Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
லவகுசா சரித்திரம்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-1
மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.
அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.
அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-2
அன்று சீதாதேவி, ஸ்ரீராமனின் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தாள். கணவனின் அழகை ரசிப்பதில் பெண்களுக்கு பேரானந்தம் உண்டு. இத்தனைக்கும் ராமன் சியாமளவண்ணன். கரிய நிறமென்று சொல்வதற்கில்லை. கருமையிலும் ஒரு நீலம். இந்தக்காலத்தில் என்றால், பெண்கள் மாப்பிள்ளை கருப்பா என்று புள்ளி வைப்பார்கள். சீதாதேவி, ராமனுக்காகவே பிறந்தவள். அவளது தந்தை அவளுக்கு மாப்பிள்ளையாக ராமபிரானைக் கொண்டு வந்து நிறுத்திய போது, அவள் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நமது கம்பர் தான், நம் தமிழ்க்காதலின் சுவை கருதி, அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்று இருவருமே திருமணத்துக்கு முன் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டதாக அனுபவித்து எழுதியிருக்கிறார். ஆனால், வால்மீகி அப்படி சொல்லவில்லை. அவன் கால் பாதம் தான் அவளுக்குத் தெரியும். அந்த நீலவண்ணப் பாதங்களில் செந்தூரத்தால் போட்ட கோலம் தெரியும். திருமணமாகி அயோத்திக்கு வந்த பின்னர் தான் அவனது முகம் பார்த்து வெட்கத்தால் சிவந்தாளாம் அந்த சிவப்பழகி. இன்றைக்கும் கூட நமது கிராமங்களில் சிகப்பி என்று பெண்களுக்கு பெயர் வைப்பார்கள். அது வேறு யாருமல்ல. நம் சீதாதேவி தான். பூமாதேவியின் அம்சமான அவள், அத்தனை சிவப்பழகு, பேரழகு படைத்தவள். கொடிகள் அவளது இடையைக் கண்டு வெட்கப்பட்டு, முகம் நாணி, தலை குனிந்து, கொம்புகளுக்குள் வளைந்து வெட்கப்பட்டு கிடக்கும். சிவப்பழகு கொண்ட பெண்கள், கருத்த மாப்பிள்ளைகளை ஒதுக்கக்கூடாது. மனம் வெள்ளையாக இருக்கிறதா என்பதை விசாரித்து தெரிந்து கொண்டால் போதும் என்பது சீதாதேவி பெண்களுக்கு கற்றுத்தரும் பாடம். அவரருகே வந்தவள், ஸ்ரீராமா... என்று ஆரம்பித்து விட்டு நிறுத்தினாள். அவர் அவளது கைகளைப் பற்றி நெஞ்சத்தில் புதைத்து, அவளை தழுவியபடி, என்ன தேவி! சொல், என்றார்.
அன்பரே! என் மனதிலுள்ள ஆசையை நிறைவேற்றுவீர்களா?ராமன் சிரித்தார்.நாடாளும் ராணி நீ. இந்த பட்டத்தரசி சொல்வதைக் கேட்கத்தானே இந்த பட்டத்தரசனும், இந்த தேசமும், உன் மாமியார்களும், மைத்துனர்களும் இருக்கிறோம். மனதிலுள்ளதை தயங்காமல் சொல். அதிலும் நீ கர்ப்ப ஸ்திரீயாக இருக்கிறாய். கர்ப்பவதிகள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் விருப்பத்தை கணவனிடம் சொல்ல வேண்டும். கணவன் அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சொல் சீதா, என்றார். ஸ்ரீராமா! எனக்கு மீண்டும் மகரிஷிகளை தரிசிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகிறது. தாங்கள் ராஜ்ய பரிபாலனத்தில் இப்போது தான் கவனம் செலுத்த துவங்கியிருக்கிறீர்கள். எனவே, நான் மட்டும் சென்று வருகிறேன். ஒரே ஒரு நாள் தரிசனம் தான். நான் சென்று வருவதற்குரிய அனுமதியையும், அதற்குரிய ஏற்பாட்டையும் செய்து தாருங்கள், என்றாள். ராமர் கலகலவென சிரித்தார். இவ்வளவுதானா! இதற்கா மனம் சஞ்சலப்படுகிறது என்றாய். மகரிஷிகளை தரிசிப்பது என்பது நல்ல விஷயம் தானே! அதிலும், நீ கர்ப்பவதியாய் இருக்கிறாய். இந்நேரத்தில், உன் வயிற்றில் இருக்கும் நம் செல்வம், மகரிஷிகள் கூறும் மந்திரங்கள், நல்வார்த்தைகளைக் கேட்டால், மிகச்சிறந்தவனாக, தர்மத்தைக் கடைபிடிப்பவனாக பிறப்பானே! இதைச் சொல்லவா இவ்வளவு தயக்கம்! காட்டிற்கு போகிறோமோ என கவலை கொள்ளாதே. உன் மைத்துனன் லட்சுமணன், எதற்கு இருக்கிறான்? கோபக்கார பயல். அவனை உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அவன் தன்னைப் பெற்ற சுமித்திரையை தாயாக நினைக்கிறானோ இல்லையோ! உன்னை தாயாக நினைக்கிறான், என்றதும் சீதாவின் கண்களில் கண்ணீர் அரும்பியது. ஆம்...சுவாமி! தாங்கள் மாரீச மானைப் பிடிக்கச் சென்றதும், அவனைக் கடும் மொழிகளால் பேசினேன். அவன் கோபிக்கவில்லை. மாறாக, கண்ணீர் வடித்தான். அந்நிலையிலும் அவன் கோடு போட்டு நிற்கச் சொன்னான். அதையும் நான் மதிக்கவில்லை. அயோத்தியில் காட்டிற்கு நாம் கிளம்பிய போது, அவன் நம்மோடு கிளம்பினான். அப்போது, தன் மனைவி ஊர்மிளாவிடம், விடை பெறச்சென்றான்.
அந்த மாதரசி எந்த தடையும் சொல்லவில்லை. ஊர் உலகில் நடக்கிற காரியமா இது? எந்த மனைவியாவது தன் கணவனை, அவனது அண்ணனுக்கும், அண்ணன் மனைவிக்கும் துணையாக காட்டுக்கு 14 வருஷம் அனுப்புவாளா? அவள் அனுப்பி வைத்தாள். அந்த உத்தம பத்தினியை மனைவியாகப் பெற்ற அவன், என்னோடு வருவது சாலவும் தகும். ஆனால்... என்று இழுத்தவளிடம், ராமபிரான், என்ன ஆனால்... என்றார். சுவாமி! ஊர்மிளாவும் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவள் அருகே அவன் இருக்க வேண்டாமா? அவனை ஏற்கனவே 14 ஆண்டுகள் மனைவியை விட்டு பிரித்து விட்டோம். இப்போது, அந்த கர்ப்பஸ்திரீயிடமிருந்தும் பிரிக்க வேண்டுமா? என்ற சீதாவைப் பார்த்து சிரித்தார் ராமன். சீதா! ஊர்மிளா யார்? உன் தங்கை. உன்னைப் போலவே உத்தமி. நீ காட்டிற்கு போகிறாய் எனத்தெரிந்தால், அவள் உடனே தன் கணவனை அனுப்பி வைப்பாள். இதற்கெல்லாம் கலங்காதே. மேலும், நீ என்ன அங்கே நீண்டகாலம் தங்கவா போகிறாய்? ரிஷி தரிசனத்தை முடித்து விட்டு கிளம்பப் போகிறாய். அவனும் உன்னோடு வந்துவிடுவான், என்றார். அயோத்தியில் பட்டாபிஷேகம் முடிந்ததோடு ராமாயணமும் முடிந்தது, ஸ்ரீராமனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து வாழப் போகின்றனர். ராமசகோதரர்கள் தங்கள் மனைவியருடன் இல்லறத்தில் திளைத்து, நன்மக்களை உலகுக்கு தரப்போகின்றனர். இனி இவ்வுலகில் எல்லாம் ÷க்ஷமமே என நினைத்திருந்த வால்மீகி மகரிஷி திடீரென நிஷ்டை கலைந்து எழுந்தார். சீடர்கள், அவர் திடுக்கிட்டு எழுந்ததைக் கண்டு ஓடோடி வந்தனர். குருவே! என்னாயிற்று! தாங்கள் இப்படி பதைபதைப்பு காட்டி நாங்கள் பார்த்ததே இல்லையே! தங்கள் கண்களிலிருந்து சரம் சரமாய் கண்ணீர் கொட்டுகிறதே! ராமன் ஆளும் பூமியில் அபவாதம் ஏதும் நிகழ வாய்ப்பில்லையே சுவாமி! பின் ஏன் இந்த கலக்கம்? என்றனர் படபடப்புடன். அவர் அமைதியாகச் சொன்னார்.ராமாயணம் முடியவில்லை...அது தொடரப்போகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-3
சீடர்கள் குழப்பமடைந்தனர். குருவே! ராமாயணம் தொடர்கிறது என்றால், திவ்யமான ராமநாமத்தை நாங்கள் இன்னும் உங்கள் வாயால் தொடர்ந்து கேட்கப்போகிறோம் என்றுதானே பொருள். இதில் தாங்கள் வருத்தப்படுவது பற்றி தான் எங்களுக்கு புரியவில்லை, என்றனர். சீடர்களிடம் வால்மீகி பதிலேதும் சொல்லவில்லை. அவரது ஞானதிருஷ்டியில், காட்டிற்கு வரப்போகும் சீதைக்கு ஆகப்போகும் நிலை தெரிந்தது. உம்...விதி வழி வாழ்வு. அவள் பூமாதேவியின் புத்திரி ஆயினும், அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துதானே ஆக வேண்டும். பொதுவாகவே, பொறுமைசாலிகளுக்கு தான் பூமியில் அதிக துன்பமே விளைகிறது என தனக்குள் சொல்லிக்கொண்டார். இந்த பூலோகத்தில் பிறந்தவர்களில் பொறுமைசாலிகளுக்கு துன்பம் அதிகமாக வருகிறது என்று வால்மீகி நினைத்தது இன்றுவரை கண்கூடாகத்தான் தெரிகிறது. இவ்வளவு பொறுமையாய் இருந்தும், நமக்கு இவ்வளவு சோதனையா என சில பொறுமைசாலிகள் சலித்துக் கொள்ளவும் கூடும். ஆனால், காரணமில்லாமல் காரியமில்லை. இந்த லோகத்தில் நம் முன்வினைப் பயனையெல்லாம் அனுபவித்து, மேலும் மேலும் பொறுமை காத்தால், அவ்வுலகில் சுகமான வாழ்வு வாழலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீதையிடம் ராமன், சீதா! நீ நாளையே புறப்படலாம். உரிய ஏற்பாடுகளைச் செய்து விடுகிறேன், எனச்சொல்லி விட்டு, அரசவைக்குச் சென்றார். அவருக்கு வீட்டை விட நாட்டைப் பற்றிய கவலை அதிகம். மக்களுக்கு ஒரு சிறு கஷ்டம் கூட வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதற்காக, பல ஒற்றர்களை நியமித்திருந்தார். மக்கள் என்ன பேசுகிறார்கள். அவர்களது தேவையென்ன, யாராவது வெறுப்பு கலந்த குரலில் பேசுகிறார்களா...இவை ஒற்றர்களிடம் அவரது அன்றாடக்கேள்விகள். ஒற்றர்கள் இதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். விஜயன், பத்திரன், தந்தவக்கிரன், சுமகாதன், சுராஞ்சி, காளியன் ஆகியோர் ராமபிரானின் ஒற்றர்கள். நகைச்சுவை ததும்ப பேசுவதிலும் இவர்கள் கில்லாடிகள். இவர்கள் சொன்ன நகைச்சுவை கதைகளைக் கேட்டு ராமன் கலகலவென சிரித்துக் கொண்டிருந்தார்.
நகைச்சுவை வாழ்க்கைக்கு ஒரு நல்ல மருந்து. சிரிக்க சிரிக்க பேசத்தெரியவில்லையே என வருத்தப்படுபவர்கள் அதிகம். ஆனால், சிரிப்பதற்கு பழக்கம் தேவையில்லை. சிரிக்க சிரிக்க பேசுபவர்கள் அதிகம் இருந்தாலே போதும்! சிரிப்பு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்குகிறது. மகிழ்ச்சியான மனநிலை சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. நகைச்சுவை புத்தகங்களைப் படிப்பது, சொற்பொழிவுகளைக் கேட்பது ஆகியவை நல்ல மருந்து. அதே நேரம் கேலியும், கேளிக்கையுமே வாழ்க்கையாகி விடக்கூடாது என்பதிலும் ராமன் கவனமாக இருந்தார். ஒற்றர்களே! இந்த பரிகாசக்கதைகள் ஒருபுறம் கிடக்கட்டும். நாட்டு மக்கள் என்ன சொல்கின்றனர்? அதை முதலில் சொல்லுங்கள். நாடாள்பவனுக்கு முதலில் மக்கள். அதன்பிறகு தன்னைப் பற்றி சிந்திக்க வேண்டும். சொல்லுங்கள், என்று துரிதப்படுத்தினார். அவர்கள் ராமனிடம், அண்ணலே! தங்கள் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது? கடலின் நடுவில் இருக்கும் இலங்கை மாநகரை தாங்கள் வெற்றி கொண்டதைப் பற்றி மக்கள் வியப்புடன் பேசுகிறார்கள். அசுரர்களை அழித்ததைப் பற்றி வீரம்பொங்க உரையாடுகிறார்கள். தேவர்களின் தலைவனான இந்திரனின் கொடும் பகைவனான இந்திரஜித்தைக் கொன்றது பற்றியும், அதிசயத்தின் வடிவமான பத்து தலைகளைக் கொண்ட ராவணனை அழித்தது பற்றி பேசுகிறார்கள். எங்கள் ராமனை வெல்வார் யார் என்று மார்தட்டி பேசுகிறார்கள், என்றனர். ராமன் அவர்கள் பேசுவதை கையசைத்து நிறுத்தினார். ஒற்றர்களே! நீங்கள் நிறைகளை மட்டுமே சொல்கிறீர்கள். தனது ஆட்சியின் நிறைகளைக் கேட்டு சந்தோஷம் கொள்வது மட்டும் அரசனின் பணியல்ல. அதன் குறைகளைக் கேட்டு, அதனை நீக்கி, நன்மை செய்பவனே அரசன். எனவே, நீங்கள் கேட்ட குறைகளையும், மனம் கூசாமல், அதைரியம் கொள்ளாமல் சொல்லுங்கள், என்று வற்புறுத்தினார். அந்நிலையில் அவர்கள் தாங்கள் கேட்ட ஒரு இழிசொல்லை ராமனிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஸ்ரீராமா! ஆருயிர் மன்னவரே! நாங்கள் கேட்ட ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அதுகேட்டு தாங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம். புத்தியற்றவர்கள் பேசும் பேச்சு அது, என்றதும், ராமன் உஷாராகி விட்டார்.
உம்...அதை விரைந்து சொல்லுங்கள், என்றார். ராமா! எங்கள் அன்னை சீதாதேவியார், இலங்கையில் ராவணனின் இடத்தில் ஒரு வருடகாலம் இருந்தார். இப்படி தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவளை, அவன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாமே! இது தெரிந்தும், நாடாளும் மன்னன் ஒருவன் அவளுடன் வாழலாமா? குடிமக்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து முன்மாதிரியாக இருக்க வேண்டிய மன்னன் ஒருவனே இப்படி இருந்தால், அது எவ்வகையில் நியாயம்? என கேட்கிறார்கள், என்றனர். இத்தனை நேரமும் பரிகாசக்கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த ராமனின் கரிய முகம் சிவந்து விட்டது. அது கோபத்தின் வெளிப்பாடா, வெட்கத்தின் பிரதிபலிப்பா...ஒற்றர்கள் குழம்பினர். மனதில் வேல்போன்று தைத்த இந்த கடும் சொற்களைத் தாங்க முடியாத ராமபிரான், சைகையாலேயே ஒற்றர்களை அனுப்பிவிட்டு, தம்பியர்கள் இருக்குமிடம் சென்றார். தம்பியரே! என் உயிர் நீங்கள். என் பலமும் நீங்கள் தான். நண்பர்களும் நீங்களே! நீதி, தவம், சகோதரர்கள், அரசாங்கம், இன்பம் எல்லாமே நீங்கள்! இப்படி எல்லாமே எனக்கு நீங்கள் தான் என்றாகி விட்ட பிறகு உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? ஏனெனில், எனக்கு புகழ் கிடைத்தால் அதுவே உங்கள் புகழ். என் மீது பழிவந்தால் அது உங்களுக்கும் பழிதானே. எனவே, நான் கேள்விப்பட்ட ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன், கேளுங்கள், என்றார். அண்ணனின் முகபாவம், பீடிகை ஆகியவை அவர் ஏதோ சொல்லக்கூடாததைச் சொல்லப் போகிறார் என்பதை தம்பிகளுக்கு உணர்த்தி விட்டது. என்ன அண்ணா? என்றனர் அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன். உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்றவர் நடந்ததைச் சொன்னார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த தகவல் மிகக்கொடுமையாக இருந்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-4
உங்கள் அண்ணியார், எல்லா தேவர்களுக்கும் எனக்கும் தூயவளாகவே இருந்தாள். இலங்கையிலேயே தீக்குளித்து தன் கற்பின் வலிமையை நிரூபித்தாள். ஆனால், உலகத்தார் அதை ஏற்க மறுக்கின்றனர். அவள் மீதும், என்மீதும் சொல்லப்படும் பழிச்சொல் என் இதயத்தை வாட்டுகிறது, என்ற ராமன் அரசவையில் ஒற்றர்கள் தன்னிடம் சொன்ன தகவலைக் கூறினார். சகோதரர்கள் இதுகேட்டு மிக துன்பமடைந்தனர். கைகேயி, ராமபிரானை நாட்டை விட்டு அனுப்பியதை விட, அவர்களுக்கு இந்த செய்தி மிகக்கொடுமையாக இருந்தது. அவர்களால், ராமனிடம் ஏதும் பேச முடியவில்லை. அண்ணன் சொல் கேட்டு நடக்கும் அவர்கள், இதனால் தங்கள் அண்ணியாருக்கு என்னாகப் போகிறதோ என்றே மனதுக்குள் கலங்கி நின்றனர். ராமன் தொடர்ந்தார். லட்சுமணா! உலகம் மூன்றையும் கலக்கு என்று சொன்னாலும் கூட கணப்பொழுதில் அதை செய்து முடித்திடும் மனோபலம் பெற்றவன் நீ. உன் அண்ணியை தவமுனிவர்கள் வாசம் செய்யும் காட்டில் சென்று விட்டு வா, என்றார். லட்சுமணன் வாய் பொத்தி நின்றான். ஏதும் பேசினால் பயனேதும் இருக்காது என்பதை அவன் அறிவான். விஷயம் அமைச்சர் சுமந்திரருக்கு தெரிய வந்தது. அவர் தசரதரின் அரசாங்கத்தில் இருந்தே முதல் அமைச்சராக இருப்பவர். கைகேயி உள்ளிட்ட பட்டத்து ராணிகளையே எதிர்த்து வாதிடுபவர். திறமைசாலி. அவருக்கும் தெரியும். ராமன் ஒரு வார்த்தையை சொன்னால் சொன்னது தான் என்பது. மனஉறுதியில் ராமன் கைகேயிக்கு சமமானவர். ஆம்....ராமனைப் பிரிந்தால் தசரதரின் உயிர்போகும் என்று தெரிந்திருந்தும் பிடிவாதம் பிடித்தவள் அல்லவா! எல்லோரும் யோசித்துக் கொண்டு நிற்பதை உணர்ந்த ராமன், இதில் யோசிக்க ஏதுமில்லை. நான், சீதைக்கு ஒன்றும் கேடு செய்யவில்லை. அவள் ஏற்கனவே என்னிடம் காட்டுக்குச் சென்று ரிஷிகளைத் தரிசிக்க வேண்டும் என்றாள்.
நானும் சரியென ஒப்புக்கொண்டேன். இப்போது, அவள் சொன்னதைத்தான் செய்கிறேன். எனவே லட்சுமணா! உம்...புறப்படு, உன் அண்ணியுடன். வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் அவளை விட்டுவிட்டு நீ வந்துவிட வேண்டும், என்றார் அதட்டலுடன். பரந்து விரிந்த முடியையுடைய வெள்ளைப்புரவிகள் பூட்டிய தேர் அரண்மனை வாசலில் வந்து நின்றது. மாமியார் கவுசல்யா, மருமகளை வழியனுப்ப வந்தாள். மகளே! பத்திரமாக சென்று வா. நாளை நீ திரும்பி விட வேண்டும். வயிற்றில் அயோத்தியின் வாரிசை சுமக்கும் நீ மிகுந்த கவனத்துடன் காட்டிற்குள் செல். அது சரி...உன் மைத்துனன் அருகில் இருக்கும்போது, உனக்கேதும் ஆபத்து ஏற்படாது என்பதை அறிவேன், என்று புன்னகையுடன் சொன்னாள், நடந்து கொண்டிருக்கும் விபரீதத்தை அறியாமலே! சீதையை அழைக்க அவள் தங்கியிருந்த மாளிகைக்குச் சென்றான் லட்சுமணன். ஒளிவீசும் ரத்தினமாலை பளபளக்க காத்திருந்த அவள், வா லட்சுமணா! பயணத்துக்கு தயார் ஆகிவிட்டேன். புறப்படலாமா? என்றாள். அவளது கமலத் திருப்பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன், புறப்படலாம் அன்னையே என்றார். அவள் தேரில் ஏறி அமர்ந்தாள். அப்போது, சீதையின் வலக்கண் துடித்தது. பெண்களுக்கு, வலதுகண் துடிப்பது கெட்ட சகுனத்திற்கு அறிகுறி. அதேநேரம் வயிற்றில் ஏதோ எரிச்சல் ஏற்பட்டது. உடலில் ஏதோ ஒரு நடுக்கம் தெரிந்தது. ஊருக்குப் புறப்படும் வேளையில், பூஜை குறுக்கே போய்விட்டாலே, நம் உள்ளம் நடுங்கி விடும். சீதாதேவிக்கு இத்தனை கெட்ட அறிகுறிகளும் தெரிந்ததால், அவள் ரொம்பவே கலங்கி, லட்சுமணா!கிளம்பும் போதே, கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன. எனக்கு ஏற்பட்ட இந்த தீய சகுனங்கள், என்னென்ன விளைவைத் தரப்போகிறதோ தெரியவில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்? விதி மிகவும் வலிமையான ஒரு வஸ்து.
