒரு கட்டத்தில் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் ஆகிவிட்டது. இருந்தாலும்… இந்த மருத்துவ உலகத்திற்குச் சவால் விடவேண்டும் எனும் வெறி அவள் மனத்தில் ஆழமாகப் படிந்தது. மருத்துவர்கள் சொன்னது வேத வாக்கா என்ன..? எதற்கும் ஒரு தீர்வு இருக்கத்தானே செய்கிறது… உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் நடக்கின்றனவே… சித்தர்களும் ஞானிகளும் செய்யாத அதிசயங்களா… அவளுக்குத் தெரியும் அவள் ஒரு சித்தரோ ஞானியோ இல்லையென்பது… ஆயினும் அவள் மனத்தில் தன் மகளை நடக்கச் செய்ய இயலும் என்பதில் ஒரு நம்பிக்கையை ஆழ் மனத்தில் விதைத்துத் துளிர்க்கச்செய்து கொண்டாள். இருப்பினும், தன் மகளின் சூம்பிப்போன வலது காலைக் காணும்போது அவளது உள்ளமும் வாடிப் போகும். மனத்தில் ஒரு வெறுமை அவளிடம் அனுமதி கேட்காமலேயே ஆட்சி செய்யும்.
‘செண்பா, நமக்குப் பிறக்கப் போவது பொம்பளப் புள்ளதாங்கிறது உறுதியாயிடிச்சி… ஆம்பளப் புள்ளங்களுக்கு சமமா வளத்துக் காண்பிக்கணும் தெரியுமா…’ என்னோட சின்ன வயசில பந்தயங்கள்ல ஓடி ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். என்னோட அப்பாவோ அம்மாவோ விளையாட்டுத் துறைக்கு ஆதரவா இல்லாம எந்த நேரமும் படி படின்னு வெரட்டிக்கிட்டே இருப்பாங்க… நம்ம புள்ள போட்டி விளையாட்ல வெற்றிய குவிக்கணும்… நம்ம இனத்துப் புள்ளங்க இப்ப எதுக்குமே உதவாதவங்கண்னு எனக்கு முன்னாலயே பலர் பேசிக்கிறாங்க… எவ்வளவு மன வருத்தமா இருக்கு. ஒரு நேரத்தில இந்த நாட்டுக் கொடிய நம்ம புள்ளங்க உயரமா பறக்க விட்டாங்களே… அதயெல்லாம் எவ்வளவு சீக்கிரமா மறந்துட்டாங்க பாத்தியா…’
ஒரு நேரத்தில் அவள் கணவன் ஆதங்கப்பட்டதை இப்போது நினைத்துக் கொண்டாள். கண்களில் நீர் கசிந்தது. மனம் அதிர்ந்தது. அப்படிப்பட்டவரா இப்படிச் செய்து விட்டார்..?

கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பி நோக்கினாள். மனக் கீறல்கள். அதில் ஏற்பட்ட ஆறாத ரணங்கள்.
இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூசிக்கப்பட்ட மருத்துவர்கள் மகளைக் கைவிட்ட பின்பு செண்பகத்திற்கு உலகமே இருண்டது போலாகிவிட்டது. ஒரு கால் பலமற்றுப்போய் நொண்டி-நொண்டி நடக்கப் போகும் தன் மகளின் நிலையை மனக் கண் முன் கொண்டு வந்தாள். அவள் தன் மகளுக்காகக் கண்ணீர் விட்டுக் கசிந்தாள்.

அதேநேரத்தில், அவள் கணவனின் எடுத்தெறிந்த நோக்கும், மகள் மலரைக் கண்டு வெறுப்பை உமிழ்வதும் அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தன் மகள் போட்டி விளையாட்டு மைதானத்தில் வெற்றிகளைக் குவிக்க வேண்டுமென்று கற்பனை செய்தவரா… இப்படி…!
இந்தச் சின்னஞ்சிறு பெண் குழந்தை இந்த நோய்தான் எனக்கு வேண்டுமென்று யாசகம் கேட்டா வாங்கி வந்தது?
2
ஒரு வயதில் தத்தித் தத்தித் தளர்நடை போட வேண்டிய குழந்தை எழுந்து நிற்கவே முடியாமலிருப்பதைக் கண்டு அவள் தாயுள்ளம் கசிந்தது.
அதன்பின்பு… இரண்டாவது வயதில் நிற்க முயன்ற போது ஒரு கால் வலுவிழந்து கிடப்பதால் அடுத்த அடியில் விழுந்து புரண்டது. அந்த நேரத்தில் செண்பகத்தின் தாய் மனமும் சேர்ந்து அழுதது.
‘இப்பதான் இப்படின்னா இது பெரிசானா நமக்கு என்ன என்ன கஸ்டமெல்லாம் கொடுக்கப் போவுதோ..? இத நெனச்சா இப்பவே எனக்கு…!’ வார்த்தைகளை முடிக்காத அவள் கணவன் அந்தக் குழந்தையை வெறுப்புடன் பார்த்தான்.

‘இத எங்கயாவது ஊனமுற்றோர் பள்ளியில சேர்த்துடலாம்… நமக்கு இனிமேல் பொறக்குற பிள்ளங்கள நல்லபடியா வளர்க்கலாம்… அவங்கள..!’ அவன் பேசி முடிக்கு முன்பே செண்பகம் வீசிய நெருப்புப் பார்வையை நேர் கொள்ள முடியாமல் நிறுத்திக் கொண்டான்.

அங்கங்களில் குறை இருந்தாலும் அவயவங்களே இல்லாமல் பழுது பட்டிருந்தாலும் அவள் நான் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை. அவளை நான் எங்கேயும் கொண்டு விடமாட்டேன். அவள் வைர மரமாக நின்றாள்.
அதுமுதல் அவளுக்கு மனத்திலே ஒரு வைராக்கியம் முளை விட்டு வேர் படர ஆரம்பித்தது. அவளது அந்த வைராக்கியத்திற்கு இணையத்தில் காணப்பட்ட ஒரு செய்தியும் வலுவூட்டுவதாக அமைந்திருந்தது. போலியோவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் திடல்தடப் போட்டியில் உலக சாதனையே படைத்தாள் என்பதுதான் அது.

மலரின் கால்களைத் திடப்படுத்த யார் யாரிடம் சென்று மருத்துவமும் ஆலோசனையும் கேட்க முடியுமோ அவ்வளவையும் கேட்டுத் திரட்டினாள். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவளது சிகிச்சை முறை ஆரம்பிக்கப்பட்டது. சில நாட்களில் மலர் தாங்க முடியாத வேதனையை அனுபவிப்பாள். அந்தச் சமயங்களிலே செண்பகத்தாலும் தாங்க முடியாதுதான். இருந்தாலும் முன் வைத்த கால்களுக்கு அவளால் விலங்கு போட முடியாமல் அவளது உறுதி முன்னோக்கி இழுத்துச் சென்றது.

அந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது..!
இப்போது… அந்தக் குழந்தையின் ஊனக்கால் ஓரளவு திடம் பெற்று நடப்பதற்கும் திராணி பெற்றிருந்தது. குழந்தைக்கு நடை பழக்கிக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்த கணவன் மதிய தேநீரை எதிர் பார்த்துக் காத்திருந்தான்.

‘செண்பா சூடா ஒரு கப் தேத்தண்ணி போட்டுக் கொண்டாயேன்..!’ என அவன் கேட்க, செண்பகத்திற்கு அப்போதிருந்த மன நிலையில், ‘நாந்தான் நம்ம மகள நடக்க வைக்க எப்படியெல்லாம் பாடுபட்டுக் கொண்டிருக்கேன்… ஏன் நீங்க தேத் தண்ணி கலக்கிக் குடிக்க முடியாதா…?’ என மிகச் சாதாரணமாகவே கேட்டு வைத்தாள்.
அந்தக் கேள்வியானது அவனது தன்மானத்தையும் ஆண்மையையும் தூண்டி எழுப்புதாக அமைந்து விட்டது. அது மட்டுமல்ல, மலருக்காக அவள் முழு நேரத்தையும் அர்ப்பணித்து தன்னைப் புறக்கணிப்பதாக அவனுள் சின்னதாக ஒரு கருமை படர்ந்து நாளடைவில் பொறாமையாகவும் மாறி விட்டது. அது இருவர்க்கிடையே விரிசலையும் உண்டாக்கியது. அந்த இடைவெளியானது அவர்களது படுக்கையறை வரையிலும் சென்று முகாமிட்டது. அவன் அவளுக்காகக் காத்திருக்கும்போது செண்பகம் மகளின் கால்களுக்கு தைலம் பூசி சுடு நீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருப்பாள். குழந்தையின் கால்கள் திடம் பெற்றுக் கொண்டிருக்கும்போது அர்களது இல்லற வாழ்க்கை கருத்து வேறுபாட்டால் வலுவிழந்து கொண்டு வந்தது.

‘செண்பா, நடக்க முடியாத ஒன்ன விடாப்பிடியா பிடிச்சு தொங்கி உன்னோட நேரத்தையும் காலத்தையும் நம்ம குடும்ப வாழ்க்கையையும் வீணடிச்சிக்கிட்டிருக்கே… மலர் இப்படித்தான் இருக்கணும்னு விதிக்கப்பட்ட ஒன்னாயிடுச்சி… டாக்டர்ங்களே மலரால நடக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க… நீ என்னவோ மருத்துவச்சியா மாறி ஊனப்பட்டு சூம்பிக் கிடக்குற காலுக்கு ராவு பகலா மருந்து போடுறியே… அதனால நடக்க முடியும்னு கனவுகாண்றியா..?’

ஒருநாள் அவள் கணவன் வெறுப்பின் உச்சத்தில் நின்று வார்த்தைகளை நெருப்புத் துண்டங்களாக்கிக் கொட்டினான் அவள் முன்.

தன் கணவன் இப்படிப் பேசுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் கருத்து வேறாக இருந்தது. ஊனப்பட்டவர்களுக்கும் வாழ்க்கை உண்டு என அவள் நம்பினாள். ஊனப்பட்டவர்கள் கவனிக்கப்படாததனால்தான் அவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். தன் மகளும் அப்படி ஆக வேண்டுமா என அவள் தனக்குள் கேட்டுக் கொண்டதானது கணவனுடன் முறன்பட்டு பிணக்கை ஏற்படுத்தியது.

இறுதியில் கருத்து வேறுபாடு முற்றி அவள் கணவன் அவளையும் ஊனப்பட்ட குழந்தையையும் கைவிட்டு விவாகரத்து பெற்று ஒதுங்கிக் கொண்டான்.

அதன்பின்… அவள் ஊனப் பட்ட பெண் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படிக் கரை காண்பது என திக்கு முக்காடிப் போனாள். வாழ்க்கையில் ஏற்பட்ட கடமைகளையும் சவால்களையும் எப்படி எதிர்கொள்வது..? திணறினாள். புயலில் சிக்கிக் கரையை அடயமுடியாத கப்பலாகச் சோர்ந்து விட்டது அவளது மனம்.
மலரை பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்ததும் அவளுக்கு அங்கே ஒரு சோதனை விழித்துக் காத்திருந்தது. மலரின் கால் ஊனப்பட்டிருந்ததே தவிர மன வளர்ச்சியில் அவள் மற்ற குழந்தைகளுக்கு ஈடாகவாகவோ அதற்கும் மேலாகவோ இருந்தாள்.

இருந்தாலும், சிலநேரங்களில் மாணவர்களின் ஏளனத்தால் மனம் ரணப்பட்டு வரும் மகளுக்குத் தந்நம்பிக்கை தரும் தாயாகவும் செயல் பட வேண்டியிருந்தது. அதன்பின், வந்த காலங்கள் அவளுக்கு வேதனைகளையும் சோதனைகளையும் மேலும் மேலும் சுமந்து கொண்டு வந்தன ஈரமில்லாத அனல் காற்றாக.
கால மாற்றத்தில் மலரின் கால்கள் ஒரளவு திடமும் உறுதியும் பெற்று கொண்டு வந்தன. அதற்குப் பத்து மாதம் சுமந்து பெற்றவள் அனுதினமும் உழைத்தாள். மகள் துவண்டு போய் வலியில் துடித்தபோது தாயும் பெற்ற மகளுடன் சேர்ந்து கலங்கினாள். இருந்தாலும், ஊனப்பட்டவர்களையும் ஜெயிக்க வைக்க முடியும் என்னும் வெறி ஒவ்வொரு நாளும் அவள் முன்னே அவள் இதயத்திற்குத் தெம்பை அளித்துக் கை பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட ஒரு நாளில்…!
அந்த வட்டாரத்தில் போட்டிப் பந்தயங்களில் குறிப்பாக ஓட்டப் பந்தயங்களில் மாணவர்களுக்கு நுணுக்கமாகப் பயிற்சியளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதில் வல்லுனர் என அறியப் பட்ட ஒரு பயிற்சியாளரிடம் மலரை அழைத்துச் சென்றாள்.

‘நீ என்னம்மா… நான் என்ன கால் கை முடமானங்களுக்கா பயிற்சி கொடுக்கிறேன்..? கால் கை நல்லா உள்ள பிள்ளைங்களே என்னோட பயிற்சியை தாங்கம ஓடிப் போயிடுறாங்க… விலுக்கு விலுக்குன நடக்குற புள்ளய வெவஸ்தயில்லாம ஏங்கிட்ட கூட்டியாறீங்க…!’

இப்படி அந்தப் பயிற்சியாளர் அவளை அவமானப் படுத்தி அனுப்பினார். இதே சோதனைதான் மலருக்குப் பள்ளியிலும் ஏற்பட்டது. மற்ற மாணவர்களுடன் அவளால் போட்டியிட முடியாது எனும் மனப்பான்மை அவளுடைய வகுப்பாசிரியரிடம் உருவாகியிருந்தது.

இதை முறியடித்துக் காட்டவேண்டுமெனும் மன உறுதியை மலரின் ஆழ் மனத்திலே ஒவ்வொரு நாளும் செண்பகம் உருவாக்க வேண்டியிருந்தது. அதில், அவள் ஓரளவு வெற்றியும் கண்டாள்.
இதற்கிடையே, அவள் முன்னாள் கணவன் இன்னொரு திருமணம் செய்து கொண்டான். அவள் இவர்களுக்குக் கொடுத்து வந்த உதவித் தொகையை சொல்லாமல் கொள்ளாமல் நிறுத்திக் கொண்டான். செண்பகம் தடுமாறிப் போனாள். தொழிற்சாலை வேலைக்குப் போகவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டாள். இருந்தாலும் இந்தத் துன்பங்கள் அவளை அசைத்துப் பார்ப்பதாக இல்லை.

அப்போது மலர் படித்துக் கொண்டிருந்த பள்ளியின் வருடாந்திரப் போட்டி விளையாட்டு துவங்கியது. அதன் பின்பு மாவட்ட போட்டிகளும் மாநிலப் போட்டிகளும் நடை பெற்ற பின்பு தேசிய நிலை போட்டி நடை பெறும்.
இந்தப் போட்டிப் பந்தயங்களில் தன் மகள் கட்டாயம் கலந்து கொண்டு ஓட வெண்டுமென்று திடமாக நம்பினாள்.
மலரின் கால்கள் தாயின் மனத்திட்பத்துக்கு ஏற்ப மாற்றம் கண்டிருந்தது. ‘பிசியோதெரபி’ யை ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்கிச் செய்து ஓட்டப் பயிற்சி அளித்ததின் பயனாக அவளால் நேராக நடக்கவும் மற்றவர் போல் வேகமாக ஓடவும் முடிந்தது.

தாயின் வைராக்கியமும் மகளின் திடமனமும் இன்று மலரை பள்ளி ஓட்டப் போட்டிக்குத் தயார்ப்படுத்தியிருந்தது. இருந்தாலும் அவளுடைய பள்ளி ஆசிரியர்கள் அவள் மேல் முழுமையான நம்பிக்கை கொள்ளவில்லை. அதற்காக அவர்களிடம் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. ஓரளவு வெற்றியும் பெற்றாள்.
இறுதியாக… பல கோரிக்கைகளுக்குப் பின் அவள் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டாள். பள்ளி நிலையில் ஓடி வெற்றி பெற்றால் மாநிலத்துக்குத் தேர்வு செய்யப்படுவாள். அதன் பின் ஒருநாள் தேசிய நிலைக்கும் செல்லலாம்.

அன்று..!
போட்டிப் பந்தயத் திடலில் 100 மீட்டர் ஒட்டப் போட்டியின் தொடக்க துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டது. போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பாகப் பாய்ந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக மலரும் ஓடினாள்.

‘அதோ ஓடுதே அந்த புள்ளய ரொம்பவும் பாரட்டணும்பா… அதுக்கு சின்ன புள்ளயில போலியோவுல பாதிச்ச காலாம்… இன்னக்கு மத்தவங்களோட சரி சமமா ஒடுது பாத்தியா..!’
போட்டியைக் காண வந்த பெறோர்களில் ஒருவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவர்கள் பேசிக் கொண்டது செண்பகத்தின் காதுகளிலும் விழுந்தது.

நன்றி திண்னை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 29, 2015 2:53 pm

பூச்சிகள்
-----------------
யூசுப் ராவுத்தர் ரஜித்
--------------------------
கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில் ஒரு கரப்பான் பூச்சி மல்லாந்து கிடந்து கால்களை உதறிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு கத்தி எதிர்ச் சுவற்றில் மோதி நெற்றியைப் பிடித்துக் கொண்டு வருகிறார். அந்தக் கரப்பான் பூச்சியைக் கையில் பொத்தி எடுத்து உயிரோடு வெளியே போட்டுவிட்டேன். அந்த அம்மாவிடம் சொன்னேன். ‘மல்லாக்கப் போட்டால் குப்புறக்கூடத் தெரியாத அப்பாவி ஜிவனம்மா இந்தக் கரப்பாம்பூச்சி. ஏதாவது உணவுப் பிசுக்கு கிடைக்காதா என்றுதான் வருகிறது. கரப்பாம்பூச்சி கடித்து யாரும் செத்துவிட்டதாக கேள்விப்பட்ருக்கீங்களா? என்றேன். அந்த அம்மா வீட்டில் சாளரங்களைத் திறப்பதே இல்லையாம். தோம்புத் துவாரத்தைக் கூட ஒட்டுக் காகிதத்தால் நிரந்தரமாக மூடிவிட்டார்களாம். அன்றாடக் குப்பையை வெளியே போகும்போது வெளித் தோம்பில் போட்டுவிடுவார்களாம். அவர் மட்டுமா? எத்தனையோ பேர் அப்படி இருக்கிறார்கள்.

என் மகன் வீட்டுக்குள் நுழையும்போதே அகழ்வாராய்ச்சி நிபுணன் போல் குனிந்துகொண்டேதான் வருவான். எறும்புச் சாரியைப் பார்த்தால் பேகான் மருந்தை அரைடின் காலியாகும் வரை அடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். குளியலறையிலிருந்து என் மனைவியோ மகனோ பதறிக் கொண்டு ஓடி வந்தால் புரிந்து கொள்ளுங்கள் அங்கு ஒரு கரப்பாம்பூச்சியோ பல்லியோ இருக்கிறதென்று. பல்லியை சில சமயம் ஒற்றுத்தாளால் பொத்தி காயம்படாமல் எடுத்து வெளியே போட்டுவிடுவேன். கரப்பாம்பூச்சியை வெறும் கையாலேயே பொத்தி வெளியே போட்டுவிடுவேன். நான் கொல்லமாட்டேன் என்று அந்தப் பூச்சிகளுக்குத் தெரியுமோ என்னவோ, என்னைப் பார்த்தால் அவைகள் அஞ்சி ஓடுவதில்லை. சிறுசிறு பூச்சிகளைப் பிடிக்கத்தான் பல்லி வருகிறது. பல்லி உணவில் விழுந்தால் விஷம். அது பல்லியின் குற்றமல்ல. உணவைத் திறந்து வைத்த நம் குற்றம்தானே. எத்தனையோ தடவை சொல்லிவிட்டேன். என்றாலும் அவர்களுக்கு பயம் பயம்தான்.

எனக்குத் தெரியாமல் என் மகன் பல்லிப் பொறியை வாங்கி குளிர் பதனப் பெட்டிக்குக் கீழ் வைத்துவிட்டான். பல்லிப் பொறி என்றால் தெரியுமா? அது ஒரு பயங்கரமான பிசின். நீங்கள் விரலை வைத்தால்கூட தோலை பிய்த்துத்தான் விரலை எடுக்கவேண்டும். அந்தப் பிசினில் ஒரு பல்லி விழுந்து அசைய முடியாமல் உயிர் போனபின்னும் உயிர்த்துடிப்புடன் இருப்பதுபோல் கிடந்தது. அதை எடுக்கக்கூட அவனுக்கு பயம். அவன் என்னை அழைத்தான். பூச்சிகளை அவன் கொல்வதை நான் வெறுத்தாலும் ஒரு தடவை கூட என் கோபத்தை அவனிடம் காட்டியதில்லை. அது ஒரு கொடுமையான பொறுமை. அன்று அந்தப் பல்லியைப் பார்த்ததும் வெடித்துவிட்டேன். ‘இந்தப் பல்லியைப் போல் ஒரு மனிதனைக் கொல்வதை கற்பனை செய்து பார். ஒட்டிவைத்து அவன் துடித்துத்துடித்து ஒரு அங்குலம் கூட ஒரு உறுப்பையும் அசைக்கமுடியாமல் சாவது 100 தூக்குதண்டனைக்குச் சமமடா பாவி. ஏண்டா இப்புடிச் செஞ்சே. பூச்சிய அடிக்குறதுலேயே குறியா இருக்கியே, அந்தப் பூச்சி வர என்ன காரணம்.? வீடு சுத்தமா இல்லாததுதான். வாரத்துக்கு ரெண்டு தடவ மோப் பண்றேன். டாய்லட் பாத்ரூம் கழுவுறேன். வாஷ் பேசின மணிக்கணக்க யூஸ் பண்றியே, பக்கத்திலதானெ ப்ரஷ் இருக்கு. அத எடுத்து ஒரு தடவையாச்சும் சுத்தம் பண்ணியிருக்கியா? அவுத்துப் போட்டுட்டு அடுத்த ட்ரஸெ மாட்டிக்குட்டு கெளம்பீர்றே, அந்த அழுக்கு சட்டை உன் அலமாரி போய்ச் சேர்ர வரைக்கும் எவ்வளவு வேல இருக்குன்னு தெரியுமா? மடையா! ஏதாவது ஒரு வேல செஞ்சிருக்கியாடா? தொவச்சுக் கெடக்கிறத மடிச்சாவது வச்சிருக்கியாடா? ராஸ்கல். ‘
என் மனைவி என்னை சமாதானப்படுத்தினார் ‘இப்பப் பேசுனது யாரு? என் அத்தாவா? இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? அவன் திகைப்பிலிருந்து விடுபடவில்லை. அதிர்ந்து உறைந்துவிட்டான். அன்றுமுதல் அவன் ஒரு புது மனிதனாக மாறிவிட்டான். எடுத்ததற்கெல்லாம் காட்டும் கோபத்திற்கு சக்தி இல்லை. அடக்கி அடக்கி வெடிக்கும் கோபத்திற்கு ஒரு சக்தி உண்டு. என் மகன் முற்றிலும் மாறிவிட்டான். இப்போது வீட்டு வேலைகள் முழுதும் அவன்தான் பார்க்கிறான்.

என்னிடம் படிக்கும் ஒரு மாணவன் இருக்கிறான். விசையைப் பற்றி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது துள்ளிக் குதித்து பத்தடி தூரத்தில் நின்று கையை அவன் நீட்டினால் அந்தப் புத்தகத்தில் ஒரு பூச்சி இருக்கிறதென்று அர்த்தம். அது ஒரு சாதாரண தவிட்டுப் பூச்சி. பேன் மாதிரியே இருக்கும் ஆனால் பேனல்லா. அது ஒரு தரைவீடு. வீட்டைச்சுற்றி தோட்டம். இவனுக்காகவே அவர்கள் எந்த சாளரத்தையும் திறப்பதில்லை. ஒரு தாளை வைத்து அந்தப் பூச்சியை அதில் ஏறவிட்டு அப்படியே காயம்படாமல் மடித்து வெளியே வீசிவிட்டேன். அவன் வந்து அமர்ந்தான். அந்தப் பையனின் அம்மா சொன்னார். அவனுக்காகவே ஓர் அறையை 10000 செலவழித்து புதுப்பித்து தந்திருக்கிறார்களாம் ஒரு நாள் அந்த அறையில் ஒரு வெட்டுக்கிளியைப் பார்த்துவிட்டானாம். அந்த அறைக்கே இப்போது அவன் போவதில்லையாம். தவிட்டுப்பூச்சிக்கே பயப்படுகிறவனுக்கு வெட்டுக்கிளியை சகிக்கமுடியுமா? பூச்சி அவனுக்கு மனோவியாதிபோல் ஆகிவிடுமோ என்று அந்த அம்மா பயந்தார். ஒரு நாள் நான் இருக்கும்போதே ஒரு வெட்டுக்கிளி எங்கிருந்தோ வந்து சுவற்றில் அமர்ந்ததை அவனிடம் காண்பித்தேன். ஓடப்பார்த்தான். பிடித்து வைத்துக்கொண்டேன். அவன் ஒரு சிறந்த ஓவியன் என்பது இன்னொரு செய்தி. நான் மெதுவாக அருகில் சென்று அந்த வெட்டுக்கிளி மேல் சூறாவளி வேகத்தில் என் கையை வீசி பொத்தியதில் கைக்குள் சிக்கிவிட்டது வெட்டுக்கிளி. வெட்டுக்கிளியை நீங்கள் வேறு வகையில் பிடிக்கமுடியாது. பிடித்தபின் ஏனோதானோவென்று கையை மூடியிருந்தால் உதைத்துக்கொண்டு தப்பிவிடும். காயபம்படாமல் இறுகப் பொத்திக் கொண்டேன். பின்னங்கால்களின் அந்த முழங்கால் மடிப்பைப் பிடித்துவிட்டால் அதனால் ஒன்றுமே செய்யமுடியாது. பிடித்துவிட்டேன். அவன் அருகில் வந்தேன். அவன் வெகுண்டான். ‘நான்தான் பிடித்திருக்கிறேனே பயப்படாதே. இந்த முகத்தைப் பார்த்தாயா? ‘என்னெ நம்பி யாருமில்ல. யார நம்பியும் நானுமில்ல. நீ அடிச்சா செத்துருவேன். விட்டா பறந்துடுவேன். போடா’ என்று சொல்வதுபோல் இல்ல.’ இப்போதுதான் அவன் அந்த முகத்தையே பார்க்கிறான். ‘இந்த முகத்த நீ ஏன் வரஞ்சு பார்க்கக் கூடாது. ஒரு பாட்டில் எடுத்து வா.’ ஒரு ப்ரூ பாட்டிலை எடுத்து வந்தான். அதன் தகர மூடியில் நாலைந்து ஓட்டைகள் போட்டேன். பாட்டிலுக்குள் வெட்டுக்கிளியை விட்டு நாலைந்து புல் இலைகளைப் போட்டு வைத்தேன். ‘இப்போது அது தப்பிக்க முடியாது. அந்தச் சிறகுகளைப் பார். வரய வேண்டாம். எந்தக் கலர எப்புடி வேணும்னாலும் சேர்த்து இந்த சிறகின் கலரை கொண்வர முடியுதா பார்.’ என்றேன். மிகப் பெரிய ஆச்சரியம் என்ன தெரியுமா? அடுத்த நாள் கிட்டத்தட்ட 20 ஓவியங்களை வரைந்துவிட்டான். அவன் பயந்த வெட்டுக்கிளி அவனுக்கு நண்பனாகிவிட்டது. என்னிடம் சொன்னான். ‘பாவம் சார். இத விட்டுடுவோம். வேற கலர்ல வேற பூச்சி புடிப்போம். வரஞ்சு பாக்கிறேன்.’ எந்தப் பூச்சிக்கு பயந்தானோ அந்தப் பூச்சியை இப்போது அவனே தேடுகிறான். அவன் தாயாருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. எவ்வளவு பெரிய மனோவியாதியிலிருந்து விடுபட்டிருக்கிறான்.

ஒரு நாள் என் கைத்தொலைபேசியின் அந்த அம்மாவின் எண் மின்னியது. அவர் எப்போதும் குறுஞ்செய்திதான் அனுப்புவார். அவரின் இலங்கைத்தமிழ் கேட்க சுகமாக இருக்கும். ஆனாலும் அவர் அதிகமாகப் பேசுவதில்லை. இப்போது அவர் அழைத்தது ஆச்சிரியம்தான். எடுத்துப் பேசினேன். ‘தயவுசெய்து நீங்கள் உடனே இங்கு வரமுடியுமா சார்?’ என்றார். ‘ஏதும் பிரச்சினையாமா?’ என்று கேட்டேன். ‘நல்ல சேதிதான். நீங்க ஒடனே வந்தா நல்லது சார்.’ ‘சரி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு உடனே புறப்பட்டேன். அந்தக் குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த குடும்பம். வீட்டில் இரண்டு புத்த சாமியார்கள் இருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கிறார்கள் அங்கே விசாக் டே கொண்டாடுகிறார்களாம். அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள். யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து குழந்தைகளை ஒன்று திரட்டி உயிர்களிடம் அன்பு செலுத்தத் தூண்டும் விழாவாம். அந்த விழாவிற்கு அந்தப் பையனின் தந்தையை சிறப்பு விருத்தினராக அழைத்திருக்கிறார்கள். அந்தச் சாமியார்களுக்கு 50 வயதிருக்கும். காவி உடையில் முகம் தாமரையாய்ச் சிவந்திருந்தது. அந்தப் பையனின் தந்தை அவர்களிடம் என்னைப்பற்றிக் கூறி நான்தான் அந்த அழைப்புக்குப் பொருத்தமானவன் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த சாமியார்களில் ஒருவர் என்னிடம் சொன்னார். ‘நீங்கதான் எங்களோட சிறப்பு விருந்தினர். யாழ்ப்பாணம் வாங்க. எல்லாவற்றையும் நாங்க பாத்துக்கிறோம். எங்க கொழந்தங்கக்கிட்ட ஒரு அரை மணி நேரம் பேசணும். அது போதும். பாஸ்போட் காபி கொடுங்க. டிக்கட் அனுப்பிவைக்கிறோம். மூன்று நாள்தான். நீங்கதான் எங்களோட முக்கிய விருந்தாளி.’ என்றார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. எனக்கு இவ்வளவு பெரிய கவுரவமா? பதின்ம வயதில் நான் செய்த உயிர்கொலைகளைச் சொன்னால் அவர்கள் திரும்பிக் கூடப் பார்க்கமாட்டார்களே! உயிர்களையே கொல்லாதவன் நான் என்று இவர்களை நம்பவைத்து இலங்கை செல்ல எனக்கு விருப்பமில்லை. நான் எப்படி எப்போது இப்படி மாறினேன், எத்தனை பூச்சிகளை ஈவிரக்கமின்றி கொன்றிருக்கிறேன் என்பதை இவர்களிடம் சொல்லி அதற்குப் பிறகும் விரும்பினால்தான் செல்ல வேண்டும் என்று முடிவு செந்து கொண்டேன். அலைஅலையாக என் சிந்தனைகள் என் 5ஆம் வகுப்பு காலங்களுக்கு என்னை இழுத்துச் சென்றன.

அறந்தாங்கியில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய பொட்டல் உண்டு.கட்டுமாவடி கோட்டப்பட்டணத்திலிருந்து செவ்வாய் அதிகாலை சந்தை வியாபாரத்துக்காக கருவாடுகள் அங்குதான் இறங்கும். பெரிய பெரிய கொடுவா, அரக்குலா, கட்டா கருவாடுகளை அகல விரித்து வெள்ளைப் பலகைக் கல்லில் ஓங்ஙி அடிப்பார்கள் புழுக்கள் முதுகு தூக்கிக் கொண்டு சிதறி ஓடும். பிறகு இரண்டு கை உப்பை அள்ளிப் பரப்பி மீண்டும் மூடி கட்டிவிடுவார்கள். நல்ல கருவாடு ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மரக்காயர் வீட்டுக்கே வந்துவிடுவார். அந்தப் பொட்டலுக்கு அவர் தரும் வாடகை அதுதான். இந்த வேலைகளெல்லாம் முடிந்த ஒரு செவ்வாய்க்கிழமை சாயந்தரம் நானும் என் நண்பன் கலந்தரும் அந்தப் பொட்டலில் நடந்து வந்தோம். ஏராளமான ஈக்கள் மொய்த்தன. அப்போது கலா டாக்கீஸில் ‘ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி’ ஓடிக்கொண்டிருக்கிறது. எம்ஜியாருக்கு மனைவியாவதற்கு முன் வி.என். ஜானகி நடித்த படம் அது. கலந்தர் கேட்டான். ‘அவள் ஆயிரம் தலையை வாங்குவது இருக்கட்டும். உன்னால் ஆயிரம் ஈயைக் கொல்லமுடியுமா?’ ‘கொன்னா என்ன தருவே?’ ‘என் காசில ரெண்டு பேரும் படம் பாக்கிறோம்.’ என்று சொல்லி எட்டணாவைக் காட்டினான். சவாலை ஏற்றுக் கொண்டேன். வீட்டுக்குப் போய் இரண்டு வெல்லக்கட்டியும் ஒரு அலுமினியத் தட்டும் எடுத்து வந்தேன். அலுமினியத் தட்டில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வெல்லக்கட்டியைக் கரைத்து அதிகமாக ஈக்கள் மொய்க்கும் நாலைந்து இடங்களில் தெளித்துவிட்டேன். போட்டிக்குத் தயாரானேன். வெல்லக்கட்டி, கருவாடு இது போதாதா இந்த ஈக்களுக்கு. ஒன்றின் மீது ஒன்று ஏறிக்கொண்டு மொய்த்தது. புயலாக என் இடது கையை அதன்மீது வீசி பொத்தினேன். 30,40 ஈக்கள் சிக்கியிருக்கும். விரல் இடுக்கில் வெளியேற முயற்சித்தன. பிள்ளையார் கோயிலில் தேங்காய் உடைப்பதுபோல் வெள்ளைப் பலகைக் கல்லில் நச்சென்று ஓங்ஙி அடித்தேன். எல்லாம் செத்து வீழ்ந்தன. ஒரு சில தள்ளாடித்தள்ளாடி நடந்தன. அந்த ஈக்களையும் மண்டையில் தட்டிக் கொன்றேன். கலந்தர் எண்ணி எண்ணி அலுமினியத் தட்டில் போட்டான். பிறகு அடுத்த இடம் அடுத்த இடம். முப்பது வீச்சில் ஆயிரம் ஈக்கள் செத்து வீழ்ந்தன. டிக்கட்டுக்கு அவன் தந்த விலை மூன்றணா. நான் தந்த விலை ஆயிரம் ஈக்களின் உயிர்.

ஆடிமாதம் வந்தால் பயிர்க்குழி வேலையை ஆரம்பித்து விடுவார் அத்தம்மா. (அப்பாவின் அம்மா) புடலைப் பந்தலை விசாலமாகப் போட்டு கொடியை கொம்பில் ஏற்றி விடுவார். புடலை ஒரு நாளைக்கு ஒரு சாண் வளரும். மூன்றே வாரத்தில் பூ பூத்தது. பிஞ்சு வந்தது. அடுத்த நாள் பிஞ்சு இருக்காது. கரட்டான்கள் (ஓணான்கள்) கடித்துவிடும். என்ன செய்யலாம். நாலைந்து கரட்டான்களை அடித்துத் தொங்கவிட்டால் கரட்டான்கள் வராதாம். கரட்டான் கொண்டு வரும் வேலையை அத்தம்மா என்னிடம் தந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் கரட்டான் வேட்டை எங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. எங்களில் ஒரு சங்கர்லால் இருப்பான். அவன்தான் முன்னே செல்வான். தமிழ்வாணனின் துப்பறியும் கதைகளில் வரும் அந்த சங்கர்லாலை யாராலும் மறக்க முடியாது எங்களிடமும் ஒரு சங்கர்லால். கரட்டானைத் துப்பறிவான். கரட்டானைப் பார்த்துவிட்டால் எங்களை எச்சரித்து விடுவான். முதல் கல் வீசுவது நான்தான். எனக்குப் பேரே ‘நொட்டாங்கை பன்னீர்’ சாப்பிடுவது தவிர எல்லாமே இடது கைதான். பொட்டில் அடித்தால்தான் ஒரே அடியில் விழும். வேறு இடத்தில் அடித்தால் அடியை வாங்கிக்கொண்டு ஓடிவிடும். கொல்வதைவிட அரைகுறை உயிருடன் பிடிப்பதே எங்களுக்குப் பிடிக்கும். புகையிலையோடு ‘அம்பக்கு அஜ்மீர்’ தயாராக இருப்பான். அதன் வாயைப் பிளந்து இரண்டு புகையிலைத் துண்டை வைத்தால் பைத்தியம் போல் சுற்றிச் சுற்றி வரும். நாங்கள் கைதட்டி ரசிப்போம். நாலைந்து கரட்டான்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினேன். அத்தம்மா கட்டித் தொங்கவிட்டார். ஒரு பாகம் நீளத்திற்கு புடலங்காய் காய்த்துத் தொங்கியது. அதோடு எலும்பும் தோலுமாக கரட்டான்களும் தொங்கின. செத்த எலிபோல் கொடுமையான நாற்றம். இன்றுகூட புடலங்காயைப் பார்த்தால் அந்தக் கரட்டான் ஞாபகம்தான் எனக்கு வருகிறது.

ஜிலேபிக்கெண்டை என்ற ஒரு மீன் வகை அறிமுகமாகியிருந்தது. அந்தக் குஞ்சை வாங்கி குளங்களில் விட்டால் மூன்றே மாதத்தில் 500 கிராம் அளவுக்கு பெருத்துவிடும். ராவுத்தர் தன் குளத்தில் ஏராளமான குஞ்சுகளை விட்டிருந்தார். குளத்தில் சிறு முறுக்குத் துண்டைப் போட்டாலும் ஏராளமான மீன்கள் சுழிக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் தூண்டில் போடுவது எங்களின் இன்னொரு விளையாட்டு. தூண்டில் செய்வதில் நான் கில்லாடி. நைலான் நரம்பில்தான் தூண்டிமுள்ளைக் கட்டவேண்டும். மயிலிறகுத் தட்டைக்கும் தூண்டிமுள்ளுக்கும் இடையே உள்ள தூரம் கச்சிதமாக இருக்க வேண்டும். இதிலெல்லாம் எனக்கு ஒரு நிபுணத்துவமே இருந்தது. தூண்டில் போடுவதற்கு முன் நாக்கட்டாம்பூச்சி சேர்க்க வேண்டும். நாக்கட்டாம்பூச்சியின் இலக்கியச் சொல் மண்புழு. ஜெமீலாக்காவின் சாணிக்குப்பையில் ஒரு குத்து குத்தி நெம்பினால் போதும். நூடுல்ஸ் மாதிரி மண்புழுக்கள் சுருட்டிக் கொண்டு வெளியாகி மீண்டும் மண்ணுக்குள் ஓடப்பார்க்கும். ஒரு கொட்டாங்கச்சியில் மண் போட்டு நாக்கட்டாம்பூச்சி சேர்ப்போம். அந்தப் பூச்சியை மூள்ளில் ஏற்றுவதே ஒரு கலை. தலையின் முனைப்பகுதியை முள் நுனியில் வைத்து துடிக்கத் துடிக்க ஏற்ற வேண்டும். புழுவில் முள் பொத்துக்கொண்டு வெளியே வந்துவிடக்கூடாது. முழு முள்ளையும் அந்தப் பரிதபத்துக்குரிய புழு மூடியிருக்க வேண்டும். எஞ்சிய பகுதி பல்லிவால் மாதிரி துடிக்கும். அதைக்கிள்ளி கொட்டாங்கச்சியில் போட்டுவிடுவோம். அது அடுத்த முள்ளுக்கு. சாயந்தரத்துக்குள் 20,30 மீன்கள் பிடித்துவிடுவோம். தெக்குவாடி போய் ‘மீனு மீனு’ என்று கூவினால் முக்கால் ரூபாய் அல்லது ஒரு ரூபாய் சேர்ந்துவிடும். முறுக்கு சுண்டலோடு சினிமா பார்க்கலாம். அப்படி மீன் விற்று நான் பார்த்த முதல் படம் ‘மக்களைப் பெற்ற மகராசி’ ஒரு கவிதையில் கூட எழுதியிருப்பேன்.

‘கொண்டுவிற்ற எட்டணாவில்
மண்தரை வெண்திரையில்
மக்களைப் பெற்ற மகராசி’ என்று
விரால் மீன் பிடிப்பது இன்னொரு கலை. இந்த இடத்தில் உங்களுக்குக் கொஞ்சம் அலுப்புத் தட்டலாம். இப்போதுதான் கதையின் உயிரே தொடங்குகிறது. தயவுசெய்து என்னோடு தொடருங்கள். விரால் மீன் பிடிக்க பம்பரக் கயிறு வேண்டும். தூண்டி முள் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும். மண்புழுவெல்லாம் அதற்குப் பிடிக்காது. சிறிய கெண்டைக் குஞ்சை நசுக்கி அந்த முள்ளில் கோர்க்க வேண்டும். நீளமான மூங்கில் குச்சி தேவையில்லை. ஒரு சாண் நீளத்தில் கட்டையான ஒரு குச்சி போதும். நூலின் நீளம் பத்தடி இருக்க வேண்டும். மாலை 6 மணிக்கு கவண்கல் விடுவது போல் தூண்டிலை தலைக்கு மேல் மூன்று சுற்று சுற்றி குளத்துக்குள் வீச வேண்டும். தட்டையெல்லாம் தேவையில்லை. அப்படியே சகதியில் மொத்தமும் பதிந்து மறைந்துவிடும். விராக்கள் சகதியில்தான் வாழும். காலை 6 மணிக்கு இழுத்துப் பார்த்தால் விரால் விழலாம். பத்துத் தடவைக்கு ஒரு தடவைதான் விழும்.

இப்படித்தான் ஒரு தடவை விரால் தூண்டிலை தலைக்கு மேல் சுழற்றினேன். சுற்றிவந்த தூண்டிமுள் நச்சென்று என் தொடையில் ஏறிவிட்டது. உய்யென்று கூட்டம் கூடிவிட்டது. ராவுத்தரின் ஆள் வந்துவிட்டால் ஆபத்து. சேதி அத்தாவுக்குப் போய்விடும். தூண்டிலின் நாக்குப் பகுதி உள்ளே இறங்கிவிட்டது. கிழித்துத்தான் அதை எடுக்கமுடியும். என் தம்பி அலறி அடித்துக்கொண்டு ஓடிவந்து கூட்டத்தை விரட்டினான். நூலை எல்லாம் அறுத்துவிட்டு ஒரு சைக்கிளை எடுத்து வந்து என்னை பின்னால் உட்காரவைத்து கம்பவுண்டர் நாராயணசாமி வீட்டுக்கு அழுத்தினான். மருத்துவமனையெல்லாம் அந்த நேரம் இருக்காது. அப்படியே இருந்தாலும் டாக்டர் உடனே அத்தாவுக்குத்தான் ஆள் அனுப்புவார். நல்லவேளை. நாராயணசாமி இருந்தார்.

‘வாங்கடா பசங்களா.என்ன சேதி?
‘பன்னீருக்கு தூண்டிமுள் குத்திருச்சு.’
‘முள்ளா? எங்கடா?’
நான் காலை காண்பித்தேன். ‘அடப்பாவி! எப்புர்றா இப்புடி குத்திக்கிட்டே. இதக் கிழிக்காமெ எடுக்கமுடியாதுடா. மயக்க மருந்து தர எனக்குத் தெரியாதுடா. என்னடா இப்புடிப் பண்ணிட்டிங்களேடா.’
‘கிழிச்சாவது எடுங்க சார். வலியத் தாங்கிக் கிர்றேன் சார்.’

‘சரி. டேய் அக்பரு. போய் ஒரு பனாமா பிளேடு வாங்கிட்டு வா. காசு இருக்கா? தரவா?’
‘இருக்குசார்’ என்று அவன் ஓடினான். ஐந்தே நிமிடத்தில் பிளேடோடு வந்தான். பேப்பரோடு அதை இரண்டாக உடைத்தார். நான் இறுகக் கண்களை மூடிக்கொண்டு ஒரு மரண தண்டனைக்குத் தயாரானேன். என் பொட்டில் துப்பாக்கி குறிவைத்திருக்கிறது. அது சிறிது நேரத்தில் என் பொட்டை பிளக்கப் போகிறது என்று எனக்குள் ஒரு திகில்.

அந்த முள் குத்திய வாயில் பிளேடை அழுத்திக் கிழித்து பிளந்து பார்த்தார். நாக்கு தென்பட்டது. அதற்கு மேலுள்ள தசைநாரை லேசாக வெட்டிவிட்டு முள்ளை எடுத்துவிட்டார். வழிந்த ரத்தத்தை பொறுமையாக அக்பர் துடைத்தான். ஒரு பிளாஸ்டரைப் போட்டு போகச் சொல்லி விட்டார். இருக்கும் காசையெல்லாம் தேற்றியதில் ஒரு ரூபாய் தேறியது. அக்பர் கொடுத்தான். ‘யாருக்குடா காசு தர்றே? எனக்குக் கடை தந்து யாபாரத்துக்கு காசும் தந்து என்னெ ஆளாக்குனவருடா ஒங்க அத்தா. வேற ஒரு புள்ளயா இருந்தா தொட்டுருக்க மாட்டேன்டா. மட்டமான பசங்கடா நீங்க.’ அக்பர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். ‘அத்தாக்கிட்ட சொல்லிடாதீங்க’ என்றான். தட்டிக்கொடுத்து அவனைத் தூக்கினார். ‘நா சொல்லமாட்டேன். வேறு யாரும் சொல்லாம பாத்துக்கப்பா’ என்றார்.

சரியா ஒரு வாரம். புண்ணெல்லாம் ஆறிவிட்டது. கவட்டையில் (தொடையின் மேல் பகுதி) ஒரு கட்டி புறப்பட்டது. அதற்குப் பெயர் சிலந்திக் கட்டியாம். முகம் தெரியாமல் சிவப்பாய் உப்பிக் கொண்டு வந்தது. கல் மாதிரி அழுத்தம். தொட்டால் செத்துவிடலாமா என்று நினைக்கத் தோன்றும் வலி. விண் விண்ணென்று தெறித்தது. ஆடாதோட இலையைப் பறிந்து வந்து விளக்கெண்ணையைத் தடவி அனலில் வாட்டி புண்ணில் மேல் வைத்தார் அத்தம்மா. ஒரு வாரம் இப்படிச் செய்து அதைப் பழுக்க வைத்தார். அது உடைந்தபோது ரத்தமும் சீழும் ஒரு கொட்டாங்கச்சி நிறைய வந்தது. அதைத் தொடர்ந்து முழங்காலில் ஒரு கட்டி. காலை மடக்க நீட்ட முடியவில்லை. முழங்கைதான் கால்கள். இருப்பிடத்தைத் தரையில் ஊன்றி நக்கரித்து நக்கரித்துத்தான் நகரவேண்டும். பிறகு அடுத்த காலிலும் முழங்காலை மடக்கும் இடத்தில் இன்னொடு கட்டி. இப்போது நக்கரிக்கவும் முடியாமல் போய்விட்டது. அத்தம்மா என் தலைமாட்டிலேயே இருந்தார். உமிக்கருக்கால் பல் தேய்த்துவிட்டு வாய் கொப்பளிக்க வைப்பார். பருப்புத் துவயலோடு மறுஉலைக் கஞ்சியை ஊட்டிவிடுவார். ஒரு அலுமினியச் சகானில் ஒன்னுக்கைப் பிடித்து வெளியே கொட்டிவிட்டு மீண்டும் சாம்பலில் தேய்த்து அடுத்த ஒன்னுக்குக்கு தயாராய் கொண்டு வந்துவிடுவார். மலம் பிடிக்க இன்னொரு சகான். மலத்தை அகற்றி கழுவிவிடுவார் ஒரு வெள்ளைத்துணியை வெந்நீரில் நனைத்து உடம்பு முழுவதும் துடைத்துவிட்டு ரெமி பவுடர் போட்டு விடுவார். ஐந்து வேளையும் என் தலைமாட்டிலேயே தொழுது கொள்வார். யாசின் ஓதி அழுது அழுது துஆ கேட்டார். ‘என் அத்தம்மா எனக்குச் செய்த பணிவிடைகளை உயிராகப் பிறந்த யாராலுமே செய்யமுடியாதய்யா. அந்த அத்தம்மாவுக்கு நான் ஒன்னுமே செய்யலியேய்யா.நெனச்சாலே வயிறு குப்புன்னு பத்திக்கிதே அய்யா.’
புதுக்கோட்டையிலிருந்து ராமச்சந்திரன் பிள்ளை என்று ஒரு டாக்டர் ஒரு கல்யாணத்துக்காக அறந்தாங்கி வந்தார். அவரை அத்தா வீட்டுக்குக் கூட்டி வந்தார். கட்டியைப் பார்த்தவுடன் கேட்டார். ‘ஒடம்புல எங்காச்சும் முள்ளு கிள்ளு குத்திச்சா?’

அத்தா சொன்னார். ‘எப்போதும் இந்த வேலிக் கருவக் காட்டுலதான் வெளையார்றாங்கே. குத்துனாக்கூட அவிங்களுக்குத் தெரியாது சார்.’ நாங்கள் சொல்ல வேண்டிய பொய்யை அத்தாவே சொல்லிவிட்டார். ‘இதுக்கு ஒரு வெல ஒசந்த மாத்திரை இருக்கு. அது பென்சிலின் ஜாதி. சிலருக்கு ஒத்துக்காது. ஒரு மாத்திரயப் போடு. ஒடம்பெல்லாம் அரிச்சா சாப்டக் கூடாது.’ என்று சொல்லிவிட்டு கைவசமிருந்து ஒரு மாத்திரையைக் கொடுத்தார். அதன் பெயர் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘பெண்டிட்ஸ்’. எனக்கு ஒன்றுமே ஆகவில்லை. அந்த மாத்திரை 30 சாப்பிடவேண்டும் ஒரு நாளைக்கு நாலு வேளை. ‘ஒரு மாத்திரையிலேயே அந்தக் கட்டி வராது. திரும்ப வந்துச்சு ஒடனே புதுக்கோட்டைக்கு கூட்டி வந்திருங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அந்தக் கட்டி பிறகு எட்டிப் பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட மூன்று மாதம் பள்ளிக்கூடம் போகவில்லை. என்னுடைய கூட்டமெல்லாம் என்னைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்தார்கள். ஆசிரியர்கள் வந்தார்கள். அப்போதுதான் எனக்கு ஞானோதயமாக உதித்தது. ‘பூச்சிகளைக் கொல்லாதே. தேவையில்லாமல் அவைகளை துன்புறுத்தாதே. நீ கொன்றதற்கெல்லாம் தண்டனை அனுபவித்து விட்டாய்.’ என்று அடிக்கடி கனவில் ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

‘என்ன சார் ரொம்ப யோசிக்கிறிங்க?’ என்ற சாமியாரின் குரல் கேட்டு நினைவு திரும்பினேன். அவரிடம் சொன்னேன். ‘சின்ன வயசில ஆயிரக்கணக்கான பூச்சிகள ஈவு இரக்கமில்லாம கொன்னுருக்கேன். ஒங்க அழைப்பை ஏத்துக்க நான் தகுதியான ஆளு இல்லய்யா.? கேட்ட மாத்திரத்தில் ‘ஹோ…ஹோ…’ என்று சப்தமாகச் சிரித்தார். அந்த சாமியார் சிரித்ததில் அதுவரை ஒளிந்து கொண்டிருந்த கடவாய்த் தங்கப்பல் முகம் காட்டி மின்னியது. ‘என்ன அய்யா. எதுவும் தப்பா சொல்லிட்டேனா?’

தப்பு இல்லங்க அதான் நிஜம். அசோகச் சக்கரவர்த்தி லட்சம் பேரக் கொன்னுட்டுதான் புத்த மதத்துக்கு வந்தார். அவர வேணாமுன்னு யாரும் சொல்லலியே. தவறே செய்யாதவன விட தவறு செஞ்சு திருந்துறவன்தானய்யா ஞானி. திரும்பவும் அந்தத் தவற மனசுல கூட நெனக்காதவந்தாய்யா யோகி’ மீண்டும் சிரித்தார். நீங்க யோகி.
இப்போது நான் கொழும்புக்கு பறந்து கொண்டிருக்கிறேன். அந்தக் குழந்தைகளிடமெல்லாம் சொல்லப் போகிறேன். ‘பூச்சிகளை சித்ரவதை செய்யாதீர்கள். கொல்லாதீர்கள்’ என்று. அவர்களுக்கு மட்டுமா. உங்களுக்கும்தான் சொல்கிறேன். ‘பூச்சிகளைக் கொல்லாதீர்கள். பூச்சிகள் வருவதற்கான காரணத்தைக் கொல்லுங்கள்.

யூசுப் ராவுத்தர் ரஜித்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by முரளிராஜா Wed Dec 30, 2015 7:47 pm

கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 30, 2015 8:26 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 31, 2015 7:28 pm

நானும் என் ஈழத்து முருங்கையும்
----------------
நவநீ
----------------

சற்று நேரத்தில் இரையாகப் போகிறோம் என்பதுகூட தெரியாமல் ஒரு பருந்தின் கால்களுக்குள் சிக்கிக் கதறி, தன் தாயையும், கூடப்பிறந்தவர்களையும், தான் ஓடி விளையாடிய மண்ணையும் ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு கோழிக்குஞ்சுவின் தவிப்பிற்கும், தான் வாழ்ந்த மண்ணை, மரத்தை, மனிதர்களை விட்டு நிரந்தரமாய் பிரிந்து, அன்னிய நாட்டிற்கு நிரந்தர அகதிகளாய் செல்பவர்களின் உயிர் வலிக்கும் பெரிதாய் வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. இப்படி தன் மண்ணைவிட்டு வரும்போது, தன் கொள்ளைப்புறத்தில் பல வருடங்களாய் பாசத்தோடு பார்த்து பார்த்து வளர்த்த, அந்த முருங்கை மரத்தை மட்டும் விட்டுவர மனம் வருமா என்ன? போரின் உச்சத்தில் உணவுப் பண்டங்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல இயலாத நாட்களில் தாயாய் தன் குடும்பத்துக்கே உணவளித்தது அந்த முருங்கை உறவுதானே! தன் சொந்த மண்ணைப் பிரிகையில் கண்ணீர் மல்க இரண்டே இரண்டு முருங்கைக் கிளைகளை மட்டும் வெட்டி தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டு தமிழகம் வந்து சேர்ந்த நம் தொப்புள் கொடி உறவுத் தாயோடு, அந்த முருங்கைக் கிளைகளும் அகதிகளோடு அகதிகளாய் தமிழகம் வந்து சேர்ந்தன.

மண்ணைப் பிரிந்து கடல் கடந்து தப்பி வந்த தம் மக்களோடு மக்களாய், கனத்த மனத்துடன் தானிருக்கும் இராமேஸ்வரம்-மண்டபம் முகாமில் வலியறிந்து, குறிப்பறிந்து, தாயாய் சேவை செய்த செவிலி ஒருத்திக்கு ஒரு முருங்கை உறவை தத்துக்கொடுக்கிறாள் அந்த ஈழத்துத்தாய். அன்போடு பெற்றுக்கொண்ட செவிலித்தாய் அந்தக் கிளையை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தபோதிலும், தம்மால் இயலுமோ இயலாதோ? என்ற ஐயத்தில் “அண்ணன் கை…. ராசி, அவன் கையில் கொடுத்தால் அவன் எப்படியும் ஆளாக்கி/மரமாக்கி விடுவான்” என்ற தன்னம்பிக்கையில் தன் அண்ணனிடம் அன்போடு தருகிறாள். அண்ணன் ஆசை ஆசையாய் அள்ளி அணைத்து அந்த ஈழத்து உறவை நம் மண்ணில் நிரந்தரமாக்குகிறான்.

அபார வளர்ச்சி, அற்புதமான சுவை…. முழுமையாய் வளர்ந்து அந்த அண்ணனை மகிழ்விக்குமுன் அவன் அமெரிக்கா சென்று விடுகிறான். சில வருடங்கள் கழித்து ஒரு கோடையில் வந்தவன் கண்களில்… குளிரூட்டியது. ஓங்கி வளர்ந்து, மென்மையான வாசத்துடன், பூக்களும், காய்களுமாய் நிறைந்து கம்பீரமாய் காட்சியளித்தது அந்த முருங்கை உறவு. அண்ணன் கண்களில் “ஈழம் தந்துவிட்ட அந்த அண்ணன்” கண்களின் ஆனந்தக் கண்ணீர்”. கண்கள், மனம், வயிறு எல்லாம் நிறைந்து போனது. சில மாதங்கள் கழித்து உச்சியில் தொங்கிக்கொண்டிருந்த அந்த முருங்கை நெத்து (முதிர்ந்த நெற்று) அண்ணனை பார்த்து கைசைத்துக்கொண்டே சலசலவென்ற சத்தத்துடன் காலடியில் வந்து விழுந்தது. அள்ளி அணைத்து முத்தமிட, அந்த நெத்து தந்த சத்தம் ‘அம்மா எப்படியிருக்கிறாள், அண்ணன் எங்கிருக்கிறார்’ என்று கேட்பதாய் கேட்டது.

அண்ணன் திரும்பவும் அமெரிக்க பயணத்திற்கு ஆயத்தமாகிறான். கூடவே, அந்த முருங்கை நெத்தையும் எடுத்துச் செல்ல முடிவு செய்கிறான். சட்ட விரோதம் என்பது பற்றியெல்லாம் சற்றும் அவன் சிந்திக்கவில்லை. ஈழத்து முருங்கை இறங்கிய வேகத்தில் அழகான தொட்டிக்குள் அமொிக்க மண்ணோடு ஐக்கியமானது. சிறு வயதில் தன் கொள்ளுத்தாத்தா கையாண்ட உத்தியைப் பயன்படுத்தி அந்த நெத்தை முழுவதுமாக தொட்டிக்குள் புதைத்தான். தனித்தனி விதையை நட்டு வைக்காமல் முழு நெத்தையும் அப்படியே ஆழத்தில் நட்டு வைத்தால் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக, செழிப்பாக வளரும் என்ற தன் தாத்தாவின் உத்திதான் அது. அந்த முருங்கை நெத்தை அண்ணன் அமெரிக்காவின் தன் கொள்ளைப்புறத்தில் நட்டு வைக்க ஆசைதான். ஆனால், அமெரிக்க தட்பவெப்பநிலையில் முருங்கை வளராதென்பதால் தொட்டிக்குள் கட்டாயமாக்கப்பட்டது.

திரும்பவும் தாயகப் பயணம். ஓர் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு அதிகாலை எழுந்ததும் கைப்பேசியை திறக்கையில் கண் கொள்ளாக்காட்சி. மனைவி அனுப்பியிருந்த புகைப்படத்தில் அந்த முருங்கைக் கன்று அவன் கைபேசியில் கண்ணைப் பனி(றி)த்தது. அப்பப்பா…. அந்த சந்தோசத்திற்கு இணையேது. தன் முதல் மகள் பிறந்த தினம் நினைவுக்கு வந்து போனது. இப்படியாக குளிர்காலங்களில் குழந்தைகளோடு குழந்தையாக வீட்டுக்குள்ளும், கோடை காலங்களில் மரங்களோடு மரமாக கொள்ளைப்புறத்தில் மளமளவென்று வளர்ந்தது. ஈழ மண்ணில் பிறந்து இந்திய வம்சாவழியாய் இப்போது அமெரிக்க மண்ணில் எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராய் மாறிப்போன என் முருங்கை உறவை காணும்போதெல்லாம் என் கண்ணில் ஈழம் மலர்ந்துவிட்ட மகிழ்ச்சி. இந்த என் முருங்கை வித்து, நெத்து தரும் அந்த தருணத்திற்குள்ளாவது ஈழம் மலர்ந்து விடுமா? என்ற ஏக்கத்தை எனக்குள்ளிருந்து எடுக்க இயலவில்லைதான்.

கடந்த முறை நான் செல்லும்போது முருங்கைக்கீரையை முழுவதுமாய் பறித்து சுவைத்துவிட எத்தனிக்கையில் மனதுக்குள் எங்கோ ஓர் மூலையில் வலிக்கத்தான் செய்தது. என் மனைவி பறிக்கவே கூடாது என்று தடுத்தும், அவன் வளர்ச்சிக்காக அதை செய்யாமலிருக்க முடியவில்லை. மொத்தமாக குடும்பத்தோடு நின்றுகொண்டு காம்புக்குக்கூட காயம் பட்டுவிடக் கூடாதென்ற கவனத்தில் பக்குவமாய் பறித்தெடுத்த நிமிடங்கள் இன்றும் என் கண்முன் நிழலாடுகிறது.

அந்த முருங்கைக்கீரை மொத்தமாய் எங்களது இரத்தத்தில் சங்கமித்தது. மீண்டும் நான் அமெரிக்கா செல்லும்வரை அந்த முருங்கை உறவை அன்போடு கவனிக்க தாயாய் என் மனைவி, தமக்கையராய் என் மகள்கள்….
ஒவ்வொரு முறை அலைபேசும்போதும் மறக்காமல் நலம் விசாரிக்கிறேன். வாரமொரு முறையேனும் வலை முகநேரம்/நேரடி காணொளி செய்கிறேன் (Face Time / Web cam). காத்திரு……
இதோ இரண்டே மாதங்களில் வந்து விடுகிறேன் என் ஈழத்து உறவே…..
ஏக்கத்தோடு உன் அண்ணன்

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 31, 2015 7:31 pm

ஒரு ஊரின் கதை
-----------------------
மாதவன் ஸ்ரீரங்கம்
----------------------------

கிபி 19 ம் நூற்றாண்டு..
புதுப்பாளையம் இருளில் ஒளிந்திருந்தது. மினுக்கட்டாம்பூச்சிகள் திறந்தவெளியெங்கும் அலைந்தபடியிருக்க ஊருக்குள் ஒன்றிரண்டு தெருநாய்கள் அரையுறக்கத்தில் புரண்டன. பண்ணையார் சேவுப்பிள்ளை திண்ணையில் அமர்ந்திருக்க, வீட்டுவாசலில் மொத்தமாகக் கூடியிருந்தது ஊர். ராந்தல் விளக்கின் வெளிச்சம் மந்தமாயிருக்க எல்லோரும் சேவுப்பிள்ளை பேசுவதற்காகக் காத்திருந்தார்கள். அவர் கும்பலின் வெளிவிளிம்புவரை ஒருமுறை நோட்டமிட்டுக்கொண்டார். யாருக்காகவோ காத்திருப்பது போலிருந்தது அவர் மவுனம். மணியக்காரர்தான் அமைதியை கலைத்தார்.


“இந்தமேனிக்கி ஒக்காந்திருந்தா கெழக்கு வெளுத்திரும். கும்பினியாளுங்க ஊருக்குள்ள வந்திட்டா, பொறவு என்னவுஞ் செய்ய ஆவாது” என்று கொட்டாவி விட்டபடி சலித்துக்கொண்டார்.
பண்ணையார் சிறிதும் சலனமின்றி இருக்க, அருகில் காலடியோசைகள் கேட்டன. சேவுப்பிள்ளை அவர்களை ஆவலுடன் பார்க்க, வந்தவர்கள் தலையைத் தொங்கப்போட்டபடி கூட்டத்தில் கலந்து உட்கார்ந்துகொண்டது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. தன் திட்டம் தோல்வியடைந்ததன் வருத்தமும் சேர்ந்துகொள்ள, மணியக்காரரிடம் எரிந்துவிழுந்தார்.


“ஏன் நீதான் வெவரஞ்சொல்லேன். நாப்பது காணி பங்குல்ல உன்னுது”?
சேவுப்பிள்ளை விட்ட அம்பு சரியாகத் தைத்திருக்கவேண்டும். அதன் பின் மணியம் வாயைத்திறக்கவில்லை. அவர் எழுந்துசென்று வெற்றிலை எச்சிலை தொலைவில் துப்பிவிட்டு திண்ணைக்குத் திரும்பினார்.
” பாருங்கய்யா. எல்லாமுஞ் செஞ்சி பார்த்தாச்சி. ஒன்னும் நல்லதா ஆவல. தொரமாருங்க உறுதியா இருக்கானுங்க. பேசாம கெடக்குறதுதான் நம்ம தலையெழுத்துப்போல”
கூட்டத்திலிருந்து அழுகையும் ஆத்திரமுமான குரல்கள் கிளம்பின.


“உம்ம மலபோல நம்ம வந்தமேய்யா சாமி. நீரே இப்புடிச்சொன்னா நாங்க என்ன செய்ய ? எங்க போவ ? நல்லதா எதாச்சுஞ் சொல்லுங்கய்யா”
சேவுப்பிள்ளை க்கும் பாவமாகத்தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய ? நிலைமை கைமீறிய விஷயமாக இருக்கிறது.


“ஏய்யா உங்களுக்கென்னா பைத்தியமா பிடிச்சாட்டுது? எம்மடதுந்தான் நானூறு காணி கத்தாழச்சளி கணக்கா கைநழுவப்போவுது. சர்க்காருக்கு போட்ட மனுவெல்லாம் கெணங்கல்லாப் போச்சுது. இதோ நம்ம ஐயிரு தொரகிட்டதான கணக்கப்புள்ளையா இருக்காரு. நீங்களே கேட்டக்கங்கய்யா” என்றபோது அவர்குரல் சற்று தடுமாறியது. கும்பல் அய்யரைப்பார்க்க, அவர் தர்சங்கடத்தில் நெளிந்தார். ஆனால் தாமதிக்காமல் விஷயத்திற்கு வந்தார்.


“பண்ணையாரு சொல்லுறதெல்லாம் வாஸ்தவம். சர்க்காரு பேக்டரி கட்றதுக்காக ஏற்பாட்டுக்கு எடுத்ததுல நம்மூருநெலம் முச்சூடும் போவப்போவுது. பட்ணத்து தேவநாத வக்கீலுகிட்ட வெலாவரியா சொல்லி கேட்டதுல மனுப்போடச்சொன்னாரு. நாளதுவரைக்கும் நாப்பது மனுப்போட்டும் சர்க்காரு சமரசத்துக்கு வரலை. அங்கங்க நம்மாளுங்க சொதந்தரத்துக்காவ போராடுறதுல சர்க்காருக்கும் தொரைங்களுக்கும் நம்மாளுங்கமேல கடுங்கோவம். அதிலயும் நம்ம ஜில்லாக் கலெக்டரு ரெம்பக் கராறு. சர்க்காரு விசுவாசி. நாளைக்கி அளவைக்கிக்கூட அவுரு வரப்போறதாத்தான் பேச்சு”
கும்பலில் ஒரு இளைஞன் சந்நதம் வந்ததுபோல எழுந்தான்.


“வரட்டுந்தாயோளி அவன் கொரவளைய அறுத்துப்புடுறேன். ஆரூட்டு எடத்தை ஆருவந்து ஆளுறது”?
ஒன்றிரண்டு பேர் அவனை அடக்கி அமரவைத்தார்கள். சற்றுத்தள்ளி குத்தவைத்து அமர்ந்திருந்த கீழ்ச்சாதியினர் இது எதுவும் விளங்காமல் உட்கார்ந்திருந்தனர். நாளதுவரை தங்களை ஆட்டிப்படைத்த பெரிய தனக்காரர்களே மிகுந்த கவலையில் சோர்ந்து உட்கார்ந்திருந்ததில் இது உண்மையிலேயே பெரிய விசயம்தான் போல என்றெண்ணிக்கொண்டார்கள்.


கும்பினியாட்கள் ஊர் நிலம் முழுதும் எடுத்துக்கொண்டுவிடும் பட்சத்தில் தங்களுக்கான வாழ்வாதாரம் என்ன என்பதுகுறித்து பீதியிலாழ்ந்தார்கள். நல்லதுபொல்லாததென்றால் உடுப்பும் உணவும் கொடுத்து இதுவரை காப்பாற்றியது ஊர்க்காரர்கள்தான். கொஞ்சம் முன்கோபங்களும் காரணமற்ற தண்டனைகளும் விதித்தாலும், தங்கள் வாழ்வும் பாதுகாப்பும் அவர்களுடன் தான் பிணைந்திருக்கிறது என்கிற அளவில் புரிந்துவைத்திருந்தார்கள்.


” இந்த எளந்தாரிப்பயபோல எனக்கும் ஆத்திரம் தான். தற்காலிகத்துக்கு அளவைய ஒத்திப்போடத்தான் கலக்டரு தொரைய குத்திட்டுவர ஆளனுப்புனேன். ந்தா மொட்டப்பனமரமா திரும்ப வந்துட்டானுங்க என்ன செய்ய”? என்ற சேவுப்பிள்ளையை வினோதமாக பார்த்தது கூட்டம்.
“என்னாங்க செய்யிறது. சுத்தி ஆள்படையோடவே சுத்துறான். அப்புடியிருந்து ரெண்டுமூனுதரம் வீசிப்பாத்தம். குறிதவறிப்போச்சுது”
“ஏஞ்சாமி வேற ஆளு அகப்படலியா உங்களுக்கு? இவன் குருவிக்கி குறிவச்சி காக்காயல்ல புடிச்சி வருவான்” என்று கூறி எவரோ சிரிக்க, இன்னும் சிலர் சிரிப்பில் சேர்ந்துகொள்ள சம்பந்தப்படவன் அவமானத்தில் என்னவோ கத்தத்தொடங்க சளசளபுளவென சச்சரவானது இடம். மணியக்காரர் ஒருமுறை பலமாக சத்தமிட்டு அவர்களை அடக்கினார்.


“இப்புடி அடிச்சிக்கிறதாலதான் நம்மள சுளுவா அடக்கிவெச்சிருக்கான் கும்பினிக்காரன். ஆவுற கதையப்பாருங்கய்யா. நாளைக்கி அளவையை எப்புடி நிப்பாட்டுறதுன்னு யோசன செய்யிவோம்”
மணியம் பேச்சிலிருந்த நியாயம் எல்லோருக்கும் புரிந்தது. இப்போது ஊர் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டிய நேரமென்று உணர்ந்து அமைதியானார்கள். வடக்குமூலையிலிருந்து ஒரு குரல் வந்தது.
“நாமளும் நம்மாளுங்க சொதந்துரத்துக்கு செய்யிறாப்ள இதுக்காவ சர்க்காருக்கு எதிரா உண்ணாவிரதம்லாம் இருந்து பார்த்தா என்னா”?
சேவுப்பிள்ளை இளக்காரமாக சிரித்தார்.


” பூவம்பட்டி ஜமீனு கத மறந்துட்டீரா மாப்ள ? முன்னுக்கு சமாதானம் பேசுறாப்புள பேசிட்டு ராவொட ராவா ஊரக்கொளுத்திப்புட்டான்ல கும்பினியான்”?
“சரி வேற என்னதாஞ் செய்ய”?
” என்னா செய்ய ? நம்மூரு எல்லக்கருப்பந்தான் எதாச்சுஞ் செய்யனும். மனுசரால ஆவாதத சாமிகையிலதான ஒப்புவிக்கனும் ? நாளைக்கி அளவைக்கி வர தொரைகிட்ட அய்யரவுட்டு பேசிப்பார்ப்பம். அதுக்குமேல கருப்பன் விட்டவழி”
எல்லோருக்கும் அதுதான் வழியென்று பட்டது. மெல்ல எல்லோரும் கலைந்து அவரவர் இருப்பிடம் நோக்கி நகர்ந்தார்கள். மறுநாள் விடியலிலிருந்தே மெலிதாக மழை தூறிக்கொண்டிருந்தது. ஆள்படையுடன் கலெக்டர் ஜீப்பில் வந்தபோது மழை நின்று குளிர்ந்து ஈரமாக இருந்தது ஊர். ஜனங்களெல்லாம் கலெக்டர் இருந்த இடத்தில் குழுமினார்கள். சிவந்தமுகங்கொண்ட துரையின் மூக்கு மிளகாய்ப்பழம்போல சிவந்திருந்தது. அச்சு அச்சு என்று தும்மியபடியே இருந்தார்.


கடுமையான தடுமன் பிடித்திருக்கிறதென்று கண்டுகொண்ட சேவுப்பிள்ளை துரையின் அனுமதியுடன் ஊர் வைத்தியனிடம் மூலிகைச்சாறு எடுத்துவரச்சொல்லி கொடுக்க, இன்முகத்துடன் அதை ஒரு மிடறு விழுங்கிவைத்தான்.


கணக்கப்பிள்ளை அய்யரைவிட்டு அவரிடம் ஊர் சார்பாகப் பேசிப்பார்த்தார்கள். தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழும் ஊர் இது. வேறெங்கேனும் இடம் பார்த்துக்கொண்டால் பெரிய உதவியாக இருக்குமென்று வேண்டுகோள் வைத்தார்கள். கலெக்டரின் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. திடமான குரலில் அவன் கூறியதை மொழிபெயர்த்தார் கணக்கப்பிள்ளை.
இது பிட்டிஷ் சர்க்காரின் உத்தரவு என்றும், இதில் தன்னால் எவ்வித உதவியும் செய்ய இயலாதென்றும் சாரம். மேலும் புதுப்பாளையத்துக்கு நாலுகல் தொலைவு மலையடிவாரத்தில் இடம் கொடுப்பதாகவும் ஊரார் அங்கே சென்று பிழைத்துக்கொள்ளும்படியும் விவரித்தான். இதற்கே தான் சர்க்காரிடம் மிகவும் போராடி பிரத்தியேக அனுமதி பெற்றதாகவும் விளக்கினான்.


அவன் கூறிய கரடுமுரடான பிரதேசத்தில் பயிர்பச்சை விளைவதற்கான சாத்தியங்களே இல்லையென்று கூறியதை அவன் கேட்டுக்கொள்ளவில்லை. மேலும் ஊர்நிலத்தில் உருவாகப்போகும் பேக்டரியில் ஊர்க்காரர்களுக்கும் நிறைய வேலைகள் கிடைக்குமென்று ஆசைகாட்டினான். ஊர்மக்கள் ஒருவித உன்மத்தநிலைக்குச்சென்று வெடிக்கும் நிலையிலிருந்தார்கள். கலெக்டரை சுற்றிலும் துப்பாக்கி வைத்திருந்த தானாக்காரர்கள் தயார்நிலையிலிருக்க, ஊர்ப்பெண்கள் எல்லோரும் மாரிலடித்துக்கொண்டு அழத்தொடங்கினார்கள். இறுதியாக சேவுப்பிள்ளை துரையைப்பார்த்து வினயமாகச்சொன்னதையும் அய்யர் அவனுக்கு மொழிபெயர்த்தார்.


“ஆள்படையும் ஆயுதமும் வச்சிருக்க ஒங்களோட மல்லாட எங்களால ஆவாதுய்யா. எங்க மூத்தாரு வாழ்ந்த பூமியிது. இன்னமும் அவுக சீவன் இங்கனக்குள்ளதான் அலைஞ்சிட்டுக்கெடக்கும்னு நம்புறோம். எல்லாத்துக்கும் மேல எம்மட கருப்பனுக்கு நீங்க பதில்சொல்லியாவனும். பெரியவங்க சொல்லுக்கு கட்டுப்படுறோம்”
இது எதுவும் அவனுக்குப்புரிந்ததாகத் தோன்றவில்லை. ஆட்களைக்கூட்டிக்கொண்டு நிலம்நோக்கி நகர ஊரும் அவன் பின்னால் அணிவகுத்துச்சென்றது. முளைவிட்டிருந்த நெற்பயிர்களின் நடுவே தோல் சப்பாத்துகள் சகதியில் புரள கலெக்டர் நிலத்தில் நடந்தான். ஈரவாடை பிரதேசத்தை சூழ்ந்திருக்க, மெல்லமெல்ல வானில் வெப்பம் ஏற்த்தொடங்கியது. காற்று சுழன்றடித்தது. கருப்பன்கோவிலலில் மணியடிக்கும் சப்தம் நிற்காமல் ஒலித்தது. திடீரென்று கலெக்டர் ரத்தரத்தமாக வாந்தியெடுத்தான். தலைசுற்றி நிற்கமுடியாமல் தள்ளாடினான்.


உதவியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சேவுப்பிள்ளை யும் ஊராரும் அவனைக் கைத்தாங்கலாக கருப்பன் சந்நிதிக்கு அழைத்துச்சென்றார்கள். அவன் மரணபீதியில் கைகால்களை உதறி அரற்றத்தொடங்கினான். சேவுப்பிள்ளை பூசாரியின் காதோரம் என்னவோ சொல்ல, அவன் வேகவேகமாக உள்ளே சென்று கைப்பிடி நிறைய விபூதியும் எலுமிச்சம்பழமும் எடுத்துவந்தான். விபூதியை கலெக்டர் முகத்தில் தூவி அவன் வாயில் பழத்தைப்பிழிய, அவன் மெல்லமெல்ல சற்று நிதானத்திற்கு வந்தான். அன்று அளவை தள்ளிப்போடப்பட்டது.


அடுத்தவாரத்திலேயே கருப்பன் கோவிலில் திரண்ட ஊர்மக்கள் கிடாய் வெட்டி படையலிட்டது. பேக்டரி கட்டுவதற்காக வேறெங்கோ நிலம் பார்த்துக்கொண்டிருப்பதாக வதந்தி உலவியதுதான் காரணம். தங்கள் நிலத்தை கருப்பன் தான் காப்பாற்றித்தந்தான் என்று பூரணமாக நம்பியது ஊர். அடுத்த அறுவடைக்குப்பின் கருப்பனுக்கு ஒரு சுற்றுச்சுவர் எழுப்புவதுகுறித்து ஊர் ஒருமனதாகத் தீர்மானித்தது. சேவுப்பிள்ளையும் வைத்தியரும் ஒருமுறை தங்களுக்குள் புன்னகைத்துக்கொண்டனர்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 31, 2015 7:35 pm

உதிர்ந்த செல்வங்கள்
--------------------------
நிலாவண்ணன்
--------------------

“இங்கயே ஒக்காருங்க தாத்தா… இன்னும் கொஞ்ச நேரத்தில கல நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுவாங்க… நான் போயி தம்பி தங்கச்சிய கூட்டியாந்துடறேன்..!”
பேத்தி பரிமளா உட்காரச் சொன்ன இடத்திலேயே அண்ணாமலை கிழவன் பத்திரமாக அமர்ந்து கொண்டார். சின்ன வயதில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்த அதே தூண் ஓரம். மேடையை நோக்கி இருக்கும். வசதியாகச் சாய்ந்து கொள்ளலாம். அந்த இடத்தை பேத்தி நேற்றே பாய் போட்டு பத்திரமாகப் பிடித்திருந்தாள். அப்படி எல்லை கட்டாதிருந்தால் இந்நேரம் யாராவது ஆக்கிரமித்திருப்பார்கள். வெள்ளைக்காரன் இப்படித்தான் ஒரு சின்ன ஆட்டுத் தோல் அளவு இடம் கேட்டு வந்தவன் நாட்டையே பிடித்துக் கொண்டானாம். அண்ணாமலை சின்ன வயதில் மங்கு துடைக்கச் செல்லும் போது இந்த மாதிரியான கதையெல்லாம் காத்தவராயன் மாமா சொல்லுவார்.

அவருக்கு அப்போதே இப்படிப்பட்ட உலக மகா விவகாரங்களெல்லாம் தெரிந்திருந்தது. அவர் சொல்லும் போது வாய் பிளந்து கேட்கச் சொல்லும். கருத்து வந்த பிறகுதான் தெரிந்தது அவர் அவ்வளவும் அள்ளி விட்டிருக்கிறார் என்பது.
‘ரசிகப் பெருமக்களே… நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் ஆடலும் பாடலும் கருத்தும் கானமும் நிறைந்த பொன்னான மாலைப் பொழுது கலை நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகும். அமைதியோடு இருந்து கண்டு கேட்டு களித்து இன்புற்று செல்லுமாறு உங்களை இருகரங்கூப்பி அன்போடும் பண்போடும் தாழ்மையோடும் பணிவோடும் கேட்டுக் கொள்ளுகிறேன்!’

இப்படி பல ‘டும்’கள் போட்டு மூன்று முறை ‘மைக்’ அலறியதைக் கணக்கில் வைத்துக் கொண்டார் அண்ணாமலை. ஒலிபெருக்கியின் அறிவிப்பு கூத்து மேடையையும் விட்டு வெளியாகியதால் அக்கம் பக்கத்து எண்ணெய்ப்பனை மரங்கள் கூடக்கேட்டுக் கேட்டுக்கொண்டிருந்தன.

@@@@@@@@@@

‘நீங்கள் என்ன சொன்னாலும் என் மனம் மட்டும் சாந்தியடையாது. காதலன் உள்ள இடம்தான் ஒரு காதலிக்குச் சொர்க்கம். நான் உங்களுடந்தான் வருவேன்.’ கொஞ்சம் இடைவெளி. அந்நேரத்தில் ஒரு சின்ன முணுமுணுப்பு.
‘அன்பே… என்னை விட்டு மட்டும் போய் விடுவேன் என்று மறந்தும் சொல்லாதீர்கள். என்ன கஸ்டம் வந்தாலும் நாம் இருவரும் இணைந்தே சமாளிக்கலாம். சாவே வந்தாலும் இருவருமே துணிந்து சாவோம்…!’இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிய கிராணி துரைராசுவுக்குப் பொறுக்கவில்லை.

‘நீங்க ஒரு ஆம்பிள்ளையின்னு சொல்லிக்க எனக்கே வெக்கமாயிருக்கு… என்னை மாதிரி ஒரு பெண் பிள்ளைக்கு உள்ள துணிச்சல் கூட உங்களுக்கு இல்லாமப் போயிடுச்சி… என்ன கைவிட்டு உங்க அப்பா அம்மா பாத்த பொண்ணுக்குதான் தாலி கட்றேன்னு சொல்றீங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா பிரபு..!’
இந்த உரையாடலுக்குப் பின் ஒரு சின்ன விசும்பல். கிராணி துரைராசுவுக்கு மேலும் ஆத்திரம். அதனோடு சேர்ந்து ஒரு நக்கலான சிரிப்பும்.

“டேய்… அண்ணாமல, நெறையிலயே நாடகம் நடத்துறீங்களோ… அதான் ‘பாசா’ மரமெல்லாம் வெட்டாமப் போட்டுக் கெடக்கு… ஒவ்வொரு வெட்டுக்கும் பாலு வேற கொறஞ்சுட்டே வருது. ஐயா மரம் வெட்றத வுட்டுட்டு நாடக வசனத்த மனப் பாடம் செய்றீங்களோ?”
மரத்துக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டிருந்து திடீரென வெளிப்பட்டு பெரிய கிராணியால் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட அண்ணாமலை வெல வெலத்துப் போனான். இவ்வளவு நேரம் மனசிலிருந்த நாடக வசனங்கள் எங்கோ ஓடி ரப்பர் மரங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டன போலிருந்தது அவனுக்கு. அவன் கையில் இருந்த வசன தாள்கள் கிராணியின் கைக்குள் வந்து சிக்கிப் பல துண்டுகளாகிக் காய்ந்த ரப்பர் இலைகளுடன் சேர்ந்து கொண்டு அவனைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்துக் கொண்டிருந்தன.

இன்னைக்கு ஒத்திகை. கால் வாசி வசனம் மட்டுமே மனனம் செய்ய முடிந்திருந்தது. வரதராசன் அண்ணன் தானே சமூகக் கதை எழுதி எல்லாருக்கும் வசனங்களையும் பிரித்து தனித்தனியாக எழுதி கொடுத்திருந்தார். ‘எங்கிட்ட வேற காப்பி இல்ல… பத்திரமா வைச்சுக்குங்க… காணடிச்சுட்டீங்கன்னா என்னால புதுசா ஒன்னு எழுதித் தர முடியாது..!’ என வற்புறுத்திச் சொல்லியிருந்ததும் காதுகளில் ஒலித்தது.

அவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தார். முதலில் அந்த ‘ஸ்ரீபார்ட்’ முத்தையாவுக்குத்தான் கொடுக்கப் பட்டிருந்தது. அவனுடைய முகம் அவ்வளவு ஒத்துப் போகாததாலும் குரலும் கரடு முரடாக இருந்ததாலும் முதல் நாள் பவளக்கொடியில் பெண் வேஷம் ஏற்றிருந்த அண்ணாமலையையே மிகுந்த பொருத்தமானவன் என்று வரதராசன் அண்ணன் இவனையே தேர்ந்தெடுத்திருந்தார். இந்த விஷயத்தில் நாடக ஆசிரியர் ரெங்கசாமி வாத்தியாருக்குக்கூட கொஞ்சம் வருத்தம் ஏற்பட்டிருந்தது. இரண்டு நாளைக்கும் பெண் வேடம் கட்டினால் தன்னுடைய பவளக்கொடி புராண நாடகத்தில் சொதப்பி விடுவானோவென்று.
இன்று… துரைராசு கிராணியிடம் ராஜா குரங்கிடம் அகப்பட்ட பூமாலையாகி விட்டது சமூக நாடக வசன தாட்கள்.

2

அந்த நாடகத்திற்கு ‘கசங்கிய காகித மாலை’ என பெயர் வைத்திருந்தார் வரதராசன்.
தோட்டத் திருவிழா இன்னும் ஒரு வாரத்தில் நடை பெறப்போகிறது. முதல் தடவையாக மேடையேறப் போவதால் தலையணைக்குக் கீழே வைத்துகூட வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. அதுவும் அப்பன் குரட்டை விட்டபிறகே நாடக வசனம் ‘சிம்னி’ விளக்கு வெளிச்சத்தில் வெளியே வந்து அரை குறையாகத் தெரியும். அம்மா மட்டும், ‘அந்த ஆளுக்குத் தெறிஞ்சிடப் போவுதுடா’ என அடிக்கடி எச்சரித்துக் கொண்டிருப்பார்.
கிராதகன் கிராணி விட்ட அறை வேறு காதில் தோட்டத்து கோவில் மணியாக ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அந்த முரட்டு மனிதனால் கிழித்தெறியப் பட்டு பல துண்டுகளாகிக் காய்ந்த இலைகளோடும் சருகுகளோடும் கலந்து விட்டதைக் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் தேடிக் கண்டு பிடித்து பால் காட்டு ‘சிலுவார் சேப்பி’யில் பத்திரமாக வைத்துக் கொண்டான். அடுத்து பல அறைகளை தன் தகப்பனின் காய்ந்து முரடு கட்டிப் போயிருக்கும் கையால் வாங்கப் போவதை எண்ணிப் பார்க்கும்போது இப்போதே இரண்டு கன்னங்களும் வீங்கிப் போய் விட்டது போலிருந்தது.

தலையில் பாரம் பாறையாகச் சுமந்துவிட அண்ணாமலை மிகத் தாமதமாகவே பால் கொட்டகைக்கு வந்து சேர்ந்தான். நல்ல வேளையாக துரைராசு கிராணிக்குப் பதிலாக சின்ன கிராணி சாரங்கபாணி பால் நிறுத்துக் கொண்டிருந்தார். அவரும் அண்ணாமலையை ஒரு மாதிரியாகப் பார்த்தார். அதில், ‘ஏண்டா அந்த ஆள் கிட்ட மாட்னே’ என்பதைப் போலிருந்தது.

‘இந்த ஐயாவ பெரிய கிராணியா போட்டிருக்கலாம். தோட்டத்தில பையனுங்க சொந்தமா நாடகம் பழகி நடத்தறதுக்கு ரொம்பவும் ஒத்தாசையா இருக்காரு. துரைராசு கிராணிக்கு கம்பெனி நாடகந்தான் நடத்தனும்னு பிடிவாதம். அது பிடிக்காமதான் இன்னைக்கு வசன தாள்கள பிடுங்கி கிழிச்சு எறிஞ்சாரு..!’ இப்படி மனதில் எண்ணிக் கொண்டே பால் ஊற்றி அல்லூரில் பால் வாளியைக் கழுவி ‘ஸ்க்ரேப்’ கொண்டு கை காலிலுள்ள காய்ந்து போன ரப்பர் பால்களைத் தேய்த்துக் கழுவி வீட்டுக்கு மன உளைச்சளோடு வந்தபோது அப்பன் ஒன்றும் வாய் திறக்கவில்லை.

ஆனால், மாலை 4.00 மணி கள்ளுக் கடைக்குச் சென்று தரிசனம் முடிந்து வந்த பின் வீட்டில் நிச்சயமாக கச்சேரி ஆரம்பமாகும். அப்படிப்பட்ட சம்பவங்கள் அவன் வீடு என்ன பல தோட்டத்துக் குடும்பத் தலைவர்களின் வீடுகளில் எழுதி வைக்காத சட்டமாக இருப்பதை எண்ணி அண்ணாமலைக்கு இப்போதே மனதில் பீதியைக் கிளப்பியது. அது மட்டுமா… வரதராசன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது… குழம்பியதில் நேற்று குட்டையில் இறைத்துப் பிடித்துக் கறி ஆக்கி இரவு குடும்பத்தோடு சாப்பிட்டு மீதியைச் சூடு காட்டி வைத்திருந்திருந்த விறால் மீன் குழம்புகூடக் கசந்தது.
3

மாலை மணி 5.00. எதிர்பார்த்துக் காத்திருந்த அண்ணாமலை வீட்டு நாடகம் அரங்கேற்றம் கண்டது.
“ஏண்டி அலமேலு, எனக்குத் தெரியாம உம்மவன் திருவிலா நாடகத்துல பொம்பல வேஷங்கட்ரானாம். இந்தக் கூத்த நம்ம பெரிய ஐயா சொல்லித்தான் நாந் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு. மரத்த வெட்டி ஒலுங்கா பால் கொண்டாடான்னா மரத்துக்கு மரம் எலுதி வச்ச நாடக வசனத்த இல்ல பேசிக்கிட்டிருக்கானாம்… அதலயும் பொம்பளக் கொரல்ல வேற… நம்ம பெரிய ஐயாவே ஏதுடா பொம்பளதான் பேசுதுன்னு அசந்து போய்ட்டாராம்… நம்ம வீட்டுக்கு ஆம்பளப் புள்ளயா இருப்பான்னு நெனச்சா… இந்த பேமாணி பொம்பள ஆக்கிட் போடப் போவுதாம்… அதுவும் எனக்குத் தெரியாம…ஏங்கிட்ட கேக்காம.. அப்படின்னா இந்த வூட்ல அப்பங்கங்காரன்னு ஒருத்தன் ஏண்டி இருக்கன்..!’

சின்ன சுருதியில் ஆரம்பித்து உச்ச கட்டத்தில் தகப்பன் போட்ட கூப்பாட்டில் அந்த வீடு மட்டுமல்ல அடுத்த வீடுகளும் ‘கப்சிப்’ ஆகிப் போயின. அப்படி அவர்கள் என்ன ஏது என எட்டிப் பார்த்தால் அவர்களையும் வம்புக்கு இழுத்துச் சந்திக்குக் கொண்டு வந்து விடுவார் அந்த மனிதர். அதற்கு அஞ்சியே அண்ணாமலையின் தகப்பன் வானமே பிளந்து விட்டதைப் போல் சத்தம் போட்டாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
இப்போது…அண்ணாமலையின் தாயின் உச்சி முடி கொத்தாக அந்த ஆள் கையில் மாட்டியது. அந்த அம்மாவும் தன் பங்குக்கு, “மருவாதையா வுட்று, இல்லன்னா நடக்கறதே வேற..!” என சத்தம் போட்டார். இந்த மாதிரியான அடிதடி காண்டங்கள் அந்த வீட்டில் வாரத்தில் மூன்று நாட்களாவது நடந்துவிடும். தகப்பனுக்குப் பிள்ளைகள் யாரையாவது அடிக்க முயன்று அவர்கள் அகப்படாமல் தப்பியோடிவிட்டால் அந்த மனுஷி மாட்டிக் கொள்வார். இப்போது நேரம் பார்த்து தகப்பன் விளாசலுக்கு அஞ்சி ஓடி விட்டான் அண்ணாமலை.

நாடகத்தை மேடையேற்ற இன்னும் சில நாட்களே இருந்தன. தோட்டத்து பெரிய ஐயா, ‘இவன்கள் எப்படி நாடகம் நடத்துறான்க நானும் பாக்கறன்னு…’ மறைமுகமாகச் சபதம் போட்டிருந்தார். அது பெரிய தண்டல் பெரியப்பா மூலமாகக் கொஞ்சமாகக் கசிந்திருந்தது. அவருக்கு எப்போதும் தைப்பிங்கிலிருந்தோ புக்கித் மெர்தாஜமிலிருந்தோ நாடகக் கம்பெனி வரவேண்டும். அதுதான் ரஞ்சிப்பாக இருக்கும். ‘தோட்டத்துப் பயல்கள் அப்படி என்ன நாடகம் போட்டு நடிச்சுக் கிழிச்சுடப் போறனுங்க..’ என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதிலும் புக்கிட் மெர்தாஜம் வைத்தியநாதன், ஆறுமுகம் நாடகக் குழு என்றால் அலாதி விருப்பம். மேடைக்குக் கீழே துரை- கிராணிமார்கள் உட்காரவும் தோட்டத்துச் சனங்களை மறைக்காதிருக்கவும் பள்ளம் தோண்டப் பட்டு அங்கே சிமெண்டால் பூசி மெழுகிய ஒரு தாழ்வான மேடை இருக்கும். மேடையில் நாடகம் நடக்கும்போது துரையும் கிராணிமார்களும் ‘தண்ணி’யிலும் அன்று திருவிழாவுக்கு வெட்டப்பட்ட ஆட்டுக்கிடா தொடை இறைச்சி காரப்பிரட்டிலிலும் களித்திருப்பார்கள். போதை ஏறிவிட்டால் மேடையேறி மலாய் ‘ரோங்கின்’ ஆடும் நங்கைகளோடு உல்லாசமாகக் கூட ஆடுவார்கள்.

4
நாடக வசனங்களை இழந்து விட்ட விசனத்தோடு வசனகர்த்தா வரதராசன் முன்னாள் நின்று கொண்டிருந்தான் அண்ணாமலை. பல துண்டுக் காகிதங்களிருந்த வார்த்தைகளை அமைதியோடு கோர்த்துக் கொண்டிருந்தார் வரதராசன்.
“இதுக்குத்தாண்ணே என்னய அந்த வேஷத்துக்குப் போட்டிருந்தா இந்த மாரியெல்லாம் நடந்திருக்காதில்லே… அந்த பெரிய கிராணி ஏங்கிட்ட வாலாட்டிப் பாக்கச் சொல்லுங்க..!” கூடவேயிருந்து வீர வசனம் பேசி வத்தி வைத்துக்கொண்டிருந்தான் முத்தையா.
“கொஞ்சம் பேசாம இருடா… இவன் அப்பன்காரனுக்கு இன்னைக்கு ரெண்டு பயிண்டு கள்ளும் ஒரு போத்த சாராயமும் வாங்கி கொடுத்து சமாதானப் படுத்தி வச்சிருக்ககேன்… அந்த ஆள் எப்ப ஏறுவாரு எந்த நேரத்தில எறங்குவாருன்னு தெரியல்ல… நாடகம் முடியிற வரைக்கும் பக்கு பக்குன்னு அடிச்சுக்கிது… இன்னைக்கு தைப்பிங் கலை மகள் நாடக ஆசிரியர் ஆர்.பி.எஸ் வந்து நாம படிச்சுக் கொடுக்கிறது சரியான்னு பாக்கப் போறாரு. இந்த ஒத்திகை நல்லா நடக்கனும்னு ஆண்டவன வேண்டிக்கிறேன்… இந்த நேரத்தில என்னோட வயித்தெரிச்சல கெளப்புற…”

தோட்டத்து நாடக வசன கர்த்தா வரதராசன் போட்ட சத்தத்தில் முத்தையா அங்கிருந்து நழுவி விட அண்ணாமலை பரிதாபமாக நின்று கொண்டிருந்தான். பவளக்கொடியில் பவளக் கொடியாகவும் கசங்கிய காகித மாலையில் ரேணுகாவாகவும் நடிக்கும் தன் நடிப்பை எல்லோரும் பாராட்ட வேண்டும் என மனதுக்குள் வேண்டிக் கொண்டான்.
ஒத்திகை ஓரளவு சிறப்பாக முடிந்தது.
திருவிழாவிற்குச் சில நாட்களே எஞ்சியிருந்தன. மேடையில் நாடகப் பயிற்சி பரபரப்பாக நடந்து கொண்டிருந்த வேளை… முத்தையா மூச்சிறைக்க ஓடி வந்தான்.
“அண்ணே… அண்ணே வரதராசன் அண்ணே… எல்லாம் போச்சு… நம்ம நாடகம் அவ்வளவுதான்… உங்க கதயும் கந்தலாகிப் போச்சு… பேசாம தூக்கிப் போட்டுட்டு வேற வேலயப் பாருங்க..!”
இதைக் கேட்ட வரதராசன், நாடக வாத்தியார் ரெங்கசாமி மற்றும் பயிற்சிக்கு வந்திருந்த பையன்கள் ஒருகணம் அதிர்ச்சியடைந்து விட்டார்கள்.
“ஆமாங்க… இப்பாதாங்க தெரிய வந்துச்சி… லயத்துல ஒரே சத்தமா இருக்கு… ஒருத்தருக்கு ஒருத்தர் கசமுசான்னுபேசிக்கிறாங்க..”
‘இந்தப் பய சொல்றதப் பாத்தா… பெரிய கிராணி தன்னோட வேலயை காட்டிடாரோ… அவருக்குத் தோட்டத்து பையனுங்க சொந்தமாகப் பழகி நாடகம் போடறது புடிச்சிக்கல… நாளையிலேருந்து கூத்து மேடைக்கு போவக்கூடாதுன்னு தொரய விட்டு சொல்ல வச்சிட்டாரோ…’ இப்படி அவர் தனக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கையில்,

“நம்ம கணேசன் அதாங்க உங்க கசங்கிய காகித மாலையில கதாநாயகன் வேஷம் கொடுத்திருக்கீங்களே அவரும் முனியாண்டி தண்டல் மக ராமாயியும் இன்னைக்கு காலயில ஓடிப் போயிட்டாங்களாம்… இப்பதாம் தெரிஞ்சுச்சாம்… ரெண்டு குடும்பமும் கத்திக்கிட்டுருக்காங்க… காண்டாகம்புங்க வேற பறந்துக்கிட்டுருக்கு…”
சோதனை மேல் சோதனை ஏற்பட்டிருந்தது தோட்டத்து நாடகத்துக்கு. கணேசன் அந்த தோட்டத்து வாலிபர்களிலேயே சற்று அழகானவனாகவும் கதாநாயகர்களுக்கு ஏற்ற வாகான உடலமைப்பைக் கொண்டவனாகவும் இருந்தான். வசனங்களை மனனம் செய்து கதாநாயகனுக்கு ஏற்ற முறையில் தெளிவான உச்சரிப்புடன் பேசினான்.

கதாநாயகியாக அச்சு அசல் பெண்ணைப் போலவே இருக்கும் அண்ணாமலையுடன் அவன் நடித்தால் மேடையே அதிரும்… பலமான கைதட்டல் கிடைக்கும்… என வரதராசன் மனத்துக்குள் கணக்குப் போட்டிருந்தார். அடுத்த ஆண்டுகூட வெளியூர் நாடகத்தை எடுக்காமல் தோட்டத்துப் பையன்களின் நாடகம் நடக்க வழி ஏற்பட்டு விடுமென வாத்தியார் ரெங்கசாமியும் வரதராசனும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
‘எல்லாம் போச்சு…எல்லாம் குட்டிச்சுவராப் போச்சு…’ வரதராசன் வாய்விட்டு அரற்றினார். கசங்கிய காகித மாலை பெயருக்கு ஏற்றபடி ஆகிவிடுமோ..? இன்னும் திருவிழாவுக்குச் சில நாட்களே உள்ள நிலையில் வரதராசன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
புருவாசிலிருந்த நாடக செட்டிங்குகளும் சீன்களும் நடிகர்களுக்கு வேண்டிய அட்டைக் கத்திகளிலிருந்து மன்னர் உடைகள் வரை வந்து சேர்ந்தன.
“அண்ணே… வரதராசன் அண்ணே!”
முன்னே செய்தியைக் கொண்டு வந்த முத்தையா நாடக ஆசிரியர் முன்னே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றான்.
வரதராசன், “ இப்ப என்னடா..?” அவர் குரல் வரண்டு போய்க் கிடந்தது.
“நம்ம அண்ணாமலைக்கு அம்மை போட்டிருக்காம். அவங்க வீட்ல மாரியம்மன் தாலாட்டு படிச்சிகிட்டுருக்காங்க..!”
தோட்டத்து நாடக ஆசிரியர் உண்மையிலேயே உடைந்து போய்விட்டார்.


@@@@@@@@@@

“கல நிகழ்ச்சி முடியப் போவுது எழுந்திரு தாத்தா…”
பேத்தி பரிமளா உலுக்கியவுடன் அரக்கப் பரக்க எழுந்து கொண்ட அண்ணாமலை, மேடையைப் பார்த்தார். அந்நேரத்தில் மேடையின் ஓர் ஓரத்தில் பாட்டுப் பெட்டி இருந்தது. அதிலிருந்து சினிமா பாடல் ஒலிக்க ஒரு பெண்..? குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அதற்கு விசில் ஒலி அந்த மேடையைத் தூக்கிக் கொண்டிருந்தது.
அண்ணாமலை, பல ஆண்டுகளுக்கு முன்னேயே மகனுடன் நகர்ப்புறத்தை ஒட்டிய குடியிருப்பில் வாழச் சென்றுவிட்டு இன்றுதான் தோட்டத்திலேயே தங்கிவிட்ட மகள் வீட்டுக்கு திருவிழாவுக்கு வந்திருக்கிறார். நாடக மேடைக்கு வந்தும் பல ஆண்டுகளாகிவிட்டன. மேடையில் அவர் எதிர்பார்த்த எதுவுமே இல்லை.

காலியாகக் கிடந்த மேடையில் ஒருவர் வந்து ‘நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் பாடல், ஆடல், நகைச்சுவை… இப்போது உங்களை நாடி வரும்… ஆவலோடு காத்திருங்கள் ரசிகப் பெருமக்களே..!’ மேடையில் முன்னுக்கு வந்து அடிக்கொருதரம் அறிவிப்புச் செய்ததோடு ‘ஜோக்’ என்று சொல்லி பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் அறுவைச் சிகிச்சையும் செய்து விட்டுச் சென்றார். அவர் ஒவ்வொரு அறிவிப்புக்கும் முன்னே வந்து முகத்தைக் காட்டியதால் இவர்தான் இந்த நாடகத்தில் முக்கிய ‘ஆக்கிட்’காரர் என அண்ணாமலை தனக்குள் தீர்மானம் போட்டுக் கொண்டு, ‘பபூன்’ எப்போது வருவார் என ஆவலோடு காத்திருக்க ‘இப்போதெல்லாம் அந்த பபூன்கள் தான் இப்படி மாறி விட்டார்களோ…’ எனவும் எண்ணத் தோன்றியது அண்ணாமலைக்கு.

பாடல்களுக்கு ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, ஜால்ரா, கஞ்சிரா இந்த வகையறாக்கள் இல்லாமல் அவற்றிற்கு வேண்டிய ஒலிகளெல்லாம் ஒரு பெட்டியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அண்ணாமலைக்கு அது பெரிய வியப்பாக இருந்தது. ‘காலம் ரொம்பத்தான் மாறித்தான் போயிடுச்சி’ அவர் மனத்துக்குள் ஓடியது.
“ஏம்மா பரிமளா, பவளக்கொடி, அல்லி அர்ஜுனா, பாரிஜாதம், மயான காண்டம், அவளேதான் இவள், தூக்கு மேட, கசங்கிய காகித மால…இதெல்லாம் நடத்துவாங்கதான…”

இப்படி அப்பாவியாகக் கேட்ட தாத்தா அண்ணாமலை கிழவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள் பேத்தி பரிமளா.
“நீங்க சொல்றது என்னான்னே எனக்குப் புரியலே தாத்தா… இப்பல்லாம் கல நிகழ்ச்சியும் படமும்தான்… நாளைக்கி திடல்ல சந்திரமுகி படம் காட்டுவாங்க.. காலலையிலயே நல்ல எடமா பாத்துப் புடிச்சிடணும்..! கல நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருந்துச்சி இல்ல தாத்தா..!” என பேத்தி சொல்ல,
இப்போது…! அண்ணாமலை தாத்தாவுக்கு ஏதோ ஓர் அரிய பொக்கிஷம் காணாமல் போனது போலிருந்தது.
பேத்தி பரிமளாவும் மற்றைய இளசுகளும் கலை நிகழ்ச்சியைக்கண்ட பூரிப்போடு நாளைய சினிமா படத்திற்காக இன்றே மகிழ்ச்சியில் ஆழ்ந்து போயிருந்தார்கள்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 31, 2015 7:39 pm

ஒத்தப்பனை
---------------
நவநீ
----------------
என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா.

ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், கொள்ளுப்பேரன். அதிகாலையில் நான் கண் விழிக்கும் முன்னரே வயல் காட்டில் கண் விழிக்கும் அவர், நான் பள்ளியிலிருந்து வந்ததும் வராததுமாய் என்னைக் கட்டியணைத்து, சிவக்கச் சிவக்க வெற்றிலை நிரம்பிய வாயால் என்னை முத்தமிட்டு… “அய்யாடி வாங்க, எங்கப்பென் வாங்க… என்னெப்பெத்தவுக வாங்க…” என்று கொஞ்சிய கையோடு, கட்டி வைத்திருந்த குழி பணியாரங்களை ஒன்று விடாமல் ஊட்டி விடுவார். ஒரு வழியாகப் பணியாரங்கள் முடிந்ததும், என் வீட்டு மைலைப்பசுவின் மடியிலிருக்கும் அசல் பால் இறக்குமதி செய்யப்பட்டு, மிச்ச மீதியுள்ள என் வயிற்றின் காலியிடத்தை ‘காப்பி’யாய் கச்சிதம் செய்யும். பிறகு, இருபுறமும் கால் போட வைத்து, என்னைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு, “அந்தப் பனமரத்துல யாகுமுத்து இருக்கானான்னு பாருய்யா” என்பார் என் தாத்தா. “ஆமா தாத்தா, இப்பத்தான் மரத்துல ஏறிகிட்டு இருக்காரு”… இது நான்.

இருவரும்…. இல்லை, இல்லை அவர்மட்டும் அந்த மரத்தை நோக்கி நடக்க ஆரம்பிப்பார். நான் பாதை பார்த்து முள், மேடு, பள்ளம் என வழி சொல்லுவேன் அவர் தோளில் இருந்தபடி. அவருக்குச் சற்று தூரப்பார்வை குறைவாதலால் என்னை தினந்தோறும் அந்த மரத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஒரு வழியாக மரத்தடி வந்து சேரவும், யாகுமுத்து என்ற அந்த ‘கள்’ இறக்கும் கணவான் மரத்திலிருந்து இறங்கவும் சரியாக இருக்கும். பொங்கும் நுரையோடு ததும்பத் ததும்ப பனங்கள்ளை சுரைக்குடுக்கையில் (முற்றி, காயவைத்து, காம்பு வெட்டப்பட்ட சுரைக்காய் குடுக்கை) நிரப்பி, இடுப்பிற்குப் பின்புறம் அது தொங்கும் அழகு, அப்பப்பா… நானும், என் தாத்தாவும் இன்னும் சில என் தாத்தாவின் சிநேகிதர்களும் மரத்தடியில் காத்திருப்போம்.

உடனே, பக்கத்தில் உள்ள பனங்குட்டிகளில் உள்ள பனை ஓலைகளை வெட்டி, சிறு சிறு பட்டைகள் செய்து, கள்ளில் தற்கொலை செய்துகொண்ட தேனீக்களை அகற்றிவிட்டு, அந்த சோமபானமானத்தை பட்டைகளில் ஊற்றி ஒவ்வொருவரும் உரிந்து குடிக்கும் சத்தமும், அந்த வாசமும், பாசமும், பறிமாறலும் என் எண்ணம் விட்டு நீங்காது இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. ‘யாரிடமும் சொல்லக்கூடாது’ என்ற என் தாத்தாவின் சத்தியப் பிரமாணத்தோடு, நானும் பலமுறை பனங்கள்ளைச் சுவைத்திருக்கிறேன். ஆனாலும், குடிக்கும்போது என் உடம்பு சிலிர்க்கும். திடீரென்று ஒரு வாசனை… சுட்ட உப்புக்கண்டமும், கருவாடும் கட்டி வைத்திருந்த இடுப்பை விட்டு விடுதலை செய்யப்பட்டு கள் பட்டைக்கருகே காத்திருக்கும். பனங்கள், சுட்ட கருவாடு, உப்புக்கண்டம்….. சொர்க்கம்… சுரைக்குடுக்கை சுத்தமாகும்….. இவை இனி எப்போதாவது கிடைக்குமா? நானும் ஒவ்வொரு முறை என் கிராமத்துக்குச் செல்லும்போதெல்லாம், என் தாத்தா, அவரின் சினேகிதங்கள், அமர்ந்து கள் பருகிய அந்த இடத்தையும், இன்றும், கம்பீரமாய்க் காட்சியளிக்கும் அந்த ‘ஒத்தப்பனை’யையும், பட்டை பிடிக்க ஓலைகள் வெட்டிய அந்தப் பனங்குட்டிகள், இன்று ஓங்கி வளர்ந்து கிட்டத்தட்ட அந்த ஒத்தப்பனைக்கு இணையாக நிற்பதையும் தவறாமல் பார்த்துவிட்டு, பெருமூச்சோடு வீடு திரும்புவேன்.

அந்தப் பனைமரத்தை பலமுறை நான் கட்டியணைத்து கண்ணீர் விட்டிருக்கிறேன். ஓங்கி வீசும் காற்றில் அந்தப் பனைமரம் என்னை கட்டியணைத்துக்கொண்டு, அசைந்து அசைந்து எனக்குள் ஏதோ சொல்லும். என் தாத்தா இன்று என்னோடு இல்லாவிட்டாலும், இன்னும் கம்பீரமாய் அங்கு நின்று பள்ளியிலிருந்து வரும் என்னைக் கட்டியணைத்துத் தழுவுவதாய்த்தான் இன்றும் உணர்கிறேன்.
– நவநீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 31, 2015 7:42 pm

வலி
----------------
இரா.ச.மகேஸ்வரி
----------------

“எல்லாவற்றையும் கடந்து போகத்தானே வேண்டும்?” என்று செல்வி தன் மகள் மலரிடம் கூறினார்.
மலர் “இல்லை அம்மா, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது.நீயும் என்னுடன் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் போகவே மாட்டேன்” என்று தன் தாயிடம் அடம் பிடித்தாள்.
செல்வி,” நான் வராமல் இருப்பேனா? கண்டிப்பாக வருகிறேன். உன் கணவர் உன்னுடன் கூட இருக்க சம்மதித்து விட்டாரா?”, என்றார்.

மலர்,”அவர் என்னை விட மிகவும் பயப்படுகிறார். ரத்தம் என்றால் அவருக்கு பயமாம் அம்மா. எதற்கும் மருத்துவரிடம் கேட்கலாம் என்கிறார்”, என்றார்.
செல்வி,” சரியாய் போச்சு போ. ஆண் மகன் பயப்படலாமா? நான் அவரிடம் பேசுகிறேன்” , என்றார்.
மலர்,”ரொம்ப வலிக்கும் இல்லையா?”, என்று பயத்துடன் கேட்டாள்.

“வலிக்காமல் எந்த காரியம் தான் நடக்கும். வலிக்கத்தான் செய்யும். பெண் பிள்ளைக்கு தைரியம் வேண்டாமா? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படிமா? அது அது அந்த அந்த வயதில் நடந்து விட்டால் தான் நல்லது. நாட்களை கடத்தினால் இன்னும் கோளாறு தான். எனக்கு நடக்க வில்லையா? என் அம்மாவிற்கு நடக்க வில்லையா? நீ வேண்டுமானால் பார்,உன் முகமே பிரகாசமாகிவிடும்.” என்று கூறி தொலைபேசியை அணைத்தார்.
தன் செல்ல மகள் செல்வியுடன் தான் இந்த வாக்குவாதம்.

கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. தம்பனீசில் கணவருடன் வசிக்கிறாள்.
“பாருங்க உங்க பெண்ணை !!! கல்யாணமான பெண் மாதிரியா பேசுகிறாள். இன்னும் சின்ன குழந்தை என்கிற நினைப்பு. அவளுக்கே இன்னும் சிறிது நாளில் குழந்தை பிறந்து விடும். இப்படி பயப்படுகிறாள்” என்று செல்வி தன் கணவரிடம் முறையிட்டார். அவர் குரலில் கொஞ்சம் பெருமிதமும் நிறைய பாசமும் இருந்தது.

அந்த நாளும் வந்தது.
செல்வி மகளையும் மருமகனையும் பார்த்தாள். கண்களில் கொஞ்சம் பயம் தெரிந்தது. உள்ளே செல்லும் முன் மலர் தன் அம்மாவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அங்கே இருந்த பெண்மணி,”நாங்க பார்த்துப்போம். தைரியமா வாங்க,” என்று மலரையும் அவள் கணவரையும் அழைத்துச் சென்றார். செல்வி வெளியிலேயே நின்றுக் கொண்டார். அதுவரை இருந்த தைரியம் மறைந்தது. மலர் வலியால் அலறுவது காதில் கேட்டது. தானாக கண்களில் நீர் வழிந்தது.

சிறிது நேரத்தில் மலரும், அவள் கணவரும் செரங்கூன் சாலையில் உள்ள “மூக்குத்தி கார்னர்” கடையில் இருந்து வெளியே வந்தார்கள். மலர் தன் அம்மாவைப் பார்த்து சிரித்தாள். மலர் முகத்தில் அப்பொழுது குத்திய மூக்குத்தியும் சேர்ந்து சிரிப்பது போல் செல்விக்கு தோன்றியது.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:27 am

கடலோடி கழுகு
---------------------------
சூர்யா
--------------
கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி.

அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் என அழைப்பர்.கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது ஒவ்வொரு மீன் பிடி பயணத்தின் போதும். ஆனாலும் அவன் பின்வாங்கியதில்லை. தினமும் கடல்க்கு மீன் பிடிக்க செல்வது அவன் பழக்கம் . மீன்களுக்கு அவன் வலைகளுக்கு மாட்டால் தப்பிச்செல்வது பழக்கம்.வருமானம் பெரிதாக இல்லை ஆனால் அவன் தன் தொழிலை விட்டதில்லை.

கோடைக்கால மீன்பிடிதடைகால அறிவிப்பு.அதற்கு முன் நடந்த கதை அதிகம் .இந்தியாவின் கால்களில் தொங்கிகொண்டிருப்பது போன்று உலக வரைபடத்தில் இருக்கும் தேசம் இலங்கை.அங்கு தமிழர்களுக்கு எதிரான இனவெறியும், இந்திய பெருங்கடலே என் அப்பன்வீட்டு சொத்து என எண்ணும் சிங்கள இனத்தவர் மிகுதியாய் ஆக்கிரமித்திருந்த தேசம்.அதுபோல தான் மகாஇந்திய சாம்ராஜ்யத்தின் கடல் எல்லையை மதிக்காமல் எல்லைதாண்டி வந்து இந்திய தேசத்தின் பிரஜையை சுட்டுக்கொன்றும்,கைது செய்தும் அறிவிக்கப்படாத யுத்தத்தை தொடர்ந்து வரும் தேசம் அது.இது நிலை ராமேஸ்வரத்திலும் இருந்தது.தமிழக அரசியல் நிலையோ ஏதோ ஐ.நா சபை மாதிரி தீர்மானங்களும் காரசார விவாதங்களும்,தத்தம் ஆதாயங்களுக்காக இந்த பிரச்சினையை பயன்படுத்தி கொண்டன.

தினசரி ஏதாவது ஒரு செய்தியாவது மீனவர் கைது பற்றி இருந்தே ஆகும்.மீன்பிடி தடைக்காலம் மட்டும் யாரும் கடலுக்கு செல்லாமல் இருப்பதால் கைது இருக்காது. மற்றபடி மீன்பிடி தடைக்காலம் நீக்கப்பட்டதும் சிங்கள கடற்படையினருக்கும் கைது செய்ய போடப்பட்ட தடைக்காலம் நீக்கப்பட்டதாக அர்த்தம்.
மைக்கேல் செய்தி தாள் படிப்பதுண்டு.அங்கு சாலையோர டீக்கடைகளில் உள்ள

பிரான்சிஸ்,டேவிட்,மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் ஆகியோர் தான் அவரது தோழர்களும் பட்டிமன்ற பேச்சாளர்கள். பிரான்சிஸ் ஒரு கடலோர பொதுவுடமை காரன்.சற்று உலக அரசியல் பற்றி அறிந்தவன்.டேவிட் ஒரு முற்றிலும் துறந்த ஞானி போல பேசுவர்.ஒரு தத்துவ ஞானி.போதைக்காரர்.கண்ணதாசன் பாடல்களை சதா கேட்டுக்கொண்டுஇருப்பார்.மிலிட்டிரிகாரர் அல்போன்ஸ் போர்வீரர். நாட்டுக்காக பாக்கிஸ்தானிக்கு எதிராக போரில் போரிட்டு ஈடுபட்டு ஒய்வு பெற்றவர்.கொஞ்சம் இல்லை நிறையவே முரடர்.எப்போதும் வேலையில்லாத ஒய்வு நேரங்களில் மேரி டீஸ்டாலில் ஒரு பட்டிமன்றத்தையும் இங்கிருந்து கொண்டே காசில்லாமல் இலவசமாக ஐ.நா சபைக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள்.

மைக்கேலுக்கு ஒரு விரோதி உண்டு அவள் பெயர் ஆச்சரியமாக இருக்கிறதா அவள் பெயர் மகதலினா. ஏனெனில் ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்க தெரியாதவன் மைக்கேல். மேலும் அவன் ஒரு அழகன்.சிறுவயதில் இருந்தே மைக்கேல் மீது மகதலினாவுக்கு ஒரு கண்.அதாவது ஒரு அழகிய கிராமத்து காதல்.கண்ணால் பேசிவிடுவாள் அவள் ஆனால் அவன் பேசி கண்ணைமூடிவிடுவான்.கேட்டால் காதல் என்பால் அவள்.அவனோ ஒன்னும் இல்லை தூரப்போ என்பான்.காதலின் ஏமாற்றம் பகையாய் மாறுவதில் சந்தேகம் இல்லை.அது போலத்தான் மகதலினா வாழ்க்கையும்.அவள் வெறுப்பு பகைமையை அவன் அடுத்த இளம் பெண்களிடம் பேசும் போது

வெளிப்படுத்தினாள்.ஆனால் இறைவன் என்பவன் விசித்திரமான ஒரு விலங்கு என்பதை நிருபிக்க அங்கு காலம் ஒரு கணக்கு போட்டது.மகதலினா ஒரு கடலோர அழகி. அழகிய கண்கள்.அவள் கண்சிமிட்டல் மின்னல்கள் வெட்டுவதைபோலவும்,அவள் உதடுகள் ஒரு தேன்சிந்தும் வளைகுடா போல அழகாக பார்ப்பவரை சுண்டியிழுத்துவிடும் அழகு.இடையோ வளைந்த வில் போல பார்ப்பவர்களின் மீது அம்பை ஏய்து கொண்டே செல்லும். அவள் நடை ஒரு அழகு.அவள் உடை இத்தனை அழகையும் புதையலை மூடுவது போல இருக்கும். இப்படி வர்ணிக்கும்படியான அழகு தேவதை.யாருக்கு தான் காதல் வராது அவள் மீது.ஆனால் மைக்கேலுக்கு இதில் விருப்பம் இல்லை.மகதலினாவுக்கு அவன் மீது விருப்பம் உண்டு.

பிரான்சிஸ் ஒர் இளைஞன் . பொதுவுடமைக்காரன்.உலகம் அறிந்தவன்.அவனுக்கும் காதலில் விருப்பம் உண்டு.ஒரு வேளை பிரான்சிஸ்ன் வைரமுத்து காதல் கவிதைகளை படிக்கும் ஆர்வத்தால் காதலில் விருப்பம் வந்திருக்கலாம்.பிரான்சிஸ் மகதலினாவை ஒருதலையாக காதலித்து வந்தான்.ஏனெனில் ஒரு தலைஉள்ள அனைவருக்கும் வருமல்லவா இந்த ஒரு தலைக்காதல்.பொறாமை வளர்ந்தது நண்பர்களான மைக்கேல் மற்றும் பிரான்சிஸ் இடையே.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே சும்மாவா சொன்னாங்க.ஒரு நாள் டீக்கடையில் காரசார விவாதம் காதல் திருமணங்களால் வன்முறை ஏற்படுகிறது ஏன் என்பது. இதில் வாக்குவாதம் முற்றி வழக்கு போல மைக்கேல் பெண்களை இழிவுபடுத்தி பேச,அதாவது மகதலினாவை பற்றி தவறாக பேச கைகலப்பானது.இது மகதலினாவுக்கு தெரிய வர அவள் மனவருத்தத்தில் மைக்கேலை மறப்பதாக நடித்தாள்.உயிர்நண்பர்கள் பகைவர்களாக மிலிட்டரிகாரர் அல்போன்ஸ் சமாதானபடுத்த முயற்சி செய்து தோல்வியில் முடிவு பெற பகைமை தொடர்ந்தது.

இருவரும் வெவ்வேறு பாதைகளை தேர்ந்தெடுக்க மைக்கேல் பிரான்சிஸின் கொள்கையை எதிர்ப்பதென முடிவெடுத்தான்.ஏனெனில் பிரான்சிஸ் ஒரு பொதுவுடமை வாதி.அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக அவனுக்கு எதிராக இருக்க முதலாளித்துவ வாதியாக மாறினான்.அந்த ஊரில் ஒரு சிறு பனிப்போரே நடத்தினர்.இதில் மகதலினா,அல்போன்ஸ் நடுநிலைமை வகித்தனர்.எப்போதுமே பொதுவுடமைவாதியிடம் வேகம்,மூர்க்ககுணம் அதிகமாக இருக்கும்.அன்று மீன்பிடி தடைகால இறுதி நாள்.மைக்கேல்க்கு அங்கு இருந்த அகதிகள் முகாமில் இருந்த சில அமெரிக்க நண்பர்களின் நட்பு கிடைத்தது.அவர்கள் இந்தியாவை வேவுபார்க்கவந்த சி.ஐ.ஏ உளவாளிகள்.அவர்கள் தமிழகத்தில் அதாவது இலங்கைக்கு அருகாமை பகுதியில் பொதுவுடமைவாதத்தை வீழ்த்த வந்தவர்கள்.அவர்கள் மைக்கேலின் பொதுவுடமை வெறுப்பை பயன்படுத்தி தங்கள் வேலையை செய்ய முடிவு செய்தனர்.ஆனால் அதே நேரம் பிரான்சிஸ் தமிழகத்தில் உள்ள பொதுவுடமை இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தான்.ஆனால் அவன் தன் மீன்பிடித்தொழிலை விடவில்லை.இரு கொலைமுயற்சி அவனுக்கு எதிராக.ஆனால் அவன் அதில் இருந்து மீண்டிருந்தான்.

