Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சைவத்திருமுறைகள் தொடரட்டும்…
Page 1 of 1 • Share
சைவத்திருமுறைகள் தொடரட்டும்…
சைவத்திருமுறைகள் தொடரட்டும்…
முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய்,
பின்னைப்புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனாய் நிற்பவன் பரம்பொருளான
சிவபெருமான். அவனைப் போலவே, பழமையும் புதுமையும் பொலிவது சைவசமயம்.
திருமறை என்கிற ‘வேதத்தை’ச் செய்தவன் இறைவன் சிவன். இது சைவசமயிகளின்
நம்பிக்கை. வேதத்திற்கு ஆரம்பம் என்பது யாருமே சொல்லாதது. அப்படி ஒன்று
இல்லை என்பதே சைவர்களின் நம்பிக்கை.
ஆனால், வேதத்தை இறைநூல் என்று ஏற்றுக்கொண்டாலும், கிறிஸ்துவ, முகமதிய
சமயங்கள் போல, அதுவே முடிந்த முடிவு என்றும், அதற்கு மேலே வேறுநூல்
பிறத்தல் தவறென்றோ ஹிந்துக்கள் நம்பவில்லை.
இதனால் தான் ஸ்ருதிகளான வேதங்களைத் தொடர்ந்து ஸ்மிருதிகளும்,
புராணங்கள், இதிஹாசங்கள், ஆகமங்கள், தோத்திரங்கள், சாஸ்திரங்கள்,
தத்துவங்கள் என்றெல்லாம் நம் சமய நூல்கள் விரிந்தன.
விரிகின்றன.முடிவின்றித் தொடர்கின்றன.
‘இல்லாததொன்றிலிருந்து இருப்பது பிறவாது’ என்பது சைவசித்தாந்தம். எனவே,
தான் இறைவாக்கின் தொடர்ச்சியாக ‘மானிட வாக்கும்’ சைவத்தால் ஏற்றுக்கொள்ளப்
பட்டது. வெளிப்படா நிற்கும் இறைவனே அநுபூதிமான்களின் வாயிலாய்ப் பேசுவதாய்
அவை கொள்ளப்பட்டன. இவ்வாறு சைவர்கள் ஏற்றுப் போற்றியதால் தான் சைவநூல்
வரிசை பல்கிப்பெருகிற்று. இதனால் பின் வந்த நூல்களும் முன் வந்த
திருமறையாம் வேதத்திற்கு ஒப்பாய் வைத்துப் போற்றப்பட்டன.
தமிழிலக்கணமும் இறைவனே முதல் நூலோன் என்று கூறும் -
வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல்நூலாகும்
என்கிறது தொல்காப்பியம்.
இவ்வாறு தமிழோடு பின்னிப்பிணைந்து பிற்காலத்தில் தோன்றிய அருளாளர்களின்
வாக்குகளையும் அதன் தகுதி கண்டு ஏற்றுப் போற்றிய திறனாலேயே சைவம்
நிமிர்ந்து நிற்கிறது.
இன்றைக்கு திருமுறைகளை விடுத்து அதற்கு முந்தைய வேதாகமத்தை மட்டுமே
சைவம் என்று சிந்திப்பது எவராலும் இயலாத ஒன்றேயாம். அப்படிச் சிந்தித்தால்
அது சைவமாயும் தோன்றாது. இதனால் தான், தன்னை அழிக்க வந்த புறச்சமயங்கள்
அழிந்து போக, தானே வியாபகமாய் நிற்கும் வெற்றி உடையதாகச் சைவம்
விளங்குகின்றது.
‘தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா பின்பு
தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா’
என்ற சித்தாந்த ஆசிரியர் உமாபதி சிவாச்சார்யாரின் கருத்தும் இதனுடன் இணைத்து நோக்குதற்குரியது.
இதே போலவே இறைமறுப்பையும் கூட ஏற்றுக் கொள்ள வல்ல சைவத்தின் சீர்மையையும்
பெருமையையும், “அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்” என்ற சுந்தரர் திருவடிவகள் காட்டி நிற்பதாகச் சுட்டுவர் அறிஞர்.
இவ்வாறு தகுதி கண்டு எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சைவத்திருமரபு
இடையில் சில இடர்களுக்கு உள்ளாயிற்று. கட்டமைக்கப்பட்ட, நிர்வாகவியலுக்கு
உட்படுத்தப்பட்ட சமயங்களான கிறிஸ்துவம் போன்ற சமயங்களின் வருகையும்,
உலகியல் வளர்ச்சி வேகமும் சைவத்தையும் ஒரு எல்லைப்படுத்த வேண்டும் என்ற
ஆவலை அவ்விடைக்காலத்தில் உருவாக்கியிருக்கலாம். சைவத்தின் மேற் கொண்ட
அளவற்ற அக்கறையே இதற்கு காரணமாயிருந்த போதிலும் அது சைவத்திற்கு நன்மை
தருவதாக இல்லை.
மற்றைச்சமயிகள் போல, சீருடை ஒன்றைப்புனைந்து கொண்டு குறித்த ஒரு நாளில்,
ஒரு வேளையில் ஆலய வழிபாடாற்றல், ஒரு சமயத் தலைமைப் பீடம் என்பது போல
உருவானதே இந்த திருமுறைகளை எல்லைப் படுத்தும் எண்ணமுமா என்பது ஒரு
சிந்தனைக்குரியது.
தேவாரம் வேதசாரம் என்றும் திருவாசகம் உபநிடதசாரம் என்றும்
யாழ்ப்பாணத்துக் காசிவாசி செந்திநாதையர் அவர்கள் அறுதி இட்டு
உரைத்திருக்கிறார்கள். இப்படி அற்புதமான திருமறைச்சாரமாக அமைந்த தெய்வத்
தமிழ்த் திருமுறைகள் எங்கும் சிதறிக் கிடந்தன. இவற்றை ஒரு ஒழுங்குக்கு
கொண்டு வரவேண்டும் என்றும், அவை சைவசமயிகளின் புழக்கத்தில் வரவேண்டும்
என்றும் எவரும் விரும்புவது இயல்பு. அது போலவே, இத்தொகுப்பினைச் செய்ய
சோழப்பேரரசனான இராஜராஜன் விழைந்தான்.பிள்ளையார் பேரருள் பெற்ற
நம்பியாண்டார்நம்பி அடிகள் அதற்கு உற்ற துணை செய்தார். அரசன் ஆணையை இறைவன்
ஆணையாய் ஏற்று சிவப்பணியான திருமுறை தொகுப்புப் பணியை நம்பி அடிகள்
செய்திருக்கிறார்.பொல்லாப் பிள்ளையாரிடம் பாடம் கேட்ட அநுபூதிச் செல்வரான
நம்பியாண்டார் நம்பிகள் சைவத் திருமுறைகளைப் பதினொன்றாக
வகுத்தருளியிருக்கிறார்.
ஆனால், ஆய்வாளர்கள் சிலர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தது முதல் ஏழு
திருமுறைகளையே என்று குறிப்பிடுகின்றனர்.. தேவாரத்தைத் தொகுப்பதே அவர்
பணியாய் இருந்தது என்பது அவர்களின் வாதம். அதனாலேயே அவ்வேழு திருமுறைகளும்
‘அடங்கன் முறை’ என்று அழைக்கப்படுகிறது என்று அவர்கள்
காட்டுகின்றனர். அவர்களின் கருத்தின் படி நம்பியடிகள்- இராஜராஜன் காலத்தின்
பின், காலத்தின் தேவை உணர்ந்தே எட்டாம், ஒன்பதாம், பத்தாம், பதினோராம்
திருமுறைகள் தொகுக்கப்பட்டதாக குறிப்பிடுவர். ஆனால், உமாபதி சிவாச்சார்யார்
பாடியருளிய ‘திருமுறை கண்ட புராணத்தில்’ பதினொரு திருமுறைகளையும்
நம்பியாண்டார் நம்பியடிகளே தொகுத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எவ்வாறோ, இது ஒரு அரசபணியாகவே நடந்தேறியிருக்கிறது. விரவிக்கிடந்த ஓலைச்
சுவடிகளை எல்லாம் ஒன்று சேர்ப்பதும், அவற்றைத் தொகுப்பதும்,
தொகுப்பதற்குரிய நிதிப்பங்களிப்பினைச் செய்வதும், அத்தொகுதியை சைவ உலகில்
பரவச் செய்வதும் அக்காலத்தில் அரசனால் அன்றி மற்றோரால் ஆகவல்ல காரியமல்ல.
தில்லையிலே திருச்சிற்றம்பலமருகில் தேவாரச்சுவடிகள் ஓர் அறையில்
வைத்துப் பூட்டப்பட்டுக் கிடந்தன என்றும், தேவாரமுதலிகளான
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியவர்களின்
திருவுருவங்களைக் கொண்டு சென்று அவற்றின் திருமுன்னிலையில் அத்தேவாரஅறை
திறப்பிக்கப்பட்டதென்றும் அங்கு கிடைத்த தேவாரங்களே முதல் ஏழு திருமுறைகளாக
வகுக்கப்பட்டன என்பதும் திருமுறைகண்ட புராணம் வழங்கும் செய்தி.. இத்தகவலை
அடிப்படையாகக் கொண்டு தமிழ்த்திரைப்படத்திலும், இவ்வாறு ஒரு காட்சி
அமைந்துள்ளது.
ஆக, இராஜராஜன் காலத்தில் ஏழாக தொகுக்கப்பட்டவை பின்நாளில் பதினொன்றாக
விரிந்தது. அதன் பின், சேக்கிழார் பெருமான் அவதரித்து ‘பெரியபுராணம்’
என்கிற திருத்தொண்டர் புராணத்தைச் செய்தருளினார். இதன் சிறப்பும்
மேன்மையும் கருதி அதனைச் சைவ உலகம் பன்னிரண்டாம் திருமுறையாக ஏற்றுக்
கொண்டது. இது சைவச்சிந்தனைக்கு ஏற்றதாயும், உரியதாயுமே
கணிக்கப்பெறுகின்றது.
ஆகவே, எவ்வாறாயினும் இன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருஞ்சொத்தான
சைவத்திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப்படவில்லை என்பது
தெளிவு.
பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் சோழப்பேரரசின் இறுதிக்காலத்தில்
பெரியபுராணம் இணைக்கப்பட்டதுடன் சைவத்திருமுறை பன்னிரண்டு என்றே சைவ உலகு
திருப்தி உற்றது. அதற்குப் பின் அவ்வளவே திருமுறைகளின் எல்லை என்று முடிவு
செய்ய நேரிட்டு விட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
சைவ அரசு ஒன்று இல்லாமை, போலி அருளாளர்களின் வருகை, பிற மதத்தவர்களின்
ஆதிக்கம், தமிழரசு நிலை குலைந்தமை, முகமதிய அரசர்கள்
படையெடுத்தமை,எப்போதும் குழப்பநிலை நீடித்தமை, சைவாலயமரபுகள் சிதைவுற்றமை,
தோத்திரங்களை விட சாத்திரநூல்களே முதன்மை பெற்றமை, சிவ வழிபாட்டோடு இணைந்த
விநாயகர், முருகன் ஆகிய சிவகுமார மூர்த்தங்களின் வழிபாடுகளும்
எழுச்சியுற்றமை போன்ற சில பல காரணங்களை இதற்குக் காட்டலாம்.
எவ்வாறோ, பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத்
தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? என்பதே இன்றுள்ள வினா.இடையில் இருக்கிற
எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி
கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா? என்பதும் இவ்வினாவின்
தொடர்ச்சியே ஆகும்.
இப்போதெல்லாம் சைவத்திருமுறைகள் பன்னிரண்டே என்பதற்கு ஆதாரமாகச்
சொல்லப்படுவனவும் சாதாரண விடயங்களாகவே உள்ளன. எந்த ஒன்றாயினும் அதற்குத்
தத்துவம் கண்டு பிடித்து விடுகிற மரபின் வெளிப்பாடாக அதனைக் கருத முடிகிறதே
அன்றி வேறொரு செய்தியும் அதில் பொதிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாக ‘சிவஞான போத சூத்திரங்கள்’ பன்னிரண்டு என்ற அடிப்படையிலேயே
பன்னிரு திருமுறைகள் வகுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். காலத்தால் பிந்தைய
சிவஞானபோதத்தினைக் காலத்தால் முந்தைய திருமுறைகளுடன் முடிச்சுப்போடுவது
ஏற்கத்தக்கதல்லவே?
எனவே, திருமுறைகள் தொடரலாமா? என்பதே இன்று எம்முன் உள்ள வினாவாகும்.
அவ்வாறாயின், சர்ச்சைக்குரியதாக அல்லாமல், அநேகமான தமிழ்ச்சைவர்கள்
எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அருளாளர்கள், அநுபூதிமான்களின் அருளிச்
செயல்களாக விளங்குபவற்றை தொடர்ந்து திருமுறைகள் ஆக கால அடிப்படையில்
வகுக்கலாம் அல்லவா?
முக்கியமாக
பெரியபுராணத்தை அடுத்த காலப்பகுதியில் எழுந்தது கந்தபுராணம்.ஏராளமான
புராணங்கள் எழுந்த போதிலும், இதுவும் திருவிளையாடற்புராணம், பெரியபுராணம்
என்னும் மூன்றும் மட்டுமே சிவபெருமானின் முக்கண்களுக்குநிகராகச் சைவர்களால்
போற்றப்படுகின்றன.
ஆக, பன்னிரண்டாம் திருமுறையாக அதிலொன்றான பெரியபுராணம் இடம்பெற்று
விட்டதால் பதின்மூன்றாம் திருமுறையாக கந்தபுராணத்தையும்
திருவிளையாடற்புராணத்தையும் இணைக்கலாம்.
தத்துவநூலான திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக
வகுக்கப் பட்டிருக்கிறது. எனவே, தயக்கமின்றி பதினான்காம் திருமுறையாக
சைவப்பெருமக்கள் சந்தனாச்சார்யார்கள் என்று சமயாச்சார்யார்களான முதலெட்டுத்
திருமுறை ஆசிரியர்களுக்கு நிகராகப் போற்றும் ஆசிரியர்களும்
பிறரும் செய்த சைவசித்தாந்தநூல்களை வகுக்கலாம்.
அது போலவே, அருணகிரிநாதர் சைவப்பெருமக்கள் அனைவரதும் பக்திக்குரியவராகப்
போற்றப் பெறும் அருளாளர். அவர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி,
கந்தரலங்காரம், கந்தரந்தாதி, போன்றவற்றை பதினைந்தாம் திருமுறையாக
வகுக்கலாம்.
முருகன் புகழ் மாலையான திருமுருகாற்றுப்படை பதினோராம் திருமுறையில்
முன்னரே வைக்கப் பட்டுள்ளதாலும், குமரக்கடவுளை ‘ஆறுமுகச்சிவம்’ என்றே சைவம்
ஏற்றுப் போற்றுவதாலும் அருணை முனிவரின் முருகன் பேரிலான துதி மாலைகள்
சைவத்திருமுறையாதல் தவறல்ல என்றே கொள்ள இடமுண்டு.
பதினாறாம் திருமுறையாக இதன் பின்னும் உருவான பதினெட்டாம் நூற்றாண்டு
வரையான தாயுமானவர், பட்டினத்தடிகள், போன்ற ஏராளமான அருளாளர்களின்
திருமொழிகளை வகுக்கலாம். அதிலே, மிகவும் சிறப்பாக சைவசமயிகள்
ஏற்றுப்போற்றுகின்ற தேவராஜசுவாமிகள் பாடிய கந்த சஷ்டி கவசங்கள், ஒளவையார்
அருளிய விநாயகர் அகவல், அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி போன்ற
அற்புத நூல்களையும் சேர்க்கலாம்.
பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வந்த அருளாளர்களான இராமலிங்க
வள்ளலார், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், யாழ்ப்பாணத்து சிவயோகர் போன்ற
ஏராளமான அருளாளர்களின் வாழ்வு, வாக்குத் தொடர்பில் இன்னும் சில சர்ச்சைகள்
மிஞ்சி இருப்பதாலும், சில சைவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும்
அவற்றை இப்போதைக்குத் திருமுறைகளுக்குள் இணைக்காமல் வைத்திருக்கலாம்.
ஆனால், அநேகமான சைவத்தமிழர்களால் பன்னிருதிருமுறைகளுக்கு நிகராக ஏற்றுப்
போற்றப் பெறும், அற்புதங்கள் செய்யும் அரிய தமிழ் நூல்களை
சைவத்திருமுறைகளாக வகுப்பதில் தடையொன்றும் இல்லையே? இதனைச் செய்யலாமா?
செய்யலாம் எனில் யார் பூனைக்கு மணி கட்டுவது? கட்ட
விழைபவர் கண்டனங்கள் வந்தால் ஏற்கத்தயாரா? என்பனவே இப்போதுள்ள வினாக்கள்.
சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை.
சேக்கிழார் அவ்வாறான ஒருவரே. அவர் கண்ணப்பரையும், நந்தனாரையும்,
அதிபத்தரையும், இன்னும் சாக்கியரையும் சைவப்பெருங்குரவராக மாற்றிய
சிவனருட்செல்வர்.அத்தகு ஒருவர் சில வேளை இப்பணியினையும் செய்து மேன்மை கொள்
சைவநீதிஉலகமெல்லாம் விளங்கச் செய்வார்.
இன்றைக்கும் தமிழகத்திலும் ஈழத்திலும் சைவாதீனங்கள் பல சிறப்போடு
விளங்குகின்றன. அறிவிலும், பக்தியிலும், ஆற்றலிலும் தக்கோர் பலர் அங்கே
மஹாசந்நிதானங்களாக அருளாட்சி செய்து வருவதையும் காண்கிறோம். அவர்கள்
சரியெனக் கருதின் இத்திருமுறைத் தொகுப்பினை தொடர உதவ வேண்டும்.
இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா? என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது..
உலகெலாம் உணர்ந்(து) ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
நன்றி..தி.மயூரகிரி சர்மா
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|