அது என்ன நாடகம் நடத்தப்போகிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். அதை அனுபவித்து தானே ஆக வேண்டும். இந்த விதி தன் கொடுமையான கரங்களை நீட்டி, என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், என் கணவருக்கோ, என் கொழுந்தர்களான உங்களுக்கோ, உங்கள் மனைவியருக்கோ, எனது மாமியார்களுக்கோ, என் தாய் சுனைநாவுக்கோ, தந்தை ஜனகருக்கோ, பிற உறவினர்களுக்கோ, இதற்கெல்லாம் மேலாக, என் மேல் அன்பைப்பொழியும் அயோத்தி வாழ் மக்களுக்கோ துன்பம் வந்து விடக்கூடாது, என்றவள், தெய்வமே! இந்த சகுனங்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் வந்து விடக்கூடாது, என்று கடவுளையும் வணங்கிக் கொண்டாள். எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள்! ராமாயணத்தை படி படி என்கிறார்களே! அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பவர்கள் சீதாதேவியின் இந்த உயரிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாமியார், கொழுந்தனார்களுக்கு ஆதரவாக இன்றைக்கு உலகில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? எங்கும் சண்டையும் சச்சரவும் தானே நடக்கிறது. சீதாதேவி பட்டபாடுகளைப் படித்தால், பெண்களுக்கு பொறுமை குணம் வளரும். சிறந்த பண்புகளெல்லாம் வந்து ஒட்டிக்கொள்ளும். லட்சுமணன் அவளது வார்த்தை கேட்டு திகைப்பும், மகிழ்ச்சியும் ஒருசேர தாக்க, இப்படி ஒரு உத்தமியை தன் அண்ணியாகப் பெற்றதற்காக பெருமை பொங்க அவளது திருவடி நோக்கி மீண்டும் ஒருமுறை வணங்கி, அன்னையே! நீங்கள் சொன்னது போல, நம் சுற்றத்தாருக்கும், நாட்டு மக்களுக்கும் எந்த ஆபத்தும் வராது. அவர்கள் சுகமாக வாழ்வார்கள், என்று சொல்லி விட்டு, குதிரைகளை விரட்டினான். அந்த பெரிய தேர் காட்டை நோக்கிச் சென்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-5
அந்த தேரில் அமைச்சர் சுமந்திரரும் சென்றார். தேர், கங்கைக்கரையை அடைந்தது. தேர் அங்கு சென்றதோ இல்லையோ, குனிந்த தலை நிமிராத லட்சுமணனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. சீதை பதைபதைத்து போனாள். லட்சுமணா! எதற்காக வருத்தப்படுகிறாய்? உன் கண்கள் கண்ணீர் சிந்துகிறது என்றால், ஏதோ கெடுதலின் அறிகுறியாகத்தான் இருக்கும். மறைக்காமல் சொல், என்றாள். என்ன சொல்வான் லட்சுமணன். அண்ணி, உங்களை அண்ணன் காட்டில் தனியாக விட்டு வரச்சொன்னான் என்பதை எப்படி அவளிடம் சொல்வான்! அழுகை முட்டியதில், வார்த்தைகள் வர மறுத்தன.லட்சுமணா! தூய்மையின் வடிவமானவனே! அழகான இந்தக் கங்கை நதியைக் கண்டவர்கள் கையெடுத்து வணங்குவார்கள். தங்கள் பாவம் தீர மனம் மகிழ்ந்து நீராடுவார்கள். அப்படியிருக்க, நீயோ, இந்த நதியைப் பார்த்து அழுகிறாயே! மேலும், நீ கவலைப்படும் அளவுக்கு, உனக்கு துன்பம் செய்யக்கூடியவர்களும் இந்த உலகத்தில் பிறக்கவில்லையே, என்றாள்.அண்ணியாரே! வேறொன்றுமில்லை. நான் பிறந்த நாளில் இருந்து நேற்று வரை என் அண்ணனைப் பிரிந்ததே இல்லை. இப்போது தான் முதன்முறையாகப் பிரிந்து தங்களுடன் வருகிறேன். அண்ணனை நினைத்துக் கொண்டேன். அதனால் அழுகை வந்து விட்டது, என்றான். லட்சுமணா! இதற்கா சிறுபிள்ளை போல் அழுவது! இவ்வுலகில் அறம் தழைக்க பாடுபடுபவர்கள் முனிவர்கள். அவர்களின் திருவடிகளைப் பணிந்தால் புண்ணியம் கிடைக்கும். அந்தப் புண்ணியம் தீவினைகளை அறுத்துவிடும். மேலும், நாம் முன்பு இங்கு இந்த கானகத்தில் தங்கியிருந்த போது, எனக்கு உதவிசெய்த முனிபத்தினியர், அவர்களின் மகள்களுக்கு புடவை, ஆபரணம் முதலானவற்றைக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கிருக்கிறது. அவற்றையெல்லாம் இந்த தேரில் கொண்டு வருவதை நீயும் அறிவாய். அவற்றைக் கொடுத்துவிட்டு, முனிவர்ளை வணங்கிவிட்டு, ஒரே நாளில் திரும்பி விடப் போகிறோம். இதற்காக கலங்காதே, என்றாள். உடனே தேரில் இருந்து இறங்கிய லட்சுமணன், அண்ணியை வலம் வந்து வணங்கி, தேவி! ஏழுலகையும் ஆட்சி செய்ய உரிமையுடையவளே! நான் சொல்வதைக் கேட்பீர்களா? என்றதும், அவனது வித்தியாசமான நடவடிக்கையைக் கண்ட சீதை, எதுவானாலும் தயங்காமல் சொல் லட்சுமணா, என்றாள்.
லட்சுமணனின் நாக்கு வறண்டது. உடல் சோர்ந்தது. முகம் களையிழந்தது. மனம் நடுங்கியது. தட்டுத்தடுமாறி வார்த்தைகளை உதிர்த்தான். உத்தமியே! உலகத்தின் தாயே! தூயவராகிய ஜனகரின் வேள்வித்தீயில் பிறந்தவளே! என் அண்ணன் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன். இந்த உலகம் இல்லாத ஒன்றை இருக்கிறது என்று சொன்னால், எல்லோருமே அதை நம்பி, ஆமாம்...இருக்கிறது என்றே சொல்வார்கள். இருக்கும் ஒன்றை இல்லை என்று உலகம் சொன்னால், நிச்சயம் அது இல்லை என்றாகி விடுகிறது. உலகம் இருக்கிறது என்று சொல்லும் விஷயத்தை, யாரோ ஒருவன் இல்லை என்று சொன்னால், அவனை பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள். அண்ணியாரே! தங்கள் விஷயத்திலும் அப்படியே நடந்து விட்டது. தங்களை ராவணன் கவர்ந்து சென்றான். அண்ணன் உங்களை மீட்டார். நீங்கள் நெருப்பில் குதித்து உங்களைத் தூயவர் என்று நிரூபித்தும் விட்டீர்கள். ஆனால், இதையெல்லாம் அயோத்தியில் உள்ளவர்கள் பார்க்கவில்லையே! அப்படி பார்க்காத யாரோ சிலர், தங்களைப் பற்றி குற்றம் சொல்லி பேசியிருக்கிறார்கள். மோகத்தின் காரணமாக, மாற்றானுடன் தங்கியிருந்தவளுடன், இந்த ராமன் வாழ்வதை விட செத்து விடலாமே என்பதே பேச்சின் சாரம். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அண்ணன் கொதித்து விட்டார். மக்களுக்கு விருப்பமில்லாத ஒருத்தியுடன் இணைந்து அரசாள முடியாது. எனவே, வால்மீகி முனிவரின் ஆசிரமம் அருகில் உங்களை நிரந்தரமாக விட்டு வரச்சொன்னார், என்றான். இதைக் கேட்டாளே இல்லையோ, சீதாதேவியின் காதுகளில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்தது போல் இருந்தது. தேரில் இருந்து சரிந்து கீழே விழுந்து விட்டாள். வாய்களில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது. அவள் தரையில் இருந்து எழ முயற்சித்தாள். நிற்க முடியவில்லை. சரிந்து சாய்ந்தாள்.
இந்த உலகத்திலேயே சீதாதேவிக்கு ஏற்பட்டது போன்ற துன்பம் யாருக்கும் ஏற்பட்டது இல்லை. யாராவது ஒரு பெண், என்னைப் போல் பாவம் செய்த ஒரு ஜீவனுண்டா? என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. ஏனெனில், சீதா திருமணம் முடிந்து புகுந்த வீடு வந்தாள். சில காலம் தான் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாள். உடனே காட்டுக்கு புறப்பட்டாயிற்று. அங்கும் சோதனை. கொடியவன் ராவணனிடம் சிக்கிக் கொண்டாள். ராவணனோ, அவளை இச்சைக்கு அழைத்தான். ஒருவனுக்கு துணைவியாக இருக்கும் நிலையில், இன்னொருவன் கூப்பிடுகிறான் என்றால், ஒரு பெண்ணின் மனநிலையைச் சொல்லவும் வேண்டுமோ? சதாசர்வகாலமும், ராமனின் திருநாமம் விழ வேண்டிய செவிகளில், அரக்கியரோ, ராவணனுடன் போய் வாழ் என்று வற்புறுத்தும் இழிவான சொற்களைப் பேசினர். அதைத் தாங்கிக்கொண்டாள். காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான். சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும், எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள். தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன. வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு. இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை சுமந்து கொண்டிருக்கும் அவளை, உலகம் சந்தேகிக்கிறதே என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன். என்ன கொடுமையப்பா இது! அடியே சீதா! உன்னை நினைத்தால், எங்கள் கண்கள் அருவியைத் தானேடி கொட்டுகிறது! என்று நாமும் அவளோடு சேர்ந்து புலம்புவதைத் தவிர வேறென்ன சொல்வது!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-6
சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. திடீரென எழுவாள். தன் இரு கைகளாலும் வயிற்றில் ஓங்கி ஓங்கி அடிப்பாள். ஐயோ! இதென்ன கொடுமை என்றபடியே மயங்கிச் சாய்வாள். ஒரு கட்டத்தில், அவள் அசைவற்றுக் கிடந்தாள். இந்த துயரத்தை விண்ணுலகில் இருந்து கண்ட தேவர்கள், அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டி கண் கலங்கினார்கள். அண்ணியார் இப்படி துவண்டு விழுந்தது கண்டு, லட்சுமணன் அலறினான். அவனும் கீழே புரண்டு புலம்பினான். சிறிதுநேரத்தில் சீதாதேவி கண் விழித்தாள். அம்மா, அப்பா, என் உயிர் போன்ற சிநேகிதிகளே! கேட்டீர்களா கதையை! தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான், எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே! என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள். அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன? என் மாமியார்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் கணமும் உயிர் வாழ மாட்டார்களே! என வருந்தி அழுதாள். மாமியார்- மருமகள் உறவுக்கு உதாரணம் நம் சீதாதேவி தான். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இல்லை. நம்மூர் பெண்கள் ஒரு மாமியாரை வைத்துக் கொண்டே, சமாளிக்க கஷ்டப்படுவார்கள். ஆனால், நம் சீதாதேவி மூன்று மாமியார்களை சமாளித்தவள். மூவரையும், அனுசரித்து நற்பெயர் பெற்றவள். மாமியார் இல்லாவிட்டால் மருமகள் சந்தோஷப்படுவாள். ஆனால், மருமகள் இல்லாவிட்டால் மாமியார்கள் உயிர் துறந்து விடுவார் என்றால், அது நம் சீதாதேவி இல்லத்தில் மட்டுமே நடக்கிற ஒரு விஷயம். இந்த நிகழ்வின் மூலம், மாமியார்- மருமகள்கள் வீட்டில் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ வேண்டுமென்பதை பெண்களுக்கு சீதாதேவி உணர்த்துகிறாள். இப்படி தவித்த அண்ணியாருக்கு லட்சுமணன் ஆறுதல் சொன்னான்.
தாயே! நீங்கள் முற்பிறவியில் செய்த நல்வினையால் என் சகோதரனை கணவனாக அடைந்தீர்கள். இப்பிறப்பில் என்ன தீவினை செய்தீர்களோ அவரைப் பிரிந்து விட்டீர்கள். நல்வினை, தீவினை இரண்டுமே ஏதோ ஒரு பலனைத் தருகிறது. நல்வினையால் நல்லதும், தீவினையால் தீயதும் என்று நடக்காமல் இருக்கிறதோ, அந்நாளே மனித வாழ்வில் பொன்னாள். அப்படி ஏதும் நடக்காத ஒரு நிலையை மனிதகுலம் அடைய வேண்டுமானால், அதற்கு தவமே கண்கண்ட மருந்து. ஆம்...நீங்கள் இறை வழிபாட்டில் ஆழ்ந்து விடுங்கள். தவக்கோலம் பூணுங்கள். பெருந்தவ முனிவர்கள் பலர் இந்தக் காட்டில் வாழ்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் சேவை செய்ய வேண்டும். உன் கணவனை மனதில் நினைத்து உயர்ந்த தவமிருக்க வேண்டும், என்றான். சீதை அவனிடம், லட்சுமணா! ஒரு பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசாதே. இதற்கு முன் உன் அண்ணனுடன் நான் காட்டில் இருந்த போது, எத்தனையோ முனிவர்களைத் தரிசித்து ஆசி பெற்றோம். இப்போது, அவர்களை நான் தனித்துப் பார்த்தால், ஏனடி உன் கணவன் உன்னைப் பிரிந்தான்? என்று கேட்டால், நான் அவர்களிடம் என்ன பதில் சொல்வேனேடா? சரி போகட்டும். நீ நாடு திரும்பு. உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை, எல்லாம் என் விதி. அது மட்டுமல்ல! உலகம் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்! இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல் என்று கோபத்தோடு சொன்னாள். ஒரு பெண் பொறுமையாக இருக்கலாம். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அவளது கற்பின் மீது களங்கம் சுமத்தப்படுகிறது என்றால் அவள் கொதித்து எழுந்து விட வேண்டும் என்பதற்கு சான்றாக, பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் புத்திரி சீதாதேவி இவ்விடத்தில் பெண்ணினத்துக்கு தகுந்த புத்திமதி சொல்கிறாள்.
அத்துடன் அவள் நிறுத்தவில்லை. லட்சுமணன் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு வார்த்தையை உதிர்த்தாள். ராமாயணத்தின் உத்தர காண்டத்திலேயே உணர்ச்சி மிக்க கட்டம் இதுதான். ஏ லட்சுமணா! நான் எப்படிப்பட்டவள் என உனக்குத் தெரியும். நான் கர்ப்பமாகி நான்கு மாதங்கள் தான் ஆகின்றன. எங்கே என்னைப் பார். கர்ப்பவதியான என் மேனி வருந்தாத வகையில் அந்தப் பார்வை இருக்கட்டும், என்றாள் ஆவேசமாக. அண்ணியாரின் திருவடியை மட்டுமே லட்சுமணன் அறிவான். அவள் முகத்தை அவன் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு மரியாதை. உலகில் எந்த ஒரு அண்ணிக்கும், எந்த ஒரு கொழுந்தனும் கொடுக்காத ஒரு பாக்கியம். அப்படிப்பட்ட சௌபாக்கியவதியான சீதாதேவி, தன் கொழுந்தனிடம் இப்படி கேட்கிறாள். ஏன் கேட்டாள் தெரியுமா? இந்த களங்கற்ற முகமா இப்படி ஒரு தவறைச் செய்திருக்கும் என்று அவனாவது தெரிந்து கொள்ளட்டும். அதற்காக வருந்தட்டும் என்று தான். இதைக் கேட்டானோ இல்லையோ, லட்சுமணன் கண்ணீர் வடித்தான். தரையில் விழுந்து தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான். தாயே! இப்படி ஒரு கொடிய சொல்லை உங்கள் வாயால் கேட்க, நான் என்ன பாவம் செய்தேனோ? இதுவரை இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் வாயில் இருந்து வந்ததும் இல்லையே! இன்று ஏன் வந்தன? என் சகோதரன் உங்கள் கைத்தலம் பற்றிய நாளில் இருந்து இன்று வரை உன் முகம் பார்த்தறியாதவன் நான். உங்கள் திருவடிகள் மட்டுமே எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட எனக்கு உங்கள் திருமேனியைப் பார்க்கும் துணிச்சல் எப்படி வரும்? யோசித்து தான் பேசினீர்களா? என்றான் கண்ணீர் ஆறாய்ப் பெருக. பின்பு சிரமப்பட்டு எழுந்தான். தலை குனிந்தபடியே அண்ணியார் அருகில் சென்றான். அண்ணியை அவன் பார்த்தானா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-7
எதற்கும் கலங்காத அந்த மாவீரன் லட்சுமணன், அப்போதும் குனிந்த தலை நிமிரவில்லை. அண்ணியாரே! தாங்கள் களங்கமில்லா மதிமுகம் கொண்ட என் சகோதரனின் மனைவி. உங்கள் முகம் பார்த்து பேசும் தகுதி எனக்கில்லை. எனக்கு வார்த்தைகளும் வரவில்லை. நான் செய்த பாவத்தின் பலனாக, தங்கள் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும் துர்பாக்கியவான் ஆனேன், என்றவன், அவளது திருவடியை வணங்கிவிட்டு, கங்கையைக் கடந்து அயோத்திக்கு விரைந்தான். அவனது தேர் மறைந்தது கண்டு, சீதை கதறினாள். ஐயோ! எனக்கு இதற்கு முன் காட்டில் பாதுகாப்பாக இருந்த இந்த இளையவனும் போய்விட்டானே! நான் பாதுகாப்பற்ற பதுமை ஆகிவிட்டேனே, என அரற்றினாள். ஏ விதியே! இலங்கையில் கொடிய ராவணனின் சிறையில் அடைபட்டுக் கிடந்தது போதாதென்று, இப்போது பெரும்பழியை என் மீது சுமத்தி, இங்கே கொண்டு வந்து சேர்த்தாயோ? இந்த துயரத்திற்கு என்று தான் விடிவு? இந்தப் பிறவியில் உன்னைத் தவிர வேறு யாரையும் தொடமாட்டேன் என எனக்கு சத்தியம் செய்த ராமனே, என் மீது களங்கம் சுமத்தி கானகத்தில் விடச் செய்தாயே! இன்னும் ஏதாவது செய்ய பாக்கி வைத்திருக்கிறாயா? தேவர்களாலும் உன்னை வெல்ல இயலாது என்பதை நானறிவேன். ஆனாலும், மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்! இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்.
சீதாவின் மனதில் பல எண்ணங்கள் ஓடின. பெண்ணாகப் பிறந்தவளை கணவன் கைவிட்டு, பிறந்த வீட்டுப்பக்கம் போனால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உறவினர் வீடுகளுக்குச் சென்றால் என்ன தப்பு செய்தாய்? எனக் கேட்டு பழி போடுவார்கள். ஒரு கட்டத்தில் அவள், இப்படி பழியுடன் வாழ்வதை விட, என் உயிர் போகட்டும், எனக் கதறினாள். அந்த சமயத்தில் வால்மீகி முனிவரின் சீடர்கள் சிலர் அங்கே வந்தனர். ஒரு பெண் தனிமையில் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இரக்கம் கொண்டனர். அவர்கள் உடனடியாக குருவிடம் சென்று, குருவே! தேவலோகப் பெண்ணா, பூலோகப்பெண்ணா என்று கணிக்க முடியாத அளவிற்கு பேரழகு கொண்ட ஒரு பெண்மணி, நம் கானகத்திற்கு வந்திருக்கிறாள். அவள் அழுது கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம். தாங்கள் தான் அவளுக்கு உதவி செய்ய வேண்டும், என்றனர். வால்மீகி அவர்களுடன் அவசரமாக அவள் நின்ற இடத்திற்குச் சென்றார். பெண்ணே! அழுவதால் பயன் ஏதும் ஏற்படப்போவதில்லை. மனத்துயரை விடு. அம்மா! நீ யார் என்பதை நான் அறிவேன். நீ சீதாதேவி. ராம பத்தினி, தூய்மையான கற்புநெறியுடையவள், ஜனகபுத்திரி. இதையெல்லாம், யோக சமாதியில் இருந்து உணர்ந்து கொண்டேன். உன் கணவன் உன்னைக் காட்டில் விடவில்லை. நீ என்னுடன் தங்கியிருக்க வேண்டுமென நினைத்து இங்கே விட்டிருக்கிறான் என நினைத்துக் கொள். நான் தங்கியுள்ள ஆஸ்ரமத்திற்கு வா, என்றார். அவர் மேலும், அழகு மங்கையே! எங்கள் ஆஸ்ரமத்தில் பல பெண்கள் தவ வேடம் பூண்டு அரிய தவம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் உன்னைப் பார்த்தால் அளவற்ற ஆனந்தமடைவார்கள். உனக்கு பாதுகாப்பும் கிடைக்கும். கவலையை விடுத்து வா, என்றார்.
வால்மீகி முனிவர் சொன்னதைக் கேட்ட சீதை, அவரது இணையடியில் வீழ்ந்த வணங்கி, அவருடன் கிளம்பி விட்டாள். ஆஸ்ரமத்திற்கு சென்றதுமே, அங்கிருந்த பெண்கள் அவளைப் பார்த்து, இப்படியும் ஒரு பேரழகியா? என வியந்தனர். ஏழையாக இருந்தவன் ஒரே நாளில் பணக்காரன் ஆனது போல், திருமகளே நம் ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கிறாளோ, ஒருவேளை தேவர்களால் சபிக்கப்பட்ட தேவலோக பெண்ணான இவள், ஏதோ ஒரு சாபத்தால் பூமியில் விழுந்து விட்டாளோ என பெருமை பொங்க பேசினார்கள். அத்துடன், அவளது முகத்தில் ஏதோ ஒரு வேதனை ரேகை ஓடுகிறது என்பதையும் அவளது முகக்குறிப்பால் உணர்ந்து கொண்டனர். அப்போது வால்மீகி அவர்களிடம், குழந்தைகளே! இவளது சரிதத்தைக் கேளுங்கள். இவள் கடல்சூழ்ந்த இலங்கையை அழித்த ராமனின் மனைவி. எந்த நிலையிலும் யார் மீதும் கோபப்படாத மிதிலை மன்னன் ஜனகனின் புத்திரி. இவளது பெயர் சீதா. இவளது கணவன் இவளை ஒதுக்கி வைத்து விட்டான். அதன் காரணமாக இங்கு வந்திருக்கிறாள். இவளுக்கு இவள் அனுசரணையாக இருங்கள், என்றாள். அந்த மங்கையர் அவளைத் தேற்றி, பரிவுடன் ஒரு குடிலுக்குள் அழைத்துச் சென்றனர். இந்நேரத்தில் லட்சுமணனும், அமைச்சர் சுமந்திரரும் அயோத்தியை அடைந்திருந்தனர். ராமனைச் சந்தித்த லட்சுமணன், அண்ணா! தாங்கள் சொன்னபடியே அண்ணியாரை கானகத்தில் விட்டேன். விதி யாரை விட்டது? இந்த உலகத்தார் பழிசொன்னார்களே என்பதற்காக, தாங்கள் அண்ணியாரைப் பிரிந்தீர்கள். இதற்காக, அந்த உலகத்தை நொந்து பயனில்லை. அண்ணியாரைப் போன்ற குணவதி பூமியில் யாருமில்லை. இருப்பினும், அவருடன் வாழக் கொடுத்து வைக்காத தாங்கள் விதியைத் தவிர வேறெதையும் நொந்து கொள்ள வேண்டாம், என்றான். காட்டில் இருந்த சீதை கர்ப்பஸ்திரீ என்பதால், அவளை தவமங்கையர் பொறுப்புடன் கவனித்துக் கொண்டனர். ஒருநாள் இரவில், சீதாதேவிக்கு பிரசவ அறிகுறி ஏற்பட்டது. தவமங்கையர் மிக்க கவனத்துடன் பேறுகாலம் பார்த்தனர். அவளுக்கு செந்தாமரைக் கண்களுடனும், செவ்வாயும் கொண்ட இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இரட்டைக்குழந்தைகள் பிறந்தது கேட்டு, வால்மீகி மகிழ்ந்தார். சீதாவை சென்று பார்த்து ஆசிர்வாதம் செய்தார். குழந்தைகளின் அழகை ரசித்தார். மைவண்ணனாகிய ராமன், எத்தகைய சர்வ லட்சணங்களும் பொருந்தியவனோ அதுபோன்றே குழந்தைகளும் மிகுந்த அழகுடன் திகழ்ந்தனர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-8
குழந்தைகள் பிறந்தால் அவற்றை பூதங்களும், பிசாசுகளும் அணுகும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் கூட இருக்கிறது. இதற்காகத்தான், குழந்தையின் இடுப்பில் மந்திரித்த கயிறு கட்டுவது வழக்கமாக இருக்கிறது. வால்மீகி இருக்கும் ஆஸ்ரமத்தில் பூத பிசாசுகளுக்கு வேலையே கிடையாது. ஆனாலும், குழந்தைகள் மீது கொண்ட அன்பின் காரணத்தால், வால்மீகி முனிவர் மந்திரங்களை ஓதினார். ஒரு குழந்தையின் உடலை குசத்தால் துடைத்து சுத்தம் செய்தார். குசம் என்றால் தர்ப்பைப் புல். மற்றொரு குழந்தையை லவத்தால் துடைத்தார். லவம் என்றால் பசுவின் வால் முடி. இப்படி லவம், குசத்தால் துடைக்கப்பட்டதால் இந்தக் குழந்தைகள் லவன், குசன் என்று பெயர் பெற்றனர். இவர்களை லவகுசர் என்று அழைப்பது வழக்கமாயிற்று.இவ்வாறு துடைத்ததன் மூலம், கண்ணுக்கு தெரியாத தீயசக்திகள் குழந்தையை அணுகாது என நம்பினார் வால்மீகி. அது மட்டுமல்ல, ராமன் மீது கொண்டிருந்த பாசமும் ஒரு பக்கம் அவரை இவ்வாறு செய்யச்செய்தது. அரண்மனையிலே இந்தக் குழந்தைகள் பிறந்திருந்தால், என்னென்னவோ திருஷ்டி கழிப்புகள் எல்லாம் நடந்திருக்கும். அதையெல்லாம் இங்கேயே செய்ய வால்மீகியாலும் முடியும். இருப்பினும், முனிவராகிய அவர் சாஸ்திரத்துக்கு உட்பட்ட மந்திரங்களைச் சொல்லியே குழந்தைகளைப் பாதுகாத்தார்.
லவகுசர் பிறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக, அயோத்தியில் ராமபிரானை சில முனிவர்கள் சந்தித்தனர். அவர்கள், ஸ்ரீராமா! லவணன் என்ற அரக்கனின் தந்தை மது, தான் செய்த தவத்தால், சிவபெருமானின் சூலத்தைப் பெற்றான். அதை தன் மகனின் பாதுகாப்புக்காக கொடுத்தான். தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே, அதைப் பயன்படுத்த வேண்டிய அவன், தேவையில்லாமல் சூலமெய்து எங்களை வதைக்கிறான். எங்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க உன்னை விட்டால் யாருமில்லை. அயோத்தியை விட்டால் வேறு புகலிடம் ஏது? என்றனர். ராமபிரான் கொதித்தெழுந்தார். முனிவர்களே! கவலை கொள்ளாதீர்கள். உங்களுக்கு இனி அச்சம் தேவையில்லை. நீங்கள் தொடர்ந்து யாகத்தையும், தவத்தையும் நடத்துங்கள். லவணனை நான் விரைவில் எமலோகம் அனுப்புவேன், என்ற ராமன், தம்பிகளுடன் இதுபற்றி ஆலோசனை செய்தார். லட்சுமணன் நான் போகிறேன், காட்டுக்கு என்றான். உடனே பரதன், வேண்டாம் அண்ணா! இவன் உன்னோடு பதினான்கு ஆண்டுகள், கண் இமைக்காமல் பட்ட துன்பம் போதாதா? அதிகாயனையும், இந்திரஜித்தையும் கொல்வதற்காக எடுத்த சிரத்தை போதாதா? நான் போகிறேன், என்றான். அப்போது சத்துருக்கனன், இருவரும் வேண்டாம். நீங்கள் காட்டில் இருந்து திரும்பும் வரை நாட்டைக் காக்கும் அறப்பணியில், உங்களை நினைத்து கண்ணீர் வடித்தபடியே இருந்த பரதன் அண்ணா ஏற்கனவே களைத்துப் போயிருக்கிறார். அவர் வேண்டாம், நான் போகிறேன், என்றான்.
தம்பியரின் ஒற்றுமை கண்டு ராமன் மகிழ்ந்தார். சத்ருக்கனா! நீ சொல்வதே சரி. மேலும், போர்க்களத்தில் உன்னை வெல்ல வல்லவன் யாருமில்லை. நீ லவணனைக் கொன்று முனிவர்களைக் காப்பாயாக, என்றார். சத்ருக்கனன் காட்டிற்கு படைகளுடன் புறப்பட்டான். அவன் சென்ற தேர், வால்மீகி முனிவர் தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் அருகில் நின்றது. வால்மீகி முனிவரை பார்த்து, அவரிடம் ஆசி பெற்றான். அவர் மூலமாக சீதாப்பிராட்டி, அவரது ஆஸ்ரமத்தில் தங்கியிருக்கும் விபரத்தையும், அண்ணியாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தான். அதேநேரம் இந்த குழந்தைகள் அயோத்தியில் பிறந்திருந்தால் எந்தளவுக்கு நாட்டு மக்கள் மகிழ்ந்திருப்பார்கள் என்பதையும் எண்ணி வேதனைப்பட்டான். பின்னர் அவன் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக மதுபுரி என்ற நகரை அடைந்தான். அந்த நகரைத்தான் லவணன் ஆண்டுகொண்டிருந்தான். அவனுடன் பயங்கரமாக போர் செய்து கொன்றான். மதுபுரியை 12 ஆண்டுகள் ஆட்சி செய்தான். பிறகு தனது படையை அங்கு நிறுத்திவிட்டு, அயோத்திக்கு புறப்பட்டான். ஒரு ஊரில் 12 வருடங்கள் தங்கிவிட்டால் அது அவரது சொந்த ஊராக மாறிவிடும் என்ற ஐதீகத்தை அக்காலத்தில் அரசர்களும், மக்களும் பின்பற்றினர். அந்த அடிப்படையில் மதுபுரியில் 12 ஆண்டுகள் தங்கியிருந்து, ஆட்சி செய்ததன்மூலம் மதுபுரி சத்ருக்கனனுக்கு சொந்தமாயிற்று. அயோத்தி சென்ற அவன் அண்ணனிடம் ஆசி பெற்றான். இதன்பிறகு ராமபிரான், ராஜசூயம் என்ற பெரிய யாகத்தை நடத்த முடிவு செய்தார். தன் தம்பிகளை அழைத்து வரும்படி தாமரைக்கண்ணனான அவன், வாயில் காவலனை அனுப்பி வைத்தான். அண்ணனின் உத்தரவு கேட்ட அரைக்கணத்தில் தம்பிகள் மூவரும் ராமனின் முன்னால் நின்றனர். அந்த தம்பிகளை அன்புடன் பார்த்த ராமபிரான், என் உயிர் போன்ற செல்வங்களே! உங்களைக்கொண்டு ராஜசூய யாகம் நடத்த முடிவெடுத்துள்ளேன், என்றார். ராஜசூயம் என்றால் பலநாட்டு அரசர்களையும் வென்று அவர்களுடைய தேசத்தை தன் வசத்தில் கொண்டுவர நடத்தப்படும் யாகமாகும். அடங்காத அரசர்களை அடக்குவதற்கு போர் தொடுக்க வேண்டியிருக்கும். அண்ணன் இப்படி யாகம் நடத்துவதில், சிறு மாற்றம் செய்ய தம்பி லட்சுமணன் விரும்பினான். அவன் ராமபிரானிடம், அண்ணா! நான் சொல்வதை தயவு செய்து செவி மடுத்துக் கேளுங்கள். எனது பேச்சு குழந்தையின் பேச்சைப்போல இருக்கலாம். ஆனாலும், ஒரு குழந்தையின் மழலைப்பேச்சு தாய்க்கு எப்படி பிடிக்குமோ, அதுபோல என் சொற்களையும் கேளுங்கள். பல நூல்களைப் படித்திருந்தாலும் அறிவேதும் இல்லாத இந்த சிறியவனின் சாதாரண சொற்களை தயவுடன் கேளுங்கள். இந்த உலகம் உங்களை மட்டுமே நம்பியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தாங்களே அரசர்க்கெல்லாம் அரசர். அப்படிப்பட்ட தாங்கள் அரசர்களுடன் சென்று போர் புரிந்து செல்வத்தை வாரிக்கொணர்வதைவிட, அஸ்வமேத யாகம் செய்தால் எளிமையும், உயிர்ச்சேதமும் குறையும். அதுபற்றி நான் தங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன், என்றான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-9
ராமன் தலையசைத்தார். அண்ணா! விருத்திராசுரன் என்பவனை இந்திரன் கொன்றான். இதனால், அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலைப்பாவம்) ஏற்பட்டது. இதனைப் போக்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான். இளன் என்ற அரசன், சிவபெருமானின் சாபத்தால் பெண்ணாக மாறினான். உமையம்மையிடம் அவன் சரணடைந்து பாவ விமோசனம் கேட்டான். அவள் அவனை ஆணாக ஒரு மாதமாகவும், பெண்ணாக ஒரு மாதமாகவும் இருக்க வரமளித்தாள். அப்படி பெண்ணாக இருந்த காலத்தில், அவள் புதனை மணந்து புரூரவா என்பவனைப் பெற்றான். தன் சாபம் நிரந்தரமாக நீங்க அவன் அஸ்வமேத யாகம் செய்தான். இப்படிப்பட்ட கொடிய பாவங்களையெல்லாம் போக்கும் இந்த யாகத்தையே தாங்கள் செய்யுங்கள், என்றான். உலகத்தையே காட்டிக்காக்கும் நாராயணனின் அவதாரமாகிய ராமபிரான், இதுபற்றி எல்லாம் அறிந்திருந்தாலும், லட்சுமணனின் வாயால் கேட்பதில் மகிழ்ந்தார். இதில் இருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் இல்லை. சிலர் சொல்வார்கள். இந்தப் பொருளைப் பற்றிய தகவல்கள் என் விரல் நுனியில் அடக்கம் என்று. ஆனால், படிக்காத பாமரன் ஒருவன், அதே பொருளைப் பற்றி ஏதோ ஒரு புதுத்தகவலைச் சொல்வான். அடக்கத்தின் சின்னமான ராமபிரானும் இதுபோன்ற புதுத்தகவல் எதையும் லட்சுமணன் சொல்லக்கூடுமே என்ற கருத்துடனேயே கேட்டார்.
அஸ்வமேத யாகம் என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். சர்வலட்சணங்களும் பொருந்திய குதிரையின் நெற்றியில், இந்தக் குதிரை இன்ன அரசனால் அஸ்வமேத யாகம் செய்வதற்காக அனுப்பப்பட்டது. இதைப் பார்க்கும் அரசர்கள், உடனடியாக தங்கள் நாட்டுக்கு கட்டுப்பட வேண்டும். மீறினால் போர் தொடுக்கப்படும் என எழுதப்பட்ட பட்டயத்தைக் கட்டி விடுவார்கள். குதிரை எந்த நாட்டுக்குள் நுழைகிறதோ, அந்நாட்டு மன்னன், பேரரசுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க சம்மதிக்க வேண்டும். இதன்படி சர்வலட்சணங்களும் கொண்ட குதிரை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. அம்மா கவுசல்யாவிடம் ராமபிரான்,யாகத்தைத் தொடங்குவதற்கான அனுமதியும், ஆசியும் பெற்றார். யாரைக் கொண்டு இந்த யாகத்தை நடத்துவது என்ற விவாதத்தை குலகுரு வசிஷ்டர், ஆன்றோர்களிடம் விவாதித்தார் அவர். ஒரு முக்கிய செயலை நிகழ்த்தும் போது, பெரியவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அவர்களின் உயரிய அனுபவம் நமக்கு வழிகாட்டுவதாக இருக்கும். நாடாளும் ராமபிரான் அதைக் கடைபிடித்தார். வசிஷ்டர் சொன்னார். தீமை என்ற சொல்லையே அறியாத எங்கள் மன்னவனே! என் அன்பு ராமா! எனக்குத் தெரிந்தவரை உன் பிறப்புக்கு இந்த உலகத்தில் காரணம் யாரோ, அவர் தான் இந்த யாகத்தைச் செய்ய தகுதியுள்ளவர், என்றார். ராமபிரான் அகம் மலர்ந்தார். அப்படியானால், யாகத்துக்கு அக்காவும் வருவாள் இல்லையா? அவள் தான் எவ்வளவு பெரிய தியாகி! உலக மக்களில் ஒரு பகுதியினர், என்னை நியாயத்துக்காக மனைவியைத் துறந்தவன் என போற்றுகின்றனர்.
ஒரு பகுதியினர், இந்த ராமன் கல்நெஞ்சன், கட்டிய மனைவி மீது பிறன் சொன்னானே என்பதற்காக சந்தேகப்பட்டவன் என்று. ஆனால், அக்கா அப்பழுக்கற்றவள். பெற்ற தந்தையான தசரத மகராஜா, அவளைத் துறந்தார். தாத்தா வீட்டிலே அவள் வளர்ந்தாள். ஒரு ராஜகுமாரனுக்கு வாழ்க்கைப்பட்டு, உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்திருக்க வேண்டிய அவள், காட்டிலே பிறந்து, தவத்தை தவிர வேறெதுவும் தெரியாத ஒரு முனிவருக்கு வாழ்க்கைப்பட்டாள். அந்த வாழ்க்கையையும் அவள் ரசித்து வாழ்கிறாள். தங்களுக்கு கிடைத்த வாழ்க்கைத்துணையை எத்தனை பேர் இவ்வுலகில் ரசிக்கிறார்கள். குறைந்தபட்சம் கேலிக்காகவாவது, ஒரு கணவன் தன் மனைவியிடம் இருந்திருந்தும் உன்னைப் போய் கல்யாணம் செய்தேனே! என் அத்தைப் பொண்ணு எவ்வளவு சிவப்பா இருப்பாள் தெரியுமா? என் மாமா பொண்ணு எவ்ளோ பெரிய பணக்காரி தெரியுமா? என்று மனைவியைச் சீண்டாத கணவன்மாரே இல்லை. அதுபோல், உங்களைக் கட்டியதற்கு, இந்த ஆட்டு உரலைக் கட்டியிருக்கலாம். மாவாவது அரைத்து தந்திருக்கும் என சொல்லாத மனைவியரும் விரல் விட்டு எண்ணும் அளவிலே தான் இருப்பார்கள். ஆனால், அக்கா சாந்தத்தின் வடிவம். சாந்தியின் உறைவிடம். ஆமாம்...அப்பா அவள் பிறந்தவுடனேயே அவளின் முகக்குறிப்பறிந்து தான் சாந்தா என்றே பெயர் வைத்தாரோ! இப்படியாக அவரது சிந்தனை நீண்டது. ஆம்...ராமபிரானுக்கு ஒரு அக்கா இருந்தாள் என்பது பலரும் அறியாத சேதி. பெரும்பாலானவர்கள், ராமபிரானுடைய தம்பிகளைப் பற்றித்தான் அறிவர். தசரதருக்கு கவுசல்யா, கைகேயி, சுமித்திரை என்ற பட்டத்தரசியர் நீங்கலாக, 350 மனைவிகள் இருந்ததாக தெரிவிக்கிறது வால்மீகி ராமாயணம். அவர்களில் ஒருத்திக்கு பிறந்தவள் தான் சாந்தா. இவளது தாயின் பெயர் என்ன என்பதை அறிவதில் குழப்பம் இருக்கிறது. ஒரு சிலர் கற்பனை பெயர்களைச் சூட்டி கதை சொல்கின்றனர். அது அவ்வளவு உசிதமல்ல. சாந்தா பிறந்து ஐந்தாண்டுகள் வரை அயோத்தியில் தான் இருந்தாள். மூன்று மகாராணியர்களுக்கும் அவள் செல்லப்பிள்ளை. எல்லாருடைய அரண்மனைக்குள்ளும் எந்நேரமும் நுழைவாள். கொஞ்சி மகிழ்வார்கள் ராணியர்கள். விதர்ப்ப நாட்டு இளவரசி இந்துமதி என்பவள், அஜன் என்பவனைத் திருமணம் செய்தாள். இவர்களுக்கே தசரதர் பிறந்தார். இந்துமதியின் உடன்பிறந்த ரோமபாதன், விதர்ப்ப தேசத்தை ஆண்டுவந்தான். அவனுக்கு, ஒரு கட்டத்தில், சாந்தாவைத் தத்துக் கொடுத்துவிட்டார் தசரதர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-10
ரோமபாதன் சாந்தாவை தன்னுடைய அங்கதேசத்துக்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார். அவள் பருவமடைந்த சமயத்தில், மழை குன்றி, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்களைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரோமபாதன் மகரிஷிகளை அழைத்து, மழை பெய்வதற்கான ஆலோசனை சொல்லும்படி கேட்டான். ரோமபாதா! விபண்டகர் என்ற முனிவரின் புத்திரர் ரிஷ்யசிருங்கர் காட்டில் வசிக்கிறார். அவர், தன் தந்தைக்கு மட்டுமே சேவை செய்வதைக் கடமையாகக் கொண்டுள்ளார். பிறந்தது முதல் அவர் பிற மனித ஜீவன்களையே பார்த்தது கிடையாது. அவரிடம் ஒரு விசேஷ சக்தி உண்டு. அவர் எந்த இடத்தில் கால் வைக்கிறாரோ, அங்கே மழை கொட்டும். ஆனால், அவரை அழைத்து வருவது என்பது சிரமமான விஷயம். அது உன் பொறுப்பு. அவர் மழை பெய்ய வைத்ததற்கு பிரதியுபகாரமாக நீ உன் மகள் சாந்தாவை அவருக்கு கன்னிகாதானம் செய்து வைக்க வேண்டும், என சொல்லிச் சென்றனர். ரோமபாதன், ஒரு முனிவருக்கு தன் மகளை எப்படி திருமணம் செய்வது என்று யோசித்து வருந்தினாலும், பொதுநலன் கருதி சம்மதித்தான். சாந்தாவும் இதை மகிழ்ச்சியுடன் ஏற்றது தான் மிகப்பெரிய விஷயம். இந்தக்காலத்துப் பெண்கள் போல, மாப்பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையெல்லாம் விதிக்கவில்லை. ரிஷ்யசிருங்கரை வரவழைக்க பல யோசனைகளைச் செய்தான் மன்னன். முடிவில், ஒன்றே ஒன்று மட்டும் தான் அவனுக்கு சரியெனப்பட்டது. மனிதன் சாதாரணமானவனோ, முனிவனோ...யாராயிருந்தால் என்ன...அவனை ஆட்டி வைக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் பெண். பெண்களைக் கொண்டு ரிஷ்யசிருங்கரை மயக்கி அழைத்து வர ஏற்பாடாயிற்று.
சில தாசிப் பெண்களை, ஆஸ்ரமத்துப் பெண்கள் போல அலங்கரித்து, அவரை மயக்கி அழைத்து வரும்படி ரோமபாதன் உத்தரவிட்டான். அந்தப் பெண்கள் அலங்கார சகிதமாய் சென்று ரிஷ்யசிருங்கரை சந்தித்தனர். முதன் முதலாக பிற ஜீவன்களைப் பார்த்த அவர் ஆச்சரியப்பட்டார். அந்தப் பெண்கள் அவரிடம், முனிவரே! நாங்கள் அருகிலுள்ள ஆஸ்ரமம் ஒன்றில் தங்கியிருக்கிறோம். தங்களை தரிசிக்க வந்தோம். இதோ, உங்களுக்கு பிடித்த கனிவகை, மோதகம் அனைத்தும் கொண்டு வந்துள்ளோம், எனக் கூறி தாங்கள் கொண்டு வந்த பலகார வகைகளை அவரிடம் பணிவுடன் சமர்ப்பித்தனர். அதைச் சாப்பிட்ட ரிஷ்யசிருங்கர் மனதில் ஏதோ ஒரு பரவசம் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய அந்தப் பெண்கள் அவரைத் தழுவிக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரு புதுவித சுகத்தைப் பெற்ற அவர், அந்தப் பெண்களை மறக்க முடியாமல் தவித்தார். இதைத் தெரிந்து கொண்ட அந்தப் பெண்கள் மீண்டும் சென்று, அவரை மயக்கி, தாங்கள் எங்களுடன் வந்தால், இந்த பண்டங்களும், இன்பமும் நிரந்தரமாக கிடைக்கும் என்று கூறி, அங்க தேசத்துக்கு அழைத்து வந்து விட்டனர். அவர் ஊருக்குள் நுழைந்தாரோ இல்லையோ, மழை கொட்டித்தள்ளி விட்டது. ரோமபாதன் அவரை வரவேற்று, பொதுநலன் கருதி, இவ்வாறு செய்ய நேர்ந்ததைச் சுட்டிக்காட்டியதால், ரிஷ்யசிருங்கர் சினம் தணிந்தார். முனிவர்கள் சொன்னபடியே தன் மகள் சாந்தாவைக் கன்னிகாதானமும் செய்து கொடுத்தார். அவளும், இல்லறத்தில் இருந்தாலும், கணவனுக்கேற்ற மனைவியாக, ஒரு தபஸ்வினியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தாள்.
வீட்டுநலன், நாட்டுநலனில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மங்கை நம் சாந்தா. இப்பேர்ப்பட்ட தன் சகோதரி, யாகத்துக்கு நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தாள். நினைத்தது போலவே, சாந்தாவும், ரிஷ்யசிருங்கரும் அயோத்தி வந்து சேர்ந்தனர். ராமபிரான் அவர்களை வரவேற்று உபசரித்தார். நீண்டநாளுக்கு பிறகு தங்கள் ஒரே மகளைக் கண்ட தசரத பத்தினியருக்கு தாளாத ஆனந்தம். யாக ஏற்பாடுகள் ஆரம்பமாயின. பவுர்ணமி சந்திரன் போன்ற பிரகாசமுடைய வெண்கொற்றக்குடையின் கீழிருந்து அரசாண்ட ராமபிரான், சர்வ லட்சணங்களும் பொருந்திய குதிரை ஒன்றை வரவழைத்து, அதன் நெற்றியில் பட்டயம் ஒன்றைக் கட்டினார். அயோத்தி மன்னன் ஸ்ரீராமன் அனுப்பும் யாகக்குதிரை இது. இது உங்கள் இடத்துக்கு வந்ததுமே எனக்கு பணிந்து விடுங்கள். இல்லாவிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எழுதப்பட்டிருந்தது. யாகம் நடத்துவது என்றால் பல தேசத்து மன்னர்கள், முனிவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்க வேண்டுமல்லவா! ராமபிரான் அகத்தியர் உள்ளிட்ட பல முனிவர் பெருமக்களையும் யாகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். சீதாதேவியை மீட்கும் போரில் உதவி செய்த இலங்கை மன்னன் விபீஷணன், தன் உயிருக்கும் நிகரான சுக்ரீவன், தனது சேவையையே வாழ்வின் லட்சியமாகக் கொண்ட ஆஞ்சநேயன், வாலி மைந்தன் அங்கதன், 56 தேசத்து அரசர்கள், கங்கையைக் கடக்க உதவிய குகன் ஆகியோருக்கு ஏவலர்கள் அழைப்புக் கடிதங்களை எடுத்துச் சென்றனர். பின்னர், மதுகை நகரை ஆண்டு கொண்டிருந்த தனது தம்பி சத்ருக்கனனுக்கும் அழைப்பு அனுப்பி வைத்த ராமன், அவனை உடனடியாக யாகத்திற்கு வரும்படி எழுதியிருந்தார். தூதுவர்கள் அவற்றை விரைந்து சென்று கொடுக்க அவர்கள் எல்லாருமே விரைவில் வந்து சேர்ந்தனர். அனைவரையும் வரவேற்ற ராமபிரான், விருந்தினர்களே! நீங்கள் அனைவரும் கடல்நீர், புண்ணியநதிகளின் நீரை கொண்டு வாருங்கள், என அன்புடன் சொல்லியனுப்பினார். பறையறைவோரை அழைத்து, இன்னும் ஏழு நாட்களில் யாகம் தொடங்கப் போவது உறுதி, என்பதை நாட்டு மக்களுக்கு அறிவியுங்கள், என்று உத்தரவிட்டார். இந்நேரத்தில் தம்பியைத் தேடி சாந்தா வந்தாள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-11
அக்கா சாந்தாவின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார் ராமபிரான். தம்பி! இந்த உலகம் உள்ளளவும் உன் பெயர் நிலைத்திருக்கும். உன் பெயர் ஒலிக்காத நாவும், நாளும் இருக்காது, என்று ஆசி வழங்கினாள். சகோதரியின் பாசமிக்க வார்த்தைகளைக் கேட்ட ராமன் சிரித்தார். ராமா! உன் சிரிப்பில் வறட்சிதெரிகிறது. வறட்சிக்கான காரணமும் அதில் புரிகிறது. விதி என்பது ஒற்றைக் கல் தாங்கலில் நிற்கும் பெரிய பாறை போன்றது. அந்தக்கல் நகர்ந்து விட்டால், பாறை கீழே நிற்பவனின் தலையிலும் விழலாம். கீழிருக்கும் பெரும் பள்ளத்தை மூடி பாதையையும் ஏற்படுத்தி தரலாம். நீ சீதாவை நினைத்து மனம் புழுங்கிக் கொண்டிருப்பது எனக்கு புரிகிறது. எத்தகைய செல்வம் வாய்ந்த குடும்பத்தில் பிறந்தவள் அவள். அவளது தந்தை ஜனக மகாராஜா சாதாரணப்பட்டவரா! அல்லது அவளது தாய் சுநைனாவின் செல்வச் செழிப்பை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் தான் உண்டா! அவள் திருமகளின் வடிவம். பூமாதேவியின் பொறுமை அவளுக்குள் ஊறிக் கிடந்தது. ராவணனின் பிடியில் அவள் ஒருமுறை தான் சிக்கினாள். நீ அவளைக் காப்பாற்றி விட்டாய். ஆனால், இன்றோ அயோத்தியிலுள்ள ராவணர்களின் வாய்ப்பேச்சால், வாழ்விழந்து காட்டில் இருக்கிறாள். அந்தப் பூமகள் பெற்ற பிஞ்சுகளைப் பற்றி நமக்கு தகவல் கிடைத்தும் நம்மால் காண இயலாமல் இருக்கிறோம். அதிருக்கட்டும். ஸ்வமேதம் நடத்துகிறாயே! மனைவி இல்லாமல் அதைச் செய்ய இயலாதே.
நீ அதற்கு என்ன மாற்று ஏற்பாடு செய்திருக்கிறாய் தம்பி! அக்காவின் வார்த்தைகளில் உள்ள உண்மையை உணர்ந்த ராமன், சகோதரி! அதுபற்றி நான் சிந்திக்காமல் இல்லை. குலகுரு வசிஷ்டரிமும், இதர குருமார்களிடமும் இது பற்றிய கருத்து கேட்டுள்ளேன். அவர்கள் சொல்வதை இவ்விஷயத்தில் செயல்படுத்துவேன், என்றார். ராமன் ஏகபத்தினி விரதன் என்பதும், அவர் இன்னொரு திருமணத்துக்கு சம்மதிக்கமாட்டார் என்பதையும், சீதாவை மனமின்றி பிரிந்திருக்கும் அவரது மனநிலையையும் சாந்தா நன்றாகவே அறிவாள். மேலும், ராமபிரானின் மகிமைக்கு மறுமணம் என்பது எதிர்காலத்தில் அவர் மீது மக்கள் கொள்ளும் மதிப்பைக் குலைத்து விடும் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். தம்பியை ஆறுதல் வார்த்தைகளால் தேற்றியதும் அவள் அங்கிருந்து விடைபெற்றாள். அப்போது வசிஷ்டரும் மற்ற முனிவர்களும் வந்தனர். ஸ்ரீராமச்சந்திரா! மனைவி இல்லாத நிலையில், மறுமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. நம் தேவி சீதாவைப் போலவே நாம் தங்கத்தால் ஒரு சிலை வடிப்போம். அந்தச் சிலையை உன்னருகில் வைத்துக் கொண்டால், அவள் இருப்பதாகவே அர்த்தமாகும். இதை சாஸ்திரம் அனுமதிக்கிறது. உடனே சிலை வடிக்க உத்தரவிடு, என்றார். அரண்மனை சிற்பி வரவழைக்கப்பட்டார். உடனடியாக பொற்பாவை தயாரிக்கும் வேலை துவங்கியது. மிக விரைவில் சிலைப்பணிகள் முடிந்ததும், ராமன் சிலையைப் பார்க்க வந்தார். என்ன அதிசயம்! சீதாதேவியே அங்கு அமர்ந்திருந்தது போன்ற அமைப்பு! அந்தக் கொடியிடையாளின் சிலையைக் கண்டதும், அவர் கண்ணீர் வடித்தார். சீதா! சீதா! நீ நேரிலேயே இங்கு வந்தாயோ! என அரற்றினார்.
இந்த இடத்தை சற்றே உற்று நோக்குங்கள். மனைவி நாலு நாள் பிறந்த வீட்டுக்குப் போய் விட்டால், தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, செய்யக்கூடாத அத்தனையையையும் செய்கிறார்கள் சிலர். ஆனால், காட்டில் இருக்கிறாள் சீதை! அவள் இனி வருவாளா வரமாட்டாளா எனத் தெரியாது! அருமையான இரண்டு குழந்தைகளுடன் கானகத்தில் என்ன பாடு பாடுகிறாளோ! இவ்வளவு சூழலிலும், மனைவியை சிலையாக வடித்து, அந்தச்சிலைக்குள் அவளைக் காணும் நம் ராமச்சந்திர மூர்த்திக்கு ஈடு இணையேது! அந்த மகானுபாவனை நாமெல்லாம் பின்பற்ற வேண்டாமா! இப்படியாக, யாக ஏற்பாடுகள் திவ்யமாக முடிந்தன. யாகம் துவங்கியது. யாகத்தைக் காண அயோத்தி மக்கள் விதவிதமான ஆடை அலங்காரங்களுடன் வந்து சேர்ந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தை காவலர்கள் ஒழுங்குபடுத்தினர். தசரத தேவியர்களுக்கு தனி மேடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 21 வேள்வித்தூண்கள் நடப்பட்டன. அப்போது, யாகத்தை நடத்த வந்திருந்த ரிஷ்யசிருங்கர் உள்ளிட்ட ரிஷிகள் மிகச்சிறப்பாக மூட்டிய யாக குண்டங்களில் இருந்து எழும்பிய நறுமணப்புகை வானை எட்டி மறைத்தது. யாகம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, 16 அஸ்வமேத யாகக்குதிரைகள் யாக குண்டங்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அவை அனைத்தும் சூரியனை ஏற்றி வரும் குதிரைகளுக்கு ஒப்பானவையாக சர்வ லட்சணங்களுடன் இருந்தன. அவற்றின் கால்களில் தங்கத்தால் குளம்பு கட்டினர். இந்தக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு ரசித்தனர். அவர்கள் யாகக்குதிரைகளை கையெடுத்து வணங்கினர். காலையில் எழுந்ததும் குதிரை முகத்தில் விழிப்பது செல்வச்செழிப்பைத் தரும் என்பது ஐதீகம். மேலும், திருமால் குதிரையின் முகத்துடன் லட்சுமி சமேதராக ஹயக்ரீவர் என்ற பெயருடன் விளங்குவதும் இதனால் தான். ஹயம் என்றால் குதிரை என்று பொருள். அஸ்வமேத யாகம் செய்பவர்கள் 16 குதிரைகளை உலகின் பல்வேறு திசைகளிலும் அனுப்புவார்கள். அவை உலகை வேகமாகச் சுற்றி வரும். எந்தெந்த இடங்களுக்கு சென்று மீண்டதோ அந்தப்பகுதிகள் யாகத்தை நடத்துபவரைச் சேரும். இப்படி 16 குதிரைகளை ராமனும் அனுப்பி வைத்தார். அவை உலகெங்கும் விரைந்தன. அந்தக் குதிரைகள் காற்றை விட வேகமாகச் செல்லக்கூடியவை. அவை அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஒரு சில நாட்களிலேயே கடந்து விடும். அவ்வாறு திரும்பும் குதிரைகள் யாக குண்டத்தில் பலியிடப்படும். ராமனால் அனுப்பப்பட்ட குதிரைகளில் ஒன்றைத் தவிர எல்லாம் திரும்பி விட்டன. அந்தக் குதிரையை எங்கே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-12
அயோத்தியில் இவ்வாறு மிகச்சிறப்பாக வேள்வி நடந்து கொண்டிருக்க, காட்டில் இருந்த வால்மீகி முனிவர், ராமனின் மைந்தர்களான லவகுசர்களை அழைத்தார். இப்போது வலகுசர்கள் வளர்ந்திருந்தார்கள். தந்தையைப் போலவே இருவரும் கரிய நிறம். வெண்பற்கள் ஒளி வீசின. வாய் பவளம் போல் சிவந்திருந்தது. கண்களும் சிவந்திருந்தன. அவற்றில் தீர்க்கமான பார்வை இருந்தது. சுருள் சுருளான சிகை அவர்களின் அழகுக்கு அழகு சேர்த்தது. அந்த அன்பு மைந்தர்கள் தான் இப்போது சீதாவுக்கு ஆறுதல். அவர்களின் முகத்திலே, தன் பர்த்தா ஸ்ரீராமனின் முகத்தை தரிசித்துக் கொண்டிருந்தாள். அந்த இளம் சிறுவர்கள் வால்மீகியின் முன்னால் வந்து நின்று அவரது கட்டளையை எதிர்நோக்கி பணிவுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம், குழந்தைகளே! நீங்கள் அயோத்திக்கு கிளம்புங்கள். அங்கே ராமபிரான், அஸ்வமேத யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார். எல்லா தேசத்து அரசர்களும் அங்கே கூடியிருக்கிறார்கள். நீங்கள் அங்கு சென்று, ஸ்ரீராமச்சந்திர பிரபுவின் கதையைப் பாடுங்கள். ராமனின் கதையை வடமொழியில் மிக அருமையாக எழுதியிருக்கிறேன். அதை அரசர்கள் கூடியிருக்கும் அந்த அவையில் சென்று பாடுங்கள். மேலும், அங்கேயுள்ள அந்தணர்கள் மத்தியிலும் நீங்கள் பாட வேண்டும். ஆனால், அயோத்தி செல்ல ஒரு நிபந்தனை... என புள்ளி வைத்தார் வால்மீகி. குழந்தைகள் ஆவலுடன் அவர் முகத்தை எதிர்நோக்கினர். அந்தப் பார்வையே நிபந்தனை என்ன? என்பதைத் தெளிவாகக் கேட்டது.
முக்காலத்தையும், நான்கு வேதத்தையும் குறைவற்று தெளிந்த வால்மீகி அவர்களது பார்வையின் பொருளைப் புரிந்தவராய், குழந்தைகாள்! நீங்கள் சீதாவின் புத்திரர்கள் என்பது அயோத்தியில் யாருக்கும் தெரியக்கூடாது. யாகத்தைக் காண வந்தவர்கள் போல் காட்டிக் கொள்ள வேண்டும், என்றார். முனிவரின் கட்டளையை ஏற்ற லவகுசர் அயோத்தி புறப்பட்டனர். அவர்கள் முனிவரைப் போல தங்களை உருமாற்றிக் கொண்டனர். தங்கள் ஜடாமுடியில் குளிர்ந்த மலர்களை சூடிக்கொண்டனர். பெரிய மலையில் இருந்து விழும் அருவி, எத்தகையை வெண்மை நிறமுடையதாக இருக்குமோ அதுபோல அவர்கள் அணிந்திருந்த பூணூல் விளங்கிற்று. காமனாகிய மன்மதன் போல் குசனும், அவனது தம்பியான சாமன் போல லவனும் அழகுற விளங்கினர். இளமை பொங்கும் காளைகள் போன்ற தோற்றத்துடன். குசனும் லவனும் தங்கள் மார்பில் அழகிய வீணை ஒன்றையும் குறுக்காக கட்டியபடி, தாய் சீதாவிடம் சென்றனர். குழந்தைகளின் பேரழகு கண்டு அவள் கண்ணீர் வடித்தாள். இந்த இனிய காட்சியைக் காண உங்கள் தந்தைக்கும், பாட்டிமார்களுக்கும், என் தந்தை ஜனகருக்கும், தாய் சுனைநாவுக்கும் கொடுத்து வைக்கவில்லையே என வருந்தினாள். வருத்தம் பெருமூச்சாக வெளிப்பட்டது. என் அன்புச் செல்வங்களே! இன்றென்ன புதிய கோலம்? என்றாள் சீதா. அம்மா! குருஜி வால்மீகி முனிவர் எங்களை அயோத்திக்கு புறப்படச் சொல்லியுள்ளார். அங்கே ஸ்ரீராமபிரான் அஸ்வமேத யாகம் நடத்துகிறாராம். அந்த யாகத்திற்கு வந்திருக்கும் அரசர்கள், அந்தணர்கள் முன்னால் ராமகதை பாடும்படி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கே கிளம்புகிறோம், அன்னையே, என்றனர் குழந்தைகள். சீதாவுக்கு பயம் கலந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
அயோத்திக்கு தனிமையில் குழந்தைகளை அனுப்புவதில் தயக்கம் ஒரு பக்கம்...மறுபுறம் குழந்தைகள், தங்கள் தந்தையைக் காணும் பாக்கியமும், ஸ்ரீராமன் தன் பிள்ளைகளைக் காணும் பாக்கியமும் கிட்டுமே எனக் கருதினாள். அதே நேரம், மனைவியின்றி யாகம் நடத்தும் ஸ்ரீராமன் மீது வருத்தமும் கொண்டாள். குழந்தைகள் புறப்பட்டனர். அவர்கள் சென்ற வழியில் ஒரு பாலைவனம் குறுக்கிட்டது. அங்கே மலை ஆடுகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. பல வரிகளையுடைய புலிகளின் உறுமல் சத்தம் ஆங்காங்கே கேட்டது. அவற்றுக்கு பயந்த மான்கள், கண்களை மூடாமல், ஒரு வகை அச்சத்துடன் மிரட்சி பார்வையுடன் நின்றன. எங்கும் கற்கள் குவிந்து கிடந்தது. சில இடங்களில் வேடர்கள், மிருகங்களைக் கொல்வதற்காக தங்கள் அம்புகளை கூராக்கும் பொருட்டு, கற்களில் தேய்த்துக் கொண்டிருந்தனர். இப்படியே நடந்த போது ஓரிடத்தில் வாழை மரங்கள் அடர்ந்த காடு தென்பட்டது. அந்தக் காட்டின் நடுவே மிகப்பெரிய நதி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் கங்கை. கங்கைக்கரையில் குசலவர்கள் வந்து நின்று, அதன் அழகை தங்கள் கண்களால் பருகினர். பின்னர் அங்கிருந்த படகொன்றில் ஏறினர். குழந்தைகள் இல்லையா? கங்கையின் பிரளய நீரைக் கடக்கும் போது, ஆரவாரம் செய்தனர். இந்த புதுமையான அனுபவத்துடன் மகிழ்ச்சி பொங்க கங்கையின் மறுகரையை அடைந்தனர். அங்கிருந்து, வேள்விச்சாலை இருக்குமிடத்தை அவர்கள் அடைந்த போது, அந்தணர்களின் யாகப்பணிகளில் தீவிரமாக இருந்தனர். பலநாட்டு அரசர்களும் தங்கள் பிரதாபத்தை காட்டும் வகையில் செல்வமிடுக்குடன் அலங்காரம் செய்து வந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் மத்தியில் சென்ற லவகுசர்கள், அழகுமிக ராமனின் கதையை ஆரம்பித்து பாடினர். இப்படியொரு தேவகானத்தை தாங்கள் இதுவரை கேட்டதில்லை என அரசர்கள் கூறினர். பொதுமக்களோ தங்கள் மன்னாதி மன்னரின் வரலாறு கேட்டு உளம் உருகி நின்றனர். இசையில் வல்லவர்களான தும்புருவும், நாரதரும் கூட இப்படி வீணை இசைக்க முடியாது என்று இசையறிந்த பலரும் ஆச்சரியம் கொண்டனர். இந்தக் குழந்தைகளின் செயல்பாட்டைக் கவனித்த சிலர் சந்தேகம் கொண்ட சிலர், ராமபிரானிடம் சென்று, எங்கள் தெய்வமே! நம் வேள்விச்சாலைக்கு இரண்டு சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வீணை மீட்டி தங்கள் கதையைப் பாடுகிறார்கள். அது சாமகானத்தினும் இனிமையாக உள்ளது, என்றனர். அப்படியா? என்ற ராமன், காவலர்களை அழைத்து, அந்தக் குழந்தைகளை இங்கே அழைத்து வாருங்கள், என உத்தரவிட்டார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-13
காவலர்கள் போய் ராமனிடம் தகவல் சொல்லவே, லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர். தன்னைப் போலவே, அஞ்சன வண்ணத்தில் மிளிர்ந்த அந்த சிறுவர்களைக் கண்டு ராமபிரான் ஆனந்தம் கொண்டார். அவரையும் அறியாமல் பாச உணர்ச்சி மேலிட்டது. அந்தச்சிறுவர்கள் ராமபிரானை வணங்கி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! தங்கள் வரலாறு மிகவும் திவ்வியமானது. உன் திருநாமமாகிய ராம என உச்சரித்தாலே பாவங்கள் நீங்கி விடுமென எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார். தங்கள் கதையைத் தாங்களே கேட்பதென்பது கூட பாவங்களை நீக்கும் மருந்தாகும். தங்கள் திவ்ய சரித்திரத்தை நாங்கள் பாட தாங்களும், அரண்மனையில் உள்ள பிறரும் கேட்டு மகிழ வேண்டும், என்றனர். ராமபிரான், அவ்வாறே ஆகட்டும் என சொன்னபோது, மூன்று பாட்டிகளும் அங்கே வந்தனர். அவர்களும் ராம சரிதம் கேட்க அவரவர் ஆசனங்களில் அமர்ந்தனர். ராமபிரானின் பிறப்பு முதல் சீதாதேவியை மீட்டு மீண்டும் அயோத்தி திரும்பியது வரையான சரித்திரத்தை மிக அருமையாகப் பாடினர். பொன்போன்ற நிறத்தையுடைய சீதாதேவியின் மைந்தர்கள் பாடிய அந்த சரித்திரம் அனைவர் கண்ணிலும் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது. ராமபிரான் மிகவும் மகிழ்ந்தார். உலகத்தில் தன் கதையை தானே கேட்ட ஒரே பாத்திரம் ராமபிரான் தான். அந்தளவுக்கு அது திவ்யமானது. இதனால் தான் ராமாயணத்தில் இருந்து தினமும் ஒரு ஸ்லோகம் அல்லது பாடல் அல்லது பொருள் ஏதாவது ஒன்றைப் படித்தாலே மிகுந்த புண்ணியம் கிடைத்து விடும் என்று சொல்கிறார்கள்.
கதை முடிந்ததும், ராமபிரான் லவகுசர்களை ஆரத்தழுவி மகிழ்ந்தார். அவருக்குப் புரிந்து விட்டது. அவர்கள் தனது குழந்தைகள் தான் என்று. அவர்களிடம், பச்சிளம் பாலகர்களே! தாமரை மலர் போன்ற கண்களையுடைய நீங்கள் யார்? எனக் கேட்டார். ஐயனே! லவகுசர் என்று எங்களை அழைக்கிறார்கள். நாங்கள் வால்மீகி முனிவரின் சீடர்கள். அவரே எங்களுக்கு தங்கள் சரித்திரத்தைக் கற்றுத் தந்தவர். இந்த திவ்ய சரித்திரத்தை தங்கள் தேசத்தில் சென்று பாடும்படி எங்களைப் பணித்தவரும் எங்கள் குருநாதரே, என்றனர். தாங்கள் சீதாதேவியின் குழந்தைகள் என்பதை வால்மீகியின் அறிவுரைப்படி, ராமபிரானிடம் சொல்லவில்லை. ராமன் அதிகாரிகளை அழைத்தார். இந்தக் குழந்தைகள் பாடிய பாடல்கள் நம் அனைவர் நெஞ்சையும் நெகிழ வைத்தன. இவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து அனுப்புவதே முறையானது. பதினெட்டு கோடி பொற்காசுகளை இவர்களுக்கு வாரி வழங்குங்கள், என்றார். இந்த தேசம் எவ்வளவு உயர்வான நிலையில் இருந்தது என்பதற்கு இந்த சன்மானத்தொகை எடுத்துக்காட்டு. பரிசுக்கே இவ்வளவு செலவழித்தால், கோசலநாட்டின் ஒட்டுமொத்த செல்வமும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். குசலவர்கள் ராமபிரானை நோக்கிச் சிரித்தனர். ஸ்ரீராமா, நாங்கள் பொருள் பெற்றுச் செல்வதற்காக தங்கள் சரிதையைப் பாடவில்லை. மேலும், இந்தப் பொருள் எத்தகைய துன்பங்களைத் தரும் என்பதையும் நாங்கள் அறிவோம்.
மன்னவா! பொருள் இருந்தால் அரசாங்கம் வலுவில் அதைக் கவரப்பார்க்கும். திருடர்கள் அதை கொள்ளையடிக்க முயற்சிப்பார்கள். நாம் தடுத்தால், அவர்கள் நம்மைக் கொல்லவும் தயங்கமாட்டார்கள். ஒருவேளை இந்தப் பொருள் ஏதோ காரணத்தால் செலவாகி விட்டால், இழந்ததை நினைத்து படும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. பணமிருந்தால் தூக்கம் வராது. மேலும், அதைக் காவல் காப்பதிலேயே பொழுது போய்விடும். ராமா! இவையெல்லாவற்றையும் விட மிகக்கொடியதான பெண்ணாசையில் இது நம்மைத் தள்ளிவிடும். இப்படி, துன்பங்களை மட்டுமே தரும் பொருள் எங்களுக்கு எதற்கு? என்றனர். ராமபிரான், அந்தக் குழந்தைகளின் செல்வம் பற்றிய வித்தியாசமான கோணத்தை ரசித்தாலும், அவர்களின் எதிர்காலத்துக்கு பொருள் தேவை என்பதால், அவர்களுக்கு புத்திமதி சொன்னார். குழந்தைகளே! பொருள் தரும் துன்பங்களை மட்டுமே பட்டியலிட்ட நீங்கள், அதன் மேன்மையையும் தெரிந்து கொள்ளுங்கள். உலகில் வாழும் ஒரு அற்பன் கூட, பொருள் கிடைத்து விட்டால் அரசனாகி விடுகிறான். என்னென்ன வகை உணவுகள் வேண்டுமோ அவை அத்தனையையும் தயார் செய்து உண்டு மகிழலாம். நினைத்த காரியங்கள் அனைத்தையும் சாதித்துக் கொள்ள பொருள் அவசியம் தேவை. பொருள் இருந்தால் இந்திரலோகத்தில் கூட சகல வசதியும் கிடைக்கும். செல்வம் என்ற ஆயுதத்தைக் கண்டு, பகைவர்கள் கூட ஒருவனிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள். எனவே, நீங்கள் இந்தப் பொருளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள், என்றார். ஸ்ரீராமச்சந்திர பிரபு! ஸ்ரீமன் நாராயணனின் தோற்றம் கொண்டவரே! நாங்கள் காட்டில் கிழங்குகளையும், சருகையும் உண்டு வாழும் முனிவர்களிடையே வசிப்பவர்கள். எங்களுக்கு எதற்கு பொருள்? நீங்கள் தரும் பொருளை நாங்கள் எட்டிக்காயாகத்தான் நினைக்கிறோம், என்றனர். அந்தக் குழந்தைகளின் மனஉறுதி, ஆசையின்மை கண்டு ராமபிரான் மகிழ்ந்தார். அந்தக் குழந்தைகளை மீண்டும் ஒருமுறை தழுவிக் கொண்டார். தன் மனதிற்குள், ஜானகி மைந்தர்களே! உங்கள் தாய் திருமகளின் வடிவமல்லவா? என்ன பாவம் செய்தேனோ? உங்களுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு! என்ற ராமன், ஒருமுறையேனும், அவர்களை மைந்தர்களே என அழைத்து விட வேண்டும் எனக் கருதி, என் அன்பு மக்களே! நீங்கள் நாளையும் அரண்மனைக்கு வர வேண்டும். அனைவர் மனம் மகிழும் வகையில் பாட வேண்டும், வருவீர்களா? என்றார். குழந்தைகளும் ஒப்புக்கொண்டனர். அயோத்தி மன்னா! நாளை நாங்கள் அரசவைக்கு வந்து பாடுகிறோம், என்று சொல்லி விடை பெற்றனர். மறுநாள் அப்படி ஒரு விபரீதம் நடக்குமெனத் தெரிந்திருந்தால், ராமபிரான் அவர்களை வரச்சொல்லியிருக்கவே மாட்டார்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-14
ராமனின் கட்டளைக்கிணங்க மறுநாள் குசலவர் அரண்மனைக்கு வந்தனர். ராமனுடன் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே! நாங்கள் இங்கே வந்ததில் இருந்து, தங்கள் திருமுகத்தைத் தான் தரிசித்துக் கொண்டிருக்கிறோம். சீதாதேவியாரின் இன்முகத்தையும் நாங்கள் தரிசிக்க வேண்டாமா! அவர்களது அன்பான அரவணைப்பும், ஆசியும் எங்களுக்கு வேண்டாமா! ஐயனே! அழையுங்கள் அந்த அன்புத்தாயை! உலகத்தில் எந்தத்தாயும் அனுபவிக்காத கஷ்டங்களை அனுபவித்த அவர்கள், தீயில் மூழ்கியெழுந்து தங்கள் கற்பை நிரூபித்தவர் என்பதை அறியும் போது, எங்கள் உடல் புல்லரிக்கிறது. அவரை வரச்சொல்வீர்களா? என்றனர். ராமபிரான் விக்கித்துப் போனார். அவருக்கு தெரியும்...அவர்கள் தன் குழந்தைகள் என்று! ஒரு காலத்தில், இந்த உண்மை தெரிந்து, தங்கள் தாயை தான் ஒதுக்கி வைத்தது தெரிந்தால் எந்தளவுக்கு விபரீதம் ஏற்படும்! ஐயோ! இந்த பிஞ்சுக்குழந்தைகளின் கேள்விக்கு, உலகாளும் ராமன் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறானே! சீதா...உன்னை அனுப்பிவிட்டு, நான் படும் வேதனையைப் பார்...இல்லை தாயே! உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார். லவகுசர்கள் கொதித்து விட்டனர்.
ஏ ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை! அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்! உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கேட்டனர். ராமபிரான் அவர்களைச் சமாதானம் செய்தார். அன்புக்குழந்தைகளே! என் நிலைமையைப் புரிந்து கொள்ளுங்கள். நான் நாடாள்பவன். நாடாளும் ஒருவன் எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் குருகுலத்தில் பயின்றிருப்பீர்கள். அந்த அடிப்படையிலேயே அவ்வாறு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டேன், இதைத் தவிர என்னால் வேறென்ன செய்ய முடியும்? என்றார். செய்வதையும் செய்து விட்டு, சமாதானமா செய்கிறீர்! உம் விளக்கத்தை எந்நாளும் ஒப்புக் கொள்ள முடியாது. பொறுமை மிக்க பூமித்தாய் பெற்றெடுத்த அந்தப் புண்ணியவதியை ஒதுக்கி வைத்த உம் முகத்தில் விழித்ததே பாவம். நாங்கள் வருகிறோம், என்றவர்களாய் வேகமாக வெளியேறினர். அங்கு வந்த கவுசல்யா தேவியும் குழந்தைகளை அழைத்து சமாதானம் சொன்னாள். சீதாதேவிக்கு சிறந்த மாமியாக நடந்து கொள்ள தங்களால் முடியவில்லை போலும் என அவளிடமும் கோபித்துக் கொண்டு அவர்கள் காடு நோக்கிப் புறப்பட்டனர். வால்மீகியின் ஆஸ்ரமத்தை அடைந்து தாயிடம் நடந்ததைக் கூறினர். குழந்தைகள் பெற்ற தந்தையை எதிர்த்துப் பேசியதை அறிந்த சீதாதேவி அவர்களைக் கடிந்து கொண்டாள்.
இந்த உலகிலேயே சிறந்தவர் அல்லவா ஸ்ரீராமர்! அவரைப் போயா எதிர்த்துப் பேசினீர்கள்! அவரது திருநாமம் சொன்னாலே பாவங்கள் நீங்கி விடுமே! அவரை நிந்தித்திருக்கிறீர்கள்! ஐயோ! இனியும் நான் வாழ வேண்டுமா! என அவள் கதறினாள். வால்மீகி முனிவர் அவளைச் சமாதானம் செய்து குழந்தைகளை விளையாடச் செல்லும்படி அனுப்பி விட்டார். நாட்கள் கடந்தன. ஒருநாள் லவகுசர், தங்கள் நண்பர்களுடன் குருகுலத்தில் அமர்ந்து இனிமையான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு குதிரை அங்கு வந்தது. அதன் நெற்றியில் ஒரு பட்டை இருந்தது. அந்த பட்டையில், அயோத்தி மன்னர் தசரத புத்திரர் ராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரை இது. இது எந்த இடத்திற்கு வருகிறதோ, அந்நாட்டு மன்னர் தமது விசுவாசத்தை ராமபிரானுக்கு காட்ட வேண்டும். ராமபிரானுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தைகள் குதிரையைப் பார்த்தார்களோ இல்லையோ...அம்மா திட்டியதை எல்லாம் மறந்து விட்டார்கள். சீதாதேவியை அவமதித்த ராமனுக்கு, அஸ்வமேத யாகம் செய்ய தகுதியில்லை என்ற எண்ணமே மேலோங்கியது. அவர்கள் குதிரையைப் பிடித்து கட்டி வைத்து விட்டனர். குதிரையின் பின்னால் வந்த வீரர்கள் இதைப் பார்த்து, குருகுலத்தில் இருந்த சிறுவர்களைக் கண்டித்தனர். குழந்தைகளே! என்ன விளையாட்டு இது! இது தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அஸ்வமேத யாகக்குதிரை. இதையா கட்டி வைத்தீர்கள்! நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே! குதிரையின் நெற்றியில் எழுதி கட்டப்பட்டுள்ள பட்டயத்தை யாருமே பார்க்கவில்லையா! அறியாக் குழந்தைகள் என்பதால் உங்களை மன்னிக்கிறோம். உம்...குதிரையை அவிழ்த்து விடுங்கள் என்று விரட்டினர். லவகுசர்களோ, இதர சிறுவர்களோ இவர்களின் மிரட்டலைக் கண்டு கொள்ளவே இல்லை. கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் செய்தவன், அவள் தீக்குளித்த பின்பும், ஊரார் சந்தேகப்படுகிறார்களே என்பதற்காக மீண்டும் அவளைக் கானகம் அனுப்பியவன்...அவன் தானே உங்கள் ஸ்ரீராமன்! அவனுக்கு என்ன தகுதியிருக்கிறது அஸ்வமேதம் நடத்த! குதிரையை நாங்கள் விடமாட்டோம். மீறி அவிழ்க்க முயன்றால் நடப்பதே வேறு, என எச்சரித்தனர் லவகுசர்கள். ஏவலர்கள் அந்தக் குழந்தைகளைப் பார்த்து ஏளனமாக சிரித்தபடியே, குதிரையை அவிழ்க்க முயல, சில அம்புகளை அவர்கள் மீது எய்தனர் லவகுசர். ஏவலர்களால் அவர்களின் தாக்குதலுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. இதென்ன அதிசயம் என்றவர்களாய், தங்கள் படைக்கு தலைமையேற்று வந்து சற்று தூரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சத்ருக்கனனை நோக்கி ஓடினர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-15
ஏவலர்கள் சொன்னதைக் கேட்ட சத்ருக்கனன் ஆச்சரியமடைந்தவனாய், குதிரை நின்ற இடத்திற்கு வந்தான். அங்கு நின்ற குழந்தைகளைப் பார்த்தவுடனேயே மனதில் மரியாதை ஏற்பட்டது. ஓ இவர்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வடிவத்தை ஒத்திருக்கிறார்களே! என்ன தேஜஸ் இவர்களது முகத்தில்! அவன் ஓடோடிச் சென்று அந்தக் குழந்தைகளை அணைத்துக் கொண்டான். அன்புச்செல்வங்களே! என்ன இது விளையாட்டு! அஸ்வமேத யாகக்குதிரையை பிடிக்கலாமா? பாவம்..அறியாப்பிள்ளைகள் நீங்கள்...உங்களிடமா இந்த ஏவலர்கள் சண்டைக்கு வந்தார்கள்? அவர்கள் உங்களுடன் சண்டை போட்டதை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு குதிரைகள் என்றால் இஷ்டமா? இதோ! என் படையில் பல ஜாதி குதிரைகள் உள்ளன. எல்லாமே உயர்வகை தான். அவற்றில் எத்தனை குதிரைகளை வேணடுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் குதிரை தன் பவனியைத் தொடரட்டும்! ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை அறியாதவர்கள் யார்? அவரது ஆட்சி இந்த பூமியெங்கும் வியாபிப்பதில் உங்களுக்கும் எந்த மாறுபாட்ட கருத்து இருக்காது இல்லையா? பிறகு ஏன் இந்தக் குதிரையைப் பிடிக்க வேண்டும்? என கனிவுடன் பேசினான். லவகுசர் சிரித்தனர். நீர் யார்? என்றதும், நான் ராமச்சந்திர மூர்த்தியின் கடைசி சகோதரன் சத்ருக்கனன், என்றதும், அவர்களது நகைப்பு இன்னும் அதிகமாயிற்று.
சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன், கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்...இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்? ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர். குழந்தைகளே! நான் முதலில் உங்களை அறியாப்பிள்ளைகள் என்று தான் நினைத்தேன். நீங்களோ, அதிகமாகப் பேசுகிறீர்கள். ராமபிரான் எதைச் செய்தாலும் அதில் காரணமிருக்கும். குதிரையை விடுகிறீர்களா? இல்லையா? என மிரட்டிப் பார்த்தான். குழந்தைகள் ஒரேயடியாக மறுத்து விட்டனர். ஐயோ! சின்னஞ்சிறு பாலகர்களான உங்களுடன் சண்டை போட வேண்டியதாகி விட்டதே! என்ற சத்ருக்கனன், சில அம்புகளை வானில் எய்து அவர்களைப் பயமுறுத்திப் பார்த்தான். அவர்களோ, அவற்றுக்கு பதிலடி கொடுத்து நொறுக்கித் தள்ளவே, கோபமடைந்த சத்ருக்கனன், அவர்களுடன் கடும் போர் செய்தான். ஆனால், லவகுசர்களின் அம்புகளுக்கு அவனால் பதிலளிக்க முடியவில்லை. அவன் கைசோர்ந்தான். இறுதியில் லவகுசர் விட்ட அம்பிற்கு மயங்கி களத்திலேயே சாய்ந்து விட்டான். இந்தத் தகவல் ராமபிரானுக்குச் சென்றது.என்ன, யாகக் குதிரையை கட்டி வைத்தார்களா? அதிலும் சின்னஞ்சிறுவர்களா? லட்சுமணா! உடனே புறப்படு! குதிரையை மீட்டு தொடர்ந்து உலகெங்கும் அழைத்துச் செல், என உத்தரவிட்டார் ராமபிரான்.
இலங்கை போர்க்களத்திலே, மாவீரன் இந்திரஜித்தையே வென்ற அந்த வெற்றித்திருமகன், பெரும் படையுடன் குதிரை நிற்கும் கானகத்திற்கு, தானும் தோற்கப்போகிறோம் என்பது தெரியாமலேயே புறப்பட்டான். இதனிடையே சத்ருக்கனனை வென்ற லவகுசர், தாய் சீதாவுக்கு அதை அறிவிக்காமலேயே அமைதியாக இருந்து விட்டனர். அவள் கவலையுடன் இருப்பதைக் கவனித்தனர். இந்நேரத்தில் வால்மீகி முனிவர் அங்கு வந்தார். ஜனகனின் திருமகளே! ஏனிந்த முக வாட்டம்? நீ மகிழ்ச்சியுடன் இருந்தால் தானே குழந்தைகளும் மகிழ்ந்து விளையாவார்கள்? வாட்டம் கொள்ளாதே. எல்லாம் வல்ல லலிதாம்பிகை உனக்கு நல்லருள் தருவாள், என ஆறுதலாய் வாழ்த்துச் சொன்னார். கண்களில் நீர் வழிய நின்ற சீதாதேவி, சுவாமி! என் கவலையெல்லாம் என் பர்த்தாவைப் பற்றியது தான். அவரை மீண்டும் அடைவேன் என்ற நம்பிக்கையே உள்ளத்தில் இருந்து நீங்கி விட்டது போல் இருக்கிறது. அவரை மீண்டும் அடையாவிட்டாலும், அவர் திருமுகம் காணவாவது தங்கள் ஆலோசனை வேண்டும் ஐயனே! என்று உருக்கமாகக் கேட்டாள். அம்மா! நீ பூமிதேவியின் புத்திரி, பொறுமையின் அணிகலன். அவசரப்படாதே. கணவனைப் பிரிந்த பெண்கள் அவனை மீண்டும் அடைய, இந்த மண்ணின் பெண்மணிகள் லலிதா நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். ஒன்பது இரவுகள் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு, அந்த தேவியின் சகஸ்ர (ஆயிரம்) நாமங்களைச் சொல்லி வழிபட்டால், அவள் உன்னை உன் கணவனிடம் சேர்க்க வரமருள்வாள். ஆனால்...ஒன்று... என்று இழுத்து நிறுத்தியவரின் முகத்தை ஆவலுடன் நோக்கிய சீதா, என்ன சுவாமி? விரத முறை கடுமையானதாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? எவ்வளவு கடுமையான விரதமாயினும், என் பர்த்தாவை அடைவதற்காக அனுஷ்டிக்க காத்திருக்கிறேன், என்றாள். தாயே! அப்படி ஒன்றும் கடுமையான நிபந்தனை ஏதுமில்லை. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள், எப்படிப்பட்ட துன்பமான வேளையிலும், விரதத்தை கைவிட்டு விடக்கூடாது. எவ்வளவு இடைஞ்சல் வந்தாலும், அவற்றைத் தகர்த்து, நிறைவேற்றியாக வேண்டும். விரதமிருப்பவரின் மனநிலையை உறுதிசெய்து பார்ப்பதே விரதத்தின் நோக்கம். ஒருவேளை, இடையிலேயே விரதத்தைக் கைவிட நேர்ந்தால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். நீ ஆஸ்ரமவாசியாக இருப்பதால், அத்தகைய இடைஞ்சல்கள் ஏதும் வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். இப்போது சொல்...லலிதா நோன்பைத் துவங்குகிறாயா? என்றார் வால்மீகி. சுவாமி! என் கணவரை மீண்டும் சந்திப்பதற்காக எவ்வளவு கடுமையான விரதத்தையும் ஏற்கத்தயார், என்ற சீதா, தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களை இந்தக் காட்டில் போய் எங்கே தேடுவது என யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அப்போது லவகுசர் அங்கே வந்தனர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-16
அம்மாவின் முகத்தில் ஏதோ ஒரு கேள்விக்குறி தொக்கி நிற்பதைக் கண்ட லவகுசர், அம்மா! தாங்கள் எதையோ எதிர்பார்ப்பது போல் உங்கள் முகக்குறிப்பு தெரிவிக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டுமம்மா? உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டியது எங்கள் கடமையல்லவா? தாய் ஆசைப்படும் பொருள் எதுவாகவும் இருக்கட்டுமே! அதை தமையன்மார் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது புத்திர தர்மம். கேளுங்கள் அம்மா, என்றனர். ராமாயணம் போன்ற இதிகாசங்களை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதின் அவசியத்தை இவ்விடத்தில் புரிந்து கொள்ள வேண்டும். ராமன் இருந்தாரா இல்லையா? அவர் பாலம் கட்டினாரா கட்டவில்லையா? என்பது போன்ற விமர்சனங்களை செய்வதை விட, ராமகதையில் வரும் நல்ல கருத்துக்களை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணி மிக மிக முக்கியம். தாய்க்குரிய கடமைகளை பிள்ளைகள் செய்ய வேண்டும், தந்தையின் சொல்லை மதித்து நடக்க வேண்டும், ஒருத்திக்கு ஒருவனாக வாழ வேண்டும் என்பது போன்ற உயர்ந்த தத்துவங்களை ராமசீதா, லவகுசா பாத்திரங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. பெற்றவர்களை முதியோர் இல்லங்களுக்கு தள்ளத்துடிக்கும் இளைஞர்கள் லவகுசர் என்ற சிறுவர்களின் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், நன்மையைக் கற்றுத்தருவதே இதிகாசங்களின் வேலையாகும். லவகுசர் தன் முகக்குறிப்பைக் கொண்டே, தன் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட சீதாதேவி மிகவும் மகிழ்ந்து, என் செல்வங்களே! அம்மா, லலிதா தேவி விரதம் அனுஷ்டிக்கப் போகிறேன்.
ஒன்பது இரவுகள் அம்பிகையை வழிபட வேண்டும். அதற்கான சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஆயிரம் தாமரைப்பூக்கள் தினமும் தேவைப்படுகிறது. அதனை பறிப்பது குறித்து தான் யோசிக்கிறேன், என்றாள். அப்போது குசன் தாயிடம், அம்மா! இது சாதாரண செயல். நொடிப்பொழுதில் மலர்களை தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன். லவன் உங்களுக்கு பாதுகாப்பாக இங்கே இருக்கட்டும். நான் போய் பறித்து வருகிறேன், சொல்லி விட்டு காட்டுக்குள் உள்ள தடாகங்களை நோக்கிச் சென்றான். தாயின் அருகில் இருந்த லவனை சீதாதேவி, நீ போய் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடு என அனுப்பி விட்டாள். லவன் குதிரை கட்டப்பட்டிருந்த இடத்திற்கு நண்பர்களுடன் வந்து சேர்ந்தான். எல்லோருமே வால்மீகியின் குருகுலத்து குழந்தைகள். எல்லாருமாக ஒருமித்த கருத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்நேரத்தில் அயோத்தியில் இருந்து புறப்பட்டு வந்த லட்சுமணன், குதிரை இருக்குமிடம் வந்து சேர்ந்தான். குதிரை கட்டப்பட்டிருப்பதையும் குழந்தைகள் சிலர் அதனைச் சுற்றி ஓடிவந்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ட லட்சுமணன், இங்கே வீரர்கள் யாரையும் காணவில்லையே! இந்த பிஞ்சுகளிடமா சத்ருக்கனன் தோற்றிருப்பான்! நம்ப முடியவில்லையே! எதற்கும் விசாரித்துப் பார்ப்போம் என நினைத்த லட்சுமணன், செல்வங்களே! இந்தக் குதிரையை இங்கே கட்டி வைத்தது யார்? என்றான். ஏன்...நான் தான் கட்டி வைத்தேன். நீங்கள் யார்? என்று கேட்டு முன்வந்தான் லவன். அந்தக் குழந்தையைக் கண்டதும் ஏனோ ஒரு மரியாதை பொங்கியது லட்சுமணனின் உள்ளத்தில்! தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா!
குழந்தாய்! இதென்ன விளையாட்டு! இது ஸ்ரீராமனின் அஸ்வமேத யாகக்குதிரை! இதை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? உனக்கு விளையாட வேறு குதிரைகள் கிடைக்கவில்லையா? இதோ! நான் ஏறி வந்திருக்கும் இந்தக் குதிரை உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தது. இதைக் கூட வைத்துக் கொள். அதை அவிழ்த்துக் கொண்டு போகிறேன், என்று குதிரையை லட்சுமணன் நெருங்கவும், பாய்ந்து வந்த அம்பு ஒன்று, லட்சுமணனின் காலடியில் குத்திட்டு நின்றது. மகனே! ஏன் என்னை அம்பால் அடிக்க முயன்றாய்? விபரீதத்தை சந்திக்காதே. குதிரையை அவிழ்த்து விடு. இல்லாவிட்டால்... என்று மிரட்டும் தொனியில் எச்சரித்தான். வீரனே! முதலில் நீர் யார் என்பதைச் சொல்லும்? என்றதும், நான் ஸ்ரீராமமூர்த்தியின் இளவல்...என் பெயர் லட்சுமணன், என்றதும் கலகலவென சிரித்தான் லவன். அடடா...மாவீரன் லட்சுமணனா! இதென்ன இலங்கை என்று நினைத்தாயா! அல்லது இந்திரஜித்தைப் போல உன்னிடம் சிக்கி மாளும் வீரர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நினைத்து வந்தாயா? குதிரையை அவிழ்க்க அனுமதிக்க மாட்டேன். அந்த ராமன், தன் மனைவியை காட்டுக்கு அனுப்பிவிட்டு நடத்தும் யாகம், சாஸ்திரத்துக்கு புறம்பானது. அதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டான் இந்த லவன். என் சகோதரன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான். நீயாக ஓடி விடுகிறாயா? இல்லை..அவனும், நானும் இணைந்து விடும் பாணங்களுக்கு பலியாகப் போகிறாயா? என வீராவேசமாகப் பேசினான். லட்சுமணன் இயற்கையாகவே கோபக்காரன். அவன் நாராயணனைத் தாங்கும் அனந்தன் என்ற பாம்பின் அம்சமல்லவா! பாம்பைத் தொட்டால் என்னாகும்? இவன் லட்சுமணனை சீண்டிப் பார்க்கவே, கோபம் கொப்பளித்து விட்டது. மேலும், தன் அண்ணன் ராமனைப் பழித்துப் பேசியதால், அந்தச் சிறுவனை தட்டி வைக்க வேண்டும் என்று நினைத்து, அருகில் வந்தான். மீண்டும் பறந்து வந்த அம்பு அவனை நகர விடாமல் தடுத்தது. லட்சுமணனும் பதிலுக்கு அம்பு விட ஆக்ரோஷமான சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் லட்சுமணன் தோற்றுப் போகும் நிலைக்கு வந்து விட்டான். அவனது படை வீரர்கள் லவனின் அம்புகளில் கட்டுண்டு கிடந்தனர். வேறு வழியின்றி அவன் நாகாஸ்திரம் ஒன்றை லவன் மீது எய்ய, அது அவனைக் கட்டிப் போட்டது. லவன் மயக்கமடைந்தான். உடன் வந்த சிறுவர்கள், இது கண்டு அலறி ஓடிய போது, தாமரை மலர்களை பறித்து அன்னையிடம் ஒப்படைத்து விட்டு, குசன் வந்து கொண்டிருந்தான்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-17
சகோதரனின் நிலை கண்ட அவன் கொதித்துப் போனான். நண்பர்கள் மூலம் நடந்ததை அறிந்த அவன், ஒரு சிறுவனை இவ்வாறு கட்டிப்போட வெட்கமாக இல்லையா? என லட்சுமணனிடம் கேட்டான். லட்சுமணன் அப்போதும் கூட பொறுமையாக, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் குதிரையை கட்டிப்போட்டு தர மறுத்ததால் ஏற்பட்ட விளைவே இது என்பதை என எடுத்துச் சொன்னான். தன் பங்கிற்கு குசனும், ராமபிரானின் யாகம் நியாயமற்றது என்பதையும், மனைவியின்றி அஸ்வமேத யாகம் நடத்துவதை ஒருக்காலும் ஒப்புக்கொள்ள முடியாது என்றும், முடிந்தால் தங்களை வென்று குதிரையை அவிழ்த்துச் செல்லும்படியும் பிடிவாதமாகச் சொன்னான். பின்னர் நாகாஸ்திரத்தின் பிடியில் இருந்து கருடாஸ்திரத்தை ஏவி சகோதரனை விடுவித்தான். இருவரும் இப்போது லட்சுமணனுடன் போருக்கு தயாராயினர். இரண்டு சிறுவர்களுடன் போரிட வேண்டி வந்ததே என மனம் வருந்திய லட்சுமணன், அண்ணனின் உத்தரவை நிறைவேற்ற பல அஸ்திரங்களை அந்த சிறுவர்கள் மீது எய்தான். எல்லாவற்றுக்கும் பதிலடி கொடுத்த லவகுசர், இறுதியாக லட்சுமணனையே ஆயுதம் ஏதும் இல்லாமல் செய்தனர். இந்திரஜித்தை வென்ற அந்த மாவீரன், இளம் சிறுவர்கள் முன் அவமானப்பட்டு நின்றான். இதென்ன அதிசயம் என ஆச்சரியப்பட்டு நின்ற வீரர்களையும் ஆயுதமின்றி நிர்மூலமாக்கினர் லவகுசர். குனிந்த தலையுடன் லட்சுமணன் நிற்க, போர்க்களத்தில் இருந்து ஒருவன் மட்டும் தப்பித்து ராமபிரானிடம் ஓடினான்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி! ஒரு அதிசயத்தைக் கேட்டீர்களா! பத்து தலை ராவணனின் மகனும், யாராலும் வெல்ல முடியாத சக்தியுடையவனுமான இந்திரஜித்தின் மகனையே ஒரு அம்பால் தலையறுத்த நம் மாவீரர் லட்சுமணனை, சத்ருக்கனரை வென்ற அதே வீரச்சிறுவர்கள் வென்றார்கள் ஐயனே என்றான். எல்லாம் அறிந்த அந்த நாராயண மூர்த்தியின் அவதாரமான ராமபிரான், அப்படியா! நடக்க முடியாதது நடந்து விட்டதா? ஆஹா...அப்படியானால், அவர்களை வெற்றி கொள்ள யாருமே இல்லையா? சரி... ராமாஸ்திரம் ஒன்றே அவர்களை அடக்கும் சக்தியுடையது என்றால், அதை விடுப்பதைத் தவிர வேறென்ன வழி! நானே அவர்களை அடக்கி, குதிரையைக் கொண்டு வருகிறேன், என அவனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர் மிகுந்த ஆனந்தத்துடன் இருந்தனர். வால்மீகி முனிவர் தங்களுக்குப் போதித்த ராமாயண சரித்திரத்தில், லட்சுமணனின் திவ்ய பங்கு குறித்து குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். வெல்ல முடியாத இந்திரஜித்தை வென்ற லட்சுமணனே தங்களிடம் வீழ்ந்ததை எண்ணி மகிழ்ச்சியில் மூழ்கிப் போயினர். நண்பர்களின் நிலையை சொல்லவும் வேண்டாம். இங்கே இப்படியிருக்க, சீதாபிராட்டி லலிதா பூஜையைத் துவங்கினாள். ஒவ்வொரு நாளும் தாமரை மலர்களை மகன் கொண்டு வந்து கொடுக்க பூஜை அமர்க்களமாக நிறைவேறிக் கொண்டிருந்தது. ஒன்பது நாள் பூஜையில் எட்டுநாட்கள் கடந்து விட்டன.
தன் கணவனை அடைவது உறுதி என்ற நம்பிக்கையும் அவள் மனதில் தளிர்விட்டது. ஆனால், சோதனைகளையே சந்திக்கப் பிறந்தவள் அல்லவா அவள்! இந்த உலகத்தில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத சந்தேகம் என்ற சோதனையையே அனுபவித்துக் கொண்டிருப்பவள் அல்லவா அந்த நல்லவள்! கணவன் என்ன தான் நல்லவன் என்றாலும், ஊரார் சொல்லுக்கு அஞ்சி, காட்டுக்கு அனுப்பி விட்டானே! இது ஒன்று போதாதா! ஊரார் தன்னை பழித்துத் தூற்ற! கட்டியவனே ஒதுக்கி விட்டான் என்றால், அவளிடம் ஏதோ தவறு இருக்கத்தான் வேண்டும் என்று நல்லவர்கள் கூட தன்னைப் பற்றி எள்ளி நகையாடுவார்களே! இப்படி இக்கட்டான சூழ்நிலையில் கண்ணீரே வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த ஜனககுமாரி...ராஜா வீட்டு குழந்தையான சீதா சற்றே மகிழ்ச்சியில் மூழ்கினாள் என்று தான் சொல்ல வேண்டும். ராமபிரான் அப்போது உப்பரிகையில் உலவிக் கொண்டிருந்தார். தான் நாராயண மூர்த்தி என்பதும், உலகில் தர்மத்தை நிலைநிறுத்த வந்ததையும், மீண்டும் வைகுண்டம் செல்லும் நாள் நெருங்குவதையும் உணர்ந்தார். ஆம்...லவகுசர் யாரென்பதை ஊராருக்கு அறிவித்தாக வேண்டும். அவர்களிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும், உலகையே காக்கும் தீரர்கள் அவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, என் தேவியின் கற்பின் மகிமையை அயோத்தி மக்கள் அறியச் செய்ய வேண்டும். சீதாதேவியை மீண்டும் அயோத்திக்கு வரவழைக்க வேண்டும். அவளது கற்பின் திறன் முன்னால் அருந்தததியின் கற்பும் வெட்கப்படும் என்பது எல்லாருக்கும் புலப்பட வேண்டும். இலங்கையில் எப்படி தீமூட்டி அங்கிருந்தவர்கள் சீதாவின் கற்புநெறியை உணர்ந்தார்களோ, அதே போல், அயோத்தி மக்களும் அவள் கற்புக்கரசி என்பதை மீண்டும் அவள் அனலுக்குள் மூழ்கி வெளிவருவதைக் காண வேண்டும், என முடிவெடுத்தார். பின்னர் ஒரு தூதனை அழைத்தார். தூதனே! நீ உடனடியாக வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்குச் செல். அங்கே, சீதாபிராட்டி தங்கியிருக்கிறாள். அவளை அழைத்துக் கொண்டு, அயோத்திக்கு வரும்படி நான் சொன்னதாக முனிவரிடம் சொல், என்றார். தூதன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். ஆம்...லட்சுமி மீண்டும் அயோத்தியில் கால் பதிக்கப் போகிறாள். ராமராஜ்யம் இன்னும் மேலோங்கி விளங்கப்போகிறது. உலகம் செழிக்கப் போகிறது என எண்ணியபடியே குதிரை ஒன்றில் ஏறி வால்மீகி ஆஸ்ரமம் நோக்கி விரைந்தான். அப்போது அஸ்தமன நேரம். ஆஹா...மீண்டும் சீதாபிராட்டி தீயில் குதிக்கப் போகிறாள். அவள் உடலை அக்னி சுடுவான்! இந்தக் கொடுமையைக் காணும் சக்தி எனக்கில்லை என்றபடியே சூரியபகவான் செவ்வானில் மறைந்து போனார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-18
ராமபிரானால் அனுப்பப்பட்ட தூதன், வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து, சீதாதேவியும், தாங்களும் அயோத்திக்கு எழுந்தருள வேண்டும் என ஸ்ரீராமன் என்னிடம் தகவல் சொல்லி அனுப்பியுள்ளார், என்றான். ஒரு மகாசரிதம் முடியப்போகிறது என்ற உணர்வு வால்மீகியை ஒருபுறம் வருந்தச் செய்தாலும், ஸ்ரீமன் நாராயணனும், அவரது தேவியான லட்சுமியும் பூலோகத்தில் படும் கஷ்டம் போதும் என்ற உணர்வு மேலோங்கி, அவர்களை வைகுண்டம் அனுப்பி வைக்க தானும் ஒரு காரணியாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியும் அடைந்தார். தூதனிடம், தூதனே! ஸ்ரீசீதாபிராட்டியார், தன் மணாளனை மீண்டும் அடைய வேண்டி, லலிதா விரதத்தை துவங்கியிருக்கிறாள். ஒன்பது நாட்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விரதம் முடிந்ததும், அவர்கள் நிச்சயம் ஒன்று சேர்வார்கள். ஸ்ரீராமச்சந்திரனிடம் இன்னும் சில நாட்கள் பொறுத்து நாங்கள் வருவதாகச் சொல்லி விடு, என்றார். தூதனும் சிரம்தாழ்த்தி விடை பெற்றான். லலிதா விரதம் எனப்படும் நவநாள் விரதம் வெற்றிகரமாக நிறைவேறியது. அந்த அம்பிகை சீதாபிராட்டிக்கு அருள்பாலித்தாள். சீதா! உன் கணவனை நீ காண்பாய். ஆனால், நீ யார் என்பதை உணர்ந்து கொள். பூமியில் பிறப்பது தெய்வாம்சமாயினும், அதற்கும் முடிவு உண்டு என்பதை நீ அறியாமல் இல்லை. நீ பூமாதேவி பெற்றெடுத்த மகள். உன் கணவனைக் கண்டு ஆசிபெறு. அயோத்தி மக்களின் முன்னால் உன் கற்புத்திறனை நிரூபி. பின்னர், உன்னைப் பெற்ற பூமாதேவியை அடைந்து விடுவாய். இந்த உலகம் உள்ளளவும் உன்னை வணங்கும், என ஆசியருளினாள். சீதாதேவி அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
அவள், வால்மீகி முனிவருடன் அயோத்திக்கு புறப்பட்டாள். சீதாதேவி வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்த அயோத்திமக்கள் அவள் வரப்போகிறாள் எனத் தெரிந்ததும், ஆனந்தமாக வரவேற்பளிக்க காத்திருந்தனர். ஸ்ரீராமபிரான் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அந்த இனிய வேளையில், சீதாதேவியும், வால்மீகி முனிவரும் அரண்மனைக்கு வந்து கொண்டிருந்தனர். மெலிந்த தேகத்துடன் தலை குனிந்து வந்த சீதாவைப் பார்த்த அயோத்தி நகரப் பெண்கள் கண்ணீர் வடித்தனர். ஐயையோ! அரசனுக்கு மகளாகப் பிறந்து இவள் என்ன சுகத்தைக் கண்டாள்! ஜனகமகாராஜா கூட இவளது துன்பம் கண்டு, ராமபிரானின் குடும்பத்தினரிடம் எதுவுமே பேசவில்லையே! பெண் பிள்ளையைத் திருமணம் செய்து கொடுத்து விட்டால், அவளுக்கு வரும் இன்ப துன்பங்களை அவளே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கணத்தை மிகச்சரியாக கடைபிடிக்கிறார் என்றாலும், ஊர் மக்களில் ஒரு சிலர் சந்தேகப்பட்டார்களே என்பதற்காக, அவளைக் காட்டிற்கு அனுப்பிய தங்கள் மன்னனை தட்டிக் கேட்கவோ, அறிவுரை சொல்லவோ செய்திருக்கலாமே! அம்மா சீதா! நீ எப்படி மெலிந்து விட்டாய்! எங்கள் ஊருக்கு வரும் போது எவ்வளவு அழகாக இருந்தாய். உன்னைக் காணவே மனம் பதைக்கிறதே! என வாய் விட்டுச் சொல்லியபடியே, அவளது துயர முகம் காண சகியாமல் கண்களை மூடிக் கொண்டனர். பெண்ணுக்கு தானே தெரியும் இன்னொரு பெண் படும் துயரம்! வயதில் மூத்த சில பெண்கள், நாங்களும் கஷ்டம் அனுபவிக்காமல் இல்லை! பெண்ணாகப் பிறந்தாலே கஷ்டம் தான். ஆனால், இவளைப் போல், திருமணம் முடிந்த நாளில் இருந்து கஷ்டப்படும் ஒரு பெண்ணைப் பார்த்ததில்லை! இவளளவுக்கு எங்களில் யாரும் துன்பம் அனுபவிக்கவும் இல்லை, என வருந்தி கண்ணீர் விட்டனர்.
அரண்மனைக்குள் நுழைந்த சீதாபிராட்டி ராமபிரான் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை. இத்தனை நாள் கழித்து மணாளனைப் பார்க்கிறோம், ஆசையுடன் அந்த கார்மேக வண்ணனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளினாலும், அவரது உத்தரவு கிடைக்கவில்லையே! அது மட்டுமா! தெய்வமாய் இருந்தாலும், மானிடப்பிறவி எடுத்து விட்டாளே! ஊராரின் சந்தேகத்துக்காக தன் வாழ்வை பலி கொடுத்தானே என்ற உணர்வும் உந்தி நின்றது. உணர்ச்சிப்பிழம்பாய் நின்ற அவள், அத்தனையையும் உள்ளுக்குள் அடக்கியதன் விளைவு, கண்ணீராகக் கொட்டியது. பெண்கள் எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். எதையும் சகிக்கும் வல்லமை கொண்டவர்கள். இருந்தாலும், உணர்ச்சி மேலிட்டு விட்டால், கண்ணீர் சிந்துவதைத் தவிர வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. எவ்வளவு தைரியசாலி பெண்ணாயினும், கண்ணீர் மட்டும் என்னவோ அவளது உடைமையாகத்தான் இருக்கிறது! சீதாதேவியும் கண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்தாள். மகளின் கண்ணீர் துளிகளை பூமிமாதா காணச்சகியாமல், தனக்குள் உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அப்போது, சீதாபிராட்டி வெள்ளை ஆடை அணிந்திருந்தாள். கணவனைப் பிரிந்தவர்களுக்கு வெள்ளை ஆடை தகுந்த பாதுகாப்பளிக்கும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தும். வளைந்த மேனி நிமிரவில்லை. ராமனைக் காணும் ஆவல் உந்த கண்கள் மேலெழும்பத் துடித்தது. இருப்பினும் அடக்கமாக நின்றாள். ராமபிரான் விரிகின்ற ஒளிக்கதிர்களையுடைய சூரியனின் ஒளிக்கற்றைகளைப் போல் ஒளிவீசும் நவரத்தின மாலைகளையணிந்து சிம்மாசனத்தில் இருந்தார். வால்மீகியைக் கண்டதும் எழுந்து வந்து நமஸ்காரம் செய்தார். அவரது பாதங்களில் மலர் தூவி அர்ச்சித்தார். அவரைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று ஒரு ஆசனத்தில் அமர வைத்தார். வீட்டிற்கு பெரியவர்கள் வந்தால், இளையவர்கள் அவர்களை இப்படித்தான் உபசரிக்க வேண்டும். பெருசு வந்துட்டியா போன்ற மரியாதைக் குறைவான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தக் கூடாது. சீதாதேவியிடம் ராமபிரான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளும் அமைதியாக நிற்க, இந்த இக்கட்டான மவுனச் சூழ்நிலையை வால்மீகி முனிவர் தான் கலைத்தார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-19
ஸ்ரீராமா! அமைதி வாழ்க்கைக்கு அவசியமான ஒன்று தான். ஆனால், சில சமயங்களில் அந்த அமைதியே பலரது வாழ்வை முடித்து விடுகிறது. பேச வேண்டிய நேரத்தில், தேவையானதை, அளவோடு பேச வேண்டும். அந்த பேச்சு உயிரைக் காப்பாற்றும் சக்தியுடையது. நீ பேசாமல் இருந்தால், சீதாதேவி மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் ருசுவானது போல் ஆகிவிடும். அதன் பிறகு அவள் உயிர் வாழ்வாளா? அன்புள்ளவனே! உனக்குத் தெரியாதா? உன் மனைவியைப் பற்றி! அவளது கற்பின் தீவிரத்தை இலங்கைத் தீயிலேயே உணர்ந்தவன் நீ! அந்த அக்னி பகவானே அந்த தேவியின் கற்புத்தீயின் உக்கிரம் தாளாமல், ஓங்கி எரிந்தவன் தாழப் பணிந்தான். ஸ்ரீசீதாவின் திருவடியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி எண்ணி மனம் மகிழ்ந்தான். அயோத்தியின் ராஜாதி ராஜனே! சீதையின் கற்புநெறியை நீ மட்டுமல்ல! நானும் அறிவேன், நல்லவர் அனைவரும் அறிவர், என்றவர், மேலும் தொடர்ந்தார். பாவமே இல்லாத ராமனே! உன் காதலியின் கற்புத்திறனை பூமியிலுள்ளோர் மட்டுமல்ல! கற்புக்கே இலக்கணமாகத் திகழும் விண்ணவப் பெண்மணியான அருந்ததியும் கூட ஏற்றுக் கொள்வாள். அவள் எனது ஆஸ்ரமத்திலேயே இத்தனை நாளும் தங்கியிருந்தாள். அப்போது அவளைப் பற்றி நான் மிகத்தெளிவாக அறிந்து கொண்டேன். உன்னைத் தவிர அவளுக்கு வேறு எண்ணமே இருந்ததில்லை. உன்னை அடைவதற்காக லலிதா விரதமும் அனுஷ்டித்து, இப்போது அந்த அம்பிகையின் அருளால் உன் முன் வந்திருக்கிறாள். அவளை நீ ஏற்பதே முறை, என்றார்.
சீதாதேவியோ எவ்வித தன்னிலை விளக்கமும் அளிக்கவில்லை. ராமபிரான் இப்போது தான் தன் மவுனத்தைக் கலைத்தார். முனிவர் பெருமானே! தாங்கள் சொன்னது என் மனைவி கற்புநெறி தவறாதவள் என்பதை வானவர்களும், நானும் முன்பேயே அறிவோம். ஆனால், கடல்சூழ்ந்த இந்த உலகிலுள்ள மக்களில் ஒரு பகுதியினருக்கு அவளது கற்பு நெறி மீது ஏற்பட்ட சந்தேகம் நீங்கினால் தான், நான் அறிந்ததை இந்த உலகமும் அறியும். எனவே, சீதாதேவி மீண்டும் தன் கற்புத்திறனை இந்த பூவுலகிலுள்ளோர் அறியும்படியாக நிரூபிக்க வேண்டும். சீதா மீண்டும் நெருப்பில் இறங்கியாக வேண்டும். அப்படி நிரூபித்தால் தான், நான் அவளை ஏற்க முடியும், என்றார். தன் வாழ்வில் பலமுறை நொறுங்கிப்போயிருக்கும் சீதாதேவி, இப்போது தவிடு பொடியாகி விட்டாள். கட்டிய கணவர் என்னை நம்புகிறாராம்! விண்ணுலக தேவர்கள் என்னை நம்புகிறார்களாம்! இதோ, இங்கிருக்கும் வால்மீகி முனிவர் என் கற்புத்திறன் அருந்ததியை விட உயர்ந்தது என்று சான்று வழங்கியிருக்கிறாராம்! ஆனாலும், ஊரார் சொல்வது தான் பெரிதாகப் போய் விட்டதாம்! இலங்கையில் அத்தனை பேர் முன்னிலையில், வானரங்கள் முன்னிலையில் என்னை சந்தேகம் கொண்டு, தீயில் இறங்கச்சொன்னார். நான் என் கற்புத்திறனை நிரூபித்து விட்டாலும், என் உடலை நெருப்பு சுடாவிட்டாலும், என் மனம் சுட்டதே! அந்த மனச்சூடு தணியும் முன்பு, மீண்டும் ஒருமுறை யாரோ சொன்னார்கள் என்பதற்காக, ஒன்றுமே சொல்லாமல், காட்டுக்கு விரட்டி விட்டார். இப்போது, மீண்டும் தீயில் குதி, என்கிறார். நாளை வேறு யாராவது சந்தேகப்பட்டால், மீண்டும் தீக்குள் குதிக்க வேண்டும்! இதை விட நான் இறந்தே போகலாம். நான் இந்த பூமியில் வாழ விரும்ப வில்லை, அவளது மனக்குமுறல், அவளைப் பெற்ற தாயான பூமாதேவியை உருக்கி விட்டது.
(சீதாதேவியை ஜனகமகாராஜா, தான் செய்ய இருந்த யாகநிலத்தை பொன் ஏர் கொண்டு உழுதபோது, கிடைத்தவள் என்பதால், அவள் பூமாதேவியின் மகளாகிறாள். ஜனகரும், அவர் மனைவி சுநைனாவுமே சீதாவை வளர்த்த பெற்றோர் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்) இருப்பினும், பொறுமையின் சின்னமான அவள், என்ன தான் நடக்கிறது என கண்ணீருடன் கவனித்துக் கொண்டிருந்தாள். சீதாதேவியின் எண்ண அலைகள் விரிந்தன. என் அன்பரே! கொஞ்சம் சிந்தித்துப் பாரும். தாம்பத்ய வாழ்வு என்பது இன்பம் என்ற மலர்களையும், துன்பம் என்ற முள்மரங்களையும் சுமந்து வரும் ஆறு போன்றது. நீர் என்னை மகிழ்ந்து பாராட்டியிருக்கிறீர்! நான் இன்பமடைந்திருக்கிறேன். உமக்கு பட்டாபிஷேகம் நிறுத்தப்பட்டு, காட்டுக்கு புறப்பட்ட போது, உம்மோடு வந்து சிரமப்பட்டாலும், அதிலும் இன்பமே அடைந்தேன். கடும் கோபத்துடன் நீர் என்னுடன் இலங்கையில் என் கற்பு பற்றி சந்தேகித்துப் பேசிய போது கூட, நான் கோபித்தாலும், அதிலுள்ள நியாயத்தை ஏற்று தீக்குளித்தேன். ஆனால், திரும்பத்திரும்ப அதையே செய்யச் சொன்னால்...நான் என்ன பொம்மலாட்ட பொம்மையா! ஆட்டியபடியெல்லாம் ஆடுவதற்கு! ஊர் சொல்லட்டுமே! உம் மனைவியின் கற்பில் சந்தேகமிருக்கிறது என்று! நீர் என்ன செய்திருக்க வேண்டும்! என் மனைவியின் கற்பில் குறை கண்டவர்களை வெட்டிச்சாய்ப்பேன் எனச் சொல்லி அதைச் செய்திருக்க வேண்டாமா! அப்படி செய்திருந்தால், யாராவது வாயைத் திறந்திருப்பார்களா! இந்தக்கதி எனக்கு வந்திருக்குமா? என்னை காட்டுக்கு அனுப்பினால், ஊரார் என்ன நினைப்பார்கள்? சீதா தவறு செய்திருக்கிறாள் போலிருக்கிறது, அதனால் தான் நம் மன்னன் அவளைக் காட்டுக்கு அனுப்பியிருக்கிறார் என்று தானே நினைப்பார்கள்! என் மீது அபிமானம் கொண்டவர்கள் கூட சந்தேகிக்கத்தானே செய்வார்கள்! ராமா, நீர் செய்வது எந்த வகையில் முறை? என குமுறியவள், சிவபெருமான் நெற்றிக்கண்ணை மன்மதன் மீது எப்படி பிரயோகித்தாரோ, அதே வேகத்தில், அதே கோபத்தில், படபடவென வார்த்தைகளை உதிர்த்தாள். நெஞ்சு கொதிக்கும் போது வார்த்தைகளின் வேகம், வில்லில் இருந்து விடுபட்ட அம்பைப் போல் இருக்கும். வால்மீகி முனிவரே! என் கணவரே சொல்லி விட்டார், இன்னொரு முறை தீயில் இறங்கு என்று. அவர் சொன்ன பிறகும் மறுத்துப் பேச எனக்கென்ன அதிகாரமிருக்கிறது? கிண்ணத்திலுள்ள நஞ்சை வாயருகே கொண்டு சென்றால், அது உயிரைக் கொல்லாது. அதையே உள்ளிறக்கி விட்டால், உயிர் பறந்து விடும். அதுபோல், மக்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசினார்கள் என்றால், அதுபற்றி நான் கவலை கொண்டதில்லை, கொள்ளப்போவதுமில்லை. ஆனால், உள்ளிறங்கும் விஷம் போல, என் காதலரே என்னைத் தீயில் தள்ளத்துடிக்கிறாரே! அதுதான் என்னைக் கொல்கிறது, என ஆவேசத்துடன் கண்ணீருடனும் கதறினாள். தன் மகளின் நிலை பொறுக்காத பூமாதேவி, கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். பூமியில் சிறு அதிர்வு ஏற்பட்டதை அந்த சபையிலுள்ளோர் உணர்ந்தனர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-20
ராமபிரானோ தன் முடிவில் உறுதியாக இருந்து விட்டார். அப்போது சீதாதேவி, என் கணவர் என்னை தீயில் இறங்கு என சொல்வது மட்டுமல்ல, இதுவரை அவர் எனக்குச் செய்த எல்லாமே எனக்கு செய்யப்பட்ட நன்மை என்றே கருதுகிறேன். ஆனாலும், அவர் என் கற்பின் மீது ஊரார் சொல்லுக்காக நிரூபிக்கத் துடிப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. எனவே, எங்கிருந்து பிறந்தேனோ, எந்தத்தாய் என்னைப் பெற்றாளோ, எல்லோருக்கும் பெற்ற தாய் யாராக இருந்தாலும், முடிவில் எந்தத்தாயிடம் அடைக்கலமாவார்களோ அந்தத்தாயிடமே செல்கிறேன், என்றவள், அம்மா! பூமி மாதா! நல்வினை தீவினை ஆகியவற்றை அறுத்தெறிந்தவரும், தவங்கள் பல இயற்றியவருமான விஸ்வாமித்திர முனிவர், இதோ இங்கே வீற்றிருக்கிறாரே தசரத புத்திரர் ஸ்ரீராமர்...இவரை எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அந்த முனிவர் செய்த யாகத்திற்கு இடையூறு செய்த அரக்கர்களை ஒழித்து விட்டு வந்த மாவீரனான இவர், என் தந்தை கொடுத்த சிவதனுசு என்னும் வில்லை ஒடித்தார். யாராலும் தூக்கக்கூட முடியாத அந்த வில்லை ஒடித்ததால், பலசாலியான இவருக்கு என்னை என் தந்தை ஜனகர் மணம் செய்து வைத்தார். இந்த கரிய நிறத்தானை, கார்மேக வண்ணனைத் தவிர வேறு எந்த மன்னனையும் என் திருமணத்துக்கு முன்போ, பின்போ நான் மனத்தாலும் வாக்காலும் நினைக்கவில்லை என்பதும், அவர்களைப் பற்றி பேசியது கூட இல்லை என்பதும் உண்மையானால், நிலமகளே! என் தாயே! நீ வருக! என்னை உன்னிடமே மீண்டும் எடுத்துச் செல், என்றாள் ஆவேசத்துடன்.
கற்பு நிறைந்த மங்கை, பழி போடப்பட்ட மங்கை, உலகிலேயே துன்பங்களை அதிகம் அனுபவித்த மங்கை...கட்டளை இட்டிருக்கிறாள். எந்த ஒரு தேசத்தில் பெண்கள் துன்பப்படுத்தப்படுகிறார்களோ, அந்த நாட்டின் நிம்மதி முற்றிலும் குலைந்து போய் விடும் என்பதே சரித்திரம் கூறும் உண்மை. சீதாதேவி தொடர்ந்தாள். அம்மா! என்னைப் பெற்ற பூமாதேவியே! உலகிலுள்ளோரின் வணக்கத்துக்கு உரியவளே! என்னை வருந்திப் பெற்றவளே! என்னுடைய கற்பின் மீது என் கணவர் ஊராருக்காக சந்தேகப்படுகிறார். ஆனால், என் கற்பும், கற்புக்கரசியான அருந்ததியின் கற்பும் ஒரே தன்மையுடையது என்பது உண்மையானால், நிலத்தை பிளந்து கொண்டு எழுந்து வா, என்று ஆணை பிறப்பிக்கும் குரலில், அயோத்தியே அதிரும் வகையில் அரற்றினாள். பூமியிலுள்ள மற்ற தாய்மார் பெற்ற பிள்ளைகளுக்கு துன்பம் ஏற்பட்டாலே, பூகம்பத்தை உண்டாக்கி அநியாயக்காரர்களையும், அக்கிரமக்காரர்களையும், முன்ஜென்மத்தில் பாவங்கள் பல புரிந்து, தனக்கு பாரமாக இருப்பவர்களையும் அழித்து விடும் பூமிமாதா, தான் பெற்ற பிள்ளைக்காக இத்தனை நாளும் பொறுமை காத்தாள். ஆனால், தன் மகளின் பெண்மைக்கே களங்கம் வந்தால் விட்டு வைப்பாளா என்ன! ஆதிசேஷனின் ஆயிரம் தலைகளால் தாங்கப்படுபவளும், நிலை பெற்ற கற்பினையுடையவளும், உலகத்து செல்வத்தையெல்லாம் தன் மேனியில் கொண்டவளும், மலைகள் எனப்படும் மார்புகளைத் தாங்கியவளும், மேகம் என்ற கூந்தலை உடையவளும், அலைகடல்களை ஆடையாக உடுத்தியவளுமான பூமாதேவி அதிர்ந்தாள். உலகமே நடுங்கியது.
பூமி விரிந்தது. அம்மா! சீதா! அழாதே மகளே! உன் கற்பே உலகில் சிறந்தது. அருந்ததியின் கற்பை விட உன் கற்பே உயர்ந்தது. உலகம் உள்ளவரை சீதையின் கற்புத்திறன் பேசப்படும். ஒருத்தி மகனாய் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தானே அந்த நாராயணன்...அவனே ராமனாய் இங்கே அமர்ந்திருக்கிறான். அவனுக்கு மட்டுமே நீ சொந்தமாக இருந்தாய் மகளே! இனியும் நீ இந்த பூமியின் மேல் வாழத் தேவையில்லை. நீ நாராயணனின் துணைவி என்பதை நினைவுபடுத்துகிறேன். பூமியின் உன் காலம் முடிந்து விட்டது. நீ என்னோடு வா மகளே! என கை நீட்டி அழைத்தாள். பெற்றவளின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் சீதா. அவளை அள்ளி அணைத்தபடியே, மீண்டும் நிலம் பிளக்க, ராமனிடம் உத்தரவு கூட பெறாமல், தன் மகளை உள்ளே அழைத்துச் சென்று விட்டாள் அந்தத்தாய். நல்லவர்கள் பூமியில் நீண்ட காலம் வாழ்வதில்லை என அரற்றுகிறோம். நல்லவனுக்கு பூமியில் என்ன வேலை? அவன் வைகுண்டத்திலோ, பாதாள லோகத்திலோ வாழ வேண்டியவன் அல்லவா! பூமாதேவி என்ற தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டியவன் இங்கேயிருந்து ஏன் அவஸ்தைப்பட வேண்டும் என்று தான் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது போலும்! ராமபிரான் ஆத்திரமடைந்தார். இந்தச் சபையில் கூடியிருக்கும் அயோத்தி மாநகர மக்களே! சீதையின் கற்புத்திறனை புரிந்து கொண்டீர்களா? அவள் களங்கமற்றவள் என்பதை நான் அறிவேன். நான் இதுவரை யாருக்கும் எந்தத்தீமையும் செய்தது இல்லை. பிறருக்கு நன்மை செய்வதே என் வாழ்வின் குறிக்கோளாக இருந்திருக்கிறது. ஆனால், நான் அனுபவித்ததோ கடும் சோதனைகளைத் தான். இப்போது என்ன நடந்து விட்டது? ஊரார் சொல்லை மறுக்க, அவளைத் தீக்குளிக்கச் சொன்னேன், அவளோ, தன் தாயை அழைத்தாள். அந்தத்தாயும் வந்தாள், மகளை அழைத்துக் கொண்டு போய் விட்டாள். இது என்ன நீதி? இந்த பூமாதேவி எப்படிப்பட்டவள் என்பது எனக்குத் தெரியாதா? என்றவர் பூமாதேவியை சிறுமைப்படுத்தும் வார்த்தைகளை பேசினார். அகத்திய முனிவரால் ஒரு உள்ளங்கையால் அள்ளிக் குடிக்கப்பெற்ற மிகச் சாதாரணமான கடல் அலைகளை சுமப்பவள், குளிர்ந்த பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமான் பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவத்திற்கு விமோசனம் தந்த திருமால், வாமன அவதாரமெடுத்து வந்த போது, அவனது இரண்டே அடிகளுக்குள் அடைக்கலமானது, பொன்னாலும், மணியாலும் தன் முடிகளை அலங்கரித்துக் கொண்ட ஆதிசேஷன் என்ற பாம்பால் தாங்கப்படுவது, ஒரு காலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தில் இந்த பூமாதேவி மூழ்கிக் கிடந்த போது, திருமால் வராக அவதாரமெடுத்து தன் கொம்பின் மீது தாங்கி வந்தது...இப்படிப்பட்ட பூமாதேவிக்கு என் மனைவியை, என் கண் முன்னாலேயே தூக்கிச் செல்லும் தைரியம் எங்கிருந்து வந்தது? ராமபிரான் தன் ஆசனத்தில் இருந்து கொதித்தெழுந்தார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-21
ஏ பூமாதேவியே! உன் மேலுள்ள கடல் எனது ஒரு அதட்டலுக்கு கட்டுப்படும் தன்மையுடையது. சீதையை மீட்க நான் இலங்கை சென்ற போது, அந்தக் கடல் வழிமறித்தது. நான் வில்லையும், அம்பையும் எடுத்தவுடனேயே பணிந்து வழிவிட்டது. அந்தச் சிறுமைக்குரிய கடலுக்குள் என் மனைவியை ஒளித்து வைத்திருக்கிறாயா? உன்னை ஒரே மிதியில், பாதாள லோகத்துக்குள் அழுத்தி விடுவேன், என்று காலை தூக்கினார். ஏதோ நினைவு வந்தவராக, ஏ பூமாதேவி, தப்பி விட்டாய். உன்னுள்ளே என் சீதாவை ஒளித்து வைத்திருக்கிறாய். நான் உன்னை அழுத்தினால், அந்த அழுத்தலில் அவளுக்கும் வலியெடுக்கும். அதனால், உன்னை மிதிக்க முடியாதவனாக இருக்கிறேன், எனச் சொல்லி காலை கீழிறக்கி, ஏ பூமாதேவியே! உன்னை நூறு துண்டுகளாகப் பிளக்கப் போகிறேன். என் மனைவியை மீட்கப் போகிறேன், என்று வில்லை எடுத்த வேளையில், நான்முகக் கடவுளான பிரம்மா, தன் தாமரை மலர் இருக்கையில் அங்கே எழுந்தருளினார். ஸ்ரீராமபிரானை வணங்கினார். ஐயனே! வணக்கம். ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய பஞ்சபூதங்களாலான இந்த உலகம் என்கிற பானகத்தை விரும்பி அருந்திவிட்டு, ஆலிலைத் தளிரில் துயில் கொண்டவனே! மூவுலகையும் உன் திருவடியில் இருந்து படைத்தவனே! உயர்ந்தவனே! ஒப்பற்றவனே! ஐயனே! சாந்தம் கொள். உன்னிடம் சில விபரங்களைச் சொல்லவே நான் இங்கு வந்தேன். மானிடப்பிறவிகளில் நீ உயர்ந்தவன். உன் உருவம் இங்கு மட்டுமல்ல, வானத்தைப் பிளந்து கொண்டு அவ்வுலகத்திலும் ஆக்கிரமித்துள்ளது. (வானவரும் வணங்கும் மனிதன் ராமன் என குறிப்பிடுகிறார்).
இந்த உலகமே உன்னுடையது. இந்த உலகம் உன் வயிற்றுக்குள் அடங்கியுள்ளது. நீ ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம் என்பதை மறந்து விட்டாயா? நிலையில்லாத உடலுடன் கூடிய பல உயிர்கள் உன் வயிற்றில் பிறந்து அங்கேயே இறக்கின்றன. உயிர்களைப் படைப்பது உன் வயிற்றிலுள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் என் பணி என்பதை நான் ஏற்க மாட்டேன். அது உன் சக்தியைக் கொண்டு என்னால் நிகழ்த்தப்படுகிறது. எனவே படைப்பின் காரணகர்த்தா நீ தானே ஒழிய நானில்லை, என்றவர் மேலும் தொடர்ந்தார். ஸ்ரீராமா! நினைவுக்கு வருகிறதா! புலத்தியன் என்ற முனிவனின் மகனான விச்சிரவசு என்பவன் பத்து தலைகளையுடைய ராவணன் என்ற அரக்க பிள்ளையைப் பெற்றான். அவன் தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் நாராயணனாகிய உன்னை வேண்ட, அவனை அழிப்பதற்காக நீ பூலோகத்தில் மானிடனாய் பிறந்தாய். அவனை அழித்தும் விட்டாய். பூலோகத்திற்கு நீ வந்த பணி முடிந்து விட்டது. நாராயணா! நீ காலை உயர்த்தி மிதிக்க முயன்றாயே பூமி மாதா. இவள் யாரென்பது உனக்கு நினைவில்லையா? இவளும் உன்னால் படைக்கப்பட்டவள் தான். உன்னால், உருவாக்கப்பட்டவளை நீயே அழிக்க முயல்கிறாயே! நீ காக்கும் கடவுள் என்பதை நினைவில் கொள். உன்னால், உருவாக்கப்பட்ட இந்த பூமிக்குள், உனக்கு கட்டுப்பட்ட இந்த பூமிக்குள் தான் உன் காதலி சீதா தோன்றினாள். வந்த இடத்திற்கே சென்று விட்டாள். மானிடராக பூமியில் பிறப்பவர்கள் மண்ணிற்குள் செல்ல வேண்டும் என்பதும் நீ வகுத்த நியதி தானே! அதுவே அவளுக்கும் நிகழ்ந்தது. மண்ணில் ஒருமுறை மறைந்தவர்களை மீண்டும் மீட்க முடியாது என்பது உன்னால் இடப்பட்ட சட்டம். இனி அவளை நீ வைகுண்டத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
வில்லேந்திய ராமா! பூமியில் மானிடராய் பிறந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமும் பற்றும் வைப்பது இயற்கையே. தாய் மகன் மீதும், கணவன் மனைவி மீதும் வைக்கும் பற்றே இவ்வாறு கோபத்தை உண்டாக்குகிறது. பூமியில் பிறப்பவர்களை யார் மீதும் பற்று வைக்காதே, பாசம் வைக்காதே என்று தானே அறநூல்களும், மகான்களும் சொல்கிறார்கள். பற்றும் பாசமுமே கோபத்தை உண்டாக்குகின்றன. தன்னோடு நெருங்கி இருந்தவன் மறைந்து போனால், கடவுளே! இது உனக்கு அடுக்குமா என கேட்பது, உலக வாழ்க்கை நிலையானது என்று நினைக்கும் அஞ்ஞானவாதிகளுக்கு சரியானதாகத் தோன்றலாம். ஆனால், நீயே இறைவன், நீ மானிடனாய் பிறப்பெடுத்திருக்கிறாய். அவ்வளவே. உனக்கேது பற்றும், பாசமும். லட்சுமிபிராட்டியே சீதையாக இவ்வுலகில் பிறந்தாள். உனக்கு முன்னதாக வைகுண்டத்தை அடைந்து விட்டாள். அங்கு போய் அவளைச் சேர்ந்து கொள், என நினைவூட்டினார். ஐயனே! பூலோக வாழ்வு நிலையற்றது. வைகுண்டமே நிலையானது. அங்கு நன்மை மட்டுமே நிகழும். பூமியில் உன் பணி முடிந்தது. நீயும், மீண்டும் அங்கே எழுந்தருள வேண்டும், என்றார். பிரம்மனின் இந்த வார்த்தைகள் ராமனுக்கு முந்தைய நிலையை உணர்த்தின. அவர் கோபம் தணிந்தார். இந்நேரத்தில் லவகுசர் அங்கே வந்தனர். அவர்களுக்கு எல்லா உண்மையையும் வால்மீகி முனிவர் உணர்த்தியிருந்தார். தாங்கள் ஸ்ரீமன் ராமனின் பிள்ளைகள் என்பதை அறிந்த அவர்கள் பெருமை கொண்டனர். அதே நேரம், தாயின் இழப்பை அவர்களால் தாங்க முடியவில்லை. அழுதபடியே, தந்தையின் மார்பில் அடைக்கலமாயினர். ராமபிரான் அவர்களுக்கு புத்திமதி சொன்னார். என் அன்புச் செல்வங்களே! நாம் இந்த பூமியில் பிறந்தது ஏன் என்பதைச் சொல்கிறேன், கேளுங்கள். நான் தசரத சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்தேன். சக்கரவர்த்தி திருமகன் என்ற பணக்கார அந்தஸ்து எனக்கு திருமணம் வரையே நிலைத்தது. திருமணத்திற்கு பிறகு, நான் காட்டிற்குச் சென்று விட்டேன். ஆடம்பர உடைகளும், அறுசுவை உணவும் உண்ட எனக்கு அங்கே கிடைத்தது மரப்பட்டைகளால் ஆன உடையும், கனி கிழங்கு வகைகளுமே! செலவம் மிக்க குடும்பத்தில் பிறந்தாலும், மனிதனுக்கு அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது முன்வினைப்பயனால் மட்டுமே நிகழும். ஒரு காலத்தில், என் தந்தை வேட்டைக்குச் சென்றார். அப்போது...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-22
தன்னிலும் வேட்டையில் உயர்ந்தவர் யாருமில்லை என்ற கர்வம் என் தந்தையின் கண்ணை மறைத்தது. ஏனெனில், அவர் சப்தவேதனம் எனப்படும் வித்தையில் திறமை பெற்றிருந்தார். சப்தவேதனம் என்றால் மிருகங்கள் எழுப்பும் ஒலியைக் கொண்டு, அவை எங்கிருக்கின்றன என்பதை அறிந்து, அதைப் பார்க்காமலேயே பாணம் எய்து கொல்லும் வித்தையாகும். இந்த வித்தையைப் பயன்படுத்தி பல மிருகங்களை என் தந்தை ஒரே இடத்தில் நின்றபடி கொன்றார். இதை அவருடன் சென்ற வீரர்கள் போற்றினார்கள், புகழ்ந்தார்கள். புகழ்ச்சி மனிதனை அடிமைப்படுத்தும் கொடிய ஆயுதம். எவன் ஒருவன் புகழின் உச்சிக்கு செல்கிறானோ, அவனைத் தேடி அழிவு வந்து கொண்டிருக்கிறது எனப்பொருள். என் தந்தைக்கும் அந்தச் சூழ்நிலையே ஏற்பட்டது.சரயு நதிக்கரையிலுள்ள அடர்ந்த காட்டில் அவர் வேட்டையாடிக் கொண்டிருந்த அந்த சமயத்தில், ஓரிடத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற சப்தம் கேட்டது. அப்போது இரவு நேரம். உங்கள் பாட்டனார், அந்த இடத்தை நோக்கி அம்பு வீசினார். ஐயோ செத்தேன் என்ற குரல், அம்பு பாய்ந்த இடத்தில் இருந்து கூக்குரலாக வெளிப்பட்டது. அவர் பதறிப்போனார். யாரோ ஒரு மானிடனை மிருகமென நினைத்து அம்பெய்தி விட்டோமோ என அலறியடித்து ஓடினார். நதிக்கரையில், தவக்கோலத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு கிடந்தான். அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.
ஐயோ! இந்த இரவு நேரத்தில் ஜனசஞ்சாரமே இருக்காது என எண்ணித்தானே இங்கு வந்தேன். எனக்கு இவ்வுலகத்தில் எதிரியே கிடையாதே. அப்படியிருந்தும், என் மீது அம்பு வீசியவன் யார்? அவனுக்கு நான் எந்த கேடும் விளைவித்தில்லையே! பழங்களையும், கிழங்குகளையும் மட்டுமே தின்று தவம் செய்யும் ரிஷியான எனக்கு இக்கதியா? என்னைக் கொல்வதால் அவனுக்கு ஏதும் பயன் ஏதும் உண்டா? இப்படிப்பட்ட செயலைச் செய்தவன் குரு பத்தினியை கெடுத்ததற்கு ஒப்பான பாவத்தையல்லவா அடைவான்? நான் இறப்பது பற்றி கவலைப்படவில்லை. உயிர்கள் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதியே. ஆனால், என் தாய் தந்தையர் என்ன செய்வர்? அவர்கள் மிகுந்த வயதானவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு நான் ஒரே மகனாயிற்றே. அவர்களும் இனி உயிர் வாழமாட்டார்களே! ஒருவன் சற்றும் சிந்திக்காமல், ஒருவனைக் கொலை செய்தால், அவனது குடும்பமே அழிந்துவிடும் என்பதை சற்றாவது யோசித்தானா? என்னைக் கொன்றதன் மூலம், ஒரே பாணத்தில் எங்கள் மூவரையும் கொன்ற பாவத்தை அவன் பெற்றானே? என்னைக் கொன்றவன் நிச்சயமாக அவசரப்புத்தி படைத்தவனாகவும், மூடனாகவும் தான் இருப்பான் என்று புலம்பினான். இந்த புலம்பலைக் கேட்டு என் தந்தை உள்ளம் நொந்து போனார். தர்மப்பிரபுவான அவருக்கு இத்தகைய சோதனை, ஒரு விநாடி புகழ்ச்சிக்கு அடிமைப்பட்டதற்காக ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சி, அவர் என் தாயைத் திருமணம் செய்வதற்கு முன்பே நிகழ்ந்து விட்டது.
என் தந்தையார் தன்னை யார் என்பதை அவரிடம் அறிமுகப்படுத்தி அந்த தபஸ்வியிடம் மன்னிப்பு கேட்டார். அந்த தபஸ்வியின் மர்ம ஸ்தானத்தில் அம்பு பாய்ந்திருந்தது. இதனால், அவர் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. அந்த இக்கட்டான நிலையிலும், அவர், தசரதா! உடனே என் தாய், தந்தையரிடம் செல். அவர்களிடம் என் மரணத்தகவலைச் சொல். அவர்களின் தாகத்தை தீர்க்க தண்ணீர் முகரவே இங்கு வந்தேன். அவர்கள் தாகம் தாங்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். உன் மன்னிப்பை அவர்களிடம் கேள். இந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் அவர் தங்கியிருக்கிறார். போகும் முன், நீ எய்த பாணத்தை பிடுங்கி எறிந்து விடு. அது எனக்கு தீராத வலியை தருகிறது என்றார். என் தந்தை அந்த பாணத்தை எடுக்கத் தயங்கினார். பிடுங்கினால் உயிர் போய் விடும் என்ற பயம். உருவாவிட்டாலோ வலி தாங்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார். ஒருவேளை உயிர் போனால், ஒரு பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி (கொலை பாவம்) ஏற்படுமோ என்ற தயக்கம். அப்போது அந்த தபஸ்வி, தசரதா! கவலைப்படாதே. உனக்கு பிரம்மஹத்தி ஏற்படாது. என் தாய் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்தவள். தந்தை வைசியர். என்னை பிராமணன் என நினைத்துக் கொள்ளாதே என சாகும் சமயத்திலும் நன்மையான வார்த்தைகளைச் சொன்னார். துன்பம் செய்தும் தனக்கு நன்மையையே நினைத்த அந்த இளைய தபஸ்வியைப் பற்றி அந்த இக்கட்டான நிலையிலும் பெருமைப்பட்ட என் தந்தை, பாணத்தை பிடுங்கினார். அந்த சமயமே அவரது உயிர் பிரிந்தது. பிறகு என் தந்தை, அவனது பெற்றோரை தேடிச்சென்றார். அவர்கள் அருகில் சென்றதும், பார்வையில்லாத அவர்கள், தங்கள் மகன் தான் வந்து விட்டான் என நினைத்து, குழந்தாய்! ஏன் இவ்வளவு நேரம்? நீ இவ்வளவு நேரம் வரவில்லையே என நினைத்து உன் தாய் எவ்வளவு கவலைப்பட்டாள் தெரியுமா? கண்ணில்லாத எங்களுக்கு நீ தானே ஒளியாக இருக்கிறாய்? சீக்கிரம் தண்ணீர் கொடு என்றனர். பயத்தில் இருந்த உங்கள் பாட்டனார் அவர்களின் பாதம் பணிந்து நடந்ததைச் சொன்னார். அறியாமல் செய்த தன் தவறை மன்னித்து கிருபை செய்ய வேண்டினார். அந்த தாயும் தந்தையும் நொறுங்கிப் போனார்கள். அடேய் தசரதா! இப்படி ஒரு கொடிய பாவத்தைச் செய்து விட்டு எங்களிடம் சொல்லாமல் நீ தப்பிப் போயிருந்தால், உன் தலை பத்தாயிரம் துண்டுகளாக வெடித்து சிதறியிருக்கும். ஆனால், அறியாமல் செய்த தவறு என என்னிடம் ஒப்புக்கொண்டதால் நீ இதுவரை பிழைத்திருக்கிறாய். நாங்கள் அவனது உடலைத் தொட்டுப் பார்க்க வேண்டும். எங்களை அங்கே அழைத்துப்போ என்றார். தசரத சக்கரவர்த்தியும் அவ்வாறே செய்ய அவர் தன் மகனைக் கட்டிக்கொண்டு சொன்ன வார்த்தைகள் இந்த லோகத்திற்கு மிகவும் தேவையானவை. இளைஞர்களான நீங்களும் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார். லவகுசர் அதைக் கேட்க ஆர்வமாயினர்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-23
மகனே! எங்களுடன் பேசமாட்டாயா? உன் தாய் படும் வேதனை உனக்கு புரியவில்லையா? பின்னிரவு வேளையில் நீ வேதம் ஓதுவது என் காதுகளில் இப்போதும் இனிமையாக ஒலிக்கிறது. மகனே! இனி எங்களை அழைத்துப் போக யார் இருக்கிறார்கள்? உன்னைத் தவிர யாருடைய உதவி எங்களுக்கு கிடைக்கும்? அன்புச்செல்வமே! சற்றே பொறு. எமனுடைய ராஜ்யத்திற்கு உடனே போய் விடாதே. நாங்களும் உன்னோடு வருகிறோம். யமலோகத்தில், தர்மராஜாவைக் கண்டு, ஐயனே! எங்கள் மகனை எங்களுக்கு திருப்பிக்கொடு என கேட்பேன். அவன் தர்மத்தின் வடிவம். அனாதைகளான எங்களுக்கு நிச்சயம் உன்னை மீண்டும் தருவான். இதோ நிற்கும் தசரதனின் கையால் நீ இறந்தது இப்பிறவியிலோ, முற்பிறவியிலோ நீ செய்த பாவத்தால் அல்ல. எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிகளும், உலகிலுள்ள பாவிகளால் கொல்லப்படத்தான் செய்கிறார்கள். அதில் நீயும் ஒருவன். ஆக, பாவம் என்பது பூண்டோடு வேரறுக்கப்பட வேண்டும். பாவமில்லாத உலகில் தான் நல்லவர்களால் வாழ முடியும். நீ இந்த பாவபூமி பிடிக்காமல் போய் விட்டாயோ? மகனே! உனக்கு வீரர்கள் அடையும் உலகம் கிடைக்கும். இந்த உலகத்தில் மாவீரர்களான ஸகரன், தீலிபன் போன்றோர் வாழ்ந்தனர். அவர்கள் எந்த உத்தம லோகத்தை அடைந்தார்களோ அந்த லோகத்தை நீயும் அடைவாய். இவ்வுலகில் பிறந்து வேதம் படித்து, மந்திரங்களை உச்சரித்து, தெய்வமே துணையென வாழ்பவன் மரணமடைந்ததும் எந்த புண்ணிய லோகத்தை அடைவானோ, அந்த லோகத்திற்கு செல்வாய். தனது மனைவியிடம் மட்டும் அன்பு கொண்டு, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்து, மரணமடைபவன் எந்த லோகம் செல்வானோ அங்கே நீ செல்வாய்.
பசுக்களை தானம் செய்தவர்கள், யாகம் செய்பவர்கள், பெரியவர்களுக்கு பணிவிடை செய்கிறவர்கள், விரதங்களை சரியாகக் கடைபிடிப்பவர்கள், நல்லதொரு காரணத்துக்காக அக்னியில் விழுந்து உயிர் துறப்பவர்கள், கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் உயிர் விடுகிறவர்கள் ஆகியோர் எந்த லோகத்தை அடைவார்களோ அவ்விடத்தை அடைவாய். அதே நேரம், எங்களை புத்திர சோகத்துக்குள்ளாக்கி உன்னைக் கொன்றவன், வாழும் காலத்திலேயே கோர கதிக்கு ஆளாவான் எனச்சொல்லி புலம்பி, அவனுக்குரிய கிரியைகளைச் செய்தனர். அப்போது அந்த இளைஞன் பிரகாசமான ஒளியுடன் எழுந்தான். இந்திரன் புஷ்பக விமானத்துடன் அங்கு வந்து அவனை ஏற்றிக் கொண்டான். அந்த இளைஞன் தனது பெற்றோரிடம், உங்களுக்கு சேவை செய்ய கிடைத்த பாக்கியத்தால், இந்திரனே நேரில் வந்து என்னை தேவலோகத்துக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளான். அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்த உங்களுக்கு நன்றி எனக்கூறி புறப்பட்டான். பின்னர் அந்த முதியவர் என் தந்தையிடம், அரசனே! புத்திர சோகத்தால் நீ தவித்து மரணத்தை தழுவுவாய். அதேநேரம் நீ அறியாமல் பாவம் செய்தவன் என்பதால், உன்னை கொலைப்பாவம் அணுகாது எனச்சொல்லி, கட்டைகளை அடுக்கி அக்னி மூட்டி தன் மனைவியுடன் இறங்கினார். அவர்கள் சொர்க்கம் சென்றனர். அதன் காரணமாக அவர் என்னைப் பிரிய வேண்டியதாயிற்று. பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளையும் தொடரும். நான் காட்டிலே உங்கள் அன்னை சீதையைப் பிரிந்தேன். துயரத்தில் தவித்தேன். ராவணனிடம் இருந்து மீட்டபிறகு, அவள் இலங்கையிலே தீக்குளித்து தன் கற்புத்திறனை நிரூபித்தும் கூட, அயோத்தியில் சிலர் நம்பாததால், மீண்டும் பிரிந்தேன். என்னால் உங்கள் சிறிய தந்தை லட்சுமணனும் இல்லற சுகத்தை இழந்து என்னுடன் காட்டில் திரிந்தான். வாசலில் விடப்படும் பாதுகையை அரியாசனத்தில் ஏற்றினான் பரதன். சத்ருக்கனனும் அவனுக்கு துணையாகவே இருந்தான், என்றார்.
லவகுசர் தங்கள் தந்தைக்கு ஏற்பட்ட கதியைப் புரிந்து கொண்டனர். பின்னர் லவகுசரை அழைத்துக் கொண்டு ராமபிரான் யாகசாலைக்கு சென்றார். யாகம் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. பின்னர், தன் மகன்களுக்கும், தம்பிமார்களின் குழந்தைகளுக்கும் தனி நாடுகள் அமைத்துக் கொடுப்பது பற்றிய யோசனையில் ராமன் ஆழ்ந்தார். அப்போது, வாயிற்காவலன் வந்து நின்றான். மகாபிரபு! தங்களைக் காண ஒரு முனிவர் வந்திருக்கிறார். தாங்கள் அனுமதி அளித்தால்... என்றதும், அவரை உடனே உள்ளே வரச்சொல், என்றார் ராமன். அந்த முனிவரின் தேஜஸை சொல்லால் விளக்க முடியாது. உதட்டிலே ஏதோ ஒரு விஷமப்புன்னகை. ராமபிரான், அவரை வரவேற்று ஆசனத்தில் அமரச் சொன்னார். ராமா! ஆசனத்தில் அமர்வது இருக்கட்டும். நான் யார் என்பதை முதலில் தெரிந்து கொள், என்றதும், சுவாமி! வீடு தேடி வந்தவர்கள் பகைவரே ஆயினும் அவர்களை உபசரிப்பது தர்மங்களில் ஒன்று. தாங்கள் தர்மமே வடிவான முனிவர், என்று சொல்லும் போது, தர்மமே என்பதை சற்று அழுத்தி உச்சரித்தார். வந்த முனிவருக்கு சந்தேகம். தன்னை யாரென பரம்பொருளின் அவதாரமான ராமன் கண்டுபிடித்து விட்டாரோ என்று. இருப்பினும், அந்த உணர்வை முகத்தில் காட்டாமல், ராமா! நான் பிரம்மனால் உன்னிடம் அனுப்பப்பட்ட தூதன். நீயும் நானும் தனிமையில் பேச வேண்டியுள்ளது. இவ்விடத்தில் நமக்கு பணிசெய்ய ஒரு சேவகன் கூட இருக்கக்கூடாது. அறைக்கதவை மூடி விட வேண்டும். யாரேனும் உள்ளே வராமல் இருக்க வாசலில் தகுந்த காவலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் நான் வந்த விஷயத்தைச் சொல்ல முடியும், என்றார். ராமபிரான் முனிவரின் கட்டளையை உடனே ஏற்றார். லட்சுமணனை அழைத்தார். லட்சுமணா! இந்த முனிவருடன் நான் முக்கிய ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. இந்த அறைக்குள் யாரையும் விடாதே. காவலைப் பலப்படுத்து. நீயே தலைமைக் காவலனாக இருந்து உள்ளே யாரும் வராமல் பார்த்துக் கொள், என்றார். அண்ணன் சொல் தட்டாத அந்த தம்பி என்ன ஏதென்று கேட்காமல், உடனே வாசலில் காவலுக்கு நின்றான். அப்போது அவனைத் தேடி வந்தது தீவினை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-24
அத்திரி முனிவர் என்ற புகழ் பெற்ற முனிவர் இருந்தார். இவரது மனைவி அனுசூயா. ரிஷிபத்தினியான இவளது கற்புத்திறனை சொல்லி மாளாது. கணவருக்கு தினமும் பாதபூஜை செய்து, அந்த தீர்த்தத்தை குடித்த பிறகே தன் பணிகளைத் துவக்குபவள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர், இவளது கற்புக்கு சோதனை வைத்த போது, அவர்களையே குழந்தைகளாக்கி, முப்பெரும் தேவியரையும் தாலிப்பிச்சை கேட்க வைத்த சக்தி வாய்ந்தவள். இத்தனைக்கும் அத்திரியின் திருவடிகளே காரணம். பெரும் தவவலிமை மிக்கவர். இவரது செல்வபுத்திரரே துர்வாசர். ரொம்பவும் கோபக்காரர். அவர் அரண்மனைக்குள் வந்தார். லட்சுமணன் வில்லுடன் வாசலில் காவலுக்கு நிற்பதைப் பார்த்தார். லட்சுமணா! நான் அத்திரி புத்திரன் துர்வாசன். நான் உன் சகோதரனிடம், முக்கியமான ஒரு விஷயம் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. என்னை உள்ளே அனுமதி, என்றார். அண்ணனோ யாரையும் உள்ளே விடக்கூடாது எனச்சொல்லியிருக்கிறார். முனிவரோ கோபக்காரர். சபிக்கக்கூடியவர். என்ன செய்வதென லட்சுமணனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவன் மிகுந்த பணிவுடன் அவரை வணங்கி, தவசிரேஷ்டரே! பொறுத்தருள வேண்டும். தாங்கள், என் சகோதரரிடம் சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லுக. தாங்கள் சொல்வதை உடனே நிறைவேற்றி வைக்கிறேன். தற்போது அண்ணா, யாரையும் அனுமதிக்க வேண்டாம் என எனக்கு உத்தரவிட்டிருக்கிறார், என்றான்.
துர்வாசரோ ஆவேசப்பட்டார். ஏ லட்சுமணா! ராமனை இங்கே வரச்சொல். அப்படி சொல்ல மறுத்தால், உன் ரகுவம்சமே அழிந்து போகும்படி சாபம் கொடுத்து விடுவேன். இங்கே, ஒருவர் கூட மிஞ்சமாட்டீர்கள், என எச்சரித்தார். லட்சுமணனுக்கு தெரியும். துர்வாசர் சொன்னதைச் செய்பவர் என்று. மேலும், தவசீலர்களைக் காக்க வைப்பது சிரமம் என்பதையும் அவன் அறிவான். இதற்கிடையே உள்ள சென்ற முனிவர் ராமபிரானிடம் பேச ஆரம்பித்தார். ராமா! என்னை யாரென நீ உணர்ந்துவிட்டாய் என்றே நம்புகிறேன், என்றதும், ராமபிரான் ஏதுமறியாதவர் போல், இல்லை சுவாமி! தாங்கள் யார்? சொல்லுங்கள், என்றதும், வந்தவர் தன் நிஜ உருவத்திற்கு மாறினார். கதாயுதம் தாங்கி, பெரிய மீசையுடன், ஆஜானுபாகுவான தோற்றத்தில் திகழ்ந்த அவரை ராமபிரான் வணங்கினார். எமதர்மராஜாவா! தாங்கள் என் இருப்பிடம் தேடி வர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தாங்களால் தான் உலகில் தர்மம் நிலைத்திருக்கிறது. தாங்கள் ஒருவர் இல்லாவிட்டால், இவ்வுலகில் எல்லாமே நிரந்தரம் என ஜீவன்கள் நினைக்கத் துவங்கி விடும். மனிதன் ஒரே ஒரு விஷயத்திற்கு தான் அஞ்சுகிறான். அது நிச்சயம் என்பதும் அவனுக்கு தெரியும். இருப்பினும், அஞ்ஞானத்தால் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறான். தங்கள் பூமி தர்மபூமி. தர்மத்தின் நாயகரே! என்ன விஷயமாக என்னைத் தேடி வந்தீர்கள்? என்றார். ராமா! பிரம்மன் என்னை அனுப்பி வைத்தார். நீ ஏதுமறியாதவன் போல் என்னிடம் பேசுகிறாய். நாராயணான நீ பாற்கடலில் இருந்து தாயார் லட்சுமியுடனும், ஆதிசேஷனுடனும், சங்கு, சக்கரத்துடனும் பூமிக்கு வந்தாய். அவற்றை உன் உறவுகளாக்கி, லட்சுமண, பரத, சத்ருக்கனர்களை உருவாக்கிக் கொண்டாய்.
தாயார் லட்சுமியே பூமாதேவியின் வயிற்றில் பிறந்து, ஜனக மகாராஜாவின் புத்திரியாக வளர்ந்து உன்னை அடைந்தாள். அநியாயத்தை அழிக்க பிறந்த நீ, ராவணனை வதம் செய்தாய். உன் பிறப்பின் நோக்கம் முடிந்து விட்டது. இந்த அவதாரத்தை முடித்து, வைகுண்டம் எழுந்தருள வேண்டும் என்பதை நினைவூட்டவே இங்கு வந்தேன். பிரம்மனே பூமியில் மானிடராய் பிறப்பவர்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார். அவர்களில் சிலர் தெய்வப்பிறவிகளாகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே, மரணத்தை முன் கூட்டியே அறிவிக்கும் பொறுப்பு எனக்கு தரப்படுகிறது. ஸ்ரீராமசந்திரா! நீ லோகநாயகன். உன் காலம் முடிந்து விட்டதால், உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன், என்றார் எமதர்மன். அந்நேரத்தில், லட்சுமணன் கதவைத் தட்டினான். இதனால் கோபமடைந்து தன்னை தன் சகோதரனோ, வந்திருக்கும் முனிவரோ அழித்தாலும் பரவாயில்லை என நினைத்துக் கொண்டான். என்றைக்கானாலும், இந்த உடல் அழியப்போவது தானே! நம் குலம் காக்க, இந்த உடல் போனால் போகட்டும் என்று நினைத்தே துணிந்து இதைச் செய்தான். கதவைத்தட்டுவது இன்னாரென புரிந்து விட்டதாலும், எமதர்மராஜனிடம் உரையாடல் நிறைவு பெறும் நிலைக்கு வந்துவிட்டதாலும், ராமபிரான் கதவைத் திறந்தார். அப்போது, எமதர்மன் தன்னை மீண்டும் முனிவர் வடிவத்திற்கு மாற்றிக் கொண்டார். அண்ணா! தங்களைக் காண துர்வாச முனிவர் எழுந்தருளியுள்ளார். தாங்கள் முக்கிய ஆலோசனையில் எடுப்பதை எடுத்துச் சொல்லியும், தங்களைக் காண அனுமதிக்கா விட்டால், நம் குலம் அழியும்படியான சாபத்தைக் கொடுத்து விடுவேன் என்கிறார். இந்நிலையிலேயே தங்களை அழைக்கும்படி ஆயிற்று, என்றான். லட்சுமணா! உள்ளே இருப்பது எமதர்மராஜா. கருமையான கொம்புகளையும், அனல் கக்கும் விழிகளையும் கொண்ட எருமைக்கடா வாகனன். அவரை அனுப்பி விட்டு வருகிறேன், என சொல்லி விட்டு, உள்ளே சென்றார். எமதர்மராஜனே! பிரமன் சொன்னபடியே வருகின்றேன். இப்போது, நீர் செல்லலாம், என்றான். எமதர்மராஜனும் மறைந்து விட்டார். பின்னர் துர்வாசரிடம் வந்த ராமபிரான், அவரை வணங்கி ஆசனத்தில் அமர்த்தி, தவமுனிவரே! தங்களைக் காக்க வைத்ததற்காக என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்த காரணத்தை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன், என்றார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: லவகுசா சரித்திரம்
லவகுசா பகுதி-25
பாதகமில்லை ராமா! நான் லட்சுமணனுடன் சொல்லி அனுப்பியவுடனேயே வந்து விட்டாய். உனக்கு நினைவில்லையா? நீ மூடிசூட்டிய நாளில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு வந்து ஒருநாள் உணவருந்தும் விரதத்தை மேற்கொண்டிருக்கிறேன். அந்தநாள் இந்நாள். அதற்காகவே வந்தேன், என்றதும், ராமன் சமையல்காரர்களை வரவழைத்து சுவையான உணவு சமைக்கச் சொன்னார். அந்தக்கணமே, பத்துலட்சம் தங்கப்பானைகள் அடுப்பில் இருந்தன. சுவையான உணவு சிறிது நேரத்தில் தயாரானது. துர்வாசர், உணவருந்தி, ராமனின் கையில் இருந்த கங்கை நீரை வாங்கி கைகழுவினார். பின்னர் சமையல்காரர்களின் தலைவனை அழைத்துப் பாராட்டினார். பின்னர் விடை பெற்றார். எமதர்மராஜாவுக்கு வாக்களித்து விட்டதால், வைகுண்டம் எழுந்தருள வேண்டிய அவசரத்தில் இருந்தார் ராமபிரான். இந்நிலையில், ராமனின் தாய் கவுசல்யா காலமானாள். ராமபிரான் வருந்தித்துடித்தார். என்னை விட்டுச் சென்றாயே தாயே என அழுதார். இதையடுத்து சுமித்திரையும், கைகேயியும் சில நாட்களில் காலமாயினர். தெய்வப்பிறவிகளைப் பெற்றெடுத்த இந்த தாய்மார்கள் தங்கள் ஆயுளை முடித்த பிறகு, தன்னுடன் வந்த லட்சுமணனை வைகுண்டம் அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ராமன்.
அவன் போய் தானே, அங்கே அவரது படுக்கையாக வேண்டும். எவ்வுலகில் இருந்தாலும், அவரை விட்டு அசையாத கொடுப்பினை உள்ளவன் அல்லவா அவன். இருந்தாலும், பாசம் ராமனின் கண்களைக் குளமாக்கியது. மனிதனாகப் பிறந்து விட்டால், தெய்வம் கூட உணர்வுகளுக்கு ஆளாகி விடுகிறது! ராமபிரானும் இப்போது மனிதர் தானே! தம்பியை வைகுண்டம் அனுப்பப்போவதை எண்ணி அழுதார். அவனை வைகுண்டம் அனுப்பி விட்டு, லவகுசர் உள்ளிட்டோரை ராஜ்ய பரிபாலனத்தில் அமர்த்த ஏற்பாடு செய்தாக வேண்டுமே! லட்சுமணன்- ஊர்மிளா தம்பதிக்கு அங்கதன், சந்திரகேது என்ற மகன்கள் இருந்தனர். இவர்களுக்கு, ராமனின் உத்தரவுப்படி, சந்திரகாந்தம் என்ற நாட்டை உருவாக்கினான் பரதன். அதை இரண்டாகப் பிரித்து, சந்திரகாந்தத்தை சந்திரகேதுவிடமும், காரகாபதி என்னும் நகரை தலைநகராகக் கொண்ட பகுதிக்கு அங்கதனையும் அரசனாக்கினான் லட்சுமணன். பரதன்- ....தம்பதிக்கு புஷ்கரன், தக்கன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுக்கு காந்தாரம் என்ற தேசத்தை பகிர்ந்தளித்து மன்னர்களாக்க ராமன் ஏற்பாடு செய்தார். பரதனிடமே இப்பணி ஒப்படைக்கப்பட்டது. இதை பரதன் செய்து முடித்தான். சத்ருக்கன் ஏற்கனவே, லவணன் என்ற அரக்கனைக் கொன்று அவனது மதுபுரி நாட்டைக் கைப்பற்றி அங்கே ஆட்சியில் இருந்தான்.
இவ்வாறாக சின்னத்தம்பி சத்ருக்கனன், மற்ற தம்பிமார்களின் குழந்தைகளுக்குரிய கடமைகளை முடித்த பிறகு, லவகுசர்களைப் பற்றிச் சிந்தித்தார் ராமபிரான்.குடும்பத்தில் மூத்த சகோதரர்கள் இளைய சகோதரர்களின் உரிமைகளைப் பறிக்காமல், அவர்களுக்குரியதை சரிவர செய்து கொடுத்து விட்டால், அங்கே பிரச்னைகளுக்கே இடமிருக்காது என்பதை அந்த ராம சரிதத்தை வேறு எதனால் இவ்வளவு விளக்கமாக சொல்ல இயலும்! ராமச்சந்திர மூர்த்தியை இந்த நாடு அதனால் தானே அவ்வளவு எளிதில் மறக்க முடியாமல் இருக்கிறது! ஒரு இந்துவானாலும், முஸ்லிமானாலும், பார்சியானாலும் ராமபிரான் எல்லாருக்குமே வழிகாட்டியாகத் திகழ்கிறார், என்று காந்திஜி தெரியாமலா சொன்னார். மரணத்தருவாயில், அவரது வாயில் இருந்து ராம் ராம் என்ற வார்த்தைகள் தானே உதிர்ந்தன! எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள். இக்காலத்தில், எந்தக் குடும்பத்திலாவது இப்படி ஒரு அனுசரணையான நிலையைப் பார்க்க முடிகிறதா! அரை அங்குல நிலத்திற்காக, நீதிமன்றங்களில் சகோதரரர்கள் கால் கடுக்க நிற்பதும், ராமன் பிறந்த இந்த தேசத்தில் என்று நினைக்கும்போது, தலை குனியத்தானே வேண்டியிருக்கிறது! ராமபிரான், லவகுசர்களை அயோத்தியின் மன்னர்களாக்க ஏற்பாடு செய்தார். முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக லட்சுமணனை அழைத்தார்.
தம்பி! எனச் சொல்லி அவனை அப்படியே அணைத்துக் கொண்டனர். எப்படி என் வாயாலேயே சொல்வேனடா? என்றதும், லட்சுமணன் கலகலவென சிரித்தான். அண்ணா! என்ன இது புதுப்பேச்சு! தங்களுக்காக நான், எங்களுக்காகவும், இந்த உலகத்திற்காகவும் நீங்கள். நீங்கள் இருந்தால் நாங்கள் உண்டு. நாங்கள் இல்லாமலும், நீங்கள் கணநேரம் கூட உயிர் தரிக்க மாட்டீர்கள். நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்தவர்களல்லவா! உடல்களைத் தவிர நம்மிடம் பகுத்துப் பார்ப்பதற்கென வேறு ஏதுமில்லையே! ஏதோ சொல்ல வருகிறீர்கள்? ஆனால், தயங்குகிறீர்கள்! மனம் திறந்து சொல்லுங்கள், என்றான். தம்பி! நீ வெளியே காவல் நின்ற போது ஒரு முனிவர் வந்தார். அவருடன் நான் தனிமையில் பேசியது உனக்குத் தெரிந்தது தானே என்றார். அதற்கென்ன அண்ணா? என கேள்விக்குறியுடன் அண்ணனின் முகத்தை ஆவலுடன் ஏறிட்ட தம்பியிடம், லட்சுமணா! என் அன்புச்செல்வமே! அவர் வேறு யாருமல்ல. எமதர்மராஜா. நம் பூலோக வாழ்வை முடித்து மேலுலுகம் வரச்சொன்னான். நம் அவதார காலம் முடிந்து விட்டது. ராவணனை வதைக்கவே இங்கு வந்தோம். வந்த வேலை சீதையால் முடிந்தது. அவள் தன் பணி முடித்து ஏற்கனவே சென்று விட்டாள்.
இந்த காரியத்துக்காகவே நம்மைப் பெற்றவர்களும் வைகுண்டத்தில் நமக்காக காத்திருக்கின்றனர். இப்போது, உன் சமயம் வந்துவிட்டது, என்றதும், லட்சுமணன் மேலும் நகைத்தான். அண்ணா! இதைச்சொல்லவா இவ்வளவு தயக்கம்! மரணத்தில் யார் முந்துகிறோம், யார் பிந்துகிறோம் என்பதெல்லாம் வெறும் மாயத்தோற்றமே! உயிர்கள் பிறக்கின்றன, இறக்கின்றன. இது உறுதியானது. இவ்வுலகில் இதைத்தவிர மற்றவை தான் உறுதியற்ற நிலையில் உள்ளன. செல்வம் வரும் போகும், ஆட்சி உங்களைத் தேடி வந்தது, திடீரென பறிக்கப்பட்டது, மீண்டும் வந்தது. இவையெல்லாம் உறுதியற்றவை. உலகில் பிறந்த எல்லா ஜீவன்களுக்கும் ஒரே உறுதி மரணம் மட்டுமே. அதை எனக்கு தாங்களே முன்வந்து தருவது இன்னும் நான் செய்த பாக்கியம். சத்தியத்திற்காகவே நம் தந்தை உயிர்விட்டார். அதைக்காக்கவே நம் தாய்மாரும் உயிர் விட்டார்கள், என்ற லட்சுமணன், நம் தாய் கைகேயி கூட சத்தியம் காக்கவே இவ்வாறு செய்தாள் தெரியுமா? என்றார். எல்லாம் அறிந்த ராமன், ஏதும் தெரியாதவர் போல், முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருள் அறியாதது போல் நடித்த சிவனைப் போல் நின்றார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஔவையார் சரித்திரம் - நூல் தறவிறக்கம்
» தேங்காய் நண்டின் சோக சரித்திரம் : அறிந்து கொள்ளுங்கள்.!
» சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை
» தேங்காய் நண்டின் சோக சரித்திரம் : அறிந்து கொள்ளுங்கள்.!
» சரித்திரம் முழுவதும் படித்த பின்னால் சஞ்சலம் வருவதில்லை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|