அமெரிக்க உளவுத்துறை பிரான்சிஸ்ஐ கொலைசெய்ய முடிவு செய்திருந்தது.அதற்கு மைக்கேலை பகடைக்காயாக பயன்படுத்த திட்டம் தீட்டிருந்தது.மைக்கேலுக்கு சி.ஐ.ஏ உறுப்பினர் அட்டை வழங்கி அவனுக்கு பணம் அளித்தது.மீன் பிடி தடை காலம் முடிவடைந்தது.காலையில் கதிரவன் மீனவர்களை வரவேற்றான் கடலுக்கு வரும்படி.மைக்கேலுக்கு மீன்பிடிக்கும் ஆசையில்லை ஆனால் கடலுக்கு செல்ல ஆயத்தமானான் பிரான்சிஸ்ஸை வீழ்த்தி பொதுவுடமை வேரை அறுக்க. ஆனால் பிரான்சிஸ்ஸோ கண்முழுவதும் மீன்களை பற்றிய கனவு.இருவரும் கடலுக்கு புறப்பட்டனர்.ஆனால் மகதலினாவுக்கு புரிந்து போனது மைக்கேல் மாறிவிட்டான்.காதல் அழிக்க இயலாததது.அவள் மனதில் இருந்தது அவனை நீக்க இயலவில்லை என.இருவரும் கடலுக்கு சென்றனர் நவீன படகேறி. நடுகடலில் சி.ஐ.ஏ. திட்டப்படி பிரான்சிஸ்ஸை கொல்ல முயன்ற வேளையில்,அங்கு தடைகாலம் நீங்கியதால் சிங்கள ராணுவம் எல்லோரையும் கைது செய்யதது.அவர்களை செய்த சோதனையில் மைக்கேல் ஒரு உளவாளி என கண்டறிந்தனர்.இலங்கையில் மெல்ல சீனா தன் ஆதிக்கத்தை நுழைதந்துகொண்டிருந்த நேரம் இந்த உளவு விவகாரம் சீன-இந்திய-அமெரிக்க உறவில் ஒரு நிழல்பாதிப்பை நுழைத்தது.அன்றில் இருந்து மைக்கேல் உலகம் அறியும் உளவாளியாகவும்,தேச துரோகியாகவும் அறியப்பட்டான்.மைக்கேலை தவிர அனைவரையும் இலங்கையில் இருந்த மீட்டது.மைக்கேல் தன் சிறைவாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் தொடர்வதாகவேண்டியாயிற்று.

எங்கோ இருந்து வந்த இளைஞன் உலகம் பேசும் உளவாளிகள் வரிசையில் இடம்பெற்றான்.தன் முன்னாள் காதலனை எண்ணி மகதலினா,கடலோரம் பறக்கும் கழுகுகளை பார்த்து கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள்.அந்த கடலோரம் எங்கும் பொதுவுடமை கொடி மைக்கேலின் வீழ்சியில் ஆர்பரித்து கடலோர கழுகளை பார்த்து சுடர் விட்டு பறந்து கொண்டிருந்தது மகதலினாவின் கண்ணீருடன்.

நன்றி ;திண்னை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:35 am

விலை போகும் நம்பிக்கை
-----------------
வே.ம.அருச்சுணன்
-------------------------

அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின்இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கிஅவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது.

மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல்அலையாய் மனதில் அலைமோதியது.இன்னும் அரை நாள் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளதுஎன்று கவலை நெற்றிப் பொட்டில் தெரித்துக் கொண்டிருந்த வலி விலைவாசி போலஏறிக்கொண்டிருந்தது. உற்சாகத்தை தொலைத்தவராய்த் தளர்ந்த நடையோடுதோழியுடன் உணவு விடுதிக்குச் செல்கிறார் அருளினி.

“இருபது வயசில இந்த கம்பனியில நீங்க வேலைக்குச் சேர்ந்திங்க அக்கா….”“ஆமா….வள்ளி. இந்தக் கம்பெனியில நாற்பது வருசமா வேலைசெஞ்சிட்டேன்.பள்ளிப் படிப்பு முடிஞ்சக் கையோட குமரியா வேலையில சேர்ந்த
நான்,இன்றைக்கு அறுபது வயசு ஆன கிழவியா இந்தக் கம்பெனியே விட்டுவீட்டுக்குப் போகப்போறேன்” மனதுக்குள் மலையாய்க் கூடு கட்டியிருந்தகவலைகள் எல்லாம் ஒரு நொடியில் பறந்தது போல் வாய்விட்டு சிரிக்கிறார்அருளினி.

அருளினியுடன் மதிய உணவருந்தி கொண்டிருந்த வள்ளி அருளினி நகைச்சுவையுடன்பேசுவதைக் கேட்டு கடகட வென்று சிரிக்கிறாள்.அந்த தொழிற்சாலை உணவகத்தில்பல வருடங்களாக அவர்கள் இருவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணும்வழக்கத்தைக் கொண்டவர்கள்.அவர்கள் இருவருக்குமிடையில் ஐந்து வயது
வித்தியாசம். வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் அருளினியைத் தம் உடன் பிறந்தஅக்காவாக எண்ணிப் பழகி வருபவள் வள்ளி.

“அக்கா….நாளையிலிருந்து அதிகாலையிலேயே படுக்கையைவிட்டு நீங்கஅரக்கப்பரக்க எழ வேண்டிய அவசியமில்ல. ஆறவமர அமைதியா எழலாம். உங்களுக்குரொம்ப விருப்பமான நாசிலெமாவை ருசிச்சி…ருசிச்சிச் சாப்பிடலாம்…..!”“அட….நீ போ வள்ளி…..! என்ன இருந்தாலும்…..நாளு பேரோட இப்படி ஒன்னா
உட்கார்ந்து கலகலப்பா பேசிச் சிரிச்சு, விதவிதமான உணவுகள ஒவ்வொரு நாளும்சாப்பிடுறது மகிழ்ச்சி இருக்கே…. அந்த மகிழ்ச்சி வீட்டுலத் தன்னந்தனியாசாப்பிடும் போது கிடைக்குமா?” கவலையுடன் கூறுகிறார் அருளினி.“ம்….நீங்க சொல்றது உண்மைதான்…….!அதற்காக அறுபது வயச தாண்டியும்இதே கம்பெனியிலே நீங்க வேலை செய்யலாமுனு சொல்ல வர்ரிங்களா….?” எதையும்மறைத்துப் பேசும் வழக்கம் இல்லாத வள்ளி தம் மனதில் பட்டதைப் பட்டனக்கூறுகிறாள்.

“இது நாள் வரையிலும் மாடா உழைச்சுத் துரும்பா போனது போதுமுனுநினைக்கிறேன் வள்ளி…..! கடவுள் புண்ணியத்தால, உடல் ஆரோக்கியத்தோடஇதுநாள் வரையிலும் எந்தப் பிரச்சனையுமில்லாம வேலை செஞ்சது போதும்….!இருக்கிற நல்ல பேரோட சோறு போட்ட கம்பெனியவிட்டுப் போயிடுறதுதான்நல்லதுன்னு நினைக்கிறேன் வள்ளி!” உணர்ச்சியுடன் அருளினி கூறுவதைஅமைதியுடன் கேட்கிறாள் வள்ளி.

“உங்க நினைப்பு சரியானது.அக்கா….நான் கேட்கிறேனு என்னை தப்பாநினைக்காதிங்க” தயங்கினாள் வள்ளி.

“இதுதானே வேண்டாங்கிறது.உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதாவள்ளி…..?அக்கா தவறா நினைக்க மாட்டேன்…..! நீ….கேட்க நினைக்கிறதத்தாராளமா கேளு…..! வள்ளி நாம இரண்டு பேரும் ஒரு வயிற்றுலப்பிறக்கலன்னாலும் நாம இரண்டு பேரும் உடன் பிறக்காத அக்கா தங்கச்சிங்கதான்”“அப்படிச் சொல்லுங்க அக்கா…..இப்பதான் என் மனசே நிறைஞ்சிருக்கு.எனக்குக் கூடப்பிறந்த அக்கா இல்லாதக் குறையத் தீர்த்து வைக்க வந்தபுண்ணியவதியாச்சே நீங்க. அக்கா….உங்க பணி ஓய்வுக்குப் பிறகு ….நீங்கயாரோடத் தங்கப்போறீங்க….?”

“என்ன வள்ளி நீ தெரியாமத்தான் கேட்கிறியா….? நான் ஆசையோடு வளர்த்துவர்ர அக்காள் மகள் சீதனாவோடுதான் தங்கப் போறேன்!” மகிழ்ச்சியோடுகூறுகிறார் அருளினி.

இருபது ஆண்டுகளுக்கு முன்,அக்காளும் அவர் கணவரும் மோட்டார் விபத்தில்காலமான பிறகு,அனாதையாகிப்போன சீதனாவை வளர்க்கும் பொறுப்பினை அருளினிஏற்றுக் கொண்டார்.சீதனாவுக்கு அப்போது ஐந்து வயது இருக்கும்.இந்தஉலகத்துல அவருக்கிருந்த ஒரு இரத்த உறவு அக்காதான்.அவரும் விபத்துல
இறந்த போது அருளினி நொறுங்கிப் போனார். வாழ்வு இருண்டு போனதாக எண்ணினார்.தனது அக்காளுக்குச் செய்யும் கைமாறாக எண்ணி அன்று முதல் சீதனாவைப்பாசத்தைக் கொட்டி வளர்க்கத் தொடங்கினார். சீதனாதான் அருளினிக்குஉலகமாகிவிட்டது. தனது திருமணத்தைக்கூட அவர் நினைத்துப் பார்க்காமல்
கண்ணும் கருத்துமாக சீதனாவை வளர்ப்பதிலேயே காலத்தைக் கரையவிட்ட மகராசி
அருளினி அக்கானு வள்ளிதான் பெருமையாகப் பேசுவாள்.

சீதனா பல்கலைக்கழத்துலப் பட்டம் பெற்ற காட்சியை அவளது பெற்றோர்கள்பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையேனு என்ற கவலையினால் அருளினிதுயரமடைந்தார். எந்தக் குறையுமில்லாமல்,கல்விக்கான செலவுகளையெல்லாம் தானேஏற்றுக்கொண்டு,சீதனாவுக்கு எந்த கல்விக்கடன்களையும் வைக்காமல்
பட்டதாரியாக உயர்த்திக்காட்டியதில் மகிழ்ச்சி அடைந்தார்.தற்போது தனியார்நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறாள்; கைநிறைய வருமானம்.“அக்கா….உங்க நல்ல மனசுக்கு….எந்த குறையுமில்லாம கடவுள் நல்லபடியாவைச்சிருப்பாரு. நீங்க நினைச்ச மாதிரி சீதனாவோடு சந்தோசமா
இருங்கக்கா.கடைசி காலம் வரை அன்போடு வளர்த்த சீதனா உங்களக் கண் கலங்காமக்
காப்பாற்றுவா….!” வள்ளி உணர்சியுடன் கூறுகிறாள்.

“நான் வணங்கும் ஆத்தா, உன்னோட உருவத்துல நேர்ல வந்து சொன்ன அருள் வாக்குபோல இருக்கு….! உன்னோட வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் வள்ளி!” அருள்வந்தவர் போல் ஒரு கணம் சிலையாகிப் போகிறார் அருளினி.மறுகணம் வள்ளியின்நெற்றியில் முத்தமிடுகிறார்.

ஒன்றாய் அமர்ந்து இருவரும் மதிய உணவு உண்ணும் இறுதி நாள் அதுவென்றுஇருவர் மனதிலும் உதித்திருக்க வேண்டும்.இருவர் முகத்திலும் ஒருவிதஇறுக்கம் பளிச்சிடவே செய்தது. எனினும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல்இருவரும் அமைதியுடன் உணவருந்தி கொண்டிருக்கின்றனர்.அணையை உடைத்துக்
கொண்டு பாயவிருக்கும் நீரைப்போல் இருவர் விழியோரங்களிலும் கண்ணீர்
ததும்பி நிற்கிறது.அப்போது,கண்டினில் ஒலிபெருக்கி ஒலிக்கிறது.அங்கு உணவருந்தி கொண்டிருந்த
அனைவரும் இடம் பெறப்போகும் அறிவிப்பைக் கவனமுடன்
கேட்கின்றனர்.அந்நிறுவனத்தின் நிர்வாகி டத்தோ செல்வாதான் ஆங்கிலத்திலும்
தமிழிலும் பேசினார்.

“இன்று, வேலையிலிருந்து ஓய்வு பெறும் அருளினி அவர்கள், இந்த தொழிற்சாலைதொடங்கிய போது வேலையில் சேர்ந்தவர்.அவர் கடந்த நாற்பது வருடங்களாகநேர்மையாகப் பணியாற்றிய அவருக்கு நிர்வாகம் பாராட்டும் நன்றியும்தெரிவித்துக் கொள்கிறது. அதே வேளை அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டும்வகையில் அவருக்கு நினைவு பரிசும் பத்தாயிரம் ரிங்கிட்டு சன்மானமும்வழங்கப்படுகிறது” இந்த அறிவிப்பைக் கேட்டு உணவருந்தி கொண்டிருந்த பலர்உணர்ச்சி பொங்க அருளினிக்குப் பாராட்டுத்தெரிவிக்கின்றனர்.

“அக்கா….கம்பெனியே உங்க சேவைக்கு அங்கிகாரம் கொடுத்திருக்கு.உங்களுக்கு என் வாழ்த்துகள்” அருளினியைக் கட்டிப்பிடித்துக் கன்னத்தில்முத்தமிடுகிறாள் வள்ளி.அருளினியைச்சுற்றி சிறு கூட்டமே கூடிவிடுகிறது.இந்நிகழ்வை அருளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பலரது வாழ்த்துகள்திடுதிப்புனு வந்து சேர்ந்ததில் அவர் திக்குமுக்காடிப் போகிறார்.நிர்வாகம் தம்மை பெருமைப் படுத்தியது கண்டு அருளினி ஆனந்தக் கண்ணீர்வடிக்கிறார்.பின்னர் விசும்பத்தொடங்குகிறார்.

“அக்கா….ஏன் அழுவிரீங்க….?” வள்ளி ஆறுதல் படுத்துகிறாள்.“ஒரு பெரிய குடும்பத்தை விட்டுப் பிரிந்து,நாளை முதல் வீட்டில இருக்கவேண்டுமே என்று நினைக்கும் போதே கவலையா இருக்கு வள்ளி….”அருளினிக்குத்
துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்கிறது. கண்களில் கட்டி நின்ற கண்ணீரைச்சிரமத்தோடு அடக்கிக் கொள்கிறார்.

“அக்கா….நீங்க நினைச்சா கொமூட்டர்ல ஏறி அரை மணி நேரத்தில கம்பெனியிலஎங்கள வந்துப் பார்க்கலாம்.நினைச்ச மாத்திரத்துல கைபேசியில எங்களோடுபேசலாம்,வாட்சாப்பு மூலமா எங்களுக்கு விபரம் சொல்லலாம்.எதுக்கு வீணாமனசப்போட்டு குழப்பிக்கிறீங்க…..நான் இருக்கேன் தினமும் உங்களோட
பேசரேன்,கண்ணீரைத் தொடைங்க கவலைய விடுங்க….வாழ்க்கை மகிழ்ச்சியாவாழத்தான்…” குட்டிதன்னம்பிக்கை உரையை ஆற்றி முடிக்கிறாள் வள்ளி.அவளது உரையைக்கேட்டு அருளினி அக்கா முகம் மலர்ந்தது வள்ளிக்குப்பெருமையாகைப் போகிறது.

மாலையில் வேலை முடிந்ததற்கான சைரன் ஒலி வேகமாகஒலிக்கிறது.நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தத்தம் இல்லம் நோக்கி மிகுந்தஆவலுடன் புறப்படுகின்றனர்.ஆனால்,அருளினி மட்டும் தளர்ந்த நடையுடன் நடந்து
செல்கிறார்.கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தம் சொந்த நிறுவனமாய் நினைத்துஇனிதாய்ப் பணிபுரிந்த நிறுவனத்தைவிட்டு இன்றுடன் விடை பெற்றுச் செல்வதைஎண்ணும் போது அவரையும் அறியாமல் மனம் சஞ்சலம் அடைகிறது.இதுநாள் வரையிலும் தாம் பணியாற்றிய தொழிற்சாலையில் நாளை முதல் அதன்
வாசலில் கூட கால் வைக்க முடியாது என்ற எண்ணம் மனதில் துளிர்த்த போதுகவலையின் வாட்டம் முகத்தில் வட்டமிடுகிறது.அந்த நிறுவனத்துக்கும்தனக்குமுள்ள உறவு இன்று முதல் முற்றாய் அறுபடுவதை எண்ணிப்
பார்க்கிறார்.தாம் நேசித்த வேலையகத்தை விட்டுப் பிரிவது அவருக்குப்பெரும் துயரமாக இருந்தது. அவரையும் மீறி கண்களில் கண்ணீர்.

மனச்சுமையோடு வீடு செல்ல அருளினி சாலையைக் கடக்கிறார். அவரோடு பலரும்சாலையைக் கடக்கின்றனர்.எல்லாரும் சாலையை விரைவாக கடக்கும்வேளையில்,அருளனி மட்டும் சாலையை மெதுவாக கடக்கிறார்.“ஓய்….வீட்டுல சொல்லிட்டு வந்தாச்சா……?” மோட்டோரில் வேகமாக வந்தஇளைஞன் ஒருவன் அருளினியை நோக்கிக் காட்டுக் கத்தாகக் கத்திவிட்டுப்பறக்கிறான் முகமூடி அணிந்த அந்த இளைஞன்.

“நீங்க வாங்கக்கா…..அவன் கிடக்கிறான் அராத்தல் பிடிச்சவன்….. மெதுவாபோனாதான் என்ன? இவனெல்லாம் உருபடியா வீடு போய் சேரமாட்டானுங்க….!”கோபத்தில் வாய்க்கு வந்தபடி கரித்துக் கொட்டினால் வள்ளி. அதர்ச்சியில்அருளியின் உடம்பே ஆடிப்போய்விடுகிறது.அதர்ச்சியில் அவர் உடல்
நடுங்குகிறது.அருளினியை அணைத்தபடி பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கஉதவுகிறாள் வள்ளி.

பத்து நிமிட நடைக்குப் பின் கொமூட்டர் இரயில் பயணம் வழக்கம் போல்தொடங்குகிறது.“அக்கா…வாங்க இங்க உட்காருங்க….”வள்ளி வழக்கம் போல்இடம் பிடித்துக் கொடுக்கிறாள்.இருவரும் வசதியாக அமர்ந்து கொள்கின்றனர்.கொமூட்டர் வசதி வந்த பிறகு அருளினிக்கு வேலைக்கு வந்து போகும் போக்கு
வரத்து சிரமமில்லாமல் போய்விட்டது.பஸ்சில் பயணிக்கும் போதெல்லாம் பட்டசிரமங்கள் சொல்லிமாளாது.நெரிசலில் கால் கடுக்க நின்று கொண்டு பயணம்செய்திருக்கிறார்.இன்று குளுகுளு அறையில் நவீனமான இருக்கைகளில் அமர்ந்துபயணம் செய்வது நிம்மதியைத் தந்தது.அரை மணி நேர பயணம் என்றாலும்
அலுப்பில்லா நிம்மதியான பயணத்தை அனுபவிக்கும் போதெல்லாம் அரசாங்கம்
மக்களுக்காக ஏற்படுத்தித் தந்ததுள்ள வசதிகளுக்காக மனதுக்குள் நன்றி
சொல்ல அருளினி ஒருநாளும் தவறுவதில்லை.

வள்ளி தனது இருப்பிடம் வந்ததும் இறங்கிக் கொள்கிறாள்.அருளினி அடுத்த சில
நிமிட துரித பயணத்துக்குப் பின் இறங்கிக் கொள்கிறார். தனது பயத்தைத்
தொடங்கும் முன்பே பயணம் செய்த கொமூட்டர் சில வினாடிக்குள் அங்கிருந்து
புறப்பட்டுவிடுகிறது. அங்கு ஒரே அமைதி நிலவுகிறது. சில நிமிடங்களில்
பயணிகள் அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.
அருளினி தம் வீட்டை நோக்கி நடக்கிறார்.ஐந்து நிமிட நேரத்தில் அருளினி
வீட்டை அடைந்துவிடுவார்.வீட்டை அடைவதற்குள் அருளியின் உள்ளத்தில் பல்வேறு
சிந்தனை மலர்கள் பூக்கின்றன.தம்மை வரவேற்க சீதனா வாசலில் விழி வைத்துக்
காத்துக் கொண்டிருப்பாள்.அவள் இருக்கும் வரையில் தமக்கு என்ன கவலை.
தமக்குக் கிடைத்த பரிசுகளை அவளிடம் கொடுத்தாள் மிகவும் மகிழ்வாள்.
சிந்தனை முடிவதற்குள் வீட்டை அடைகிறார்.அவர் கண்கள் வாசலை நோக்கிப்
பாய்கிறது.தாம் ஆவலோடு எதிர்பார்த்த சீதனா அங்கு இல்லாதது கண்டு
வியப்படைகிறார்.உள்ளே ஏதும் வேலையாக இருப்பாள்.தம்மை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு வாசலை அடைகிறார்.வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. வேலை முடிந்து
இன்னும் வீடு வரவில்லையோ? இது நாள் வரையிலும் ஒரு நாள் கூட அவள் தாமதமாக
வீடு திரும்பியதில்லையே? இன்று அவளுக்கு என்ன ஆச்சு? அவருக்கு ஒரே
குழப்பமாக இருந்தது.

பூட்டைத்திறந்து வீட்டிற்குள் செல்கிறார்.தனது வாசிப்பிற்காக வரவேற்பு
அறையில் போடப்பட்டிருந்த சிறிய மேசை மீது வெள்ளைத் தாள் ஒன்று
வைக்கப்பட்டிருந்தது.அருளினி அதை எடுத்து பதற்றமுடன் வாசிக்கிறார்.
“சித்தி…. நான் விரும்பியவரோடு வாழ்வதற்காக வெளிநாடு
செல்கிறேன்…..இனி என்னைத் தேடவேண்டாம், கூட் பை ! ”
முற்றும்

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:41 am

தாண்டுதல்
--------------
சுப்ரபாரதிமணியன்
---------------
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க”
“என்ன கதையா”
“சின்னக் கதையா“
“குட்டிக் கதையா“
“குட்டிகளைப் பத்தின கதையல்ல……..சொல்லட்டுமா”
“சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது”

“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் மல்லி……”“மல்லிகையா மல்லிகைக்கு அவ்வளவு முக்கியத்துவமா”
“மல்லிகா”
“உம்”
“மல்லிகாவைப் படச்சிருக்கார்”
“என்ன ஐஸ் வெக்கரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா”

வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது மல்லிகாவிற்கு வீரக்குமாரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கம்பளிப் பூச்சியாய் அவன் மீசை உட்கார்ந்திருந்தது. இடது கன்னத்து மச்சம் பளபளத்துக் கொண்டிருந்தது, கண் புருவத்திலிருந்து ஒரு மயிர் நீண்டதாய் தொங்கியது. அவன் மெல்ல அதை இழுக்க சாய்ந்தான் வீரக்குமார் “அய்யே வலிக்குது”
“பேர்லதா வீரக்குமார். இந்த மயிரை இழுத்ததுக்கே அய்யோவா?”

“என் வீரத்தை எங்க காட்டனும்கறே மல்லிகா”

“காம்பவுண்ட் சுவரை எட்டிக் குதிக்கறதிலதா காமிக்கிறீங்க.. போதும். செரியா.”

வீரக்குமாரின் வீட்டிலிருந்து நூறடியில் புகைவண்டி நிலைய காம்பவுண்ட் சுவர் ஆரம்பிக்கும். அது புகைவண்டி இருப்புப் பாதையை ஒட்டி ஒரு கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும். புகைவண்டி நிலையத்திற்கு போக வேண்டுமென்றால் காம்பவுண்ட் சுவரையொட்டி ஒரு கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும். பல வருடங்களாய் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு போகிறவன். காலை நேரத்தில் அவசர கதியில் கிளம்புகிறவனுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிய தடையாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் வலது பக்கத்தில் ஒரு வேப்பமரம் அதன் வேர்கள் காம்பவுண்ட் சுவரை ஊடுருவிக் கொண்டு நின்றிருந்தது. அதன் கிளையொன்றைப் பிடித்து காம்பவுண்ட் சுவற்றின் மேல் ஏறி உட்கார்வான். பின் எம்பிக் குதிப்பான். வேப்பமரம் பெருத்துக் கொண்டே போனபோது அதை வெட்டிவிட்டார்கள். அதன் அடிப்பாகம் மட்டும் தலையை மண்ணுள் புதைந்திருக்கிற மனிதனைப் போல நின்றிருந்தது. வேப்ப மரத்தை வெட்ட விட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான்.

அதனடியில் சிறிய கல்லை நட்டு இரண்டு நாள் குங்குமம் தெளித்திருந்தால் சிறு தெய்வம் ஆகியிருக்கும். வாரம் இரண்டு முழப் பூவை உதிர்த்துவிட்டுப் போனால் நிரந்தரமாகியிருக்கும். முனியப்பனோ அங்காளம்மாளோ ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். வேப்பமரமும் நிரந்தரமாயிருக்கும். நழுவவிட்டு விட்டோமே என்றிருந்தது வீரக்குமாருக்கு.

காலை புகைவண்டி நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றிப் போவது அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. வேப்பமரத்தின் அடிப்பகுதியில் கால்களை வைத்து எம்பியபோது சட்டென காம்பவுண்ட் சுவரின் மேல் அவன் உடம்பு, உட்கார்ந்து கொண்டது ஒருமுறை. அது எதேச்சையாக நடந்தது போலிருந்தது. அதற்குப் பின் அப்படி எம்பி காம்பவுண்ட் சுவரின் மேல் உட்கார முடியவில்லை.

திருப்பூருக்குப் பேருந்தில் கிளம்பிப் போவதென்பது பெரிய அவஸ்தையாக இருந்தது அவனுக்கு. வஞ்சிபாளையம், மங்கலம், கருவம்பாளையம் கடந்து பேருந்தில் தடக்தடக்கென்று உடம்பை இம்சைப் படுத்திக் கொண்டு போவதில் அலுப்பிருந்தது. பேருந்து நெரிசல் வேறு மூச்சு திணற வைத்தது. திருப்பூரின் குப்பையும், சாயக் கழிவும், அசுத்தமும் இன்னமும் மூச்சடைக்க வைக்கும் பனியன் கம்பெனியில் பேட்லாக் ஸ்டூலில் உட்கார்ந்தால்தான் ஆசுவாசம் பிறக்கும் அவனுக்கு.

அவனின் அம்மா கல்யாணப் பேச்சை எடுக்கிற போதெல்லாம் எரிச்சலடைவான். “ஏண்டா எரிச்சல் படறே. வார்ரவ ஒரு டி.வி.எஸ்ஸோ, பைக்கோ வாங்கிட்டு வரமாட்டாளா”
“வர்ரவகிட்ட எதுக்குக் கேட்டுட்டு. நானே சம்பாதிச்சு வாங்கிக்கிறேன்”
“சம்பாதிக்கிற வரைக்கும் என்ன பண்ணப் போறே”

இரட்டைச் சக்கர வாகனம் வாங்குவதை விட காம்பவுண்ட் சுவரைக் கடப்பதுதான் அவனின் அப்போதைய லட்சியமாயிருந்தது. பள்ளியில் விளையாட்டில் அக்கறையில்லாதவன் ஓட்டப் பந்தயமோ, உயரந்தாண்டுதலோ மனசில் இருந்திருந்தால் காம்பவுண்ட் சுவரைக் கடப்பது சுலபம். பேட்லாக் மிஷின் முன்னால் உட்கார்ந்து பனியன் தைக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் பனியன் கம்பெனி இளம் பெண்கள் அவனை இம்சித்ததை விட காம்பவுண்ட் சுவர்தான் இம்சித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் வீட்டிலிருந்து சற்றே வேகமாகக் கிளம்பியவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட் சுவரின் வலது பக்க மூலையிலிருந்து கால்களை எம்பி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிவிட்டான். அவனுக்கு மலைப்பாக இருந்தது. எப்படித் தாண்டினோம் என்று ஆச்சரியப்பட்டபடியே பனியன் கம்பெனிக்குப் புகைவண்டி பிடித்துப் போனான். பிறகு தினந்தோறும் உடற்பயிற்சி போல வேகமெடுப்பதும், ஓடுவதும், காம்பவுண்ட் சுவரை அந்த வேகத்திலேயெ கடப்பதும் சாதாரணமாகிவிட்டது. தாண்டுவது வெகுவாக இருக்கட்டும் என்று “பவர் ஷு” ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.கொஞ்சம் வயிறு கனமில்லாமல் இருந்தால் சுலபமாயிற்று.

பனியன் கம்பெனி வேலைக்கு காலையில் கிளம்பும்போது அம்மா வருவதைத் தவிர்ப்பான். “என்னடா வர்ரேன்னு சொன்னாக்கூட விறுவிறுன்னு போயிர்ரே”
“டிரெயினைப் பிடிக்க வேண்டாமாம்மா”
“வேற யாரையாச்சும் பாக்கணுமா, சைகை காட்டணுமா, பேசணுமா”
“நீதா ஆள் பிடிச்சுத் தரணும்”
“ச்சீ..பேச்சைப் பாரு”

அவன் அம்மாவும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தாள். புகைவண்டி நிலையத்திலிருந்து அடுத்த வீதியில் அவளை ஏற்றிச் செல்ல மில்லின் ஒரு சிறப்புப் பேருந்து வரும்.
“எப்படிம்மா உன்னை அந்த பஸ்ல ஏத்திக்கிறாங்க”

“ஏண்டா”
“சின்ன வயதில் பொண்ணுகளை சுமங்கலித் திட்டமுன்னு சொல்லி ஏத்திட்டுப் போறாங்க. அஞ்சு வருசம் வேலை செய், உங்க கல்யாணத்துக்கு முப்பதாயிரம் தர்ரமுன்னு கூட்டிட்டுப் போறாங்க, நீயும் அந்த மில்லுல வேலை செய்யற… உனக்கும் முப்பதாயிரம் கெடைக்குமா”
“சும்மா இருடா…. அது சுமங்கலிகளுக்கு”

அம்மாவை துன்புறுத்தி விட்டோமோ என்றிருக்கும் அவனுக்கு ஏதோ பேசுவதாக நினைத்துக் கொண்டு, அம்மாவை துன்புறுத்தி விடுவதாகத் தோன்றும். அப்பா மட்டும் இருந்திருந்தால், ” சுமங்கலி “ பேருந்தில் அவள் வேலைக்குப் போகும் அவசியம் இருந்திருக்காது.
ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்து வந்த அம்மா அவன் காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் புகைவண்டி இருப்புப் பாதைக்குப் போவதைப் பார்த்தாள். அதிர்ந்து போய்விட்டவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அன்று மாலை உடம்பு சுகமில்லையென்று சீக்கிரமே மில்லிலிருந்து வந்துவிட்டாள். இப்படி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கிற வீரகுமாரை எந்த சிரமமும் இல்லாமல் முழுசாய் பார்க்க முடியுமா என்ற பயத்தினாலேயே வீட்டிற்கு வந்துவிட்டாள்.

“என்னடா எத்தனை நாளா இந்தப் பழக்கம்”
“என்னமா………. என்ன கண்டுபிடிச்சிட்டியா………எந்த பிரண்டும் இல்லம்மா, கேர்ல்ஸ் கூட”
“அதெல்லா இல்லடா….. காம்பவுண்ட் சுவற்றை எட்டிக் குதிச்சு தாண்டிப் போறது”
“ரொம்ப நாளா நடக்குதம்மா”
“எப்படிடா”

“பழகிருச்சும்மா…..பயப்படாத”
“ஐய்யோ….பாத்தப்போ திக்குன்னு இருந்துச்சு. விசுக்குன்னு தாண்டிப் போயிட்டே இருந்தே”
“பழகிட்டம்மா”
“இதுக்காகவே உனக்கு ஒரு வண்டி வாங்கிக் குடுத்துரணும்”
“நீங்க காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டிப் போனதை நானும் இரண்டு மூணுதரம் பார்த்த ஞாபகம். என்னவோ பொண்ணுகளக் கவர் பண்றதுக்குக் குதிக்கிறீங்கன்னு நெனச்சேன். கொரங்கு தாவிப் போனது மாதிரி இருந்திச்சு”
“அப்பவே கொரங்குன்னு முடிவு பண்ணிட்டியா”

“இப்பவுந்தா……நாலு வீதித் தள்ளித்தானே, அப்புறம் என்னைப் பொண்ண பாக்க வந்தப்போ காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குரங்கென்ன நாலு வீதி தள்ளி வந்திருக்கன்னு நெனச்சேன். சிரிப்பா இருந்துச்சு அப்படி வெரசலா காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் போகாட்டி என்ன.. போயி ரயில்வே ஷ்டேசன் கூட்டத்தில் கலந்துர்ணுமா”
“உன்னைக் கூட மொதல் மொதலா விநோதமான எடத்திலதா பாத்தேன். பெரியாஸ்பத்திரியில”
“ஆமாமா”

“பெரியாஸ்பத்திரியில மார்ச்சுவரி ரூமுக்கு முன்னால உட்கார்ந்திருந்தீங்க, என்னமோ ரொம்பவும் பழகினமாதிரி என்ன இங்க உட்கார்ந்துன்னு சட்டுன்னு கேட்டுட்டேன்”
“ஆமா நானும் சட்டுனு திரும்பிப் பாத்தா, பிணவறைன்னு போர்டு தொங்குது. பயமாப் போச்சு. பெரியாஸ்பத்திரியில கூட்டம். ஒரே க்யூ மயம். எங்காச்சும் நெழல்லே உக்காரணும்னு ஒதுங்கினேன். நீங்க சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது. அது மார்ச்சுவரி கட்டிடம்னு”
“என்ன உங்களுக்கு மார்ச்சுவரி கட்டடம்னா பயமா”

“ரொம்ப பயம். அந்தக் கூட்டத்தைக் கண்டாவே ஓடி ஒளிஞ்சுக்குவேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு தரம், சந்தைக் கூட்டத்தில் ஒரு தரம்ன்னு தொலைஞ்சு போயிட்டேன். ஒரு தரம் திருப்பூர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவுல எங்கப்பாவை விட்டுட்டு யாரோ ஆம்பளை ஒருத்தர் கையைப் புடுச்சுட்டு நடந்துட்டிருக்கேன். தெரிஞ்சதும் பகீர்ன்னு பயம் வந்தது. வீர்ன்னு அலறிட்டேன். ரயில்வே ஸ்டேசன்ல காலையில பனியன் கம்பெனிக்குப் போற கூட்டத்தைப் பாத்த பயமா இருக்கும். நீங்க எப்படித்தா அந்தக் கூட்டத்தில் போறீங்களோ”

“உங்கக் கல்யாணத்துக்குக் கூட்டம் வருமே…. அதப் பாத்துட்டு ஒளிஞ்சிருவீங்களோ, மாப்பிள்ளைக் கோலத்தில் என்ன உக்கார வெச்சிட்டுத் தவிக்க வுட்டுறாதீங்க.. காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டறதில் ஒரு திரில். திருப்பூருக்குப் போற டிரென் கூட்டத்தில் நசுங்கறது ஒரு திரில், அப்புறம் திருப்பூர் போயி குப்பையில, ஜனங்க நெரிசல்ல நடமாடறதும் திரில்தா….”

இலவச அரசாங்க வண்ணத் தொலைக்காட்சி இருட்டாய் சும்மா பார்துக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி கண்ணாடியில் மல்லிகா உருவம் வந்து வந்து போனது. குளித்து முடித்து தலையை லகுவாக்கிக் கட்டியிருந்தாள். தலைமயிரிலிருந்து நீர் சொட்டி பின் ஜாக்கெட்டை நனைத்திருந்தது.
“என்ன உடுமலைக்காரியை வெச்சுட்டு அரட்டை……..”
“ஒண்ணுமில்ல…. திலகவதிகிட்டே சட்டுன்னு மனசுல வந்ததைச் சொல்லிட்டு இருந்தேன்”
“திலகவதிக்கென்ன திருமூர்த்திமலை தண்ணியும், உடுமலை குளுகுளுமாக நெலச்சு நிக்கறவளாச்சே, கௌம்பு. திலகதி…. ஞாயிற்றுக்கிழமை வேலை எவ்வளவோ கெடக்குது. இவருக்கென்ன அசடு வழிய எதாச்சும் சொல்லிட்டிருப்பாரு….” திலகவதி முன்புறம் போட்டிருந்த சடையை லாவகமாக பின்புறம் தள்ளி விட்டபடி பவித்ராவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுக் கிளம்பினாள். பவித்ரா வலி தாங்காது போல் வலியால் உஸ்ஸென்றாள். “கொழந்தையைக் கிள்ளறது உனக்குக் கெட்ட பழக்கம். எத்தனை தரம் சொல்றது….” திலகவதி முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு பவித்ராவிற்குக் கையசைத்துக் கிளம்பினாள்.

“திலகவதிகிட்ட என்ன சொல்லிக்கிட்டிருந்தீங்க……”
“உங்கிட்ட சொல்ல வேண்டாமுன்னுதா”
“சின்னதா கவிதை மாதிரி ஒரு ஸ்பார்க் மனசில வந்தது. அதுதா.“
“என்ன”
“மூத்திரப் புரையைப் பெண்கள் கடக்கும் போது அதன் நாற்றம் உணர்வதில்லை நான். இதில் மூத்திரப் புரைன்னா என்னன்னு திலகவதி கேட்டிருந்தா,…..”
“பெரிய கவிதைதா……. எங்கிருந்து புடுச்சீங்க”
“டைரியைப் புரட்டினான். நான் எழுதுனது இருந்துச்சு”
“அவளுக்கு புரிஞ்சுதாமா”
“அதுக்குள்ளதா நீ வந்துட்டியே, செரி உனக்கொண்ணு”

“கதையல்லா வேண்டா. சின்னதா துணுக்கு மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க. இட்லிக்கு மாவு கலக்கிட்டு இருக்கேன். கதை எல்லாம் வேண்டாம். இப்பதா கதையெல்லாம் அரை நிமிசக் கதை, கால்பக்கக் கதைன்னு ஆயிப்போச்சு. துணுக்கா சொல்லுங்க. நேத்திக்கு தொட்டிச் செடி ஒன்னு காமிச்சான். அது வளர்வதற்கு நிழல் தேவையாமா? இருட்டிலே ராத்திரியிலே ஒளி வீசும்னு சொன்னான். அதுக்கு பேர் கேட்டேன். நீங்களே ஒன்னு வெச்சுக்கோங்கன்னான். நான் மல்லி…..”

“மல்லிகா” என்றால் மழலைக் குரலில் பவித்ரா. “போதும் போதும் ஐஸ் வெச்சது போதும். தலைக்குக் குளிச்சதே ஜிவ்வுன்னு இருக்கு. இதுல நீங்க வேற ஐஸ் வெச்சுட்டு, உங்களுக்குக் காலையிலே இட்லிக்கு தக்காளி குறுமாவும் மத்தியானம் சாப்பாட்டிற்கு நெத்திலி மீன் கொழம்பும் வெச்சுத் தரேன். ஐஸ் வெக்கத்தேவையில்ல. நெத்திலி மீனுக்கு பையை எடுத்துட்டுக் கிளம்புங்க.”

“மீன் மார்க்கெட்டுக்குப் போகணும்னா அலுப்பா இருக்கு. ரயில்வே ஸ்டேசனை கடந்துதான் போகணும். ரயில்வே காம்பவுண்டு சுவத்தைத் தாண்டு போறது கிண்டலா சவாலா எப்படி வேணுமின்னாலும் வெச்சுக்கங்க. கல்யாணத்திற்கு முந்தி பனியன் கம்பெனிக்குப் போக டெய்லி காம்பவுண்டு சுவத்தைத் தாண்டித்தானே போயிட்டிருந்தீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நீதானே காம்பவுண்ட்டை தாண்டறதெல்லாம் வேண்டா. எதுக்கு ரிஸ்க்குன்னு தடா போட்டே. மீறவே முடியல. எனக்கு எதுக்குச் சிரமம். தாண்டரதுல பேலன்சு தப்பி விழுந்து கைகால் முறிஞ்சிறுமுன்னு பயம். அடி மனசுல வந்துருச்சு. பிரசவத்துக்கு நீ போயிருந்தப்போ, காம்பவுண்டு சுவத்தை தாண்டிடனும்னு நெனப்பேன். தாண்டரதில உள்ளுர பயம்தான்.”
“இன்னிக்கு முயற்சி பண்றது”

“கொழந்தையை வச்சிட்டு சீண்டிப் பாக்கறயா”
“தாண்டப்பா” என்றாள் பவித்ரா.
“வேண்டாம்மா கைகால் முறிஞ்சு நான் கெடந்தா நீ அழுவியே. அதப்பாத்து எனக்கும் அழுகை வந்திரும்”
மீன் வாங்கப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், வாசலில் வந்து நின்று புகைவண்டிப் பாதை காம்பவுண்டு சுவரைப் பார்த்தான். அது நீளமாகி ரொம்ப உயரத்திற்கு வளர்ந்து விட்டது போலிருந்தது.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:45 am

குப்பி
-------------
பத்மநாபபுரம் அரவிந்தன்
----------------
அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே அக்காவுக்கு லேசாக நோவு எடுத்ததால், அவளை தக்கலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். நானும் அத்தானும், அம்மாவும் உடன் இருந்தோம்.

அதிகாலை அக்காவுக்கு சுகபிரசவத்தில் குழந்தை பிறந்தது. தாய்மாமனாகிவிட்ட சந்தோஷம் மனமெங்கும் நிறைந்தது. குழந்தையையும், அக்காவையும் அறைக்கு கொண்டு வந்ததும், நான் குழந்தையை அருகில் சென்று பார்த்தேன். அழகாக இருந்தது.

அம்மா என்னிடம், வீட்டுக்குப் போய் குளித்து விட்டு சில பொருட்களை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு திரும்பி வரச் சொன்னாள்.

நான் என் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி, வீட்டுக்கு வந்து பின்பக்கத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது முன்பக்க வாசலில் என் நண்பர்கள் முஜீப் மற்றும் அஜீத் அழைப்பது கேட்டது. நான் அவர்களை பின் பக்கம் வருமாறு குளியலறையில் இருந்து கத்தினேன்.
அவர்கள் வந்தனர். நான் குளியலறையுள் குளித்தபடியே விஷயத்தை சொன்னதும், குழந்தையும், அக்காவும் எப்படி இருக்கிறார்களென்று கேட்டனர்.

பெண் குழந்தையென்றதும்.. முஜீப், “நீ குடுத்துவச்சவம்டே… பொம்பளப்பிள்ளதான் அழகு.. அன்பா இருக்கும்… சொல் பேச்சி கேக்கும். ஆம்பளபயக்கோ.. இன்னாபாரு.. இந்த அஜியப் போல… ஒருவக சொன்னா கேக்கமாட்டான்..,” என்றான்.

உடனே அஜீத் அவனை நோக்கி, “ஆமடே.. யோக்கியரு வாறாரு.. சொம்ப எடுத்து உள்ள வைண்ணு சொல்லுகதுமாரியாக்கும் இருக்கு.. நீ சொல்லுகது,” என்றான்.
“மக்கா.. லேய் நீ அப்பொ… தாய்மாமனாயிட்டே.. இண்ணைக்கு ராத்திரி பார்ட்டி வைக்கணும் கேட்டியா,” என்றான் முஜீப் என்னை நோக்கி…

“இண்ணைக்கு அல்லற, சில்லற பார்ட்டி இல்ல… அடிப்பொளி பார்ட்டியா இருக்கணும் கேட்டியா..,” என்றான் அஜீத்.
சரிடே.. கலக்கிருவோம்… இப்போ எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியிருக்கு.. நம்மோ மத்யானம் பாக்கலாம் என்றேன்.

நான் குளித்து முடித்து, உடைகள் மாற்றி, அம்மா எடுத்து வர சொன்ன எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

“டேய்.. ஏமாத்திரக்கூடாது… சாயங்காலம் சரக்கு வந்திருக்கணும்.. இல்லண்ணா.. தொலச்சேப் போடுவோம்..” என்றான் முஜீப்.

நான் சரியென்பதாய் தலையாட்டியபடி என் வண்டியை எடுத்தேன்.
‘இவர்களுக்கு எப்படி பார்ட்டி கொடுக்க?… கையில் காசு வேறு மிகக்குறைவாய் இருந்தது,’ யோசித்தபடியே மருத்துவமனைக்கு சென்றேன்.

நாங்கள் மூவரும் ஒன்றாம் வகுப்பு முதலே ஒன்றாகப் படித்தவர்கள். ஒவ்வொருவரின் சந்தோஷம் மற்றும் துக்கத்தில் பரஸ்பரம் பங்கேற்பவர்கள்.
கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அம்மாவிடம் கொடுத்து விட்டு குழந்தையைப் பார்த்தேன்.
அக்காவின் அருகில் கை கால்களை லேசாக அசைத்தபடி, கண்கள் மூடியிருக்க.. பால் குடிக்கும் ஞாபகத்தில் வாயை குவித்து சுருக்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்க்க எனக்கு ஒரு பஞ்சுப்பொதியின் ஞாபகம் வந்தது.

அம்மா என்னிடம், “நீ போய் எனக்கு மத்யான சாப்பாடு மட்டும் வாங்கிட்டுவா.. அத்தானையும் கூட்டிட்டு வீட்டுக்குப் போய்ரு.. போற வழியில சாப்பிட்டுப் போங்கோ.. நான் இண்ணைக்கு இங்க இருக்கேன்..,” என்றாள்.
நானும் அத்தானும் வீட்டுக்கு வந்தோம். நேற்று இரவு முழுவதும் விழித்திருந்ததால் எங்கள் இருவருக்கும் நல்ல தூக்கம் கறக்கியது.

நான் என் வீட்டின் வெளி வராந்தாவில் இருக்கும் என் அறைக்குள் வந்து டேப்ரெக்கார்டரில் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் பாடலைப் போட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். எங்கும் அப்படத்தின் பாடல்கள் மிகப் பிரபலமாகி ஒலித்துக் கொண்டிருந்த நேரமது.

என் வீட்டு வேப்பமரத்தடியில் படுத்திருந்த பகவதியப்பனின் நாய் குரைத்தது. அந்த நாய் பெரும்பாலான நேரங்களிலும் இங்கே தான் கிடக்கும். பகவதியப்பன் எங்களுடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாய் படித்தவன். பத்தாம் வகுப்பு தோல்விக்குப் பிறகு அவன் ஏதோ கார் பணிமனையில் வேலை பார்க்கிறான். முஜீப்பும், அஜீத்தும் வெளிக் கதவினைத் திறந்து படிகளில் ஏறி வருவது தெரிந்தது. அதுவரை மறந்திருந்த, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பார்ட்டி நினைவு வந்தது. இருவரையும் என் அறையுள் உட்கார வைத்து விட்டு, அரைகுறை தூக்கத்திலிருந்த அத்தானிடம் சென்றேன்.
“அத்தான் என்.. ஃபிரண்ட்ஸ்களுக்கு பார்ட்டி குடுக்கணும்,” என்றேன்.
அவர் எதுவும் கேட்காமல் எழுந்து, தன் பர்ஸினை எடுத்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தார்.
“இவ்வளவு வேண்டாம்,” என்றேன்.
“பரவாயில்ல.. மருமக பொறந்திருக்காள்ளா.. எஞ்சாய்..,” என்றார்.
எனக்கு ஒரே ஆச்சரியம்.. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் எனக்கு அது ஒரு பெரிய தொகை. வணிகக் கப்பல் கேப்டனான அவருக்கு அது ஒன்றுமில்லை என்பது எனக்குத் தெரியும்.
சந்தோஷத்தோடு வந்தேன்.

டேப்ரெக்கார்டரில், “காலத்தழுவி நிக்கும் கனகமணி கொலுசு.. யம்மா.. நானாக மாற இப்பொ நெனைக்கிதம்மா மனசு..,” வரிகள் ஓடிக் கொண்டிருந்தது. அஜீத்தும், முஜீப்பும் தாளம் போட்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை காட்டியதும், “டேய், நெறய இருக்கே.. அப்போ இண்ணைக்கு கரகாட்டந்தாங்,” என்றான் அஜீத்.
நாங்கள் திட்டம் போட்டோம்.

“அத்தான் ஒறங்குகாரு.. எனக்கும் நல்ல ஒறக்கம் வருகு.. அதனால நானும் ஒறங்கிற்று, சாயங்காலம் அவர நான் ஆஸ்பத்திரில விட்டுட்டு வாறேன்.. பொறவு.. நம்மோ போய் குப்பி, புரோட்டா, சிக்கன், சிகரெட்டு எல்லாம் வாங்கிற்று.. இங்கயே வந்துருவோம்.. இங்க ஒரு பிரச்சனையும் இல்ல.. அடிச்சி பொளிப்போம்டே..,” என்றேன்.
“லேய்.. ஒனக்க அப்பா வந்திரமாட்டாருல்லா… வந்தாரு.. நம்ம எல்லாருக்க தோலையும் உரிச்சி உப்பு தேச்சிப் போடுவாரு…மக்கா,” என்றான் அஜீத்.
“அவரு.. நாளைக்கு சாயங்காலம் தான் புதுக்கோட்டேலேருந்து பொறப்புடுவேரு… மத்த நாளு காலேல தாண்டே வருவாரு..,” என்றேன் நான்.
எங்கள் திட்டப்படி எல்லாம் நடந்தது. மாலையில் அத்தானை மருத்துவமனையில் விட்டு விட்டு நான் வீட்டுக்கு வந்தேன்.
இரவு எட்டு மணிக்கு தக்கலை வந்தோம். வண்டியை ஓரமாய் நிறுத்தி, நான் என் மோட்டார் சைக்கிளின் பெட்டியில் இருந்து ஒரு துணிப்பையை எடுத்து அஜீத்திடம் கொடுத்து, “லேய் .. அஜி.. நானு வள்ளி ஒயின்ஸ் பக்கத்தில வண்டிய நிறுத்துவேங்.. நீ ஓடிப்போய்.. ஒரு குப்பி…,” என்ற படியே முஜீப்பினை நோக்கி “முஜீப்.. என்னடே.. பிராண்டியா.. விஸ்கியா?,” என்று கேட்டதும் முஜீப், “அதெல்லம் வேண்டாம்டே.. நமக்கு குதிரச் சரக்குதாங் செரியா இருக்கும் கேட்டியா..,” என்றான்.

நான் மீண்டும் அஜீத்திடம், “மக்கா.. அப்போ வண்டிய நிப்பாட்டுனதும் ஓடிப்போய்.. ஒரு குப்பி ‘ரம்’ வாங்கிற்று செணம் வந்திரணுங் கேட்டியா?,” என்றபடியே மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்தேன்..
வண்டியை நான் கிளப்ப இருவரும் பின்னால் ஏறிக் கொண்டனர்.
நான் வண்டியை ஒயின் ஷாப்பிலிருந்து சற்று தள்ளியிருந்த பெட்டிக்கடை பக்கத்தில் நிறுத்தினேன். முஜீப் சுற்றிலும் பார்த்தான் யாராவது ஊர்க்காரர்கள் தெரிகிறார்களாவென்று.
அவன் வண்டியில் இருந்து கீழே இறங்கிய அஜீத்தைப் பார்த்து, “டே.. அஜி, ஓடிப்போய் வாங்கிற்று சீக்கிரம்வா.. எவனாவது ஊருக்காரனுவ பாத்தாண்ணா.. நம்மோ போக முன்னால ஊரு முளுசுங் பரத்திப்போடுவானுவோ,” என்றான்.
அஜீத் சரியென்று தலையசைத்து, தன் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாய்ப் போய் அந்த ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தான்.
நானும், முஜீப்பும் வண்டியை நிறுத்தி விட்டு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்தோம்.
அஜீத் ஒயின் ஷாப்பின் வாசலுக்கு வந்து, அங்கிருந்தே கத்தினான், “டேய்.. ஒரு குப்பிண்ணா.. ஃபுல்லா… ஆஃப்பாண்ணு கேக்காண்டே.. என்ன எளவடே வாங்க..?”
முஜீப் தன் வலது முழங்கை முட்டியில் இடது கைவிரல்களை வைத்துக் காண்பித்து மெதுவாய் சொன்னான்,” ஃபுள்ளுலேப் பட்டி.”
அஜீத் மீண்டும் கடைக்குள் நுழைந்தான். அவன் மீண்டும் வெளிவந்து கத்தினான் அங்கிருந்தே, “டேய் பேரு… கேக்கான்.”

“இந்த மைராண்டிய அனுப்பினதுக்கு, நம்மளேப் போய் வாங்கியிருக்கலாம், இவனே சத்தம் போட்டு ஊரெல்லாம் சொல்லிருவாங் போலிருக்கே…,” என்றபடியே நான் பாதி சைகயிலும் மீதி அவனுக்கு கேட்கும் படியும் சொன்னேன்.
ஒரு வழியாய் ஒரு முயலைத் தூக்கி வருவது போல பையை உடலை விட்டு சற்று தள்ளிப் பிடித்து தூக்கி வந்தான், அஜீத்.
“என்ன மைருலே வாங்கினே.. அங்கக் கடைல இருந்தா சத்தம் போடுக.. வட்டுப் பயலே..,” என்றான் முஜீப்.
“எனக்கு என்ன மைராத் தெரியும்.. ஒரு குப்பி ரம்முதாண்ணு கேட்டேங்… குவட்டரா.. ஆஃபா, ஃபுள்ளாண்ணு கேட்டாங்… அடுத்தால என்ன ரம்மு வேணுண்ணு கேட்டாங்… இங்க எவனுக்குத் தெரியும் எளவுடுத்தப் பேரும்… அளவும்.. மைரும்,” என்று அஜீத் கோபமாய் சொன்னான்.
“செரி.. செரி.. விடு.. சாதனத்த பெட்டில போடுறே..,” என்று சொல்லிய படியே பைக்கின் பெட்டியைத் திறந்தேன்.
பெட்டிக்குள் வைத்து, பையினை விரித்துப் பார்த்தோம்.. உள்ளே ஓல்ட் மொங்க் ரம் இருந்தது.. “எவ்வளவுடே..,” என்று கேட்டேன்.

“இருநூறு ரூவாடே..” என்றான் அஜீத்.
நேராக புரோட்டாக் கடையில் நிறுத்தி இருபத்தைந்து வீச்சு புரோட்டா, மட்டன்கறி, காடைவறுவல், ரசவடை என்று வாங்கி விட்டு, சோடா, வாழைப்பழங்களும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.
வெளிக்கதவைத் திறந்து நானும் அஜீத்தும் உள்ளே நுழைந்தோம். முஜீப் பெட்டிக்குள்ளிருந்து எல்லாவற்றையும் எடுத்து குப்பியிருந்த பையில் வைத்து தூக்கி வந்தான்.
என் வீட்டு வேப்பமரத்தடியில் பகவதியப்பனின் நாய் படுத்திருந்தது. என்னைப் பார்த்ததும் லேசாக குழைந்தபடி வாலாட்டியது. என் பின்னால் வந்து கொண்டிருந்த அஜீத்தையும், கையில் பையோடு வந்த முஜீப்பையும் பார்த்து உறுமியது.

“இந்த சவத்தெளவு… இங்க வந்து ஏம்டே கெடக்கு,” என்று கேட்டான் முஜீப்.
“அந்த எளவு எப்பவும் இங்க தான் கெடக்கும். அதுக்கு இந்த வேப்பமர மூடு ரொம்ப பிடிக்கும்ணு நெனைக்கேன்… அந்த பகவதியப்பன் பயக்கிட்ட… எத்தனையோ தடவ சொல்லியாச்சு…. வீட்டுல கெட்டிப் போடுலேண்ணு.. மயிரங்.. கேக்க மாட்டங்கான்..,” என்றேன் நான்.
தென்னமட்டைய எடுத்து… நாலு சாத்து சாத்துவமா.. அந்த எளவுடுத்தத?..” என்று கேட்டான் அஜீத்.
“அது பாட்டுக்கு கெடக்கட்டும் விடுடே….” என்றான் முஜீப்.
நான் என் வராந்தாவின் அறைக் கதவினைத் திறந்தேன். முஜீப் அந்த பையினை கட்டிலில் வைத்தான். காடை, மற்றும் மட்டன் கறியின் வாசனை தூக்கியது.
அஜீத், பையிலிருந்து வாழைப்பழங்களையும், சோடாவையும் தனியாக எடுத்து என் மேசை மீது வைத்தான். குப்பியும், புரோட்டா, காடை, மட்டன் கறியையும் பையில் வைத்து மேசையின் கீழே வைத்தான்.
முஜீப் என்னிடம், “டேய் கிளாஸ் வேணும்.. உள்ளி கொஞ்சம் வெட்டணும்.. உள்ளி இருக்கா வீட்டிலே..?” என்றான்.
இருக்குடே.. வா.., அஜி.. நானும் முஜீப்பும் போய் கிளாஸ் கழுவி, உள்ளி வெட்டிட்டு வாறோம்,” என்றேன்.
அவன் டேப்ரிகார்டரில் ராஜாதி ராஜா படத்தின் பாடல்கள் இருந்த கேசட்டைப் போட்டான்.
முஜீப் அவனிடம், “அஜி.. மக்கா.. கதவத் தொறந்துப் போட்டுட்டு தம்மடிக்கப் போய்ராத.. அடிக்கணும்ணா இங்கயே அடிச்சுக்கோ..” என்றான்.

நானும், முஜீப்பும் அடுக்களைக்குப் போய் மேலே வைத்திருந்த பெட்டியிலிருந்து மூன்று கண்ணாடிக் கோப்பைகளை எடுத்தோம்.
கண்ணாடிக் கோப்பைகள் தூசு பிடித்துப் போயிருந்தன. முஜீப் அவற்றை சோப்பு போட்டு தேய்த்துக் கழுவ ஆரம்பித்தான். வெளியறையில், “மீனம்மா.. மீனம்மா.. கண்கள் மீனம்மா,” பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. நான் கண்கள் எரிய வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்தேன்.
ஏதோ ஆட்டோ வந்து நின்று கிளம்பும் சப்தம் கேட்டது.
என் அத்தான் ஆட்டோவில் வந்து இறங்கி அடுக்களைக்கு வந்திருந்தார்.

“இப்பவே மணிபத்தரையாகுது… என்னா.. நீங்கோ இன்னும் தொடங்கல்லியா?” என்று கேட்டார்.
“இல்ல அத்தான்.. இனி தான்.. இப்போ தயாரெடுப்பு நடக்கு,” என்றான் முஜீப்.
“ஓ.கே. எஞ்சாய்.. நான் சாப்பிட்டுட்டேன்.. ரொம்ப டயர்டா இருக்கு.. நாளைக்கு காலைலே பாக்கலாம்..,” என்று கூறிய படியே அவர் ரூமுக்குள் போகப் போனார்.
நானும், முஜீப்பும் அவரிடம் , “பிள்ளை எப்படி இருக்கு?” என்று கேட்டோம்.
“நல்லா இருக்கு.. சிணுங்கும், பால் குடிக்கும்.. ஒறங்கும்.. சுகமான வாழ்க்கையில்லா.. பிள்ளைகளுக்கு..,” என்று சொன்னவர், “அவனெ எங்க.. அஜீத்?”என்று கேட்டார்.

“அவன் அங்க முன்ன ரூமுல காவலுக்கு இருக்கான்,” என்றேன்.
“அங்க யாரும் இல்லயே.. பாட்டு கேட்டிற்று இருக்கு.. நான் வரப்போ பாத்தனே.. கதவு திறந்து கெடந்தது… அவன் அங்க இல்லயே..” என்றார்.
சொல்லிவிட்டு அவர் உள்ளறைக்குள் படுக்கப் போய் விட்டார்.
முஜீப் அவனை இங்கிருந்த படியே சத்தமாய் அழைத்தான்… பதிலில்லை.
நாங்கள் வராந்தாவுக்கு சென்று அறைக்குள் பார்த்தோம். கதவு திறந்து கிடந்தது, அவனைக் காணவில்லை.
முஜீப் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக் கேட்டான்.. “டேய்.. அந்த பையெங்க?”
நான் மேஜையின் கீழேப் பார்த்தேன்.. அந்த பை இருந்த இடம் காலியாக இருந்தது..
இந்த தொட்டிப்பய… எங்கடே போய்த் தொலஞ்சான்?
பின்புற கதவு தட்டப்படும் சப்தம் கேட்க, நான் போய் கதவினைத் திறந்தேன்.
அஜீத் நின்று கொண்டிருந்தான்.
‘’லேய்.. எங்கலப் போன.. அந்த பை எங்க?” என்று கோபமாய் கேட்டேன்.
“கக்கூஸ் முட்டிற்று டேய்… அதாங் போனேன், அந்த பை ரூம்ல தான் இருக்கு,” என்றான்.
பின்னால் வந்த முஜீப் அவனிடம், “லேய் மயிரே.. கதவ.. மக்க, மலக்க தொறந்து போட்டுற்று எங்கல.. நொட்டப் போன,” என்று சத்தமாகக் கேட்டான்.

“தூற வந்தா.. தூறாண்டாமா?” என்றான் அஜீத்.
கதவ.. அடச்சிற்று போக வேண்டியது தானே.. அல்லது எங்கள கூப்பிட வேண்டியது தானே,” என்றேன் நான்.
மூவரும் என் அறைக்குள் வந்து மீண்டும் மீண்டும் தேடினோம். காணவில்லை. மேஜை மீது வைத்திருந்த சோடாவும் வாழைப்பழங்களும் அப்படியே இருந்தன.
மூவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

“புரோட்டாவும், சிக்கனும் போனாலும் பரவாயில்ல… கூட இருந்த குப்பியும் போயிற்றே.. ரொம்ப நாளைக்குப் பொறவு.. நல்ல குடிச்சி, திங்கலாம்ணு இருந்தப்போ.. இந்த மைராண்டியால எல்லாம் போச்சு… ஒயின் ஷாப்பும் பூட்டியிருப்பான்,” என்று முஜீப் கோபமாய் கத்தினான்.
நான் எதேச்சையாக வேப்பமரத்தடியைப் பார்க்க அங்கே பகவதியப்பனின் நாயைக் காணவில்லை. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். டார்ச் விளக்கு எடுத்து வந்து வீட்டை சுற்றிலும் ஒரு இடம் விடாமல் தேடினோம், தெரு முழுக்கவும் தேடினோம்.

கறிமணத்தில், பகவதியப்பனின் நாய் தான் பையோடு தூக்கிச் சென்றிருக்கும் என்பது நிச்சயமானது. அந்த நாய் எங்கெல்லாம் சுற்றுமோ அங்கெல்லாம் தேடினோம்.
வியர்வை வழிய சலித்துப் போய் வீட்டிற்கு வந்து, வாழைப்பழங்களைத் தின்று, சோடவைக் குடித்து சோகமாய் படுத்தோம்.

“அந்த நாய்க்குப் பொறந்ததுக்க புத்திய பாத்தியா… இங்க வச்சித் திண்ணா நம்மோ பாத்து மொத்திருவமுண்ணு.. மொத்தமா தூக்கிற்று போயிற்று..,” என்றான் முஜீப் …
நாங்கள் அதன் பிறகு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

நன்றி திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:50 am

குடிக்க ஓர் இடம்
-------------
வளவ.துரையன்
-------------
“நாளை இந்த இடத்தை மாத்திட வேண்டியதுதான்” என்றான் வேலு. குடித்து முடித்த தன் தம்ளரைக் கீழே வைத்த மோகன் நிமிர்ந்து பார்த்தான். வேலு தன் கையில் இருந்த தம்ளரில் பாதிதான் காலி செய்திருந்தான். பக்கத்தில் இருந்த பாட்டிலில் சரிபாதி இன்னும் இருந்தது. ஆளுக்கு இரண்டு தம்ளர்; அதுதான் அவர்கள் கணக்கு; கண்கள் சிவக்காமல், கால்களைத் ,தடுமாற வைக்காமல், யாரையும் சந்தேகம் கொள்ள வைக்காமல் இருக்க அந்த அளவுதான் சரியாக இருக்கும் என்று அந்த அளவைக் கடைபிடித்து வந்தார்கள். அது சரியாகவும் இருந்தது.
”ஏண்டா மாத்தணும்றே?” என்று தன் தம்ளரில் பாதி ஊற்றிக் கொண்டே கேட்டான் மோகன்.

”இந்த இடத்தைச் சுத்திக் காம்பவுண்டு சுவரு எழுப்பப் போறாங்களாம்” என்று வேலு பதில் சொல்ல “போடா, அதுக்குள்ளெ ஒண்ணும் வேலை ஆரம்பிக்க மாட்டாங்க” என்று சொல்லிவிட்டு ஒருவாய் குடித்தான் மோகன்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் வேலு. மோகனின் வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் பார்ப்பவர்களைக் கவரும் வண்ணம் இருந்தன. வங்கிக்குச் செல்லும் போது மட்டும் பல வண்ணங்களில் பேண்ட்டும் சட்டையும் அணியும் பழக்கமுள்ளவன் அவன். அதுவும் வங்கியில் நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் காசாளராக அமர்ந்து கொண்டு வரும் வாடிக்கையாளரிடம் அமைதியாக எப்பொழுதும் கோபமின்றிச் சிரித்துப் பேசும் அவன் குடிக்கும் பழக்கம் உள்ளவன் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.

திருமணமான பின்பு மோகன் மனைவி அவனிடம் போராடிப் பார்த்து ஒரே வழியாக விட முடியா விட்டாலும் ‘வீட்டில் குடிக்கக்கூடாது; அதுவும் வாரத்தில் ஒரு நாள்தான்’ என்ற நிபந்தனைகளுடன் அவனை அனுமதித்தாள்
”அதோ பாரு, ஒனக்கு இருட்டுல தெரியல; கருங்கல் ஜல்லி வந்து கொட்டியிருக்காங்க” என்றான் வேலு. அவன் கை காட்டின பக்கம் பார்த்தான் மோகன். வேலு சொன்னது உண்மைதான் எனத் தோன்றியது. அரைகுறை வெளிச்சத்தில் ஒரு லோடு ஜல்லி அங்கே இருந்தது.

”எத்தனை தடவைடா எடம் மாத்தறது?’ என்று கேட்ட மோகன் அவனுக்குப் பிடித்த பகோடாவைக் கொஞ்சம் போட்டு மென்று கொண்டே வேலுவைப் பார்த்தான்.
வேலுவும் பார்வைக்கு மிகவும் நாகரிகமாகத்தான் இருந்தான். தனியார் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் வேலை. தன் பேச்சுத் திறமையால் பாடம் கற்பிக்கும் போது மாணவர்களைக் கட்டிப் போட்டு விடுவான். அவ்வப்போது கவிதைகள் எழுதுவான். வெளியூர்ப் பட்டி மன்றங்கள் போய்ப் பேசுவான்.
மாணவர்கள் மத்தியிலும் கல்லூரி நிர்வாகத்திலும் அவனுக்கு நல்ல பெயர். அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. திருமணமானவுடன் இப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று வேலுவின் அம்மா அவனிடம் சத்தியம் வாங்கியிருந்தாள்.

மோகன் பணிபுரியும் வங்கியில் ஒரு லாக்கர் வேண்டுமென்று வேலு சொல்ல மோகனின் சிபாரிசில் அது கிடைத்தது. அதுதான் அவர்கள் இருவரும் பழக்கமாக ஆரம்பக் காரணம். அதன் பிறகு தான் பேசும் கூட்டங்களுக்கு வேலு மோகனை வரச் சொன்னான். தான் எழுதி சிற்றிதழ்களில் வந்த கவிதைகளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கருத்து கேட்டான்.

இருவரும் தங்கள் குடிப்பழக்கத்தை ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டது ஒரு தற்செயலான நிகழ்வாகத்தான் அமைந்தது.
அவர்களின் ஊரான வளவனூரிலிருந்து கோபித்துக் கொண்டு போவதைப்போல ஒரு மண்பாதை பக்கமேடு கிராமத்தை நோக்கிச் சென்றது. அக்கிராமத்திலிருந்து கிராமமாகவும் இல்லாமல் நகரமாகவும் இல்லாமல் உலகில் பிறந்த சில பாவப்பட்ட ஜென்மங்களைப் போல் இருந்த இந்த வளவனூருக்குத்தான் பக்கமேடு ஜனங்கள் தங்களின் எல்லாத் தேவைகளுக்கும் வர வேண்டும். நகருந்து வசதிகள் இல்லாததால் கால் நடைதான்.
பாதையிலும் விளக்கு வசதி இல்லாததால் எல்லாரும் எட்டு மணிக்குத் தங்கள் ஊருக்குத் திரும்பி விடுவார்கள். பிறகு அங்கே ஆள் நடமாட்டமே இருக்காது.அவர்கள் இருவருக்கும் அந்தப் பாதையில்தான் ஒரு நாள் பழக்கம் ஏற்பட்டது.

இரண்டு நாள்களாக வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததை எடுத்து பனியனுள்ளே போட்டுக் கொண்டு காற்று வாங்கப் போவதைப் போல அப்பாதையில் நடந்தான் வேலு. ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த பாலத்தின் மீது யாரோ ஒரு ஒயர் பையிலிருந்து எதையோ எடுப்பதைப் பார்த்தான். அரை நிலா வெளிச்சத்தில் தம்ளரில் ஊற்றுவதும் வாயருகில் வைத்துக் குடிப்பதும் தெரிந்தது. அருகில் சென்றதும் அது மோகன் என்பதறிந்த போது வேலுவுக்கு வியப்பு ஏற்பட்டது.

வேலுவைப் பார்த்து விட்ட மோகன் அவசரமாக எல்லாவற்றையும் மறைக்க முயன்று தோற்றான்.
“பதற்றப் படாதீங்க: இது ஒண்ணும் தப்பில்ல; ஆன நீங்க கூட குடிப்பீங்கன்னு எனக்குத் தெரியாது” என்று கூறிக் கொண்டே தனது பாட்டிலையும் ஒருதம்ளரையும் வெளியில் எடுத்து மோகன் வைத்தவுடன்தான் வேலுவுக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. அதன் பிறகு அந்த இடம் தான் ஒன்பது மணிக்கு மேல் அவர்களது குடி சாம்ராஜ்யத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகத் திகழ்ந்தது.
ஆனால் அந்த சாம்ராஜ்யம் இடம் மாறக்கூடிய நிகழ்ச்சியும் ஒருநாள் ஏற்பட்டது. இரவு ஒன்பது மணி இருக்கும். வழக்கம் போல் இருவரும் அந்தப் பாலத்தில் உட்கார்ந்து தங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தார்கள். பௌர்ணமி போய் மூன்று நாள்களாகி இருந்ததால் வெளிச்சமும் கொஞ்சமும் அதிகமாகத்தான் இருந்தது. காற்று மெல்லியதாக இதமாக வீசிக் கொண்டிருந்தது. அரச சபையை முடித்துக் கிளம்ப வேண்டிய நேரம். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது.

”என்னா வாத்தியாரே? இங்க ஒக்காந்து என்னா செய்யறீங்க? அதுவும் இந்த நேரத்துல”
வேலுவும் மோகனும் தொலைவிலேயே அவரைப் பார்க்கத் தவறி விட்டதை உணர்ந்தனர். அவசரமாக பிளாஸ்டிக் தம்ளர்களை எல்லாம் பாலத்துக்கடியில் போட்டனர். சட்டைப் பையில் இருந்த கிராம்புகளை வாயில் போட்டுக் கொண்டனர். அதற்குள் அருகே வந்துவிட்ட வைத்திலிங்கம்
“அட, பேங்காரரா? என்னா காத்து வாங்கறிங்களா?”
என்று கேட்டவாறே இவர்களுக்கு எதிரில் பாலத்தின் மறுபக்கத்தில் உட்கார்ந்தார். தங்கள் பேசினாலும் வாசனை ஏதும் வராது என்பது அவர்களுக்குத் தெரிந்தாலும் பேசுவதற்கு இருவருமே மிகவும் கூச்சப்பட்டனர். வேலு மேலே வானத்தில் தவழும் நிலவைப் பார்க்க மோகனோ கீழே குனிந்து கொண்டான்.
அவர் வேலுவுக்கும் மோகனுக்கும் நன்கு தெரிந்தவர்; வங்கியில் கணிசமான வைப்புத் தொகை வைத்திருப்பவர்; அதன் மூலம் அடிக்கடி வங்கிக்கு வர போக மோகனுக்கு மிகவும் பழக்கமானார். அது போல இலக்கியக் கூட்டங்கள் அவ்வப்போது நடத்த வேலுவிற்கு நன்கொடைகள் கொடுத்ததால் அவனுக்கும் அவரிடம் நெருங்கிய தொடர்பு வந்தது.

ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காக மோகன் அவரைப் பார்த்து, ”என்னாங்க இவ்வளோ நேரம் கழிச்சு வரீங்க?” என்று கேட்டான்.
“அதை ஏம்பா கேக்கறே? ஒரே அலைச்சல் பொழைப்பா போச்சு; வெளச்சல் வந்ததா? வீட்டுல கொஞ்சம் சாப்பாட்டுக்கு வச்சுகிட்டு மீதியை காசாக்கினோமான்னு இல்லாம தவிக்க வேண்டி இருக்கு; கமிட்டியில போடப் போனா ஒரு நாள் பூரா இழுத்தடிக்கறாங்க; அது சொள்ள இது சொத்தன்னு வேற தள்ளறாங்க: வியாபாரிகிட்ட போட்டோம்னா அவன் வாங்கச்ச தேனு ஒழுகற மாதிரி பேசறான். ஆனா காசை அவங்கிட்ட வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடும் போல இருக்கு; அவன் ஊட்ல போயி ஒக்காந்து காத்திருந்து, ஊருக்குப் போனவன் இப்பதான் வந்தான்; அதுவும் பாதிதான் குடுத்தான்; மீதி அடுத்த வாரம் வரச் சொன்னான்”
என்று பொறிந்து தள்ளிவிட்டவர் தொடர்ந்து ”தெனம் இங்கதான் வந்து ஒக்காந்து காத்து வங்கறீங்களா? என்று கூறி முடித்தார்.
”இல்லீங்க, சனிக்கெழமை மாத்திரம் தான்” என்று கூறிய மோகன் ”ஏன் அதைக் கூறினோம்” என்று நினைக்கும் அளவிற்கு வைத்திலிங்கம் கேட்டார்.
“அப்ப சனிக்கெழமை முன்ராத்திரியில வந்தா இங்க ஒங்களைப் பாக்கலாம்” என்றார். அப்புறம் சில கிராமத்து விஷயங்கள் அரசியல் பற்றி எல்லாம் பேசிவிட்டு அரை மணி நேரம் கழித்துத்தான் அவர் போனார்.
வௌவால் இரண்டு வானத்தில் பறந்து சென்றன. எங்கோ ஓர் ஆந்தை அலறியது. தன் வேலையைத் தான் தானே செய்ய வேண்டும் என்ற நினைப்பில் ஓடுவது போல பத்து மணி பாசஞ்சர் வண்டி ஓடியது.
”என்னாடா யோசனை” என்று கேட்டான் மோகன்.
”இல்ல நீ ஏன் அவரு கிட்ட போயி சனிக்கெழமையில இங்க இருப்போம்னு சொன்ன? அடுத்த வாரமும் அவரு வந்தா என்ன செய்யறது?

ஆமாம், போடா, அவரு கரெக்டா வரப் போறாரு” என்று பதில் சொன்னான் மோகன்.
ஆனால் அடுத்த வாரம் வேலு சொன்னது போல இவர்கள் தங்கள் அரசாங்கத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவர் வந்து விட்டார். ”பேங்கில லோன் வேணுமாம் இங்க வந்தா ஒங்களைப் பாக்கலாம்னு வந்தேன்” என்று அவர் சொன்னதும் இருவருக்கும் ரொம்ப சங்கடமாகப் போய் விட்டது.

”பேங்குல லோன் கேக்குற எடம் இதுதானா”ன்னு வேலு கேட்டிருப்பான். மோகனுக்காக சும்மா இருந்தான். அவரிடம் பேசி அவரை ஒருவழியாய் அனுப்பி தங்கள் கதையை முடிக்க மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட அவர்கள் இருவருக்கும் அன்று இரவு வீட்டில் ஏகப்பட்ட அர்ச்சனைதான்.
அதற்குப் பிறகுதான் இந்தப் பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். நாராயணன் கோயிலுக்கு நாலு பக்கமும் வாசல் என்பது போல அது இருந்தது. இருந்ததே மூன்று வகுப்பறைகள்தாம். அவற்றுக்கும் கதவுகளில்லாதிருந்தது மிகவும் வசதியாயிருந்தது. தனியாய் இருந்த ஓர் அறையை மட்டும் பூட்டி இருந்தனர்.
அதுவும் மழைக்குக் கூட யாரும் ஒதுங்காத பள்ளிக்கூடம் அது. ஊருக்கு வெளியே இருந்த புறம் போக்கு நிலத்தில் அதைக் கட்டி இருந்தனர். யாரும் வராத அந்த இடம் அவர்கள் குடிக்க மிகவும் வசதியாய் இருந்தது. எந்தப்பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்களின் வண்டிக்கு இப்படி ஒரு தடங்கல் வரும் என அவர்கள் எதிர்பார்க்க வில்லை.

”நீ வாணா பாரு, சீக்கிரமா செவுரு எழும்பிடும்டா,’ என்றான் வேலு.
”எப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே?
”மழைக்காலத்துக்குள்ள இதை முடிச்சாகணுமாம்; சீக்கிரமா செஞ்சிடுவாங்க; ஏன் தெரியுமா? இதை செய்யும் போதே காண்டிராக்டரு அவரு வீட்டுக்கும் செவரு எழுப்பப்போறதா பேசிக்கறாங்க”
”அப்ப நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே? வா வேற எடம் எங்க இருக்குன்னு பேசலாம்” என்று கூறிய மோகனிடம் “பத்து மணிக்கு நூலகத்துக்கு வரட்டுமா” என்று கேட்டு உறுதியாக்கிக் கொண்டான் வேலு.
அவர்களுக்கு எந்த இடமும் சரியானது எனத் தோன்றவில்லை. பழைய சத்திரம் ஒன்று இருந்தது. ஆனல் அது இரவு முழுதும் பாண்டிக்குப் பேருந்துகள் செல்லும் சாலைக்குப் பக்கத்தில் இருந்தது. யாராவது வண்டியிலிருந்து இறங்குவார்கள். அது தவிர தெருவில் இருந்த சோடியம் விளக்கு வேறு ”நீங்கள் செய்வதை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவேன்” என்று சொல்லாமல் சொல்லியது.“வேலு, போயி பழைய எடத்தையே பாப்பமா” என்று கேட்டான் மோகன்.

“போட அங்க வீடெல்லாம் கட்டி இருப்பாங்க” என்றான் வேலு.
பழைய இடம் என்றது ஊருக்கு வெளியே ரியல் எஸ்டேட் காரர்கள் பிளாட் போட்டிருந்த இடம். அங்கே ஒரு கொட்டகையும் அலுவலகத்திற்காகப் போட்டிருந்த்து வசதியாய் இருந்தது. மாலை ஆறு மணிக்கெல்லாம் பிளாட் போட்டவர்கள் போய் விடுவார்கள். இவர்கள் தங்கள் புதிய அரசை அங்கே நடத்தி வந்தார்கள். என்ன ஒரு தொல்லை என்றால் தம்ளர், பாட்டில்கள் எல்லாவற்றையும் அங்கே போடாமல் எடுத்து வந்து விட வேண்டும்.
அந்த அரசும் இரண்டு பேரால் திடீரென கவிழ்க்கப்பட்டது. வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தவர்கள் உள்ளே வந்ததால் ஏற்பட்ட விபரீதம் அது. வெளியூரிலிருந்து வந்த இரு நாடோடிகள் பகல் முழுதும் தங்கள் வயிற்றுப் பாட்டுக்காக எங்கோ அலைந்து திரிந்துவிட்டு இரவு ஏழு மணிக்கே அந்த கொட்டகைக்கு வர ஆரம்பித்தனர். எனவே வேலுவும் மோகனும் அந்த இடத்தையும் வந்தவர்களை வாழ வைப்போம் என்று தியாகம் செய்தனர். அதற்குப்பிறகுதான் இந்தப் பள்ளியை அவர்கள் கண்டு பிடித்தார்கள்.

மறு நாள் எப்படியோ அவர்கள் ஓர் இடத்தைக் கண்டறிந்தார்கள். சொந்த வீட்டுக்காரனுக்கு ஒருவீடுதான். ஆனால் வாடகை வீட்டுக்காரனுக்குப் பலவீடு என்பார்கள்.
அந்த இடம் ஊருக்கு வெளியே ஆற்றங்கரை ஓரமாக இருந்தது. அங்கு சமாதி போலவும் கோயில் போலவும் ஓர் கட்டிடம் இருந்தது. அதன் உள்ளே போகவும் வெளியே வரவும் ஒரு வழிதான் இருந்தது. அங்குவர யாருமே பயப்படுவார்கள். அது ஒரு தனியார் இடம்தான். கதவுகள் ஏதும் கிடையாது. தினமும் ஒரு பெரியவர் காலையில் வந்து பெருக்கிச் சுத்தம் செய்து விட்டுப் போய் விடுவார்.

”வர வாரமே இங்க ஆரம்பிச்சுடுவோம்” என்றான் வேலு.
”பின்ன என்னா? நாள் நட்சத்திரம் பார்த்து கிரகப்பிரவேசமா செய்யப்போறோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் மோகன்.

”வெளிச்சம்தான் கொஞ்சம் கம்மியாக இருக்கும் போல தெரியுது.” என்று சொன்ன வேலுவிடம் ”இல்ல; மேல ஒயரத்துல ரெண்டு ஜன்னல் இருக்கு பாத்தியா? கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் அந்த வெளிச்சம் போதும். நாம என்ன கவிதையா படிக்கப் போறோம்.”என்று பதில் கூறினான் மோகன்.
”இந்தக் கிண்டல் தானே வேணாம்; நான் எப்ப பாத்தாலும் கவிதையா படிச்சுக்கிட்டிருக்கேன்” என்றான் வேலு. “சரி, கோவிச்சுக்காதே; வர்ற சனிக்கெழமை பாப்போம்” என்று கூறிப் பிரிந்தான் மோகன்.
சனிக்கிழமை முன்னிரவு எப்பொழுது வரும் என்று காத்திருந்த அவர்கள் புதிய நாட்டைப் பிடித்த மனநிலையில் மெல்ல நடந்து கொண்டிருந்தனர்.

போன வாரம் வேலு வாங்கி வந்ததால் இந்த வாரம் மோகன் பாட்டில் வாங்கித் தன் பனியனுள்ளே போட்டிருந்தான். அதேபோல இந்த வாரம் தண்ணீர் பாக்கெட்டுகள் வேலுவின் முறை. பிளஸ்டிக் தம்ளர்கள்தான் ஒரு பக்கம் பெண்ணின் முலைபோல் அவன் மார்பில் புடைத்துக் கொண்டிருந்தன. அதை மறைக்க ஒரு துண்டையும் அவன் போர்த்திருந்தான். வழக்கம் போல இருவரும் அதிகம் பேசாமல் போய்க் கொண்டிருந்தனர்.
மெல்லிய காற்றும் நட்சத்திரங்களின் ஒளியும் யாருமே இல்லாத சூழலும் அவர்களுக்கு நிம்மதியை அளித்தன. ஆற்றுக்குச் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் கொஞ்ச தூரம் நடந்தவர்கள் அந்தக் கட்டிடத்தின் அருகில் போய் நின்றனர். யாராவது கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருக்கிறார்களா என்று பார்த்தனர். ஒருவரும் இல்லை என்று நன்றாக உறுதிப் படுத்திக் கொண்ட பின்னர் சுவர் ஓரமாகத் தங்கள் செருப்புகளை விட்ட போது காலில் ஏதோ இடறியது போலத் தெரிந்தது. கீழே குனிந்து பார்த்த இருவருக்கும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏற்கனவே அங்கு சில செருப்புகள் கிடந்தன.

வேலுவின் தோளைத் தொட்டுத் தன் வாயின் மீது விரலை வைத்து அமைதியாயிரு என்பதுபோல் சைகை காட்டிய மோகன் அடி மீது அடி வைத்து ஒரு சிறு சத்தமும் எழும்பாதவாறு மெதுவாக நடந்து குனிந்து உள்ளே எட்டிப் பார்த்தான். மோகனின் தோள் மீது கையை ஊன்றி வேலுவும் பார்த்தான். அவர்கள் கண்ட காட்சி இருவருக்குமே அதிர்ச்சியாய் இருந்தது. உள்ளே ஆடைகள் குலைந்த நிலையில் ஓர் ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்துக் கொண்டு புரண்டு கொண்டிருந்தனர். மூன்று அல்லது நான்கு நொடிகளுக்குள் அவர்கள் தங்கள் பார்வையை மீட்டனர். ஒன்றும் பேசாமல் வந்தது போலவே அமைதியாகத் திரும்பி சாலையை அடைந்தனர்.
மெல்லிய குரலில் “கொஞ்ச நேரம் ஒளிஞ்சிருந்து யார்னு பாப்பமா?” என்று கேட்டான் வேலு.
“ச்சீ, பாவம்டா: கள்ளத்தனமோ? இல்ல கல்லூரித்தனமோ? அவங்களும் கஷ்டப்பட்டுத்தான் இந்த எடத்தைக் கண்டு பிடிச்சிருப்பாங்க”

”சரி, இன்னிக்குப் பள்ளிகூடத்துக்கே போவோம்; நாளையிலேந்து வேற எடம் தேடுவோம்” என்று சோகமாகப் பதில் சொன்னான் மோகன்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:53 am

ராசி
-------------
எஸ்ஸார்சி
------------
.அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான்.

அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி பி என்றும் போட்டிருந்தான். பி பி இது இப்போதைய செல் பெசி ஜனங்களுக்கு விளங்காதுதான். தொலைபேசி சாம்ராஜ்ஜியத்தில் கைபேசி பிறப்பதற்கு முன் என்கிற காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் பி பி கால் பேசும் இனம் ஒன்று உண்டு.

ஒரு சிலர் போனில் அவனிடம் வாடகைக்கு விடும் அந்த வீடு பற்றி விசாரித்தார்கள். அந்த முதுகுன்றத்து வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள எனக்கு உனக்கு என போட்டி போட்டுக்கொண்டு யாரும் வந்துவிடவில்லை. ஒரு வீடு யாரும் குடி இருந்தால் மட்டுமே வீடாக இருக்கிறது.அது சும்மா பூட்டிக்கிடக்க வாடகை மட்டுமா இழப்பு.
அவன் மனைவி சைவ உண்வு சாப்பிடுவோரை மட்டுமே அந்த வீட்டில் குடி வைக்க வேண்டும் என அடம் பிடித்தாள். யாரும் அப்படி வரத்தானே இல்லை.

திடீரென ஒரு நாள் முதுகுன்ற நகரில் அவன் வீட்டுக்குப்பின்புறம் குடியிருப்பவரின் பையன் சமுத்திரகுப்பம் வந்தான். அவன் வேலை பார்க்கும் டெலிபோன் அலுவலகத்துக்கு நேராக வந்து ‘வீடு வாடகைக்கு வேண்டும்’ என்றான்.

‘யாருக்கு’
‘என் நண்பர் ஒருவருக்கு’ வந்தவன் பதில் சொன்னான்.
வீீடு பூட்டிக்கிடப்பதில் என்ன பிரயோசனம் என்று எண்ணி ‘ நீங்கள் சொன்னால் சரிதான்’ என்று முடித்தான்.அட்வான்ஸ் தொகையொன்று கை மாறியது. ஏதோ தொகை. அவன் தயாராக வைத்திருந்த முதுகுன்ற வீட்டுச் சாவியை அவனிடம் ஒப்படைத்தான்.

‘மாதம் ஆயிரம் வாடகை’ சொல்லியாயிற்று.
ஆயிரமே பெரியதொகைதான். சிறியது வீடுதானே..ஒரு வழியாக முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடுவது என்கிற பிரச்சனை முடிவுக்கு வந்தது.மனம் லேசாக சந்தோஷப்பட்டது.மனைவிக்கு போன் போட்டான்.’வாடகைக்கு வர்ர ஆளு சைவமான்னு கேட்டிங்களா’ அவள் கேள்வி வைத்தாள்.’சைவமாதான் இருக்கும். இல்லாகாட்டி நமக்கு தெரிஞ்ச ஒரு பையன் நம்மகிட்ட அந்த மனுஷனை வாடகைக்குன்னு கொண்டு வந்து விடுவானா’ அவன் சமாளித்தான்.அவள் அமைதி ஆனாள்.

இரண்டு வாரம் சென்றது.அவன் விடுமுறைத்தினதன்று முதுகுன்றம் புறப்பட்டான். அவன் வீட்டையும் வீட்டில் குடியிருப்பவரையும் பார்த்துவரலாம் என்பதாக யோசனை.முதுகுன்ற நகரில் பேருந்தை விட்டு இருந்து இறங்கினான். வாடகைக்கு விட்ட அந்த வீடு முதுகுன்றம் புற நகரில் இருந்தது. அவன் பைய நடந்தான்.தன் வீட்டு வாசலில் நாற்காலிபோட்டுக்கொண்டு ஒரு பெரியவர் உறங்கிக்கொண்டிருந்தார்.ஒரு பெண் புழுங்கல் அரிசியை கும்பலாகக்கொட்டி அதனை முறத்தால் கிளறியபடியே இருந்தாள்.

‘சார் நான்தான் வீட்டு சொந்தக்காரன் வந்துருக்கன்’ அவன் கொஞ்சம் உரத்துக்குரலில் ஆரம்பித்தான்.’யாரு அது வூட்டுக்காரரு’ அந்தப்பெரியவர் ஆரம்பித்தார்.
‘நீங்க குடியிருக்குற வீட்டுக்கு சொந்தகாரரு’
‘அப்படியா எம் மருமொவள கூப்பிடறேன்.இதுல எனக்கு சோலி என்னா இருக்கு’
மருமகள் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்தாள்.

‘யாரு யாரு’
‘நாங்கதான் வீட்டுக்கு சொந்தக்காரங்க’
‘வாங்க வாங்க சரியான நேரத்துக்கு தான் வந்துருக்கீங்க. வூட்டு உள்ள இருக்குற முனிசிபாலிடி கொழாயில தண்ணி வருல.தெருவுல பூமிவுள்ளாற போற மெயின் கொழாயிக்கு நேரா பள்ளம் எடுக்கணும். ஒரு துண்டு குழாய் போட்டு இழுத்துடணும். நம்ம வூட்டு வாசல்ல ஒரு தொட்டியும் கட்டுணும்’
‘இது என்னா புது சேதி’
. வீட்டு சொந்தக்காரரைப் பார்த்த உடனே இப்படியுமா ஆரம்பித்துவிடுவார்கள் அவனுக்குச் சங்கடமாக இருந்தது..
‘ஒண்ணும் புது சேதி இல்லே. தண்ணி வரவேண்டிய போர்சுல வருல. வர்ர அந்த தண்ணியும் வூட்டுக்கு உள்ள ஏறமாட்டேங்குது.அதான் குழி வெட்டி கொஞ்சம் வேல செயிணும் ஒரு தொட்டி கட்டணும்.அது உள்ளார அந்த தண்ணி உழுவுணும். அதுல சின்னதா ஒரு மோட்டார் போட்டு அத வூட்டு கொண்டாறணும்.வேல இருக்கு’
‘இப்பதான நீங்க வந்து பதினைஞ்சி நாளு ஆவுது’
‘அதுக்குன்னு தண்ணி இல்லாம என்னா செய்யிறது’
‘ரொம்ப செலவு வரும்போல’ அவன் அச்சத்தோடு சொன்னான். அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது.அமைதியாகவே இருந்தான்.

‘ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே.நேரா பீச்ச கை வாட்டமா தார் ரோட்டே பொனீங்கன்னா ஒரு எண்ணெ மில்லு வரும். வெங்கடேஸ்வரா ஆயில் மில்லுன்னு நெனைக்கிறேன்.பக்கத்துல தனலச்சுமி ரைசு மில்லு அதுக்கு பக்கத்துல சிமெண்டி தொட்டி செய்யுற கடை.அந்த ஓனரு.இந்த வேலய எல்லாம் காண்டிராக்டா எடுத்து செய்யுறாரு.ஒரு எட்டு போங்க பேசுங்க.காசு என்னா ஆவும் அது அது எவ்விடம்னு தெரிஞ்சிகிட்டு வந்துடுங்க’
‘அவுரு இந்த தெருவுல இது மாதிரி வேல செஞ்சி இருக்குறாரா?’
;ஓ ரைட்டா இதே தெருவுல மூணு பேரு வூட்டுல இந்த வேல பாத்து இருக்குறாரு.வூட்டுக்கு பதினைஞ்சி ரூவா வாங்குனாருன்னு கேள்வி’

‘என்னம்மா சொல்றீங்க ஒரு ஆயிர ரூவா வாடகைக்கு வந்துட்டு இப்ப பதினைஞ்சி ஆயிரம் செலவு சொல்றீங்க’
‘வொங்க வூடு நீங்க செய்யுறீங்க.தண்ணி முக்கியமில்ல ஒரு குடுத்தனகார பொம்பள தண்ணி இல்லாம என்ன செய்வா”.

‘காசி குடுக்குணுமுல்ல’

‘குடுக்குறதுதான் அப்புறம் என்ன செய்யுவே’ அதட்டலாய்ச்சொன்னாள். .
அவன் நேராகப்புறப்பட்டு அந்த சிமென்ட் காங்கிரீட் செய்யும் கடைக்குச்சென்றான்.தொட்டிகள் சின்னதும் பெரியதுமாக அங்கங்கே நின்று கொண்டு இருந்தன.பாத் ரூமுக்குள் வைக்கப்படும் ஜன்னல் ஜாலிகள் அடுக்கப்பட்டுக்கிக்கிடந்தன.என்றோ செய்த அண்ணா சிலையொன்று கேட்பாரற்றுக்கிடந்தது.
‘சாருக்கு என்ன வேணும்’

அறுபது தாண்டிய ஒருவர் கைலி கட்டிக்கொண்டு மர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
‘நானு சமுத்திர குப்பத்திலிருந்து வர்ரன் என் வீடு இங்க திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுல இருக்கு. வீட்டுல இருக்குற முனிசிபாலிடி குழாய்ல வர்ர தண்ணி வீட்டுக்குள்ள ஏறமாட்டேங்குது. நீங்க அந்த வேலயா காண்ட்றாக்டா செய்யுறதா சொன்னாங்க அதான் வந்தன்’

‘சொல்லுங்க உங்க தெருவுல மூணு வூட்டுல செஞ்சி குடுத்துருக்கன். நீங்க பாருங்க. நம்மகிட்டவேல சுத்தமா இருக்கும்.வூட்டுக்கு பதினஞ்சி ஆயிரம் வாங்க்றன்.சாரு நீங்க எங்க வேல செய்யுறீீங்க’
‘நானு சமுத்திரகுப்பத்துல இருக்கன்.கணக்கு அதிகாரியா வேல பாக்குறன்’
‘எதுல’
‘டெலிபோன்ல’
‘கெடக்கு வுடுங்க. நம்ம காரியத்த பாக்குலாம்.போலிசோ இல்ல தாலுக்கா ஆபிசோன்னு பாத்தன்.’
‘ அட்வான்சா அய்யாயிரம் தர்ரேன் வச்சிகினு வேலய ஆரம்பிங்க.பாக்கி பத்தும் உங்களுக்கு கரெக்டா வந்துபுடும்’
‘ உங்க வூடு எங்கன்னு சாரு சொன்னிங்க’

திருவள்ளுவர் நகர் மூணாவது தெருவுன்னு சொன்னேனே. வூட்டு நெம்பரு 9. போஸ்டாபீசு இருக்குற தெருவு’
‘ஆமாம் அந்த வூட்டுல இப்பதான் வீராணம் ஏரி மீனுவ விக்குற ஒரு ஆசாமி குடிவந்தாரு’
‘அப்படியா சொல்றீங்க. வீட்டு வாசல்ல கூட ஒரு பெரியவரு படுத்துகிணு இருந்தாரு’
‘ஆம் அதே வூடுதான். மீனு காரரு இந்நேரம் வீராணம்.ஏரிக்கரைக்கு போயி இருப்பாரு.சரக்கு புடிச்சாரணுமே.ஆமாம் சாரு. அந்த வூட்டு பொன்ண ஒரு பையன் காதலிச்சான் அவன் பெரிய சாதிக்காரன்னு கேழ்வி.. பையன் வூட்டுல கல்யாணத்துக்கு ஒத்துகுல.ஆனா ஆசைப்பட்ட பொண்ண அவன் வுடுலயே. கட்டிகினான். நல்ல பையன்.பட்னமோ பம்பாயோ பூட்டான்’
‘யாரு அந்த பையன் சாரு’

‘அந்த வூட்டுக்கு பின்னாடி வூட்டுக்காரன் சாரு அவனும் அவன் தகப்பனுக்கு ஒரே பையன்.’
‘அது கெடக்கு வுடுங்க நமக்கு எதுக்கு ஊரு கதை. என் வூட்டுல கொழாயில தண்ணி சுகுறா வர்ராமாதிரி உங்க வேல இருக்குணும். நானு கெளம்புறேன் என்ன’
அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். போஸ்டாபீஸ் தெருவில் அவன் வீட்டுக்கு நேராக பெரிய மீன் கூடை கட்டிய சைக்கிள் நின்றது. வீட்டிலிருந்து ஒரு நடுத்தர வயது ஆசாமி தெருவுக்கு வந்தார்.
‘வாங்க சாரு நீங்க வந்தீங்கன்னு என் வூட்டுக்காரி சொன்னாங்க எனக்கு ரொம்ப. சந்தோஷோம்’
‘ நீங்க தான் குடியிருக்குறதா’ அவனிடம் கேட்டு முடித்தான்..
துளசி மாடமும் பாரிஜாத ச்செடியும் தோட்டத்தில் வைத்து விட்டுப்போனது காணவில்லை.மனம் சற்று அவனுக்குக் கனத்துப்போனது.

‘ மொட்டை மாடியில் ஏறிப்பார்த்தான். எப்போதும் அது அவனுக்கு பழக்கம்தான். உப்பில் தோய்ந்த மீன்கள் மொட்டைமாடி தரைமுழுவதும் விரவி க்காய்ந்துகொன்டிருந்தன. அவனுக்கு வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. மாடிப்படியிலேயே நின்று பார்த்துவிட்டு கீழ் இறங்கினான்.
‘சும்மா சொல்லக்கூடதுங்க வுங்க வூடு நல்ல ராசியான வூடுதான். எம் பொண்ணுக்கு இந்த வூட்டுக்கு வந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் முடிஞ்சி போச்சி. மாப்பிளதம்பி வூடும் தே இருக்குதே பின் வூீடு. பையனும் நல்ல பையன் உங்களுக்கு தெரிஞ்சிம் இருக்கும்.’ மீன் கூடையை இறுக்கி கட்டிக்கொண்டே அவனிடம் சொல்லிக்கொண்டார்.

‘கெளம்பறேன் நேரம் ஆவுது’ என்றான் அவன்.
‘முனிசிபாலிடி தண்ணி வூட்டு க்குள்ள வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணி அட்வான்சும் நீங்க சொன்ன அதே ஆளுகிட்ட கொடுத்து இருக்கன். சாய்ந்திரமா வேலை ஆரம்பிக்க ஆளுங்க வரும்’
‘அதாங்க ரைட்டு. போனமா வேல முடிஞ்சிதான்னு இருக்குணும். உங்களை எனக்கு ரெம்ப ரெம்ப புடிச்சிருக்குது சாரு’ மீன்காரரின் மனைவி சொல்லி நிறுத்தினாள்.யாரும் அவனைப்புகழ்ந்துவிட்டால் அப்புறம் கொஞ்சம் அழகு கூடித்தான் தெரிகிறார்கள்.

வீட்டு வாசலில் இருந்த பெரியவர் ‘புதுசா வந்த சரக்குல வீராணம் ஏரி வாளைவ இருந்தா குடுத்தனுப்புலாம். சமுத்திரகுப்பத்துலயும் மீனுவ இருக்குதுன்னு சொன்னாலும் ஏரி மீனுவ எண்ணைக்கும் ராச வம்ஷம்’ என்றார்.
யாருக்குமே ஏனோ இது காதில் விழவில்லை..
‘ வீட்டுக்கு குடி இருக்க வர்ரவங்க சைவமான்னு கேட்டு அத மொதல்ல தெரிஞ்சிகணும் அப்புறமா அந்த அடவான்சை வாங்கணும்னு’ அவன் மனைவி என்றோ சொன்னது கொஞ்சம் நினைவுக்கு வந்தது. …

நன்றி திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Jan 05, 2016 7:59 am

கோணல் மன(ர)ங்கள்
-------------
என்.துளசி அண்ணாமலை
-----------------
“இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ”

கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால் அதற்குள் மாமியாரிடமிருந்து இரு அழைப்புகள் வந்து விட்டன.
“இதோ வந்துட்டேம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே கூடத்துக்கு வர, சன் தொலைக்காட்சியில் சக்தி விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அடுத்த நிகழ்ச்சியான திரைப்படத்தைக்காண இராசாத்தியின் கணவர் குமரன் சோபா நாற்காலியில் வாகாக உடலைச் சாய்த்தார்.

மாமியார் கல்யாணி தன்னுடைய மூக்குக் கண்ணாடியை அதன் கூட்டுக்குள் வைத்து மூடிவிட்டு நிமிர்ந்தாள். இராசாத்தி, மாமியாரின் கையைப்பற்றி வலிக்காமல் தூக்கிவிட்டாள். மாமியாருக்கு எண்பது வயதாகிவிட்டது. ஆனால், கண்பார்வை இன்னும் நன்றாகவே இருந்தது. தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும்போதும் பத்திரிக்கையோ கதைப்புத்தகமோ வாசிக்கும்போதும் மட்டுமே கண்ணாடியைப் பயன்படுத்துவாள். வெற்றிலைக் காவியேறிய பற்களால் இன்னமும் பட்டாணியையும் பக்கோடாவையும் சர்வ சாதாரணமாக மென்று தின்னக் கூடிய பல்வலிமை மிகுந்திருந்தது. எந்த சூழ்நிலையிலும் எந்த விசயத்தையும் நிதானம் தவறாமல்ஆழ்ந்து சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றலில் குறைவில்லை. அதேவேளையில், மற்றவர்களின் மனம் நோகப் பேசுவதிலும், தொலைக்காட்சி நாடகங்களைப் பார்க்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் “நச்” “நச்”சென்று இராசாத்தியை ஏசுவதிலும் சளைக்க மாட்டாள்.

இராசாத்திக்கு இதெல்லாம் பழகிப்போய் விட்டது. அதனால் மாமியாரின் குத்தல் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தமாட்டாள். மாமியார் மட்டுமல்ல, அவளுடைய கணவரும், பெண்ணும் பிள்ளையும் கூட பல சமயங்களில் அவளைப் புண்படுத்தத் தவறியதில்லை. மனம் வேதனைப்படும் போதெல்லாம் அவளுக்குப் புகலிடம் தந்தது, சமையலறையக் கடந்த புழக்கடைப் பக்கம்தான். வேலியை ஒட்டி ஒரு மூலையில் வளர்ந்திருந்த இரண்டு வாழை மரங்களைச் சுற்றி குட்டி வாழைக்கன்றுகள் கூட்டமாய் இரண்டடி உயரத்திற்கு முளைத்திருந்தன. மறுமூலையில் உயர்ந்து பரந்து வளர்ந்திருந்த அத்தி மரத்தில் பச்சையும் மஞ்சளும் இளஞ்சிவப்புமாக அத்திக்காய்களும் பழங்களும், ஒன்றாய்க் கூடிவாழும் குடும்ப உறுப்பினர்களைப் போல கொத்துக் கொத்தாகக் காய்த்திருந்தன.

இந்த மரத்தின் மிகப்பெரிய சிறப்பு, அதன் உயரமோ, பருமனோ, காய்களோ அல்ல! தரையிலிருந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்குப் பிறகு குறுக்கு வாட்டத்தில் சாய்வாக நீண்டு, பின்னர் நிமிர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்தது. அந்த வளைவில் தாராளமாக சாய்ந்து படுத்துக் கொள்ளலாம்.
இராசாத்தி பெரும்பாலும் அங்குதான் அமர்ந்து தன் மதிய உணவை உண்பாள். மரத்தின் தாழ்ந்த கிளை ஒன்றில் அவளுடைய செல்லமான சிவப்பு சிங்கர் வானொலிப்பெட்டி பதவிசாகத் தொங்கிக்கொண்டிருக்க, இரவு தூங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரங்களிலும் பாடிக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும். வேலிக்கும் சமையலறைக்கும் இடைப்பட்ட இடத்தில், மல்லிகை, ரோஜா, மனோரஞ்சிதம், கத்தரிக்காய், பச்சைமிளகாய், வெண்டைக்காய் என எல்லாமே இராசாத்தியின் கைவண்ணத்தாலும் உழைப்பாலும் செழித்து வளர்ந்திருந்தன. சமையற்கட்டில் சமைக்கும் நேரங்களில் வானொலிப்பெட்டி அங்கே இடம்பெயர்ந்திருக்கும்.
“ரேடியோ பையித்தியம்” என்று குடும்பத்தினர் அவளைக் கேலி செய்தலும், இராசாத்தி அதைப் பொருட்படுத்துவதில்லை.

இராசாத்தி வசதி குறைவான குடும்பத்திலிருந்து வந்தவள். அவளத் தன் வீட்டுக்கு மருமகளாக அழைத்து வந்து, மகாராணியாக உயர்த்தி வைத்துவிட்டதாக கல்யாணிக்கு நினைப்பு.
“ஏதோ நீ செய்த புண்ணியம், நீ என் வீட்டுக்கு மருமகளாக வந்தது. இல்லை யென்றால், உன் அப்பன் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு, எம்புள்ள மாதிரி ஒருவன் உனக்குப் புருசனா கிடைப்பானா, என்ன?” என்று அடிக்கடி அவளைக் குத்திக்காட்டத் தவறுவதில்லை.
ஆரம்பத்தில் கணவனிடம் சொல்லிக் குறைபட்டுக் கொள்வாள். ஆனால், போகப்போக அவ்வாறு குறைபட்டுக் கொள்வதால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். கணவன் தன்மீது கொண்டிருக்கும் அன்பில் குறைவில்லை. மாமியார் தேளாகக் கொட்டினாலும், கணவன் நல்ல நண்பனாக நடந்து கொண்டது பெரும் ஆறுதல். ஆனால், மாமியாரின் முன்னிலையில் நண்பன் காணாமல் போய்விடுவான். மாறாக, அங்கே தாயின் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாத ‘ஆமாம்சாமிப் பிள்ளையாக’ அவன் அமர்ந்திருப்பான். கணவன்தான் இப்படியென்றால், பெற்ற பிள்ளையையும் பெண்ணையும் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களும் பாட்டியின் கைப்பிள்ளைகள்தாம்.
நாளாக ஆக, வானொலிப்பெட்டி அன்புத் தோழியானது. அறிவிப்பாளர்கள் அவளுடைய நலம் விரும்பிகள் ஆனார்கள். பாடகர்களும் நாடக நடிகர்களும் அவளுடைய உறவினர்கள் ஆனார்கள். இசையும் பாட்டும் அவளுடைய உலகமானது.

முதன்முதலில் “இசை சொல்லும் கதை” எழுதத் தொடங்கி, பின்னர் வானொலிக்கும் பத்திரிக்கைகளுக்கும் எழுத ஆரம்பித்தாள். தன்னுடைய சொந்தப் பெயரை மறைத்து, “செந்தாமரை” என்ற தன் பாட்டியின் பெயரில் எழுதினாள். தான் எழுதுவதைக் கூட குடும்பத்தாரிடமிருந்து மறைத்து வந்தாள்.
அவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டும், பாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் வேலைகளைச் செய்வது ஒன்று புதிதல்ல. இப்போதும் அப்படித்தான். சற்றுமுன் கேட்ட பாடலை அசைபோட்டவாறே மாமியாரின் கையைப்பற்றித் தூக்கிவிட்டாள்.

தடுமாறிக் கொண்டே எழுந்த மாமியார், இராசாத்தியின் முகபாவத்தைப் பார்த்து முகவாயில் இடித்தாள். திடுக்கிட்ட இராசாத்தி, “ஆங்” என்று விழித்தாள்.
“என்னடி நெனப்பு?” என்று மருமகளை முறைத்தாள்.
விழிகளில் மளுக்கென்று கண்ணீர் தளும்பி, ‘இதோ, கீழே விழப்போகிறேன்” என்று பயமுறுத்த, மீண்டும் முகவாயில் ஒரு தாக்குதல் நிகழ்ந்தது. கண்ணீர்த்துளிகள் பட்டென்று விடைபெற்று கன்னங்களில் இறங்கி ஓடின. அதனைத் துடைக்கவும் மறந்து, மாமியாரைக் கைத்தாங்களாகப் பற்றி படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள். சுருக்கம் ஏதுமின்றி மிக நேர்த்தியாகத் தெரிந்த படுக்கை மாமியார வாயடைக்கச் செய்தது. குறை சொல்ல வழியேதுமில்லை. போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திவிட்டு, விட்ட வேலையைத் தொடரச் சென்றாள் இராசாத்தி.
“அம்மா! நேத்தே சொன்னேனே, என்னோட சட்டையை அயர்ன் பண்ணி வைய்யின்னு…….”
மூத்தமகன் அன்பரசன் தன்னுடைய காற்சட்டையையும் பனியனையும் அவளுடைய முகத்தில் மூர்க்கத்தனமாக விட்டெறிந்தான்.

திகைப்பும் அவமானமும் ஒருங்கே அவளைத் தாக்க, தன் முன் எறியப்பட்ட துணிமணிகளைக் கையிலெடுத்தாள்.
“எப்பப் பார்த்தாலும் ரேடியோவைக் கேட்டுக்கிட்டு, பையித்தியம் மாதிரி பேசிக்கிட்டு…சிரிச்சிக்கிட்டு……உன்னை ‘அம்மா’ன்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு….. வேலை செய்ய முடியல்லன்னா ஒரு வேலைக்காரிய வைச்சுக்க வேண்டியதுதானே? இந்த வீட்டுல பணத்துக்கா பஞ்சம்?”
நஞ்சில் தோய்த்த சுடுசொற்களை அவள்மீது அள்ளித் தெளித்துவிட்டு முன்பக்கம் போய்விட்டான்.
இராசாத்தியின் உடல் பலமே குன்றிவிட்டாற்போலக் கூனிக்குறுகி அமர்ந்துவிட்டாள்.

‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?’ மணம் முடித்து மூன்று ஆண்டுகள் கழிந்தும் தாய்மை அடையாமல் நின்றவளை, வாய் கூசாமல் ‘மலடி’ என்று மாமியார் தேளாய்க் கொட்டி, அவளை நாளொரு சுடுசொல்லும், பொழுதொரு இடியுமாகத் துன்புறுத்தியபோது, ‘இதோ….உன் வேதனையத் தீர்க்க வந்தேன்’ என்று வந்துதித்த செல்லமகன்! தாயென்ற உயர் நிலையைத் தந்தவன்…..அதனாலேயே அவன்மீது அளவுகடந்த அன்பும் பாசமும் பெருகியிருந்தது. எல்லாருமே அவனை அன்பு மழையில் தோய்த்தெடுத்து, அவன் ஆற்றிய பெருங்குற்றங்களையும் அற்புத சாகசங்களாக, வீரதீர செயல்களாகப் போற்றிப் பாராட்டி, மொத்தத்தில் அவனை ஆணவக்காரனாக, முரட்டுத்தனம் மிகுந்தவனாக, மரியாதை தெரியாத மூர்க்கனாக வளர்த்துவிட்டனர். தன்னக் கண்டித்த தாயைப் புழுவினும் கீழாகப் பார்த்தான். தாய்க்கெதிராக அவனைத் தூண்டிவிட்ட பாட்டி, அவன் தன் பேச்சைக் கேட்டு நடக்கவேண்டும் என்பதற்காகவே அவன் கேட்டபோதெல்லாம் பணத்த தாராளமாகத் தந்து, அவனைத் தன் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். அடுத்துப் பிறந்த சங்கீதாவையும் அவ்வாறே கவனித்துக் கொண்டாள். இனித் திரும்பிப் பார்க்க வழியில்லை. அவர்களிடம் அன்பை எதிர்பார்ப்பதும் கல்லில் நார் உரித்த கதையே!
இராசாத்தி, மகனுடைய ஆடைகளை அயர்ன் பண்ணத் தொடங்கினாள். அவளுடைய மனதைப் படித்தாற் போல வானொலியில் பழம்பாடல் தொடர்ந்தது.

“மகனே நீ வந்தாய், மழலை சொல் தந்தாய், மாறாத செல்வமும் நீதானடா…
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணயும் ஏதுக்கம்மா…”
அந்த வைரவரிகள் இராசாத்தியின் இதய நரம்புகளைச் சுண்டி இழுத்தன.
“ஹா…என்ன தவறு செய்தேன், இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற?” என்று தன்னையே நொந்து கொண்டாலும், சற்று நேரத்தில் அந்தக் கழிவிரக்க உணர்வும் வானொலியிலிருந்து கசிந்த பாடல்களில் கரைந்து போயின. விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.
ஒரு வாரமாக சங்கீதா கல்லூரியிலிருந்து தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். கணவரும் கண்டுகொள்ளவில்லை. சனிக்கிழமை காலையில் அவள் கல்லூரிக்குப் போகிறேன் என்று புறப்பட்டபோது, மனம் தாளாமல் இராசாத்தி கேட்டேவிட்டாள்.

“சங்கீதா, இன்றைக்கு உனக்கு விடுமுறை இல்லையா? எங்கே புறப்பட்டு விட்டாய்?”
தாயின் கேள்வி சங்கீதாவை மட்டுமல்ல, அன்பரசனையும் கலியாணியையும் கூட திரும்பிப் பார்க்கவைத்தது.
சண்டைக்கோழிபோல சிலிர்த்துக் கொண்டு நின்றாள் சங்கீதா. “நான் எங்கே போகிறேன் என்று உனக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. கல்லூரியைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? போய் அந்தக் கோணல் மரத்துக்கிட்ட கேட்டுக்கோ!”

சங்கீதா பேசத்தொடங்கியதும் அன்பரசனும் மாமியாரும் உடன் சேர்ந்து கொண்டனர். அவர்களுடைய கூச்சலையும் மீறிக்கொண்டு குமரனின் குரல் ஓங்கி ஒலித்தது.
“அம்மா, போதும் நிறுத்துங்க! சங்கீதா! உன்னுடைய தாயின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவள் நீ! அவள் உன் தாய் என்பதை மறந்து விடாதே!” என்று அவருடைய குரல் ஓங்கி ஒலித்ததும், கல்யாணியும் அன்பரசனும் வாயடைத்துப் போயினர்.
இராசாத்திக்கு மிகவும் அவமானமாக இருந்தது. பொங்கிவந்த அழுகையை மறைத்துக் கொண்டு புழக்கடைப்பக்கம் வந்தாள். உடல் தள்ளாடியது.
கோணல் அத்திமரம் அவளை ‘வா மகளே, வா!’ என்று அழைத்தது. ஓடிப்போய் அதன்மீது சாய்ந்து படுத்தாள். அழுகையினால் உடல் குலுங்கியது. அத்திமர இலைகளில் சில அவள்மீது விழுந்தன.
‘அழாதே மகளே!’ என்று ஆறுதல் கூறுவதைப்போல உணர்ந்தாள். மேலும் அழுதாள். இத்தனை வருடங்களாக ஏற்படாத துயரம் இன்று இதயம் முழுவதும் பரவி, அவளை பலவீனப்படுத்தியது. ஏன்? எத்தனையோ முறை எல்லருமே தன்னை அவமானப்படுத்தியபோது வராத துயரம், இப்போது மட்டும் ஏன் வந்தது? அப்படியானால் இத்தனைக் காலமும் என் இதயம் இவர்களுடைய அன்புக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததா? இராசாத்தியால் மேலும் சிந்திக்க முடியவில்ல. இந்தக் குடும்பத்தினரின் உதாசீனம் என்னைப் பாதிக்கவில்ல என்று இத்தனைக் காலமும் நான் என்னையே ஏமாற்றிக் கொண்டிருந்தேனா?
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பெண் எழுத்தாளரின் பேட்டி இப்போது நினைவில் வந்து ஊடாடியது.
“மாமியாரின் கொடுமையும், கணவரின் உதாசீனமும் தான் இரண்டு நாவல்களை எழுத எனக்குத் துணிவையும் ஆற்றலையும் தந்தது!” என்று தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
உண்மைதான். இந்தக் குடும்பத்தின் உதாசீனம்தானே என்னை எழுதவே தூண்டியது! அப்படியிருக்க, இவர்களுக்கு நான் ஏன் மரியாதை தரவேண்டும்?
வெகுநேரம் அப்படியே படுத்திருந்தவளை வானொலி உசுப்பியது. அதில் ஒலித்த அறிவிப்பும் அவளைத் துள்ளியெழ வைத்தது. உடனே உற்சாகமும் பீறிட்டு எழுந்தது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டபம் வருகையாளர்களால் கலகலத்துக் கொண்டிருந்தது. இருக்கைகள் ஒவ்வொன்றாக நிரம்பிக் கொண்டிருந்தன. இன்னும் சில
நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கிவிடும். நீலவண்ணப் பட்டுச் சேலையில் பட்டாம்பூச்சி போலத் தன் தோழிகளோடு அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த தன் பேத்தியைக் கண்கொட்டாமல் பார்த்த கல்யாணி, அருகில் அமர்ந்திருந்த தன் மகனிடம், “பார்த்தாயா உன் மகளை? என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது” என்று பூரித்தாள்.

குமரனும் அதே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஆனந்தமாக அனுபவித்தார். அதேவேளையில் மண்டபத்தின் உள்வாசலில் அன்பரசன் தன் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.
அவன் முகத்தில்தான் எவ்வளவு கம்பீரம்? கம்பீரமா, ஆணவமா? மகன் நல்ல பணி யில் அமர்ந்து விட்டால், அவனுக்கு மண்முடித்துவிட வேண்டும். மகள் இன்னும் இரண்டு வருடங்களில் படிப்பை முடித்து விடுவாள். அவளையும் ஒரு சிறப்பான பணியில் அமர்த்தி, பொறுப்பானதும் மேன்மையானதுமான வேலையில் இருத்திவிட வேண்டும். அப்புறம் என் கடமைகள் யாவும் முடிந்து விடும்….. பிறகு…’

குமரன் பல்வேறு சிந்தனைகளோடு தன் அருகில் அமர்ந்திருக்கும் மனைவியைப் பார்த்தார். கரைகளில் சிவப்பு ரோஜாக்களைக் கொட்டியிருந்த வெண்ணிறப் பட்டுப் புடவையில் தேவதைபோல வீற்றிருந்தாள் இராசாத்தி. இயற்கையிலேயே நீண்ட, அடர்த்தியான கூந்தல் இடுப்புவரை நீண்டிருக்கும். இன்று அந்தக் கூந்தலை மிக நேர்த்தியான கொண்டையாக முடித்து, இரட்டை ரோஜாக்களை வலப்பக்கமாகச் சூடியிருந்தாள். முகத்தில் அளவான மேல்பூச்சு. கர்மயோகி போல அமர்ந்து மேடை நிகழ்ச்சிகளில் கண்பதித்திருந்தாள். முகத்தில் எவ்விதமான சலனமுமில்லை.

“அப்பா, இன்று பல்கலைக்கத்தில் ஒரு முக்கியமான விழா இருக்கின்றது. மாணவர்களான நாங்கள் கண்டிப்பாகக் கலந்துகொள்ளவேண்டும். நீங்களும் வாங்க!” என்ற சங்கீதாவின் இடைவிடாத நச்சரிப்புக்காகத்தான் இங்கு குமரனும் கல்யாணியும் வந்திருந்தனர். போனால் போகிறதென்று இராசாத்தியையும் உடன் அழைத்து வந்திருந்தனர்.

தேசியகீதம், தமிழ்வாழ்த்து, பரதநாட்டியம், வரவேற்புரை, தலைமையுரை, தகவல்துறை அமைச்சரின் சிறப்புரை என்று எதுவுமே குமரனையும் கல்யாணியையும் கவரவில்லை. சங்கீதா மேடையில் தோன்றப் போகின்றாள் என்ற எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே மனதில் தேங்கி நின்றது. காலந்தாழ்த்தி வீடு திரும்பியதற்கான காரணம், இன்றைய விழாவில் கலைநிகழ்ச்சியைப் படைக்கவிருப்பதாகக் கூறியிருந்தாள். எனவே, ஆவல் மேலிடக் காத்திருந்தபோது, மின்னல் எஃப்,எம்.மின் தேசிய அளவிலான நாவல் எழுதும் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மூன்றாவது பரிசு, இரண்டாவது பரிசு என்று அறிவிக்கப்பட்டு, வெற்றியாளர்களின் புகைப்படங்கள் காணொலித்திரையில் தெரிந்தன. அவர்களுக்குரிய மாலை, மரியாதை முதலியன நடந்தேறின.

தொடர்ந்து, “முதல் பரிசைத் தட்டிச் செல்லும் நாவல் ஆசிரியை திருமதி செந்தாமரை” என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேடையின் காணொலித்திரையில் தோன்றிய புகைப்படத்தைப் பார்த்து கல்யாணி திடுக்கிட்டாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேடையில் இராசாத்தி வந்து நின்றாள்! அவள் எப்போது மேடைக்குச் சென்றாள்?

குமரனும் அன்பரசனும் விழிகளை இமைக்கவும் மறந்தனர். அன்பரசனின் நண்பர்கள் ஆர்ப்பரித்து கரவோசை எழுப்பினர்!

சங்கீதாவின் கலகல சிரிப்பு நின்றது. இதயம் துடிக்க மறந்தது.
‘பையித்தியம்’ என்று எள்ளி நகையாடிய தன் தாயா புகழ்பெற்ற எழுத்தாளர் செந்தாமரை?’ மனம் குன்றியவளாகத் தாயைப் பார்த்தாள். இராசாத்திக்குப் பொன்னாடையும் மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது. நாட்டின் தகவல்துறை அமைச்சரின் கரங்களால் நினைவுப்பரிசும் ஊக்குவிப்புத் தொகை பத்தாயிரம் ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.

“நீங்கள் எழுதுவதற்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர்களைப்பற்றிக் கூறுங்கள்”. விழா நெறியாளர் ஆவலுடன் இராசாத்தியைப் பார்த்தார்.
மேடையிலிருந்து முன்னூற்றி அறுபது பாகையில் இராசாத்தியின் பார்வை பொதுமக்களை அளந்தது.
“நான் எழுதுவதற்குக் காரணம் என்னுடைய இனிய தோழி, வானொலிப்பெட்டியும், எழுத்துலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்திய மின்னல் எஃப்.எம்.பண்பலையும்தான். எனக்கு ஒவ்வொரு நாளும் உற்சாகம் தந்து எழுதத் தூண்டியவர்கள் என்னுடைய குடும்பத்தினர்! அவர்களுக்கு இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இராசாத்தி கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் முகத்தில் அறைந்தாற் போலிருந்தது குடும்பத்தினருக்கு. குறிப்பாக சங்கீதாவுக்கு. தாயைப் பார்த்தாள். ‘பையித்தியம்’ என்று ஒதுக்கப்பட்ட தாய், சதா அடுப்பங்கரையே கதி, வீட்டின் புழக்கடைப்பக்கமே உலகம் என்று அடைந்து கிடந்தவள், இன்று அண்ணாந்து பார்த்தாலும் எட்ட முடியாத இமயமாக உயர்ந்து நிற்கின்றாள்! அவள் எங்கே? அந்தத் தாயின் உன்னதத்தையும் சிறப்பையும் புரிந்து கொள்ள கடுகளவுகூட முயற்சி செய்யாத தான் எங்கே?
உடல் கூனிக்குறுக, நெஞ்சு நடுநடுங்க, விழிநீர் பார்வையை மறைக்க, தாயை நோக்கிக் கரங்களைக் குவித்தாள். இராசாத்தி பெற்றமகள்.

நன்றி ;திண்ணை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கதை படைப்புகள்  Empty Re: கதை படைப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum