Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மதுரையை மீட்ட சேதுபதி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
மதுரையை மீட்ட சேதுபதி
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அத்தியாயம் - 1. சத்திரத்தில் அதிர்ச்சி
பூர்வபட்சம் ஆரம்பமாகி ஐந்து நாள் ஆகி விட்டபடியால் மேற்கு அடிவானத்திலிருந்து சற்று மேலே தோன்றிய வளர்பிறை, இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்டதையடுத்து கீழே இறங்கவும் செய்துவிட்ட அந்த இரவுப் பொழுதில் புதுக்கோட்டையில் இருந்து இராமநாதபுரம் செல்லும் அந்த ராஜபாட்டையில் ரெகுநாதத் தொண்டைமான் தன் புரவி மீது அமர்ந்தபடி இணையாக ஒரு பெண்ணும் புரவியில் அமர்ந்தபடி பின்னால் ஏழெட்டு புரவி வீரர்களும் பின் தொடர இராமனாதபுரம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தான்.
அந்தப் பயணம் விரைவானதாகவும் இல்லாமல் மிதமானதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது.
அப்படிப் பயணம் செய்து கொண்டிருக்கையில் மதுரையில் இருந்து வந்தப் பாதையை வெட்டும் இடத்திற்குச் சற்றுத் தொலைவில் அவர்கள் வந்து கொண்டிருக்கையில் மதுரைப் பாதையில் இருந்து இரண்டு பேர் வந்து திரும்பி இராமநாதபுரம் செல்லும் பாதையில் செல்வதைக் கண்டார்கள்.
"யாரது? நில்லுங்கள்" என்று வேகமாகவே கட்டளையிட்ட தொண்டைமான் அவர்கள் இருவரும் நிற்காமல் போகவே சரேலெனத் தன் வாளை உருவிக்கொண்டு தன் புரவியை முடுக்கி மிக வேகமாகவே செலுத்த ஆரம்பித்து ஒரு கல் தொலைவிற்குள்ளாகவே அந்த இரு புரவிகளையும் முந்திப் போய் பின் திரும்பி வாளையும் நீட்டி தடுக்கவே இரு புரவி வீரர்களும் வேறு வழியின்றி தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டியதாயிற்று.
அவர்கள் இருவரும் தங்கள் வாட்களை உருவிக் கொள்ள, தொண்டைமானின் வீரர்களும் பின்னால் வந்து கொண்டிருந்த இளம் பெண்ணும் தொண்டைமானின் அருகில் வந்து இருக்க, "யார் நீங்கள்?" என்று அதட்டியே கேட்டான் தொண்டைமான்.
"நீ யார்?" என்று அந்த இருவரில் ஒருவன் கேட்கவே சினம் அடந்த தொண்டைமான், "இந்த தொண்டைமானை யார் என்று கேட்டு இங்கே தப்பிப்போவதும் கடினமான காரியம் தான்" என்று வாளைச் சுழற்றியபடிச் சொல்லவே அந்த ஒருவன் இதைக்கேட்டு, "தொண்டைமானா?... ரெகுநாத தொண்டைமானா?" என்றும் வியப்புடன் கேட்டான்.
"என்னை மரியாதையில்லாமல் அழைக்கும் நீ யார்?" என்று தொண்டைமான் பதிலுக்கு சீற்றமாகவே கேட்டான்.
"நான் மதுரை இளவரசன் முத்து வீரப்பன்."
"ஓ... மதுரை இளவரசரா!" என்று வியப்புடன் கேட்ட தொண்டைமான், "வணக்கம் இளவரசே!... தங்களை இப்படி எதிர் மறைத்து யார் என்று கேட்டதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்" என்று வாளைத் தாழ்த்தி வணங்கவும் செய்தான்.
"நாம் பின்பு பேசிக்கொள்ளலாம். முதலில் நாம் இங்கிருந்து விரைவாகப் போக வேண்டும். புரவியைத் திருப்பு" என்றான் இளவரசன்.
"ஏன் இளவரசே?"
"ருஸ்தம்கானின் வீரர்கள் துரத்தி வருகிறார்கள்.... எங்களைப் பிடிக்க ...."
"தங்களையா!" என்று கேட்ட தொண்டைமான், "அவன் தங்களின் படைத்தலைவன் அல்லவா... அவன் வீரர்கள் ஏன் தங்களைத் துரத்த வேண்டும்?" என்றும் வினவினான்.
"அவன்தான் இப்போது உண்மையில் மதுரையின் மன்னன்... பிறகு பேசிக் கொள்ளலாம்... நாம் யாவருமே இப்போது தப்ப வேண்டும்... புரவியைத் திருப்பு தொண்டைமான்."
"அவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?"
"முப்பது நாற்பது பேர் இருக்கலாம்".
"இளவரசே! இந்தத் தொண்டைமான் யார் என்பதை அவர்களுக்குக் காட்டுகிறேன்... எங்களைக் கடந்துதான் அவர்கள் தங்களிடம் வரவேண்டும்" என்ற தொண்டைமான் தன் புரவியைத் தட்டிவிட்டு அந்த இருவரையும் தன் வீரர்களையும் கடந்து முன்னால் போய் இருந்து கொண்டான்.
தொண்டைமானின் வீரர்களும் தங்கள் புரவிகளை திருப்பிக் கொண்டனர். உடனே இளவரசனும் அவனுடன் கூட வந்தவனும் தங்கள் புரவிகளைத் திருப்பிக் கொண்டனர்.
"தொண்டைமான்" என்று உரக்கவே அழைத்த இளவரசன் "இப்போது நாம் அவர்களை எதிர்க்க வேண்டாம்... அதற்குக் காலம் வரும்... அப்போது அடியோடு அவர்களை அழிக்கலாம்" என்றும் சொல்லிப் பார்த்தான்.
"பொறுங்கள் இளவரசே... என்ன காரணமாக இருந்தாலும் தங்களைத் துரத்தி வருவதற்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா?"
"சரி... உன் பெயரை மட்டும் அவரகளிடம் சொல்லிவிடாதே.. காரணத்தைப் பின்பு சொல்லுகிறேன்" என்று கேட்டுக் கொண்டான் இளவரசன்.
அப்போது எதிரில் இருந்து புரவிகளின் சப்தம் கேட்டது. பின்பு புரவிகளும் கண்ணுக்குப் புலப்பட்டு வீரர்கள் வருவதும் தெரிந்தது.
தொண்டைமான் இடது கையிலும் இன்னொரு வாளை உருவிக் கொண்டான். அவன் புரவியில் அமர்ந்தபடியே இரு கைகளாலும் வாட்களை ஏந்திப் போரிடக் கூடியவன்.
வந்து கொண்டிருந்தவர்கள் எதிரே சில புரவி வீரர்கள் இருப்பதைக் கண்டு தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்திக் கொண்டனர்.
"யார் நீங்கள்?" என்று அவர்களின் தலைவன் கர்ஜித்தான்.
"நீங்கள் யார்?" என்று தொண்டைமானும் கர்ஜித்தான்.
"நாங்கள் மதுரை வீரர்கள்."
"மதுரை வீரர்களா... ருஸ்தம்கானின் வீரர்களா?"
"இரண்டும் ஒன்றுதான்."
"நாங்கள் சேதுபதியின் வீரர்கள்."
அந்த வீரர்களின் தலைவன் எதிர் அணிக்குப் பின்னால் தாங்கள் தேடி வந்த இருவரும் இருப்பதைக் கண்டான்.
"அந்த இருவரையும் எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்" என்று தலைவன் அதட்டலாகக் கேட்டான்.
"அவர்களில் ஒருவர் மதுரையின் இளவரசர்."
"தெரியும் எங்களுக்கு."
"தெரிந்துமா துரத்தி வந்தீர்கள்?"
"மன்னரின் கட்டளை."
"மன்னரின் கட்டளையா? அடிமை ருஸ்தம்கானின் கட்டளையா?" என்று தொண்டைமான் கேட்கவே சினம் அடந்த தலைவன் தன் வீரர்களிடம் "இவர்களைக் கொல்லுங்கள்" என்று உத்தரவிட்டு வாளுடன் புரவியை முன்னேயும் செலுத்த, அந்த ஆஜானுபாகுவான ராட்சத உருவில் இருந்த தலைவனின் வாளின் வீச்சிற்கு முன்னால் வேறு எவராக இருந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாமல் தலை உருண்டே போயிருக்கும்.
தொண்டைமான் பார்ப்பதற்குச் சற்று ஒல்லியாகக் காணப்பட்டாலும் அவனுடைய இரு கை வாட்களின் அசுர வேகச் சுழற்சியில் முதலில் உருண்டது தலைவனின் தலைதான். அடுத்துப் பின்பு நான்கு தலைகள் மண்ணில் சாய தொண்டைமானின் வீரகளும் ஆளுக்கு மூன்று நான்கு என்ற கணக்கில் எதிரிகளைச் சாய்க்க பின்னால் மிச்சமிருந்த ஐந்தாறு வீரர்கள் திடீரெனத் தங்கள் புரவிகளித் திருப்பிப் பின்னே ஓடிப்போக....
"அவர்களை விட்டுவிடுங்கள்" என்று தொண்டைமானின் உத்தரவில் வீரர்களும் கட்டுப்பட்டுத் தங்கள் புரவிகளை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டியதாயிற்று.
முத்து வீரப்பனும் அவனுடைய உதவியாளும் வாளை உருவிக்கொண்டு முன்னுக்கு வந்தாலும் அவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.
"அவர்கள் போய் சேதுபதியின் வீரர்களின் வீரம் எப்படி என்பதை ருஸ்தம்கானிடம் தெரிவிக்கட்டும்... அதனாலேயே அவர்களை உயிருடன் விட்டேன்" என்ற தொண்டைமான் "இந்த எதிரிகளின் புரவிகளையும் நம்முடன் கொண்டு வாருங்கள்" என்று உத்தரவும் இட்டான்.
"தொண்டைமான்" என்று விளித்த இளவரசன் "உன் வீரத்தைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறேன். இப்போது நேரிலும் பார்த்தேன்" என்றவன் "உன் உதவியும் உன் மூலம் சேதுபதியின் உதவியும் எனக்குத் தேவை" என்றும் கேட்டுக் கொண்டான்.
"பின்பு பேசிக் கொள்ளலாம் இளவரசே!" என்ற தொண்டைமான், "வழியில் ஒரு சத்திரம் இருக்கிறது. அங்கே தங்கிவிட்டுக் காலையில் புறப்படலாம்" என்றவன் அதுவரையில் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் "திரும்பு... போகலாம்" என்று சொல்லிவிட்டு மேலே தன் பயணத்தைத் தொடர மற்றவர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
தொண்டைமான் குறிப்பிட்ட அந்தச் சத்திரத்தை அடைந்ததும் புரவிகளை நிறுத்திவிட்டுக் கீழே குதித்தனர்.
வாயிலின் முகப்பில் ஒரு கல் தூணின் மேல் உள்ள பள்ளத்தில் எண்ணெய் இடப்பட்டு கனமான திரியும் போடப்பட்டு விளக்கு ஒன்று எரிந்து அங்கே மங்கலான ஒளியையும் தந்து கொண்டிருந்தது.
சத்திரத்தின் முன் தாழ்வாரத்தில் படுத்திருந்த சில வீரர்கள் இந்த அரவங்கள் கேட்டு தங்களின் வாட்களை எடுத்துக் கொண்டு "யாரது?" என்றார்கள்.
"நான்தான் தொண்டைமான்" என்று தொண்டைமான் சொன்னதும் அந்தக் குரலைக் கேட்டே அடங்கிப் போன வீரர்கள் "வாழ்க தொண்டைமான்" என்று சத்தம் போடவும் சத்திரத்தின் கதவுகளும் திறந்து கொண்டன.
சத்திரத்துத் தலைவன் வெளியே வந்து தொண்டைமானை வரவேற்றான். பணியாட்களை அழைத்துப் புரவிகளைக் கொட்டடிக்கு இட்டுச் செல்லுமாறு பணித்துவிட்டு, வீரர்களை தாழ்வாரத்திலேயே தங்குமாறு பணித்துவிட்டு தொண்டைமான், இளம் பெண், இளவரசன் ஆகியோருடன் உள்ளே சென்றான். கதவுகளையும் சாற்றிவிட்டு தாள் போட்டு விட்டான். தொண்டைமனிடம் திரும்பியவன் பணிவுடன் "வீரரே தங்களை அந்த அறைக்கு வரும்படி உத்தரவு" என்றான்.
"உத்தரவா?" என்று கேட்ட தொண்டைமான் "உத்தரவிட்ட நபர் யார்?" என்றும் கேட்டான்.
"சொல்ல உத்தரவில்லை. உள்ளே போனால் தெரியும்" என்று மேலும் பணிவுடன் கூறிய சத்திரத்துத் தலைவன் அந்த அறையை மறுபடியும் சுட்டிக்காட்டிவிட்டு "எனக்கு வேலை இருக்கிறது. உங்களுக்கெல்லாம் உணவு தயாரிக்கச் செய்ய வேண்டும்" என்று வேறு அறைக்குப் போய்விட்டான்.
அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு முதலில் உள்ளே சென்ற தொண்டைமானுக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மதுரையை மீட்ட சேதுபதி
[You must be registered and logged in to see this link.]
அத்தியாயம் - 2 மன்னர் சேதுபதி
தொண்டைமான் சத்திரத்தினுள் சென்றதும் சத்திரக்காரன் ஒரு அறையினுள் செல்லும்படிச் சொல்ல தொண்டைமானும் அங்கே சென்றதும் அதிர்ச்சி ஏற்பட்டதல்லவா?
தொண்டைமானை அப்படி அதிர்ச்சிக்கு ஆளாக்கிய அந்த நபர் ஆசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்தபடியே, "தொண்டைமான்... ஏன் திகைத்து நின்று விட்டாய்?" என்று கேட்கவும் செய்தான்.
"தங்களை இங்கே இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை"
"எங்கே இருப்பேன் என்று எதிர்பார்த்தாய்?" என்று கேட்டான் இராமனாதபுரத்தின் அரசனாகிய 'சேதுபதி' எனும் பட்டப் பெயரையும் கொண்டவன்.
"நான் புறப்படும்போது ராமேஸ்வரம் செல்லப் போவதாகவும் திரும்பி வர இரு திங்கள் ஆகும் என்றும் சொன்னீர்கள்."
"ஆம்... அப்படித்தான் சொன்னேன். திட்டமும் போட்டேன். இப்போது நாட்டின் நிலைமை சோதனைக்கு இலக்காக ஆகி இருக்கிறது" என்ற சேதுபதி, "வெளியே யாரோ இருக்கிறார்கள் போலிருக்கிறதே" என்றும் கேட்டான்.
"ஆம் சேதுபதி அவர்களே" என்ற தொண்டைமான் திரும்பி, "உள்ளே வாருங்கள் இருவரும்" என்றான்.
இளவரசனும் இளமங்கையும் உள்ளே வந்தனர்.
சேதுபதி மதுரை இளவரசனைக் கண்டதும் உடனே எழுந்து கொண்டு, "வருக இளவலே.. வருக..." என்று அருகில் போய் இளவரசனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.
"என்ன இது... வியப்பாக இருக்கிறதே... நான்தான் உங்கள் எதிரியாயிற்றே... என் நாட்டிற்குள் புகுந்து.... ஒற்று அறிய வந்தீர்களோ?" என்றும் இடக்காகக் கேட்டவன், "வாருங்கள்... இப்படி அமருங்கள்" என்று ஒரு இருக்கையில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான். "தொண்டைமான், நீயும் அப்படி அமரலாம்" என்று இன்னோர் இருக்கையைக் காட்டினான். தொண்டைமான் அமர்ந்ததும் அப்போதுதான் இளமங்கையயும் கண்ட சேதுபதி, "இந்தப் பெண் யார்?" என்றும் தொண்டைமானிடம் வினவினான்.
"என் தங்கை... பெயர் கதலி... இவளும் வீரம் உள்ளவள்தான்!... அதனால் கிராமத்தில் இருக்கப் பிடிக்காமல் என்னுடன் புறப்பட்டு விட்டாள்..."
"ஓ... அப்படியா" என்ற சேதுபதி அவளை உற்றுப் பார்த்தான். கதலியெனும் பெயர் கொண்ட ரகுநாத தொண்டைமானின் தங்கையாகிய அவ்விள மங்கையும் சேதுபதியையே பார்க்க இருவரின் பார்வையிலும் ஒரு கனம் மின்னல்கள் பாய்ந்தன.
"இள மானே" என்று விளித்த சேதுபதி, "நீயும் அப்படி உட்கார்" என்று இன்னோர் இருக்கையைக் காட்டினான். அவ்விளமங்கயும் அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
மதுரை இளவரசன் முத்துவீரப்பன், சேதுபதி அப்பெண்ணின் பக்கம் தன் கவனத்தையும் பார்வையையும் செலுத்தி தன்னைக் கவனிக்காமல் இருப்பதை உணர்ந்து அதை தவிர்க்க வேண்டி, "சேதுபதி அவர்களே" என்று விளித்தான்.
சேதுபதியும் அப்படி அவன் விளித்ததால் இளவரசனின் பக்கம் திரும்பினான்.
"என் தந்தையார் தங்களிடம் பகைமை பாராட்டியிருக்கலாம். நான் அப்படி அல்ல... தவிர இப்போது மதுரை நாட்டின் நிலைமையும் மாறி இருக்கிறது.... என் தந்தையாரும் மதுரையின் மன்னராகப் பெயருக்கு இருக்கிறாரே தவிர உண்மையில் மன்னராக இல்லை. தங்களின் உதவியை நாடியே தங்களைச் சந்திக்க வந்துள்ளேன்."
"அப்படியா" என்று சொல்லிக் கொண்ட சேதுபதி எதுவும் தெரியாதவர் போல "இப்போது மதுரையின் நிலை என்ன... உங்கள் தந்தையார் ருஸ்தம்கானால் விடுவிக்கப்பட்டு மதுரையின் மன்னராகி விட்டிருக்கிறாரே..." என்றும் கேட்டான்.
"பெயரளவில்தான் மன்னர். ஆனால் நாட்டை ஆள்வதும் ஆட்சி செய்வதும் அதிகாரங்களும் ருஸ்தம்கானிடம் தான் உள்ளன."
"நான் என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள் இளவரசே" என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான் சேதுபதி.
"ருஸ்தம்கானிடமிருந்து மதுரையயும் திருச்சி கோட்டையையும் மீட்க வேண்டும். அதற்கு தங்களின் உதவி தேவை."
"உங்கள் தந்தையைச் சிறைவைத்துச் சிறிய தந்தையான அழகிரிநாதர் திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்தார் அல்லவா?"
"ஆம் சேதுபதி அவர்களே."
"ருஸ்தம்கான்தானே அழகிரிநாதரைத் திருச்சி கோட்டையிலிருந்து துரத்தி விட்டது?"
"ஆம்."
"அந்த ருஸ்தம்கான்தானே மதுரையில் சிறை வைக்கப்பட்டிருந்த உங்கள் தந்தையாரைச் சிறையில் இருந்து மீட்டு மறுபடி மதுரையின் மன்னராக ஆக்கியது?"
"ஆம்."
"அப்படியிருக்க இப்போது நீங்கள் அந்த ருஸ்தம்கானையே குற்றம் சாட்டுகிறீர்களே..."
"ருஸ்தம்கான் உண்மையில் என் தந்தையாருக்கு ஆதரவாக இருப்பது போல் நாடகம் ஆடியிருக்கிறான். ஆனால் இப்போது என் தந்தையார் தம் அறையிலேயே சிறையாக வைக்கப்பட்டிருக்கிறார்... அவருக்கு பதிலாக, அவரின் பெயரை வைத்துக்கொண்டு ருஸ்தம்கானே நாட்டை ஆள்கிறான். ருஸ்தம்கானின் மனைவி மக்கட்கு என் தாயாரும் மற்றவர்களும் பணிப்பெண்களாக இருக்கின்றனர். என்னையும் சிறைப்படுத்த திட்டம் போட்டான். நான் தப்பி வந்து விட்டேன்" என்ற இளவரசன் முத்து வீரப்பன் "இப்படியே போனால் என் தந்தையாரைக் கொன்று, தானே மதுரையின் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளவும் அவன் திட்டம்..." என்றும் கூறி முடித்தான்.
சேதுபதிக்கு அப்போது உண்மையாகவே ரத்தம் கொதித்தது. மதுரை நாயக்க அரச குலப் பெண்கள் குதிரைப் படைத்தலைவனான ருஸ்தம்கானின் மனைவி மக்களுக்கு பணி விடை செய்யும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டு விட்டதா?
"இளவரசே" என்று விளித்த சேதுபதி "நீங்கள் இதுவரை என்னதான் செய்து கொண்டிருந்தீர்கள்?" என்றும் வினவினான்.
"என் சிறிய தந்தையாருக்குப் பயந்து தலைமறைவாக இருந்தேன். ருஸ்தம்கானின் ஆதரவால் பசப்பு வார்த்தைகளை நம்பி அவனுக்கு உதவி செய்தேன். அது இப்போது எங்கள் யாவருக்குமே ஆபத்தாக முடிந்து விட்டிருக்கிறது" என்றவன் மேலும் தொடர்ந்து "இந்த ருஸ்தம்கானை வளரவிட்டால் இன்னும் கொஞ்ச காலத்தில் மதுரை, ராமனாதபுரம், தஞ்சை எல்லாம் அவன் வசமாகிவிடும்" என்றும் எச்சரித்தான்.
"மதுரையில், அரண்மனையில் உங்களுக்கு ஆதரவாக வீரர்கள் இல்லையா?" என்று கேட்டான் சேதுபதி.
"என் தந்தை பெயரை வைத்துக் கொண்டு அவரை யாரும் பார்க்க விடாமல் அவரின் முத்திரை மோதிரத்தால் கட்டளையிட்டு நாட்டை ஆள்கிறான் ருஸ்தம்கான். தவிர என் தந்தையாரின் பழைய மனப்போக்கை எண்ணி என் சிறிய தந்தையாரை விரட்டி விட்டதை நினைத்து பாதிப்பேர் எனக்கு எதிரிகளாக இருக்கின்றனர். இப்போதும் என் தந்தையின் கட்டளைப்படியே என்னையும் கைது செய்து சிறையில் அடைக்கவும் திட்டம் போட்டான். கடைசி நேரத்தில் விஷயம் அறிந்து தப்பித்தேன். அதற்குத் தங்கள் படைத் தலைவனும் பெரு வீரனுமான இந்த தொண்டைமானும் உதவியாக இருந்தான். என்னைத் துரத்தி வந்த ருஸ்தம்கானின் வீரர்களைக் கொன்று என்னைக் காப்பாற்றினான்."
சேதுபதி உடனே தொண்டைமானின் பக்கம் திரும்பினான்.
"அப்படியா?" என்று கேட்டான்.
"ஆம் சேதுபதி அவர்களே"
"எல்லோருமே அழிந்தார்களா?"
"இல்லை. சிலர் தப்பி ஓடிவிட்டனர்."
"அவர்களை இப்படி எதிர்த்தது நீ தான் என்று அவர்களுக்குத் தெரியுமா?"
"நான் என்று காட்டிக் கொள்ளவில்லை... நம் மறவர் படை என்று மட்டும் தெரியும்."
சேதுபதி யோசனை செய்தான். பின்பு சத்திரத்துத் தலைவனை வரவழைத்து இளவரசன் இரவு தங்கவும் உறங்கவும் அறை அளிக்கும்படி உத்தரவிட்டு, இளவரசனிடம் "நீங்கள் சென்று அங்கே தங்கியிருங்கள். காலையில் பேசிக்கொள்ளலாம்" என்று விடை கொடுத்து அனுப்பினான்.
இளவரசன் அறையை விட்டுச் சென்றதும் சேதுபதி தொண்டைமானிடம் சொன்னான்.
"தொண்டைமான்... நான் இளவரசனை மறுபடி ருஸ்தம்கானிடாமே ஒப்படைக்கப் போகிறேன்."
தொண்டைமான் திடுக்கிட்டான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மதுரையை மீட்ட சேதுபதி
[You must be registered and logged in to see this link.]
அத்தியாயம் - 3. சூழ்ச்சி வலை
ஆதரவும் உதவியும் தேடி வந்திருக்கும் மதுரை இளவரசனை, மறுபடி அவனுடைய எதிரியாகிய ருஸ்தம்கானிடமே ஒப்படைக்கப் போவதாக ராமனாதபுரம் சேதுபதி சொல்லவும், திடுக்கிட்டான் அல்லவா தொண்டைமான்.
அதை அடுத்து தொண்டைமானின் கேள்வியும் எழுந்தது.
"நாயக்க வம்சத்தையே அழிப்பதுதான் உங்கள் திட்டமா?" என்றான் அவன் சேதுபதியிடம்.
"இல்லை... மேலும் வளர்ப்பது தான் என் திட்டம்."
"இளவரசரை எதிரியிடமே ஒப்படைப்பதன் மூலமா?"
"ஒப்படத்த உடனேயே நம் திட்டத்தை செயற்படுத்த ஆரம்பிக்கப் போகிறோம்."
"திட்டம் எதற்கோ?"
"ருஸ்தம்கானை அழித்து மதுரையை மீட்க!"
"உண்மையாகவா சேதுபதி அவர்களே?"
"உறுதியாகவும்தான்" என்ற சேதுபதி, அதற்கு மேல் பேசாது, வேறோர் அறையில் தங்கி ஓய்வு எடுக்குமாறும், மறுநாள் பேசிக் கொள்ளலாம் என்றும் அவர்களைப் பணிந்தான்.
தொண்டைமானுடன் போன அவனது தங்கை கதலியைப் பார்த்ததும் பெருமூச்சொன்று சேதுபதியிடமிருந்து வெளிப்பட்டது.
மறுநாள் காலையில், தொண்டைமானை மட்டும் தன் அறைக்கு அழைத்து தன் திட்டங்களை அவனிடம் விளக்க ஆரம்பித்தான் சேதுபதி.
"தொண்டைமான்" என்று அமைதியாகவே ஆரம்பித்த சேதுபதி, "நாம் இளவரசருக்கு அடைக்கலம் கொடுத்தால் ருஸ்தம்கான் நம் நாட்டின் மீது படை எடுக்கலாம்... தவிர ருஸ்தம்கானே மதுரையின் மன்னன் ஆனாலும் அவன் கவனம் நம் நாட்டின் பக்கம் திரும்பத்தான் செய்யும்... அல்லவா?" என்றான்.
"ஆம்."
"நாம் இளவரசரை ருஸ்தம்கானிடம் ஒப்படைக்க வேண்டும். அதேசமயம், மன்னரையும், இளவரசரையும் ருஸ்தம்கான் கொல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ருஸ்தம்கானை அழித்து மதுரையை மீட்கவும் வேண்டும். எப்படி நம் திட்டம்?"
"திட்டம் சரிதான்..." என்று ஒப்புக்கொண்ட தொண்டைமான், "மதுரைப் படையோ மிகப் பெரியது. தவிர ருஸ்தம்கானின் புரவிப் படையும் சேர்ந்துள்ளது. மதுரைக்குப் பாளையக்காரர்களும் அதிகம்" என்றான் எச்சரிக்கையாக!
"அறிவேன் இதை... தவிர வாலி கொண்டபுரத்து ஷெர்கான் லோடியும் ருஸ்தம்கானுக்கு உதவியாக படை அனுப்புவான். இதையும் அறிவேன்" என்ற சேதுபதி சற்று நிதானித்து, "நாம் நேரிடையாக ருஸ்தம்கானை எதிர்த்துப் போரிட்டு மதுரையையும் திருச்சியையும் மீட்க முடியாது" என்றும் சொன்னான்.
தொண்டைமான் எதுவும் பேசாமல், சேதுபதியின் திட்டம் என்ன என்று அறிவதிலேயே ஆவலாய் இருந்தான்.
"முதலில் நாம் மதுரை தளவாய் கோவிந்தப்பையாவின் ஆதரவும், பாளையப் பட்டுகளின் ஆதரவும் யாருக்கு என்பதை அறிய வேண்டும்."
"ஆம்" என்று ஒப்புக்கொண்டான் தொண்டைமான்.
"மைசூர் மன்னன் சிக்கதேவராயனின் படைத்தலைவன் குமரய்யா சத்தியமங்கலக் கோட்டையக் கைப்பற்றி, மதுரையைத் தாக்க வேளை பார்த்துக் கொண்டிருக்கிறான். திருமலை நாயக்கர் காலத்தில், என் முன்னோரான ரகுநாத சேதுபதியின் உதவியுடன் மைசூர்ப் படையை ஓட ஓட விரட்டி, மைசூர்த் தளபதி ஹம்பையாவின் மூக்கை அறுத்ததை இப்போதுள்ள மைசூர் மன்னன் மறந்திருக்க மாட்டான். அதற்கு பழிவாங்கவே சத்தியமங்கலத்தில் தளபதி குமரய்யா காத்திருக்கிறான்... அவனுடன் ருஸ்தம்கான் உடன்படிக்கை செய்து கொள்ளும் முன் நாம் உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்."
"சேதுபதி அவர்களே" என்ற தொண்டைமான், "நாம் மைசூர்ப் படையை அழைப்பது நமக்கு நாமே தீங்கு விளைவித்துக் கொள்வதாகும்" என்று எச்சரித்தான்.
"அதையும் உணர்ந்துள்ளேன்" என்ற சேதுபதி, "மைசூரானை மடக்க இன்னோர் எதிரி இருக்கிறான்" என்றான்.
"யார் அது?"
"செஞ்சி அரசன் சாம்பாஜி. சாம்பாஜிக்கு மைசூரின் வளர்ச்சியில் வெறுப்பு. சாம்பாஜிக்கும் படையுடன் வரும்படி அழைப்பு விடப்போகிறேன்."
"இதுவும் ஆபத்தில்லையா?"
"சாம்பாஜியின் பங்காளியான தஞ்சை சரபோஜிக்கும் அழைப்பு விடப்போகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சேதுபதி.
"தாங்கள் செய்யப்போகும் காரியம், மதுரையை ஆளாளுக்குப் பங்கு போட்டுக் கொடுக்கக் கூடியாதாக இருக்கிறது" என்றான் தொண்டைமான்.
"அப்படி நடக்காது... நாமும் நம் படையுடன் மதுரையில் ஊடுருவப் போகிறோம். நம் மறவர் நாட்டுக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை" என்ற சேதுபதியின் குரலில் உறுதி தெரிந்தது.
"அப்படியானால், நானே திரும்ப மதுரை இளவரசரை ருஸ்தம்கானிடம் ஒப்படைக்க வேண்டுமா?"
"நாம் ஒப்படைக்கப் போகிறோம்...." என்றான் சேதுபதி அழுத்தமாக.
"நாம் என்றால்.... தாங்களுமா?"
"ஆம்... நானும் வருகிறேன்."
"சேதுபதி அவர்களே" என்ற தொண்டைமான், "இப்போதுள்ள சூழ்நிலையில் தாங்கள் நேரிடையாக வருவது ஆபத்தில்லையா?" என்றான் கவலையுடன்.
"ஆபத்தை எதிர்கொள்வதுதான் வீரர்களின் கடமை" என்ற சேதுபதி, "நான் வீரன் இல்லையா?" என்று கொஞ்சம் ஏளனத்துடனேயே கேட்டான்.
"இருந்தாலும் தாங்கள் அதிபதி. மறவர் குல மன்னர்... பொறுப்பை என்னிடம் ஒப்படையுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன்."
"தொண்டைமான் போர் என்றால் நீ மட்டும் போதும்... இது அப்படி அல்ல. சூழ்ச்சி. நானும் உடன் இருப்பதுதான் நல்லது."
"தங்கள் விருப்பம்" என்றான் தொண்டைமான்.
"இங்கேயுள்ள நூறு வீரர்களுடன் புறப்படுவோம். ராஜபாட்டையில் செல்லாமல் குறுக்குப் பாதைகள் வழியாகவே போவோம்."
"ஏன்?" என்றான் தொண்டைமான், வியப்புடன்.
"நாம் நேரிடையாக ருஸ்தம்கானையே சந்தித்து இளவரசரை ஒப்படைக்க வேண்டும். இடையில் அவன் வீரர்களிடம் அகப்பட்டுவிடக் கூடாது" என்ற சேதுபதி "மாலையில் புறப்படுவோம்" என்றான்.
"உத்தரவு சேதுபதி அவர்களே!"
"உன் தங்கையை என்ன செய்வதாக உத்தேசம்?"
"அதுதான் தெரியவில்லை."
"அவளும் நம்முடனேயே வரட்டும்."
"அப்படியே" என்றான் தொண்டைமான், உற்சாகத்துடன்.
"நீ போய் இளவரசரை இங்கே அனுப்பு" என்று சேதுபதி கட்டளையிட, தொண்டைமான் வெளியேறினான்.
மதுரை இளவரசன் முத்துவீரப்பன் வர மரியாதைக்காக எழுந்து எதிரில் உள்ள இருக்கையில் அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்துகொண்ட சேதுபதி, "இளவரசே! தங்களை... நான் ருஸ்தம்கானிடமே ஒப்படைக்கப் போகிறேன்" என்றான் சாதாரணமாக.
"என்ன?" என்று திடுக்கிட்ட மதுரை இளவரசனிடம், தன் திட்டங்களை விளக்கினான் சேதுபதி. இளவரசன் முகத்தில் புத்தொளி பரவியது, அவற்றைக் கேட்டதும்.
மாலையே சேதுபதியும், மதுரை இளவரசனும், தொண்டைமானும், கதலியும் வீரர்கள் தொடர்ந்து வர சுற்றுப்பாதை வழியாகப் புறப்பட்டனர்.
இராமனாதபுரம் எல்லையைக் கடந்து, மதுரையின் மண்ணில் பிரவேசித்தனர். இரவின் இரண்டாம் ஜாமமாகிவிட்டதால், ஒரு மலைக் குகையில் தங்கலாமென நினைத்துச் சென்றவர்களுக்கு, அங்கே பேராபத்து ஒன்று காத்திருந்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மதுரையை மீட்ட சேதுபதி
[You must be registered and logged in to see this link.]
அத்தியாயம் - 4. குகையில் குழப்பம்
பகலவன் மறைந்து பிறை நிலவின் மங்கிய ஒளியில் மலைப்பாதை வழியாக மெல்லவே தங்கள் புரவிகளைச் செலுத்திக் கொண்டிருந்த சேதுபதியும் மற்றவர்களும் தங்குவதற்கு இடம் பார்த்துக் கொண்டே வர ஒரு குகை அவர்களின் பார்வையில் பட்டது.
பின்பு சில வீரர்கள் எரியும் பந்தங்களுடன் குகைக்குள் போய் ஆராய்ந்து இரண்டு கல் படுக்கைகள் இருப்பதைக் கண்டனர். வந்து சொல்ல எல்லோரும் குகைக்குள் பிரவேசித்தனர்.
உணவு மூட்டையைப் பிரித்து அனைவரும் உண்டுவிட்டு குகைக்குள்ளேயே படுத்துக் கொண்டனர்.
அப்படி அவர்கள் படுத்து உறங்க ஆரம்பித்த ஒரு நாழிகைக்கெல்லாம் குகைக்கு வெளியே பல மனித உருவங்கள் தோன்றின. முதன்மையாக நின்றிருந்த ஒரு மனித உருவம் உள்ளே மங்கிய தீவர்த்தி ஒளியில் படுத்திருந்த மனித உருவங்களைப் பார்த்தது.
தன் கையில் இருந்த வாளால் குகைப் பாறையில் தட்டி "எழுந்திருங்கள்" என்று அதட்டவும் செய்தது.
குகையின் வாயில் முகப்பில் படுத்திருந்த தொண்டைமான் "யாரது வெளியில்" என்று அதட்டினான்.
"கன்னிவாடி சின்னக்காட்டீரன்."
"ஓ... பாளையக்காரரா!" என்ற தொண்டைமான் கல் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த சேதுபதியைப் பார்த்தான்.
"என்ன வேண்டும்?" என்று சேதுபதி அமைதியாகவே கேட்டான்.
"நீங்கள் யார்?" என்று வெளியே வாளுடன் நின்று கொண்டிருந்த சின்னக்காட்டீரன் கேட்டான்.
"நாங்கள் சேதுபதியின் படைத்தலைவர்கள்."
"மதுரை இளவரசர் இங்கே உங்களுடன் இருகிறாரா?"
"ஆம்... மதுரை இளவரசர் இங்கே தான் இருக்கிறார்."
தொண்டைமான் உடனே சேதுபதியை பார்த்தான், இவராக ஏன் இப்படிக் கூறுகிறார் என்று.
"மன்னருக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் பின்பு தப்பி ஓடிவிட்டதாகவும் அவரை எப்படியும் பிடித்துத் தன்னிடம் ஒப்படைக்கும்படியும் உத்தரவு" என்ற சின்னக்காட்டீரன் தன் வாளை மறுபடி பாறையில் தட்டினான்.
"யார் உத்தரவு?"
"மன்னரின் உத்தரவு"
"லிகிதம் வந்ததா?"
"ஆம்"
"மன்னரின் முத்திரை இருந்ததா?"
"இல்லாமல் நம்ப நான் என்ன ஒண்ணும் தெரியாதவனா?" என்று கேட்ட சின்னக்காட்டீரன் "உங்கள் சேதுபதி அவர்களுக்கும் லிகிதம் வந்திருக்குமே" என்றும் கேட்டான்.
"லிகிதம் வருவதற்குள்ளாகவே எங்களுடன் இளவரசரை அனுப்பிவிட்டார்."
"எங்கே?"
"மதுரைக்குத்தான்."
"ஏன்?"
"மன்னரிடம் ஒப்படைக்கச் சொல்லி."
"அப்படியா" என்று வியப்புடன் வினவினான் சின்னக்காட்டீரன்.
"ஆம் பாளையக்காரரே..." என்ற சேதுபதி "இளவரசரை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம். நீங்கள் அவரை மன்னரிடம் ஒப்படைப்பது பற்றி எங்களுக்கு சம்மதமே" என்றான்.
"உண்மையாகவா!" என்றான் சின்னக்காட்டீரன் "நாங்கள் உங்களிடமிருந்து இளவரசரை மீட்கப் போரே நடத்த வேண்டியிருக்கும் என்று நினைத்தேன்" என்றான்.
"ஒப்படைக்க இல்லாவிட்டால் நாங்கள் ஏன் இளவரசருடன் இங்கே வரவேண்டும்? இந்நேரம் இளவரசர் சேதுபதியின் மாளிகையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பாரே" என்ற சேதுபதி எழுந்து வாயில்புறம் வந்தான்.
"பாளையக்காரரே" என்ற சேதுபதி "நாம் இருவரும் அப்பால் போய் தனியாகப் பேசலாமா?" என்றும் கேட்டான்.
"சரி வாருங்கள்."
இருவரும் பாதையில் நடந்து தொலைவில் போக உள்ளேயும் வெளியேயும் இருந்த வீரர்கள் உட்கார்ந்து விட்டனர்.
தொண்டைமான் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
கதலி இன்னும் எழாமல் படுத்துக் கிடந்தவாறே வேடிக்கைப் பார்த்தாள்.
சற்று தொலை தூரத்திற்கு அழைத்துச்சென்ற சேதுபதி மங்கிய நிலவு ஒளியில் சின்னக்காட்டீரனைப் பார்த்தான்.
"பாளையக்காரரே" என்ற சேதுபதி "நீங்கள் மதிரையில் மன்னரைச் சந்திக்கவே முடியாது" என்றான்.
"ஏன்?"
"மன்னர் சிறை வைக்கப்பட்டிருகிறார்."
"சிறையிலா?"
"உண்மையான சிறையில் அல்ல. அவருடைய அறையிலேயே சிறையாக வைக்கப்பட்டிருக்கிறார்."
"உண்மையாகவா?"
"முழு உண்மை."
"யார் வைத்திருப்பது அப்படி?"
"ருஸ்தம்கான்."
"ஏன்?"
"மதுரையையும் திருச்சியையும் தானே கைப்பற்றிக் கொள்ள... தானே மன்னன் ஆக."
"அந்த குதிரைப் படைத் தலைவனுக்கு அவ்வளவு ஆசையா?"
"ஆம்... அவன் வசம்தான் இப்போது மதுரையும் திருச்சியும் உள்ளன."
"மன்னரை நான் சந்தித்துவிட்டால்?"
"நான் சொன்னதெல்லாம் பொய்."
சின்னக்காட்டீரன் யோசித்தான்.
"மன்னரின் தம்பி அழகிரி மன்னரை உண்மையிலேயே சிறை வைத்து நாட்டை ஆண்டார் அல்லவா?"
"ஆம்."
"மன்னருக்காக அதிகாரிகள், தளவாய் ஆகியோருடைய உதவியுடன் ருஸ்தம்கான் அழகிரியைப் போரிட்டுத் துரத்தி மன்னரை மீட்டான் அல்லவா?"
"ஆம்."
"அதன் பின் அவனுக்கே பதவி ஆசை வந்திருக்கிறது. மன்னரை அவருடைய அறையிலேயே சிறை மாதிரி வைத்திருந்து அவர் பெயரால் நாட்டைத் தானே ஆளுகிறான்."
"இளவரசரை என் பாதுகாப்பில் வைத்திருந்து முதலில் நான் மதுரை சென்று நிலைமையை ஆராய்கிறேன்."
"வேண்டாம். நீங்கள் இளவரசருடன் நேரே மதுரைக்கே செல்லுங்கள். ருஸ்தம்கானிடம் ஒப்படையுங்கள்... அவனால் இப்போது மன்னரையும், இளவரசரையும் எதுவும் செய்ய முடியாது. அதற்கு சூழ்நிலைகள் ஏற்படப் போகின்றன."
"என்ன சூழ்நிலைகளோ?"
"நீங்கள் சில நாட்களில் அறியப்போகிறீர்கள்... அரண்மனையில் நீங்கள் மன்னரைச் சந்திக்க முடியாவிட்டால், தளவாய் கோவிந்தப்பரைச் சந்தியுங்கள். அதுவும் இயலாவிட்டால் ருஸ்தம்கானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். அவனுக்கு உதவுவதாக. நான் உங்களை அங்கே சந்திக்கிறேன்."
"எங்கே?"
"வணிகர் வீதியில்" என்ற சேதுபதி "இதை யாரேனும் உங்களிடம் காட்டினால் அவனுடன் வந்து என்னைச் சந்திக்கலாம்" என்று இடையில் இருந்து ஒரு இலச்சினையை எடுத்துக் காட்டினான்.
அதை அருகில் விழிகளைக் கொண்டு நன்றாகக் கவனித்த சின்னக்காட்டீரன் "இது சேதுபதி அவர்களின் முத்திரை அல்லவா" என்றான் வியப்புடன்.
"நானே சேதுபதி தான்."
"அப்படியா... வணக்கம் சேதுபதி அவர்களே" என்ற சின்னக்காட்டீரன் "தாங்களேயா இப்படி ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்படியான செயலில் இறங்கியிருகிறீர்கள்?" என்று கேட்கவும் செய்தான்.
"மதுரை நாட்டிற்கே ஆபத்து வந்திருகிறது... அதை விடுவிக்க வேண்டாமா?"
"மதுரை மன்னர் தங்கள் எதிரி அல்லவா?"
"எதிரி தான். ஆனால் இளவரசர் எதிரியல்லவே..."
சேதுபதி இலச்சினையை இடையில் செருகிக்கொண்டு "பாளையக்காரரே, வாருங்கள் போவோம்" என்று நடக்க சின்னக்காட்டீரனும் உடன் நடக்கலானான்.
குகைக்குள் நுழைந்த சேதுபதி, இளவரசர் முத்துவீரப்பனிடம் "இளவரசே, தாங்கள் இந்த பாளையக்காரருடன் புறப்படுங்கள். கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்ல படியாக நடக்கும்" என்று கேட்டுக் கொண்டான்.
பின்பு தொண்டைமனிடம் திரும்பி "தொண்டைமான்... நீயும் இந்தப் பாளையக்காரருடன் புறப்படவேண்டும்" என்று கட்டளையிட்டான்.
சின்னக்காட்டீரனிடம், "இவனை உங்கள் படைத் தலைவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்... தொண்டைமான் என்று தெரிவிக்க வேண்டாம்" என்றான்.
இளவரசனுடன் சின்னக்காட்டீரனும், தொண்டைமானும் புரவியின் மீது ஏறிப் புறப்பட்டனர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மதுரையை மீட்ட சேதுபதி
[You must be registered and logged in to see this link.]
அத்தியாயம் - 5. யார் அவள்?
மறுநாள் இரண்டே வீரர்களோடும், கதலியுடனும் புறப்பட்டு, இருட்டும் நேரத்தில் மதுரையை அடைந்தான் சேதுபதி.
மதுரை வணிகர் வீதியில், மதுரையில் இருந்து ஆண்டிற்கு இரு முறையாகிலும் இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வரம் சென்று வாணிகத்தையும், இறைவன் தரிசனத்தையும் முடித்துக் கொண்டு வரும் பெருங்குன்றனார் எனும் வணிகர் இருந்தார்.
சிறிய மாளிகை போன்றிருந்த தன் வீட்டின் முன்னால், புரவியை நிறுத்திக் கீழே குதித்த சேதுபதியைக் கண்ட பெருங்குன்றனார், வியப்பாலும் அதிர்ச்சியாலும் திகைத்துப் போய் நின்றார்.
"என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை யல்லவா?" என்று அவரை அணைத்துக் கொண்டான் சேதுபதி. பின், "தனியறைக்குப் போய் பேசுவோம்" என்றவன், அவரை அணைத்தபடியே உள்ளே நுழைந்தான்.
தனது அந்தரங்க அறைக்கு அவர்களை அழைத்துப் போன பெருங்குன்றனார், "சேதுபதி அவர்களே, இந்த நேரத்தில் நீங்கள் இங்கே வரலாமா..." என்று கேட்டார்.
"வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது" என்ற சேதுபதி, அவரிடம் ரகசியமாய் ஏதோ பேசினான். பின்பு "இந்த வீரர்கள் தங்க முதலில் ஏற்பாடு செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டான். அவன் சொன்னவுடன், அந்த இரு வீரர்களையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கிப் போனார் பெருங்குன்றனார்.
அவர் போன பின், ஒரு பணிமகள் உணவு எடுத்துக் கொண்டு வந்தாள். உணவு உண்டபின் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு பெரும்குன்றனார் சொன்னதாய் சொல்லிப் போனாள் அவள். "கதலி... உனக்கும் தனியறை ஏற்பாடு செய்யட்டுமா...?" என்று விருப்பமேயில்லாமல் கேட்டான் சேதுபதி.
"வேண்டாம் சேதுபதி அவர்களே" என்ற போது அவன் முகம் மலர்ந்திருந்தது.
"ஏன் வேண்டாம்?"
"என் அண்ணன் தங்கள் உயிரை என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார்" என்றாள் அவள் விஷமமாக!
"ஓஹோ... நீ என் ஆபத்துதவியா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்த சேதுபதி, "வரலாற்றிலேயே ஒரு பெண் அரசன் ஒருவனின் ஆபத்துதவியாக இருப்பது இதுதான் முதல் முறையாக இருக்கும்..." என்றான்.
"ஏன் இருக்கக்கூடாதா?" என்றாள் கதலி, சற்று கோபத்தோடு.
"அந்த அளவுக்கு உனக்கு வீரமும் திறமையும் இருக்கிறதா என்பதுதான் என் ஐயம்" என்று அவன் சொல்லி முடிக்கு முன், அவள் தன் இடையில் இருந்த குறுவாளை எடுத்து வீச, அது அவனுடைய தலைப்பகையுடன் அப்பால் போய் விழுந்தது. சேதுபதி ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான்.
"எப்படி என் திறமை?" என்று விஷமமாகக் கேட்டபடியே எழுந்து போய், குறுவாளையும் தலைப்பாகையையும் எடுத்து வந்தாள் கதலி. சேதுபதிக்கு அவள் மீதிருந்த அலட்சியம் போய், மதிப்பு ஏற்ப்பட்டது.
"இளமான் என்று நினைத்தேன். பாயும் வேங்கையாக இருக்கிறாயே" என்றான் குறும்பாக.
"ஆபத்தில்தான் நான் பாயும் வேங்கை. மற்றப்படி இளமான்தான்" என்று சொல்லிவிட்டு புன்னகை செய்தாள் கதலி.
அந்தப் புன்னகை சேதுபதியை மயக்கியது. அவளை முதன் முதலாகப் பார்த்தபோது ஏற்பட்ட எண்ணங்கள் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தன. தனது திண்மையான திரட்சியான அவயங்கள் மீது அவனது பார்வை பரவியதை கவனியாதவள் போல், "நான் ஏன் என் அண்ணனுடன் புறப்பட்டு வந்தேன் தெரியுமா சேதுபதி அவர்களே?" என்றாள் கதலி.
"சொல்."
"என் அண்ணன்மார்கள் எல்லாம் அரச குடும்பங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். நானும் அரச குடும்பத்துடன் சம்பந்தபட வேண்டுமென்று தான் புறப்பட்டேன்..."
"நீயும் என் படைத் தலைவியாக விரும்புகிறாயா?" என்று அவளை இடைமறித்துக் கேட்டான் சேதுபதி, கேலியாக.
"ஏன் ராணியாக சம்பந்தப்படக் கூடாதா?" என்று சிறிதும் தயங்காது அவள் பதில் கேள்வி கேட்க, எழுந்து அவளின் கையைப் பற்றிக் கொண்டபடி "கதலி" என்று காதலாய் அழைத்தான் சேதுபதி.
அழைத்தபடியே, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் அவளின் முகத்தில் தன் முகத்தைப் பதிக்கவும் செய்தான்.
"உடனே உங்கள் விஷமத்தை ஆரம்பித்து விட்டீர்களே..." என்று பொய்யான கோபத்துடன் சொன்னாளென்றாலும், அவனை மயக்குவது போல் மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்தினாள் அவள்.
"இப்போது நான் இளமான்" என்று நிறுத்தியவள், "பாயும் வேங்கை யாரென்று சொல்லத் தேவையில்லை" என்று கூறி, பார்வையை அவன் மேல் செலுத்தினாள்.
"நீ நினைப்பது தவறு. நீ தேன். நான் வண்டு" என்று சொல்லியபடியே, தனது வலது கையை அவளின் மென் தோள்களுக்குக் கீழ் கொண்டு போனான் சேதுபதி.
நடு இரவுக்கு மேல் மதுரை இளவரசனுடன் புறப்பட்டு காலை இரண்டாம் ஜாம ஆரம்பத்தில் அரண்மனை வாயிலை அடைந்தனர் சின்னக்காட்டீரனும், தொண்டைமானும், வீரர்களும். விஷயத்தை தெரிவித்ததும், ருஸ்தம்கானின் உப தளபதியாகிய முஸபர்கானே விரைந்து வந்து, அவர்களை அழைத்துப்போய் விருந்தினர் மாளிகையில் தங்கச் செய்தான்.
"படைத் தலைவர் அரண்மனையில் இல்லை. வெளியே போயிருக்கிறார். நாளைதான் வருவார்" என்று சொல்லிப் போனான் முஸபர்கான்.
மறுநாள் காலையில் வந்த ருஸ்தம்கானிடம் தகவல் சொல்லப்பட்டது. விசாரணை மண்டபத்தின் நடுவில் இருந்த பெரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டவன், அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். உடனடியாக சின்னக்காட்டீரனும், தொண்டைமானும், இளவரசனும் அழைத்து வரப்பட்டனர்.
ஆறடி உயரத்திற்கு மேல் ஆஜானுபாகுவாக, முகத்தில் கொடூரக்களையுடனும், சிறிய கண்களுடனும், குறுந்தாடியுடனுமிருந்த ருஸ்தம்கானை அப்போது தான் முதல் முறையாகப் பார்த்தான் தொண்டைமான்.
"சபாஷ் பாளையக்காரரே, சபாஷ்! மன்னரின் கட்டளைப்படி நான் கொடுத்த வேலையைப் பொறுப்பாகச் செய்து முடித்தீர்கள்" என்ற ருஸ்தம்கான், "இவரை மன்னர் முன் நிறுத்தி அவர்களது கட்டளையை நிறைவேற்றி விட்டு வருகிறேன். நீங்கள் விருந்தினர் மாளிகையில் தங்கியிருங்கள்" என்று சொல்லி விட்டுப் போனான். இளவரசனும் ருஸ்தம்கானின் வீரர்கள் தொடர அவனைப் பின் தொடர்ந்தான்.
சின்னக்காட்டீரனுக்கு இப்போது எல்லமே புரிவது போலிருந்தது. வழக்கமாய், தளவாய் கோவிந்தப்பையாதான் வரும் பாளையக்காரர்களை வரவேற்பார். அந்த வழக்கம் மாறியிருக்கிறது.
தவிர, அரண்மனையின் வாயிலிலும் உள்ளேயும் முக்கியமான இடங்களில் ருஸ்தம்கானின் முஸ்லிம் வீரர்களே காவல் புரிந்தனர்.
மாலையில் விருந்தினர் மாளிகைக்கு வந்த வீரன் ஒருவன் "பாளையக்காரரை மட்டும் வரச் சொல்லி உத்தரவு" என்றான் பணிவுடன்.
ஒரு கணம் தயங்கிய சின்னக்காட்டீரன், தொண்டைமான் போகச்சொல்லி சைகை காட்ட அந்த வீரனுடன் புறப்பட்டான்.
மன்னர் மாளிகைக்கு முன்னே இருந்த மளிகைக்குள் அந்த வீரனுடன் நுழைந்தான் சின்னக்காட்டீரன். அது தளவாயின் மாளிகை.
உள்ளே, பெரிய அலங்காரமான அறையில் அமர்ந்திருந்த ருஸ்தம்கான் சின்னகாட்டீரனை வரவேற்றான்.
ருஸ்தம்கானிடம் எச்சரிக்கையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து கொண்ட பாளையக்காரன், "தளவாய் அவர்கள் இல்லையா?" என்று சாதாரணமாய்க் கேட்பது போல் கேட்டான்.
"ஏன்?"
"வழக்கமாக தளவாய் அவர்கள் தான் எங்களை வரவேற்பார்கள். தவிர மன்னர் அவர்களையும் சந்திக்க வைப்பார்கள்" என்று சாமர்த்தியமாக பேச்சை தொடர்ந்தான் சின்னக்காட்டீரன்.
"தளவாய் திருச்சி கோட்டைக்குப் போய் இருக்கிறார். மன்னருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் யாரையும் சந்திக்க அவர் விரும்பவில்லை" என்றான் ருஸ்தம்கான்.
"நீங்கள் எப்படி இளவரசரை சிறை செய்தீர்கள்?" என்று தொடர்ந்து கேட்டான் அவன்.
"இராமநாதபுரம் சேதுபதி இளவரசரை சிறை செய்து தம் படைத்தலைவர் மூலம் அனுப்பி வைத்தார். நான் அவர்களை வளைத்துக் கொண்டு கேட்டவுடன், என்னிடம், அவரை ஒப்படைத்து விட்டுப் போய்விட்டனர்."
"உண்மையாகவா?"
"இல்லாவிட்டால் எனக்கு லிகிதம் வந்த அன்றே இளவரசரைப் பிடித்து வந்திருக்க முடியாதே" என்ற பாளையக்காரன், "சேதுபதி அவர்கள் இளவரசருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தால், அவரைப் பிடிக்க நாம் படை எடுக்க நேர்ந்திருக்கும்" என்றான்.
"சேதுபதியாகவே ஏன் இளவரசரை இங்கே அனுப்ப வேண்டும்... மன்னர் அனுப்பிய லிகிதம் கூட அவருக்கு கிடைத்திருக்காதே..." என்று கேட்டான், ருஸ்தம்கான்.
"நம்முடன் வீணாக இப்போது பகை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்."
"உங்களுடன் விருந்தினர் அறையில் தங்கி இருப்பவர்தான் சேதுபதியின் படைத்தலைவர் தொண்டைமான் என்று நான் கருதுகிறேன். அப்படிதானே" என்ற ருஸ்தம்கானின் அடுத்த கேள்வி பாளையக்காரனைத் திடுக்கிட வைத்தது.
"ஆம்... உங்களுக்கெப்படித் தெரியும்" என்று வியப்போடு கேட்டான் பாளையக்காரன்.
"யூகம்தான். நீங்கள் இங்கே ஒப்படைக்கிறீர்களா இல்லையா என்று பார்த்து, சேதுபதி அவர்களிடம் பொறுப்புடன் போய் பதில் சொல்ல வேண்டுமல்லவா?"
"ஆம், ஆம்" என்று அவன் சொன்னதை ஆமோதித்தான் பாளையக்காரன்.
"நீங்கள் எப்பொழுது புறப்படுகிறீர்கள்" என்று கேட்டான், ருஸ்தம்கான்.
"இப்பொழுதே புறப்படலாமென்றிருகிறேன்."
"தொண்டைமான் இங்கேயே இருக்கட்டும். தொண்டமானுக்குப் பரிசும், சேதுபதி அவர்களைப் பாராட்டி லிகிதமும் கொடுக்க வேண்டும். அவர் காலையில் புறப்படட்டும்" என்றான் ருஸ்தம்கான்.
ருஸ்தம்கானிடம் விடை பெற்றுக் கொண்ட பாளையக்காரன், விருந்தினர் மாளிகையில் தொண்டைமானைச் சந்தித்து ருஸ்தம்கானுடன் நடந்த உரையாடலைச் சுருக்கமாக விளக்கினான். பின் அவனது செவியருகில் ஏதோ முணுமுணுத்து விட்டு, தன் வீரர்களுடன் புறப்பட்டான்.
தன்னை இன்னார் என்று அறிந்து கொண்ட ருஸ்தம்கானைப் பற்றியும், வேறு யோசனையிலும் ஆழ்ந்து போனான் தொண்டைமான்.
அப்போது அங்கே ஒரு இளம் பெண் வந்தாள்.
"தாங்கள் தானே தொண்டைமான்" என்றாள் அவனிடம்.
"ஆம்."
"வாருங்கள் என்னுடன்."
சொல்லிவிட்டு அவள் முன்னே செல்ல, தொண்டைமான் அவளைப் பின் தொடர வேண்டியதாகி விட்டது.
அவள் அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். பின்னர் இன்னோர் மண்டபத்தை எட்டிப் பார்த்துவிட்டு, "என்னுடன் ஓடி வாருங்கள்" என்று சொன்னபடியே ஓட ஆரம்பித்தாள்.
"இவள் யார்? நான் ஏன் இவளுடன் ஓட வேண்டும்?" என்று மனசுக்குள் கேட்டுக் கொண்டானேன்றாலும், ஓடுவதை நிறுத்தவில்லை தொண்டைமான்.
சற்று இருட்டான இடத்துக்கு வந்ததும் அந்தப் பெண் நின்றாள். பின் சுவரைத் தடவிக் கொண்டே சற்று தொலைவு நடந்து ஒரு கதவைத் தள்ள, அது திறந்து கொண்டது. அந்த அறைக்குள் அவள் நுழைந்தாள். தொண்டைமானிடம் "உள்ளே வாருங்கள்" என்று கொஞ்சுவது போல், அவள் சொல்ல, அவன் உள்ளே வந்ததும் கதவை மெல்ல மூடினாள்.
அப்போது, அந்தக் கதவின் வெளிப்பக்கம் யாரோ நாதாங்கியை மாட்டிப் பூட்டும் சப்தம் கேட்டது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மதுரையை மீட்ட சேதுபதி
[You must be registered and logged in to see this link.]
அத்தியாயம் - 6. கதலியின் சபதம்
கன்னிவாடி பாளையக்காரனான சின்னக்காட்டீரன் தன் வீரர்களுடன் அரண்மனையை விட்டு வெளியே வந்தான். கொஞ்ச தூரம் ராஜபாட்டையிலேயே சென்று பின் தன் புரவியை நிறுத்திக் கொண்டு தன் வீரர்களிடம் மதுரை நகரை விட்டு கடந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனக்காக காத்திருக்கும்படி பணித்தான். அவர்கள் மேலே சென்ற பின் தன் புரவியை ராஜபாட்டையை விட்டு வீதிகளில் செலுத்தி வணிகர் வீதியை அடைந்தான். புரவியினின்றும் குதித்து அதன் கடிவாளத்தைப் பற்றியபடி பார்வையை அங்கும் இங்கும் துழாவியபடி நடக்க ஆரம்பித்தான்.
வணிகர் பெருங்குன்றனார் மாளிகையின் முகப்பில் பணியாளன் போல அமர்ந்திருந்த சேதுபதியின் வீரன் பாளையக்காரனை அன்று குகை வாயிலில் லேசான நிலவொளியில் கண்ட தோற்றத்தை மனதில் கொண்டு லேசான அடையாளம் கண்டு எழுந்தான். பாதையில் நின்று கொண்டு "இந்த இலச்சினையைத் தேடுகிறீர்களா?" என்று தன் கையில் இருந்ததைக் காட்டினான்.
பாளையக்காரனும் "ஆம்... எங்கே அவர்?" என்று கேட்டான்.
"இந்த மாளிகைதான், உள்ளே வாருங்கள்" என்று வீரன் மாளிகையை நோக்கி நடக்க பாளையக்காரனும் பின் தொடர்ந்தான்.
இன்னொரு வீரன் விரைந்து வந்து புரவியின் கடிவாளத்தைப் பற்றிக் கொள்ள முதல் வீரனுடன் படிகளில் ஏறி உள்ளே சென்று பின் மேலே ஏறி சேதுபதி இருந்த அறைக்குள் நுழைந்தான்.
"வாருங்கள் பாளையக்காரரே" என்று எழுந்து வந்து சின்னக்காட்டீரனின் கையைப் பிடித்து வரவேற்ற சேதுபதி அவனை ஒரு ஆஸனத்தில் அமரச் செய்து தானும் அமர்ந்து கொண்டான்.
"இளவரசரை ஒப்படைத்தீர்களா?"
"ஒப்படைத்தேன்" என்ற பாளையக்காரன் கதலியைப் பார்த்தான்.
"நீ ஏன் நின்று கொண்டிருக்கிறாய். அப்படி உட்கார்" என்று சொல்ல கதலியும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
"யாரிடம் ஒப்படைத்தீர்கள்?"
"ருஸ்தம்கானிடம்."
"தளவாய் இல்லையா?"
"அவர் திருச்சிக்குப் போயிருக்கிறாராம்."
"அப்படியென்று யார் சொன்னது?"
"ருஸ்தம்கான் தான்."
"மன்னரை சந்தித்தீர்களா?"
"இல்லை."
"ஏன்?"
"அவர்களுக்கு உடல் நிலை சரியில்லையாம்."
"அப்படியென்று அவன் தான் சொன்னானா?"
"ஆம்."
"இதிலிருந்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"
"ருஸ்தம்கானின் பிடியில் மதுரை உள்ளது என்று."
"மதுரை மட்டுமல்ல, திருச்சியும் கூட."
சேதுபதி யோசனையில் ஆழ சில கணங்கள் பொறுத்து "அரண்மனையிலும் முக்கியமான இடங்களிலும் அவனுடைய வீரர்களே காவல் புரிகின்றனர்" என்றும் சொன்னான் சின்னக்காட்டீரன்.
"அப்படியானால்" என்ற யோசனையில் இருந்து விடுபட்ட சேதுபதி, "இளவரசர் மன்னருக்கெதிராக எதுவும் செய்யவில்லை என்று தெரிகிறது இல்லையா?" என்று கேட்டான்.
"கண்டிப்பாக இல்லை."
"மன்னரும் தம் அறையிலேயே சிறை வைக்கப்பட்டிருகிறார்... இல்லையா?"
"கண்டிப்பாக."
"ருஸ்தம்கான் தவிர அவரை யாரும் பார்க்க முடியாது."
"அப்படித்தான் நினைக்கிறேன்."
"தளவாய் உண்மையில் திருச்சிக்குப் போயிருக்கிறாரா அல்லது இங்கேயே அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை."
"ஆம்" என்று பாளையக்காரன் தலையை ஆட்டினான்.
"இளவரசர் மன்னருக்கு எதிராக சதி செய்தார் என்று இனி பகிரங்கமாகவும் குற்றம் சாட்டப்படலாம். கொஞ்ச நாளில் மன்னர் இறக்கலாம்."
"என்னது?"
"இறக்க வைக்கப்படலாம் என்கிறேன்."
உடனே துள்ளி எழுந்த சின்னகாட்டீரனை கையைப் பற்றி "அமருங்கள் பாளையக்காரரே... பதட்டப்படாதீர்கள். பதட்டப்பட்டால் அறிவு வேலை செய்யாது" என்று திரும்ப அமர வைத்தான் சேதுபதி.
"தொண்டைமான் எங்கே?" என்று கேட்கவும் செய்தான்.
"அரண்மனையிலேயே விருந்தினர் மாளிகையில் இருக்கிறார்."
"ஏன்?"
"அவருக்குப் பரிசும் தங்களுக்கு லிகிதமும் கொடுக்க."
"எதற்கு?"
"தாங்கள் தானே இளவரசரை என்னிடம் ஒப்படைத்தீர்கள். அதையும் தெரிவித்தேன்."
"நான்தான் தொண்டைமானை உங்கள் படைத்தலைவன் என்று சொல்லிக் கொள்ளும்படி தெரிவித்தேனே."
"ருஸ்தம்கானே கேட்டான் அவர் தொண்டைமான்தானே என்று" என்ற சின்னக்காட்டீரன், அங்கே நடந்த உரையாடலை விளக்கினான்.
"ஆகா" என்றபடி துள்ளி எழுந்து கொண்டான் சேதுபதி.
"என்ன? என்ன?" என்றபடி தானும் நின்று கொண்டான் பாளையக்காரன்.
"அங்கே தொண்டைமானுக்கு ஆபத்துக் காத்திருக்கிறது."
இதைக் கேட்ட கதலியும் பதறி எழுந்து கொண்டாள்.
"எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள் சேதுபதி அவர்களே?" என்று பதட்டமாகக் கேட்டான் சின்னக்காட்டீரன்.
"தொண்டைமான்தான் இளவரசனைத் துரத்தி வந்த ருஸ்தம்கானின் வீரர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றியது."
"அதனால் என்ன?"
"பெரும்பாலான வீரர்களைத் தொண்டைமான் கொன்று போட்டான். சிலர் தப்பியோடினர்."
"அதனால்?"
"அந்த வீரர்கள் அரண்மனையில் இருந்த தொண்டைமானை அடையாளம் காட்டியிருப்பார்கள்."
"எப்படிச் சொல்லுகிறீர்கள்?"
"நிலவொளியில் அந்தப் போர் நடைபெற்றது."
"இது தங்கள் யூகம்தானே?"
"யூகம்தான். உண்மையும் கூட. இல்லாவிட்டால் தொண்டைமான்தானே என்று அவன் உங்களிடம் கேட்டிருக்க முடியாது."
"தங்கள் படைத் தலைவர் அவர் என்பது யாவரும் அறிந்த ஒன்றாயிற்றே."
"போர் நடந்ததும் என் ஆட்சிப் பகுதியில்தான். தவிர தொண்டைமானை ருஸ்தம்கானுக்குத் தெரியாது. அதுவும் நீங்கள் இளவரசரை ஒப்படைத்திருகிறீர்கள். அவனை உங்கள் ஆளாக எண்ணாமல் தொண்டைமானா என்று கேட்டிருக்கிறான். நீங்களும் ஆம் என்றிருக்கிறீர்கள்... ருஸ்தம்கானின் பரிசு மரணப் பரிசாகவும் இருக்கலாம்."
"என் அண்ணனை மட்டும் அந்த ருஸ்தம்கான் கொன்றால் நான் அவனைப் பழி தீர்ப்பேன். என் கையாலேயே அவனைக் கொன்று தீர்ப்பேன்" என்று அப்போது கதலி தன் வாளை உயர்த்தி சபதம் இட்டாள். சேதுபதி திடீரென்று தன் பதட்டத்தையும் வேகத்தையும் தணித்துக் கொண்டு, "கதலி... அஞ்சாதே... கவலைப்படாதே... நாளை தெரியும் உண்மை. அதுவரை பொறுமையாய் இரு" என்றான்.
"என்ன... இங்கே ஒரே சப்தமாக இருக்கிறது" என்றபடி அப்போது அங்கே வந்த வணிகர், சின்னக்காட்டீரனைப் பார்த்து "ஓ... பாளையக்காரரா... நீங்கள் இருவரும் எப்படிச் சேர்ந்தீர்கள்?" என்றும் கேட்டார்.
வணிகர் உட்பட யாவரும் அமர்ந்து கொண்டனர்.
சேதுபதி அப்போதுதான் அரண்மனையின் உள்ளே உள்ள நிலைமையை அவருக்கு விளக்கினான்.
அதைக் கேட்ட வணிகரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். அவரின் உடலும் நடுங்க ஆரம்பித்தது.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» அட்ரா சக்க' விஜய் சேதுபதி, 'ஆஹா' தமன்னா..! - 'தர்மதுரை' விமர்சனம்
» கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்
» உறைபனியில் இருந்து சிறுமியை மீட்ட நாய்.
» வேட்டையாடிய சிங்கங்களிடம் இருந்து தன் குட்டியை மீட்ட தாய் எருமை
» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
» கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்
» உறைபனியில் இருந்து சிறுமியை மீட்ட நாய்.
» வேட்டையாடிய சிங்கங்களிடம் இருந்து தன் குட்டியை மீட்ட தாய் எருமை
» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|