தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 2:33 pm

First topic message reminder :

புரட்சி கவிஞர் பாரதிதாசனின் "பாண்டியன் பரிசு"

பாவேந்தர் முன்னுரை

உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த
சொற்களால் ஒன்றைச் சொல்லி முடித்து விடலாம்.

"பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்"

என்றார் வள்ளுவர்.

முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்;
மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும்எனத் தோன்றவே,
ஏறக்குறைய நானுாறு எண் சீர் விருத்தங்களால்
எழுதி முடித்தேன்.

தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள்
இச்செய்யுளின் பொருளை எனின் - அதுதான்
எனக்குமகிழ்ச்சி யூட்டுவது!

எளிய நடை ஒன்றாலேயே தமிழின் மேன்மையைத்
தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் என்பது
என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பாரதிதாசன்.

இவர்கள் யார்?

வேலன்  கதைத் தலைவன்
அன்னம்  கதைத் தலைவி
வீரப்பன்  வேலனின் தந்தை; திருடர் தலைவன்
ஆத்தாக் கிழவி  வீரப்பன் மனைவி
கதிரைவேல்  அன்னத்தின் தந்தை; கதிர் நாட்டரசன்
கண்ணுக்கினியாள்  கதிர் நாட்டரசி
வேழமன்னன்  வேழ நாட்டரசன்
நரிக்கண்ணன்  அன்னத்தின் தாய்மாமன்; வேழநாட்டுப் படைத்தலைவன்
பொன்னப்பன்  நரிக்கண்ணன் மகன்
சீனி கணக்காயர்;  வேலனின் ஆசிரியர்
நீலன் கதிர்  நாட்டமைச்சன் மகன்
நீலி நீலனின் காதலி; அன்னத்தின் தோழி


Last edited by முழுமுதலோன் on Sat Mar 01, 2014 3:05 pm; edited 1 time in total (Reason for editing : திருத்தம்)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 2:57 pm

இயல் 76

வேலன் நெஞ்சம் அன்னத்தின் மேல்!

சன்னலிலே தென்றல்வந்து குளிர்வி ளைக்கும்!
தனியறையோ அமைதியினைச் செய்யும்; மிக்க
மென்மையுறு பஞ்சணையோ துயில்க என்று
விளம்பும்! அவன் உளம்அங்கே இருந்தால் தானே!
கன்னலிலே சாறெடுத்துத் தமிழ்கு ழைத்துக்
கனிஇதழாற் பரிமாறும் இனிய சொல்லாள்
அன்னத்தின் மேல்வைத்தான் நெஞ்சை வேலன்,
ஐயத்தை மேன்மேலும் உடையா னாகி.

விண்ணிடையே பன்னூறா யிரம்மீன் கட்கு
வெண்ணிலவு போல்அந்த மங்கை, அன்னம்
மண்ணிடையே பெண்ணினத்துக் கொருத்தி அன்றோ?
வாழ்விடையே பெருவாழ்வு வாழ்ந்தாள்; என்றன்
கண்ணிடையே மலர்க்காடா னாளே! உள்ளக்
கருத்திடையே மணமானா ளேஎன் செய்வேன்!
நுண்ணிடையாள் எனக்குத்தா னோஅல் லாது
நோயிடையே சாகத்தான் பிறந்துள் ளேனோ!

தேனைப்போல் மொழியுடையாள்; அன்ற லர்ந்த
செந்தாமரை மலர்போல் முகத்தாள்; கெண்டை
மீனைப்போல் விழியுடையாள்; விட்ட திர்ந்த
மின்னைப்போல் நுண்ணிடையாள்! யாவுங் கொண்ட
வானைப்போல் உயர்வாழ்வு வாய்ந்தாள்; என்றன்
மகிழ்ச்சிக்கு மகிழ்ந்துநான் நைந்தால் நையும்
மானைப்போன் றாள்எனக்குத் தானோ அன்றி
வறிதேநான் சாகத்தான் பிறந்துள் ளேனோ!

பயிரடைந்த ஊட்டத்தி னூடு தோன்றும்
பச்சைப் பசுந்தோகை மயிலோ! நல்ல
உயிரடைந்த ஓவியமோ! அச்சில் வார்த்த
ஒளியடைந்த வடிவமோ! வைய மென்றும்
பெயரடைந்த பெருவாழ்வு வாய்ந்தாள்! என்மேல்
பெண்ணடைந்த மகிழ்ச்சிகோர் எல்லை யில்லை
உயர்வடைந்தாள் எனக்குதா னோஅல் லாமே
ஊன்மெலிந்து சாகத்தான் பிறந்துள் ளேனோ!

திருந்தாதோ முல்லையெனச் சிரிப்பாள்! நன்றே
செழிக்காதோ வையமென அறங்கள் செய்வாள்!
அருந்தாதோ தும்பியென வாய்ம லர்வாள்!
அடையாதோ அன்னம் எனும் நடையாள்! நாடு
வருந்தாதோ எனஆளும் வாழ்வு வாய்ந்தாள்!
வாய்க்காதோ என்அருள்தான் என்று நோக்கி
இருந்தாளே எனக்குத்தா னோஅல் லாமே
இடருற்றுச் சாகத்தான் பிறந்திட் டேனோ!

கொம்பென்றால் அவள்மெய்யைத் தார்வ ருந்தும்!
கொடிஎன்றால் அவளிடையை மின்வ ருந்தும்!
அம்பென்றால் அவள்விழியை மீன்வ ருந்தும்!
அலைஎன்றால் அவள்குழலை முகில்வ ருந்தும்!
செம்பென்றால் பொன்ஈயும் வாழ்வு வாய்ந்தாள்
செயல்என்றால் "உளம்வாய்மெய் உனக்கே ஆகும்
நம்பென்பாள்!" எனக்குத்தா னோஅல் லாது
நலிவுற்றுச் சாகத்தான் பிறந்திட் டேனோ!

பொன்னிழையால் பூப்போட்ட நீலப் பட்டுப்
புடவையொடு நடையழகி கண்டேன்; ஆங்கோர்
புன்னைமரம் மலர்குலுங்க நடந்த தென்ன
புதுமையென நான்வியந்தேன்! இவ்வை யத்தில்
மன்னுமிள வரசிஎனும் வாழ்வு வாய்ந்தாள்
மலர்விழியால் அருட்பிச்சை கேட்பாள் என்னை!
அன்னமவள் எனக்குத்தா னோஅல் லாமே
அகம்நொந்து சாகத்தான் பிறந்துள் ளேனோ!

ஆடப்போம் புனலிலெலாம் அவளே; காற்றில்
அசையப்போம் பொழிலிலெலாம் அவளே; கண்ணால்
தேடப்போம் பொருளிலெலாம் அவளே; நேரில்
தின்னப்போம் சுவையிலெலாம் அவளே;வண்டு
பாடப்போம் மலரிலெலாம் அவளே! மேற்கில்
படுகதிரில் அவள்வடிவே காண்பேன் என்று
வாடக்கண் துயிலாமல் இருந்தான் வேலன்
மலர்ந்திட்ட காலையிலும் அவளைக் கண்டான்.

இயல் 77

ஊர்ப் பேச்சு.

வடிந்ததுவே கருவண்ண இரவும்! ஆர்ந்து
வழிந்ததுவே பொன்வண்ணப் பகலும்! எங்கும்
ஒடிந்தது தீயோன்பிடித்த கொடுங்கோல்! வானில்
உயர்ந்ததுநல் லோரின்கை! சிலர்அ றிந்து
முடிந்ததுபூ தச்சூழ்ச்சி எனம கிழ்ந்தார்!
மூளுகின்ற அச்சமினி இல்லை என்றார்!
கடிந்துரைத்தார் நரியானைக் கைகள் கொட்டிக்
களித்திடுவார் பாடிடுவார், ஆடு வார்கள்!

அரசனிது கேள்வியுற்றான், வியந்தான்! சென்றே
அப்பிணங்க ளைக்கண்டான்; நரிக்கண் ணற்கு
வரும்இந்த நிலைக்கிரக்கம் கொண்டா னேனும்
வஞ்சகர்க்கு வாய்ப்பதுதான் வாய்த்த தென்று
கருதினான்; பூதமென வந்த தாலே
கட்டோடு மாண்டுவிட்டான். மாளச் செய்த
ஒருகூட்டம் உண்டென்றால் அதனை நான்தான்
உண்டாக்கி னேன்என்றான் சட்டத் தாலே.

தொல்லைஇனிக் கதிர்நாட்டுக் கில்லை பூதச்
சூழ்ச்சியோ வேரற்றுப் போன தாலே!
"வில்லைநிகர் நுதலுடைய அன்னம், பேழை
வேண்டுகின்றாள் அதன்முடிவு காண வேண்டும்.
கல்லையெலாம் மலையையெலாம் கட்டி டங்கள்
காட்சிதரும் மன்றமெலாம் அகழ்ந்தும் சாய்த்தும்
இல்லைஇது வரைக்குமே அருமைப் பேழை
இருக்கின்ற தெனும்பேச்சு" என்றான் மன்னன்.

வேழவனோ இவ்வாறு கூறக் கேட்டு
விளம்பிடுவான் நல்லமைச்சன் "மன்னர் மன்னா!
பேழையினைக் காண்பதுவும் எந்த நாளோ!
பெருநாட்கள் நாமிங்குக் கழிக்க லாமோ!
ஏழெட்டு நாட்களிலே பேழை கிட்டா
திருந்திட்டால் கதிர்நாட்டின் ஆட்சி தன்னை
மாழையெனும் தங்களரும் மருக ருக்கு
வழங்குவதே ஒழுங்காகும்" என்று சொன்னான்.

இயல் 78

வேழமன்னன் "ஏழுநாளில் பேழை அகப்படா விட்டால் கதிர்நாடு மாழைக்கு முடிசூட்டப் படும்"
என்று பறை அறைவித்தான்.

எவரெதனைச் சொன்னாலும் ஆம் ஆம் என்றே
இயம்புகின்ற வேழத்தான் இதையும் ஒப்பித்
தவறொன்றுமில்லைஇதில் ஏழு நாட்கள்
தவணையிட்டுப் பறையறையச் சொல்க என்றான்!
நவிலலுற்றான் எவ்விடத்தும் வள்ளு வன்போய்!
நாடெல்லாம் முரசொலியைக் கேட்டார் மக்கள்.
இவண்ஏழு நாட்களிலே பேழை காணா
திருக்குமெனில் மாழைக்கே கதிர்நா டாகும்.

சிறுகுடிலில் நல்ஆத்தா இருந்தாள்! ஆங்கே
தேனிதழாள் அன்னந்தன் விழிநீர் சிந்த
இறையவனாம் வேழத்தான் சொன்ன வண்ணம்
ஏழுநாள் போய்விட்டால் நாடும் போமே!
அறையாயோ ஒருவழியை ஆத்தா என்றே
அழுதிருந்தாள்! வீரப்பர், கதிர்நாட் டாச்சி
பெறுவாய்நீ என்றாரே அவரைக் காணப்
பெறுவேனோ எங்குள்ளார்? பேசாய் என்றாள்.

இடைத்துகிலால் கண்துடைத்தே அன்ன மேஎன்
அன்புக்கு வாய்ப்பிடமே! என்து ணைவர்
நொடிப்போதும் சோர்வின்றிப் பேழை தன்னை
நோக்கும்விழி மூடாமல் தேடு கின்றார்.
துடிக்கும்நரிக் கண்ணனவன் ஒழிந்தான்; நீயே
தொட்டவாள் அவன்குடியை அழித்த துண்டு.
கொடிக்குநிகர் இடையாளே கதிர்நாட் டாட்சி
கொள்ளுநாள் இதுஅன்றோ! என்றாள் ஆத்தா.

வாயோரம் "உயிர்வாங்கும் சிரிப்பு" மின்னி
வழிகின்ற வேலவனின் திருமு கத்தில்
மாயாத என்நெஞ்சம் சென்று சென்று
மாய்வதனை இவ்வையம் அறிவ துண்டோ?
தீயோரும் என்நிலைமை அறிந்தால், என்றன்
திருப்பேழை தாராரோ எனத்து டித்துப்
பாயோரம் ஆத்தாவின் மடியின் மீது
தலைசாய்த்துப் படுத்தபடி பலநி னைத்தாள்.

நான்குநாள் ஆயினவே! பேழை தன்னை
நாட்டாரில் ஒருபேதை கண்ட தாயும்
நான்கேட்க வில்லையே மலர்மு கத்தில்
நறைபெருக்கும் இதழானைப் பெறுவ துண்டோ?
வான்முகிலில் பெருங்கடலின் கீழ்ப்பால் இந்த
வையத்தில் பெருங்காட்டில் இருப்ப தாக
ஊன்செவியில் நான்கேட்கப் பெற்றால் என்றன்
உயிர்கொடுத்தும் பேழையினைப் பெறுவேன் அன்றோ!

எனத்துடித்தே எழுந்திடுவாள்! வீதி நோக்கி
எழில்நகரை உள்ளத்தால் நோக்கி நோக்கி
இனித்தேடும் இடம்இல்லை எனமு டித்தும்
இருகாலும் செல்லும்வழிச் சென்றி ருந்தாள்.
தனித்தாளும் அரசுபோல் துறவி யங்கே
தானொருபால் வீற்றிருந்தான் அரண்ம னைக்குள்!
கனிச்சாற்றை நிகர்க்கின்ற தமிழ றிந்த
கணக்காயர் முதற்பலரும் அருகி ருந்தார்.

கணக்காயர், "அறிஞரே, துறவி யாரே,
கடிதினிலே பாண்டியனார் பரிசு தன்னைத்
தணிக்காத காதலனார் வேலன் கொள்ளத்
தண்ணருளைப்புரியீரோ" என்று சொல்லத்
"துணுக்கமுறு கின்றதுவே என்றன் உள்ளம்
தூயபாண் டியன்பரிசு வௌியில் வந்தால்
பிணக்கங்கள் வஞ்சங்கள் பிறக்கும், தூய
பேழைநிலை என்னாமோ? கருத வேண்டும்!

ஆயினும்நான் பேழைதனை நாளைக் கீவேன்
அறநெறியின் மறவர்களில் ஒருவன் வேலன்!
தூயஅவ் வன்னமும்இக் கதிர்நா டாளத்
தோன்றியவள்! கவலைஏன்? நீவிர் போக
ஆயவெலம் நான்முடிப்பேன், என்று ரைத்தான்.
அகமகிழ்ந்தார் அங்கிருந்தார்; அகன்று போனார்;
ஆயிழையாள் நீலியவள் பொதுமன் றத்தில்
ஆளனிடம் அன்புசெய விரைவிற் சென்றாள்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 2:58 pm

இயல் 79

நீலன் நீலி பேச்சு

அன்பாகப் பேசியும்கை தொட்டும், தோளை
அணைத்தும்பின் முகத்தோடு முகமி ணைத்தும்
இன்பாக இரவுகழித் திடலாம் என்றே
எண்ணிச்சென் றாள்அந்த நீலி! நீலன்,
"முன்பாகச் சொல்லடிநீ பேழை பற்றி
முடிவென்ன செய்துள்ளார் அவர்தாம்" என்றான்.
"பின்பாகட் டும்சற்றே தமிழும் அன்பும்
பிசைந்தாற்போல் பேசியிருப் போமே" என்றாள்.

"மகிழ்ச்சிக்கோர் அடிப்படைதான் பேழைச் செய்தி
வற்றாத அன்பூற்றே சற்றே கேட்பாய்!
புகழ்ச்சிக்கே உரியவளாம் அன்னத் திற்குப்
பொன்முடியைச் சூட்டிவிட்டால் நாட்டார் பெற்ற
இகழ்ச்சிமுடி வடையுமடி! நமது நெஞ்சம்
இன்னலிலா திருக்குமடி! அப்போ தன்றோ
தொகுத்துவைத்த முத்தங்கள்; கொடுக்கல், வாங்கல்
தொழில்விரைந்து நடக்குமடி" என்றான் நீலன்.

நாளைக்குப் பேழைவரும் என்றாள் நீலி!
நற்பேழை இருப்பிடத்தைக் கேட்டான் நீலன்.
காளைக்கும் மங்கைக்கும் கணக்கா யர்க்கும்
காட்டுங்கால் காணுவீர் என்றாள்! தென்னம்
பாளைக்கு நிகரானநகைமு கத்தாய்
பகற்போதில் என்வீடு வருவாய்! இந்த
வேளைக்கு விடைகொடுப்பாய் என்று கூறி
விரைவாக நடந்திட்டான் வீடு நோக்கி.

இயல் 80

நீலன் வீடுசென்று, பேழையோடு வருவோனை மறித்துப்
பறிக்கச் சொல்லி ஆட்களை ஏவினான்.

வீடடைந்தான் நீலனவன்! பொழுதோ இன்னும்
விடியவில்லை! ஆட்கள்பலர் எவ்வி டத்தும்
காடடைந்த விலங்குகள்போல் உலவ லானார்
கடகடெனக் குதிரையினை நடத்து கின்றார்!
கூடடைந்த கிளிபோலக் குடிசை தன்னில்
கொடியிடையாள் இருந்திடுவாள்! விரைவில் அங்கே
ஓடிடுங்கள் என்றகுரல் கேட்கும் ஓர்பால்!
ஊக்கங்கொள் வீர்என்னும் ஒருகு ரல்தான்!

எவனேனும் பேழையொடு செல்வா னாயின்
எதிர்த்திடுவீர், பேழையினைப் பறிப்பீர் என்று
நவிலுமோர் குரல்! நீண்ட வாள்ம றைத்து
நடவுங்கள் என்றதட்டும் ஓர்கு ரல்தான்!
சுவரைப்போய்ப் பார்என்பான் ஒருவன்! பேழை
தோளின்மேல் வைத்தபடி நிற்கின் றான்பார்!
அவனைமறி என்றொருவன் கூறக் கேட்டே
அத்திமரத் தைஒருவன் குத்திநைவான்.

ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை
அங்கொருவன் தொட்டுதையும் பட்டு வீழ்ந்தான்;
காலடிஓ சைகாட்டா தொருவன் சென்று
கல்தூணை மற்போருக் கழைக்க லானான்!
வேலடியை ஆள்என்று நெருங்கி முட்கள்
வெடுக்கென்று தைத்ததினால் நடுக்கங் கொண்டான்!
மேலெழுந்த நிலவிலும்,இத் தொல்லை யாயின்
மிகுமிருட்டு வேளைஎனில் என்ஆ வாரோ?

ஆளொருவன் வரக்கண்டால் ஐந்து பேர்கள்
ஆரங்கே என்றதட்டி நிறுத்து மந்த
நாளிரவு மெதுவாக நடக்கக் கீழ்ப்பால்
நடுக்கடலில் இளங்கதிர்தான் நுனிமு ளைக்கும்
வேலையிலே கதிர்நாட்டின் மேற்கி னின்று
வேலன்ஒரு குதிரையின்மேல் பேழை யோடும்
வாளோடும் வருகின்றான்! அவனைச் சூழ்ந்து
மறவர்பலர் வருகின்றார் குதிரை மீதே .

இயல் 81

வேலன் பேழை தூக்கிக் குதிரைமேல் வர, எதிரிகள்
எதிர்க்க - வேலன் ஆட்களும் கை கலந்தார்கள்.

சீழ்க்கையடித் தேஒருவன், வேலன்! பேழை!
செல்லுங்கள் என்றுரைத்தான்! வேலன் மேலே
வாழ்க்கையிலே வன்பிணிகள் பாய்ந்த தைப்போல்
மறவர்பலர் வாளுருவிப் பாய்ந்திட் டார்கள்!
தாழ்க்கையின்றி எதித்தார்வே லன்கூட் டத்தார்!
சாய்ந்தனதோள் தலைகால்கள் தடத டென்று!
கீழ்க்கடலின் மிசைவந்த பரிதி அங்கே
கிடந்தஉடற் குருதியிலே கண்வி ழித்தான்.

கணக்காயர் மாணவரும், வீரப் பர்க்குக்
கையுதவி யானவரும் பகைக்கூட் டத்தைப்
பிணக்காடு செய்கின்றார்! பகைவர் தாமும்
பிளக்கின்றார் பல்லோரை! பேழை தன்னை
அணைத்தபடி வாள்சுழற்றும்வேலன் தன்னை
அழிப்பதுவே கருத்தாகப் பகைவர் கூட்டம்
தணற்காடாய்ச் சூழ்கையிலே பேழை காக்கத்
தட்டினான் குதிரையினைத் தறுகண் வேலன்.

பறந்ததுவே லன்குதிரை தெற்கு நோக்கி!
பகைவர்களும் தொடர்ந்தார்கள் வேலன் தன்னை!
சிறந்தகணக் காயர்நெடும் பரியும் ஆங்கே
செல்பகைமேற் சென்றதுசெஞ் சிறுத்தை போலே!
மறைந்திடுவான் வேலன்ஒரு காட்டில்! மேட்டில்
வாய்ந்திடுவான் பகைகாண! அவன்தி றத்தை
அறிந்துபகை பாயுங்கால் குதிரை தன்னை
ஆற்றினிலே நீந்துவிப்பான்; தோப்பில் மீள்வான்!

தன்னருமைப் பேழையொடு குதிரை தன்னைத்
தட்டுவான்; விரைவினிலே செலுத்து கின்றான்!
பின்தொடரும் பகைவர்சிலர் சோர்ந்து நிற்பார்!
பின்செல்லும் கணக்காயர் அவரைக் கொல்வார்!
இன்னல்தரும் பகைவர்தொகை குறையும் அங்கே!
என்றாலும் அத்தீயோர் தொடரு கின்றார்.
மின்னொளியாள் இன்னுயிர்போல் வாள்அன் னத்தின்
மீதுற்ற அன்புளத்தான்; தீது காணான்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 2:59 pm

இயல் 82

துறவியிடம் வேலன் நிலையைச் சொல்லுகிறான் ஒருவன்.

துறவியிடம் வந்தொருவன் வணங்கி நின்று
"தூயவனைப் பகைவர்பலர் தொடரு கின்றார்!
திறல்வேலன் பேழையுடன் திரியா நின்றான்!
வேலனொடு கணக்காயர் தாமும் சென்றார்!
முறைமையுடன் வேலனிடம் கிடைத்த பேழை
முரடர்களால் பறிபோகக் கூடும்" என்றான்!
துறவிஉளம் கலங்கினான், வேழ வன்பால்
சொல்லுகபோய் இதைஎன்றான்! சென்றான் அன்னோன்.

அவ்வேழ மன்னவனால் கதிர்நா டெங்கும்
அமைதிநிலை பெற்றது;தீ யோரால் யார்க்கும்
எவ்விடத்தும் தீங்கில்லை; நகர்க்காப் பாளர்
எங்கெங்கும் வாள்பிடித்து நின்றி ருந்தார்.
கவ்விற்று மாலைஇருள்! வேலன் தன்னைக்
காண்போமோ எனப்பலரும் ஐயுற் றார்கள்!
இவ்வளவில் வேலனையும் கொன்றி ருப்பார்
என்றுபலர் எண்ணியுளம் ஏங்கு வார்கள்!

நரிவாழ்வு வேரோடு சாய்ந்த பின்னும்
நாட்டினிலே அன்னத்தின் நலத்தைப் போக்க
இருப்பவர்தாம் யாரென்று கேட்பார் சில்லோர்!
இளவரசி அன்னத்தை அடைவ தற்கோ
எழிற்பேழை வேண்டும்! அதை வேலன் பெற்றான்;
பெற்றான்பால் பெறுவதற்கு முயலு கின்றார்!
ஒருபொருளிற் பற்றுடையார் அறத்தால் கொள்வார்;
ஒருசிலர்தீ நெறிச்செல்வார் என்றார் சில்லோர்!

குடிசையிலே நல்லாத்தா மயக்கத்தாலே
குற்றுயிராய்ப் புரண்டபடி கிடந்தாள்! போழ்து
விடிந்ததுவும் தானறியாள்! பரிதி மேற்கில்
விழுந்ததையும் அவளறியாள்; இரவு வந்து
படிந்ததுத னிக்குடிலில்! விளக்கு மில்லை!
பதறினாள்! விழிதிறந்தாள்! எழுந்தி ருந்தாள்!
உடல்நோகத் தீக்கடைந்தாள்! விளக்கை ஏற்றி
உடன்துயின்ற அன்னத்தைப் பார்த்தாள்; இல்லை!

இயல் 83

ஆத்தாவுடன் படுத்திருந்த அன்னம் விடியலில் காணவில்லை.

சேயிழையாள் துயில்கிடந்த இடத்தில் தோய்ந்த
செங்குருதி கண்டிட்டாள்; ஐயோ என்று
வாயிலிலும் உட்புறத்தும் வௌிப்பு றத்தும்
வஞ்சியுடல் தனைத்தேடிக் காணா ளாகித்
தூயவளே அன்னமே என்று கூவிச்
சொல்லொன்றும் செவியினிலே கேளா ளாகி
நீயோடி இறந்திட்டாய் எனத்து டித்தாள்!
நீலிஅவள் அவ்விடத்தில் ஓடி வந்தாள்.

அன்னத்தைச் செங்குருதி சாயக் குத்தி
அழகுடலை இடுகாட்டில் பட்டுப் போன
புன்னையடி யிற்புதைத்தார் என்றன் ஆத்தா
போனதடி கதிர்நாட்டின் தேனூற் றென்று
சொன்னபடி துடித்தழுது புரண்டாள் நீலி!
துன்பத்து மலையடியிற் புதைந்தாள் ஆத்தா!
சின்னக்குடி லில்குருதி வெள்ளம் கண்டு
சிவக்கின்ற திருவிளக்கும் நடுங்கிற் றங்கே!

இயல் 84

அதேநேரம் பேழையோடு வேலன் வந்தான்.

இக்கொடிய காட்சியினை வேலன் கண்டான்.
இதோபாண் டியன்பரிசு! தாயே! என்ன?
பொற்கொடி எங்கே? என்று விரைந்து கேட்டான்.
பொன்னனையாள் செங்குருதி இங்கே சிந்த
அக்கொடியார் சாக்குத்திப் பட்ட புன்னை
அடியினிலே புதைத்தாரே என்றாள் ஆத்தா!
தைக்கின்ற வேல்நூறும் அம்பு நூறும்
சருக்கென்று பாய்ந்ததுபோல் உளம் துடித்தே

ஐயகோ என அலறி என்றன் வாழ்வும்
அழிந்ததடி அன்னமே, என்றி ரண்டு
கையாலும் தலைமோதி "கண்ணே உன்றன்
கலக்கத்தைத் தீர்க்குமோர் இலக்கி யத்தைப்
பொய்யாத பாண்டியனார் பரிசை, உண்மை
புலப்படுத்தும் பட்டயத்தைக் கொண்டு வந்து
வையாயோ என்றாயே வஞ்சி, தூக்கி
வந்தேனே! செந்தேனே! எனக்கேன் பேழை?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 3:01 pm

இயல் 85

நரிகள் மண்ணைத்தூற்றும் இடுகாடு; வேலன் அங்குச் சென்றான் அலறி.

எங்குள்ளாய் உடன்வைத்துக் கொள்வாய்" என்றே
இட்டதோர் பேழைதனைத் தோளில் ஏற்றி
அங்குள்ள புன்னையினை எண்ணி வேலன்
அழுதபடி ஓடுகின்றான்! முழுநி லாவும்
பொங்குதுயர் காணவும்பொ றாத தாகி
மறைந்ததுவே போய்க்கரிய முகிலுக் குப்பின்!
மங்காமல் விழிக்கும்நரி மண்ணை எற்ற
வருகின்ற இடுகாட்டிற் புன்னை யின்கீழ்

பிணமேடு தனைக்கண்டான்; நெஞ்சி ரண்டாய்ப்
பிளந்ததுபோல் திடுக்கிட்டான்! ஆவி தன்னைத்
தணலேறிச் சுட்டதுபோல் துடித்தான்! காணத்
தாங்காது கைவிரைந்து விழித்தான் கண்ணை!
மணல்மீது தான்வைத்தே பேழை தன்னை
மற்றுமொரு முறைகண்டான்! கனவோ அன்றி
உணர்வேதும் கலங்கியதோ எனநி னைத்தான்.
உயிர்க்குயிரே! அன்னமே! எனஅ ழைத்தான்.

"சிவப்பாம்பல் மலர்வாயிற் சிந்தும் முல்லைச்
சிரிப்புக்கும், கருப்பஞ்சாற் றுச்சொல் லுக்கும்,
குவிக்கின்ற காதலொளி விழிக்கும், கார்போல்
கூந்தலுக்கும், சாந்தமுகத் திங்க ளுக்கும்
உவப்புற்றேன் அவ்வுவப்பால் காதல் பெற்றே
உயிர்நீயே என்றுணர்ந்தேன்; இயங்க லானேன்!
அவிந்தனையே திருவிளக்கே! இந்த வையம்
அவியவில்லை எனில்எனக்கிங் கென்ன வேலை?

படித்ததுண்டு; கேட்டதுண்டு; கண்ட தென்ன?
பகலியங்கி இரவுறங்கும் சிறுமை யன்றித்
தடித்தஉடல் பெருநெறியிற் சென்ற தில்லை;
தனித்தினிக்கும் இசைத்தமிழில் தேனும் கூட்டி
வடித்தெடுத்த மொழியாளே, மலர்க்கண் காட்டி
வாழ்விலெனை உயர்வித்தாய். உயிரே! உன்சீர்
முடித்தனையே திருவிளக்கே! இந்த வையம்
முடியவில்லை எனில் எனக்கிங் கென்ன வேலை?

பிறக்கமுடி யாதினிமேல் பெண் ஒருத்தி!
பிரிக்கமுடி யாதஉயிர்ப் பொருளே! நெஞ்சம்
மறக்கமுடி யாதஎல்லாம் பேசி, இன்ப
வாழ்க்கையெனும் கடற்கரையின் ஒட்டில் நானோ
சிறக்கஒரு முறையேனும் மூழ்க வில்லை!
சேயிழையே! தீங்கனியே! அந்தோ நீதான்
இறப்பதுவோ திருவிளக்கே! இந்த வையம்
இறக்கவில்லை எனில் எனக்கிங் கென்ன வேலை?

மோதல் ஒன்றோ? எதிர்ப்பொன்றோ இப்பே ழைக்கு?
முழுமூச்சும் ஈடுவைத்துக் காத்து வந்தேன்!
ஈதல் ஒன்று மற்றொன்று சாதல் என்றே
எண்ணிணேன்! அன்னமே உன்மேற் கொண்ட
காதலன்றோ என்வெற்றி! கண்தி றந்து
காணாயோ? பேழையையும் எனையும் விட்டுச்
சாதலுண்டோ திருவிளக்கே! இந்த வையம்
சாகவில்லை எனில் எனக்கிங் கென்ன வேலை?

வெண்ணிலவை எட்டிவிட்டேன் என்றி ருந்தேன்;
விண்ணினின்று வீழ்ந்தேனே! தென்றல் காற்றின்
பண்ணமைந்த தமிழ்ப்பொதிகை எனக்கே என்றேன்;
பாழ்ங்கிணற்றில் தூக்கிஎறி யப்பெற் றேனே!
திண்ணெனவே இழந்தேனே, பசியைப் போக்கத்
திரட்டியமுப் பழச்சாறே! என்னை விட்டு
மண்ணடைந்தாய் திருவிளக்கே! இந்த வையம்
மடியவில்லை எனில் எனக்கிங் கென்ன வேலை?

கடைவிழியில் நிலவுசெயும் உனது சாயல்
களிமயிலும் காட்டாதே! ஒசிந்த மென்மை
இடையழகு மின்னலிடை இல்லை யேசெவ்
விதழ்கண்டார் மலரிதழும் காண்பா ருண்டோ?
உடையெல்லாம் நீலமணி கடலோ நாணும்!
ஒளிமுகத்தைக் கண்டிட்டால் பரிதி நாணும்!
மடிந்தாயோ திருவிளக்கே! இந்த வையம்
மடியவில்லை எனில் எனக்கிங் கென்ன வேலை?

இயல் 86

வேலன் பிணத்தைத் தோண்டி மடியிற் சாத்தினான்.
நிலவு அப்போது முகிலில் மறைந்திருந்தது.

புதைத்தாரோ இரக்கமிலார் பொன்னு டம்பைப்
புதுமுகத்தைக் கடைசிமுறை காட்டாய்" என்று
பதைத்தானாய்ப் பிணப்புதையல் தோண்டிக் கூட்டைப்
பரிந்தெடுத்துத் தன்மடியில் கிடத்திக் கூந்தல்
ஒதுக்கிமுழு நிலாமுகிலில் புதைந்த தாலே
இருளிடையே ஒளிமுகமும் புதைந்த தென்று
கொதித்துள்ளம், கண்ணேஎன் கண்ணே என்று
கூப்பிட்டு முகத்தோடு முகத்தைச் சேர்த்தே,

'முத்தமடி' கடைசிமுறை! ஒன்றே ஒன்று
முடிந்ததடி என்வாழ்வும்! உயிர்க்கி ளைமேல்
தொத்துகிளி யே என்று மலர்க்கன் னத்தைத்
துணைவிழியால் தேடுங்கால் முழுநி லாவும்
மொய்த்தமுகில் கிழித்துவௌிப் பட்ட தாலே
முழுதழுகி, ஊன்கழன்ற முகத்தைக் கண்டான்!
கொத்தாகக் குழல்கழன்ற நிலையும் கண்டான்!
குடல்சரிதல் கண்டான்;பல் இளித்தல் கண்டான்.

இயல் 87

பின்னர் நிலா வௌிப்படவே, பிணத்தின் அழகற்ற
நிலை கண்டான்; எறிந்தான் பிணத்தை! வெறுத்துரைத்தான் பெண்ணுலகை!

சீ! என்று பிணமெறிந்து விரைந் தெழுந்து
சிதைவுடலை மறுமுறையும் உற்று நோக்கி
ஏ!இதற்குத் தானா? இவ்வழியு டற்கா?
இருள்கண்டால் விழிமூடும்! நோயும் அஞ்சும்!
வாயெச்சில் கண்டாலும் அருவ ருக்கும்!
மாக்கீழ்மை! இதற்குத்தா னாஇப் பாடு!
ஈயருந்த அழகுதசை எறும்பு மொய்க்க
இற்றொழுகு புண்ணீர்!மற் றிதிலோ நாட்டம்?

பேன்நாறி வீழ்குழலைத் தேனா றென்றும்
பீளைஒழு கும்விழியை நீல மென்றும்
மேல்நாறும் சளிமூக்கை எட்பூ என்றும்
வெறுங்குறும்பிக் காதைஎழில் வள்ளை என்றும்
ஊன்நாறும் ஊத்தைப்பல் வாய்உ தட்டை
ஒளிமுல்லை செவ்வாம்பல் கோவை என்றும்
தோல்நாறும் கன்னம்கண் ணாடி என்றும்
துயர்ஈளை பயில்குரலைக் குயில்தான் என்றும்

உடல்சுமக்கும் உரல்போலும் இடையை, வானின்
உச்சிஅதிர் மின்னலிலும் அச்ச மென்றும்
கொடுங்குள்ள வாத்துநடை அன்ன மென்றும்
குறுகியசெக் குலக்கைக்கால் வாழை என்றும்
இடும்பையிலே இடும்குதிகால் சுவடி என்றும்
ஈரித்த வெள்ளடிதா மரைப்பூ என்றும்
கெடும்படியே சொல்லிவைத்தார் புலவர், நேரில்
கிழக்கினையும் மேற்கென்று கிளத்து வார்போல்!

கண்ணுக்கு மையிட்டும் காதில் மூக்கில்
கல்லிழைத்த நகையிட்டும், சிக்க றுக்க
ஒண்ணாத குழலுக்கு மலர்கள் இட்டும்
உரைநாணும் உடலுக்குத் திரையை இட்டும்
பெண்ணென்று வந்தவளை இட்ட வெல்லாம்
பிரிப்பாரேல் காண்போர்கள் சிரிப்ப ரன்றோ?
மண்ணுக்கு வைத்தசுமை; வாழ்வின் நஞ்சு
மங்கையரை வெங்கனவாய் மதித்தார் மேலோர்!

மாவடுவென் றால்விழியை மரமே நாணும்!
மலர்என்றால் பெண்முகத்தைச் சோலை நாணும்!
காவடிபோ லும்தோளை மூங்கில் என்றால்
காக்கையுந்தன் கால்வைக்கக் கூசு மன்றோ!
நாவடுச்சொல் தேனென்றால் வண்டோ ஒப்பும்?
நங்கையரின் அங்கையோ செங்காந் தட்பூ?
சாவடியின் கால்விலங்கு நிகர்க ழுத்தைச்
சங்கென்றால் இக்கொடுமை எங்க டுக்கும்?

தேன்பாதி கொடுநஞ்சு பாதி என்றும்
திருப்பாதி வறுமைநிலை பாதி என்றும்
வான்பாதி படுசூறை பாதி என்றும்
வழிபாதி அடைமுட்கள் பாதி என்றும்
ஊன்பாதி பெருநோயும் பாதி என்றும்
உரைப்பதுபோல் பெண்ணொருத்தி ஆட வன்பால்
நான்பாதி நீபாதி என்பர் ஆயின்
நல்வாழ்விற் சரிபாதி இல்லை ஆகும்.

இருளெல்லாம் பகலாக எண்ணி, நாளும்
இரவெல்லாம் சலியாமல் ஓடி, ஆடித்
தெருளில்லா நெஞ்சுடையேன் அலைந்தேன், இன்பம்
தேரேன்; இத் துறைநாடி இன்ன லுற்றேன்!
அருளில்லா வாட்படைக்கும் வேற்ப டைக்கும்
அழிவில்லா திருந்திட்டேன்; எனினும் அந்தோ
பொருளில்லாப் பெண்மையைநான் பொருளா யெண்ணிப்
பொழுதெல்லாம் பழுதாக்கி விட்டே னன்றோ?

தாய்க்கேனும் தொண்டுசெயார்! அன்பு கொண்ட
தந்தைக்குத் தொண்டுசெயார்! தன்நாட் டார்க்குப்
போய்த்தூய தொண்டுசெயார்! தமிழ்வ ளர்க்கும்
புதுநூற்குத் தொண்டுசெயார்! கல்லார் நல்லா
ராய்த்திகழத் தொண்டுசெயார்! அடிமை மாற
அறத்துக்குத் தொண்டுசெயார்! பெண்கள் என்னும்
நோய்க்கன்றோ நாளெல்லாம் தொண்டு செய்தார்
நுனிஏறி அடிமரத்தை வெட்டு வார்போல்!

பெண்ணினத்தைத் தூற்றலுற்றான்; பெண்ணி னத்தைப்
பெரிதென்னும் வையத்தை அருவ ருத்தான்.
கண்ணிழந்தான் போலிருந்தான்; எதையும் அங்குக்
காணாமல் இருந்ததனால் காதல் தேனை
உண்ணுவதும் தீர்ந்திட்டான். மெய்வெ றுத்தான்!
உயிர்வெறுத்தான்! பெண்நெருப்பில் வீழ்தல் இன்றிப்
பண்படுத்த முடியாதோ உலகை என்றான்!
பலசொன்னான் முடிவான கருத்தும் சொல்வான்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 3:02 pm

இயல் 88

பெண்ணுலகை ஏசுகின்ற வேலனின் பின் அன்னம் வந்து நின்று அழைத்தாள்.

முதுவையம்! தீச்செயலால் முடிந்த வையம்!
முடிவிலொரு பயனில்லா வையம்! என்றான்.
அதுபோதில் பின்புறத்தில் அன்னம் வந்தே
அடியோடு தீர்ந்ததுவோ ஆ ஆ என்றாள்!
இதுவைய மாஎன்றான்! "உள்ளேன்" என்றாள்!
இரண்டுமுகில்! இரண்டுநிலா! உனைநான் பெற்றேன்.
புதுவையம்! புதுவையம்! இதுதான் என்றான்;
பூவைநீ இலாவையம் விழலே என்றான்.

திகழ்வேலன் பாண்டியனார் பரிசு தன்னைச்
செங்கையிரண் டும்சேர்த்துத் தூக்கி, "உன்றன்
புகழ்க்குரிய பேழையினைக் கொள்க" என்றான்!
பூங்கையால் வாங்கினாள். முகத்தில் ஒற்றி
மகிழ்ச்சியொடு கீழ்அமைத்தாள்; திறந்தாள்: கண்ணால்
மங்காத பட்டயமும் அனைத்தும் கண்டாள்!
முகம்தாழ்த்திக் கால்விரலால் தரையைக் கீறி
"முடிந்ததுசூள்; கடிமணந்தான் மிச்சம்" என்றாள்.

இயல் 89

வேலன் நடந்ததை உரைத்தான்.

"ஆம்"என்றான், அள்ளூற! "இனிமேல் உம்மை
அத்தான்என் றழைத்திடுவேன்" என்றாள் அன்னம்!
"தூமணியே செய்"என்றான்! "என்னை வந்து
தொடுங்கள்அத்தான்" என்றுரைத்தாள்! தீர்ந்த பின்னர்
"மாமயிலே இனிமெதுவாய் நடப்பாய்" என்று
மணிப்பேழை தான்தூக்கி நடக்க லானான்!
"தீமையுறு பிணமென்ன? இறந்த தாகச்
செப்பியவர் யார்"என்றாள்! வேலன் சொன்னான்:

"தெங்குபெருங் குலைசுமந்த தைப்போல் பேழை
செங்கையிலே சுமந்துகுடி சைபு குந்தேன்.
மங்கைஎழில் அன்னமெங்கே என்று கேட்டேன்.
மரத்தடியில் புதைத்தார்கள் என்றார் தாயார்.
செங்குருதி தோய்ந்திருத்தல் கண்டேன். அங்கே
செவ்விழியால் நீர்பெருக இருந்தாள் நீலி!
இங்குவந்தேன்; சரி, அதுபோ கட்டும் பெண்ணே!
இன்பமன்றோ நடைமுத்தம்" என்றான் வேலன்.

இயல் 90

அன்னம், நீலன் வீட்டில் இருந்ததையும் குடிசைக்கு
வந்தபோது ஆத்தா வியப்புற்றுச் சொன்னதையும் சொல்கிறாள்.

"உம்அன்னை யுடன் துயின்றேன். விடியு முன்னே
உலவிவர நீலிஎன்னை அழைத்துச் சென்றாள்!
அம்மருங்கில் தீயவர்கள் எனைஎ திர்த்தார்!
அப்போது நீலன்எனைத் தன்அ கத்தில்
செம்மையுற இருஎன்றான்; வௌியிற் சென்றால்
தீமைஎன உரைத்திட்டான் அங்கிருந்தேன்!
இம்மதியின் ஒளியினிலே குடிசை வந்தேன்;
எழில்நீலி, ஆத்தாவும் வியப்புற் றார்கள்!

நானிறந்து போனேனாம்! புன்னை யண்டை
நல்லுடலைப் புதைத்தாராம்! ஆத்தா வின்பால்
தேனிதழாள் நீலிஇது சொன்னாள்! அந்தச்
சேயிழைக்கோ நீலனுரைத் தானாம்! என்றன்
ஊன்உகுத்த செங்குருதி குடிசை தன்னில்
ஒருவெள்ள மாயிற்றாம்! இதுவு மன்றிப்
போனதுயிர் எனும்படியே அருமை ஆத்தா
புலன்மயங்கிக் கிடந்ததுவும் வியப்பே" என்றாள்.

இயல் 91

வேலன், நீலனுடைய சூழ்ச்சியைக் கூறினான்.

"என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன்
எழிலுடைய நீலியிடம் உளவ றிந்தான்;
இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான்
இதற்கிடையில் நீ இறந்தாய் என்ற பொய்யை
என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான்.
இவையெல்லாம் இருக்கட்டும், பெண்இ தழ்தான்
கன்னலின்சா றென்கின்றார் மெய்யா?" என்றான்;
காணிர்என உளங்கனிந்தாள்! நடக்க லுற்றாள்!

"நானில்லை எனத்தெரிந்தால் நீரு மில்லை.
நடுத்தெருவில் பேழைதான் கிடக்கும்! நீலன்
தானிந்த நாட்டினையும், எனையும் பெற்றுத்
தனியாட்சி நடத்தலாம் எனநினைத்தான்!
தேனில்லை எனில்நல்ல வண்டு மில்லை
செத்தொழிவேன் நீர்இறந்தால்; இதனை நீலன்
ஏனறிய வில்லை? இருக்கட்டும்; தென்றல்
இருவருக்கும் நடுச்செல்ல விடாதீர்" என்றாள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by முழுமுதலோன் Sat Mar 01, 2014 3:03 pm

இயல் 92

அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.

வேழவனின் படைமறவர் காப்ப ளிக்க
விரைவாக எதிர்வந்தார்! கணக்கா யர்தாம்
வாழ்கஎன வாழ்த்துரைத்த வண்ணம் வந்தார்!
மற்றுமுள தோழர்களும் வந்து சேர்ந்தார்.
பேழையினைக் கண்டார்கள் வேல னோடு
பெடைஅன்னம் நடைகண்டு மகிழ்வு கொண்டார்!
தாழுமுழுத் துறவியவன் வந்தான்! ஆத்தா
தள்ளாடி நடந்துவந்தாள்! நீலி வந்தாள்!

வெற்றியெல்லாம் நீர்அருளிச் செய்தீர் என்று
வேலன்தான் துறவியினை வணங்கி நின்றான்!
உற்றபெரு வாழ்வனைத்தும் நீவிர் தந்தீர்
ஒருபோதும் மறவேன்என் றுரைத்தாள் அன்னம்!
பெற்றவன்தன் பிள்ளைக்கு நலத்தைச் செய்தான்
பெருவியப்புக் கிடமில்லை என்று கூறி
ஒற்றுநரை முடிநீக்கி வீரப் பன்தன்
உருக்காட்டினான் யார்க்கும் உவகை யூட்டி!

இயல் 93

முடிசூட்டு விழா அறிவிப்பு.

தெருவெல்லாம் மறுநாளே முரச றைந்து
திருநாடு வேலற்குத் தரும்வி ழாவைப்
பெருநாடெல் லாம்உரைத்தார்; வான்ம றைத்துப்
பின்னிவைத்த வண்ணப்பந் தல்கள் நாட்டி
இருள்நாடா திருக்கும்வகை விளக்கும் இட்டார்;
எழுதிவைத்த ஓவியங்கள் உயிர் பெற்றாற்போல்
வருகாலிற் சிலம்பசைய மாதர் இல்லம்
மணியாக்கித் தணியாது மகிழ்ந்தி ருந்தார்!

அரசிருக்கைப் பெருங்கூடம் சிறக்க, ஆங்கே
அணிமடவார் மறவேந்தர் சூழ்ந் திருக்க
முரசெழுப்பக் கருவியெலாம் இசையெ ழுப்ப
முதுநாட்டுப் பெருமக்கள் புதுமை காண,
வரிசையொடு காத்திருக்க வேழ நாட்டு
மன்னவனும் வந்துநின்றே " அன்னம் வேலன்
திருமணமும் இது" என்றான்! "கதிர்நாட் டாட்சித்
திருமுடியும் இது" என்று புனைந்தான் நன்றே!

இயல் 94

அன்னம் வேலன் மண வாழ்த்து!

தமிழ்க்கவிஞர் வாழ்த்துரைத்தார்; தமிழி சைக்குத்
தனிப்புலவர் வாழ்த்திசைத்தார்; நகைமு கத்தின்
அமுதமொழி மங்கைமார் மலர்பொ ழிந்தே
அரசியார் அரசர் நனி வாழ்க என்றார்!
தமைவாழ்த்தி னோர்க்கெல்லாம் அன்னம் வேலன்
தகுநன்றி கூறினார்! தமிழும் பூவும்
கமழ்கின்ற பெருங்கூடம் விட்ட கன்றார்
கதிர் நாட்டு மக்களெலாம் வாழ்க என்றே!

மணித்தவிசில் வீற்றிருந்த பசிய கிள்ளை
மலர்ச்சோலை தான்புகுந்து குடமெ டுத்தே
அணித்தான குளிர்புனலை ஏந்தி முல்லை
அடிவார்ப்பாள் போற்காட்டிக் கீழ்க்கண் ணாலே
தணிக்காத காதலொடும் அன்புள் ளானைத்
தான்பார்த்த படியிருந்தாள்! வேலன் தேடி
பணிச்சியரால் உளவறிந்தே விரைவில் அன்னம்
பறக்குமுனம் பறந்தின்பம் பகிர்ந்தான் வாழி!

முற்றும்.

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"பாண்டியன் பரிசு"-பாரதிதாசன் - Page 2 Empty Re: "பாண்டியன் பரிசு"-பாரதிதாசன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum